Author: பதாகை

உறங்கி எழும் வீடு – அருணா சுப்ரமணியன் கவிதை

ஒவ்வொரு முறை நான்
வெளியேறும் போதும்
உற்று கவனிக்கிறேன்..
ஒரு நீண்ட கொட்டாவியும்
என்னுடன் வெளியேறுகிறது…
வேறு வேலையெதுவுமில்லை
என்று கதவடைத்து
உறங்க செல்கிறது என் வீடு..

மாலை திரும்புகையில்
யாருமற்ற வீட்டிலும்
அழைப்புமணியை
அழுத்தாமல் நுழைவதில்லை..
போர்வையை உதறி
சோம்பல் முறித்து
ஓடி வந்தென்னை
அணைத்துக் கொள்கிறது
உறங்கி எழும் என் வீடு…

மிதப்பு – இவான்கார்த்திக் சிறுகதை

மலத்திலிருந்து எழுந்து வந்திவன் சொல்வதை கேட்க உங்கள் காதுகள் கூசலாம். ஆனால் உங்கள் உடம்பிலும் உள்ளுறைந்திருப்பதே அக்கூசும் மலம். “அதுவும் நம் பிரம்மம்” என்று எங்கள் பழைய குலக்குரு கூறுவார் , ஆம் அவரும் ஒரு இலையான். அந்த தெருவின் கடைசியிலிருக்கும் மதுக்கடையில் நான் உணவிற்காக வளமையாக செல்வது , நாங்கள் இன்னும் விளைவிக்க பழவில்லை , உணவு சேகரிக்காத நாடோடி நிலையிலிருக்கிறோம். அதுவே எங்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாழ்க்கை.

அது ஊரின் முழுக்குடிகாரகளின் முக்கடல் சங்கமிக்கும் குமரி முனை. கால் வைத்தால் தட்டுப்படும் குப்பைகள் மட்டுமேயான அமுதவெளி எச்சில் கடல். நின்று நிதானமாக நான் தின்று இளைப்பாறி வரலாம் ஒருவரும் விரட்டும் நிதானத்தில் அங்கிருப்பதில்லை. காலகள் உளைகின்றன சற்று ஆசுவாசமாக கைகளை சுத்தப்படுத்திக்கொண்டு போகலாம். நான் இந்த இடத்தை தேர்ந்தெடுத்ததற்கு வெளிப்படையான காரணங்கள் இருக்கின்றன.முதல் காரணம் எளிதான உடம்பு நோவாத உணவு. இரண்டு , வித விதமான் பொழுது போக்குக்கதைகள்.

மனிதர்களிடம் கேட்கும் கதைகள் எங்கள் குழுவில் ரொம்ப பிரசித்தம். முருகி ஒரு முறை “நான் செல்லும் வீட்டின் குடும்பத்தில் ஒருவரை ஒருவர் கொல்ல தனிமையில் திட்டமிடுகின்றனர். திரும்பி என்னைப்பார்த்ததும் மொத்த குடும்பமும் கையில் ஆயுதங்களுடன் என்ன அடித்து விரட்டின. பார் என் இடது இறக்கைகளில் இருக்கும் கிளிசலை” என்று இறக்கையை விரித்து காட்டி தொடர்ந்தாள் “ஆனால் அவர்கள் சேர்ந்திருக்கையில் சிரிப்பும் கூத்தும் ஆகா களைகட்டுகிறது” என்றாள். விசித்திரமான புரிந்து கொள்ளமுடியா கதைகள்.

சூரியன் தொலைந்ததும் மனிதர்கள் கூட்டமாக வந்து எங்களைப்போல் குவிகின்றனர். தினமுன் நூற்றுக்குமேற்பட்ட கதைகள் சுழன்று அலைந்து பின் அடங்குகின்றன. நமக்கு மெத்த பிடித்தது மரணங்களின் துயரங்களின் கதைகள் தானே!. சந்தோசத்தின் கதைகள் நல்லதாகவேயுள்ளன, ஆனால் ஏனோ அதில் பிடித்தமில்லை , வெறும் அலங்கரிக்கப்ப்ட்ட குப்பைகள். அந்த மேசைகளின் விளிம்பில் கண்ணிமைக்காமல் மோவாயின் கைவித்து கவனித்திருப்பேன். அடிக்கடி தின்பதற்கும் குடிப்பதற்கும் அவர்களே எனக்கும் படியளப்பார்கள் , தர்மவாதிகள்.

தர்மவாதிகள் வரும் நேரமாகிவிட்டது. கடைக்குள் நுளைந்த எனக்கு துக்கம் மனிதர்களின் மூச்சுக்காற்றென சுழன்றடித்தது . குப்பைகள் துடைத்து எறியப்பட்ட சுத்தமான தரையில் மேசைகள் ஒய்யாரமாய் அமர்ந்து நக்கல் சிரிப்புச்சிரித்தன. கனத்த நெஞ்சுடன் இயல்பாக பறக்க முயன்றேன். சொர்க்கம் துடைத்தெறியப்பட்டு விம்மலுடன் நரகமாகியிருந்தது. ஒன்றும் செய்வதற்கில்லை , காத்திருப்போம் இன்றைய பட்சணத்திற்கு. ஒருவர் பின் ஒருவராய் வந்து அமர்ந்து கொண்டிருந்தனர். எங்களுக்குள் இருக்கும் ஒப்பந்தத்தின் படி எனக்கு ஒதுக்கப்பட்ட மேசையின் அமர்ந்து வாசலைப்பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருவர் பின் ஒருவராக வந்து என் மேசையைத்தாண்டி சென்று மற்றதில் அமர்ந்தனர். ஆத்திரத்தில் மற்ற மேசைகளுக்கு பறந்து நண்பர்களிடன் அனுதாபம் தேடினேன். அவர்கள் சாப்பாட்டில் மும்முரமாகி என்னை கவனிக்கத்தவறினர். அவர்களுக்கு சோறு கிடைத்து விட்டது. சோறு கண்டயிடம் சொர்க்கம் இல்லையா!

திரும்பி வந்து என் மேசையில் அமரும் பொழுது அங்கு என் மூன்று தர்மர்கள் நிதானமாக அமர்ந்து ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக்கொண்டிருந்தனர். ஆகா , என்ன அற்புத காட்சி. சந்தோசப்பட நேரமில்லை அதற்குள் அடிக்க வருகிறார்கள். சீ…இவர்களா தர்மபிரபுக்கள். அவர்களுக்கு தெரியமாலே படியளப்பார்கள் , யோசித்து செய்வது தர்மமில்லையல்லவா! இருந்தாலும் என்ன , என்னை பிடிக்க இல்லை அடிக்க முடியுமா , ஹா…ஹா….மறைந்திருந்த என்னை அவர்கள் காண்பது எளிதல்ல. பொறுமை எருமையை விட பெரியது , ஆம் முக்குத்தெரு எருமை எவ்வளொ பெரியது. அதன் காதுகளில் ஒளிந்து விளையாட்டு காட்டினால் ஜோராக இருக்கும். இப்பொழுது பசி காதையடைக்கிறது.

ஆ…எச்சில் துப்பிவிட்டான். இவன் சீக்கிரம் செத்து விடுவான் போல ரத்தம் கலந்திருக்கிறது. இறந்தால் இவன் வாய்க்குள் நுளைந்து மூக்கின் வழி வரலாம். பின் அவனே என் முழு உணவு. செத்தும் கொடுக்கும் மனிதர்கள் ஆகா…புண்ணியம் ! புண்ணியம்!. அவன் குடிக்கும் குப்பி , டம்ளர்களைத்தவிர மற்றவற்றில் திரிந்தலையலாம். அது தலையை கிறக்கும். எனக்கிருக்கும் மினுங்கும் கண்கள் மேலும் மினிங்கித்தள்ளும். பச்சை நிற கோழி மாமிசம். இதில் நிற்க முடியவில்லை எண்ணை வழுக்கு. கைகளால் தடவி எடுத்து பறந்து மீண்டும் அமருவோம். பசியாறுகிறது. இனி செவிக்குணவு…

“இங்கேரு , எனக்குல்லாம் செத்தா சொர்க்கொந்தான். அப்பேர்ப்பட்ட வாழ்க்கையாகும். சீதை சீணிச்சி கெடந்து இண்ணையோட ஆறு வருசமாச்சி. ஒரு நாள் அவ பீ மூத்தரம் அள்ளாம இருந்துருப்பனா. பொன்னாட்டுலா பாத்துக்கிடுதேன்”

“மகேசு , நீ பாக்கது லேசுபட்ட காரியமில்ல மக்கா மனசிலாச்சா. பெத்த பிள்ளைய தொட்டில்ல போட்டு உறக்காட்டுக மாரிலா டெய்லி போட்டுட்டு வாற. நீ வெப்ராளப்படாம குடி”

“பரமசிவம் , இவன் பிரங்கத்த கேக்கவா வந்தோம் , மத்தத கைல எடுத்து வச்சாலே இவன் இந்த கதையத்தான் டெய்லி சொல்லிட்டு திரியான். சவத்தெழவு , கேட்டு கேட்டு புளிச்சுப்போச்சுல்லா , பொறவு தண்ணிக்குடிச்சி ஒண்ணுக்கடிச்ச கதையாக்கும். செத்தது நம்ம மாஸ்டராக்கும். அந்த கதைய பேசுக மாரினா இன்னிக்கி இங்க இருப்போம். இல்லண்ணா பேறண்டே. ”

“நீ ஏண்டே கெடந்து துடிக்க , அவன் ஒரு ட்ரிப்பு சொல்லிட்டுதா போட்டுமே. உனக்க பொண்டாட்டியா கெடைல கெடக்க. மாஸ்டரு பெரிய மயிரு மாஸ்டரு. குடும்பத்த விட்டுப்போடு பயந்து தொங்கிச்செத்தான். சீ…ரோட்டுல பிதுங்கிச்செத்த நாய் மாரி”

“லேய் ஜஸ்டினே , மாஸ்டர பத்தி தரக்கொறவா பேசுனா கொடல உருவிப்போடுவேனாக்கும் ஆமா”

“ஆமா புடுங்குன மாஸ்டரு , வீட்டுல நாலு பிள்ள இருக்கு , மனசுல ஒரு இது வேணும்ல… பின்ன என்னத்த யூனியன் லீடரு , சப்பு சவரெல்லாம். உனக்க மயிரு மாஸ்டரு செத்து அவனுக்க வீட்டுல கெடக்க எல்லாத்தையும் கொல்லப்போறானாக்கும்”

திரும்ப திரும்ப இவர்கள் ஏன் செத்துப்போவதை இவ்வளவு கொடூரமாக வர்ணிக்கிறார்கள். நாங்களேல்லாம் இவர்கள் கண்களுக்கு தெரிவதேயில்லை. செத்த உடலில் கோடிப்புளுக்கள் துளைத்து தெளிவது உயிர் பெருக்கமல்லாவா. ஹீம்…மடையர்கள்.

“ஜஸ்டினே , இண்ணைக்கி நீ பாக்குற சோலி , உடுத்துக உடுப்பு எல்லாம் நம்ம மாஸ்டரு உழைச்சு நிண்ணு கொடுத்ததாக்கும். ஊரார் குடும்பத்த பாத்து அவரு குடும்பத்த விட்டுப்போட்டாரு”

“செரிதாண்டே மக்கா , குடும்பம் தனிச்சொத்து அரசுண்ணு தானடே நம்ம சட்டம் சொல்லுகு , அப்படிப்பாத்தாக்ககூட குடும்பத்த மொதல்ல வச்சி காப்பத்திருக்கணும்லா”

“சீக்கிரம் போணும் , சவத்துக்கு வெள்ளி கெழமையாக்கும் பதுவா துணி மாத்துகது. மறந்தா அவ வாய்ல நீச வார்த்த கேக்க முடியாதாக்கும்”

“நீ பயராம கொஞ்சம் அமந்து இரி மகேசு. உனக்கு ஜஸ்டினே , ஒரு ஆஃப் எடுப்பமா. எல்லாம் மூத்தரமா போச்சி”

நீராகாரம் நிறைய எடுத்துக்கொள்கிறார்கள். தின்பது குறைவு இடையிடையே புகைத்தல். நேரம் கடந்த பின் முன்பு சொன்னது போல இவர்கள் வாய் வழி போய் மூக்கில் வரலாம் பிணச்சுரணை. இந்த மகேசு எதையும் கேட்டதாக தெரியவில்லை. சீதாப்புராணம் தான். இவன் மாற்றி மாற்றி பேசுவதைப் பார்த்தால் இவனே அவளை கொன்றுவிடுவான் போல.

“நானாக்கும் மொதல்ல பாத்தது , கண்ணு பிதுங்கி வெளிய கெடக்கு. மலம் ஜலம் ரெண்டும் வழிஞ்சி போயிருந்துச்சு. நல்ல கம்பீரமான மொகம் சாகதுக்கு முன்னால எதையோ பாத்து வெறச்சி நின்ன மாதிரி மேலையே பாத்துட்டு இருக்கு. ஒடஞ்ச கொடக்கம்பியாட்டும் கையும் காலும் நிக்கி”

“மாஸ்டரு இப்படி கடன் வாங்கப்பிடாது பரமசிவம். மத்தவனுக்கு இவரு கடன் வாங்கிக்கொடுத்து எவனும் திருப்புத்தரல்ல. கொடுத்தவனுக்கு பேச்சு கேக்க முடியாம பயந்து போயி செத்துப்போனாரு”

“கணக்கு வழக்கு பாக்கத்தெரியாது , கேட்ட குடுக்கதும் இல்லண்ணா வேற இடத்துல வாங்கி கொடுக்கதும் கூடிப்போச்சு. பின்ன இப்படி ஆகாம என்ன செய்யும்”

“நடு வீட்டுல துர்மரணம் நடந்தா அந்த வீட்டையே செதச்சிப்போடும் , கூடத்துல உறங்கி எந்திச்சா தொங்குன மேனிக்கி காலு கை விரலு தெரியும்”

“மூத்த பிள்ளைக்கி ரெண்டு மாசத்துல கல்யாணம் தேதி குறிச்சி வச்சிருக்கு. காசு தேராதுண்ணு மாப்பிள்ள வீடு அனக்கமில்லாம போயாச்சு”

“என்ன இருந்தாலும் இழப்பு இழப்பு தான். பொதச்சாக்கூட போய் தொழுக ஓரெடமிருக்கும். எரிச்சி தடையமில்லாம ஆக்கியாச்சு. இனி ஆடி அமாவாசைக்கி கா…கா…கரைய வேண்டியதான்”

“எனக்க பொன்னு மாஸ்டரே…..முன்ன நிண்ணு ஸ்ட்ரைக் நடத்த , கேட்டப்பம் காசு தர. கண்டனம் கடத்தாம பெச இனி யாரிருக்கா”

“எனக்க பொன்னு மாஸ்டரே”

என்ன இது , சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தவர்கள் தலை தொங்க அழ ஆரம்பித்து விட்டனர். மாஸ்டர் இறந்ததில் எனக்கும் வருத்தம்தான். நல்ல மனிதர். ஆனால் எரித்து விட்டனர் முட்டாள்கள்.

“மாஸ்டருக்கெல்லாம் சாவு வருகு , எனக்க சீதைக்கி ஒரு சாவு வர மாட்டங்கே….”

இவனும் அழுகிறான். ஆனால் யாருக்காக. ஆ….என்ன இது காது கிழியும் சத்தம்.

“லேய் மக்கா , நமக்க பாட்டு…நமக்க பாட்டு”

“அடியே மனம் நில்லுனா நிக்காதடி , அடியே எனக்கண்டு நீ சொக்காதடி”

“சீக்கிரம் செத்துருவா. இந்தா நீ ஆடு….”

மட்டில்லா சந்தோஷம். அழுகையில்லா ஆட்டம். கதை விளங்கவில்லை.

“செரி சகோ , நாளைக்கி காலைல மணி சகோக்கு கல்யாணம் மறந்துராதேயும். மாம்பழ புளிசேரி உண்டுண்ணு பேச்சு. பத்து மணிவாக்குல வந்துரும் கலுங்கு பக்கம். நா வண்டில வந்துருகேன்”

“அப்ப செரி”

“இந்த ஈச்ச….சீ….”

அடித்து விட்டனர். இறக்கைகள் பிரிந்து உதிர்கின்றன. நான் மிதக்கிறேன் ஒசிகிறேன். அலைகிறேன். மேசை என்னை தாங்கிப்பிடிக்க வீழ்கிறேன்.

மரணம் நெருங்குகிறது. இந்த கட்டெறும்பு ஒற்றையாக தொய்வில்லாமல் எனைத்தூக்கி நகர்கிறது. உயிருள்ள உண்ணும் உணவு. இருண்ட குகைக்குள் நுளைகிறேன். மாஸ்டர் இங்குதான் இருக்கிறார் போல தெரிகிறது.

பதாகை வெளியீடு – எழுத்தாளர் நம்பி கிருஷ்ணனின் “பாண்டியாட்டம்”

​​எழுத்தாளர் நம்பி கிருஷ்ணன் அவர்களின் “பாண்டியாட்டம்” உலக இலக்கிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூலின் விலை 320/- முன்பதிவு விலையாக 250/-…

A/c no.34804520231
(yaavarum publishers)​​
SBI bank Chinmaya nagar branch
IFSC code: SBIN0007990 or

Gpay 9841643380

ஆன்லைனில் பெற  ​​https://be4books.com/product/7462/

நூல் & அட்டை வடிவமைப்பு : Gopu Rasuvel
எழுத்தாளர்கள் கோட்டோவியம் : ஓவியர் Jeeva Nanthan

இது ஒரு யாவரும் & பதாகை கூட்டு வெளியீடு

தக்காரும் தகவிலரும் – நாஞ்சில் நாடன் கட்டுரை

எனக்கின்று ஓர்மையில் இருக்கும் திருக்குறளில் பாதிக்கு மேல் ஆறாம் வகுப்பு முதல் பாடத்திட்டத்தில் பயின்றவை. தமிழ்நாட்டு அரசியல் அறிவுச் சூழலுக்கு இயைந்து எனக்குமோர் ‘நடமாடும் பல்கலைக்கழகம்’ பட்டம் தரலாம். ஆறாவது முதல் எட்டாவது வரை ஒழுகினசேரி எங்கோடிச் செட்டியார் தமிழாசிரியர். ஒன்பது முதல் பதினொன்று வரை தாழக்குடி மாதேவன் பிள்ளை. வாங்கிய ஊதியத்துக்கு வஞ்சனை இல்லாமல் சொல்லித் தந்தனர் என மொழிவதைக் காட்டிலும் வாங்கிய ஊதியத்துக்கு மூன்று மடங்கு பாடம் நடத்தினர் என்பது பொருத்தமாக இருக்கும். இல்லையென்றால் அறுபதாண்டுகள் கடந்தும் அவர்களின் பெயரினைச் சொல்வேனா? அகப்பையில் கோரக்கோர வருவதற்கு அவர்கள் பானையிலும் தாராளமாக இருந்தது. அல்லாது நாம் மாப்புலவர் குடும்பத்து, மூப்புத் தமிழறிஞர் குடும்பத்துக் குலக்கொழுந்து அல்லவே!

ஏழாவது வகுப்பில் வாசிக்கும்போது எமக்கு அறிமுகமான திருக்குறளின் ஒரு சொல்லே ஈண்டு கட்டுரையில் முயலப்படுவது! வேறு என் செய? திக்கற்றவனுக்குத் திருக்குறளே துணை. திருக்குறளின் அறத்துப்பாலின் நடுவுநிலை அதிகாரத்துக் குறள் அது.

‘தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்’

என்பதந்தக் குறள். வயக்காட்டிலிருந்து நேரே வகுப்புக்கு வரும் எங்களுக்கு அர்த்தமாகும்படிப் பாடம் நடத்துவார்.

ஒருவர் தகுதியானவரா, நேர்மையானவரா, யோக்கியரா, அறமும் ஒழுக்கமும் பேணுபவரா அல்லது புன்மகனா என்பது எப்படித் தெரியும்? அவரது எச்சத்தால் காணப்படும் என்பார் திருவள்ளுவர். பறவைகள் கழிக்கும் மலத்தை யாம் எச்சம் என்போம். மானுடனின் எச்சம் என்பது அதுவல்ல. வாழ்ந்து மறைந்தபின்பு விட்டுச்செல்லும் பெருமைகள் அல்லது சிறுமைகள். வாசம் அல்லது துர்நாற்றம்.

சமூகமே நற்சான்று உரைக்கும், “நல்ல மனுசன் பா!” என்று அபிப்பிராயம் வரும். “மனுசனா அவன்?” என்ற பழிச்சொல்லும் வரும். அதாவது ஒருவன் செய்த நல்லவையோ, அல்லவையோ அவனது எச்சம் எனப்படும். அதுவே அவனைத் தக்காரா அல்லது தகவிலரா என்பதைத் தீர்மானிக்கும்.

தக்கார் என்பது இன்று நமக்கோர் பதவியின் பெயர். தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் போன்ற அமைப்பால் நியமிக்கப்படுவதல்ல. ஆளும்கட்சிப் பிரமுகர்களுக்கான பதவி. இந்து அறநிலையத்துறை ஆலயங்களை நிர்வகிக்க அரசு நியமிக்கும் அறங்காவலரே தக்கார் எனப்படுபவர். TNPSC–க்கும் இதற்கும் என்ன வேறுபாடு எனக்கேட்டால், முன்னதற்குப் போட்டித் தேர்வு எழுத வேண்டும். பெரும்பாலும் அஃதோர் சடங்கு அல்லது சம்பிரதாயம். பணம் பாதாளம் வரை பாயும். தக்கார் என்போரில் பெரும்பான்மையோர் ஆற்றும் அரும்பெரும் இறைப்பணி, சமூக நற்பணி, எவை என நாமிங்கு பேசாதிருப்பதே பெருமை. இந்துக் கோயில்களின் தக்கார் இறை மறுப்பாளராக இருக்கலாம், மாற்று மதத்தவராயும் இருக்கலாம் என்பது சமூக நீதியின் விதி.

அதற்காகத் தக்காருக்கு உண்டியலில் பங்கு, சொத்துக்களை வேண்டியவர்களுக்கு வேண்டியதைப் பெற்றுக்கொண்டு 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடுதல், சிலைகளை ஆபரணங்களை காணாமல் போக்குதல், தம்மைப் பதவியில் அமர்த்திய அரசியல் கட்சித் தலைவருக்கு அத்தக்கூலியாகப் பணிசெய்தல் என்பவை தொழில் என்று நீங்கள் வீணாகக் கற்பனை செய்து கொள்ளலாகாது! இதெல்லாம் செய்வதாயின் அவர் எங்ஙனம் தக்கார்?

எச்சம் எனும் சொல் பற்றியும் நாம் பேசல் வேண்டும். ஒருவன் செய்த தான தருமங்கள், கல்விக்காக மருத்துவத்துக்காக செய்த சேவைகள், தான் சம்பாத்தியத்தையும் மூதாதையர் சொத்தையும் தன் பிள்ளைகளுக்குப் போக மிஞ்சியதை அறக்கட்டளை நிறுவி சமூகத்துக்கு ஆற்றிய பணிகள், மனிதகுல மேம்பாட்டுக்காகச் செய்த ஆய்வுகள், கலை இலக்கியம் இசைக்கு என ஆற்றிய ஊழியங்கள், எழுதிய நூல்கள், செய்த திருப்பணிகள், உடுக்கை இழந்தவன் கையெனப் பிறர்க்குச் செய்த உதவிகள் எனும் எண்ணற்ற காரியங்கள் ஒருவனின் எச்சம்.

தமிழாசிரியர் சொல்வார், “பெத்த பிள்ளைகளும் எச்சம்தான்டா!” என்று. பெரியவர்கள் இலகுவாக அறிவுறுத்துவார்கள், “எலே! அப்பன் பேரைக் காப்பாத்தணும் கேட்டயா?” என்று. “அப்பனுக்குப் பிள்ளை தப்பாமப் பொறந்திருக்கான்” என்பார்கள் பாராட்டாகவும் வசவாகவும்.

இன்றோ அறக்கட்டளைகள் என்பன பெரும்பாலும் வருமானவரி விலக்குக்கும், மறைமுகமான வெளிநாட்டுப் பணங்கள் பெறவும், செலவுக்கணக்கு எழுதவும் என்றே ஆகிப்போயின.

ஒருவனுடைய நல்ல காரியங்கள் யாவுமே அவனுடைய நல்ல எச்சங்கள். தக்கார் என்பது அவரது எச்சத்தால் காணப்படும். தகவிலர் என்பதுவும் அவரது எச்சத்தினாலேயே அறியப்படும். எவரும் அரசுப் பணியை உதிர்ந்த மயிர் என வீசிவிட்டுத் தம் இன மக்களுக்குப் போராட அரசியல் களமாட வரலாம். போற்றுதலுக்குரிய செயல். ஆனால் களமாட எனும் சொல் எழுத்துப் பிழையாகக் களவாட என்று மாறி இருபது ஆண்டுகளில் எழுநூறு கோடி சம்பாத்தியம், ஆயிரத்து இருநூறு கோடி சம்பாத்தியம் என்றால் எச்சத்தால் அவர் தக்காரா, தகவிலரா?

தகவிலர் என்றால் உண்மையற்றவர், நேர்மை அற்றவர், ஒழுக்கம் கெட்டவர், அறத்துக்கே கூற்றானவர், அரசியல் பிழைத்தவர், கூட்டிக் கொடுத்தவர், காட்டிக் கொடுப்பவர், வஞ்சகர், எத்துவாளி, ஏய்ப்பன், பொறுக்கி… என்ற குருவாயூரப்பா!

“நல்லோரு மனுசன்… பொட்டுனு போயிட்டான்” என்று சமூகம் வருந்துமானால் அவர் தக்கார். “பேப்பய… நீசப் பாவி… இப்பமாவது செத்தானே!” என்று சமுகம் ஆசுவாசப் பெருமூச்சு விடுமானால், அவர் தகவிலர். நெஞ்சில் ஈரம் கொண்டு, நியாயமாகப் பொருள் சேர்த்து, தன் சந்ததியாருக்கும் பொருள் ஈட்டி, ஏழை எளிய மக்களுக்கும் கொடுத்துச் சாகிறவன் தக்கார். தன் பெண்டு, தன் பிள்ளை, தன் பேரன், தன் சின்ன வீடு, வைப்பாட்டி, கூத்தியார், தன் கொழுந்தியாள், மைத்துனர், தன் சகோதர சகோதரிகள் அவர் எல்லோரது மக்கள், மருமக்கள் என்று நாட்டைக் கொள்ளையடித்துப் புன்மையான செல்வம் சேர்த்தவர் தகவிலர். இது நம் வசவல்ல, சாபமல்ல, வள்ளுவன் வாய்மொழி.

முன்பே சொன்னேன், எங்கள் தமிழாசிரியர் கற்பித்தார் என. எச்சம் என்பதற்குப் பிள்ளைகள் என்றும் பொருள் கொள்ளலாம் என. அடாவடியாகத் திரியும் சிலரைப் பார்த்து ஊரில் பெரியவர் சொல்வார், “அப்பன் பேரைக் கெடுக்கதுக்குன்னே வந்து வாச்சிருக்கான், கழுதைக்கு மத்தது வாச்சது மாதிரி” என்று. “எப்படியாப்பட்ட மனுசனுக்கு இப்படியாப்பட்ட பிள்ளை!” என்பார்கள். எனவே நன்மக்கட்பேறு வாய்த்தவர் தக்காரும் வாய்க்காதவர் தகவிலருமா? சரி, மக்கட்பேறு இல்லாமற் போனவர்? திருமணமே செய்து கொள்ளாதவர்? எனவே எச்சம் எனும் சொல்லுக்கு மக்களையும் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாமே தவிர, மக்கள் மட்டுமே என்று பொருள் கொளல் பொருந்தாது.

மற்றுமோர் கேள்வியும் உண்டு. தலைவன் ஒருவனுக்கு அவனது தளபதிகள், உப தளபதிகள், சிறு தளபதிகள், குறுந்தளபதிகள் என்போர் எச்சங்களா? காந்தியின், அம்பேத்காரின், மார்க்சின், செகுவேராவின், மாவோவின், பெரியாரின், காமராசரின் வழிவந்தவர் என்று தம்மை அறிவித்துக் கொண்டு கொலையும், கொள்ளையும் வஞ்சகமும் சூதும் தரகும் சுரண்டலும் அரசியல் வாணிபமும் செய்பவரைக் கணக்கில் கொண்டு அவர்களது தலைவர்களைத் தகவிலர் எனக் கொள்ளல் தகுமா? அந்தக் கணக்கில் பார்த்தால் கொண்டாடப்படும் மத குருக்களில் எவரை இன்று தக்கார் எனலாம்? எனவே எச்சங்களைக் கணிக்கும்போது தொண்டர்களையும் விலக்கி நிறுத்துவது தலைவருக்குப் பெருமை.

என்றாலும் தகவிலர் என்று வள்ளுவர் பேசும் குப்பைமேடுகளை, மலக்கிடங்குகளை, கழிவுநீர்க் கால்வாய்களை எத்தகு பட்டங்கள் சூட்டி, எங்கெங்கு சிலை நாட்டி, எப்படி ஆரவார அந்திமங்கள் செய்திருக்கிறோம் என்பதை சிந்தை தெளிவுள்ளோர் ஓர்மைப்படுத்திப் பார்க்கலாம்.

தகவு வேறு தகவல் வேறு என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். தகவல் எனும் சொல்லுக்கு அகராதிகள் தரும் பொருள்களைத் தாழே தருகிறேன்.

தகவல் : 1. Information, Intimation, செய்தி.

‘ஒரு தகவலும் வரவில்லை எனக்கு’ என்று தினமும் புழங்குகிறோம். அரசாங்கமும் ஆளுங்கட்சியும் சொல்ல விரும்புவதை மாத்திரமே பேசுகிற ‘தகவல் தொடர்புத் துறை’ உண்டு. ஊடகங்களும் தமது முதலாளிகள் கட்டளையிடும் தகவல்களை மட்டுமே அரித்துத் திரித்துச் சாயமேற்றி வெளியிடும்.

2. திருட்டாந்தம். திருஷ்டாந்தம் எனும் சமற்கிருதப் பிறப்பு. Citation, Illustration, Example.

3. Appropriate Answer. நேருத்திரம். அதாவது நேர்+உத்திரம். உத்திரம் என்றால் பதில். மலையாளத்தில் உத்திரம் எனும் சொல் புழக்கத்தில் உண்டு. நேர்விடை எனலாம் தமிழில்.

தகவல் எனும் சொல்லுக்கு மூன்று பொருள்கள் என்றால், தகவு எனும் சொல்லுக்கு பதினோரு பொருள்கள் தரப்பட்டுள்ளன அகராதிகளில், நிகண்டுகளில். பதிவுகள் கீழ் வருமாறு.

தகவு : 1. Suitability, Fitness, Worthiness. தகுதி.

தகுதி எனும் சொல் திருக்குறளில் உண்டு. நடுவுநிலைமை அதிகாரத்தின் முதற்குறள் –

‘தகுதி என ஒன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்’

என்று பேசும். அனைத்துப் பகுதி மக்களிடமும் முறை தவறாமல் நடந்துகொள்ளும் நேர்மை போற்றுதற்கு உரியது என்பது பொருள். மணிமேகலை சக்கரவாளம் உரைத்த காதையில் “தகவிலை கொல்லோ?” என்கிறது. தகுதி என்ற பொருளில்.

2. Similitude, Resemblance, Comparison, உவமை.

3. Quality, State, Condition, Manner, குணம்.

4. Emminence, Greatness, பெருமை.

திருவாசகத்தில் யாத்திரைப் பத்து பகுதியில் மாணிக்கவாசகர் ‘தகவே உடையான் தனைச் சாரத் தளராதிருப்பார்’ என்பார். பெருமை உடையவன் தன்னைச் சார்ந்தவர் என்றும் தளர்வடைய மாட்டார் என்பது பொருள்.

5. Mercy, Kindness, அருள்.

தகவுக்கு அருள் எனப் பொருளுரைப்பது சூடாமணி நிகண்டு.

6. தெலுங்கில் தகவு எனும் சொல்லுண்டு. பொருள் Justice, Equity, நடுவு நிலைமை.

7. Strength, Ability, வலிமை.

கம்ப ராமாயணத்தில், கிட்கிந்தா காண்டத்தில், மயேந்திரப் படலத்தில் கம்பன் பேசுவான் –

“நீலன் முதல்பேர், போர் கெழு கொற்ற நெடு வீரர்,
சால உரைத்தார், வாரி கடக்கும் தகவு இன்மை”

என்று. ‘நீலன், அங்கதன், சாம்பன் முதலாய போரில் சொல்லுவதற்கு அரிய ஆற்றல் காட்டும் கொற்ற நெடுவீரர் உறுதியாக உரைத்தனர், தமக்குக் கடல் கடக்கும் வலிமை இல்லை என’ என்பது பொருள்.

8. Knowledge, Wisdom, அறிவு.

தகவு எனும் சொல்லுக்கு அறிவு என்ற பொருள் தருவது அரும்பொருள் விளக்க நிகண்டு. கம்ப ராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில், மந்திரப் படலத்தில் வசிட்ட மாமுனிவன் தயரதனிடம் கூறும் பாடல், “தக்கதே உரைத்தனை; – தகவோய்!” என்பது. ‘தகுந்ததையே உரைத்தாய் அறிவுடையவனே’ என்று பொருள் எழுதினார்கள்.

9. Clarity, தெளிவு.

தெளிவு என்ற பொருளைத் தகவுக்கு தருவது அரும்பொருள் விளக்க நிகண்டு.

10. Chastity, கற்பு.

பரிபாடலில் வைகையைப் பாடும் நல்லந்துவனார்,

‘தகவுடை மங்கையர்’ என்கிறார். கற்புடைய மங்கையர் என்று பொருள் சொன்னார்கள்.

11. Good Behaviour, Morality, Virtue, நல்லொழுக்கம்.

இந்தப் பொருளைத் தருவது யாழ்ப்பாண அகராதி.

ஆக தகவு எனும் சொல்லுக்கு நாமறியும் பொருள்கள் – தகுதி, உவமை, குணம், பெருமை, அருள், நடுவு நிலைமை, வலிமை, அறிவு, தெளிவு, கற்பு, நல்லொழுக்கம் எனப் பதினொன்று. இவற்றுள் உவமை, கற்பு எனும் இரு பொருள்கள் நீங்கலாகப் பிற ஒன்பதுமே திருவள்ளுவர் பேசும்

‘தக்கார் தகவிலர் என்பது அவர்தம்
எச்சத்தால் காணப் படும்’

எனும் குறளுக்குச் சிறப்பாகப் பொருந்துகின்றன. வியப்பாக இருக்கிறது! திருவள்ளுவர் எப்படியாகப்பட்ட சொல்லைக் கையாள்கிறார் பாருங்கள்! அவரே சொல்வன்மை அதிகாரத்தில் கூறுகிறார் –

‘சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து’

என்று. ஐந்து ‘சொல்’ கையாள்கிறார் இந்தக் குறளில். ஆமாம்! தகவிலர் எனும் சொல்லை வெல்லும் சொல் எது?

Recommendation என்ற ஆங்கிலச் சொல் நமக்கு அறிமுகமாகிச் சில நூற்றாண்டுகள் ஆயின. சமூகத்தில் செல்வாக்கு உடையவர்கள் கல்விக்கும் வேலைக்கும் பணி உயர்வுக்கும் ஒப்பந்தங்களுக்கும் நீதிக்கும் இதனைச் செய்து தகவுடைய எளியவர் வறியவர் வயிற்றில் அடித்தனர். பின்னர் Recommendation உடன் இலஞ்சமும் தாலிகட்டிக் கொண்டது. கல்வித்தகுதி எல்லாம் இருந்தாலும் நன்கொடை என்னும் புனைபெயர் பூண்ட இலஞ்சம் என்னை நந்திபோல் வழிமறித்து நின்றது. கோரப்பட்ட இருபத்தைந்தாயிரம் கொடுக்க வக்கில்லை 1970-களில். கல்லூரியில் கணித விரிவுரையாளர் வேலை மறுக்கப்பட்டது. வேலை கிடைத்திருந்தால் இதுபோன்ற கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்க மாட்டேன். புல்கானின் என்பதுபோல் மறைபெயர் ஒன்று தரித்து முற்போக்குப் புரட்சிக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருப்பேன்.

Recommendation என்ற சொல்லை சிபாரிசு என்று தமிழாக்கினர். ‘பெரிய சிவாரிசு இல்லாட்டா கெடைக்காது லே! நமக்கெல்லாம் எங்க? நரி சிவலோகம் போன கதைதான்!’ என்றார் அப்பா. Recommendation என்ற சிபாரிசு ஊழலின் முதல் காலடி. “பையன் நம்ம அக்காளுக்கு மகனாக்கும்… பாத்துச் செய்யுங்கோ!” போன்ற சொற்களே ஊழலின் வாசற்படிதான். இன்று ஊழல், லஞ்சம் எனப் பெருங்கூச்சல் இடுபவர்கள் அதனை மறத்தல் ஆகாது.

இன்று அமைச்சர்களாக, ஆளுநர்களாக, நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்களாக ‘மக்கள் பணி’ ஆற்றுபவரில் பெரும்பான்மையோரும் கட்சித் தலைமகனுக்கு வந்த சிபாரிசுகள் இல்லாமல் சாத்தியமா? மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மன்ற உறுப்பினர் சிபாரிசு எனும் சொல்லின் அர்த்தம் அறியாதவர்களா? பேரூராட்சி தேர்தலுக்கு உறுப்பினர் பதவிக்கு நிற்பவர் ஐம்பது லட்சம் பணம் செலவு செய்கிறாராம். எந்த சிபாரிசுக்கும் செவிமடுக்காமல், அதைப்போல் நூறுபங்குப் பணம் எங்ஙனம் ஈட்டுவார்?

சிபாரிசு என்பது சமற்கிருதச் சொல் என்பதால் அதனைப் பரிந்துரை என்று தமிழ்ப்படுத்தினார்கள். சிறப்புரை, கருத்துரை, தகுதியுரை, அணிந்துரை, முன்னுரை, தலைமையுரை, வாழ்த்துரை, பணிந்துரை, அருளுரை, பரப்புரை போலப் பரிந்துரை. பரிந்து+உரை = பரிந்துரை. அற்புதமான சொல். ஆனால் சிபாரிசு, பரிந்துரை என எச்சொல் பயன்படுத்தினாலும் அது அநீதியின் அடுத்துள்ள சொல்தானே!

ஊழலுக்கான பாதையில் பல படிகள் கடந்து பரிந்துரை எனும் சொல்லில் வந்து தாவளம் போட்டுள்ளோம். Night Soil என்றாலும், சண்டாஸ் என்றாலும், கழிவு என்றாலும், மலம் என்றாலும், உண்மையில் அது பீ தானே நாயன்மாரே!

‘தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்தி
பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்து எந்தாய்
இன்னதென அறிகிலார் தாம்செய்வ திவர்பிழையை
மன்னியும் என்றுஎழிற் கனிவாய் திறந்தார் நம் அருள்வள்ளல்’

என்பது இரட்சணிய யாத்திரீகத்தில் ஹென்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளை பாடிய பாடல். இயேசுபிரான் சிலுவையில் அறையப்படும் காட்சியில். அங்கு பேசப்படும் சொல், பரிந்து.

பரிந்து எனும் சொல்லின் பிறப்பே பரிந்துரை. ஆனால் இன்று பரிந்துரை எனும் சொல் வந்து சேர்ந்திருக்கும் இடம் பரிதாபத்துக்குரியது. பரிந்துரையும் பணமும் இருந்தால்தான் இன்று கல்வி, வேலை, பணி உயர்வு, பதவி, ஒப்பந்தங்கள் and what not? நாம் தக்காரா தகவிலரா?

பேரகராதி தகவுரை என்றொரு சொல் தருகிறது. தகவு+உரை. தகவுரை என்பதன் பொருள் Recommendation, சிபாரிசு என்கிறது பேரகராதி. தொகுக்கப்பட்ட காலத்தில் பரிந்துரை எனும் சொல் பிறந்திருக்காது போலும். ஆனால் தகவுரை எனும் சொல் பன்னிரண்டாம் நூற்றாண்டுச் சொல்.

வைணவ இலக்கிய நூல்களில் அஷ்டப் பிரபந்தம் என்று ஒன்று. அஷ்டம் என்றால் அட்டம், எட்டு. அஷ்டப் பிரபந்தம் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் இயற்றியது. இத்தொகை நூலுக்கு, நூலாசிரியர் அஷ்டப் பிரபந்தம் என்று பெயரிடவும் இல்லை, இவற்றில் அடங்கிய எட்டுப் பிரபந்த நூல்களைச் சேர்த்தும் எழுதவில்லை. பின்னர் தொகுத்தவரோ, பதிப்பித்தவரோ இந்தப் பெயரைச் சூட்டி இருக்கலாம். சோழ நாட்டில் திருமங்கை என்னும் திருத்தலத்தில், அந்தண குலம் என்னும் யாவுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும் அறவோர் குலத்தில், வைணவ சமயத்தில் பிறந்த பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு என்மனார் புலவ!

அஷ்டப் பிரபந்தம் என்றறியப்படுகிற இந்நூற்றொகையின் உறுப்புக்களான பிரபந்தங்கள் அதாவது சிற்றிலக்கியங்கள் எட்டு. திருவரங்கக் கலம்பகம் திருவரங்கத்து மாலை, திருவேங்கட மாலை, திருவரங்கத்தந்தாதி, திருவேங்கடத்தந்தாதி, அழகர் அந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி, சீரங்க நாயகர் ஊசல். ஆக ஒரு கலம்பகம், இரண்டு மாலை, நான்கு அந்தாதி, ஒரு ஊசல். கலம்பகம், மாலை, அந்தாதி, ஊசல் முதலாய சிற்றிலக்கியங்கள் பற்றி அறிய விரும்புபவர் எனது, ‘சிற்றிலக்கியங்கள்’ எனும் நூலைப் பார்க்கலாம். தமிழினி வெளியீடு, 2013.

அஷ்டப் பிரபந்தத்தில் ஏழாவது நூலான நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி எனும் நூலில், திருப்பாடகம் எனும் திருத்தலம் பற்றிய பாடல் :

‘தவம் புரிந்த சேதநரை, சந்திரன், ஆதித்தன்,
சிவன், பிரமன், இந்திரனைச் செய்கை – உவந்து
திருப்பாடகம் மருவும் செங்கண்மால் தன்மார்பு
இருப்பாள் தகவு உரையாலே’

என்பதாகும். முனைவர் இரா.வ.கமலக்கண்ணன் உரை – ‘திருவுள்ளத்தில் மகிழ்ந்து திருப்பாடகம் என்னும் திருத்தலத்தில் நித்திய வாசம் செய்கின்ற சிவந்த கண்களை உடைய திருமால், தவம் செய்த ஆத்மாக்களை சந்திரனும், சூரியனும், சிவபிரானும், பிரமதேவனும், தேவேந்திரனும் ஆகச் செய்வது, தனது வலத் திருமார்பில் வீற்றிருப்பவளான திருமகளினது தகவுரையாலே ஆகும்!’ பாடலில் இருக்கும் தத்துவச் செய்திகளினுள் போக விரும்பாமல் எனதுள்ளம் நிலை கொள்வது, ‘தன் மார்பில் இருப்பாள் தகவுரையாலே’ என்னும் தொடரில்.

தகவுரை எனும் சொல்லின் பொருளாக நாம் சிபாரிசு, பரிந்துரை எனும் சொற்களையே நாடவேண்டியது இருக்கிறது. தகவுரை எனும் சொல் இன்னும் தூய்மையாக இருக்கிறது. சிபாரிசு, பரிந்துரை போல் ஆபாசப்படவில்லை. தக்கார் தகவிலர் என்பது அவரவர் தகவுரையாலும் காணப்படும். பரிந்துரைக்கு மாற்றாக, சகல தகுதிகளுடனும் தகவுரை எனும் சொல்லை அறிமுகம் செய்வதில் எமக்கு கர்வம் உண்டு.

தகவிலார் என்கிறார் திருவள்ளுவர். தகவின்மை என்றுமோர் சொல்லுண்டு. தகவு+இன்மை = தகவின்மை. அறிவு+இன்மை = அறிவின்மை, கரவு+இன்மை = கரவின்மை என்பது போல.

தகவின்மை என்றால் Unworthiness, Un suitability, தகுதி இன்மை என்பது ஒரு பொருள். Injustice, Partiality, நடுநிலை இன்மை என்பது இரண்டாவது பொருள். Trouble, Anxiety, வருத்தம் என்பது மூன்றாம் பொருள். தஞ்சைவாணன் கோவையின், ‘தணிவாய் நின் தகவின்மை’ என்ற பாடல் வரி மேற்கோள். உனது வருத்தம், பதற்றம் தணிவாயாக என்பது பொருள். முதல் இரண்டு பொருள்களுக்கும் மாற்றாக அரசியல்வாதித்தனம் என்றொரு சொல்லை உபயோகித்துவிடலாம்.

தகவோன் என்றொரு சொல்லும் கிடைக்கிறது. One who is eminently fitted என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள். Suitability of worthy என்றும். அதாவது தகவோன் என்றால் தகுதியுடையவன். தகவிலன் என்பதற்கு எதிர்ப்பதம் தகவோன். மறுதலையாகவும் சொல்லலாம்.

நாம் முன்பே குறித்த பதினோரு பொருள்களிலும் தகவு எனும் சொல்லை ஆள்கின்றன சங்க இலக்கியங்களான அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, பரிபாடல், புறநானூறு முதலானவை. சில பாடல் வரிகளை மேற்கோளாகத் தர தன்முனைப்பு ஏற்படுகிறது.

அகநானூற்றில் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிகண்ணனார் பாடல் ‘அழி தகவு’ எனும் சொல்லை ஆண்டுள்ளது. அழிதகவு என்றால் வருந்துதல் என்று பொருள் சொல்கிறார் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார். அகநானூற்றில் ஓரம்போகியார் பாடல் ‘தற்தகவு’ என்ற சொல் தருகிறது. தன் தகவு என்பதே புணர்ச்சி விதிகளின்படி தற்தகவு ஆகிறது. தற்தகவு என்றால் தன் தகுதி என்று பொருள். தன் தகுதி என்ன என்று அறியாமல், அல்லது அபரிமிதமான மதிப்பீடு வைத்துக்கொண்டு சமூகப் பெருந்திரு என்று தம்மை நினைத்துக் கொள்பவர்கள் மக்களை மந்தை என்றெண்ணி அறிவுரையாக அருளிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஐங்குறுநூறு நூலில் முல்லைத்திணை பாடும் பேயனார், பாணன் பத்து முதற்பாடலில் “என் அவர் தகவே?” என்று கேட்கிறார். அவனது தகுதி என்ன என்பது பொருள். அடியாட்களும் குண்டர்களும் தரகர்களுமே இன்றைய தகவுகள்.

கலித்தொகையில் மருதக்கலி பாடிய மருதன் இளநாகனார், காமக் கிழத்தி கூற்றாகக் கூறுகிறார், ‘தாழ்ந்தாய் போல் வந்து தகவில செய்யாது’ என்று. மனக்குறை உடையவன் போல இங்கு வந்து தகுதி இல்லாச் செயல்களைச் செய்யாதே என்பது பாடல்வரியின் பொருள்.

குறுந்தொகையில் பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல். பாலைத் திணையில் அமைந்தது. இயற்கைப் புணர்ச்சியில் இன்பம் தந்த தலைமகன் பிரிந்து போய் விடுவானோ எனும் அச்சத்தில் வருந்தும் தலைவியிடம் தலைவன் உரைத்தது.

‘மெய் இயல் அரிவை! நின் நல் அகம் புலம்ப,
நின் துறந்து அமைகுவென் ஆயின் எல் துறந்து
இரவலர் வாரா வைகல்
பல ஆகுக! யான் செலவுறு தகவே’

என்பது பாடல். ‘மெல்லியல்புகளை உடைய அரிவைப் பருவத்துப் பெண்ணே! நீ மனதினுள் வருந்திப் புலம்பாதே! உன்னைத் துறந்து வாழ்வேன் என்றால் என்னிடம் விரும்பி வந்து பொருள் பெற்றுச் செல்லும் இரவலர் என்னை நாடி வராது தவிர்க்கும் நாட்கள் பலவாக ஆகும்படியான தகுதியைப் பெற்றேன் ஆகுக!’ இது ஓர்நேர் உழவனார் மகனார் கோயம்புத்தூரில் உறையும் நாஞ்சில் நாடனார் உரை.

நற்றிணையில் பெயரறியாப் புலவன் ஒருவனின் பாலைத்திணைப் பாடல், ‘விசும்பின் தகவே’ என்று மழைமேகம் பொழியத் தகுதியுடையதாக நிற்கும் தன்மை உரைக்கிறது.

தகவு எனும் சொல்லின் பொருள்களை வரிசைப்படுத்தும்போது பரிபாடல் வரியொன்றை மேற்கோள் காட்டினோம். புறநானூற்றில் ஒரு பாடல் ஆலத்தூர் கிழார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியது. திணை வஞ்சி. துறை துணை வஞ்சி. வஞ்சித்திணை என்பது பகையரசர் இடத்தைக் கொள்ளக் கருதி வஞ்சிப்பூ சூடிச் செல்வது. துணை வஞ்சித்துறை என்பது பிறரை வெல்லவோ கொல்லவோ துணிந்து நிற்கும் வீரனைச் சில கூறி அமைதிப்படுத்துதல். பதின்மூன்று வரிப்பாடலின் கடைசி வரி, ‘‘நாணுத் தகவு உடைத்தே!” என்று முடியும். பொருள், ‘நாணமுறச் செய்யும் தகுதியை, தன்மையை உடையது’ என்பது. கோவூர்கிழார் புறநானூற்றில் நெடுங்கிள்ளியைப் பாடும்போது, இதே சொற்றொடர் பயன்படுத்தியுள்ளார், ‘நாணுத் தகவுடைத்து’ என்று.

புறநானூற்றிலேயே சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பாடும் குண்டுகட்பாலியாதனார் –

‘என் சிறுமையின் இழித்து நோக்கான்,
தன் பெருமையின் தகவு நோக்கிக்,
குன்று உறழ்ந்த களிறு என்கோ?
கொய் உளைய மா என்கோ?
மன்று நிறையும் நிரை என்கோ?
மனைக் களமரொடு களம் என்கோ?
ஆங்கு அவை கனவு என மருள,வல்லே, நனவின்
நல்கியோனே, நசை சால் தோன்றல்,
ஊழி வாழி, பூழியர் பெருமகன்’

என்று பாடுகிறார்.

‘என் சிறுமையைக் கண்டு இகழ்ந்து பாராது, தனது சொந்தப் பெருமையும் தகுதியும் நோக்கி, குன்றென நிமிர்ந்த களிறுகளையும், மிடுக்குடன் தலை அசைக்கும் குதிரைகளையும், மன்றம் நிறைந்து போகும்படியாக ஆநிரைகளையும், வீட்டுப் பணி செய்யவும் களப்பணி செய்யவும் ஆட்களையும், நானிது கனவோ என மயங்கும்படி உண்மையில் வழங்கினான். அவன் என்னில் விருப்பம் மிகுந்த அன்புத் தலைவன், பூழி நாட்டுத் தலைவன். அவன் கடையூழிக்காலம் வரை நீடு வாழ்க’. இது பாடலின் பொருள்.

இங்கும் நமது தேடல், தகவு எனும் சொல் குறித்தே! தகுதி என்ற பொருளில் இங்கு தகவு ஆளப்பட்டுள்ளது. ஆகவே தகவு எனும் சொல் மிகவும் ஆழமான பொருளுடைய தமிழ்ச் சொல்லென அறிகிறோம்.

எனவே தகவு எனும் தன்மை, தக்கார் எனும் சிறப்பு, கடற்கரையில் புதைக்கப்பட்டு நினைவு மண்டபங்கள் எழுப்பப்படுவதிலோ, விரல்களை நீட்டிக்கொண்டு முச்சந்தி நாற்சந்திகளில் காகங்கள் இளைப்பாறச் சிலைகளாக நிற்பதிலோ, பாராளுமன்ற வளாகத்தில் சிலைவைக்க இடம் கோரிப் பெறுவதிலோ, விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் அரசுக் கட்டிடங்கள் எனப் பெயர் சூட்டுவதிலோ, இல்லை, இல்லை, இல்லவேயில்லை. கால் குப்பி மட்டரக மதுவுக்கும் காக்கா பிரியாணிக்கும் கூலிக் கூட்டம் ‘அம்மாடி தாயரே!’ அடிப்பதிலும், நடந்து வா, நடந்து வா என்று மேல்வலிக்காமல் கூக்குரல் இடுவதிலும், வாடகைக் கவிஞர் கூட்டம் இரங்கற்பா பாடுவதிலும், கொள்ளையின் சிதறிய எச்சில் துணுக்குகள் நக்கித் தின்றவர் கரைத் துண்டால் கண்ணீர் துடைப்பதிலும், பெத்த தகப்பன் செத்துப் போனது போல் மொட்டை அடிப்பதிலும் இல்லை.

தகவுடையவன், தக்கார் என்பவன் வாழ்வாங்கு வாழ்ந்தவன். அவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.

புறநானூற்றில் நரிவெரூஉத் தலையன் என்ற புலவர் பாடுகிறார் –

‘நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
அல்லது செய்தல் ஓம்புமின்’

என்று. நம்மால் இயலுகிற காரியம் தக்காராக இருக்கிறோமோ இல்லையோ, தகவிலராக இல்லாது இருக்க முயலுவோம்!

அடையாளம் உரைத்தல் – கா. சிவா கட்டுரை

வரலாற்றில் நிகழ்ந்த அரிய நிகழ்வை விவரிக்கும் போது அதுவொரு வரலாற்றுத் தருணம் எனக் கூறுபவர் உண்டு. நான் எடுத்துக் கொண்டது காவியத் தருணம். ஆம், காவியத்திலுள்ள ஓர் அரிய நிகழ்வுகாதலன் தன் காதல் இணையை வர்ணித்தல் இயல்பு. கணவன் தன் மனைவியை வர்ணித்தல் அரிது. அதுவும் மற்றொரு ஆணிடம் தன் காதல் மனைவியின் உடலகை வர்ணித்தலென்பது அரிதினும் அரிதென்றே நான் கருதுகிறேன். கம்பராமாயணத்தில் இடம் பெற்றிருக்கும் இந்தக் காவியத் தருணம் வேறு ஏதேனும் காவியங்களில் இருப்பதாக என் சிற்றறிவிற்கு தென்படவில்லை.

வனவாசம் முடிவுறும் தருவாயில் இராவணன் சீதையை கவர்ந்து சென்றுவிட சுக்ரீவனின் வானரப் படைகளை சீதா தேவியைத் தேட அனுப்புகிறார்கள். அப்போது அனுமனைத் தனியே அழைத்த இராமன் தன் மனைவியை இதுவரை கண்டிராத அனுமனுக்கு அவளின் அங்க அடையாளங்களை விரிவாகக் கூறுகிறான்.

கம்பர், காவியத்தின் பல இடங்களில் சீதையின் அழகை வர்ணித்திருந்தாலும், இராமன் சீதையின் நினைவில் தனியே புலம்பியிருந்தாலும் அணுக்கன் அனுமனிடம் அவளின் அவயங்களின் அழகை விவரிப்பது அரிய அழகிய நிகழ்வு. இது கிஷ்கிந்தா காண்டத்தின் நாட விட்ட படலத்தில்இடம் பெற்றிருக்கிறது. முப்பத்து மூன்று பாடல்களில் பாதாதி கேசமாக விரிவாக வர்ணித்துள்ளார்.

இந்தப் பாடல்களின் மற்றொரு சிறப்பு பெண்களின் அவயங்களுக்கு மரபாக என்னன்ன உவமைகள் கூறப்படுகின்றன என்பதை வரிசையாகக் கூறிவிட்டு அதில் சீதைக்கு எது பொருத்தமானது என்பதைக் கூறுவது போன்று அமைக்கப் பட்டிருக்கும் பாங்கு.

கம்பராமாயணப் பதிப்புகளில் கொடுக்கப்பட்டிருக்கும் வரிசை எண்களைத் தந்தால் அது அவரவர் கையிலிருக்கும் பதிப்புகளிலிருந்து மாறுபடக்கூடும். எனவே கிஷ்கிந்தா காண்டத்தில் நாட விட்ட படலத்தில்33-ம் பாடலில் இருந்து அடுத்த முப்பத்து மூன்று பாடல்களிலேயே நான் குறிப்பிடும் பின்வரும் பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இராமன் ,சீதையின் இருபத்தாறு அவயங்களின் அடையாளங்களைக் கூறுகிறான். அனைத்தையும் கூற ஆவல் எழுந்தாலும் முக்கியமானதென்று நான் கருதுவனவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

கால் விரல்கள்

பாற்கடல் பிறந்த செய்ய

பவளத்தை, பஞ்சி ஊட்டி,

மேற்பட மதியம் சூட்டி,

விரகுற நிரைத்த மெய்ய,

கால் தகை விரல்கள்ஐய!-

கமலமும் பிறவும் எல்லாம்

ஏற்பில என்பது அன்றி, இணை

அடிக்கு உவமை என்னோ?

பாற்கடலில் தோன்றிய தெய்வப் பவளத்திற்கு பஞ்சின் மென்மையை ஊட்டி, அதன் மேல் முழு நிலவொளியை ஒளிரச் செய்து , திறமையுடன் அடுக்கி வைத்தது போன்ற எழிலுடன் சீதையின் கால் விரல்கள் இருக்கும். செந்தாமரை மலரையோ பிறவற்றையோ அப்பாதங்களுக்கு உவமையாக ஏற்க முடியவில்லையே வேறெதைக் கூறுவதென திகைக்கிறான். சொல்பவனே திகைத்துவிட்டால் கேட்பவன் நிலையென்ன.

வயிறு

ஆல் இலை, படிவம் தீட்டும்

ஐய நுண் பலகை, நொய்ய

பால் நிறத் தட்டம், வட்டக்

கண்ணாடி, பலவும் இன்ன,

போலும் என்று உரைத்த போதும்,

புனைந்துரை; பொதுமை பார்க்கின்,

ஏலும் என்று இசைக்கின், ஏலா;

இது வயிற்று இயற்கை; இன்னும்

பொதுவாக மகளிரின் வயிறுக்கு உவமையாகக் கூறப்படும் ஆலிலை, ஓவியம் தீட்டும் பலகை, பால் போன்ற வெண்தட்டு, வட்டக் கண்ணாடி போன்றவை சீதையின் வயிறுக்கு உவமையாகாது.

தனங்கள்

செப்பு என்பேன்;கலசம் என்பேன்;

செவ் இளநீரும் தேர்வென்;

துப்பு ஒன்று திரள்சூது என்பென்;

சொல்லுவென் தும்பிக் கொம்பை;

தப்பு இன்றிப் பகலின் வந்த

சக்கரவாகம் என்பென்;

ஒப்பு ஒன்றும் உலகில் காணேன்;

பலநினைத்து உலைவென் இன்னும்.

மகளிரின் தனங்களுக்கு உவமையாக சிமிழ் , பொற்கவசம் , செவ்இளநீர்க்காய் , சூதாட்ட களத்தில் வைக்கும் செப்பு , யானைத் தந்தம், சக்கரவாகப் பறவையென்று இத்தனை இருந்தாலும் சீதையின் தனங்களுக்கு ஒப்புமை கூற உலகில் ஒரு பொருளையும் காணாமல் வருந்துகிறேன்.

கைகள்

ஏலக் கொடு ஈன்ற பிண்டி இளந்

தளிர் கிடக்க; யாணர்க்

கோலக் கற்பகத்தின் காமர் குழை,

நறுங் கமல மென் பூ,

நூல் ஒக்கும் மருங்குலாள்தன்

நூபுரம் புலம்பும் கோலக் காலுக்குத் தொலையும்என்றால்,

கைக்கு ஒப்பு வைக்கலாமோ?

அசோக மரத்தின் கிளைகளிலுள்ள இளந்தளிர்கள் ஒருபுறம் கிடக்கட்டும், வளமையான கற்பக மரத்தின் மனங்கவரும் தளிர்களும், செந்தாமரை மலரும், நூல் போன்ற இடையுடைய சீதையின் சிலம்பு ஒலிக்கும் அழகிய கால்களுக்கே ஒப்புமை ஆகாதே அவற்றை கைகளுக்கு கூறலாமா.

கை நகங்கள்

வெள்ளிய முறுவல், செவ் வாய்,

விளங்கிழை,இளம்பொற்

கொம்பின்

வள் உகிர்க்கு, உவமை நம்மால்

மயர்வு அற வகுக்கலாமோ?

எள்ளுதிர் நீரே மூக்கைஎன்று

கொண்டு, இவறி, என்றும்,

கிள்ளைகள், முருக்கின் பூவைக்

கிழிக்குமேல், உரைக்கலாமோ?

வெண்மையான பற்களும் சிவந்த வாயும் ஒளிரும் அணிகலன்களும் கொண்ட இளமையான பூக்கொம்பு போன்ற சீதையின் கூரிய நகங்களுக்கு உவமையை குழப்பமின்றி தெளிவாகக் கூறமுடியுமா. மகளிரின் கை நகங்களுக்கு ஒப்புமை ஆகாது என தனது மூக்கை இகழ்வதாக் கருதி மகளிரின் இதழ்கள் போலத் தோன்றும் கல்யாண முருங்கையின் மலர்களைக் கொத்தும் கிளியின் மூக்கைத்தான் உரைக்க முடியுமா.

கழுத்து

அங்கையும் அடியும் கண்டால்,

அரவிந்தம் நினையுமாபோல்

செங் களி சிதறி, நீலம்

செருக்கிய தெய்வ வாட் கண்

மங்கைதன் கழுத்தை நோக்கின்,

வளர் இளங் கழுகும், வாரிச்

சங்கமும் நினைதிஆயின்,

அவை என்று துணிதி; தக்கோய்

சீதையின் கைகளையும் கால்களையும் காணும்போது செந்தாமரை நினைவுக்கு வருவதுபோல, சிவந்த, களி பொங்கும் குவளை மலர் போன்ற விழிகள் கொண்ட சீதையின் கழுத்தைக் காணும்போது வளரும் இளம் பாக்கு மரமும், கடலில் இருக்கும் சங்கும் உன் நினைவுக்கு வருமாயின் அது குற்றமென்ற முடிவுக்கு வருவாயாக.

வாய்

பவளமும், கிடையும், கொவ்வைப்

பழனும், பைங்குமுதப் போதும்,

துவள்வுஇல் இலவம், கோபம்,

முருக்கு என்று இத்தொடக்கம்

சாலத்

தவளம்என்று உரைக்கும்

வண்ணம்

சிவந்து, தேன் ததும்பும்ஆயின்,

குவளை உண் கண்ணி வண்ண.

வாய் அது; குறியும் அஃதே

சிவந்தது ஓர் அமிழ்தம் இல்லை;

தேன் இல்லை; உள என்றாலும்,

கவர்ந்த போது அன்றி, நினைப்ப.

ஓர் களிப்பு நல்கா;

பவர்ந்த வாள் நுதலினால்தன்

பவள வாய்க்கு உவமை பாவித்து

உவந்தபோது, உவந்த வண்ணம்

உரைத்தபோது, உரைத்ததாமோ?

குவளை மலர் போன்ற விழிகளுடைய சீதையின் வாய்க்கு உவமையாக பவளத்தையும் சிவந்த நெட்டியையும் கோவைப் பழத்தையும், சிவந்த அல்லி மலரையும் துவளாத இலவ மலரையும், சிவப்பான இந்திர கோப பூச்சியினையும் கல்யாண முருங்கையின் பூவினையும் உவமை கூறினால் அது உண்மையாக இருக்காது. ஏனென்றால் சீதையின் வாய் பல வண்ண மலர்களின் சிவந்த தேனால் நிறைந்த இனிமையுடன் அழகாக ஒளிர்வதாகும்.

சிவந்த நிறத்தில் அமிர்தம் இல்லை, தேனும் இல்லை. அப்படி உள்ளது என்றாலும் சுவைக்கும் போதுதான் இனிமை தருமேயன்றி நினைக்கும்போதே இனிமை தராது. ஒளி பொருந்திய நெற்றியை உடைய சீதையின் பவளம் போன்ற வாய்க்கு மனதில் உவமையை எண்ணி மகிழ்ந்து அதே மனநிலையுடன் உரைப்பது உண்மையாகுமா.

காதுகள்

வள்ளை, கத்திரிகை வாம

மயிர் வினைக் கருவி என்ன,

பிள்ளைகள் உரைத்த ஒப்பைப் பெரியவர் உரைக்கின் பித்து ஆம்;

வெள்ளி வெண் தோடு செய்த

விழுத் தவம் விளைந்தது என்றே

உள்ளுதி; உலகுக்கு எல்லாம்

உவமைக்கும், உவமை உண்டோ?

வள்ளைக் கொடியின் இலையையும், கத்திரிக் கோலையும், அழகிய மயிரை ஒப்பனை செய்யும் கருவியையும் மகளிரின் காதுகளுக்கு உவமையாக இளையோர்கள் கூறுவனவற்றை

பித்துப் பிடித்த பெரியவர்கள்தான் கூறுவார்கள். சீதை அணிந்துள்ள வெள்ளியென மின்னும் வெண்காதணியின் தவமே அவளின் காதுகளாக அமைந்துள்ளது. உலகிலுள்ள எல்லாப் பொருளுக்கும் உவமையாகக் கூடிய ஒப்பற்ற ஒன்றுக்கு உவமை என்பதும் உண்டோ.

கண்கள்

பெரிய ஆய்; பரவை ஒவ்வா;

பிறிது ஒன்று நினைந்து பேச

உரிய ஆய், ஒருவர் உள்ளத்து

ஒடுங்குவ அல்ல; உண்மை

தெரிய, ஆயிரக் கால் நோக்கின்,

தேவர்க்கும் தேவன் என்னக்

கரியஆய், வெளிய ஆகும்; வான்

தடங் கண்கள் அம்மா!

தேவர்களுக்கெல்லாம் இறைவனான திருமாலின் நிறத்தின் கருமையையும் அவனிருக்கும் பாற்கடலின் நிறத்து வெண்மையையும் கொண்டு ஒளிவிடும் சீதையின் கண்களை ஆயிரம் முறை நோக்கினாலும், விரிந்து பரந்த கடலும் அதற்கு உவமையாகாது. அதைவிட சிறந்த உவமையை எவரும் உள்ளத்தால் எண்ணுவதும் அரியதாகும்.

புருவங்கள்

கேள் ஒக்கும் அன்றி, ஒன்று

கிளத்தினால் கீழ்மைத்து ஆமே;

கோள் ஒக்கும்என்னின் அல்லால்,

குறி ஒக்கக் கூறலாமே?

வாள் ஒக்கும் வடிக் கணாள்தன்

புருவத்துக்கு உவமை வைக்கின்

நாள் ஒக்க வளைத்து நிற்ப

இரண்டு இல்லை, அனங்க சாபம்.

வாள் போன்ற கண்களையுடைய சீதையின் புருவங்கள் ஒன்றுக்கொன்று உவமையாகுமே தவிர அவற்றிற்கு வேறொன்றைக் கூறுவது இழிவானதாகும். மனதிற்கு ஏற்புடைய உவமை பொருளுக்கும் பொருத்தமானதாக அமையுமா. சீதையின் புருவங்களுக்கு மன்மதனின் வில்லை உவமையாகக் கூறலாமெனில் அவனிடம் இரண்டு வில் இல்லையே.

முன் நெற்றி மயிர்

வனைபவர் இல்லை அன்றே,

வனத்துள் நாம் வந்த பின்னர்?

அனையன எனினும், தாம் தம்

அழகுக்கு ஓர் அழிவு உண்டாகா;

வினை செயக் குழன்ற அல்ல;

விதி செய விளைத்த; நீலம்

புனை மணி அளகம் என்றும்

புதுமை ஆம்; உவமை பூணா.

நாங்கள் வனத்திற்குள் வந்தபிறகு சிகையை பராமரிப்பதற்கு அப்பணியாற்றுபவர் எவருமில்லை. ஆயினும் இயற்கையான அழகுக்கு அழிவு உண்டாகாது. சீதையின் குழல் ஒப்பனையாளர்களால் குழன்றது அல்ல. நீலமணி போன்ற சீதையின் நெற்றியின் மேல் இயல்பாகவே விழும் கூந்தல் புதுமை கொண்டதாகவும் உவமை கூற முடியாததாகவும் விளங்கும்.

முகம்

கொண்டலின் குழவி, ஆம்பல்,

குனி சிலை, வள்ளை, கொற்றக்

கெண்டை,ஒண் தரளம் என்று இக்

கேண்மையின் கிடந்த திங்கள்

மண்டலம் வதனம் என்று

வைத்தனன், விதியே; நீ, அப்

புண்டரிகத்தை உற்ற பொழுது,

அது பொருந்தி ஓர்வாய்.

கரிய மேகத்தின் கொழுந்தும் சிவந்த அல்லி மலரும் வளைந்த வில்லும் வள்ளைக் கொடியின் இலையும் சிறப்புடைய கெண்டை மீனும் ஒளிரும் முத்துக்களும் மேலும் இவற்றிற்கு உறவாக விளங்குகின்ற ஏனையவும் திகழ்கின்ற சந்திர மண்டலத்தை சீதைக்கு முகம் என்று பிரம்மன் படைத்தான். தாமரை போன்ற முகம் உடைய அவளை நேரில் காணும்போது நீ இதை உணர்வாய்.

( மேகம் கூந்தலுக்கும், அல்லி மலர் வாய்க்கும், வில் புருவத்திற்கும், வள்ளையிலை காதுக்கும், கெண்டை மீன் கண்களுக்கும், முத்துக்கள் பற்களுக்கும் உவமையாக கூறப்பட்டுள்ளது )

கூந்தல்

காரினைக் கழித்துக் கட்டி,

கள்ளினோடு ஆவி காட்டி,

பேர்இருட் பிழம்பு தோய்த்து,

நெறி உறீஇ, பிறங்கு கற்றைச்

சோர் குழல் தொகுதி என்று

சும்மை செய்தனையது அம்மா!-

நேர்மையைப் பருமை செய்த

நிறை நறங் கூந்தல் நீத்தம்!

நுண்மையானதை பருப்பொருளாக்கியது போன்ற சீதையின் கூந்தல், கரிய மேகத்தை துண்டுகளாக்கி கட்டி, தேனும் அகிற் புகையும் அதனோடு சேர்த்து , பேரிருள் குழம்பை அதில் தோய்த்து, அதனை நெறிப்படுத்தி, ஒளிரும் குழல் கற்றையாக்கிய பெரும் சுமையைப் போல தோன்றுவதாகும்.

இன்சொற்கள்

வான் நின்ற உலகம் முன்றும்

வரம்பு இன்றி வளர்ந்தவேனும்,

நா நின்ற சுவை மற்று ஒன்றோ

அமிழ்து அன்றி நல்லது இல்லை;

மீன் நின்ற கண்ணினாள்தன்

மென்மொழிக்குஉவமைவேண்டின்

தேன் ஒன்றோ? அமிழ்தம்ஒன்றோ?

அவை செவிக்கு இன்பம்

செய்யா.

மீன் போன்ற கண்களையுடைய சீதையின் மென்மையான இனிய மொழிக்கு உவமை கூற விரும்பினால் இனிய தேன் என்றோ பால் என்றோ கூறமுடியாது. இவை செவிக்கு இன்பம் அளிக்காது. மூன்று உலகங்கள் வான்வரை எல்லையின்றி பரந்திருந்தாலும் நாவில் பரவும் சுவைகளில் அமிர்தத்தையன்றி சிறந்ததில்லை என்றாலும் அதுவும் செவிக்கு இன்பம் அளிக்காது.

நடையழகு

பூ வரும் மழலை அன்னம்,

புனை மடப் பிடி என்று இன்ன,

தேவரும் மருளத் தக்க

செலவின எனினும் தேறேன்;

பா வரும் கிழமைத் தொன்மைப்

பருணிதர் தொடுத்த, பத்தி

நாஅருங் கிளவிச் செவ்வி

நடை வரும் நடையள்நல்லோய்!

நற்குணத்தோனே, தாமரையில் வாழ்கின்ற இள அன்னப் பறவையும் அழகிய பெண் யானையும் தேவர்களும் கண்டு வியக்கும் நடையழகு உடையன. என்றாலும் சீதையின் நடையழகிற்கு இவற்றை உவமையாக சொல்லமாட்டேன். பாடல்கள் இயற்றுவதில் அனுபவம் வாய்ந்த மரபான கவிஞர்கள் இயற்றிய அடியொழுங்கும் நாவால் உரைக்கத் தக்க பாவழகும் விளங்க நடக்கும் சொற்களின் சிறந்த நடையழகு போன்றதாகும் சீதையின் நடை.

நிறம்

எந் நிறம் உரைக்கேன்?-மாவின்

இள நிளம் முதிரும்; மற்றைப்

பொன் நிறம் கருகும்; என்றால்,

மணி நிறம் உவமை போதா;

மின் நிறம் நாணி எங்கும்

வெளிப்படா ஒளிக்கும்; வேண்டின்

தன் நிறம் தானே ஒக்கும்;

மலர் நிறம் சமழ்க்கும் அன்றே!

சீதையின் நிறத்திற்கு எதை உவமையாக உரைப்பேன். மாவின் இளந்தளிர் நிறம் மாறி முற்றிவிடும். பொன்னிறமோ இவள் நிறத்திற்குமுன் கறுத்துத் தோன்றும். நவரத்தின மணிகளோ உவமை கூறத்தக்கதல்ல. மின்னலைக் கூறுவதென்றால் அது தோன்றியவுடனேயே நாணம் கொண்டு ஒளிந்துகொள்ளும். தாமரையும் அவள் நிறம் கண்டு நாணித் தாழும். எனவே சீதையின் நிறத்திற்கு ஒப்புமை அவள் நிறம் மட்டுமே.

கட்டுரையின் நீளம் கருதி புறங்கால்கள், கணுக்கால்கள், தொடைகள், அல்குல், இடை உந்திக்கமலம், மயிர் ஒழுங்கு, வயிற்று மடிப்பு, தோள்கள், முன் கைகள், கழுத்து பற்கள், மூக்கு மற்றும் நெற்றி போன்ற அவயங்களுக்கான பாடல்களை கூறாமல் விட்டுள்ளேன். ஆவலுடையோர் அணுகியறிந்து மகிழலாம்.

சீதையின் அடையாளத்தை விவரிக்க முயன்ற இராமன் பெரும்பாலான அவயங்களுக்கு ஒப்புமை கூறும் உவமைகள் இல்லையே என்று வருத்தமுறுகிறான். அத்துடன் எல்லாம் அறிந்த அனுமனே நீயே உணர்ந்துகொள், அறிந்துகொள் என்றும் கூறுகிறான். பிரம்மச்சாரியான அனுமன் பலவான்தான். அறிவுக் கூர்மையுடையவன்தான். ஆனால் கற்பனைத் திறனும் உடையவன் என இராமன் நம்புகிறான் போலும்.

ஆனால் சற்று கூர்ந்து நோக்கினால் ஒரு அவயத்தைப் பற்றி கூற முயலும்போது வேறு அவயங்களுக்கான உவமைகளை உரைப்பதைக் காணலாம். இவற்றை விரிவாக எடுத்துக் கூறாததற்கு காரணம் ஆர்வமுள்ள வாசகர்களின் கண்டறியும் சுவாரசியத்திற்கு தடை போடவேண்டாமே என்பதற்காகத்தான்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது மற்ற அவயங்களுக்கு உவமை சொல்ல தயங்கி திகைக்கும் இராமன் , முகத்திற்கான அடையாளத்தை எந்த ஐயமோ தயக்கமோ இன்றி தெளிவாக உரைத்துள்ளான். ஒரு பெண்ணைத் தேடி செல்பவனுக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டிய அடையாளம் முகம்தானே. எனவே அதனை அனுமன் மனதில் நிறுத்திக் கொள்ளுமாறு உரைத்துள்ளான் எனப் புரித்து கொள்ளலாம்.

இக்கட்டுரையின் நோக்கம் சீதையின் பாதாதி கேசத்தை இராமன் உரைக்கும் பாங்கினை விவரிப்பதுதான் என்றாலும் இராமன் கூறிய அடையாளங்களைக் கொண்டு அனுமன் எப்படி சீதையை அடையாளம் கண்டுபிடித்தான் என்பதைக் கூறினால்தான் நிறைவடையும் என கருதுகிறேன்.

சுந்தர காண்டத்தில் காட்சிப் படலத்தில் இக்காட்சி இடம் பெற்றுள்ளது. அனுமன் இலங்கைக்குள் நுழைந்து ஒவ்வொரு இடமாக தேடி மலர்த் தேன் நிறைந்த சோலை ஒன்றைக் கண்டான்.

கடக்க அரும் அரக்கியர்

காவல் சுற்று உளால்

மடக்கொடி சீதையாம்

மாதரே கொலாம்

கடல் துணை நெடிய தன்

கண்ணின் நீர்ப் பெருந்

தடத்திடை இருந்தது ஓர்

அன்னத் தன்மையாள்

//எம் அரும் உருவின் அவ்

இலக்கணங்களும்

வள்ளல் தன் உரையோடு

மாறு கொண்டில //

//அரவணைத் துயிலின் நீங்கிய

தேவனே அவன் இவள்

கமலச் செல்வியே //

கடல்போன்ற. தன் பெரிய கண்களில் நீர் பெருகித் தடாகமான இடத்தில் அமர்ந்த, அன்னம் போன்றவளைச் சுற்றி

கடந்து செல்ல இயலாதவாறு அரக்கிகள் காவல் காக்கிறார்களே. இளங்கொடி போன்ற அவள் சீதையாகிய பெண்தானோ?.

குற்றமற்ற இந்த உருவத்தின் இலக்கணங்கள் இராமன் கூறிய அடையாளங்களுக்கு மாறுபாடு இல்லாமல் ஒத்துள்ளது.

பாம்புப் படுக்கையில் துயில் கொண்ட தேவனே அவன். இவள் தாமரையில் அமர்ந்திருந்த திருமகளே.

இலங்கை முழுக்க நிறைந்திருந்தவர்கள் அரக்கர்கள். அரக்கிகளால் சீதை சூழப்பட்டுள்ளாள். ல்அரக்கிகளிடையே பெண்ணுருவில் துயருடன் இருப்பவளை கூர்ந்த அறிவுடைய அனுமன் எளிதாகவே அடையாளம் கண்டுவிடுவான். இது இராமனுக்கும் தெரியும். கம்பருக்கும் தெரியும். அதற்காக நீயே கண்டுபிடித்து வா என்று கூறிவிடமுடியுமா. காவியத்தின் கூறுகளிலொன்று, காவியகர்த்தா தான் வாழும் காலத்தில் வழங்குபவற்றில் முக்கியமானதென்று கருதுவனவற்றை காவியத்தினுள் அருமணியென பொதித்து எதிர்காலத்திற்கு கடத்துவதாகும். பத்தாயிரத்திற்கு அதிகமான பாடல்கள் கொண்ட காவியம் இவற்றையும் உள்ளடக்கித்தான் நிறைவு பெற்றுள்ளது.

எப்படியோ, நாம் மீண்டும், மீண்டும் படித்தும், மனதில் நினைத்தும், திளைத்தும் இன்புறுவதற்கு இத்தனை இனிய பாடல்கள் கிடைத்ததற்காக மகிழ்வோம்.

கடைசியாக ஒன்று, சுட்டிக் காட்டப்பட்டு இக்கட்டுரையை வாசிக்கும் வெண்முரசு ஆசானோ, நாஞ்சில் கும்பமுனியோ முனிந்து எனக்கு சாபம் ஏதும் கொடுத்துவிடக் கூடாதென விஷ்ணுபுரத்தில் புரண்டு புரண்டு துயிலும் நீள் கரியபெருமானை வேண்டிக் கொள்கிறேன்.