Author: பதாகை

“நான் எழுத்தைக் கொண்டு யோசிக்கிறேன்”- ரிச்சர்ட் ரூஸோ – சில நேர்முகங்கள்

பீட்டர் பொங்கல்

ரிச்சர்ட் ரூஸோவின் அண்மைய நூல், “Elsewhere” என்ற தன்வரலாற்று படைப்பு. இது குறித்து, “கடந்த பல ஆண்டுகளில் மிகவும் நேர்மையான, நெகிழ்ச்சியான அமெரிக்க நினைவு நூல்களில் இது ஒன்று”, என்று குறிப்பிடுகிறார் மிகேல் ஷ்வாப் http://www.npr.org/2012/11/16/163952390/elsewhere-has-beauty-but-no-happy-ending.

டெய்லி பீஸ்ட் தளத்தில் ஜேன் சியாபட்டாரியுடனான நேர்காணலின்  இந்த நூலில் வரும் விஷயங்களைப் பேசுகிறார் ரிச்சர்ட் ரூஸோ. அவற்றின் சில பகுதிகள் இங்கு:

நீங்கள் எல்ஸ்வேர் எழுதக் காரணமாக இருந்தது எது?

கிராண்டாவில் பதிப்பாசிரியராக இருக்கும் ஜான் ஃப்ரீமன் மிக முக்கியமான ஒரு காரணமாக இருந்திருக்கிறார். வீடு திரும்புதல் பற்றிய ஒரு இதழ் தொகுக்கும் திட்டத்திலிருந்தார் அவர். நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, அவர் க்ளோவர்ஸ்வில் செல்லும் வழிகாட்டிக் குறியைப் பார்த்திருக்கிறார். மெய்யுலகில் உள்ள அந்த இடத்தைப் பற்றி நான் எழுதினாலும் எழுதக்கூடும் என்ற எண்ணத்தில் அவர் என்னைத் தொடர்பு கொண்டார். இதுவரை பல்லாண்டுகளாக நான் அதன் புனைவு அவதாரங்களைதான் பயான்படுத்திக் கொண்டிருந்திருக்கிறேன்.

அந்த சமயத்தில் நான் அதை ஒப்புக்கொள்ளக்கூடிய மனநிலையில் இருந்தேன். என் அம்மா அப்போதுதான் இறந்திருந்தார். அம்மாவின் வாழ்வும் சாவும், க்ளோவர்ஸ்விலுடன் எங்களுக்கு இருந்த ஆழ்ந்த உறவு, எனக்கும் என் அம்மாவுக்கும் பொதுவானவையாக எவ்வளவு விஷயங்கள் இருந்தன என்றெல்லாம் நான் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் ஜான் என்னை அழைத்தார். எங்கள் பிறப்பு (நாங்கள் இருவருமே அப்சஸிவ்வான ஆட்கள், என் அம்மா அளவுக்கு நானுமே மனசில் ஒன்று தோன்றிவிட்டால் அதிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பவனாக இருக்கிறேன்), எங்கள் வளர்ப்பு (நாங்கள் இருவருமே காலம் தொடாத சிற்றூர் ஒன்றில் வளர்ந்தவர்கள்). அந்த சமயம் பார்த்து ஜான் என்னை அழைத்திருக்காவிட்டால், நான் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்க மாட்டேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் எனக்கு அவ்வளவு அதிகம் ஏற்பட்டதில்லை. இந்தப் புத்தகம் இப்படிப்பட்ட உணர்வுகள் அத்தனையையும் தணித்திருக்க வேண்டும். (more…)

காலவனம்

அதிகாரநந்தி

 

யாரையும் நம்பியில்லை இந்த வனம்
துளிர்விடுவதையும் நிறுத்துவதாயில்லை
அததற்கான காலம் வரும் வரை
எதையும் சாய்த்துவிடுவது நமக்குச் சுலபமில்லை
விருட்சத்திலிருந்து விழும்
இலையின் லாவகத்தோடே
கடந்துவிட்ட காலத்திலிருந்து
விடுபட முயல்கிறேன்
யார் இலை எது விருட்சம்?
எது இலை யார் விருட்சம்?

சலாம் குலாமும் சமுதாயச் சீர்த்திருத்தமும் பின்ன சுரேஷும்

(பகடி)

இலவசக் கொத்தனார்

உரைநடைகளின் போதாமைகளைத் தாண்டி நம் அகத்தினைத் தொட்டு, தட்டி எழுப்பி, எழுச்சிகளைக் கொந்தளிக்க வைத்து, நம் பிரக்ஞைகளை உலுக்குவதுதான் நல்ல கவிதை என்றால் சுரேஷின் கவிதைகள் நல்ல கவிதைகள். நல்ல கவிதைகள் படிக்க முடியாத கரடுமுரடு மொழியில்தான் இருக்க வேண்டும் என்ற மேற்தட்டு மனப்பான்மையை சுக்குநூறாக தகர்தெறிந்து உழைக்கும் வர்க்கத்தினரின் உன்னதமான எளிய பாசாங்கற்ற பகடுகளேதுமில்லாத மொழியிலும் கூட நல்ல கவிதையைத் தர முடியும் என்பதற்கான சான்று சுரேஷின் கவிதைகள். மனித உணர்வுகளின் பிரதிபலிப்பு என்று வந்த பின்னர் விமர்சனப்பிரதிகளில் கவிதையியல். கோட்பாடு எல்லாம் இரண்டாம் மூன்றாம் பட்சமாகிவிடுகிறது. இருப்பினைப் பற்றியும் உறுப்பினைப் பற்றியும் சமூக குடும்ப நிறுவன வெளிகளில் உருவாக்கப்பட்டுள்ள கருத்தாக்கங்களையும் மதிப்பீடுகளையும் சிதைத்து அவற்றின் வன்முறைகளுக்கெதிராக குரலெழுப்பி தற்கால மொழிக்கலாச்சாரத்தின் அகப்புற எல்லைகளை மீறி இயங்குவது மட்டுமே நல்ல கவிதை என்ற பொதுப்புத்தியினுக்குள் பொருந்த நினைத்திடாத சராசரி மொழியிலும் மனதுக்கு அந்தரங்கமான மொழியிலும் கூட ஒரு மனிதனின் ஆழ்மனத்துடன் பேசும் உரையாடலை பொதுவிற்குக் கொண்டு வரமுடியும் என்பதில் வெற்றி பெற்று இருக்கிறார் சுரேஷ். (more…)

துருவேறிக் கொண்டிருக்கும் அமெரிக்க சிறுநகரங்களும் அவற்றின் சாதாரணர்களும்

அஜய். ஆர்

சீபால்டின் ‘The Rings Of Saturn’ நூலில், கதைசொல்லி தன் பயணங்களின்போது ஒரு காலத்தில் ஒளிமிக்க சிறு நகரங்களாக இருந்து இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மக்கிக் கொண்டிருக்கும் இடங்களூடே பயணிக்கிறார். பரபரப்பான துறைமுகமாக இருந்து இப்போது அந்த பரபரப்பின் சுவடே இல்லாமல் இருக்கும் ஒரு இடத்தைப் பார்க்கிறார், இன்னொரு இடத்தில் வெறிச்சோடி இருக்கும் உணவகத்தில் உணவருந்தும்போது, சென்ற தலைமுறை உடையணிந்து ஒருவர் பரிமாறுகிறார். இந்த இடங்களும் சரி, அதில் வாழும் மனிதர்களும் சரி காலத்தில் உறைந்துள்ளார்கள். யுவான் ருல்போவின் (Juan Rulfo) ஆக்கங்களிலும் இதைவிட பாழடைந்த, நினைவுகள் ஆவிகளாக உலவும் நிலவெளிகளை பார்க்கலாம். இவை பெரிதும் வெளியாள் ஒருவர் இந்த இடங்களைப் பார்க்கும் கோணத்தில் உள்ளன. இதை கொஞ்சம் மாற்றி, அந்த சிறு நகரங்களில் இருப்பவர்களின் பார்வையில், அவர்களின் வாழ்க்கையைச் சொல்வதுதான் ரிச்சர்ட் ரூஸோ (Richard Russo) தன் ஆக்கங்களுக்காகத் தேர்வுசெய்யும் களன்.

அமெரிக்கா என்றவுடன் ஒளி பொருந்திய நகரங்கள், பணம் கொழிக்கும் சூழல் என்ற பொதுபிம்பத்துக்கு மாறாக, அங்குள்ள வறுமை, இனவெறி, கால ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களால் விட்டுச் செல்லப்படும் நகரங்கள்/ மக்கள், என அதன் பல்வேறு பக்கங்களைப் பற்றி பல எழுத்தாளர்கள் எழுதி உள்ளார்கள். அவர்களில், ரூஸோ அமெரிக்காவின் சிறு நகரங்களைப் பற்றி எழுதும் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். 7 நாவல்கள் மற்றும் ஒரு சிறுகதை தொகுப்பை எழுதியுள்ள ரூஸோ ‘Empire Falls’ என்ற நாவலுக்காக புலிட்சர் விருது பெற்றவர். (more…)

மானுடம் குடியமர்ந்த கோள் – புறப்பாடு

சிகந்தர்வாசி

அந்தச் சீனர் உறங்கிக் கொண்டிருப்பதை லிண்டா லூவும் நானும் பார்த்தபடி நின்றிருந்தோம். அவர் விழித்துக் கொள்வார் என்று காத்திருந்தோம், ஆனால் அவர் குறட்டை விட ஆரம்பித்தார். என்ன செய்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. முழுக்கதையும் தெரிந்து கொள்ளும் ஆரவம் எங்களுக்கு இருந்தது, ஆனால் அவர் எப்போது விழித்துக் கொள்வார் என்று தெரியவில்லை. அவரைத் தூக்கத்திலிருந்து எழுப்பவும் மனம் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும், அவர் தூக்கத்தைக் கலைத்தால் எப்படி எடுத்துக் கொள்வார் என்றும் எங்களுக்குத் தெரியவில்லை. எனவே காத்திருப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை, எனவே காத்திருந்தோம்.

கால் மணி நேரத்துக்குப் பின்னர், சி லிங்கின் மகன் வீட்டிலிருந்த எங்களை நோக்கி நடந்து வருவதைக் கண்டோம். அவன் இளம் பருவத்து சி லிங்க் போலிருந்தான். அவனை எல்லாரும் ‘சீனக்குட்டி’ என்று செல்லமாக அழைத்தனர். அவன் வேறொரு வீட்டில் இருந்தான், தினமும் தன் தந்தைக்கு மதிய உணவு எடுத்து வருவான். இப்போது இங்கே நாங்கள் இருப்போம் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை, என்ன காரியமாக இங்கு வந்திருக்கிறோம் என்று கேட்டான். எங்களுக்கு வரலாற்றில் உள்ள ஆர்வத்தைக் கூறிவிட்டு, பாதி கதையில் பெரியவர் உறங்கி விட்டார் என்று சொன்னோம். அவன் சிரித்துக்கொண்டே, “இந்தக் கதையை அவர் பலமுறை எனக்குச் சொல்லியிருக்கிறார். ஆனால் அதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இப்போது அவரே அதில் பாதியை உங்களிடம் சொல்லிவிட்டதால், மீதியை நான் சொல்கிறேன்,” என்று சொல்லிவிட்டு, சீனக்குட்டி கதையைத் தொடர்ந்தான். (more…)