Author: பதாகை

நூலகத்துக்குப் போகும் வழியில் ஒரு கிரிக்கெட் மாட்சைப் பார்க்க நின்றபோது- அசோகமித்திரன் சிறுகதை குறித்து

 அஜய் ஆர்

ami

PDF

ஒரு ஓவரின் இறுதி இரு பந்துகளில் அடுத்தடுத்து இருவரை ஆட்டமிழக்கச் செய்கிறான் ஒரு போலர். இன்னொரு போலர் வீசும் அடுத்த ஓவர் முடித்த பின் ‘ஹாட்ரிக்’ செய்யும் சாத்தியத்துடன் முதல் போலர் மீண்டும் பந்து வீசத் தயாராகிறான். எதிரணிக்கும் அதனுடைய ஆதரவாளர்களுக்கு மட்டும் உவப்பாக இருக்க முடியாத ‘ஹாட்ரிக்கை’ அவன் அடையக் கூடாது என்று கதைசொல்லி ஏன் எண்ணுகிறான்?

மனக்கோணல் பற்றிய இந்தச் சிறிய கதையில் கணிசமானப் பகுதியை அதன் புறச்சூழலைக் கட்டமைப்பதில் செலவிடுகிறார் அசோகமித்திரன். மாலைநேரத்தில் நூலகத்துக்குச் செல்லும் வழியில் உள்ள பள்ளிக்கூட மைதானத்தில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை கவனிப்பது கதைசொல்லியின் வழக்கம். இப்படி எந்த ஆரவாரமுமற்ற காட்சியோடு ஆரம்பிக்கும் கதையில் ஒரு மாலை அவன் கவனிக்க நேர்வதுதான் இந்த ஆட்டமும். ‘நான் உத்தியோகமின்றி இருந்த பல தருணங்களில் அதுவம் ஒன்று’ என்று அந்த தினத்தைப் பற்றி அவன் சொல்லும் ஒரு வரியிலிருந்தே, கதைசொல்லி தொடர்ந்து வேலை தேடிக் கொண்டிருப்பவன், ஆனால் ஏதோ காரணத்தால் அடிக்கடி வேலையை இழப்பவன் என்று அவன் பின்னணி குறித்து யூகிக்க முடிகிறது (அவனுடைய குணாதிசயம் இதற்கு காரணமாக இருக்கலாம்) . இரண்டு மணி நேரம் தேடி ஒரு நூலை தேர்வு செய்பவன் என்பது அவன் வாசிப்பு குறித்து நாம் யோசிக்கச் செய்கிறது. பள்ளி மைதானத்தைச் சுற்றியுள்ள வேலியில் ஒரு சில இடங்கள் மட்டும் – மாணவர்கள் குறுக்கு வழியில் வெளியேற/ நுழைய – அகலப்படுத்தப்பட்டிருப்பது, கதைசொல்லி பள்ளி நாட்களில் வாயில் வழியாகச் செல்லாமல் சுவர் ஏறிக் குதித்துச் சென்றது குறித்த நினைவுகள் என்றுஅனைவருக்கும் பொதுவான பள்ளி நிகழ்வுகளை மீட்டெடுக்கின்றது.

இவற்றைத் தொடர்ந்து ஆட்டக்காரர்களைப் பற்றிய கதைசொல்லியின் அவதானிப்புக்கள் கதையின் மையத்திற்கு அருகில் வாசகனை இட்டுச் செல்கின்றன. அந்த போலர் அடுத்தடுத்து இரண்டு ஆட்டக்காரர்களை ஆட்டமிழக்கச் செய்கிறான். பிறகு அவன் மீண்டும் பந்து வீசத் துவங்கும் முன் அவனும் அணியின் தலைவனும் மற்றவர்களை எந்த இடங்களில் நிறுத்த வேண்டும் என்று நேரமெடுத்துக் கொண்டு முடிவுசெய்கிறார்கள். ஹாட்ரிக் என்பது அரிய நிகழ்வல்லவா. இப்போது தான் கதைசொல்லி போலரின் தோல்வியை விரும்புகிறான். வாசகன் இப்போது கதையின் மையத்தை அடைந்து விட்டான்.

கதைசொல்லி விரும்பியதைப் போலவே அந்த பந்தில் விக்கெட் விழுவதில்லை. ஆனால் இப்போது கதைசொல்லி போலருக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறான். தொடர்ந்து ஆட்டத்தைப் பார்க்க விரும்பாமல் நூலகத்திற்குச் செல்கிறான். கதைசொல்லி தன் வெறுப்பைக் கடந்து வந்து விட்டானா அல்லது தான் நினைத்தது நடந்து விட்டது என்ற வெற்றி உருவாக்கும் பெருந்தன்மையில்தான் அவ்வாறு எண்ணுகிறானா என்ற கேள்விகள் எழும் அதே நேரம் கதை அதைப் பற்றியதல்ல என்ற எண்ணமும் ஏற்படுகிறது. கதைசொல்லி தான் சிக்கிய சுழலிலிருந்து தன்னை மீட்டெடுக்கிறான் என்பதாக கதையின் முடிவைப் நாம் புரிந்து கொண்டாலும், அவனிடம் போலரின் கொண்டாட்டம் (அல்லது பிறிதொன்று) ஏற்படுத்தும் மனக் கோணலிற்கான உண்மையான காரணம் எளிதில் புலப்படுவதில்லை.

வேறெங்கோ சென்றுகொண்டிருக்கும்போது தனக்கு நேரடியாக சம்பந்தமில்லாத ஆட்டத்தை கவனிக்க ஆரம்பித்த – பொதுவாக கிரிக்கெட் என்றில்லாமல் விளையாட்டு மேல் கதைசொல்லிக்கு பெரிய விருப்பு இல்லாத நிலையில் (புகழ் பெற்ற ஆட்டக்கார்களை தெரிந்து வைத்திருப்பதைத் தவிர) – ‘எளிய ஓடிப் பிடிப்பது தவிர வேறு விளையாட்டு நான் ஆடினதாக ஞாபகம் இல்லை’ என்று அவன் சொல்வதிலிருந்து இதை புரிந்து கொள்ள முடிகிறது – மிகக் குறைவான நேரத்திற்கே என்றாலும், முகம் கூட சரியாக பார்க்க முடியாத ஆட்டக்காரனின் தோல்வியை அவன் விரும்பும் அளவிற்கு அவனுள் வெறுப்பு குடிகொண்டு, அதன் கசப்பினால் அவன் தன்னையே ஏன் சுயவதை செய்து கொள்ள வேண்டும்.

‘First impression is the best impression’ என்று அடிக்கடி சொல்லப்படுவதற்கேற்ப விளையாட்டைப் பார்க்க ஆரம்பித்த குறைந்த நேரத்திலேயே அந்த போலரிடம் கதைசொல்லிக்கு – அவன் யாரென்று தெரியாமலேயே – மனவிலக்கு ஏற்பட்டுவிடுகிறது. முதல் இரு விக்கட்டை வீழ்த்தியவுடன் போலரின் உற்சாகமான – மற்ற பார்வையாளர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கக்கூடிய – கொண்டாட்டம் கதைசொல்லிக்கு மட்டும் இவ்வளவு பெரிய அசூயையையும், மன விலக்கத்தையும் ஏன் உருவாக்க வேண்டும். கதைசொல்லியும் இதை உணர்ந்தே இருக்கிறான். அந்த போலரால் இப்படி சம்பந்தமேயில்லாத ஒருவன் தன் தோல்வியை விரும்புவான் என்று கற்பனைகூட செய்ய முடியாது.

ஆனால் கதைசொல்லியை பொறாமைக்காரனாகவோ மற்றவர்கள் மகிழ்ச்சியை தாள முடியாத மனப் பிழற்சி கொண்டவனாகவோ அசோகமித்திரன் சித்தரிப்பதில்லை. தான் சுட்ட விரும்புவதை முன்வைக்க அத்தகைய வழமையான பாத்திர வார்ப்பு அவருக்குத் தேவைப்படுவதும் இல்லை. ஒரு சில கணங்கள் மட்டும் தன் அகத்தில் இருள் குடிகொள்ளும் சராசரி ஆசாமி தான் நம் கதைசொல்லி. அப்படி அவன் இருப்பதாலேயே அவன் கொள்ளும் உணர்வுகள் அதிக கூர்மை கொள்வதோடு, அவ்வுணர்வுகளுக்கான உந்துதல் புரியாவிட்டாலும், நம்மை அவற்றுடன் அடையாளப்படுத்திக் கொண்டு அணுக்கமாகவும் உணர முடிவதோடு, கதைசொல்லி கதையைப் படிக்கும் வாசகர்களில் ஒருவராகவும் இருக்கலாம் என்ற சுயபரிசோதனையை செய்யவும் தூண்டுகிறது. ஏளனத்தை, அகம்பாவத்தை வெளிக்காட்டுபவை என ஒருவரின் புன்சிரிப்பை, உடலசைவை இன்னொருவர் (தவறாக) புரிந்து கொண்டு ,முதாலமவர் மீது காழ்ப்பு கொண்டு அதை விருட்சமாக வளர்க்கும் நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன.

அசோகமித்திரனின் பிற சிறுகதைகள் குறித்து- 

இரு திருமணங்கள்

இரண்டு விரல் தட்டச்சு

இன்று நிம்மதியாகத் தூங்க வேண்டும்

oOo

ஒளிப்பட உதவி – Vaidheeswaran Voices…

‘அனைத்தும் உடலில் ஆரம்பித்து உடலில் முடிந்து விடுகிறது’ – சரவணன் அபி

யாரும் சீண்டாத, முதுமை குடியேறி, காலத்தால் நரை கண்டு விட்ட ஒரு ரயில் நிலையம்- துணை யார், நாள் பொழுது எப்படிக் கழியும், அதன் இருப்பில் வரும் போகும் வரும் போகும் வெயிலும், பனியும், கோடையும், கொடும் மழையும்- ஆயினும், எவ்வித சலனமுமில்லாமல் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் அதன் வெளியுரு

நடைமேடையும், நிறம் மங்கிய சருகுக் கூட்டமும், வரியோடிய விலா எலும்புகள் தெரியும் கட்டிடமும் துலங்கி கவிதை நகர்ந்தது.

கிளர்ச்சி தரும் வருகை; அது தரும் குற்றவுணர்ச்சி என்ற படிமங்கள் தோன்றி அமைந்ததும், மற்ற வரிகள் அடுத்தடுத்து அமைந்து கொண்டன.

அனைத்தும் உடலில் ஆரம்பித்து உடலில் முடிந்து விடுகிறது, இறுதியில் இதுதான் பொருந்துகிறது

‘அந்தத் தேரும் வீதியும் நிறைய மாறியிருக்கின்றன’- நித்ய சைதன்யா

பதின்பருவத்தில் பித்தேறி அலைந்த அந்நாட்களைத் தேடி சொந்த ஊருக்குச் சென்றால் பதினைந்து ஆண்டு இடைவெளியில் நான் வாழ்ந்த எதுவும் இல்லை, அல்லது அவையெல்லாம் உருமாறியிருந்தன. சொந்த ஊரும் தாமிரபரணியின் தண்ணென்ற நீரும் எனக்கு அவளாக மட்டுமே தெரிந்தது. என் பயணமே அவளின் நினைவுகளை மீட்டு எடுத்துவிடும் நோக்கம் கொண்டதே. இன்று முதிரா காதல் என்றும் சிறுபிள்ளை விளையாட்டு என்றும் கருதினாலும் அக்காலத்தில் அது அப்படியல்ல. ஆறு மணிக்கு அவள் குளிக்கவருவாள் என்கிற உணர்வோடு ஒவ்வொரு இரவும் திரைவிலகத் துடித்தலையும். அதிகாலையில் குளிர்நடுங்க ஆற்றின் நீரோட்ட சலம்பலில் நானும் காதுகொடுத்து அமர்ந்திருப்பேன். நல்லரவும் சாரையும் சிலசமயம் எனை அஞ்சி விலகிச்செல்லும்.

வெகு தொலைவில் ஒரு ஊதா நிறப்புள்ளியாக அவள் வருகை தென்படும். உள்ளம் ஆனந்தக் கூத்தாடும். கைவிரல்களில் காற்றில் அலையும் ஒரு பதற்றம் தொற்றும். ஊரே என்னை உற்று நோக்கும் மனபாவனையும் இளம் இருளுக்குள் கண்காணிக்கும் விழிகள் குறித்தும் பயம் தோன்றும். அருகில் நெருங்கி வர இதயம் வாய்க்குள் வந்து நிற்கும் திகைப்பு. அவள் என்னை எப்போதும் போல ஒரு பெண்பார்வை பார்த்துச் செல்வாள். அவள் தோழிகளிடம் ஏதோ சொல்லிச் சிரிப்பாள். நதிக்கரைக்கு அவளின் வருகைக்குப்பின் சங்கீத ஞானம் சற்று கூடுதலாகத் துவங்கும். மரக்கிளைகளில் அமர்ந்துள்ள கிளிகள் உள்பட பறவைகளும் என்னுடன் பறந்தமர்ந்து பறந்து செல்லும்.

அவள் வாழ்ந்து சென்ற வீடு இன்று மல்டிலெவல் காம்பளெக்ஸாகி பளபளக்கிறது. நான்கு ரத வீதிகளில் தினமும் காலை மாலை என இரண்டு முறையும் வலம் வருவேன். மிகுதியும் காலத்தை சுமந்து நிற்கும் தேருக்குப் பின் அமர்ந்து அவள் வரும் கணங்களுக்காக காத்திருப்பேன். இன்று அந்தத் தேரும் வீதியும் நிறைய மாறியிருக்கின்றன. எனக்குள் பதிந்திருந்த தெருவும் ஊரும் எங்கு சென்றன?

நதியின் நளினத்தை வெறித்து நின்றபோது யதேச்சையாக காண நேர்ந்த மல்லிகைச் சரம் சூரியக்கதிரில் சுடர்ந்து மனதிற்குள் ஒரு திடுக்கிடலுடன் மிதந்து சென்றது. காணும் மலரெல்லாம் அவள் சூடியதன்றி வேறென்ன?

இன்று நிம்மதியாகத் தூங்க வேண்டும்- அசோகமித்திரன் சிறுகதை குறித்து

 அஜய் ஆர்

ami

அலுவலங்களில் வேலை முடிந்து அனைவரும் வீட்டிற்குச் செல்ல ஆரம்பிக்கும் அன்றாட மாலைப் பொழுதில் அசோகமித்திரனின் ‘இன்று நிம்மதியாகத் தூங்க வேண்டும்‘ சிறுகதை ஆரம்பிக்கிறது. சிக்னல் விழும்போது “… ஏதாவது ஒரு வரிசை வெறி பிடித்தது போலச் சீறி விரையும்,” என்று எழுதியிருந்தால் வழக்கமான விவரிப்பாக இருந்திருக்கும். ஆனால் அதனுடன் “பிரமாண்டமான பஸ்களிலிருந்து சாத்வீகமாகத் தோற்றமளிக்கும் சைக்கிள்கள் வரை அவற்றுக்குச் சாத்தியமான ஆவேசத்தைக் காட்டி ஓடின,” என்ற பின்னிணைப்புப் போன்ற வரியை கோர்க்கும்போது – உண்மையில் அனைத்து வாகனங்களும் ஒரே வேகத்தில் செல்வதில்லை எனபதை, “…அவற்றுக்குச் சாத்தியமான ஆவேசத்தைக் காட்டி ஓடின,” என்று வாகனங்களில் குடிகொள்ளும் வெறி வெளிப்படுவதில் உள்ள வேறுபாட்டை, – அந்த விவரிப்பு நுட்பம் கொள்கிறது. இத்தகைய சிக்கனமான சித்தரிப்புக்கள் பரபரப்பான அந்தி வேளையை உயிர் கொள்ளச் செய்கின்றன.

இந்த பரபரப்பின் ஒரு கண்ணியான சகுந்தலா அலுவலகம் விட்டு வெளியே வருகிறாள். பேருந்து நிறுத்தம் வரும் அவள் ராஜரத்தினம் அங்கில்லை என்று ஆசுவாசப்படும்போது அவள் மனமும் ஏதோ பரபரப்பு கொண்டுள்ளது என்பது புரிகிறது. ராஜரத்தினம் அவளைப் பின்தொடர்ந்து தொந்தரவு செய்பவன் ஒன்றும் இல்லை. அவனும் சகுந்தலாவும் காதலர்கள். அப்போது அவனும் அங்கு வர ஒரு ‘பொறி’ மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஹோட்டலுக்குச் சென்று உரையாடுகிறார்கள். ராஜரத்தினம் தாங்கள் மணம் புரிவது குறித்து சகுந்தலா தன் வீட்டில் சொல்லிவிட்டாளா எனக் கேட்க, சகுந்தலா உடனே பதில் சொல்வதில்லை. சகுந்தலாவின் அக்காவிற்கு திருமணமாகாத நிலையில் தன்னால் வீட்டில் இது குறித்து பேச முடியாத சூழல் இருப்பதாய் சகுந்தலா சொல்கிறாள். இது இவர்களுக்கிடையே ஏற்கனவே நடந்துள்ள, அடிக்கடி நடக்கும் உரையாடலின் நீட்சிதான் என்று நமக்குப் புரிகிறது. சினம் கொள்ளும் ராஜரத்தினம் அடுத்த திங்களன்று முடிவாகச் சொல்ல வேண்டுமென்று கடுமையாகப் பேசிவிட்டுச் செல்கிறான். ஏன் முதலில் ராஜரத்தினம் இல்லாததால் சகுந்தலா ஆசுவாசமடைந்து பின்பு அவனைக் கண்டு ‘பொறி’ மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என்பது இப்போது புரிகிறது.

சகுந்தலா வீட்டுக்குச் செல்கிறாள். மீண்டும் பின்மாலை/ முன்னிரவு நேரச் சித்தரிப்புகள், அதனூடே அவள் குடும்பம் குறித்தும் தெரிந்து கொள்கிறோம். 30 வயதாகும் சகுந்தலாவின் அக்கா எஸ்.எஸ்.எல்.சி தாண்டாதவள், வீட்டின் அனைத்து வேலைகளையும் அவள்தான் பார்த்துக்கொள்கிறாள், அவள் ஏற்று நடத்தாத வீட்டுப் பொறுப்பே கிடையாது. ஆனால் வேலைக்குச் செல்லாத, அதே நேரம் அதை ஈடு செய்யக்கூடிய பெரிய வசதிகள் இல்லாத குடும்பத்துப் பெண்ணை மணம் புரிய யாரும் இல்லை. இது அக்காவிடம் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை “இப்போதும் அவள் குளித்துவிட்டு வந்தவுடனே அழகாக இருப்பது போலத்தான் தெரியும். ஆனால் ஐந்து பத்து நிமிடங்களுக்குள் முகத்தைக் களையிழக்கச் செய்யும் சோர்வும் சலிப்பும் மெல்லிய கோடுகளாகவும் சுருக்கங்களாகவும் வந்து விடும்,” என்று அ.மி விவரிக்கிறார். இங்கு சோர்வும், சலிப்பும் வயது அதிகமாவதால் மட்டுமல்ல, ஒரே விதமாக முடியும் தொடர் பெண் பார்க்கும் படலங்கள் உருவாக்குபவை என்று உணர முடிகிறது.

வீட்டிற்கு வரும் சகுந்தலாவிடம் அவள் அக்கா தலைவலியால் படுத்திருப்பதாக அவள் தாய் சொல்கிறார். அவள் மூக்குக்கண்ணாடி அணிய நேரக்கூடும், அதுவும் வரன் தகைய தடையாக இருக்கக்கூடும் என என சகுந்தலா எண்ணுகிறாள்.

இப்போது அ.மியின் கதைசொல்லலில் வாசகன் நேரடியாக ஒரு முறை கூடப் பார்க்காத, வீட்டில் மட்டுமல்ல கதையிலும் ஒரு ஓரத்தில் இருக்கும் சகுந்தலாவின் அக்கா விஸ்வரூபமெடுக்கிறார். சகுந்தலாவின் காதலுக்கு இணையாக -அவள் இன்னும் எத்தனை நாள் அக்காவிற்காக தன் திருமணத்தை தள்ளிப்போடுவாள் – அவள் அக்காவின் எதிர்கால வாழ்க்கை என்ன என்றும் வாசகன் கவலை கொள்ள ஆரம்பிக்கிறான். இதற்கடுத்து வாசகனின் கவனம் இருவரின் பெற்றோர் மீதும் திருப்புகிறது. தங்கள் மகள்களுக்கு திருமணம் செய்விக்க முடியாதது குறித்த குற்றவுணர்வுடன் அவர்கள் குமைந்து கொண்டிருக்கக்கூடும். அவர்கள் சகுந்தலாவின் அக்காவை மணம் முடிக்க அதிக முயற்சிகள் எடுக்கவில்லையா, அல்லது அவர்களின் இயலாமையே ஒரு தடையாக இருக்கிறதா என்பதை வாசகனின் யூகத்திற்கே அ.மி விட்டுவிடுகிறார்.

“இன்று ஒரு நாளாவது நிம்மதியாகத் தூங்க வேண்டும்” என்று நினைத்துக் கொண்டே சகுந்தலா படுக்கும்போது கதை முடிய, அந்த நினைப்பில் உள்ள நம்பிக்கையின்மையை அவள் மட்டுமல்ல, வாசகனும் உணர முடிகிறது. சகுந்தலா மட்டுமல்ல, அவள் அக்கா, பெற்றோர் மற்றும் ராஜரத்தினம் அனைவருக்கும் – இதையே விழையும் நகரின் எண்ணற்ற மனிதர்கள் போல் – அன்றிரவு உறக்கம் அரிதான ஒன்றாகத்தான் இருக்கும்.

தினமும் நாம் பங்குபெறும் காட்சியில் – சகுந்தலாவும் ராஜரத்தினமும் தாங்கள் சந்திக்கும் முதல் நிமிடத்தில் ‘என்ன என்ன’ என்று பரஸ்பர கேள்விகள் முடியும் முன் பேருந்து வந்து விட ராஜரத்தினம் இடம் பிடிக்க ஓடும் வழக்கமான நிகழ்வு – ஆரம்பித்து, அதில் அரை கணத்திற்கு மேல் கவனம் கொள்ளாமல் நாம் கடந்து செல்லும் எண்ணற்ற – பலதரப்பட்ட இக்கட்டில் இருக்கும் – முகங்களில் ஒன்றின் பிரச்சனையாக விரிந்து, அதனூடாக ஒரு குடும்பத்தின் சித்திரத்தை உருவாக்கும் மூன்று இழைகள் ஊடுபாவாக நெய்யப்பட்டுள்ள இக்கதை எளியவர்களின் அன்றாடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் அ.மியின் இன்னுமொரு கவனத்திற்குரிய படைப்பு.

oOo

அசோகமித்திரனின் பிற சிறுகதைகள் குறித்து- 

இரு திருமணங்கள்

இரண்டு விரல் தட்டச்சு

oOo

ஒளிப்பட உதவி – காலச்சுவடு

யாரும் இறங்கா நிலையம் – சரவணன் அபி

கூரை நடைபாதை 
கற்குவியல்கள் 
இருப்புப் பாதை என எங்கும் 
உதிர்ந்த சருகுகள் 

நிறம் மங்கிய 
நீர்வண்ண ஓவியம் 
போலொரு 
களைத்த பொலிவு 

இற்றது போல்வன 
எனினும் 
இறாது நிற்கும் 
நிலையத்தின் 
மரவரிகள் 
ஒரு நூறு 
நினைவுகளின் மௌன சாட்சிகள் 

அவ்வப்போது 
பாதை தேய்த்து 
சலிப்புடன் பெருமூச்செறிந்து 
வந்து நின்று 

பொருமலுடன் 
நீர் சிந்தி 
வேண்டா வெறுப்பாக 
கிளம்பிச் செல்லும் 
புகையற்ற வண்டி தரும் 
கிளர்ச்சியின் 
குற்றவுணர்வுடன் 
இரவில் தனித்திருக்கும் 

பகிர்வுகளில் 
பேதமேதும் 
பாராட்டுவதில்லை 
இருப்புப் பாதையோரம் 
இன்று முளைத்த 
எருக்கம்செடிக்கும் 
நடைமேடையின் 
நடுவீற்றிருக்கும் 
முரட்டு அரசுக்குமிடையே  

செல்லமாய் வருடி  
செந்நிறப் புழுதியை 
வீசியடித்து கழுவும்  
எத்தனையோ மழைக்காலங்களில் 
ஒன்றைக் கடந்து செல்ல 
இன்று காத்திருக்கும் 
உடலம்