கடலெனும் பெருவெளி

-ஜிஃப்ரி ஹாஸன் – 

எல்லாவற்றையும்
அமைதியாய் பார்த்துக்கொண்டிருந்தது கடல்
தன் உடலில் நீந்திச் செல்பவர்களை
கடலில் கட்டித் தழுவும் காதலர்களை
அலைகளைக் கண்டு ஒதுங்கிச் செல்லும்
ஒரு கர்ப்பிணியை
கரைகளில் புரளும் குழந்தைகளை
அமைதியாய் இரசிக்கிறது கடல்

கடற்கரையில் கூடும் மனிதர்கள்
துயருற்ற வானம் போல்
ஓங்கி அழும் ஓசையை
கடல் தன் பேரோசையால் மறைக்கிறது
கடல் போல் குமுறும் தங்கள் மனஓசையை
கவலை தோய்ந்த மனிதர்கள்
கடலோசையில் கேட்டனர்.

கடலின் இசை அதன் துயர் குறித்ததா?
அல்லது அதன் மகிழ்ச்சியைக் குறித்ததா?
கரை மனிதர்கள் குழம்பியபடி கலைகின்றனர்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.