இராகப் பெண்கள் – 7: கோபிகா வசந்தம், ஹிந்தோள வசந்தம்- ஆபரணம்

பானுமதி. ந

 7. கோபிகா வசந்தம், ஹிந்தோள வசந்தம்- ஆபரணம்

துறவு என்றால் என்ன? இந்த உலகினர் அனைவரையும் துறப்பதா அல்லது ஆத்மாவைச் சுற்றியுள்ள மூன்று கவசங்களகற்றி உலகோர்க்கு நன்மை செய்து கொண்டிருப்பதா? இல்லறத்தில் துறவு கூடுமா? துறவு இல்லறத்தை நோக்கிச் செலுத்துமா?

கை பிடிக்காத கணவனுடன், மாப்பிள்ளை அழைப்பன்று ஓடியவனுடன், நினைவிலே ஒரு வாழ்வு சாத்தியமா? திலகவதியின் நாடல்லவா இது? அவனை நினைத்தும், நெருங்கியும், தனித்தும், உலகோர் வாழும் வாழ்வில்லாத வாழ்வும், ”அன்பே ஆரமுதே” ருக்குவிற்கு மட்டும் முடியும்.

இதை இன்று நாம் அறியும் (அபத்தமாக அறியும்) கற்பெனும் சிறையில் தள்ளவில்லை தி. ஜா. செந்தாழம்பூவைப் போல் கமழச் செய்கிறார். காட்டுக்குள்ளே ஒரு ஓடை. ஓடையோரம் தாழம் புதர். காற்றினிலே வரும் மணம். ஆனால் அது உனக்கில்லை. உன்னதமான ஒரு சமர்ப்பணம் முன்னரே ஆகிவிட்டது. அதன் வாசம் பிறரை இழுத்தாலும் அதன் நேர்த்தியே அவர்களை அண்ட விடுவதில்லை. பூக்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று சேரலாம், உன் வசத்தில் பூத்தால்.

அது பாரிஜாதம் போல் பூத்திருக்கிறது- பூக்கையிலே மாலையாகி தன்னளவில் தோள் சேர்ந்து விட்டது.

அந்தத் தோள்கள் அறியும் முன், அவன் கால்கள் அவனை எங்கோ ஓடிப் போகச் செய்கின்றன. அவன் ஒரு மருத்துவ சன்யாசி, அல்லது சன்யாசியாக பிறர் நலம் பேணும் மருத்துவர். அவரின் கால்கள் மூலம் சென்னையில் தி. ஜா. நடந்து கொண்டேயிருக்கிறார். பலர் பிணி போக்குகிறார். உடலோடு மனப்பிணியும் போக்கும் இந்த அற்புத மருத்துவரை யார்தான் காண விழையார்?

கதையின் நாயகி அவரைச் சந்திப்பதும், இயல்பாகவும் கம்பீரம் குறையாமலும் தன்னை இன்னார் என்று அறிமுகப்படுத்திக் கொள்வதும் அழகோ அழகு! தனக்கு நல்லதெல்லாம் செய்யும் குடும்பத்திற்கு அவளும் நல்லது செய்ய நினைக்கிறாள்; செய்யவும் செய்கிறாள்.

அவரை, தான் குடி போகும் வீட்டின் மாடியில் இருத்தி அவரது மருத்துவப் பணி சிறக்க எல்லாமாகவும் நிற்கிறாள். அவளும், அவரும் பந்தமில்லாப் பந்தத்தில், உறவான தோழமையுடன், தோழமையான உறவுடன் இருக்க மிக  நேர்மையுடன் செயல்படுகிறாள். தூற்றும் ஒரு வாய்க்காக அவள் சோரவில்லை. தன் நண்பரின் குடும்பத்திற்காக அவரை அந்த நபரிடமும் அனுப்ப அவள் தயங்கவில்லை. அன்பும் ஆருயிரும் …

இதில் இருளும் ஒளியுமென, பகல் இரவு என, நல்லது, கெட்டது என இரு பிரிவுகளும் கைகூடும் மனிதர்களைப் பார்க்கிறோம். நடந்து செல்லும் ஒரு மழை மாலயில், பார்க்கும் வானவில்லென பரவசம் ஊட்டும் மனிதர்கள். வியப்பும், கவலையும் அளிப்பவர்கள். தன்னைத் தானே உணரப் பார்க்கும் முயற்சிகள்.

ருக்கு, தன்னை மணக்க இருந்தவரை தன் வாடகை வீட்டில் குடியமர்த்துவது தான் வெற்றி பெற்றோம் என்பதற்கு அல்ல. அது ஒரு தவம், சபரியின் தவம், திலகவதியின் தவம். சபரி மோட்சம் பெற்றாள்; திலகம் சிவனடியாரானாள். ருக்கு மருத்துவ சன்யாசிக்கு உதவுகிறாள். ஒரு பெண்ணை மீட்கவும், தன்னைப்போலவே ஆகப்போகும் ஒரு பெண்ணிற்கு தோள் கொடுக்கவும் அவள் தயங்கவில்லை. முகம் அறியா மனிதர்களின் உடல் நோய்க்கும் மன நோய்க்கும் உதவிட அந்த சன்யாசியுடன் இந்த சன்யாசி நிற்கிறாள்.

ஒரு உன்னதமான பாத்திரப் படைப்பு. இவள் கோபிகா வசந்தம். கண்ணன் ஆயர்பாடியில் இருந்த பொழுதெல்லாம் கோபிகைகளுக்கு வசந்தம். அவன் மதுரா சென்ற பிறகோ அந்த நினைவுகளே வசந்தம். நினைவுகள் தரும் புனைவுகள் கோபிகா வசந்தம்,

ச ம ப நி த நி த ச   ச நி த ப ம க ச  

பச்சைக் கனவு

அன்பின் தராசு மிகவும் வலிமையற்றது. ஒரு சிறு தவற்றில் அது உறவில் ஒரு நிரந்தரப் பகையை உண்டு செய்து விடும். ”உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது” என்றாலும் சற்று உடைந்த அல்லது விரிசல் கண்ட கண்ணாடிதான்.

பசுமை என்று சொல்கையில் இருக்கும் நிறைவு பச்சையில் இருப்பதில்லை. பச்சையுடன் ஏதேனும் ஒன்று சேரவேண்டும்- “பச்சைப் பசேல்”, “ பச்சைக் காய்கறி”, “பச்சைப் புல்”, “பச்சை விளக்கு”, “பச்சைப் பொய்”.

மனக்கண் குருடாய், மனமொழி பேசாமல், மனச்செவிடராய் இருக்கும் மாந்தர்களை லா.ச ரா “பச்சைச் கனவில்” காண்பிக்கிறார். கதையின் நாயகன் சிறு வயதில் ஆதவனை உற்று உற்று நோக்கி, பின் சுற்றும் முற்றும் பார்க்கையில் காணும் பச்சைக் கோலங்களை வியக்கிறான். பச்சை தங்கிவிட வாழ்வு குருட்டுத்தனமாக  நீள்கிறது. அவனுக்கு சிறு வயது கல்யாணம். அந்தப் பெண் ஊமையும் செவிடுமாக வாய்க்கிறாள். ஆணின் குறை பாராட்டப்படாமல் பெண்ணின் குறை வாழ்வை சூறையாடுகிறது. பலன் பிரிவு.

இளமை, தன் இணை தேடும் தவிப்பு, தன் சொந்தம் என்ற நினைப்பு, உயிர் உருகும் ஏக்கம், அது அவர்களை ஊர் அறியா வண்ணம் சேர்க்கிறது.

அவர்களிருவரின் ஆயுளின் இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மூச்சில் அளந்துவிட முயல்வது போன்ற ஆலிங்கனத்தின் அவஸ்தையிது…

3 மாத கர்ப்பத்துடன் அவள் இறக்க, ஊர் சிரிக்க அந்த நேச இழை வெளியே அறுந்து உள்ளே பச்சையாகத் தொடர்கிறது.

ஊமை கண்ட கனவினை யாரிடம் சொல்வாள்? இல்லை.. “அந்த நினைவு அவர்கள் இருவருக்கும் மட்டுமே சொந்தமாயிருக்க அவள் எண்ணியிருக்கக் கூடும். பகை நடுவில் பயிரான உறவைப் பாதுகாப்பதில் சட்டென்று சலிப்பேற்பட்டுவிட்டதோ? உயிர் நிலையின் ஒரே மூச்சுப் போன்ற அம்மூன்று மாதப் பச்சைக் கனவின் மிச்சம்”- நாயகன்தான்.

மானம், மானம் என்பதெல்லாம் வகையாக வாழ்பவருக்கோ? கண்டு, கேட்டு, பேச இயலாத உறவின் தனிமைகளை ஊர் அறிய ஏன் சொல்லவேண்டும்? வாழ வைக்காதவர்கள் தூற்ற மட்டும் எங்கிருந்து வருகிறார்கள்? உயிர் உருகும் ஓசை கேட்காதவர்கள் வாய் திறந்து பேச மட்டும் செய்கிறார்களே? லா. ச.ரா அவன் மூலம் இந்தக் கேள்விகளைக் கேட்கிறார். அந்த உறவின் அர்த்தத்தை, அவர்கள் கண்டு கொண்ட உயிரின் மீதியை, இளமைக் கொண்டாட்டங்கள் மீறிய சிலிர்ப்பை அவன் பகிரங்கப்படுத்தவில்லை.

இந்தக் கதையும் நாயகனின் போக்கிலே சொல்லப்படுகிறது. அதுவும் தன் இரண்டாம் மனைவியிடம்..

பார்வையற்ற அவனுக்கு இறந்தவள் பாலைவன நீரூற்று. தாகம் தணித்தவள். அன்பால் நிறைத்தவள். அந்த அன்பாலேயே பிரிந்தும் சென்றவள். குறைகளைக் கொண்டாடும் சமுதாயத்தில் விடை சொல்லாத வினாவாக அவள் வெற்றி பெறுகிறாள். அதற்கு மதிப்பளித்து அவனும் மௌனிக்கிறான். அவன் மட்டுமே கேட்ட வசந்தம்… ஹிந்தோள வசந்தம்.. வசந்த மாதவம்… ஜானகி தவம்… சச்சிதானந்த வைபவம் (முத்துஸ்வாமி தீஷதர் கிருதி…  சந்தான இராமனைக் கொண்டாடும் இந்தக் கிருதி).இவன் பச்சைக் கனவின் நாயகியை மனதால் பார்த்துக் கொண்டேயிருக்கிறான்.

பெயரில்லாத இந்தப் பெண்… வாய் பேச இயலாத இந்தப் பெண் தன் பிறப்பின் பலனை உரக்கச் சொன்னாள். உயிர் தாங்கும் உரிமை பெண்ணிற்கு அன்றி யாருக்கும் இல்லை. அவள் வசந்தம்.. பூவாகிக் காயாகிக் கனிந்த மரம்… தன்னையன்றி யாருக்கு அவள் தன்னை மெய்ப்பிக்க வேண்டும்?

ச ரி ம ப த நி த ச  ச நி த ப ம த ம க ச  – ஹிந்தோள வசந்தம்.

ருக்குமணி– கோபிகா வசந்தம்: இன்பமும் துன்பமும் வெளிப்படை.

பச்சைக் கனவின் நாயகி- ஹிந்தோள வசந்தம்: இன்பமும் துன்பமும் உள்ளிடை.

oOo

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2 comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.