Author: பதாகை

ஆதவனின் ‘சிரிப்பு’

வெ.சுரேஷ்

“ஒருத்தரோட சந்தோஷம் பெரும்பாலும், இன்னொருத்தருடைய துக்கமாய் போயிடறதுதான் ஆச்சரியம். இதுக்கு நிவர்த்தியே கிடையாதா?  இன்னொருத்தருடைய  சிரிப்பு, பெரும்பாலும்  நம்முடைய  துக்கத்தை ஏன்  கிளறணும்? ஒருத்தர் சிரிக்கறதப் பாக்கும்போது, நாமும் நாம் எப்பவோ சிரிச்சுண்டிருந்ததையெல்லாம் அப்ப நினைச்சுண்டு சந்தோஷப்படக்கூடாதா?…. ஆனா இந்த விவஸ்தை கெட்ட மனசு, அப்பேர்ப்பட்ட சந்தர்ப்பத்திலே, இழந்த சுகங்களைத்தான் நினைச்சுக்கறது… தான் அனுபவிச்ச கொடுமைகளையும், அவமானங்களையும் நினைச்சுக்கறது…”, இப்படிப் போகின்றன பங்கஜம்  மாமியின் எண்ணங்கள்.

பங்கஜம்  மாமி, ஆதவனின் ‘சிரிப்பு‘ சிறுகதையின் நாயகி. கணவரை இழந்த மத்திய  வயதைத் தாண்டிய பிராமணப் பெண். மகளும் மாப்பிள்ளையும் மகனும் மாட்டுப் பெண்ணும் இருந்தும் தனியாகவே தன் வாழ்வை தொடர்பவர். அவரின் ஒரு நாள் வாழ்வும், அந்த நாளிலே நடைபெறும் சிறு சிறு சம்பவங்களும், அவரது மொத்த வாழ்வையும் திரும்பத் திரும்ப அசைபோடும்,எண்ண ஓட்டங்களுமே இந்தச் சிறுகதை.

அன்றைய நாளும் என்றும் போல அவரது தோழியும் காவலருமான ‘எல்லாம் தெரிந்த’ மீனாட்சி மாமியால் சமையல் எரிவாயுக் கசிவிலிலிருந்து அவர் காப்பாற்றப்பட்டுக் கடிந்து கொள்ளப்படுவதிலிருந்து துவங்குகிறது. மீனாட்சி மாமி, மகா சாமர்த்தியசாலி, டில்லியையே ஜெயித்து வந்துவிடுவாள். பங்கஜம் மாமி, சற்றே அசடு. தனித்து வாழும் பங்கஜம்  மாமிக்கு மீனாட்சி மாமிதான் friend, philosopher and guide .அவரை மீறி பங்கஜம் மாமியால் ஏதும் செய்துவிட முடியாது. எப்போதும் இன்னொருவர் நிழலிலேயே தன் வாழ்வை வாழ்ந்தவர் அவர்.

அன்று பம்பாயிலிருந்து வரும் மகளின் கடிதத்தைப் படிப்பதிலிருந்து இறுதியில் மீனாட்சி மாமி மற்றும் ’20ம் நம்பர் ஆத்து’ மாமியோடு கோவிலுக்குப் போவதில் முடிகிறது பங்கஜம் மாமியின் ஒரு நாள். அந்த இடைவெளி மாமியின் மொத்த வாழ்வுக்குமே ஒரு விசாரணை  போல அமைகிறது. முதலில் மேலே சொன்ன வரிகள். .ஆனால், அன்று, அந்த நாளின் முடிவில், எல்லாம் தெரிந்த,  டில்லியையே ஜெயித்து வரக்கூடிய மீனாட்சி மாமி, ஒரு பிஸ்கெட்டை எடுக்கப்போய் தொபுக்கடீரென்று கீழே விழுவதைக் கண்டு சிரிப்பதில் தன்  அன்றைய நாளின் இறுக்கத்தை எல்லாம் களைந்து விடுகிறார் பங்கஜம் மாமி. மேலும், கோவிலில் முருகனை தரிசிக்கும்போது முருகனின் முகத்தில் தெரியும் தேஜஸில் இருப்பது என்ன என்ற பேச்சு வரும்போது, முதன் முறையாக மீனாட்சி மாமியுடன் அவரே அதிசயிக்கும்படி, தைரியமாக முரண்படவும் செய்கிறார். அங்கு முடிகிறது கதை.

இந்தக் கதை விவாதிப்பது, நமது செயல்பாடுகளும் வெளிப்பாடுகளும் முற்றிலும் நம் சுயம் சார்ந்தே இருக்க முடியுமா என்பதைதான். குறிப்பாக, பெண்கள் தம் சுயம் இழக்காமல் குடும்பம் எனும் அமைப்பைக் காத்து, கொண்டு செல்ல முடியுமா? காலமெல்லாம் தன்  சுயத்தை குடும்பம் எனும் மகா யந்திரத்தில் கரைத்த்துக் கொண்டே வாழும் ஒரு பெண் தன்  வாழ்வின் இறுதியில் அடைவதுதான் என்ன? இவையெல்லாம் பெண்ணியம் சார்ந்த ஆக்ரோஷமான கேள்விகளால் எழுப்பப்படவில்லை. இந்தக் கதையில் மீனாட்சி மாமி தன் இன்றைய நாளின் ஒவ்வொரு கணத்திலும் தன் ஒட்டு மொத்த வாழ்வை சலிப்புடனும், கோபத்துடனும், ஆயாசத்துடனும், சமயங்களில் நெகிழ்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும், நினைவு கூர்வதில் விரிகிறது

தன் பிறந்த வீட்டிலிருந்து தான் இயல்பாக பெற்று வந்த ருசிகளையும் ரசனைகளையும் கணவனின்  ருசிக்காகவும் மாமியாரின் ரசனைக்காகவும் புகுந்த வீட்டில் ஒவ்வொன்றாக இழப்பது; கலகலப்பாகச் சிரித்து மகிழும் தன் இயல்பான குணம் மாறி, கணவரது வீட்டுக்குரிய இறுக்கமான முசுட்டுத்தனத்தின் பிரதிநிதியாக மாறுவது; தன்  கணவருடன் தன்னை உணர்வு ரீதியாக மிகவும் பிணைத்திருக்கக்கூடிய இசை ரசனையைக்கூட தன்  மாமியாரின் எரிச்சலைத் தவிர்ப்பதற்காகக் கைவிடுவது;  தன் சாப்பாட்டு ருசிகளை, தன் இஷ்ட பிரார்த்தனைப் பாடல்களை, என்று ஒவ்வொரு சிறு கூறாகத் தன் சுயத்தை இழந்த கதையை நினைத்துக் கொண்டே இருக்கிறார் பங்கஜம் மாமி. இதோ இப்போது மீனாட்சி மாமியின் சொற்படி ஆடவேண்டிய கட்டம்.என்றும் நினைத்துக் கொள்கிறார்.

கூடவே தன் அடுத்த தலைமுறை பெண்களான தனது  மகள் மற்றும் மருமகள் இருவரது வாழ்வையும் அசை போடுகிறார். அவர்கள் அவரை விட சுதந்திரமாக இருப்பது போல தோன்றினாலும், அவர்களும், குறிப்பாக மருமகள் தன் கணவனுக்கு இணையாக அவனது நண்பர்களுடன் உட்கார்ந்து அரட்டை அடிப்பதிலும், அவர்களுக்கு மது பரிமாறுவதிலும் ஈடுபடுவதுகூட, ஒரு பெண் தன் தனித்துவத்தை பேணுவது என்பதல்லாமல் வேறு ஒரு வகை அடிமைத்தனம் என்றே அவருக்குத் தோன்றுகிறது. மருமகளின் சிரிப்பை நினைவு கூரும்போதுதான், முதலில் சொன்ன அந்த வரிகள் அவர் மனதில் எழுகின்றன.

மன இறுக்கத்தை மேலும் மேலும் கூட்டும் பல்வேறு சம்பவங்களின், நினைவோட்டங்களின் இறுதியில் அவருக்கு ஒரு மாபெரும் விடுதலை அளிப்பது,  அவர் இதுநாள் வரையில் பொத்திப் பொத்தி மறைத்து வைத்திருந்த சிரிப்பு. அன்றைய நாளின் முடிவில் கோவிலுக்குப் போவதற்கு முன் இன்னொரு மாமியின் வீட்டில், பிஸ்கெட் எடுப்பதற்காக குனியும் மீனாட்சி மாமி தொபுக்கடீரென்று விழுவது கண்டு பொங்கி  வந்துவிடும்  அடக்க முடியாத சிரிப்பு. அவர் சிரித்துக் கொண்டே இருக்கிறார். அந்தச் சிரிப்பின் மூலம், தான்  வாழ்நாளெல்லாம் பழகி வந்த இறுக்கத்தை ஒரேயடியாக அன்று தொலைத்துவிட்டாரென்று தோன்றுமளவுக்கு சிரிக்கிறார். இதுவரை அப்படி வாய்விட்டு சிரித்திருக்கக்கூடிய, ஆனால் ஒரு போதும் சிரித்திராத சம்பவங்களுக்கெல்லாம் அன்று சேர்த்து வைத்து சிரிக்கிறார். அந்தச் சிரிப்பு தந்த  விடுதலை மனநிலையில், எப்போதும் தான் கட்டுண்டிருக்கும் மீனாட்சி மாமியின் சொற்களைக் கூட மறுத்துப் பேசிவிடுகிறார். திகைத்து நிற்கிறார் மீனாட்சி மாமி.

ஒரு கோணத்தில் இந்தக் கதை ஒரு பங்கஜம் மாமியின் வாழ்க்கை அவரிடமிருந்து பிடுங்கும் சுயத்தை விவாதிக்கிறது. ஆனால்  இன்னும் ஆழமாக யோசித்தால் இது நம் ஒவ்வொருவருக்குமே பொருந்தக்கூடியது. இன்னொருவருக்காக வாழ்வதில். குடும்பத்துக்காக தியாகம் செய்வதில்  நம் சுயம் என்பதை இழப்பது எல்லோர்க்கும் நேர்வதுதானே? நாம் நம் சுயத்தோடு இருந்து, பிறர் சுயத்தை மதித்து, பரஸ்பர மரியாதையுடன் வாழ முடியுமா? அதை நாம் நம் குடும்பத்துக்காகவும் பிறருக்காகவும் அணிய நேரும் வேஷங்கள் அனுமதிக்குமா? இதில் வரும் பெண் பாத்திரங்களில் மீனாட்சி மாமி ஒரு ஆதிக்க சுபாவம் மிகுந்த பெண்ணாகத் தோன்றக்கூடும். ஆனால், நுட்பமாகப் பார்க்கும்போது, அவரும், ஒரு பதிவிரதை பிறருக்கு எப்போதும் வழி காட்டுபவர், அவர்களது காவலர் எனும் வேஷத்துக்காக தம் சுயத்தை இழந்தவர் என்றே கண்டு கொள்ளலாம்.

ஆதவன் இறக்கும்போது அவரது வயது 42 தான். அவர் இந்தக் கதையை எழுதும்போது அவருக்கு அதிகம் போனால்  35 வயதே இருந்திருக்க முடியும். ஆனால், நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு பிராமணப் பெண்ணின் எண்ண ஓட்டங்களையும் மொழியையும் அவர் சித்தரிக்கும் விதம் பிரமிக்க வைப்பது. குறிப்பாக, பங்கஜம் மாமி தன்  மகளிடமிருந்து வந்திருக்கும் கடிதத்தைப் படிக்கும்போது, ஒவ்வொரு வரிக்கும் அவர் கொடுக்கும் வியாக்கியானங்கள் வாய்விட்டு சிரிக்க வைக்கும் அதே நேரத்தில் ஆழமான  உளவியல் கூறுகளைக் கொண்டது. அதே போல், அவரது பார்வை வழியே விரியும் அவரது கணவர் பாத்திரத்தின் மூலம், 20ம் நூற்றாண்டின் மத்திய கால கட்ட பிராமணக் குடும்பத் தலைவரது சித்திரத்தை அச்சு அசலாகக் கண் முன் கொண்டு நிறுத்துகிறார் ஆதவன்.

ஒரு  வாசிப்பில், எளிய மத்தியதர வர்க்க, வயதான பிராமணப் பெண்ணின் வாழ்க்கை பற்றியது என்று தோன்றினாலும், மனிதர்கள் தம் சக மனிதருக்குத் தரக்கூடிய மதிப்புமிக்க இடைவெளி குறித்தும், சக மனிதருக்கு நாம்  அளிக்கக்கூடிய இடத்தையும் மதிப்பையும் நம் சுயத்தை இழக்காமல் கொடுக்க முடியுமா என்ற ஆழமான கேள்வியும் முன்வைப்பதே இந்தப் படைப்பு எனலாம்.

பங்கஜம் மாமியின் அன்றைய தினத்தின் இறுதியில் அவருக்கு வரும் சிரிப்பு ஒரு தருணம்தான். அது அடுத்த நாளும் நீடிக்குமா என்பது சந்தேகம்தான். ஆனால், இயல்போடு கூடிய சுயம் சார்ந்த வெளிப்பாடுகளே அது போன்ற தருணங்களையும் நீட்டிக்குமோ என்ற எண்ணத்தையும் உருவாக்குகிறது இந்தக் கதை. இருந்தாலும் அவரவரது சுயம் என்பதுதான் என்ன என்று அறிந்து கொள்வது அவ்வளவு சுலபமா என்ன?

ஷோபா சக்தியின் ‘எழுச்சி’

கோகுல் பிரசாத்

சமீபத்தில்,’உங்கள் வேலை குறித்து சலிப்பாக உணர்கிறீர்களா? இப்படியும் உலகில் சில மோசமான வேலைகள் உண்டு’ எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை நுனிப்புல் மேய்ந்தேன். அடுத்தவர் அக்குளை முகர்வதை எல்லாம் வேலை பட்டியலில் பார்க்கத்  திகிலாக இருந்தது. அவற்றுள் வணிக வளாகங்களில் ஆட்களை தடவி சோதனை செய்யும் பணியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கையுறைகளை அணிந்தபடி நம்மை நோக்கி பணிவாக வணக்கம் சொல்லி, பாக்கெட்டுகளில் உள்ள சாவிகளை அழுத்தமாக பிடித்து அவை சாவிகள் தான் என உறுதி செய்து கொண்டு ஏனைய பாகங்களை உறுத்தாத மிதமான ஸ்பரிசத்தில் தடவி உள்ளே அனுமதிப்பார்கள். முதலில் சொல்லப்படும் வணக்கம் என்பது அவர்கள் நம் உடலை பரிசோதிப்பதற்கான அனுமதியும் மன்னிப்பும் கலந்த பாவனையில் இருக்கும்.

தமிழ்ச்சூழலில் இவர்களைப் பற்றிய பதிவுகள் அநேகமாக இல்லை. கதையின் மையம் இதுவல்ல எனும் போதிலும் ஷோபா சக்தியின் ‘எழுச்சி‘ சிறுகதையில் ஒரு மெல்லிய சித்திரம் உண்டு. இந்தக் கதையில் பாரீஸ் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் அகதி ஒருவன் சென்னைக்குச் செல்ல விமான நிலையம் வருவான். அங்கே அவனை வலுக்கட்டாயமாக உடற்பரிசோதனைக்கு உள்ளாக்குவார்கள். இவனது பேய்த்தனமான முக பாவங்களில் சந்தேகம் கொள்ளும் அதிகாரிகள் நிர்வாண சோதனைக்கும் உட்படுத்துவார்கள். விதைப்பைகளை அழுத்தியதில் தீராத வலி ஏற்பட்டு தனக்குள் சுருங்கிப் போவான்.

அவன் இலங்கையில் வாழ்ந்தபோது ஒரு தகராறில் துப்பாக்கியின் பின்பாகத்தால் இவனது விதைப்பைகளை அடித்திருப்பார்கள். மாங்கொட்டை அளவுக்கு அவை வீங்கிப் பெருத்து மரண அவஸ்தைகளை அப்போது அனுபவித்திருப்பான். அதன் பிறகுதான் தீர்மானமெடுத்து பாரீஸ் வந்திருப்பான். சென்னை விமான நிலையத்திலும் சோதனை செய்வார்கள். இதனால் பழைய சம்பவங்கள் நினைவில் வலியுடன் கிளர்ந்தெழுந்து உள்ளுக்குள் மேலும் மேலும் சுருங்கிக் கொண்டே இருப்பான். உளவியல் ரீதியான மன அழுத்தங்கள் கூடிக் கொண்டே இருக்கும். அவனது மனம் விதைக் கொட்டைகளையும் சோதனையையுமே சுற்றிச் சுற்றி ரீங்காரமிடும். பதினைந்து நாட்கள் மனைவியுடன் உல்லாசமாக கழிந்ததில் இவற்றை தற்காலிகமாக மறந்திருப்பான். விடுமுறை தினங்கள் தீர்ந்தபின், மறுபடியும் விமான நிலையம். மீண்டும் சோதனைகள். அவமானமும் ஆற்றாமையும் நொதித்துத் தளும்பும். பாரீஸில் அவனுக்கு அதிர்ச்சிகரமான மாற்றம் காத்திருக்கிறது.

அவன் பணிபுரியும் தொழிற்சாலையின் வாசலில் அவன் வயதையொத்த நபர் அமர்ந்திருப்பார். பணியாளர்கள் புகுந்து வரவேண்டிய இரும்புக் கூண்டு புதிதாக அமைக்கப்பட்டிருக்கும். அந்த நபர் தொழிலாளர்களின் உடலை தழுவி சோதனை செய்வார். இதற்கு முன் இந்தத் தொழிற்சாலையில் இப்படிப்பட்ட வழக்கம் நடைமுறையில் இருந்ததில்லை. இதில் இருந்து தப்பிப்பதற்காக இவன் மூன்று நாட்கள் தொழிற்சாலையின் பின் வாசல் வழியாக உள்ளே நுழைவான். பின்னர் காமிரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, பரிசோதனை செய்வதற்கான அவசியங்கள் குறித்து பாடம் எடுக்கப்பட்டு முன் வாசல் வழியாக நுழையும்படி உத்தரவிடப்படுவான். ‘இது மனித உரிமை மீறல்’ போன்ற கோஷங்கள் நிர்வாகத்திடம் எடுபடாது.

அடுத்த நாள், உள்ளாடை அணியாமல் வருவான். சோதனை செய்பவர் கைகள் இவனது மார்பு வயிறு தொடை என பயணித்து அடிவயிற்றில் திடுக்கிட்டு தயங்கிப் பின்வாங்கும். இவன் ஒரு வெற்றிச் சிரிப்புடன் உள்ளே நுழைவான். மறுநாளும் இதே கதை தான். அடுத்தடுத்த தினங்களில் இவனைக் கண்டாலே சோதனை ஏதுமின்றி அனுமதித்து விடுவார். இதுவும் காமெரா மூலம் கண்டறியப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும். சோதனையாளர் தனது சிக்கல்களை சொல்வார். இவனோ, ‘சோதனை செய்வது வேண்டுமானால் தொழிற்சாலை விதியாக இருக்கலாம். ஆனால் ஒரு மனிதன் கட்டாயம் உள்ளாடை அணிய வேண்டும் என எந்த நாட்டு சட்டத்திலும் இல்லை’ என மிதப்பாகத் திரிவான். இது குறித்து சட்ட வல்லுனர்கள் கலந்தாலோசிக்கப்பட்டு சோதனையாளனை மாற்றுவது என முடிவு செய்து ஒரு கிழவனை பணியில் அமர்த்துவார்கள்.

‘ஆண்டவனே வந்தாலும் சோதிக்காமல் விட மாட்டேன்’ என அவர் வீராப்பாக சூளுரைப்பார். விறைப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் பாதாம் கொட்டைகளாக தின்று, தன்னை சோதனை செய்யும் போது பிறப்புறுப்பை விறைப்புடன் வைத்துக் கொள்வான். ஒருவன் மட்டும் சோதனை செய்யப்படாமல் உள்ளே அனுமதிக்கப்படும் இரகசியத்தை அறிந்து கொள்ளும் அரேபியத் தொழிலாளர்களும் இவனைப் பின்பற்றி உள்ளாடை அணியாமல் வேலைக்கு வருவார்கள். அந்தக் கிழவர் எத்தனை பிறப்புறுப்புகளைத்தான் தடவுவார்? தனக்குத் தெரிந்த எல்லா மொழிகளிலும் கடவுளை திட்டி விட்டு அவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிடுவார்.

இந்த எழுச்சி மெல்ல மெல்ல மற்ற தொழிற்சாலைகளுக்கும் பரவி, ‘நாம மட்டும் இளிச்சவாயங்களா?’ என அவர்களும் உள்ளாடைகள் எதுவும் அணியாமல் வேலைக்கு வரத் தொடங்குவார்கள். நாட்டின் பாதுகாப்பா மனிதனின் அடிப்படை உரிமையா என்ற தலைப்பில் இது ஒரு தேசிய விவாதமாக வளர்ந்து, இக்கட்டாய பரிசோதனை தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படும்.

தமிழில் எழுதப்பட்ட சிறந்த பகடிக் கதைகளுள் ஒன்றாக இதைக் கருதுகிறேன். ஷோபா சக்தியின் இலகுவான மொழி கேலியின் அத்தனை நுட்பங்களுடனும் தரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறது. கதையின் தலைப்பு உட்பட திருப்பித் தலைகீழாக்கப்பட்ட சம்பவங்களை வேறொரு தளத்தில் வாசகர்கள் பொருத்திப் பார்க்கலாம். ஆழ் நினைவில் புதைந்துவிட்ட துர்கனவு அசந்தர்ப்பமான சூழலில் அதற்காகவே காத்திருந்தது போல வெடித்துக் கிளம்புகிறது. தாழ்வுணர்ச்சியினால் வீழ்ந்து கொண்டே இருக்கும் மனம் பாலுறவின் லயிப்பில் மட்டும் அதனை மறந்து விடும் சூட்சமம் ஒரு புன்னகையுடன் துலங்குகிறது. ஓயாத மனம் ஆசுவாசம் கொள்கிறது. சிக்கலின் முடிச்சுகளை அவிழ்த்து மீறிச் செல்ல கிட்டிய வாய்ப்பும் பறிபோன பின்னர் அவன் வேலைக்குத் திரும்புவதில்லை.

தொகுப்பு : கண்டி வீரன் 

வெளியீடு : கறுப்புப் பிரதிகள்.

வியாழக்கிழமை

கலைச்செல்வி

சாக்குப்படுதா திரையை விலக்கி நடைபாதை மேடையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தான் அவன். தெரு மேலதிக நடமாட்டமின்றி இருந்தது. தொளதொளத்த உடைகள் வியர்வையில் உடம்போடு ஒட்டியிருக்க, காதுகளில் மாட்டிக் கொண்ட இயர்ஃபோனுடன் சிலர் காலைக் கடமையை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர். ரயிலடியை ஒட்டிய நடைபாதை என்றாலும் சற்று உள்ளொடுங்கியிருந்தது. ஆட்டோ ஒன்று அதிகபட்ச சத்தத்தோடு நகர்ந்து போனது. அதன் வேகத்தைவிட சத்தம் அதிகமாக இருந்தது. அதுவும் தரையில் அமர்ந்திருக்கும்போது ஒலியின் வீரியம் அதிர்வுகளாகத் தெரியும். குழந்தை விழித்துக் கொண்டானா என திரும்பிப் பார்த்தான் அவன். மனைவி ஜாக்கெட்டின் கொக்கிகளை சரிவர போடவில்லை. அவள் கையிலிருந்து விலகி மல்லாந்து உறங்கிக் கொண்டிருந்தான் மகன். அவன் படுத்திருந்த இடம் வெற்றாக கிடக்க சுற்றிலும் கொசுக்கள் சுறுசுறுப்பாக வேலை செய்துக் கொண்டிருந்தன. வட்டமாக உதிர்ந்து கிடந்த கொசுவர்த்தியின் சாம்பலுக்கிடையே பளபளப்பாக வீற்றிருந்த வத்தி ஸ்டாண்டின் மீது அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் உணவு வேட்டையை வீரியமாக தொடங்கின. தோளில் கிடந்த துண்டால் கொசுவை விரட்டிவிட்டு பின் அதை மனைவியின் விலகி கிடந்த சேலையின் மேல் போர்த்தினான் அவன். பதின்பருவத்திலிருந்த மனைவி ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள்.

வண்டி ஓனர் வீட்டில் இருந்தது. ஓனர் பெரிய ஆளெல்லாம் இல்லை. இதே மாதிரி இன்னொரு வண்டி வைத்திருக்கிறார். இவனாகதான் போய் அணுகினான். தான் ஒரு ஏரியாவை பார்த்துக் கொள்வதாக சொன்னான். ஓனருக்கு நம்பிக்கை வரவில்லை. நாஷ்டா கடைக்காரன்தான் “நான் ஜவாப்பு..” என்று சிபாரிசு செய்தான். அவன் மனைவி நாஷ்டா கடையில் பாத்திரம் கழுவுவாள். ஒன்றரை வயது மகனுக்கு இன்னும் தாய்;ப்பால் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். புடவை விலகியும் விலகாமலுமான அவள் நடமாட்டத்துக்கே இன்னும் கூட சம்பளம் கொடுக்கலாம். ஆனால் இரண்டு வேளை சாப்பாடே போதும் என்பது போல அவள் எதையும் கேட்பதில்லை. அந்த வண்டி வந்ததிலிருந்து வியாழக்கிழமைகளில் மட்டும் விடுப்பு எடுத்துக் கொள்வாள்.

வெளியே எழுந்து வந்தான். வாயில் திரண்ட எச்சிலை துப்பி விட்டு தெருவோர டீக்கடையில் டீ சொல்லிக் கொண்டான். ”கணக்குக்கு நாலு ஆவுது..” என்றான் கடைக்காரன்.

”நாலு டீயாண்ணே..” தெரியும். ஆனாலும் கேட்டான்.

”ம்ம்.. நாலு டீ.. பேசுவியே.. நாலு நாளு கணக்கு..” அவனும் மனைவியுமாக நாள் ஒன்றுக்கு ஆளுக்கு மூன்று டீயாவது குடித்து விடுவார்கள். டீ தொண்டையில் சூடாக இறங்கி, இரண்டே மடக்கில் முடிந்து போனது. கப்பை துாக்கி எறிந்தான். அது குப்பைக் கூடையில் தட்டி இவன் காலுக்கருகேயே வந்து விழுந்தது. அதை எத்தி தள்ளி விட்டு ஓனர் வீட்டுக்கு நடந்தான்.

ஓனரும் காலையிலேயே எழுந்து விட்டிருந்தான். இவனை மாதிரி நடைபாதை மேடையில் குடியிருக்காமல் தகரம் தார்பாலின் என்றெல்லாம் சேர்ந்து வீடு போல ஏதோ ஒன்றில் குடியிருந்தான். வசவசவென்று துாங்கிக் கொண்டிருந்தனர் ஆட்கள். பேசாமல் போய் நின்றான். வாரா வாரம் எடுத்தாலும் ஒவ்வொரு முறையும் புதிது போலவே அணுக வேண்டும். பத்து நிமிட காத்திருப்புக்கு பிறகு ”கரீட்டா எட்டு மணித்தாவல வூட்டாண்ட கொண்டாந்துடுணும்..” எடுத்துட்டு போ என்பதற்கு இதுதான் சமிக்ஞை. ஏறி மிதிக்கக் கூடாது என்பான். தள்ளிக் கொண்டே செல்ல வேண்டும். ”கலீசனு பக்கா பண்ணுனும் இந்த தபா..” என்றான். வரும் கலெக்ஷனில் இவனுக்கு பாதி கொடுத்துவிட வேண்டும். அல்லது ஓனர் நிர்ணயிக்கும் தொகையை கொடுத்து விட்டு மேற்கொண்டு மிஞ்சுவதை அவன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

”செரி..” ஒற்றை சொல்லை சற்று பணிவு கலந்து சொல்லி விட்டு கூளம் போல கிடந்த இடத்திலிருந்து வண்டியை உருட்டி நகர்த்தினான். கலகலத்து காயலான் கடைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் சைக்கிள் ரிக்சா அது. டயர் மட்டும் ஒழுங்கிலிருந்தது. துறுப்பிடித்த மட் கார்டை சொந்த செலவில் காவி பெயிண்ட் அடித்துக் கொண்டான். ஓனர் அதை கண்டும் பாராட்டாக ஏதும் சொல்லவில்லை.

இன்னமும் சாக்குபடுதாவுக்குள் மனைவியும் மகனும் உறங்கிக் கொண்டிருந்தனர். அதற்குள் மாநகராட்சி குளியலறைக்கு சென்று குளித்து விட எண்ணினான். ஒவ்வொரு முறையும் தனித்தனியே காசு தர தேவையில்லை. மனைவி வேலை செய்யும் கடையிலிருந்து அவ்வப்போது டிபன் கட்டி எடுத்து வருமாறு அதிகாரமாக சொல்லுவான் அந்த காவலாளி. இதை தவிர்த்து மாதம் ஐம்பது ரூபாய் அளித்தால் முனகிக் கொண்டே வாங்கிக் கொள்வான். ஆனாலும் குளிக்க, மற்ற விஷயங்களுக்கு, கூட்டமில்லாத நேரங்களில் உபயோகித்துக் கொள்ள அனுமதிப்பான். தெருவில் நடமாட்டம் பெருகியிருந்தது. குளியலறையை யாரோ உபயோகித்துக் கொண்டிருந்தார்கள். இரண்டொருவர் காத்து நின்றனர். வழக்கமாக இது ரயில் வரும் நேரமல்ல. ஏதோ ஒரு ரயில் தாமதமாக வந்திருக்கலாம். இந்நேரம்  நிச்சயம் அனுமதிக்க மாட்டான்.

கையேந்தி பவன் ஒன்றின் பின்புறம் குவியலாக பாத்திரத்தை போட்டு தேய்த்துக் கொண்டிருந்தாள் வயதான பெண் ஒருத்தி. அவளிடம் ஒரு கப் நீர் வாங்கி முகம் கைகால்களை கழுவிக் கொண்டான். வெறுங்கையால் பற்களை தீட்டி கொப்பளித்தான். ”இந்த.. கப்ப கொண்டா இப்டீ.. வுட்டா எல்லா சோலியயும் இதுலயே முடிச்சுக்குவ..” என்றாள் அந்த பெண். ”இந்தா.. நீயாச்சு.. ஒன் தண்ணியாச்சு..” கப்பை அன்னக்கூடைக்குள் தொப்பென்று போட, அதிலிருந்த தண்ணீர் அவள் முகத்தில் அடித்தது. “அடுத்த தபா வாரவன் தானே..” என்று கோபப்பட்டாள் அந்த பெண்மணி.

சாக்குப்படுதாவை விலக்கி உள்ளே நுழைந்தான். காலில் மனைவியின் கால் தட்டுப்பட “இந்தா.. எந்திரி..” லேசாக எத்தினான். நேற்றே வாங்கி வைத்திருந்த காவி வண்ண காகித தோரணங்களை எடுத்துக் கொண்டான். எழுந்து உட்கார்ந்து சிறுமியை போல அலங்க மலங்க விழித்து பிறகு நிதானத்துக்கு வந்தவளாக குழந்தையை துாக்கி வசதியாக படுக்க வைத்தாள் அவள். ”டீ வாங்கியாரவா..” என்றான். ”வேணாம்.. பய முளிக்கிட்டும்..” என்றாள்.

வண்டியில் தொங்கிக் கொண்டிருந்த பழைய ஜிகினா பேப்பர்.. காய்ந்த மாலை.. காகித துண்டு.. கலர் தோரணம் என எல்லாவற்றையும் பொறுக்கி துடைத்து சுத்தம் செய்தான். துறுவேறிய பழைய வண்டி என்றாலும் இப்போது சுத்தமாக இருந்தது. சத்தம் வரும் இடங்களில் எண்ணெயிட்டான். காவிக் கலர் பேப்பரை குறுக்கும் நெடுக்குமாக ஒட்டினான். ஜிகினா ஒட்டும்போது மகனின் அழுக்குரல் கேட்டது. மார்புக்காம்பை மகனின் வாய்க்குள் திணித்துக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. மகன் பசி தாங்க மாட்டான். டீ வாங்கி வைத்து விட்டால் நிம்மதியாக வேலை பார்க்கலாம். உள்ளிருந்து சில்வர் டம்ளரை எடுத்துச் சென்று, அது நிறைய டீ வாங்கிக் கொண்டான். கடைக்காரன் “துட்ட எண்ணி வச்சுட்டு டம்ளரை தொடு..” என்றான். இன்று வியாழக்கிழமை. கண்டிப்புக் காட்டினால் சாயங்காலம் காசு கைக்கு வரும். இல்லையென்றால் இன்னும் ஒரு வாரம் காக்க வேண்டியிருக்கும் என்பது கடைக்காரனுக்கு தெரியும். அசட்டு சிரிப்போடு டம்ளரை ஏந்திக் கொண்டான். ”சீக்ரம்..“ என்றான் மனைவியிடம். அரை டம்ளர் அவளுக்கு. மீதம் அரை டம்ளர் டீயை ஆறிய பிறகு மகன் உறிஞ்சி விடுவான்.

மஞ்சள் வண்ண ஜிகினா பேப்பரை இடையிடையே ஒட்டினான். காவி தோரணமும் மஞ்சள் ஜிகினாத்தாளுமாக ஒரு மாதிரியாக புனிதம் திரண்டிருந்தது. ஹேண்டில் பாரில் மீதமிருந்த காவி பேப்பரை சுற்றினான். முகப்பில் சீரடி சாய்பாபாவின் சிறிய அட்டையாலான புகைப்படத்தை வைத்து கட்டினான். கருப்பு வெள்ளை புகைப்படம். மஞ்சள் சாமந்தியால் படத்தை அலங்கரித்தான். உள்ளேயிருந்து பெரிய பாபா போட்டோவை எடுத்து வந்து உட்காரும் இருக்கையில் படுக்க வைத்தாள் மனைவி. நடைப்பாதை மேடையில் கால்களை தொங்க விட்டுக் கொண்டு மகன் டீயை உறிஞ்சினான். நகரில் காலை நேர பரபரப்பு தொற்றிக் கொண்டது. வண்டிவாசிகள் விர்விர்ரென பறக்கத் தொடங்கின. பால்.. காய்கறி வண்டிகள் குடியிருப்பை நோக்கி வேகமெடுத்தது.

”மணியாச்சு.. சீக்ரம்..” என்றான் தனக்கும் மனைவிக்குமாக.

ஓம் சாயி.. ஸ்ரீ சாயி.. என்று ஹிந்தியில் அச்சிட்ட மஞ்சள் துண்டை விரித்து அதில் சாய்பாபா படத்தை நடுநாயகமாக்கி மனைவி பிடித்துக் கொள்ள.. படத்தை இருபுறமுமிருந்த கம்பிகளில் அசையாமல் இழுத்துக் கட்டினான். ஆட்டி பார்த்தான். சாயாமல் இருந்தது சாய்பாபா படம். சாமந்தி மாலையை கொண்டு வர சொன்னான். மாலையை படத்தோடு இறுக்கி அசையாமல் கட்டினான்.

முகத்தை அலம்பி கண்களிலிருந்து பூளையை அகற்றிக் கொண்டிருந்தாள் மனைவி. துணியில்லாமல் டம்ளரை உருட்டி விளையாடிக் கொண்டிருந்த மகனை “எலேய்..“ என்று கொஞ்சிக் கொண்டே தடுப்புக்குள் நுழைந்தான். அடுக்காக வைக்கப்பட்ட பிளாஸ்டிக் தட்டில் ஏற்கனவே இருந்த விபூதியோடு பாக்கெட்டிலிருந்த விபூதியை பிரித்துக் கொட்டினான். உடுத்தியிருந்த புடவையை கழற்றி விட்டு காவி நிற புடவையை கட்டிக் கொண்டாள் அவள். மனைவியின் இடுப்பை வலியில்லாமல் கிள்ளினான். பிறகு குங்குமம்.. நறநறவென்றிருந்த சாம்பல் என தனி தனி பிளாஸ்டிக் தட்டுகளில் எடுத்து வைத்துக் கொண்டான். மனைவி புடவைக்கு கொசுவம் வைத்துக் கொண்டிருந்தாள். மகனின் கையிலிருந்த டம்ளரை வாங்கி ஓரமாக வைத்து விட்டு அவனுக்கு டவுசரை அணிவித்தான். பளபளவென்று காவி நிறத்திலிருந்தது அந்த டிரவுசர்.

ரிக்சா வண்டியை முன்னும் பின்னுமாக சுற்றி வந்து பார்த்தான். மினி சாய்பாபா கோவில் போலிருந்தது அந்த வண்டி. ஸ்பீக்கரை கட்டினான். சில்வர் தோண்டியை எடுத்தாள் அவன் மனைவி. அதன் வாயில் சுற்றப்பட்டிருந்த காவி நிற துணி நைந்திருந்தது. அதை பிரித்து ஓரமாக வீசி விட்டு புது காவி துணியை இறுக்கமாக சுற்றி வேடு கட்டினாள். நடுவே காசு போடுமளவுக்கு சிறிய ஓட்டையை ஏற்படுத்தினான் அவன்.

தலையை அவிழ்த்தி பின்னிக் கொண்டாள். கிச்சுகிச்சு மூட்டினான் மனைவியை. சிரித்துக் கொண்டே சீப்பிலிருந்த முடியை உருவி படுதாவுக்கு வெளியே எறிந்தாள். செம்பட்டையாக இருந்தது முடி. சாமந்தி பூவை நீட்டினான் அவன். வாங்கி தலையில் வைத்துக் கொண்டாள். தட்டிலிருந்த விபூதியை அள்ளி நெற்றி நிறைய பூசிக் கொண்டான். நடுவில் குங்குமம் வைத்து அதன் மீது கீற்றாய் சாம்பலை நீரில் குழைத்து பூசிக் கொண்டான். விபூதிக்கும் சாம்பலுக்கும் வண்ணத்தில் நிறையவே வித்தியாசம் இருந்தது. மனைவியும் விபூதி பூசிக் கொண்டாள். குங்குமத்தை பெரிதாக இட்டுக் கொண்டாள். இப்போது அவளுக்கு வயது இரண்டு மூன்று கூடி இருபது.. இருபத்தொன்று மதிக்கலாம் என்றிருந்தது. காலி டம்ளருக்காக அடம் பிடித்து சிணுங்கிய மகனிடம் ஒயர் கூடையில் வைத்திருந்த  முறுக்கை எடுத்து நீட்டினாள். ஒழுகும் சளியை நக்கிக் கொண்டே முறுக்கை கடித்தான் மகன். “நேரமாச்சு..” என்றான் மீண்டும் மனைவியிடம்.

ஒயர் கூடையை எடுத்துக் கொண்டாள் மனைவி. துாக்கியெறிந்த உண்டியல் துணியால் மகனின் மூக்கில் ஒழுகிய சளியை துடைத்தெடுத்தாள். பிறகு மகனின் நெற்றியில் விபூதி பட்டையிட்டாள். சாம்பல் தட்டை நீட்டினான் அவன். தனக்கும் மகனுக்கும் கீற்றாக இட்டுக் கொண்டாள். குங்குமம் வைக்க விடாமல் தடுத்த மகனின் கையை பிடித்துக் கொண்டு குங்குமத்தை வைத்தாள்.

”போலாமா..” என்றான்.

”ம்ம்..” என்றாள்.

வண்டி தயாராக இருந்தது. சாமந்தி மாலையில் சாய்பாபாவும் தயாராக வீற்றிருந்தார்.

மகனை துாக்கிக் கொண்டாள் அவள். ஒயர் கூடையை ஹேண்ட்பாரில் மாட்டினான் அவன். சிவப்பு நிற சிறிய பிளாஸ்டிக் உண்டியல் ஒன்றினை மகன் கையில் கொடுத்தாள். அவன் உடனடியாக அதை வாயில் வைத்து விளையாடினான். டேப்ரிகார்டரை ஆன் செய்தான்.

ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே

சச்சிதானந்தாய தீமஹி

தன்னோ சாய் ப்ரசோதயாத்.

சாயி காயத்ரி ராகமாக ஒலிக்கத் தொடங்கியது.

“ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி”.

“ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி“

காலையிலேயே கிளம்பி விட்டதால் இன்று உண்டியல் அரைவாசியாவது நிரம்பி விடும் என்ற எதிர்பார்ப்பு இருவருக்குமே இருந்தது. உற்சாகமாக குடியிருப்பு பகுதியை நோக்கி நடக்க துவங்கினர்.

 

***

பிரக்ஞை

பெ. விஜயராகவன்

காலைப் பொழுதின் மழைத்தூறலில்
மிக ஞாபகமாய்
கக்கத்தில் மடங்கிய குடையுடன்
மெல்ல நிதானித்து நடக்கும்
நரை கூடிய கிழவன் நடையில்
காண்கிறேன்
பிரக்ஞையின் பெருவெளித் தடத்தை.

எஸ். சுரேஷின் ‘பாகேஸ்ரீ’

ரா. கிரிதரன்

பாகேஶ்ரீ ராகம் மென்சோகம் நிரம்பியது; சுயபச்சாதாபம் நிரம்பியது எனும் குறிப்போடு தொடங்கும் கதையில் அதே உணர்வுகளோடு பலவிதமான பாடல்களும் அவற்றின் ரசனையும் சுட்டப்படுகின்றன.  கதைசொல்லியின் பழைய நினைவுகளாகக் கதை தொடங்குகிறது. நிஜாம் பகுதியில் நடப்பது போலச் சொல்லப்பட்ட கதை பழைய ஹைதராபாத்தின் சாயா கடைகளில் நடக்கும் இயல்பான நிகழ்வுகளின் பின்னணியில் சொல்லப்பட்டிருப்பது கதையை நல்ல வாசிப்பனுபவமாக ஆக்குகிறது. டீக்கடை என்றாலே அரட்டை என ஆகிவிட்ட காலத்தில் ரம்மியமான இசையனுபவமும் கலை விவாதங்களும் நடக்கும் பொது அரங்குகளாகவும் அவை இருந்த காலத்தை நினைவூட்டியதில் பாகேஶ்ரீ ராகம் போல ஒரு வித ஏக்கம் நமக்கும் தோன்றியது. நிஜாம் சாம்ராஜ்ஜியத்தின் எச்சங்களாக எஞ்சிய சிலவற்றுள் ஹிந்துஸ்தானி கலைஞர்களுக்கான இடமும், கலாரசனையும் இருந்தாலும் அவையும் இன்று காணாமல் போய்விட்டதில் மனித மனநிலையின் இறக்கத்தை அசைபோடுகிறது கதையின் பின்புலம்.

பொதுவாக ராகங்களுக்கு என இருக்கும் இயல்புகளில் எனக்கு அதிக ஈர்ப்பு கிடையாது. சிலவகை ராகங்கள் காலையில் பாட உகந்தவை, சில இரவு நேர ராகங்கள் எனப் பிரித்திருப்பதே ஒருவித வசதிக்காக மட்டுமே தவிர அவை எழுப்பும் உணர்வுகளுக்கும் அந்த நேரங்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக நான் முழுவதாக நம்பவில்லை. இது ஒரு தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். இசையின் இயல்பு அகவயமானதுதான். ஆனால், ராகம் என்பது ஒரு உணர்வுநிலை. அதனால், சில குறிப்பிட்ட வகை மன இயல்புகளோடு இயைந்து போகும் தன்மை கொண்டது என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. இரவு நேரத்தில் கவிழும் அமைதியில், உலகமே தூங்கும்போது பரமாத்மாவைப்போல சாட்சியாக விழித்துப்பார்க்கும் நிலையில் பாடல்களின் உணர்வுகள் நமது மன இயல்புடன் இணைந்துகொள்ளும். அப்படி இரவின் இயல்பைக் கூட்டும் ராகங்கள் இருக்கலாம். பாடப்பாட ஒருமித்த மன நிலை கூடும்.

பழைய நிஜாம் அரசாட்சியின் மிச்சங்கள் கலாச்சார அடையாளங்களாகவும், கலப்பு மொழியாகவும் எஞ்சி நிற்கும் ஒரு பின்னணியில் நடப்பது கதைக்குப் பெரிய பலத்தைத் தருகிறது. தெலுங்கு, உருது மொழிகளும் கலந்திருப்பது கதைக்கு நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது. ரெண்டாவதாக, கதையின் கட்டமைப்பு மிகக் கட்டுக்கோப்பான பாணியில் அமைக்கப்பட்டிருப்பது ரசனை சமநிலையைப் பூர்த்தி செய்கிறது. கதையில் எவ்விதமான உணர்ச்சிகளும் தனித்துத் தெரியவில்லை. ஹ, ஹ ஹ என விரக்தியாகத் தெரியும் சிரிப்பு கான் சாகிப் சத்தியம் கேட்டபோதும் கதைசொல்லியின் மனதில் ஒலித்திருக்கலாம். அதே போல, கரானாவுக்கு வாரிசாகத் தனது மகன் உருவாக வேண்டும் எனும் வெறி உருவாவதும் ஒரு அரக்கத்தனமாகத் தெரியாமல் மிக இயல்பான ஒன்றாக ஆசிரியர் காட்டியிருப்பது உணர்ச்சியற்ற கூறல்முறையில் அவருக்கு இருக்கும் ஈடுபாட்டைக்காட்டுகிறது.  இதுவே கதையை ஒரு சமநிலையில் பார்க்க உதவுகிறது. சிறுகதையில் அதீத உணர்வு பாவனைகள் சமநிலையைக் குலைத்துவிடக்கூடும். கற்பூர டப்பாவில் பாதுகாத்த பண வாசனை போல கதையின் இயல்பை மாற்றிவிடும்.

ஆனால், மேலே சொல்லப்பட்ட சிறப்பியல்புகளே கதை அடுத்த கட்டத்துக்குச் செல்ல தடையாக இருக்கின்றன. உணர்ச்சியற்ற நடையில் கூறப்படும் பெரும்பாலான கதைகளுக்கு நேரும் அவலம்தான் என்றாலும் பல இலக்கியவாதிகள் இக்கட்டத்தை வேறொரு வழியில் தாண்டிவிடுகிறார்கள்.  வாழ்வின் அபத்த நிகழ்வாகவோ, உச்சகட்ட முரண்பாட்டுக் களமாகவோ நிகழ்வுகளைத் தொகுக்கும்போது உணர்ச்சியைக் காட்டாத கதைக்கும் ஆழம் கூடிவிடுவதைப் பார்க்கலாம். “எனக்கு எதைப் பார்த்தாலும் சிரிப்பாக இருக்கிறது”, எனத் தொடங்கும் ‘மரப்பசு’ நாவல் நாயகியின் உணர்ச்சிகள் வேகக்கார் போட்டி போல உச்சகட்ட தீவிரத்தையே தக்கவைத்திருந்தாலும் கதையை நாடகத்தனமாக மாற்றாமலிருக்க அம்மணியின் இயல்புக்கு மாறான காதலைப் புகுத்தி முரண்பாட்டை அதிகப்படுத்துகிறார் தி.ஜா. இரவு தாமதமாக வருவதால் வெளி கேட்டைத் திறக்காமல் போகும் வீட்டுக்காரம்மாவின் கோபத்தை எதிர்கொள்ளும் அபத்தத்தை விவரிப்பதில் கோபி கிருஷ்ணன் உணர்ச்சியைக் காட்டாது கதையை வாசகர்க்கு கடத்த முடிவதோடு கதாபாத்திரங்களின் ஆழத்துக்கும் புக வழி ஏற்படுத்த முடிகிறது.

பாகேஶ்ரீ கதையில் ஏகலைவன் போல சத்தியம் கொடுத்துவிடும் கதைசொல்லியின் எண்ண ஓட்டத்தில் தொடங்கும் கதை அவனது மனதின் ஆழத்தில் உறங்கும் சோகத்தைக் காட்ட எவ்விதமான முயற்சியையும் எடுக்கவில்லை. ஹ,.. ஹ… ஹ… எனச் சிரிக்கும் வகையில் ஒருவித விட்டேத்தியான மனநிலையைக் காட்டுவதாக எடுத்துக் கொண்டாலும் அது தீவிரமாகச் சொல்லப்படாதது அவனுடன் ஒன்றிவிடமுடியாதபடி தள்ளிவைக்கிறது. கலையின் உச்சகட்டத் தீவிரத்தைக் கைகொள்ளும் ஒருவன் அதன் வெளிப்பாட்டுக்குத் தடைவரும்போது முட்டிப்பார்க்கவோ, உடைந்து நொறுங்கிப்போவதோ, தீவிரமான கழிவிரக்கத்தில் புகுந்துகொள்வதோ இயல்பானது. அவன் பாட முடியாமல் முணுமுணுப்பதாக கதையின் தொடக்கத்தில் வந்தாலும் அந்த சத்தியம் அவனது இயல்பை எப்படி மாற்றியது எனச் சொல்லிவிட்டு பின்கதையில் அதே இசை அவனுடைய குதூகலத்தை ஊட்டியது எப்படி எனச்சொல்லியிருந்தால் பாடல்களில் காட்டப்பட்ட மென்சோகம் சொல்லாமலேயே நமக்குக் கடத்தப்பட்டிருக்கும். இந்த மாற்றம் நடக்காததால் கதையில் சுட்டிக்காட்டப்படும் பாடல்களுக்கும் கதைசொல்லியின் உணர்ச்சிக்கும் ஒரு பெரிய இடைவெளி விழுந்துவிடுகிறது. இதுவே கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தாமல் ஆசிரியரே பாடலின் உணர்வுகளைச் சொல்வது போல அமைந்துவிடுகிறது. ஆசிரியரே பாடலை மென்சோகம் எனச் சொல்லும் தேவையும் ஏற்படுகிறது.

நுண்கலைகளைப் பற்றிய விவரங்கள் அதிகம் வரும் கதையில் அக உணர்வுகளுக்கு எந்தளவு மதிப்பு தரவேண்டும்? நுண்கலையின் வெளிப்பாடு எதற்குப் பயன்படவேண்டும் என கதாசிரியர் உத்தேசித்திருக்கிறார் என்பதைப் பொருத்து இதற்கான பதில் அமையலாம். திசைகாட்டியைப் போல கதையில் வரும் புறக்காட்சிகள் கதையின் நம்பகத்தன்மையைக் கூட்டுவதற்காகவும், கதைக்கு மேலதிக பொருளை அளிப்பதற்காகவும் பயன்படும். தமிழுக்கு கூடுதலாக அகப்புற சித்தரிப்புகள் ஆடிப்பிம்பமாகப் பார்க்கும் மரபை கதைகளுக்குப் போட்டுப்பார்த்து வளர்த்தெடுத்தும் வழிமுறை கைவசம் உண்டு. அக உணர்வுகளும் புறக்காட்சிகளும் உண்மையில் ஆடிப்பிம்பமாகச் செயல்படும் விதத்தில் ஒருங்கிணையும்போது நம்பகத்தன்மையும் கதைக்கு மேலதிக பொருளையும் அவை கொண்டுகூட்டி அளிக்கும். இக்கதையில் பாடல்களின் தன்மையும் அதன் உணர்வுநிலைகளையும் கதாபாத்திரங்கள் மீது சுமத்திப்பார்ப்பதற்கான  சந்தர்ப்பங்களை ஆசிரியர் அதிகம் பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது.

சத்தியம் வாங்கும் நிகழ்வை முன்னிட்டு நாடகீய ஆட்டம் மூலமாகவோ, கதைசொல்லியின் தீவிரத்தன்மையைக் கூட்டும் அகச்சித்தரிப்புகள் மூலமாகவோ, வாழ்வின் முரணைக் காட்டும் விதத்தில் விட்டேத்தியான மனநிலை மூலமாகவோ, அபத்தத்தின் வெளிப்பாடாகவோ இந்த இடைவெளியை அவர் நிரப்பியிருந்தால் பாகேஶ்ரீ மிகச்சிறந்த கதையாக மாறியிருக்கும்.

பாகேஶ்ரீ சிறுகதை, எஸ். சுரேஷ்

பாகேஶ்ரீ சிறுகதையில் வரும் பாடல்கள்