
எப்பொழுதும் போல் ஹௌராஹ் (பெங்காலியில் ஹௌடா) ஸ்டேஷனுக்கு இரண்டு மணி நேரம் முன்பே வந்து விட்டேன். எப்பொழுது கல்கத்தா சென்றாலும் அங்குள்ளவர் பீதியைக் கிளப்புவார்கள். “ஹௌடா ப்ரிட்ஜி பே ஜாம் ஹோகா” என்று சிலரும், பல மணி நேரம் முன்பே கிளம்பி ட்ரைனை அவர்கள் எப்படி கோட்டை விட்டார்கள் என்று சிலரும் ஒவ்வொரு முறையும் சொல்வதுண்டு. அதனால் நான் எப்பொழுதும் ஹௌடாவுக்கு வரவேண்டும் என்றால் இரண்டு மணி நேரம் முன்பே வந்துவிடுவேன். அப்பொழுது எனக்கு இருபத்தைந்து வயதுதான் இருக்கும், ஆனாலும் இந்த விஷயத்தில் மட்டும் ரிஸ்க் எடுக்கமாட்டேன்.
ஸ்டேஷன் வந்ததும் ஒரு அறிவிப்பு காற்றில் பறந்து வந்தது. நான் செல்லவேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் அரை மணி நேரம் தாமதமாக கிளம்பும் என்றும் அது இரண்டாவது பிளாட்பாரத்துக்கு பதில் ஐந்தாம் பிளாட்பாரத்திலிருந்து கிளம்பும் என்றும் அந்த அறிவிப்பு ஹிந்தியில் கூறியது.
எப்பொழுதும் போல் டிவி முன் உட்கார்ந்து கொண்டேன். கல்கத்தா ஸ்டேஷனில் எப்பொழுதும் டிவீயில் கால்பந்து போட்டி எதாவது ஒன்று ஒளிபரப்பிக் கொண்டிருப்பார்கள். அன்று லிவெர்பூல் மற்றும் யுவேண்டஸ் அணிகளுக்கிடையே நடந்த யுரோப்பியன் கப் போட்டியின் மறு ஒலிபரப்பு. அந்தப் போட்டியை உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுதுதான் அந்தப் பெண்மணி வந்திருக்க வேண்டும், கவனிக்கவில்லை. (more…)


