உள்ளாடைகள் எப்போதும்
அவமானத்தின்
குறியீடுகளாகவே மட்டும்
பழக்கப்பட்ட அவளுக்கு
முப்பது தாண்டியும்
உள்ளூரில் எந்த முடவனும்
கரம் பிடிக்க தயாரில்லை யென்றதும்
சம்பிரதாயங்களும், நிர்பந்தங்களும்
கழுத்து நீட்டச் சொல்ல
ஓசைகள் பெருத்த நகரத்து
அழுக்கனின் அந்தப்புரத்திற்கு
அடிமையாக வேண்டியாயிற்று
கண்ணீரால் லௌகீகக் காயங்களை
கழுவிக்கொள்ளும் நகரத்து
மனை வாழ்க்கையின்
நீட்சியில்
அவள் பழகிக்கொண்டதும்
மாற்றிக்கொண்டதும்
கொங்ரீட் காடுகளில் கசியும்
வெயிலுக்கு ஏதுவாக
கட்டப்பட்ட கொடியில் எந்த வித
சங்கோஜமுமின்றி துவைத்த
உள்ளாடைகளைக் காயப்போட
மட்டுமே.
இரவு கழித்து
தூங்கிய ஒர் பொழுதில்
நிர்வாணக் கனவுகளுக்கு
இடைஞ்சலாய்
கிணற்றடி வேலியில் தனித்திருந்த
நரை கலந்த ஓர் கிழட்டுக் காக்கை கத்தி
ஆடை களையாமலே
கனவு முடிந்தாயிற்று
காக்கைகளின் தொன்மையான
ஜீவியத்தில் இது வரவுச் செய்தியென்று
அதன் அழுகை வந்த திசை பார்த்து
பழைய கதையை
புதுமையாக சொல்லி முடித்தாள்
அம்மா
இனந்தெரியாதோரால்
இணங்காணப்பட்ட என் அப்பனும்
வெற்றிடம் நிரப்பிய விடயம் தெரியாமல்
எழுதிப்போட்ட வேலையும் வரப்போவதாக
ஆரூடம் சொன்னாள் அம்மா
பகல் கடத்தி
பவுடர் பூசிய சாயங்காலப் பொழுது
நிறத்தால் தனித்துவம் காட்டிய
அந்த காகம்
சொண்டுசொரியத்தான்
போயிருக்கனும் போல
மின்சாரக் கம்பியில்
அதன் இறுதி அத்தியாயம்
எழுதப்பட்டிருந்தது
கிணற்றடி வேலியில்
அதன் சாவை அது முன்னறிவிப்பு
செய்திருந்தது
பாவம் அம்மா
நாளையும் எனக்கு விரசமாய்
கனவுகள் வரலாம்
ஒன்றல்ல பல நூறு காக்கைகள்
கிணற்றடி வேலியில்
ஒன்று சேர்ந்து கத்தலாம்