Author: பதாகை

“நான் இந்தப் பரிசை அதற்கு எதிராகவே திருப்ப வேண்டும்” – புக்கர் புனைவிலக்கிய பரிசு வென்ற ஜான் பெர்கரின் ஏற்புரை, 23, நவம்பர், 1972.

எனக்கு இந்தப் பரிசு அளித்துள்ள நீங்கள், இது எவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்பதை சற்று விரிவாக அறிந்து கொள்ள விரும்பலாம்.

பரிசுகளில் நிலவும் போட்டிச் சூழல் அசூயை அளிக்கும் ஒன்று. இந்தப் பரிசு பொறுத்தவரை, பரிசு பெறுபவர்களின் குறும்பட்டியல், வலிந்து விளம்பரம் செய்யப்பட்ட சஸ்பென்ஸ், சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் குறித்த குதிரைப் பந்தய ஊகங்கள், வெற்றி பெற்றவர்கள் தோற்றுப் போனவர்கள் என்று பிரமாதப்படுத்தப்படுவது, இவை போலியானவை, இலக்கியச் சூழலுக்கு பொருந்தாதவை.

இருந்தாலும்கூட பரிசுகள் ஒரு தூண்டுதலாய் செயல்படுகின்றன- எழுத்தாளர்களுக்கு என்றல்ல, பதிப்பாளர்கள், வாசகர்கள், புத்தக வியாபாரிகள். எனவே, ஒரு பரிசின் அடிப்படை கலாச்சார மதிப்பீடு என்பது அது எதன் தூண்டுதலாய் இயங்குகிறது என்பதைச் சார்ந்தது. சந்தைக்கும் சராசரி ஒருமித்த கருத்துக்கும் இணங்கிப் போதல்; அல்லது, வாசகர் மற்றும் எழுத்தாளர் தரப்பில் கற்பனையின் சுதந்திரத்துக்கு இடமளித்தல். பரிசு கருத்து இணக்கத்தை மட்டுமே தூண்டுகிறது என்றால் எது வெற்றி பெறும் என்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறதோ அதற்கான உத்திரவாதமாய் மட்டுமே செயல்படுகிறது. வெற்றிக்கதையின் வேறு எந்த அத்தியாயத்துக்கும் மாறுபட்டது அல்ல இது. கற்பனைச் சுதந்திரத்தைத் தூண்டுகிறது என்றால் மாற்றுக்களைத் தேடும் மனத்திட்பத்தை ஊக்குவிக்கிறது. அல்லது, மிக எளிமையாய்ச் சொல்வதானால், மனிதர்களை கேள்வி கேட்க ஊக்குவிக்கிறது.

நாவல் ஏன் அவ்வளவு முக்கியமாக இருக்கிறது என்றால், வேறு எந்த இலக்கிய வடிவமும் எழுப்ப முடியாத கேள்விகளை நாவல் கேட்கிறது: தனி மனிதன் தன் விதியை தீர்மானித்துக் கொள்வது பற்றிய கேள்விகள்; தன்னுடையது உட்பட வாழ்வில் அடையக்கூடிய பயன்கள் பற்றிய கேள்விகள். இந்தக் கேள்விகளை அது அந்தரங்கமான முறையில் எழுப்புகிறது. நாவலாசிரியரின் குரல் அந்தரங்கக் குரல் போல் இயங்குகிறது.

இதை நான் சொல்வது ஒரு வகையில் பொருத்தமற்றதாகத் தோன்றலாம் எனினும், இந்த ஆண்டின் தேர்வுக்குழு இவ்விஷயத்தில் சுதந்திரமாகவும் பொறுப்புடனும் நடந்து கொண்டமைக்கு வணங்கவும் நன்றி கூறவும் விரும்புகிறேன். இக்குழுவினர் தேர்ந்தெடுத்த குறும்பட்டியலில் உள்ள நான்கு நூல்களுமே நான் பேசும் இணக்கமற்ற கற்பனையினை வெளிப்படுத்துகின்றன. என் புத்தகத்துக்கு பரிசு கொடுத்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது- காரணம், அது ஒரு எதிர்வினை நிகழந்திருப்பதைக் குறிக்கிறது, பிற எழுத்தாளர்களின் எதிர்வினை.

‘ஜி’ எழுத எனக்கு ஐந்து ஆண்டுகள் ஆயின. அதன் பின் என் வாழ்வின் அடுத்த ஐந்து ஆண்டுகள் குறித்து திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். ஐரோப்பாவின் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து தகவல் சேகரிக்கத் துவங்கியிருக்கிறேன். நூலின் இறுதி வடிவம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ஒரு நாவலாக இருக்கலாம். எந்த வகைமைக்கும் உட்படாத புத்தகமாக இருக்கலாம். ஆனால் எனக்கு இது தெரியும்: ஐரோப்பாவில் பதினொரு மில்லியன் புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் குரல்கள், அவர்களுடைய குடும்பமாகிய, உடனில்லாத இந்தத் தொழிலாளர்களின் கூலியை நம்பி வாழும், நாற்பது மில்லியனுக்கும் மேற்பட்டவர்களின் குரல்களில் சில, இந்த நூலின் பக்கங்களுக்கு பின்னிருந்தும் பக்கங்களிலும் பேச வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் தங்கள் இடங்களையும் கலாச்சாரங்களையும் விட்டு வெளியேறி, ஐரோப்பாவின் தொழில்மயமாகிவிட்ட பிரதேசங்களில் மிகக் குறைந்த ஊதியத்துக்கு மிக மோசமான வேலைகளைச் செய்கிறார்கள், அங்கு இவர்கள் தேவைக்கேற்ப பயன்படும் தொழிலாளர் தொகையாகவும் விளங்குகிறார்கள். இந்த உலகை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள்? தங்களைக் குறித்து என்ன எண்ணம் கொண்டிருக்கிறார்கள்? நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? தாம் சுரண்டப்படுவதை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்?

இந்தப் பணி நிமித்தமாக பல இடங்களுக்குச் சென்று தங்கியிருப்பது அவசியப்படுகிறது. துருக்கிய மொழி பேசும் நண்பர்களை, அல்லது போர்ச்சுகீசிய நண்பர்களை அல்லது கிரேக்கர்களை, சில சமயம் அழைத்துச் செல்ல வேண்டியிருக்கலாம். கிராம மருத்துவர் பற்றிய நூல் எழுதும்போது என்னுடன் இணைந்து பணியாற்றிய புகைப்பட நிபுணர், ழான் மோருடன் நான் மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன். நாங்கள் சிக்கனமாக செலவு செய்ய வேண்டும் என்பதற்கேற்பவே வாழ்ந்து, மிகக் குறைவான கட்டணத்தில் பயணம் செய்தாலும்கூட இந்த நான்காண்டு பணி முடிக்க கிட்டத்தட்ட பத்தாயிரம் பவுண்டுகள் ஆகலாம். இந்தப் பணத்துக்கு எங்கே போவது என்பது எனக்குப் புரியாமல் இருந்தது. என்னிடம் எதுவும் இல்லை. இந்த புக்கர் பரிசு ஒரு துவக்கத்தை சாத்தியப்படுத்தியுள்ளது.

ஆனால் இந்தப் பரிசின் ஐந்தாயிரம் பவுண்டுகள் எப்படிப்பட்ட பொருளாதாரச் செயல்பாடுகளில் ஈட்டப்பட்டன என்பதைக் கண்டறியும் நோக்கத்தில் மிக நுட்பமான தொடர்புப் பின்னல்களைத் தேடிச் செல்ல நாம் நாவலாசிரியராக இருக்க வேண்டியதில்லை. கரீபியன் பகுதியில் புக்கர் மக்கானல் நூற்று முப்பது ஆண்டுகளுக்கும் மேல் பரவலான வர்த்தக உறவுகள் கொண்ட அமைப்பு. இது மற்றும் இது போன்ற சுரண்டல்களின் நேரடி விளைவாகவே கரீபியனின் நவீன வறுமை தோன்றியுள்ளது. இந்த கரீபிய ஏழ்மையின் பின்விளைவுகளில் ஒன்றாகவே நூறாயிரங்களில் மேற்கிந்தியர்கள் பிரிட்டன் நோக்கி புலம் பெயர்ந்து வரும் கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய என் புத்தகம், அவர்கள், அல்லது அவர்களின் உறவினர்கள் மற்றும் மூதாதையர்களிடமிருந்து நேரடியாக ஈட்டப்பட்ட லாபத்தின் நிதியால் எழுதப்படும்.

இதைக் காட்டிலும் பெரிய ஒரு தொடர்புண்டு. தொழில் புரட்சி, அதைத் தொடர்ந்த கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல், அதனால் உருவான நவீன ஐரோப்பியா துவக்கத்தில் அடிமை வர்த்தகத்தின் லாபத்தை முதலாய்க் கொண்டது. ஐரோப்பாவுக்கும் பிற உலகுக்கும், கருப்புக்கும் வெள்ளைக்கும் உள்ள உறவின் இந்த அடிப்படை இயல்பு இன்னும் மாறவில்லை. ‘ஜி’ நாவலில் சங்கிலி கொண்டு பிணைக்கப்பட்ட நான்கு மூர்களின் சிலை நூலின் மிக முக்கியமான ஒற்றைச் சித்திரம். இதனால்தான் நான் இந்தப் பரிசை அதற்கு எதிராகவே திருப்ப வேண்டும். இதைக் குறிப்பிட்ட ஒரு வகையில் பகிர்ந்வதைக் கொண்டு இதைச் செய்வதாக இருக்கிறேன். நான் கொடுக்கும் பாதி, எடுத்துக் கொள்ளும் பாதியின் தன்மையை மாற்றும்.

முதலில் என் நிலைப்பாட்டின் தர்க்கத்தை தெளிவாகவே சொல்கிறேன். இது குற்றவுணர்ச்சி, அல்லது, மனசாட்சியின் உறுத்தல் தொடர்புடைய கேள்வியல்ல. இது நிச்சயம் பரோபகாரமுமல்ல. முதலாகவும் முதன்மையாகவும் அரசியல் விஷயம் என்று கூட சொல்ல முடியாது. ஒரு எழுத்தாளனாய் நான் தொடர்ந்து வளர்வது பற்றிய கேள்வி இது: எனக்கும் என்னை உருவாக்கிய கலாச்சாரத்துக்கும் இடையில் நிலவும் உறவு எப்படிப்பட்டது என்பதே கேள்வி.

அடிமை வர்த்தகம் துவங்குவதற்கு முன், ஐரோப்பியர்கள் தம் மனிதத்தன்மையை இழப்பதற்கு முன், அவர்கள் தம் வன்முறையில் தம்மையே பிணைத்துக் கொள்வதற்கு முன், கறுப்பும் வெளுப்பும் சமமானவர்களாய் வாழும் சாத்தியக்கூற்றின் திகைப்புடன் ஒருவரை ஒருவர் நெருங்கிய கணமொன்று இருந்திருக்க வேண்டும். அக்கணம் கடந்து விட்டது. அதன்பின் எப்போதும் உலகம் அடிமைகளாகும் சாத்தியம் கொண்டவர்களுக்கும் ஆண்டான்களாகும் சாத்தியம் கொண்டவர்களுக்கும் இடையில் பிளவுபட்டது. ஐரோப்பியன் இந்த மனநிலையை தனது சமூகத்துக்கும் கொண்டு சென்றான். இது அவன் அனைத்தையும் காணும் பார்வையின் ஒரு கூறானது.

தனிமனிதனுக்கும் வரலாற்றுப் போக்குக்கும் இடையில் நிலவும் ஊடாட்டமே நாவலாசிரியனின் அக்கறை. நம் காலத்தின் வரலாற்று கட்டாயம் தெளிவடையத் துவங்கி விட்டது. ஒடுக்கியவர்களால் தம் உள்ளத்தினுள் எழுப்பப்பட்ட மௌனச் சுவற்றை உடைத்துக் கொண்டு ஒடுக்கப்பட்டவர்கள் தம்மை வெளிப்படுத்துகிறார்கள். சுரண்டலுக்கும் நவகாலனியத்துக்கும் எதிரான தம் போராட்டத்தில்- ஒன்றுபட்ட போராட்டத்தின் காரணமாகவும் அதன் மூலமாகவும் மட்டுமே-, அடிமையும் ஆண்டானும் ஒருவரையொருவர் சமத்துவச் சாத்தியத்தின் திகைப்பும் நம்பிக்கையும் கூடியவர்களாய் நெருங்கி வர முடியும்.

எனவேதான் கரீபியனிலிருந்தும் கரீபியனிலும் தாம் சுரண்டப்படுவதற்கு எதிராக போராடி வரும் மேற்கிந்தியர்களுடன் நான் இப்பரிசை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். கரீபியனில் புக்கர்களும் பிற கம்பெனிகளும் உருவாக்கியவற்றின் எலும்புகளிலிருந்து எழுந்த அமைப்புதான் பிளாக் பாந்தர் இயக்கம்: இப்பரிசை நான் கருஞ்சிறுத்தை அமைப்புடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். காரணம், அவர்களே கறுப்பர்களாகவும் உழைப்பாளர்களாகவும் ஒடுக்கப்பட்டவர்கள் மேலும் சுரண்டப்படுவதற்கு எதிராக போராடி வருகிறார்கள். புக்கர் மக்கானலின் செல்வத்தின் தோற்றுகையான கயானாவிலும் ட்ரினிடாடிலும் கரீபியன் நெடுகிலும் போராடி வருபவர்களுடன் இவர்கள் கறுமக்கள் தகவல் மையம் வழியே தொடர்பு வைத்திருக்கிறார்கள்: இப்படிப்பட்ட தொழிலாதாரங்கள் அனைத்தின் செல்வத்தையும் நாட்டுடமை ஆக்குவதே இப்போராட்டத்தின் நோக்கம்.

இது ஒரு இலக்கிய பரிசு என்பதைத் தவிர்த்து ஒரு கணம் சிந்தித்தால், இந்தப் பரிசின் தொகை மிகச் சொற்பம் என்பது என்னைப் போலவே உங்களுக்கும் தெரியும். ஐரோப்பாவின் குடியேற்றத் தொழிலாளர்கள் பற்றிய ஆய்வுக்கு பணம் மிக அவசியமாக இருக்கிறது. கருஞ்சிறுத்தைகளுக்கும் தம் செய்தித்தாள் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு பணம் தேவைப்படுகிறது. ஆனால், பரிசுத் தொகையை பகிர்ந்து கொள்வது எம் இருவரின் நோக்கமும் ஒன்றே என்பதைக் குறிக்கிறது. அந்த ஒரு விஷயத்தை இனங்காண்பதால் பல விஷயங்கள் தெளிவடைகின்றன. முடிவில்- துவக்கத்திலும்தான்- பணத்தை விட தெளிவே முக்கியத்துவம் வாய்ந்தது.

நன்றி : Verso 

சீஸர்

– ஆதவன் ம – 

நவாப்பழ மரத்தை சுற்றி சுற்றி வந்து மூக்கை விடைத்து முகர்ந்தது சீசர். முன்னங்கால் எக்கி மரத்தில் ஏற எத்தனித்தது. வேலு பெல்ட்டை இழுத்தான். கண்களை சுருக்கியடி தலையை குனிந்து மீண்டும் தரையை மோப்பம் பிடித்தது.

சின்னப்பையன் தன் அன்றைய வேலையைத் தொடங்கியிருந்தார். அவரைச் சுற்றி காகங்கள் எழுந்தமர்ந்து பறந்து கொண்டிருந்தன.

புலரியின் மஞ்சள் கீற்றுகள் கீழ் வானத்திலிருந்து வெளிவருவதை கம்மாய் மேட்டில் படுத்திருந்த மாடுகள் அசைபோட்டபடி பார்த்துக் கொண்டிருந்தன. எங்கும் மஞ்சளின் ஔிப்பிரவாகம். கழுத்தைத் திருப்பி கொம்பால் காகத்தை விரட்டியது பசு.றெக்கைகளை அறக்கப் பறக்க அடித்து தாழ்வாக பறந்த காகத்தை தாவி பிடிக்க முனைந்து தாவியது சீசர். காகம் பறந்து சென்று மரக்கிளையில் அமர்ந்து கரைந்தது. சீசர் சோகமான கேள்விக்குறியுடன் காகத்தைப் பார்த்து குரைத்தது. படிப்பகம் பூட்டிக் கிடந்தது. வேலு சீசரை இழுத்துக்கொண்டு நடந்தான்.

சந்திரன் கைகளில் தூக்குவாளியுடன் எதிரே வந்தார்.

‘என்னா மருமகனே, எங்கேயா’ என்று கேட்டுவிட்டு ‘ வெளிக்கா’ என்று நடந்து சென்றார்.

‘அத்தே, மாணிக்கம் எந்துருச்சுட்டானா’ என்றபடி வந்தான் வேலு.

‘என்னடா வெள்ளனயே வந்துருக்க’

‘ சீசர அவுத்துவிடனும்ல’

‘ ஏன், அண்ணே எங்க’

‘ அப்பா, கூட்டத்துக்கு போயிருக்காரு, நேத்தே போயிட்டாரு’

‘ டீ குடிக்கிறயா’

‘ வேணாந்த்த’

‘அந்தா தூங்குறான் பாரு, எளவு விடுஞ்சு நாயெல்லாம் வெளிய சுத்துற நேரமாயிருச்சு, இவனோட ஒடனொத்த பயலுகள்ளாம் காலைல கௌம்பி வீட்டுக்கு ஏதாவது கொடுக்கனுமே அப்டின்னு அலையிறானுக, இத பாரு தூக்கத்த’ என்றபடி காலால் எட்டி எழுப்பினாள்.

மாணிக்கம் தூங்கும் பாயில் இருந்து மூத்திர நாற்றம் அடித்தது. பிளாஸ்டிக் யையை போட்டுத்தான் படுப்பான். ஆனாலும் கைலியும் போர்வையும் நாறும். தினமும் துவைக்க தண்ணி கிடைக்காது. தண்ணீர் எடுக்க முக்கு கொழாயடிக்குதான் போகனும். நல்ல தண்ணிக்கு ஐயரம்மா வீட்ல கொடத்துக்கு ஒர்ருவா.

‘ மாமா எங்கத்த, படிப்பகத்துல காணாம்’ என்றபடி மாணிக்கத்தை எழுப்பினான்.

மாணிக்கமும் அதற்கே காத்துக் கொண்டிருந்தவன் போல எழுந்து பின்பக்கம் சென்றான். பின்பக்கம் என்பது ஒரு சிறு முற்றம். அதன் வலது மூலையில் சின்னச் சுவர் எழுப்பி, துணி மறைத்து கக்கூஸாக பயன்படுத்தினர். அதையொட்டி சிறு மேட்டில் பப்பாளி மரமும் முருங்கை மரமும் இருந்தன. அதையொட்டி மண் படிந்த திருக்கையும் பணியாரச்சட்டியும் கிடந்தன. மழைத் தண்ணீர் ஒழுகி ஏற்படுத்திய கருப்பு தடம் அதையொட்டிய மதில் சுவரில் தெரிந்தது.

அந்த மதிலுக்கு பின்னிருந்த சேட்டின் மரஅறுவை மில்லில், சனிக்கிழமை, அறுத்து மீந்த மரத்தூளை விற்பார்கள். வாங்கி வைத்துக் கொண்டால், மண்ணெண்ணை வாங்க முடியாத நேரத்தில் அதை எரித்துக் கொள்ளலாம். கனகம் வீட்டில் பெரும்பாலும் அடுப்பெரிவது டீ கொதிக்க வைக்கத்தான்.

வீடு என்பது ஒரு அறை, நீள்சதுர அறை. அதிலேயே கட்டில் போட்டு படுத்துக் கொண்டார்கள். அதையொட்டி யாரும் படிக்காத அரசியல் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. நீள் சதுரத்தின் வடக்கு பக்கத்தை ஒட்டி அடுப்படி. மண்ணெண்ணை அடுப்பு, கொஞ்ச பாத்திரங்கள் இருந்தன. தோசைக் கல்லும், டீக்கரை படிந்த பாத்திரமும் அடுப்பை ஒட்டி இருக்கும். மேற்கு பக்கத்தில் சிறு பானா வடிவில் மாணிக்கத்தின் முழங்காலை ஒட்டிய திண்டும் பானாவின் இரண்டு தாங்குகோடுகளை ஒட்டி கீழே கிடக்கும் கிடைக்கோடு அவன் கெண்டைக் கால் வரை இருக்கும். தெற்கு பக்கம் கண்ணாடி பாதரசம் ஓரத்தில் பிரிந்து இருப்பதை வீட்டுக்குள் நுழைபவரின் முதல் பார்வையில் படும்படி அவருக்கு இடப்பக்கம் மாட்டப்பட்டிருந்தது. அதையொட்டிய தென்மேற்கு மூலையில் பெஞ்சில் துண்டு மடிப்பதற்கு கிடக்கும். அறை என்று சொன்னால், கிடக்கும் பொருட்களையெல்லாம் எடுத்துவிட்டால் மொத்தமாக பத்து பேர் படுக்கலாம்.

மாணிக்கம் முகத்தை முருங்க மரக்கொடியில் காய்ந்த துண்டில் துடைத்தபடி வந்தான். பெஞ்சில் மேல் கிடந்த கவட்டையையும் எடுத்துக்கொண்டான். கனகம் அதை வேகமாக பிடுங்கப் போனாள். மாணிக்கம் பின்பக்கம் வைத்து மறைத்துக் கொண்டான்.

‘அத்தே விடுங்கத்த ‘ என்றான் வேலு

‘ஒனக்கு ஒன்னும் தெரியாது, இந்த சனியன வச்சுக்கிட்டு இந்த சனிய ஊர் வம்பெல்லாம் வெலக்கி வாங்குது’

அவனிடம் இருந்து பிடுங்க முடியாததினால் ‘என்னமோ செஞ்சு தொலங்க’ என்றாள்.

ஒரு கவரில் பழுத்த இரண்டு பப்பாளியையும், காயையும் போட்டு ‘அம்மாட்ட கொடு’ என்றாள் கனகம்.

இருவரும் நடந்து ஆத்துக்கு சென்றனர். மிகப் பழமையான படித்துறை படியில் வயதானவர்கள் சிலர் அமர்ந்திருந்தனர். தண்ணீர் ஒரு ஓரமாக ஓடிக்கொண்டிருந்தது. சீசரை மாணிக்கம் பிடித்திருந்தான். ‘நான் போயி ஆய் இருந்துட்டு வர்றேன், அதுக்கப்பறம் நீ போ ‘ என்று வேலு நடந்து ஆற்றில் வளர்ந்திருந்த ஒரு மறைவை தேடி அமர்ந்தான். மாணிக்கம் கரை ஓரத்தில் இருந்து கற்களை எடுத்து தேங்கியிருந்த தண்ணிரில் அடித்தான். பின்பு வானத்தை நோக்கி இலக்கில்லாமல் கற்களை கவட்டையால் விசிறினான்.

பத்மஸ்ரீ கமல்ஹாசன் நற்பணி மன்ற நிழற்குடையில், மயில் நிற கரு நீலமும் பஞ்சு மிட்டாய் நிற பார்டர் சேர்ந்த பட்டுச் சேலை கட்டி நின்றிருந்த அம்மாளின் முந்தானையை பிடித்தபடி ஒரு சிறுவன் கையில் கட்டியிருந்த கடிகாரத்தை தின்று கொண்டிருந்தான். முகத்தில் கண்ணிர் வழிந்த தடம் தெரிந்தது. ஒரு சிறு பெண், மாணிக்கத்தின் வயதிருக்கும், அவன் அக்காவாக இருக்கலாம், கையில் இருந்த மிட்டாயை சீசரை நோக்கி நீட்டி அழைத்தது. சீசர் அவர்களை நோக்கி இழுத்தது. இதுபோன்ற அடர் நிறங்கள் சீசரை ஈர்த்துவிடும். அது குரைத்த குரைப்பில் தங்கள் சின்னச் சிரிப்புகளை மறந்து குழந்தைகள் இவன் பக்கம் பார்த்தார்கள்.

தங்க பிரேம் கண்ணாடி அணிந்த ஒருவர் ஆட்டோ பிடித்து வந்தார். குழந்தைகள் எல்லாம் சீட்டுக்கு பின்னால் இருந்த திண்டில் ஏறி அமர போட்டி போட்டது. ஆட்டோ கிளம்பி சென்றது.

பஸ் ஸ்டாப்பிற்கு பின்னால் இருந்த கம்பெனியில் இருந்து கரும்புகை, புகைபோக்கி வழியாக வெளியேறியதும் நீண்ட ஊதொலி எழுப்பப்பட்டது. ஆற்றில் சாலையின் அடியில் சென்ற பெரிய சிமெண்ட் பைப்பில் இருந்து கறுப்புநிற கழிவு சென்று ஜீவமுக்தி அடைந்தது. சீசர் சத்தத்தை கேட்டு வாலை பின்னால் சொருகியபடி மாணிக்கத்தின் கால்களை சுற்றி வந்தது. கால்கள் ஈரத்தில் நனையும்படி நக்கியது.

சீசரின் உயர்ரக ஐரோப்பிய ஜாதிப் பண்புக்காகவே அதை நேசித்தார், வேலுவின் அப்பா. அதன் மின்னும் கறுப்பு நிறமும் அதற்கு அடைவு கட்டியது போன்று அமைந்த ‘காப்பிக்கலர்’ நிறத்திற்கும் அவர் சந்தோஷமாக செலவழிக்க தயாராய் இருந்தார். ஆனால் சிறியதாய் விடைக்காத காதுகளும் குட்டைக் காலுடன் நாட்டு நாயைப் போன்ற அதன் நடையும் அவரின் ஆசையை தடுத்தது. ஆனாலும் சீசருக்கு சாப்பாடு பிரச்சினையில்லை. அது கிடைத்தபோது உண்டது, கிடைக்காதபோது காதை மடக்கி, குழைந்து, கால்களை நக்கி பணிந்து நடக்க கற்றுக் கொண்டது .

மாணிக்கத்திடம் அதற்கு அளவற்ற வாஞ்சை. அவனைக் கண்டால் தலையை அவன் கால்களுக்குள் நுழைத்து பின் வெளிவந்து மேலேறி அவன் முகத்தை நோக்கி தாவும், முடியாமல், அவன் முன்னால் வந்து முகத்தை திருப்பி அவனைப் பார்த்தபடி வாலையும் பின்பக்கத்தையும் ஆட்டும். மாணிக்கத்திற்கும் அதனுடன் பெரும் பரிவு ஏற்பட்டு போய்விட்டது. இருவரும் ஒருவகையில் ஒன்றாகினார்கள்.

‘ டேய், ஒங்கப்பெனங்கடா, வீட்ல இருக்கானா’ என்றார் படியிலிருந்த எழுந்த வந்த கிழவனார்.

‘ இல்ல தாத்தா, அப்பா தெர்லியே…,’ என்றான்.

வேலு வந்தான், இவனும் வெளிக்கிருந்தபின் ஆற்றுக்குள் இருந்த ஓடுகாலில் குளித்தனர். சுற்றிலும் மாதுளையும், வேம்பும் புங்கனும் வைத்திருந்தனர். வாசலை ஒட்டி பன்னீர் மரம் வளர்ந்திருந்தது. அதற்கடுத்து பனைமரங்கள்.

 

வேலுவின் வீட்டுக்கு சென்றார்கள். வாசல் கேட்டில் சீசரை கட்டி போட்டுவிட்டு மாடியில் இருந்த அறைக்கு சென்றான் வேலு. மாணிக்கம் முன் வராந்தாவில் இருந்த பெஞ்சில் அமர்ந்தான். சுவரில் மார்க்ஸ் ஏங்கல்ஸ் படங்கள் வாசலுக்கு மேலே மாட்டப்பட்டிருந்தன. இரண்டுக்கும் நடுவில் வேலுவின் தாத்தா பிச்சையா சேர்வையின் படம் மாட்டியிருந்து. காய்ந்த கனகாம்பர மாலை இருந்தது. வேலுவின் அப்பா வீட்டில் இருந்தால், இந்நேரம் புதிய பூ மாற்றப்பட்டிருக்கும்.

சந்திரா ஒரு தட்டில் வடித்த சோறும் முட்டையும் பாலும் கொண்டு வந்தாள். மாடிக்கு ஏற திரும்பும் விசாலமான படியில் உட்கார்ந்து சோற்றில் முட்டையை உடைத்துப் போட்டு நன்றாக பிசைந்து பாலூற்றி சீசருக்கு வைத்தாள். மாணிக்கத்துக்கு சந்திரா தன்னை பார்ப்பது போன்ற பிரமை ஏற்ப்பட்டது. சிவப்பு நாக்கில் எச்சில் வழிய சீசர் நக்கித் தின்றது.

மேலேயிருந்து வேலு சிவப்பு நிற சட்டை ஒன்றை தூக்கிப் போட்டு ‘போட்டுக்கடா’ என்றான்.

‘ டேய் இப்டி கழட்டி கழட்டி போட்டுட்டு போனா யார் தொவைக்கிறது. இந்த சட்டைய போட்டுட்டு உன்னோடத கையிலய எடுத்துட்டு போயிரு’ என்றாள் பரமு.

மாணிக்கதுக்கு என்ன சொல்ல என தெரியவில்லை. நிமிர்ந்து சந்திராவை பார்த்தான். அவள் இவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள், லேசாக சிரிப்பது போலவும் இருந்தது.

‘எம்மா , நீ சும்மா இருக்க மாட்டியா, ஒனக்கு இப்ப என்ன’ என்றாள் சந்திரா.

மாணிக்கம் சட்டையை போட்டுக் கொண்டான்.

‘ஒனக்கென்னடி, இங்க தொவைக்கிறது நான்தான’

‘வாடா, சாப்புடலாம்’ என்றான் வேலு

‘இல்ல, எனக்கு பசிக்கல, அம்மா ஏதாவது செஞ்சுருக்கும்’

‘வாங்க சார், ரெம்பத்தான் பிகு பண்றீங்க, ஒங்கம்மா என்னத்த செஞ்சிருக்கப் போறா’ என்றாள் பரமு.

மாணிக்கத்திற்கு பசி வயித்தை கிள்ளியது.

இட்லி, மைய அரைத்த தக்காளிச் சட்னியுடன் கொஞ்சம் போல தேங்காய் சட்னி இருந்தது. இரண்டு தட்டுகள் இருந்தன, ஒன்றில் நான்கும் மற்றொன்றில் இரண்டு இட்லியும் இருந்தன. சிறியதாக இருந்த தட்டில் மாணிக்கம் உட்கார்ந்தான்.

‘ நீ தேங்காச் சட்னி சாப்பிடுவியா’ என்றாள் பரமு

‘ இல்ல அத்த, நான் சாப்புட மாட்டேன்’

இட்லி நன்றாக இருந்தது. ஒரு இட்டிலியை சாப்பிட்டவுடன் நன்றாக பசித்தது. அடுத்த இட்லியை மிக பொறுமையாக சாப்பிட்டான்.

‘ஏண்டா இட்டுலி புடிக்கலயா, பழைய கஞ்சி இருக்கு சாப்புடுறியா’

பழைய கஞ்சியில் பீ நாற்றம் அடித்தது. இருந்தாலும் பசித்தது, வாங்கி வேறு வைத்துவிட்டான். கூச்சமாகவும், சங்கடமாகவும் இருந்தது. வாசனையை பொருட்படுத்தாமல் சாப்பிட்டு முடித்தான்.

பள்ளத்தை நோக்கி நடந்து சென்றார்கள். இரண்டு பக்கமும் அலுமினிய பட்டறைகளின் சத்தமும் வாசனையும் வந்தது. மழைபெய்யும்போது எழும் மண்வாசம், மண்ணைத் தின்ன ஊறும் வெறி போல பற்களில் ஒரு நறநறப்பை உணர்ந்தான். சுண்ணாம்புக் கட்டிகளை வாயில் போட்டு மென்று தின்ன வேண்டும் என்ற வெறி ஏறியது.

கம்மாய்க்குள் ஷெரிப், கணேசன், தர்மராஜன், நிருபன் (எ) மேனேஜர், கருப்பு அமர்ந்திருந்தனர். அனைவருமே மாணிக்கத்தை விட பெரியவர்கள். தர்மராஜனும் கணேசனும் லோடுமேனாக இருக்கிறார்கள். தர்மராஜன்தான் கிரிக்கெட் கேப்டன். இருவரும் பள்ளத்து தெருவில் இருக்கிறார்கள்.

சற்றுத்தள்ளி இருந்த மரத்தினடியில் சின்னப்பையன் அமர்ந்திருந்தார். இரண்டு பக்கமும் மூன்று பொதிமூட்டைகள். அழுக்கு அடையாய் அப்பியிருந்தன. நெஞ்சு வரை சடைபிடித்துத் தொங்கும் தாடிமயிர் நரைத்திருந்தது. மூட்டையின் நிறத்திலேயே சட்டையும் வேட்டியும் கட்டியிருந்தார்.

கம்மாயை சுற்றி சேரும் குப்பைகள் முதல் பொட்டலத்தில் இருந்தது. முதல் பொட்டலத்தில் இருந்து தேவைப்படாத குப்பைகள் இரண்டாவதில். மூன்றாவது மிகப் பழையது. முதல் இரண்டு பொட்டலத்திற்கு சென்ற பொருட்கள் எப்பொழுதாவது தவறுதலாக கீழே விழுந்து பொருட்களின் உரிமையாளருகு சேரலாம். மூன்றாவது பொட்டலம் சின்னப்பையனுடைய சொத்து. என்ன செய்யலாம் என்பதுதான் சின்னப்பையனின் ஆகப்பெரிய சிக்கலாக இருந்தது. குப்பைகள் எங்கு இருந்தாலும் எடுத்துக்கொண்டு வந்து தரம் பிரித்து வைத்துக்கொள்வார். அவரைச் சுற்றி காக்காய்க் கூட்டம் ஒரு வளையம் போல அமர்ந்திருந்தது.

சின்னப்பையன் தீவிரமாக முதல் மூட்டையைப் பிரித்து அன்றைய அலுவலைப் பார்க்கத் தொடங்கினார். எப்பொழுதும் யாரிடமும் பேசுவதில்லை. பேசினால் ஒன்றும் புரியாது. விநோதமான மந்திரம் போன்ற லயத்துடன் இருக்கும். கூர்ந்து கவனித்தால் தான் அது கெட்ட வார்த்தை என்பது புரியும். சாப்பாடு கொடுத்தால் சாப்பிடமாட்டார். டீயும் கஞ்சாவும் வாங்கிக் கொடுத்தால் சொன்ன வேலையை செய்வார்.

மாணிக்கத்தை ஆட்டையில் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். அவன் எப்பொழுதுமே காவலுக்குத்தான். நிருபன் ஆட்டம் முடிந்தவுடன் மாணிக்கத்தை அழைத்துக்கொண்டு ரயில்வே தண்டவாளத்தை தாண்டி, ஆறும் கம்மாயும் சேறும் இடத்திற்கு செல்வான். நன்றாக தடித்து வளர்ந்து குடை விரித்திருக்கும் சீமக்கருவேல மரம் அவனுக்கு பிரியமானது. அதன் கீழே முட்கள் இல்லாமல் சுத்தமாக வைத்திருந்தான். இரண்டு கற்களுக்கிடையில் போடப்பட்ட சிமெண்ட் சிலாப்பில் அமர்ந்து கஞ்சாவை கசக்கி தூளாக்கி பீடியில் ஏற்றி பற்ற வைத்து இழுப்பான். பின்பு மாணிக்கத்தின் தொடைகளைத் தடவி கைகளால் பின்புறத்தை தடவுவான்.

முதல் முறை இங்கு அவர்கள் வந்தபொழுது அன்று தேய்பிறையின் நான்காம் நாள். அடர்த்தியான திரவமாய் காற்று நகராமல் இருந்தது. வரும்பொழுதே மரணவிலாஸில் முட்டை புரோட்டாவும், ஈரலும் வாங்கி வந்திருந்தனர். அன்று எழுந்த முதல் எண்ணம் கைகளை தட்டி விட்டு ஓடத்தான் நினைத்தான். ஆனால், பிரிக்கப்படாத பொட்டலங்களை கடந்து அவனால் செல்ல முடியவில்லை. அன்று பசி அடங்கவே இல்லை. மீண்டும் கடைக்கு சென்று ஆளுக்கு நான்கு புரோட்டாவும் குடலும் சாப்பிட்டார்கள்.

நிருபனின் அப்பாவும் வேலுவின் அப்பாவும் சிறு பட்டறைகள் நடத்திக் கொண்டிருந்தார்கள். நிருபன் ஆளானதும் சக்கரவர்த்தி அவனுக்கு சிறு உணவகத்தை போட்டு கொடுத்தார். நான்கு டேபிள் போட்டு, வெளியே தோசைக்கல் போட்டு கூரை வேய்ந்து முக்கில் ஈவ்னிங் மட்டன் ஸ்டால் தொடங்கினான். சாயுங்காலங்களில் வெட்டியாய் ஊரைச் சுற்றி இரவில் அகாலத்தில் தேடிச் சென்று புரோட்டாவும் ஆட்டுக்குடலும் சாப்பிட்டு வருவதற்கு பதிலாக இது நல்ல ஏற்பாடாகவே தோன்றியது நிருபனுக்கு.

எண்ணெயில் சோம்பு பட்டை லவங்கம் பொரிய வெங்காயம் தாளித்து, அரிந்த தக்காளிப் போட்டு மசாலாப்பொடிகளை எண்ணெய் ஊறி வர ,ஈரலைப் போட்டு வதக்கி, வெந்துவிடுமுன் தண்ணீர் ஊற்றி அரைத்த தேங்காய் ஊற்றி கொழுப்பு போட்டு அம்மா வைக்கும் ஈரல் குழம்பின் சுவையை அடித்துக் கொள்ள முடியாது. காரம் குறைந்த குடல் குழம்பு, கூட்டி வைத்த குழம்பு, மட்டன் சுக்கா என கடை ஆரம்பித்த கொஞ்ச நாளில் வியாபாரம் நன்றாக இருந்தது. பின்னர் சுற்றிலும் இருந்த அலுமினியசில்வர் பட்டறையில் வேலை செய்பவர்களுக்காக மதியமும் காலையும் கடையை விரிவாக்க வேண்டியதாக இருந்தது.

நிருபனின் தாத்தாவும் மாணிக்கத்தின் தாத்தாவும் தான் கட்சி வளர அங்கு வேலை செய்தவர்கள். கோட்ஸில் தொழிற்சங்க பணிகளில் முழுமையாக தொண்டாற்றினார்கள். ரயில்வே தொழிலாளர் போரட்டத்தின்போது ரயில் மறிப்பை முன்னின்று செய்து சிறை சென்று வந்தார் மாணிக்கத்தின் தாத்தா. ஆனால் காலம் செல்லும் திசையின் விசையை அறியாதவராய் இருந்தார். நிச்சயமாக ஏற்படப் போகும் சோசலிச அரசாங்கத்தினால் தனிமனித கவலைகள் தீர்ந்து போய்விடும் என்று உறுதியாக நம்பினார்.

தர்மர் கையில் இருந்த காசில் மலிவாய் வந்த இடத்தை வாங்கிப் போட்டார். சிறு பட்டறை ஒன்றை ஆரம்பித்துவிடடு கட்சி அனுதாபியாக மாறினார். இப்பொழுது கட்சி செல்லும் திசையை தீர்மானிக்கும் ஒரு விசையாகவும் வளர்ந்து விட்டார்.

‘ என்னடா, நேத்து கூட்டத்துக்கு வர்ல’ என்றார் மேனேஜர்

‘ பள்ளிக்கூடத்துக்கு போய்ட்டேன்’ என்றான் மாணிக்கம்.

வேலு, ‘இப்ப நாங்க திமுக’ என்றான்

‘ ஆமா பெரிய்ய மசுரு’

‘ ஏண்டா, ஏற்கனவே ஒங்க மாமாவ கட்சிக்குள்ள இழுத்துட்டு அந்த வைரவமணி ஆடுற ஆட்டம் தாங்க முடியல. போற எடத்துலலெல்லாம் குத்தி காமிக்கிறாங்க’ என்றார் மேனேஜர்.

‘இல்லண்ணே இப்பலா திமுகதான் மரியாத’

கல் குவியலை தன் பக்கத்தில் சேர்த்து வைத்துக்கொண்டு சுவாதீனமில்லாமல் கை அசைய இழுத்து விட்டுக் கொண்டிருந்தான் மாணிக்கம்.

‘ ஏண்ணே, இவங்க மாமாவ இந்திக்காரங்க கட்டி வச்சு அடச்சாங்கலாமே புனாவுல, அதுனாலதான் அங்க பதிவிலா கொடுத்து வச்சுருக்காங்க’ என்றான் கணேசன்

‘ ஆமா பெரிய்ய பதவி மயிரு, வேலைக்கு போன எடத்துல சூசுவான்னு இருந்துட்டு வாராமா அங்கன ஒரு பட்றய போட்டுட்டான். அண்ணங்காரனுங்க சும்மா இருப்பானுங்களா, அடி பிருச்சு எடுத்துட்டாங்க. அப்டியே வேல பாக்குற மொதலாளிட்டிட்டயும் போட்டு விட்டாங்க, அந்தாளு தொறத்தி விட்டுட்டான். இங்க வந்தப்ப பாக்கனுமே ஏதோ கேதம் விசாரிக்க வந்த மாதிரில்ல இருந்தான், டேய் ஒன் சூத்த சாத்திட்டு சும்மா இருக்க மாட்டியா, பெரிய்ய வௌக்கன்ன மயிரு’ என்றான்.

மாணிக்கம் அடித்த ஒரு கல்லில் அடிபட்டு சின்னப்பையனைச் சுற்றி அமர்ந்திருந்த காகம் கீழே விழுந்தது. சின்னப்பையன் தன் அலுவலை விட்டு மாணிக்கத்தைப் பார்த்தார். லேசாக சிரித்தது போல் மீசை வலைந்திருந்தது. மீண்டும் பொட்டலத்தை கிண்டத் தொடங்கினார். மாணிக்கத்திற்கு உடல் லேசாக நடுங்கியது.

அனைவரும் அமைதியானார்கள். கருப்பும் தர்மனும் எழுந்து ஓடினார்கள்.

‘ண்ணெ, நீ என்ன வேன்னா சொல்லு, இனி நாங்க தான்’ என்றான் வேலு.

‘அதுவும் சரிதாண்டா, இனி குருட்டு பயலுக்கு போட்டியே இல்ல’

குட்டை போல் தேங்கியிருந்த நீரின் ஒரத்தில் களி மண்ணில் வயிற்றை பரப்பி சுகமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது கருப்பு நாய். மாணிக்கத்துக்கு சீசர் ஞாபகம் வந்தது. சீசரின் நிறமும் முடியும் குணத்தில் பாதியும் அப்பாவுடையது. அசப்பில் வெளிநாட்டு நாய் போலவே இருக்கும். ஆனால் சாப்பாட்டில் எந்த பாரபட்சமும் இல்லை. அதில் அம்மாவைப் போல. மாணிக்கத்திடம் பாசமாக இருக்கும். மாமா காலையில் கழட்டி விடுவார். நேராக மாணிக்கத்தின் வீட்டுக்கு வந்து கதவை தட்டி எழுப்பும். பின்பு மாணிக்கம் கூட்டிக் கொண்டு ஆற்றிற்கு போவான். காலை நடையும் கடனும் தீர்ந்திபின் மாமா வீட்டில் கட்டி விட்டு பள்ளிக்கு கிளம்புவான்.

ஒருமுறை எப்போதும்போல மூத்திரம் பெய்யும் திண்டில் இருந்துவிட்டு அலைந்தது. ஒரு பெண் நாய் இதை நோக்கி வந்தது. மெல்ல கால்களையும் சுற்றி சுற்றி வந்து மூக்கையும் முகர்ந்தது. நாக்கால் முகத்தை நக்கியது. பின்பு திரும்பி தன் பின் பக்கத்தை ஆட்டியது. சீசர் முகர்ந்தது. வாலை தூக்கி ஏதோ ஒன்றை பீச்சியது. வடிந்த திரவத்தை நக்கிய சீசர் பரவசமானது. ஆனால் பெண் நகர்ந்து சென்றது, சீசரும் முன்னால் செல்ல முனைந்து இழுத்தது. மாணிக்கம் இழுத்து பிடித்தபோது அவன் மேல் தாடை பற்களை பயங்கரமாக தெரிய திறந்தபடி குறைத்து தாவியது. சங்கிலியை விட்டு விட்டு தலைதெறிக்க ஓடி வந்தான். அதற்குபின் ‘அவர்கள்’ வீட்டில் இருந்து யாராவது கூடவே வர வேண்டும்.

பொதுவாக வேலுவின் அப்பாவிற்கு நாய் வளர்க்க பிடிக்காது. ஆனால் இது போன்ற உயர்ஜாதி நாய்களின் மேல் ஒரு பிரேமை. அதுவும் உலகத்திற்கு புது வெளிச்சத்தை காட்டிய ஐரோப்பிய நாய்கள் மீது தனி பிரேமை.

இடது கண் பிய்த்தெறியப்பட்டிருந்த காகத்தை எடுத்துக்கொண்டு நிருபனும் தர்மராஜனும் கருப்பும் தம் வழக்கமான இடத்திற்கு சென்றனர்.

வேலு சாப்பிட சென்றான். மாணிக்கம் பள்ளத்து தெருவிற்குள் சென்றான். நடந்து அப்படியே ஆற்றுக்குள் இறங்கினான். வெயில் அவ்வளவாக இல்லை, இருந்தும் கிறக்கமாக இருந்தது. கரையையொட்டி மாடுகள் கட்டப்பட்டிருந்தன. பாதரசம் உதிர்ந்து போயிருந்த கண்ணாடியின் பின்பக்கம் போல கிடந்தது ஆற்றுப் படுகை. யாருக்கும் எந்த கட்டுப்பாடும் கிடையாது. காடாய் மண்டியிருந்த படுகையின் ஒரு ஓரத்தில் சாக்கடை நீர் கரை புரண்டு ஓடியது. குப்பை, மாட்டு சாணம், மலஜல தீர்த்தம் என்று மணத்தது. ஆழ மூச்சை இழுத்து ஆற்றை சுவாசித்தபின் தேங்கியிருந்த குட்டைக்கருகில் சென்றான்.

பாலத்தின் தெற்கே முழுவதும் வண்ணான் தொட்டிகள், அதை ஒட்டி கிணறுகள். சிலர் அந்த நேரத்திலும் துவைத்துக் கொண்டிருந்தார்கள். ஆத்துக்கு அக்கரையில் இருப்பவர்கள். பசும்புல் தரையில் வண்ண வண்ண நிறங்களில் துணிகள் காய்ந்து கொண்டிருந்தன. அங்கு ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். அதற்கு அருகில் சென்றான். தரையில் ஆங்காங்கே அனைத்து கட்சி கொடிகளும் கிடந்தன, காங்கிரஸ் கொடியைத் தவிர.

‘இங்கென்னடா பண்ற’ யாருடனோ பேசிக் கொண்டிருந்த வேலுவன் மாமா திரும்பிக் கேட்டார்.

‘சும்மாதான் மாமா’

‘செரிய்யா சாயங்காலத்துக்குள்ள காஞ்சுருமா, நைட்டு மீட்டிங் இருக்குய்யா’

‘அதெல்லாம் தாராளமா ஆயிரும்யா, நீங்க கவலப்படாதீங்க’

‘அப்ப சேரி, நான் சாயங்காலம் ஆளனுப்புறேன்’ என்று பையில் இருந்து காசை எண்ணி கொடுத்தார்.

மாணிக்கத்திற்கு சந்தோஷமாக இருந்தது.

‘சாப்பிட்யாடா, சாப்புட போவோமா’ என்றபடி அவனுடைய பதிலை எதிர்பாராமல் கரைக்கு நடந்து சென்றார்.

ஆனிமாத நடுப்பகலின் உள்ள வானத்தின் நீலத்தில் குறுக்காக ஒழுங்கில்லாமல் செல்லும் வெள்ளைக் கோடுகள் கொண்ட சட்டைக்கு கருப்பு நிற பேண்ட் போட்டிருந்தார். கைகளை முழங்கை வரைக்கும் மடித்துவிட்டு அலட்சியமான கவர்ச்சியுடன் இருந்தார். அடர்த்தியான மீசை, நெளிநெளிவான மேடு பள்ளமான அடர்த்தியான தலைமுடி வாரப்பட்டு நெடுநேரமாகியிருந்தது. உதட்டை ஒட்டிய மருவில் பூனை மயிர் இரண்டு வளர்ந்திருந்தததை வெட்டியிருந்தார். மாநிறம். எதை பற்றியும் கவலைப்படாமல் தனக்குள் ஆழ்ந்து ஏதோ ஒரு யோசனையில் முழ்கியபடி நடந்து சென்றவர் பின்னால் மாணிக்கமும் நடந்து சென்றான். சைக்கிளில் ஏறி வலது காலை எக்கி ஊன்றியபடி காத்திருந்தார். இவனைப் பார்த்தவுடன் பெடலை மிதித்து அழுத்த, மாணிக்கம் ஓடிப்போய் தாவி கேரியரில் அமர்ந்தான்.

‘என்னடா சாப்புடுற’

‘வாங்க மாபள, என்ன மருமகன் எளச்சுபோயிட்டிய’ என்றார் கல்லாவில் அமர்ந்திருந்த தர்மர்.

‘மாமா, எனக்கு பிரியாணி, இவனுக்கு புரோட்டா கொடுத்துருங்க, கொடல் இருக்கா, அது ஒன்னு, சுக்கா ஒன்னு’

‘கொடலு தீந்துருச்சு மாப்ள, மாங்கா சாப்றீங்களா’

‘தோப்ஜாவா’ என்று சிரித்தார்

‘ ஆமாய்யா மாமன் தோப்ஜாவத்தான் போடனும்’ என்று சிரித்தார் தர்மர்.

‘ஏண்டா, இப்படி அழுக்கு சட்டைய போட்டுக்கிட்டு சுத்துற, ஒங்கப்பெங்கடா’

மாணிக்கம் எதுவும் பேசவில்லை. இலையை விரித்து தண்ணீர் தெளித்து புரோட்டாவையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

‘ இன்னைக்கி நைட்டு கூட்டம் இருக்கு, வர்றியா’

‘ சேரி மாமா’

பிரியாணியும் சுக்காவும் வந்தது. அதில் கொஞ்சத்தை எடுத்து மாணிக்கத்தின் இலையில் வைத்தார்.

‘வரும்போது நாலஞ்சு பேர கூட்டிட்டு வா, நான் வேலுட்டயும் சொல்லிருக்கேன்’ என்றார்

சாயுங்காலமே அறுபதடி சாலை கூட்டமாக இருந்தது. இரவில் தான் கூட்டம். எதிர்கட்சிகள் அனைத்தும் இணைந்து நடத்தும் கூட்டம் என்பதினால் எல்லாக்கொடிகளும் கம்பங்களில் கட்டப்பட்டிருந்தன. ராமன் போட்ட சாரத்தில் மேடை ஏறிக்கொண்டிருந்தது. ஒருவித பரபரப்பான சூழ்நிலை உருவாகியிருந்தது. வேலுவின் மாமாவை சுற்றி நிருபனும் கருப்பும் நின்று கொண் டிருந்தார்கள். மாணிக்கத்துடன் செந்திலும் அழகரும் வந்தனர். கருப்புடன் இருவரும் கொடிகளை வாங்கச் சென்றனர். வேலு எங்கு சென்றான் எனத் தெரியவில்லை.

வானம் அடர்ந்த நீலத்துடன் இருந்தது. இப்பொழுது மழை பெய்ய வேண்டும் என எண்ணிக்கொண்டான்.

‘சே, வானம் வேற இப்டி இருக்கே, மழ வந்தா என்னா பண்ண’ என்றான் நிருபன்

‘பாக்கலாம், மழ வந்தா வருட்டும்டா’ என்றான் சந்திரன்

‘ எப்பயும் இப்டி ஒரு அசால்டாண்ணே’

‘ வேற என்ன செய்ய, மழையில நனைஞ்சு பின்னாடி எல்லாக்க கூட்டம் ஓங்கடைக்குத்தான்டா வரும்’

‘ ஆ, அது வேற ஒன்னு இருக்குல்ல…. ஏன் அண்னே எப்டி அத மறந்தேன்’

‘ டேய் அதுக்குத்தான் மண்டையில ஒன்னும் இருக்ககூடாதன்றது, ரொம்ப அறிவாளியா இருந்தா, தேவையான அறிவு இருக்காது’

‘ நீங்கதான்னே அறிவாளி, நான் என்னாண்ணே’

‘அப்ப வா, நம்ம கட்சிக்கு’

‘அது ஆகாதுன்னே, அப்பாவுக்கு தெருஞ்சா அவ்ளவுதான்’

‘அப்ப என்ன மயித்துக்கு என்ன பத்தி தேவையில்லாதத பேசிட்டுருக்க’
நிருபன் மாணிக்கத்தை பார்த்தான்.

‘இங்க… இங்க பார்றா, இனி இந்த மாறி ஏதாவது என் காதுக்கு வந்துச்சு மென்னிய முறுச்சுருவேன்’

‘ இல்லன்ணே, யாரோ தப்பா சொல்லிருக்காங்கனே’ என்று கண்கலங்கினான்.

‘சேரி விடு, நாம ஆகுற வேலய பாப்போம்’

மேடை போடப்பட்டிருந்தது, பின்னால் வெள்ளைத் துணியைக் கட்டி ஓர அலங்காரங்களை ஈர்க்கால் குத்திக்கொண்டிருந்தான் ராமன். கீழே இருந்து செல்வம் அவனுக்கு துணியை ஒதுக்கி விட்டபடி ஈர்க்கை கொடுத்துக் கொண்டிருந்தான்.

‘என்னா ராமா, மழ வரும்போல தோணுதே’ என்றான் சந்திரன்.

‘ஆமாண்ணே அப்டிதான் இருக்கு’ என்றபோதே மழை பெய்யத் தொடங்கியது. அனைவரும் கலைந்து ஓடத் தொடங்கினார்கள். ஆலமரத்தின் கீழும் மரணவிலாஸிலும் ஆறுமுகம் டீக்கடையிலும் ஓடியவர்கள் ஏறி நின்றார்கள்.

மழை விடும்பொழுது அருணாச்சலம் வந்தார். அருணாச்சலம் சந்திரன் கட்சியின் மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர்.
எட்டு மணிக்கு மேல் தான் முக்கிய பேச்சாளர்களும் தலைவர்களும் வருவது.

இனி இந்த மழை வராது என்பது போல் வானம் கலைந்து எறிந்த துணி போல் கிடந்தது. அருணாச்சலம் ரோஜா நிற சட்டை போட்டிருந்தார். கையில் தங்க பிரேஸ்லட். நனைந்த தலைமுடியை ஏர்நெத்தியில் இருந்து ஏற்றி விட்டார். வெள்ளையாக தடித்து போதையில் கண்கள் இலக்கில்லாமல் இருந்தது. உதடுகள் வெத்தலைக் கறையால் சிவந்திருந்தது.

‘என்னாடா, இன்னும் மழ வருமா’

‘வராதுன்னுதான் தோனுதுண்ணே’

கையில் கட்டியிருந்த கடிகாரத்தின் கண்ணாடியை துடைத்துவிட்டு மணிக்கட்டை மடக்கி மணி பார்த்தார்.

‘இன்னும் ஒன்றமண்நேரமாவது ஆகுமாப்பா’

‘ஆகும்ணே’

‘பையன் ஆரு’

‘சொந்தக்காரப் பயந்தான், ஏதாவது சாப்றீங்களா’

‘சாப்டலாம், அண்ணே வர்ற நேராகும்ல’

‘ஆமாண்ணே’

‘ஆமா என்ன ஏதும் இருக்கா’

‘சாராயம் இருக்கு’

‘நம்ம காச்சுனதா’

‘ஒருவகையில அப்டித்தான்’

‘அப்ப அத வர்றவனுக்கு கொடுத்துரு, வேற என்ன இருக்கு’

‘கள்ளு வேணும்னா காலேல சொல்லிருக்கனும், வேற சிவபானம் தான் இருக்கு’

‘கடசீல பரதேசியாக்கிருவீங்கப் போல, சேரி வா, என்ன பண்ண’ என முகம் வீங்க சிரித்தார்.

வளர்பிறையின் சிறு கீற்றை மறைத்து வெளிப்பட்டு கடந்து கொண்டிருந்தது மேகம். இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே கிடப்பது எனத் தெரியவில்லை மாணிக்கத்திற்கு. நாளை காலையில் வேகமாக கிளம்பி பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று தோன்றியதுமே மனம் கனத்தது. காலையையும் வெளிச்சத்தையும் நினைக்க மனம் கூசியது. இந்த உலகம் வெறும் இரவுகளால் நிரம்பியதாக ஏன் இருக்கக்கூடாது.

ஆனாலும் காலையில் சென்றுதான் ஆக வேண்டும். சந்திராவின் ஞாபகம் வந்தது. தன் இடுப்பு பகுதியில் ஊர்ந்து மேயும் வெற்றிலை உதட்டுக்காரரின் கைகளை உணர்ந்தான். சந்திரா என்ன செய்து கொண்டிருப்பாள், இந்நேரம், இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு படுத்தபடி தன்னை பற்றி எண்ணிக் கொண்டிருப்பாள் என தோன்ற உடல் சிலிர்த்தது.

சந்திராவும் மாணிக்கமும் திருவாப்புடையார் கோவிலுக்கு சென்றிருந்தனர். ஏழாம் நாளான பாவாடை தரிசனத்திற்கு அம்மன் சந்நிதி முன் கூட்டம் முண்டியடித்தது.

எங்கும் பூக்கள் கசங்கி எழும் நாற்றமும் குங்கும விபூதி தரித்த உடல்களில் எழும் வியர்வையின் நெடியும் கலந்திருந்தது. இவற்றினூடாக அனைத்தையும் கடந்து நிற்கும் தூய பெண் வாடை.

மாணிக்கத்திற்கு மூச்சடைத்தது. கூட்டம் கசக்கித் தள்ளியது. திடீரென்று வயிற்றுக்குள் சுழன்றெழும் பந்தொன்றை உணர்ந்தான். பின் முதுகில் அழுத்தும் சந்திராவின் மார்பகம். அலையும் அவள் கைகள் மேய்ந்து அவனை உணர்ந்தது. அவனுடைய கைகளை பற்றி தன் கால்களுக்கிடையில் வைத்துக் கொண்டாள்.

வயிறு பசித்தது.

‘என்னடா பசிக்குதா ‘ என்றார் அருணாச்சலம்.

ஆமாம் என தலையாட்டினான்.

‘சேரி வா சாப்டுவோம்’ என அவனை உட்கார வைத்துக் கொண்டார். புரோட்டாவைப் பிரித்து அவன் மடி மீது வைத்துவிட்டு அதில் ஈரல் குழம்பை ஊற்றினான் நிருபன்.

வானம் கலையத் தொடங்கியது. மேல் பரப்பு நீங்கி சென்றதும் அடிப்பரப்பிலிருந்து தூறல் விழுந்து கொண்டிருந்தது. காகங்கள் நவ்வாப்பழ மரத்திலிருந்து கரைந்தது பெரிய தொந்தரவாக இருந்தது. கட்சி அலுவலகத்தின் பின்புறம் நின்றிருந்த நவ்வாப்பழ மரம் நீண்டு தடித்த பழங்களை கொட்டும். மாணிக்கம் காலையிலே வந்து அறை வாசலை கூட்டிப் பெருக்கி பழங்களை பொறுக்கி பேப்பரில் போட்டுக்கொள்வான். பின்பு பள்ளிக்கு சென்றுவிட்டு சாயுங்காலம் மேல் தான் வருவான். ஒரு வாரமாகத்தான் இந்த கரைதல்.

‘டேய், அங்க எவண்டா, அந்த சனியன தொரத்தி விடுங்கடா’ என்றார் அருணாச்சலம்.

‘ண்ணே, காக்காக் கூட்ட கழச்சோம்னா, அது நல்ல பாம்பு மாதிரி விடாது, தொரத்தி தொரத்தி கொத்தும்’

‘என்னய்யா, எந்த காலத்துல இருக்கீங்க’

‘சத்தியம்னே, நான் கண்ணால பாத்துருக்கேன்’

‘அப்டியா’ என்று தன் சிந்தனையை கொஞ்சம் காக்காயை நோக்கி திருப்பிவிட்டு எழுந்து வெளியே சென்றார். சிகரெட்டை பற்றவைத்தபடி வராண்டாவில் நடந்தார். காக்காய் ஒன்று தாழ்வாக பறந்து தலையை உரசி செல்ல உடலில் ஒரு நடுக்கம் தோன்றியது. உள்ளே சென்று மேஜையில் அமர்ந்து ஆழ்ந்து புகைத்தார்.

‘சந்திரன் அந்த காக்கா கூட்ட கழச்சு விடுய்யா’ என்றார் வாசலில் நுழைந்த சந்திரனிடம்.

‘ண்ணே, பாவத்த அதப் போய்ட்டு எதுக்குண்னே’

‘யோவ், சொன்னத செய்யா, நீயும் இவங்க மாறி வளவளன்னு பேசிக்கட்டு’

‘சேரிண்ணே’

காக்காய்கள் காலையிலே தங்களுடைய கரைச்சலைத் தொடங்கிவிட்டது. மாணிக்கத்தைச் சுற்றி வேலுவும் அழகரும் நின்றிருந்தார்கள். வேலுவின் கைகளில் சீசர் இருந்தது. மாணிக்கம் கைகளில் இருந்த உண்டி வில்லால் கிளையில் அமர்ந்திருந்த காக்காயை அடித்தான். அது அந்த கிளையை அசைக்க காக்காய்கள் மேலெழுந்தகு பறந்தன. வேலுவிற்கு பதற்றமாக இருந்தது. ஆனாலும் வெளியே காண்பிக்கவில்லை.

‘டேய் என்னத்த அடிக்கிற, காக்கா கூட்ட பாத்து வீசுடா’ என்றான். பின்பு ‘ இங்கத்தா’ என்று கவட்டையால் குறிப் பார்த்தான். கற்கள் அந்தரத்தில் இரண்டு முறை பறந்து தரையில் விழுந்தன. மாணிக்கம் அடித்த கல் நேராக சென்று கூட்டை கலைத்தது. குச்சி ஒன்று அசைந்தது. இரண்டு மூன்று கற்களை தொடர்ச்சியாக அதன் மீது வீசினான். காக்காய்கள் அனைத்தும் மரத்தில் இருந்து எழுந்து அந்தரத்தில் பறந்தபடி கரைந்தன. தைரியம் கொண்ட சில தாழ்வாக பறந்து அவர்ளை தோக்கி வந்து சிறகால் வீசியன. மேலேயிருந்து சிறு சிறு குச்சிகளுடன் இரண்டு காக்காய் குஞ்சுகள் நிலத்தில் விழுந்தன. சீசர் பாய்ந்து சென்று காக்காய்க்குஞ்சை கவ்வியபடி ஓடியது. சில காக்காய்கள் சீசரை துரத்தியடி பறந்தன. மற்றவை மாணிக்கத்தை நோக்கி பறந்து வந்தன. தாய் காக்காய் குஞ்சு கீழே விழுந்த இடத்தில் தத்தி தத்தி நடந்தது. அலகால் கீழே விழுந்த குச்சிகளை எடுத்துக்கொண்டு மேலேப் பறந்தது.

வேலுவும் அழகரும் எங்கு சென்றனர் எனத் தெரியவில்லை. மாணிக்கம் கம்மாயைப் பார்த்து ஓடத் தொடங்கினான். காக்காய்கள் அவன் தலையைக் கொத்தியபடி பறந்து வந்தன. கைகளால் தட்டியடி முன்னாடி ஓடிக் கொண்டிருந்தான். கம்மாய்க்கரையிலிருந்து சீசர் நாக்கால் வாயைத் துடைத்தபடி அவனை நோக்கி ஓடி வந்தது. மெல்ல ஆறுதல் அடைய காக்காய்கள் சின்னப்பையன் அமர்ந்திருந்த மரத்தில் மேலேறி அமர்ந்து கரைந்தது.

சின்னப்பையன் கீழே விழுந்திருந்த கவட்டையை எடுத்து முதல் மூட்டைக்குள் போட்டார். உள்ளேயிருந்த குப்பைகளை சிதற வெளியே எடுத்து போட்டுவிட்டு கவட்டையை மீண்டும் கண்டடைந்த ஆச்சர்யத்துடன் இரண்டாம் மூட்டைக்குள் போட்டுவிட்டு, கீழே சிதறியிருந்த குப்பைகளை பதற்றத்துடன் மாணிக்கத்தை பார்த்தபடி அள்ளிப்போட்டோர். முகம் கலவரமாகவே இருந்தது.

இரண்டாம் மூட்டையை பிரித்து கவட்டையை மூன்றாவது மூட்டைக்குள் போட்டபின் உதறிக்கொண்டிருந்த அவர் உடல் நிதானமடைந்தது. முகத்தில் பூரண பரவசம். நார் போன்ற மீசையை ஒதுக்கிவிட்டு மாணிக்கத்தைப் பார்த்து சிரித்தார். புலரியின் ரேகைகள் அவர் முகத்தின் மீது படிந்து ஔிர்ந்தது.

அச்சாரம்

– பூவன்னா சந்திரசேகர் – 

“மணி ஆறாச்சு. ஊராளக பூராம் மேய்ச்ச முடிச்சு அது அத கொண்டாந்து கசாலையில கட்டிட்டாக. காலையிலே நீச்சத் தண்ணிய வெறும் வயித்துல குடிச்சுட்டு போன மனுஷன பொழுதடைஞ்சும் இன்னும் காணோம். இப்பிடி ஆடாக்கும் மாடாக்கும்னே அலைஞ்சா, அந்த உடம்புதான் என்னத்துக்கு ஆகுறது?”

மாட்டுக் கசாலையை கூட்டிபெருக்கி முடித்து விட்டு மாட்டுக்கு காடித்தண்ணியில் புண்ணாக்கு கொட்டி கலக்கிக் கொண்டிருந்தாள் காளியம்மா. அறுவடை முடித்து ஒருவார காலமே ஆயிருந்தது. அவர்களது முப்பது சென்ட் நிலத்தில் விளைந்த நெல்லின் குட்டிக் குவியல் வாசலில் தார்ப்பாய் விரிப்பில் கொட்டிக் கிடந்தது.
மூன்று பத்தி வீடு. முதல் பத்தி இருப்பு. ரெண்டாம் பத்தி கிடங்கு. மூன்றாம் பத்தி கைவிடப்பட்டது. முழுக்க வவ்வால் மூத்திர வாடை. கீரிப்பிள்ளைகள் நடமாட்டம். அரவுகளின் ஊர்வு சில சமயம்.

பனியிறங்கத் துவங்கிவிட்டிருந்தது. மார்கழி மாத பாவனை அது. மஞ்சள் விழுங்கி மெல்ல வெள்ளுரு சுமக்கத் துவங்கிருந்தது மேலை வானம். கருப்பையா, கதிர் தாளை மிதித்து நசுக்கி மேய்ச்சலில் இருந்து மீண்டு வந்து கொண்டிருந்தார். அவர் கழுத்தில் சரடாக சாரதி துண்டு ஒன்று தழுவலாய்க் கிடந்தது. மாடுகளின் கழுத்துப்பட்டை மணியோசை கிணிங்…கிணிங்…கிணிங்….

சத்யாவின் ஆசை மாடு ஒய்த்தக்கா அவரின் நடையை ஒத்து உடன் ஒரு நாய்க்குட்டி போல சிலுப்பிக்கொண்டே வந்தது. அவருக்கு பிரியமான காரி மாடு அது. வீட்டுத் தொழுவத்திலே தான் பிறந்தது. ஒரு எட்டு வயசிருக்கும். கடவாய்ப் பல்லெல்லாம் போட்ட தொழுவத் தாய் மாடு. எவற்றுக்கும் மூப்பு. ராணி.பனைமட்டை எரித்த கருஞ்சாம்பல் நிறம். நெற்றியில் மட்டும் வெற்றிலை அளவு வெள்ளை கிரீடம். நிஜமாகவே ராணிதான். மகாராணி. இப்போதும் கன்று ஈந்திருந்தது. ஐந்தாவது ஈத்து.

கட்டுத்தளையில் கட்டிக் கிடந்த மரைக்கன்று, முளைக்குச்சி பிடிங்கும் ஆர்ப்பரிப்போடு ஆத்தாக்காரியின் அருகாமை உணர்ந்தமையினால் மாப்போட்டுக் கொண்டிருந்தது. கன்றின் நெற்றியில் கூட ஒரு கொழுந்து வெற்றிலை அளவில் வெள்ளை. ஒய்த்தக்கா வயிற்று வழியல்லவா?
ஒரு நாள் மேய்ச்சலில் கடந்த, நடந்த, குடித்த, படுத்த எல்லா நில சேறும் குளம்படியில் ஒட்ட கசாலை அடைந்த செவலைக்கிடேரி ஈரக்கூலத்தை அவசரமாய் வாயில் அதக்கித் திணித்து மென்றது.கட்டறுத்த மரைக்கன்று மாரை முட்டிக் கொண்டிருந்தது.

“இன்னும் பாலே பீச்சலே, அதுக்குள்ள என்னவாம் இதுகளுக்கு அவசரம்” காளியம்மாள் கன்றுக்குட்டியின் பிடிகயிற்றை வல்லூட்டியமாய் இழுத்து, முளைக்குச்சியில் தழைத்தாள்.

“நாப்பூரா அதுக மேஞ்சுட்டு வாரது, ஒனக்கும் எனக்கும் இல்லடி. அதுக்க பிள்ளைக்கு பாலுக்கும், அதுக்க வயித்துக்கும்தாண்டி, கூதரக் கழுத. கன்டுக்க கட்ட அவுத்துவிடு. அதுக்க வயிறு சலம்ப மிச்ச மீசாடி நமக்குப் போதும் என்ன?”

“வீடு விரிசப்பட்டு கெடக்கு. ஒரு மூட்டை சாந்து கொழைச்சு அப்ப நேரங்கெட்டுத் திரியுறோம். உனக்கும் எனக்கும் காப்பி தண்ணிக்குக் கூட காண மாட்டேங்குது பாலு. இதுல அம்புட்டும் கண்ணுக்கு குடிக்க விட்டா, எங்குட்டு இருந்து கடைக்கு பால் ஊத்துவே? எவன் தாலிய அறுத்து உள்ள கடனை கட்டுவே? அந்த பிள்ள இருந்த மட்டும் மில்லுக்குப் போயி வயித்த ரொப்புச்சு. எந்த கோயிலுக்கு கொறை வச்சமோ? எந்தச் சாமிய பழிச்சுப் பேசுனமோ அறியல. இருந்த ஒன்னையும் காவெடுத்துக்கிடுச்சு. எம்மவ போயி வருஷம் ரெண்டும் மூனும் போயி, இப்ப ஆறு ஆகிப் போச்சு. அந்த புள்ள பொறந்து, ஆளாகி, கடைசியில சீவன் போன இந்த ஒத்த வீட்டையும் இப்போ கரைய விட்டுகிட்டு கிடக்கோம். அதெல்லாம் உரைக்கல உனக்கு. கன்டுக்கு பால் வேணுமாம் பாலு.”

முட்டிப் பால் குடித்த கன்றை, தயவே இல்லாமல் ஆங்கார வேகமாய் இழுத்து வந்து கட்டில் தழைத்தாள். வாயோரம் முலை முட்டிய நுரையோடு பால் கசிய பாவமாய் கதறியது கன்று.”ம்மா… ம்மா…”

முன்னமே ஒருமுறை காளியம்மா, அவருக்கு அறியாது ஒரு வெள்ளைக் கிடேரியை விலைபேசி ஏற்றியே விட்டாள். விலை சொல்பம்தான். சீட்டுக்காரனிடம் அதைச் சொல்ல முடியாதே. அப்புறம் மனுஷன் மூணு நாளா வேளைக்கு சாப்டல. சத்யா போனப் பிற்பாடு, அவர் அளவளாவி பேச சிரிக்க உள்ளதானால் அவை மாட்டோடும் கன்றோடும் தான். பிள்ளை பத்தின மூச்செழுந்தாலே காளியம்மா புகையடித்த கண்ணாய் நாள் முச்சூடும் அழுது தேமி ஒடுங்கியே போவாள். தனியே அவளிருக்கும் சமயங்களில் லேசான விசும்பலாய் ஒரு ஒப்பாரி அதிர்ந்து வீட்டை நிறைக்கும். ஒத்தைப் புள்ள. அதுவும் பொம்பளப் புள்ள. மூணு தரம் தப்பி நாலாவதா நிலைச்ச உசுராச்சே. இருக்கத்தான் செய்யும் வேதனை.

கருப்பையா பாலூற்றப் போனாலும் மாட்டுக்கு மருந்து வாங்க டவுனுக்குள் போனாலும் சத்யா சைக்கிளின் கேரியரில் தான் ஒட்டியிருப்பாள். ஒரு மடிப்பு சீனிச்சேவு வாங்கித் தாந்தால் பொட்டுப்போல கொறித்துக்கொண்டு அடங்கி இருப்பாள்.

வளனை, சூராணம், முத்துப்பட்டணம் சுற்றில் பெரும்பான்மை சாயா கடைகளில் பொங்கியது கருப்பையாவின் கசாலை மாட்டு, மடி கறந்த பால் தான்.குடுப்பதைக் காட்டிலும் குறைவாயினும் சிணுங்கல் இல்லாமல் வாங்கிக் கொள்வார். ஓரிரு வருடப் பழக்கமில்லை, இரண்டு தலைமுறையாக பால் ஊற்றிக் கொண்டிருக்கிறது அந்தக் குடும்பம் இந்தத் தெருக்கடைகளில்.பால்காரர் உடையாரைத் தெரியாத சுற்றமும் அவர் மகன் கருப்பையாவை நன்கறியும். ”நல்ல கன்று ஈன்ற பசுவின் குணம் அவருக்கு.”

புத்துக்கால் சீக்கு. அப்பனுக்கு இருந்தது. சித்தப்பனுக்கு இருந்தது. கருப்பையாவுக்கும் இருக்கிறது. வெறுங்காலால் நடமாட்டம் ரணமாய் வெடிக்கும். செருப்பில்லாது அடி நகர திராணியிராது. செருப்பே போட்டு நடந்தாலும் குண்டூசிகளாய் அவ்வப்போது குடையும். பெரும்நேரம் பஞ்சு செருப்பு தான். அதுவும் குதிகால் பக்கம் ஒரு ஓரம் மட்டும் குழியாகி இருக்கும். மழைக் காலங்களில் வாசலில் கிடக்கும் அவரது செருப்பு ஒரு குட்டிக் குளத்தை தன்னில் நிறைத்து வைத்திருக்கும். இந்த மாதிரியான அமைப்போடு அவர் நடப்பது, மணல் சாலையில் மாட்டு வண்டி ஆடி ஆடி கடப்பது மாதிரி கூட அல்ல. அப்படியே அதன் அசலாய் தான் இருக்கும்.

கருப்பையாவின் வயதையொத்த ஒரு பழஞ்சைக்கிள் ஒன்று கடைத்தெருக்களுக்கு பாலூற்றப் போகும் அவருக்கு நெடுங்காலத் துணை. அவரின் தோற்றம் மூப்பேறிக்கொண்டே இருந்தது சைக்கிளின் மேல் துருவேற கூட அவர் விடுவதில்லை. அவரின் தலைமயிர் எப்போதும் கண்டிராத தேங்காய் எண்ணெய் வாங்கி, பழைய வேட்டியைக் கிழித்து அதில் சலம்ப ஊற்றி துடைத்து சைக்கிளை மினுமினுப்பாக வைத்திருப்பார். அது அவருக்கு வெறுமனே சைக்கிள் மட்டுமல்ல.அது அவர் அப்பனைச் சுமந்தது, அவர் அப்பன் ஓட்ட பின்னே இவர் அமர, கடை கண்ணி எங்கும் பாலூற்றி வந்த பழ நினைவுகளைச் சுமந்தது. அவரது மகள் அந்த சைக்கிளில் தானே ஊடுகால் போட்டு ஓட்டப் பழகினாள். அதிலே தானே பத்தாப்பு வரை பள்ளிக்கூடம் போய் வந்தாள். மஞ்சள்காமாலை முற்றலாகி அவள் மெல்லச் செத்துக் கொண்டிருக்கையில் அந்த அழகு பெத்த சைக்கிளில் தானே அவளைச் சுமந்து ஆஸ்பத்திரி போனார்.
அப்படி பார்த்தால் அது என்ன வெறுமனே இரும்படித்து செய்யப்பட்ட சாதாரண சைக்கிள் மட்டுமில்லை தானே?

சத்யா பத்தாம் வகுப்பு முடித்த கையோடு பஞ்சு மில்லுக்கு அனுப்பப்பட்டாள். அவளும் மேற்கொண்டு படிக்கணும் என வாய் திறக்கவில்லை. அப்பன் சீக்காளி, ஆத்தா வெகுளி, மழைக்கு கரையும் வீடு எல்லாம் நினைத்தாளோ என்னவோ. மேலே படிக்க வைக்கச் சொல்லி அவள் கேட்கவுமில்லை.இவரே படி என்றும் சொல்லவில்லை. நல்ல வடிவான முகம். தாட்டியமான உடம்பு. வெந்தய நிறம். வட்ட முகத்துக்கே அழகாய் மூக்கும் அதில் கிராம் பவுனில் செய்த மூக்குத்தியும். மாதம் ஆறாயிரம் ஊதியம். உண்ண உறங்க இடம் வேலையிடம் பார்த்துக்கொள்ளும். கொஞ்சம் பாரமில்லாமல் காலம் கழிக்கப்பட்டது. வீடு கூரை பிரித்து வேயப்பட்டது. மாதம் ஒரு தரம் மீனோ நண்டோ எடுத்து சாப்பிட வாய்த்தது. மூன்று மாத இடைவெளியில் ஒரு வாரம் ஊருக்கு வந்து போவாள்.

“எப்பா… ஏய்… கருப்பையா, மாடு மூனு நாளா அப்பவோ இப்பவோன்னு ஈத்துக்கு நிக்கி, ராவும் பகலுமா ஒரே சத்தம். என்ன எழவோ தெரியல, மசுரு மயம்புட்டு கன்டு போடத்தான் மாட்டிங்குது. என் வீட்டாளும்,போடுறது காளையங்கன்டா இருந்தா மனியங்குடி கருப்பு கோயிலுக்கே நேந்து விடுறதா வேண்டி காணிக்கை முடிஞ்சு போட்டுருக்கா. அந்த டாக்டக் கூப்பிட்டா மருந்துன்றான், மாத்திரைன்றான், ஊசின்றான். நமக்கு அதுக மேல எல்லாம் ஒரு பிடிப்பும் இல்ல. நீ ஒரு எட்டு வந்து பாத்தாக்கா நல்லா இருக்கும்யா. நல்லபடியா ஈத்தெடுத்து குடுத்துட்டீனா கூட ஒரு ரூவா கூட்டி தாரேன். கொஞ்சம் வெரசா வந்தாய்னா சௌரியமா இருக்கும்” தடியப்பன் அவதி அவதியாய் ஒப்பித்தார்.

“ஈத்து வலி எடுத்துக் கிடக்குன்னு இம்புட்டு சல்லிசா சொல்றியேப்பா. ஏறுப்பா மொத வண்டியில.” பின் கேரியரில் தடியப்பனை ஏற்றிக் கொண்டு பெடலை அழுத்தினார். பிடி வரப்பு போன்ற கால்களால் அவர் சைக்கிளை செலுத்த, அது கண்மாய்க் கரையில் சீறலுடன் பாய்ந்து கொண்டிருந்தது.

மாடு தொழுவத்திலிருந்து வெளியில் கட்டப்பட்டிருந்தது. விழி பிதுங்கலாய் மிரண்டு ஒரே இடத்தில் உலப்பிக் கொண்டிருந்தது. பிருஷ்டம் வழி அக்கி வழிந்தது.கால் செருப்பைக் கழற்றி கையிலெடுத்து தொழுவ ஓரமாகப் போட்டார். தோளில் கிடந்த சாரதி துண்டை தலையிலேற்றிக் கட்டினார். விட்டம் பார்த்து தெளிந்த மேகங்களினூடே கடவுளே இருப்பது போல கை கூப்பி வேண்டினார். மாடு கட்டிக்கிடந்த இடம் வைக்கோலும் சாண மூத்திரமும் குழைந்து நசநசப்பாகக் கிடந்தது. அருகில் எவர் போனாலும் மாடு சீறியது. பேற்று வலியாதலால் கோபமும் பயமும் பலியாக வரத்தான் செய்யும். மெல்ல எக்கி மூக்கணாங்கயிற்றைப் பிடித்தார். மாட்டை மெல்ல அடங்கி பெருமூச்செறிந்தபடி மெல்லத் தரையில் கிடத்தினார். தலையை வளைத்து பெருங்குரலெடுத்து ஓங்கலாய் மாடு கத்தியது. வயிற்று மேட்டை மெல்ல வருவி விட்டார். தடியப்பன் வீட்டம்மா மாட்டின் தலைமாட்டில் அமர்ந்து வாயில் சேலைத் தலைப்பை பந்தாய் சுருட்டி வைத்துக்கொண்டு விசும்பியபடியே அதன் நெற்றியையும் தாடையையும் வாஞ்சையாய் தடவிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். மாட்டின் விழி மேலேறிக் கொண்டிருந்தது. மூச்சு பலமாய் வீசியது. தடியப்பன் தலையிலடித்து கதற ஆரம்பித்துவிட்டிருந்தார்.

“ஏய்… அழுகைய நிறுத்துய்யா மொத. சீவனமா கெடக்க மாட்ட அழுதே கொன்னுப்புடுவே போலேயே. போப்பா… அழுகைய முழுங்கிட்டு போயி கங்கெடுத்து அதுல சாம்பிராணியோட அளவா வரமிளகா ரெண்டு பிச்சுப் போட்டு கொண்டா ஓடு. மிளகா நெறிக்கு மாடு கொஞ்சம் அசராம திடப்பா கிடக்கும். வெரசா போயி அத கொண்டா மொத.” இடுப்பு கைலியை வரித்து எடுத்து கண்களைத் துடைத்துக்கொண்டே வேகமாய் வீட்டுக்குள் ஓடினார்.

ஈயச் சாம்பிராணிக் கரண்டியில் மாட்டுக்கு சோறு பொங்கும் அடுப்பைக் கிளறி கங்கள்ளி சாம்பிராணி போட்டு ரெண்டோ மூன்றோ மிளகாய் கிள்ளிப்போட்டு அதை மாட்டின் தலையைச் சுற்றி காட்டினார். காரநெடி புகை அந்த இடத்தைச் சூழ்ந்து இருமலைக் கிளப்பியது. மாடு மெல்ல விழியை உருட்டி சுயநினைவுக்குத் திரும்பி சீராக மூச்சுவிடத் தொடங்கியது.

தொடர்ந்து விடாது வயிற்றை வருடிக் கொடுத்துக் கொண்டேயிருந்தார். சற்று நேரத்திற்குள் நன்கு வெந்த சேனைக் கிழங்குகளைப் போல இரண்டு இளங்குளம்புகள் பிருஷ்ட வழியே வெளியே துருத்தின. கருப்பையா இரண்டு கைகளிலும் விளக்கெண்ணெய் தடவி கன்றின் இரண்டு கால்களையும் பிடித்து பதுசாக இடைவிட்டு இடைவிட்டு இழுத்தார்.

“ இந்தாய்யா… தடியப்பா, அஞ்சாறு கூலம் அள்ளியாந்து இங்குன போடு. கன்டெ இழுத்து அதுல தான் கிடத்தனும்.”

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் உடைபட்ட கஞ்சிக்கலயம் போல பனிக்குட நீர் ஒழுக கன்றை இழுத்து கூலக் குவியலில் போட்டார். உடனேயே கன்றின் மூக்கிலும் கண்ணிலும் அப்பியிருந்த அக்கியை வழித்து எறிந்தார். அதன் காதில் ஊதி தெளிவாக்கினார். கன்று தொண்டையைக் கமறி, ம்ம்ம்மா… என்றது. ஒரு முழுப் பிரசவம். கலங்கி நின்ற கண்ணீர் திவலைகள் வழிந்தோட சிரிப்போ சிரிப்பாய் கன்றை வாரி தன் மடியில் போட்டுக்கொண்டாள் தடியப்பனின் வீட்டாள்.

“மனியங்குடியான் மாட்டக் காப்பாத்திட்டான். காளையங்கன்டு தான் போட்டுருக்கு. சொன்னாப்புல அவனுக்கே அத நேந்து விட்டுரும்மா நீயி…” சொல்லி நிறைய சந்தோசமாய் சிரித்தார். அவர் முகமெல்லாம் ரத்தமும் அக்கியும் தெறித்திருந்தது. தன் தலைக்கட்டை அவிழ்த்து முகம் துடைத்து, அதை மீண்டும் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டார். தன் இடுப்பில் இருந்த குட்டி சூரிக் கத்தியை எடுத்து கன்றின் கிழங்குக் குளம்பை சமமாய் வகுந்து விட்டார்.

“ இன்னும் சத்த நேரத்துக்கெல்லாம் மாடு இளங்கொடி போட்டுரும் பாத்துக்க. மாட்டத் திங்க விட்டுறாம ஒழுங்கா சாக்குல முடிஞ்சு முக்கு ஆலமரத்துல கட்டிப்புடு. நல்லா ஒசக்க ஏத்திக் கட்டனும். இல்லாட்டி இந்த நாய்ப்பண்ணைக தின்னுபுடும். அப்புறம் கன்டுக்குக் கூட பால் வடியாது சொல்லிட்டேன்.” பிசுபிசுப்பாக ரத்தக் கறையோடு இருந்த கையில் துட்டைத் திணித்தார் தடியப்பன்.

“காசு கீசு குடுக்கனும்னு நினைப்பே வேணாம் பாத்துக்க. மாடெல்லாம் மனுஷ ஆளா, நான் பெத்த மக்களா நினைச்சுகிட்டு தான் இதுகல எல்லாம் செய்றேன். அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். சினை மாட்டை கருதுல மேயவிட்டதுனால தான் இம்புட்டு தொல்லை. மாட்டுக்கு பனிப்புல்லு அறுத்துப் போடு, அளவா வீட்டுக்கு கரந்துக்கிட்டு கன்டுக்கு வயிறு நிறைய குடிக்க விடு. தவிடு, பருத்திக் கொட்டை, புண்ணாக்கு அப்பப்ப நீச்சத்தண்ணியில கலந்துவிடனும் என்ன? விளங்குச்சுல்ல?. அப்பச் சரி நான் வாரேனப்பா.” சைக்கிள் ஸ்டாண்ட் நீக்கி, ரெண்டு கிந்து கிந்தி சீட்டில் ஏறிக்கொண்டார். கேரியரில் கட்டிக் கிடந்த பால் டவராக்களின் சப்தத்தோடு கரையேறி வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தார்.

கருப்பையாவின் வீட்டுக்கான பாதை சாலையிலிருந்து ரெண்டு வீடுகளின் வாசல் வழியாகத்தான் விரிந்து போகும். நல்ல மிடுக்கான வீடுகள். திடமான கான்கிரீட் வீடுகள். மச்செடுத்து கட்டப்பட்டவை. நிலம்புலம்,காசு,வண்டி என அடுக்கடுக்காய் கணக்கில் வரும் கனமான செல்வம் படைத்தவர்கள் அந்த வீட்டாட்கள். மாடும் கன்றும் அவர்கள் வீட்டு வழியே போவதை கம்பளிப்பூச்சி ஊர்வதைப் போல கொனட்டலான முகச் சுளிப்புடன் பார்த்துக்கொண்டிருப்பார்கள். மாடு கன்று சாணம் அவர்களது வீடுகளருகே சாணம் போடுவதையும் மூத்திரங்களிப்பதையும் தினசரி குறை கூறலில் ஒப்பித்துக் கொண்டேயிருப்பார்கள். அந்தப் பாதை பொது. இடம் புறம்போக்கு. இந்த ஐந்தாறு வருடங்களில் ஒரு கருதறுப்பு எந்திரம் சாகவாசமாய் போகும்படியானதாக இருந்த பாங்கிலிருந்து குறுக்கப்பட்டு ஒற்றையடிப் பாதையளவாய் ஒடுங்கிப் போய்விட்டிருந்தது. மச்சு வீட்டுக்காரர்கள் இருவருக்கும் பேச்சற்று இருந்தாலும் இந்த பாதையழிப்புக்கு பேசிக்கொள்ளாமலே சமாதானமாய் சமபங்கிட்டு தங்கள் வெளிகளுக்குள் ஒளித்துக் கொண்டார்கள். இரண்டொருமுறை சத்தம் போட்ட கருப்பையாவுக்கு ஆறுதலான பதிலே கிடைத்தபாடில்லை. கோர்ட்டோ கேசோ அவர் அறியாதவர். பாவம், முதுகு உப்பு வெடிக்க காடு கரை அலைபவருக்கு போலிசென்றால் ஒரு பயம். கேஸ் என்றாலே ஒரு நடுக்கம். அவரும் என்ன செய்வார். நடையை சுருக்கிக் கொண்டார். மாடுகளை ஒற்றை வரிசையில் ஓட்டிச்செல்ல பழகிக் கொண்டார்.

மறு ஆண்டு புரட்டாசி, கனத்த மழையையும் காட்டுங்காற்றையும் விசிறியடித்துக் கொண்டிருந்தது. அம்மியில் மஞ்சள் தட்டும் சத்தத்திலேயே அதிரும் சுவர்கள், ஆகிருதி காலநிலைக்கு மட்டுப்பட்டுவிட்டது. விரிசல் இன்னும் அதிகம் வளர்ந்தது. வெயிலோ மழையோ தயவு தாட்சண்யமின்றி வீட்டுள்ளே சமயங்களில் குதித்தது. பத்து வருடங்களுக்கு முன்னே கப்பரை பிரித்து வேய்ந்தது. அதுவும் பரிந்து கொண்டு வரத் துவங்கியிருந்தது. காசில்லை. கடன் வாங்கவும் நாதியில்லை. அடகு வைக்கலாமென்றால் வீட்டில் குழுமைப் பானையில் விதை நெல்லைத் தவிர்த்து விற்றுப் பொருளாக்க ஏதுமில்லை. சத்யாவின் குட்டியூண்டு மூக்குத்தி செலவழிக்கக் கூடாத செல்வமாயிற்றே. அதை தீண்டவும் கூடாது. எப்படி மனம் ஒப்பும்.ரெண்டு தலைமுறை வெள்ளாமைக் காடான கார்ச்செய் விலைக்கு தள்ளப்பட்டது. நிலம் கரைந்து பணமாகி, பணம் பொருளாகி வீட்டுக்கு கொஞ்சம் திடம் சேர்த்தது.

காளியம்மாவுக்கு இளைப்பு நோய் வந்தது முதல் கருப்பையா சவலைப் பிள்ளையாய் என்ன செய்ய எனத் தெரியாமல் திணறிப்போக ஆரம்பித்தார். மாடு கன்டைக் கூட பார்த்துக் கொள்ளும் நிதானத்தை இழந்தார். மாட்டுக் கூடாரத்தில் கானை வர, மாடுகள் ஒன்றொன்றாக எண்ணில் கழியத் தொடங்கின. கண் முன்னே சாகும் பிரியங்களை காணச் சகியாமல், குறைந்த விலைக்கே அத்தனையையும் வண்டியேற்றினார். கங்கு நொறுங்கும் சப்தமாய் உள்ளே என்னமோ உடைவது போன்றிருந்தது அவருக்கு. எல்லாம் முடித்தாகிவிட்டபின், சவக்களை வந்து குடிகொண்ட தொழுவத்தை வெறித்து வெறித்துப் பார்த்தபடியே எவ்வளவு நேரம் நின்றிருப்பார் எனத் தெரியாது. மாடும் கன்றும் உலப்பிய தடங்களை பூவைத் தொடும் லயத்தோடு தொட்டும் தொடாமலும் வருடி வருடி வெக்கை நீர் உதிர, பிடிகயிற்றை கட்டிக் கொண்டு துடித்து அழுதார். அவருக்கு அப்போது ஆறுதல்கள் ஏதும் தேவைப்படவில்லை. முடிந்தமட்டும் அழுது தீர்க்கவே நினைத்துக்கொண்டார்.

முன்னர் போல ஆள் நடமாட்டம் அதிகமில்லாமலே ஆகிப்போனார் கருப்பையா. அப்படி வெளியே போனாலும், நேமத்து முக்குக் கடைக்கு ஒரு சாயா சாப்பிடப் போவதோடு சரி. யாருடனும் விவரணையான பேச்சேயில்லை. காளியம்மாவும் அந்த வட்டத்திற்குள் தள்ளப்பட்டாள். சாப்பாடு போட்டுவைத்துவிட்டு கூப்பிட்டால், குனிந்த தலை நிமிராமல் சாப்பிடுவார். சிலசமயம் பிடி பருக்கைகளை பொறுக்கித் தின்றுவிட்டு எழுந்துவிடுவார். இராமுச்சூடும் கசாலையில் தான் உறக்கம்..மழை பெய்தாலும்,கொசுக் கடி பியத்தாலும், குளிர் அனத்தினாலும். ஊருக்குள் ஏவர் மாட்டுக்கு நோவு வந்தாலும் கருப்பையா இப்பொது வைத்தியத்திற்குப் போவதில்லை. நாட்செல்லச் செல்ல அவர்களும் அவரை அழைப்பதை நிறுத்திக் கொண்டார்கள். ஆஸ்பத்திரி மருந்துகளுக்கும் மாத்திரைகளுக்கும் தொழுவத்துப் பிள்ளைகளைப் பழக்கினார்கள்.

“பித்துக்குளி ஆகிட்டான்டா இந்தாளு. ஆளு எம்புட்டு சூட்டிப்பான மனுஷன். இந்த ஆறு மாத்தையாவே அவரு கூறு சரியில்லை. ராத்திரிலாம் டவீர்னு… கத்தி ஒப்பு வைக்கிறாராம். பொண்டாட்டியைப் போட்டு தும்புக் கவுத்தாலே அடி வெளுக்குறாராம். என்னமோ… பாவம்… நல்ல ஆளு. மண்டை முத்தி இப்படி திரிய விட்டுருச்சு நேரமும் விதியும்.” ஊரே கருப்பையாவை பைத்தியமெனும் போர்வைக்குள் அவரறியாமலே நெட்டித் தள்ளியது. அவருக்கு அது குறித்த எந்த கவலையும் இருந்ததாகத் தெரியவில்லை. அவருக்கு அது ஒரு பொருட்டுமில்லை. காளியம்மாவுக்கும் உடல்நிலை மோசமாகிக் கொண்டு போனது. அவளும் மனம் விட்டுப் போனாள். என்ன மிச்சம்?. பிள்ளை போச்சு.வீட்டாம்பள விட்டேத்தியா அலையறான். பொட்டு நிம்மதியில்லாத பொழப்பு என்ன பொழப்பு?.

நல்ல மழை நாளொன்றில் காளியம்மாவின் அஸ்தியும் அந்த வீட்டுச் சுவரோடு கரைந்து போனது. காளியம்மாவும் வீடும் ஒரு ராவில் தடமற்று போனார்கள். கொஞ்ச நஞ்ச நாளில் கருப்பையாவும் ஊரில் தங்கவில்லை. எங்கே போனார் என்றும், என்ன ஆனார் என்றும் யாரும் அறிந்திரவில்லை. வெறித்த பார்வையும் அழுக்கு உடுப்புமாய் சூராணம் ரோடுகளில் கருப்பையா அலைந்து திரிவதாக சிலர் சொல்லிக் கொண்டார்கள். பொய்யாகவோ புறமாகவோ ஊர் சொன்ன கோட்டை அவரே கடந்து போய்விட்டிருந்தார்.. கருப்பையாவும் இப்போது ஒரு பைத்தியக்காரன்.

” நல்ல செனை மாடா வாங்கனும். நாம பால் யாவாரம் பண்ணாதனால ஊரே நல்ல காப்பித்தண்ணி அத்துல்லா போயில்ல கிடக்கு”

அவர் இப்பதெல்லாம் யார் பேசினாலும் திருப்பிப் பேசும் உரையாடல் சுருக்கம்.

“காளையார்கோயிலு மாட்டுத் தாவணியில நல்ல காரிக் கிடேரி ஒன்னுக்கு அச்சாரம் போட்டு வச்சுருக்கேன். ஒரு ஆறேழு மாத்தைக்குள்ள கன்டு ஈண்டுப்புடும். பழைய மாறி பால் யாவாரம் பண்ணப் போறேன், மாப்ளே… இன்னும் நாப்பது நாள்ல ரூவாயும் தாரேன்னு சொல்லிப்புட்டென். ஒங்கிட்ட தான் கேக்கணும்டே கிடைந்தேன். ஒரு ஓர்ரூவா பணமாத் தந்தாய்னா, நல்ல சவுரியமா இருக்குனு பாத்தேன். என்ன மாப்ளே. ரோசனை பண்ணி சொல்லுங்க.”

சரியான அன்ன ஆகாரம் அற்று அலைந்தவர் மெலிந்து ஒரே இடத்தில் படுக்கையாகிப் போனார். ஊர் ஆட்கள் ஊர் மத்தியிலுள்ளப் பொதுத் தொழுவில் அவரைக் கிடத்தி, சின்ன அளவில் வைத்தியம் பார்த்தனர். எதுவும் பலித்தபாடில்லை. அரைகுறையாய் கரைந்து நின்ற அவர் வீட்டு ஒற்றைக் குட்டிச்சுவரும் அன்றிரவு மடீர்… என விழுந்து நொறுங்கிப் போனது. மறுநாள் கருப்பையா கீற்றுப் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தார். கால்மாட்டில் பக்காப்படி நிறைய நெல் அள்ளி வெற்றிலை குத்தியிருந்தார்கள். தலைமாட்டில் ஊதுபத்தி சுருள் சுருளாய் புகைந்து எரிந்துகொண்டிருந்தது. அமைதியாய் இருந்த கூட்டம் சட்டென சலசலத்தது.

“ஆரோ மாட்டு யாவாரியாம். கருப்பையாவைத் தேடி வந்துருக்காராம்.”

“என்னவாம் யா”

“அதொன்னும் இல்லப்பா. இந்தா நம்ம கருப்பையா ஒரு நாப்பது நா முன்ன, சந்தைக்கு வந்து மாடொன்னு வாங்கிக்கிறதாச் சொல்லி அச்சாரம் போட்டுட்டு போனாப்புல. அதான் நாளாகிப் போச்சே, சரி ஒரு எட்டு பாத்து என்ன ஏதுன்னு பாத்துப்புட்டு வரலாம்னு வந்தேன். பாத்தாக்கா…”

சொல்லிக்கொண்டே கருப்பையாவின் துணி சுற்றப்பட்ட மெலிந்த உடலைப் பார்த்தார். கருப்பையாவின் மடித்த கைகளுக்குள் திணித்து வைக்கப்பட்டிருந்த மாட்டுத் தும்புக் கயிற்றை அவரது கைகள் மேலும் இறுக்கமாய் பிடித்துக் கொள்வது போல் இருந்தது அவருக்கு. மேந்திசை போர்வைக்குள் விழுந்து புதைந்தது பொழுது. அந்த ஒரு நாள் மாலைக்குள் கருப்பையாவும் அவர் சந்ததியும் இருந்த தடமே இல்லாது மண் மூடப்பட்டது. புதைத்த இடத்தில் கருவேலங்குச்சி அடையாளத்துக்கு நடப்பட்டது. சத்யா உறங்கும் அதே இடுகாடு.

அவரது வீடிருந்த இடமும் அண்டை வீட்டு வேலிகளுக்குள் சுருட்டப்பட்டுவிடும். அவரது மாட்டுத் தொழுவம் மட்டும் நுடமாய் ஓடிந்த கட்டை கம்புகளோடு நின்றுகொண்டிருக்கும். காலப் போக்கில் கருவேலம் மண்டிப்போய் அரவமில்லாமல் ஆகிப்போகும். அன்றைய இரவின் சாமத்தில், கருப்பையா வீட்டுத் தொழுவத்திலிருந்து அடையாளமில்லாத ஒப்பாரிச் சத்தமும் பசிக்கு அலறும் கன்றின் கதறலும் அலையாய் எழுந்து ஊரை நிரப்பிக் கொண்டிருந்தன.

‘வேதாளத்தின் மோதிரம் – காலத்துகள் சிறுகதை தொகுப்பு’ வெளியீட்டு அறிவிப்பு

காலத்துகளின் சிறுகதைகள் சில, 12, ‘வேதாளத்தின் மோதிரம்’ என்று தொகுப்பாய் இன்று மாலை வெளிவர இருக்கின்றன. பதாகை நூல்கள் அனைத்தும் யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து வெளியிடப்பட்டவை. இதுவும் அப்படியே.

காலத்துகளின் மொழிநடை தனித்தன்மை கொண்டது. அவரது வாக்கிய அமைப்பு உற்று நோக்கத்தக்கது, சிறுகதைகள் பரிசோதனைத்தன்மை கொண்டவை. அவர் எழுதியுள்ள பல சிறுகதைகளுள் முழுமையடைந்த சில மட்டுமே இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. அத்தனை கதைகளையும் அனைவரும் விரும்பி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றாலும், வெவ்வேறு வாசகர்களுக்கு வெவ்வேறு கதைகள் விருப்பமானவையாக இருக்கும். எந்த ஒரு கதையும் இதில் உள்ள மற்ற கதைகளுடன் ஒப்பிடுகையில் குறைபட்டதில்லை, இன்று தமிழில் எழுதப்படும் சிறுகதைகளுடன் ஒப்பு நோக்குகையிலும் இதைச் சொல்லலாம்.

“நாஞ்சில்நாடனின் ‘என்பிலதனை வெயில் காயும்’ நாவலை தமிழின் மிக சிறந்த வயதடைதல் வகை நாவல் எனச் சொல்வேன்‌. அறுபது எழுபதுகளில் பள்ளியும் கல்லூரியும் படித்த முதல் தலைமுறை கிராமத்து பட்டதாரிகளின் கதை. உலகமயமாக்கலை பள்ளிப்பருவத்தில் எதிர்கொண்ட தலைமுறையின் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் கதை என இத்தொகுதியை சொல்லலாம். நாஞ்சில் நாடனுடன் ஒப்பிடுவதற்கு இன்னும் இரண்டு காரணங்களும் உண்டு. ஒன்று, கான் சாகிப், தன்ராம் சிங் போன்ற நாவல் தன்மை கொண்ட வாழ்க்கைச் சித்திர கதைகள் என ‘கிளி ஜோசியம்’, ‘யாருமற்ற மனை’, ‘மரிசா’, மற்றும் ‘வேதாளத்தின் மோதிரம்’ போன்ற கதைகளை சொல்லலாம். கதை வழியாக இந்த மனிதர்களை எந்த அளவிற்கு அறிகிறோமோ அதேயளவு கதைசொல்லியைப் பற்றியும் அறிகிறோம்.”

பதாகை – யாவரும் வெளியீடாக இன்று வெளிவரும் ‘வேதாளத்தின் மோதிரம்’ சிறுகதை தொகுப்புக்கு எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அளித்துள்ள முன்னுரை, அகழ் 

கலைஞர்கள் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டும் – இவையே இறுதி நாட்கள் என்பது போல் நாம் எழுத வேண்டும் – பென் ஓக்ரி

 

உலக நிலவரத்தையும் அதை ஏற்க மறுப்பதன் ஆழத்தையும் எதிர்கொள்கையில், நமக்கு தொடர்ந்து கிட்டும் தரவுகளை எதிர்கொள்கையில், உயர்தளத்தில் களிப்புக் கொண்டாட்டங்கள் மேலும் மேலும் ஓங்கி ஒலிக்கையில் பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் கப்பலில் இருக்கும் உணர்வை எதிர்கொள்கையில், ‘இருத்தல் சார்ந்த படைப்பூக்கம்’ என்று நான் அழைக்கும் வகைப்பட்ட எழுத்து முறைமையையும் பார்வையையும் வளர்த்துக் கொள்ளும் தேவையை உணர்கிறேன். காலத்தின் முடிவுக்குத் தக்க படைப்பூக்கம் இது.

காலத்தின் முடிவு நெருங்குவதை உணரும் ஆற்றல் ஒரு சிலருக்கே அளிக்கப்படுகிறது. அட்லாண்டிஸ்சில் வாழ்ந்தவர்களில் சிலர் அதை உணர்ந்திருக்கலாம். பொம்பெய்யின் சாதுக்கள், அத்தகையவர் அங்கிருந்திருந்தால், அதை முன்கூட்டியே அறிந்திருக்கலாம். கடல் வழி படையெடுத்து வந்தவர்களால் சிதைக்கப்படவிருந்த சமூகங்களுக்கு உரிய நாகரீகங்கள் ஒரு வேளை இந்த உணர்வுக்கு ஆளாகி இருந்திருக்கலாம். ஆனால் அழிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது என்ற தரவுகள் அறியப்பெற்றவர்கள், ஒவ்வொரு நாளும் அது குறித்த விபரங்கள் அருவியாய் வீழக் கண்டும் எல்லாம் எப்போதும் போல் இருப்பது போல் வாழ்ந்தவர்கள் யாரும் இருந்ததாய் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

ஆல்பெர் காமு, இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் எழுதிக் கொண்டிருக்கும்போது, தன் காலத்துக்குரிய அதிதீவிர உண்மைகளை அளிக்கக்கூடிய புதிய தத்துவத்தின் தேவையை உணர்ந்தார். அங்குதான் அபத்த இலக்கியம் பிறந்தது. அதிதீவிர இடர்ப்பாடுகளின் பிடியில் தத்தளித்த உலகில்தான் இருத்தலியலும் பிறந்தது. ஆனால் நாம் இதுவரை எதிர்கொண்ட இடர்ப்பாடுகளில் மிகப் பெரியதன் விளிம்பில் இதோ நாம் நிற்கிறோம். இக்காலத்துக்குரிய, மானுட வரலாற்றின் இறுதிக்கு அருகாமையில் நிற்கும் இக்கணத்துக்குரிய, புதிய தத்துவம் நமக்குத் தேவைப்படுகிறது,

இந்த உணர்விலிருந்தே நான் இருத்தல் சார்ந்த படைப்பூக்கத்தை முன்வைக்க விரும்புகிறேன். அதை எவ்வாறு வரையறுத்துக் கொள்கிறேன்? எதையும் வீணாக்காத படைப்பூக்கம் அது. ஓர் எழுத்தாளனாய் நான் எழுதும் ஒவ்வொன்றும் மானுட இனமென நாம் வந்து நிற்கும் பேராபத்து நிலை குறித்து நம் கவனத்தை ஈர்க்கும் உடனடி நோக்கம் கொண்டதாய் இருக்க வேண்டும் என்று இது பொருள்படுகிறது. அலங்காரங்கள் இல்லாத எழுத்து என்பது இதன் அர்த்தம். இது உண்மை மட்டுமே பேச வேண்டும். இந்த உண்மை அழகாகவும் இருக்க வேண்டும். இது மிகவும் சிக்கனமான எழுத்தைக் கோருகிறது. நான் செய்வதெல்லாம் ஒற்றை நோக்கம் கொண்டதாய் இருக்க வேண்டும் என்றாகிறது.

இவையே நான் எழுதும் கடைசி விஷயங்கள் என்பது போல் நான் எழுத வேண்டும் என்றும் பொருள்படுகிறது, நம்மில் யார் எழுதக்கூடியவற்றிலும் இறுதிச் சொற்கள் இவை. மானுடக் காதையின் இறுதி நாட்களில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்றால், நீங்கள் என்ன எழுதுவீர்கள்? எப்படி எழுதுவீர்கள்? உங்கள் அழகியல் எதுவாக இருக்கும்? தேவைக்கு மேல் சொற்களைப் பயன்படுத்துவீர்களா? கவிதையின் உண்மை வடிவம் எதுவாக இருக்கும்? நகைச்சுவையின் கதி என்ன? நம்மால் சிரிக்க முடியுமா, இறுதி நாட்கள் வந்துவிட்டன என்ற உணர்வுடன்?

எல்லாம் முடிந்து விட்டது என்று கற்பனை செய்து பார்க்கக் கூடியவர்களாய் நாம் இருக்க வேண்டும் என்று சில சமயம் நினைத்துப் பார்க்கிறேன். நாம் எதைக் கற்பனை செய்கிறோமோ, அதைக் கடந்து செல்வதையும் நாம் கற்பனை செய்ய முடியும். மானுடம் தன் முடிவை நினைத்துப் பார்க்க இயலாததாய் இருப்பதே என் கவலைகளில் மிகப் பெரியது. சாதாரண, நல்லெண்ணம் கொண்ட குடிமக்கள் பருவ மாற்றத்தின் நிதர்சனங்களை எதிர்கொள்ள மறுப்பதை வேறு எப்படி விளக்க முடியும்? நாம் எதிர்கொள்ள மாட்டோமென்றால், மாற்ற மாட்டோம். நாம் மாற்ற மாட்டோமென்றால், தடுத்து நிறுத்தக்கூடிய விஷயங்களை செய்யத் துவங்க மாட்டோம். ஆக, நாம் எதிர்கொள்ள மறுக்கும் விஷயங்களே நாம் என்ன நடக்கக்கூடாது என்று நினைக்கிறோமோ அது நடப்பதை உறுதி செய்யும்.

நாம் ஒரு புதிய கலை கண்டாக வேண்டும், நாம் வாழும் உலகம் பிழைக்க வேண்டுமென்றால் அதற்குத் தேவையான மாற்றங்கள் செய்வதைத் தடுக்கும் அக்கறையின்மை மற்றும் மறுதலிப்பை துளைத்துச் செல்லக்கூடிய புதிய உளவியல் காண வேண்டும். நம் மீது கவியும் பேராபத்து குறித்தும் அது விஷயமாக நாம் இப்போதும் ஏதாவது செய்ய முடியும் என்பதையும் உணர்த்தும் புதிய கலை நமக்கு தேவைப்படுகிறது.

நாம் எதை மிகவும் அஞ்சுகிறோமோ அதைக் கற்பனை செய்து பார்க்கும் ஆற்றல் ஒரு திறன். அச்சங்களைக் கடந்து செல்ல இயற்கை நமக்கு அளித்துள்ள பரிணாம வளர்ச்சிக் கருவி அது. மிக மோசமான உலகங்களைக் கற்பனை செய்து பார்ப்பது அவற்றை உண்மையாக்கி விடும் என்ற நினைப்பு எனக்கில்லை. மிக மோசமான நிலையை நினைத்துப் பார்ப்பது அப்படியொன்று நிகழாது தடுக்கும் கூறுகளில் ஒன்றாக இருக்கக்கூடும். பிறழ் உலகங்கள் மற்றும் பொன்னுலகங்களின் பயன் அதுவே: ஒன்று நாம் போகக்கூடாத இடத்தின் மெய்த் தோற்றம் அளிக்கிறது, மற்றது சாத்தியமாகக் ஒரு எதிர்காலத்தை நமக்காக கற்பனை செய்து பார்க்கிறது. ஏழ்மை குறித்த அச்சத்தால் பலர் பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள். மரணம் குறித்த அச்சம் பலரின் ஆரோக்கியத்தைக் காப்பாற்றியிருக்கிறது, தாம் எப்படி வாழ்கிறோம் என்பது குறித்து அறிவோடு நடந்து கொள்ளச் செய்திருக்கிறது.

நம்பிக்கைக்கு ஒரு காலமுண்டு, நிதர்சனத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஒரு காலமுண்டு. ஆனால் நம்பிக்கைக்கும் இயல்புவாதத்துக்கும் அப்பாற்பட்ட ஒன்றே இப்போது வேண்டியது. மானுட பிரக்ஞையிலும் நம் வாழ்வு முறையிலும் மிகப் பெரிய நகர்வை சாத்தியப்படுத்துவதற்கு நம்மை நாம் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டிய காலம் இது. பரிணாம வளர்ச்சியில் பிரக்ஞைப்பூர்வமாய் ஒரு தாவலை நிகழ்த்த நாம் சங்கல்பம் செய்து கொண்டாக வேண்டும். நாம் இதுவரை இருந்த மனிதர்களாய் இனி இருக்க முடியாது: வீண் செய்பவர்கள், முன்யோசனை இல்லாதவர்கள், சுயநலமிகள், அழிப்பவர்கள். நாம் இதுவரை இல்லாத அளவு படைப்பூக்கம் கொண்டவர்களாய் இருக்க வேண்டிய வேளை இது, மிகவும் தொலை நோக்கு பார்வை கொண்டவர்களாய், மிகவும் யதார்த்தமானவர்களாய், மிகவும் விழிப்பு நிலையில், தன்னலமற்றவர்களாய் இருக்க வேண்டிய வேளை இது. இதுவரை இவ்வளவு பெரிய இழப்பை எதிர்கொண்டதில்லை, இனி இது போன்ற ஒரு இழப்பை எதிர்கொள்ளப் போவதில்லை.

இவ்வுலகு சார்ந்து ஒரு தனி வகை நேசம் தேவைப்படுகிறது. இதோ இழக்கப் போகிறோம் என்பதை அறிந்த காரணத்தால் உயிரின் நுண்மதிப்பை அறிய வந்தவர்களின் நேசம் அது. உலகங்களில் மிக அழகானதும் அபூர்வமானதுமான இவ்வுலகு, அண்டம் எங்கிலும் ஓர் அதிசயம், ஆன்மாக்களின் வளர்ச்சிக்குரிய அகம், அண்ட வெளியின் வளமைகளில் ஒரு சிறு சுவர்க்கம், இங்குதான் நாம் வாழ்ந்து வளர்ந்து மகிழ்ச்சி காண வேண்டும் என்று அளிக்கப்பட்ட இவ்வுலகை இழக்கும் நிலையின் விளிம்புக்கு வந்து விட்டோம், இந்த உலகை நாம் ஒவ்வொரு நாளும் ஆகாயத்தில் சுழலும் வறண்ட கல்லாக்கிக் கொண்டிருக்கிறோம்.

எனவே ஒரு புதிய இருத்தலியல் தேவைப்படுகிறது. எதிர்மறைத்தன்மை கொண்டதும் துவளாது தாளும் தன்மை கொண்டதுமான காமு மற்றும் இழான் பவுல் சார்த்தரின் இருத்தலியல் அல்ல, தீரமும் தரிசனத்தன்மையும் நிறைந்த இருத்தலியல் இது. இங்கு களைஞர்களாய் நம் நாம் வாழ்வை வேறொரு சமூகத்தை உருவாக்கும் கனவுக்கு அர்ப்பணித்துக் கொள்கிறோம். நாம் வலுவான கனவுகள் கொண்டவர்களாய் இருக்க வேண்டும். சிந்திக்க முடியாத கேள்விகள் எழுப்ப வேண்டும். நாம் ஏன் இப்படி எல்லாம் தின்று அழிக்கும் உயிரினமாய் இருக்கிறோம், மிகையான அளவு போட்டி போடுகிறோம், பிறவற்றை வெற்றி காணும் உந்துதலால் செலுத்தப்படுகிறோம், படிநிலைகளை அமைத்துக் கொள்கிறோம், என்ற கேள்விகளின் வேர்களுக்குச் செல்ல வேண்டும்.

பணம், அதிகாரம், பசி, இவற்றைக் குறித்து கேள்விகள் எழுப்ப வேண்டும். அடிப்படையில் எல்லாருக்கும் தேவையான எல்லாம் போதுமான அளவு இருக்கிறது என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். இப்புவி நாம் வாழ்வதற்கான எல்லாம் வைத்திருக்கிறது. இனியும் ஆழமற்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது. நாம் யார் என்பதன் மையத்துக்கு நாம் ஏன்கள் செல்ல வேண்டும். அதன்பின் நம்மை மாற்றிக் கொள்ளும் பயணம் துவங்க வேண்டும். நாம் நம்மை மீளுருவாக்கம் செய்து கொள்ள வேண்டும். ஏனோ நாகரீகம் தவறான திசையில் திரும்பி விட்டது, நாம் கூட்டாக நம் இலக்கைத் திருத்திக் கொள்ள வேண்டும், நம் பயணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். மானுட அழிவின் விளிம்பு வரை சென்று நிற்க இரண்டாம் வாய்ப்பு கிடைக்காது. இந்த விளிம்பைப் பிழைத்து விட்டால், நமக்காக காத்திருக்கும் யுகச்சந்தியை நெருங்காது பின்வாங்க முடியுமென்றால், புவி முழுமைக்கு, புவியில் உள்ள மக்கள் அனைவருக்கும் ஜீவிதமும் நீதியும் அழகும் அளிக்கும் உலகளாவிய திசை கண்டாக வேண்டும்.

நமக்கு இருக்கக்கூடிய மிகச் சிறந்த, மிக இயல்பான வீடு இதுவாகவே இருக்க முடியும். அதற்குரிய தகுதி கொண்டவர்களாய் நாம் இருக்க வேண்டுமென்றால் புதிய மனிதர்களாய் மாற வேண்டும். அதை மீள்கனவு காண நாம் புதுக்கலைஞர்களாய் மாறியிருக்க வேண்டும். எனவேதான் இருத்தல் சார்ந்த படைப்பூக்கத்தை முன்வைக்கிறேன், நாம் காலத்தின் தவிர்க்க இயலாத உண்மைக்கு ஊழியம் செய்வதற்கு என்று. எனவேதான் தரிசன இருத்தலியல் வேண்டுமென்கிறேன், சுற்றுச்சூழல் பேரழிவின் விளிம்பிலிருந்து நாம் மீட்டெடுக்கக் கூடிய எதிர்காலத்துக்கு ஊழியம் செய்வதற்கு என்று.

இன்று நாம் எதிர்கொள்ளும் உண்மையின் ஆழத்திலிருந்து மட்டுமே எதிர்காலத்தை வளர்த்தெடுக்க முடியும்.

நன்றி – The Guardian