வீடு அமைதியாகதான் இருக்கிறது
இரவில் கூப்பிடும் பல்லி சப்தம் இப்பொழுது இல்லை
மின்விசிறியும் ஓடவில்லை, வெறும் கடிகாரத்தின் மெல்லிய சப்தம் மட்டும் கேட்கிறது
மின்விசிறியைப் பார்க்கிறேன், சதுரமாக சுவரில் பதிந்திருக்கும் ஜன்னலின் நிழலைப் பார்க்கிறேன்
மெல்லிய பச்சை நிறத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் கடிகார முள்ளைப் பார்க்கிறேன்
மங்கலாக தெரியும் மேஜையைப் பார்க்கிறேன்
வீடு அமைதியாக இருக்கிறது
எக்சாஸ்ட் ஃபேன் நிழல் தட்டையாய் சமையலறை சுவரின்மேல் விழுகிறது
சோடியம் வெளிச்சம் கசிந்து உள்ளே வந்து கொண்டிருக்கிறது
ஜன்னல் வழியாக பார்த்தால், நட்சத்திரங்கள் மறைய தொடங்குகின்றன
பக்கத்து ஃப்ளாட்டில் யாரும் இன்னும் எழுந்திருக்கவில்லை
வீடு அமைதியாக இருக்கிறது
சமையலறையில் நான் சுடு தண்ணிர் வைக்கிறேன்
பால் காய்ச்சி காபி போடவேண்டும்
இருட்டில் ஹால் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு
காபி குடிக்க வேண்டும், (சக்கரை இல்லா காபி)
கையில் காபி கோப்பையுடன் இருள் சூழ நான்
எங்கும் நிசப்தம், இது அமைதியின் தருணம்
(சப்தங்கள் இன்னும் சற்று நேரத்தில் நீங்கள் கேட்கலாம்)
இப்பொழுது எழுதலாம், சிந்திக்கலாம்
பல காரியங்கள் தடையின்றிச் செய்யலாம்
நானோ காபி குடித்து கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்
வீடு அமைதியாக இருக்கிறது
வீடு வெறுமையாக இருக்கிறது
என்னைத் தவிர வீட்டில் யாருமில்லை
மௌனம் குடிகொண்டிருந்தும் எனக்கு ஒன்றும் செய்யத் தோணவில்லை
காபி மெதுவாக குடிக்கிறேன்
வீடு அமைதியாகதான் இருக்கிறது
மனதில் அமைதி? மனம் சலனம் இல்லாமல் இருக்கிறது
எதைப் பற்றியும் சிந்திக்க மாட்டேன் என்கிறது
எண்ணங்கள் மேலெழுந்து வருவதில்லை
இருளில் நான் காண்பது வெறுமையா? இல்லை அமைதியா?
(அமைதி நாடு என்று தத்துவங்கள் சொல்கின்றன
எல்லா குருக்களிடமும் தாங்க முடியாத கூட்டம்
எல்லோருக்கும் அமைதி வேண்டும்.
“எல்லாம் இருக்கிறது, அமைதியை கொடுங்கள்”
கள்ளச் சாமியார்கள் உரக்க சிரிகிறார்கள்
உண்மையான குரு மெளனமாய்ச் சிரிக்கிறார்)
“வாழ்க்கையின் கடைசி தருணங்களை எப்படி எதிர்க்கொள்கிறீர்கள்?”
என்று ஒருவன் பத்து வருடங்களுக்கு முன் கேட்டான்
கடைசி தருணங்கள்? எனக்கு அப்படி தோன்றியதில்லை
என் நாள் எப்பொழுதும் ஒரே போல்தான் தொடங்குகிறது
ஒரே போல்தான் விரிகிறது, அலை பின் அலையாக
(என்றைக்காவது ஒரு சுனாமி வரலாம்)
தினமும் அதே கடல் அலைதான்
ஓயாமல் கரை சேரும் அலை
நாற்காலியை விட்டு எழுந்திருக்கும்பொழுது முட்டி வலிக்கிறது
மெதுவாக நடந்து சென்று சமையலறை விளக்கை அணைக்கிறேன்
வீடு மறைகிறது, மீண்டும் அமைதி. மீண்டும் வெறுமை
மற்றும் நான்