சிகந்தர்வாசி

வயசுக்கோளாறு

நான் பஸ் ஏறியவுடன் அவள் பார்த்த அரை நொடிப் பார்வை
இதயத்திற்கு ஒத்தடம் கொடுத்தது போல் இருந்தது

வட்டமான வெள்ளை முகம், கரிய அடர்த்தியான கூந்தல்,
சிவப்பு நிற சுடிதார் மற்றும் கழுத்தில் கருகமணி மாலை

காலையில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு
பஸ் ஏறியிருப்பாளோ?
அல்லது அவள் அம்மாவோ மாமியாரோ
அந்த வேலையைச் செய்திருப்பார்களோ?
ஆபிஸ் வேலை சரியாகச் செய்வாளா?
அல்லது வீட்டைப் பற்றிய கவலையில்

வேலையை கோட்டை விடுவாளா?
மாதவிலக்கு சமயத்தில் கணவன் மேல் எரிந்து விழுவாளா?
மாமியாருடன் அடிக்கடி சண்டை போடுவாளா?

மனதை வருடிய ஒரு பார்வை
எண்ணற்ற கேள்விகள்

பொழுது சாயும் போது

காற்றை அளைகின்றன, சூரிய விரல்கள்
கைத்தடி மேல் மண்புழு போன்ற நரம்புகள்
கைகளை ஊன்றி, சுருக்கங்கள் நிறைந்த முகத்துக்குள்
எங்கோ பதுங்கிவிட்ட சிறு கண்களால்
பந்து விளையாடும் குழந்தைகளை உற்றுப் பார்க்கிறார்

கொதிக்கும் மணலின் தீவிரத்தை குறைக்க
அலைகள் பக்கம் சென்ற இளைஞன்
யாரோ வீசிய பந்தைப் பிடிக்க உயரே பறக்கிறான்
புவியீர்ப்பு விதிகளை மீறி, உயரே உயரே பறக்கிறான்
முதுகு பின்பக்கம் வளைய, கண்ணில் ஆகாயம் தெரிய,
பறந்து வரும் சிவப்பு பந்தை
வலது கை நீட்டி பிடிக்கிறான்

பிடித்தவன் செங்குத்தாகக் கீழே விழுகிறான்
விழுந்தவன் ஒளி துண்டங்களாகச் சிதறுகிறான்

முகத்தை வேறு திசையில் திருப்ப,
பந்து கீழ்வானில் நிலவாய் மாறி
மெல்ல மேலெழுந்துக் கொண்டிருக்கிறது

கரங்கள் உள்ளிழுத்துக்கொண்டு மறையும்
சூரியனுடன் அவரும் மறைகிறார்.​

நாளை வருமா?​​

 

​இன்று ஒரே பெஞ்சில் அவர்களால் அமர முடிந்தது
தினமும் அவர்களுடன் வரும் ஒருவர் இன்று இல்லை
நடை பழகாமல் மெளனமாக உட்கார்ந்திருக்கிறார்கள்
தினமும் உரக்க சிரிப்பவரின் பார்வை வானத்தில்
எங்கோ பதிந்திருக்கிறந்து
கைத்தடியில் கைகள் ஊன்றி இன்னொருவர்
தரையை பார்க்கிறார்
மறையும் சூரியனின் ஒளி பட்டு மாமரத்தின் நிழல்
அவர்கள் மேல் மட்டும் படர்கிறது

நடப்பவர்கள் சுற்றிச் சுற்றி வருகிறார்கள்
அரை நிஜார் மனிதர் தனியாக ஓடிக்கொண்டிருக்கிறார்
எதிர் பெஞ்சில் சிரித்து பேசும் காதல் ஜோடி
பக்கத்து பெஞ்சில் குடும்ப விஷயம் பேசும் மாமிகள்
மெயின் ரோட்டில் வேகமாக பறக்கும் வாகனங்கள்
கேட்டுக்கு வெளியே ஆப்பிள் விற்கும் வண்டிக்காரன்

சிலைகள் போல் அவர்கள் ​

மெல்லிய ஒளி

ஜன்னலைத் திறந்தவுடன் சூரிய ஒளி
அவர் மேல் படர்கிறது
அவர் மெதுவாக முனகுகிறார்
ஒளியின் பாரத்தை தாங்கமுடியாத அளவு
புற்றுநோய் அவர் உடலைத் தின்றிருக்கிறது

முதலில் அவர் வலியில் முகம் சுளிக்கும்பொழுது
எங்களுக்கும் வலித்தது, அவர் முனகியபொழுது
எங்கள் கண்ணோரத்தில் ஈரம் கோர்த்தது

வலி தொடரத் தொடர எங்கள் காதுகளையும் கண்களையும்
எங்களை அறியாமல் எங்கள் அறிவு பொத்திவிட்டது
இப்பொழுது சிறு முனகல்கள் எங்களுக்கு கேட்பதில்லை
முக கோணல்களை எங்கள் கண்கள் பார்ப்பதில்லை
படுக்கையில் ஒருவர் இல்லை என்று நினைத்துக்கொண்டே
அறை முழுவதும் சுற்றுகிறோம்

மறுத்தும் மறந்தும் தினம் வாழ்கையை ஓட்டுகிறோம்
ஆனால் அந்தக் கட்டிலை சுற்றிதான் எங்கள் உலகம்
மீறிச் செல்ல நினைத்தாலும் கட்டில் எங்களை விடுவதில்லை
வேறெங்கோ பார்த்தபடி கட்டில் அருகில் நிற்கிறோம்

காலை வெளிச்சத்தில் வற்றிவிட்ட தேகத்தின் வலியை
தெளிவாக உணர்கிறேன்
மரணம்தான் ஒரே தீர்வு என்று நான் நினைக்கையில்,
வலி தோய்ந்த குரலில், “ஏன் காபி இன்னும் குடுக்கல?”
என்று அவர் கேட்கிறார்

ஒளிப்பட உதவி – Susana Weber

அப்பாவின் புகைப்படம்


பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்துகொண்டு
ஹிந்து நாளிதழை படித்துக் கொண்டிருக்கிறார்
பக்கவாட்டு ஜன்னல் வழியே வெளிச்சம்
ஆபிச்சுவரி பக்கத்தில் உள்ள புகைப்படங்களை
ஒளிரச்செய்கிறதோ என்னவோ, ஆனால்-
அப்பாவின் மனதை அவர் போட்டிருக்கும்
தடிமனான கண்ணாடி மறைக்கிறது
காலை எழுந்ததும் ஏன் மரணத்தை எதிர்கொள்கிறார்?
ஒவ்வொருவராக மறைந்து கொண்டிருக்கும் நண்பர்களுக்காகவா?
தான் இன்னும் மறையவில்லை என்பதை மறக்காமல் இருக்கவா?
ஒளி ஒழுகும் இருட்டுச் சமையலறையிலிருந்து
அம்மா காபி டம்ப்ளருடன் அப்பாவை நோக்கி வருகிறாள்.
காபி சுவை நாவினில் இறங்க, மரண பயம் மெல்ல விலக,
நாற்காலியை விட்டு மெதுவாக எழுந்து நிற்கிறார்

க்ளிக் க்ளிக்

 

ஒளிப்பட உதவி – artofday.com