பீட்டர் பொங்கல்

மெய்ம்மைப்பசியும் ஆயத்த நாவல்களும்

நியூ ரிபப்ளிக் என்ற தளத்தில் ஷாஜ் மேத்யூ (Shaj Mathew) எழுதி வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம்

பின்நவீனத்துவம் என்பது இப்போது அர்த்தமற்ற பதமாகிவிட்டது- மிகை பயன்பாட்டால் அதன் முனை மழுங்கிவிட்டது. பல்வயதினரும் பல்தேசத்தினருமான புதிய ஒரு எழுத்தாளர் கூட்டத்தையும் இப்படி அழைக்கிறோம், ஆனால் அவர்களைப் பின்நவீனத்துவர்கள் என்று அழைப்பது பொருத்தமாய் தெரியவில்லை: பென் லெர்னர், சோபி காலே, டேஜூ கோல், டாம் மக்கார்த்தி, அலெஜாண்ட்ரோ ஜாம்ப்ரா, சிரி ஹூஸ்ட்வெட், மைக்கேல் ஹூல்லபெக், ஷீலா ஹெட்டி, டபிள்யூ ஜி செபால்ட், ஒரான் பாமுக். இவர்கள் தவிர அறுபது வயதானவரும் பார்சிலோனாவாழ் எழுத்தாளருக்கான என்ரிக் விலா-மதாஸ்– இருபது நாவல்கள் எழுதிவிட்ட இவரே இந்தக் கூட்டத்தினரில் மிகவும் அதிகம் எழுதுபவரும் மிகவும் குறைவாக அறியப்பட்டவருமாக இருக்கிறார்.

பின்நவீனத்துவர்கள் என்று அழைப்பதற்கு பதிலாக இவர்களை ரியாலிட்டி ஹங்கர் தலைமுறையினர் என்று அழைப்பது சரியாக இருக்கும். சமகால எழுத்து குறித்து டேவிட் ஷீல்ஸ்ட் 2008ஆம் ஆண்டு எழுதிய புத்திசாலித்தனமான, தீர்க்கதரிசனத்தன்மை கொண்ட பிரகடனத்தின் பெயர் இது. ஷீல்ட்ஸ் பார்வையில், வழமையான முறையில் பிளாட், கதை என்று செல்லும் கதைசொல்லல் பாணி இப்போது அர்த்தமற்றுப் போய்விட்டது. மெய்ம்மை புனைவுத்தன்மை கொண்டது, புனைவே மெய்ம்மை. இந்த மெய்ம்மை நமக்கு எவ்வாறு அனுபவமாகிறது என்பதை மேலும் துல்லியமாக அறிய, நாம் கலை குறித்து என்ன நினைக்கிறோமோ அதே பார்வையுடன் நாவல்களையும் அணுக வேண்டும். “பல வாசகர்களுக்கும் விமரிசகர்களுக்கும் நாவல் என்பது எல்லாவற்றுக்கும் மேல் ஒரு கதைதான்,” என்று எழுதுகிறார் ஷீல்ட்ஸ். “ஆனால் ஒரு கலைப்படைப்பு என்பது, இந்த உலகைப் போல், உயிர்ப்புள்ள வடிவம். மெய்ம்மை அதன் வடிவில்தான் இருக்கிறது”. எனவே இப்போது வடிவம்தான் எல்லாவற்றையும்விட முக்கியமாக இருக்கிறது என்றால்- உள்ளடக்கத்தைவிட வடிவம்தான் முக்கியம் என்றால்- சமகால கலைப்படைப்புகள் உருப்பெறும் வடிவம் எது? கொலாஜ். இதுவே மெய்ம்மைப் பசியின் வடிவமாகவும் இருக்கிறது. கலைப்படைப்புகள் எதிர்காலத்தில் எவ்வகை வடிவங்களில் உருவாகும் என்பதைச் சொல்வதோடு அல்லாமல், அதற்கான வரைபடமாகவும் ஷீல்ட்ஸின் மெயம்மைப்பசி என்ற நூல் செயல்படுகிறது; அதை பாஸ்டீச் என்று சொல்லலாம், அது திட்டமிட்டு “திருடப்பட்ட” நன்மொழித் தொடர், ஆனால் மேற்கோள் குறிகளின்றி புத்தக வடிவில் அளிக்கப்பட்டுள்ளது (சட்டபூர்வமான காரணங்களுக்காக மேற்கோள்களின் மூலம் பின்னுள்ள அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ளன, ஆனால் ஷீல்ட்ஸ் அந்தப் பகுதிகளை புத்தகத்திலிருந்து வெட்டி வீசச் சொல்லி ஊக்குவிக்கிறார்).

ஆனால் ரியாலிட்டி ஹங்கர் வெளிவந்த பின்னுள்ள ஆண்டுகளில் புனைவு வடிவம் வளர்ச்சி கண்டு, ஷீல்ட்ஸ் முன்வைத்த அளவைகளுக்குப் பிற்பட்ட மாற்றங்களை ஏற்றுக் கொண்டுள்ளது. மேற்கூறிய நாவலாசிரியர்கள் அனைவருமே நாவலின் கதைசொல்லிகள் என்பது தெளிவு என்றாலும், அதன் பின்னணியில் ஏதோ ஒரு பயங்கர நிகழ்வின் நிழலுருவம் தென்படுவது வழக்கமாய் உள்ளது: சிலேயில் பினோஷே ஆட்சியைக் கைப்பற்றியதன் நிழலில் ஜாம்ப்ரா எழுதுகிறார், ஹோலோகாஸ்ட் நினைவுகளை செபால்ட் அகழ்ந்தெடுக்கிறார், மாட்ரிட் நகரில் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த குண்டுவெடிப்புகளின் பின்கதையை லெர்னர் ஆவணப்படுத்துகிறார். இவை அனைத்தையும் விட, இந்தப் புனைவு வகைமை சவ்வூடுத்தன்மை கொண்ட சுவர்களைக் கொண்டிருக்கிறது, பல வடிவங்களை ஒரு கொலாஜ் போல் பயன்படுத்துகிறது- ஜாம்ப்ராவின் வேஸ் ஆப் கோயிங் ஹோம், லெர்னரின் 10:04 ஆகிய இரண்டும் கவிதைகளாகின்றன, பிற நாவல்கள் இசையோடும் நாடகத்தோடும் உரையாடுகின்றன. இந்த நாவல்களில் பலவும் தம்முள் கட்டுரைக்குரிய மொழி அல்லது இலக்கிய விமரசனம் ஆகிய இரண்டில் ஒன்றைக் கொண்டுள்ளன. இதுவரை மொழிபெயர்க்கப்படாத ஜோர்ஜே காரியான், தி டெட் என்ற தன் நாவலில் ஓர் இலக்கிய விமரிசனத்தை புனைந்திருக்கிறார் (வகைமைகளை இப்படி மீறுவது இலக்கிய விமரிசகர்களின் கவலைகளை அதிகரிக்கச் செய்யலாம்- தன் விமரிசனத்தைத் தானே எழுதிக் கொண்டுவிட்ட ஒரு புத்தகம் பற்றி புதிதாய் என்ன சொல்ல முடியும்?).

இன்னும் முக்கியமாக, இந்த நாவல்களில் இடையிடையே புகைப்படங்களும் ஓவியங்களும் இருக்கின்றன. முதல்நிலையில் இந்த இணைப்புகள் மெய்ம்மை குறித்த ஓர் அடிப்படைக் கேள்வி எழுப்புகின்றன: ஒரு புகைப்படம் ஏற்படுத்தக்கூடிய மெய்ம்மைத் தாக்கத்துடன் அல்லது ஓவியத்துக்கு உள்ள தொடுவுணர்வுடன் நாவல் போட்டியிட முடியுமா? இந்த விஷ்யத்தில் எழுத்தாளர்கள் டபிள்யூ ஜி செபால்டின் வழியொற்றி நடக்கின்றனர். அவர் பிரதிக்கு துணை போகவில்லை, அதன் படைப்பூக்க உந்துசக்தியாக காண்கலைகளைப் பயன்படுத்திக் கொள்கிறார். பாம்ப் இதழில் அலெக்சாண்டர் ஹெர்மன் நேர்முகமொன்றில் டேஜூ கோல் கூறுவது போல், செபால்டின் புகைப்படங்கள், “நம்மிடம் சவால் விடுகின்றன. “பார், இவை எல்லாம் ஆதாரங்கள்,” என்று அவர் சொல்வது போலிருக்கிறது. நாம் அதை நம்பியே விடுகிறோம்- பிரதியில் கூறப்பட்டுள்ளதற்கும் புகைப்படத்தின் சாட்சியத்துக்கும் இடையிலுள்ள சற்றே சிறிய விலகலை நாம் கவனிக்கும்வரை… அவரது போட்டோக்கள்… அவரது நூல்களின் அசாதாரண, நிலைகுலையும் உணர்வை ஏற்படுத்துகின்றன- இவை அனைத்தும் உண்மையாக இருந்தாக வேண்டும், என்று நாம் நினைக்கிறோம், ஆனால் அது அத்தனையும் முழு உண்மையாக இருந்திருக்க முடியாது எனபது நமக்குத் தெரியும்”. சோஃபி காலேயின் நாவல் சூட் வெனிஷியன்/ ப்ளீஸ் பாலோ மீ- அவர் வெனிஸ் நகரில் ஓர் அன்னியரை அவருக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து சென்று எடுத்த புகைப்படங்களின் நாட்குறிப்பு- இது செபால்டை வேறொரு தளத்துக்குக் கொண்டு செல்கிறது- பிரதானமாக புகைப்படங்களே கதையைக் கொண்டு செல்கின்றன, பிரதி, அவரது நாட்குறிப்பு, இடையூறாக வந்து செல்கிறது- ஏறத்தாழ ஒரு தலைப்பு போல்.

நாவலினுள் நிஜமான ஒரு கலையைப் புகுத்துவது போலவே, இந்த மெய்ப்புனைவுகளில் பலவும் அருங்காட்சியகங்கள் அல்லது சமகால கலைக் காட்சிக்கூடங்களில் நிகழும் காட்சிகள் சிலவற்றைச் சித்தரிக்கின்றன. லெர்னரின் லீவிங் தி அடோச்சா ஸ்டேஷன் நாவலின் துவக்க காட்சி ப்ராதோவில் நிகழ்கிறது. அங்குள்ள ஓவியங்களைவிட, மியூசியத்தைவிட்டு வெளியேற விரும்பாத வருகையாளரை வெளியேற்றுவதில் அதன் காவலர்கள் தயக்கம் காட்டுவதுதான் கதைசொல்லிக்கு நெகிழ்வூட்டுவதாக இருக்கிறது. ஹவ் ஷுட் எ பெர்ச்ன் பி என்ற நாவலில் ஷீலா ஹெட்டி மூன்று நாட்கள் ஆர்ட் பேஸலில் கழிக்கிறாள், த மேப் அண்ட் த டெர்ரிட்டரியில் மைக்கல் ஹூல்லபேக் சமகால கலையுலகைப் பகடி செய்கிறார். சிறி ஹூஸ்ட்வெட்டின் நாவல், வாட் ஐ லவ்ட், ஓர் ஓவியத்தைக் கண்டெடுப்பதில் துவங்குகிறது. அவர் சமீபத்தில் எழுதிய த ப்ளேஸிங் வர்ல்ட் கலையுலகில் பெண்களுக்கு எதிரான நிறுவனமயமாக்கப்பட்ட மனச்சாய்வை உரித்துக் காட்டுகிறது. ஓரான் பாமுக்கின் த மியூசியம் ஆப் இன்னசன்ஸ் இஸ்தான்புல் நகரில் நிஜ மியூசியமாகவே உருவம் பெற்றது.

வேறு வழிகளிலும் கலையுலகம் இலக்கிய உலகினுள் புகுந்துள்ளது. லண்டன், நியூயார்க் முதலான பெருநகரங்கள் உட்பட பெரும்பாலான கலைச் சந்தைகளில் எழுத்தாளர்களின் உரைகளும் இடம் பெறுகின்றன. கணிசமான வரவேற்பு பெற்ற கலை விமரிசன நூலொன்றை எழுதியுள்ள ஹூஸ்ட்வெட் ப்ராதோவிலும் மெட்டிலும் உரையாற்றியிருக்கிறார். பாம்ப் இதழில் ஒரு நேர்முகத்தில் நாவலாசிரியர் டாம் மக்கார்த்தி, காண்கலை பயிலும் நண்பர் கூட்டத்தில் தனது இருபதாம் ஆண்டுகளில் தான் பழக நேர்ந்தது இலக்கியத்தின் சாத்தியங்கள் குறித்து மேலும் நுட்பமான புரிதலை அளித்தது என்று சொல்லியிருக்கிறார்- “இலக்கிய அன்பர்களைக் காட்டிலும் இவர்கள் இலக்கியத்துடன் மேலும் கூடுதலான அளவில் செயலாற்றல் மிகுந்த உறவு பூண்டவர்களாக இருக்கின்றனர்… பெக்கட் எழுப்பும் கேள்விகளை ப்ரூஸ் நவ்மன் எதிர்கொள்வது போல, அல்லது ஜாய்ஸ் உடன் கேஜ் உரையாடுவது போல் நவீனத்துவ இலக்கியத்தின் பங்களிப்பு முழுமையையும் இவர்களது படைப்புகள் மிகுந்த செயலூக்கத்துடன் எதிர்கொள்வதாகத் தெரிகிறது…. இலக்கியத்துடன் உரையாடவும், அதை உருமாற்றவும் அதற்கு விரிவு அளிப்பதற்கும் தகுந்த களம் ஒன்றை கலையுலகம் பெருமளவுக்கு அமைப்பதாக இருக்கின்றது”

காண்கலைகளை மையமாய்க் கொண்ட இத்தகைய இலக்கியச் செயல்பாடுகள் தன்னிகழ்வுத் தன்மையை இழந்து வருகின்றன, அதுவே நோக்கமனைத்தும் என்ற நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றன. இன்றைய அவான் கார்ட் எழுத்தாளர்கள் கான்செப்சுவல் கலைஞர்களாக இருக்க விரும்புகின்றனர், அவர்களது நாவல்கள் கான்செப்சுவல் கலையாக அறியப்பட விரும்புகின்றனர். இதுவே இலக்கியத்தின் டூஷாமிய தருணமாக இருக்கலாம். இது ஆயத்த நாவல்களின் உலகு, தங்கள் வரவு நல்வரவாகுக!

கழிப்பிடம் கலையாகுமா என்று மார்செல் டூஷாம் கேட்டது போலவே, இலக்கியம் என்னவாக இருக்க முடியும் என்றும் எதிர்காலத்தில் என்னவாக இருக்க வேண்டும் என்றும் ஆயத்த நாவல் கேட்கிறது. மெய்ம்மை என்பதை பருண்ம விபரத் தொகையைக் கொண்டும், அனைத்தும் எமக்குத் தெரியும் என்ற பாவனையில் பேசியும், பல பார்வைகளை வெளிப்படுத்தியும் மரபார்ந்த புனைவு வடிவிலும் நாமறிந்த வேறு பல வகைகளிலும் புரிந்து கொள்வதற்கு மாறாக, ஆயத்த நாவல் ஒரு கருத்துருவை முன்வைக்கிறது, அல்லது ஒரு கேள்வி எழுப்புகிறது. ஒரு கலைப்படைப்பின் பின்னுள்ள- தன் பின்னுள்ள- கருத்துரு என்னவாக இருக்க முடியும் என்ற கேள்வியில்தான் அதற்கு ஆர்வம் இருக்கிறது, அதை எவ்வளவு வெற்றிகரமாக செய்து முடிக்கிறோம் என்பதிலல்ல. ஆயத்த நாவல் கான்செப்சுவல் கலையின் பிரதான வரத்தை (அல்லது சாபத்தை) அடிக்கோடிட்டுக் காட்டுகிறது: மரபார்ந்த கண்காண் கலை போலல்லாது, ஆயத்த கலையைப் புரிந்து கொண்டாக வேண்டிய தேவையில்லை. ஆனால் பார்க்கப் போனால், அதுவும் ஆயத்த நாவலைப் பிரித்துப் பார்ப்பது போல்தான் இருக்கிறது; நீ கலைப் படைப்பை வெறுமே பார்த்துக் கொண்டிருப்பவனல்ல, அதன் உருவாக்கத்தில் நீயும் செயலூக்கத்துடன் பங்கேற்கிறாய்.

இலக்கியம் என்பது ஒரு கான்செப்சுவல் கலை என்பது எந்த அளவுக்கு சமகால அவான் கார்ட் இலக்கியத்தை ஊடுருவியுள்ளது என்பதற்கு ஸ்பானிய நாவலாசிரியர் என்ரிக் விலா-மதாஸ் எழுதி சமீபத்தில் பதிப்பிக்கப்பட்ட இரு நூல்களே சான்று. இவர் கடைசியாக எழுதியுள்ள தி இல்லாஜிக் ஆப் கஸ்ஸல் என்ற நாவலில் எழுத்தாளரே சமகால கலைக்கூட காட்சிப்பொருளாகிறார். 2013ஆம ஆண்டு ஜெர்மனியில் கஸ்ஸல் நகரில் நடைபெற்ற டாகுமெண்டா ஆர்ட் எக்சிபிஷனில் இருப்பு எழுத்தாளராக ஒரு வாரம் தங்கிச் செல்லும்படி அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது அவர் நிஜவாழ்வில் எதிர்கொண்ட அனுபவங்களின் மிகையான புனைவுபடுத்தலே இந்நாவல். அக்கண்காட்சியின் க்யூரேட்டர்கள், நாவலாசிரியரிடம் அங்குள்ள ஒரு சிறிய சைனீஸ் ரெஸ்டாரண்டின் ஒரு மூலையில் உட்கார்ந்து அந்த வாரம் முழுவதும் ஏதாவது எழுதிக் கொண்டிருக்கும்படி கேட்டுக் கொள்கிறார்கள். விலா-மதாஸ் இதை அபத்தம் என்று உணர்கிறார், நிஜவாழ்வில் செங்கிஸ்கான் ரெஸ்டாரண்டில் தானிருந்த காலத்தில் பெரும்பொழுதைத் தூங்கிக் கழிக்கிறார், தன்னைச் சுற்றியுள்ள ஜெர்மானிய மக்களும் சீன மக்களும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று கற்பனை செய்கிறார், தன்னை அணுகும் ஒரே பைத்தியக்காரனைத் தவிர்த்து விடுகிறார். ரெஸ்டாரண்டில் அவரிருந்த பொழுது வீண் போனதுபோல் தெரிகிறது, ஆனால் டாகுமெண்டா ஆர்ட் எக்சிபிஷன் க்யூரேட்டர்கள் எதிர்பார்த்தபடியே அவர் ஒரு நிகழ்த்துகலை கலைஞராகிறார்- “கலை என்னவோ கலைதான், அதை நீ என்னவாகப் புரிந்து கொள்கிறாய் என்பது உன் விருப்பம்”, என்று ஒரு க்யூரேட்டர் அவரிடம் சொல்கிறார்.

எ பிரீஃப் ஹிஸ்டரி ஆப் போர்டபிள் லிடரேச்சர் என்ற நாவலையும் விலா-மதாஸ் எழுதியிருக்கிறார். 1985ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட அந்த நாவல் இவ்வாண்டு முந்தைய பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நாவலுடன் ஆங்கிலத்தில் வெளியிடப்படவிருக்கிறது. இந்த இரு நூல்களில் இதுவே மேம்படுத்தப்படாதது. திரிஸ்திராம் ஷாண்டியில் வரும் ஷாண்டிக்கள் போன்றவர்களின் ரகசிய இலக்கிய அமைப்பின் நடவடிக்கைகளை விவரிக்கும் விளையாட்டு நாவல் இது. இதன் பக்கங்களிலேயே மிகுந்த தன்னடக்கத்துடன், “இலக்கற்ற, குறிக்கோளற்ற, வீணாய்ப் போன பயணம்” என்று விவரிக்கப்படுகிறது. இந்தப் புத்தகம் அவான் கார்ட் அட்டவணைப் புத்தகம் என்று சொல்லலாம்- டூஷாம், வால்டர் பெஞ்சமின், மான் ரே, ஜியார்ஜியா ஓ;கீஃப், என்று பலரைப் பேசுகிறது, சில இடங்களில் நகைச்சுவையாகவும் சில இடங்களில் தெரிந்தவர்களுக்குள் பேசிக்கொள்வதைக் கேட்பது போன்ற எரிச்சலூட்டுவதாகவும் உள்ள நடையில் எழுதப்பட்டுள்ள நாவல் இது. இதில் ஒரு மாக்குமென்டரி ரெட்ரோஸ்பெக்டிவ் உணர்வு இருக்கிறது- மிகக் குறுகிய காலமே நீடித்த ரகசிய அமைப்பின் அழிவுக்குக் காரணம் என்ன என்பது குறித்த அரைகுறை புலனாய்வு இது. இதன் அங்கத்தினர்கள் போர்டபிள் ஆர்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டனர், அதாவது ஆயத்தகலைகள், டூஷாமின் கைப்பெட்டியில் பெட்டி போன்ற வஸ்துகள்.

முப்பதாண்டு இடைவெளியில் பதிப்பிக்கப்பட்ட இந்த இரு நாவல்களையும் சேர்த்து வாசிக்கும்போது சமகால கலைக்கும் இலக்கியத்துக்கும் இடைப்பட்ட தொடர்பு குறித்து விலா-மதாஸின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைப் புரிந்து கொள்ள முடிகிறது. எ பிரீப் ஹிஸ்டரி ஆப் போர்டபிள் லிடரேச்சர் நாவலோ, ரூஷாமிய சீடர்களின் உரையாடல்களை புறபொருள் கொண்டு எதிரொலிப்பதாக மட்டுமே இருக்கிறது. அதை ரசிக இலக்கியத்தின் ஹைப்ரோ வடிவம் என்றே கூறலாம். ஆனால் தி இல்லாஜிக் ஆப் கஸ்ஸல் நாவலில் மாபெரும் கலைஞர்கள் எவ்வாறு போர்டபிள் கலை படைத்தார்கள் என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் அவரே போர்டபிள் ஆர்ட்டின் அங்கமாகிறார். சீன ரெஸ்டாரெண்டில் எழுதிக் கொண்டோ அல்லது எழுதுவது போல் நடித்துக் கொண்டோ, முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்த அவர், டாகுமெண்டா 13ன் அதிகாரப்பூர்வ காட்சிப்பொருளாய் அமர்ந்திருந்தார்- அதன் இருத்தல் விதிமுறைகள் “கூட்டிசைக் கணங்களைக் கோரிற்று- உரத்தோ மௌனமாகவோ ஒருவருக்கொருவர் உறுதியளித்துக் கொள்ளுதல், எந்த கட்டாயமுமில்லாமல் குரல்கள் சந்தித்து இணையக்கூடும் என்ற சாத்தியம்”- இதன் கருத்துரு, அல்லது கேள்வி- எழுத்து என்ற ஏகாந்தக் கலையை பொது நிகழ்ச்சியாக மாற்றினால் என்னவாகும்? பொது வெளியில் அந்தரங்கத்துக்கு இடமுண்டா?- இதை நிகழ்த்திக் காட்டுவதில் எந்த அளவுக்கு வெற்றி கிட்டுகிறது என்பதைவிட நிகழ்த்துதலின் கருத்துருவும் கேள்வியும்தான் முக்கியமாக இருக்கின்றன.

ஆனால் ஆயத்த நாவலின் ஒற்றை நோக்கமல்ல இது- நாம் பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரெஞ்சு நாவலாசிரியர்கள் போல் வாழ்வதில்லை என்று நினைவுறுத்துகிறார் விலா-மதாஸ், எனவே அவர்களின் பாணியில் எழுத வேண்டிய தேவையில்லை. யதார்த்தவாதத்தின் அரைகுறை அறிவியல் நடைமுறைகளை இனியும் பின்பற்ற வேண்டியதில்லை: “யதார்த்தத்தை பிரதியெடுக்க வேண்டும், நகலெடுக்க வேண்டும், போலி செய்ய வேண்டும் என்பதே எழுத்தாளனின் கடமை என்று கருதும் யதார்த்தவாதியை நாம் வெறுக்கிறோம்- அதன் குழப்பமான வளர்ச்சியில், ராட்சத சிக்கல்களூடே, யதார்த்தத்தை பொறி வைத்துப் பிடித்து கதைக்க முடியும் என்பது போல் அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான்”, என்று எழுதுகிறார் விலா- மதாஸ் தி இல்லாஜிக் ஆப் கஸ்ஸல் நாவலில். “எந்த அளவுக்கு நுண்மையான தகவல்களை யதார்த்தமாகக் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு உண்மையை நெருங்குவதாக நம்பிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களைப் பார்த்து நாம் திகைத்து நிற்கிறோம். உண்மையில் எத்தனை எத்தனை தகவல்களை நிறைக்கிறாயோ, அத்தனைக்கு அத்தனை நீ மெய்ம்மையை விட்டு விலகிச் செல்கிறாய்”

மாறாய், நம் யதார்த்தம், ஏதோ ஒரு வகையில் கான்செப்சுவல் ஆர்ட்டுக்கு இணையானது. மல்லார்மே மோனேவிடம் சொன்ன ஒரு வாக்கியத்தை விலா-மதாஸ் திரும்பத் திரும்பச் சொல்கிறார்: “ஓவியம் புனை, பொருளையல்ல, அதன் தாக்கத்தை”. வேறு சொற்களில் சொல்வதானால், கலையின் தாக்கம் கான்வாசைக் காட்டிலும் முக்க்யமானதாக இப்போது ஆகிவிட்டது. நாவலில் இந்த வாக்கியம் மீண்டும் மீண்டும் பேசப்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இந்த நாவலில் அவர் கலையின் தாக்கத்தை ஓவியமாய் புனைந்து கொண்டுதான் இருக்கிறார். ஒப்பனைகளற்ற செறிவான அகவாழ்வு வாசகனுக்கு முழுதாய் திறந்து கொடுக்கப்படுகிறது- டாகுமெண்டாவில் உள்ள கண்காட்சிப் பொருட்களைக் காண்கையில் தன் உள்ளத்தில் எழும் அச்சங்கள், எண்ணங்கள், அனுபவங்கள், அத்தனையயும் அவர் தோலுரித்துக் கொடுக்கிறார். உண்மையில், வாசகனும் இதில் பங்கேற்க வேண்டும் என்று விலா-மதாஸ் வற்புறுத்துகிறார். டாகுமெண்ட்டாவில் உள்ள கான்செப்சுவல் ஆர்ட் இன்ஸ்டல்லேஷன்கள் அவற்றின் பொருளுணர வாசகன் தன் பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்று சொல்வதைப் போலவே வாசகனும் செய்ய வேண்டும் என்கிறார் விலா-மதாஸ். “கலை என்னவோ கலைதான், அதை என்னவென்று புரிந்து கொள்கிறாய் என்பது உன் விருப்பம்” என்கிறார் டாகுமெண்டாவின் க்யூரேட்டர். ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் புரிதல்களைப் பொருதி வெவ்வேறு எண்ணத் தொடர்புகளையும் உணர்வுகளையும் கோட்பாடுகளையும் விளங்கிக் கொண்டு- புத்தாயிரக் கலைப்படைப்பின் பணி இதுவே.

சமகால இலக்கியத்தின் விளிம்பில்தான் ஆயத்த எழுத்தாளர்கள் இருக்கின்றனர். உலக அளவில் செபால்டும் பாமுக்கும்தான் புகழ் பெற்றிருக்கின்றனர். கோலே, லெர்னர் இருவரும் அங்கீகரிக்கப்படத் துவங்கியிருக்கின்றனர், அவர்கள் இனி எழுதப்போகும் நாவல்கள் இன்னும் ஆரவாரமாய் பேசப்பட வேண்டும் என்று விரும்புகிறோம், ஆனால் விலா-மதாஸ், ஜாம்ப்ரா இருவரும் தமது இன்னும் பல ஆங்கில மொழியாக்கங்கள் வெளிவரக் காத்திருக்க வேண்டும், அப்போதுதான் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிட்டும்; சோபி காலே என்றென்றும் மிதமிஞ்சிய அவான் கார்டாகவே இருந்துவிட்டுப் போகலாம். ஆனால் யாருக்கு எவ்வளவு வணிக வெற்றி கிட்டினாலும், இந்த எழுத்தாளர்கள் பரவலாக அறியப்படத் துவங்கியிருப்பது கலை இன்று நமக்கு எத்தகைய அனுபவமாய் இருக்கிறது என்பதில் ஆர்வமுள்ள ஒரு சிறு எண்ணிக்கையிலான வாசகர்களேனும் இருக்கின்றனர் என்பதை உணர்த்துகிறது. இந்தத் தலைமுறையின் இளம் எழுத்தாளர்கள் இதுபோன்ற இன்னும் பல புத்தகங்களை எதிர்காலத்தில் தொடரந்து எழுதுவார்கள் என்றும் தோன்றுகிறது. இந்த ஆயத்த நாவலாசிரியர்கள் இதுபோன்ற இன்னும் பல ஆயத்த படைப்புகளைப் பிறர் எழுதி வெளிவரக் காரணமாகவும் அமையலாம்.

நன்றி- New Republic

லூயி ஏட்ரிக்- எழுத்து ஒரு பித்து நிலை

அமெரிக்க பூர்வகுடி எழுத்தாளர் லூயி ஏட்ரிக் எழுதிய The Round House என்ற நாவல் குறித்து குறித்து இவ்விதழில் அஜய் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். பாரிஸ் ரிவ்யூ தளத்தில் லூயி ஏட்ரிக் அளித்த நேர்முகம் ஒன்றின் சில பகுதிகள் அதையொட்டி இங்கு மொழிபெயர்க்கப்பட்டு அளிக்கப்படுகின்றன.

மொழி குறித்து

கேள்வி-

“சிஸ்டர் கொட்சில்லா” கதையில் வருபவருக்கும் உங்கள் ஆசிரியைக்கும் ஏதாவது தொடர்புண்டா?

ஏட்ரிக்-

இல்லை, ஆனால் அப்புறம் எனக்கு பிரான்சிஸ்கன் டீச்சர்கள் இருந்தார்கள். அவர்களில் சிலரை தேவதைகள் என்றுதான் சொல்ல வேண்டும், வேறு சிலர் கொஞ்சம் குழப்பமான மனநிலையில் இருந்தார்கள். நான் ஆறாவது கிரேட் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு ஆசிரியையாக இருந்தவர் சிஸ்டர் டோமினிகா, அவர் உணவு இடைவேளையில் ஹோம் ரன்கள் அடிப்பார், எனக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது, ஆனால் சிஸ்டர் கொட்சில்லா என்று சொல்லக்கூடிய வகையில் அச்சு அசலாக யாரும் இருக்கவிழலி. ஆனால் மிஸ் ஸ்மித் பற்றிச் சொல்ல வேண்டுமானால், இன்னும் நான் அவரது புகைப்படத்தை வைத்திருக்கிறேன். அவர் பூனைக்கண் கண்ணாடி போட்டிருந்தார், தன பொன்னிற முடியை நெடிய கூந்தலாக வைத்துக் கொண்டிருந்தார், தலையில் ஷிபான் ஸ்கார்ப் போர்த்து மோவாய் நுனியில் முடிச்சிட்டிருந்தார். மிஸ் ஸ்மித் வருவதற்கு முன்பே சில காலமான எனக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தது, ஆனால் சொற்களின் உள்ளே உள்ள உயிர்ப்பு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஒவ்வொரு சொல்லுக்கும் ஆன்மா உண்டு என்று ஒஜிப்வேக்கள் சொவ்லதுண்டு. லுக் என்ற சொல்லில் உள்ள ஓ என்ற எழுத்துக்கு மிஸ் ஸ்மித் கண்ணிமைகள் வரைந்தார், அதன் மத்தியில் விழித்திரை வரைந்தார்- இப்போது திடீரென்று பார்த்தால், லுக் என்ற சொல் பார்த்தல் எனும் செயலாயிற்று. என் மனதில் ஆனந்தம் ஒரு மின்னலென வெட்டியது.

கேள்வி-

நீங்கள் வளரும் பருவத்தில் அவர் ஒஜிப்வேமோவின் பேசினாரா?

ஏட்ரிக்-

என் தாத்தாவின் குடும்பம் ரெட் லேக் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர் அப்பகுதியின் வட்டார வழக்கு பேசுவதுண்டு. ஆனால் அவர் மிக அருமையாக ஆங்கிலம் பேசவும் எழுதவும் செய்தார். என் அம்மா சொற்களை இங்கும் அங்கும் கற்றுக் கொண்டவர், ஆனால் ஒரு குழந்தையாய் ஒரு மொழிச்சூழலில் ஆழ்ந்திருந்தால்தான் அதை இயல்பாகவே கற்றுக் கொள்ள முடியும்.

கேள்வி-

அது எப்படி?

ஏட்ரிக்-

மொழி கற்பதற்கான வாய்ப்புள்ள ஒரு பருவம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது, நம் மூளை அப்பருவத்தில் மொழிகளைக் கற்கத் தயாராகி இருக்கிறது. எட்டு அல்லது பத்து வயதுக்குப்பின் மொழிகளைக் கற்பது கடினமாகிறது. அதுதவிர ஒஜிப்வே கற்பதற்கு மிகக் கடினமான மொழிகளில் ஒன்றாகவும் இருக்கிறது.. அதற்குக் காரணம் அதன் வினைச்சொற்கள் அசாதாரணமான வடிவங்கள் கொள்பனவாக இருக்கின்றன. பெயர்ச்சொற்களில் ஆண்பால் பெண்பால் வேறுபாடு கிடையாது, ஆனால் அவை உயிருள்ளவை உயிரற்றவை என்று பகுக்கப்படுகின்றன. பெயர்ச்சொல் உயிர் உண்டு என்றோ உயிரற்றது என்றோ குறிப்பதற்கு ஏற்ப வினைச்சொல்லின் வடிவம் மாறுகிறது. அதே போல் மானுட உறவுகளுக்கேற்பவும் வினைச்சொல் வடிவம் மாறுகிறது. வினைச் சொற்களுக்கு முடிவே இல்லை. பல முறை நான் ஒஜிப்வே பேச முயற்சிக்கும்போது என் மூளை ஸ்தம்பித்து நிற்கிறது. ஆனால் என் மகள் அதைப் பேசப் பழகிக் கொண்டிருக்கிறாள், இது எனக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது.

ஆனால் ஆங்கிலம் மிகவும் சக்திவாய்ந்த ஒரு மொழி என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. அது காலனியாதிக்கம் செய்தவனின் மொழி, அது எழுத்தாளனுக்கு ஒரு வரம். பிற பண்பாடுகளின் மொழிகளை ஆங்கிலம் அழித்து உட்கொண்டிருக்கிறது- அதன் குரூரமே அதன் உயிர்ப்பாக இருந்து வந்திருக்கிறது,. ஒஜிப்வே கல்லூரிகளில் கற்றுக் கொடுக்கப்படுகிறது, அதில் ஆழ்ந்து பயிலும் வகையில் வகுப்புகள் நிறைய நடக்கின்றன. ஆனால் என் தாத்தா அரசுப் பள்ளியில் தங்கியிருந்து படித்தபோது அவர் ஒஜிப்வே பேசக்கூடாது என்று சொல்லி விட்டார்கள். கத்தோலிக் பள்ளிகளில் தங்கியிருந்து படித்தவர்களும் ஒஜிப்வே பேச அனுமதிக்கப்படவில்லை. என் அம்மா அங்கேதான் படித்தார், என் குடும்பத்தில் பலரும் கத்தோலிக்கர்களாகவே இருந்தோம்.

சமயம் பற்றி

கேள்வி-

நீங்கள் பக்தியுள்ள ஒருவராக வளர்க்கப்பட்டீர்களா?

ஏட்ரிக்-

ஒவ்வொரு கத்தோலிக்கரும் பக்தியுள்ள வகையிலும் காஸ்பல்கலை நேசிப்பவர்களாகவும்தான் வளர்க்கப்படுகின்றனர். ஆனால் பழைய ஏற்பாடு என்னைக் கெடுத்துவிட்டது என்று சொல்ல வேண்டும். நான் வாசிக்கத் துவங்கியது என் மிக இளம் வயதில், அப்போது பழைய ஏற்பாடு என்னை உள்ளிழுத்துக் கொண்டது. சிந்தனையில் மாயங்கள் நிறைந்த வயது அது- கைததடிகள் பாம்புகளாக மாறும் என்றும் பற்றியெரியும் புதரிலிருந்து குரல் கேட்கக் கூடும் என்றும் மனிதர்களோடு தேவர்கள் பொருதினார்கள் என்றும் நம்பினேன். ஆனால் பள்ளிக்குப் போய் வேதாகமம் படிக்க ஆர்மபிதபோது சமயம் என்பதில் எல்லாமே விதிமுறைகள்தான் என்பதைப் புரிந்து கொண்டேன். என் பக்கத்து வீட்டில் ஒரு மணமாலை செய்யப் பயன்படுத்தப்படும் இலைகள் கொண்ட செடி புதர்மண்டிக் கிடந்தது, அதை வெறித்துப் பார்த்துக் கொண்டே இருந்தது நினைவிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அது பூக்கும், ஆனால் ஒரு முறைகூட பேசியதில்லை. தேவதைகள் யாரும் வரவில்லை, செந்நதி எதுவும் விலகவில்லை. அற்புதமான ஒன்றும் நடக்கப்போவதில்லை என்று நான் புரிந்து கொண்டதும் எல்லாம் சுரத்தின்றிப் போனது.

எனக்கு பாரம்பரிய ஒஜிப்வே சடங்குகள் இப்போது பிடித்தவையாக இருக்கின்றன, ஆனால் சமய விதிமுறைகளை வெறுக்கிறேன். அவை பெரும்பாலும் பெண்களைக் கட்டுப்படுத்தவே இருக்கின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லாரும் கல்லும் மரமுமாய் கட்டப்பட்ட ஆலயங்களுக்குப் போகும்போது நான் என் பெண்களை காட்டுக்கு அழைத்துச் செல்கிறேன். அல்லது வேலையில் போய் தொட்ட வேலையாவது செய்கிறேன். நமக்கு இருக்கும் எந்த கடவுளானாலும் அங்கே வெளியேதான் இருக்கப் போகிறார்கள். அப்படியெல்லாம் யாரும் கிடையாது என்பதை உறுதியாக உணர முடியுமென்றால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றுதான் நினைக்கிறேன். கடவுள் விஷயத்தில் நான் சந்தேக மனநிலையைக் கொண்டாடுகிறேன்.

தன் எழுத்து குறித்து

கேள்வி-

லவ் மெடிசின் நாவலில் வரும் ஒரு பாத்திரம் இப்படிச் சொல்கிறது- “நீ லூலூ லமார்டைனைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் உலகில் மூன்று வகை மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்- வாழ்க்கையை வாழ்பவர்கள், வாழ அஞ்சுபவர்கள், இவ்விரண்டுக்கும் இடைப்பட்டவர்கள். என் அம்மா முதல் வகை”. நீங்கள் எந்த வகை?

ஏட்ரிக்-

நான் எப்போதும் முதல் வகையில் இருக்கத்தான் ஆசைப்பட்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன், ஆனால் உண்மையில் நான் கடைசி வகையைச் சேர்ந்தவள். என்னால் உயிர் வாழ முடியாத வழிகளிலெல்லாம் நான் எழுத்தின்மூலம் வாழ முடியும். இரண்டு தகப்பன்களிடம்தான் பிள்ளை பெற்றுக் கொண்டிருக்கிறேன். லூலூ எத்தனை பேரிடம் குழந்தை பெற்றுக் கொண்டாள், எட்டுத்தானே? உனக்கு நிஜமாகவே இந்த மாதிரி அனுபவங்கள் ஏற்பட்டிருக்கிறதா என்று சில சமயம் என்னிடம் கேட்கிறார்கள். உனக்கு என்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா என்று சிரிக்கிறேன். அத்தனை அனுபவங்கள் ஏற்பட்டிருந்தால் செத்துப் போயிருப்பேன், ஐம்பது முறை செத்துப் போயிருப்பேன். எனக்கு என் நேரடி அனுபவங்களை எழுத விருப்பம் இருக்கிறது என்று சொல்வதைவிட, அதை உணர்வுப்பூர்வமாக புரிந்துகொள்ள ஆசைபடுகிறேன் என்று சொல்லலாம்.

ஆனால் நாம் நம் பல்வேறு ஆளுமைகளை உருவாக்கி ஒளித்து வைத்துக் கொள்கிறோம் என்று நினைக்கிறேன், எழுதும்போது அவை எழுந்து வருகின்றன. எழுத்தைக் கட்டுப்படுத்துவது என்பது அப்புறம்தான் வருகிறது. எனக்கு ஒரு உண்மையான குரல் கேட்டுக் கொண்டிருக்கும்போது அதை எழுதுவது அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது, அந்தக் குரலையும் பாத்திரத்தையும் பின்பற்றிச் செல்லப் பிடித்திருக்கிறது. அது ஒரு பித்து நிலை போன்றது. அப்படிச் சில முறை நேர்ந்தபின், நான் என் வாழ்நாளெல்லாம் எழுதிக் கொண்டிருந்தாக வேண்டும் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. அந்த பித்து நிலைக்கு நான் ஏங்க ஆரம்பித்துவிட்டேன். நான் எப்போது வேண்டுமானால் என் கதைக்குத் திரும்பி வர முடியும், அது என் கண்முன்னே நடந்து கொண்டிருக்கும், நான் எந்த முயற்சியும் செய்ய வேண்டியிருக்காது. என் கதைகளில் பல அந்த மாதிரி உருவாகிறது என்று சொல்ல மாட்டேன். பெரும்பாலான கதைகளும் விடாமுயற்சியில் உருவானவைதான். இருபது ஆண்டுகளாக சில கதைகளைச் சுமந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு வார்த்தையாக அவற்றைத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஆனால் பித்து என்று வந்துவிட்டால், அது எவ்வளவு அற்புதமாக இருந்தாலும், அதை நான் சந்தேகத்துடன்தான் அணுகுகிறேன். அது ஒரு ஆனந்தமயமான காதல் அனுபவம் போன்றது, அல்லது, “இது இவ்வளவு அருமையாக இருக்க முடியாது,” என்று உன்னை யோசிக்கச் செய்யும் மோகநிலை போன்றது. உண்மையில் அவ்வளவு அருமையாக எதுவும் இருக்கவும் முடியாது. எப்போதும் நான் திரும்பிச் சென்று அந்தக் குரலின் சில பகுதிகளைத் திருத்தி எழுத வேண்டியிருக்கிறது. எனவே, எழுதி முடித்தபின் அந்தக் கட்டுப்பாடு வேலை செய்கிறது, முடிவை அடைய அது உதவுகிறது. தலைப்பு எப்போதும் இருக்கும், துவக்கம் எப்போதும் இருக்கும், சில சமயம் மத்திய பகுதிகளுகுக் காத்திருக்க வேண்டியிருக்கலாம், வேறு சமயங்களில் நான் முடிவுக்கு அப்புறம் எழுதிக் கொண்டிருந்துவிட்டு இரண்டு பக்கம் போல வெட்ட நேரிடலாம்.

கேள்வி-

ஏன் அப்படி ஆகிறது?

ஏட்ரிக்-

என்னால் கதையை முடிக்க முடியாதபோது. பொதுவாகவே நான் முடிவுக்கு அப்புறம் எழுதிக் கொண்டிருபப்துதான் வழக்கம். ஆனால் விஷயம் என்னவென்றால் திரும்பிப் போய் கதையின் கடைசி வாக்கியம் எங்கு வருகிறது என்பதைத் தீர்மானிப்பதுதான்.

கேள்வி-

உங்கள் பாத்திரங்களை குழப்பிக் கொள்ளாமலிருக்க என்ன செய்கிறீர்கள்?

ஏட்ரிக்-

முதலில் என் மனதில் அதைச் செய்து கொண்டிருந்தேன், ஆனால் உண்மையில் அவர்கள் என்ன மாதிரி குழம்பிப் போகிறார்கள் என்பது பற்றி நான் கவலைப்பட்டது கிடையாது. பாத்திரப்படைப்பில் செய்வது குறித்து நான் அலட்டிக் கொண்டது கிடையாது. அழகியல் காரணங்களுக்காக, அல்லது ஏதோ ஒரு மரபைக் கடைபிடிக்க இப்படிச் செய்தேன் என்று என்னால் சொல்ல முடிந்தால் நன்றாக இருக்கும், ஆனால் உண்மையில் எனக்கு அந்த விஷயத்தில் எந்த அக்கறையும் இருந்தது கிடையாது. கதையைச் சொல்ல வேண்டும் என்பதுதான் தேவையாக இருந்தது. ட்ரெண்ட் டஃப்பி, நியூ யார்க்கின் ஆகச் சிறந்த காப்பி எடிட்டர், அவர் மட்டும் இல்லையென்றால் நான் எழுதுவது எல்லாம் முன்னுக்குப்பின் முரணாக இருந்திருக்கும், நானும் இன்றுவரை அது பற்றி எதுவும் செய்திருக்க மாட்டேன். ஆனால் இப்போது முரண்பாடுகள் இருக்கின்றன, இல்லையா?

கேள்வி-

ஏற்கனவே பதிப்பிக்கப்பட்டதைத் திருத்தி எழுதுகிறீர்களா?

ஏட்ரிக்-

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதைச் செய்கிறேன். பொதுவாக தாமதமாக எழுதி அச்சுக்குப் போகும்போது சேர்க்க முடியாமல் போன அத்தியாயங்களைச சேர்க்கிறேன். அல்லது புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒஜிப்வே மொழியை மேம்படுத்தப் பார்க்கிறேன். நான் கற்கக் கற்க, என் ஆசிரியர்களுடன் பேசப்பேச எனக்கு எவ்வளவு தெரியாமல் இருக்கிறது என்பது புரிகிறது. ஒஜிப்வே விஷயத்தில் நான் வாழ்நாள் தோல்வியாளர் என்று நினைக்கிறேன்- நான் டான் க்விசோட் என்றால் அதுதான் என் காற்றாலை. லவ் மெடிசின் நாவலை நிறைய மாற்றியிருக்கிறேன், ப்ளூ ஜே’ஸ் டான்ஸ் நாவலையும் திருத்தி எழுத விரும்பினேன். குறிப்பாக அதில் உள்ள சமையல் குறிப்புகளை நீக்க விரும்பினேன்- அதில் உள்ள லெமன் மெரிங் பை சமைத்துப் பார்க்க வேண்டாம், அதை வாயில் வைக்க முடியாது. எனக்கு அந்த மாதிரி கடிதங்கள் வந்திருக்கின்றன. ஃபோர் சோல்ஸ் நாவலை திருத்தி எழுதக் காத்திருக்கிறேன்- அதில் மிகப்பெரும் பிழைகள் பல இருக்கின்றன.

மாந்திரிக யதார்த்த எழுத்து

கேள்வி-

சிலர் உங்கள் எழுத்தை மாந்திரிக யாதார்த்தம் என்று வகைமைப்படுத்துகின்றனர். அது வேறொரு புறாக்கூட்டில் உங்களை அடைப்பதாக நினைக்கிறீர்களா?

ஏட்ரிக்-

என்னோடு உடன்பிறந்தவர்கள் ஆறு பேர், ஏறத்தாழ அவர்கள் அனைவரும் ஒஜிப்வே அல்லது டகோட்டா அல்லது வேறெந்த பூர்வகுடி மக்களுடனோ வேலை செய்கின்றனர். என் கடைசி தம்பி, கடைசி தங்கை, என் கணவனின் சகோதரன் என்று பலரும் இந்தியன் ஹெல்த் சர்வீஸில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் வேலை செய்திருக்கின்றனர். என் இரண்டாம் அண்ணன் வர மின்னசோட்டாவில் வேலை செய்கிறார்- மிட்வெஸ்ட்டில் உள்ள ஒஜிப்வே தேசங்கள் அனைத்துக்கும் உரிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவர் பொறுப்பு. அவர்களது அனுபவத்தைப் பார்க்கும்போது மாந்திரிக யதார்த்தம் கொட்டாவி விடவைக்கிறது. அவர்கள் அனுபவத்தை நான் என் எழுத்தில் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்பது வருத்தத்துக்கு உரிய விஷயம்- அவர்கள் யாரென்று எல்லாருக்கும் தெரிந்து விடும். ஆனால் நம்புங்கள், என் எழுத்து சாதாரண வாழ்க்கையிலிருந்து வருவது.

கேள்வி-

ஆண்டிலோப் வைப் என்ற கதையில் ஒருவன் தன் குழந்தைக்கு பால் கொடுக்கிறான், அது?

ஏட்ரிக்-

அதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது?| ஆண்கள் பால் சுரந்தது குறித்து பல ஆவணங்கள் இருக்கின்றன. ஆண்களும் பெண்களுமாய் இருக்கும் கூட்டத்தில் இந்தக் காட்சியைப் படிப்பது எனக்கு சில சமயம் சங்கடமாகி இருந்திருக்கிறது. ஆண்கள் நிலைகுலைந்துப் போகிறார்கள். ஆனால் அது நல்ல ஐடியாதான் என்று நினைக்கிறேன். உலகின் பிரச்சி\னைகளில் பாதி தீர்ந்துவிடும்.

கேள்வி-

த பிளேக் ஆப் டவ்ஸ் என்ற கதையில் யாருமற்ற ஒரு படகில் வயலின் கரைசேர்கிறதே, அது?

ஏட்ரிக்-

அதுதான் கதையே.

கேள்வி-

நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும்போது ஒரு பாத்திரமோ கதைச்சூழலோ அமானுடத்தை நோக்கிச் செல்லத் துவங்கும்போது அதை எழுத ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பதுண்டா?

ஏட்ரிக்-

நீங்கள் சொல்லும் பொருளில் நான் அமானுடத்தை உணர்வதில்லை/ எனவே, எங்கு அமானுடத்தை நோக்கி கதை செல்லத் துவங்குகிறது என்பதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது. ஒரு வேளை இது என் குசந்தைப்பருவத்திலேயே துவங்கியிருக்கலாம், பழைய ஏற்பாடு இன்னும் என் கற்பனையைக் கெடுத்து வைத்திருக்கிறதோ என்னவோ. ஒரு வேளை அது கத்தோலிக்க சமய தாக்கமாய் இருக்கலாம், அதிசயங்கள் நடக்கும், படகில் வயலின் வரும் என்பது போன்ற விஷயங்களில் அதனால் நம்பிக்கை வந்திருக்கலாம். எனக்கென்னவோ அதெல்லாம் சாத்தியம் என்று தோன்றுகிறது. ஒரு கதை தானாகவே தன்னை எழுதிக் கொள்வது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, நீங்கள் குறிப்பிடும் கதை அப்படிதான் வந்தது. பிளேக் ஆப் டவ்ஸ் கதையில் வரும் மனிதர்கள் சர்ரியலான ஒரு பயணம் செய்யும் இடம் இருக்கிறதே, அதில் கொஞ்சம் கூட மாந்திரிகத்தன்மை கிடையாது. வாப்பேட்டனில் முடிந்த ஒரு சரித்திரப் பயணத்தின் அடிப்படையில் டவுன் பீவர் எழுதப்பட்டது. அவர்கள் பசியால் ஏறத்தாழ செத்தே போனதன் நினைவாக அங்கே ஒரு கல்வெட்டுகூட இருக்கிறது. நான் இதோ இங்கே இருக்கும் மின்னியோபோலிஸ் ஆற்றங்கரைக்கு ஒரு வாரம் இல்லாவிட்டால் மறுவாரம் போகும் இடத்தில்தான் அவர்கள் ஆரம்பித்தார்கள் என்பது எனக்கு வசீகரமாக இருந்தது. அப்போது இந்த நகரம் இல்லைதான். எருமை பூட்டிய வண்டியில் இப்போது இண்டர்ஸ்டேட் 94 என்றிருக்கும் சாலையில் அவர்கள் பயணித்தார்கள். எனக்கு அவர்கள் எந்த பாதையில் சென்றார்கள் என்பது துல்லியமாகத் தெரிந்திருந்தது, அந்த யதார்த்தத்தின் அடிப்படையில்தான் என் விவரணைகள் அமைந்திருந்தன. பயணம் குறித்து எழுதிய டானியல் ஜான்ஸ்டன், பயணம் செய்தவர்களுக்கு மலக்குடல் பிரச்சினைகள் வந்தன என்றும் அதனால் ஒரு மருந்து சாப்பிட்டதாகவும் பதிவு செய்திருக்கிறார். அது என்ன மருந்து என்று பார்ப்பது மட்டும்தான் நான் செய்த வேலை, அந்த மறுத்து லாடானம். பயணம் செய்த காலம் முழுவதும் அவர்கள் ஓபியம் சாப்பிட்ட போதையில் இருந்திருக்கிறார்கள். அதன்பின் பரசூட் ஆப் அப்லிவியன் படித்தேன், நாளெல்லாம் போதை மருந்தின் லாஹிரியில் இருந்தால் என்ன ஆகும் என்று அறிய விரும்பினேன். போனவாரம் நான் மேத்லாண்ட் படித்ததைப் பார்த்தீர்கள். எனக்கு போதை மறுத்து பித்து பிடித்திருக்கிறது என்று நினைப்பீர்களோ என்னவோ!

சிறார் எழுத்து

கேள்வி-

குழந்தைகளுக்காக எழுதுவது என்பது வளர்ந்தவர்களுக்கு எழுதுவதிலிருந்து எந்த வகையில் வேறுபட்டிருக்கிறது?

ஏட்ரிக்-

முன்னாட்களில் நான் செய்த வேலைகளில் ஒன்று, குழந்தைகளுக்கான பாடபுத்தகங்கள் எழுதுவது. ஒவ்வொரு வாக்கியத்திலும் எந்த அளவு கடின வார்த்தைகளும் எளிய வார்த்தைகளும் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு கணித சூத்திரம் பயன்படுத்தினேன். இளம் எழுத்தாளர் ஒருவருக்கு பைத்தியம் பிடிக்கச் செய்யும் சவால் இது. இப்போது குழந்தைகளுக்கு எழுதும்போது விவரணைகளைக் குறைத்துக் கொள்கிறேன், செயலை மட்டும் விவரிக்கிறேன், கூடவே நகைச்சுவை, பிரச்சினைகள், வெற்றி பெறுவதை எழுதுகிறேன். சாவு இருக்க வேண்டும் என்பதும் உண்டுதான், ஆனால் நிறைய இருக்கக்கூடாது. அதில் நான் கவனம் செலுத்தியாக வேண்டும். நான் வளர்பருவத்தினரின் கோர்மாக் மக்கார்த்தி ஆகிவிடக்கூடாதில்லையா!

புத்தகக்கடை

கேள்வி-

பிறரைச் சந்திப்பதற்கான ஒரு இடமாக உங்கள் புத்தகக்கடை இருக்கிறது என்று சொன்னீர்கள். இன்னும் அந்தக் கடை செயல்பட்டுக் கொண்டிருக்கிறதா?

ஏட்ரிக்-

பிர்ச்பார்க் புக்ஸ் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது! உண்மையில், அது வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் நான் தொழில் முனைப்பு கொண்டவள் அல்ல. முதலில் நான் புத்தகக்கடையை ஒரு கலைப்படைப்பாகதான் பார்த்தேன், அது தன கலைத்தன்மையால் மட்டுமே நீடிக்க முடியும் என்று நம்பினேன். ஆனால் இது ஒரு வணிகம் என்பதை இப்போது புரிந்து கொள்கிறேன், ஆனால் அதுதவிர இன்னும் பலவுமாக இருக்கிறது. என்ன ஒரு நல்ல வர்த்தகமும் அதில் தொடர்புடைய மக்கள் சமபந்தப்பட்டது. பிர்ச்பார்க் புக்ஸில் அற்புதமானவர்கள் பலர் பணியாற்றுகின்றனர். அதனால்தான் அது இன்னும் உயிரோடு இருக்கிறது. மிகப்பெரிய ஒரு புத்தகக்கடைக்குள் நுழைவது என்பது என்னவோ அமேசான்.காம் தளத்தில் நுழைவது போலிருக்கிறது. ஆனால் சிறிய ஒரு புத்தகக்கடைக்குள் புகும்போது உடனே நீங்கள் அதன் அலமாரிகளில் உள்ள புத்தகங்களைத் தேர்ந்தெடுத்த மனதின் இருப்பை உணர்கிறீர்கள். புத்தகம் வாங்குபவரோடு அறிவுத்தளத்தில் உரையாடுகிறீர்கள். உங்களுக்கு அதிர்ஷ்மிருந்தால் அருமையான வாசகர் இன்னுமொருவரை நீங்கள் சந்திக்கிறீர்கள்- எங்கள் மேனேஜர், சூசன் வைட், நீங்கள் என்ன வாங்கலாம் என்று பரிந்துரைகள் அளிக்கத் தயாராய் இருப்பவர். மனிதர்களுக்கு புத்தகக்கடைகள் தேவை, பிற வாசகர்களும் தேவை. புத்தகங்களை நேசிக்கும் பிறரொரு நமக்கும் நெஞ்சார்ந்த உரையாடல் தேவைப்படுகிறது.. நமக்கு அது தேவை என்று நாம் நினைப்பதில்லை, காரணம், இனையம் புத்தகம் வாங்குவதைச் சுலபமாக்கியிருக்கிறது. ஆனால் நாம் நினைப்பதைவிட அதிகம் நமக்கு பருண்ம உலகம் அவசியப்படுகிறது. சிறு புத்தகக்கடைகள் சமூக சேவைகளாக இயங்குகின்றன, லாபநோக்கம் கொண்ட வணிக நிறுவனங்களாக அல்ல. இணையத்தில் புத்தகங்கள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கின்றன, ஏராளமாக கிடைக்கின்றன. எனவே பருண்ம வடிவில் உள்ள புத்தகக்கடைகள் மாறுபட்ட வேறொன்றை அளித்தாக வேண்டும். லாபநோக்கமற்ற அமைபுகளுகுரிய சலுகைகள் சிறு புத்தகக்கடைகளுக்கு கிடைக்கக்கூடும்.. ஒருநாள் அரசு அவற்றுக்கு மானியம் அளிக்கக்கூடும், அப்போது அவை லாபமின்றி வெற்றிகரமாக இயங்கக்கூடும். ஏதோவொரு புத்திசாலித்தனமான புத்தகக்கடை அதைச் செய்யலாம், நாங்கள் செய்யப்போவதில்லை, அவை பிறருக்கு நல்ல ஒரு முன்னுதாரணமாகவும் அமையலாம்.

கேள்வி-

உங்கள் கடையை நீங்கள் எப்படி வேறுபடுத்திக் காட்டுகிறீர்கள்?

ஏட்ரிக்-

நாங்கள் எழுத்தாளர்களை ஈர்க்கிறோம், குறிப்பாக, பூர்வகுடியினரை. இலக்கிய நிகழ்வுகள் நடத்துகிறோம், இது நாங்கள் வணிக நிறுவனமல்ல, கலை அமைப்பு என்பதைத்தான் உணர்த்துகிறது. பூர்வகுடிகளைச் சேர்ந்த கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கிறோம், அவர்கள் கூடை பின்னுபவர்கள் அல்லது நகை செய்பவர்கள், ஓவியர்கள் என்று பலதரப்பட்டவர்களாக இருக்கின்றனர். டகோட்டா குடும்பத்தினர் வளர்த்த மருந்து விற்கிறோம். என் சகோதரியும் நானும் ஒஜிப்வே மற்றும் டகோட்டா மொழிகளில் புத்தகங்கள் வெளியிடும் லாபநோக்கமற்ற ஒரு அச்சகம் துவங்கியுள்ளோம். ஒரு சிறு புத்தகக்கடை இருந்தால் நீங்கள் உங்கள் கோட்டித்தனங்களுக்கு நிறைய இடம் கொடுக்க முடியும். இந்தப் புத்தகக்கடை ஒரு அருமையான இடம். என் பெண்களுக்கான ப்ராஜெக்ட்டாக இருக்கும், நாங்கள் இணைந்து ஏதாவது செய்யலாம் என்று நினைத்துதான் இதைத் துவக்கினேன், அப்படிதான் நடந்திருக்கிறது. என் ஒவ்வொரு மகளும் இங்கு பணியாற்றியிருக்கிறாள்.

நம் தேசத்தில் ஏதோ ஒரு தப்பு இருக்கிறது- புத்தக வியாபாரத்தில் மட்டுமல்ல. கட்டுப்பாடுகளற்ற முதலியம் எப்படியிருக்கும் எனபதை நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் சிறியதாகவும், மனதுக்கு நெருக்கமானதாகவும் உள்ளவற்றை அழித்துக் கொண்டிருக்கிறோம். இதை நாம் அனைவரும் உணர்ந்திருக்கிறோம், ஏன் எல்லாமே ஒரே மாதிரி இருக்கத் துவங்கிவிட்டது என்பது பிடிபட மாட்டேனென்கிறது. பெருநகரங்களின் மையங்களில் இப்போது சுவாரசியமான இடங்கள் இருக்க ம்டுயும். ஆனால் நம் தேசத்தின் பிற இடங்களில் எல்லாமே பெரிய பெரிய நிறுவனங்களின் கிளைகளைத் துவங்கிக் கொண்டிருக்கிறோம், அவற்றுக்கு என்று ஒரு தனித்தன்மையும் கிடையாது, அங்கு பணியாற்றுபவர்களுக்கு மிகக் குறைவான ஊதியமே கிடைக்கிறது. நாம் நம் தனித்தன்மையை இழந்து கொண்டிருக்கிறோம். நாம் நம் சூழ்நிலத்தின் ஆன்மாவைக் கொன்று கொண்டிருக்கிறோம். ஆனால் நாம்தான் தேசங்களில் தனித்தன்மை கொண்டவர்களாகக் கருதப்படுகிறோம். பார்கோ, மினியபொலிஸ் போன்ற நகரங்களின் ஊடே பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும், அதன் பிரதான சாலைகளில் நடந்து சென்று அதன் எல்லைகளைக் கடந்து ஏக்கர் ஏக்கராக விரிந்திருக்கும் கான்கிரீட் பெட்டிகளைத் தாண்டித் திரியும்போது அந்த சோகத்தை உணர்கிறேன். நம் தேசம் லெகோலாண்ட் போலிருக்கத் துவங்கிவிட்டது.

நன்றி – The Paris Review

ஒளிப்பட உதவி – Poetry Foundation

இந்தோனேஷிய இலக்கியத்தை மொழிபெயர்த்தல்

திர்கந்தரா ரெக்சா (Dirgantara Reksa)

“… இலக்கியம் மீதான நேசமில்லையேல், நீங்கள் புத்திசாலி மிருகங்கள் பலர் என்ற நிலையில்தான் இருப்பீர்கள்”
– பிரமோதய ஆனந்த தோயர், பூமி மனுஷியா

ஏப்ரல் 2014ல் இந்தோனேஷியாவின் கல்வி மற்றும் கலாசாரத்துறை துணை அமைச்சர் வியந்து நூர்யந்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட 150 இந்தோனேஷிய இலக்கியப் படைப்புகளை பஹாசா இந்தோனேஷியா மொழியிலிருந்து ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழிகளில் மொழிபெயர்த்து அக்டோபர் 2015ல் நடைபெறவிருக்கும் பிராங்க்பர்ட் புத்தகச் சந்தையில் அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் 1100 கோடி ரூபியாக்களை இந்தோனேஷிய அரசு ஒதுக்கீடு செய்கிறது என்று செய்தார். இது இந்தோனேஷிய மக்களுக்கும் உலக மக்களுக்கும் ஒரு நற்செய்தியாய் அமையும் சாத்தியம் கொண்டிருக்கிறது- ஏனெனில், உலக இலக்கிய சமூகத்தில் இந்தோனேஷிய இலக்கியத்துக்கு என்று ஒரு இடத்தை பெற்றுத் தரும் முன்னெடுப்பு இது, இதன் பயனாக உலக மக்களுக்கு இந்தோனேசிய இலக்கியத்தை ரசித்து வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவிருக்கிறது.

சர்வதேசச் சந்தையில் இந்தோனேஷிய இலக்கியத்தை எளிதில் அறிமுகப்படுத்திக் கொள்ள முடியாது எனினும் நீண்ட காலமாகவே அது உலக அரங்கில் அங்கீகாரத்தையும் பரிசீலனையையும் பெற்று வந்திருக்கிறது. உதாரணங்களைச் சுட்டுவதானால், 1979ஆம் ஆண்டுக்குப்பின் இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட இந்தோனேஷிய எழுத்தாளர்கள் வருடாந்தர தென்கிழக்கு ஆசிய எழுத்தாளர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்; 1967க்கு பின்னர் இதுவரை முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட இந்தோனேஷிய எழுத்தாளர்கள் ஐயோவாவின் சர்வதேச எழுத்தரங்கில் பங்கேற்றுள்ளனர்; 2011ஆம் ஆண்டு கிராணி பரோக்கா வேர்மொன்ட் ஸ்டூடியோ சென்டரின் அமர்வு எழுத்தாளராக நியமிக்கப்பட்ட முதல் இந்தோனேஷிய எழுத்தாளரானார்; இவை தவிர, இந்தோனேஷியாவின் பிரமோதய ஆனந்த தோயர் இலக்கியத்துக்கான நோபல் விருதுக்கு பலமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் உள்ளதை வேறொரு மொழிக்கு மாற்றுவது மட்டுமல்ல- அது சிந்தனைகளையும் பண்பாடுகளையும் வரலாற்றையும் புரிதலையும் மானுடம் அனைத்தின் மேன்மைக்காகவும் பகிர்ந்து கொள்ளும் செயல். ஊழல், மனித உரிமை மீறல்கள், சுற்றுச்சூழல் சீரழிவு முதலான்வற்றுக்காக இழிபெயர் கொண்ட தேசமாக இந்தோனேஷிய கருதப்படக்கூடாது. மாறாய், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அது தன் எழுத்தாளர்களுக்கும், இலக்கியத்துக்கும், பண்பாட்டுக்கும் மதிக்கப்பட்டு புரிந்து கொள்ளப்பட வேண்டும். உலகளாவிய உத்வேகமொன்று தற்போது தொடர்ந்து அழுத்தம் தந்து கொண்டிருக்கிறது என்ற சூழலில் இந்தோனேஷிய இலக்கியத்தை மொழிபெயர்ப்பதற்கான தேவை உருவாகியுள்ளது. ஆசியன் பொருளாதார அமைப்பு 2015ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது- அது போட்டியோடு வாய்ப்புகளையும் கொணரவிருக்கிறது, ஒருமைப்பாட்டுடன் பரவலாக்கத்தையும் ஏற்படுத்தவிருக்கிறது- இந்தோனேஷிய படைப்புகளை மொழிபெயர்க்கும் முயற்சிகளுக்கு புதிய ஒரு பொருளாதார கட்டளையை இது பிறப்பிக்கிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொள்கையில், இந்தோனேஷிய இலக்கியத்துக்கு மொழிபெயர்க்கும் உரிமை உள்ளது என்பது மட்டுமல்ல, அது மொழிபெயர்க்கப்படுவதும் அவசியமாகிறது- ஆசியன் சந்தையில் இந்தோனேஷிய இலக்கியம் தனக்கென்று ஒரு இடத்தை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்பது மட்டுமல்ல, அது பிற தேசங்களின் இலக்கியங்களுக்கு இணையாகவும், ஏன், அவற்றைக் காட்டிலும் சிறப்பாகவும் உணரப்பட்டு, மானுடத்துக்கு தன் பங்களிப்பை அளிக்க இயலும்.

இன்று உலகளாவிய இலக்கியத்தின் வரைபடத்தைப் பார்க்கும்போது அது இனியும் ஐரோப்பிய மையம் கொண்டதாகவும் மேலைப் பண்பாட்டை உயர்வென்று கருத்தும் உள்ளுணர்வால் கட்டமைக்கப்பட்டதாகவும் இல்லை என்பதை அறிகிறோம். கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பல படைப்புகள் புலம் பெயர்ந்து குடியேறியவர்களால் எழுதப்படுகின்றன, ஆசியா ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா முதலான கண்டங்களில் காலனியத்துக்கு உட்பட பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இந்த எழுத்தாளர்கள்.

இலக்கியமும் வரலாற்று அனுபவமும்

இலக்கியம் என்பது அழகியலோ குறியீட்டு மதிப்போ மட்டுமல்ல. எந்த கணத்திலும் எந்த இடத்திலும் அது கூட்டு வரலாற்றுக் கதையாடலின் பகுதியாகவே விளங்குகிறது- மானுடத்தின் பல்வேறு சமூக, அரசியல் அனுபவங்களின் சாட்சியாக இருந்து, ஒரு சின்னமாக காணப்பட்டும் வாசிக்கப்பட்டும் இருப்பதோடல்லாமல், எதிர்காலத்தின் பிரதிபிம்பமாக்வும் இருக்கிறது. இந்தோனேஷிய இலக்கியத்தின் தனித்தன்மை அதன் கலாசார பிரக்ஞையே என்றார் அஜிப் ரோசிடி. உண்மையில் இந்த கலாசார பிரக்ஞை என்பது அரசால் சார்பு கொண்டது; இந்தோனேசிய இலக்கியம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளும் உலகெங்கும் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு அரசியல் பிரச்சினைகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாதது.

நியோமன் குத்தரத்னா, இந்தோனேசியாவின் காலனிய அனுபவத்தைப் பதிவு செய்யும் பதின்மூன்று நாவல்களை விவாதிக்கிறார். இந்தோனேஷிய மக்கள் மீதான காலனிய தாக்கத்தை இந்த நூல்கள் விரிவாக விவரிக்கின்றன, என்பது மட்டுமல்லாமல் அக்காலத்துக்குரிய சமூக, அரசியல் கூட்டுமனத்தின் இயக்கத்தையும் பதிவு செய்கின்றன: தம் ‘தேசிய அடையாளத்தை’ வரையறுத்து புரிந்து கொள்வதற்கான போராட்டம், சுதந்திரத்துக்குப் பிற்பாடு தேசத்தின் எதிர்காலம் எப்படிப்பட்டதாகை இருக்க வேண்டும் என்ற கேள்விக்கான விடை நோக்கிய தேடல்.

இன்றைய இந்தோனேசிய இலக்கியம் தன் வரலாற்று மூதாதையர்களுக்கு இணையானதாகவே இருக்கிறது; இயற்கைக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி, போராட்டம் மற்றும் மோதல்களின் உச்சங்களும் வீழ்ச்சிகளும், முன்னெப்போதையும் போலவே இப்போதும் மிக முக்கியமாக இருக்கின்றன. சீர்திருத்தம் நோக்கிச் செல்லும் இந்தோனேஷியாவின் சமூகச் சூழலை விளக்கும் நூல்களையும், இன்றைய இந்தோனேஷியாவின் நகர்புற வாழ்வை விவரிக்கும் நூல்களையும் காண முடிகிறது.

நடைமுறைச் சவால்கள்.

இந்தோனேஷிய இலக்கியத்தை மொழிபெயர்ப்பதில் உள்ள மிகப்பெரும் சவாலாகவும் தடையாகவும் உள்ளது எதுவென்று நோக்கிடில், அதன் மக்களின் கலாசார பழக்க வழக்கங்கள்தான் என்று கூற வேண்டும். இலக்கிய படைப்பு ஒன்று அந்நிய மொழியில் மொழிபெயர்க்கப்படுவதற்கு முன், ஆதர்ச உலகில், அது தான் பிறந்த மண்ணில் வாசிக்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக, இந்தோனேஷியாவில் அந்த நிலை இல்லை- இந்தோனேஷிய மக்கள் பலருக்கும் தங்கள் இலக்கியத்தின் கொடை என்னவென்ற உணர்வே இல்லை. இலக்கியம் பெரிய அளவில் ரசிக்கப்படுவதில்லை என்பதற்கான காரணங்களில் ஒன்று இந்தோனேஷிய சமூகங்கள் எழுத்துச் சமூகங்களாக உள்ளதைக் காட்டிலும் வாய்மொழிச் சமூகங்களின் கூறுகள் மேலோங்கிய சமூகங்களாய் இருக்கின்றன என்பதுதான். தலைமுறைகளுக்கு இடையே பண்பாட்டு பரிமாற்றம் வாய்மொழியாகவே நடைபெற்று வருகிறது.

இந்தோனேஷியாவெங்கும் உள்ள பெரும்பாலான புத்தகக்கடைகளில் இந்தோனேஷிய இலக்கியப் படைப்புகளை விற்பதோ வாங்குவதோ கடினமாக இருக்கிறது என்பது மற்றொரு சவால். இந்தோனேஷிய இலக்கிய நூல்களை அதன் வாசகர்கள் பழைய புத்தகக் கடைகளைப் புரட்டிப் போட்டு தேட வேண்டியிருக்கிறது. அதற்குக் காரணம், குறிப்பிட்ட ஒரு எண்ணிக்கையில் விற்கக்கூடிய வாய்ப்பு இருந்தால் மட்டுமே இந்தோனேஷிய புத்தகக் கடைகள் தம் சந்தையில் இலக்கியப் படைப்புகளுக்கு இடம் கொடுக்கின்றன. நல்ல வேளையாக\, இளைய தலைமுறையினர் இதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றனர்- மாற்று புத்தகக் கடைகளைத் திறக்கின்றனர், கலாசார, இலக்கிய நூல்கள் வாசிப்பதற்கு ஏற்ற, சுமூகமானச் சூழல் கொண்ட வாசிப்பிடங்கள் அமைத்து வருகின்றனர்.

இறுதியாகச் சொன்னாலும், மிக முக்கியமான காரணமாக, இந்தோனேஷிய இலக்கியப் படைப்புகள் சர்வதேசச் சந்தையில் எதிர்கொள்ளும் போட்டியைச் சொல்ல வேண்டும். புதிதாய் களமிறங்கியுள்ள காரணத்தால் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தேசங்களின்தம்மை நிறுவிக் கொண்ட தொன்மையான, பெரும்பதிப்பகங்களை இவை எதிர்கொண்டாக வேண்டும். ஆனால் இந்தோனேஷியாவுக்கு சாதகமாக அதன் பறந்து விரிந்த மாபெரும் பண்பாட்டு, சமூகக் கேணி இருக்கிறது. அதன் வரலாறு பல்லாயிரம் ஆண்டு தொன்மை கொண்டது, அதன் களம் பதினேழாயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளில் விரிவது- கலாசாரத்தையும் சமூக அமைப்பையும் தொடர்ந்து மறுபுரிதலுக்கு உட்படுத்தி வளர்ச்சி கண்ட சமூகம் இது. கல்வெட்டில் பதிக்கப்பட்ட மாற்றமுடியாத வரலாற்று விசைகளால் மட்டுமல்ல, வாயாங் முதல் தொலைகாட்சி வரையும், மாஜாபாஹித் முதல் நவீன குடியரசு வரையிலும் அரசமைப்பின் பல்வேறு கருவிகளைக் கொண்டு ஆட்சி செய்யப்பட்ட மக்களை வழிநடத்திய, மாறிக் கொண்டேயிருக்கும் அதிகார இயங்குவிசைகளாலும் கட்டமைக்கப்பட்ட சமூகம் இது. இவையனைத்தும் சந்தேகத்துக்கிடமின்றி இலக்கியத்துக்கான உயர்ரக பேசுபொருட்கள்.

நம்பிக்கைச் சாசனம்

இந்தோனேஷிய இலக்கியத்தை மொழிபெயர்ப்பது என்பது வசதிக்கேற்ப செய்துகொள்ளக்கூடிய தேர்வல்ல, அது ஒரு தார்மீக கடமை. எத்தனை இலக்கியப் படைப்புகள் மொழிபெயர்க்கப்படுகின்றனவோ, அந்த அளவுக்கு இந்தப் படைப்புகள் இன்னும் அதிக வாசகர்களைச் சென்று சேரும் வாய்ப்பைப் பெறுகின்றன. இதனால் இந்தோனேஷிய இலக்கியமும் அதன் எழுத்தாளர்களும் மேலும் வளர்ச்சியடையும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இந்த முயற்சியின் வெற்றியும் தோல்வியும் அரசாங்கம், எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் பதிப்பாளர்கள் எந்த அளவுக்குச் சிறப்பாக ஒத்துழைக்கின்றனர் என்பதையொட்டி அமையும். எதிர்காலம் குறித்த ஒரு பொதுப் பார்வை இவர்கள் முன்னிற்க வேண்டும், அதில் இவர்கள் உறுதியாய் நிலைத்து இயங்க வேண்டும்: இவர்கள் இந்தோனேஷியாவின் இலக்கியத்தைப் பாதுகாத்து அதற்கு செறிவூட்ட வேண்டும், அப்போதுதான் அது தன்கடந்த காலத்தின் வளமையைக் கையகப்படுத்திக் கொள்ள முடியும், அப்போதுதான் அதன் எதிர்காலம் பிரகாசமாய் இருக்க முடியும்; எல்லாம் முடிந்தபின் பார்க்கும்போது எந்த ஒரு மாபெரும் தேசமும் தன் இலக்கியத்தையும் அதன் படைப்பாளிகளையும் மதித்து பெருமைப்படுத்தியதாகவே இருந்திருக்கிறது என்பதை அறிகிறோம்.

நன்றி- Whiteboard Journal

விஸ்லாவா சிம்போர்ஸ்காவின் கவிதைத் தொகுப்பு – ரிச்சர்ட் லூரி

(ந்யூ யார்க் டைம்ஸ் தளத்தில் ரிச்சர்ட் லூரி (Richard Lourie) எழுதியுள்ள மதிப்பீட்டின் தமிழாக்கம்)

தோரோ சொல்வதுபோல் பெருந்திறள் மக்கள் “நம்பிக்கையற்ற மௌன வாழ்வு வாழ்கின்றனர்” என்பது உண்மையாய் இருக்கலாம், ஆனால் 1923 முதல் 2012 வரை வாழ்ந்த போலிஷ் கவிஞர் விஸ்லாவா சிம்போர்ஸ்கா அதற்கு முற்றிலும் எதிரிடையாக நடந்து கொண்டார். மௌன வியப்பு நிறைந்த வாழ்வு அவருக்குரியது, அதன் வெளிச்சம் அலங்காரமற்ற, ஆனால், சுடராய் ஒளிரும் அவரது கவிதைகளில் பிரதிபலிக்கிறது. அவற்றில் பலவும் தற்போது, “Map: Collected and Last Poems” என்ற நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

கிராமப்புறத்தில் பிறந்த சிம்போர்ஸ்கா 1931ஆம் ஆண்டு அரசர்களுக்கும் உயர்பண்பாட்டுக்கும் உரிய கிராகோவ் நகரில் குடி புகுந்தார், தன் மரணம் வரை அங்கு வாழ்ந்தார். மாபெரும் நிகழ்வுகள் மிகுந்த வாழ்வு அவரது அகத்துக்கே உரியது எனினும் வரலாற்றை விட்டுத் தப்புவது என்பது போலந்தில் சாத்தியமல்ல. இன்னும் சொல்லப்போனால், சிம்போர்ஸ்கா நான்கு வெவ்வேறு போலந்துகளில் வாழ்ந்தார்: ஐரோப்பிய வரைபடங்களிலிருந்து ஒரு நூற்றாண்டுக்கு மேல் தொலைந்திருந்து பின் 1918ல் சுதந்திரம் பெற்று இரு உலக யுத்தங்களுக்கு இடைப்பட்ட காலத்தின் கவலை நிறைந்த போலந்து; அவருக்கு பதினாறு வயது நிரம்பிய போது, நாஜி ஆக்கிரமிப்பு, மரண முகாம்கள், கிளர்ச்சிகள் நிறைந்த போலாந்து; பின்னர் போருக்குப் பிந்தைய ரஷ்ய அதிகாரம் நிறைய போலாந்து. அச்சமயத்தில், 1966ல் கட்சியிலிருந்து வெளியேறும் வரை அவர் கம்யூனிஸ்டாக இருந்தார். அதே சமயத்தில் தான் ஒரு கவிஞராக தனக்கான குரலை அடையாளம் கண்டார்; இறுதியில், சோவியத்-கடந்த போலந்து, சுதந்திரமானது, வெற்றிகரமானது, சாதாரணத்தன்மை அருளப்பட்டது.

சிம்போர்ஸ்கா தன் தேசத்தின் துயர்களைத் தப்பிப்பதுமில்லை, ஒரு நோயமைக் கூறெனக் கொண்டாடுவதுமில்லை. “ஜாஸ்லோ அருகே ஒரு பட்டினி முகாம்” என்ற கவிதையில் உள்ளது போல் அவர் தன் தேசத்தை நோக்கி இரக்கமற்ற கறார்க்குரலில் பேசக்கூடியவரகவும் இருந்தார்- அந்த முகாமின், “புல்வெளி மௌனம் காக்கிறது, விலைபோன சாட்சியைப் போல்” என்று எழுதினார் அவர். ஆனால் சிம்போர்ஸ்கா எப்போதும் தனிமனிதனின் மீது ஆர்வம் கொண்டவராகவே இருக்கிறார். “எலும்புக்கூடுகளைச் சூனியத்துக்குச் சுழிக்கிறது சரித்திரம்/ ஆயிரத்தொன்று என்றாலும் ஆயிரம்தான்” என்று கூறியபின், கவிதை, எண்ணிக்கையில் விட்டுப்போனவனைப் பற்றிய வியப்பை வெளிப்படுத்துகிறது. “கள்ளமின்மை” என்ற கவிதையில், “மனித மயிராலான மெத்தையில் சூல் கொண்டதை” அறியாத இளம் ஜெர்மானிய பெண்களின் ஆனந்த அறியாமையை எண்ணிப் பார்க்கிறார். “ஹிட்லரின் முதல் புகைப்படம்” என்ற கவிதையில் ஹிட்லருக்கு எதிராய் கொஞ்சம் பைசாச விளையாட்டு விளையாடிப் பார்க்கிறார்- “இத்துனூண்டு துண்டு அணிந்த இந்தக் குட்டிப் பையன் யார்?/அதுதான் குட்டிப் பாப்பா அடால்ப், ஹிட்லர்களின் குட்டிப் பையன்!”. ஆம், எந்தக் குழந்தையைப் போலவும், இவனது எதிர்காலமும் எப்படி இருக்குமோ என்று நினைத்துப் பார்ப்பதை நம்மால் தவிர்க்க முடிவதில்லை. “யாருடைய வயிறு நிறைய பால் இருக்கிறது, என்பது நமக்குத் தெரியாது/ அச்சகம் வைத்திருப்பவன் வயிறா, மருத்துவன் வயிறா, வணிகன் அல்லது, மதகுருவின் வயிறா?”

இதெல்லாம் பேசப் பெரிய விஷயங்களாக இருந்ததாம், சிம்போர்ஸ்காவுக்கு இவை போதாது- பூமியிலுள்ள எல்லாமே அவருக்கு வசீகரமாக இருக்கின்றன. “வட்டார நட்சத்திரங்களின் ஒன்றின் கீழ்”- நடந்தது மட்டுமல்ல, நடந்திருக்கக் கூடியது மட்டுமல்ல, கிட்டத்தட்ட நடக்கத் தவறியது மட்டுமல்ல, எல்லாமே இவரை ஈர்க்கின்றன. “வியப்பில்லாமல் நான் நானாய் இருந்திருக்க முடியும்/ அதாவது முற்றிலும் மாறுபட்ட வேறு யாரோவாக”. இந்த வியப்பே அவரை நாலா திசைகளிலும் விரைந்தோட வைக்கிறது, “மதிப்புக்குரிய பை எண்”ணில் திளைக்கவும், மனித கலாசார வடிவங்களில் ஏஞ்சல்களுக்கு உவப்பானது எதுவாக இருக்கும் என்று நினைக்கவும் (விடை: ஸ்லாப்ஸ்டிக்), “ஏகோபித்த பரமநிர்வாணம்” கொண்ட வெங்காயத்தின் “தூய வெங்காயத்துவத்தில்” ஆழவும் செய்கிறது. சமகால கொண்டாட்ட மனநிலையை அவர் நிராகரிக்கிறார். “உன்னைப் பற்றி மோசமாக நினைத்துக் கொள்ளுதல்” என்ற கவிதை இப்படி துவங்குகிறது: “வல்லூறுகள் என்றும் தாம் குற்றம் புரிந்ததை ஏற்பதில்லை/ சிறுத்தைகளுக்கு நியாய அநியாயம் தெரிவதற்கில்லை/ தாக்கும்போது பிரான்ஹாக்கள் வெட்கப்படுவதில்லை./ பாம்புகளுக்குக் கையிருந்தால், கறைபடாத கரங்களைக் காட்டும்.” கவிதை இப்படி முடிகிறது- “சூரியனின் இந்த மூன்றாம் கோளில்/ மிருகத்தனத்தின் அடையாளங்களில்/ சுத்தமான மனசாட்சிக்கே முதலிடம்.”

எதையும் முழுதாய் நம்ப மறுக்கும் சிம்போர்ஸ்காவின் ஐயப்பாடு, அவரது சந்தோஷமான, குறும்பு நிறைந்த விளையாட்டுத்தனம், புதிய புரிதலின் வியப்புக்கான தாகம்- இவை அவரை எதேச்சாதிகார உறுதிப்பாடுகளுக்கு எதிரியாக்குகின்றன. மேற்கத்திய மனதின் சிறந்த வெளிப்பாடு இவருக்குரியது- கட்டற்றது, நிலைகொள்ளாதது, கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பது. நம் காலத்தின் நாகரிக வாழ்வுக்கு ஒரு வைசூரயாய் வந்திருக்கும் பயங்கரவாதிக்கு எல்லா வகையிலும் எதிரான மனப்போக்கு இது. ஆனாலும் அவர் பயங்கரவாதியின் மனநிலையை அறிந்து கொள்ள முற்படுகிறார், அவனது உளவமைப்பை அறிய முடியாத போதும் அவனது புரிதல்களுள் புக நினைக்கிறார். தான் வைத்த குண்டு வெடிப்பதற்கு முற்பட்ட நிமிடங்களில் அவன் அந்த கபேவுக்கு வந்து செல்பவர்களை கவனித்துக் கொண்டிருக்கிறான், அதில் தலையிலுள்ள முடி கொட்டிப் போன ஒருவன், “தன் அழுக்குக் கையுறைகளுக்காக திரும்பிச் செல்கிறான்” (சிம்போர்ஸ்காவின் குறைபட்ட பகுதிக்கு இந்தக் கவிதை ஓர் எடுத்துக்காட்டு. அவருக்கு, அப்போதைய தலைப்புச் செய்திகளைப் பற்றி வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருப்பது போன்ற தொனியில் எழுதும் பழக்கமிருக்கிறது. இப்படிப்பட்ட கவிதைகளை ஒரு முறை வாசிக்க முடிகிறது, ஆனால் இரண்டாம் வாசிப்புக்கு எதையும் விட்டு வைக்காத மேம்போக்குத்தன்மை கொண்ட கவிதைகள் இவை).

உயிரோட்டமுள்ள இருப்பும் அதன் தற்காலிகத்தன்மையுமே சிம்போர்ஸ்காவுக்கு முக்கியமான பேசுபொருளாய் இருக்கின்றன. “கடந்து செல்லும் இக்கணமே போயாகி விட்டது”. காகிதத்தில்கூட இதை அவர் நிகழ்த்திக் காட்டுகிறார்: “எதிர்காலம் என்ற சொல்லை நான் உச்சரிக்கும்போதே/ அதன் முதல் அசை கடந்த காலத்துக்கு உரியதாகி விடுகிறது”. அசைகளுக்கு நேர்வதுதான் அவற்றைப் பேசுபவர்களுக்கும் நேர்கிறது. “நாமற்ற மறுநாள்” என்ற கவிதையில் அவர் எழுதுகிறார், “மறுநாள்/ பிரகாசமாய் இருக்கும்போல் தெரிகிறது/ என்றாலும் இன்னும் உயிரோடிருப்பவர்கள்/ குடைகள் கொண்டு வர வேண்டும்”

காதலைப் போல் தோன்றி மறைவது எதவுமில்லை என்பதால் அது சிம்போர்ஸ்கா பேசுவதற்கான இயல்பான விஷயமாகிறது. ஆடன் போன்ற கவித்துவத்துடன் அவரால் எழுத முடியும்: “ஆக, இதோ இங்கே இருக்கிறோம், நிர்வாண காதலர்கள்,/ அழகாய் இருக்கிறோம் என்று இருவரும் ஒப்புக் கொள்கிறோம்/ கண்ணிமைகள் மட்டுமே நம்மைப் போர்த்திருக்க./ இருளில் படுத்திருக்கிறோம், கண்ணுக்குத் தெரியாமல்”. ஆனால் ஆடன் போல் இவரும் நம்பிக்கை வறட்சியை நகைச்சுவையுடன் வெளிப்படுத்தக்கூடியவர், “உண்மைக் காதல்” என்ற கவிதையில் இப்படி எழுதுகிறார்- “குறையற்ற நல்ல குழந்தைகள் அதன் துணையின்றி பிறக்கின்றன/ கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆனாலும் இக்கோளை அதனால் ஜனத்திரளால் நிறைக்க முடியாது/ அது அத்தனை அபூர்வமாய் வருகிறது/ உண்மைக் காதலை என்றும் அறியாதவர்கள்/ அப்படி ஒன்று இல்லவேயில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கட்டும்/ அந்த நம்பிக்கை அவர்கள் சாகும்வரை வாழ்வை எளிதாக்கிக் கொண்டிருக்கும்”.

இறுதியாகச் சொன்னால் சிம்போர்ஸ்காவின் பார்வையில், திகைப்பு என்பது அபூர்வமான கவித்துவ நிலைப்பாடல்ல- எப்போதும் புத்துயிர்ப்பு கொண்டதாய் பற்பல வகைகளாய் விரைந்தோடும் உயிர்ப்புக்குத் தக்க ஒரே சுவாதீனமான, சுபாவமான எதிர்வினை திகைத்து நிற்றலாகவே இருக்க முடியும். அது ஒத்திகைக்கான அவகாசம் தருவதில்லை, ஒவ்வொரு இரவும் முதற்காட்சியாய் இருக்கிறது. “வாழும் சலுகைக்கு தயாராய் இல்லாதவள்/ காட்சிகளின் வேகத்துக்கு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை/… , மேடை அணி அலங்காரங்கள் ஆச்சரியப்படத்தக்க துல்லியம் கொண்டிருக்கின்றன…./ நான் என்ன செய்தாலும்/ எது எப்போதும் நான் செய்தவையாகவே இருக்கும்”.

நோபல் பரிசு போன்ற ஒன்று மொழிபெயர்ப்பாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் – அவர்களின் பங்களிப்பு இல்லாமல் நமக்கு எப்படி தால்ஸ்தாய், காப்கா, கார்சியா மார்க்கேஸ், விவிலியம் முதலானவை அறியக் கிடைக்கும்? அப்படியொரு பரிசு இருக்குமென்றால் சிம்போர்ஸ்காவின் மொழிபெயர்ப்பாளர்கள், ஸ்டானிஸ்லாவ் பரான்க்ஸக்கும் கிளேர் கவனாக்கும் உடனே பெற்றிருப்பார்கள். இங்கு மேற்கோள் காட்டப்பட்டுள்ள எந்த வரியையும் படித்துப் பாருங்கள் – ஒவ்வொன்றும் ஆங்கிலத்தில் பிறந்தது போலிருக்கின்றன.

அவரது ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களும் ஸ்வீடிஷ் மொழிபெயர்ப்பாளர்களும் மிகப் பிரமாதமான மொழிபெயர்ப்புகளைச் செய்தது தான் 1996ஆம் ஆண்டு சிம்போர்ஸ்கா நோபல் விருது பெற உதவி செய்தது என்று சொல்லப்படுகிறது. அவர் புகழின் ஆர்ப்பரிப்பை வெறுத்தார். முக்கியமான நிகழ்வுகளைத் தவிர்த்தார், நோபல் ஏற்புரைகளில் மிகக்குறுகிய உரைகளில் ஒன்றை அவரே அளித்தார் – ஆனால் அதிலும்கூட சூரியனுக்குக் கீழுள்ள இந்த உலகில் புதிதாய் எதுவுமில்லை என்று சொன்ன பிரசங்கிகளைக் கண்டித்தார். உலக கவிதையின் கிரேட்டா கார்போ என்று பத்திரிகைகள்  அவரை அழைக்கத் துவங்கின, ஆனால் சிம்போர்ஸ்கா ஒதுங்கியிருப்பதற்கான காரணம் அவரது பெரியமனித தோரணையல்ல. மாறாய், அவருக்குத் தன் வியப்புணர்வைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது- பத்திரிக்கையார்கள், ரசிகர்கள், புகழ்வெளிச்சப் பண்பாட்டின் ஒட்டுண்ணிகள் போக  உரத்து ஒலிக்கும் பிற விரக்தி வாழ்வாளர்கள் அனைவரும் என்று  ஒரு பெருங்கூட்டத்திடமிருந்து அவர் அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது.

MAP

Collected and Last Poems

By Wislawa Szymborska

Translated by Clare Cavanagh and Stanislaw Baranczak

447 pp. Houghton Mifflin Harcourt. $32.

நன்றி – நியூ யார்க் டைம்ஸ்

கியோர்கி கொஸ்போதினோவின் பல்கேரிய சோகம்

(நியூ யார்க்கர் இதழில் காரத் கிரீன்வெல் எழுதிய கட்டுரையின் தமிழாக்க வடிவம்)

தி எகானமிஸ்ட் பத்திரிக்கையில் 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் “மகிழ்ச்சியின் புவிப்பரப்பு” என்று ஒரு கட்டுரை வந்தது. அப்போதைய ஐரோப்பிய யூனியனில் ரோமானியாவும் பல்கேரியாவும் புதிதாய் இணைந்திருந்தன. ஐரோப்பிய யூனியனில் மிகவும் மோசமாகப் பேசப்பட்ட பல்கேரியாவைத்தான் “உலகின் மிகவும் சோகமான இடம்” என்று எகானமிஸ்ட் கட்டுரை பிரகடனப்படுத்தியது.

அதன்பின் சரியாக ஓராண்டுக்குப்பின், பல்கேரியாவின் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜியோர்கி கொஸ்போதினோவ் “துயரத்தின் இயற்பியல்” என்ற தனது இரண்டாம் நாவலை எழுதினார் (இவ்வாண்டு அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை ஓப்பன் லெட்டர் புக்ஸ் பதிப்பிக்கிறது). எகானமிஸ்ட் கட்டுரைக்கும், கிழக்கு ஐரோப்பிய மனநிலை குறித்து பரவலாய் அறியப்பட்ட தேய்வழக்குகளுக்கும் ஒருவகையில் இது தன் எதிர்வினை என்று ஜியோர்கி கொஸ்போதினோவ் நேர்முக உரையாடல்களில் தனது இந்த நாவலின் இடத்தை வரையறை செய்து கொண்டார். “அடிப்படையில் என் கதையின் நாயகன் ஒரு கதை சொல்ல முயற்சி செய்கிறான். குறிப்பாக இந்த இடத்தைப் பற்றி கதை சொல்ல முற்படுகிறான், இது மிகவும் சோகம் நிறைந்த இடம். அவன், தன் சோகங்களை எதிர்கொள்ள முயற்சி செய்கிறான். அல்லது, குறைந்தபட்சம் அவற்றை ஓர் ஒழுங்குக்குக் கொணர்ந்து விவரிக்க முயற்சி செய்கிறான்”. (more…)