Author: பதாகை

ஆவரகம் – எச். முஜீப் ரஹ்மான்

எச். முஜீப் ரஹ்மான்

 

1

அரண்மனையின் ராஜதர்பாரில் ராஜபிரதானிகள் புடைசூழ்ந்திருக்க மன்னரும் பரிவாரங்களும் இருக்கையில் அமர்ந்திருக்க அமைச்சர் வியர்வை வழிய மினுமினுக்கிற முகத்தோடு பேசிக்கொண்டிருந்தார்.

”நம் நாட்டுக்கு பெருமை தேடித் தந்திருக்கிற தளபதியாரின் அருமை புதல்வன் யவனத்துக்கு சென்று அங்கு நடைபெற்ற வீரதீரசாகச விளையாட்டு போட்டிகளில் வென்றிருப்பது நமது நாட்டின் புகழை உயர்த்தியிருக்கிறது. மரத்தானில் நடைபெற்ற இந்த ஒலிம்பிக்ஸ் குறித்து இந்திய துணைக்கண்டத்தில் இருக்கிற எத்தனை நாடுகளுக்கு தெரியும். ஆனால் திருவாங்கூர் ராஜ்ஜியத்தின் சார்பாக கலந்து கொண்டு பல வெற்றிகளை பெற்றுள்ள நமது சிங்கத்தை பாராட்டுவதை இந்த அவையில் நமது மன்னர் முன்னிலையில் செய்வது தான் சரியாகும். இந்த நாட்டின் சார்பாகவும் நமது மன்னர் சார்பாகவும் சகலகலாவல்லவன் பட்டத்தை வழங்குவதில் பெருமகிழ்ச்சிக் கொள்கிறேன்.

விழாவில் கலந்து கொண்ட அனைவருமே கரகோஷத்தை ஒலிக்க அமைச்சர் மீண்டும் தொடர்ந்தார்.

ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பாள் என்று சொல்லுவார்கள். நமது அஞ்சாசிங்கம் பிரதாபனுக்கு அவரது மனைவி வியஜதரணி இருப்பதை இங்கு சொல்லியாகவேண்டும். எனவே இந்த தங்க விருதை விஜயதரணி அவர்களே தமது புருஷனுக்கு வழங்குவது சால பொருத்தமாக இருக்கும்.

கரஒலி அதிர்ந்தது. அமைச்சரின் குரல் ஒலித்தது. மனுதர்மினி விஜயதரணி அவர்களை மன்னர் முன்பாக வரும்படி அன்புடம் அழைக்கிறோம். முன்வரிசையில் அமர்ந்திருந்த விஜயதரணி புன்முறுவலுடன் எழுந்தார். காண்போர் அனைவரையும் வியக்கவைக்கும் அழகுள்ள விஜயதரணி எழுந்து அவையோரை வணங்கி மன்னருக்கு முன்பாக வந்து மன்னரை வணங்கினார். பின்னர் மெல்லிய குரலில் அவையோரை பார்த்து பேச ஆரம்பித்தார்.

‘’பெரியோர்களின் ஆசியில் எங்களுக்கு விவாகம் நடந்து இரண்டு வருடங்கள்தான் ஆகிறது. என்னுடைய வாழ்க்கையில் நான் செய்த பாக்கியம்தான் அற்புதமான இந்த புருஷனை பெற்றது. அவர் எதை செய்தாலும் என்னிடம் ஆலோசனை கேட்டுதான் செய்வார். ஒலிம்பிக்ஸில் பங்கெடுப்பது குறித்து அவர் சிறிது தயக்கம் உடையவராகதான் இருந்தார். நான் அவருக்கு ஆலோசனைகளையும், ஊக்கத்தையும் அளிக்க அவர் அதற்கு தயாரானார். பயிற்சியின்போது குதிரையில் இருந்து விழுந்ததால் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. நான் மிகவும் அச்சமுற்றேன். ஆனால் தளராத அவரது நம்பிக்கையால் காயம் உடனே மாறிவிட்டது. உங்களை போன்ற பெரியோர்களின் ஆசி இருக்கும்வரை அவர் இன்னும் பல சாதனைகளை சாதிப்பார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. உங்களின் வாழ்த்துகளுடன் சகலகலாவல்லவன் என்ற இந்த பட்டத்தை வழங்குவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.”

கரகோசம் பெரிதாக எழ அந்த தங்கப் பதக்கத்தை பிரதாபனின் கழுத்தில் மாலையாக சூட்டினார். எல்லோரும் எழும்பி நின்று பிரதாபன் வாழ்க வாழ்க என்று ஆர்ப்பரித்தனர். மன்னர் பிரதாபனை ஆரத்தழுவி கணையாழி ஒன்றை பரிசாக அளித்தார். கரகோசத்தின் நடுவே பிரதாபன் பேசத்துவங்கினான்.

அவையோருக்கு சிரம் பணிந்த வணக்கம். இங்கே பேசியவர்கள் எல்லோருமே நான் போட்டிகளில் சாதனை புரிந்துவிட்டதாக பேசினார்கள். என்னை பொறுத்தவரைக்கும் நான் என்னை ஒரு சிறுவனாகதான் உணருகிறேன். நான் சாதிக்கவேண்டியது இன்னும் எவ்வளவோ உள்ளது. எனக்கு இந்த பட்டத்தை அளித்த என் சகதர்மினிக்கு நான் கடமைப்பட்டவனாக இருக்கிறேன். இந்த சபைக்கும், நமது நாட்டுக்கும், மாமன்னருக்கும் நான் கடமைப்பட்டவனாக இருக்கிறேன். என்னை பாராட்டி பேசிய அனைவருக்கும் நன்றி சொல்லி இன்னும் வரும் காலங்களில் இந்த நாட்டுக்கு சேவை செய்யவும் என்னை அர்ப்பணம் செய்வதாக இந்நேரத்தில் உங்கள் முன்பாக உறுதி கூறுகிறேன். மேலும்…””

கரகோசம் எழுந்து அடங்கிக் கொண்டிருந்த சமயம் விஜயதரணியின் முதுகுப் பக்கமாக அந்த குரல் கேட்டது..“அம்மா…”

திரும்பினார்.

அவருடைய தோழி அம்சவர்தினி குனிந்தவாக்கில் பவ்யமாய் நின்றிருந்தார்.

‘’என்ன…?”

தாங்களுக்கு ஒரு செய்தி..”

விஜயதரணி தோழியை கோபமாகப் பார்த்தார்.

“விழா நடந்து முடிகிறவரைக்கும் என்னை தொந்தரவு செய்யக்கூடாது என்று சொன்னேனா இல்லையா?..”

“அம்மா.. மிகவும் முக்கியமான செய்தி மாளிகை காவலன் செய்தி கொண்டு வந்திருக்கிறான்.”

விஜயதரணி திடுக்கிட்டார். என்ன செய்தி?

“யாரோ ஒரு வியாபாரி மாளிகைக்கு சென்று தாங்களை பார்க்கவேண்டும் என்று காவலனிடம் கேட்டிருக்கிறான். காவலன் எவ்வளவு முயன்றும் தாங்களிடம்தான் சொல்வதாக பிடிவாதம் பிடிக்க மாளிகையில் இருந்து வந்த வேலைக்காரி வியாபாரியிடம் பேசிப்பார்க்க அவளது காதில் ஒரு ரகசியம் சொல்லிவிட்டு போய்விட்டான். வேலைக்காரி என்னிடம் அந்த ரகசியத்தை சொன்னாள். இப்போது நான் அதை சொல்லவா?”

“சொல்லு..”

”நாளை குமாரகோவிலுக்கு தாங்கள் தனியாக செல்லவேண்டுமாம். அங்கே சந்திரிகா என்று ஒரு பெண்மணி உங்கள் பர்த்தாவை குறித்து ஒரு செய்தியை சொல்வதாக சொல்லி வியாபாரி போய்விட்டான்.”

“என்ன பர்த்தாவை குறித்தா?”

விஜயதரணி மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்தாள்.

பிரதாபனின் குரல் ஒலித்த்து.

ஆகவே.., இந்நாட்டின் மீது ஆணையாக எதிரிகள் யாராக இருந்தாலும் அவர்களை துவம்சம் செய்துவிடுவேன் என்று சொல்லிக்கொண்டிருக்க அனைவரும் கரஒலி எழுப்ப நினைவு திரும்பிய விஜயதரணியும் கரஒலி எழுப்பினார்.

வீரபிரதாபன் வாழ்க வாழ்க

2

அதிகாலையில் படுக்கையில் இருந்து எழுந்த விஜயதரணி குளித்து முடித்து கூந்தலை கற்பூர புகையிட்டு நறுமண தைலம் தடவி ஒப்பனை எல்லாம் முடிந்து சயன அறையில் நுழைந்தபோது படுக்கையில் கிடந்த பிரதாபன் போர்வையை விலக்கி, விஜயா, என்றழைத்தான்.

என்னங்க

என்ன எங்க கிளம்பிட்ட?

ஓ, அதுவா, குமாரகோவிலுக்கு முருகனை தரிசிக்கத்தான்..

விஜயா இன்று காலையில் எனது தாய்மாமன் வையாபுரி மதுரையில் இருந்து வருவது தெரியுமல்லவா?

என்னங்க அதை நான் மறப்பேனா.. நான் போய்விட்டு நாளிகைக்குள் வந்துவிடுவேன். நேற்றே சப்பரத்தை தயார் செய்யுமாறு சொல்லிவிட்டேன்.

விஜயா, என்று அழைத்தவாறு போர்வையை விலக்கிவிட்டு சயனத்தில் எழும்பி உட்கார்ந்தான் பிரதாபன்.

நேற்று தர்பாரில் வைத்தே உன்னை கவனித்துக் கொண்டிருந்தேன். என்ன ஆச்சு உனக்கு. ஏதோ பரபரப்புடன் இருப்பதை போன்று தோன்றுகிறதே.

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை பிரபு..

என்கூட சரியா பேசல. தூக்கம் வருதுன்னு சொல்லிக்கிட்டு போய் படுத்த. என்ன விசயம் விஜயா?

என் தாய்மாமாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னார்கள். அவ்வளவுதான்.

சரி இதற்காகதான் கவலைப்பட்டாயா? எல்லாம் சரியாக போகும்

சரி நான் கிளம்புகிறேன், என்று சொல்லிவிட்டு விஜயதரணி சப்பரத்துக்கு வந்து ஏறிக்கொண்டாள். சப்பரந்தூக்கிகள் நான்கு பேர் சப்பரத்தை தூக்க மெதுவாக அதிகாலையில் குமாரகோவிலை நோக்கி சப்பரம் அசைந்தவாறு சென்றது. வயல் வெளி ஏலாக்கள் தாண்டி வண்டித்தடம் சாலையை அடைந்து மேலாங்கோடு கோவில் கடந்து குமாரகோவில் வந்தபோது விடியலின் கீற்றுக்கள் மெல்ல தெறித்திருந்தன. கோவிலின் முகபிரகாரத்தில் தூக்கு விளக்குகள் ஒளியை சிந்தின. குமாரகோவில் குளத்தில் ஒளிக்கோடுகள் மெல்ல தண்ணீரில் அசைந்து ஊர்ந்து செல்லுவது போல் இருந்தது. குளத்தருகே சப்பரத்தை நிறுத்தி அதில் இருந்த படுதாவை விலக்கி வெளியே பார்த்தாள் விஜயதரணி. ஐந்தாறு பேர் குளக்கரையிலிருந்து கோவிலை நோக்கி நடந்து சென்றார்கள். அவர்கள் குளித்து முடித்திருந்தார்கள். அதிகமாக ஜனநடமாட்டம் வேறொன்றும் இல்லை. விஜயதரணி வெளியே இறங்கினாள். எதிர்பாராத வேளையில் ஒரு பெண்மணி அவளருகில் வந்தாள்.

நீங்கள் வீரப்பிரதாபனின் மனைவிதானே?

விஜயதரணிக்கு தூக்கிவாரிப் போட்டது.

நீங்கள் யார்..

நேற்று நடந்த வைபவத்தில் நானும் கலந்திருந்தேன். அதுதான் உங்களை கண்டதும் அறிமுகம் செய்யலாம் என்று வந்தேன்

விஜயதரணி நிம்மதியானாள். அப்படியானால் வியாபாரி சொல்லிச்சென்ற பெண் இவள் இல்லையா, அவள் யாராக இருக்கும் என்று கணநேரத்தில் யோசிக்கவும்..

உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி நான் வருகிறேன், என்று சொல்லிவிட்டு அந்த பெண் புறப்பட்டுப் போனாள்.

யாரந்த சந்திரிகா?அவளுக்கும் என் பர்த்தாவுக்கும் என்ன தொடர்பு? ஏன் அவரைப் பற்றி அவள் என்னிடம் சொல்ல வேண்டும் என்று பல்வேறு சிந்தனைகளை அலையவிட்டபோது விடிந்து விட்டது. கோவிலை சுற்றி ஜனக்கூட்டமும் வந்துவிட்டது.

கோவில் பக்கத்தில் இருந்த ஒரு வியாபாரியின் அருகே நின்றிருந்த நான்கைந்து பிராமணர்கள், சந்திரிகா, என்று சொல்வதை கேட்டு அவர்கள் அருகில் விஜயதரணி சென்றாள்.

நேக்குகூட சந்தேகமாத்தான் இருந்து? என்றார் ஒரு ஐயர்

ஆமா, சாயங்காலம் வரை நன்னா இருந்தவா இப்படி சட்டுன்னு போனா சந்தேகம் வராதா பின்னே

ஓய் சந்திரிகாவை யாரோ கொலைதான் செஞ்சிருக்கா

அது எப்படி ஓய் உமக்கு தெரியும்

எல்லா ஜெனமும் அப்படி சொல்லச்சே…, என்று இழுத்தார்.

சந்திரிகா கொலை செய்யப்பட்டாளா? இவர்கள் யாரை குறித்து பேசுகிறார்கள்? விஜயதரணி குழம்பினாள். எனினும் அவர்களிடம் இதைப்பற்றி கேட்க மனம் வரவில்லை. ஆனால் இதுவரை அவள் வரவில்லையே ஏன்? என்று யோசித்தவாறு சப்பரத்தில் ஏறி அமர்ந்தாள். சூரிய வெளிச்சம் காலையில் இதமாக பனியை விலக்கிக் கொண்டிருந்தது. நாழிகை கடந்துவிட்டது. இந்த பிராமணர்கள் சொன்னது சரதான். சந்திரிகா கொல்லப்பட்டிருக்கிறாள். இல்லை என்றால் இந்நேரம் அவள் என்னை சந்தித்திருப்பாள்தானே. சந்திரிகா யார்? அவள் என் கணவனைப் பற்றி என்ன ரகசியத்தை சொல்லப் போகிறாள் என்ற குழப்பத்துடனே சந்திரிகாவை எதிர்பார்த்து காத்திருந்தாள். அவள் வரவில்லை. பின்னர் அங்கிருந்து மாளிகைக்குச் சென்றாள். ஆனால் கேள்விகள் கேள்விகளாகவே இருக்கின்றன.

3

மேலைப்புலங்களில் இலக்கிய மானிடவியல் பெரிதும் வளர்ந்துவிட்ட ஒரு துறையாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. செவ்விலக்கியக் கருவூலத்தைக் கொண்ட தமிழ் மரபில் இலக்கிய மானிடவியல் வளர வேண்டிய ஒரு முக்கியமான கற்கைத் துறையாகும். இத்தகைய தன்மை கொண்ட எச்.முஜீப் ரஹ்மானின் ‘ஆவரகம்’ என்ற வரலாற்று நூல் ஒருவகையில் இனவரைவியல் எனலாம். இலக்கிய மானிடவியல்துறையில் தொல்குடிச் சமூகங்களையும் பண்பாடுகளையும் நுட்பமாக ஆராய வேண்டியுள்ளது. இந்நிலையில் சங்க இலக்கியங்களிலிருந்து வெளிக்கொண்டு வரவேண்டிய  சமூகவியலும் பண்பாட்டுவியலும் நமக்குத் தேவையாகின்றன. இயற்கையோடு இயைந்த சமூகமாகச் சங்ககாலச் சமூகம் காணப்பட்டது. அதனைத் திணைச் சமூகம் என்றே கூறலாம். தமிழ்ப் பண்பாட்டின் நீண்ட நெடிய தொன்மையையும் தொடர்ச்சியையும் சான்றுரைக்கும் வகையில் 5000 வருடங்களுக்கு முன்பே உருவானவை சங்க இலக்கியங்கள். தொல்லியல் அகழாய்வுகள் வெளிப்படுத்தும் உண்மைகளுக்கு அப்பால் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களால் எமதாக்கப்பட்ட பண்பாட்டுத்தரவு மூலங்களாகவே சங்க இலக்கியங்கள் உள்ளன என்பது மானிடவியல் நோக்கிலான கருத்தாகும்; சங்ககாலப் பன்மியச் சமூகக் கட்டமைப்பினையும் சமூகப் பண்பாட்டுக் கூறுகளையும் ஒருசேர அறிந்து கொள்ள இவ்விலக்கியப்பரப்பு பெரிதும் துணை புரிகின்றது.  நாயர்கள் தொடர்பான குறிப்புகளும் அவர்களுடைய வாழ்வியல் பதிவுகளும் இனவரைவியல் விவரிப்புக்கு உட்பட்டுள்ளன. இலக்கிய மானிடவியல் புலம் தமிழில் உருவாக்கம் பெற்றுள்ளது என்பதற்குச் சான்றாக இந்நூல் விளங்குகின்றது. அறிஞர் கைலாசபதியின் தமிழ் வீரநிலைக் கவிதைத் தமிழ் மரபினை கிரேக்கம் வேல்ஸ், ஐரிஷ் உள்ளிட்ட மேலை மரபுகளோடு ஒப்பிட்டுக் காட்டுகிறது. இதன் தொடர்ச்சியாக நூலாசிரியர் பக்தவத்சல பாரதி அவர்கள் தமிழ் மரபைத் தமிழகத்துக்கு அருகாமையில் உள்ள தென்னிந்திய நாடோடி மரபோடும், அதற்கடுத்து வட இந்திய நாடோடி மரபோடும் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.ஆய்வாளர் டி.தர்மராஜ் சொல்வது போல தனது சமூகத்தையே எழுதுவது என்ற பழக்கம் கொள்கையாகவே பேசப்பட்டது,  வட்டார இலக்கியங்களின் வருகைக்குப் பின்னரே. வட்டார இலக்கியங்களின் வருகையும், பிற்படுத்தப்பட்ட சாதிலிருந்து படைப்பிலக்கியவாதிகள் உருவாவதும் ஒரே தருணத்தில் நடைபெறுகிறது. பட்டியலின சாதிகளைப் போல தாமதமாகவே இலக்கியவுலகினுள் அடியெடுத்து வைக்கிற பிற்படுத்தப்பட்ட சாதிகள் தங்களைப் பற்றிய பதிவுகள் எதுவும் நவீன எழுத்தில் இல்லையென்று கண்டதும்,பட்டியலின மக்களைப் போல் அதனைப் போராட்டமாக அல்லது கோஷமாக மாற்றியிருக்கவில்லை. ஆனால், தங்களைப் பற்றிய பதிவுகளையும் இலக்கியத்தினுள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினர். இந்த வகை எழுத்துகளை‘வட்டார இலக்கியம்’ என்றும் பெயரிட்டுக் கொண்டனர். ஏறக்குறைய இதே காலகட்டத்தில், தமிழ்த் திரைப்படவுலகினுள்ளும் படையெடுக்கிற பிற்படுத்தப்பட்ட சாதிகள் கிராமங்களை நோக்கி தமிழ்த்திரைப்படக் கதையாடலை நகர்த்தியதையும் யோசித்துப் பாருங்கள். 1960கள் என்று சொல்லப்படும் காலகட்டம் பிற்படுத்தப்பட்ட  சாதிகளின் காலமாகவே தமிழகத்தில் கணிக்கப்பட வேண்டும். அரசியல்அதிகாரத்தைக் கைப்பற்றுதல், வெகுஜன ஊடகங்களில் ஊடுறுவுதல், நவீன இலக்கியப் பிரதிகளை ஆக்கிரமித்தல் என்று சகல தளங்களிலும் அவர்களின் இருப்பை உணர முடியும். தத்தம் சமூகத்தை எழுதிக்கொள்ளும் போக்கு வட்டார இலக்கியத்தின் அறிமுகத்தோடே நடைபெறுகிறது என்றால், அதற்கு முன்பு செய்யப்பட்ட இலக்கியங்கள் இந்த குணத்தைக் கொண்டிருக்கவில்லையா, அவையும் அவரவர் அவரவர் சாதியை எழுதிக் கொண்ட பிரதிகள்தானே என்ற கேள்வி எழலாம். நான் ஏற்கனவே சொன்னது போல் நவீனத் தமிழ் இலக்கியம் அப்படித்தான் என்றைக்குமே இருந்தது. அவரவர், அவரவர் சாதியை எழுதிக் கொள்வது என்பதுதான் வழக்கமாக இருந்தது. அவற்றை மீறி ஏதாவது செய்யப்பட்டிருந்தால் அவையெல்லாம் பிரச்சாரகுணம் கொண்டவை, இலக்கியத் தரமற்றவை என்றுசொல்லப்பட்டிருந்தன. இன்று தமிழகத்தில் காணப்படும் குடிப்பிள்ளைகள்  என்னும் மரபு பண்டையமரபின் நேர் தொடர்ச்சியாக அமைவதையும் காட்டுகிறார்.  இன்றைய நிலை பற்றி சமூகப்படி மலர்ச்சியை  மானிடவியல் நோக்கில் மிகத் தெளிவாகப் பொருத்தமாக விளக்குகிறார். நீண்டதொரு சமூகப் படிமலர்ச்சிச் சூழலில் எத்தகைய மாற்றங்களோடு உருமாறிப் புதிய திரிபு வடிவங்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதனைச் சமூகப் பண்பாட்டுப் படிமலர்ச்சி, இனவரைவியல், இனவரலாற்று அணுகுமுறைகளின் அடிப்படையில் இந்த வரலாறு பல்துறை இணைநோக்கின் அணுகுமுறைகளின் தேவை தமிழிலக்கியச் சூழலில் உணரப்பட்டு வருகின்ற சமகாலத்தில் தமிழுக்கு இந்நூல் ஒரு புதிய வரவு. இந் நூலின் பயன் என்பது தனியே நாயர்களின் வாழ்வியலை விளங்கிக் கொள்வது மட்டுமல்ல, ஆதிக்க சமூகங்கள் பற்றியும் அவற்றின் தொடர்ச்சியான இன்றைய சாதிய, பழங்குடிச்  சமூகங்கள் பற்றியும்  மானிடவியல் நோக்கில் புரிந்துகொள்வதற்கான புதிய அணுகுமுறையையும் தந்துள்ளது. த லித்துகளின் வாழ்க்கையை அப்படியப்படியே எழுத்தில் வடிக்கிறேன் என்ற பெயரில் பயன்பாட்டிலிருக்கும்  அத்தனை வசைச்  சொற்களையும்  சர்வ சாதாரணமாய்  பயன்படுத்தி தலித்  இலக்கியங்கள் செய்யப்பட்டன. வசைகளை அச்செழுத்தில் பார்க்கிற அதிர்ச்சியை இதனால் தமிழ்கூறு நல்லுலகம் பெற்றது  என்றாலும், இதற்கான காப்புரிமையும்கூட சிற்றிதழ் வட்டார கலகக்கார எழுத்தாளர்களிடம் இருப்பது நாட்சென்றே தெரியவந்தது. இப்படியாக, தமிழ்  இலக்கியம்  தனக்கான கதை சொல்முறையையும், எழுத்து முறையையும் தேடித் திரிந்த பயணம் ஏராளமான முட்டுச்சந்துகளை உடையது. இனவரைவியல் எழுத்து முறையும், பேச்சு வழக்கில் கதை சொல்லும் முறையும் ஏதோ தனித்தனியான இரண்டு கதையாடல் வகைகள்  போலத் தோன்றினாலும், உண்மையில் இரண்டும் ஒரே விதமான நோக்கங்களை உடையவை. இந்நூலில் பாடுபொருள் வரவேற்புக்குரியதாகும். அதனை இன்றைய இதனைப் பயன்படுத்தி மேலும் பல ஆய்வு முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளும்போது இந்நூலின் பயன் தவிர்க்க இயலாது சமூக அறிவியல்களில் துறைதோறும் புதுப்புது கற்கை நெறிகளுடன் ஆராய வேண்டியுள்ளது. வரை இணைத்து ஒரு முழுதளாவிய  பார்வையுடன் நோக்கியிருப்பது இந்நூலின் சிறப்பம்சமாகும். மானிடவியல் அறிவும், தமிழர் பண்பாடு தொடர்பான ஆழ்ந்த புலமையும், அதிகமான தமிழ் இலக்கிய வாசிப்புகளும், நுண்நிலையான புரிதலும், தேடலும்  இந்நூலின் பின்புலமாக  அமைகின்றன.

 

 

 

பறவை – ஸ்ரீதர் நாராயணன் கவிதை

– ஸ்ரீதர் நாராயணன் –

 

இறக்கைகளை பறத்திக் கொண்டு
விரிந்த நிலப்பரப்பில்
நின்றிருக்கிறது
சாம்பல் வண்ண பறவை ஒன்று
தன் நிழலைப் பார்த்தபடி.

பருவமாற்றத்தின் படிநிலையைக்
காட்ட வலசை போகலாம்.
காவ் காவ் என கப்பல்காரருக்கு
நிலத்தின் வரவை
கட்டியம் கூறலாம்
உண்டிவில்லிலிருந்து விசையோடு
வீசப்படும் கல்லுக்கு
தப்பித்து செல்லலாம்.
செந்நா சுவைக்கு இலக்கென
அனலில் வறுபட்டு
அரிவகை உணவாக செரிமானம் ஆகலாம்.
ஓவியனின் கலைச்சுவைக்கு
தூண்டுகோலாகி
தூரிகையில் வண்ணப்பிரதியாகலாம்.
தன் இனத்தின் பிரதிநிதியாக
நூல்களின் சேகரிப்பில்
தகவல் தொகுப்பாகலாம்.
உயிர்த்திருத்தலின் எத்தனிப்பிற்காக
சிறுமீன் வேட்டைக்கு புறப்படலாம்.

மூக்குயர்த்தி எழும்பி
விரிந்த வானில் புள்ளியென
கரைந்து போகலாம்.

சிறுகண்ணை திருப்பி
என்னைப் பார்த்துக் கொண்டே
வளைய மூக்கால்
இறகுககளை கிளர்த்திக் கொண்டு
யோகியின் முக்திநிலையில்
இப்படியே இருக்கலாம்.

  அற்றைத் திங்கள் – பானுமதி. ந

               பானுமதி. ந

அது சிறு மலையைக் குடைந்து கட்டப்பட்ட பழைய கோயில். தன்னைப் போலவே பழசு என்ற எண்ணம் அவனுக்கு ஆறுதலாக இருந்தது. மிகப் பெரிய முரசுகள் பெரிய திண்ணைகளின் மேல் வைக்கப்பட்டிருந்தன. முழங்காத முரசுகள் சஹானாவைப் போல; இல்லை, முழக்காத முரசுகள் தன்னைப் போல. நீண்ட நடைபாதைகளை ஒட்டி அலங்கார நடன மண்டபம் வெறிச்சென்று காட்சி அளித்தது. எத்தனை மேளங்கள், எத்தனை தாளங்கள் இங்கே ஒலித்திருக்கும். இந்த அச்சுறுத்தும் அமைதியில் மேற்கூரையும், பக்கச் சுவர்களும், ஒலிக்கு ஏங்கி, வண்ணங்களை உதிர்த்து நிற்கின்றன. அம்மன் சன்னதியில் தூங்கா விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சிற்பி படைத்த கணத்தில் உறைந்த அன்னையின் சிற்பம் அவன் மனத்தில் உறையும் அந்த கனவைப் போன்றதா அல்லது… வேறு எதைப் போன்றது?

சிவன் சன்னதியில் இருளை விழுங்க முடியாமல் ஒளி தத்தளித்துக் கொண்டிருந்தது. விசித்திரமான அழகு என்று தனக்குள் சொல்லிக் கொண்டே அவன் பாறைப் படிகளின் மேலேறி திறந்திருந்த வாயில் வழியாக சுனைப் படுகைக்கு வந்தான்.

அவன் உள்ளேயிருப்பதை உணராமல் காவல்காரன் பூட்டிக் கொண்டு போய்விட்டான். கத்திக் கூப்பிடலாமா என ஒரு கணம் நினைத்தான். எங்கிருந்தால் என்ன என்றும் சிந்தை ஓடியது.
அன்று இதைப் போல் பூரண நிலவில்லை. அவன் தன் வீட்டு முற்றத்தில் கிணற்றை ஒட்டிய மேடையில் கையில் பேருக்கு ஒரு புத்தகத்துடன் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒழுங்கான வடிவுகளிலில்லாத புண்ணாக்குகள் போல் நிறம் கொண்டு சிறு குன்றுகளெனக் காணப்பட்ட மேகங்கள் எங்கே? கண்ணைச் சிமிட்டிச் சிமிட்டி ஒன்று மற்றொன்றை அழைக்க வானில் மிளிரும் பூக்கள். அவனது கவிதை வேளையை கலைக்கவென்றே காலிங் பெல் அடித்தது.

‘பாலா, யார்னு பாரு, கைவேலையா இருக்கேன்’

முணுமுணுத்துக்கொண்டே சென்றவன் நடுவயதில் ஒருத்தர் கதவருகே நிற்பதைப் பார்த்தான்.

“நாங்க கும்மோணம். நேக்கு டிரான்ஸ்ஃபர் இந்தூருக்கு ஆயிருக்கு. உங்காத்துல இடம் இருக்குன்னா, சரி பாக்கலாமேன்னு வந்தோம். பெரியவா யாருமில்லயா?” நேரங்கெட்ட நேரத்தில வீடு பார்க்க யாரும் வருவதில்லையே என்று வியந்தான் அவன். ஒத்தர் நின்னுன்டு பன்மைல பேசறாரே, என நினைத்தவன் அப்பொழுதுதான் அவளைக் கவனித்தான். பாதி ஒளியோடு கலந்த இருளில் மருதாணி மரத்தடியில் நின்று கொண்டிருந்தாள்.

‘உள்ள வாங்க சார், அம்மா இருக்கா, அப்பா வெளில போயிருக்கா, உங்க பேரு’ என்றான் இவன்.

“கோதண்டராமன், இவ எம் பொண்ணு, சஹானா, நாங்க ஆர்த்தின்னு கூப்ட்றோம். உன் பேரு பாலாதானே? அம்மா கூப்ட்றச்சே கேட்டுது”

மாநிறத்தில் இருந்தாள் அவள். இரட்டைப் பின்னல் மடித்துக் கட்டியும் பின்முதுகு வரை ஊஞ்சல் ஆடியது. மருள மருள விழிக்கும் கறுப்பு திராட்சைகள். சிறிய வாய். அந்த சங்குக் கழுத்து அவனை அசைத்துவிட்டது. அம்மா ஏதோ சொன்னதற்கு மூக்கைச் சுருக்கி சிறிது அண்ணாந்து பல் வரிசை தெரிய சிரித்தாள். வாடகை கூட இல்லாமல் அவர்களைக் குடியேற்ற அவன் ரெடி. ஆனால், அப்பா என்ன நினைக்கிறாரோ? ’சீதாபதி பிள்ளையாரே, நிஜம்மா உனக்கு சிதர்க்காய் விட்றேன், பதினெட்டு தோப்புக்கரணம் போட்றேன்.’

இந்தக் கரடுமுரடான பாறையில் அந்த எண்ணம் அவனுக்கு இளநகை ஊட்டியது. அவர்கள் குடித்தனம் வந்தார்கள். ”அப்பாவப் பாத்தாச்சு, பொண்ணு அவராட்டம் இல்ல, சோ, அம்மாவப் பாத்துடணும்னு தோணி வாடகை ஏத்தாம ஒப்டுண்டேள் போலிருக்கு” என்று அம்மா அப்பாவை கேலி செய்ததும் நினைவில் வந்தது.

அந்த ஊரில் ஒரே ஒரே ஸ்கூல்தான் ஹையர் செகண்டரிக்கு. அதுவும் கோ-எட். பாலா நிஜமாகவே வானில் பறந்தான். அவன் ப்ளஸ் டூ அவள் ப்ளஸ் ஒன் அவ்வளவுதான். ராது, வேணு, சீமா, பாண்டு எல்லோரும் அவனுடன் ‘க்ரூப் ஸ்டெடி’ செய்ய விழைந்தார்கள். அவன் வீட்டிலே, அதுவும் சஹானா இருக்கும் போர்ஷனில் இவர்கள் வீட்டு முற்றத்தின் ஒரு பக்கம் திறக்கும் என்பதால் அந்தக் கூடத்திலேயே வாசம் செய்ய விரும்பினார்கள். அம்மாகூடச் சொன்னாள்- “மாடில போய் படிங்களேன்டா” என்று. சீமா ரொம்ப கெட்டிக்காரன். ”மாமி, அங்க நாங்க பேச ஆரம்பிச்சுடுவோம் இல்லன்னா பராக்கு பாப்போம்; இங்கன்ன நீங்க பாத்துண்டிருக்கேள்னு பயமிருக்கு, படிப்போம்”. அம்மா சிரித்துக் கொண்டே, ‘கலைமகளை’ப் படிப்பாள்.

சஹானா பாலாவின் அக்கா உஷாவுடன் நெருங்கிய தோழியாகிவிட்டாள். ’க்ளுக் க்ளுக்’கென்று எதற்கோ சிரிப்பார்கள். அவன் நெருங்கி வந்து நின்றால் உதடுகள் மடிந்து ஒலியற்ற சிரிப்பாக முகமும் கண்ணும் சிரிக்கும் அவளுக்கு. ”ஏண்டா, எங்களையே சுத்தற. வேற வேலையில்லியா?” என்று உஷா கடுகடுப்பாள்.

சஹானா கணக்கு ட்யுஷனுக்கு போய் வரும் வழியில் வெளிச்சம் குறைவாக இருக்கும். அவள் ‘பயமாக இருக்கிறது நீ கூட வாயேன்’ என்று ஒருமுறை கூடக் கேட்டதில்லை. அவன் சைக்கிளுடன் முனையில் காத்து நின்று பாதுகாவலனாக வருவதற்கு நன்றியும் சொன்னதில்லை.

இன்று அவனுக்குத் தோன்றுகிறது- அவள் அனாஹதத்வனி- ஒலி கேட்காத மந்திரம். ஆனால், அவள் நன்றாகப் பாடுவாள். அதுவும் மார்கழியில் முப்பது நாட்களும் திருப்பாவை அவளுடைய அப்பா பாட இவள் வாங்கிப் பாடுவாள். ’நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா’ என்று. இன்று அந்தப் பாடல் அவனுள் கேட்பானேன்?

‘மூட நெய் பெய்து முழங்கை வழி வார’ அவர்கள் வீட்டில் சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள். அவனுக்கு அதனுடன் வரும் வடை மேல் தான் மிகுந்த ஆசை. அவள்தான் பிரசாதத்தை எடுத்து வருவாள்; ’இன்னும் ரெண்டு வட கிடைச்சா நன்னாருக்கும்’. கன்னங்களில் கொப்பளிக்கும் அந்தச் சிரிப்பு அவன் வெக்கங்கெட்டு கேட்டதை ஈடு செய்வதாக அவனுக்கு அன்று தோன்றியது. அவன் இல்லாதபோது தூய்மையான வெண்காகிதத்தில் இரு வடைகள் அவனுக்கென வைக்கப்பட்டிருக்கும். அவன் ரூமிற்கு அவள் வந்து போன வாசத்தை நெஞ்சு நிறைய இழுத்துக் கொள்வான், வடையின் ருசியோடு சேர்த்து.

அவர்கள் மூன்று வருடங்கள் அவன் வீட்டில் இருந்தார்கள்; அவருக்கு பதவி உயர்வுடன் மாற்றலும் வந்துவிட்டது. சிறிது காலம் கடிதப் போக்குவரத்து இரு குடும்பங்களுக்கும் நடந்தது. அவள் படிக்கும் சென்னை கல்லூரியில் ஒருமுறை அவளைச் சென்று பார்த்தான். அவள் வீட்டிற்கு அழைத்தும் அவன் போகவில்லை. இப்பொழுதும் அழகாகத்தான் இருந்தாள். ஆனால், மஞ்சள் பாவாடையுடன், மருளும் விழிகளுடன், அண்ணாந்த சிரிப்புடன், அவனுள் உறைந்த சஹானா இல்லாமல் அவள் ஆர்த்தியாகத்தான் தெரிந்தாள். அவள் அவர்கள் வீட்டில் குடியிருந்த மூன்று வருடங்களில் ஒருமுறை கூட இந்தத் தோற்றம் தனக்கு எழவில்லை என அவன் வியந்து கொண்டான்.

மேலே வானம் வெள்ளிச் சலங்கைகள் கட்டிக் கேட்காத ஒலியில் ஆடிக் கொண்டிருந்தது. மலைப் பாறைகளின் வழவழப்பு கருமையில், நிலவின் ஒளி, தம்பூராவின் ஒரு பகுதியில் படும் அகல்விளக்கென மினுக்கியது. ரகசிய முனகலென காதோரம் சஹானா பாடினாள்.

 

 

புதிய குரல்கள் 2 – சுரேஷ் பிரதீப்பின் ‘ஒளிர் நிழலை’ முன்வைத்து – நரோபா

நரோபா

சுரேஷ் பிரதீப் தொண்ணூறுகளில் பிறந்தவர். எழுபதுகளிலும், எண்பதுகளின் முற்பாதியிலும் பிறந்து எழுத வந்தவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் சற்றே குறைந்து, எழுத்துலகில் சிறு சுணக்கம் இருந்ததாக தோன்றியது.

எண்பதுகளின் பிற்பாதியிலும், தொண்ணூறுகளிலும் பிறந்து எழுதுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது. உலகமயமாக்கல், இணையம் எளிதாக உலகின் கலைச் செல்வங்களை கொண்டு சேர்க்கிறது. ரசனையை இளமையிலேயே மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பளிக்கிறது. எந்த முக்கியமான உலக இலக்கிய ஆக்கத்தையும் நமக்கு வேண்டிய வடிவில் செலவின்றி தரவிறக்கம் செய்துவிட முடியும். சுரேஷ் பிரதீப் வெண்முரசு பற்றி கூர்மையாக எழுதும் ஓர் வாசகராகத்தான்  அறிமுகம். பின்னர் சு.வேணுகோபால் படைப்புலகம் பற்றி விரிவான கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அவருடைய சில சிறுகதைகளை வலைதளத்திலும் பதாகையிலும் வாசித்திருக்கிறேன். அவை என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. இந்நிலையில் அவருடைய நாவல் பற்றிய அறிவிப்பு வியப்பை ஏற்படுத்தியது. அதற்கு ஜெயமோகன் எழுதிய விரிவான மதிப்புரை மேலும் ஆர்வத்தைத் தூண்டியது. நாளுக்கு இரண்டு மணிநேரம் என இரண்டே நாட்களில் வாசித்து முடித்தேன். கவனம் சிதையாமல் தொடர்ச்சியாக வாசிக்க முடிந்தது. சுரேஷ் பிரதீப்பிற்கு சொல்வதற்கு ஒரு வாழ்க்கை உள்ளது. அதை சுவாரசியமாக சொல்வதற்குரிய மொழியும் அமைந்திருக்கிறது. நாவல் வடிவம் அவருடைய எழுத்து பாணிக்கு உகந்ததாகவும் திகழ்கிறது.

‘ஒளிர் நிழல்’ புனைவுக்குள் புனைவு என்ற வகைமையை தனதாக்கிக் கொள்கிறது. சுரேஷ் பிரதீப் எனும் இளம் எழுத்தாளனின் மரணத்திற்கு பின் பதிப்பிக்கப்படும் அவனுடைய நாவலும், சுரேஷ் பிரதீப்பின் மரணத்திற்கு பின்பான நிகழ்வுகளுமாக முடையப்பட்டிருக்கிறது ‘ஒளிர் நிழல்’. சுரேஷ் பிரதீப், ரகு, சக்தி, குணா என பல்வேறு பாத்திரங்கள் கதைசொல்லிகளாக திகழ்கின்றனர். உரை, கவிதை, கட்டுரை என வெவ்வேறு வடிவங்களை கையாள்கிறது. தற்கால இளைஞனின் வாழ்வில் சூழும் வெறுமை மற்றும் அகத் தத்தளிப்புகள், ஒரு குடும்பத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும், ஒரு காலகட்டத்தின் அரசியல் – சமூக மாற்றத்தின் கதை என மூன்று தளங்களில் வாசிப்பை அளிக்கிறது.

‘ஒளிர் நிழலில்’ குறிப்பிட்டு கவனப்படுத்த வேண்டிய அம்சம் என்பது நாவலில் வரும் பெண் பாத்திரங்களின் வலுவான சித்தரிப்பு. அருணா, மீனா, கோமதி, வசுமதி, அம்சவல்லி என எல்லா பாத்திரங்களும் வெவ்வேறு அடர்த்திகளில் மிளிர்கின்றன. ஆனால் நாவலின் ஆண் பாத்திரங்களில் இந்த வேறுபாடு தெளியவில்லை. ஆண்கள் அனைவருமே கூரிய தன்னுணர்வு கொண்டவர்களாக, சலிப்புற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குள் உள்ள வர்ண அடர்வுகள் நுண்மையாக மாறுகின்றன. சுரேஷ் – குணா, ரகு – சக்தி, செல்வராஜ் குரல்கள் ஒன்று போலவே ஒலிக்கின்றன. மூத்த தலைமுறையினர் அனைவரும் ஒன்று போலவே தென்படுகின்றனர். மனதில் தங்க மறுக்கிறார்கள். சந்திரசேகர் போன்ற பாத்திரங்கள் இந்த வார்ப்பிலிருந்து விதிவிலக்காக இருக்கின்றன.

இதில் கவனிக்கத்தக்க பாத்திர வார்ப்பு என்பது சக்தியும் குணாவும் என கூறலாம். அவர்களிருவரும் ஒரே ஆளுமையின் இரண்டு துருவ இயல்புகளின் பிரதிநிதிகள். சக்தி வெளிப்பார்வையில் வெளிமுக (extrovert) ஆளுமை போல வடிவமைக்கபட்டுள்ளான். ஆனால் உள்ளே அவனுக்கு எதுவுமே ஒரு பொருட்டல்ல. எக்கணத்திலும் கனிவு கொள்ளாதவனாக இருக்கிறான். நேரெதிராக குணா உள்முக ஆளுமையாக வெளிப்படுகிறான். எவரிடமும் ஒட்டாது, எல்லாரையும் வெறுப்பது போல் தெரிந்தாலும் அன்பிற்காக ஏங்குகிறான். நாவலின் மைய விசை என்பது இவ்விரு இயல்புகள் கொள்ளும் ஊடாட்டமே. வெண்முரசு கையாளும் ஆடி பிம்பம் எனும் வடிவத்தை இப்பாத்திரங்களுக்கு பொருத்திப் பார்க்கலாம். அவர்கள் ஒருவரையொருவர் நிறைவு செய்கிறார்கள்.

நாவலுக்குள் அடையாளபடுத்தப்படுவது போலவே சுரேஷ் பிரதீப்பிடம் தாஸ்தாவெஸ்கியின் தாக்கம் உள்ளது. கவிஞர் சபரிநாதன் ‘நிலவறைக் குறிப்புகள்’ பற்றி எழுதிய கட்டுரையில் தாஸ்தாவெஸ்கியின் கதைமாந்தரின் இரு முகங்களைப் பற்றி சுட்டிக் காட்டுகிறார். சமகால விழுமியங்களின் மீது நம்பிக்கையற்ற எதிர்நாயகன் என அவனை வரையறை செய்கிறார். சமூகத்தின் பொருட்டின்மைக்கு எதிராக உருவானவன் என்கிறார். “பொருட்டின்மை என்பது முகமூடிதான். உள்ளே இருப்பதோ வெறுப்பு. செல்ல இடமில்லாதபோது அவ்வெறுப்பு தன் மீதே பாய்ந்துகொள்கிறது. எதுவும் இல்லாத இடத்தில் வெறுப்பு  குடியேறும் என்பது தாஸ்தாயெவ்ஸ்கியின் கண்டுபிடிப்புகளில் ஒன்று,” என எழுதுகிறார். ஒளிர் நிழலில் அப்பட்டமாக இது வெளிப்படுகிறது. “சக மனிதன் மீதெழும் வெறுப்பே இந்த நாவலுக்கான அடிப்படை எனத் தோன்றுகிறது” என்று நாவலின் துவக்கத்தில் வரும் ஒரு வரி மேற்சொன்ன உணர்வுக்கு நெருக்கமாக திகழ்கிறது.

சபரி அதே கட்டுரையில் தாஸ்தாவெஸ்கியின் கதைமாந்தர்களைப் பற்றிய அவதானிப்பை வைக்கிறார்- “நிலவறை மனிதன் தன்னைப் பீடித்துள்ள நோயாகக் கருதுவது அதீத பிரக்ஞையை. ஓரிடத்தில் பிரக்ஞையே பிணிதான் என்கிறான். இந்த அதீத பிரக்ஞை காரணமாக அவனுக்கு எதார்த்தத்தில் உள்ள முரண்களும் விரிசல்களும் சட்டென கண்ணில் படுகின்றன. அதை விட மோசமாக, தன் உள்ளே மொய்க்கும் எதிர்வுகள் மற்றும் பிறழ்வுகளில் இருந்து பார்வையை அகற்ற முடிவதில்லை.” ஒளிர் நிழலின் துவக்க பக்கங்களில் இருந்தே இத்தகைய போக்கு நிலைபெறுகிறது. உணர்வுகளை வெளிப்படுத்த விரும்புகிறான், ஆனால் அதன் நாடகீயத்தன்மை, பொருளின்மை காரணமாக தொடுகையைக்கூட தவிர்க்கிறான். யாரேனும் தன்னைத் தீண்ட வேண்டும் என தவிக்கிறான், ஆனால் தானே அதைச் செய்யக் கூடாது எனும் தன்னுணர்வு தடுக்கிறது. தனது மேன்மையும் நல்லியல்புகளும் புரியாத மனிதர்களுடன் வாழ்வதை எண்ணி சலிக்கிறான், ஆத்திரம் கொள்கிறான். மறு எல்லைக்கு சென்று கழிவிரக்கம் கொள்கிறான். சக மனிதர்கள் மீதான வெறுப்பு என பிரகடனபடுத்திக் கொண்டாலும்கூட அது அன்பை நோக்கியே நீள்கிறது. நிழல்கள் இருளாமல் ஒளிர்கின்றன. சுரேஷ் பிரதீப் எனும் எழுத்தாளன் மாய்ந்து அவனுடைய நிழலாக அவன் வார்த்த பாத்திரம் குணா என்றென்றைக்குமாக புனைவுக்குள் வாழ்கிறான், ஆகவே ஒளிர்கிறான். தன்னை அழித்து கலையை வளர்க்கும் சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் செல்வாக்குடன் திகழ்ந்த இருத்தலியல்வாதத்தின் நீட்சியாகவே ‘ஒளிர் நிழலை” காண முடியும். இத்தனை அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பிறகு, மனிதனை ஒவ்வொரு நொடியிலும் வியப்பிலேயே அமிழ்த்தி வைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகிய பின்னரும் பொருளின்மை நம் முகத்தில் அறைகின்றது, இக்கேள்விகள் மேலும் கூர்மை கொண்டு எழுகின்றன என்பதே புதிய தலைமுறை தமிழ் எழுத்தாளர்களை வாசிக்கும்போது புலப்படும் மற்றுமொரு பொதுத்தன்மை.

தொண்ணூறுகளில் பிறந்த மற்றொரு எழுத்தாளரான விஷால் ராஜாவின் படைப்புலகுடன் சுரேஷ் பிரதீப்பின் உலகம் கொள்ளும் ஒப்புமைகள் மற்றும் வேறுபாடுகளை கவனிப்பது முக்கியம். ‘எனும் போது உனக்கு நன்றி’ எனும் விஷாலின் தொகுப்பை முன்வைத்து, “விஷாலின் கதைகளில் கதைமாந்தர்கள் ‘ஏன் இப்படி இருக்கிறது இவ்வுலகம்?’ எனும் திகைப்பை வெவ்வேறு தருணங்களில் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் தங்களைப் பீடத்தில் அமர்த்திக் கொண்டு பிறரை குற்றம் சுமத்துவதில்லை. புகார் என்றுகூட இல்லை, மிகச் சன்னமான முனகல் ஒன்றே எழுகிறது. அவர்கள் ‘குளிர்’ நாயகனை போல் தங்கள் அளவில் காபந்து செய்து கொள்ள முடியுமா என்று மட்டுமே நோக்குகிறார்கள்.” என்றெழுதி இருந்தேன். விஷாலிடமும் சுரேஷிடமும் வெளிப்படுவது இருத்தலியல் சிக்கலே. ஆனால் சுரேஷிடம் வெளிப்படும் கோபம் விஷால் கதைகளில் வெளிப்படுவதில்லை. இதற்கு முக்கியமான காரணம் என்பது சுரேஷ் பிரதீப்பின் பாத்திரங்கள் வெளிப்படுத்தும் ஆளுமைப் பிளவாக இருக்கக்கூடும். தற்கால இலக்கியத்தின் இரு போக்குகளாக இவ்விரண்டையும் அடையாளப்படுத்த முடியும்.

நாவலில் சில காட்சிப் படிமங்கள் வெகுவாக ஈர்த்தன. பொட்டலில் முளைத்தெழுந்த  வளைந்த பனைகளை “பல நூறு பாம்பு மாத்திரைகள் ஒன்றாக வைத்து கொளுத்தியது போல தடித்து கறுத்த பனை மரங்கள்” என விவரிக்கிறார். மற்றொரு தருணத்தில் குணாவின் இயல்பை விவரிக்கும் போது “கானல் நீராலான பெருங்கடலில் நீந்துகிறான்” என்றெழுதுகிறார். ஆனால், சுந்தரத்தைப் பற்றிய அத்தியாயத்தில் “ஒத்த ஆளா பீமசேனன் மாதிரி குடும்பத்த தாங்குனான்” எனும் பயன்பாடு அவ்விடத்தில் எனக்கு அன்னியமாக துருத்திக்கொண்டு தெரிந்தது.

காத்தவராயன் ஊர்விட்டு கூட்டத்துடன் விலகி தனது சாமியைக் கண்டுகொள்ளும் இடம் சிறப்பாக சித்தரிக்கப்படுகிறது. முழுவதும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் என்றபோதும்கூட கடவுள், திருவிழாக்களுக்கு நாவலுக்குள் இடமில்லை. எப்படியாவது தான் இறந்துவிட வேண்டும் என கடவுளிடம் மன்றாடும் நாவலின் துவக்க பகுதியில் “இங்கிருக்கும் எதுவுமே என்னை ஆற்றுப்படுத்த முடியாது என்ற முதல் எண்ணத்தில்தான் நீ உதித்திருக்க வேண்டும். நீ எனக்கு ஆணவங்களின் தொகுப்பு” என கடவுளைப் பற்றி சொல்கிறார். உன்மத்த நிலையில் சாக்த தாக்கம் கொண்ட கவிதைகள் உள்ளன.

தலித் இயக்கங்கள் சார்ந்து துணிந்து சில அரசியல் விமர்சனங்களை போகிற போக்கில் வைக்கிறார். நாமறிந்த இயக்கங்கள் மற்றும் அதன் தலைவர்களை நினைவுபடுத்துகிறது. கோமதியின் மரணம் சார்ந்து பள்ளருக்கும் தேவருக்கும் இடையிலான உரசல்கள் கோடிட்டுக் காட்டப்படுகின்றன. நூற்றி சொச்ச பக்க நாவலில் இத்தனைத் தளங்களை தொட்டிருப்பது சுரேஷ் பிரதீப்பின் வருங்கால ஆக்கங்களின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

மரியோ வர்கோஸ் லோசா அவருடைய ‘இளம் நாவலாசிரியனுக்கு எழுதும் கடிதம்’ எனும் நூலில் நாவலின் வடிவத்திற்கும் நாவலின் பேசுபொருளுக்கும் இடையிலான உறவு உயிர்ப்புடன் திகழ வேண்டும் என்கிறார். கருப்பொருள் வாழ்க்கை அளிப்பது, பல எழுத்தாளர்கள் ஒரே கருப்பொருளை மையமாக கொண்டு எழுதுகிறார்கள், ஆனால் அதன் வெளிப்பாட்டு முறை எழுத்தாளனின் திறன் சார்ந்தது என்கிறார். ஒளிர் நிழல் எனும் நாவலுக்குள் வராத பகுதிகளின் இருப்பைப் பற்றி சிந்தித்து பார்க்கையில், புனைவுக்குள் புனைவு எனும் வடிவுக்கு நியாயம் இருக்கிறதா எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது. வாசகருக்கு வாசிப்பு சுவாரசியம் அளிக்கிறது, அவனுக்கொரு சவாலை அளிக்கிறது, சவாலான வடிவத்தை கையாள்வதில் துவக்க நாவலிலேயே தேர்ச்சி அடைந்திருக்கிறார் போன்றவை உண்மையே. எனினும் நாவலின் மையத்திற்கு எவ்விதத்திலாவது வலு சேர்க்கிறதா என்பது கேள்விக்குரியதே. மாறாக இந்நாவலை எப்படி வாசிக்க வேண்டும் எனும் சில வழிகாட்டல்கள் அப்பகுதிகளில் வெளிப்படுகின்றன. உளவியலாளர் கூற்று, எழுத்தாளர் ஜெயகுமார் உரை ஆகியவை அதையே செய்கின்றன.

நாவலின் வடிவை கோளம் என உருவகப்படுத்த தோன்றுகிறது. அணுக அணுக அதன் மேற்பரப்பில் இருக்கும் வடிவ வேறுபாடுகள், சமமின்மைகள் புலப்படும், விலகி நோக்கும் தோறும் அவை மறைந்து ஒற்றை வடிவமென முழுமை கொள்ளும். வடிவ ரீதியாக கட்டற்ற பெருக்கு, ஒழுங்கற்ற சிதறல்கள் என தோன்றினாலும் அவையூடாக ஒரு ஒழுங்கு ஊடுருவி செல்லும். ஒளிர் நிழலின் துவக்கத்தில் குடும்ப அமைப்பை பொருளியல் பின்னணியில் வகுத்து நோக்கும் கட்டுரை நாவலுக்குள் எப்படியோ பொருந்தி போகிறது. சில கழிவிரக்கப் பகுதிகள், சுய விமர்சனங்கள் துருத்திக்கொண்டு இருந்தாலும்கூட, ஒளிர் நிழல் நிச்சயம் ஒரு கதைக் கோளம்தான். எழுத்தாளர் சுரேஷ் பிரதீப்பிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

ஒளிப்பட உதவி – சுரேஷ் எழுதுகிறான்

புதிய குரல்கள் – 1 – விஷால் ராஜாவின் ‘எனும்போது உனக்கு நன்றி’யை முன்வைத்து– நரோபா

 

நாகாஸ்திரம் – காலத்துகள்

காலத்துகள்

அழைத்த எண்ணை இப்போது தொடர்பு கொள்ள முடியாது என்று பதிவு செய்யப்பட்ட குரல் ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது, “சாப்ட வாடா, மணி ஏழே முக்காலாச்சு,” கதவைத் தட்டியபடி அம்மா சொல்ல, அழைப்பைத் துண்டித்துவிட்டு அலைபேசியை படுக்கையின்மீது போட்டுவிட்டு அறையைவிட்டு வெளியே வந்தவன், “ம்மா தாத்தா மொபைல் இன்னும் நம்ம கிட்டதான இருக்கு, சிம்லாம் ரிடர்ன் பண்ணிட்டோம்மா என்ன,” என்று கேட்க, “வீட்லதாண்டா இருக்கு, என் ரூம் பீரோலதான் வெச்சிருக்கு, எதுக்கு” என்று பதில் சொன்னாள் அம்மா.

“ஒண்ணுலமா, அத நா எடுத்துக்கறேன், சில போட்டோஸ் இருக்கு,” என்றபடி அம்மாவின் அறையினுள் சென்று பீரோவைத் திறந்தான். தாத்தாவின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ஹாலுக்கு வந்தவனிடம், “இந்த சண்டே அபார்ட்மெண்ட் மீட்டிங் இருக்குடா” என்றாள் அம்மா.

“என்ன பிரச்சனை இப்போ”

“அதான் யாரோ ரெண்டு மூணு வாரமா ராத்திரி ராத்திரி காலிங் பெல்ல அடிச்சுட்டு போய்டுறாங்கல்ல அதப் பத்திதான், காத்தால பத்து மணிக்கு. எங்கயும் வெளில போலல”

“வீட்லதான் இருப்பேன், பசங்களாத்தான் இருக்கும், வேற யாரு பண்ணப் போறாங்க. க்ருஷ்ணா, ப்பப்பூ இதெல்லாம் பண்ணக்கூடியவங்கதான்,” என்றபடி சாப்பிட அமர்ந்தவன் முன் தட்டை வைத்தபடி, “சின்னப் பசங்க எப்படிடா அந்த நேரத்துல வீட்ட தொறந்துட்டு வருவாங்க, இது வெளியாள் யாரோதான் பண்றாங்க.” என்றாள் அம்மா.

சோற்றை தட்டில் போட்டு குழம்பை ஊற்றிப் பிசைந்து தலை நிமிராமல் சாப்பிட ஆரம்பித்தான். உருளைக் கிழங்கை தட்டில் வைத்துக் கொண்டே, “அவருக்கும் உருளைக் கிழங்கு ரொம்ப பிடிக்கும், ஒங்கப்பாக்கும்தான். அந்த ஜீன் அப்படியே ஒனக்கு வந்திருக்கு.”

“…”

“ஏண்டா ஷேவ் பண்றதில்லையா” என்று கேட்டாள்.

“ரெண்டு மூணு நாளாச்சு, அவ்ளோதான்”

“நல்ல வாழ்ந்தா, வியாதில படுத்து எல்லாருக்கும் தொல்லை கொடுக்காம தூக்கத்திலேயே போய் சேந்துட்டா, கல்யாண சாவுதான்”

“….”

“ஒரு மாசத்துக்கு மேல ஆகப்போறது, நீ பொண்டாட்டி செத்தவன் மாதிரி ஷேவ் பண்ணாம இருக்க ஆரம்பிச்சிட்ட”

“படுத்தாதம்மா, ரெண்டு நாள் ஷேவ் பண்ணாதது பெரிய விஷயமா. ஆபிஸ்ல வேல அதிகம், அதுவும் இந்த டேக்ஸ் சேஞ்ஜுக்கப்பறம்” வாஷ்பேசினில் கை கழுவிக் கொண்டே சொன்னவன் தாத்தாவின் அலைபேசியை எடுத்துக் கொண்டு அறையினுள் நுழைந்து அதை இயக்கினான்.

தொடுதிரையில் அவனுடன் கடற்கரையில் எடுத்துக் கொண்ட புகைப்படம், உற்சாகச் சிரிப்புடன் தாத்தா. இவன் சிறுவனாக இருக்கும்போது, தாத்தா வசித்து வந்த ஊருக்கு விடுமுறைகளில் செல்லும்போது, அதன் மிகப் புகழ்பெற்ற கோவிலுக்கு -”நினைத்தாலே மோட்சம்” என்ற சொலவடை அவ்வூரைப் பற்றியும், அதன் பிரதான தெய்வம் பற்றியும் உண்டு – அழைத்துச் செல்பவர், இவன் பிடிவாதம் காரணமாக கோவில் யானைக்கு அரைசீப்பு வாழைப்பழத்தை ஒரு நாள் வாங்கித் தர, அதன் பின் இவன் ஐந்தாவது ஆறாவது வரும், -யானைக்கு உணவளிப்பதை கூச்சமளிக்கும் ஒன்றாக உணரும்- வரைக்கும் அந்த வழக்கம் தொடர்ந்தது. கோவிலிலிருந்து திரும்பும்போது இனிப்புக் கடைக்கு அழைத்துச் செல்வார்.கடையின் முன்புறம் சதுரக் கண்ணாடிப் பெட்டிக்குள் குமித்து வைக்கப்பட்டிருக்கும், லட்டின் ஒற்றை வண்ணத்தில் இல்லாமல் பல வண்ணங்களில் சிறிது பசுபிசுப்புடன் இருக்கும் இனிப்பு பூந்திகள். வீட்டிற்கு வந்து சேர்வதற்குள் பூந்திப் பொட்டலத்தை காலி செய்திருப்பான். இந்தக் கடற்கரை நகரத்திற்கு குடிவந்த ஆறேழு ஆண்டுகளில் தாத்தாவுடன் ஒவ்வொரு வார இறுதியிலும், குறைந்த பட்சம் மாதம் இருமுறையேனும் கடற்கரைக்குச் சென்று வருவது வழக்கம்.

தன் அலைபேசியில் இருந்து அழைப்பு விடுத்தான், தாத்தாவின் அலைபேசியில் அவருக்குப் பிடித்தமான பக்திப் பாடலொன்றின் வரிகள் ஒலித்தன. அழைப்பு தானாக அறுபடும்வரைக் காதருகில் தன் அலைபேசியை வைத்திருந்து விட்டு, மூன்று வாரங்களாகப் படித்து முடிக்க முயன்று கொண்டிருக்கும் நாவலை எடுத்து பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தான். அம்புலிமாமா, “அமர் சித்ர கதா” எல்லாம் படிக்க ஆரம்பிக்கும் முன்பே கதைக சொல்ல ஆரம்பித்தவர் தாத்தா. ஆறேழு வயது வரை இரவில் எழுந்து “விடு சக்ராயுதத்தை”, “பிரம்மாஸ்திரம் வருது” என்று கத்திக் கொண்டே அறைகளை சுற்றிக் கொண்டு வந்தவனுக்கு இனி கதையெல்லாம் சொல்ல வேண்டாம், அவன் எதுவும் படிக்கத் தேவையில்லை என்று வீட்டினர் தடுத்தும், “எல்லாம் தானா சரியாயிடும் கோந்தேக்கு, அதுக்காக கத கேக்காம படிக்காம இருக்கறதா,” என்று சொன்னார். இவன் வாசிப்பின் திசை மாறிய பின்னும் அவ்வப்போது படிக்கச் செய்யும் “விக்ரமாதித்தன் கதைகள்” போன்ற சில புத்தங்கள் பற்றி காலமாகும் வரை அவருடன் உரையாடிக் கொண்டிருந்தான். நாவலை வைத்துவிட்டு டிரெஸ்ஸிங் டேபிளின் அடியில் இருந்த பெரிய அட்டைப் பெட்டியை இழுத்து அதிலிருந்த டைரிகளில் இரண்டை எடுத்துக் கொண்டு படுத்தான்.

எண்பத்தெட்டில் பணி ஓய்வு பெற்ற ஓரிரு வருடங்கள் கழித்து டைரி குறிப்புக்களை எழுத ஆரம்பித்திருந்த தாத்தாவிடம் சிறு வயதில் அவர் எழுதுவதைப் பற்றி கேட்க எதுவும் சொல்லாமல் புன்சிரிப்புடன் அதை கடந்திருக்கிறார். வளர ஆரம்பித்தபின் அதைப் பற்றி அவரிடம் பேசியதில்லை. அவர் காலமான பின்பு, சேர்ந்திருந்த முப்பதிற்கும் மேற்பட்ட டைரிகளை பழைய பேப்பர்காரனிடம் போட்டுவிடலாம் என்று வீட்டில் பேச்சு எழுந்தபோது இவன் அவற்றை தன் அறைக்கு கொண்டுச் சென்றான். தினசரி நிகழ்வுகள் மட்டுமில்லாமல் நினைவுச் சிதறல்களாகவும் -நாலைந்து நாட்களுக்கான பக்கங்களுக்கு நீளும் – உள்ளக் குறிப்புக்கள். சில நேரம் தொடர்ச்சியாக பல வெற்றுத் தாள்கள். தொண்ணூற்றியிரண்டு மற்றும் தொண்ணூற்றியைந்தாம் வருடங்களில் மட்டும் இரு டைரிகள் தேவைப்படும் அளவிற்கு எழுதி இருக்கிறார்.பதினேழு பதினெட்டு வயதில் வீட்டை விட்டு விரட்டப்பட்டு அலைந்த நாட்களில் சுடுகாட்டில் இரவொன்றை கழித்ததைப் பற்றிய குறிப்பு தொண்ணூறாம் வருட மார்ச் பதினைந்தாம் தேதி அன்று. பின் ராணுவத்தில் சேர்ந்து இரண்டாம் உலகப் போரின் இறுதி வருடம் மெசபடேமியாவில் கழித்த சில மாதங்கள் பற்றி அந்த வருட மே எட்டாம் தேதியில். அகர்கர் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த அன்று அதை சிலாகித்து எழுதி இருக்கிறார்.ரஞ்சி அரை இறுதியில் சச்சினின் இரட்டைச் சதத்தை பற்றிய மகிழ்ச்சியும், அதனால் தமிழ் நாடு தோற்றதைப் பற்றிய வருத்தமும் கலந்த குறிப்பு இரண்டாயிராமாம் ஆண்டில். நூறு பேரகூட இல்லாத ஸ்டேடியத்தில் நடந்து கொண்டிருக்கும் ரஞ்சி கோப்பை லீக் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை பார்த்துக் கொண்டிருப்பார். இதுவரை புரட்டியவற்றில் இவனைப் பற்றிய எந்த குறிப்பும் இல்லை.

முழிப்பு கொடுக்கும்போது, வழக்கம் போல் கூர்க்காவின் குரல் கேட்டது. ஒன்றரை மணியாகி இருக்கும். டைரியை அருகில் வைத்து விட்டு படுக்கையிலிருந்து எழுந்து ஜன்னல் திரையை விலக்கினான். லத்தியைத் தட்டியபடி, இவன் அடுக்ககத்தைத் தாண்டிச் செல்லும் கூர்க்கா தெரு விளக்கின் கீழ் வந்தான், சிவந்த நிறம். படுத்திருந்த இரு நாய்கள் எழாமல் வாலாட்டின. தன் தெருவைத் தாண்டி எட்டாவது க்ராசினுள் அவன் நுழையும்வரை கவனித்துக் கொண்டிருந்துவிட்டு, படுக்கைக்கு வந்து மல்லாக்காகப் படுத்து, திரையின் விலகல்கள் ஏற்படுத்தும் இடைவெளியில் உள் நுழையும் நிலவின் கீற்றுக்களில், மூன்று மடங்காக மாறிச் சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியின் இறகுகளைப் பார்த்தபடி இருந்தான்.

செங்கல்பட்டு வீட்டில் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மாவுவின் பேச்சு. “ஏன் இவன் கொழந்தையா இருக்கும் போது கலர் கொடுப்பான்,கலர் கொடுப்பான்னு சொல்லி சொல்லியே கொஞ்சமா க்ரீம் தடவினாரு, கைவிரல் தேஞ்சது தான் மிச்சம்” என்று தாத்தி சொல்ல சிரிப்பு. “கோந்தே நல்ல கலர்தான்” இவனை அணைத்தபடி தாத்தா கூறியதற்கு “சும்மா ஒன் பேரன்னு சொல்லாத்தப்பா, அவன் மாநிறம் தான்,அதெல்லாம் எப்படி கலர் கொடுக்கும்,அதுவும் அஞ்சாறு வயசுக்கப்பறம்” என்று அப்பா சொல்ல, “ஏன், இன்னும் வயசிருக்கு அவனுக்கு கலர் குடுக்க, நீ வேணா பாரு” என்று பதிலுரைக்கும் தாத்தா.

படுக்கையிலிருந்து எழுந்து, டி-ஷர்ட் அணிந்து கொண்டு ஹாலுக்கு வந்தான். அம்மாவின் அறையில் எந்த சலனமும் இல்லை. மெதுவாக வெளிப்புறக் கதவை திறந்து, இரண்டாம் தளத்திற்கு சென்றான். பேங்க்காரர் வீட்டின் அழைப்பு மணியை மூன்று நான்கு முறை முறை அழுத்தமாக அழுத்தி விட்டு, இரண்டிரண்டு அடிகளாக படிகளில் ஏறி தன் தளத்திற்கு வந்தான். தன் அறைக்குள் நுழைந்து மீண்டும் தன் அலைபேசியில் இருந்து அழைப்பு விடுத்து விட்டு படுக்கையில் சாய்ந்தான்.

“சொல்லு கோந்தே” என்று எதிர்முனையில் குரல். அறையை நோட்டம் விட்டு அலைபேசியின் திரையை பார்த்தான், அழைப்பு ஏற்கப்பட்டிருந்தது.அதைத் துண்டித்து விட்டு அலைபேசியை படுக்கையில் போட்டான். தலையை உலுக்கி விட்டு அங்குமிங்கும் நடந்தவன் மீண்டும் அழைப்பு விடுக்க, மீண்டும், “சொல்லு கோந்தே, ரொம்ப நாளா கூப்டிட்டிருகே” மறுமுனையில் அதே குரல். பின்னங் கழுத்து வேர்த்திருக்க, இடது தோள்பட்டை வலிக்க ஆரம்பித்திருந்தது. தாத்தாவின் அலைபேசியை எடுத்துப் பார்த்தான், அணைக்கப்பட்டிருந்தது. இரு அலைபேசிகளையும் அருகே மேஜையின் மீது வைத்துவிட்டு கண்ணை மூடினான். இவன் அன்றே பார்த்தாக வேண்டும் என்று சொன்னதால் கூட்டத்தில் சிக்கி மிதிபட்டு இவனுக்குப் பிடித்த நடிகரின் படத்திற்கான டிக்கெட்களை வாங்கி வந்த தாத்தா. உடலை அரைவட்டமாகக் குறுக்கிக் கொண்டு, போர்வையை முகத்தின் மீது மூடிக் கொண்டான். பசித்தது.

தாத்தா ஊருக்கு விடுமுறைக்குச் செல்லும்போது, கோவிலுக்கு அழைத்துச் செல்லாத நாட்களில் காலையுணவு கணபதி அய்யர் மெஸ்ஸில்தான். போண்டாவைவிட, பிரமாதமான ருசியுடன் இருக்கும், அதற்கு தொட்டுக் கொள்ள தரப்படும் சாம்பாரும், தேங்காய் சட்னியும். சர்வர் மேஜையின் மீது வைத்துச் செல்லும் இரட்டை சட்டியில் இருந்து அவை இரண்டையும் எடுத்து ஒன்றாகக் கலக்கும்போது வரும் மணம். போண்டாவின் விலை என்ன இருந்தது? இவன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கடை முதலாளியுடன் கொண்டிருக்கும், உண்டு முடித்த பின்பு விரலில் ஒட்டி இருக்கும் எச்சத்தை இவன் உறுஞ்சுவதைப் பார்த்து “இன்னொன்னு சாப்டு கோந்தே” என்று சொல்லும் தாத்தா.பணம் கொடுத்துவிட்டு கிளம்பும்போது “தாத்திட்ட சொல்லக் கூடாதென்ன,” என்று தாத்தா கோரினாலும், மெஸ்சை அடுத்திருக்கும் “பங்க்” கடையில் பன்னீர் சோடா குடித்து விட்டு, மூக்கை எரிச்சலுற வைக்கும் ஏப்பங்களை வீட்டிற்கு வந்த பின்பும் இவன் விட்டுக்கொண்டிருப்பதை வைத்து தாத்தி கண்டு பிடித்து விடுவார்.

எழுந்து உட்கார்ந்து மீண்டும் அழைப்பு விடுத்தவன், அது ஏற்கப்பட்டதும் “யாரிது, ஒங்களுக்கு எப்படி இந்த கால் வருது” என்றான்.

“நீ யார கால் பண்ணற கோந்தே”

“இது என் தாத்தா நம்பர் நீங்க யாரு “

“இது ஒன் தாத்தா நம்பர்னா நா ஒன் தாத்தா தான் கோந்தே” குரலை வைத்து ஒன்றும் சொல்ல முடியவில்லை. அணைக்கப்பட்டிருந்த தாத்தாவின் அலைபேசியை பார்த்தபடி இருந்தான்.

“காலிங் பெல் அடிச்சிட்டு ஓடி வரியே கோந்தே, திண்ணாமலைல பாத்த அந்தப் படம் இன்னும் ஞாபகம் இருக்கா”

அங்கு பார்த்த திரைப்படத்தில் தனியாக வசிக்கும் மூதாட்டியை சில சிறுவர்கள், அவர் வீட்டின் அழைப்பு மணியை அடிக்கடி அழுத்தி விட்டு ஓடி கேலி செய்யவார்கள். அப்படத்தின் முடிவில் அழ ஆரம்பித்த தாத்தி, வீடு வந்து சேர்ந்த பின்னரும் அதை நிறுத்தாமல் தொடர, “சாரதே, கரையாதே, சாரதே” என்று சொல்லிக் கொண்டே இருந்தார் தாத்தா.

“.. ஹவ் டூ யூ.. .. என்ன”

“ஒப்ளிக்ஸ் இன்னும் குண்டா இருக்கானே கோந்தே” சிறுவயதில் ஓபிலிக்ஸ் குறித்து “என்னமா குண்டா இருக்கான்” என்று கேட்டு , “ஹி இஸ் நாட் ஃபேட், ஜஸ்ட் வெல் ஃபெட்” என்று அதற்கு அந்தக் கதைகளில் ஓபிலிக்ஸ் சொல்லும் வாதத்தையே இவன் பதிலாக சொல்வதற்கு “அதெல்லாம் இல்ல கேட்டியா, சரியான திண்டி அவன். கடோத்கஜன், பகாசுரன்லாம் அவன்ட்ட பிச்ச வாங்கணும்” என்று தொடர்ந்து சீண்டுவார்.

“தனியா கஷ்டப்படறியே கோந்தே, தாத்தா எப்பவுமே ஒன் கூடத் தான் இருக்கேன்” வருடும் குரல்.

ஜன்னல் கம்பிகளில் முகத்தைச் சாய்த்துக் கொண்டு “எங்க தாத்தா என் கிட்டக்க இருக்க, நீ இல்லாம வீட்ல இருக்கவே முடியல. ஏண்டா வீட்டுக்கு வரோம்னு இருக்கு, பீச்சுக்கு போலாம்னா அதுவும் முடியல”

“ஒன் கிட்டதான் இருக்கேன் கோந்தே”

“மெடிடேஷன், இல்ல யோகா எதாவது பண்ணலாம்னு இருக்கேன்”

“நா இருக்கறப்ப அதெல்லாம் எதுக்கு ஒனக்கு, தாத்தா ஒண்ணு சொல்லட்டா எல்லாம் சரியாப் போயிடும்”

“என்ன தாத்தா “

“என் கிட்ட வந்துடறியா கோந்தே”

“…”

“என்ன கோந்தே, கணபதி ஐயர் கூட இங்க ஒன்ன கேட்டுட்டிருக்கார்”

“…”

“மாடிக்கு வா கோந்தே”

“எங்க…”

“மாடி கிட்டக்கதான் கோந்தே, வா”

அழைப்பை துண்டித்தவன் அலைபேசியை அணைத்து மேஜையில் மீது வைத்து விட்டு உடலைக் குறுக்கிக் கொண்டு போர்வையை முழுதும் போர்த்தியபடி படுத்தான். வெளியே செல்ல முடியாத மூச்சுக் காற்றின் சூடு. முகப்பகுதியில் மட்டும் போர்வையை சற்று விலக்கும்போது நான்காம் வகுப்பில் படிக்கும்போது கற்றுக் கொண்ட, இவனுக்கு மிகவும் பிடித்தமான நடிகரின், அபிமான மகானைப் பற்றிய – அந்த மகானாக அப்போதுதான் திரைப்படமொன்றில் அவர் நடித்திருந்தார் -, இருபது இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு மேலாக உச்சரித்திராத ஸ்லோகத்தின் நான்கு வரிகளை அட்சரம் பிசகாமல் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

கூர்க்காவின் குரல் மீண்டும் அருகில் ஒலிக்க, எழுந்து முணுமுணுத்துக் கொண்டே ஜன்னலருகில் சென்று கூர்க்கா அடுக்ககத்தை தாண்டிச் செல்வதை பார்த்தபடி நின்றிருந்தவன், “கோந்தே என் கிட்ட வந்துடு, ரொம்ப ஈஸி மாடிக்கு மட்டும் நீ வந்தா போதும்” என்ற குரலை கேட்டதும், ஜன்னல் கம்பிகளை இறுகப் பற்றிக் கொண்டான். மிக அருகில் கேட்கும் குரல், கழுத்துப் பின் பக்கம் தடவிச் செல்வது பேசுபவரின் மூச்சுக் காற்று.

“வா கோந்தே, பயப்படாதே”.

ஸ்லோக வரிகளை உச்சரிக்காமல் இப்போது உதடுகள் வெறுமனே அசைந்து கொண்டிருந்தன. மீண்டும் அவற்றை மீட்டெடுக்க முடியாமல் ஜன்னல் கம்பிகளின் மேல் கண்களை இறுக்க மூடியபடி முகத்தை சாய்த்துக் கொண்டு கம்பிகளில் வழிந்து உதடுகளில் பட்ட விழிநீரை நாவால் வருடியவன், உள்ளங்கைக்களுள் கம்பிகள் நெகிழ ஆரம்பிக்க தலையை பின்னிழுத்துக் கொண்டான். நெளியும் இரு கம்பிகளின் இரு முனைகளிலும் சிவப்புக் கண்களும், பிளவுபட்ட பச்சை நாக்கும் கொண்ட கரு நாகங்கள் இவனை அவர்களுடன் சேர அழைத்தன.

கம்பிகளை விட்டு விட்டு பின்னகர்ந்தவன் அருகே இருந்த நாற்காலியை பற்றிக் கொண்டான். ஜன்னலின் அனைத்து கம்பிகளும் இவனை நோக்கி இரு முனைகளிலிருந்தும் நாவை நீட்டியபடி நெளிந்துகொண்டிருந்தன. இருபது கம்பிகள், நாற்பது கருநாகத் தலைகள், உள்ளத்தைத் தீண்டும் நாற்பது நாக்குகள். நாக்கின் இரண்டு கவையும் தனித்தனியாக, அதே நேரம் ஒத்திசைவாக “மாடிக்கு நாப்பது அடி வெச்சா போதும் கோந்தே” என்று ஒலித்தன. எண்பது குரல்கள்.

நாற்காலி பிடியிலிருந்து நழுவத் தடுமாறியபடி இன்னும் பின்னகர்ந்தவன் அருகிலிருந்த மேஜையை பற்றி அதனருகில் தரையில் அமர்ந்தான். நாகங்களின் அழைகுரலின் உறுதியும், சத்தமும் அதிகமாகிக் கொண்டிருக்க, செவிகளை கைகளால் மூடிக்கொண்டு முட்டியை முகத்துடன் ஒட்டிக்கொண்டவன் கண்களை மூடும் முன் அவன் பார்வை மேஜை மீதிருந்த தாத்தாவின் அலைபேசியின்மீது விழுந்தது. மூடிய இமைகளுக்குள் ரோஸ், சிவப்பு நிற ஒளிச் சிதறல்கள் சர்ப்பங்களாக மாறி அவனுள் பரவின.நாகங்கள் உள் நுழைந்து கொண்டே இருக்க, உடலெங்கும் உச்சாடனம் போல் சர்ப்பங்களின் அழைப்பு ஒலி. மிகுந்த பிரயாசைப்பட்டு கண்களைத் திறந்தவனின் உடலும் மனமும் உள்ளிருக்கும் குரல்களின் தாள கதிக்குப் பழக ஆரம்பிக்க, மூச்சு சீராக வர ஆரம்பித்தது. மேஜையின் மீது தலையை கவிழ்த்துக் கொண்டான்.

“வா கோந்தே, ஏந்திரு மாடிக்குப் போலாம் “, “தாத்தா ஒன் கூடவே தான் வரேன் ஏந்திரு” நரம்புகளாக மாறி விட்ட குரல்கள்.

எழுந்து அறைக் கதவை நெருங்கியவன், கடற்கரையில் இருக்கும் கலங்கரை விளக்கம் இவன் வீடிருக்கும் திசைச் நோக்கி சுழலவும் அறையில் ஓரிரு கணங்கள் பரவிய வெளிச்சத்தில் சுவற்றில் நெளியும் சர்ப்ப நிழல்களைப் பார்த்தான். மீண்டும் தன்னுடலை உந்தித் தள்ளி மேஜையருகே வந்து ஒரு கையினால் அதை இறுக்கப் பற்றிக் மறு கையில் தாத்தாவின் அலைபேசியை எடுத்துக் அதைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

கலங்கரை விளக்கத்தின் அடுத்த சுழற்சியில் மீண்டும் அறை தற்காலிகமாக ஒளி பெற்றது. தரையில் அமர்ந்து அலைபேசியின் பின்பகுதியை, “கோந்தே, என்ன கோந்தே பண்ற” என்று வந்த குரல்களினூடே கழற்ற முயன்றான். பாதி பிரித்திருந்த நிலையில் ஆங்காரமான சீறல் ஒலி கேட்க உடல் விதிர்த்தவனின் கையிலிருந்து அலைபேசி நழுவி விழுந்த வேகத்தில் தரையில் உரசியபடி ஜன்னலருகே சென்றது. விழும் அலைபேசியை பிடிப்பதற்காக குனிந்து முழங்காலிட்டு அதனருகே சென்றவன் தலையை உயர்த்தி ஜன்னலை நோக்கினான். கருநாகங்களின் கண்கள் இன்னும் சிவந்திருக்க, நீள ஆரம்பித்திருந்த நாக்குகள் ஜன்னல் சுவற்றில் இறங்கியபடி அலைபேசியை நோக்கி நீண்டு கொண்டிருந்தன. கேவல் ஒலி எழுப்பியவாறே, அலைபேசியை எடுத்துக் கொண்டு தவழ்த்தபடியே அறையின் மூலைக்குச் சென்றவன், பின்பகுதியை முற்றிலும் பிரித்தெடுக்க நடுங்கும் விரல்களால் இரண்டு மூன்று முறை முயற்சி செய்ய வேண்டியிருந்தது. பிரித்தபின் அதைத் தூக்கி எறிந்தவன், சீறல் ஒலி இல்லாதிருக்க, ஜன்னலை பார்த்து கூச்சலிட்டான்.

ஒவ்வொரு கருநாகத்தின் வால் பகுதியிலும் இருந்த இருந்த தலை மற்றொன்றின் வால் பகுதி தலையுடன் இணைய, இருபது தலைகள் கொண்ட ஒரு பெரு கரு நாகம், அனைத்து பத்திகளும் விரித்து இவனை நோக்கிக் கொண்டிருந்தது. தீபாவளியன்று பாம்பு மாத்திரைகளை அடுத்தடுத்து ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி பற்ற வைத்து ஒரு உருவத்தை உருவாக்குவதைப் போல். அதன் விழிகளையே நோக்கிக் கொண்டிருந்தவன் கணுக்காலில் ஏதோ சுற்ற ஆரம்பித்ததை உணர்ந்த அதே கணம் அறைக்கதவின் மீது எறியப்பட்டான். பின்னந்தலையை பிடித்துக் கொண்டு எழ முயன்றவன் நீண்ட கயிறு போல் ஒன்று அலைபேசியை தன்னுள் சுற்றிக் கொண்டு பின்வாங்குவதைப் கண்டான். நாக்குகளும் இணைந்து விட்டனவா. உள்ளங்கைகளையும் கால் முட்டிகளையும் தரையில் தேய்த்துக் கொண்டே அதனருகில் சென்றபோது கிலுகிலுப்பை ஒலி கேட்டது. “ராட்டில் சிநேக்” ஆஸ்திரேலியாவில்தான் இருக்கும், கருநாகங்களுக்கும் இத்தகைய வால் உண்டா. மீண்டும் உடலை உந்தி அதைப் பற்றினான்.

சிறு வயதில் வீட்டில் வளர்த்த முயல்களையும் நாயையும் தூக்கும்போது அவற்றின் உடலில் உருவாகும் நெளிவுக்கு மாறாக, சொரசொரப்பான, வெதுவெதுப்பான சருமம், வளைந்ததில் உட்சதையை ஊடுருவி பிய்த்து மறுபுறம் வெளியேறி விடும் வேகம். உள்ளங்கையை துளைத்து வெளி வந்திருக்கும் வால் முன்னே செல்ல அதன் பின்னால் எழுத்துச் செல்லப்படுகிறான். கையை உதறி உள்ளங்கையை முகத்தினருகில் கொண்டு சென்றபோது குமட்டியது, எந்தப் பிளவும் இல்லை. ஜன்னலருகே சென்று விட்ட வால்பி ன்வாங்குகிறதா அல்லது சுருங்குகிறதா. மீண்டும் அருகே சென்று அதைப் பற்றி வளைத்து அலைபேசியை பிரித்தெடுக்க முனைய, நாகத்தின் இருபது தலைகளும் சீறியபடி முகத்தினருகே வந்து நாவை நீட்டின. தேங்கிய மழைநீரில் மிதக்கும் மட்கிய இலைகளின் மணம். வளர்த்தால் பணம் வருமென்று இவன் பள்ளிப் பருவத்தில் நாலைந்து ஆண்டுகள் இவர்களின் போர்ஷன் கதவையொட்டி பதியம் செய்யப்பட்டு, கதவின் உயரத்திற்கு வளர்ந்து வாசலை போர்த்தியபடி பரவியிருந்த மிகப் பெரிய -வெற்றிலை போன்ற- “மணி பிளாண்ட்” இலைகள். மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு கண்களை இறுக்க மூடியவனின் உடலைத் துளைத்துக் கொண்டு வெளியே வந்த “மணி பிளாண்ட்டின்” ஒற்றை விழியுடைய பச்சை இலைகள் நாக பத்திகளாக மாறி உடலை முழுதும் போர்த்தின. குழைய ஆரம்பித்த உடலின் இடுப்புக்குக் கீழ் இணைந்து ஒன்றாகிவிட்ட இரு கால்கள். இடது கை, வலது மணிக்கட்டை பற்றி தன்னுள் கோர்த்துக் கொள்ள முயன்றதை மிகுந்த பிரயாசையுடன் விலக்கி மீண்டும் கையை நீட்டி துழாவியவனுக்கு, அலைபேசி மீது பிடி கிடைக்க, வேகமாக இழுத்து பின்புறம் வீசி எறிந்து அது சுவற்றில் மோதி தரையில் விழும் ஒலியை கேட்டபடி கீழே சாய்ந்தான்.

மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தபோது உடலைச் சுற்றி எதுவும் இல்லை, கால்களை அசைத்துப் பார்த்தான். கலங்கரை விளக்கத்தின் அடுத்த சுற்றுக்காக காத்திருந்தான், சுவற்றில் நெளியாத நிழல் கம்பிகள். மெதுவாக எழுந்து சென்று அறையின் மறுமுனை சுவற்றின் கீழ் கிடந்த அலைபேசியை எடுத்தான், அதனருகே கழன்று வந்திருந்த பேட்டரி. சுவற்றில் சாய்ந்தபடி “சிம்” கார்ட்டில் ஆட்காட்டி, கட்டை விரல்களை வைத்து எடுக்க முயன்ற போது சாம்பார், சட்னி வாசம். எச்சிலில் இனிப்பு பூந்தியின் சுவை. “தாத்தாவ மறந்துடாத கோந்தே” என்று யானையின் பிளிறல். சிம்மை நீக்கியபின் மேஜையருகே சென்று அதன் மேலிருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து தரையில் அமர்ந்தான்.

காலை எழுந்திருக்கும்போது உடலெங்கும் வலி, மணி ஒன்பதரை ஆகியிருந்தது. படுக்கையின் ஓரத்திற்கு படுத்தபடியே நகர்ந்து, கால்களை மெதுவாக தரையில் வைத்து, குனிந்தபடி அமர்ந்திருந்தவன் மெதுவாக எழுந்து ஜன்னலருகே சென்று அதன் கம்பிகளை கைமுட்டிகளால் தட்டினான். கம்பிகளை பற்களால் மெல்ல கவ்வும்போது நெகிழ்வு, விலகிப் பார்க்க, அசையா கம்பிகள். அறையிலோ, உள்ளங்கைகளில் எந்த மணமும் இல்லை. கவிழ்ந்திருந்த நாற்காலியை நிமிர்த்தியபின், இரு ஜன்னல்களையும் மூடி படுக்கையில் அமர்ந்து கூர்ந்து கேட்டவனுக்கு தெருவில் செல்லும் வண்டிகளின் மெல்லிய ஒளியைத் தவிர வேறெந்த குரலும் ஒலிக்கவில்லை. ஜன்னல்களைத்’ திறந்து அறையெங்கும் பார்வையை செலுத்தினான். மேஜையின் மேல் உடைந்த சிம், அறையின் மூலையில் அலைபேசி, அதன் பேட்டரி. அனைத்தையும் பொறுக்கி எடுத்து படுக்கையின் மீது போட்டு விட்டு மீண்டும் ஜன்னலருகே சிறிது நேரம் நின்றிருந்தபின் முகம் கழுவ குளியலறைக்குச் சென்றான். தண்ணீரை முகத்திலறைந்த பின் கண்களைத் திறக்க, வாஷ்பேசினின் துளைகள் பாம்பின் கண்களாக மாறின. விலகி குளியலறை கதவைப் பற்றியபடி நின்றான். திறந்திருக்கும் குழாயிலிருந்து வெளிவரும் நீர், துளைகள் வழியே உள்ளே சென்று கொண்டிருக்க, பேசினின் அடிப் பகுதியில் இருந்த ரப்பர் குழாயை குதிகாலிட்டபடி அமர்ந்து அசைத்துப் பார்த்து வெளியே வந்து முகம் துடைத்து விட்டு படுக்கையில் அமர்ந்தான்.

வாக்கு கொடுத்திருந்தாலும், கர்ணன் நாகாஸ்திரத்தை இரண்டாம் முறை செலுத்தி இருக்க வேண்டுமென்று தாத்தாவிடம் சிறுவயதில் ஆதங்கத்துடன் புலம்புபவனுடைய தனிப்பட்ட பாரதத்தில் இரண்டாம் முறை அஸ்திரத்தை செலுத்தும் கர்ணனே வெற்றி பெறுவான். “இந்த வாட்டி நெஞ்சுக்கு தான் குறிவைப்பான் தாத்தா”. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் எதிர்கொண்ட மிகப் பெரும் அவமானத்தை ஆற்றுப்படுத்த, “எதோ இந்த மட்டோட விட்டுச்சே, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு நெனச்சுக்கோ,” என்று அடுத்த சில மாதங்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.

துணிகள் வைக்கும் மர அலமாரியில் இருந்து பிளாஸ்டிக் பையொன்றை எடுத்து படுக்கையில் தாத்தாவின் அலைபேசியின் பகுதிகளை அதில் போட்டான். பின் அணைக்கப்பட்டிருந்த தன் அலைபேசியை எடுத்து அதை இயக்கி புகைப்பட தொகுப்பில் இருந்த தாத்தாவின் புகைப்படங்களையும், அவருடைய அலைபேசி எண்ணையும் அழித்து அதில் இருந்த மற்ற புகைப்படங்களையும், தொடர்பு எண்களையும் மடிக்கணினிக்கு மாற்றிய பின் அணைத்து அதன் சிம்மை வெளியே எடுத்தவன், தன் அலைபேசியையும் பையினுள் போட்டான். மேஜைக்கு கீழிருந்த அட்டைப்பெட்டியை எடுத்து படுக்கையின் மீதிருந்த இரண்டு டைரிகளை அதனுள் வைத்துவிட்டு, உடையணிந்த பின், பிளாஸ்டிக் பையை எடுத்துக் கொண்டு, அட்டைப்பெட்டியை காலால் உந்தித் தள்ளியபடி அறையை விட்டு வெளியே வந்தவன் “ம்மா, நா வெளில போறேன் புது மொபைல் வாங்கணும்” என்று சொல்ல “என்னடா நாலஞ்சு மாசம் முன்னாடி தானே தாத்தா பென்ஷன் அரியர்ல வாங்கி தந்தாரு,” என்றாள் அம்மா.

“மொபைல்ல ப்ரச்சன “

“பிளாஸ்டிக் பைல என்ன, தாத்தா டைரிலாம் எங்க எடுத்துட்டுப் போற”

“எடத்த அடச்சிட்டிருக்கு மா, கொசு வேற மேயுது கடிச்சு கிடிச்சு வியாதி வந்துதுன்னா”

“கடைல போடப்போறேன்னா அவனே வந்து எடுத்துட்டுப் போவான், போம்போது சொல்லிட்டுப் போ எதுக்கு நீ தூக்கிட்டு”

துணிக்கடைகளில் தரும் காடா பையில் டைரிகளை போட்டடைத்து சமயலறைக்குள் சென்று வத்திப்பெட்டியை எடுத்துக் கொண்டு “கடேல போட்டுட்டா மட்டும்..” என்று சொல்லியபடி கிளம்பியவனிடம் “என்னடா காதுல விழல, சத்தமா சொல்லு” என்று அம்மா கேட்டாள்.

‘ஒண்ணுலமா, பதினொண்ணு மணிக்குள்ள வந்துடுவேன்’ என்று பதில் சொல்லிவிட்டு இவன் கிளம்ப, முன்னறையில் இருந்த லேண்ட்லைனிற்கு அழைப்பு வந்தது. எடுத்து பேசிய அம்மா,’ஹலோ, ஹலோ, யாரு வேணும்’ என்று கேட்டு கீழே வைத்து விட்டு ‘யாருன்னு தெரியலையே, எதுவும் பேச மாட்டேங்கறாங்க,
தானா கட் ஆகிடுச்சு’ என்றாள்.