Author: பதாகை

உயர்ந்தெழுதல்

செந்தில் நாதன்

dove-66475_640

 

செய்தி ஒன்றை கொடுப்பதற்காக வருவது போல்
நம் பால்கனி நோக்கி விரைந்து வரும் பறவைகள்
அதைத் தாண்டிப் பறக்கும், எப்போதும் தாண்டிப் பறந்து
நம் கண்முன்னே தம் திறமையை வெளிக்காட்டும்,
நாம் உவமானங்களைத் தவறாகப் புரிந்து கொண்டோம் என்று
நமக்குச் செய்தி சொல்வது போல. (more…)

ஐஸ் க்ரீம்

எஸ். சுரேஷ்

“எனக்கு ஐஸ்க்ரீம் வேணும்” என்று குட்டி கங்காரு கேட்க, தாய் கங்காரு அதை மடியில் வைத்துக் கொண்டு ஒரு எம்பு எம்பி வானத்தில் இருந்த மேகத்தைப் பிய்த்து தன் குட்டியிடம் கொடுத்தது

வெண்மேகத் துண்டத்தை கோன் ஐஸ் போல் சப்பிச் சாப்பிட்ட குட்டி, “இந்த வெள்ளை ஐஸவிட கருப்பு ஐஸ்தான் இன்னும் டேஸ்டா இருக்கும்,” என்றது

“அதுக்கு இப்போ சீசன் இல்ல. குடுத்தத சாப்பிடு” என்ற தாயைப் பார்த்து, “இதுவும் நல்லாதான் இருக்கு” என்று சொன்னது குட்டி கங்காரு.

ஒளிப்பட உதவி- Taylor James

திற! – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை

செந்தில் நாதன்

Manto

அந்த சிறப்பு ரயில் மதியம் இரண்டு மணிக்கு அமிர்தசரஸில் இருந்து கிளம்பி எட்டு மணி நேரம் கழித்து முகல்புரா வந்து சேர்ந்தது. வழியில் பலர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்; சிலர் தொலைந்து போயினர்.

காலை பத்து மணி. கிழட்டு சிராஜுதின் கண்ணைத் திறந்து முகாமின் சில்லிட்ட தரையைப் பார்த்தார்; அலை அலையாய்க் குவியும் ஆண்கள், பெண்கள், குழந்தைகளைப் பார்த்ததும் அவருக்குக் குழப்பம் அதிகரித்தது. இருண்ட வானத்தை வெறுமையுடன் பார்த்தார். அவரைச் சுற்றி ஒரே களேபரம், ஆனால் காதுகள் அடைத்திருந்தது போல் அவருக்கு ஒன்றும் கேட்கவில்லை. அவரை யாராவது பார்த்தால் கவலையில் ஆழ்ந்திருக்கிறார் என்று நினைத்திருப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல: அவர் நரம்புகள் தளர்ந்து போய் இருந்தன; அவர் எடையில்லாமல் ஏதோ ஒரு பாழ்வெளியில் மிதப்பது போல் உணர்ந்தார்.

சூரிய ஒளி சுளீரென கண்ணை உறுத்தியதும் அவர் திடுக்கிட்டு நிகழ்காலத்துக்கு வந்தார். அனைத்துப் பக்கங்களில் இருந்தும் நினைவுகள் அவரைத் தாக்கின. கொள்ளை. தீ. தள்ளுமுள்ளு. ரயில் நிலையம். தோட்டாக்கள். இரவு. அப்புறம் சகீனா. சிராஜுதின் உடனே எழுந்து பைத்தியக்காரர் போல சுற்றியிருந்த மக்கள் கூட்டத்தில் தேட ஆரம்பித்தார். (more…)

நிலவொளியில், தனியே மதுவருந்துகிறேன்

செந்தில் நாதன்

libai

 

மலர்களிடையே, ஒரு மதுக் குவளை.
தனியே மது அருந்துகிறேன், தோழர்கள் யாரும் இல்லை.
நிலவை அழைக்க கோப்பையை உயர்த்துகிறேன்.
நிலவும், நானும், என் நிழலும் சேர்ந்து மூவராகிறோம்.

நிலவுக்கு மது அருந்தத் தெரியாது;
நிழல் என் உடல் அசைவுகளை நகலெடுக்கிறது;
ஆனாலும் அவர்களுடன் கொண்டாடுகிறேன் –
விரைவில் வசந்தம் வந்துவிடும்.

நான் பாடுகிறேன் – நிலவு அசைந்தாடுகிறது.
நான் ஆடுகிறேன் – நிழல் அலைபாய்கிறது.
தெளிவாய் இருக்கையில், மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொள்கிறோம்.
கள்வெறி ஏறியபின், அவரவர் வழி செல்வோம்.

உறவுகளுக்கு அப்பால், நண்பர்களாயிருக்க உறுதி கொள்வோம்
விண்மீன் திரளின் முடிவில் மீண்டும் சந்திப்போம்.

(Drinking Alone, Li Bai)

படம் : http://en.people.cn

அடில் ஜுஸ்ஸாவாலா – இங்கிருத்தல் 2

திரும்பிச் சென்ற காலத்தைத் தொடர்ந்து செல்லுதல்

ஜுஸ்ஸாவாலாவின் கண்கள் உற்றுநோக்கிக் காண்கின்றன என்பது மட்டுமல்ல, அதனினும் ஓர் இந்தியனிடம் காண்பதற்கரிய இயல்பு, பிற மனிதனின் திறமையை ஒப்புக் கொள்ளும் மனவிரிவு, அவரிடம் உண்டு. “சுதீரை நினைவுகூர்தல்,” என்ற கட்டுரையில் எஜகீலைக் காட்டிலும் குறைவாகவே அறியப்பட்ட, இன்று ஏறத்தாழ மறக்கப்பட்டுவிட்ட ஒரு நண்பரைக் குறித்து எழுதுகிறார் அவர். சுதிர் சொனால்கர் ஜுஸ்ஸாவாலாவின் சமவயதினர், ஜுஸ்ஸாவாலா போலவே அவரும் தனித்தியங்கும் பத்திரிகையாளராய் நீண்டகாலம் பணியாற்றி வந்தார். அவர் தன் ஐம்பதுகளின் ஆரம்பப் பருவத்தில் 1995ஆம் ஆண்டு காலமானார், மதுபானம் அவரை அழித்தது. சொனால்கர் குறித்து தாளவொண்ணா நுண்ணுணர்வுடன் எழுதுகிறார் ஜுஸ்ஸாவாலா. அவரது கட்டுரையில் இரட்டைச் சித்திரம் உருவாகிறது- ஆம், சொனால்கரின் உருவம் ஒன்று, ஆனால் அதனுடன் ஜுஸ்ஸாவாலா தீட்டும் சித்திரமும் தோன்றுகிறது, கண்ணாடியின்மீது நடந்து செல்லும் பூனையின் அமைதியுடன் அவரது வாக்கியங்கள் நம்மைக் கவர்ந்து செல்கின்றன. (more…)