Author: பதாகை

மானுடம் குடியமர்ந்த கோள் : முதல்நிலை தகவலறிக்கைகள் – 1

– சிகந்தர்வாசி – 

நான் அணிந்திருக்கும் முகக்கவசத்தைப் பார்க்க சிரிப்பு வருகிறது, இல்லையா? பூட்டப்பட்டிருந்த பெட்டிகளில் ஒன்றில் இந்தக் கருவி இருந்ததை இன்றுதான் கண்டுபிடித்தோம். இதை அணிந்துகொண்டால் நம் கவனம் அதிகரிக்குமாம். ஆக்சிஜன் என்ற சமாச்சாரத்தை ஒரு குழாய் வழியாக மூக்கில் செலுத்துகிறார்கள். இதன் விளைவாக இதை அணிந்திருப்பவனது காது அடைத்துக் கொள்கிறது. இவ்வாறாக உலகிலிருந்து துண்டிக்கபட்ட நிலையில் இந்த முகக்கவசத்தில் இருக்கும் இரு சிறு கீறல்களின் வழியாக நாம் வாசித்துக் கொண்டிருக்கும் விஷயத்தில் முழு கவனம் செலுத்த முடிகிறது.

இப்போது இதற்கென்ன அவசியம் வந்தது என்று நீங்கள் கேட்கக்கூடும், என் கவனத்தைக் குவித்து நான் அப்படி என்ன ஆராய்ச்சி செய்கிறேன்? ஏன் எனக்கு ஒரு பதற்றமாக இருக்கிறது? ஏன் என் மனம் நிலைகொள்ளாமல் தவிக்கிறது? என் பதற்றத்துக்குக் காரணம் என்ன? இந்த முகக்கவசம் என் பதற்றத்தைக் குறைக்குமா? இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்றால் நான் எங்கள் வரலாற்றைக் கொஞ்சம் அறிமுகம் செய்ய வேண்டும். (more…)

அவனுள் இருக்கின்றன ஆன்மாக்கள்…

– சிகந்தர்வாசி – 

ரேவன் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தான். பாதாதிகேசம் பளபளத்தான் அவன் – கருநிற ஷூக்கள் அணியும் வழக்கம் எப்போதும் இருந்தது. தன் மேலங்கியை அடிக்கடி பாலிஷ் செய்து கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்ததால் அதுவும் வெயில் ஒளியில் மினுங்கியது. ரேவனை இப்போது காண நேரிடும் எவரும் அவனை ஒரு நீதிபதியென்றோ பாதிரியாரென்றோதான் நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அவனோ சட்டம் படிக்கும் வாய்ப்பும் சர்ச்சில் சேரும் வாய்ப்பும் கிடைத்திருந்தபோதும் அவ்விரு பாதைகளையும் நிராகரித்திருந்தான். (more…)

வால்டர் பெஞ்சமின்

Colin Dickey on Walter Benjamin: A Critical Life : –

ஒரு மாதிரியான டெக்னோ-பியூச்சரிஸ்ட் சியர்லீடிங்குக்கும் (“எதிர்காலம் எத்தனை பிரகாசமாக இருக்கிறது!”) பிற்போக்குத்தன அபோகாலிப்டிய அங்கலாய்ப்புகளுக்கும் இடையே (“எதிர்காலம் நாசமாகிவிட்டது”) தடுமாறிக் கொண்டிருப்பதுதான் நம் வழக்கம் என்றால், பெஞ்சமின் வேறொரு வரலாற்றுப் பார்வையை நமக்கு அளித்தார் – நாம் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட ஒரு பேரழிவின் சிதிலங்களிடையே நடந்து சென்று கொண்டிருக்கிறோம், எச்சரிக்கையான துக்க அனுஷ்டித்தல் போன்ற ஒன்று மட்டுமே இங்கு நமக்கு அருளப்பட்ட மிகச்சிறந்த வரம். “துக்கங்கள் அனைத்திலும் மௌனத்துக்கான நாட்டம் உள்ளது. நம் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்வதில் தயக்கம் இருக்கிறது என்பதைவிட, நம்மால் நம் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக்கொள்ள இயலவில்லை என்பதைவிட, இந்த மௌன நாட்டமே பெரிது,” என்று அவர் 1925ல் எழுதினார். “சோகம் உலகுக்கு வஞ்சம் இழைத்து அறிவு பெறுகிறது என்றால்,” அது தன், “உறுதியான சுய-நாட்டத்தில், உயிரற்ற வஸ்துக்களைத் தன் சிந்தையைக் கொண்டு அணைத்துக் கொள்கிறது, அவற்றை மீட்டெடுக்க”, என்றார். (more…)

உறவுகள் – ஓஸு

An Autumn Afternoon (1962) – Michael Wood

 

 

இனி தந்தைவழி மாட்சிமையின் அமைதியால் மிகவும் அச்சுறுத்தும் சில காட்சிகள் தொடர்கின்றன. மிச்சிகோவாக நடிக்கும் சிமா இவாஷிட்டாவுக்குப் பொருத்தமான மணமகன் குறித்து அவளது சகோதரனும் தந்தையும் விவாதிக்கின்றனர். உடன் படித்த நண்பன் சொல்லும் ஆள் இருக்கிறான் (திரைப்படத்தின் இறுதியில் வரும் அடையாளம் காட்டப்படாத மணமகன் அவன்தான்), அவள் விரும்புகிறாள் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் ஆள் இருக்கிறான். அதன்பின் அவளது சகோதரன் முதலாமவனிடம் பேசிப் பார்க்கிறான் – இருவரும் நிறைய பீரும் சகேயும் குடிக்கின்றனர். ஆனால் இப்போது இதைப் பேசுவதற்கான காலம் கடந்துவிட்டது, அவன் ஒரு பெண்ணை மணம் புரிய ஒப்புக்கொண்டு விட்டான். ஒருவேளை, இவர்கள் முன்னரே வந்திருந்தால்…. (more…)

ஆல்பெர் காம்யு

Entranced by Reality, A Life Worth Living: Albert Camus and the Quest for Meaning, Robert Zaretsky – IAN MARCUS CORBIN : –

ஆல்பெர் காம்யுவை pied-noir என்று சொல்வார்கள், பிரெஞ்சு அல்ஜீரியாவில் வாழ்ந்த பிரெஞ்சுக் குடிபிறப்பு. 1913ல் பிறந்தவர், தன் 25ஆவது வயதில் பிரான்சுக்குத் திரும்பினார். அங்கே அவர் பிரெஞ்சு தேசிய போராளிகளுடன் இணைந்தார், அதிகார அமைப்பை எதிர்த்து Combat என்ற செய்தித்தாளில் எழுதி அதன் பதிப்பாசிரியராக இயங்கினார். பின்னர் அவர் குறிப்பிடத்தக்க புகழ் பெற்ற எழுத்தாளரானார், 1960ல் ஒரு கார் விபத்தில் இறக்கும்வரை பெரும்பாலான காலம் பிரான்சில் வாழ்ந்தார். (more…)