இராகப் பெண்கள் – 5: ரீதி கௌளை: ஆனந்த பைரவி- தோற்ற மயக்கம்

பானுமதி. ந

4. ரீதி கௌளை: ஆனந்த பைரவி- தோற்ற மயக்கம்

மகிழ்ச்சியும் ஆனந்தமும் ஒன்றேதான? வேறுபாடுகள் உண்டல்லவா? சொல் பெருகும் ஓடையில் தி ஜா ஒரு செம்பகப் பூவை மலர வைக்கிறார்.

“பிரமிப்பில் ஏறி நின்ற சோகத்தின் அதிர்ச்சி கண்ணீராகக் கரைந்தது.”

“மலர்ந்து இரண்டு நாளான கொன்னைப் பூவைப் போல் வெண்மையும் மஞ்சளும் ஒன்றித் தகதகத்தையும், நீரில் மிதந்த கரு விழியையும் வயசான துணிச்சலுடன் கண்ணாரப் பார்த்து பூரித்துக் கொண்டிருந்தார்.

“அது என்ன பெண்ணா? முகம் நிறைய கண் .. கண் நிறைய விழி… விழி நிறைய மர்மங்கள்.. உடல் நிறைய இளமை.. இளமை நிறைய கூச்சம்.. கூச்சம் நிறைய நெளிவு.. நெளிவு நிறைய இளமுறுவல்”

“தேங்காய்க்கும் பூவன் பழத்திற்கும் நடுவில் நிற்கிற குத்துவிளக்கைப் போல”

செம்பகப் பூவை அனைவராலும் முகர்தல் இயலாது. அதன் வாசம், அதன் வாடல் எல்லாமே தனி. இதழ் விரித்து மணம் வீசும் அது சிலர் மூக்கின் அருகே முகர்கையில் குருதியையும் வரவழைத்துவிடும்.

அழகே  உருவானவள். மானிட இனத்தோரால் தன் உடமை என்று சொந்தம் கொண்டாட முடியுமா அவளை? ஆனாலும் அவளுக்கும் திருமணம் நடக்கிறது. அவன் முகர்ந்து பின்னர் மரணிக்கிறான். இவளின் இள வயதும், அழகும், ஆனந்தமும், களியும் யாரோ ஒருவன் சாவினால் அழியக் கூடாதென கதையில் வரும் கிழவர் நினைக்கிறார். அவர் மனைவியும், சமூகமும் வேறுபடுகிறார்கள். இந்த செம்பகப் பூ சில நாட்கள்தான் துக்கம் கொண்டாடுகிறது.  பின்னர் தன் ஆனந்தத்திற்கு வந்து விடுகிறது. சந்தன சோப்பில் முகம் கழுவி, கருமேகக் கூந்தலை  பின்னலிட்டு முடிந்து, பாங்காய் சேலை உடுத்தி அந்தப் பூ வாடாது வாசம் வீசுகிறது. இறந்தவனின் அண்ணனின் துணை கொண்டு வாழ்வையும், தன் இருப்பின் உண்மையையும் செம்பகம் சொல்லிச் செல்கிறது.

கேட்பதற்கு ரீதிகௌளை சற்று ஆனந்த பைரவியை நினைவுபடுத்தும். அதன் வளைவும், நெளிவும், அழகும் சொல்லித் தீர்வதில்லை. ஒரு சிறு கதையில் ஒரு பார்வையாளன் வாயிலாக தி ஜா நமக்கும் அந்த மலரின் வாசத்தைக் காட்டுகிறார். நியதிகள் வாழ்க்கை முறைக்குவழி காட்டுபவையே. ஆனால் ஆனந்தம் என்பது வாழ்விற்கு அவசியம். களி கொள்ளும் உவகை, உவகை தரும் உரிமை, உரிமை தரும் மாற்றம், மாறுதல் தரும் தருணம், அந்தத் தருணத்தின் ஆனந்தம் இதுதான் உயிர்ப்பின் அடையாளம்.. மற்றவை உடலில் உயிர் இருக்கிறது என்பது மட்டும்தானோ?

ஆனந்த பைரவியைப் போல் தோன்றும் ரீதி கௌளை இவள். உலகக் கணக்குப்படி பாஷாங்க இராகம்; ஆனால் இசைக்கப்படவேண்டிய இராகம். தன் மனோதர்மப்படி அலை மோதும் இது. அதில் குற்ற உண்ர்வு ஏற்படுத்தாத இராகம். ஸ்தாயியும், ஸ்வரமும், ஸ்வரூபமும் உள்ளது; இராக லக்ஷணங்கள் உள்ளது. புல்லாங்குழலுக்குள் காற்றாகப் புகுந்து கொள்வது. இசைபட வாழ்தல் என் உரிமையெனச் சொல்லாமல் சொல்வது.

இனி ஆனந்தபைரவி

தி ஜா வைப் போலவே லா ச ராவும் இந்தப் பெண்ணின் பெயர் சொல்லவில்லை, “ப்ரளயம்” என்ற சிறுகதையில். உள்ளுக்குள் முனகும் ஒரு இராகம். கதை சொல்லும் மாற்றுத் திறனாளியின் ஆனந்த இராகம்.  அன்பைத் தேடுகிறான்-கருணை, இரக்கம் இவற்றையல்ல. அவன் சொல்கிறான்—“அன்பு கூட அல்ல; நான் தேடுவது உள்ளத்தின் நேர் எழுச்சி. இரு தன்மைகள் ஒன்றுடனொன்று இணைந்தோ, மோதியோ விளையும் இரசாயனம்”

“சில சமயம் வாழ்க்கையின் இன்பப் பகுதிகளை வாழ்க்கையிலிருந்து பலவந்தமாகப் பிடுங்கி அனுபவித்தால் நலமே என்று தோன்றுகிறது”

“என்னைச் சுற்றி எத்தனை பேர் இருந்தும் இந்த மீளமுடியாத தனிமை. நான் என்னுள் உணர்ந்த இந்தத் தனிமை சகிக்க முடியவில்லை”

உயிர்களின் அடிநாதமான நீட்சி, தன்னிலிருந்து ஒரு உயிர்… அவனுக்கும் வேண்டும். தன்னைக் கொடுக்கும், தன்னிடம் அன்பாக இருக்கும் பெண் அவனுக்கும் வேண்டும். உடலில் குறைபாடு உள்ளவன் இதைப்  பிறரிடம் சொல்லவும் நாணுகிறான். பணம் இருந்தும் துணை இல்லை. ஏழையான உறவுப் பெண்ணை நினைத்துக் கொள்கிறான். கேட்கவில்லை. அவளுக்கும் திருமணமாகி ஊரை விட்டுச் செல்கிறாள். மணந்தவனும் வசதியற்றவன். எப்பொழுதாவது அந்தக் கணவன் எழுதும் கடிதம்.

ஒரு நீல இரவில், பார்வையை ஏமாற்றிய சரடுகள் தொங்கும் நக்ஷத்திர இரவில், நீல ஏரியில் இரு கைகளிலும் (அவன் ஒரு கை அற்றவன்- தோளிலிருந்து சூம்பியவன்) துடுப்பு ஏந்தி அவன் செலுத்தும் ஓடம் கரை தட்டி அவனின் அந்தப் பெண் படகில் ஏறுகிறாள். அவள் நீலப் புடவை உடுத்தியுள்ளாள்.

“நான் நீலச் சுடரானேன்- கர்ப்பூரம் அசைவற்று எரிவதைப் போல். என்னுள் குறையும் அத்தனையின்  நிவர்த்தியுமானேன். என்னின் நிவர்த்தியுமானேன்”

அவனின் இந்த உண்மையுமான கனவில் ஓடம் பாறையில் மோதி அவள் நீரில் மூழ்குகிறாள்.

அவள் தாயாகப் போகும் செய்தி தாங்கி வரும் கடிதம் அவனின் ஆதார சூக்ஷுமத்தைத் தொடுகிறது. தன் மகவு, அது பெண் மகவு என திண்ணமாக நினைக்கிறான். அவர்களுக்குத் தொடர்ந்து பணம் அனுப்பி தன் குடும்பம் போல் பார்த்துக் கொள்கிறான், அவளும் பிள்ளைபேற்றுக்கு வருகிறாள். ஒரு நாள் குளக்கரையில் நீர் நிறைந்த விழிகளுடன் யதேச்சையாக அவனைப் பார்க்கிறாள்.

அவள்  இறந்து விடுகிறாள். ஆண் குழந்தையும் வயிற்றிலேயே இறந்து போகிறது. தன் ஆசைப் பசி அவளைத் தின்றுவிட்டதாக இவன் நினைக்கிறான். அவள் கணவன் இவனுடன் பேசுகையில்  இவன் நினைக்கிறான். ”என் குழந்தையைப் பெற்றவள் அவள். என் குழந்தைக்கு தந்தையாய் இருப்பவன் அவள் கணவன்”

“உள்ளத்தின் மூலம் உடலை வெற்றி கொண்டேனா?அல்லது உடலின் மூலமே உள்ளத்தின் தாபத்தை வெற்றி கொண்டேனா?”

அனைவரும் இரசிக்கும் இராகம் ஆனந்த பைரவி. நாட்டுப்புறப் பாடல்களிருந்து அனைத்திலும் அது விரவி உள்ளது. மனம் வருடும் இராகம்.

ஆனால் ஏன் எல்லோருக்கும் நேரே கிடப்பதில்லை?கிடைக்காவிட்டால் என்ன? ஆனந்தம் மனிதனுக்கும் இயல்பு. அதை அவன் தேடி இசைத்துவிடுவான்.

ஒரு வார்த்தைகூட கதையில் அந்தப் பெண்ணை லா.ச ரா பேசவிடவில்லை. சிறு பருவத்தில் கதைசொல்லியை அவள் கேலி செய்வதுகூட இவன் குரலில் தான். அந்தப் பெண் பேச வேண்டியதனைத்தும், நிறைசூலியாய் நீர் எடுக்க குளத்திற்கு வருகையில் துடிக்கும் உதடுகளும், கண்களில் நிறையும் நீரும், மௌனமும், அவள் விருட்டென்று சென்றுவிடும் வேகமும் மொத்தமாகக் காட்டிவிடுகின்றன. அவன் வாழ்க்கையில் பிறர் அறியா ஆனந்தம் அவள். அவன் இசைத்த ஆன்மீகப் பாடல் அவள். தன் சுருதி சேர்ந்த இடத்தினை நுட்பமாகக் கையாள்கிறாள். அவனின் தாபம் தீர்த்தவள், அவனுக்கு மட்டுமே இரகசிய ஆனந்தத்தை தந்து இறந்து விடுகிறாள். அவன் நெந்சுக்குள் கமழும் இராகம். அவரவர் பாடல் அவரவர்க்கு.

ரீதி கௌளை:  ச க ரி க ம  நி த ம நி நி ச; 

    ச நி த ம க ம ப ம க ரி ச

ஆனந்த பைரவி:  ச க ரி க ம ப த ப ச

                ச நி த ப ம க ரி ச

oOo

 

 

 

 

 

 

 

 

 

4 comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.