Author: பதாகை

சூஃபிசம் வழிந்தோடும் அனார் கவிதைகள் ♪ ~ஏ.நஸ்புள்ளாஹ் ~

ஏ. நஸ்புள்ளாஹ்

அனாரின் “எனக்கு கவிதை முகம்”கவிதைத் தொகுதியை 2007 இல் வாசித்த அனுபவம் எனக்கு உண்டு. நான் வாசித்த போது அத்தொகுப்பின் அனைத்துக்கவிதைகளும் என்னை மெய்சிலிர்க்க வைத்ததை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.கால நகர்வில் இன்று அனாரின் இன்றைய கவிதா கூடங்களுக்குள் நுழைகிறேன்.மேலும் பல பரப்புகளால் அனாரின் கவிதைகள் வான் உயரத்தை நெருங்கியிருப்பதை எவராலும் மறுக்க முடியாது

வேகமும் அதிர்வும் கவிதைகளில் நிரம்பி வழிவதை நான் காண்கிறேன். சொற்களை பிரதியாளனுக்கு கொடுக்கும் அனார் அச் சொற்களில் மந்திரப் புன்கையை பிரத்தியேகமாக சூடுகிறார். கவிதையில் வரும் இறுதி வரிகள் கவிஞரை நிரந்ரமான தளத்திலிருந்து மாற்றி வேறொரு நிலைக்கு கொண்டு போகிறது.

ஒவ்வொரு காலத்துக்குமான பிரதிகளை எல்லாப் பிரதியாளர்களாலும் தரமுடிவாதில்லை.ஆனால் தனது எழுத்தின் வேகத்தை எதிர்நிலைச் சித்திரங்களாய்த் தந்துகொண்டிருப்பவர் அனார் இவரின் அண்மைய கவிதை

அவன் நிறங்களாலானவன் என்பது
எனக்கு மட்டுமே தெரிந்திருந்தது

காலை ஒளி
மாவிலைத் தளிர்களில் மினுங்கும் நிறம்
கடைசிச் சொட்டு மதுத்துளியின் ருசி
அவனுடைய சொற்களுக்கு

அவன் செருக்குமிகு கவிதைகள்
மாயாலோகத்தின்
மொத்த நிறங்களையும் ஆள்கின்றன

என் திசைகள் அணிந்திருக்கின்றது
அவன் காதலால் நிறந் தீட்டிய இசையை

அவனைக் காத்திருக்கும் தருணம்
வாயூறிக் கொட்டும்
வர்ணங்களாகிவிடுகின்றன பிரார்த்தனைகள்

ஒரு மயில் தோகையின்
ஆனந்த வர்ணமெருகுடன்
காலத்தை மிகைத்து விரித்தாடுகிறான் வாழ்வை

அவன் நிறங்களின் கடல் குடித்த பறவை நான்

மீன் குஞ்சுகளின்
அபூர்வ நிறங்களால் முத்தம் வரைந்து
குறும்பாய் நரம்புகளுக்குள் நீந்தவிட்டு
எங்கு போய் மறைந்தான்

இதமும் புதிரும் பூசிடும்
இருள் பிரியா வைகறை மெல்லப் பதுங்குகிறது
தாபம் துளிர்த்திடும் அவனுடைய கருநிற விழிகளுடன்
அறையில் உயிருடன் அவிந்து
மெழுகு உருகித் தீர
அணைந்து போன சுடரின்
சாம்பல் நிறப் புகை காற்றில் கீறும்
என் இறுதிச் சொற்கள் …
நிறங்களாலானவனைக் காத்திருக்கிறேன்

ஒரு பிரதியை வாசிப்பாளன் கொண்டாடுவதற்கு பிரதியின் உட்தள முன்னிறுத்தம் பிரதியாளனின் அனுபவ மொழிவழியும் அவசியமானது அந்த வேலைப்பாடுகள் அனாரின் இந்தக் கவிதையில் நிறையவே சாத்தியமாகியுள்ளது.வாசிப்பாளனின் ஆன்மாவை தொந்தரவு செய்யும் தாய்க் கவிதையாக இதனை பார்க்கிறேன்.

எல்லாக் பிரதிகளிலும் தன்னுடைய மொழிப்பரப்பை நிலை நிறுத்தும் அனார் வாசிப்பாளனின் மனப் பரப்பில் வேரூன்றி மறுவாசிப்புக்கான வசீகரத்தையும் பிரதி முழுக்க நிரப்பி விடுகிறார்.

நமது சுயங்களையே தொந்தரவுக்குள்ளாக்கும் வகையில் ஒருவர் மீது அதீத பிரியத்தை எது உருவாக்குகின்றது…

உன்மத்தமான தனிமைக்குள்ளாக நிற்பதுதான் பௌர்ணமி. அந்த நிலவோடு புத்தனுக்குள்ள பந்தம் தான் உலகின் பரிசுத்தமான அன்புணர்ச்சியென எனக்குத் தோன்றுவதுண்டு….
குறைவதுமல்ல கூடுவதுமல்ல…
முழுமையாக இருப்பது…
தன்னிறைவானது நிலவொளி.

அனாரின் கவிதை சூட்சுமத்தை இந்தப் பிரதியில் நிறையவே நான் காண்கிறேன்.ஒரு வாசிப்பான் கிரகித்துக் கொள்ளும் மொழிவழியும் மொழிசார் அர்த்தப் பரப்பும் இந்தப் பிரதியில் ஒலிக்கின்றது.

வெளிச்சத்தை இருட்டைத்
தின்று வளர்கிறது கனவு

தண்ணீரிலும் காற்றிலும்
தன்னைப் பூசிவிடுகின்றது

காலத்தின் தொலைவுவரை தகிக்கும்
வெப்பத்தைக் குடித்த கடுங்கோடையென
உதடுகளில் தேங்கிக்கிடக்கிறது

அறியப்படாத புலத்திலிருந்து
நீலச்சிறகுகள் மின்னலென விரிந்திற்று
அவ்விரு சிறகுகளில் தூக்கிவைக்க முயல்கிறேன்
தழல் விட்டெரிகிற அதே கனவை
தப்பமுயன்ற அதன் அதிசய நிழல்
காலை வெயிலில்
உருவற்று அலைகின்றன

ஆதியில் விடுபட்டுப்போயிருந்த
என் பொற்காலக் கனவை
மெல்லக் கைகளில் அள்ளுகிறேன்

இசையின் நுண்இழைகளால் மூடுண்டகாடு
அதன் இயல்புகளுடன்
அனுமதிக்கின்றது

மழையின் கனவை
நீர்ப்பெருக்கின் கசிவு படிந்திருக்கும் கரையில்
தீராத கேவல்களாய்ப்
பரவிச் சிதறும் கனவுக் குமிழிகள்

கட்டிலின் மூலை நான்கிலும்
முயலின் பளபளக்கும் கண்களாய்
மிரட்சியுடன்
உன்னை வெறித்தபடியிருக்கும் என் கனவு

புனைவு வெளியில் நுண்கதையாடலை ஆதி கனவுப் பாதையை கவிதைச் சம்பவமாய் அனார் அணுகிய அமைப்பியல் வாழ்வியல் சார்ந்த மற்றும் மொழியல் சார்ந்த வாசகப் பிரதி இது.

ஈழத்துக் கவிதைப் புலத்தில் அனார் கவிதைகள் அனுபவ பரவசத்தை அரசியல் நுண்ணுணர்வை சூஃபிச வடிவத்தை ஆத்மாவின் சந்தம் பிசகாது தருகின்றன.

அனாரின் பிரதியில் காணப்படும் துவக்கமும் நிறைவும் அவரது பிரதியுடன் வாசிப்பாளன் பயணப்படுவதுமாய் வாசிப்பாளனின் மனசு முழுக்க அதிக உராய்வை ஏற்படுத்தக்கூடியதுமாய் தயாரிக்கப்படுகின்றது.இதன் ஒற்றை வடிவமே கவிதை வெளியில் அனார் கொண்டாடப்படுகிறார்.

சூஃபித்துவம் வழியும் இவரின் கவிதை
“இசையின் சுவரில் பொறிக்கப்பட்டிருந்த கவிதை”

வெண் சாம்பலின் நினைவிலிருந்து
இசையின் சுவரில் பொறிக்கப்பட்டிருந்த கவிதை

ஒற்றயாய் சுவரில் சாய்ந்தும்
இருவர் இருக்கமாய் சாய்க்கப்படும் நிற்கும்போது
பரிசுத்தமான ஔியில்
தாழ்ந்து…
ஆழம் சென்று மீள்கிறோம்

தன்னை சிலாகித்தபடியே
மற்றுமொரு சமமான செருக்குமிகும்
பதிலீட்டை
எச்சிலால் கோர்க்கின்றான்
கர்வமிடும் பெண் உதடுகளுக்கு

மூடியிருந்த முத்தத்தை
பிரித்தெடுத்த ஔித்திரவத்தை
சுவரில் தெளிக்கிறாள்

சூஃபியின் தனித்த புல்லாங்குழலிலிருந்து
வழியும்
தனிமையின் பித்து
புனிதத் தவப் பெருக்கின் உயிரை
அப்படியே சாரமாய் சுவருக்கு ஊதுகிறது

அவளோடு சேர்த்து இசையையும்
உறிஞ்சுகிற சுவரில்
செவிவைத்துக் கேட்டால்
சூ.ஃபி
சுவரிலிருந்தே
இசைத்துக் கொண்டிருப்பார்.

சூஃபி கவிதைகளில் ஜென் கவிதைகளின் உரையாடல்கள் பிரதிபலித்தல்கள் ஆங்காங்கே பயணப்பட்டாலும் சூஃபிக்கவிதைள் வேறு புள்ளியிலிருந்து செல்லும் தவத்தை மற்றும் பரவத்தை ஒரு வாசிப்பாளன் கண்டு கொள்ள முடியும்

அனாரின் இந்தக் கவிதையும் சூஃபிக் கவிதைகள் மொழியும் நான் அற்ற நிலையைச் சுட்டிக் காட்டுகின்றது.என்,எனது,என்ற இருந்தலையும் ஒவ்வொரு வரிகளிலும் பிரபஞ்ச ரீதியாக ஒன்றினைக்கின்றது.சூஃபிகளுக்கே உரியதான இசைக் களிப்பையும் சந்தோஷத்தையும் நடனத்தையும் கொண்டு காதாலின் மர்மத்தைப் பேசுகின்றது.

இசையின் மென்னுடல் தரும் ஒலியில் பிரபஞ்சத்தை ஆரத்தழுவி மிகவும் புதுமையான புள்ளியிலிருந்து புனைவுகளால் கவிதையை உயிர்ப்பிக்கும் கலைநுட்பம் அனாருக்கு மட்டுமே விசித்துரமானது.இவரது மற்றுமொரு கவிதை “மென் சொற்கள்”

மெருகேறிய இரண்டு மென்சொற்கள்
மாபெரும் கடலையும்
ராட்சத மலையையும்
அருகருகே நகர்த்துகின்றன

பொன்னொளிர் நீலக்கடல் வாசனை
விண் மீன்கள் மினுங்கும்
மலையுச்சியின் காரிருள்
அவனும் அவளுமானர்

தன் பிரமாண்டத்தில்
புதையுண்ட இரு உடல்களை
பிரமித்தபடியே
வானவில்லென
அவர்கள் மேல் பட்டுக்கிடந்தன
இரு சொற்கள்

அவளது தோழில்
அலைகள் ஆர்ப்பரித்தன
அருள்பாலிக்கும் தன்னிகரில்லாத ஆலிங்கனத்தில்
மலை அதைக் கேட்டிருந்தது

அதி ரகசியமான அவ்விரு சொற்களும்
ஜின்னின் இரு தோகையென
வானளாவ விரிந்து கொண்டன.

மாட்சிமைக்குரியவன் கடவுள் அவனது இயக்குதலின் படியே பிரபஞ்சத்தின் கோணங்கள் இயங்குவதை நான் அறிவேன்.கடவுளின் படைப்புகளில் மனிதன் மற்றும் ஜின்கள் முக்கிய வகிபாகத்தையுடைய படைப்புகள் மனிதன் கண்களுக்கு உருவ அடிப்படையில் புலப்படுவதும் ஜின்கள் உருவ அடிப்படையில் கண்களுக்கு புலப்படாத வகையுமாகும் இந்த ஜின்னின் இரு தோகையென வானளாவ விரிந்து கொண்டன அதி ரகசியமான அவ்விரு சொற்களும் என அனார் கவிதையை நிறைவு செய்திருப்பது பிரதியின் ஆன்மிகம் நோக்கிய விரிவையும் காதலின் தீவிர அழகியலையும் உருவாக்கியிருக்கிறது.

கவிதையென்பது எல்லோருக்கும் எப்படியோ அதன் கோணங்கி தனமாகவே அனாரும் பார்க்கின்றார். அதுவே அவரின் மகிழ்ச்சியை அவரின் துயரை பேசுகின்ற வெவ்வேறு அனுபவமாகின்றன .அனாருக்குள் ஒரு காதலிஷ நதி முன் நோக்கிப் பாய்ந்ததன் ஒரு குறியீட்டுப் பிரதியாக மற்றும் ஒரு ரசனையின் ஔிப்பதிவாக புதிய பரிசோதனை முயற்சியக இக்கவிதையை அடையாளமிட முடியும்.

இவரின் “தலைப்பிறைக்கு சலாம்”என்ற கவிதை

இன்மையின் திசையிலிருந்து
நீ ரோஜா என உச்சரித்த கணம்
என் நேர் எதிராக
முதல் மாதப்பிறையை நோக்கினேன்

வெள்ளிக் கிழமைகளை
வளைத்து நெகிழ்த்து
கொண்டாட்டத்திற்கு ஈர்க்கிறது

அத்தியின் மீதும்
செய்த்தூனின் மீதும் சத்தியம் செய்தவனின்
பிரமாணடத்தை
அந்நறு மணத்தின் களிப்பும்
குளிர்ந்திருக்கலாம்

ஹசன் ஹுசையினின் குழந்தைமையாய்
பேரீச்சைத் தோப்புகளில்
தவழ்கின்றன பல்லாயிரம் வளர்பிறைகள்

முடிவுகளுக்கும் ஆரம்பங்களுக்குமான
அழைப்புவிடுகிறது வாளின் குருதியில்
தோய்ந்துள்ளது அத்தர்மணம்

சாட்டைத் தழும்புகளில் உருவான
ரோஜாவின் அடர் சிவப்பு
தவறுகளுக்காக
பிராய்ச்சித்தங்களை கோருகின்றன

எண்ணற்ற சிலிர்ப்புகளை துய்க்கும்
ரோஜா மலர்
பேராசிகளின் பொருட்டு முளைக்கும்
தலைப்பிறைக்கு சலாம் உரைப்பதில்
என்னை முந்திக் கொள்கிறது.

ஜிப்ரான்,உமர் கயாம்,ரூமி போன்றவர்களுடைய சூஃபிச கவிதைகளிலிருந்து அனாரின் இந்த கவிதை தள்ளிப் போவதாகவும் ஜிப்ரான்,கயாம் இருவரின் கவிதைகள் ஒரே பாதையில் பயணிப்தையும் ரூமியின் கவிதைகள் இவர்கள் இருவரின் கவிதைகளிலிருந்து தள்ளிப் போதையும் ஒரு வாசிப்பாளன் கண்டு கொள்ள முடியும்.

சூஃபிச கவிதைகள் நான்அறிந்தவரை ஒரு நிகழ்ந்த சம்பவமாக இருக்கும் அல்லது கவிதை ஒரு நிகழும் சம்பவமாக இருக்க வேண்டும்.அப்படியான முன்வைப்பை அனாரின் இந்த கவிதையும் கொஞ்சமும் சம்பவம் பிசகாத வடிவமாக தயாரிக்கப்பட்டுள்ளது .

சூஃபிச கவிதை முனைப்பு புதிய தலைமுறை பிரதியாளர்களால் தயாரிக்கப்படுவது மிகக் குறைவு என அடையாளப்படுத்த முடியும்.எனினும் மனித முயற்சியினால் பலதையும் உற்பத்தி செய்ய முடியும் தயாரிக்க முடியும் என்பதற்கு அனாரின் இவ்வகையான கவிதைகள் பெரும் சான்று.வைரத்தின் தேவை குறைவாக இருப்பினும் அதன் மதிப்பு குறைந்துவிடுவதில்லை.ஒரு தலைமுறை கொண்டாடும் சூஃபிச கவிதைகளில் அனாரின் கவிதைகள் முதன்மை பெரும் என்பது திண்ணம்.

 

முகம் – செல்வசங்கரன் கவிதை

செல்வசங்கரன்

ஒரு மொபைல் தொலைந்ததை பற்றிய விசாரணை போய் கொண்டிருந்தது
எல்லார் மீதிருந்த சந்தேகமும் விலகி
விசாரணை வளையத்திற்குள் நானும் அவனும் மட்டும் இருந்தோம்
இந்த வளையத்திற்குள்ளாக அவனையும் இழுத்து வந்ததற்காக
அதிகாரிகளே உங்கள் நெஞ்சை ஒருமுறை விடைத்துக் கொள்ளலாம்
ஒரு முறையென்ன ஒருமுறை
உங்கள் நெஞ்சு உங்கள் முறுக்கு விடைத்துக் கொண்டே இருந்தாலும்
யார் கேட்பது
எடுத்தவன் அவனென தெரியுமென்பதால் கூறினேன்
எனக்கென்ன இன்னும் ஒரேயொரு வேலை மட்டும்
வடிகட்டித் தூக்கும் போது வழிந்தோடுவது மட்டுமே பாக்கி
அதிகாரி விசாரணையை முடுக்கி விட்டிருந்தார்
எடுத்தவன் அவனென கூறி விட்டால் வேலை சுளுகு ஒப்புக்கொள்கிறேன்
அந்த மயிர் புடுங்குறது எனக்கெதற்கு என்று தான்
நான் எடுக்கவில்லை
நான் எடுக்கவில்லையென்ற முகமிருக்கிறது அது போதும்
அப்படி வைத்துக் கொண்டேன்
இல்லையென்றாலும் அப்படித் தானே இருக்குமது
எடுத்தவனைப் பார்த்தேன் அவன் முகத்தில் ஒரு அசால்ட்டு தெரிந்தது
அசால்ட்டையே ஒரு தோரணை போல காட்டினான்
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது
ஏன் இப்படி அசால்ட்டு காட்டுகிறான்
இவனெல்லாம் எடுத்திருக்கவே மாட்டான் என்பது போலயிருந்தது
அந்த அசால்ட்டு
இப்பொழுது என் முகம் மீது எனக்குச் சின்னதாக ஒரு டவுட்
உண்மையிலேயே எனது முகம் எடுக்காத மாதிரி தான் தெரிகிறதா
அவனது அசால்ட்டை தூக்கிச் சாப்பிடுவது மாதிரியா உள்ளதது
யார் கண்டது எனக்கது இன்னும் வரவில்லையோ
இது சரியா இல்லை இப்படிக் காட்டினால் சரிப்பட்டு வருமாயென
கையை வைத்து உருளையான ஒன்றை
உருட்டியுருட்டிச் சரிசெய்வது போல
என் முகத்தை வைத்தே என் முகத்தை இப்படி அப்படித் திருகி
கோட்டித்தனங்கள் காட்டிக் கொண்டிருந்தேன்
இப்பொழுது அதிகாரிக்கு என் மீது லைட்டாக ஒரு டவுட்
அதிகாரி மற்றும் அவனோடு சேர்ந்து கொண்டு
நானுமே என்னைக் கை காட்ட பேருதவி புரிந்துவிட்டதால்
சந்தேகம் உறுதியாகி என்னை அரெஸ்ட் செய்வதாகக் கூறினார்கள்
அதிகாரி அவர்களே
நான் எடுக்கவில்லையென்றாலும் அப்படி வாதிடுவதே கூட
என்னைப் பொறுத்த வரையில் கெட்ட கேவலம்
இது மைண்ட் வாய்ஸ் இது கேட்காது
அதற்கு முன்னால் எனக்கு ஒன்று தெரிந்தாக வேண்டும்
உங்களைப் பொறுத்தவரை இதை விட அசிங்கமான கேள்வியொன்றை
உங்களிடம் கேட்க முடியாது ஆனாலும் சொல்லுங்கள்
உண்மையிலேயே குற்றம் செய்த மாதிரி என் முகம் தெரிகிறதா
ஆமென மண்டையை ஆட்டிவிட்டால்
நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன்
இதையாவது முகம் காட்டியதேயென
எனக்கும் கால காலத்திற்கும் நக்கிக் கொள்ள ஒன்று வேண்டாமா

யூனிபார்ம் – லாவண்யா சுந்தரராஜன் சிறுகதை

லாவண்யா சுந்தரராஜன் 

“சேது சித்தப்பா செத்துப் போயிட்டாராம் ஊருக்குக் கிளம்பணும்ன்னு அம்மா கூட்டிட்டு வரச் சொன்னாங்க, வாடி போலாம்”

2-ஏ வில் படிக்கும் பானு இரண்டாம் வகுப்பு பி பிரிவுக்கு வந்து மாலாவைக் கூப்பிட்டாள்

“அய்… ஊருக்காடி, ஜாலியா விளையாடலாம் இல்ல? சேது மாமாவா செத்துப் போயிட்டாங்க? தெரியாம சொல்லாத, தலைல வெள்ளயா முடி இருக்கவங்கதானே? சாமி கிட்ட போவாங்க?”

“தெர்லடி, அம்மா சீக்கிரம் கிளம்பணும்னு சொல்லிட்டு வீட்டுக்குப் போயிட்டாங்க. வேகமா வா”

மாலாவுக்கு வேகமா நடக்க வராது. எப்போதும் எதையாவது பராக்கு பார்த்துக் கொண்டு மெதுவாகத்தான் நடப்பாள். பானு வேகமாக வீட்டுக்குப் போய்விட்டாள். பானு வீட்டுக்கு மாலா, போய்ச் சேர்ந்த நேரத்தில் அவள் ஜட்டியோடு நின்று கொண்டிருந்தாள் கையில் பால் டம்ளர் இருந்தது. அதை வேக வேகமாக குடித்துக் கொண்டிருந்தவள், மாலா வருவதைப் பார்த்து டம்ளரைப் பின் பக்கம் மறைந்தாள்.

“அய், சேம் சேம்”

“போடீ!! நான் யுனிபார்ம் மாத்தறேன்”

“அத்த எனக்கு பால்” என்றாள் மாலா.

“பால் தீர்ந்து போச்சு. உனக்கு வாளப்பளம் தரேன் அது தான் உனக்கு பிடிக்குமே. பளம் உனக்கு மட்டும் தான் பானுவுக்கு இல்லை”

மாலா பையை மேசை மீது வைக்கத் திரும்பிய போது “ஸ்ஸ் ஆ ஆ” என்று பானு முனகுவது கேட்டு திரும்பிப் பார்த்தாள், பானு தன் கைகளை தேய்த்து விட்டுக் கொண்டிருந்தாள்.

“ஏன்னடி ஆச்சு?”

“தெர்லடி வலிக்கிறது போல இருந்துச்சி.”

உள்ளே போயிருந்த அத்தை ஒரு சின்ன வாழைப்பழத்தை கொண்டு வந்து கொடுத்தாள். அப்போது செல்வம் அங்கு வந்து சேர்ந்தான்.

“ஏ உம்மான மூஞ்சி, எங்கடி இங்க வந்த உங்க வீட்டுக்கு போ” என்றான்.

பையை எடுத்துக் கொண்டு கிளம்ப இருந்தவளை, “மாலா, உங்க அம்மா ஸ்கூல்ல இருந்து வீட்டுக்குப் போயிட்டு இங்கேயே வந்துடுறேன்னு சொன்னாங்க. நீ இரு மாலா, அவன் கிடக்கிறான்” என்றாள் அத்தை.

செல்வமும் யூனிபார்மை கழற்றிவிட்டு வேறு கலர் உடுப்பு மாற்றிக் கொண்டான். அத்தை செல்வத்தை உள்ளறைக்கு அழைத்தாள். செல்வம் கையில் டம்ளரோடு வந்தான். மாலா ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். இன்னும் கொஞ்ச நேரம் பள்ளிக்கூடத்தில் இருந்திருந்தால் அவளுக்குப் பிடித்த உடைந்த கோதுமை உப்புமா கிடைத்திருக்கும். அம்மா அடிப்பாங்க என்று தெரிந்தும் திருட்டுத்தனமாக அதை வாங்கிச் சாப்பிடுவாள். இப்போது மாலாவுக்குப் பசிப்பது போலிருந்தது.

“செல்வம் உள்ள போய்க் குடி, டம்ளரை வெளக்கற இடத்தில் வைச்சிடு”

“இரும்மா குடிச்சிட்டுப் போறேன்”

பால் மேல் உதட்டில் மெல்லிய வெள்ளைக் கோடாக பதிந்தது. “அத்த பால் தீர்ந்து போச்சுன்னு சொன்னீங்க” என்றாள் மாலா.

“போன்னு சொல்றேன்ல” என்ற மெல்லிய குரலில் செல்வத்தை மிரட்டினாள் அத்தை.

“அத்தை நீங்க ஏன் மெதுவாவே பேசறீங்க, அம்மால்லாம் கோவம் வந்தா சத்தமா பேசறாங்க”

சன்னமாகச் சிரித்தாள் அத்தை. “அது பவுடர் பால் மாலுக் குட்டி, நல்லா இருக்காது கசக்கும், அவன் உன்ன வம்பிழுத்தான்ல அதான் அவனுக்கு கசக்கட்டும்ன்னு தந்தேன்”

“ஓ அப்படியா நல்லா வேணும் அவனுக்கு”

ஏதோ வேலை செய்ய அத்தை உள்ளே போய்விட செல்வம், பானு, மாலா மூவரும் ஒளிந்து பிடித்து விளையாட முடிவு எடுத்தார்கள்.

“சாட் பூட் திரி”

“எப்போதும் நானே கண்டுபிடிக்குணுமா?” சிணுங்கினாள் மாலா.

“கண்டு பிடிச்சா பிடி, இல்லைன்னா நாங்க ரெண்டு பேரும் வேற விளையாடறோம்” என்றான் செல்வம். கோபித்துக் கொண்டு மாலா போய் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டாள். பானுவும், செல்வமும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

ஊருக்குப் போனால் இப்படி இல்லை எல்லோரும் சேர்ந்து விளையாடுவோம். செல்வம் பண்ணும் அட்டசாகத்துகு எல்லாம் சேது மாமா அடி போடுவார். முழுப் பரிட்சை லீவுக்கு அம்மா, அப்பா, அக்கா எல்லோரும் ஊருக்கு போவோம். அத்தை வீட்டிலேயும் எல்லோரும் வருவாங்க. சித்தி வீட்டிலிருந்தும் வருவாங்க. நாங்க எல்லாரோடும் அங்கே ஏழு கல் பாண்டி, பல்லாங்குழி, தாயம் எல்லாம் விளையாடுவோம். சேது மாமா தான் ஒவ்வொரு முறையும் ஒரு புது விளையாட்டை சொல்லித் தருவாங்க. போன லீவில் அவர் நிறைய புளியாங்கொட்டையைப் பரப்பி வைத்து, வாயால் சேது மாமா ஊதிக் காட்டினார் பத்து பன்னென்டு புளியாங்கொட்டை டான்ஸ் ஆடறது மாதிரி ஓடி அங்கொன்னும் இங்கொன்னுமாக, பாக்க அளகா இருந்துச்சு, அப்பறம் அதை எல்லாம் மறுபடி ஒன்னா வைச்சிட்டு இப்படி ஒவ்வொருத்தரும் ஊதுங்க, யார் அதிகம் புளியாங்கொட்டை சேருதோ அவங்க ஜெயிச்சவங்கன்னு சொன்னார். நாங்க எல்லாரும் ஜோரா விளையாடினோம். செம கலாட்டா. அப்ப பார்த்து அந்த பக்கமா பெரிய மாமா வந்ததாரு, ஓடி போய் சேது மாமா புது வெளயாட்டு சொன்னாரு மாமான்னு சொல்லிட்டே கட்டி பிடிச்சேன். அவரு ஏதோ தேளு கடிச்ச மாதிரி கைய உதரிக்கிட்டு முஞ்சிய கோவமா வைச்சிச்சி கிட்டு உள்ள போயிட்டாரு. இதுவே சேது மாமான்னா தூக்கி தலைமேல சுத்துவாரு. அப்படி தான் முன்ன ஒரு முறை சுத்தின போது சரியா தாத்தா “பிள்ளய தல மேல தூக்கி சுத்தாத குடலேறிக்கும்ன்னு எத்தன வாட்டி சொல்றது. இப்படி சின்ன பிள்ளகளோட எப்போது பாரு ஒரே ஆட்டம், வெல வெட்டிக்கு போவலன்னாலும் வீட்டுல மூட்ட ஏத்தா இறக்க ஒட்டடை அடிக்கன்னு வேல பாக்கலாமே. படிப்பு முடிஞ்சிட்டா துர மாறி இருக்கனுமா?” என்ற போது சேது மாமா கொஞ்ச நேரம் சோகமா உட்கார்ந்து இருந்தாரு. தாத்தா அம்மாவுக்கு அப்பா தானே அதான் இப்படி எப்போப் பாரு திட்டிகிட்டே இருக்காரு. “சேது மாமா நீ செல்வத்தோட அம்மாச்சி வீட்டுல பொறந்திருக்கலாம் அத்த மாறி அவங்க அப்பா கூட மெல்ல பேசுவாங்க, கோவமா திட்டவே மாட்டாருன்னு நினைக்கிறேன்னு” சொன்னதும் உடனே சிரிச்சிட்டே “பெரியவங்கன்னா அப்படி தான் குட்டி இருப்பாங்க. அவங்க திட்டறதெல்லாம் நல்லதுக்கு” சொன்னாரு. “அய் மாமா சிரிச்சிட்டாரு பாரு பானு, பன்னீர் மாமாவ நான் சிரிக்க வைச்சிட்டேன்” என்று சொன்னதும், சேது மாமா மறுபடியும் தட்ட மாலை சுற்றினதும் எனக்கு கிறுகிறுன்னு வந்துட்டுட்டது.

அம்மாயி வீடு ரொம்ப பெரியது, ஒரு தெருவிலிருந்து இன்னொரு தெரு வரையிலும் நெடுக இருக்கும் வீடு. அம்மா கிட்ட மாலா அடிக்கடி கேட்பா ஏம்மா அம்மாயி வீடு இவ்வளவு பெரிசா இருக்குன்னு. நெல் காய வைக்க, வெங்காயம், மிளகாய் மூட்டை எல்லாம் அடிக்க வசதியா அப்படி நெட்டுக்க கட்டி இருக்காங்கன்னு சொல்லுவாங்க அம்மா. கிழக்கு வாசல் இருக்கும் தெருவுக்கும் மண் வாசலுக்கும் நடுவுல பெரிய மேடு இருக்கும். கருங்கல்லு, வெள்ளை கல்லுன்னு அங்கங்க கல்லு கிடக்கும். நாங்க சாயுங்காலம் கல்லா மண்ணா விளையாட அது தான் இடம். கொஞ்சம் உள்ள தகரம் போட்ட தாழ்வாரத்தில நாலஞ்சி மாடு இருக்கும். எல்லாம் பசு மாடு. மாட்டுக்கு தண்ணி வைக்கத் தொட்டி இருக்கும். லட்சுமியும் மத்த மாடுங்க எல்லாம் எதையாவது மென்றுகிட்டே நிக்கும். அப்படி நிறைய நேரம் மென்னு தின்னா தான் நானும் நல்லா பெரிய பொண்ணா ஆவேன்னு அம்மா சொல்லுவாங்க. இந்த புறம் உச்சா போற இடம், குளிக்கிற இடம் இருக்கும். கக்கூஸுக்கு காலைல வாரிக்கு தான் போகனும்.

மண் வாசல் ஓரமா வடக்கால சின்ன இடத்தில் வேப்பமரம், கொஞ்சம் பூச்செடி எல்லாம் இருக்கும். நாலைஞ்சி குண்டு மல்லி தான் பூக்கும். அதுக்கு நானும் பானுவும் சண்டை போட்டுக்குவோம். அக்கா சத்தம் போடாமா பறிச்சி வச்சிச்சிப்பா. எங்களுக்கு எப்பவும் கனகாம்பரம் தான் கிடைக்கும். அத்த வந்து உங்களுக்குத் தான் அதிகம் பூன்னு எங்க இரண்டு பேரையும் அழாம இருக்க சொல்லுவாங்க. அம்மா தோசை ஊத்தி போடும் போது எல்லா பிள்ளைகளும் அங்கே உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு இடம் இருக்கும். சிலமுறை சோறு பிசைஞ்சிட்டு வந்து வாசலில் வைச்சி எல்லா பிள்ளைகளுக்கும் கொடுப்பாங்க அப்ப செல்வம் லபக் லபக்னு தின்னுட்டு முன்ன முன்னக் கைய நீட்டுவான். அத்த சண்டை போட்டா ஓடிப் போய் செவுத்துல முட்டிக்குவான். அம்மா அவனுக்கு எப்போதும் அதிகம் சப்போர்ட் பண்ணுவாங்க. வளர்ற பிள்ள திங்கட்டும்பாங்க. ஆனா அவன் என் கையிலிருந்து பிடுக்கிப்பான். அதைக் கூட ஒன்னும் சொல்ல மாட்டாங்க. அவன் தங்கிச்சிய மட்டும் நல்லா பார்த்துக்குவான். என் அக்கா அப்படி இல்ல, என் கூட சண்டை போடறா. அம்மாகிட்ட கோள் மூட்டி அடி வாங்கி வைக்கிறா. நினைக்க நினைக்க அழுகையா வரும். சேது மாமா மட்டும் தான் உம்முன்னு இருக்கக் கூடாது. சிரிச்சிட்டே இருக்கணும்னு சொல்லி கிச்சி கிச்சி மூட்டுவாங்க.

அது வடக்கு வாசல் வரை ஒரே ரூமாட்டாம் இருக்கும். வடக்கு வாசலைத் தாண்டினதும் வெளில முல்லப்பூ பந்தல் இருக்கும். நிறைய முல்லை பூக்கும். ஏணி வச்சி ஏறி செல்வமும், பன்னீரும் பூப்பறிச்சித் தருவாங்க. அம்மா, அத்தை எல்லாம் சேர்ந்து சாயுங்காலம் முழுக்கக் கட்டி எல்லோருக்கும் வச்சி உடுவாங்க. அம்மா ரொம்ப நெருக்கமாக் கட்டுவாங்க. அவங்கிட்ட நைஸ் பண்ணி பானுவும், அக்காவும் வாங்கி வச்சிப்பாங்க. எனக்கு எப்போதும் அத்தை கட்டின லொட லொட பூ தான் கிடைக்கும். வாங்கி வச்சிக் கிட்டு கொஞ்ச நேரம் உம்முன்னு இருப்பேன். ஆனா எல்லாரும் ஓடிப் பிடிச்சி விளையாடும் போது போய் விளையாட சேர்ந்துக்குவேன்.

காலையில எல்லா பிள்ளைகளும் எந்திரிச்சி வாரிக்குப் போவோம். லீவுக்கு போகும்போது எப்போவுமே வாரில தண்ணி இருக்காது. எப்பவாவது ஐய்யாத்தில் தண்ணி வந்தா வாரிலையும் வரும்ன்னு சேது மாமா சொல்லுவாரு. ஒரே ஒரு தபா வாரியில் தண்ணி நிறைய வந்துச்சி அப்ப அது பாக்க காவேரி மாதிரி இருந்துச்சி சொன்னாரு. ஆனா நான் ஒரு வாட்டி கூட வாரில தண்ணி வந்து பார்த்தது இல்லை. வாரிக்கும் வீட்டிக்கும் நடுப்புற பெரிய புளியாமரம் இருக்கும். சேது மாமா பிள்ளைங்களை அதில் கிளையப் பிடிச்சி ஆடச் சொல்லி ஒரு விளையாட்டு சொல்லிக் குடுத்தாங்க ஒரு முறை. அப்படி ஆடிக் கீழ விழுந்து பன்னீர் ஒரு டைம் கைய ஒடச்சிக்கிட்டான் அன்னிக்கு சேது மாமாவுக்கு செம திட்டு. அதுக்கு அப்பறம் யாரும் தாத்தாக்கு தெரிஞ்சி புளியங்கிளையில் ஆட மாட்டோம். தாத்தா தோட்டத்துக்கு போயிருக்காங்கன்னா ஒரே குதியாட்டம் போட்டு கிளையிலும் தொங்குவோம். கிளை எட்டாத பிள்ளைங்களை மாமா தான் தூக்கி விடுவாரு. என்ன ஒரு முறை தூக்கி கிளைய பிடிச்சி ஆடச் சொன்னப்பா ஒரே கத்தா கத்திட்டேன். கை வேற எரிஞ்சது. சிவப்பாயிடுச்சி. ஒரே அழுகை. அப்பறம் மாமா தும்பப் பூவில மோதிரம் செய்து போட்டுவிட்டா ரொம்ப நேரம் புதுசா வைச்சிருக்கானு என்னைச் சொல்லுவாரு. எல்லோரும் சீக்கிரம் பிச்சிப் போட்டுடுவாங்க. பானுவுக்குப் பத்து நிமிஷம் கூட போட்டு இருக்க துப்பு இருக்காது. என்னோடதையும் பிக்க பாப்பா தடிச்சி. பூவரச மரத்து பீப்பி கூட செய்து ஊதிக் காட்டுவாங்க. செல்வத்துக்குக் கூட ஊத வராது. நான் ஊதிடுவேன். கற்பூர புத்தின்னு சொல்லுவாரு. ரொம்ப நல்ல மாமா.

யோசித்துக் கொண்டிருந்த மாலா கொஞ்ச நேரத்தில் எழுந்து அவர்களோடு சேர்ந்து ஓடி ஆரம்பித்தாள். உடனே செல்வம் ஏதோ கிண்டல் செய்ய பானு அவளைப் பார்த்துச் சிரித்தாள். இவங்களை மாதிரி இல்லை சேது மாமா அவர்தான் ரொம்ப நல்லவர் என்று நினைத்தாள்.

“ஏய் பேசமா ஒரு இடத்தில் உட்காருங்க, இப்ப ஊருக்குக் கிளம்பணும், ஓடி பிடிக்கிறேன்னு எதையும் தள்ளி கிள்ளி விட்டீங்க, அடிதான்” என்று சொல்லிக் கொண்டே வந்தாள் மாலாவின் அம்மா.

“இவ்வளவு நேரம் சும்மா இருந்தா இல்ல, இப்போ நான் இன்னும் ட்ரஸ் கூட மாத்தலன்னு அழுவா பாரேன்” என்று செல்வம் சொல்லி முடிக்கும் முன்னேயே மாலா “அம்மா நான் இன்னும் யூனிபார்ம் கூட மாத்தல” என்று சிணுங்கி அழத் தொடங்கியதும், செல்வமும், பானுவும் கொலென்று சிரித்தார்கள்.

“இதுக்கு தான் உனக்கு அத்த கசக்கிற பால் குடுத்தாங்க வெவ்வெவ்வே”

“கசக்கிற பாலா” என்று ஒரு வினாடி யோசித்த மாலாவின் அம்மா “சரி அழகு காட்டினது போதும் இங்க வா ட்ரஸ் கொண்டு வந்திருக்கேன், வா மாத்தி விடறேன்” என்று பேச்சை மாற்றினாள்.

“ஹும் இங்கே வேணாம், நம்ம வீட்டுக்கு போனால் இவங்க ’சேம் சேம்’ சொல்லுவாங்க,” என்று அடம் பிடித்தாள் மாலா.

சின்னதாய் ஒரு அடி போட்டு சட்டை, அரைப்பாவாடையை வலுக்கட்டாயமாகக் கழற்றினாள் அம்மா. குனிந்து குனிந்து கைகளை மடக்கி வித விதமாய் ஆட்டம் காட்டினாள். அம்மாவை விட்டுக் கொஞ்சம் தூரம் ஓடப்பார்த்தாள். அம்மாவுக்கு கோவம் வந்து ஒரு சாத்து சாத்தினாள். இருந்தாலும் மாலா யூனிபார்மை கழற்ற விடவில்லை.

“அண்ணி அந்த சூட்டுக்கோலைக் கொண்டாங்க இன்னிக்கி ஒரு இளுப்பு இளுத்தாத்தான் சரிப்படும்” என்றாள்.

மாலா பயந்துபோய் நின்ற ஒரு நிமிடத்தில் யூனிபார்மை பிடித்து இழுத்துக் கழற்றினாள் பானு. யூனிபார்ம் கிழிந்துபோனது. அவ்வளவுதான் ஜட்டியோடு ஒரேடியாக அழ ஆரம்பித்தவளைப் பார்த்து செல்வமும் பானுவும் ஷேம் ஷேம் என்றார்கள். அம்மா யூனிபாரம் கிழிந்ததைக் கவனிக்காமல் சுருட்டி எடுத்து கூடைப்பையில் திணித்தார். வேறு சட்டையை போட்டு விட்டு ஊருக்குக் கிளம்பினார்கள்.

அம்மாவும் அத்தையும் என்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள். செல்வமும் பானுவும் பஸ்ஸிலும் ஓயாது எதையாவது விளையாடினார்கள். யூனிபார்ம் கிழிந்து போனதை நினைத்து ஒரே கவலையாக இருந்தது மாலாவுக்கு. அவளால் செல்வம், பானுவோடு விளையாட முடியவில்லை. முன்பொரு முறை சிலேட் உடைந்து போனபோதும் காட்டாமல் வைத்திருந்தற்கு கிடைத்த அடியை நினைத்து ரொம்ப பயமாக இருந்தது.

“ஊருக்குப் போயிட்டு சுருக்க வரணும், காலாண்டு நெருங்குதுல்ல, மாலா அப்பா மஞ்சுவை பார்த்துக்கிறேன்னு சொல்லி இருக்காரு. அதான் சுருக்க வரணும்.”

“ஆமாக்கா வீட்ல போட்டது போட்டபடி இருக்கு. இந்த சேது ஆனா இப்படி பண்ணி இருக்கக் கூடாது, சும்மா வேல வெட்டியில்ல, என்னன்னு கேட்டதுக்கு இப்படியா ?”

“என்னவோ போ அய்யாவுக்கு அவன் ஒரு பாடாத்தான் இருந்தான். அய்யாவும், அண்ணனும் சும்மா இருக்காம ஏதாவது சொல்லிட்டே இருப்பாங்க. அவனுக்கு இரண்டு வருஷம் கழிஞ்சா நேரம் சரியாடும், பெரிய உத்தியோகம் கிடைக்கும் வடுகப்பட்டி வள்ளுவ ஜோசியர் சொன்னதாக மாலா அப்பா சொன்னாங்க. அதுக்குள்ள இப்படி அநியாயம் பண்ணி அண்ணா பேருல தீராத பழியாக்கிட்டுப் போயிட்டான்”

சேது மாமா என்ன பண்ணி இருக்கக் கூடாது, பெரிய மாமா மேல் என்ன பழியாகும் அம்மாவும் அத்தையும் பேசுவது ஒன்றும் விளங்காமல் திருதிருவென்று விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் மாலா. சேது மாமாவை ஏன் தாத்தா எப்போது பார்த்தாலும் திட்டிக்கிட்டு இருக்காங்கன்னு நினைப்பாள். பெரிய மாமாவும் சேது மாமாவை திட்டிட்டாங்களோ. அதுக்கு சேது மாமா என்ன பண்ணி இருப்பாங்க?

பஸ் நின்றது. ரோட்டிலிருந்து வீட்டுக்கு கொஞ்ச தூரம்தான். மாலா வேகமாக நடக்க மாட்டாள் என்று இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு மாலா அம்மாவும் அத்தையும் வேகவேகமாக நடந்தார்கள்.

“அக்கா அவள இறக்கி விடுங்க இல்லாட்டா பானுவும் அடம் பண்ணப் போற என்னால தூக்க முடியாது”

பானு மிடுக்காக “என்னை ஒன்ணும் தூக்க வேண்டாம் நானே நடப்பேன், அவ சோமாசி. அவளை தூக்கிக்கங்க ’சேம் சேம்’ என்றாள்” பானுவைப் பார்த்து

“அம்மா இறக்கி விடுங்க அம்மா நான் வேகமா வரேன்” என்று கெஞ்சினாள் மாலா.

மாலாவை இறக்கிவிட்டு இன்னும் கதைகள் பேசிக்கொண்டே வந்தார்கள் அம்மாவும் அத்தையும்.வீட்டுக்கு பக்கத்தில் வந்ததும், ஸ்விட்ச் போட்டது போல அம்மாவும் அத்தையும் அழ ஆரம்பித்தார்கள் மாலாவுக்குச் சிரிப்பாக வந்தது. “பாவி ராஜா இப்படிப் பண்ணுவியா” என சன்னமாக அத்தையும், “அய்யோ கண்ணு இப்படிப் பண்ணிட்டியேடா, பூ வைச்சி பொட்டு வைச்சி கல்யாண கோலம் பாக்காம இப்படி போயிட்டியே” என்று சத்தமாக அம்மாவும் அழுததும் மாலா எதுவும் புரியாமல் அம்மாவையும் அத்தையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வீடு நிறைய இவ்வளவு கூட்டம் அவள் ஒருநாளும் பார்த்தது இல்லை. கிழக்கு வாசல் வழி உள்ளே நுழைந்த போது சிமெண்ட் திண்ணையை ஒட்டி இருக்கும் ஓடு போட்ட திண்ணையில் நடுவில் ஒரு சேரில் சேது மாமாவை மாலை போட்டு உட்கார வைத்திருந்தார்கள். நெற்றியில் பெரிய பொட்டு. தலையைச் சுற்றி தாவங்கட்டை வரை ஒரு வெள்ளைத் துணி கட்டப்பட்டு இருந்தது. கையைச் சேரோடு சேர்த்துக் கட்டி வைத்திருந்தார்கள். “மாமா கைய ஏன் அப்படி கட்டிப் போட்டாங்க, இவ்வளவு பேரை பார்த்து பயந்து ஓடிடுவாங்கன்ணு கட்டிப் போட்டாங்களோ” என்று நினைத்தாள் மாலா. ஊதுபத்தி மணந்து கொண்டிருந்தது. “ஏன் ஊதுபத்தி திண்ணைல வைச்சி இருக்காங்க, எடுத்துட்டு போய் பூஜையில் வைச்சிட்டு வரலாம்” என்று யோசித்தாள். மேலே மாடத்தில் விளக்கு வேறு எரிந்து கொண்டிருந்தது. தேங்காய் உடைத்து வைத்திருந்தது எல்லாம் பார்த்து பூஜை அறையை திண்ணைக்கு மாத்திட்டாங்கம்மா என்று அம்மாவிடம் சொல்ல ஓடினாள். உள்ளே பக்கத்து வீட்டுப் பாட்டியோடு அம்மா ஏதோ ஜாடையாக பேசிக் கொண்டிருந்ததை பார்த்ததும் மீண்டும் குழப்பமாக இருந்தது. அந்தப் பாட்டியும் அம்மாவும் வெளிய அழுதுட்டுல இருந்தாங்க, எப்படி அழுகை நின்னுச்சி?

புளியாங்கொட்டைகள் பரப்பியிருந்த மூலை கண்ணுக்குப் பட அங்கே சென்றாள். கூட்டமெல்லாம் கலைந்ததும் எல்லா பிள்ளைகளும் சேர்ந்து புளியாங்கொட்டை ஊதி விளையாடலாம் என்று நினைத்தாள். சேது மாமாவைக் கூப்பிட்டு அது பற்றி பேசலாம் என்று நினைத்து திண்ணைக்கு போனாள். சேது மாமாவின் பக்கத்தில் போய் கையை தொட்டு பார்த்தாள் மாலா. ஐஸ் போல சில்லுன்னு இருந்தது மாமாவின் கை.

“மாமா புளியாங்கொட்டை ஊதி விளையாடலாமா நீங்க எந்திரிச்சி வந்ததும்”

இதைக் கேட்டதும் அவளை இழுத்து கட்டிக் கொண்டு அழுதாள் பெரிய அத்தை. பெரிய மாமா துண்டை வாயில் பொத்திக் கொண்டு அழுதபடி அவர்களைப் பார்த்தார். ராஜி, பன்னீர், எப்போதும் வராத சின்னாம்மா பிள்ளைகள் எல்லோரும் இருந்தார்கள். பெரியவங்க எல்லோரும் ஏன் இப்படி அழறாங்க என்று ஒரே குழப்பமாக இருந்தது மாலாவுக்கு, அத்தை அருகில் பானு கூட அழுது கொண்டிருந்தாள். அடிக்கடி அம்மா சொல்லுவாங்களே “பானுவ பாரு எவ்வளவு சமத்தா இருக்கா, தண்டகழுத மாதிரி திரியற நீ, அவள பார்த்து கத்துக்க” நானும் அழனுமோ. கண்கள் மூடியிருந்த சேது மாமாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு இந்தப்பக்கம் திரும்பினாள். தூரத்தில் தெரிந்த கூடைப்பையில் அவளுடைய யூனிபார்ம் தெரிந்தது. யூனிபார்ம் கிழிந்து போனது அம்மாவுக்குத் தெரிந்தால்… அவள் உதடு பிதுங்கி முகம் கோணியது. கேவிக் கேவி அழ ஆரம்பித்தாள்.

அனுமானம்- ந. பானுமதி சிறுகதை

பானுமதி. ந

‘கில்லாப் பரண்டி, கீப் பரண்டி, மாப்பரண்டி
மல்லிக மொட்டு போன்றவனே!
முன் ஆனி மாம்பழம் தின்னவனே!
ஆனி மாம்பழம் தின்னவனே
அப்புச்சிக் கைய மடக்கு
மாட்டேன்னா போ போ
இங்கே இங்கே வா வா
பார் பார் வாழைத்தார்
தாளம் போட்ட கோபுரம்
சீமா தேவி பூமா தேவி
கை மடக்கு
கை எங்க காணும்?
குருவி கொத்திப் போச்சு’

ஆம், குருவிதான் கொத்திப் போயிருக்க வேண்டும்.அது கொத்திப் போனது உடலையா, உணர்வையா? இரண்டும் கொஞ்சம் கொஞ்சம் எஞ்சிப் போகும்படி கொத்தியிருக்கிறதா இல்லை விஞ்சிப் போகும்படியா? சிறு வயதில் என்னுடன் அம்மா விளையாடிக்கொண்டே சொல்லிய பாடல்கள் பலவற்றில் பொருளற்றதாகத் தோன்றும் வார்த்தைகளுடன் உள்ள இந்தப் பாடல் மட்டும் நினைவிருப்பது விந்தைதான்.

என் பெற்றோர்களின் பிறந்த ஊர் இது. நான் கூட  இங்குதான் பிறந்தேனாம். எனக்கு இரண்டு வயதாகையில்,அம்மாவின் ஆசைக்கிணங்கி அப்பா நல்ல வேலை தேடி எங்களுடன் சென்னைக்குப் போனாராம்.சிறிது சிறிதாக பிறந்த மண் பிரிந்து விட்டது. அப்பாவும் என் பதின்மூன்றாம் வயதில் என்னையும் அம்மாவையும்  தவிக்க விட்டுவிட்டுப் போய்விட்டார். இருபத்தி இரண்டு ஆண்டுகள் நான் வந்திராத ஊர். சொந்தங்களின் கேள்விகளுக்கு அஞ்சி அம்மா வரமறுத்த ஊர். நான் மிகப் பிடிவாதமாக வந்துள்ளேன். அப்பத்தா வீட்டில் தான் வாசம். வீட்டு வாசலின் முகப்பில் அழகான வளைவு, அதன் இரு புறங்களிலும் வெள்ளை யானைகள் துதிக்கைகளை மேல் நோக்கி வளைத்து வரவேற்கும் தோற்றத்தை அமைத்த அந்த வித்தகனைப் பார்க்க வேண்டுமெனக் கேட்டேன். அப்பத்தா சிரித்தார்.

“நீயி கல்லைப் பாரு, கலயப் பாரு,காசுக்காக இல்லாம உசுரு நிக்க மாரி படச்சுப் போட்டானே அத்த நெனச்சுப் பாரு, அவன பாக்க ஏலாதையா, அவன் ஒரு பரதேசி.எங்கிட்டிருந்தோ வந்தான் திடீன்னு; சாதி, குலம், குடும்பம் ஒன்னும் வெளங்கல; இக்கட்டடம் கட்டயில வந்தான்யா;மேஸ்திரி வளவுக்கு தடுமாறுராரு, சித்தன் கணக்கா வந்தான். முட்டயும், சுண்ணாம்பும் முத்தும் ஒடச்சு அச்செடுத்தான், பதிச்சான் களிறும் பிடியுமா சமச்சான் ’ ஐய, ஒன்னு, பிடி வையி, இல்ல களிறு என்னா ரெண்டையும் கொழப்புதேன்னு சொன்ன உன் அப்பனப் பாத்து சிரிச்சான்.மக்கா நா போயிட்டான்.அவனக் கண்டா காலுல விழுவணும்னு எம் மனசு அடிச்சுக்குது.அதென்ன பிடியும், களிறும்னு மண்ட சாயும் முன்ன தெரியணும்னு ஆவலாதியா இருக்கு.உனக்காவது பிடிபடுதா” என்றாள். யாருக்கோ எங்கேயோ தப்பாக புரிபட்டு நான் இங்க வந்திருக்கிறேன்னு அப்பத்தாகிட்ட எப்படிச் சொல்ல? கருவினுள் மீண்டும் புகுந்து கொள்ளும் ஆசையில் நான்  இப்படித் தீர்மானித்தேனோ என்று என்னையே நான் எள்ளி நகையாடிக்கொண்டிருக்கிறேன் என்பதை அப்பத்தாவிடம் எதற்குச் சொல்ல வேண்டும்?

நடந்து நடந்து புதுக்குளக் கரைக்கு வந்துவிட்டதை உணர்ந்தேன்.அருகிலிருக்கும் கோயிலிலிருந்து ரீங்கரிக்கும் மணியோசை காற்றில் மிதந்து வருகிறது. இல்லை, இந்த நேரம் இன்னமும் நடையே திறந்திருக்கமாட்டார்களே ? ஏதும் விசேஷமா இல்லை என் மனக்காதுகள் கேட்கும் ஒலியா? தலையை உதறிக் கொண்டேன் எண்ணங்களை உதறும் முகமாக. செம்மண் நிறத்தில் இருக்கிறது இந்த புதுக்குளம்; ஆனால், கையில் நீர் அள்ளியவுடன் நிறமற்றுத்தான் தெரிகிறது.அசைந்தாடும் இடையில் குடத்தை இருத்தி நீர் மொண்டு செல்லும் பெண் என்னை வினோதமாகப் பார்த்துக்கொண்டே சென்றாள்.’செம்புலப் பெயல் நீர் போல’என்பதற்கு மண்ணின் நிறம் கொள்ளும் தண்ணீர் என்று நான் படித்த காலத்தில் ஒரு விளக்கம் சொல்வார்கள்; இன்று அதற்கு மாறுபட்ட அர்த்தத்தை சிலர் சொல்லக் கேட்கையில் அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.மண்ணின் நிறம் படியாத நீர்- இல்லை அப்படிச் சொல்வதற்கில்லை-குடத்தில் மொள்ளும் போதும்,வீட்டில் சேமித்து வைக்கும் போதும் அந்த நிறம் சற்றே தெரியத்தான் தெரிகிறது;கைகளில் அள்ளும் போதுதான் மாயமாகிவிடுகிறது.இடுக்கின் வழியே மாயமாகும் நிறமற்ற நீர்.

நான் இந்த ஊருக்கு வந்து ஒரு வாரமாகிவிட்டது. என் விடுமுறை முடியப் போகிறது.நான் பணியில் மீண்டும் சேர்வதா அல்லது மருத்துவரைப் பார்ப்பதா?அம்மா முதலாவதையும், நான் இரண்டாவதையும் தேர்ந்தெடுக்கும் மனநிலையில் இருக்கிறோம். ஆனாலும் என்னுடைய தேர்வு எனக்குக் குழப்பமாக இருக்கிறது.இப்படியெல்லாம் சிந்தித்துக்கொண்டேவந்தவன் கால் போன போக்கில் குயவர் தெருவிற்குள் வந்துவிட்டேன்.மண் வனைந்து வனைந்து பாண்டமாவது என்ன ஒரு விந்தை! நேர்த்தியாக, மிக நேர்த்தியாக சுழன்று சுழன்று வரும் சக்கரத்தின் மேலே உருவாகும் ஒரு பிம்பம்-ஓ, என்னைப் பார்த்து அவர் கவனம் சற்றே கலைய திறமையான விரல்கள் இலாவகமாகப் பிடித்தாலும் பானை உரு மாறியது.ஆனால், அவரோ சிரித்துக் கொண்டே ‘‘பானயை நெனைச்சேன், கலயத்தைப் புடிச்சேன்,எதுவானா என்ன அதததுக்கு தக்கின பயன்’’என்றார். எதுவானால் என்ன என்று எதையும் விட்டுவிட முடியுமா?

முடியும் போலும்.அப்படித்தான் கடவுள் என்னை விட்டு விட்டார். அவர் என்னை வனைந்த போது குறுக்கிட்டது எது அல்லது யார்? என்னை பானையாகப் பிடிக்க நினைத்தாரா, நான் தான் கலயமாகி விட்டேனா? வனையப்பட்ட பொருளுக்கு அந்த உரிமை உள்ளதா என்ன?

“என்ன தம்பி, ரொம்ப யோசிச்சிக்கிட்டு நின்னுட்டீங்க.இது ஏற்பட்றதுதான்,நாங்க உரு மாத்துவோம்,இல்ல அழிச்சி செய்வோம்,ஏதோ ஒப்பேத்தணுமில்ல.”

‘ஏங்க, கடமெல்லாம் இதில செய்வீங்களா?’

அவர் சிரித்தார். ’ஏல மூக்கையா, தம்பிக்கு மண்ணெல்லாம் ஒன்னு போலிருக்கு.கரம்பக் காட்டையும்,களிமண்ணு நிலத்தையும், செம்மண் பூமியையும், கரிசல் காட்டையும் ஒண்ணா பாக்குது’

‘அதுடவுன்லேந்து வந்திருக்கு.அதுக்கு இன்னா தெரியும்?நாமள்ள சொல்லோணும்’

“அதுவும் செரித்தான்.மண்ணுக்கு மரபுண்டு, குணமுண்டு, இன்ன இன்ன நெலத்துல நான் இப்படீப்படி வருவேன்னு அது சொல்லும் தம்பி.அதை விட்டுப் போட்டு அதுங்குணத்தை நாம மாத்தக்கூடாது.அது சரி தம்பி, கடம் வேணுங்களா உங்களுக்கு?தட்ட வருமா?’

‘இல்லீங்க, சும்மா தெரிஞ்சுக்க கேட்டேன். நா வரேணுங்க”

அப்படியென்றால் இரு வேறு மண்ணெடுத்து என்னை அந்தக் கடவுள் எப்படிக் கடைந்தான்? கடமுமில்லை, பானையுமில்லை ஆனால், இரண்டும் இருக்கிறதே என்னிடம்.

“இரண்டில் ஒன்று, நீ என்னிடம் சொல்லு என்ன விட்டு வேறுயாரு உன்னைத் தொடுவார்” என்று பாலு டீக்கடையிலிருந்து பாடிக்கொண்டிருந்தார்.அங்கே பெஞ்சில் அமர்ந்திருந்த கூட்டத்தில் என்னை சிறிது நேரம் தொலைக்க விரும்பி ‘கட்ட சாய்’ எனச் சொல்லிவிட்டு அமர்ந்து கொண்டேன். பாலு மீண்டும் பல்லவிக்கு வந்து’இரண்டில் ஒன்று’ என்றார்.கதர் சட்டையும், பெரிய பெரிய பூக்கள் போட்ட கைலியுமாக இருந்தவர் ‘ஏன்யா, பழசான பாட்டத்தான் போடுவியா?’என்றார்.

“உன்னயெல்லாம் உக்காரவுட்டதே தப்பு;நீ ஏதும் பொருத்தமா ட்ரஸ் போட்ருக்கியா, கதர் சட்டயும், கைலியும் இதில பாட்டு பழசாம்,பெரிசா சொல்லவந்துட்டாரு.என்னைக்கும் உள்ள பாட்டுய்யா,என்ன சார் நாஞ் சொல்றது?” கடைக்காரர் திடீரென என்னைக் கேட்பார் என நான் நினைக்கவில்லை.மையமாகச் சிரித்தேன்.

ஆனால், அகிலா என்னைக் கேட்டாள், இரண்டில் நீ எது என்று. நீ ஈரிதழ் சிட்டா என்றும் சினந்தாள். கடுமையான கோடை அப்பொழுது; மேற்கே பார்த்திருந்த வீட்டில் சூரியன் மறைந்த பிறகும் அவன் ஆதிக்கத்தின் தாக்கம் மிகுந்திருந்தது. காற்றை அவன்தான் கைது செய்திருக்க வேண்டும்; விடுவிக்க மனமில்லை இன்னமும் அவனுக்கு. உடல் ஆடைகளிலிருந்து விடுதலை கேட்டது.

’மால தீபாராதன பாக்கப் போறேன். நீ எங்கியாவது போறதுன்னா,சாவிய வழக்கமான இடத்ல வச்சிடு’ என்று அம்மா கோயிலுக்குப் போய்விட்டாள். சற்று காற்றாட இருக்கலாம் என்று உடுப்பைக் கழற்றிவிட்டு இடையில் ஓரிழை துண்டைக் கட்டிக் கொண்டு நாவலுடன் உட்கார்ந்துவிட்டேன். அதில் தொலைந்து போனவன், கதவு திறந்திருப்பதையோ, அருகில் அகிலா நின்றிருப்பதையோ முதலில் கவனிக்கவில்லை.பதட்டத்துடன் எழுந்தவன் பரபரப்போடு ஆடைகளை அணிந்து கொண்டேன். அவள்  முகம் அதிர்ச்சி, அருவெறுப்பு, கோபமென பல உணர்வுகளைக் காட்டியது. வாயிலை நோக்கி வேகமாகப் போனவளை தடுத்துப் பிடித்தேன்.சீறினாள், என் கையை உதறினாள்; ’தொடாதே,கரப்பான் ஊர்ற மாரி இருக்கு’ என்றாள். என்னால் எதுவும் பேச முடியவில்லை. ஆனால், அவள் தொடர்ந்தாள்.

’ஏன்?ஏன்? நீயார், இரண்டில் எது நீ?’

தன்னிலையச் சீண்டும் இந்தக் கேள்விக்கு எனக்கு கோபம்தான் வந்திருக்க வேண்டும்; ஆனால், அழுகைதான் வந்தது. அவள் வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள். சிறிது நேரம் கழித்து ஒன்றுமே சொல்லாமல் போய் விட்டாள். நான் இடிந்து போய் உட்கார்ந்துவிட்டேன்.

மறு நாள் மாலை அலுவலகத்திற்கு வந்தவள்’வா என்னோடு’ என்றாள். ’எங்கே’என்றேன்.

“மருத்துவரை சந்திக்கப் போகிறோம்”

‘எதற்கு?’

“உன்ன அவர் பாக்கட்டும்”

‘என்ன எதுக்கு அவர் பாக்கணும்?’

“பின்ன,உன் பிரச்சன என்னன்னு தெரியணுமில்ல”

‘கண்டபடி கற்பன பண்ணாத; எனக்கு ஒண்ணுமில்ல’

“அத அவரு சொல்லட்டம்”

‘நான் இதுக்கெல்லாம் ஒத்துக்கமாட்டேன்.உனக்கு இப்படியெல்லாம் எங்கிட்ட பேச வெக்கமே இல்லியா? என்ன ரொம்ப காயப்படுத்தற’

“நான் உனக்கு நல்லதுதான் சொல்றன்.வெக்கப்பட என்ன இருக்கு இதில? ”

‘ இல்ல, உனக்குப் புரியல்ல, நீ சந்தேகப்படற.உங்கிட்ட என்ன நா ஏன் நிரூபிச்சுக்கணும்?பலிகடாவாக நா தயாரில்ல’

“புரிஞ்சுக்க, நா மொத்தமா உன்ன வுட்டுப் போயிடுவேன், நீ ஒத்துக்கலைன்னாக்க”

‘போ,போ,நல்லவேள, கல்யாணம் நடக்கல, உன்ன வச்சு குடும்பம் நடத்தமுடியாது தாயீ, நாம ஏதோ சந்திச்சோம்,பிடிச்சிருந்திச்சு, பழகினோம், இப்ப வெலகறோம், அவ்ளவ்தான்’

“அவ்ளோதானா,சரி, எனக்கு நல்ல காலம் போல.”

அவள் பிரிந்து போனாள்; அவளுக்குக் கல்யாணமும் ஆயிற்று.நான் போகவில்லை; ஆனால், அவளைக் கேட்க வேண்டும் போலிருந்தது-இந்த உன் மாப்பிள்ளையை எப்படித் தேர்ந்தெடுத்தாய் என்று.

வீட்டில் என்னையும் மீறி விக்கி அழும்போது அம்மாவிற்கும் தெரிய வந்தது.ஆறுதல் சொன்னாள் அம்மா. ஆனால் ‘விட்றா, நான் நூறு பொண்ண கொண்டு வந்து நிறத்தறேன், கவலப்படாதே ’என்று சொல்லவில்லை.அம்மாவும் உணர்ந்திருக்கிறாளோ? எனக்குப் புரியவில்லை. சுண்டிய நாணயத்தில் பூவும் இல்லாமல், தலையும் இல்லாமல் நெட்டுக்குத்தாய் நிற்கும் ஒரு பகடையாட்டம்; அமைந்து இருக்கையில் பூவும் இருக்கிறதே, தலையும் இருக்கிறதே;நிலவின் மறைந்த மறுபக்கம் எனக்குத் தெரிகிறதே- யாரிடம் சொல்ல  முடியும், யாரைக் கேட்க முடியும்?

ஆசாபாசங்கள் அனைவருக்கும் பொதுவில் ஏற்படுவதில்லையா? உள்ளின் உள்ளாக என்னில் பொதிந்துள்ள என் உருவை மறுத்து, நான் விரும்பாத, நான் நம்ப மறுத்ததை ஏதோ ஒரு மருத்துவ பரிசோதனை காட்டிவிட்டால் நான் என்ன செய்வேன்? அதுதான் உண்மை என்று என்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? அதன்படி ஒரு புதுத் தோற்றம் பெற்றுக் கொள்ள முடியுமா? மனம் ஒன்று உடல் ஒன்றாக உலா வர முடியுமா?

கேள்விகள், கேள்விகள், சூழும் கேள்விகள்,பதிலுக்குப் பயப்படும் கேள்விகள்; விடை தெரியாத கேள்விகள் எவ்வளவோ பரவாயில்லை. நேர்ப்பட்டுவிடுமோ என்ற அச்சத்துடன் பதிலை அணுக என்னால் முடியுமா?

“வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுன்னு இருக்கணும்,சரி பாத்து அடிக்கணும்,கண் அளக்க, கை விரையணும்,இல்லேன்னா வெட்டவே வரக் கூடாது” தெருவில் இரு மர ஆசாரிகள் பேசிக்கொண்டே என்னைக் கடந்து சென்றார்கள்.

அம்மா அதைத்தான் சொல்லாமல் சொல்லிவிட்டாள். ’நா இருக்கேன் உனக்கு, நீ இருக்க எனக்கு, இப்படியே இருந்துடுவோம்டா’

எனக்கு வாய் விட்டுச் சொல்ல வரவில்லை. திரிசங்கு சொர்க்கம் இதுதானோ?

 

வேலி- கமல தேவி சிறுகதை

கமல தேவி

காற்றை வடிகட்டும் கண்களுக்குத் தெரியாத அலைகளால் ஆன வலையை சில ஊர்களைச் சுற்றி அமைக்கும் பணியின் இறுதிக் கட்டத்தை நெருங்கியிருந்தார்கள். அப்பொழுது  த்வரிதாவிற்கு பத்து வயதுக்கு மேல்  இருக்கலாம்.

“வீட்லயே இருக்கனும் த்வரிதா…” என்பதை கேட்டுக் கேட்டு சலித்தாள். அவளின் கூட்டாளிகளும் அவ்வாறே வீட்டிற்குள் வைக்கப்பட்டார்கள்.

விலைமதிப்பில்லாத அந்தத் திட்டம் நகர்களை சமைக்கும் அமைப்பின் சாதனைகளின் சிகரம் என்பதால் அதை வடிகட்டிய காற்றின் அலைகளில் பதிக்கும் பணியும் விரைந்து நடந்து கொண்டிருந்தது.

நவீன வாழ்வின் அத்தனை அம்சங்களும் இருந்தாலும் அவர்கள் கொஞ்சம் தள்ளியே இருந்தார்கள். அது மேட்டுநிலப் பகுதி.நீர் நிற்காத நிலம். ஆனால் ஊற்றுகள் எங்கும் இருந்தன. அவர்கள் இயற்கையோடு நின்று பெற்று வாழ்ந்தார்கள். அந்த இயற்கை ஒரு உள்ளங்கை போல விரிந்து தன்னை காண்பித்து ஈர்த்தபடி இருந்தது. அதன் ஆழத்தில் உள்ளதன் சாரமென அது விரிந்திருந்தது.

அன்றாட செயல்களில் இருந்த ஊர்களில், மெதுவாக மெல்லிய அறியாத கெட்ட வாசனை காற்றில் கலப்பதைப் போல புரளிகள் பரவி சூழ்ந்தன. எங்கிருந்தோ ஆபத்து என்று பேசிப் பேசி அது இல்லாமலேயே அதை அருகில் கண்டார்கள். த்வரிதாவின் கண்கள் காணவே ஒரு மாயத்திரை ஓவியத்தை மெல்ல மெல்ல கலைத்து விரித்ததைப் போல சூழல் மாறிக் கொண்டிருந்தது.

“நாளைக்கு என்ன நடக்குமோ என்ற கேள்வி,” இயல்பிலிருந்து எச்சரிக்கைக்கு மாறியது. அது பேரச்சமாக மாறி சூழ்ந்ததும், மனிதர்கள் எதைப் பற்றியும் சிந்திக்காமல் அதைப் பற்றியே சிந்தித்தார்கள். அந்தத் தருணத்தில் இந்த பாதுகாப்பு வலை மிகப்பெரிய ஆசுவாசமாக இருந்தது. அவர்கள் அந்தவலை போலவே பூமிக்கு அடியில் உருவான இன்னொரு பாதையை அறியவே இல்லை.

ஒவ்வொரு முறையும் வடிகட்டிய காற்றின் புதியஅலை கடந்து செல்கையில் அரசின் சாதனை மென்மையாக காதுகளில் ஒருமுறை ஒலித்துச் செல்வதாக இருந்ததால் த்வரிதா தோள்களை குறுக்கி கண்களை மூடிக் கொண்டு சிரித்தாள்.

என்றைக்கு பக்கத்து நகரத்து அரசு தன் நுண்ணுயிர் ஆயுதத்தை பரப்பும் என்று அறிய தீவிரமாக ஒற்று வேலை நடந்தது. நகரின் மேல் பறந்த நுண் ஒற்றனான செயலி அளித்த கணிப்பு நாளிற்கு முன், வேலைகள் முடியும் களிப்பு அறிஞர்களிடம் இருந்தது.

இரு ஆண்டுகளில் ஊர்கள் இணைந்து மெல்ல மெல்ல ஒரு நகரமாகிக் கொண்டிருந்தது. மனிதர்களும் மாறிக் கொண்டிருந்தார்கள். புது ஆட்கள் குடியேறினார்கள்.

த்வரிதா சுற்றுலா வந்த இடத்திலேயே நிரந்தரமாக தங்கிவிட்டதைப் போன்ற மனநிலையில் இருந்தாள். தன் வீடு எங்கோ இருப்பதான ஒரு பிரமை அவளுக்கு எப்போதும் இருந்தது. உறங்கி விழிக்கையில் எங்கிருக்கிறேன் என்ற எண்ணம் அகன்றபின் இதயம் படபடக்கும். ஒருவாறு ‘நம்ம வீடு தான்….நம்ம வீடுதான்,” என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்வாள்.

பயன் தரும் கால்நடைகளுக்கு மட்டும் நகரின் எல்லையில் வாழிடம் உருவாக்கப்பட்டிருந்தது. தன் வீட்டு பப்பியை நகர்அமைப்பின் ஆட்கள் அழைத்துச் செல்கையில் அவள் கலாட்டா செய்ததால் அவள் மனநலமருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள்.

மருத்துவர், “ஏன் இவ்வளவு சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி இல்லாமல் இருக்கிறாய்,”என்று சர்வைவல் ஆப் பிட்டஸ்ட் பற்றி நிறைய பேசினார்.

“பப்பி யாரையும் எதுவும் செய்யாது,” என்றாள்.

“நம்ம சிட்டிக்கு மைக்ரோ வெப்பன்ஸ்ஸால வார் வரப்போறது தெரியாதா?”

“ம்”

“உன்னோட பப்பி அதோட கேரியரா இருக்க வாய்ப்பிருக்கு,”

“அப்ப நானும் கேரியரா?”

“இவளுக்கு ஆங்சைட்டி லெவல் கூடுதல். கவுன்சிலிங்கோடு மருந்துகள் கொடுக்கனும்,”என்று இன்னொருவரிடம் அனுப்பி வைத்தார்.

வீட்டில் இதனால் அம்மா, அப்பா பயந்திருந்ததாலும், மாத்திரைகளின் தொல்லையாலும் அவள் பப்பியை மனதிற்குள் புதைத்தாள்.

பயனுள்ள கால்நடைகளை குரலி மூலமும், எங்கோ இருந்து கொடுக்கப்படும் தங்களுக்கான ஆணைகளால் செயல்கள் மூலமாகவும் ரோபோக்கள் பராமரித்தன. மனிதர்களும் அவ்வாறு இடம் மாற்றப்பட்டார்கள்.

எங்கோ தொலைவில் விவசாயம் என்னும் தொழில் நட்புநகரத்தில் நடந்து கொண்டிருந்தது. இத்தனை தொழில் நுட்பங்கள் வந்தும் அது எங்கே என்பது தெரியாததாக இருந்தது. அங்கிருந்து கொண்டு வரப்பட்ட உணவுப்பொருட்கள் செரிவாக்கப்பட்டு சமைக்கப்பட்டு அங்காடிகளில் கிடைத்தன. நகரின் புறவழிகள் மெல்ல மெல்ல காணாமல் போயின.

மக்கள் நகருக்குள் அன்றாடமும், திரும்பத் திரும்ப ஒன்று போல் ஒரே வேலையை வெவ்வேறாக செய்து கொண்டிருந்தார்கள். மாதம் ஒருமுறை அவர்கள் செய்யும் வேலையின் மகத்துவம் புகழப்பட்டு அவர்களின் பொறுப்புணர்வு பாராட்டப்பட்டது. அனைவரும் ஏதோ ஒரு வேலையில் இருந்தார்கள். ஆனால் தாங்கள் செய்யும் வேலையைப் பற்றி அவர்கள் அறியவில்லை. முழு வேலையின் ஏதோ ஒருப் பகுதியை செய்தார்கள்.

த்வரிதா சமையலறையாக இருந்து, பழைய பொருட்கள் அடைக்கும் இடமாகிப்போன அறையை மாற்ற விரும்பினாள். அம்மாவின் நினைவாக அங்கு எதாவது செய்யலாம் என்று நினைத்திருந்தாள். அவள் கணவன் பிள்ளைகளுக்காக புதிதாக வாங்கியிருந்த ரோபோ விளையாட்டுக் கூடத்தை அங்கு அமைக்கலாம் என வாதிட்டான்.

நுண்ணுயிரி போர் தொடங்கலாம் என யூகிக்கப்பட்டு மூன்று தலைமுறைகள் கடந்திருந்தன. அது இன்று வரலாம் என்பதே நிரந்தர கணிப்பாக இருந்தது. த்வரிதா தன் பேரப்பிள்ளைகளுடன் விரிவு செய்து மாற்றப்பட்ட அதே வீட்டிலிருந்தாள். வீடுகள் அடுக்குகளாக உயர்ந்தன. வானம் பார்த்தல் கூட அரிதாகிப்போன சமூகமாக ஆனார்கள்.

அவளின் சிறுவயதில் சமையலறையாக இருந்த அந்த அறை அவளுக்கு ஒதுக்கப்பட்டது. தரைதளத்தில் வெளியில் சென்று நிற்க வசதியாக இருந்தது. அவள் தன் காலத்திய மொபைல் ஒன்றை எப்போதும் கையில் வைத்திருப்பதற்காக அனைவராலும் கேலி செய்யப்பட்டாள்.

அவள் தன் அறைக்கு வெளியிலிருந்த சிற்றிடத்தில் நாற்காலி போன்ற காற்று மெத்தையில் அமர்ந்தாள். வாகனங்கள் போவதும் வருவதும் தெளிவற்று கண்களுக்குத் தெரிந்தது. ஒலியில்லாத நகர்வு எப்போதும் அவளை பயப்படுத்தியது. எனவே அவள் அடிக்கடி தன் கேட்கும் தன்மையை சோதித்துக் கொண்டாள். அவளின் நடவடிக்கையை கண்ட மகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள்.

மருத்துவர்கள் , “அம்மாவுக்கு சென்ற தலைமுறை ஆட்களுக்குரிய ஆங்சைட்டி ,” என்றதும் த்வரிதா புன்னகைத்து, “அதனால் எனக்குப் பெரிய பிரச்சனையில்லை,”என்றாள். உள்ளுக்குள் மாத்திரைகளில் இருந்து தப்பித்த நிம்மதி இருந்தது.

த்வரிதா ஒன்றுபோல மாற்றப்பட்டிருந்த சாலைகளில் அதன் கிளைவழிகளில் குழம்பினாள். அவளின் தோழியின் வீட்டின் மல்லிகைச்செடி அகற்றப்பட்டதிலிருந்து அங்கு செல்லும் ஒவ்வொரு முறையும் மாறிவிடக்கூடாது என்ற எண்ணமே அங்கு செல்வதை நாள்போக்கில் நிறுத்தியது.

த்வரிதா பெயரனுடன் நெருக்கமாக இருந்தாள். அவனுக்கு தினமும் கதைகள் சொன்னாள். அந்தக் கதைகளில், அவள் பால்யத்திலிருந்த இந்தஊரின் கதையும் இருந்தது. அவன் இளைஞனான பின் பலக்கதைகள் சொன்னான். அந்தக் கதைகள் என்ன என்று புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் த்வரிதா அவனுடனிருப்பதற்காகக் கேட்டாள். படங்களைக் காண்பித்தான். அன்றும் அப்படித்தான் த்வரிதாவிடம் அவளின்  பெயரன், சில புதுவகையான அனிமேசன் படங்களைக் காட்டினான். காற்றில் மிதக்கும் அவற்றைப் பார்க்க சிரமமாக இருந்தாலும் த்வரிதா ஆசையாகப் பார்த்தாள்.

மதிய நேரங்களில் இவளின் அருகில் அமர்ந்து அனிமேஷன் படங்களைப் பார்த்த ஹரீஸ்க்கு மிகுந்த உற்சாகமாக இருந்தது. எதுவும் அனைத்து மனிதர்களுக்கும் ஒன்று போல அல்ல என்பதே அந்தப்படங்களில் அவனுக்கு வசீகரமானதாக இருந்தது. அவன் நண்பர்களுடன் பகிர்ந்தான்.

சிலர் முன்பே தெரிந்து வைத்திருந்தனர். அவர்கள் அந்தப்படங்களில் வந்த அந்தகாலத்தைக் கனவு கண்டார்கள். அந்தக் கனவுகளை பகிர்ந்து மகிழ்ந்தார்கள். நாள்போக்கில் கனவென்றில்லாமல் அவர்கள் நினைப்பதையே கனவுபோல சொல்லி மகிழ்ந்தார்கள். விதவிதமான கதைகள் அந்திவானில் பரவும் வண்ணங்கள் என பரவின. அந்த வண்ணங்களில் தங்களின் சிந்தையில் நின்ற வண்ணத்தை எடுத்து தங்கள் கனவில் பரப்பினர்.

இந்த நகரில் வாகனத்தை ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கப்படுவதைப் போல பதின் பருவத்தினர் தங்களை உணர, தங்களை புரிந்து கொள்ள பழக்கப் படுத்தப்பட்டார்கள். ஹார்மோன்களின் வேலைகளை புரிந்து கொண்டு தங்களை வழிநடத்திக் கொள்வதன் மூலம் நகரில் வன்முறையை முற்றாக ஒழிப்பது கடமையாக கொள்ளப்பட்டது. அனைத்திற்கும் மேலாக அவர்கள் எதையோ இழந்ததை உணரும் தருணங்களில் பொழுதுபோக்குக் கூடங்களில் கழித்தார்கள்.

அந்தக் கதைகளின் வழியே மேடும் பள்ளமும் இல்லாத அவர்களின் நகரத்தின்  சாலைகளில் செம்புலம் எழுந்துவந்தது. அவர்களின் கனவுகளுக்கு சிறகளித்தது. கனவுகள் மனதை பறக்க உந்தின. ஒரே விதமான வெப்பநிலை பேணப்பட்ட நகரின் கனவுகளில் கோடையும், பனியும், மழையும் மாற்றி மாற்றி உணரப்பட்டன.

அரசு விபரீதத்தை உணர்ந்து சட்டங்களை உருவாக்கி அந்தக் கதைகளை பேச தடை விதித்தது. பழைய பாடல்களில் இருந்து அந்தக் கதைகள் எழுந்து வந்திருக்கலாம் என யூகித்தது. உளவியல் நிபுணர்களைக் கொண்டு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்தது. நகருக்கு வெளியே ஒன்றுமில்லை என்று விதவிதமான விளம்பரங்களை வெளியிட்டு அவை எப்போதும் மக்களின் கண்களில் படும்படி பார்த்துக் கொண்டது.

பொதுவெளியிலிருந்து அந்தக்கதைகள் அகற்றப்பட்டன. எனினும் அவர்கள் சந்தித்துக் கொள்கையில் பேசிக்கொண்டார்கள். தங்களின் தனிப்பட்ட எழுதியில் பதிய வைத்தார்கள். வீட்டிற்குள் பேசப்பட்டு கொண்டன. முதிய தலைமுறை, பிள்ளைகள் வெறும் கனவில் ஆழ்ந்து நடைமுறையைத் தொலைத்துவிடக்கூடும் என்றஞ்சி கதைகளை நிறுத்திக் கொண்டார்கள்.

த்வரிதாவிற்கு மனதில் இப்பொழுதெல்லாம் அந்தநிலங்கள், மரங்கள், காலநிலை பற்றிய நினைவுகளும் கனவுகளும் அதிகமாக எழுந்தன. ஹரீஸும், த்வரிதாவும் தங்களுக்குள் அந்தக் கதைகளை பேசிக்கொண்டார்கள்.

அடர்ஆரஞ்சுநிற நிலவெழுந்த அந்தியில் த்வரிதா, “நாம ரெண்டுபேரும் சிட்டியவிட்டு வெளிய போய் பாக்கலாமா?” என்றாள்.

ஹரீஸ், “அங்க என்ன இருக்கும்?” என்று கழுத்தை தேய்த்தபடி வானத்தைப் பார்த்தான்.

“நம்ம கதைகளில் உள்ள இடங்கள் இருக்கலாம்,”என்றபடி கால்விரல்களை மடக்கி மடக்கி நீட்டினாள்.

“அது இமாஜினேசன்,”என்றபடி நடைப்பாதை கம்பியை பிடித்தபடி முன்னும் பின்னும் சாய்ந்து ஆடியபடி சாலையைப் பார்த்தான்.

“இல்ல…எப்பவாவது  இருந்திருக்கும். இந்த நிலாவ நீ பாக்கறதானே?” என்று கண்களை விரித்து சிரித்தாள்.

“ஆமா கிராணி. சரி போய் பாக்கலாம்… நான் என்ன பேக் பண்ணட்டும்?”

“ட்ரஸ், கொஞ்சம் பூட் அண்டு வாட்டர்,” என்றாள்.

அவர்கள் தயாராகி நிறைய நாட்கள் காத்திருந்தார்கள். ஒரு வழியும் புலப்படவில்லை. ஒரு சந்திர கிரகண நாளில் நகரைச் சுற்றியுள்ள பாதுகாப்பு அலைவலை குழையும் என்றும் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் நகரத்தார் எச்சரிக்கப்பட்டார்கள்.

சந்திரகிரகணத்தன்று த்வரிதா, ஹரீஸ் இருவரும் அனைவரும் உறங்கும் நேரத்தில் கிளம்பி எல்லையை அடைந்தார்கள். எங்கிருந்தோ கண்காணிக்கப்படும் உணர்வு அவர்களை எல்லையிலேயே நிறுத்தியது. பார்வையில் எதையும் எதிரொளிக்காத, எதையும் காட்டாத, தானே இல்லாத ஒருமாயத்திரை முன் விதிர்த்து நின்றார்கள்.

த்வரிதாவிற்கு உடல் நடுக்கம் எடுத்தது. கிரகணம் முடிந்து முழுச்சந்திரன் எழுந்திருந்தான். ஹரீஸ் திரும்பி செல்ல எத்தனித்த நொடியில் த்வரிதா நிலைதடுமாறி எல்லைக்கு வெளியில் விழுந்து சிறிது தூரம் சறுக்கினாள். அனிச்சையாக ஹரீஸ் பின்னால் ஓடினான். இருவரும் சிறிது நேரம் அமர்ந்து பின் எழுந்து நடந்தார்கள். நிலவொளியில் காடும், குன்றுகளும், அப்பால் ஊர்களும் விரிந்தன. மேட்டிலிருந்து இறங்கி நடந்தார்கள்.

ஹரீஸ், “நாம ஏன் அங்கயே இருந்தோம்?”என்றான்.

த்வரிதா பேசாமல் புன்னகைத்தாள்.

அடுத்த நாள் இருவர் நகரைவிட்டு வெளியேறிய செய்தி நகர் முழுவதும் பரவியது. மேலிடம் கட்டுப்பாடுகளை அதிகரித்தது. போர் வருமென எச்சரித்து பயம் காட்டியது. வசதிகளை அதிகப்படுத்தி அனைத்தையும் மாற்றியமைத்தது. ஆனால் நகரிலிருந்து மக்கள் காணாமலாகிக் கொண்டிருப்பதை கட்டுப்படுத்த இயலவில்லை. அவர்கள் புதிய கதைகளை சொல்லத் தொடங்கினார்கள்.