கவிதை

நயாகரா

ஸ்ரீதர் நாராயணன்

Niagara

Niagara

தீரா விடாயுடன்
வாய்பிளந்து நிற்கும்
மலையிடுக்கில்
பொங்கி பிரவகிக்கிறது.

புளியேப்பக்காரர்கள்
துளிக்குறிப்புகளால்
நொடிக்கு எவ்வளவு நீர்
இடம்மாறுகிறதென
அளக்க முயல்கிறார்கள்

கிளிப்பிள்ளைகளின்
வாய்ச்சொற்களில்
அது எப்போதும்
மலைமகளின்
முகம் மறைக்கும் மணச்சீலை.

வெண்பனி நீர்த்துவாலை என்கிறார்,
வைரச் சொரிதல் என்கிறார்,
வானவில் வந்திறங்கும் நீர்மேடை என்கிறார்,
வண்ண ஒளிக்கற்றைகள் நடமிடும்
குதிரைக்குளம்பு என்கிறார்,

சொல் இல்லாதவன் என்னிடம்
புறங்கையில் உருண்டோடும்
சிறு திவலை,
அதன் பேரழகை
காட்டிச் செல்கிறது.

உலர்ந்துருகும் வேனில்

சோழகக்கொண்டல்

இக்கணம்
நீண்டு நிகழ்ந்தபடியே இருக்கிறது
பூக்களின் புன்னகையில் ஒளிரும்
வெயில் உதிர்ந்துவிட்ட மாலையாய்

இவ்விடம்
மீட்டி முழங்கியபடியே இருக்கிறது
ஈரம் குறுகுறுக்கும் தொண்டைக்கும்
இறங்கிச்செல்லும் நெஞ்சுக்கும் வெளியே
கால்வைத்து ஏறி நடக்கும்
காற்றின்மேல்
நீரின் நினைவை

இந்நிலம்
இறைஞ்சிக்கொண்டே இருக்கிறது
உலர்ந்து உதிரும்
ஒவ்வொரு சருகிலும்
மழை மழை என்று கிறுக்குகியபடி

இத்திசை
எரிந்துகொண்டே இருக்கிறது
காணலின் கைவெப்பம் தொடும்
துளிர்களையெல்லாம் கருக்கியபடி

இப்பயணம்
நீண்டுக்கொண்டே  இருக்கிறது
நேரமோ பாதமோ நெருங்காதபடி
நெடுந்தொலைவில் உறையும்
ஒரு நினைவின் நதியைத்தேடி

இக்கனவும்
அமிழ்ந்துகொண்டே  இருக்கிறது
ஒவ்வொருகணமும்
ஊழி ஊழியாய்
நீண்டபடி

இன்றிரவும்
முடியத்தான் போகிறது
முதல்மீன் முளைக்கும் இருளின் கரையில்
இந்த முற்றத்தில் படியும்
வெற்றுப் புழுதியோடு.

அதீனாவின் தலை

ஸ்ரீதர் நாராயணன்

pallasathena

 

கொண்டு வருகிறேன் பலாஸை
இந்த மைதானத்திற்கு நடுவே.
உங்கள் பாசாங்குகளை
முற்றொழிக்க.

எந்தையின் சுடரை
அவர் பெண்மைத் தலையிலிருந்து
பிடுங்கி எடுத்து,
கொண்டு வருகிறேன்
இந்த உடலற்ற நெருப்பை.

எரி-கண்கள் கொண்ட பெண்ணவள்
இந்த நகரை
போலித்தனங்களிலிருந்து
பொலிவுற செய்யட்டும்.

கனன்று கொண்டிருக்கும் இத் தலை
கொடுக்கட்டும் எல்லா கதகதப்பும்
வேறெதுவும் மறைக்கப்பட வேண்டியதில்லை

கொண்டு வருகிறேன்,
பலாஸ் அதினாவை
இந்த மைதானத்திற்கு.

I bring the Pallas
to the middle of this Stadium,
to extinct the pretense

The fire of our father,
sprung out of his
effeminate scalp,
I bring you-
fire without a frame

She, the fiery-eyed lady
shall light this city
out of its sham

This smoldering head
bestows all the warmth,
there is no call for shields.

I bring,
Pallas of Athena
to this Stadium!

செப்டெம்பர் மாத மழை வாரத்தின் ஒரு மாலைப்பொழுதில்

பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி

snails

திசையற்று பறக்கிறது
தட்டான்கள்
மொட்டைமாடியில்
வெகுநேரமாக நின்றபடியே நான்
*
ஈரத்தரையில்
இமைக்காமலிருக்கும்
தவளையின் விழியில்
சரியாக விழுகிறது மழை
*
மரம் நடும்
குழந்தையின் முகத்தில்
இயற்கையாகவே துளிர்க்கிறது
மகிழ்ச்சி விதை.
*
எண்ணெய் ததும்ப
எரியும் சுடர் விளக்கை
எடுத்த எடுப்பிலேயே
அணைக்கிறது மழை
*
எதிர்வீட்டிலிருந்து வீசுகிறது
அடுக்கு மல்லியின் வாசம்
நாங்கள் தான் இதுவரை
பேசியதேயில்லை.
*
சீசா விளையாடும்
குழந்தைகளுக்கு
ஏற்றமும் இறக்கமும்
சமசந்தோஷமே.
*
விட்டு விட்டு
பெய்கிறது மழை
நகர்ந்து கொண்டேயிருந்தது
நத்தை

மூங்கில் கூத்து மேதாவி

ஸ்ரீதர் நாராயணன் 

bamboo-genius

முச்சந்தியில் நட்டு வைத்த
மூங்கில்கள் இடையே
கயிற்றில் நடந்து
வித்தைக் காட்டுகிறா(ள்)(ன்).

மூளையை கூராக்கி
கொம்பெனக் கொண்ட
அறிவுச்சிகரம் மேதாவி.

கயிற்றின் மேலே
கரணம் அடிக்கிறா(ள்)(ன்).
கைதட்டுபவரை குஷிப்படுத்தும்
சரணம் பாடுகிறா(ள்)(ன்).

அவையோர் முகம் கோணினால்
சுற்றி சுற்றி வந்து
சலாம் போடுகிறா(ள்)(ன்)..
வசமாக யாரும் சிக்கினால்
வாகாக ஏறி மிதிக்கிறா(ள்)(ன்).
காணிக்கை தாராளமாக கிடைக்குமென்றால்
கேளிக்கையை குறைப்பானேன்.

நிமிர்ந்து நிற்கும் மூளையை கண்டு
நெருங்கி வர அருவெறுக்கும்
கோமாளிக் கூட்டத்திற்கென
தலைகுப்புற நின்று கொண்டு
வாலாக ஆக்கிய மூளையை
காலால் ஆட்டிக் காண்பிக்கிறா(ள்)(ன்).

இதுதான் ஒரிஜினல் கூத்தென
அள்ளிக் கொண்டு போகிறது
அப்ளாஸ் ஆடியன்ஸிடம்.

இன்னும் கொஞ்சம்
மூளை நீண்டாலும்
வாலாட்டுவது சிரமமென
விசனப்படுகிறா(ள்)(ன்).
அறிவுச்சிகரம் மேதாவி.