கோவில் எலி- காஸ்மிக் தூசி (அருண் கொலாட்கர் )

  காஸ்மிக் தூசி

rat

திரிசூலத்தின் நீண்ட நடுப்பிளவில்
சுருண்ட வாலை நிமிர்த்திக்கொண்டு
பொங்கி வழியும் கருநிறக் குருதி போல
இறங்கி வருகிறது கோவில் எலி.

பைரவரின் தடத்தோளில் நின்றபின்
சற்றே புனிதச்சதை அசைவதுபோல்
வேகமாய் பார்க்கிறது சுற்றிலும்

மார்த்தாண்ட பைரவரின் கண்களின் ஆவேசம்
முகத்தில் சந்தனக்கவசத்தின் போர்க்கோலம்
கண்டு திரும்புவதற்குள் மறைந்து

கற்கூரையில் தொங்கும் சங்கிலியில்
வளைந்து இறங்குகிறது கோவில் எலி
தீபஒளி மினுக்கும் உலோக கண்ணிகளில்
பிரகாசிக்கும் கண்களைச் சிமிட்டியபடி

வளைவில் சறுக்கி இறங்கியபின்
காண்டாமணியின் விளிம்பில் நின்று
கம்பீரமாய் பார்க்கிறது

கருங்கல் லிங்கத்தின் தலையில்
வாழைப்பழம் நசுக்கும்
இளம் புதுமணப்பெண்ணின்
தண்டனிட்ட கைகளில்
கண்ணாடி வளைகளின்
பச்சைநிற பளபளப்பை

நரைத்த ஒருவார தாடிக்குள்
பூசாரியின் முகத்தில்
கீறும் புன்னகையைக் கண்ட
கோவில் எலி

கருவறையின் மூலையில்
முரசின் பின்னால்
சென்று மறைந்ததுதான் தாமதம்
உடனே முழங்கிற்று
கோவில்மணி.
****

*அருண் கொலாட்கர் எழுதிய The Temple Rat என்ற கவிதையின் தமிழாக்கம்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.