Author: பதாகை

கனவுக்குள் புகுந்த சிங்கம் – வெ கணேஷ் சிறுகதை

ஒரு நாள் என் கனவுக்குள் சிங்கமொன்று நுழைந்துவிட்டது. சுதந்திரமாக உலவிவந்த வனாந்தரப் பிரதேசத்திலிருந்து கடத்திவரப்பட்டு பின்னர் விலங்குகள் சரணாலயத்துக்குள்ளோ அல்லது சர்க்கஸில் கேளிக்கை ஜந்துவாகவோ அடைக்கப்பட்டுவிட்ட கோபம் அதனுள் பல நாட்களாகக் கனன்று எப்படியோ என் கனவுக்குள் நுழைந்து தப்பிக்க முயன்றது. சிங்கத்தின் கோபம் பற்றி நீ எப்படி அறிவாய் என்று வாசகர்கள் யாரேனும் கேள்வி கேட்கலாம். நம்பிக்கையின்மையை துறந்து என் கனவுக்குள் சிங்கம் நுழைந்ததை முழுதாக நம்பும் அவர்கள் தர்க்கரீதியாக “சிங்கத்தின் சீற்றம் இயற்கையானது” என்ற காரணத்தைத் தவிர சிங்கம் கோபமாயிருப்பதற்கான வேறெந்த காரணத்தையும் நம்ப மாட்டார்கள்.

உண்மையை‌ முதலிலேயே சொல்லி விடுகிறேன்! கனவில் நிஜமாகவே சிங்கம் வந்ததா என்பதை நான் பார்க்கவில்லை. இல்லை ஆரம்பத்தில் இருந்து சொன்னால் சரியாக புரியும்! ஒரு நாள் என் கனவில் முக பரிச்சயம் இல்லாத பெயர் அறியாத சிலருடன் ஒரு மேடான பகுதியில் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன்.நின்றிருந்தது யாருடன் என்று விழிப்பு நிலையில் யோசித்துப் பார்க்கிறேன். அவர்கள் என் நண்பர்களா? அல்லது வெறும் பரிச்சயங்களா? அவர்களின் முகங்கள் ஞாபகமில்லை. கனவுகளில் வரும் முகங்கள் பொதுவாக அதிகமும் ஞாபகத்தில் இருப்பதில்லை. சிங்கம் நுழைந்த கனவில் நான் யாருடன் நிற்கிறேன் என்பது தெரியாவிட்டாலும் அவர்களுடன் மகிழ்வாக பேசிக் கொண்டிருக்கிறேன். கனவில் உரையாடும் காட்சி மௌனப்படம் போலவே நகர்கிறது. இது திரைப்படம் எனில் இயக்குனர் அங்கு பேசி நின்றிருந்த காட்சியை நல்ல இசையால் நிரப்பியிருப்பார்.

நாங்கள் நின்றிருந்த சில தப்படிகள் பின்னால் குறுக்கலாக ஒரு சரிவு. ஒரு வட்டமாக நின்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்த எங்களுக்குப் பின்னால் சரிவில் சிங்கமொன்று ஓடிப் போனதாக வட்டத்தில் நின்றிருந்த ஒருவர் சொல்லவும் வட்டம் ஒரு கணத்தில் கலைந்து போனது. அவர் சொன்னபடி பார்த்தால் சிங்கம் ஓடிப்போன சமயத்தில் அது என் முதுகுக்கு சில தப்படிகள் பின்னால் குறுக்காக ஓடியிருக்க வேண்டும். அதன் கோபத்தை ஆற்றிக் கொள்ள ஏதுவாக நின்று கொண்டிருந்த எங்களை அது ஏன் பார்க்கவில்லை என்ற கேள்விக்கு ஒரு விளக்கமும் இல்லை. சொல்லப்போனால் அதற்குப் பிறகு நாங்கள் அப்போது செய்த காரியத்தை நாங்கள் தர்க்க ரீதியாக விளக்கவே முடியாது. சிங்கம் ஓடின திசையிலேயே நாங்கள் தப்புவதற்காக ஓடினோம். சரிவுப்பாதையிலிருந்து பாதை வலப்புறமாகச் சென்றது. பாதையில் சிங்கம் என் பார்வையில் சிங்கம் படவில்லை. பாதையின் போக்கில் சிங்கம் வளைந்து சென்றிருக்கலாம். சிங்கம் சென்றிருக்கக் கூடிய பாதைக்கு எதிர்ப்பாதையில் அல்லவா நான் ஓடியிருக்க வேண்டும்? என்னுடன் இருந்தவர்களும் எனக்கு பின்னாலேயே ஓடி வந்தார்கள். தர்க்க ஒழுங்கு பற்றி கவலைப்பட அது சமயமில்லை. ஓடி ஒளிந்துகொள்வது தான் எங்கள் உடனடித் தேவையாய் இருந்தது.

கனவில் வரும் சொல்லாடலை யார் நிகழ்த்துகிறார்கள்? கனவைக் காண்பவரே கனவின் சம்பவங்களை பாத்திரங்களை கட்டுப்படுத்தும் கனவுகளை Lucid Dream என்று மனோதத்துவாசிரியர்கள் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட புத்தம்புது பிரிண்ட் திரைப்படத்தை காண்பது போன்று தெளிவாக விரிந்த இந்தக் கனவுக் காட்சியை Lucid Dream என்று சொல்லலாமோ?

ஐம்பது அடி ஓடியிருப்போம். சரிவு முடிந்து பாதை தட்டையானபோது வலப்பக்கம் ஒரு கதவு தென்பட்டது. கதவை லேசாக தொட்டதும் திறந்து கொண்டது. அதற்குள் முதலில் நான் நுழைந்தேன். என் பின்னால் ஓடி வந்தவர்களும் அந்த அறைக்குள் ஒருவர்பின் ஒருவராக நுழைந்து கொண்டார்கள். உள்ளே நான்கைந்து க்யூபிக்கில்-களில் கம்பியூட்டர் திரைகளைப் பார்த்துக் கொண்டு சில பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். சிங்கம் ஓடிய விஷயத்தையோ அதற்குப் பயந்து அது ஓடிய பாதையிலேயே ஓடிய எங்களின் முட்டாள்தனத்தையோ அறியாதவர்களாக அமைதியுடன் பதற்றமின்றி இருந்தார்கள். அறைக்கு வெளியே நிகழ்ந்து கொண்டிருந்த இயல்பான வெளிச்ச-இருள் மாற்றங்களின் பாதிப்பின்றி ஒளி விளக்குகளின் ஒரே சீரான செயற்கை வெளிச்சத்தில் எந்நேரமும் மூழ்கியிருக்கும் அறை போலும் அது. உள்ளே நுழைந்த எங்களின் பதற்றம் அந்த அறையில் ஏற்கனவே இருந்தவர்களின் முகபாவங்களில் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. எங்களைப் பார்த்து அளவெடுத்தது போன்று புன்னகைத்தார்கள். எங்களின் அதிரடி உள் நுழைவு அவர்களை தொந்தரவுபடுத்தியதாக அவர்கள் காட்டிக் கொள்ளவில்லை. நாங்கள் ஏன் உள்ளே நுழைந்தோம்? வெளியே என்ன நடக்கிறது? என்ற விவரங்களை அறிந்து கொள்வதில் அவர்கள் ஆர்வங்காட்டவில்லை.

நான் எங்கிருக்கிறேன்? இந்த அலுவலகம் இங்கு ஏன் இருக்கிறது? இந்த அலுவலகத்திலிருந்தா சிங்கம் தப்பித்து ஓடியது? இல்லை…இருக்காது…அலுவலகத்துக்கு பின்புறம்..அல்லது முன்புறம் ஜூ உள்ளதோ…அங்கிருந்துதான் சிங்கம் தப்பியிருக்குமா? இல்லையேல் இந்த அறைக்கு முன்புறத்தில் சர்க்கஸ் கம்பெனி ஏதாவது கூடாரமிட்டிருக்குமா? ஜூவிலிருந்தோ சர்க்கஸ் கூடாரத்திலிருந்தோ சிங்கம் வெளியே வந்திருக்கலாம். ஜூவும் அலுவலகமும் அல்லது சர்க்கஸும் அலுவலகமும் ஒரே வளாகத்தில் உள்ளதோ….

அதுவரை அந்தக் கனவு ஒரு மௌனக்கனவாக இருந்தது. “சிங்கம் வெளியே துரத்துது..சத்தம் கேட்கலியா?” என்று என்னுடன் ஓடி வந்தவர்களில் ஒருவன் அலுவலகத்திலிருப்பவர்களிடம் கேட்கிறான். அந்தப் புள்ளியில் அந்தக் கனவு “”டாக்கி”யானது. பதில் எதுவும் கிடைத்ததாகத் தெரியவில்லை.

வெளியிலிருந்து வரும் சத்தங்களில் என் செவிகள் பதிந்திருந்தன. ஆட்கள் பரபரப்பாக ஓடும் சத்தம் கேட்கிறது. அலுவலக அறையின் பின் புறத்திலிருந்து சிங்கம் பிளிரும் சத்தம் கேட்கிறது. நாங்கள் நுழைந்த மெயின் கதவுக்கு நேரெதிராக இன்னொரு கதவு தெரிந்தது. அது அலுவலகத்தின் இன்னொரு வெளிப்புறத்தில் திறக்கும் போல இருந்தது. நாங்கள் முதலில் நுழைந்த கதவு போல் இல்லாமல் இந்த கதவு குறுகலாக திறந்தது. நான் லேசாக அந்தக் கதவைத் திறந்து வெளியே பார்க்க எத்தனித்தேன். சின்னதாக திறந்து வெளியே நோக்கினேன். ஒரு சின்ன பையன் தலைப்பாகையுடன் கதவருகே நின்றிருந்தான். அவன் செக்யூரிட்டியாக இருப்பான் என்று நினைத்தேன். சீருடை அணிந்திருக்கவில்லை. செக்யூரிட்டியாக இருக்க முடியாது. அவன் இடது கையில் வலையைப் பிடித்திருந்தான். இன்னொரு கையில் ஒரு மூங்கிற்கழி இருந்தது. அந்தக் கழியினால் தரையை தட்டியபடி நின்றிருந்தான். அறைக்குள்ளிருந்து வெளியே ஜாக்கிரதையாக தலையை வெளியே நீட்டிய எனக்கு அவனைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை. “உள்ளே போங்க…பயப்படாதீங்க…சிங்கத்தைப் புடிச்சிடுவோம்” என்று தன்னம்பிக்கையுடன் சொன்னான். எங்களை ஆசுவாசப்படுத்த விரும்பினான் போல. கழியை இன்னுமொருமுறை தரையில் தட்டினான். நான் சின்னக் கதவை அடைத்துவிட்டு அலுவலகவாசிகள் வேலை செய்து கொண்டிருந்த முக்கிய அறைக்கு திரும்பினேன். என்னுடன் கூட ஓடி வந்தவர்கள் ஓய்வின்றி உலாத்திக் கொண்டிருந்தார்கள். அலுவலக அறையில் ஏற்கனவே இருந்தவர்களோ இமை கொட்டாமல் கணிணித் திரையைப் பார்த்தபடி அசைவின்றி உட்கார்ந்திருந்தார்கள்.

வெளியே சத்தம் குறைந்திருந்தது போன்று தோன்றியது. ஒருவர் பின் ஒருவராக வெளியே செல்லலாம் என்று முடிவானது. எந்த கதவின் வழியாக நுழைந்தோமோ அந்த கதவை திறப்பதாக திட்டம். திறப்பதற்கு முன் மீண்டுமொரு முறை கதவின் மேல் காதை வைத்து கேட்டேன். ஒரு சத்தமும் இல்லை. ஓரிரு நிமிடங்கள் என் காது கதவில் பதிந்தே இருந்தது. சிங்கத்தின் பிளிறல், அது ஓடும் சத்தம், கழி தரையில் தட்டப்படும் ஓசை எதுவும் கேட்கவில்லை. ஹ்ம்ம்…எதுவும் ஆகாது…சிங்கத்தைப் பிடித்திருப்பார்கள்…கூண்டில் அடைத்திருப்பார்கள்…கதவைத் திறந்து முதலடியைக் கவனமாக அறைக்கு வெளியே வைத்தேன்.

+++++

என் கைத்தொலைபேசி பாடியது…நான்கு மணிக்கு அலார்ம் வைத்திருந்தேன். இல்லை…அலார்ம் இல்லை…இந்நேரத்தில் யார் அழைக்கிறார்கள்? போர்வையை விலக்கிவிட்டு எழுந்து மேசையில் இருந்த கைத்தொலைபேசியை எடுத்தேன். யாரோ புரியாத மொழியில் ஏதோ கேட்டார்கள். இரண்டு முறை “யார் நீங்கள்” என்று கேட்டேன். அழைத்தவருக்கு என் இந்தி புரியவில்லை. அவர் என்ன மொழி பேசினார் என்பது எனக்கு தெரியவில்லை. அழைப்பை துண்டித்துவிட்டு நேரம் பார்த்தேன். மூன்றரை ஆகியிருந்தது. படுக்கைக்குத் திரும்பினேன்

 

+++++

//மன நல சிகிச்சையில் கனவுகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தலை உத்தியாக முதன்முதலில் பயன்படுத்தியவர் சிக்மண்ட் ப்ராய்ட். அவருடைய சீடர் கார்ல் யங்-கும் கனவுகளின் பகுப்பாய்வை மன நல மருத்துவ உத்தியாக பயன்படுத்தினார். கனவுகளை இருவரும் வெவ்வேறு விதத்தில் அணுகினர். ப்ராய்டு கனவுகளை ஆழ்மனத்தில் அடக்கி வைக்கப்பட்ட ஆசைகளின் இயக்கிகளாக அணுகினார். யங் அதற்கு எதிரான அணுகுமுறையைக் கொண்டிருந்தார். தீர்வை நோக்கிய படைப்பாற்றலின் வெளிப்பாடாக கனவுகளை அணுகினார். கனவு காண்பவனுடன் ஒத்துப் போகாதவற்றைக் கூட ஆழ்மனத்தில் புதைந்திருக்கும் ஆசைகளின் இயக்கிகள் என ப்ராய்டு பகுப்பதை யங் விமர்சித்தார். கனவு காண்பவனுடன் ஒத்துப் போனாலொழிய கனவுப் பகுப்பாய்வு எந்த வித பயனையும் தராது என்றார் யங்.//

டாக்டர் முகர்ஜியின் சேம்பருக்கு முன்னர் காத்துக்கிடந்த போது மைய மேசையில் வைக்கப்பட்டிருந்த இன்றைய மனோதத்துவம் இதழில் ஒரு கட்டுரையை படித்துக் கொண்டிருந்தேன். கட்டுரையை முடிப்பதற்குள் டாக்டர் முகர்ஜி அறையை விட்டு வெளியே வந்து உள்ளே வருமாறு என்னைப் பணித்தார்.

பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மன நல ஆலோசனைக்காக டாக்டர் முகர்ஜியை ஆறு மாதங்களாக சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

“உலகின் மிகவும் பழமையான காப்பியம் – கில்கமேஷ் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா?” என்று கேட்டார். அதற்கு நான் பதில் தருவேன் என்று அவர் எதிர்பார்க்கவில்லை போலும். இடைவெளிவிடாமல் கில்கமேஷ் காவியத்தைப் பற்றி அவரே சிறுகுறிப்பு வரைந்தார். “இறவா வரத்தை நாடிச் செல்லும் அரச குமாரன் கில் கமேஷ். அதற்கான அவனது முயற்சிகளை புராணக்கதை வடிவில் விவரிக்கும் காப்பியம் அது. கில் கமேஷுக்கு காவியம் நெடுக பல கனவுகள் வருகின்றன. காப்பியத்தின் போக்கில் கனவுகள் முன் உணர்வுக் கருவிகளாக அவனுக்கு உதவுகின்றன. பாபிலோனியர்களுக்கும் சரி எகிப்தியர்களுக்கும் சரி கனவுகள் என்பன மனிதர்களை தெய்வங்கள் தொடர்பு கொள்ளும் வழி என்று கருதினர்.”

பொதுவாக எப்போதும் என்னை அதிகமாக பேசச் சொல்லும் முகர்ஜி இன்று பேசும் மூடில் இருக்கிறார். அவர் பேச்சில் கவனம் செலுத்தாமல் என் எண்ணம் அலை பாய்ந்தது. மன அழுத்தம் காரணமான பதற்றம் மற்றும் அதீத கவலை என அலை பாயும் மனதுடன் ஆறு மாதம் முன்னர் டாக்டர் முகர்ஜியின் உதவியை நாடினேன். ஆரம்பத்தில் மாத்திரைகள் சாப்பிடச் சொன்னார். மாத்திரைகள் நரம்புகளில் செரடோனின் ரசாயனத்தை சரியாக சுரக்கச் செய்யும் அல்லது அதீதமாக சுரக்கும் செரடோனினை கட்டுப்படுத்தும். மாத்திரைகளுடன் கூடவே உளவியல் ஆலோசனையும் இணையாகச் செல்ல வேண்டும். மன அழுத்தத்திற்கான புறக்காரணிகளைப் பற்றி விரிவாகப் பேசுதல், பிரக்ஞை வெளிச்சம் படாத அடக்கி வைக்கப்பட்ட உணர்வு நிலைகளின் மேல் கருணையுடன் கூடிய கவனத்தைப் பாய்ச்சுதல், சுய கருணையுடன் அதீத எதிர்பார்ப்புகளின் எடையைக் குறைத்தல், ஒப்பீடு, கழிவிரக்கம் என எண்ணத்தில் படிந்த ஓட்டடைகளை விலக்குதல் – பல இலக்குகளை மாதம் இரு முறை நடக்கும் சந்திப்புகளில் முகர்ஜியின் உதவியால் அடைய முயன்றிருக்கிறேன். ஆனால் சில வாரங்களாக லேசான குற்றவுணர்ச்சி. எத்தனை முன்னேற்றம் கண்டிருக்கிறேன் என்பதை புறவயமாக அளவிடமுடியாத் தன்மை என்னை சற்று தொந்தரவு செய்கிறது. பதற்றம் குறைந்திருக்கிறது ; அலுவலகத்தில் அதிகாரியின் படுத்தல்களை என் முதுகுக்குப் பின் அவர் செய்யும் சதிகளை அதிக உணர்ச்சிக் கலப்பு இல்லாமல் எதிர்கொள்ளும் வித்தையில் ஓரளவு தேர்ச்சி பெற்று வருகிறேன். “இதெல்லாம் ஏன் நடக்கிறது?” என்ற கேள்வி சிந்தனையில் எழுந்து என்னை அவ்வப்போது நிலைகொள்ளாமல் வைக்கிறது. இதை மட்டும் சற்று சரி செய்து விட்டால் அமைதி திரும்பிவிடும். தொடர்ந்து இன்னும் எத்தனை மாதங்கள் இப்படி உளவியல் மருத்துவரை சார்ந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் சங்கடப் படுத்திக் கொண்டிருந்தது. முகர்ஜியின் திறமை மீதான சந்தேகத்தின்பாற்பட்டதில்லை இது. மன நல மருத்துவரை அணுகியது நான்தான். அவரிடம் செல்வதை எப்போது நிறுத்த வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். அதே வேளையில் முகர்ஜியின் அயராத முயற்சிகள் உரிய, பொருத்தமான முடிவை எய்தும் வரை பொறுமையாக அவருடன் ஒத்துழைத்தலும் மிக அவசியம் என்றும் நான் நினைக்கிறேன். சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்ததா என்பதை என் உள் அறிதல் வாயிலாக மட்டுமே உணர்தல் சாத்தியம் என்று முகர்ஜி ஆரம்ப சந்திப்புகளில் சொல்லியிருக்கிறார்.

ஆறு மாத சிகிச்சைக்குப் பிறகு முகர்ஜி புது வித நுட்பத்தை உபயோகிக்க விரும்பினார். சமீபத்தில் நான் கண்ட கனவைப் பற்றி ஒரு குறிப்பு எழுதிக் கொண்டு வருமாறு சென்ற சந்திப்பில் டாக்டர் முகர்ஜி சொல்லியிருந்தார்.

சிங்கக் கனவைப் பற்றி எத்தனை தகவல்கள் ஞாபகத்தில் இருந்தனவோ அத்தனை தகவல்களையும் என் குறிப்பில் சேர்த்திருந்தேன்.

கனவுப் பகுப்பாய்வு இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மனோ தத்துவ மருத்துவர்களால் பரவலாக பயன் படுத்தப்பட்டது. இப்போதெல்லாம் மனோ தத்துவ சிகிச்சைக் கருவியாக கனவுப்பகுப்பாய்வு அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக இந்தியாவில். ஆனால், அயல் நாடுகளில் ‘psycho-analysis’ மற்றும் ‘gestalt psychology’ என்னும் மனோதத்துவப் பிரிவுகளில் கனவுகளின் பகுப்பாய்வு பரவலாக உபயோகத்தில் உள்ளது.

“சிங்கக் கனவு சுவாரஸ்யமாயிருக்கிறது. நீங்கள் பகுதி நேர எழுத்தாளர் என்பதால் சுவையாக அதை பதிவு செய்திருக்கிறீர்கள். இந்தக் கனவில் உம்முடைய இப்போதைய மன நிலைக்கான விடை இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா?”

எப்படி துவங்குவது என்று தெரியவில்லை. சில நொடிகள் தயங்கினேன்.

“இணைய தளங்களில் கனவுகளுக்கான பொருள் கொள்ளலைப் பற்றி அறிய முயன்றேன். ஆனால் பல்லி சொல்லுக்குப் பலன் என்று பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்படுவதைப் போல எளிதான விஷயமாக இருக்கவில்லை. கனவுகளுக்கு ஒரு பொதுவான கருப்பொருள் இருப்பதில்லை. சிங்கம் பற்றிய கனவுக்கான பொருள்விளக்கம் பொதுவான ராசி பலன் வாசிப்பது போன்று ஒத்திசைவற்ற உணர்வைத் தந்தது.”

கையோடு கொண்டுவந்திருந்த நோட்புக்கில் குறித்து வைத்திருந்தனவற்றை வாசித்துக் காண்பித்தேன்.

“வலிமை, தைரியம், கம்பீரம் மற்றும் பெருமிதச் சிந்தனை – இவற்றின் குறியீடு சிங்கம். சிறுமைகளிலிருந்து விடுபட்டவர்க்கே சிங்கக்கனவு தோன்றும்.”

“சிங்கத்தை கனவில் காணுதல், மேலே சொன்ன குணங்களை விட, போராட்டத்தையே அதிகமாகக் குறிக்கிறது. போராட்டத்தில் வெற்றி பெற்று பல்வேறு பிரயாசங்களிலும் தலைவனாக மிளிர்வதையும் சிங்கத்தை கனவில் காணுதல் குறிக்கிறது.”

“திருமணமாகாத பெண்ணின் கனவில் சிங்கம் வந்தால் அவளுக்கு திருமணமாகும்.”

“ஓர் இளம் வாலிபனின் கனவில் சிங்கம் வந்தால் யதார்த்த வாழ்க்கையில் எதிரி ஒருவனால் எளிதில் அவனது இடம் எடுத்துக் கொள்ளப்படும்.”

“ஒரு சர்க்கஸில் சிங்கம் நடிப்பது போல கனவு வந்தால், உன் வாழ்க்கையில் எளிதாக கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படக் கூடிய கஷ்டங்கள் உருவாகும் என்று பொருள் கொள்ளலாம்.”

“உன் கண்களின் முன்னால் சிங்கம் எதையாவது தின்னுவது போன்ற கனவு வந்தால், உன் யதார்த்த வாழ்வின் பிரச்னைகள் வித்தியாசமான வழிகளில் தீரும்.”

“ஓர் இளஞ்சிங்கத்தை நீ உன் கனவில் பார்த்தால் யதார்த்தத்தில் உன் வியாபாரக் கூட்டாளிகளினால் தொல்லைகள் ஏற்படும்.”

“கர்வமாக நடைபோடும் சிங்கத்தை கனவில் பார்த்தால், குடும்பப் பிரசினைகளின் சாத்தியம் உண்டு என்று பொருள் ; ஆனால் உன் வாழ்க்கைக் கூட்டாளியின் துணை கொண்டு அப்பிரச்னைகளை தீர்த்துவிடக் கூடும்.”

நான் படித்துக் காட்டியதும் முகர்ஜி சிரித்தார்.

“சிங்கம் கனவில் வருவதை எப்படி பொருள் கொள்ளலாம் என்பதை தேடினால் இளஞ்சிங்கம், பெண் சிங்கம், ஆண் சிங்கம், சிங்கத்துடன் விளையாடுதல், சிங்கம் கனவு காண்பவனை துரத்துதல் என்று விதவிதமாக விளக்கங்கள் போட்டிருக்கிறார்கள். சிங்கம் வருகிறது என்று கேள்விப்பட்டவுடனேயே அறைக்குள் சென்று தாழ் போட்டுக்கொண்டு ஒளிந்து கொண்ட கனவில் சிங்கத்தை பார்க்கவேயில்லை. ஆனால் சிங்கம் பற்றிய பயம் இருந்தது. கனவில் இல்லாமல் இருந்த சிங்கத்தை எப்படி பொருள் கொள்வது?”

இன்னும் பலமாக சிரித்தார் முகர்ஜி. இதற்கு முன்னர் நடந்த அமர்வுகள் இத்தனை லேசாக சென்றிருக்கவில்லை.

மன நல சிகிச்சையின் போது கனவை பொருள் விளக்கம் கொள்ளுதலில் பல வித வழிமுறைகள் உள்ளதாகக் கூறி அதில் ஒரு சிலவற்றை விளக்கினார். “நீ சொன்ன ராசி பலன் மாதிரியான பொருள் கொள்ளல் நமது கலாசாரத்திலிருந்து பெறப்படுவது. கனவுகளை பொருள் கொள்ளலில் கலாசார விழுமியங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன. எனினும் மன நல சிகிச்சையில் கனவில் வரும் பாத்திரங்களும் சம்பவங்களும் நிஜ வாழ்க்கையில் யாரை எதை குறிக்கிறது என்பதை கனவு காண்பவர் அடையாளங்காணுதலிலிருந்து கனவுப் பகுப்பாய்வு தொடங்குகிறது”

முகர்ஜி அன்றைய அமர்வை விரைவில் முடித்துக் கொண்டார். அடுத்த சந்திப்புக்கு வரும்போது நான் எழுதித் தந்த கனவு பற்றி நன்கு யோசித்துக் கொண்டு வருமாறு அறிவுறுத்தினார்.

“உன் கனவுக் குறிப்பை வாசித்தபோது ஹெமிங்வேயின் ஓல்ட்மேன் அண்ட் தி ஸீ நாவல் என் ஞாபகத்துக்கு வந்தது. அதில் கிழவன் சாண்டியாகோ அடிக்கடி சிங்கங்களை கனவில் காண்பான். அதுவும் குழுக்களாக சிங்கங்கள் உலா வருவதாகக் கனவு காண்பான். நீ பார்த்த இணைய தளத்தில் சாண்டியாகோவின் கனவுக்கு என்ன பொருள்விளக்கம் தந்திருப்பார்கள்?”

+++++

வீடு திரும்பியதும் பக்கம் பக்கமாக குறிப்புகள் எழுதினேன்.

என் கண்ணுக்குத் தெரியாத சிங்கம் என்னுள் பயத்தை ஏற்படுத்தியது. என் மீது மட்டுமல்ல. என்னுடன் பேசிக் கொண்டிருந்த மேலும் சிலருக்கும் தான். கண்ணுக்குத் தெரியாத சிங்கம் என் அதிகாரியைக் குறிக்கிறதா? இல்லை. என் பயங்கள், பாதுகாப்பின்மை – இவைகளைத்தான் கூண்டில் இருந்து தப்பித்திருக்கக்கூடிய சிங்கம் குறிக்கிறதா? பயங்களும் பாதுகாப்பின்மையும் கண்ணுக்குப் புலப்படா மனக்குணங்கள். அவற்றுக்குப் பயந்து நான் ஒதுங்கிய அறை ஏன் என் அலுவலகத்தையொத்து இருக்கிறது. அங்கிருந்தோர் யாரும் பயந்தது மாதிரி தெரியவில்லை. அறைக்குள் வந்து ஒதுங்கிய நானும் என்னுடன் வந்தவர்களுந்தான் பயத்துடன் பதற்றத்துடன் இருந்தோம். ஆனால் சிங்கத்தை பிடிப்பதற்கான ஆயத்தங்கள் அறையின் மூடிய இரு கதவுகளுக்குப் பின்னால் நடந்து கோண்டிருந்ததற்கான அத்தனை சங்கேதங்களும் எனக்கு தெரிந்தன. சத்தங்கள் கேட்டன. தலைப்பாகையிட்ட இளைஞன் ஒருவன் எனக்கு உறுதி தந்தானே சிங்கம் பிடிபட்டுவிடும் என! என் பதற்றங்கள் எல்லாம் கற்பிதங்கள் என்று இந்த கனவு சொல்கிறதோ?

வேறு மாதிரி யோசித்தேன்.

சிங்கம் அந்த அதிகாரியைக் குறிக்கிறது. அவர் தன் நடத்தையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிராமல் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சிலரின் மனதில் மட்டும் பாதுகாப்பின்மையை அச்சத்தை உருவாக்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அவரிடமிருந்து தப்பிக்க முடியாமல் ஓடி அலுவலகம் போன்று தெரிந்த அறையில் தஞ்சம் புகுகிறேன். ஆனால் அந்த அறையில் இருந்த மற்றவர்கள் போல என்னால் சஞ்சலமுறாமல் இருக்க முடிவதில்லை. எப்படியாவது அதிகாரியிடமிருந்து தப்புதலே என் விழைவாக இருக்கிறது!

இன்னும் வேறு மாதிரி யோசித்தேன்.

கதவைத் திறந்து வெளியே வந்த எனக்கு அங்கே என்ன காத்திருந்தது? மூன்று சாத்தியப்பாடுகள்! (1) வெளியே யாரும் இல்லை. சிங்கம் கண்ணில் தென்படவில்லை. ஆபத்து விலகிவிடுகிறது. (2) எனக்காக சிங்கம் அமைதியாக கதவுக்கு வெளியே காத்திருக்கிறது. அதனுடன் சண்டை போடுகிறேன். அதை வென்றேடுக்கிறேன். (3) அறைக்கு வெளியே காத்திருந்த சிங்கம் என்னைத் தாக்கி என்னைக் கொன்று போட்டுவிடுகிறது.

டாக்டர் படித்து விட்டு என்னிடம் திருப்பியளித்த கனவுக் குறிப்பை மீண்டும் வாசித்தேன்.

மீண்டும் இன்னொரு குறிப்பு எழுதினேன்.

சிங்கத்துக்கு ஏன் கோபம்? காட்டிலிருந்து கடத்தி வரப்பட்டு கூண்டில் பொழுதுபோக்கிற்காக அடைக்கப்பட்ட சிங்கத்தின் உணர்வுகள் பற்றி நமக்கு என்ன தெரியும்? அதிகாரியின் சொந்த பிரச்னைகள், அபிலாஷைகள், பொறுப்புகள், பாதுகாப்பின்மை – இவற்றைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? ஒரு சக மனிதனாக அவனும் நம்மைப் போல பலங்களுடனும் பலவீனங்களுடனும் இருப்பவன் தானே…….

எழுதுவதை நிறுத்தினேன். என் மேசையின் மேல் இருந்த மினியேச்சர் சாரநாத் தேசியச் சின்னத்தின் திசைக்கொன்றாக நான்கு புறங்களைப் பார்க்கும் சிங்க ரூபங்களை நோக்கினேன். சிங்கக் கனவு எனக்களிக்கும் தகவல் என்ன?

சூழமைவு இல்லாமல் எந்த நிகழ்வுக்கும் அர்த்தம் கற்பித்தல் இயலாத காரியம். சூழமைவைப் பொறுத்து ஒரே நிகழ்வுக்கு வெவ்வேறு அர்த்தங்கள் கற்பிக்கலாம். நம்மை நடுநாயகமாய் வைத்தே நமக்கான அர்த்தங்களை நாம் பெறுகிறோம். The Phenomena of Shared Dreams சாத்தியம் என்று வைத்துக் கொண்டால், இதே கனவுக்கான பொருள்விளக்கத்தை சிங்கத்திடம் கேட்டால் அது என்ன பதிலளிக்கும்? அந்த அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஆட்களில் ஒருவரின் (அவர் நிஜ மனிதராக இருக்கும் பட்சத்தில்) கண்ணோட்டத்தில் இந்த கனவு என்ன அர்த்தத்தை கொடுக்கும்?

கனவு கண்ட அந்த இரவில் கைத்தொலைபேசி ரிங் ஆனதும் கண்விழித்து எழுந்தது போன்று சடக்கென ஒரு தெளிவு. சடோரி!

நாம் கண்ட கனவை நம் கண்ணோட்டத்தில் பொருள்விளக்கம் கொள்கிறோம். ஒரு திரைப்பட இயக்குனரின் கட் போல நம் கனவின் பொருள்விளக்கம் நம்முடைய கட். வாழ்க்கை யாருடைய கட்? வாழ்க்கை எல்லா உயிர்களின் கூட்டுக் கனவு என்பதாக யோசித்தால் ஒருவரின் கண்ணோட்டத்தில் மட்டும் வாழ்வின் நிகழ்வுகளை எப்படி பொருள் கொள்ள முடியும்? “இதெல்லாம் எனக்கு ஏன் நடக்கிறது?” என்ற வினா அடிப்படையில் மிகவும் அபத்தமானது ; நம் சுய கண்ணோட்டத்திலிருந்து எழுவது.

நான் நான். அதிகாரி அதிகாரி. நான் என் எல்லைக்குள் என் பலங்களுடன் பலவீனங்களுடன் இருக்கிறேன். என் அதிகாரி அவருக்குரிய எல்லையில் இருக்கிறார். அவருடைய பலங்களை பலவீனங்களை நடத்தையை மிகையாகப் பொருட்படுத்தி என்னுடைய சுய முக்கியத்துவத்தை அதிகமாக கற்பனை செய்து கொள்ளும் பழக்கந்தானே அடிப்படையில் என்னுள் பதற்றத்தை உண்டு பண்ணுகிறது. பாதிப்புக்குள்ளாகும் தன்மை – நானோ என் அதிகாரியோ – அனைவருக்கும் பொதுவன்றோ?

+++++

அன்றிரவு நிம்மதியாக உறங்கினேன். முகர்ஜி குறிப்பிட்ட சுமேரியக் காப்பிய நாயகன் கில்கமெஷ் காணும் கனவொன்றில் வானிலிருந்து விழும் கோடரியை அவன் அணைத்துக் கொள்வதைப் போல என் மேசையில் இருக்கும் சாரநாத்தின் சாக்கிய சிம்மங்களை கைகளில் இடுக்கியவாறே தூக்கம். கடலில் சுறாக்களுடன் கடுமையாகப் போராடி தலை சேதமுறாமல், பிற பாகங்களை சுறாக்கள் பிய்த்தெடுத்துவிட எலும்புகளின் அமைப்பு மட்டும் எஞ்சியிருந்த மிகப்பெரிய மர்லின் மீனுடன் அதிகாலை கரை திரும்பிய பிறகு சாண்டியாகோ அடித்துப்போட்டாற்போல என்னை மாதிரிதான் தூங்கியிருப்பான்.

+++++

உண்டி முதற்றே உலகு! – நாஞ்சில் நாடன் கட்டுரை

அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சில சிறுகதைகள், கட்டுரைகள் வாசித்து ஷா நவாஸ் எனும் பெயரை ஏற்கனவே அறிந்திருந்தேன். எனது அறுபத்தெட்டாவது வயதில் முதன் முறையாக சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் அழைப்பின் பேரில் திருமதி. சித்ரா ரமேஷ் அவர்களின் விருந்தினராக 2016 மார்ச் மாதம் சென்று சில நாட்கள் தங்கியிருந்தபோதுதான் அவரை நேரடியாக அறிந்துகொள்ள முடிந்தது. அநேகமாகத் தினமும் சந்தித்து உரையாடினோம்.

அப்போது எனக்கவர் கையளித்த ‘ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்’ எனும் கட்டுரைத் தொகுப்பும் ‘மூன்றாவது கை’ எனும் சிறுகதைத் தொகுப்பும் இந்தியா திரும்பிய சில மாதங்களுக்குள் வாசித்து விட்டேன். ஆனால்,அயல் பசி’ என்ற கட்டுரைத் தொகுப்பு புத்தகக் குவியலில் மூச்சு முட்ட அடுக்கப்பட்டிருந்தது.

பிறகே அறிந்து கொண்டேன் அவர் இராமநாதபுரம் நத்தம் (அபிராமம்) எனும் ஊரில் பிறந்தவர் என்பதும் என்னில் பன்னீராண்டு இளையவர் என்பதும். வேதியியலில் பட்டப் படிப்பும் அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறையில் பட்ட மேற்படிப்பும் பெற்றவர். மத்திய அரசுத்துறையில் பணிபுரிந்து தற்போது சிங்கப்பூரில் குடியேறி உணவகம் நடத்துகிறவர்.

யாவற்றுக்கும் மேலான அவர் சம்பத்து, படையொடுங்காத பூரித்த சிரிப்பு. அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சத்து நேசம் காட்டும் முகம். இரண்டாம் முறை, செப்டம்பர் 2016ல் சிங்கப்பூர் சென்ற எனக்கு அன்றே ஊர் மடங்க வேண்டியதிருந்தது. தொண்ணூறு வயதில் அம்மாவின் இறப்பு. என்றாலும் 2016 நவம்பரிலும் 2017 நவம்பரிலும் மலேசிய நாட்டு ம. நவீன் ஏற்பாடு செய்திருந்த வல்லினம் அமைப்பின் இலக்கியப் பயிற்சி முகாம்களுக்கு கோலாலம்பூர் போயிருந்தபோது நண்பர் ஷா நவாஸ் சிங்கப்பூர் வந்திருந்தார். சிலமணி நேரம் உடனிருந்து உரையாட முடிந்தது.

தற்போது நாம் பேச முற்பட்ட விடயம், ஷா நவாஸ் அவர்களின் ‘அயல் பசி’ எனும் நூல் பற்றியது. 144 பக்கங்களே கொண்ட சின்னப் புத்தகம். 2014ம் ஆண்டில் உயிர்மை வெளியிட்டது. உயிரோசை’ மின்னிதழில் 2012-ம் ஆண்டு ஷா நவாஸ் எழுதிய கட்டுரைத் தொடர் இது.

2020ம் ஆண்டின் மார்ச் 24ம் நாள் முதலான ஊரடங்கு நாட்களில் முதல் வேலையாக எனது நூலகத்தின் புத்தக அடுக்குகளைத் தூசி தட்டித் துடைத்து மறு அடுக்குதல் செய்யத் தலைப்பட்டேன். எழுத்து ஊற்று வற்றிக்கிடக்கும் நாட்களில் – எப்போது அது பெருக்கு எடுத்துப் பாய்ந்தது என்று கேளாதீர் ஐயன்மீர்!ஏதோ ஒரு அடுக்கைச் சீரமைக்க ஆரம்பித்தால் அடுத்த நாளே அமர்ந்து ஏதாவது எழுதத் தோன்றும் எனக்கு.

ஒருவன் குடித்துவிட்டு வந்து பெண்டாட்டி முதுகில் சாத்து சாத்தென்று சாத்துவானாம். தினமும் நடக்கும் மண்டகப்படி. ஒருநாள் கணவன் வெளியூர் போய்விட்டான். மனைவிக்கு அரிப்பெடுக்க ஆரம்பித்ததாம். ஆபத்தான கற்பனை வேண்டாம், முதுகில்தான். முதுகுத் தினவு தாங்க முடியாமற் போனபோது, ஒரு பையில் ஐந்து பக்கா அரிசி அளந்து கட்டி, அதை உத்தரத்தில் வாகான உயரத்தில் தொங்கவிட்டு, வேகமாக ஆட்டிவிட்டு, வேகமாக வரும் அரிசிப் பைக்குத் தோதாக முதுகைக் காட்டி நிற்பாளாம் தினவு தீரும்வரை. 1960ல் என் அப்பனைப் பெற்ற ஆத்தா பறக்கை நெடுந்தெரு வள்ளியம்மை எனக்குச் சொன்ன கதை. பெண் விடுதலைப் புரட்சி அன்று தொடங்கியிருக்கவில்லை என்பதால் வள்ளியம்மையை இன்று தண்டிக்க இயலாது. அவளது சாம்பல் கரைக்கப்பட்டும் 42 ஆண்டுகள் இற்றுப் போயின. எதற்குச் சொல்லவந்தேன் என்றால், நமக்கு எழுதுவதும் வாசிப்பதும் தினமும் முதுகில் சாத்துமுறை வாங்கும் மனையாட்டிபோலப் பழகிய காரியமாகிப் போயிற்று.

மலையாளத்தில் சொல்வார்கள், எலிக்குப் பிராண வேதனை பூச்சைக்கு வீணை வாயனை’ என்று. தமிழில் சொன்னால், வேட்டையாடப்படும் எலிக்கு உயிர் வேதனை, வேட்டையாடிய பூனைக்கோ வீணை வாசிப்பதைக் கேட்பது போன்றது. எழுதுபவனுக்கு எலியின் வேதனை. தமிழ் வாழ்க எனக் கொக்கரிப்பவனுக்குப் பூனையின் சுக பாவனை.

புத்தக அடுக்குகளில் இருந்து உடனடியாகப் படிக்க என 150 புத்தகங்கள் தனியாகப் பிரித்து வைத்தேன். கடந்த 150 நாட்களில் கிட்டத்தட்ட வாசித்து ஒதுக்கினேன். எல்லாம் காசு கொடுத்து கடந்த ஈராண்டு புத்தகக் காட்சிகளில் வாங்கியவை. பள்ளி கல்லூரிகளில் உரையாற்றப் போனபோது கிடைத்தவை. இளைய எழுத்தாள நண்பர்களால் வாசித்துப் பார்க்கத் தரப்பட்டவை. வாங்கியதோ அல்லது கையளிக்கப்பட்டதோ, தன்வயம் வரும் எப்புத்தகத்தையும் வாசிக்காமல் நான் கடத்துவதில்லை. சிலவற்றை புரட்டிப் பார்த்துத் தள்ளி வைப்பேன். வாசித்த யாவற்றையுமே கருமி பொருள் சேமித்து வைப்பதுபோல் வைப்பதிலும் எந்தப் பயனும் இல. துய்ப்பேம் எனினே தப்புந பலவே!’ என்பது புறநானூற்றில் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடலின் ஈற்றடி.

இன்னொரு முறை வாசிக்க வேண்டும் அல்லது பின்னர் உதவும் என நினைப்பவற்றை மட்டுமே பாதுகாப்பேன். எனக்கு மேலால் அவசியப்படாது எனக்கருதுவன பலவற்றையும் வீட்டுக்கு வரும் நண்பர்களிடம் கடத்தி விடுவேன். சிலவற்றைத் தூதஞ்சல் மூலம் அனுப்பி விடுவதும் உண்டு. எப்படியும் எந்த நாளிலும் என்னிடம் எட்டாயிரம் புத்தகங்கள் இருக்கலாம். சித்திரபுத்திரன் கணக்குப் பார்க்கும் நாளிலும் வாசிக்கப்படாமல் இருநூறு நூல்கள் கிடக்கும்.

‘அயல் பசி’ வாசித்து முடித்த கையுடன் தனியாகத் தங்கரியம் செய்து வைத்த பிறகே இந்தக் கட்டுரையை எழுதத் துவங்குகிறேன். எங்க அம்மா வெக்கற மாரி வத்தக்கொழம்பு இந்த லோகத்திலே யாராலும் வெக்க முடியாது” என்பது போன்ற Qualifying Statements விடுகிறவர்களுக்கான புத்தகம் அல்ல அயல்பசி. திறந்த மனமும் உணவில் நேசமும் மதிப்பும் கொண்டவர்கள் வாசிக்க வேண்டிய நூல்.

கடல் உணவுகளில் மீன் சாப்பிடுகிறவர்களிடையே நண்டு, சிப்பி, திரைச்சி, சுறா, கணவாய் சாப்பிடாதவர் உண்டு. உண்ணாதவரை, உண்ண விருப்பம் இலாதவரை, நினைத்தாலே ஓங்கரித்துச் சர்த்திப்பவரை எவரும் நிர்ப்பந்திப்பது சரியல்ல. என் அம்மை சாகிறவரை கடலை எண்ணெய் பயன்படுத்தியவள் அல்ல. அவளுக்கானது நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், தரித்திரம் செலுத்தியதால்தான் ரேஷன் கடை பாமாயில் வாங்கினாள். அதற்கென்ன செய்ய இயலும்?

மெய் கூறப் புகுந்தால் 32 அத்தியாயங்களில் பேசப்பட்டிருக்கும் உணவுப் பதார்த்தங்கள், செய்முறைகள், கருவிகள், விவரிக்கப்படும் காய், கனி, கிழங்குகள், மீன்கள், விலங்குகள், பறவைகள் பற்றி எனக்கு ஒரு அறிவும் இல்லை. உலகின் ஆகச்சிறந்த உணவு சம்பா அரிசிச்சோறு, வறுத்து அரைச்ச மீன் கறுத்தக்கறி, புளிமுளம், சைவ உணவெனில் அவியல், எரிசேரி, புளிசேரி, மொளவச்சம், ஐந்து வகைப் பிரதமன், இலைப் பணியாரம், கொழுக்கட்டை, உளுந்தங்களி, வெந்தயக்களி என நம்பும் வயதும் முன்முடிவுமே எனக்கு.

நண்டு, சிப்பி என சாப்பிட்டுப் பழகியிராதவன். சொல்லப்போனால் தலைக்கறி, குடல்கறி, ரத்தப்பொரியல் யாவும் அந்நியம். கடல்மீன் தின்னும் பிராந்தியத்தவன். ஆற்றுமீன், குளத்துமீன் ருசி அறியாதவன். வளர்ந்து ஆளாகி வேலைக்குப் போய் தேசங்கள் சுற்றிக் கறங்க ஆரம்பித்த பிறகே, கஞ்சி குடிச்ச மலையாளி சோத்தக் கண்டா விடுவானா? எனும் நிலைக்கு மனம் தேறியது. நியூயார்க்கில சாப்பிட்ட கணவாயும், டொரண்டோவில் சாப்பிட்ட சுட்ட மாட்டிறைச்சியும், டோக்கியோவில் சுவைத்துத் தின்ற சூஷியும், சிங்கப்பூரில் நண்பர்கள் வாங்கித்தந்த சகல கடல்வாழ் உயிரினங்களின் தாய் சூப்பும், கொலாலம்பூரில் சக்கைப் பிரதமன் போலிருந்த இனித்த கிரேவியில் பொரித்து மிதக்கவிடப்பட்டிருந்த மீனும், மலேசியத் தமிழ்ச் சங்கத் தலைவர் வாங்கித் தந்த மான் இறைச்சியும், பிரான்சில் ஸ்ட்ராஸ்பூர் நகரில் நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் பிரஞ்சுக்கார நண்பர் வாங்கித்தந்த பன்றி இறைச்சியும் மூன்று வகை வைனும், மெல்பர்ன் நகரில் யாழ்ப்பாணத்து சகோதரி கலாவதியின் தம்பி மனைவி செய்து தந்த, வாழ்க்கையில் முதல் முறையாக நான் சாப்பிட்ட சம்பலும்

புறநானூற்றில் மிளைகிழான் நல்வேட்டனார் பாடல்வரி பேசும், நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்று” என்று. நீண்ட நேரம் சொற்பொழிவாற்றுவதும் கண்டபடி விரைந்து பயணங்கள் மேற்கொள்ளுவதும் சம்பத்து அல்ல என்பது பொருள். மேற்சென்று நான் உரைக்க விரும்புவது சுவையான விருப்பமான உணவை வயிறார உண்பதுவே செல்வம். நெடுஞ்சாலை ஓரத்து பஞ்சாபி டாபாவில், லாரி டிரைவர் ரொட்டி பிய்த்துத் தின்பதைக் கண்டவர் உணர்வாரதை.

வாஷிங்டன் டி.சி. சதுக்கத்தில் நின்றுகொண்டு தயிர்சாதமும் மோர் மிளகாயும் கேட்கும் கதாபாத்திரங்களும் உண்டு. பாம்பு தின்கிற ஊருக்குப் போனால் நடுக்கண்டம் நமக்கென்று சொல்ல வேண்டும் என்பார்கள் ஊரில். எத்தனை ஆயிரம் கோடி அபகரித்து என்ன பயன் அரை இட்டிலியை மிக்சியில் அடித்துக் கரண்டி கொண்டு ஊட்டப்படும் நிலை வருமாயின்? பசியையும் சீரணிக்கும் சக்தியையும் தந்த இறைக்கு நன்றி கூறத்தானே வேண்டும்! அதனால்தானே இறைவன் ஏழைக்கு உணவு வடிவத்தில் வருவான் என்றனர்!

1981ம் ஆண்டு Authors Guild of India மாநாட்டில் கலந்துகொள்ள புதுதில்லி சென்றிருந்தேன். என் நண்பர் வீட்டில் தங்கியிருந்தேன். பெயர் நீலமேகாச்சாரியார் சந்தானம். வடகலை வைணவர். கும்பகோணத்தில் தி. ஜானகிராமன் வீடிருந்த தெருவுக்குப் பக்கத்துத் தெரு. தி.ஜா.வின் தீவிர வாசகர். ஒருநாள் மதிய உணவின்போது “சாம்பார்ல ஏதாம் வித்தியாசம் தெரியுதாய்யா? என்றார். ஏன் நல்லாத்தானே இருக்கு!” என்றேன். வெங்காய சாம்பார்யா உமக்காக விசேஷமாச் செய்தது!” என்றார். அதாவது உணவில் பூண்டு, வெங்காயம் சேர்த்துக் கொள்வதே ஒரு மரபு மீறலாகக் கொள்ளப்பட்டது. எனில் பன்றிக்கறியும் மாட்டுக்கறியும் மறைவாய் வாங்கும் இருவழியும் தூய வந்த குலப்பெருமை பேசும் வீடுகளையும் நானறிவேன் ஐம்பதாண்டுகள் முன்பே.

நாய்க்கறி தின்ற சிறுகதை ஒன்றுண்டு ஆ.சி. கந்தராசா கதைத் தொகுப்பில். என் நெருங்கிய நண்பர் ஒருவர், தரைப்படையில் பணிபுரிந்தவர், வடகிழக்கு எல்லையில் பணிபுரிந்து, நண்பர்கள் வீட்டுத் திருமணங்களுக்குச் சென்றால் நாய்க்கறி தவிர்க்க இயலாதது என்றார். முகம் நோக்கிக் கேட்டேன் “நீங்க திண்ணுருக்கேளா? என்று. அவர் பதில் தவிர்க்க இயலாது என்பதும் மறுத்தால் அவமதிப்பாகக் கருதப்படும் என்பதும்.

நாம் முன்பு சொன்ன என் நெருங்கிய நண்பர் நீலமேகாச்சாரியார் சந்தானம் குடும்பத்துடன் கன்னியாகுமரி போயிருந்தபோது, குடும்பத்தை அங்கேயே விட்டுவிட்டு என் ஊரைக் கண்டுவர பேருந்து பிடித்துப் போனார். என் தங்கை விருந்து உபசரிக்கக் கோழி அறுத்துக் குழம்பு வைத்து இலை போட்டு சோறு விளம்பிக் கறியும் ஊற்றினார். புரிந்துகொண்ட நண்பர் துண்டைப் பொறுக்கித் தள்ளி வைத்து, பிசைந்து சாப்பிட்டு எழுந்தார். இதையவர் ஊர் திரும்பியபிறகு என்னிடம் சொன்னபோது எனக்குக் கண்கள் கலங்கின.

முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்

எனும் நற்றிணைப் பாடல் வரியின் பொருள் விளங்கியது எனக்கு.

ஷா நவாஸ் Song Bird சூப் என்றும், சேவல் கொண்டைக் கறி என்றும், ஆடு மாடு பன்றி இரத்தத்தில் செய்யப்படும் Black Pudding என்றும், Bat Paste என்றும், விடத்தன்மை கொண்ட Fugu மீன் என்றும், தெளிவாக விரிவாகப் பேசுகிறார். இவை எவை பற்றியும் இதற்கு முன் நான் கேட்டதில்லை. எக்காலத்திலும் இனி உண்ணப் போவதும் இல்லை, விருப்பும் இல்லை. யாவற்றையும் ஷா நவாஸ் ருசி பார்த்திருப்பார் என்ற உறுதியும் இல்லை.

பாரதிமணி அண்ணா அடிக்கடி சொல்வார், கடுக்காயைத் தொட்டானாம் கோவணத்தை அவிழ்த்தானாம்” என்று. கடுக்காயைத் தொட்ட உடனேயே மலம் இளகிவிடும் என்பதற்கான மிகைச் சொல்லாடல் அது. ஷா நவாஸ் ஜாவானியப் பழமொழியொன்று கூறுகிறார், டுரியான் ஜாத்து சாரோங் நைக்” என்று. அதற்கு அவர் எழுதும் மொழிபெயர்ப்பு – “மரத்தில் இருந்து டுரியான் விழுந்தவுடன் கைலி மேலே தூக்கும்” என்று. கைலி என்றால் லுங்கி அல்லது சாரம்.

நான் முதலில் பயணம் போன நாடு மலேசியா. ஜனவரி 2010ம் ஆண்டில் மலேசியா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலக்கியப் பயணம். ஏற்பாடு செய்தவர் மலேசியத் தமிழ் அமைச்சர் டத்தோ சரவணன். நல்ல சொற்பொழிவாளர். சைவத் திருமுறைகள் கற்றவர். நவீன தமிழ் இலக்கியம் வாசிப்பவர். பத்துமலை முருக பக்தர். தைப்பூசத்தின்போது மலேசியப் பிரதம மந்திரி கலந்து கொண்ட கொண்டாட்டங்களில் எங்களையும் கலந்து கொள்ளச் செய்தார். பத்துமலை குகைகளுக்கும் படியேறிப் போனோம். பன்மையில் நாம் பேசுவதன் காரணம், எங்கள் குழுவில் ஜெயமோகன், மரபின் மைந்தன் முத்தையா, இலக்கியச் சொற்பொழிவாளர் த. இராமலிங்கம் என்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர், கல்கி வார இதழ் சார்பில் சந்திரமௌலி, இளம் படைப்பாளி கனகதூரிகா. தைப்பூசம் திருவிழாக் கூட்டத்தில் நான் தப்பிப் போய் அலைந்தது தனிக்கதை.

அந்தப் பயணத்தின்போது டுரியன் பழமும் மங்குஸ்தீன் பழமும் உண்ண ஆசைப்பட்டேன். நாங்கள் தங்கியிருந்த நட்சத்திரப் பல்லடுக்கு விடுதியில் அறிவிப்பே வைத்திருந்தனர் டுரியன் பழத்துக்கு அனுமதி இல்லை என்று. என் வேண்டுகோளை ஏற்று அமைச்சர் டத்தோ சரவணன் ஏற்பாடு செய்தார். அவரது உதவியாளர் சாலையோர டுரியன் பழச்சாலைக்கு அழைத்துச் சென்றார். பார்வைக்கு பலாப்பழத்தின் சிறு வடிவம். உள்ளே சுளை அமைப்பே பலாப்பழ வரிசைதான். நம் மக்கள் சிலருக்கு பலாப்பழ மணமே தலைவலியைத் தருமாம். டுரியன் பழ வாசனை தலைச்சுற்று, மயக்கம், வாந்திகூட ஏற்படுத்தி விடலாம். டுரியன் பழ வாசனையைக் கூர்மையான, கருத்த, அடர்ந்த வாசனை எனப் பகர்ந்தாலும் அதனை வகைப்படுத்தியது ஆகாது.

பழச்சாலையில் பழம் தேர்ந்து வெட்டி எடுத்து சுளை பிரித்துப் பரிமாறினார்கள். நாங்கள் அறுவரும் உதவியாளருமாக இரண்டு டுரியன் பழத்துச் சுளைகளைத் தின்றோம். எவருக்கும் கைலி தூக்கவில்லை, காற்சட்டை அணிந்திருந்ததால் இருக்கலாம்.

ஷா நவாசின் நூலின் பல பகுதிகளில் பேசப்பட்டுள்ள பல உணவுத் தினுசுகளை எந்தக் காலத்திலும் நான் தின்னப் போவதில்லை. ஏன் பார்க்கக்கூட போவதில்லை. பிறகல்லவா பரிந்துரைப்பது! என்றாலும் நூல் முழுவதையும் ஒவ்வாமையின்றி வாசித்தேன். அது நூலாசிரியரின் செய்நேர்த்தி. சலிப்பற்ற சொல்முறை. இணக்கமான மொழி.

பாப்புவா நியூகினியில் மரத்தடியில் ஊரும் எறும்புகள், தாய்லாந்தின் Rice Bugs, ஆஸ்திரேலியாவின் பிளம் பழத்தின் புழுக்கள், சீனாவின் Boby Mice Wine, யப்பானில் கணவாய் மீனைச் சமைக்காது கரைசலில் ஊறவைத்துக் குடிப்பது, மெக்சிகோவில் பச்சை மீனை எலுமிச்சைச் சாற்றில் ஊற வைத்துச் சாப்பிடுவது எனப் பற்பல தகவல்கள் உண்டு நூலில். பூச்சியியலின்படி 1462 வகைப் புழுக்கள் உண்ணத்தகுந்தவை, Edible என்கிறார்.

இந்து மரபையும் வேத தர்மத்தையும் மநு சாத்திரத்தையும் இன்னுயிர் ஈந்தும் காத்திட, பரப்பிட, வளர்த்திட முயலும் இந்தியரும் இன்று விரும்பி உண்ணும் பிரியாணி, பஸ்தா பற்றியும் உணவு விடுதிகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் பற்றியும் அநேகத் தகவல்கள். ஒரு உணவுக் களஞ்சியமாகவே கொள்ளலாம்.

இப்போது ஷா நவாசின் பத்தியொன்றை அப்படியே மேற்கோள் காட்டுகிறேன். முழு ஒட்டகத்தின் வயிற்றைச் சுத்தமாகக் காலிசெய்து, அதனுள் ஒரு ஆடு, அந்த ஆட்டின் வயிற்றில் சுமார் இருபது கோழிகள், அந்தக் கோழிகளின் வயிற்றில் முட்டை, அரிசி உள்ளே வைத்து அவித்து சமைக்கும் கிளாசிகல் உணவுதான் Stuffed Camel” என்று எழுதுகிறார். நமக்கு Stuffed Paratha தான் பழக்கம்.

ஒட்டகக்கறி நான் தின்றதில்லை. ஆனால் தின்ற அநுபவம் கிடைத்தது கீரனூர் ஜாகிர்ராஜாவின் ‘கசாப்பின் இதிகாசம்’ என்ற சிறுகதை வாசித்தபோது. மலையாளத்தில் ஓ.வி. விஜயன் எழுதிய ‘கசாக்கின்ற இதிகாசம்’ வேறு சமாச்சாரம்.

‘அயல்பசி’ ஆசிரியரின் வாசிப்புப் பரப்பு நம்மை மலைக்க வைக்கிறது. இந்த இடத்தில் ஒரு தேற்று ஏகாரம் போட்டு நம்மையே மலைக்க வைக்கிறது என்று ஒருபோதும் எழுதமாட்டேன். அது எலி புழுத்துவது போல் ஆகிவிடும். சீனாவில் இருந்துதான் கரும்புச் சர்க்கரை வந்தது எனவும், சரித்திர காலத்துக்கு முன்பாகவே சீனாவிலும் இந்தியாவிலும் கரும்புப் பயிர் இருந்தது என்றும் சொல்கிறார். ரிக் வேதத்தில் கரும்பு பற்றிய செய்தி இருக்கிறது என்று A.T. Acharya எனும் வரலாற்று ஆசிரியரை மேற்கோள் காட்டிப் பேசுகிறார். நாலடியார் பாடலில் கரும்புத் தோட்டம் பற்றிய குறிப்பு உண்டு என்கிறார். அங்ஙன விட்டாப் பற்றுல்லல்லோ!’ என்பார் மலையாளத்தில். ஷா நவாசை அப்படி விட்டுவிடலாகாது என்று கருதி நாலடியாரைத் தேடிப்போனேன். அந்தச் செய்தி ஷா நவாஸ் எமக்கறித்த திறவுகோல்.

நாலடியார், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி

இடித்துநீர் கொள்ளினும் இன் சுவைத்தே ஆகும்

என்பது பாடலின் முதலிரு வரிகள். தருமர் அல்லது பதுமனார் உரைகளை எளிமைப்படுத்திச் சொல்லலாம். கரும்பினைத் தறித்து, கணுக்கள் தகர்ந்து போகும்படியாக நெரித்து இடித்து ஆலையில் வைத்துக் கருப்பஞ்சாற்றினை எடுத்தாலும் அதன் சுவை இனிப்பானதாகவே இருக்கும் எனப் பொருள் கொள்ளலாம்.

இன்னொரு நாலடியார் பாடல்வரிகள்,

கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும்

குருத்தில் கரும்பு தின்றற்றே

என்பன. கற்றுணர்ந்த அறிவுடையாருடன் கொண்ட உறவு எப்போதும் நுனியில் இருந்து கரும்பு தின்னத் தொடங்குவதைப் போன்றது என்று பொருள் சொல்லலாம்.

ஆனால் பல்கலைக்கழகங்களின் கருத்தரங்குகளில் கட்டுரை வாசிப்புத் தொழில் பார்க்கும் தமிழறிஞர்கள் இராசேந்திரசோழன் காலத்துக்குப் பிறகே இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவுக்குள் கரும்பு வந்தது என்று சாதிக்கிறார்கள்.

உலக நாடுகளின் உணவு பேசும் நவாஸ் கூப்பதனியும், எரிக்கலான் கொழுக்கட்டையும், பால் கொழுக்கட்டையும், சீனிக்கொழுக்கட்டையும் பேசுகிறார். உடுப்பி கிருஷ்ணாராவ் பற்றியும் தகவுரைக்கிறார். உலகின் மூன்று வகையான நாக்கு உள்ளவர்கள் பற்றி விவரிக்கிறார். அவை உண்மை பேசும் நாக்கு, கருநாக்கு, சழக்கு நாக்கு என்பவை அல்ல. சுவை பேதமுடைய நாக்குகள். அதிவேக நாக்கு, தடி நாக்கு, காய்ச்சல் கண்டவன் நாக்கு போன்ற நிரந்தரத்துவம் கொண்ட நாக்கு என்கிறார்.

வெற்றி பெற்ற கிளாடியேட்டர்களிடம் ரோமானியர்கள் ஒரு சொட்டு ரத்தம் கோரிப்பெறும் செய்தி பேசுகிறார். கெட்ச்சப்பின் வகைகள், உபயோகங்கள் பேசப்படுகிறது.

நூலில் தலைக்கறி தக்கடி என்றொரு நுட்பமான அத்தியாயம். நான் பம்பாயில் தொழிற்சாலையொன்றில் வேலை பார்த்த 1973-1980 காலகட்டத்தில் என்னுடன் பணிபுரிந்த கூர்க்கா தன்ராம்சிங் பற்றிய கதையொன்று ‘தன்ராம்சிங்’ எனும் தலைப்பிலேயே எழுதினேன். 2007ம் ஆண்டு ஆனந்த விகடன் வெளியிட்டது. அதில் திபேத்திய கூர்க்காக்கள் மலிவான விலையில் ஆட்டுக் காதுகள் வாங்கி, மயிர் பொசுக்கி, நறுக்கிச் சமைப்பது பற்றி எழுதியிருப்பேன். ஷா நவாஸ், சதையுமில்லாமல் எலும்புமில்லாமல் காது மடல்களை நச் நச்சென்று கடித்துத் தின்னும் சுகம் இருக்கிறதே அதைச் சாப்பிட்டவர்களுக்கே தெரியும்” என்கிறார்.

சிங்கப்பூர் தலைக்கறி பற்றி அருமையான பதிவொன்றும் உண்டு. சிங்கப்பூர் கிளாசிகல் உணவுகளில் முதலிடத்தில் மீன் தலைக்கறி உள்ளது’ என்கிறார். நான் முதன்முறை சென்றிருந்தபோது, முத்து கறீஸ்’ எனும் புகழ்பெற்ற உணவகத்தில் மீன் தலைக்கறியுடன் சோறு தின்றது நினைவில் உண்டு. அன்றிருந்து சிங்கப்பூர் மீன் தலைக்கறிக்கு அடியேம் யாம். சில ஆண்டுகள் முன்பு புவனேஷ்வர், கட்டக், பூரி என ஒருவார காலம் ஒடிசா மாநிலத்தில் அலைந்தபோது சொன்னார்கள் – ஒரிய மக்களின் திருமணம் நள்ளிரவில் நடக்கும் என்றும் சம்பந்திகளுக்கு மீன் தலைக்கறி பரிமாறுவது ஒரு கட்டாயம் என்றும்.

உருளைக்கிழங்கு உத்திகள் என்றொரு அத்தியாயம். இன்று இந்தியர் 130 கோடிப்பேரில் உருளைக்கிழங்கு உண்ணாதவர் இல்லை. ஒரே செடியில் 165 கிலோ உருளைக்கிழங்கு விளைவித்த சாதனையில் தொடங்குகிறது அந்தக் கட்டுரை. Macdonald பற்றி விரிவாகப் பேசுகிறது.

இன்னதுதான் என்றில்லை. சமையல் குறித்த எதைப்பற்றியும் பேசுகிறார் ஷா நவாஸ். மிகவும் பிரபலமான வினிகர் திராட்சையில் இருந்துதான் செய்யப்படுகிறது. ஆப்பிளில் இருந்து பெறப்படுவது சிடார் வினிகர். ஓட்ஸ் அல்லது பார்லியில் இருந்து பெறப்படுவது மால்ட் வினிகர். அரிசியில் இருந்து பெறப்படுவது Rice Vinigar என்று வகைப்படுத்துவதோடு நின்றுவிடாமல் ஒவ்வொரு வினிகரும் குறிப்பிட்ட வகை சமையலுக்கு மட்டுமே பொருந்தும் என்கிறார். நாமோ கடுகு எண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் யாவற்றுக்குமான சமூக நீதி செய்து பாமாயிலுக்கு நகர்ந்து விட்டோம். சூர்யகாந்தி எண்ணெய், அரிசித்தவிட்டு எண்ணெய், மாட்டுக் கொழுப்பு – பன்றிக் கொழுப்பு – நெய் – டால்டா யாவுமே சர்வஜன மகத்துவங்கள் ஆகிப்போயின.

நூலின் இறுதியில் அற்புதமாக இரு சொற்றொடர் எழுதுகிறார் “நான் சமையல் பிஸ்தாவாக நினைக்கும் ஒருவரிடம் எது நமக்கு ஆரோக்கியமான உணவு என்று கேட்டேன். நீங்கள் சிறு பிராயத்தில் இருந்து பிரியமாகச் சாப்பிட்டு வரும் உணவுதான் ஆரோக்கியமானது என்றார்” என்று.

சிவகாசி நாடார் சமூகத்துத் திருமண விருந்தில் இரவு பால்சோறு விசேடமாகப் பரிமாறுவார்கள். அது சிறப்பான உணவாகக் கொள்ளப்படுகிறது என்பதும் அறிவேன். எனினும் உளுந்தங்கஞ்சியும், சாளைப்புளிமுளமும், புட்டு பயிறு பப்படமும், கூட்டாஞ்சோறும் என்றும் நமக்குப் போதும் என்று ஆறுதல் கொள்கிறது மனது.

ஒற்றைச் செருப்பு – சரவணன் அபி கவிதை

இருபுற சாலையின்
ஒருபுற பாதையில்
ஒரேபுறமாக
அடித்து செல்லப்படுமந்த
ஒற்றைச் செருப்பு
திரும்பிச்செல்லவோ
எதிர்ப்புறம் விரையவோ
இணையுடன் சேரவோ
எதற்கும் இயலாத
எதற்கும் உதவாத
எதற்கும் மசிகிற
எதிர்ப்பேதும் இல்லாத
இல்லாத
இருப்பு

நீர் நின்றன்ன – வெ சுரேஷ் சிறுகதை

“அப்பா கேபிள்ல நிறைய சானல்கள் வர்றதேயில்லை. நீங்க போய் அந்த கேபிள் ஆபிஸ்ல கேக்கறேன் கேக்கறேன்னுட்டு கேக்கவே இல்ல. இன்னிக்காவது கொஞ்சம் போய் கேட்டுட்டு வாங்கப்பா,” என்று பாதி கோரிக்கையாகவும் பாதி குற்றச்சாட்டாகவும் என் மகள் சொன்னபோது அந்த நாள் எனக்கு மிகவும் சங்கடமான நாளாக இருக்கப் போவதை நான் அறியவில்லை. “நாங்க போன் பண்ணிச் சொன்னா சரி சரிங்கறாங்க, ஆனா, அதே மாதிரிதான் இருக்கு’”.
“ஆமாம்மா மறந்து மறந்து போயிடறது, இன்னிக்கு ஒரு ஒன் டே மேட்ச் வேற இருக்கே… இரு, அந்த சானலாவது வருதா பாக்கறேன்,” என்று சொல்லிக் கொண்டே, அவசர அவசரமாக டிவியை ஆன் பண்ணி சோனி ஈஎஸ்பிஎன் சானலுக்குப் போனால், ஏதோ சப்ஸ்க்ரிப்ஷன் கட்டவில்லை, அதனால் வரவில்லை, என்று ஸ்க்ரால் ஓடிக் கொண்டிருந்தது. சரி, வேற வழியில்லை, இன்னிக்கு கேபிள் டிவி ஆபிசுக்கு நேரா போய்தான் பாக்கணும்.

டிபன் முடித்துவிட்டு, கேபிள் டி வி ஆபிசுக்குப் போய் மாடி ஏறும்போது வழியில் ஒரு முதியவர் தயங்கித் தயங்கி இறங்கி வந்து கொண்டே, “சார், இந்த கேபிள் டிவி ஆபிஸ்…” என்று இழுத்தார்.

”ஆமா சார், நானும் அதுக்குத்தான் வந்தேன்,” என்று சொல்லவும், அவர் முகத்தில் ஏமாற்றம். “ஓ, நீங்க கேபிள்காரர் இல்லையா…” என்று முனகினார். “என்னமோ தெரியல, நிறையச் சானல்கள் வரல, புகார் கொடுக்கலாம்னு வந்தேன்.”

“சரி மேல யாரும் இல்லையா?”

அவர் மெதுவான குரலில்,”யாருமே இல்லையே சார்,” என்று மீண்டும் முனகினார்.

யோசனையாக கீழே இறங்கினேன். மாடிப்படிக்கு பக்கத்திலேயே இன்னொரு ஹாலில் நாராயணன், கேபிள் பணம் வசூலிக்க வருபவர், இருந்தார். கொஞ்சம் நிம்மதியாக உள்ளே நுழைந்து, “பணம் கட்டின நிறைய சேனல் வரவேயில்ல நாராயணன், என்னனு பாக்கலாம்னு வந்தேன்,” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்த பெரியவரும் தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்து அதையே சொன்னார்..

இரண்டு பேருக்கும் படிவங்களைக் கொடுத்து, “எதெது வரல்லன்னு டிக் பண்ணிக் குடுத்திடுறாங்க சார்,” என்றார் நாராயணன்.

கடகடவென்று டிக் பண்ணிக் கொடுத்து விட்டு, “எப்ப வரும்,” என்று கேட்டேன். “நீங்க வீட்டுக்குப் போறதுக்குள்ள சார்,” என்றார் நாராயணன். அடப்பாவி டெக்னாலஜி அவ்வளவு தூரம் வளர்ந்துச்சான்னு நினைத்துக் கொண்டே, சரி பாதி மேட்ச் ஆனும் பாத்துடலாம் என்று திரும்ப எத்தனித்தேன்.

பின்னாலிருந்து தீனமாக, சார், என்று ஒரு குரல். அந்த முதியவர்தான். “சார் எனக்கு ரொம்பக் குழப்பமா இருக்கு, எழுத்தும் ரொம்பப் பொடிப் பொடியா இருக்கு கண்ணுக்கே தெரியல, கொஞ்சம் ஹெல்ப் பண்றேளா?”

“ம்ம்… உங்களுக்கு என்ன சானல்ல்லாம் வேணுமோ அதைச் சொல்லுங்க சார்,” அவரிடமிருந்த படிவத்தை வாங்கினேன்.

“எனக்கு பழைய அந்த 100 ரூவா ஸ்கீமோட, சன், விஜய், இருந்தா போதும் சார், அது வர்ற மாதிரி பில் அப் பண்ணிக் குடுக்கறேளா அப்புறம் பணமும் கட்டணும்”

அதற்குண்டான பெட்டிகளை டிக் பண்ணினேன். நடுங்கும் விரல்களால் அவர் கையெழுத்திட்டவுடன் அவரிடமிருந்து பணத்தை வாங்கி நானே கட்டிவிட்டு, வெளியே வந்தேன். கூடவே அவரும் வந்தார். மேலும், தயங்கின ஒரு குரலில், “ஏன் சார் இந்த கிரிக்கெட் மேட்செல்லாம் இதுல வருமோ”

“இந்த விஜய் பேக்கேஜுல ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் வருங்கறாங்க சார். உறுதியா தெரியல,” என்று சொல்லிக்கொண்டே நிமிர்ந்து அவரைப் பார்த்தபோதுதான் எங்கேயோ பார்த்து பரிச்சயமான முகம் என்று தோன்றியது. நல்ல சிவந்த, படர்ந்த முகம், இந்த வயசுக்கு அடர்த்தியாக, ஆனால் வெள்ளை வெளேரென்ற நிறத்தில் தலைமுடி, நெற்றியில் நல்ல சிவப்பில் குங்குமப் பொட்டு. ரெண்டு நாள் தாடி, கண்ணைப் பெரிதாகக் காட்டும் தடித்த கண்ணாடி. அதற்குப் பின்னாலிருந்த கண்களில் குழப்பமும் தயக்கமும். காவியேறின வேட்டி, கொஞ்சம் அழுக்கான வெள்ளை அரைக்கை சட்டை. இதே கோலத்தில், பாவனையில் இவரை எங்கயோ பாத்திருக்கமே என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே, ‘சார், உங்கள நான் எங்கயோ பாத்திருக்கேன்,” என்ற அவர் குரல் சிந்தனையைக் கலைத்தது.

“எனக்கும் அப்படிதான் தோணுது சார், நீங்க…?”

“என் பேரு ராமரத்னம்… இதோ இந்த ரோட்ட கிராஸ் பண்ணினா எதுக்க இருக்கே அதான் வீடு,” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் என்னைக் கூர்ந்து பார்க்கத் தொடங்கினார்.

“ம்ம்… நான் இங்கதான் கோவாப்பரேட்டிவ் காலனில இருக்கேன்,” என்றேன்.

“ஓ, அப்படியா சார், நான் அங்க வந்ததில்லை. நாங்க மொதல்ல டவுன்லதான் இருந்தோம். இப்பதான் ரெண்டு வருஷமா இங்கே குடியிருக்கோம்.. ஆனா உங்கள எங்கயோ பாத்திருக்கேன் முகம் ரொம்ப பரிச்சயமானதா இருக்கு…” என்று மீண்டும் என் முகத்திலேயே தன் பார்வையை நிறுத்தினார். எனக்கும் குழப்பம். இந்தக் குரல், இந்த தயங்கித் தயங்கிப் பேசும் விதம், முகத்தில் இருக்கும் ஒரு பரிதாபக் களை, எங்கே பார்த்திருக்கிறேன்?

அதற்குள் நாராயணன் அவரை கூப்பிட, “சார், இதோ ஒரு நிமிஷம், வந்துடறேன், இங்கயே இருங்க,” என்று சொல்லிக்கொண்டே திரும்பி உள்ளே நடந்தார். அந்த நடையில் சட்டென்று கன்னத்தில் ஒரு அறை விழுந்தாற்போல நினைவுக்கு வந்துவிட்டது அவர் யாரென்று. ஒரு கணத்தில் அப்படியே சட்டென்று வியர்த்துப் போய் ஸ்தம்பித்து நின்றேன். ஆமாம், அவரேதான், அதே முகம், அதே குழப்பமும், தயக்கமும் நிறைந்த கண்கள், இறைஞ்சும் குரல். அவை இவரின் நிரந்தர முகபாவமா, இல்லை, நாங்கள் சந்தித்துக் கொண்ட அந்த சந்தர்ப்பத்தில் வந்து அவருடன் ஒட்டிக் கொண்டதா?

ஐயோ… என்னவொரு சந்தர்ப்பம், அசந்தர்ப்பம் என்று சொல்ல வேண்டும். ஆம், 2008ம் ஆண்டு ஆகஸ்ட்டு இறுதியில் நாங்கள் சந்தித்திருக்கிறோம். இந்த பதினோரு ஆண்டுகளில் மேலும் தளர்ந்து போயிருக்கிறார். கண்களின் அந்தத் குழப்பமும் தயக்கமும் மேலும் அதிகரித்திருக்கிறது. அப்போதே 70க்கும் மேல் இருக்கும். இப்போது 80க்கும் மேல், அன்று நடந்ததற்குப் பின் இவர் உயிரோடு இருப்பதே பெரிது. இவர் இன்னும் அதிக நாள் தாங்க மாட்டார் என்றே அப்போது நினைத்தேன். இன்னுமா இருக்கிறார் என்று திகைப்புடன் அவர் போவதைப் பார்க்கும்போதே அந்த நடை, அவரை முதன் முதலாக பொள்ளாச்சி விருந்தினர் மாளிகைக்குள் அழைத்துப்போனதை நினைவுபடுத்தியது.

“ரமேஷ், சங்கரோட அப்பா, அம்மா, அக்கா, அவங்க ஹஸ்பண்ட், நாலு பேரும் இப்பதான் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டு கிட்ட வந்திருக்காங்கன்னு போன் வந்திருக்கு, நீயும் மூர்த்தியும் உடனே போய் அவங்கள பாத்து பொள்ளாச்சி ஐபிக்குக் கூட்டிட்டு வந்துருங்க, சிவப்பு கலர் ஆல்டோ கார். நாங்க இப்பதான் சுல்தான்பேட்டையை நெருங்கிட்டிருக்கோம். இன்னும் சங்கரோட பாடி கிடைக்கல. இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்னும் தெரியல. அவங்கள அங்கேயே தங்கவும் வெக்க ஏற்பாடு பண்ணிருங்க… அதுல பிரச்னையிருக்காது, எஸ்ஈகிட்ட ஏற்கனவே ரூம்ஸுக்கு சொல்லியாச்சு என்ன ஓகேவா?“ மறுத்துப் பேச முடியாத கண்டிப்பில் நண்பர் பாண்டியனின் குரல் கட்டளையாக ஒலித்தது. நான் மூர்த்தியைப் பார்த்தேன். பாண்டியன் என்ன சொன்னார் என்று அவருக்கும் புரிந்திருக்க வேண்டும். ம்ம் சரி, என்று முனகிவிட்டு போனை கட் செய்தேன். பஸ் ஸ்டாண்டுக்கு கிளம்பினோம்.

‘சங்கரோட பாடி’ அந்த வார்த்தை இப்போது மிகக் கடுமையாக ஒலித்தது. நேற்று பின்னிரவு வரை கூட நாங்கள் அப்படி சொல்லத் துணியவில்லை, ஆனால் இப்போது நண்பர்கள் எல்லோருக்குமே வேறு எப்படியும் சொல்ல முடியாமல் போய்விட்டது. நண்பர்கள் என்றால் இங்கே என்னுடன் இருக்கும் மூர்த்தியையும் பாண்டியனோடு போயிருக்கும் ப்ரகாஷையும் தவிர மற்றவர்கள், சென்னையிலிருந்து வந்தவர்கள்- சங்கர், பாண்டியன், கதிர், சந்துரு, மற்றும் பிரசாத் ஆகியோர்.

முந்தா நாள் சென்னையிலிருந்து நீலகிரி எக்ஸ்பிரஸில் கிளம்பி நேற்று அதிகாலை திருப்பூரில் இறங்கி வேன் வைத்துக் கொண்டு உடுமலைப்பேட்டையில் இருக்கும் கதிரின் வீட்டுக்குப் போய் விட்டு முற்பகலில் கிளம்பி டாப்ஸ்லிப், அதனைத் தொடர்ந்து பரம்பிக்குளம் என்று போவதாக ஒரு திட்டம். இரவுத் தங்கலுக்கு பரம்பிக்குளத்தில் விருந்தினர் மாளிகையில் ஏற்பாடாகியிருந்தது போல. கதிரின் வீட்டுக்குச் சென்று சேருவது வரை எந்தப் பிசகும் நேரவில்லை. தவறு நேர்ந்தது உடுமலை போகும் வழியில், கெடிமேடு வாய்க்காலைப் பார்த்ததில்தான். பரம்பிக்குளம் ஆழியாறு ப்ராஜெக்ட்டின் பிரதான கால்வாய் அது. பிஎம்சி என்பார்கள். இவர்கள் கிளம்புவதற்கு முந்தைய நாள்தான் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டிருக்கிறார்கள். கால்வாய் நிரம்பி ஓடிக்கொண்டிருக்கிறது. கால்வாயைப் பார்த்தவுடன், கதிர் வீட்டுக்குப் போய் குளித்துவிட்டு டாப்ஸ்லிப் கிளம்ப இருந்த திட்டத்தைச் சற்றே மாற்றி கதிர் வீட்டிலிருந்து கால்வாய்க்கு வந்து அங்கே குளித்து விட்டு மீண்டும் கதிர் வீட்டுக்கே சென்று டிபன் சாப்பிட்ட பின்னர் கிளம்புவதாக மாற்றியிருக்கிறார்கள். கதிரின் அம்மா, “இப்பதான் டேம் திறந்து விட்ருக்காங்கப்பா, புதுக் தண்ணி உடம்புக்கு ஆகாது. மழை வேற வர மாதிரி இருக்கு, வூட்டிலயே வெந்நீர் போட்டுத் தரேன். குளிச்சி டிப்பன் சாப்டுட்டு கெளம்பிருங்க,” என்று சொல்லியும் கேட்காமல் கால்வாய்க்கு குளிக்க வந்திருக்கிறார்கள்.

கெடிமேடு- உடுமலை ரோட்டில் கால்வாய் குறுக்கிடும் இடத்துக்கு அருகில் எப்போதும் லாரிகளும் வேறு வாகனங்களும் கழுவிக் கொண்டிருப்பார்கள். எனவே கால்வாய் ஓரமாகவே சற்று தெற்கே உள்ளே போய் ஒரு தென்னந்தோப்புக்கு அருகில் குளிப்பது என்று தீர்மானித்துப் போயிருக்கிறார்கள். எல்லோருமே நீச்சல் தெரிந்தவர்கள்தான். கால்வாயின் தண்ணீர் வேகத்தையும் ஓரளவுக்கு ஊகித்து, கால்வாயின் இரண்டு கரைகளுக்குமாக கம்பத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டுதான் இறங்கி குளிக்க இறங்கியிருக்கிறார்கள். கதிர், சந்துரு, பாண்டியன், பிரசாத் எல்லாம் ஒரு புறம் குளித்துக் கொண்டிருக்க, இருப்பதிலேயே இளையவனும் அபாரமான வாலிபால் விளையாட்டு வீரனுமான சங்கர் மட்டும் ஒருமுறை கால்வாயில் குதித்துக் குறுக்காக நீந்தி மறுகரையில் ஏறி அங்கிருந்து ஒரு தாவு தாவி உள்ளே குதித்து இவர்கள் பக்கம் வந்திருக்கிறான்.

இந்த இடத்தில் தான் என்ன நடந்தது என்று இவர்களால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. உள்ளே குதித்த சங்கரிடம் தண்ணீரைத் தொட்ட சில கணங்களுக்குப் பின் ஏதோ தடுமாற்றமும் நீந்துவதற்கு சற்றே திணறலுமிருந்ததை பாண்டியன் கவனித்திருக்கிறான். சங்கர் மல்லாந்து நீந்த முயல்கிறானா அல்லது கால்வாயின் நீரோடு மிதந்து அடித்துச் செல்லப்படுகின்றானா என்ற குழப்பத்துடன் அவனுக்கு எதிரே சென்று கைகளை விரித்து தடுக்க முயன்றிருக்கிறான். ஆனால், அவன் கைகளில் பட்டு கைகளின் அடியே வழுக்கிக் கொண்டு போய்விட்டான் சங்கர். இவர்கள் அங்கே போயிருந்த அந்த 9-9.30 மணிக்கு இவர்களின் கூக்குரலை கேட்க தோப்பின் அருகில் யாருமே இருக்கவுமில்லை. கத்திக்கொண்டே கெடிமேடு உடுமலை சாலை சந்திப்பு வரை ஓடியிருக்கிறார்கள். ஆனால், அதன் பின் சங்கரை அவர்கள் பார்க்கவேயில்லை. ஒரு மணி நேரத்துக்குப் பின் பொள்ளாச்சி பொதுப்பணித் துறையிலிருந்த நண்பர் பிரகாஷுக்கு விஷயத்தைச் சொல்ல, அவர் அங்கே இருக்கும் பொறியாளர்களிடமும் லஸ்கர் எனப்படும் களப்பணியாளர்களுக்கும் சொல்ல, தேடுதல் வேட்டை தொடங்கியிருக்கிறது. மதியமே பிரகாஷ், மூர்த்திக்கும் எனக்கும் செய்தி வரவும் நாங்கள் ஈரோட்டிலிருந்தும் கோவையிலிருந்தும் மாலைக்குள் பொள்ளாச்சி வந்து சேர்ந்தோம்.

சங்கர், சங்கர்ராமன் கோவையைச் சேர்ந்தவன்தான் என்றாலும் எனக்கு அவ்வளவு பழக்கமில்லை. கடந்த பதினைந்து ஆண்டுகளாகவே நான் தலைமையகத்தில் இருந்ததைவிட வெளியே அயல்பணியில் இருந்ததே அதிகம். இவன் அங்கே சேர்ந்து ஐந்தாறு வருடங்கள்தான் ஆகியிருக்கும். இரண்டு மூன்று முறை நான் அங்கே போனபோது இந்த நண்பர்களோடு பார்த்திருக்கிறேன். அவனது உயரத்துக்கும் ஆகிருதிக்கும் சம்பந்தமில்லாமல் ரொம்ப அடக்கமாக இருப்பான். மிக மென்மையாகவே பேசுவான். பெரும்பாலும் பேசவே மாட்டான். எனக்கும் கோவை என்பதால் ஒரு சந்திப்பில் சற்று இணக்கம் கூடி குடும்ப விவரங்களை சுருக்கமாக சொல்லியிருக்கிறான். கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில்தான் பூர்வீக வீடு. ஆனால், சென்னையில் வேலைக்கு வந்தபின் வயதான பெற்றோரையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டான். அவனது ஒரே அக்காவின் குடும்பம் ஏற்கனவே சென்னையில்தான். இவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் தெரியும். வயதும் 27, 28தான் இருக்கும்.

நேரம் ஆக ஆக எல்லோருடைய நம்பிக்கையும் குறைந்து கொண்டே வந்தது. இருட்டில் இனியும் தேடுவது முடியாது என்ற நிலையில் நாங்கள் அனைவரும் பொள்ளாச்சி ஆய்வு மாளிகைக்கு வந்து சோர்ந்து உட்கார்ந்திருதோம். ஆனால் மாலை 5.30 மணிக்கே அங்கிருந்த களப்பணியாளர்கள், “சார் இதுவரைக்கும் கண்டு பிடிக்க முடியலன்னா இனி சுல்தான்பேட்டை சைப்பன்லதான் பாடி கிடைக்க சான்சு,” என்றார்கள். ‘பாடி’ என்ற சொல் எல்லோரையும் நிலைகுலைய வைத்து விட்டது. ஆனால், அவர்கள் இம்மாதிரி எத்தனையோ பார்த்தவர்கள். என்ன நடக்கும் என்று அறிந்தவர்கள். “வேற வழியில்லை சார், காலைல செய்தி வரும் பாருங்க,” என்று சொல்லிவிட்டு சுல்தான்பேட்டையிலிருந்த ஆட்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டுப் போய்விட்டனர். பொறியாளர்கள் அனைவருமே அவர்கள் சொன்ன மாதிரிதான் நடக்கும், வேறு வாய்ப்பில்லை என்றார்கள்.

இதற்கிடையே, ஊருக்குப் போன மகன் போன் பண்ணவில்லை என்று சங்கரின் அப்பா பாண்டியனின் செல்லுக்கு ஐந்தாறு முறை அழைத்துவிட்டார். அங்கே இருந்தவர்களில் பாண்டியன்தான் சங்கருக்கு மிகவும் நெருக்கம். அவரால் என்ன பதில் சொல்வது என்றே தீர்மானிக்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் என்னென்னவோ சொல்லி சமாளித்திருக்கிறார். ஆனால், களப்பணியாளர்களும், பொறியாளர்களும் இப்படி சொன்னதற்குப் பின் மாலை 7 மணியளவில், சங்கரின் அக்கா கணவரை அழைத்து, இங்கே சங்கரை கொஞ்ச நேரமாக காணவில்லை, தேடிட்டிருக்கோம், முடிஞ்சா நீங்க மட்டும் கொஞ்சம் இப்பவே கிளம்பி பொள்ளாச்சி வந்துருங்க, என்று சொன்னார். பின் திரும்பி எங்களிடம், “இவருக்கே கொஞ்சம் பத்தாது, ஆனால் சங்கருக்கு அண்ணன் தம்பி யாரும் இல்ல, அப்பாகிட்டயும் சொல்லவே முடியாது, வேற வழியில்லாமதான் இவருகிட்ட சொன்னேன், என்ன பண்ணப் போறாரோ,” என்று பரிதாபமாகச் சொன்னார்.

ஒன்றும் செய்வதற்கில்லை. இனி விடியற்காலையில்தான் தேடுதலைத் தொடங்கவும் முடியும். சென்னையிலிருந்து வந்தவர்களும் நாங்கள் உள்ளூர்க்காரர்களும், ஆளாளுக்கு ஒன்றைச் சொல்லி அரற்றியபடியே இரவைக் கழித்தோம். மறுநாள் காலை 7 மணிக்கே, பிரகாஷ் ஏற்பாடு செய்திருந்த ஜீப்பில் ஏறி அவரும் கதிரும் பாண்டியனும் சுல்தான்பேட்டைக்கு புறப்பட்டனர். அப்போதுதான் அவருக்கு சங்கரின் அக்கா கணவரிடமிருந்து போன் வந்திருக்க வேண்டும். தொடர்ந்து என்னிடம் கூப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

பாண்டியன் பயந்தபடியே சங்கரின் அக்கா கணவர் சொதப்பிவிட்டார். சங்கரின் அம்மா அப்பாவிடமும் விஷயத்தைச் சொல்லி அவர்களையும் அழைத்து வந்து விட்டார். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்கள் கலக்கம் கூடியது. பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே காரில் இருந்த சங்கரின் அம்மாவையும் அப்பாவையும் பார்த்தவுடன் அந்தக் கலக்கம் பன்மடங்கு அதிகமாகிவிட்டது. அந்த முகங்களில் இருந்த பேதைமையும் நம்பிக்கையும் எங்களை வாயடைக்க வைத்தது. ஒன்றும் பேசாமல் ஐ.பிக்கு கூட்டிச் சென்றோம். சங்கர் அங்க இருக்கானா, என்ற முதியவரின் கேள்விக்கு ஒருவரும் பதில் சொல்லவில்லை. ஐ.பிக்குச் சென்று அறைகளுக்குள் அனுப்பி, ரெப்ரெஷ் செஞ்சுட்டு வாங்க சார், காபி டிபன் சாப்பிடலாம், என்று சொல்லிவிட்டு வெளியே உட்கார்ந்து கொண்டோம். சங்கரின் அம்மாவையம் அக்காவையும் பார்க்கவே துணிவில்லை.

சங்கரின் அப்பா எதையோ ஊகித்திருக்க வேண்டும். உள்ளே போனவர் மெதுவாக வெளியே வந்து, “சார் நான் சங்கர்கிட்ட இந்த ட்ரிப்பே போக வேணாம்னேன். கல்யாணத்துக்கு ஜாதகம் எடுக்கலாம்னு ஜோசியர்ட்ட இவன் ஜாதகத்தை கொண்டு போனப்ப அவரென்னவோ அத ரொம்ப நேரம் பாத்துட்டு, நீங்க இந்த ஜாதகத்தை அடுத்த மாசம் ஒண்ணாந் தேதிக்கு அப்பறம் கொண்டு வாங்க அப்ப பாத்துக்கலாம். இப்ப வேணாம்னு சொல்லிட்டார். அதுலேருந்து ஏனோ எனக்கும் மனசே சரியில்லே. இந்த வெளியூர்ப் பயணம்லாம் வேண்டாம்டான்னேன். என்னவோ அப்பறம் ஏதோ ஆபிஸ் எக்ஸ்சாம்லாம் வருது. படிக்க உக்காந்துட்டா எங்கயும் போக முடியாது, இந்த ஒரு தடவை ரெண்டுநாள்தானே போயிட்டு வந்துடறேன்னான். இவரு, பாண்டியனும் நாங்க பாத்துக்கறோம் சார், அனுப்புங்கன்னார். கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு அனுப்பிச்சு வெச்சோம். ஒன்னும் பிரச்னையில்லயே,” என்று மென்று முழுங்கிக் கேட்டார். எதையோ சொல்லி சமாளித்து மீண்டும் உள்ளே அனுப்பி வைத்தோம்.

அவர்கள் வெளியே வருவதற்குள் பாண்டியனின் அழைப்பு வந்துவிட்டது. எதிர்பார்த்தபடியே இவர்கள் போவதற்கும் சங்கரின் உடல் சுல்தான்பேட்டை சைப்பனில் கிடைப்பதற்கும் சரியாக இருந்திருக்கிறது. பாண்டியன் போனிலேயே கதறி விட்டார். என்னால் அவருக்கு ஒரு பதிலும் சொல்ல முடியவில்லை. அவருக்கு.அவரே சற்றுத் தேற்றிக் கொண்டு, “பொள்ளாச்சி மருத்துவமனைக்குத்தான் கொண்டு வந்தாக வேண்டும், போஸ்ட் மார்ட்டம் பண்ணாம முடியாது, கூடுமான வரைக்கும் பாடிய ரொம்ப சேதப்படுத்தாம பாத்துக்கலாம்னு நம்ம இன்ஜினீர்செல்லாம் சொல்லிருக்காங்க, நீங்க இப்போதைக்கு அவங்ககிட்ட எதையும் சொல்ல வேண்டாம், அப்புறம் பாத்துக்கலாம்,” என்று சொல்லி போனை வைத்தார்.

பொள்ளாச்சி மருத்துவமனைக்குள் எடுத்து செல்லப்படும் முன்னர் சங்கரின் உடலைச் சில கணங்கள் மட்டுமே பார்த்தேன். நல்ல ஆஜானுபாகுவான உடல், ஒரு விளையாட்டு வீரனின் உடல், நீருக்குள் இருந்ததால் உப்பிப் பெருத்து இன்னும் பெரியதாக இருந்தது. கண்கள் இருந்த இடததில் பள்ளங்கள். மீன்கள் கடித்துத் தின்றிருக்கும் என்றார்கள் அங்கிருந்தவர்கள். அதற்கு மேல் பார்க்க முடியாமல் ஓடி வந்துவிட்டேன். அதற்குப்பின் நடந்ததெல்லாம் கனவு போல இருந்தது. எப்படி அவர்களிடம் விஷயத்தைச் சொன்னோம், எப்படி சங்கரின் உடலை தகனம் செய்தோம், .எப்படி அவர்களை ஊருக்கு அனுப்பினோம் என்று இப்போதும் என்னால் முழுமையாக நினைவுக்கு கொண்டு வர முடியவில்லை.

சங்கரின் அப்பா, “சார், நாங்க முன்னாடி போறோம் நீங்க சங்கரைக் கூட்டிண்டு வந்துருங்கோ,” என்று எங்கள் ஒவ்வொருவரிடமும் திருப்பித் திருப்பி சொல்லிக் கொண்டிருந்தார். சங்கரின் அம்மா விஷயத்தைச் சொன்ன மறுகணம் மயங்கி விழுந்தவர், பின் அதிலிருந்து மீண்டு ஊர் திரும்பும் வரை ஒன்றுமே பேசவில்லை. ஆனால், அவர் எங்களை அனைவரையும் பார்த்த பார்வையில் இருந்தது என்ன என்றுதான் இனம் கண்டு கொள்ளவே முடியவில்லை. அது குற்றச்சாட்டா இறைஞ்சலா என்று ரொம்ப நாள் குழம்பிக் கொண்டிருந்தேன்.

ஆனால் பதினொரு ஆண்டுகள் என்பது நீண்ட காலம்தான் போல. இவரையா, சங்கரின் அப்பாவையா நான் அடையாளம் தெரிந்து கொள்ளவில்லை, என்று மனம் நொந்து கொண்டது. அந்தச் சம்பவங்களின்போது மனதில் தோன்றிய இனம்புரியாத குற்றவுணர்வு மீண்டும் குடையத் தொடங்கியது. சங்கரின் அம்மாவின் பார்வை மீண்டும் மனதில் எழுந்தது. கூடவே இவருக்கு என்னை அடையாளம் தெரியாதது சற்றே ஆறுதலாகவும் இருந்தது.

இந்த எண்ணவோட்டங்களை, ‘சார் உங்களுக்கு சிரமமா இல்லேன்னா என்னைக் கொஞ்சம் இந்த ரோட்ட கிராஸ் பண்ணி எதிர்க்க ஆத்துல விட்டுர்றேளா,” என்ற அவரின் குரல் அறுத்தது. வேறு வழியில்லை. இதைக்கூட செய்யாவிட்டால் எப்படி என்று மெதுவாக அவரை அழைத்துக் கொண்டு ரோட்டைக் கடந்து வீட்டு வாசலில் விட்டேன். திரும்பலாம் என்று நினைக்கும்போதே, “சார் உள்ள வந்து ஒரு வாய் காப்பி சாப்பிட்டுட்டு போங்க சார்,” என்று சொல்லத் தொடங்கினார். அதற்குள் வீட்டிற்குள்ளிருந்து, “இதே வேலையாப் போச்சு உங்களுக்கு, சொல்லிட்டுப் போனாத்தான் என்ன, எங்கயாவது விழுந்து வெச்சா உங்க மகளுக்கு நான்தானே பதில் சொல்லணும்?” என்று காட்டமாக ஒரு பெண் குரல் ஒலித்தது.

அதற்குள் அவர் பின்னால் நான் வீட்டின் முன்னறைக்குள் நுழைந்திருந்தேன். உள்ளே ஏதோ ஒரு ஒவ்வாத வாடை அடித்தது. என்னவென்று பார்க்கும்போதே பக்கவாட்டு அறையில், கட்டிலில் ஒரு முதிய பெண்ணுருவம் படுத்திருந்தது தெரிந்தது. அவர் கத்தியிருக்க முடியாதே என்று நினைக்கும்போதே உள்ளறையிலிருந்து எளிய தோற்றத்திலிருந்து ஒரு பெண்மணி வந்தார். என்னைப் பார்த்ததும் அவரது முகபாவம் மாறியது.

“இதுதான் லட்சுமி, எங்கள பாத்துக்கறா, எம் பொண்ணு இங்கிருந்து நாலு மைல் தள்ளி இருக்கா, ரெண்டு நாளைக்கொரு தரம் பாக்க வருவா,” என்றார் பெரியவர்.

அதற்குள் அந்த லட்சுமி, “தெரிஞ்சவாளா சார், கொஞ்சம் சொல்லிட்டு போங்கோ! இப்படி சொல்லாம கொள்ளாம வெளில போயிடறார், ஏதாவது ஆச்சுன்னா நான் அவர் மகளுக்கு என்ன பதில் சொல்லறது? நான் படுத்துருக்கற அந்த மாமியோட பீ மூத்தரம் அள்ளுவனா, சமயலப் பாப்பனா, மத்த வீட்டு வேலைய கவனிப்பனா? இல்ல, இவரையே பாத்துண்டிருப்பனா? என்னதான் கைய நீட்டிக் காசை வாங்கினாலும் இவ்வளவு வேலையை ஒண்டிமா எப்படி சார் செய்யறது. சொல்லுங்கோ,” என்று பொரிந்து தள்ளிவிட்டார்.

பெரியவர் முகத்தில் இப்போது ஒரு அசட்டுக் களை வந்திருந்தது. வாயே திறக்கவில்லை. என் பார்வை அந்தத் ரூம் பக்கம் போவதைப் பார்த்து மெல்லச் சொன்னார், “என் வைஃப்தான் சார், இப்ப ஒரு நாலு வருஷமா படுத்த படுக்கையாயிட்டா, எல்லாம் பெட்லதான். பாவம், இந்த லட்சுமிதான் எல்லாம் செய்யறா. நல்லவா சார். என்ன, அப்பப்ப என்னைக் கொஞ்சம் திட்டுவா,” என்று சொல்லி குழந்தை மாதிரி சிரித்தார்.

என் கவனம் உள்ளே படுக்கையிலிருந்த பெண்மணியின் மேலே இருந்தது. இப்போது அவர் சற்றே திரும்பி ஒருக்களித்து எங்களைப் பார்க்கத் தொடங்கியிருந்தார்.

பெரியவர், “லட்சுமி, சாருக்கு ஒரு தம்பளர் காபி போடு, அப்படியே எனக்கு அரை தம்பளர் குடு,” என்று சொல்லிக் கொண்டிருந்தார். லட்சுமி முணுமுணுப்புடன் உள்ளே போக, நான் அவசர அவசரமாக, “இல்ல சார், நான் காபி டீ குடிக்க மாட்டேன். அப்பறம் ஒரு வேலையிருக்கு உடனே போகணும்,” என்றேன்.

வாய் இதைச் சொல்லிக் கொண்டிருந்தாலும், கண்கள் அந்த அறையில் படுத்திருந்த சங்கரின் அம்மாவையேதான் பார்த்துக் கொண்டிருந்தன.. அப்போது சட்டென்று அவரும் என்னை பார்த்தார். ஒரு கணம் என் கண்களை சந்தித்தது அவரின் கண்கள். என்னவோ சொல்ல எத்தனிக்க, வாய் கோணத் தொடங்கியது, கொஞ்சம் இனம் புரியாத சத்தங்கள் வந்தன. பெரியவர், “சார், அவ உங்களப் பாத்துதான் ஏதோ சொல்ல ட்ரை பண்றா,” என்றார்.

பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்த முதிய கண்கள் அப்போது பெற்ற கூர்மை என் வயிற்றிலிருந்து ஒரு சங்கடத்தைக் கிளப்பி நெஞ்சை லேசாக அடைத்தது. அர்த்தமற்ற ஒலிகள் இப்போது சற்றே தெளிவடையத் தொடங்கின. என்னை மிகக் கூர்மையாக பார்த்தபடி, மிகத் தெளிவாக அவர் சொன்ன, “பொள்ளாச்சி, பொள்ளாச்சி,” என்ற சொற்கள் என் காதைக் கிழித்தன. அடுத்த கணம் நான் அந்த வீட்டிலிருந்து வெளியேறி ஒரு கணத்தில் ரோட்டைக் கிராஸ் செய்து வண்டியை அடைந்து உதைத்துக் கிளம்பினேன்.

பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் அந்தப் பக்கம் போனபோது அந்த வீட்டில் ஏதோ விசேஷம் போல ஒரு சிலர் வெளியே போவதும் வருவதுமாக இருந்தார்கள். எனக்கு ஏதோ புரிந்தது போலிருந்தது. வெளியே வந்த ஒருவரின் பின்னால் தொடர்ந்து சென்று மெதுவாக, “சார், அந்தத் வீட்ல என்ன சார்?” என்று தயங்கியபடியே கேட்டேன். உனக்கென்ன அதில், என்ற தொனியில் எற இறங்கப் பார்த்தாலும், “ஒரு டெத்து சார், காரியம்லாம் முடிஞ்சு இன்னிக்கு 13ம் நாள் கிரேக்கியம்,” என்றார்.

“அடடா முடியாம படுத்திருந்தாங்களே அந்த அம்மாவா?”

”அந்தக் கொடுமையை ஏன் சார் கேக்கறீங்க? அப்படியாவது நடந்திருக்கலாம். அவங்க ஆத்துக்காரர், எனக்கு சித்தப்பா முறை, அவர் போயிட்டாரு சார், திடீர்னு,” என்றார். நான் எதுவும் பதில் சொல்வதற்கு முன், “சார் அதோ பஸ்ஸு வந்துடுத்து,” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்து சென்று விட்டார். நானும் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தேனே தவிர எவ்வளவு நேரமான பின்னும் என்னால் உள்ளே போக முடியவில்லை.

அரவான் – வளவ.துரையன் கட்டுரை

பாண்டவர்கள் திரௌபதியை மணம் முடித்தனர், இந்திரப்பிரஸ்தம் என்னும் அழகிய நகரை அமைத்தனர். அங்கே தங்கியிருந்து தருமன் தாயின் சொல்லைக் கேட்டும், தம்பியரை மதித்தும் நீதி தவறாது ஆட்சி செய்தான். அந்நாளில் ஒரு நாள் நாரதமாமுனிவர் அங்கு வந்தார். அம்முனியை வரவேற்ற அவர்கள ஆசனத்தில் இருத்தி வணங்கினார்கள்.

அப்போது அவர், பாண்டவர்களுக்கு ஒரு வரலாற்றைக் கூறினார். “முன்னொரு காலத்தில் சுந்தன், உபசுந்தன் என்னும் இரு அசுரர்கள் இருந்தனர். அவர்கள் இந்திரனின் ஏவலால் அங்கு வந்த திலோத்தமை என்னும் அழகியைக் கண்டனர். அவள் மீது காமம் கொண்டு இருவருமே அவளை அடைய விரும்பினார்கள். அதனால் இருவரும் போர்செய்து மாண்டனர்”

இந்த வரலாற்றைக் கூறிய நாரதர், “நீங்கள் ஐவரும் முற்பிறவியின் பயனாக திரௌபதியை ஒருங்கே மணம் புரிந்துள்ளீர்கள். ஆனால் ஒவ்வோர் ஆண்டுக்கு, உங்களுள் ஒருவர் ஒருவராகத் திரௌபதியைக் கூடி வாழ்வீர். மேலும் திரௌபதி ஒருவருடன் சேர்ந்திருக்கும் காலத்தில் மற்றவர் அவளைக் காணுதல் முறையாயாகாது. மாறாகக் கண்டுவிட்டால் அப்படிப் பார்த்தவர், ஓர் ஆண்டு வரையிலும் தன் வடிவம் மாறிப் பரிகாரமாகப் புண்ணிய தேசங்களைக் கண்டு நீர்நிலைகளில் நீராடச்செல்லவேண்டும் என்பதே முறையாகும்.

“எண்ணுறக் காணில் ஓர் ஆறு இருதுவும் வேடம் மாறி

புண்ணியப் புனல்கள் ஆடப் போவதே உறுதி”

நாரதர் இப்படி அறிவுரைகள் கூறிச் சென்றபின் பாண்டவர் ஐவரும் அந்நெறிப்படியே இல்லறம் நடத்தி வந்தனர். ஒரு நாள் ஓர் அந்தணன், இந்திரப் பிரஸ்த அரண்மனையின் முன்னால் வந்து, “வேடுவர்கள் என் பசுக்களை எல்லாம், அவற்றைக் காப்பவர்களிடமிருந்து பறித்துச் சென்றனர்” என முறையிட்டான்.

இதைக் கேட்ட அருச்சுனன், “நீ வருந்தாதே! அச்சப்படாதே! நான் உன் பசுக்களை மீட்டுத் தருவேன் என்று கூறினான். வேடர்களுடன் போரிடத் தன் காண்டீபத்தை எடுக்கப் படைக்கலக் கொட்டிலுக்குச் சென்றான். அப்படிச் செல்லும் வழியில் சோலை ஒன்றில் தருமனுடன் விளையாடிக் கொண்டிருந்த மயில் போன்ற திரௌபதியின் சிறிய அடிகளைக் கண்டான்.

“வெஞ்சாயம் எடுப்பான் வரு விசயன் தருமனுடன்

மஞ்சு ஆர் பொழில் விளையாடிடு மயில் சீறடி கண்டான்”

அப்படித்தான் பார்த்ததால் அருச்சுனன் உடல் நடுங்கினான். நாணம் கொண்டான். இருப்பினும் தான் வந்த செயலை மேற்கொண்டு வில்லையும், அம்புகளையும் விரைவாக எடுத்துக் கொண்டு சென்றான். வேடர்களிடம் சென்று அவர்களை வென்றான். பசுக்கூட்டத்தை மீட்டான். பின் அருச்சுனன் தான் செய்ததற்குப் பரிகாரமாக, நாரதர் சொன்னபடி அரச கோலத்தை விட்டு நீங்கி, வைதீகக் கோலம் கொண்டு தீர்த்த யாத்திரை புறப்பட்டான்.

அருச்சுனன் கங்கை ஆற்றில் நீராடச் சென்ற போது அங்கே ஆதிசேடனுக்கு உரிய நாகர் உலகத்து மகளிர் நீராட வந்தனர். அவர்களில் மிக அழகாக இருந்த உலூபி என்பவளின் மீது அருச்சுனன் காதல் கொண்டான். அவள் பின்னால் சென்று பாதாள லோகத்தை அடைந்து அங்கே உலூபியை மணந்து கொண்டான். அவர்கள் இருவருக்கும் அரவான் பிறந்தான்.

”செம்மென்கனி இதழாளொடு சில்நாள் நலம் உற்றான்

அம்மென்கொடி அனையாளும் இராவானை ஈந்தாள்”

[வில்லி பாரதம் அரவானை இராவான் என்றே கூறும்] மகனை உலூபியிடமே விட்டுவிட்டுத் தன் தீர்த்த யாத்திரையை அருச்சுனன் தொடர்ந்து சென்றான்.

அரவான் தன் தாயிடத்திலேயே நாகலோகத்தில் வளர்ந்து பெரியவானான். சில ஆண்டுகள் சென்றன. பாண்டவர் சூதுபோரில் தோற்று நாடு இழந்து வனவாசம் சென்று மீண்டபின்னும், துரியோதனன் அவர்களுக்கு அவர்கள் நாட்டைத் திருப்பித் தராததால் குருச்சேத்திரப் போர் நிகழ்வது உறுதியாயிற்று. கௌரவரும் பாண்டவரும் படைகளைத் திரட்டினார்கள். அச்சமயத்தில் அரவான் தன் படையுடன் பாண்டவர்களுக்கு உதவி செய்ய வந்து அவர்கள் பக்கம் சேர்ந்தான்.

தருமன் அனைவரையும் ஆலோசித்துத் தன் பாண்டவர் படைக்குச் சேனைத்தலைவனாக சிவேதன் என்பவனை நியமித்தான். அப்பொழுது அரவான், ”நான் பகைவரின் அனைத்துப் படைகளையும், ஒரே நாளில் ஒரே அம்பினால் கொல்வேன்” என்று வீரச் சொற்கள் உரைத்தான்.

“அரவமின் நகன் தெவ்வர்

கொற்ற வெம்படை அனைத்தும் ஓர் அம்பினால்

கொல்லன் ஓர் தினத்து என்றான்.

ஆக, போர் நடப்பது உறுதியாகிவிட்டது. போர்தொடங்க நாளூம் குறித்தாகி விட்டது. அடுத்துப் போர் தொடங்குவதற்கு முன்னால் ஒரு சிறந்த வீர்ரைக் களப்பலி கொடுப்பது மரபாகும். துரியோதனன், வீடுமனிடம் என்று, “போர்க்களத்தில் போர் தொடங்கு முன் களப்பலி தருவதற்கு உரியவர் யார்?” எனக் கேட்டான். அதற்கு வீடுமன், “பாண்டவர் பக்கத்தில் இராவான் என்பவன் இருக்கிறான். அவன் நம் படைகள் அனைத்தையும் ஒரு பகலில் கொல்வேன் என்று உறுதிமொழி சொல்லி உள்ளான். அச்சிறந்த வீரனிடம் சென்று, நீ வேண்டி நின்றால், அவன், “கொன்று எனைப் பலிகொடுப்பாயாக” என்று கூறிச் சம்மதிப்பான். நாம் அவனைப் பலிகொடுத்துப் போர் தொடங்கினால் அரசாட்சியையும் நல்வாழ்வையும் அடையலாம்” என்று கூறினான்.

அதைக் கேட்ட துரியோதனன், அரவானிடம் சென்று வேண்டினான். அரவானும், தந்தை முறையில் உள்ள துரியோதனன் உயிர் பிழைத்தற்குக் காரணமான வரம் கேட்பதால், மறுக்காது சம்மதித்து ‘என்னைக் கொன்று பலியிடுவாயாக” என்றான்.

“தாதை உய்வரு வரம் கேட்டு என்னை ஊட்டுக பலி நீ என்றான்”

இவ்வாறு நடந்ததெல்லாம் கண்ணபிரான் அறிந்தார். அவர் இச்செய்திகளைத் தருமனிடம் கூறினார். மேலும். “நீ துரியோதனனுக்கு முன்னால் களப்பலி கொடுக்க வேண்டும்; அப்போதுதான் அவனை வெல்ல முடியும். ஆகவே விரைவாக நீ என்னைக் களப்பலியாய்க் கொடுப்பாயாக” என்று கூறினார். அதைக் கேட்ட தருமன் அதிர்ச்சி அடைந்து, மனம் வருந்தி, “எங்களுக்கு உம்மைப் பலிகொடுத்துப் போரில் வெற்றி வேண்டாம். நாங்கள் இறப்பதே சாலச் சிறந்த்தாகும்” என்று கூறினான்.

உடனே அங்கிருந்த அரவான், ”முன்பு துரியோதனன் வேண்டிக் கேட்டபோது நான் என்னைப் பலியாகக் கொடுக்கச் சம்மதித்து உடன்பட்டேன். இப்போது நீங்கள் என்னைப் பலியாகக் கொடுங்கள்” என்றான். அப்போதும் கண்ணன், “உன்னைத் தவிர எனக்குச் சமமானவர் உலகில் எவரும் இல்லை. ஆகவே நம் இருவரில் ஒருவர்தாம் பலியாக வேண்டும்” என்றார். அப்போது அரவான். “நீ பகைவரை அழித்துப் பாண்டவர்க்குப் போரில் வெற்றியையும், அரச வாழ்வையும் அளிக்கக்கூடியவன்; அப்படி இருக்க நீ ஏன் பலியிடப்பட வேண்டும்? என்னையே பலியாகக் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டான்.

மேலும் அச்சமயத்தில் அரவான் கண்ணனிடத்தில் ஒரு வரம் கேட்டான். ”அதாவது என்னை பலியாய்க் கொடுத்தாலும் சிலநாள்கள் நான் இப்போரைக் கண்டு பகைவர் அழிவதைப் பார்த்தபின் இறக்குமாறு அருள் செய்யவேண்டும்” எனக் கேட்டான்.

‘கடிய நேர்பலி தந்தாலும் காய்அமர் சிலநாள் கண்டு

முடிய நேரலர் வெம்போரில் முடிவு எனக்கு அருளுக என்றான்”

கண்ணபிரான் அவ்வரத்தை ஈந்தார். பின்னர் பாண்டவர் அனைவரும் யாரும் அறியாவண்ணம் தம் பிறப்பிடமான குரு நாடு சென்றனர். அங்கு அதே இரவில் அரவான் காளிதேவியின் முன்னால் தன் உடலின் உறுப்புகளை எல்லாம் ஒவ்வொன்றாக அறுக்க வேண்டிய முறைப்படித் தன் வாளால் அறுத்துத் தன்னைப் பலி தந்தான்..

அடுத்து அரவானைப் பார்ப்பது எட்டாம்நாள் போரில்தான். அன்றைய போரில் அரவான் பல ஆயிரம் வடிவங்கள் கொண்டு எதிரிப் படைகள் எல்லாம் சிதறி ஓடும்படி அம்புகள் விடுத்தான். தான் ஒருவன் மட்டுமே ஒரு பகலில் பகைவர் அனைவரையும் அழிப்பேன் என முன்னர் சொன்னதால் அரவான் பல பெரிய வடிவங்களுடன் போர் செய்து கொண்டிருந்தான். அப்போது துரியோதனனுக்காகப் படைகொண்டு வந்த அலம்புசன் என்னும் அரக்கன் தன் அண்ணன் பகாசூரனைக் கொன்றதால் பீமனைப் பழிவாங்கப் பெரும்படையுடன் வந்தான்.

அவனை இராவான் எதிர்த்துப் போரிட்டு, அவனுடன் வந்த படைகள் அனைத்தையும் அழித்தான். அலம்புசனும் புறமுதுகிட்டு ஓடினான். அப்படி ஓடிய அலம்புசன் மீண்டும் மாயையால் கருடனின் வடிவம் எடுத்துப் போரிட வந்தான். அரவான் நாகர் குலத்தைச் சேர்ந்தவன். அதனால் கருடனைக் கண்ட அளவில் தன் வலிமை அனைத்தும் ஒரு சேர ஒடுங்கியதைப் போன்று ஒடுங்கி நின்றான். அப்படி அஞ்சி நின்ற அரவானை, அலம்புசன் தன் கூரிய வாளை வீசிக் கொன்றான்.

”நின்றவன் தன்னை அந்த நிருதனும் வடி வாள் ஓச்சிக் கொன்றனன்”

இவ்வாறுதான் வில்லிபுத்தூரார் தாம் எழுதிய பாரதத்தில் அரவானைக் காட்டுகிறார். இதில் கூட தன்னைப் பலியிட்டுக் கொண்ட அரவான் எப்படி மீண்டும் முழு வடிவம் எடுத்துப் போர் செய்தான் என்பதற்கு எந்த விவரமும் இல்லை. வியாச பாரதத்தில் அருச்சுனன் தீர்த்த யாத்திரை செல்லும்போது உலூபியைக் கண்டு மனம் புரிந்து அரவானை மகனாகப் பெற்றான் என்ற அளவில்தான் உள்ளது. வேறு செய்திகள் இல்லை.

 

கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில், அரவானின் பலிக்குப் பிறகு அவரது உடல் மீண்டும் தானாகவே ஒன்றிணைந்து முழுமையானதாகவும், இதனால் போரின் எட்டாம் நாள் அரவான் வீர மரணம் அடைய முடிந்ததாகவும் விளக்கமளிக்கப்படுகிறது.

தமிழ் இலக்கியத்தில் அரவானைப் பற்றிய குறிப்பு முதன்முதலில்   பெருந்தேவனார் ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதிய பாரத வெண்பாவில்தான்   காணப்படுகிறது. இதுவே மகாபாரதத்தின் தமிழ்ப் பதிப்புகளுள் தற்போது கிடைப்பவனவற்றுள் மிகப் பழமையானது எனக் கருதப்படுகிறது. பதினான்காம் நூற்றாண்டில் வில்லிபுத்தூராழ்வார் இயற்றிய மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் நல்லாப்பிள்ளை எழுதிய மகாபாரதங்களிலும் அரவான் பற்றிய கதை காணப்படுகிறது.

கூத்தாண்டவர் கோவிலைப் பற்றிய கூத்தாண்டவர் தல புராணம் என்ற நூலில் அரவான் கதை எழுதப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இராவான் எனும் பெயர் அரவான் என்று தென்னிந்தியாவில் வழங்கப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் அரவான் இரண்டு வழிபாட்டு மரபுகளில் வணங்கப்படுவதைப் பார்க்க முடிகிறது.

கூத்தாண்டவர் வழிபாட்டு மரபு மற்றும் திரௌபதி வழிபாட்டு மரபு என்றும் அவை கூறப்படுகின்றன.  கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில் அரவான் கூத்தாண்டவர் அல்லது கூத்தாண்டர் என்று வழிபடப்படுகிறார். . கூத்தசுரன் என்ற அரக்கன் ஒருவனைக் கூத்தாண்டவர் வதம் செய்வதாகக் கூறும் ஒரு புராணக் கதையின் அடிப்படையில் இந்தப் பெயர் ஏற்பட்டது என்று கூறுகின்றனர்.

தமிழில் அரவு என்பது பாம்பைக் குறிக்கும். தமிழ்ப் பெயரான அரவான் அரவு என்ற சொல்லிலிருந்து உருவானதாகக் கூறலாம். அரவானுக்கும் பாம்புக்கும் உள்ள தொடர்பு அவரது உருவத்தோற்றத்தில் வெளிப்படுகிறது.]

 

அரவான் கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில் ஒரு முக்கியமான கடவுளாக இருக்கிறார்.. திரௌபதி வழிபாட்டு மரபிலும் அரவான் முக்கியப் பங்கு கொண்டு விளங்குகிறர். இந்த இரண்டு வழிபாட்டு மரபுகளும் குறிப்பாகத் தென்னிந்தியாவில் அரவானைக் கிராம தெய்வமாக வழிபடும் பகுதிகளிலிருந்து தோன்றியவை என்று கூறலாம். அரவான், அலி என்று அழைக்கப்படும் திருநங்கைகள் சமூகத்தின் காவல் தெய்வமாகவும் திகழ்கிறார்.

அரவான் அருச்சுனன் மற்றும் உலுப்பியின் மகன் என இரு புராணங்களில் காட்டப்படுகிறார். ஒன்று விஷ்ணு புராணம் மற்றொன்று பாகவத புராணம் எனலாம்.

பாரத வெண்பாவில், அரவான் கிருஷ்ணரிடம் தான் போர்க்களத்தில் ஒரு சிறந்த வீரனால் வீர மரணம் அடைய வேண்டும் என்ற ஒருவரத்தை மட்டுமே வேண்டியதாகக் கூறப்படுகிறது. ஆனால் பொதுவாகத் தமிழ் மரபுகளில் அரவான் மூன்று வரங்களைக் கேட்டதாகக் காட்டப்பட்டுள்ளது. கூத்தாண்டவர் மற்றும் திரௌபதி ஆகிய இரண்டு மரபுகளிலுமே, அரவான் 18 நாள் போர் முழுவதையும் காண வேண்டும் என்ற இரண்டாவது வரத்தையும் பெற்றதாகக் கூறப்ப்டுகிறது. வில்லிப்புத்தூராழ்வாரின் 14ஆம் நூற்றாண்டு மகாபாரதப் பதிப்பில் இரண்டாவது வரம் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன.

இந்தப் பதிப்பில்தான், அரவான் போரில் எதிரிகள் பலரைக் கொன்று வீர மரணம் அடைந்த பின்னர் சில நாட்கள் மட்டும் போரைப் பார்ப்பதற்கான வரத்தைப் பெறுவதாக உள்ளது. மூன்றாவது வரம் பற்றிய தகவல்கள் நாட்டுப்புறக்கதைகளில் மட்டும்தான் உள்ளன. தான் தன்னைப் பலி கொடுக்குமுன் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்னும் மூன்றாம் வரத்தைப் பெறுவதன் மூலம் அரவான் தன் உடலைத்தகனம் செய்து ஈமச்சடங்குகள் நடக்க வழிவகை செய்ய எண்ணுகிறார்.

மணம் புரியாதவர்கள் புதைக்கப்படுவர். ஆனால் அரவானைத் திருமணம் செய்து கொண்டால் அவர் தன்னைப் பலியிட்டுக் கொள்வதால் மணமாகும் பெண் விதவையாவது நிச்சயம் என்பதால் அரவானை எந்தப் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. இந்தச் சிக்கலைத் தீர்க்க முடிவெடுத்த கிருஷ்ணர், உடனே மோகினி என்னும் ஒரு பெண்ணின் வடிவம் ஏற்று அரவானைத் திருமணம் செய்து கொண்டு ஓர் இரவு அரவானுடன் கழிப்பதாகக் கூத்தாண்டவர் மரபில் கூறப்படுகிறது.

அரவான் தன்னையே பலி கொடுத்த அடுத்த நாளில் கிருஷ்ணர் மோகினியின் வடிவில் தன் கணவன் இறந்துவிட்டதால் விதவைக் கோலம் பூண்டு புலம்பியதாகவும், அதன் பிறகு மீண்டும் பழைய ஆண் வடிவத்திற்கு மாறிய அரவான் போரில் ஈடுபட்டதாகவும் இம்மரபில் கூறப்படுகிறது. தெருக்கூத்துக் கதைகளில் சிறப்பான முறையில் அரவானின் திருமணச் சடங்குகள் நடைபெறுவது காட்டப்பட்டு, மோகினி திடீரென்று பிரிந்து செல்வது போலவும் காட்டப்படுகிறது.

இது இத்திருமணம் உடலுறவில் முடியவில்லை என்பதைக் குறிக்கிறது. திருநங்கைகளிடையே பிரபலமான மற்றொரு கதைவழங்குகிறது. அதில் அரவான் தாம்பத்திய இன்பத்தைப் பெற வேண்டியே திருமண வரம் பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் திருமணத்துக்கு பின் அரவான் மோகினியுடன் உடலுறவு கொள்வது கூறப்படுகிறது.] திருமணம் பற்றிய இந்த மூன்றாவது வரம் குறித்து அனைத்து நாட்டுப்புற மரபுகளிலும் ஒரே மாதிரியான செய்திகள் இல்லை எனலாம்.

இன்னும் சில மரபுகளில் கிருஷ்ணர் போருக்கு முன்பு வேறு சில திருமணங்களை ஏற்பாடு செய்வதாகக் கூறப்படுகிறது. தஞ்சாவூர் மரபுகளில் அரவானுக்கும் மோகினிக்கும் திருமணம் நடப்பதில்லை. மாறாக அரவான், கிருஷ்ணரின் இளைய ஒன்றுவிட்ட சகோதரன் சாத்யகியின் மகள் பரவநாச்சியாளை திருமணம் செய்து கொள்வதாகக் கூறப்படுகிறது.

இப்படி அரவானின் வாழ்வில் பல புதிர்களைப் பல பாரத நூல்களும் நாட்டுப்புறக் கதைகளும் கூறினாலும் அரவான் ஒரு தியாக வாழ்வு வாழ்ந்தான் என்பதில் ஐயமில்லை எனலாம்.