Author: பதாகை

ஒருநடுவ வட்டங்கள்

சிவேந்திரன் –

மஞ்சள் நிற வெளிச்சத்தை இருபுறங்களிலும் பாய்ச்சியபடி வீதியின் நடுவில் நின்றுகொண்டிருந்த விளக்கு கம்பங்களின் வரிசை கண்ணுக்கெட்டிய தூரம்வரை கருந்தார் விரிப்பைக் காட்டிவாறு சென்று திருப்பத்தில் மறைந்தது. அதிலிருந்து விலகி சற்று தொலைவில் நடந்து செல்லும் உருவங்களை அதிகமாக இனம் காணமுடியாத அளவிற்கு இருட்டு போர்த்தியிருந்தது. வாகனங்கள் குறைவாகவே சென்றன. அவற்றில் பெரும்பாலானவை டாக்ஸிகள்.

வானத்தை நிமிர்ந்து பார்த்தேன். நிலவினை காணவில்லை. ஒரேயொரு நட்சத்திரம் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது. அதை நானும் உற்று நோக்கினேன். சுற்றிவர எல்லையற்று விரிந்து செல்லும் வானத்தில் தனித்து நிற்கும் அவ்விண்மீன் அலைகடலின் மத்தியில் இருக்கும் ஊர்காவற்றுறை கடற்கோட்டையை நினைவுபடுத்தியது. இப்போது அந்தக் கடற்கோட்டையும் இந்த உடுவினை நோக்கிக் கொண்டிருக்கக்கூடும். சடுதியில் மனம் மெல்ல அதிர்ந்தது. நட்சத்திரத்தை நோக்கி கை அசைத்தேன். உங்களை வியந்து வியந்து பார்த்த சிறுவன் எங்கோ மணற்காட்டில் எழுந்து நிற்கும் கட்டிடக்காட்டில் இருக்கிறான். இப்போது அவன், இளமைக்காலங்கள் மணற்கடிகாரத்தின் மணலைப்போல் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் பெரியவன் என்று அவ்விண்மீன் அந்தக் கடலிடமும் கடற்கோட்டையிடமும் சொல்லக்கூடும் என்று நினைத்தேன். (more…)

காப்பி எடிட்டரின் வேலை – சொற்தேர்வு, வாக்கிய அமைப்பு, தகவல்கள் – இவற்றைச் சரிபார்த்தல் குறித்த நேர்முகம் – ஈடன் லெபுகி

கைப்பிரதியின் படியைத் திருத்தும் காப்பி எடிட்டர்கள் சொற்தேர்வு, வாக்கிய அமைப்பு, தகவல்களின் துல்லியம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துபவர்கள். பொது எடிட்டரின் உதவியுடன் உள்ளடக்கம் தீர்மானிக்கப்பட்டபின் காப்பி எடிட்டர்களின் துணையுடன் படி திருத்தம் செய்யப்பட்டு ப்ரூப் ரீடரால் மெய்ப்பு பார்க்கப்படுகிறது. முன்னிலை ஆங்கில பதிப்பகங்கள் பலவற்றில் நீண்ட காலம் படிதிருத்தப் பதிப்பாசிரியராக பணியாற்றிய சுசன் ப்ராடனினி ப்ரெட்ஸின் நேர்முகம் இது. நேர்முகம் கண்டவர் ஈடன் லெபுகி. நன்றி- மில்லியன்ஸ் தளம்.

பதிப்புத்துறையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றியிருக்கிறீர்கள் – படிதிருத்த பதிப்பாசிரியர் மற்றும் பதிப்பாசிரியப் பணி சார்ந்த வேறு பல துறைகளிலும் பணிபுரிந்திருக்கிறீர்கள். இவற்றில் உங்களுக்குப் பிடித்த வேலை காப்பி எடிட்டிங் செய்வதுதான் என்று சொல்கிறீர்கள். ஏன்?

படைப்புகளைத் தருவித்துத் தரும் பதிப்பாசிரியராய் இருந்தபோது இயன்றதைவிட படி திருத்தம் செய்யும்போது என்னால் கைப்பிரதியை இன்னும் நெருக்கமாக அணுக முடிகிறது. இப்போது நான் ஒவ்வொரு சொல்லையும் வாசிக்கிறேன், ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்து வாக்கிய அமைப்பின் வடிவத்தைச் சரி பார்க்கிறேன். படி திருத்தும்போது வாக்கியங்களைக் கடந்து செல்லும் மேம்போக்கான வாசிப்பைச் செய்வதில்லை. கைப்பிரதியை முழுமையாய் பாதிக்கக்கூடிய திருத்தங்களைச் சொல்வதோ, அதன் தரம் குறித்து என் கருத்துகளைப் பகிர்வதோ ஒரு காப்பி எடிட்டராக என் வேலையல்ல. எனவே கதை என்ன என்பதில் என் முழு கவனத்தையும் செலுத்த முடிகிறது, மொழியைச் சொற்கள் மற்றும் வாக்கியங்களின் தளத்தில் கவனிக்கிறேன். வாசகனை மனதில் வைத்துக் கொண்டு வாசிப்பதால் அவருக்கு எது குழப்பமாகவோ சிக்கலாகவோ இருக்கக்கூடும் என்பதை முன்கூட்டியே கணிக்க முயற்சிக்கிறேன். தகவல்களையும் தேதிகளையும் சரி பார்க்கிறேன், பாத்திரங்களும் நிகழ்வுகளும் முரண்பாடுகளற்ற ஒழுங்கு கொண்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்கிறேன். என்னால் எவ்வளவு முழுமையாக வாசிக்க இயலுமோ அவ்வளவு முழுமையாக வாசிக்கிறேன். படைப்புகளைத் தருவித்துக் கொடுக்கும் காலத்தில் சாத்தியப்படாத ஆழமான புரிதல் எனக்கு இப்போது கிடைக்கிறது. (more…)

அஞ்சலி : குஷ்வந்த் சிங் – வண்ணமயமான வாழ்க்கை

– வெ. சுரேஷ் – 

சென்ற மாதம் மறைந்த மிக மூத்த எழுத்தாளர் (99 வயது!) குஷ்வந்த் சிங் தமிழ் இலக்கிய உலகத்தாரால் அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை, மறைவின்போதும். அச்சில் வரும் இலக்கியச் சிறுபத்திரிக்கைகளைப் பற்றி அதற்குள் சொல்ல முடியாது, ஆனால் தமிழ் இலக்கியம் சார்ந்த வலைதளங்களைப் பார்க்கும்போது அப்படிதான் தோன்றுகிறது (சொல்வனம் இணைய இதழில் வெங்கட் சாமிநாதன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மற்றபடி அவரைப் பற்றி ஆனந்த விகடனில் தான் எழுதிய கட்டுரை வெளிவரவிருப்பதாக சாரு நிவேதிதா தன் வலைப் பக்கத்தில் அறிவித்துள்ளார்).

நம் வாரந்தர வணிகப் பத்திரிக்கைகள் வழக்கம் போல் அவரைப் பற்றி பொதுபுத்திக்கு எப்போதுமே தெரிய வந்திருந்த செய்திகளையும் அவரது ஏ ஜோக்ஸ் மற்றும் கிளுகிளுப்பான பக்கங்களை வெளியிட்டும் நினைவு கூர்ந்தன. The Ilustrated Weekly ஆசிரியராக அவர் செயல்பட்டு அப்பத்திரிக்கையைப் பிரபலமாக்கியதும் நினைவுகூரப்பட்டது. Train to Pakistan என்ற நாவலின் பெயர் உதிர்க்கப்பட்டதும் வாஸ்தவம்தான். ஆனால், தமிழின் தீவிர இலக்கிய உலகம் அவரை முற்றிலுமாகப் புறக்கணித்தேவிட்டது என்று தோன்றுகிறது. (more…)

காலத்தின் முன்னே

 

Stained Glass, Berne, Switzerland,

 

மனிதரின் அன்புக்கு பாத்திரமாக
இருக்க ஆசைப்படாதீர்கள்

அவர்கள் எத்தனை மோசமான
வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
என்று குத்திக்காட்டுங்கள்

அவர்களுடைய உழைப்பைத்
திருடிக் கொள்ளுங்கள்
முடியுமானால்
அவர்தம் கரங்களை முறித்துவிடுங்கள்

வருடங்கள் கடந்து சந்திக்கும் போது
உங்கள் அல்ப அதிர்ஷ்டங்களையும்
அவர்களின் புதைக்கப்பட்ட ஆசைகளையும்
நினைவுபடுத்துங்கள்

காலம் வழக்கம் போல்
நம்மிடம் வேறுபாடு காட்டாது
போகட்டும்

நம் நண்பர்கள் தங்கள் பெயர்த்திகளுக்குச்
சொல்லும் கதைகளில் ராக்‌ஷதர்களாய்
எஞ்ஞான்றும் வாழ்வோம்!

–  அதிகாரநந்தி

Image credit : Mememto Mori, Catholic Eye Candy

 

கவிதையைத் திருத்தி எழுதுதல் – எலியட்டும் பவுண்டும் – ஹ்யூ கென்னர்

(எலியட், பவுண்ட் மற்றும் பாழ்நிலம் கவிதையின் முக்கியத்துவம் குறித்து எம். டி. முத்துக்குமாரசாமி மிகச் சிறப்பான ஆவணப் பதிவொன்றைச் செய்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு சிறந்த கவிதையும்கூட பிறருடன் கலந்தாலோசித்து, முழுமையாகத் திருத்தி எழுதப்பட்ட ஒன்றுதான் என்பதை உணர்த்தும் நோக்கத்தில் ஹ்யூ கென்னர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி தமிழாக்கம் செய்யப்படுகிறது.)

எலியட்டை விட வயதில் மூத்த பவுண்ட் எலியட்டை விட எராளமாக எழுதிக் குவித்த பவுண்ட், எலியட்டையே கவி என்று கொண்டாடினார். நவீன காப்பியமான யுலிசஸ் எழுதிய ஜாய்ஸ், தத்துவ அறிஞரும் கடவுள் மறுப்பாளருமான ரஸ்ஸல், எலியட்டையே கவி என்றறிந்திருந்தனர். எதனால்? எலியட்டின் கவிதையிலே வாசகனின் அகத்தோடு ஆத்மார்த்தமாய் பேசக்கூடிய குரல் இருந்தது. முதலாம் உலகப்போருக்குப் பின் எழுதுகிற எலியட்டின் கவிதையில் பேசுகிற குரல் ஐரோப்பிய சமூக ஆன்மாவின் குரல். பாழ் நிலத்தில் அந்தக்குரல் தெள்ளத்தெளிவாய் Four quartets ஐ விட அணுக்கமாக வாசகனிடத்தே பேசுகிறது. அந்தக் குரல் உடைந்து போயிருக்கிறது; அவநம்பிக்கையுடனிருக்கிறது. கடவுள் கைவிட்டுவிட்ட குரல் அது. அல்லது கடவுளை கை விட்டு விட்டதால் பாதுகாப்பற்று அமைதியின்மையில் அலைவுறும் குரல். எதையாவது பற்றிக்கொள்ள முடியாதா என்று பரிதவித்து இலக்கிய பிரதிகளெங்கும் அலைந்து உகந்த வரிகளைத் தேடி அவைகளை கோர்த்து கோர்த்து சில சமயம் உரையாடலாய் சில சமயம் பிதற்றலாய் சில சமயம் தெருச்சொல்லாய் பிருகதாரண்ய உபநிடத்திலிருந்து சில வரிகளையும் சேர்த்துக்கொண்டு ஹிரானிமோ மீண்டும் பைத்தியமாகிவிட்டான் ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஒரு collage ஆக அமைகிறது. போருக்குப் பிந்ததைய சமூகத்தின் தீவிர நெருக்கடி ஒவ்வொரு பிரஜையின் மனத்திலிருக்க அந்த மனத்தின் குரலாகவே எலியட்டின் கவித்துவ குரல் பாழ் நிலத்தில் அந்தரங்க சுத்தியுடன் பேசுகிறது. எலியட்டின் ஆத்மார்த்தமாகப் பேசும் கவித்துவ குரலை பவுண்டின் மேதமையே உடனடியாக அடையாளம் காணுகிறது.

“ஆத்மார்த்தமாக பேசும் கவிக்குரல்கள்: பாரதியும் டி.எஸ்.எலியட்டும்”, எம். டி. முத்துக்குமாரசாமி

(more…)