அனுகிரஹா
வீட்டைவிட்டு வெளியே
செல்ல மறுத்த
கண்ணாடி மனிதன்,
தனக்கு பதில் தன்
கண்ணாடி பிம்பத்தை
அனுப்பி வைத்தான்.
தனக்கு பிடித்த
சட்டையையும்
சிரிப்பையும் அணிவித்தான்.
புன்னகைத்து மாய்ந்த
பிம்பத்தின் வலப்புறம்
துடித்தது.
சந்தித்தவர்களின்
வலிகளும் வரிகளும்
பதிந்த நவீன ஓவியமென
திரும்பிய பிம்பத்தில்
சிரிப்பு நீண்டும் நெளிந்தும்
சிக்கியிருந்தது.
மறுபடியும் தன்னைப்
பார்த்த அவனது
வலப்புறம் துடித்தது.