Author: பதாகை

கே.ஜே.அசோக் குமாரின் ‘குதிரை மரம்’ – செமிகோலன்

செமிகோலன் 

கே.ஜே.அசோக் குமாரின் ‘குதிரை மரம்’ தொகுப்பிலுள்ள ‘மண் புழுவின் ஐந்து ஜோடி இதயங்கள்’ கதையை வாசித்துக் கொண்டிருக்கும் போதும், வாசித்து முடித்த பின்பும், மனதில் ‘Nature vs nurture’ விவாதம் குறித்த சிந்தனைகள் இருந்தன. கதைசொல்லி தன் மகனுடன் விளையாடச் செல்லும் இடத்தில் சந்திக்கும் சிறுவனைப் பற்றிய இந்தக் கதை, முடிந்த பின்பும் வாசகனை அதன் நீட்சியை, அதன் சாத்தியக் கூறுகளை பற்றி யோசிக்கத் தூண்டுகிறது. மகனுடனான கதைசொல்லியின் கிரிக்கெட் ஆட்டத்தில் இறைஞ்சி சேர்ந்து கொள்ளும் சிறுவன் ஒழுங்காகவே விளையாடுகிறான். சராசரியானவன் போல் வாசகனுக்கு தோற்றமளிக்கும் அவன், விளையாட்டு முடிந்தவுடன் , நாயொன்றை வதைக்கிறான், பின் அந்துபூச்சியோன்றின் காலை பிய்த்து எறிகிறான். அந்த வயதில் நிறைய சிறுவர்கள் ஈடுபடும் எந்த காரணமற்ற -வயதாக வயதாக நின்றுவிடும் – வன்முறை என்று இதை பார்க்க முடியாது. சிறுவனுக்கு மாறிக் கொண்டேயிருக்கும் மனநிலை. பூச்சியை பிய்தெறிந்த பின் சாதாரணமாக பேசிக் கொண்டிருப்பவன், கிளம்ப எத்தனிக்கும் கதை சொல்லியுடன் அவர் வீட்டிற்கு வந்து விளையாடுவதாக கூறுகிறான். பின் அவர்கள் விளையாட உபயோகித்த பந்தை எடுத்துக் கொண்டு ஓடுகிறான். சிறுவனின் தாத்தா, தன் மருமகன் -அவனுடைய தந்தை- குறித்து, நிரம்ப வன்முறை மனநிலை கொண்டவன் என்று கூறுவதை சிறுவனின் செயலுடன், -அவனுடைய இயல்பான மனநிலையே அது தான்/nature -பொருத்திக் பார்க்கலாம். சிறுவனை எந்த நல்ல குணமும் இல்லாத மோசமானவனாகவே தாத்தா சித்தரிப்பது, இறுதியில் அவனுடைய தாய் அவனை அடிப்பது, வளர்ப்புடன்/nurture பொருத்தலாம். சிறுவன் கதைசொல்லியை இறைஞ்சும் கண்களோடு பார்ப்பதோடு கதை முடிந்தாலும், கதை சொல்லி அதன் பின் அவனை எப்போதும் சந்திக்காமல் இருக்கக் கூடும், அதன் பின்னான அவன் முழு வாழ்க்கையையும் வாசகன் எண்ணிப் பார்க்கிறான்.

கதை முடிந்த பின்னான கதையை குறித்து யோசிக்கத் தூண்டும் மற்றொரு புனைவு ‘கணக்கு’. கணக்கு ட்யூஷனுக்கு செல்ல நிர்பந்திக்கப்படும் கல்லூரி படிக்கும் விஜி. ட்யுஷன் ஆசிரியர் ஆர்கே, மிகவும் புகழ் பெற்றவர், சிறப்பாக சொல்லிப் கொடுப்பவர் என்றாலும், அவருக்கு இரு மனைவிகள் என்பது விஜிக்கு ஒவ்வாமையாக உள்ளது, அதை ஆர்கே உணர்கிறார் என்று சுட்டப்படுகிறது. முதல் முறையாக ட்யூஷனுக்கு செல்லும் அன்று அவருக்கும், விஜிக்கு நடக்கும் உரையாடலுடன் கதை முடிகிறது. ஆர்கே உளவியல் ரீதியாக விஜியை சீண்டுகிறாரோ என்று எண்ண வைக்கும் இந்த உரையாடல், தொடர்ந்தும் அவ்வாறே அவர் நடந்து கொள்வாரா, அதை விஜி எப்படி எதிர் கொள்வாள் போன்ற கேள்விகளை எழுப்புகிறது.

அலர்’, கதைசொல்லியின் தெருவில் வசிக்கும் தம்பதி இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்தேற்பட்டு மனைவி இறந்து விட்டார் என்ற செய்தியுடன் ஆரம்பிக்கிறது . வண்டியை ஓட்டிய கணவரின் அஜாக்கிரதையால் தான் இது நேர்ந்தது என்று தெருவில் பேச்சு, அத்துடன் அந்தக் கணவன் எப்போதுமே மனைவியிடன் கடுமையாகத் தான் நடந்து கொண்டான் என்பது போன்ற பழங்காலக் கதைகள் தூசி தட்டப் படுகின்றன. எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருக்கும் கதைசொல்லி, மரணம் நடந்த வீட்டிற்கு செல்ல நினைக்கிறான். இதுவரை வாசகன் நேரடியாக சந்திக்காத அந்தக் கணவன், மொத்தத் தெருவின் தீர்ப்பால் , எத்தகையை குற்றவுணர்ச்சியில் மூழ்கியிருப்பான், எப்படி மறுகிக் கொண்டிருக்கிறான் என்று எண்ணிக் கொண்டிருக்கையில், திருப்பம் வருகிறது. அது கதையின் தலைப்பிற்கு பொருத்தமாக, பொது மனநிலையை சுட்டுவதாக இருந்தாலும், அதுவரையிருந்த கதையின் போக்கை, அதன் மையம் என்று வாசகன் எண்ணியிருந்ததை விட்டு விலகி, சிறிது நீர்க்கச் செய்கிறதோ என தோன்றுகிறது.

பெரு வணிக காய்கறி/கனி கூடங்களில், அதிகபட்சம் ஒரு சிறு புன்னகையை மட்டும் பரிமாறிக் கொண்டு பொருட்கள் வாங்கி வரும் இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலும் வழக்கொழிந்து விட்ட, தினசரி வீட்டிற்கு வரும் சிறு காய்கறி/பழ/பூ வியாபாரிகளையும், அவர்களுடனான, வீட்டிலுள்ளவர்களின் உறவு – வியாபாரத்தோடு குடும்பம் பற்றிய பேச்சு, அதிக உரிமை எடுத்துக் கொண்டு பொருட்களை திணிப்பது ஏற்படுத்தும் எரிச்சல் -, அதனூடே வீட்டிலிருக்கும் பெண்ணின் ஒரு பகல் பொழுதை துல்லியமாக சித்தரிக்கிறது ‘புரியாதவர்கள்’ கதை. இறுதி வரி, அதுவரை இருந்த சமநிலையை சிறிது குலைக்கிறதோ என்ற கேள்வி எழுதிகிறது.

ஒரு புனைவு அல்லது கவிதை எங்கு முடிகிறது, எப்படி முடிய வேண்டும் அதன் பின்னரும் அதை இழுத்துச் செல்ல வேண்டுமா என்று வாசகனுக்கு இயல்பாக தோன்றக் கூடிய ஒன்று தான். எழுத்தாளர் அவர் எண்ணிய கதையை – நாம் நினைப்பதை அல்ல – தான் எழுதியிருக்கிறார் என்றாலும் இத்தகைய எண்ணங்கள் தவிர்க்க முடியாதவை – நாம் விரும்பும், நம்மை ஈர்க்கும் படைப்புக்களிலும் – என்று தோன்றுகிறது.

தொழிலின் நசிவு, அதனூடே ஒரு வாழ்க்கை முறையின் முடிவு, சுயத்தின் அழிவு போன்ற இழைகள் ‘குதிரை மரம்’ நெடுங்கதை/குறுநாவலில் இருந்தாலும், இயலாமையின் துயரத்தை வாசகன் உணர முடிகிறது. மகனை பள்ளிக்கு தயார் செய்து கொண்டிருக்கும் பிரபுவிடம், அவன் மனைவி வத்சலா கோபமாக பேசிச் செல்ல,. வத்சலாவின் உறவினருடன் வேலைக்கு செல்ல நேர்கிறது. அங்கு ஒரு சூழலில், பிரபுவிற்கு தெரிந்தவர் முன், உறவினர் கடுமையாக பேசி விடுகிறார். அவமானப்படுதல் என்பது எப்போதுமே குறுகச் செய்வது தான் என்றாலும், தெரிந்தவர் முன், தெரிந்தவர்களால் முன் சிறிய இழிவுகள் கூட அதீத அளவிற்கு ஒருவனை சிறுமைப்படுத்தக் கூடியது. இந்தச் சூழலில், தன்னை விட்டு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் காலத்தை பிடிக்க முயற்சிக்கும் பிரபு, மீண்டும் தன் தொழிலை, வாழ்க்கை முறையை, சுயத்தை மீட்டெடுப்பானா ஒரு புறமிருந்தாலும், தோல்வியடைந்தாலும் கூட அவனை இந்த முயற்சி மட்டுமே சிறிதளவேனும் ஆற்றுப்படுத்தும், தன்னிருப்பை அவனுக்கே நியாயப்படுத்தும்.

எஞ்சும் இருள்’ கதையில், ஒரு சாதாரண பால்ய நிகழ்வு திரும்பத் திரும்ப சொல்லப்படுவதால் கதைசொல்லிக்கு ஏற்படும் சலிப்பு, ‘தற்கொலை முகம்’ கதையில், டாக்டரின் வாழ்க்கை வெளிப்படும் விதம் இவற்றை இந்தத் தொகுப்பின் கதைகளின் ஒரு பொது இழையாக கொள்ளலாம். வெவ்வேறு களங்களில் நிகழ்ந்தாலும், வேறுபட்ட பேசுபொருளை கொண்டிருந்தாலும், ஒன்றுமில்லாதது போல் முதலில் தோற்றமளிக்கும் நிகழ்வுகள் வேறு உருக்கொள்ளும் கணங்களின், இயல்பாக இருக்கும் மனநிலையில் விழும் கீறல்களின் நெசவு இந்தத் தொகுப்பு.

புத்தகன்

 

தேஜூசிவன்

 

குறையொன்றுமில்லை மறைமூர்த்திக் கண்ணா

மொபைல் பாடியது.

“என்ன ராம், எப்டி இருக்கே?”

“அது இருக்கட்டும் ரகு. அந்தப் பையன் ஃபோனை எடுக்கவே மாட்டேங்குறான்.”

“எந்தப் பையன்?”

“கிறிஸ்டோஃபர்.”

“ஓ.. உனக்கு விஷயம் தெரியாதா?’

“என்ன?”

“அவன் அப்பா திடீர்னு தீ பிடிச்சு எரிஞ்சுட்டார்.”

“வாட்?”

“ஆமாம். முந்தா நாள் நைட்.  எப்டின்னே தெரில.”

“என்னாச்சு அவருக்கு?”

”எய்ட்டி பெர்செண்ட் பர்ன். நேத்தைக்கு நைட் இறந்துட்டார்.”

”ஓ… மை காட்”.

“என்ன ராம்?”

“அவன உடனே இங்க வரச் சொல்லணுமே.”

“ இப்ப எப்டி அவனால உடனே வர முடியும். அப்படி என்ன உயிர் போற அவசரம்?”

“உயிரு போறதுக்குள்ற வரச் சொல்.”

“என்ன உளர்றே?”

“ஆமாம். எல்லாத்துக்கும் நீ தான் காரணம்.”

”புரியல ராம், என்ன விஷயம்?”

“அவன் ஒரு புத்தகம் என்கிட்ட கொடுத்தானே.”

“ம்… எதோ உலோகத் தகடுல செய்யப் பட்ட புத்தகம். அவனோட அப்பா எங்கிருந்தோ எடுத்துட்டு வந்ததா சொன்னான். ஏதோ புரியாத எழுத்துக்கள் இருந்ததுன்னு கேட்டான். ”

“அந்த புத்தகம் ஒரு மரணப் புத்தகம்.”

“என்ன சொல்றே?”

“ஆமாம்.. அது பாளி மொழியில் எழுதப்பட்ட புத்தகம்.”

“பாலி?”

“நோ. பாளி. ”

“சரி. உன்னால படிக்க முடிஞ்சுதா? அப்டி என்ன எழுதியிருந்தது அதுல?”

“ 29ம் புத்தர் அவதரிப்பார். அவர் விரல் பட்டதும் இந்தப் புத்தகம் ஒளிர்ந்து உயிர் பெற்று எழும்னு இருந்தது.”

“என்ன?”

“நமக்கெல்லாம் தெரிஞ்ச சித்தார்த்தன் என்கிற கெளதம புத்தர் 28வது புத்தர்.”

“ஓ.”

“சரி இருக்கட்டும். அதுக்கு இப்ப என்ன?”

“மத்தவங்க கை பட்டா அவர்கள் ஐந்து நாட்களுக்குள் இறந்து விடுவார்கள். இன்று அந்த புத்தகத்தை நான் வாங்கி ரெண்டாவது நாள்.”

“அப்ப கிறிஸ்டோஃபரோட அப்பா…”

“ஆமாம். ”

“சே… சே… இது ஒரு கோயின்சிடெண்ஸ்.”

“இல்ல… எனக்கு அப்டி தோணலை. அடுத்து கிறிஸ்டோஃபர்.”

“உடனே அந்த புக்கை தூக்கி குப்பைத் தொட்டில வீசியெறி…”

“அப்பவே எறிஞ்சுட்டேன். சரி, எதுக்கும் அவன்கிட்ட பேசிப் பாரு.”

“வை. அவன் கிட்ட பேசிட்டு சொல்றேன்.”

ரிங் போய்க்கொண்டே இருந்தது.

“கிறிஸ்டோஃபர்.”

“யார் சார் நீங்க?”

“ரகுராமன். .. நீங்க?”

”அவனோட அண்ணன். உங்களுக்கு விஷயம் தெரியாதா?”

“தெரியும். அவரோட அப்பா இறந்துட்டாருன்னு கேள்விப்பட்டேன்.”

“அது நேத்தைக்கு. இன்னைக்கு கிரிஸ்டோஃபரும் போய்ட்டான். மாஸிவ் அட்டாக்.”
ரகுராமனுக்கு பயத்தில் நடுங்கியது.

வனரோஜா அவனைக் கை நீட்டி அழைத்தாள்.

மாரி முறைத்துக் கொண்டே வந்தான்.

“இன்னைக்கு திங்கக்கிழமை. லோடு நெறய இருக்கும். என்னால இத தள்ள முடியலை. இன்னைக்கு என்கூட வாயேன்.”

“இந்த குப்பை வண்டி நாறும். நா வர்ல.”

“நீ ஒழுங்கா காசு கொடுத்தா நான் ஏன் இதப் புடிச்சு தள்றேன்.”

“ஒழுங்கா காசு கொடுத்துட்டா நீ உடனே  பத்து மாசத்துல புள்ளய பெத்துக் கொடுத்துடுவியாக்கும்..”

சட்டென உடைந்து அழுதாள்.

“சரி.. சரி.. ஒண்ணும் சொல்லலை. கவலப் படாதே. நம்ப கருப்பன் நம்பள கை விடமாட்டான். கொடு நான் தள்றேன் ரோஜா.”

ஆற்றில் இருகரை தொட்டு தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது.

“இந்தக் கரைல எப்டி தினமும் இந்த வண்டியைத் தள்ளிட்டு போறே ரோஜா?”

“என்ன பண்றது. நல்ல ரோட்டோட போனா சுத்திட்டு போவணும். இது குறுக்கு வழி.”

குப்பைக் கிடங்கில் நாற்றமடிக்கும் சிறு சிறு குன்றுகள்.

”என்னா இந்த வண்டியைத் தள்ளவே முடியல.”

”நல்லா தம் கட்டி தள்ளு. நேத்து மழை பெஞ்சுதுல்ல அதான்.”

வண்டியைச் சாய்க்கும் போது  அது சரிந்து விழுந்தது.

வனரோஜா குனிந்து எடுத்தாள்.

கம்பியில் கோர்க்கப் பட்ட உலோகத் தகடுகள்.

“என்னய்யா இது?”

வாங்கிப் பார்த்தான்.

“புத்தகம் மாதிரி இருக்கு.”

‘ஆமாம். யாராச்சும் தகரத்துல புத்தகம் செய்வாங்களா?”

“அடி லூசு. இது தகரமில்லே. வேற ஏதோ ஒண்ணு. நம்ப பாய் கிட்ட கொடுத்தா சொல்வார்.”

“சரி எடுத்துக்கோ. ஒனக்கு குடிக்க காசு கிடச்சுடுச்சு.”

திரெளபதி அம்மன் படித்துறை அருகில் வரும் போது ஏதோ சப்தம் கேட்டது.

வனரோஜா அவன் கை தொட்டாள்.

“தே… என்னமோ சப்தம் கேக்குதுல்ல…”

நின்றார்கள்.

“ஆமா.”

தேடினார்கள்.

மெலிதான குழந்தை அழுகுரல்.

அவள் தடதடவென படிக்கட்டுகளில் இறங்கினாள்.

தண்ணீரைத் தொட்டுக் கொண்டிருந்த படிக்கட்டில் ஒரு பிரம்புக் கூடை.

அதில் அந்தக் குழந்தை கால்களை உதைத்துக் கொண்டிருந்தது.

“அடிபாதகத்தி.”

அவள் கூவினாள்.

அவன் அவள் வாய் பொத்தினான்.

குழந்தையை அள்ளித் தூக்கினாள்.

அவன் அதட்டினான்.

”ஏய்.. என்னாது? கீழ போடு..”

“புள்ள..”

“தொடாத.. யாருதோ இது.தெரிஞ்சா நமக்கு பிரச்னையாய்டும்.”

“வேண்டான்னு தானே இத இங்க போட்டுருக்கா பாவி. நம்ப எடுத்துக்குவோம்.”

ஏய், என்னா?”

“கூவாத. நம்ப கருப்பன் சாமி கொடுத்தது.”

“வேண்டாம் ரோஜா. வம்பாய்டும்.. “

“அட இத பாரு. எப்டி சிரிக்குது.. யாராவது வந்து கேட்டா கொடுத்துடுவோம்.”

”ஆமா.. போலீசு வந்து தான் கேக்கும்.”

“யோவ். இத நாம வச்சுக்குவோம்.”

மாரி சுற்று முற்றும் பார்த்தான்.

யாருமில்லை.

“கிட்டக்க வா. மறச்சுட்டு போய்டலாம்.”

குழந்தையுடன் அருகில் வந்தாள்.

நெருங்கும் போது குழந்தையின் கை அந்தப் புத்தகத்தின் மீது பட்டது.

வானில் ஓர் இடி.

தீப்பிடித்தது போல் அந்தப் புத்தகம் ஒளிர ஆரம்பித்தது.

”ரோஜா இங்க பாரு.”

பயத்தில் கண்கள் விரிந்தன.

குழந்தை அவர்களைப் பார்த்து மெலிதாகச் சிரித்தது.

“அத… அத… ஆத்துல தூக்கி எறி.”

 

கை உயர்த்தி அந்தப் புத்தகத்தை தூக்கி எறிந்தான்.

மிகச் சரியாக ஆற்றின் மையத்தில் விழுந்து ப்ளக் எனும் சப்தத்துடன் மூழ்க ஆரம்பித்தது.

“வா ஓடிடலாம்.”

வலதுபுறத் தோளில் குழந்தையை மாற்றிக் கொண்டாள்.

அவர்கள் வேகமாக ஓட ஆரம்பித்தார்கள்.

குழந்தை அவள் பின்னங்கழுத்தின் வழியாக நீரோட்டத்தைப் பார்த்துக் கொண்டே வந்தது.

ஆற்றின் மையத்தில் சின்னதாக ஒரு சுழல் மேலெழும்பியது.

நீரிலிருந்து அந்தப் புத்தகம் சரேலென வெளி கிளம்பியது.

அதன் இரு உலோகப் பக்கங்களும் இரு சிறகுகளென விரிந்தன. விர்ர்ரெனும் சப்தத்துடன் அந்தப் புத்தகம் மேலுயர்ந்தது.

லேசாக காற்றிலாடி ஓர் அறுந்த பட்டம் போல் அவர்களைப் பின் தொடர ஆரம்பித்தது.

 

தூய வெண்மையின் பொருளின்மை

காஸ்மிக் தூசி 

தனிமையின் விஷமேறி
நீலம்பாரித்து நிற்கும்
வானம்
மேகங்கள் அற்று
மேலும் வெறுமை கூட
நீலம் அடர்கிறது.

இலைகளற்ற கிளைகளில்
விளையாட யாருமற்று
நிறங்களை துறந்த கிரணங்கள்
உக்கிர வெண்மையை
ஓலமிடுகின்றன

நிறங்களின் வெறுமையில்
நிறையும் வெண்மையில்
திசையெங்கும் பிரதிபலித்து
மீண்டு வந்து சேரும்
மேலும்
சிறிதளவு
வெண்மை.

பனி பூத்து
பனி கொழிக்கும்
வனமெங்கும்
தானே எதிரொளித்து
சோம்பிக் கிடக்கும்
தூய வெண்மையின்
பொருளின்மையில்,

எப்படியாவது
ஒரு துளி அர்த்தத்தை
சேர்த்துவிட
முயல்வது போல்

பசியில்
வளை நீங்கி
வந்து நிற்கும்
மெலிந்த அணிலின்
மரத்தின் வேரோரம்

பனியில் புதைந்து துழவும்
என் கால்கள்
நெருங்கி நிலைப்பட
அசையாமல் ஆகும்
அணில்

இப்போது
எங்களுடன்
ஏரி தியானிக்கிறது
காற்று தியானிக்கிறது
வானம் தியானிக்கிறது
மரங்கள் தியானிக்கின்றன.
மலைத்தொடர்கள் தியானிக்கின்றன

அணிலின் விழித்திரையில்
ஒரு புராதன
ஓவியமாய்

அசைவின்றி
எஞ்சி
ஒருங்கும்
இப்பிரபஞ்சம்.

யாதனின் யாதினும் நீங்கி

காஸ்மிக் தூசி 

பறவைகள் அணில்கள்
பூச்சிகள் புழுக்கள்
பூ பழம் காய்
இலை குருத்து
யாதனின்
யாதினும் நீங்கி,

பிடுங்கி
தலைகீழாய்
நட்டது போல்
பற்றற்று
பிரபஞ்சப் பெருவெளியில்
தனித்து நின்றிருக்கும்
அந்த பெரும் பிர்ச்மரம்.

துக்கம்
விசாரிக்க வந்த
பழைய தோழனைப்போல்
எதிர்பாராமல்
எங்கிருந்தோ
வந்து சேர்ந்து விட்டது
ஒரு கரும் பறவை.

சிலை போல
நிலை பெயராது
எதுவும் சொல்லாது
கைபற்றி அமைதியாய்
அமர்ந்திருந்து

குசலம் முடித்து
எம்பித் தாவி
ஒலி எழும்ப
சிறகடித்து பறந்து செல்ல,

இலையற்ற
கிளை அசைத்து
விடையளித்த பின்,

வழமை போல
தன் தியானத்துக்கு
திரும்பி விட்டது
மரம்

சத்தமற்ற தனிமை

கனிமொழி பாண்டியன்

சத்தமற்ற தனிமை
முனுமனுப்பற்ற மனது
அலம்பலற்ற முகம்
சிமிட்டாத இமைகள்
கொதியற்ற வெதுவெதுப்பு
நடுநெஞ்சில் ஆணியாக
அகண்ட ஏக்கத்தையும்
வழிந்த வலியையும்
மெல்ல மெல்ல தடவுகிறாள்
கண்களோடு மூக்கும் அழுகிறது