Author: பதாகை

ரெயினர் மரியா ரில்கே கவிதைகள் மொழிபெயர்ப்பு – தி.இரா.மீனா

மொழிபெயர்ப்பு கவிதைகள் : ஜெர்மன் மொழி

மூலம் : ரெயினர் மரியா ரில்கே [ Rainer Maria Rilke 1875–1926]

ஆங்கிலம் : ராபர்ட் ப்ளை [ Robert Bly ]

தமிழில் : தி.இரா.மீனா

 

இரவு

நீ , இருள் உன்னிலிருந்து நான் ஜனித்தேன்–

உலகைக் கட்டுப்படுத்தும் அந்த ஜுவாலையைவிட

நான் உன்னை நேசிக்கிறேன்,

வெளிச்சமூட்டும் வட்டமாக

மற்றவற்றைத் தவிர்த்து.

ஆனால் இருள் எல்லாவற்றையும் அணைத்துக் கொள்கிறது;

வடிவங்கள்,நிழல்கள் ,பொருட்கள் மற்றும் நான்,

மக்கள் ,நாடுகள் –- அவையிருக்கிற விதத்திலேயே.

அது என்னைக் கற்பனிக்க அனுமதிக்கிறது

அதன் அருகாமை என்னைத் தூண்டுகிறது.

நான் அந்த இரவை நம்புகிறேன்.

 

 

நான் போய்க் கொண்டேயிருப்பேன்..

என் கண்களை அழி ,நான் உன்னைப் பார்த்துக் கொண்டேயிருப்பேன்.

காதுகளை முத்திரையிடு, உன்னைக் கேட்டுக் கொண்டேயிருப்பேன்.

பாதமில்லையெனினும் உன்னிடம் வரும் பாதையை உருவாக்குவேன்.

வாயின்றிப் போனாலும் நான் உன் பெயரை உச்சரிப்பேன்.

என் தோள்களை முறி, ஒரு கையால் பிடிப்பது போல

என் நெஞ்சைக் கையாக்கி உன்னைப் பிடித்துக் கொள்வேன்.

என் இதயத் துடிப்பை நிறுத்து, என் மூளை துடிக்கத் தொடங்கும்.

என் மூளையை நீங்கள் நெருப்பிலிட்டாலும்,

என் ஒவ்வொரு இரத்தத் துளியிலும் நீ் எரிவதை நான் உணர்வேன்.

 

 

இலையுதிர் காலம்

இலைகள் கீழே விழுகின்றன

பழத்தோட்டம் இறந்தது போல..

மிக உயரத்திலிருந்து இலைகள் விழுகின்றன.

வேண்டாம் என்று சொல்வது போல ஒவ்வொரு இலையும் விழுகிறது.

நட்சத்திரங்களைத் தொலைவில் விட்டுவிட்டு

இன்றிரவு பூமி விழுகிறது

நாம் எல்லோரும் விழுகிறோம்.இந்தக் கை விழுகிறது

சுட்டிக்காட்டும் மற்றொரு கையையும் பாருங்கள்.

இருப்பினும் யாரோ ஒருவரின் கை

எல்லையற்ற அமைதியில் இந்த விழுதல்களைத் தாங்கியபடி..

—————-

Rainer Maria Rilke

The Night

You, darkness, of whom I am born–

I love you more that the flame
that limits the world
to the circle it illuminates
and excludes all the rest.

But the dark embraces everything:
shapes and shadows, creatures and me,
people, nations–just as they are.

It lets me imagine
a great presence stirring beside me.

I believe in the night.

 

 

I’ll Go On…

Extinguish my eyes, I’ll go on seeing you.
Seal my ears, I’ll go on hearing you.
And without feet I can make my way to you,
without a mouth I can swear your name.

Break off my arms, I’ll take hold of you
with my heart as with a hand.
Stop my heart, and my brain will start to beat.
And if you consume my brain with fire,
I’ll feel you burn in every drop of my blood.

Autumn

The leaves are falling, falling as if from far up,
as if orchards were dying high in space.
Each leaf falls as if it were motioning “no.”

And tonight the heavy earth is falling
away from all other stars in the loneliness.

We’re all falling. This hand here is falling.
And look at the other one. It’s in them all.

And yet there is Someone, whose hands
infinitely calm, holding up all this falling. 1875–1926

———————

 

 

Selected Poems of Rainer Maria Rilke, ed. and trans. Robert Bly New York,

1981

புதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா

(புதிய குரல்கள் பகுதியில் பொதுவாக எழுத்தாளரின் விரிவான நேர்காணல் மற்றும் அவருடைய ஆக்கத்தை பற்றிய விமர்சன கட்டுரை இடம் பெறும். இம்முறை அவைத்தநித்தநியாக இல்லாமல் எழுத்தாளருடன் உரையாடிப் பெற்ற அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் முதல் பகுதியிலும், கட்டுரை இரண்டாம் பகுதியிலும் இடம்பெறும் வகையில் ஒரே பதிவாக வெளிவருகிறது. கேள்விகளுக்கு பதில் அனுப்பிய எழுத்தாளர் சாதனாவிற்கு நன்றி)

எழுத்தாளர் சாதனா – ஒரு அறிமுகக் குறிப்பு

கே: உங்களைப் பற்றி

யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுதீவில் ஒரு குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாக நான் பிறந்தேன். அப்பா ஒரு வாகனச் சாரதி. அத்தோடு பெரும் குடிகாரர். பெரிதாக உழைப்பதில்லை. அப்படியே உழைத்தாலும் கிடைக்கும் பணத்தையெல்லாம் கள்ளுத் தவறணையில் ஊற்றி விட்டு வருவார். அம்மா, தினம்தோறும் தனக்கு விதிக்கப்பட்ட விதியை நினைத்து நொந்து கொள்ளும் ஒரு அபலைப் பெண். எனக்கு ஆறு வயதாக இருக்கும்போது வறுமையின் காரணமாக என் அப்பா என்னை வளர்க்கும் பொருட்டு அவரின் மனைவியின் தமக்கையிடம் அதாவது, என் பெரியம்மாவிடம் ஒப்புக் கொடுத்து விடுகிறார்.  

என் பதின்ம வயது கொடூரமானது. கொடூரமானது என்றால் மிகவும் கொடூரமானது. உடலியல் ரீதியாக மிகவும் துன்பப்பட்டிருக்கிறேன். வீதியில், என்னைக் காணும் சிறுவர்கள், ‘ஏய் பைத்தியமே’ என்று கல்லால் அடிப்பார்கள். முப்பத்தி நான்கு வயதாயிற்று. இன்னும் திருமணமாகவில்லை. திருமணமாகவில்லை என்பதைக் காட்டிலும் யாரும் பெண் கொடுக்கவில்லை என்பதே சரி. இதற்கு, என்னுடைய கடந்த காலமும் ஒரு காரணம்.  

பதின்ம வயதில், உடலியல் ரீதியாக என்றால் இருபதுகளில், மனோரீதியான வன்முறைக்கு உள்ளாகி இருக்கிறேன். அதை விளக்குவது சிக்கலானது. ஒரு மாதிரியாக பைத்திய நிலையிலிருந்து வெளியேறி விட்டிருந்தாலும் கடந்த கால நினைவுகள் அவ்வப்பொழுது என்னைத் துன்பப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அதிலிருந்து மீள்வது பெரும் துயரமாகவும், ஆகாத காரியமாகவுமிருக்கிறது. புத்தகங்கள் என்னை மாற்றின. குறிப்பாக, தாஸ்தாயேவ்ஸ்கியும், ஆன்டன் செகாவும், சாருவும், சோபாசக்தியும் என்னை மாற்றினார்கள்.   

நான் படிப்பாளியாக இருக்கலாம். ஆனால், படித்தவன் கிடையாது. நான் என் சிறு வயதில் பெரியம்மாவிடம் ஒப்புக் கொடுக்கப்படாமல் என்னுடைய சொந்த தாய் தந்தையினாலேயே வளர்க்கப்பட்டிருப்பேனானால் நிச்சயம் நான் மாடு தான் மேய்த்திருப்பேன். ஒருவேளை, இது இரண்டுமே நடைபெறாமல் வேறொருவரிடம் நான் ஒப்புக் கொடுக்கப்பட்டிருந்தால் மருத்துவராகவோ, பொறியியலாளராகவோ குறைந்தபட்சம் வங்கி அதிகாரியாகவோ ஆகியிருப்பேன். என் சபிக்கப்பட்ட விதியானது இது இரண்டையுமே மாற்றி விட்டது. ஆகவே, நான் எழுத்தாளன் ஆகி விட்டேன்

கே: இலக்கிய பரிச்சயம் எப்போது, எப்படி நேர்ந்தது? 

 உண்மையில் அது ஒரு அசம்பாவிதம். ஏனெனில், என் குடும்பத்தில் மாத்திரமல்ல; பரம்பரையில் கூட புத்தக வாசிப்புப் பழக்கமுடையவர்கள் யாரும் கிடையாது. என்னவோ எப்படியோ அது எனக்குள் மாத்திரம் புகுந்து கொண்டு விட்டது. வாசிப்புப் பழக்கத்தில் உள்ள அதீதமான காதலால் வீட்டிலேயே பணம் திருடி இருக்கிறேன். அய்ம்பது ரூபாவைத் திருடி பத்து ரூபாய்க்கு புத்தகத்தை வாங்கினால் மீதி நாற்பது ரூபாய்யை என்ன செய்வதென்று தெரியாது. வீட்டில் மறைத்து வைக்க முடியாது.  பணம் திருடியிருக்கிறேன் என்பது கண்டு பிடிக்கப்பட்டால், முதுகுத் தோல் கிழிந்து விடும். ஆகவே, கடைக்காரரிடமே நாற்பது ரூபாய்யையும் திருப்பிக் கொடுத்து அடுத்த முறை புத்தகம் வாங்கும்போது இதில் கழித்துக் கொள்ளுங்கள் என்பேன். கடைக்காரரும் சிரித்துக் கொண்டே அதற்குச் சம்மதித்தது இப்போது இதை எழுதும் போது நினைவு வருகிறது.   

ஆரம்பத்தில், அம்புலிமாமாவில் தொடக்கி ராணி காமிக்ஸ் – மாயாவி, கரும்புலி, இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர், லக்கி லுக் நினைவிருக்கிறார்களா – முத்துக் காமிக்ஸ் என்று போய் பின்னர் ரமணிச்சந்திரன், ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, சோபா சக்தி, சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன் என்று விரிந்திற்று. இது தவிர தாஸ்தாயேவ்ஸ்கி, ஆன்டன் செகாவ், மாக்சிம் கார்க்கி, லியோ டாஸ்டாய் என்பவர்களும் என் தீவிர இலக்கியப் பட்டியலில் உண்டு.  

என் பால்ய காலத்தில் அதிகம் வாசித்த நான், இப்போது வாசிப்பது குறைவு. காரணம், சமூக வலைத்தளங்களின் வருகை. நினைத்துப் பார்த்தால் பெரும் சோர்வைத் தருகிறது. இதிலிருந்து எப்படியாவது மீண்டு மறுபடியும் புத்தகங்களை வெறி கொண்டு வாசிக்க வேண்டும். பார்க்கலாம்.

கே: உங்களை நீங்கள் எழுத்தாளராக கண்டுகொண்டது எப்போது? முதல் கதை எப்போது வெளி வந்தது? 

உன்னிடம் சொல்வதற்ககுக் கதைகள் இல்லையென்றால் நீ எப்படி வாழ்ந்தாய் என்று கேட்கிறார் தாஸ்தாயேவ்ஸ்கி. முதலில் எழுத ஆரம்பித்தபோதே வேடிக்கையாக அல்லாமல் சீரியஸாகத் தான் தொடங்கினேன். சொல்வதற்கு ஏராளமான கதைகளுமிருந்தன. ஆகவே, நான் கதை சொல்லத் தொடங்கினேன். என்னுடைய முதலாவது சிறுகதை தாய். மனித மனங்கள் ஆசைகளுக்காக சொற்ப கணத்தில் எப்படியெல்லாம் மாறிப் போகும் என்பதான ஒரு கதை. என்னுடைய இருபத்தி அய்ந்தாவது வயதில் அக் கதையை எழுதியிருந்தேன். கதையை எழுதி விட்டு எழுத்தாளர் சயந்தனுக்கே அதை முதல் முதலில் அனுப்பி வைத்திருந்தேன். கதை குறித்து பாராட்டிய அவர், உங்களுக்குள் ஒரு எழுத்தாளன் உறங்குகிறான்; ஆகவே கதை எழுதுங்கள் என்று என்னைக் கண்டு பிடித்து எனக்குள்ளிருந்த அடையாளத்தை வெளியில் கொணர்ந்தது அவர் தான்.  

எழுத்தாளன் என்பது உண்மையில் மிகப்பெரிய வார்த்தை. அதை வெறுமனே சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதினால் ஆயிற்று என்று சுருக்கி விடமுடியாது. உண்மையில், எழுத்தாளன் என்பவன் சாதாரணவானவன் கிடையாது. அவன் இந்தக் கீழ்மையோடு இருக்கும் சமூகத்தை சீர் தூக்கி விட முனைபவன். ஒரு சமூகத்தின் பெரும் சொத்து அவன்.  

இதை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது எழுத்தாளன் என்கிற வார்த்தைக்கு நான் கொஞ்சம் கூட லாயக்கற்றவன். ஏனெனில், ஒன்று அல்ல; இரண்டு உதாரணங்கள் சொல்கிறேன். அப்போது நான் ரஷ்யாவில் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன்.  ஒருதடவை, என்னோடு கூட இருந்தவருக்கும் எனக்கும் தகராறு. கெட்ட வார்த்தைகள் சரளமாகப் புரள்கிறது. அப்போது நான் அவரை அவரின் ஜாதிப் பெயரால் பழிக்கிறேன். எவ்வளவு கீழ்த்தரமான செயலிது. வன்மத்தின் உச்சம்.   

இரண்டாவது, இதே போன்றுதான் அதுவும். ஆனால், அது சமூக வலைத்தளமொன்றில் நிகழ்ந்தது. வெளிப்படையாகவே ஒருவரை ஜாதிப் பெயரால் திட்டினேன். இதில் ஆகப் பெரும் வேடிக்கை என்னவென்றால் அப்போது முகப்புத்தகத்தில் என்னுடைய பெயர் எழுத்தாளர் சாதனா.

கே: இலக்கியத்தில் உங்கள் ஆதர்சங்கள் யார்? (ஈழ/தமிழ்/ உலக) 

நிறையப் பேர் இருக்கிறார்கள். எல்லோரும் ஏதோவொரு விதத்தில் என்னைக் கவர்ந்தவர்கள். இதில் எழுதும் ஆசையைத் தூண்டியது சாரு. நான் கண்டைந்து கொண்ட மொழியில் அவருக்கு மிகப்பெரும் பங்குண்டு. அவரின் எளிமையான, எல்லோருக்கும் புரியும்படியான கதை சொல்லல் முறை நான் பார்த்து வியந்த ஒன்று. அப்புறம் ஷோபாசக்தி என்னுடைய மிகப்பெரிய ஆதர்சனம். சிறுகதை எழுதும் நுட்பத்தை நான் அவரிடமிருந்தே கற்றுக் கொண்டேன். இது தவிர பொதுவான ஒருவரும் உண்டு. அவர் எஸ். சம்பத். அவருடைய இடைவெளி நாவல் எப்போதும் என் பையில் இருக்கும்.

 

எஞ்சியிருப்பதின் துயரம்

எழுத்தாளர் சாதனா ஈழத்தை பூர்வீகமாக கொண்டவர். தற்போது ஜெர்மனியில் வசித்து வருகிறார். ஆறு சிறுகதைகள் கொண்ட அவருடைய முதல் சிறுகதை தொகுப்பான ‘தொலைந்துபோன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்’ கடந்த ஆண்டு ஜீரோ டிகிரி பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. சாரு ஒரு நீண்ட முன்னுரை எழுதி இருக்கிறார். இளம் தலைமுறை ஈழ எழுத்தாளர்களான சயந்தன், அனோஜன், யதார்த்தன், அகர முதல்வன் போன்றோரின் படைப்புலகில் சில ஒற்றுமைகளும் சில தனித்துவங்களும் உண்டு. சாதனாவின் படைப்புலகம் அவருடைய தலைமுறை ஈழ எழுத்தாளர்களின் புனைவுலகை விட்டு முற்றிலும் விலகியது. ஆகவே தனித்துவமானதும் கூட. ஈழ நிலம் அறவே பதிவாகாத கதைகள் என சொல்லலாம்.

சாதனாவின் கதை மாந்தர்கள் அகவயமானவர்கள். இருத்தலியல் கேள்விகளை சுமப்பவர்கள். அக்கேள்விகளே அவருடைய படைப்புலகை நிறைக்கிறது, கதைகளை எழுத தூண்டுதலாக இருக்கிறது. ஆகவே அவருடைய கதை மாந்தர்கள் இயல்பாக கேள்விகளை விவாதிக்கும் பிரதிநிதிகளாக உருக்கொள்கிறார்கள். போருக்கும் இருத்தலியலுக்கும் நேரடி தொடர்புண்டு. இருத்தலியல் கேள்விகளுக்கு போர் ஒரு முன் நிபந்தனை அல்ல என்றாலும் போரின் இயல்பான விளைவு என உறுதியாக சொல்லிவிட முடியும். இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள ‘சிறுமி கத்தலோனா’ ‘தொலைந்து போன சிறிய கறுப்பு நிற பைபிள்’ மற்றும் ‘ஒ தாவீது ராஜாவே’ ‘ஜூதாசின் முத்தம்’ ஆகிய கதைகளில் சாதனா தனக்கான சில அடிப்படை கேள்விகளை பின் தொடர்ந்து செல்கிறார். அவை எடுத்துக்கொண்ட பேசு பொருள் காரணமாக முக்கியமான கதைகள் ஆகின்றன.

 ‘அக்கா’ கதையிலும் ஒரு பகுதி ஈழத் தமிழரின் புலம்பெயர் வாழ்க்கையை காட்டுகிறது என்றாலும் கூட  ‘சிறுமி கத்தலோனா’ இந்த தொகுதியில் உள்ள ஒரே ஈழக்கதை என சொல்லலாம். ஈழக்கதைக்கான வரையறைகள் எவை?  ஈழத்தை களமாக கொண்டிருக்க வேண்டும். ஏதோ ஒரு வகையில் போர் ஒரு பேசுபொருளாகவோ/ பின்னணியாகவோ/ அல்லது நினைவாகவோ கதையில் இடம்பெறும். ஈழத் தமிழர் மையக் கதாபாத்திரம் அல்லது கதைசொல்லியாக இருப்பார். கதை ஈழத் தமிழில் இருக்கும். எழுத்தாளர் ஈழத்தை சேர்ந்தவராக இருப்பார். சாதனாவின் மொழியில் ஈழத் தமிழின் சாயல் சன்னமாகவே தென்படுகிறது. சில அரிதான சொற்களை பயன்படுத்துகிறார். (உதாரணம்- ஜூதாஸின் முத்தம் கதையில் ஸ்தேயம் எனும் சொல்லை திருட்டுக்கு பயன்படுத்துகிறார்).  

ஒன்பது பகுதிகள் கொண்ட கதையில் ஐந்து பகுதிகள் சிலோன் நாதனின் வாழ்க்கையை படர்கையில் விவரிக்கிறது. இரண்டு பகுதிகள் சிலோன் நாதனின் தன்னிலையிலும் இரண்டு பகுதிகள் சிலோன் நாதனின் கதையை எழுதும் எழுத்தாளரின் தன்னிலையிலும் வருகிறது. சிலோன் நாதன் ஜெர்மனியில் வசிக்கிறார். அவருடைய கடந்த கால ஈழ வாழ்வில் ராணுவத்திடம் பிடிபடுதல், சிறையிலடைக்கப்படுதல், கொடுமைக்கு உள்ளாகுதல் என எல்லாமும் பொதுவாக ஈழக்கதைகளில் நிகழும் அதே வகையில் நிகழ்கின்றன. போரில் மருத்துவராக இருக்கும் சிலோன் நாதன் கால் சிதைந்த சிறுமி கத்தலோனாவை காப்பாற்ற முயல்கிறார். பெண் ராணுவத்திடம் பிடிப்பட்டு அவர்களால்  கடுமையாக அவமதிக்கப்படுகிறார். சிங்கள மொழியில் ‘உத்தோ’ என கேவலமாக வசைப்பாடப்படுகிறார். இந்த சிறை அனுபவம் ஆறாத காயமாக உள்ளூர உழன்றபடி இருக்கிறது. அவருடைய முதலாளி பாஸ்பெர்கின் மரணத்திற்கு பிறகு நேராக வேசியிடம் செல்லும் போது அந்த பெண்ணின் நடத்தை ராணுவ பெண்னை நினைவுறுத்துகிறது. சட்டென தடுமாறி விலகுகிறார். வேசியிடம் கூடியபிறகு அந்த நினைவுகளில் இருந்து மீள முடியாமல் கடும் குற்ற உணர்வில் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார். அனோஜனின் ‘உறுப்பு’ கதையில் சிங்கள ரானுவ வீரனின் பாலியல் இம்சைகளை அனுபவித்து அந்த வாதையிலிருந்து வெளியேற சிரமப்படும் சித்திரம் ஒன்றுண்டு. ஏறத்தாழ அம்மாதிரியான அகக் காயம் சிலோன் நாதனுள்ளும் உள்ளது. சிலோன் நாதனின் இருத்தலியல் கேள்விகளும், வாழ்வின் பொருளின்மை‌ சார்ந்த பார்வைகளும், தற்கொலை முயற்சிகளும் கதையின் இறுதியில் வெளிப்படும் உண்மையினால் துலக்கம் பெறுகிறது. அந்த இறுதி உண்மையே இக்கதையை வழக்கமான ஈழக்கதை அமைப்பிலிருந்து தனித்து காட்டுகிறது.

ஈழத்தமிழர் சிங்களவர் எனும் இருமையை கடந்து மானிடர் எனும் நிலைநோக்கி நகர்கிறது. இரண்டாவது வாசிப்பில் சிலோன் நாதன் வீட்டில் இருக்கும் புத்தர் சிலை அவருடைய அடையாளத்தை குறிப்புணர்த்துகிறது. கண்முன் காலற்ற சிறுமி கத்தலோனா கைவிடாதீர்கள் என கூறி அழும்போது சிங்களர் எனும் ஒரே காரணத்திற்காக உயிருடன் விடுதலை செய்யப்படும் சிலோன் நாதன் குற்ற உணர்வினால் உந்தப்பட்டு தான் ஏன் இனியும் வாழ வேண்டும்? எனும் கேள்வியை எழுப்பிக்கொள்கிறார். சாதனாவின் கதை மாந்தர்களின் பொதுவான மனப்போக்கு என்பது இந்த குற்ற உணர்விலிருந்தே எழுகிறது. இந்த கதையில் வரும் பாஸ்பெர்க் வழியாக பாத்திரங்களுக்கு இடையிலான முரண் பேசப்படுகிறது. அவர்  இருத்தலியல் சிக்கல் ஏதுமற்றவர். வாழ்க்கையையே மரணத்தை நோக்கிய பயணமாக காணும் சிலோன் நாதனுக்கு கிட்டாது ஒன்று பாஸ்பெர்கிற்கு எளிதாக கிடைக்கிறது. மகிழ்ந்து ஆடிக்கொண்டே இருக்கும் போது நிகழும் மரணம்.

இக்கதையில் அவர் வளர்க்கும் நத்தைக்கு சிலோன் நாதன் என பெயரிடுகிறார். “நத்தைகள் குறித்து இன்னும் சொல்லவேண்டுமென்றால் அவை தன் வீட்டைத் தானே சுமக்கும். மழை காலங்களிலோ, அல்லது தனக்கு ஒவ்வாத காலநிலையைக் கொண்ட காலங்களிலோ தன் முதுகிலுள்ள ஓடு போன்ற கூட்டினுள் தன்னை மறைத்துக் கொள்ளும். தன்னுடைய இந்தத் தன்மையை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் அவை பயன்படுத்துகின்றன.” எனும் சிலோன் நாதனின் குறிப்பில் அவருடைய அடையாள மறைப்பு வாழ்வு கோடிட்டுக்காட்டப்பட்டு நத்தை அவருடைய குறியீடாகவே இருக்கிறது. சிலோன் நாதன் ஏன் தன்னை மறைத்துக் கொள்ள வேண்டும்? தன் அரசின் குரூர முகத்தை கண்டவனின் மனசாட்சியின் தொந்திரவு. அச்சம். ஒவ்வாமை. இதற்கு நான் பொறுப்பல்ல எனும் விலக்கம் என பலவாறாக விளங்கிக்கொள்ள முடியலாம் என்றாலும் கதையில் அதற்கான காரணம் எதுவும் வலுவாக கூடி வரவில்லை. அதுவும் ஒரு தமிழர் பகுதியில் மருத்துவராக இருக்கும் சிங்களர் தன் அடையாளத்தை ஏன் மறைத்துக் கொள்ள வேண்டும்? கதையில் “எதிர்காலம் குறித்த பயம் அந்த ‘ஏதோ ஒன்றை’ என் வாயிலிருந்து வெளிவராமல் தடுத்தது.” என எழுதுகிறார். இது மர்மமாகவே விடப்படுகிறது. வாசகரிடம் இது ஒரு நம்பிக்கையை கோருகிறது. தனிப்பட்ட காரணங்கள் ஏதேனும் இருக்கும் என சமாதானம் அடைந்துகொள்ளச் சொல்கிறது. கதை இறுதியில் சிறுமி கத்தலோனாவின் காலற்ற ஊருதல் நத்தையுடன் இணைவைக்கப்படுவதன் வழியாக ஒரு தலைகீழாக்கம் நிகழ்கிறது. 

சயந்தனின் ‘ஆறாவடுவில்’ ஒரு பகுதி, குணா கவியழகனின் ‘அப்பால் ஒரு நிலத்தின்’ இறுதி பகுதி, அனோஜனின் ‘பபுலி’ போல் பெரிதும் மனவிரிவளித்த கதை. அடிப்படையில் ஒரு சிங்களவர் தமிழ் பெண்ணிற்காக பெரும் துயரத்தை சுமந்து தன்னையே அழித்து கொள்வதென்பது கற்பனாவாதத்தன்மையுடைய கதைக்கரு. ஈழக் கதைகளில் கற்பனாவாதம் ஒரு மிக முக்கிய கூறாகவே திகழ்கிறது. கற்பனாவாதத்தை முழுக்க எதிர்மறையாக அணுகவேண்டியதுமில்லை. தமிழின் முதன்மை நாவல்களில் ஒன்றாக கொண்டாடப்படும் ‘புயலிலே ஒரு தோணி’ கூட தமிழக வீரனொருவன் அந்நிய நாட்டை விடுவிக்கும் சாகச கற்பனாவாத கதையின் தன்மையுடையதே. சிலோன் நாதனின் துயரம் எஞ்சியிருப்பதின் துயரம். அறத்திலிருந்து எழும் துயரம். சிலோன் நாதனின் குற்ற உணர்வு இன்னும் நுண்மையானது. மரணம் மற்றும் அழிவுக்கு மனிதன் சாட்சியாக இருக்கும்போது வாழ்விச்சை பெருகுகிறது. பாஸ்பெர்கின் மரண சடங்கிற்கு பின் அவர் நேராக வேசியை தேடுகிறார்.  விடிந்ததும் குற்ற உணர்வில் தற்கொலைக்கு முயல்கிறார்‌. அதிலிருந்து உயிரிச்சையால் மீள்பவர் ராணுவப் பெண் நினைவை போக்க வேசியை நினைத்து சுய மைதுனம் செய்ய முயல்கிறார் ஆனால் குறி விறைக்கவில்லை. தெருவில் விளையாடும் பதின் வயது சிறுமியொருத்தி தொடை தெரிய விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்ததும் விறைக்கிறது. சிலோன் நாதனின் சிக்கல் என்பது அவர் உயிருடனிருக்க எந்த நியாயத்தையும் உணராத போதும் அவருடைய உயிரிச்சை அவரை சாக விடவில்லை என்பதே. இயேசு இறந்தபிறகு ஜூதாஸ் அடையும் அதே துயரம். இங்கிருந்துதான் அவருடைய கதை உலகின் பிரதான கேள்வியான வாழ்வு விதிக்கப்பட்டதா? மனிதர்களின் சுய தேர்வின் ( freewill) பங்கு என்ன? எனும் கேள்வியை கேட்கிறார். மனிதருக்கு வாழ்வில் வேறு சில தேர்வுக்கான சாத்தியங்கள் இருந்தபோதும் அவன் ஏன் அழிவையே தேர்வு செய்கிறான்? இக்கேள்விகள் எவையும் புதியவை அல்ல. ஆனால் விவாதித்து தீராதவை. கடவுளற்ற உலகில் மனிதர்களின் அறம் என்னவாக இருக்கும் என்பதே தாஸ்தாவெஸ்கியின் அக்கறையாக இருக்கிறது‌. தாஸ்தாவெஸ்கியின், தால்ஸ்தாயின் கிறிஸ்து இப்படி உருவானவர் தான். தால்ஸ்தாய்க்கு இயேசுவின் தேவையில் எவ்வித ஐயமும் இல்லை. தால்ஸ்தாய் இருமுனைகளுக்கு இடையேயான ஊசலில் இருந்தார் என்பது என் எண்ணம். ‘தொலைந்துபோன சிறிய கறுப்புநிற பைபிளின்’ முடிவில் அறம் தொலையும் போது கடவுளும் தொலைவது சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த ஊசலின் மறுமுனையை ‘ஒ தாவீது ராஜாவே’ சென்றடைகிறது.

‘தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்’ தொகுதியின் தலைப்பு கதை. இரண்டாம் உலகப் போரின் பின்புலத்தில் ரஷ்யாவை களமாக கொண்ட கதை.  ‘குளிரில் பூமியானது வெள்ளைநிற போர்வையோன்றைத் தன் உடல் முழுவதும் போர்த்திக்கொண்டு துயில் கொள்வதைப் போல் இருந்தது.’ போன்ற விவரணைகள் நல்ல காட்சி அனுபவத்தை அளிக்கிறது. வார்சா நோக்கி ராணுவத்தில் சேருவதற்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கிறான் கதை நாயகன். தாஸ்தாவேஸ்கி நாவல்கள் மற்றும் குடும்ப புகைப்படம் உள்ள நோட்டு மற்றும் சிறிய கறுப்புநிற பைபிள் அவன் கொண்டு செல்லும் பையில் உள்ளது. 

அங்கே விளாமிடினை சந்திக்கிறான். புவியியல் பட்டதாரியான அவன் நேசித்தவள் வேறொருவனுடன் இருப்பதை கண்டு கொலை செய்யும் அளவிற்கு ஆத்திரம் கொண்டு பின்னர் பைத்தியமாகி மீண்டு ராணுவத்திற்கு வந்தவன். அவன் தற்கொலை செய்து தலைசிதறி இறக்கிறான். அவனுடைய சிநேக சமிஞைகளை கதைசொல்லி அங்கீகரித்து அவனுக்கு திருப்பியளிக்கவில்லை. ராணுவ ஒழுங்கிற்கு பொருத்தமில்லாத மனிதனாக இருக்கிறான் என்பது விளாமிடின் ஓடிவரும்போது கீழே விழுவதையும் அவனை வேறெவரும் கவனிக்காததையும் சுட்டுவதன் வழியாக நிறுவுகிறார்.

துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக அவனை அழைத்து செல்கிறார்கள். ‘ஆனால் நான் எதற்காக இந்தக் கரடியைக் கொல்ல வேண்டும்?’ என்றொரு கேள்வியை எழுப்புகிறான். சம பலமற்ற எதிரி. ஆனால் அந்தக் கரடியின் சாவும் கதைசொல்லியின் வாழ்வும் பிணைந்திருக்கிறது. ஏறத்தாழ கீதையின் காட்சி இங்கு மறு ஆக்கம் செய்யப்படுகிறது. ஆனால் போதிப்பவரான ட்ரான்ஸ்கியின் உறுதி குலைகிறது. ‘உன்னுடைய மகிழ்ச்சியில் இன்னொருவருக்கு துக்கம் இருக்குமாயின் நீ அந்த மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்வாயா?’ என எழுப்பப்படும் கேள்வி ‘சிறுமி கத்தலோனா’ வில் எழுப்பப்படும் அதே கேள்வியின் நீட்சி. பெரும்பாலான கதைகளை துளைத்து செல்லும் மைய சரடு இக்கேள்வியே.

கரடியை சுடுவதற்கு முன்பு நிகழும் விவாதம் மனிதனின் சுய தேர்வுக்கும் விதிக்கும் இடையிலான ஊசலைப் பற்றிய உரையாடல். எல்லா சமயங்களிலும் வேறொரு வாய்ப்பு இருக்கு என நம்ப விரும்பும் கதைசொல்லி. அவற்றை மறுக்கும் ராணுவ அதிகாரி. ஏனெனில் ராணுவத்திற்கு அதுவே உகந்தது. ஒருவகையில் இதே கேள்வியைத்தான் சிலோன் நாதன் சிறையில் எதிர்கொள்கிறார். தவறான தேர்வு என தான் நம்புவதே அவரை வதைக்கிறது. ஜூதாசும் தனது தேர்வை எண்ணி மருகுகிறான். சுட்டுக்கொல்லப்பட்ட கரடி கனவில்  தலைகோதி தூங்க வைத்து அவனை மன்னிக்கிறது. சிலோன் நாதனை மன்னிக்க கனவில் எவரும் வரவில்லை. இறுதியில் தற்கொலை செய்துகொண்டு மரிக்கிறார்.

உயரதிகாரி லூக்கா அவனை அழைத்து பேசுகிறார். அவரிடம் தானொரு நல்ல ஓவியன் என பொய் சொல்கிறான். இயேசுமீது நம்பிக்கை இருக்கிறதா என லூக்கா கேட்கிறார். தேவாலயத்தில் அமர்ந்து சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் முகத்தைப் பார்ப்பதுபோல் வேறெதுவும் எனக்கு அமைதியைத் தந்து விடப்போவதில்லை என்கிறான். தொடர்ந்து விவாதிக்கிறார்கள்.  நேரியதான நல்லவனை படைப்பதே உலகத்தில் மிகவும் சிக்கலான காரியம்  டான் குயிக்சோட் பூரண நல்லவன். அவன் அசடனாக இருப்பதாலேயே நல்லவனாகிறான். தன் மதிப்பையறியாத நல்லவன் முட்டாளாக்கப்படுகையில் கருணையுணர்வு பிறக்கிறது. இந்த உரையாடல் கதையின் பின்புலத்தில் மிக முக்கியமான ஒன்று. படிப்படியாக மனித தன்னிலை மறைவதையே கதை சொல்கிறது.

மனைவி ஆன்யாவிற்கு கடிதம் எழுதுகிறான். போர் கொலைகள் பற்றிய விவரணைகள்- உன்னுடைய மகிழ்ச்சியில் இன்னொருவருக்கு துக்கம் இருக்குமாயின் நீ அந்த மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்வாயா? எனும் அந்த கேள்வியை விரிவாக்குகிறது. இயேசுவை ஆதர்சமாக  கொண்ட லூக்கா தான் கொல்வதில் இன்பமடைகிறார். போரில் அடிபட்டு கிடப்பவனுக்கு நீர் கொடுத்துவிட்டு மறைத்து வைத்த கத்தியால் அவனை குத்தி கொல்லும் போது அவன் மற்றொரு லூக்காவாக மாறுகிறான். அதற்குப்பின் அஞ்சி ஒளிந்து கொண்டிருக்கும் பெண்னை வெறும் ஆர்வத்தில் நெருங்கி அகங்காரம் சீண்டப்பட்டு அவளை துன்புறுத்தி புணர்கிறான். கிறிஸ்து ஒரு ஒளியாக அவனுடைய சாயலில் தோன்றி குரலாக ஒலிக்கிறார். அகங்கார வெறியில் இருப்பதை சொல்கிறார். புணர்ந்து கொண்டிருப்பவனின் பின்னால் நின்றுக்கொண்டு அவ்வுருவம் மீண்டும் எச்சரிக்கிறது. அவனுடைய மனைவிக்கும் பிள்ளைக்கும் இது நேரலாம் என சொல்கிறது அக்குரல். ஆனால் அவன் கேட்கவில்லை. வெறியில் அந்த பெண்ணை சிலையொன்றால் அடித்து கொல்கிறான். நம்பிக்கையாளன் கிறிஸ்துவை தொலைக்கும் கதை என சொல்ல முடியும். கிறிஸ்து ஒருவகையில் அவன் மனசாட்சியாக இருக்கிறார். கதையிறுதியில் பைபிள் தொலைந்ததும் பெரும் ஆசுவாசத்தை உணர்கிறான். இதுவே இதை ஒரு தாஸ்தாவெஸ்கிய கதையாக ஆக்குகிறது. ஜூதாஸ் மற்றும் சிலோன் நாதன் தங்களுடைய குற்ற உணர்விலிருந்து மீள முடியாமல் மரிக்கிறார்கள். ‘தொலைந்துபோன பைபிள்’ நாயகன் இயேசுவை கைவிடுவதன் வழியாக தற்கொலையிலிருந்து தப்பிக்கிறான். நிம்மதியாக வாழ்கிறான். ‘ஒ தாவீது ராஜாவே’ அகங்காரத்தை விட்டுவிட்டு இயேசுவை பற்றுவதன் வழியாக தற்கொலையில் இருந்து தப்பிக்கிறான்.

கதையை தற்காலத்திலிருந்து விலக்கி வேறொரு காலத்தில் வேறொரு நிலத்தில் நிகழ்த்தும் போது அரசியல் தரப்புகளை கடந்து ஆதாரமான கேள்விகளை எழுப்பிக்கொள்ள முடியும். சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘காலத்தின் அலமாரி’ ‘எலும்புக்கூடுகள்’ போன்றவை இப்படியாக சமகால நிகழ்வுகளிலிருந்து விலக்கிக்கொண்டு ஈழ சிக்கலை அணுகுபவை. சாதனா போர் ஒரு மனிதனின் நுண்ணுணர்வுகளை அழித்து படிப்படியாக மிருகமாக்குவதை சித்தரிக்கிறார். அ. முத்துலிங்கத்தின் ‘வெள்ளிக்கிழமை இரவுகள்’ வன்புணர்வு செய்த சிங்கள சிப்பாயின் வீட்டுக்கு அவனால் உருவான பெண் குழந்தையை அழைத்துக்கொண்டு சென்று காண்பதை சொல்லும் கதை. தன் நல்ல கணவன் , மகளின் நல்ல தந்தை, வேறொருத்தியை வன்புணர்வு செய்தவன் என அறியவரும்போது அவள் என்ன ஆவாள்?

இரண்டாம் உலகப்போர் என்பது ஸ்டாலினின் காலம். ஸ்வெட்லான அலேக்சிவிச் ‘second hand time’ நூலில் ரஷ்யாவை குறித்து கொடுக்கும் சித்திரத்தில் ரஷ்யாவின் தேவாலயங்கள் இடிக்கப்பட்டதையும் கடுமையாக ஒடுக்கப்பட்டதையும் சொல்கிறார். இரண்டாம் உலகப்போரை ஒட்டியே ஸ்டாலின் ஒரு உத்தியாக மீண்டும் கிறிஸ்தவத்திற்கு இடமளிக்கிறார். கிறிஸ்தவத்தின் ரட்சகராக தோற்றம் அளிக்கிறார். ஆனால் பிற்காலத்தில் நிலைமை மோசமாகிறது. சோவியத் உடைந்தபிறகு பெருந்திரளாக மக்கள் தேவாலயங்களுக்கு சென்றார்கள். கிறிஸ்தவ நம்பிக்கை சோவியத்தில் கிட்டத்தட்ட ராஜ துரோகமாக கருதப்பட்டது. இந்த சூழலில் ராணுவ உயரதிகாரி புதிய வீரனிடம் இப்படி உரையாடுவது முற்றிலும் சாத்தியமற்றது என சொல்லிவிட முடியாது என்றாலும், சற்றே நம்பகமற்ற பின்புலத்தை அளிக்கிறது. இங்கும் வாசகரின் நம்பிக்கையும் தனிப்பட்ட உரையாடல் எனும் சமாதானமும் தேவைப்படுகிறது.

இதே வரிசையில் ‘எஞ்சியிருப்பதன் துயரை’ பேசும் அடுத்த கதை  ‘யூதாசின் முத்தம்.’ இது ஒரு தொன்ம மறு ஆக்க ஊகப் புனைவு. நாமறிந்த யூதாசின் கதையில் உள்ள இடைவெளிகளை படைப்பூக்கமிக்க வகையில் நிரப்புகிறார். துரோகத்தின் முத்தமாக பார்க்கப்பட்ட யூதாசின் முத்தம் உண்மையில் அன்பின் முத்தமாக ஆகிறது. துரோகத்தின் சின்னமாக காலம் காலமாக கருதப்படும் யூதாஸ் முன் இருந்த தேர்வுகள் எவை? அவன் எதை தேர்ந்தான்? எனும் கேள்விகள் வழியாக அவனுடைய பிம்பத்தை தலைக்கீழாக்குகிறார். யூதாசுக்கு ஒரு காதல் வாழ்க்கை, நெருக்கடிகள், அரசியல் பின்புலம் என அனைத்தையும் உருவாக்குகிறார். பிலாத்துவின் வீரர்கள் நகர்வலம் வரும் இயேசுவை கைது செய்ய வரும்போது யூதாஸ் முதல் ஆளாக அவர்களுக்கு முன் நின்று அவர்களை விரட்டியடிக்கிறான். யூதாசின் காதலி சாரா, அவளுடைய அண்ணன் இப்ராகிம் நகர தலைமைக்கு எதிராக ஒரு புரட்சிப்படையை தொடங்கியதாக சொல்கிறாள். அதற்காக முப்பது வெள்ளிக்காசுகளை அளிக்க கோருகிறாள். அதற்காக அலையும்போது யூதாசின் குடும்பத்தை பிலாத்துவின் ஆட்கள் பிடித்து கொண்டு போய்விடுகிறார்கள் (இப்பகுதி மட்டும் சற்றே வழக்கமான பரப்பியல் பாணி எனத் தோன்றியது). சாராவின் வீட்டிலிருக்கையில் யூதாஸும் பிடிபடுகிறான். இறுதி விருந்தின்போது இயேசு கூறும் கதையில் குடிகாரன் இறந்த தந்தையை தங்க மோதிரத்துடன் சேர்த்தே புதைக்கிறான். இயேசு நன்றியைப் பற்றி பிரசங்கம் செய்வதும் வருகிறது. யூதாஸ் இயேசுவை கைது செய்யும்போது அவருக்கு முத்தமிடுகிறான். விசாரணையின்போது பராபஸ் விடுவிக்கப்படவேண்டும் என எல்லோரும் கூக்குரலிடுவதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. இயேசுவை நிர்பந்தத்தினால் காட்டிக்கொடுத்தாலும் பிறகு மீட்டுவிடலாம் என்பதே அவனுடைய கணக்கு. எப்படியும் அவர் தன்னை காப்பாற்றிக் கொள்வார் என நம்பினான். ‘இயேசுவையே விடுதலை செய்யுங்கள் என கண்ணீர்விட்டு அழுவதை’ எவரும் கேட்கவில்லை. பிலாத்து கொடுத்த வெள்ளிக்காசை வீசிவிட்டு வனத்திற்கு செல்கிறான். இயேசுவின் மரணத்திற்கு தான் காரணம் என்பது அவனை வருத்துகிறது. பாம்பொன்று அவனிடம் ஓநாயாக உருமாறி பேசுகிறது. இவையும் இயேசுவின் திட்டம் என சொல்கிறது. நீ ஒரு துரோகியல்ல, சாக வேண்டாம் என சொல்கிறது ஆனால் காட்டுக்குள் சென்று தூக்கிட்டு சாகிறான் யூதாஸ். சாத்தான் சொல்லும் சமாதானம் எல்லாவற்றையும் இறைத் திட்டத்தின் பகுதி என ஏற்க சொல்வதே. அதை ஏற்றுக்கொண்டால் யூதாஸ் சமாதனமடைந்து நிம்மதியாக வாழ்ந்திருக்கக் கூடும். ஆனால் சுய தேர்வின் வாய்ப்பையும் அதற்கான பொறுப்பையும் முற்றிலுமாக மறுத்ததாக ஆகும். ஆகவே அவன் தற்கொலை செய்துகொள்கிறான். தற்கொலைகள் ஒருவகையில் விதியின் வலைப்பின்னலுக்கு எதிரான கலகம். பழி தீர்ப்பு. சுமத்தப்படும் விதியின் வழித்தடங்களுக்கு எதிரான மறுப்பு. சுய தேர்வுக்கான சாட்சியங்களை வலுக்கட்டாயமாக நிறுவும் யத்தனங்கள்.

‘ஓ… தாவீது ராஜாவே!’ இதே கேள்விகளை கொண்டு வேறொரு பதிலை அடைந்த கதை என சொல்லலாம். நார்வே கடலில் மீன் பிடிக்கும் கிழவரின் கதை. கிழவனும் கடலை நினைவுபடுத்தும் காட்சியனுபவம்‌. கிழவர் தாவீது தந்தை மோசேயுவுடன் மீன் பிடிக்க சென்ற நினைவுகளில் ஆழ்கிறார். தேவன் நம்மை கைவிடமாட்டான் என தத்தளிக்கும் படகில் இருந்தபடி மோசேயு ஆறுதல் சொல்லும்போது ஒரு ராட்சச அலை அடங்கி செல்கிறது. ‘இத்தனை ஆண்டுகளாக கடல் என்றால் மிகவும் அமைதியான ஒன்று, ஒரு தாயைப் போன்றோ அல்லது தந்தையைப் போன்றோ எங்களை அரவணைக்கக் கூடியது என்று நினைத்திருந்தவனுக்குக் கடலின் இத்தனை மூர்க்கத்தனங்களையும் பார்த்தபோது வேதனையும் அதேசமயம் கோபமும் உண்டாயிற்று.’ எனும் இவ்வரியில் கடல் வாழ்க்கையின் குறியீடாகி அதன் கருணையின்மையை முதன்முறையாக எதிர்கொள்ளும் இளம் மனதின் தவிப்பு புலப்படுகிறது.  ‘முட்டாள்களையும் குழந்தைகளையும் தேவன் காப்பாற்றுவார். நீ குழந்தை, நான் முட்டாள், ஆகவே எதற்கும் பயப்படாதே என்றார்.’ இந்த உரையாடல் ‘தொலைந்து போன பைபிள்’ கதையில் லூக்காவுடன் டான் குவிக்சாதே பற்றி நிகழும் உரையாடலுடன் தொடர்புடையது. கிழவர் பெரும் முயற்சிக்கு பிறகு பிடித்த சிவலை மீன் அவரிடம் பேசத் தொடங்குகிறது. கிழவரும் தனிமையை போக்கிக்கொள்ள மீனிடம் பேசுகிறார். ‘நான் தோற்றுப்போனவன்’ என அரற்றுகிறார். மரணத்தை தவிர தனக்கு வேறென்ன எஞ்சி இருக்கிறது என மீனிடம் கேட்கும் கிழவரை தேற்ற மீன் மரணத் தருவாயில் பிழைத்து வந்த தாஸ்தாவெஸ்கியின் கதையை சொல்லி அவருக்கு ஆறுதல் அளிக்கிறது. மீனிடம் “இறப்பின் இறுதி நொடியில் என்னிடமிருந்து தப்பிவிடும் சாத்தியம் உள்ளதா?” என கேட்கும் கிழவரின் கேள்வி “தொலைந்து போன பைபிள்” கதையில் கதைசொல்லி அவனுக்கு துப்பாக்கி பயிற்றுவித்த ட்ரான்ஸ்கியிடம் கரடியை சுட சொன்னப்போது கேட்ட அதே கேள்வியின் நீட்சி. கொடும் பசியில் இருக்கும் தாவீது உயிர்வாழ வேண்டும் என மன்றாடாதபோதும் மீனை முத்தமிட்டு மீண்டும் நீரில் விடுகிறார். இந்த தருணத்தையும் “தொலைந்து போன பைபிள்” கதையில் கரடி சுடப்பட்டு இறப்பதுடன் ஒப்பிட முடியும். கரடி சுடப்படுவதிலும் மீன் உண்ணப்படுவதிலும் தான் பிழைத்திருக்க முடியும் எனும் நிலையில் இருவேறு முடிவுகளை இருவரும் எடுக்கிறார்கள். வீடு திரும்பும் தாவீது தனது பாடுகளில் பங்குபெறாத இயேசுவின் மீது கோபப்படுகிறார். தாவீது தனது வயிற்றை அறுத்து உள்ளுக்குள் உழன்று கொண்டிருக்கும் மலைப்பாம்பை வெளியே இழுத்து போட்டுவிட்டு வயிறை தைத்துக்கொள்கிறார். வீடு முழுவதும் பாம்புகள் சூழ்கின்றன. கடற்கரையில் சிற்றில் கட்டிக்கொண்டிருக்கும்போது இயேசு அவர் முன் தோன்றுகிறார். வீட்டுக்குள் திரும்பும்போது பாம்புகள் மறைந்து போகின்றன. இதே கதையில் மீன் முன்னர் பேசும்போது சாத்தானை விட கர்த்தர் வலிமையானவர் என சொல்கிறது. கொடும் பசியே உள்ளுக்குள் உழலும் பாம்பாக, சாத்தானாக உருவகப்படுத்தப்படுகிறது. இக்கதை எனக்கு இரண்டு கதைகளை நினைவுபடுத்தியது. ஒன்று தால்ஸ்தாயின் ‘where love is god is’ – இதில் மார்டின் எனும் மகனை இழந்த, செருப்புதைப்பவர் கனவில் வரும் இயேசு நாளை உன் வீட்டிற்கு வருவதாக சொல்கிறார். காலையிலிருந்து இயேசுவிற்காக காத்திருக்கும் மார்டின் வெவ்வேறு பாவப்பட்ட ஜீவன்களை சந்திக்கிறான். அவர்களுக்கு உதவுகிறான். இயேசு வராததை எண்ணி மருகும் அன்றிரவு கனவில் மீண்டும் இயேசு வரும்போது ஏன் வரவில்லை என கேட்கிறான். அதற்கு நான் தான் வந்தேனே என சொல்வார். பதின்ம வயதில் பள்ளியில் படித்த கதை. இயேசுவின் வருகையையும் இருப்பையும் உணர்த்தும் கதை. ஆயிரத்தொரு அரேபிய இரவுகளில் கடலில் மீன்பிடிக்க செல்லும் கிழவனிடம் கிட்டும் பேசும் மீன் கதை ஒன்றுண்டு. இக்கதையும் அமைப்பில் அத்தகைய தேவதை கதை/ நீதிக்கதை அமைப்பைக் கொண்டிருக்கிறது. தாஸ்தாவேஸ்கியின் கதையுலகிலிருந்து நன்னம்பிக்கையும் ஆசுவாசமும் அளிக்கும் தால்ஸ்தாய் கதையுலகிற்கு சென்ற கதை என இதை சொல்லலாம். சிலோன் நாதனும் யூதாசும் தற்கொலை செய்து இறந்து விட, மீதி இரண்டு கதைகளின் நாயகர்களும் உயிர் பிழைத்து இருக்கிறார்கள். தொலைந்து போன பைபிளின் நாயகன் நம்பிக்கையை தொலைப்பதன் வழியாகவும் தாவீது நம்பிக்கையை பற்றியபடியும். ஒருவகையில் ஒரே சிக்கலின் மூன்று சாத்தியமான விடைகளை சாதனாவின் கதைகள் பரிசீலிக்கின்றன என சொல்ல முடியும்.

தொகுப்பின் மீதி இரண்டு கதைகளும் எனது வாசிப்பில் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. ‘அக்கா’ இரண்டு சரடுகள் கொண்ட கதை. கதைசொல்லியின் கதை ஒரு பகுதியும். பிற பகுதிகள் அவன் எழுதும் கதையும் கொண்ட அமைப்பு. கதை சொல்லியின் கதை சற்றே சுவாரசியமான வாசிப்பை அளிக்கிறது. அவன் எழுதும் கதை எவ்விதத்திலும் புதுமையாகவோ அரிதாகவோ இல்லை. சாதி பிரச்சனை, இன சிக்கல், ஆணவக் கொலை போன்ற பேசு பொருளையே விந்தையான ஒரு நிலப்பரப்பிற்கு கொண்டு சென்று விவாதிக்கிறது. இரண்டாம் பகுதியில் கதைசொல்லியின் வாழ்க்கை விவரிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்து பாரிசில் ஒரு இத்தாலிய உணவகத்தில் வேலை செய்கிறான். அதன் பிறகு அவனுடன் வேலை பார்க்கும் மருது பற்றிய கதை வருகிறது. மருதுவைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே தன்னை பற்றி பேசத் தொடங்குகிறான் (மருதுவை பற்றிய கதையாகவே வாசிக்கப்படும்). முன்னர் வேலைப்பார்த்த அலுவலகத்திலிருந்து வெளியேறிய கதை, பெண்களுக்கு எதிரான ஆவேசம், பென்னியவாதிக்கு டில்டோ அனுப்பிய ஆணாதிக்கவாதி. முள்ளி வாய்க்கால் மரணத்தின் போது தற்கொலை செய்து கொள்ள எண்ணியவன். குடும்பத்திற்கு அறையை கொடுத்தவன். தன்னை தாஸ்தாவெஸ்கியுடன் ஒப்பிட்டு கொள்கிறான்.பெயரை மாற்றும் அளவிற்கு. கதை மாந்தர்களை அங்கிருந்தே எடுப்பதாக சொல்கிறான். தான் வாழும் உலகம் நாஜிக்களின் வதை முகாம் என எழுதுகிறான்.

தாத்தாவைக் காட்டிலும் முற்போக்காக இருந்த, ஜாதிகளே ஒழிய வேண்டும் என விரும்பிய தந்தை தன் மகள் வேறொரு இன ஆணை திருமணம் செய்தது பிடிக்கவில்லை என்பதால் அக்கா வீட்டை விட்டு வந்ததை அறிகிறான் என்பதே கதைசொல்லி எழுதும் கதை. லட்சியவாதத்தின் மீதான சலிப்பு அல்லது அவநம்பிக்கையை சொல்லும் கதை. ஒரு அரசியல் அல்லது தத்துவ கேள்விகளை கதைக்களனை பெயர்க்கும் (decontextualise) போது எழும் உயரம். உறவு சிக்கல்களின்/ சமூக அமைப்பின் கதைகளை பெயர்க்கும்போது நிகழ்வதில்லை. ஒட்டகப்பால், புகையிலை செடி, பெயர்கள் என புதிய யதார்த்தத்தை அளிக்க முற்படுகிறார். இதே சிக்கலே மற்றொரு கதையான ‘தாய்’ கதையிலும் உள்ளது. உறவுகளின் சுயநலம், சுரண்டல், துரோகம் போன்றவற்றை சொல்வதற்கு ரஷ்யாவின் பனி படர்ந்த பின்புலம் எவ்வகையில் உதவுகிறது?

‘தாய்’ ரஷ்யாவில் நிகழ்கிறது. கதையில் மாசி மாச பனி என்பதால் நான்கு இன்ச் அல்லது ஐந்து இன்ச் இருக்கும் என்கிறார். ரஷ்ய பின்புல கதையில் தமிழ் மாதத்தை கொண்டுவருவது பொருந்தவில்லை. பனிவெளியில் குதிரைகள் இழுக்கும் வண்டியை பற்றிய சித்திரம் (படர்கையில்?) வருகிறது. தன்னிலையில் கதைசொல்லி தனது தந்தைக்கும் தாயுக்கும் இடையிலான உறவை பற்றி சொல்கிறான். சிறுவனாக தந்தையின் பக்கமே அவன் சாய்கிறான். ரத்தம் வரும்படி தாயை தாக்கிவிட்டு தந்தை வெளியேறி செல்கிறார். அதற்காக அவனுக்கு தாயின் மீது உள்ளுக்குள் ஆத்திரம் கனன்று கொண்டபடி இருக்கிறது. அப்பாவிற்காக காத்திருக்கும் அம்மாவின் மாற்றங்களை நுட்பமாக சொல்கிறார். அப்பா இருந்தபோது வைத்த சூப்பை விட ருசியான சூப்பை வைக்கிறாள், காசு கொடுத்து அவளும் அவனுக்கு ஷூ வாங்கித் தருகிறாள். அவனுடைய தேவையை தீர்ப்பவரிடம் அவனுக்கு அன்பு கூடுகிறது. தனது சேகரிப்பை எல்லாம் முதிர்ந்த தாய் அவனிடம் அளிக்கும்போது அவனுக்கு அவள் மேல் பாசம் கூடுகிறது. அம்மாவிற்கு எதாவது செய்ய வேண்டும் என எண்ணும்போது நல்ல நிலையிலிருக்கும் தந்தையிடமிருந்து அவனையும் வரச்சொல்லி எழுதிய கடிதம் கிடைத்ததும் தந்தையின் மீது பெரும் கோபம் கொள்கிறான் யோகோவிச். அம்மா என்றாள் என்னவென்று உனக்கு காட்டுகிறேன் எனும் ஆவேசத்துடன் தனிமையில், தந்தையின் நினைவிலேயே வாழும் முதிர்ந்த அம்மாவை வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்கிறான். நடுவழியில் பனிப்பொழிவில் முதிர்ந்த அம்மாவை இறக்கிவிட்டு வண்டியில் கடந்து செல்கிறான் யோகொவிச். முதிர்ந்த தாயை காசுக்காக கைவிடும் மகனின் கதை இங்கே கதைகளிலும் நிகழ்வுகளிலும் நாம் நன்கறிந்த கருதான். முதியோர் இல்லத்திற்கு சென்றால் அத்தனைபேரும் இப்படியான கதையை சொல்வார்கள். மனிதர்களை பயன் கருதி கைவிடுவது என்பது இலக்கியத்தின் சாசுவதமான பெசுபோருல்களில் ஒன்று. ஆனால் ‘அக்காவின்’ சிக்கல் இதிலும் உண்டு. இந்த கதை கருவிற்கு கதை நிகழும் வெளி எந்த அளவிற்கு பங்களிப்பாற்றுகிறது? யோகொவிச்சின் அந்த முடிவைத்தான் நவீன இலக்கியவாதி எழுதுவார். நவீன இலக்கியத்தின் கருபொருட்களில் கூட தேய்வழக்கு உண்டு. தேய் வழக்கு என்பது என்ன சொல்லப்படுகிறதோ அதுவல்ல, அது எப்படி சொல்லப்படுகிறது என்பதே. சாரு முன்னுரையில் ‘இதுகாறும் பழகியிருந்த நிலங்களிலிருந்து விலகி இந்தப் பூமிக் கோளத்தில் நம்மைப் போலவே சிரித்து நம்மைப் போலவே கண்ணீர் விட்டு நம்மைப் போலவே துரோகம் செய்து நம்மைப் போலவே கொலைகள் செய்து நம்மைப் போலவே புணர்ந்து நம்மைப் போலவே சுரண்டப்பட்டு வாழும் வேற்று நில மனிதர்களின் கதைகளைச் சொல்கின்றன. இதுதான் இந்தக் கதைகளின் விசேஷம். இதுதான் முதலில் என்னை ஆச்சரியப்படுத்தியது. சாதனாவை கவனிக்கவும் வைத்தது.’ என எழுதுகிறார். சாரு இதை பெரும்பலமாக கருதுகிறார். ஆனால் ஒரு கதைக்கும் அது நிகழும் நிலப்பரப்பிற்கும் ஆதாரமான பிணைப்பு உள்ளது. தத்துவ நோக்கோ, வரலாற்று நோக்கோ இல்லாத கதைகளுக்கு இந்த கதைகள மாற்றம் பாதகமான விளைவையே ஏற்படுத்தும். பிற நான்கு கதைகளுக்கு அவற்றின் பேசு பொருள் காரணமாக இத்தகைய கதைக்களம் சாதகமான விளைவை ஏற்படுத்துகிறது. சாருவின் கூற்றை பொத்தாம்பொதுவான வரையறையாக கொள்ளமுடியாது. ஜெயமோகனின் ‘தேவதை’ ஒருவகையில் காந்தியின் வாழ்க்கையை ஆப்ரிக்க பின்புலத்தில் புனைந்த கதை. அந்நிய கதைக்களம் எங்கு தேவைப்படும்? சற்றே விலகி நின்று நோக்கும்போது நாம் நன்கறிந்த ஏதோ ஒன்றில் பண்பாட்டு/ வரலாற்று/ சமூக பூச்சுகளுக்கு உள்ளே அறியாத வேறொன்றின் இயங்குமுறை தென்படும். அப்படி ஒரு புதிய கோணம் கிட்டாதபோது கதைகளன் மாற்றப்படுவது ஒரு உத்தியாக மட்டுமே எஞ்சிவிடும். ஒரு கணவன் மனைவி சண்டை அமெரிக்காவில் நிகழ்வதாக கதை எழுதும்போது, அங்கே அமெரிக்க பண்பாடு எவ்வகையிலாவது ஊடுபாவை நிகழ்த்தியுள்ளதா என பார்க்கப்படும். அப்படி எதையும் நிகழ்த்தவில்லை என்றால் இந்த கதையை அமெரிக்காவிற்கு கொண்டு செல்ல என்ன காரணம் என வாசகன் ஒரு கேள்வியை எழுப்பக் கூடும். அப்படிச் செய்யக் கூடாதா? என்றால் அப்படியான விதிகள் ஏதுமில்லை. ஆனால் அது வாசிப்பில் ஒரு இடராகவே கருத்தில் கொள்ளப்படும். சிறுகதையின் மற்றொரு விதியான ‘சொல்லாதே காட்டு’ நினைவில் கொள்ளப்படவேண்டியது. தத்துவ பகுதிகள் நேரடியாக விவாதிக்கப்படுகின்றன. ‘புகழ்ச்சியானது ஒரு மனிதனின் திறமையை மழுங்கடிக்கச் செய்துவிடும் என்பதே அதற்குக் காரணம்’ போன்ற பொதுவான வரிகள் ஆங்காங்கு விரவிக் கிடக்கின்றன. ‘தனது வலது கையின் கட்டை-விரலுக்கு அடுத்துள்ள விரலினால் கண்ணாடியைத் தேய்த்து நத்தையை உசுப்பினார்’ என எழுதுகிறார். வலது ஆள்காட்டி விரல் என எழுத வேண்டிய இடத்தை இப்படி சுற்றி எழுதுவதான மொழி பயன்பாடுகள் ஒரு சில இடத்தில் இடறுகின்றன.  

சாதனாவின் கதைகள் அவை எடுத்துக்கொண்ட கேள்விகளை நேர்த்தியாக பின் தொடர்ந்தவை எனும் முறையில் முக்கியமான கதைகளாகின்றன. தனிப்பட்ட முறையில் எனக்கான கதைகள் என்றும் சொல்வேன். தமிழ் சிறுகதைகள் உலக நிலப்பரப்புகளில் விரிந்து பரவுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. எழுத்தாளர் சாதனாவிற்கு வாழ்த்துக்கள்.

கடைசி வரை – பாவண்ணன் சிறுகதை

க்ளாரிநெட்டை உறையிலிருந்து எடுத்து கைக்குட்டையால் நான் துடைக்கத் தொடங்கியதுமே “ஒரு டீ குடிச்சிட்டு தொடங்கலாமாண்ணே?” என்று கேட்டான் ட்ரம்பட் கோவிந்தன். மெளனமாக அவன் பக்கமாக பார்வையைத் திருப்பி “நாலு பாட்டு போவட்டும்டா, அப்பறமா பாத்துக்கலாம்” என்று விரல்களால் சைகை காட்டினேன். உடனே அவனும் ட்ரம்பட்டை எடுத்துக்கொண்டான். உறையை மடித்து பெரிய ட்ரம் தனபாலிடம் இடது கையால் கொடுத்தான். நான் மடித்து வைத்திருந்த உறையை சின்ன ட்ரம் தேசிங்கு எடுத்துக்கொண்டு போனான்.

’நாலு பேருக்கு நன்றி’ பாட்டை வாசிக்கத் தொடங்கினேன். சரியான புள்ளியில் ட்ரம்பட் வந்து சேர்ந்துகொண்டது. பல்லவியை முடித்து சரணத்தைத் தொடங்கும் வரை பதற்றம் ஒரு பாரமாக என்னை அழுத்திக்கொண்டிருந்தது. அதற்குப் பிறகே உடம்பும் மனசும் லேசானது. ஒருகணம் ரயில் ஜன்னலோரமாக முஸ்லிம் குல்லாயோடு எம்.ஜி.ஆர். முகம் சாய்த்து அழும் காட்சியை நினைத்துக்கொண்டேன். முதல் சரணத்தை நல்லபடியாக முடித்து மீண்டும் நாலு பேருக்கு நன்றியில் வந்து நிறுத்திவிட்டு கோவிந்தனைப் பார்த்தேன். அவன் புருவங்களை உயர்த்தி தலையசைத்ததும் நிம்மதியாக இருந்தது.

இரண்டாவது சரணத்தைத் தொடங்கிய பிறகுதான் வாசலுக்கு எதிரில் துணிக்கூரையின் கீழே பெஞ்சில் கிடத்தப்பட்டிருந்த தாத்தாவின் உடலைப் பார்த்தேன். எழுபத்தைந்து வயதிருக்கும். தலைமாட்டில் அம்மன் விளக்கெரிந்தது. பக்கத்தில் வத்திக்கொத்துகள். பெரியவரின் தலைமுடி அடர்த்தி ஆச்சரியமாக இருந்தது. நெற்றியில் நீளமான திருமண் கோடு. நடுவில் வட்டமான ஒரு ரூபாய் நாணயம். ஒரு பெரிய ரோஜா மாலை வயிறு வரைக்கும் நீண்டிருந்தது. நாலைந்து செவ்வரளி மாலைகள் ஒன்றோடு ஒன்று பிணைந்திருந்தன. வட்டமாக உட்கார்ந்திருந்த பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதுகொண்டிருந்தார்கள். மேல்சட்டை போடாத ஒரு சின்னப் பையன் இறந்துபோனவரின் முகத்தையே பார்த்தபடி அவருடைய காலடியில் உட்கார்ந்திருந்தான். துணிக்கூரையைத் தாண்டி வேப்பமரத்தடியிலும் புங்கமரத்தடியிலும் போடப்பட்டிருந்த பெஞ்சுகளில் உறவுக்காரர்களும் வெளியூரிலிருந்து வந்தவர்களும் உட்கார்ந்திருந்தார்கள். சின்னப்பிள்ளைகள் பெஞ்சுகளுக்கிடையில் புகுந்து குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

முதல் பாட்டைத் தொடர்ந்து நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தொடங்கினேன். புங்கமரத்தடியிலிருந்து இரண்டு பேர் எழுந்து வந்து தனபால் பக்கமாகச் சென்று ட்ரம்மைத் தொட்டபடி “நீங்க தவளகுப்பம்தான?” என்று கேட்டான். தனபால் தலையசைத்ததுமே ”அரியாங்குப்பத்துல ஒரு சாவு வூட்டுல ஒங்க வாசிப்ப நாங்க ஏற்கனவே கேட்டிருக்கம். நல்லா இருக்கும் ஒங்க வாசிப்பு” என்று சொன்னான். அப்போது தனபால் முகம் பூரித்துப்போவதை நான் பார்த்தேன். ”அண்ணன்தான் எங்க குரு” என்று அவன் என் பக்கமாக கை காட்டினான்.

பாட்டின் கடைசி வரியை வாசித்துக்கொண்டிருந்தபோது கூரையில் உட்கார்ந்திருந்தவர்களின் பார்வை சாலையின் பக்கம் திரும்புவதைப் பார்த்து தன்னிச்சையாக என் பார்வையும் திரும்பிவிட்டது. ”என்ன பெத்த அப்பா” என்று ஓங்கிய குரலோடு அழுது கூச்சலிட்டபடி நெஞ்சில் அறைந்துகொண்டு ஓட்டமும் நடையுமாக ஒருத்தி வந்துகொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னாலேயே ஒரு பெரிய ரோஜா மாலையோடு வழுக்கைத்தலையுள்ள ஒருவர் வந்தார். அவருக்குப் பக்கத்தில் நான்கு சிறுமிகள் ஒட்டிக்கொண்டு வந்தனர். “பெரிய பொண்ணு. பண்ருட்டிலேருந்து வருது” என்று கூட்டத்தில் ஒருவர் சொன்னது காதில் விழுந்தது. மூன்று தப்பட்டைக்காரர்களும் வேகமாகச் சென்று அவர்களை எதிர்கொண்டு தப்பட்டை அடித்தபடி அழைத்துவந்தார்கள்.

வந்த வேகத்தில் அந்தப் பெண் அவர் உடலைக் கட்டிக்கொண்டு அழுதாள். “எல்லாத்தயும் தொலச்சிட்டு ஊட்டோட வந்து கெடன்னு நூறுதரம் படிச்சி படிச்சி சொன்னனே. வரம்மா வரம்மான்னு சொல்லிட்டு வராமயே போயிட்டியேப்பா” என்று கதறினாள். விரிந்திருந்த அவர் கைவிரல்களை தன் கன்னத்தோடு வைத்து அழுத்திக்கொண்டாள். வழுக்கைத்தலைக்காரர் தன்னோடு கொண்டுவந்திருந்த மாலையை போட்டுவிட்டு முடிச்சிடப்பட்டிருந்த பெருவிரல்களைப் பார்த்தபடி சில கணங்கள் நின்றார். பெருமூச்சோடு வெளியே வந்து தப்பட்டைக்காரர்களுக்கு பணம் கொடுத்தார்.

சிறுமிகள் அம்மாவுக்கு அருகில் சென்று நின்றுகொண்டனர். “தாத்தாவ கூப்டுங்கடி. நீங்க கூப்ட்டா தாத்தா வந்துருவாருங்கடி” என்று அசிறுமிகளை தலைமாட்டை நோக்கிச் செலுத்தினாள். “ஒரு பத்து நாள் ஒன்ன பக்கத்துல ஒக்கார வச்சி ஒனக்கு சோறு போடற பாக்கியமே இல்லாம பண்ணிட்டியேப்பா. நான் என்னப்பா பாவம் செஞ்சன்?” என்று தேம்பித்தேம்பி அவள் அழுத நிலை என் மனத்தை அசைத்தது.

நான் என்னையறியாமல் “நெஞ்சடச்சி நின்னேனே” என்று சட்டென்று தொடங்கிவிட்டேன். வழக்கமான பாடல் வரிசையை மீறி எப்படியோ வந்துவிட்டது. அது புதிய பாட்டு. இன்னும் சரியாகப் பாடிப் பழகாத பாட்டு. கோவிந்தன் திணறித்திணறி பின்தொடர்ந்து வந்து சரியான புள்ளியில் சேர்ந்துகொண்டான். தனபாலுக்கும் தேசிங்குக்கும் அது திகைப்பளித்திருக்கவேண்டும். சட்டென்று எழுந்து நின்றுவிட்டார்கள். இரண்டு வரி கடந்து பாட்டு நிலைகொண்ட பிறகுதான் அவர்கள் அமைதியடைந்து மறுபடியும் உட்கார்ந்தனர். தேசிங்கு செல்லமாகச் சிணுங்கியபடி தலையில் அடித்துக்கொள்வதை நான் மட்டும் பார்த்தேன்.

“ஒரு சாவு வூட்டுல ஆயிரம் சொந்தக்காரங்க கதறுவாங்க. பொரளுவாங்க. அதயெல்லாம் நாம பாக்கவே கூடாது. நம்ம வேல எதுவோ அத மட்டும்தான் செய்யணும். வந்தமா, வாசிச்சமா, கூலிய வாங்கனமான்னு போயிகினே இருக்கணும்” என்று தேசிங்கு சுட்டிக் காட்டாத நாளே இல்லை. அவன் என்னைவிட வயதில் சின்னவன். ஆனால் அவனுடைய விவேகம் எனக்கு அறவே கிடையாது. உணர்ச்சிவசப்படாதவனாக ஒருநாளும் என்னால் இருக்க முடிந்ததில்லை.

பாட்டை முடித்த பிறகுதான் மனசுக்கு நிம்மதியாக இருந்தது. நடுவில் எங்காவது சொதப்பிவிடுவேனோ என்று ஒவ்வொரு கணமும் தடுமாறிக்கொண்டே இருந்தேன். அதற்காகவே பார்வையை எந்தப் பக்கமும் திருப்பாமல் ஊமத்தம்பூ மாதிரி விரிந்திருந்த குழல்வாயை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன். கடைசி சரணத்தை முடித்து மீண்டும் பல்லவியைத் தொடங்கியபிறகுதான் நம்பிக்கையும் தெம்பும் வந்தது.

நாங்கள் பாட்டை நிறுத்துவதற்காகவே காத்திருந்ததுபோல இரண்டு சிறுவர்கள் பக்கத்தில் வந்து நின்றார்கள். ஒவ்வொருவரிடமும் பிளாஸ்டிக் தம்ளரை நீட்டினான் ஒருவன். மற்றொருவன் கூஜாவிலிருந்த டீயை ஊற்றினான். அவன் தயக்கத்தோடு என்னைப் பார்த்து “இப்ப நீங்க பாடனது விழா படத்துல வர பாட்டுதாண்ணே?” என்று ஆர்வத்துடன் கேட்டான். சூடான மிடறு வாய்க்குள் இருந்த நிலையிலேயே நான் ஆமாம் என்பதுபோல தலையசைத்துவிட்டு புன்னகைத்தேன். “நான் அந்தப் படத்த ரெண்டு தரம் பாத்திருக்கேண்ணே” என்று சிரித்துக்கொண்டே சென்றான்.

நாங்கள் நிறுத்தியதுமே தப்பட்டைக் குழு தொடங்கிவிட்டது. “அவுங்க கொஞ்ச நேரம் அடிக்கட்டும். நீங்க அப்பிடி நெழல்ல உக்காருங்க” என்று எங்களைப் பார்த்து சொன்னபடி ஒரு பெஞ்சில் வந்து உட்கார்ந்தார் ஒருவர். காலர் இல்லாத ஜிப்பா போட்டிருந்தார். தோளில் ஒரு துண்டு இருந்தது. ”நல்லா இருக்குது தம்பி ஒங்க வாசிப்பு. என் பெரிய பையன்தான் ஒங்கள பத்தி சொன்னான். பத்துகண்ணு பக்கத்துல ஒரு சாவுல ஒங்க வாசிப்ப கேட்டிருப்பான்போல. அத நெனப்புல வச்சிகினு அவுங்ககிட்ட பேசி நெம்பர வாங்கி என்கிட்ட குடுத்து பேசுங்கன்னான்” என்றார். “ஒங்களாட்டம் பெரியவங்க ஆதரவு எங்கள மாதிரி குழுக்களுக்கு பெரிய பலம்யா” என்று நன்றியோடு தலையசைத்தேன்.

அடுத்தடுத்த தெருக்களில் இருந்த ஆண்களும் பெண்களும் கூட்டமாக வந்து மாலை போட்டுவிட்டு நிழல் இருக்கும் பக்கமாக ஒதுங்கி உட்கார்ந்தார்கள்.

பூக்கூடைகளையும் மூங்கில்களையும் சுமந்து வந்த வண்டி சாலையிலிருந்து பக்கவாட்டில் ஒதுங்கி ஓரமாக நின்றது. எல்லாவற்றையும் இறக்கி ஓரமாக ஒதுக்கிவிட்டு துணிக்கூரையின் பக்கம் வந்து யாரையோ தேடுவதுபோல நின்று பார்த்தார்கள். ”இங்க, இங்க, இந்தப் பக்கமா வாங்க” என்றபடி ஜிப்பாக்காரர் கையைத் தூக்கினார். அவர்கள் நெருங்கி வருவதற்குள் “டேய் ரவி, இவுங்களுக்கு டீ குடு” என்று கூஜா வைத்திருந்த சிறுவனை அழைத்தார். அவன் ஓடி வந்து அவர்களுக்கு தம்ளர்களை நிறைத்துக் கொடுத்தான்.

“மசமசன்னு நிக்காம வேலய இப்பவே ஆரம்பிச்சி மெதுவா செஞ்சிகினே இருங்கடா. நாலு மணிக்கு எடுக்கணும். சரியா?”

அவர்கள் தலையை அசைத்தபடியே டீ பருகினார்கள். ஜிப்பாக்காரர் மீண்டும் அவர்களிடம் “அதுக்காக அவசர அடியில ஏனோதானோன்னு வேலய முடிச்சிடக்கூடாது. மரக்காணத்துக்காரர் ஊட்டுல செஞ்சிங்களே பூப்பல்லக்கு. அந்த மாதிரி செய்யணும். புரியுதா?” என்று சொன்னார்.

“ஒரு கொறயும் இல்லாம செஞ்சிடலாம்ய்யா. உங்க பேச்சுக்கு மறுபேச்சு உண்டா?. பூ வெல கன்னாபின்னான்னு ஏறிட்டுது. செலவு கொஞ்சம் கூட ஆவும். அத நீங்க பாத்துக்கிட்டா போதும்….”

“ஒனக்கு மட்டும் தனியா வெல ஏறிடுச்சாடா?” என்று காதைக் குடைந்துகொண்டே சிரித்தார் அவர். பிறகு அவர்களிடம் “சரிசரி. சொல்லிட்டிங்க இல்ல, பார்த்துக்கலாம், போங்கடா. போயி நடக்கற வேலய பாருங்க” என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

பிரதான சாலையிலிருந்து வீட்டை நோக்கிய சாலையில் வேகமாகத் திரும்பிய ஒரு புல்லட் வண்டி மெதுவாக வந்து தப்பட்டைக்காரர்களுக்கு அருகில் நின்றது. வண்டியிலிருந்து ஒருத்தி வேகமாக இறங்கி “ஐயோ அப்பா” என்று கூச்சலிட்டபடி ஓடி வந்தாள். ‘எப்ப வந்தாலும் வா கண்ணு வா கண்ணுன்னு வாய் நெறய சொல்லுவியேப்பா. இப்படி ஒரு சொல்லும் சொல்லாம படுத்துங் கெடக்கறியேப்பா” என்று கூவி அழுதபடி கால்களிடையில் முகத்தைப் புதைத்தாள்.

ஜிப்பாக்காரர் என்னிடம் “ரெண்டாவது பொண்ணு. பால்வாடி டீச்சர். காட்டுமன்னார் கோயில்ல குடும்பம்” என்றார்.

வண்டியை ஓரமாக நிழல் பார்த்து நிறுத்திவிட்டு வந்தவர் கொண்டு வந்த மாலையை அவர் உடல்மீது வைத்துவிட்டு ஒருகணம் கைகுவித்து வணங்கியபடி நின்றார். அவரோடு வந்த இரண்டு பிள்ளைகளும் தன் அம்மா அழுவதைப் பார்த்தபடி கலவரத்தோடு நின்றார்கள். அவர் வெளியே வந்து தப்பட்டைக்காரரிடம் ஐம்பது ரூபாய் நோட்டொன்றை எடுத்துக் கொடுத்தார்.

”கத்தரியும் பச்சநெறம், என் கர்ணர் மக தங்கநெறம், காத்துபட்டு மங்காம, கவலப்பட்டு மங்கறனே என்ன பெத்த அப்பா”

ஒப்பாரிக்குரல் அங்கிருந்தவர்கள் அனைவரையும் உருக்கியது.

ஜிப்பாக்காரரின் பையில் கைபேசி மணியொலித்தது. அவர் அதை எடுத்து ஒருகணம் எண்ணைப் பார்த்துவிட்டு பேசினார். மறுமுனையில் சொல்வதையெல்லாம் கேட்டபிறகு “இந்த நேரத்துல வெறகு வெலயயும் எருமுட்ட வெலயயும் பாத்தா முடியுமா ராஜா? இவனே இந்த வெல விக்கறான்னா, இன்னொருத்தவன் மட்டும் கொறஞ்ச வெலைக்கு விப்பானா என்ன? ஒரு தரம் கொறச்சி கேளு. குடுத்தா சரி. இல்லனா கேக்கற பணத்த குடுத்துட்டு வாங்கிட்டு வா” என்றார். சில கணங்களுக்குப் பிறகு மீண்டும் “நேரா சுடுகாட்டுலயே போய் எறக்கிடு ராஜா. நால்ர மணிக்கு வந்துடும், தயாரா இருக்கணும்ன்னு சுடறவன்கிட்ட ஒரு வார்த்த சொல்லி வை” என்றார்.

தப்பட்டைக்காரர்கள் ஓசை நின்றது. நான் அவர்களைத் திரும்பிப் பார்த்தேன். நீங்க ஆரம்பிங்க என்றபடி கையசைத்துக்கொண்டே அவர்கள் நிழலில் ஒதுங்கினார்கள்.

நான் தனபாலைப் பார்த்து தலையசைத்ததும் பையில் வைத்திருந்த தாளக்குச்சிகளை எடுத்து பெரிய ட்ரம்மின் மீது மிக மெதுவாக தொட்டு இழுத்தான். சட்டென ஒரு குடம் உருண்ட சத்தம் கேட்டது. அதற்கு பதில் சொல்வதுபோல தேசிங்கு தன் சின்ன ட்ரம்மின் மீது இழுத்து இன்னொருவிதமான சத்தத்தை எழுப்பினான். கூடியிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் ஒருகணம் திரும்பிப் பார்த்தார்கள். அவர்களுடைய கவனத்தால் ஈர்க்கப்பட்டவர்கள்போல ஒவ்வொரு விதமாக ஓசையெழும்படி இருவரும் மாறிமாறி இழுத்தார்கள். மரப்படிக்கட்டுகளில் தடதடவென ஏறுவதுபோன்ற வினோதமான அந்தச் சத்தம் கேள்விபதில் போல இருந்தது. உச்சப்புள்ளியில் இரு சத்தங்களும் ஒன்றிணைய இருவரும் வழக்கமான வாசிப்பைத் தொடங்கினார்கள். அதற்குப் பிறகு கால்மணி நேரம் ஓய்வே இல்லை. கவனம் சிதறாத வாசிப்பு.

அவர்கள் முடிக்கும் கணத்துக்காகக் காத்திருந்ததுபோல நான் க்ளாரினெட்டை எடுத்து ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்று தொடங்கினேன். “அண்ணனுக்கு மூடு வந்திடுச்சிடோய்” என்றபடி கோவிந்தன் ட்ரம்பட்டை எடுத்தான். கூரையில் உட்கார்ந்திருந்த பல பெரியவர்கள் எங்களைக் கவனிப்பதைப் பார்த்து எனக்குள் உண்மையாகவே உற்சாகம் ஊற்றெடுத்தது.

மூட்டைமுடிச்சுகளோடு சடங்குக்காரர் பின்தொடர இளைஞரொருவர் ஜிப்பாக்காரர் அருகில் வந்து “மளிகை சாமான்லாம் வந்துட்டுதுப்பா. எங்க எறக்கலாம்? சமையல எங்க வச்சிக்கறது? ரெண்டு மணிக்குள்ளயாவுது செஞ்சி எறக்கணும்ல. நெறய சின்ன பசங்க இருக்குது” என்று சொன்னார். “புத்துப்பட்டாரு ஊட்டு தோட்டத்துல எறக்கிடுப்பா. நான் ஏற்கனவே அவுங்ககிட்ட சொல்லிட்டேன். சும்மா சோறு, ரசம், அப்பளம் போதும். புரிதா?” என்றார் ஜிப்பாக்காரர். அவர் நகர்ந்ததுமே சடங்குக்காரர் முன்னால் வந்து நின்றார். “கொஞ்சம் இரு சிங்காரம். அவசரப்படாத. மூணாவது பொண்ணு இன்னும் வந்து சேரலையே. வந்ததுக்கு அப்புறம் யாரு கொள்ளி வைக்கறதுன்னு பேசி முடிவு செய்யலாம்” என்றார்.

நான் முத்துக்கு முத்தாக பாட்டை வாசிக்கத் தொடங்கினேன். அப்படியே தொடர்ந்து ஆறு பாடல்கள் வாசித்தேன். இறுதியாக ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே பாட்டுக்கு வந்து சேர்ந்தேன். “அண்ணன் இங்க வந்துதான் நிறுத்துவாருன்னு நெனச்சேன், அதேமாதிரி செய்றாரு பாரு” என்று தனபாலைப் பார்த்துச் சிரித்தான் தேசிங்கு. வெயில் உச்சிக்கு ஏறிவிட்டதால் துணிக்கூரையின் நிழலிருக்கும் பக்கமாக இடம்மாறினோம்.

ஜிப்பாக்காரர் தப்பட்டைக்காரர்களிடம் சாப்பாட்டுச் செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பிவைத்தார். பிறகு என் பக்கமாக வந்து “நீங்களும் போய் வந்துடுங்கப்பா” என்றபடி பணம் கொடுத்தார். நான் அதை வாங்கி அப்படியே தனபாலிடம் கொடுத்து “போய்ட்டு சீக்கிரமா வாங்க” என்றேன். “ஏம்பா நீ போவலையா?” என்று கேட்டார் ஜிப்பாக்காரர். “இந்த நேரத்துல நான் சாப்படறதில்லைங்க” என்றேன் நான். அவர் உடனே “டேய் ரவி, இங்க வாடா” என்று நிழலில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுவனை அழைத்து “இந்தா, கூஜாவ எடுத்தும் போயி ரெண்டு டீ வாங்கிட்டு வா” என்று அனுப்பிவைத்தார்.

தொலைவில் பத்து பதினைந்து பேர் சேர்ந்து வருவதைப் பார்த்ததுமே ஜிப்பாக்காரர் தப்பட்டைக்காரர்கள் பக்கமாகத் திரும்பி “தம்பிங்களா, இளைஞர் சங்கத்துக்காரனுங்க வரானுங்க போல. போங்க. போய் அழச்சிகினு வாங்க” என்றார். அவர்கள் அக்கணமே எழுந்து போனார்கள். தப்பட்டைகள் மட்டும் முழங்க மெளன ஊர்வலமாக வந்தது இளைஞர்கள் கூட்டம். எல்லோருமே அந்த வட்டாரத்து இளைஞர்கள். இடுப்புயரத்துக்கு ஒரு பெரிய மலர்வளையத்தை நான்குபேர் ஆளுக்கொரு பக்கம் பிடித்திருந்தனர். மெதுவாக அதை மறைந்துபோனவரின் காலடிகளில் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார்கள்.

அவர்கள் செல்லும் திசையில் ஜிப்பாக்காரர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே எதிர்பாராத விதமாக துணிக்கூரைக்கு அருகிலேயே ஒரு வாடகைக்கார் வந்து நின்றது. கதவைத் திறந்துகொண்டு “என்ன பெத்த தெய்வமே” என்று அலறி அழுதபடி ஓடி வந்து அவர் காலடியில் விழுந்தாள் ஒரு பெண். அவளைத் தொடர்ந்து அவளுடைய கணவர் இறங்கி வந்து மாலை போட்டு வணங்கினார். அவருடைய மூன்று பிள்ளைகளும் அவருக்கு அருகில் சென்று மிரட்சியோடு பார்த்தபடி நின்றார்கள்.

“மூனாவது பொண்ணு. இங்க இருக்கிற திருக்கனூருலேந்து வரதுக்கு கார் எதுக்கு சொல்லு? அற்பனுக்கு வாழ்வு வந்த அர்த்தராத்திரில கொட பிடிப்பானாம். அந்த மாதிரி கத இது” என்று எங்கோ பார்ப்பதுபோல என்னிடம் முணுமுணுத்தார் ஜிப்பாக்காரர்.

”மொத்தம் மூணு பொண்ணுங்களா அவருக்கு?”

“ஆமாமாம். மூணும் முத்துங்க” என்று கசந்த சிரிப்பை உதிர்த்தார். தொடர்ந்து “கட்டிம் போன நாள்லேருந்து ஒருநாள் கூட அவர நிம்மதியா இருக்க உட்டதில்ல” என்று பெருமூச்சு விட்டார்.

அவரே தொடரட்டும் என நான் அமைதியாக இருந்தேன். அதற்குள் சிறுவன் டீ வாங்கி வந்தான். டீத்தம்ளரை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த மரநிழல் பக்கமாக இருவரும் சென்றோம். ஜிப்பாக்காரரின் மகன் துணிக்கூரையடியில் விளையாடிக்கொண்டிருந்த சின்னப்பிள்ளைகளை எல்லாம் அழைத்துக்கொண்டு மதிலோரமாக நிழலிருக்கும் பக்கமாகவே நடத்தி அழைத்துச் சென்றான்.

”ஆடு மேய்க்கறதுதான் தாத்தாவுக்கு தொழில். பத்து பாஞ்சி ஆடுங்களோட ஒரு காலத்துல சிங்கிரிகோயில்லேருந்து வந்தவருன்னு சொல்வாரு எங்க அப்பா. ஒரு கெட்ட பழக்கமில்ல. நேரம் காலமில்லாம ஆடுங்க பின்னாலயே ஓடுவாரு. பத்து ஆடு அம்பதாச்சி. அம்பது நூறாச்சி. குட்டி நல்லா பெரிசானதும் சந்தையில காசாக்கிடுவாரு. அப்பிடி சேத்த பணத்துலதான் இப்ப இருக்கற ஊட்ட கட்டனாரு.”

“அதுதான் இந்த ஊடா?” என்று ஆவலோடு கேட்டபடி அதை ஒருமுறை திரும்பிப் பார்த்தேன்.

”இது மட்டுமா செஞ்சாரு? மூணும் பொட்டபுள்ளயா பொறந்திடுச்சே நாள பின்ன ஒதவும்ன்னு ஊருக்கு வெளியே மூணு மன வாங்கி போட்டாரு. எல்லாரயுமே பள்ளிக்கூடத்துல சேத்து செலவு செஞ்சி படிக்க வச்சாரு. யாருக்கும் எந்த கொறயும் வைக்கலை. வளந்து ஆளானதும் நல்ல எடமா பாத்து கல்யாணம் பண்ணி வச்சாரு. ஏற்கனவே சொன்னமாரி ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒரு மனய எழுதிக் குடுத்துட்டாரு. இதுக்கு மேல ஒரு அப்பன்காரன் ஒரு பொண்ணுக்கு என்ன செய்யமுடியும், நீயே சொல்லு தம்பி?”

”எல்லாக் கடமைங்களயும்தான் முடிச்சிட்டாரே”

ஜிப்பாக்காரர் பெருமூச்சு விட்டார். ”இந்த உலகத்துலயே நன்றி இல்லாத உயிர் எது தெரிமா தம்பி,?” என்று கேட்டுவிட்டு என் முகத்தைப் பார்த்து “மனுஷன்தான்” என்று அழுத்திச் சொன்னார்.

“ஒவ்வொரு பொண்ணுக்கும் அவர் செஞ்ச சீர் செனத்திக்கு கொறயே இல்ல. ஒவ்வொருத்திக்கும் புள்ள பொறக்கும்போது ஓடிஓடி நின்னு செஞ்சாரு. அந்த பொண்ணுங்களுக்கு இந்த ஊருல மண்ணு வேணாம்னு வித்துட்டு அவுங்க வாழற ஊருல போய் புதுசா ஒன்னு வாங்கிகிட்டாங்க. வித்ததோ வாங்கனதோ தப்பில்ல தம்பி. ஒரு பொண்ணு அஞ்சி லட்சத்துக்கு வித்துது. இன்னொரு பொண்ணு நாலு லட்சத்துக்கு வித்துது. கடைசி பொண்ணு ஆறு லட்சத்துக்கு வித்துது. இதுல தாத்தா செய்ய என்ன இருக்குது சொல்லுங்க. ஒரு கண்ணுல வெண்ணெ ஒரு கண்ணுல சுண்ணாம்புன்னு நீ நடந்துட்டன்னு இவரு கூட எப்ப பாத்தாலும் ஒரே சண்ட. நீ மோசக்காரன், ஓரவஞ்சன செய்யறவன்னு ஒரே பேச்சு.”

கேட்கக்கேட்க எனக்கு கசப்பாக இருந்தது. பதில் பேசாமல் அமைதியாக அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“அவரு பொண்டாட்டிக்கு ஒடம்பு முடியலைன்னு ஒரு தரம் பெரியாஸ்பத்திரியில சேத்தாரு. வயசான ஆம்பளை ஒரு பொம்பள வார்டுல எப்படி தொணைக்கு இருக்க முடியும், சொல்லுங்க. அம்மா, ஒரு பத்து நாள் கூட இருந்து பாத்துக்குங்கம்மான்னு பொண்ணுங்ககிட்ட கெஞ்சனாரு. அவளக் கேளுன்னு இவ, இவளக் கேளுன்னு அவ, அப்படியே ஆளாளுக்கு சாக்குபோக்கு சொல்லி அனுப்பிட்டாங்க. கடசியில ஒரு ஆளும் வரலை. பாவம், அந்த அம்மா அனாதயா ஆஸ்பத்திரியிலயே செத்து போய்டுச்சி.”

”ஐயோ” அந்தச் சம்பவம் ஒருகணம் என் கண்முன்னால் நடப்பதுபோல இருந்தது.

“இது நடந்து ஆறேழு வருஷம் இருக்கும். அப்பவும் அவரு யாரயும் கொற சொல்லி நான் கேட்டதில்ல. வழக்கம்போல ஆடு மேய்ச்சிட்டு காலத்த ஓட்டனாரு. ஒருத்தி கூட எதுக்குப்பா தனியா இருக்கற, என் கூட வந்து இருன்னு கூப்புடலை. தடுமாறி தடுமாறி தாத்தாவும் காலத்த ஓட்டிட்டாரு.”

ஜிப்பாக்காரர் ஒருமுறை பெஞ்ச் மீது மாலைகளிடையில் கிடந்த தாத்தாவின் வற்றிய உடலைப் பார்த்து பெருமூச்சு விட்டார்.

“ஒருநாள் சந்தையில அனாதயா சுத்திட்டிருந்த இந்த பையன கூடவே அழச்சிட்டு வந்து ஊட்டோட வச்சிகிட்டாரு. அன்னையிலேர்ந்து அவன்தான் அவரயும் பாத்துக்கறான். ஆடுங்களயும் பாத்துக்கறான்” என்று நிறுத்தினார். பிறகு தொடர்ந்து “என்ன கேட்டா, அவன்தான் ஞாயமா அவருக்கு கொள்ளி வைக்கணும். ஆனா கர்மம் புடிச்ச ஜனங்க உடுமா என்ன?” என்று உணர்ச்சிவசப்பட்டார். நான் சிலைபோல கால்மாட்டில் உறைந்துபோய் அமர்ந்திருக்கும் அந்தச் சிறுவனை ஒருகணம் திரும்பிப் பார்த்தேன். அடிவயிறு கலங்கியது.

சாப்பிட்டுவிட்டுத் திரும்பியதும் தப்பட்டைக்காரர்கள் இசை தொடங்கியது. அதற்கப் பிறகு நாங்கள் தொடங்கினோம். ஆளுக்கு அரைமணி நேரம் இசைத்தபடி இருக்க, பொழுது போய்க்கொண்டே இருந்தது. சடங்குக்காரர் எந்தப் பரபரப்பும் இல்லாமல் சடங்குகள் அனைத்தையும் செய்துமுடித்தார். நேரம் கழியக்கழிய ஊரே கூடிவிட்டது. நிற்பதற்கே இடமில்லை.

இறுதியாக, தாத்தாவின் உடல் பல்லக்கில் ஏற்றப்பட்டது. கோவிந்தா கோவிந்தா என அனைவரும் குரல்கொடுத்தபடி பல்லக்கை தூக்கினார்கள். நீளவாக்கில் இருந்த மூங்கிலை ஒரே நேரத்தில் அனைவரும் தோளில் தாங்க பல்லக்கு நகரத் தொடங்கியது.

பல்லக்குக்கு முன்னால் தப்பட்டை வரிசை சென்றது. அவர்களைத் தொடர்ந்து நாங்கள் சென்றோம். நான் வீடு வரை உறவு வாசிக்கத் தொடங்கினேன். பிறகு ’மக்க கலங்குதுப்பா மடிபுடிச்சி இழுக்குதப்பா’ பாட்டை வாசித்தேன்.

சில இளைஞர்கள் கையை உயர்த்தி, இடுப்பையசைத்து ஆடத் தொடங்கினார்கள். அவர்கள் என்னை ஏக்கமாகப் பார்ப்பதுபோல இருந்தது. உடனே அத்தகையவருக்காகவே நாங்கள் பயிற்சி செய்து வைத்திருந்த ’பொறப்பு எறப்பு மனுசன் நம்ம எல்லாருக்குமே இருக்கு’ பாட்டை வாசிக்கத் தொடங்கினேன். ஆட்டக்காரர்கள் உடனே துடிப்போடு ஆடத் தொடங்கிவிட்டார்கள். நான் மீண்டும் அவர்களுக்காகவே ’ஓபாவும் இங்கதான்டா ஒசாமாவும் இங்கதான்டா’ வாசிக்க ஆரம்பித்தேன்.

இளைஞர்கள் களைத்து மனநிறைவோடு ஒதுங்கி நடக்கத் தொடங்கியதும் நான் மறுபடியும் ’நாலு பேருக்கு நன்றி’ பாட்டை வாசித்தேன். அதற்கடுத்து ’ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ பாட்டு. சுடுகாடு அடையும் வரை அந்த இரு பாடல்களை மட்டுமே மாற்றி மாற்றி இசைத்தேன்.

சுடுகாட்டுக்குள் நுழைந்ததுமே நாங்கள் வாசிப்பை நிறுத்திவிட்டு ஓரமாக ஒதுங்கினோம். காட்டுவாகை மரங்களும் நாவல்மரங்களும் எங்கெங்கும் நிறைந்திருந்தன. வாசலிலிருந்து அரிச்சந்திரன் மேடைக்கும் தகன மேடைக்கும் செல்லும் சிமென்ட் சாலைகளில் நாவல் பழங்கள் விழுந்து நசுங்கிய நீலக்கறைகள் படிந்திருந்தன.

க்ளாரினெட்டை உறையிலிட்டு மூடியபோது சங்கடமா நிறைவா என பிரித்தறிய முடியாத உணர்வு கவிந்திருந்தது. ட்ரம்பெட்டையும் ட்ரம்களையும் உறைகளில் போட்டு மூடி நாடாவால் இழுத்துக் கட்டினான் தனபால்.

இலுப்பை மரத்தடி நிழலில் அனைத்தையும் வைத்த பிறகு “கைகால் கழுவிகினு வரம். பாத்துக்குங்கண்ணே” என்று சொல்லிவிட்டு மூன்று பேரும் அருகிலிருந்த தண்ணீர்க்குழாயின் பக்கம் சென்றார்கள்.

நான் மரத்தில் சாய்ந்துகொள்ளச் சென்றபோதுதான் மறுபக்கத்தில் அந்தச் சிறுவனைப் பார்த்தேன். ஒருகணம் புரியவில்லை. அவன் சுடுகாடு வரைக்கும் எப்படி வந்தான் என்பதே எனக்குப் புரியவில்லை. வழியில் ஒரு இடத்தில் கூட அவனைப் பார்த்த நினைவே இல்லை. அவன் கண்களில் இன்னும் கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது.

அவன் மீதிருந்த பார்வையை விலக்கி சடங்குகளை வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன். சடங்குகள் மட்டும் எப்போதுமே எனக்குப் புதிராகத் தோன்றுபவை. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு தெருவுக்கும் வேறுபட்டுக்கொண்டே இருப்பவை சடங்குகள். என்னால் அவற்றை மனத்தில் வரிசைப்படுத்தி இருத்திக்கொள்ளவே முடிவதில்லை. ஒவ்வொரு முறையும் புதுசாகத் தோன்றுவது அதனால்தான்.

அரிச்சந்திரனுக்கு படைத்த பிறகு பல்லக்கோடு தாத்தாவின் உடலைப் பிணைத்துக் கட்டியிருந்த கயிறு அறுக்கப்பட்டது. “நெறய பேரு வேணாம். அஞ்சாறு பேரு மட்டும் நில்லுங்க. மத்தவங்க நவுந்து போங்க” என்று சடங்குக்காரர் சொன்னதும் அனைவரும் விலகினார்கள். ”அவசரமில்லாம பொறுமையா கவனமா தூக்கிட்டு வாங்க” என்றபடி முன்னால் நடந்தார் அவர்.

ஆறு பேரும் பக்கத்துக்கு மூன்று பேராக நின்று தலைப்பகுதியையும் இடுப்புப்பகுதியையும் கால்பகுதியையும் தாங்கியபடி தாத்தாவின் உடலைத் தூக்கிக்கொண்டு சென்று தகனமேடையில் வைத்தார்கள்.

”ம்ம்மேம்ம்மே மிமிமே ம்ம்மேம்ம்மே மிமிமே”

திடீரென எழுந்த ஓலத்தைக் கேட்டு எல்லோருமே திகைத்து ஒருகணம் நின்றார்கள். என்ன ஏது என்று நிதானிப்பதற்குள் மீண்டும் ”ம்ம்மேம்ம்மே மிமிமே ம்ம்மேம்ம்மே மிமிமே” என்று ஓலமெழுந்தது. நான் நின்றிருந்த இடத்திலிருந்தே அந்த ஓலம் எழுவதை சற்று தாமதமாகவே என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இலுப்பை மரத்தடியில் அமர்ந்திருந்த சிறுவனே கைகளை நீட்டியும் தலையில் மாறிமாறி அடித்துக்கொண்டும் அந்த ஓலத்தை எழுப்பினான்.

”ம்ம்மேம்ம்மே மிமிமே ம்ம்மேம்ம்மே மிமிமே.”

அந்தக் கதறலைக் கேட்கும்போதே நெஞ்சு கனத்தது. மற்றவர்களும் அவனைக் கவனித்துவிட்டார்கள். அதற்குள் அவன் அந்த ஓலத்தை நாலைந்து முறைகளுக்கும் மேல் எழுப்பிவிட்டான். மரத்தில் முட்டிக்கொண்டான். தலையிலும் நெஞ்சிலும் மாறிமாறி அடித்துக்கொண்டான்.

“எவ்ளோ வேல கெடக்குது. யாராவது அவன நிறுத்துங்களேம்பா” என்று யாரோ ஒருவர் சொல்ல, ஜிப்பாக்காரரும் மற்றவர்களும் தயக்கத்தோடு அவனை நோக்கி “இருடா தம்பி, டேய் தம்பி இருடா, சொன்ன பேச்ச கேளுடா” என்று சொன்னபடி நெருங்கினார்கள். யாராலும் நிறுத்தமுடியாதபடி ஓங்கி ஒலித்தது அவன் ஓலம்.

“யாரும் அவன தொடாதீங்க. ஆத்தா மேல சத்தியமா சொல்றேன். யாரும் தொடாதீங்க அவன” என்று கட்டளையிடும் குரலில் சொன்னபடி திடீரென எழுந்து நின்றார் சடங்குக்காரர். அவர் முகம் அதுவரை பார்த்த முகம்போலில்லை. வேறொருவர் போல நின்றிருந்தார். அனைவரும் திகைத்து விலகினார்கள். அங்கே என்ன நடக்கிறது என எதுவும் தெரியாத நிலையிலேயே அச்சிறுவன் மீண்டும் ம்ம்மேம்ம்மே மிமிமே ம்ம்மேம்ம்மே மிமிமே என்று ஓலமிட்டான்.

எதிர்பாராத கணத்தில் சடங்குக்காரர் அவனை நோக்கி மெமெமே ம்மே என சிறுசிறு இடைவெளியுடன் அடங்கிய குரலில் சொல்லிக்கொண்டே இருந்தார்.

அதுவரை தரையில் உட்கார்ந்திருந்த சிறுவனின் கண்கள் அந்த ஓலத்தைக் கேட்டு ஒளிபெற்றன. சட்டென எழுந்து நின்றான். அவன் மீது விழி பதிந்திருக்க, சடங்குக்காரர் தொடர்ந்து மெமெமே ம்மே என பதிலுக்கு ஓலமிட்டபடியே இருந்தார். அவன் அடிமேல் அடிவைத்து அந்த ஓலத்தின் திசையில் நடந்து வந்தான். அவன் தன்னை நெருங்கிவிட்ட பிறகே தன் ஓலத்தை முற்றிலும் நிறுத்தினார் சடங்குக்காரர்

அவன் சடங்குக்காரர் நிற்பதையே பார்க்கவில்லை. அவர் முகத்தைக்கூட பார்க்கவில்லை. அவன் கவனம் முழுக்க தாத்தாவின் முகத்தின் மீதே இருந்தது. மெல்ல குனிந்து அவர் முகத்தைத் தொட்டான். ம்ம்மே என்றான். கன்னத்தை வருடினான். காதுகளை வருடினான். மூடப்பட்ட கண்களையும் புருவங்களையும் வருடினான். மீண்டும் மீண்டும் ம்ம்மே ம்ம்மே என்று சொல்லிக்கொண்டே இருந்தான். குனிந்து அவர் காது மடல்களையும் கன்னத்தையும் பிடித்து முத்தமிட்டான். அவன் உடல் நடுங்கியது. பெருமூச்சில் மார்புக்கூடு ஏறி இறங்கியது. கண்களில் தாரைதாரையாக கண்ணீர் வழிந்தது. கரகத்த குரலில் ம்மெ ம்மெ என்று விசும்பினான். மெதுவாக தாத்தாவின் தலையை கீழே வைத்துவிட்டு எழுந்து மரத்தடிக்குத் திரும்பிவந்து உட்கார்ந்தான்.

கண்கள் குளமாக அந்தக் காட்சியையே பார்த்தபடி நின்றிருந்தேன். அது அப்படியே என் நெஞ்சில் உறைந்துவிட்டது. சுற்றியிருந்தவர்கள் அனைவருமே சொல்லின்றி திகைப்பில் ஆழ்ந்திருந்தார்கள்.

“வாங்கப்பா வாங்க. இப்ப வாங்க” உடைந்த குரலில் அனைவரையும் அழைத்தார் சடங்குக்காரர். துண்டால் கண்களைத் துடைத்தபடி மேடைக்குச் சென்ற ஜிப்பாக்காரர் சடங்குக்காரரின் தோளில் ஒரு கணம் கைவைத்து தட்டிக்கொடுத்துவிட்டு கீழே இறங்கி வந்து ஒரு சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்துவிட்டார். சுற்றியிருந்த எருக்கம்புதர்களிடையில் கோழிகள் மேய்ந்தபடி இருக்க, தாழ்வான மரக்கிளையில் காக்கைகள் அமர்ந்திருந்தன.

சேற்றுப்படலத்தால் மூடப்பட்ட தகனக்கூட்டிலிருந்து புகையெழத் தொடங்கியது. எல்லோரும் விழுந்து வணங்கிவிட்டு மேடையிலிருந்து இறங்கினார்கள். “ஐயாமாருங்களே, எல்லாரும் திரும்பிப் பாக்காம போங்க, திரும்பிப் பாக்காம போங்க” என்று அறிவித்தான் பிணம் சுடும் மேடையில் இருந்தவன். அவன் கையில் நீண்ட கழியை வைத்திருந்தான்.

குழாயில் கைகால்களைக் கழுவிக்கொண்டு எல்லோரும் வெளியே சென்றார்கள். ஜிப்பாக்காரர் தன் மகனை அருகில் கூப்பிட்டு “அவன நம்ம ஊட்டுக்கு கூப்டும் போ” என்று மரத்தடியில் உட்கார்ந்திருந்த சிறுவனைச் சுட்டிக்காட்டி மெதுவான குரலில் சொன்னார். பிறகு எல்லாத் தொழிலாளிகளுக்கும் பணம் பிரித்துக்கொடுத்தார். “ஏம்பா பேண்ட் தம்பி, இங்க வா” என்று அழைத்து எங்களுக்கு உண்டான பணத்தைக் கொடுத்தார். ”இந்தா நீயும் வாங்கிக்க” என்றபடி சடங்குக்காரருக்கும் கொடுத்தார். பிணம் சுடுபவன் பக்கம் திரும்பி ”நீ என்னடா, இன்னைக்கே வாங்கிக்கறியா, நாளைக்கி வாங்கிக்கறியா?” என்று கேட்டார். “நாளைக்கே குடுங்க” என்று அவன் மேடையிலிருந்தபடியே பதில் சொன்னான்.

நாங்கள் எங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு விடைபெறுவதற்காக ஜிப்பாக்காரரிடம் வந்தோம். அவர்கள் உரையாடல் காதில் விழுந்ததால் நின்றேன்.

”அவனும் மேமேங்கறான். நீயும் மேமேங்கற. மனுஷங்க பேசிக்கற பாஷ மாதிரியே தெரியலையே. ஏதாச்சிம் பிரச்சன ஆயிடுமோன்னு கடசிவரைக்கும் நெனச்சி நடுங்கிட்டிருந்தேன் தெரிமா?. எல்லாத்தயும் ஒரு செக்கன்ட்ல தீத்து வச்சிட்ட நீ. என்ன மந்திரம்டா இது?” என்று கேட்டார் ஜிப்பாக்காரர்.

சடங்குக்காரர் “மந்திரம்லாம் ஒன்னுமில்லைங்க. அது ஆடுங்க பாஷ” என்றார். “என்ன சொல்ற நீ? ஆடுங்களுக்கு பாஷயா?” என்று அதிர்ச்சியோடு கேட்டார் ஜிப்பாக்காரர்.

“நம்ம புள்ளைங்க காணாம போயிட்டா எங்கடா போயிட்ட கொழந்தன்னு கேக்கறமாதிரி ஆடுங்ககிட்ட கேக்கறதுக்குத்தான் அந்த பாஷ. அந்த பையனுக்கு அவர் செத்துட்டாருங்கறதே ஒறைக்கலை. எங்கயோ காணாம போயிட்டாருன்னு நெனச்சிட்டிருக்கான். அதான் அந்த ஓலம். நான் இங்க இருக்கேன்னு குட்டி பதில் சொல்றமாதிரி சொன்னதுதான் நான் போட்ட ஓலம்.”

”இதெல்லாம் ஒனக்கு எப்படி தெரியும்?” ஜிப்பாக்காரர் ஆச்சரியத்தோடு சடங்குக்காரரின் முகத்தைப் பார்த்துக் கேட்டார்.

“எப்பவோ ஒரு தரம் எங்க ஆடு காணாம போன சமயத்துல தாத்தாதான் கண்டுபிடிச்சி குடுத்தாரு. அப்பதான் அவர் இந்த மாதிரி ஓலம் போட்டத பார்த்தன். அந்த பையன் ஓலத்த கேட்டதும் கடவுள் புண்ணியத்துல அது ஞாபகத்துல வந்துது.”

இருவருக்கும் வணக்கம் சொல்லி விடைபெற்றுக்கொண்டு சுடுகாட்டிலிருந்து வெளியே வந்தோம் நாங்கள். அந்த ஓலத்தை க்ளாரிநெட் வாசிப்பாக நிகழ்த்திப் பார்க்கத் தொடங்கியது என் மனம்.

கன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா

கவிஞனின் நினைவுக் கோப்புக்குள் பழுப்பேறிய சில காகிதங்கள்:

‘அலையெழும்பி புதையுண்ட கண்டம் உண்டாம், குமரி அதன் பேராம். ஒற்றைக்கால் தவசில் ஒருத்தி பாறையொன்றில் நிற்கிறாள், காலம் அவளின் முன்னே பின்னே நகர்கிறது. தெறிக்கும் அலை அவ்வப்போது அவளின் உதட்டில் படிந்து, அவளே அறிவாள், சொட்டின் தணுப்பை. பின் வழிந்து கடலில் கலக்கும். முத்தத்தைப் போல, அத்துளி கரையை ஒரு நாள் தொடும். ஒரு கிழவன், அக்கரையில் சாவின் ருசியறியாது காத்திருக்கிறான். ‘

‘பெரும்கவியின் காலில் மாட்டிய சங்கிலிகள், அவனை நிகழ்பிரபஞ்சத்தில் இழுத்துப் பிடிக்கலாம். நகராதே! என பயமுறுத்தலாம். கனவின் சஞ்சாரம், எங்கு வேண்டுமோ அழைத்து செல்லலாம். அங்கே தடை போட யாருமில்லை. அவன் மாத்திரமே. கண்முன் விரிந்த பரந்து கடலும். அவன் நானாய் நின்றேன். அலை ஒன்றை நோக்கி ஓடினேன், அங்கே கண்டேன் வெள்ளை ஜிப்பாவும், கசங்கிய வேட்டியும், ஒட்ட சவரம் செய்த முகமுமாய் ஒருத்தர், சிரித்தபடி ‘இதானய்யா, கபாடபுரம்’ என்றார்.’

‘கடலாய் நிற்கிறாள் அவள், கைகள் காற்றிலே அசைக்கிறாள். ஒரே ஓசையால் இசைத்துணுக்கு ஒன்று காற்றிலே அலைந்து, ஓவென அதே ஒலியுடன் கரையை தவழுகிறது, வெம்மையான அணைப்பு. கடலாய் நிற்கிறாள், அக்கன்னி. மீண்டும் பிறக்கிறாள், இறக்கவே. எதன் கணம் நிகழ்கிறதோ! இவ்விளையாட்டு. நீலப்பறவை ஒன்றை நான் அறிவேன். உயர மட்டுமே அலையும். அதன் நிழல் அவளின் மேலே வியாபித்திருக்கும். சிலநாள் கரும்பறவை, சாம்பல் பறவை மேனியின் மேலே பறக்கும். நிழலை அள்ளி உண்பவள் அவள். கடலே, எல்லையற்றது. உருவகித்தேன் உன்னாலே. கனவே, நினைவே எல்லாம் கடலே. கரையெல்லாம் பாதச்சுவடு, எல்லாமுமே நான்தான். வெறிக்கிறேன், கருவிழியை பிடுங்கி உன்னுள் எறிகிறேன். வாறி எடுத்துக்கொள். உன்வழியே என்னைப் பார்க்க பிரயாசையில் ஒரு குழந்தையின் முயற்சி அவ்வளவே. ‘

‘அக்காள், கிழவியின் கனவில் வந்தாராம் கோனார். கையிலே இளம் ஆட்டுக்குட்டி. நிகழ்வை கனவு தீர்மானித்தது. நான் உன்னாலே கவிஞன் ஆனேன் தெரியுமா? தெரியுமா! நீயே நான். உன் பின்னே அலையும் நாய்குட்டி. அக்காக்கள் சொன்னது உண்மையே. எதுவுமே நம் கையில் இல்லையா? முடிவுகள் யாரோடது. உன்னுடைய பாதை, யாராலோ தீர்மானிக்கப்படுகிறது. நீ சகிக்கிறாய். உன் ஈரக் கூந்தல், பூக்களின் மணம் நுகர தடைப் போட நீ யார். நீ பெண்ணென்றதாலே சகிக்கிறாய். பெண்மையின் வரம் அது. நான் பாவப்பட்ட ஆண், உள்ளுக்குள் குமைகிறேன். உன்னையும், என் கடலையும் விட்டு தூரத் தேசம் சென்றேன். எதிலிருந்து விடுபட, என் முட்டாள்தனம். நீதானே நான்.’

‘உன் பார்வைகளின் தடயத்தை விட்டுச்செல்ல நீ எக்காலமும் மறப்பதில்லை. என்றாவது நான் அதை கவனிப்பேன் என. பெண்ணே! எப்படி புரியவைப்பேன். ஆணின் சிறிய அறையால் ஆன இருதயத்தை. அங்கே நீயாக நுழைய முயற்சித்தாய். நானே திணித்திருந்தால் உன் திருமண அட்டையை வாங்கியிருக்க மாட்டேன். நானே சமைத்த விதி இது விஜிலா’

‘புகைப்படத்தில் இன்றுமே கன்னியாய் நிற்கிறாள். என்னுள்ளே ஆற்றாமையாய் பெருகும் நீர்த்துளி, தணுப்பை மறந்து எரிகுழம்பாய் கொதிக்கிறது. மரியே! நின்னைச் சந்தித்தது யாதொரு குற்றம். மரியபுஷ்பா. உன் பார்வையே தவிர்க்கவே தினமும் நிந்திக்கிறேன். தெரியுமா? அது மகாகாயம்.’

‘சாரா. காதலுக்கு மறுபெயர் சூட்ட வாய்ப்பு கிடைத்தால், உன் பெயரையே சூட்டுவேன். உன் கொலுசும், வளையும் எழுப்பும் ஒலி ஒரு கொடும்ஆயுதம் என அறிவாயா? நீ உதிர்க்கும் வார்த்தைகளின் கனம் அறிவாயா? பூமியின் கனம். ஒப்புக்கொள், என் மெலிந்த இதயம் அதை தாங்கும் சக்தி கொண்டதா? விட்டொழி, உன் தடுக்கத்தை. அதானே, நீ கண்களால் என்னிடம் கூற விழைவது. ஏன் அவ்விரவு, அதில் நீயும் நானும் கலக்க வேண்டும். உன் உதடு, உப்புக்கரித்தது. கடலின் சுவை நான் அறிவேன். உன் கூந்தல், உடல், முலை, அக்குள், யோனி எல்லாமுமே உப்பு. கடலின் முத்தம் உப்புக்கரிக்குமா? என் கன்னியே. சப்பிய குடம் நான், எனக்கு உன் இடையில் இடமில்லையா?’

‘அத்தை, அறியாத முகத்திற்கு அழகு அதிகம். நம் ஆழ்மனதில் அழகிற்கு என்ன இலக்கணமோ! அதையல்லவா நாம் பொருத்திக்கொள்கிறோம். பாட்டியறிவாள். அவளுக்கு மகளுமுண்டு, அதே முகம். கனவுகளில் அவளோடு நான் பல அத்தியாயங்கள் வாழ்ந்திருக்கிறேன். சிறுமியாய், குமரியாய் எல்லாமுமே என்னுள் பரவியிருக்கிறது. அவளின் மணம் கூட அறிவேன். தாழம்பூவின் மணம்.’

‘கன்னி மேரியே! எதன் பொருட்டு நீ மறைத்தாய் உன் கர்ப்பத்தை. யார் அதன் தந்தை. இதல்லவா முதல். கடவுளை பலியாக்கி, அவனின் குழந்தையாக்கி. நீ கன்னியாகி! ஏன் பெண்ணே. பெரும்பிழை’

‘கடலில் மணல் குவிவதும் நல்லது, சிலநேரம் நீட்டித்து காலம் நீள்கிறதே. அவளோடு நான் நடக்கும் போதெல்லாம், நீ மகிழ்ந்தாயா? அலையற்று கிடப்பாய் அந்நேரம். நீயும் அறிவாயா? அவள் கன்னியென்று. நீயும் கன்னிதானே! என் கடலே. கிழவன் ஒருநாள் நானாய் இருப்பேன். அன்றாவது முத்தம் இடுவாயா உன் கரைக்கு’

வழிப்போக்கனின் சில குறிப்புகள்:

பிரான்சிஸ் சந்தனப் பாண்டி, சந்தையொன்றில் சந்தித்தேன். உயிரை பிய்த்து, பிரபஞ்ச சமுத்திரத்தில் கலந்துகொண்டிருந்த ஒரு ஆத்துமாவை அவன் கையிலே வைத்திருந்தான். மெசியாவின் கருணையை அறியாத சாதாரண மனிதன், அவனை அழைத்து சென்றான் எங்கோ. மணப்பாட்டில் சந்தித்தேன் ஒருமுறை, அந்தோணியார் குகை முன்னே, சப்பணங்கால் போட்டமர்ந்து கடலோடு பேசிக்கொண்டிருந்தான். எனக்கு அதிகப்பிரசங்கித்தனம், எட்டிப் பார்க்க கன்னி வெட்கத்தோடு கடலில் அவளின் பரியில் ஏறிப் புறப்பட்டு விட்டாள். மெல்லிய புன்னகையோடு என்னைக் கடந்து சென்றான். மற்றொரு நாள் மணப்பாட்டில் இவனோடு, அழகான பெண்ணொருத்தி கடற்கரையில் பாதம் புதைய நடந்தாள், யார் என்றேன், அக்கா என்றான். பிழைத்தேன். மீண்டும், சுலோச்சன முதலியார் பாலத்தில் சந்தித்தேன். பலநாள் பரிச்சயமோ, மெல்லிய புன்னகை உதிர்த்தான். அது தாமிரபரணியில் கலந்தது. விட்ட புன்னகையை தேடி, ஆற்றில் பார்த்தேன், விட்டான் கெட்டான்.

ஏதோ அவனுள் புகுந்துள்ளது என ஊரார் கேட்டு, நானும் சென்றேன். ஏலான ஆசாரி, சங்கிலிக்கு அளவு எடுத்துக்கொண்டிருந்தார். அவனின் பம்பரம், ஆணி அடிக்கையிலே உடையும் போதும் நான் அங்கிருந்தேன். அவன் அறிவான் எல்லாமுமே, அவன்தானே அழைத்துச்சென்றான். அவன் சொற்களின், கனவுகளின் பித்தன், ஆகவே கவிஞன். அவன் மாத்திரம் தரிசிக்கும் கடல் உண்டு. அங்கே மீனும், பால் நண்டும் உண்டு. கரையிலே குடிசை உண்டு, அங்கே கள்ளுடன் கிழவனும் உண்டு. பாதம் மீன்களாகும் பாதை ஒருமுறை அவன் சொன்னான்.

வழிப்போக்கனின் கைகளில் புத்தகம். கண்களை மூடி சொற்களின், கனவுகளின் சமுத்திரத்தில் ஆசைத் தீர நீந்தினேன். கூடவே பிரான்சிஸ் கிருபா எனும் தூய ஆத்துமாவின் எழுத்தில் கரைந்தேன்.

ஒரு புத்தகம் முழுக்க கனவின் சாயல். ஏன் என்றால் ‘கன்னி’ கவிஞனின் நாவல். வழிப்போக்கன் நான் ஈரிரு நாள் வாழ்ந்தது அங்கேயே. நன்றி கூறுவேன் அவனுக்கு, அவன் ஜெ பிரான்சிஸ் கிருபா .சொற்களின் கனம், உணர்ச்சிகளின் குவியல், எது சரி? தவறு? என்பதை நிர்ணயிக்க நாம் யார்?.

பாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்

பாரிஸ் என்னும் கனவின் நிஜத்தை கண்டு விரும்பத் தொடங்கி நிழல் மட்டுமே வசமாகி இருக்கும் சமூக கைவல்ய நிலையை உரசி செல்லும் புதினம் “பாரிஸ்”.
பாரிஸ் என்னும் கனவினுள் நிஜம் உண்டு, பாவனை உண்டு, அற்பத்தனம் உண்டு,லௌகீகம் உண்டு, கனவின் லட்சியமும் உண்டு,அக்கனவு குறித்த அலட்சியமும் உண்டு.

கனவை நினைவாக்க எடுக்கப்படும் பிரயத்தனங்கள் ஏற்படுத்தும் பதற்றம் நாவலின் அடி நாதமாக இருக்கிறது. இந்த பிரயத்தனங்கள் குறித்து வாசிக்கையில் வாசகனுக்கு அசூயையும் கோபாவேசமும் தோன்ற வாய்ப்பிருக்கிறது, அசூயையும் கோபத்தையும் தூண்டும் வாசகனின் தார்மீகத்தை நம்பியே இந்த புதினம் எழுதப்பட்டிருக்கிறது. இவற்றைத் தாண்டி நாவல் காட்டும் யதார்த்தம் வாசகனின் தார்மீகம் எல்லா இடங்களிலும் செல்லுபடியாகுமா  என்ற கேள்வியை முன் வைக்கிறது. யதார்த்தம் என்பது லௌகீகம் முன் பல்லிளித்து நிற்கும் தார்மீகம் தான்  என்றும் கூறப்பார்க்கிறது.

கனவின் நியாயம் என்று ஒருவர் வகுக்க இயலாது. அக்கனவினை அடைய ஒருவன் மேற்கொள்ளும் முயற்சிகளில் நியாய அநியாயங்கள் , பாவனைகள், சோம்பல்கள் , முட்டாள்தனங்கள் இருக்க வாய்ப்புண்டு , கனவுகளை அடைய விடலைத்தனமான முயற்சிகள் தொடங்கி காரியார்த்தமான செயல்கள் வரை மேற்கொண்டு கனவுகளை துரத்திய படியே
யதார்த்தத்தை வந்தடையும் பல்வேறு கதைமாந்தர்கள் வழி புதுச்சேரியின் தெருக்களில் வாசகன் நடை பயில்கிறான்.

நாவலின் வடிவத் தேர்வு அருமை, குறிப்பாக நிகழ்வுகளையும் முன் நிகழ்ச்சிகளையும் கோர்த்திருக்கும் கொக்கி போன்ற அந்த கண்ணி  அமைப்பு வாசிப்பை சுவாரஸ்யமானத்தாக்குகிறது.

செட்டில் ஆவது – வாழக்கையை துவங்கும் முன்னரே செட்டில் ஆகத் துடிக்கும் , பொருளாதார தன்னிறைவு அடைய முயலும், தங்கள் சூழலை முற்றும் துறந்து அந்நிய நிலத்தில் தடம் பதிக்க நினைக்கும் இளம் தலைமுறையினர் காட்டும் பதற்றம் நாவலின் ஜீவநாடி. இந்த பதற்றம் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி பரவலாக அமையப்பெற்றுள்ளது,

ரபி ,கிறிஸ்டோ மற்றும் அசோக் பொருளாதாரத்தின் இரு எல்லையில் இருப்பவர்கள், இம்மூவரும் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் வேவ்வேறானவை.
ஆனால் மூவருமே விளிம்பு நிலையில் இருப்பவர்கள், ரபியின் பொருட்கனவு இன்னொருவனின் லௌகீதத்தின் முன் தோற்கிறது, அசோக் யதார்த்தத்தின் முன் தோற்கிறான், கிறிஸ்டோ அன்பை கைவிட்ட செல்வத்தின் எல்லையின்மை முன் தோற்கிறான்.

கலாச்சார ரீதியாக தன்னை அயல் குடிமகனாக காட்டிக்கொள்ள முயலும் அசோக் இன் அசல் பிரச்னை பொருளாதாரம் தொடர்பானதாக இருக்கிறது, பொருளாதார நிறைவு பெற்ற ரபி யின் ஆசை அயல் நாடு போவதேனினும் அவன் எதிர்பார விதமாக சந்தித்த சிக்கல் உறவு ரீதியானது, அன்பை அடைய முயலும் கிறிஸ்டோ வின் அசல் பிரச்சினை அவனது குடும்ப அந்தஸ்து குறித்தது. பதற்றத்தின் மூல காரணங்களாக நாம் நாவல் வழி கண்டுகொள்வது , இந்திய தேசம் குறித்த கலாச்சார தாழ்வுணர்ச்சி , அயல் நாட்டு மோகம், தனி மனிதனின் பொருளாதார சுமை, பணம் சேர்ப்பதின் எல்லையின்மை குறித்த உணர்வின்மை.

கிறிஸ்டோ விரும்பும் கலாச்சார சுதந்திரம் அசோக்கை சுற்றி அமைந்திருக்க வாய்ப்பிருக்கிறது, டைலர் என்னும் கதாப்பாத்திரம் வழி நாம் உணர்வது இதையே , உறவு தொடர்பான சிக்கல் பெரிதும் அற்ற பாரிஸ் ஒத்த கலாசார சூழல் நம் நாட்டின் பொருளாதாரத்தில் தாழ்ந்த விளிம்பு நிலை மனிதர்களிடம் உள்ளதோ ? அதே நேரத்தில் பொருள் சேர்த்தலுக்கும் உறவு சிக்கல்களுக்குமான பொருந்தாத முடிச்சு குறித்து  ரபி அறிகிறானோ ? மிதமிஞ்சிய செல்வத்தின் மலட்டுத் தன்மை கிறிஸ்டோவை தவிக்க விடுகிறதோ ? ரபியின் பொருள் x காதல் என்பதான இரட்டை நிலை கிறிஸ்டோவின் அன்பிற்கும் அசோக்கின் பொருளிற்கும் இடையே வைக்கத்தக்கது.

சமகால பொருளாதார ஏற்றத் தாழ்வின் குறியீடு போல் அமைந்துள்ளது நாவலின்  கடைசிப் பகுதி, “பாரிஸ்” என்னும் நிழலின் தன்மையை மூவரும் அறிந்து கொள்கின்றனர். அசோக், கிறிஸ்டோ,  ரபி மூவரும் கண்ட வெவ்வேறான அதே கனவினை விடுத்து எதேச்சையின் கரம் பற்றி தங்கள் பயணத்தை துவங்குகின்றனர்.
செல்வம் எனும் இந்தப் பேயுடன் நாம் வரவேற்பறையில் உரையாடி கொண்டிருக்கையில், நம் உள்ளறைகளிலிருந்து அன்பு விடைப்பெற்றுக் கொண்டே இருக்கிறது.

“பாரிஸ் “அரி சங்கர் எழுதியுள்ள முதல் நாவல். பதிலடி என்னும் சிறுகதை தொகுப்பு வெளி வந்துள்ளது