– சிவேந்திரன் –
மஞ்சள் நிற வெளிச்சத்தை இருபுறங்களிலும் பாய்ச்சியபடி வீதியின் நடுவில் நின்றுகொண்டிருந்த விளக்கு கம்பங்களின் வரிசை கண்ணுக்கெட்டிய தூரம்வரை கருந்தார் விரிப்பைக் காட்டிவாறு சென்று திருப்பத்தில் மறைந்தது. அதிலிருந்து விலகி சற்று தொலைவில் நடந்து செல்லும் உருவங்களை அதிகமாக இனம் காணமுடியாத அளவிற்கு இருட்டு போர்த்தியிருந்தது. வாகனங்கள் குறைவாகவே சென்றன. அவற்றில் பெரும்பாலானவை டாக்ஸிகள்.
வானத்தை நிமிர்ந்து பார்த்தேன். நிலவினை காணவில்லை. ஒரேயொரு நட்சத்திரம் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது. அதை நானும் உற்று நோக்கினேன். சுற்றிவர எல்லையற்று விரிந்து செல்லும் வானத்தில் தனித்து நிற்கும் அவ்விண்மீன் அலைகடலின் மத்தியில் இருக்கும் ஊர்காவற்றுறை கடற்கோட்டையை நினைவுபடுத்தியது. இப்போது அந்தக் கடற்கோட்டையும் இந்த உடுவினை நோக்கிக் கொண்டிருக்கக்கூடும். சடுதியில் மனம் மெல்ல அதிர்ந்தது. நட்சத்திரத்தை நோக்கி கை அசைத்தேன். உங்களை வியந்து வியந்து பார்த்த சிறுவன் எங்கோ மணற்காட்டில் எழுந்து நிற்கும் கட்டிடக்காட்டில் இருக்கிறான். இப்போது அவன், இளமைக்காலங்கள் மணற்கடிகாரத்தின் மணலைப்போல் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் பெரியவன் என்று அவ்விண்மீன் அந்தக் கடலிடமும் கடற்கோட்டையிடமும் சொல்லக்கூடும் என்று நினைத்தேன். (more…)
