என்   இறப்பு பற்றிய நினைவுக் குறிப்பு- வைக்கம் முகமது பஷீர்

தமிழில் : தி. இரா. மீனா

இந்த அழகான பூமியில் எனக்கென ஒதுக்கப்பட்டிருந்த காலம் முழுமையும் கழிந்திருக்கிறது. எனக்கு மேலும் கால அவகாசமில்லை. காலமிருப்பது, என்பது அல்லாவிற்கு— கடவுளுக்குத்தான். அவன் காலத்திற்கு முடிவேயில்லை, அது முடிவற்றது; காலம் முடிவற்றது.

இந்த நாள் வரை நான் காலையில் படுக்கையிலிருந்து எழும்போதும், எப்போதும் காலைப் பொழுதாக இருக்காதபோதும் நான் காலத்திற்கு வணக்கம் சொல்கிறேன்; முடிவற்ற காலத்திலிருந்து எனக்கு மேலும் ஒரு நாளை நீட்டித்ததற்கு கடவுளே நன்றி.

இந்து மற்றும் இஸ்லாமிய சந்நியாசிகள்- சூபி ஆகியவர்களுடன் நான் கழித்த நாட்கள் நினைவிற்கு வருகின்றன. உண்மையைத் தேடி  நான் அலைந்த நாட்கள் அவை. கடவுள் பற்றிய இணைச்சொற்களை நான் கணக்கிட்டுக் கொண்டிருந்தேன். ஏறக்குறைய நிர்வாணத்தோடு உட்கார்ந்து தலை முடியும், மீசையும் வளர, இடையீடின்றி சிந்தனைகளால் சூழப்பட்டிருந்தேன். பத்மாசனம் போட்டு “யோகாதண்டுவை” கையில் வைத்திருப்பதாகப் பாவித்தேன். அனைத்துலகச் சிந்தனைகளையும் நான் மனதிலிருத்தியிருந்தேன். என் தியானத்திலிருந்து மீளும்போது  சூரியன் ,சந்திரன், விண்மீன்கள், பால்வீதி, சூரிய மண்டலம், அண்டம் ஆகியவைகளுக்குக் கேட்கும்படியாக நான் “அஹம் பிரம்மாஸ்மி” என்று முணுமுணுக்கிறேன். அது சூபிக்கள் சொல்லும் “அனல் ஹஃ” (Anal Haq) என்பது தான்.

என்னுடைய “அனர்ஹ நிமிஷம்“ (Anargha Nimisham) தொகுதியில் “அனல் ஹஃ” பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். அன்று நான் இறக்கப் போகிறேன் என்று நினைத்தேன், நான் இல்லாமல் போவேன் என்று நினைத்தேன். இது வரை யதார்த்தம் உன்னையும் என்னையும் கூறாகக் கொண்டிருந்தது; ஆனால் இதற்குப் பிறகு நீ மட்டும்தான் யதார்த்தமாக இருப்பாய். அந்தக் கணம்தான் “அனர்ஹ நிமிஷம்”, விலைமதிப்பற்ற கணம்

எனக்கு மரணம் பற்றிய பயமில்லை. அது உண்மை; நான் மரணத்தை பயமுறுத்துகிறேன் என்பதும் இணையான உண்மைதான். மரணம் தவிர்க்க முடியாதது; அது தன் பட்டியல்களுடன் வரட்டும்.

பிறந்தது முதல் நான் மரணத்துடன் உராய்ந்திருக்கிறேன். ஒரு முறை கடுமையான விஷமுடைய கட்டுவிரியன் என் வலது காலைச் சுற்றிச் சூழ்ந்திருந்தது. இன்னொரு சமயத்தில் நல்ல பாம்பு என் இடது காலில்  தவழ்ந்து கொண்டிருந்தது. பெரும்பாலும் பல இரவுகளில் என் வீட்டில் நல்ல பாம்புகள் புகுந்திருக்கின்றன. கடைசி முறை அது மிக அணுக்கமாக வந்தது; நான் ஏறக்குறைய அதை மிதித்து விட்டேன்.

நான் இறந்து விட்டேன். இதற்குப் பிறகு யாராவது என்னை நினவு வைத்திருக்க வேண்டுமா? யாரும் என்னை நினைவு வைத்திருக்கத் தேவையில்லை என்பதுதான் என் அபிப்பிராயம். ஏன் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்? கடந்து போன வருடங்களில் எண்ணிக்கையற்ற கோடிக்கணக்கான மக்கள், ஆண், பெண்கள் இறந்திருக்கின்றனர். யாராவது அவர்களை நினைவில் வைத்திருக்கிறார்களா?

என் புத்தகங்கள் எத்தனை காலம் வாழும்? ஒரு புதிய பூமி உருவாகலாம். கடந்த காலத்தவை எல்லாம் புதியவற்றில் கரைந்து எதுவுமின்றி மறைந்து போகலாம். என்னுடையது என்று நான் சொல்லிக் கொள்ள என்ன இருக்கும்? என்னுடையது என்று சொல்லிக் கொள்ளும் ஓர் இம்மியளவான அறிவையாவது நான் இந்த உலகத்திற்கு அளித்திருக்கிறேனா? கடிதங்கள், சொற்கள், உணர்வுகள்–இவையெல்லாம் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தியிருக்கி்றவைதான்.

இரண்டு மூன்று முறைகள் என் எல்லைக்குட்பட்ட நிலையில் நான் தனியாக நின்று கொண்டு ,முழு நிலா மற்றும் எண்ணற்ற நட்சத்திரங்கள் உருவாக்கியிருக்கும் அச்சமும் மதிப்புமான அழகை கவனித்திருக்கிறேன் அதை உள்ளடக்கத் தவறி, பயத்தில் அழுது ஓடியிருக்கிறேன். அந்தப் பாலைவனத்தோடான முதல் சந்திப்பிலேயே நான் மரணித்திருக்க வேண் டும்..

அது அஜ்மர் அருகேயுள்ள ஏதோ ஓரிடம். நடு மதியப்பொழுது. நான் நடந்து கொண்டிருந்த பாதை பாலைவனத்தின் விளிம்பு. முன்பு அந்தப் பகுதியின் பள்ளங்களில் பாதசாரிகளுக்கு தங்கள் வழியைக் கண்டுபிடிக்க உதவும் வகையில் செம்பாறைக் கற்கள் அடையாளமாக இருந்தன. ஆனால் இப்போது பாலைவனக் காற்றின் வரட்சியால் மண்குவியல்கள் அந்தப் பாறைகளை மூடிவிட்டன. நான் வழி தவறிவிட்டேன். உஷ்ணமும், தாகமும் பொறுக்க முடியாதவையாக இருந்தன.

நான் வலதுபுறத்தை நோக்கிப் போயிருக்க வேண்டும் ;ஆனால் இடதுபக்கம் திரும்பி விட்டேன். இப்போது அந்தப் பாலைவனம் எல்லையற்று என் முன்னால் மிகுந்த வெம்மையோடு நீண்டிருந்தது. சூரியன் இரக்கமின்றி என் தலை மீது கொளுத்திக் கொண்டிருந்தது. திசையின்றி நான் நடந்து கொண்டிருந்தேன். பாதம் மண்ணில் புதைந்தது- அது குளிர்வது போல இருந்தது– சூரியனின் தகிப்பில் நான் எரிந்தேன் — பொறுக்க முடியாத தாகம். சோர்ந்து விழுந்தேன். ஆனால் நான் இப்போது ஒரு பெரிய கரிக்கட்டை துண்டுதான். மையப்பகுதியில்,உள்ளே ஒரு சிறிய சிவப்பு ஒளிவட்டம். அல்லா! அது என்ன?

அதுவும் கூட மறைந்தது. நான் நினைவிழந்தேன். எவ்வளவு நேரம் அந்த உருக்கும் வெம்மையில் கிடந்தேன் என்று தெரியவில்லை. பல மணி நேரமாக இருக்கலாம். நாட்களாக இருக்கலாம்.

அங்கு இறந்து கிடந்தேன் என்று வைத்துக் கொள்ளலாம். பல மணி நேரமாக இருக்கலாம். நாட்களாக இருக்கலாம். எனக்குத் தெரியாது.

அதை நினைத்துப் பார்க்கும்போது ஒரு நகைச்சுவை போல் தெரிகிறது. பூமியில் வாழ்க்கை என்பது ஒரு பெரிய “வேடிக்கைதான்”, கடவுளின் நாடகம்.

வி.கே.என். ஒரு முறை மரணம் பற்றி என்னிடம் கேட்டார். ”கடைசி நிமிடம் வரை அவர் கடத்துகிறார்” என்றேன்.

வைக்கம் முகமது பஷீர் இறந்துவிட்டார். செய்தி வருகிறது. ஏன் அவர் இறந்தார்? எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும். அவ்வளவுதான்.

பாருங்கள், இப்போது நான் இறந்து விட்டேன். என் இறப்பிற்குத் தகுந்த காரணங்கள் இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள். முடிவற்ற நேரம் எனக்கு இல்லை என்று நான் சொல்லவில்லையா?

நான் அனைவரையும் வணங்குகிறேன். மாமரத்தையும் வணங்குகிறேன்; பூமியின் எல்லா படைப்புகளையும். அண்டமே—நான் ஏதாவது உனக்குத் தீங்கிழைத்திருந்தால் என்னை மன்னித்துவிடு. எல்லோரும் என்னை மன்னியுங்கள்.

—————————–

நன்றி : Malayalam Literary Survey   April –Sep 1994  Kerala Sahitya Academy

 

 

 

 

One comment

  1. வைக்கம்முகமதுபஷீர் மொழியும் மரணம் குறித்து பகிர்வு சித்தர்களின் பார்வையும் பஷீரின் அனுபவமும் கலந்தது. மரணம் தவிர்க்க முடியாதது ஆனால் மனிதமுயற்சியால் தாமதிக்கச் செய்யலாம். மீனாவின் பெயர்ப்பு தமிழைப்போலவே இயல்பாக. உள்ளது. வாழ்த்துகள்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.