மாயக்கூத்தன்

வாழ்வு கொள்ளாத துயரம்

மாயக்கூத்தன்

படம்: www.nhm.in

இரண்டு நாவல்களையும் ஒரு சிறுகதைத் தொகுப்பையும் கொண்டு தான் சு.வேணுகோபால் படைப்புகளை இங்கு அணுகுகிறேன். அவருடைய படைப்புகளில் ஒரு சிறு பகுதி தான் இவை என்றாலும் அவருடைய கதையுலகத்தை ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிந்தது.

‘நிலம் எனும் நல்லாள்’ நாவல் ஒரு விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவனுடைய கதை. நாவல் முழுக்க முழுக்க அவன் தனக்கும் தன் குடும்பத்திற்கும் நேர்ந்த அசந்தர்ப்பமான நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டேயிருக்கிறான். தம்பியின் மரணம், விவசாயத்தின் வீழ்ச்சி- இது எல்லாவற்றையும் விட, அணுக்கமில்லாத மனைவி. கவலைகளுக்கு குறைவில்லாத வாழ்வு. மனச்சோர்வில் விழுந்தவன் போல, ஒன்றை விட்டு மற்றொன்றைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறான். தன்னுடைய கடந்த கால வாழ்வையும் தற்கால வாழ்வையும் மாறி மாறி அசைபோடும் பழனிக்கு, அவன் தேடும் பிடிமானம் சிக்குவதில்லை. நமக்குமே கூட.

நாவல் முழுக்க முழுக்கவே பழனியின் கவலைகளோடும் புலம்பல்களோடுமே வளர்கிறது. நல்லவிதமாக நகரும் விஷயங்களும்கூட கடைசியில் துயரத்தையும் சண்டைகளையுமே சந்திக்கின்றன. முதன் முதலில் பழனியும் அவன் மனைவியும் சண்டை போடும் போதே, அவர்கள் பரிமாறிக் கொள்ளும் வார்த்தைகளைக் கொண்டே, அவர்களுக்கு இடையிலான உறவின் தன்மை நமக்குப் புரிந்துவிடுகிறது. ஆனால், அவர்கள் திரும்பத் திரும்ப சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். வாழ்க்கையில் இப்படிதான் இருக்கும் என்றாலும் வாழ்பவர்க்ளுக்குக் கிடைக்காத புரிதல்கள் வாசகர்களுக்கு சீக்கிரம் பிடிபட்டுவிடுகின்றன. எனவேதான், நாவலின் இறுதி வரை, ஒரு நோக்கமுமில்லாமல் தம்பதிகளுக்குள் சண்டை, பழனியின் கவலைகள் என்று மாறி மாறி சொல்லப்பட்டிருப்பது சலிப்பைத் தருகிறது.

இந்நாவலின் மிக நல்ல பகுதிகள் என்று சொல்லக்கூடியவை, விவசாய முறைகளைப் பற்றியும் மனிதர்களின் இடப்பெயர்வு பற்றியும் ஆசிரியர் எழுதியிருப்பவை. என்னுடைய தேவைக்காக, வேணுகோபால் விவரித்திருக்கும் மிளகாய் சாகுபடி நுட்பத்தைக் குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன். நமக்கு உதவினாலும், பல இடங்களில் இம்மாதிரியான விரிவான குறிப்புகள்/விவரணைகள் கதையோடு ஒட்டாமல் அதன் ஓட்டத்திற்கு தடைபோடுகின்றன. குறிப்பாக இப்படிப்பட்ட ஒரு இடம்- பழனி தெருவில் போய்க் கொண்டிருக்கும் போது ஒருவர் வீட்டில் மாடு இருக்குமே என்று யோசிக்கிறான், பிறகு அதற்கு அவன் வைத்தியம் பார்த்தது விரிவாகச் சொல்லப்படுகிறது. எதற்கு அவசியமேயில்லாமல் இது போன்ற விவரணைகள் என்று புரியவில்லை. தம்பதியர் மீண்டும் மீண்டும் சண்டை போட்டுக் கொள்வதிலாவது ஒரு யதார்த்தம் இருக்கிறது.

ஆழமான மனச்சோர்வு கொண்ட பழனி கதையின் கடைசியில் தனக்குக் கிடைக்கும் ஒரு சிறிய அங்கீகாரத்தைக் கொண்டு வாழ்வு முழுமைக்கும் நிம்மதி அடைவான் என்று நினைக்க முடியவில்லை. பொதுவாக, வேணுகோபாலின் கதைகள் சில இது போன்ற ஒரு புதிய புரிதல் அல்லது தெளிவு அல்லது உணர்த்தல் அல்லது தரிசனத்தில் வந்து முடிவதை நிறைய பேர் பாராட்டியிருக்கிறார்கள். இத்தனை காலமாய் துயரம் நிறைந்திருந்த வாழ்க்கையையே முழுசாக மாற்றிவிடும் என்ற நம்பிக்கை ஒளியை வாசகர் உள்ளத்தில் இது போன்ற முடிவுகள் பாய்ச்சுகின்றன. ஆனால் நிம்மதியாய் தூங்கி எழுந்ததும் தொற்றிக் கொள்ளும் கவலைகள் போல் புறவுலக அழுத்தங்கள் கதையின் முடிவுக்குப்பின் இன்னும் வீரியமாக தொடரத்தானே போகின்றன.

‘ஆட்டம்’ வேணுகோபாலின் மற்றொரு நாவல். கதை அமைப்பில் இவ்விரண்டு நாவல்களும் ஒரே மாதிரியே எழுதப்பட்டிருக்கின்றன. கருப்பொருள்தான் வேறு. ‘நிலம் எனும் நல்லாள்’ஐக் காட்டிலும் ஆட்டம் இன்னும் மேலான படைப்பு. நாயகர்களுக்கு திடீரென்று ஏற்படும் மனத் தெளிவு போன்ற சில ஒற்றுமைகள் இவ்விரு நாவல்களுக்கு இடையே உண்டு. ஒற்றுமை என்று சொல்லும்போது இன்னும் ஒரு விஷயம்- வேணுகோபாலின் நாவல்கள், கதாபாத்திரங்களின் எண்ணங்கள் மூலமே சொல்லப்படுகின்றன. கதாபாத்திரத்தின் குரல், ஆசிரியரின் குரல் என்று பிரித்தறிய முடிவதில்லை. அப்படி இருக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. ஆனால், இங்கே எழுத்தாளர் உருவாக்கும் ஒரு கதாபாத்திரத்தின் கருத்தை எழுத்தாளருடையது என்று நினைத்துவிட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

மனைவி தன்னை விட்டுப் போய்விட்ட ஒருவனுக்கு தன்னை மீண்டும் மதிக்கத் தகுந்தவனாக ஆக்கிக் கொள்ள ஏதாவது செய்தாக வேண்டும். அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் வடிவேலுக்கு எப்படியாவது தன்னை நிரூபித்தாக வேண்டும். வடிவேல் அவன் முன்பு கொடிகட்டிப் பறந்த கபடியின் மூலம் இழந்த தன்மானத்தை மீட்டு விட முயற்சிக்கிறான். அதிலும் கூட கபடியின் மூலம் யாரையாவது தனக்குப் பெண் கொடுக்க வைத்துவிட வேண்டும் என்று விரும்புகிறான். அவனுடைய உடைந்த தன்மானத்திற்கு இன்னொரு பெண் வந்துவிட்டால் போதும் என்று தோன்றுகிறது. ஆனால், கதையின் போக்கில் அவனுடைய எண்ணங்கள் மாறுகின்றன.

கோமாரி திருவிழா பற்றியும் நரிக்குறவர்களின் வாழ்க்கையைப் பற்றியும் இந்நாவலில் விரிவாக எழுதியிருக்கிறார். வேணுகோபால் மிகத் துல்லியமாக எழுதுபவர். அவருடைய கதையில் ஒரு விஷயம் நடந்தால் அது எங்கே நடக்கிறது என்பது வரை அவருடைய கவனம் போகிறது. ”கடக்கும் போதாவது ஓரக்கண்ணால் பார்ப்பாள் என்று நினைத்தான். ஆளற்ற தெருவில் நடந்து போவது போலக் கடந்து சென்றாள். பார்க்கவே இல்லை. நான்கு எட்டு வைத்ததும் ஞானசேகரன் அஸ்திவாரம் எழுப்பி மண்மெத்திப் போட்டிருந்த அடிச்சுவர் ஓரம் போய் காளை சுவர்தொட்டு நின்றான். அடுத்து கருவேல மரத்தடியில் பசுமாடு கட்டிக் கிடக்கிறது. இந்தப் பக்கம் பாண்டி ஆசாரியின் இடிந்து போன வீடு. குலுங்கிக் குலுங்கி அழுந்தான்”. வேணுகோபாலின் பலம் இந்த விவரணைகள் என்பதில் சந்தேகமேயில்லை.

நாவல்களை விட்டுவிட்டு சிறுகதைகளுக்கு வந்தோமென்றால், சு.வேணுகோபாலின் கதையுலகம் விரிகிறது. அங்கும் இங்கும் அலைபாயும் நாவல்களைவிட அவருடைய சிறுகதைகள் கச்சிதமாக ஒரு சட்டகத்திற்குள் வருகின்றன. ’களவு போகும் புரவிகள்’ தொகுப்பில் அவருடைய வீச்சு எவ்வளவு அதிகம் என்பதைப் பார்க்கமுடிகிறது. ’வெகுதூரம் விலகி…’ கதை ஒரு சிற்றூர் மருத்துவரைப் பற்றிய கதை. இதில் மலைவாழ் மக்களின் மருத்துவ முறைகளைப் பற்றி விவரணைகள் வருகின்றன. எதுவும் கதையை மீறி துருத்திக் கொண்டிருக்கவில்லை. அவ்வளவு அருமையான கதை.

நாவல்களின் நாயகர்கள் கவலையில் உழன்றால், அவருடைய சிறுகதைகள் பெரும்பாலும் வீழ்ச்சியைப் பேசுபவை. இயலாமையைப் பேசுபவை. அதுவே அவருடைய கதைகளைப் பலருக்கு பிடிக்க வைத்திருக்கின்றன என்று தோன்றுகிறது. பல தலைமுறைகளாக உருகி உருகிக் கதை கேட்டவர்கள் நாம். தோல்விகளில் துவளும் ஒரு இளம் விவசாயி (மண்ணைத் தின்றவன்), கணவனால் நீர்பந்திக்கப்பட்டு மீண்டும் மீண்டும் கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண் (வட்டத்திற்குள்), ஓர் பாலியல் தொழிலாளி (மீதமிருக்கும் கோதும் காற்று), முப்பத்தைந்து வயதில் கல்யாணம் செய்து கொண்டு தான் நினைத்த வண்ணம் உறவு கொள்ள முடியாத ஒருவன் (சங்கிலி) இவை இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகளின் பிரதான பாத்திரங்கள். இந்தக் கதைகளை வாசிக்கும்போது இவர்கள் மீது நமக்குப் பரிதாபம் ஏற்படுகிறது. ஆனால், இந்தக் கதைகள் அத்தோடு நின்றுவிடுகின்றன. மண்ணைத் தின்றவன் கதையில், இசக்கியினுடைய தோல்விகளை ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டே வந்து கடைசியில் அவனுடைய சாதி சுட்டிக் காட்டப்பட்டு மேலும் குறுகிப் போவதாக வருகிறது. இதைப் போலவே மற்ற கதைகளும். உண்மையில் இந்தக் கதைகள் நிறைய பேரின் பாராட்டைப் பெற்றிருக்கிறது. ஆனால், அதில் என்ன சவால் இருக்கிறது என்று தெரியவில்லை. அடுக்கடுக்கான துயரங்களை விவரித்து அதன் முடிவில் மேலும் ஒரு இடியை இறக்குவதையும் அல்லது ஒரு வெளிச்சக் கீற்றைக் காட்டுவதையும் தாண்டி எழுத்துக்கு இருக்கும் சாத்தியங்கள் நிறைய.

வேணுகோபாலின் நாவல்களாகட்டும் சிறுகதைகளாகட்டும், அவற்றில் திருமண பந்தத்திற்கு வெளியே நிகழும் ஆண்-பெண் உறவுகள் அதிகம் எழுதப்பட்டிருக்கின்றன. ‘ஆட்டம்’ நாவலே வடிவேலின் மனைவி கனகம் அவனையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு வேறொருவனுடன் போவதிலே தான் நிகழ்கிறது. அதே நாவலில் வடிவேலின் நண்பன் காளையனுக்கும் அவனுடைய சித்திக்குமான உறவு பேசப்படுகிறது. ’நிலம் எனும் நல்லாள்’ நாவலிலும் இப்படிப்பட்ட உறவு பேசப்படுகிறது. இதைக் குறையாகச் சொல்ல முடியாது என்றாலும் எனக்கு இதில் இரண்டு பிரச்சனைகள் இருக்கின்றன. ஒன்று, ஒரு குறிப்பிட்ட சமூக பொருளாதார வட்டத்தில் இருக்கும் மக்களைப் பற்றி இப்படி எழுதும்போது அவர்களோடு தொடர்பிலே இல்லாத ஒரு வாசகன் அவர்களைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வான்? நாம் செய்தித்தாள்களில் தினம் தினம் படிப்பது வேறு. அதே விஷயங்களை இலக்கியத்தில் படிப்பது வேறு. செய்திகள் பிறர் வாழ்வை நம்மிடம் கொண்டு வந்து கொடுத்தால், இலக்கியம் நம்மை அவர்களின் இடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அது போதுமான அளவில் நிகழ்கிறதா அல்லது வேறு யாருக்கோ நடக்கும் விஷயங்களை வேடிக்கை பார்ப்பவர்களாக இருக்கிறோமா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது, அதுதான் என் இரண்டாவது பிரச்சினை.

அங்கீகரிக்கப்பட்ட உறவுமுறைகளுக்கு அப்பால் ஏற்படும் தொடர்பு மாதிரியான விஷயங்களில் உள்ள என் குறுகுறுப்பு இன்னமும் எனக்குக் குறையவில்லை என்பதால், இந்தக் கதைகளில் இந்த உறவுகளின் நோக்கம் என்ன என்பது புரியவில்லை. வேணுகோபால் இத்தகைய உறவுகளை நிறைய எழுதியிருக்கிறார். ஆனாலும், இவ்வுறவுகளின் காரண காரியங்களை அவர் பேசவில்லை. இந்த உறவுகள் இருக்கின்றன, ஆனால் திருமண பந்தத்தை உடைத்துக் கொண்டு போகும் அளவிற்கு மனிதர்களை ஈர்ப்பது எது? காமம் மட்டும்தானா? எதிர்காலமே தலைகீழாகிவிடும் நிலையிலும் மனிதர்கள் ஏன் அதற்கு துணிகிறார்கள்? ‘ஆட்டம்’ நாவலின் ஒரு பெரும் புள்ளியே இதுதான் என்றாலும், அங்கும் இதன் தாக்கம் மட்டுமே பேசப்படுகிறது. ஏனோ, எழுத்தாளர் இந்த உறவுகளை விவாதிக்கவில்லை. அதனால் அவை ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்துவதோடு நின்றுவிடுகின்றன. ஒரு உயிர் இன்னொரு உயிரை அணைத்துக் கொள்ள வேண்டும் என்பது இயற்கைத் துடிப்புதான். ஆனால், நம் சமூக உறவுக் கட்டுமானங்கள் இவ்வளவு மெலிதாகவா இருக்கின்றன?

வெறும் புகழ்ச்சியில் அர்த்தமில்லை என்பதால்தான் விவாதத்துக்குரிய சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறேன். நாம் ஒரு கலைஞனை மதிக்கும்போது நாம் முரண்படும் இடங்களைச் சொல்வது அவசியமாகிறது. சு.வேணுகோபாலுடைய மொழி அவருக்கே உரித்தானது. அவருடைய அனுபவங்கள் தனித்தன்மையானவை. சொல்ல வருவதை அப்படியே எழுத்தில் கொண்டு வருவதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இல்லை. அவருடைய படைப்புகள் இன்னும் அதிகம் வாசிக்கப்பட்டு விவாதிக்கப்படும்போதுதான் அவை இன்னும் அதிகம் அர்த்தமளிக்கும்.

வண்ணக்கழுத்து 16அ: வெறுப்பும் பயமும்

இப்போது கோண்ட் கதை சொல்லத் துவங்கினார். “அந்த நாய் தன்னுடைய பிரெஞ்சு எஜமானனை போரின் துவக்கித்திலேயே இழந்திருக்கக்கூடும். ஜெர்மானியர்கள் அவரைச் சுட்டுக் கொன்றிருக்கலாம். தன் எஜமானருடைய வீடு சூரையாடப்பட்டு அவருடைய கொட்டகை தீயிடப்பட்டதைக் கண்ட அந்த நாய், பயத்தில் காட்டுக்குள் ஓடி வந்திருக்க வேண்டும். அங்கே ஒரு குடிசையைப் போன்ற இடம் கொண்ட, கல்லறையைப் போல இருட்டான அடர்த்தியான முட்புதருக்கு அடியில் மனிதர்களின் பார்வைக்குச் சிக்காமல் ஒளிந்து கொண்டது. அந்த நாய் இரவில் மட்டுமே உணவைத் தேடி வெளியில் வந்திருக்க வேண்டும். இயல்பிலேயே அதுவொரு வேட்டை நாய் என்பதால், நாட்கள் செல்லச் செல்ல இரவுகள் கடக்க அது தன்னுடைய மிருகப் பண்புகளைத் திரும்பப் பெற்றது.

“என்னை எதிர் கொண்ட போது, நான் அதைக் கண்டு பயப்படாததை அறிந்து அது ஆச்சரியப்பட்டது. பயத்தின் வாடையை நான் வெளிப்படுத்தவில்லை. அதை பயமுறுத்தி தாக்கச் செய்யும் அளவிற்கு பயத்தை வெளிப்படுத்தாத ஒரு மனிதனை அது பல மாதங்கள் கழித்துச் சந்திக்கிறது.

“அதனைப் போலவே நானும் பசியில் இருப்பதாக அது நினைத்துக் கொண்ட்து. அதனால் ஒரு ஜெர்மானிய உணவுக் கிடங்குக்கு என்னைக் இட்டுச் சென்றது. மேலும் ஒரு ரகசிய பாதை வெளியே சென்று ஒரு பெரிய உணவுக் கிடங்கை அடைந்து எனக்காக கொஞ்சம் இறைச்சியைக் கொண்டு வந்தது. அங்கே உணவு மட்டுமல்ல, வரிசையாக பல ரகசியக் கிடங்குகளில் எண்ணெயும் வெடிபொருட்களையும் ஜெர்மானியர்கள் வைத்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்தேன். அதற்கேற்றபடி வேலை செய்தேன். கடவுளின் கிருபையால் என்னுடைய கணிப்பு சரியாக இருந்தது. அதை விட்டுவிட்டு இப்போது வேறு விஷயம் பேசுவோம்.

“உண்மையைச் சொல்வதென்றால் எனக்குப் போரைப் பற்றிப் பேசவே விருப்பமில்லை. சூரிய அஸ்தமனம் ஹிமாலய சிகரங்களை ஒளியூட்டுவதைப் பாருங்கள். எவரஸ்ட் ஒரு தங்க உலையைப் போலக் கொதிக்கிறது. வாருங்கள் பிரார்த்தனை செய்வோம்,

“போலியிலிருந்து மெய்மை நோக்கி என்னை வழிநடத்துங்கள்

இருளிலிருந்து வெளிச்சம் நோக்கி வழிநடத்துங்கள்

இரைச்சலில் இருந்து நிசப்தம் நோக்கி வழிநடத்துங்கள்”

தியானம் முடிந்த பிறகு, கோண்ட் எங்கள் வீட்டிலிருந்து அமைதியாக நடந்து, கல்கத்தாவிலிருந்து சிங்காலியாவின் மடாலயத்தை நோக்கிப் பயணம் புறப்பட்டார். அங்கே அவர் செய்த சாகசத்தைச் சொல்வதற்கு முன், பிரான்சின் போர்க்களங்களிலிருந்து அவர் எப்படி எங்கள் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டார் என்பதையும் சொல்லிவிட வேண்டும்.

1915ம் வருடம் பிப்ரவரி மாதக் கடைசியில், வண்ணக்கழுத்தால் இனிமேல் பறக்க முடியாது என்பது பெங்கால் ரெஜிமெண்டுக்கு தெளிவாகியது. வண்ணக்கழுத்தை அழைத்து வந்த கோண்ட் ஒரு போர்வீரன் இல்லை. ஒரு புலியையோ ஒரு சிறுத்தையையோ தவிர அவர் தன் வாழ்வில் வேறெதையும் கொன்றதில்லை. இப்போது அவரும் நோய்வாய்ப் பட்டிருப்பதால், அவர்கள் இருவரும் பிரயோஜனமில்லை என்று இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்கள். அவர்கள் மார்ச் மாதம் கல்கத்தாவை அடைந்தார்கள். அவர்களைப் பார்த்த போது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. வண்ணக்கழுத்தைப் போலவே கோண்டும் பயந்து போயிருந்தார். இரண்டு பேரும் மிகவும் நோய்வாய்ப்பட்டு இருந்தார்கள்.

என்னிடம் என் புறாவை ஒப்படைத்த பின், சில விஷயங்களை விளக்கிவிட்டு கோண்ட் இமாலயத்திற்குச் சென்றார். “பயத்திலிருந்தும் வெறுப்பிலிருந்தும் என்னை குணப்படுத்திக் கொள்ள வேண்டும். மனிதர்கள் ஒருவரை ஒருவர் கொன்று கொள்வதை அளவிற்கு அதிகமாக நான் பார்த்துவிட்டேன். நான் பயமென்னும் நோயில் விழுந்து, வீட்டில் இருப்பதற்கு லாயக்கற்றவனாகிவிட்டேன். நான் தனியே சென்று இயற்கையோடு இயைந்து என்னுடைய நோயைப் போக்கிக் கொள்ள வேண்டும்.”

இப்படிச் சொல்லிவிட்டு, அவர் சிங்காலியாவில் உள்ள மடாலயத்திற்கு தியானத்தாலும் பிரார்த்தனையாலும் தன்னைக் குணப்படுத்திக் கொள்ளச் சென்றுவிட்டார். அதே சமயத்தில் என்னால் முடிந்த அளவிற்கு வண்ணக்கழுத்தைக் குணப்படுத்த முயற்சி செய்தேன். அவனுடைய மனைவியாலும் நன்கு வளர்ந்த பிள்ளைகளாலும் கூட அவனைக் குணப்படுத்த முடியவில்லை. அவன் தன் பிள்ளைகளிடம் எந்த அக்கறையும் காண்பிக்கவில்லை. அவர்கள் அவனை வேற்று ஆள் போலவே பார்த்தார்கள். அவனுடைய பெடை அவனிடம் ஆர்வம் காட்டியது. ஆனால், அதனாலும் அவனைப் பறக்க வைக்க முடியவில்லை. பையக் குதிப்பதைத் தவிர அவன் வேறு எதையும் செய்ய மறுத்தான். என்ன செய்தும் அவனை காற்றில் இறங்க வைக்க முடியவில்லை. நல்ல புறா வைத்தியர்களைக் கொண்டு அவனுடைய கால்களையும் இறக்கைகளையும் சோதித்தேன். அவர்கள் அவனுக்கு ஒரு குறையும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அவனுடைய எலும்புகளும் இறக்கைகளும் நன்றாக இருந்த போதும் அவன் பறக்க அடம்பிடிக்கிறான். தன் வலது இறக்கையை திறக்க மறுக்கிறான். ஓடாத போதும் குதிக்காத போதும் ஒற்றைக் காலில் நிற்கும் புதிய பழக்கம் வேறு.

அவனும் அவனுடைய பெடையும் கூடு கட்டத் துவங்காமலிருந்தால் நான் இதைப் பொருட்படுத்தியிருக்க மாட்டேன். ஏப்ரல் மாத மத்தியில், கோடைக்கால ஓய்வு நாட்கள் தொடங்கிய போது கோண்டிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. ”உன்னுடைய வண்ணக்கழுத்து, இப்போது தன் பெடையோடு கூடக் கூடாது. முட்டைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை அழித்து விடு. எந்தச் சூழ்நிலையிலும் அவற்றைக் குஞ்சு பொறிக்க வைத்துவிடாதே. வண்ணக்கழுத்தைப் போல பறக்கவே பயப்படும் ஒரு தந்தையால் மோசமான பயம் கொண்ட குஞ்சுகளையே உருவாக்க முடியும். அவனை இங்கே கொண்டு வா. நான் இப்போது கொஞ்சம் நன்றாக உணர்கிறேன். சீக்கிரம் வண்ணக்கழுத்தைக் கொண்டு வா. இங்குள்ள லாமா உன்னையும் அவனையும் காண விரும்புகிறார். மேலும், அந்த ஐந்து உழவாரக் குருவிகளும் தெற்கிலிருந்து இந்த வாரம் இங்கே வந்துவிட்டன. உன்னுடைய பறவையை பயத்திலிருந்து திசை திருப்ப அவை கண்டிப்பாக உதவும்” என்று எழுதியிருந்தார்.

(தொடரும்)

வண்ணக்கழுத்து 15: சேதி கொண்டு போன கதை

“நிகழ்வுகள் நிரம்பிய அந்நாளுக்கு முந்தைய நாள் நான் மிகக் குறைவாகவே தூங்கியிருந்தேன். அவருடைய மேற்ச்சட்டைக்கு உள்ளே இருந்தாலும், நான் விழிததுக் கொண்டிருந்தேன் என்பதை கோண்ட் அறியவில்லை. ஒவ்வொரு அரைமணிக்கும், ஆண் கலைமானைப் போல ஓடும், அணிலைப் போல மரங்களில் ஏறும், முன்பின் தெரியாத நாயோடு நட்பு வைததுக் கொள்ளும் ஒரு மனிதருடைய இதயத்திற்கு பக்கத்தில் தூங்க முடியாது. ஒருசமயம் கோண்டுடைய இதயம் வேகவேகமாகத் துடிக்கும். மற்றொரு சமயம் இதயத் துடிப்பு ஒரு கஜத் தொலைவிற்கு அப்பாலிருந்து கேட்பது போல இருக்கும். தூங்குவதற்கு இடைஞ்சலாக அவர் செய்த மற்றொரு காரியம், அந்த இரவு முழுக்க ஒரு ஒழுங்கில்லாமல் மூச்சு விட்டது தான். சிலசமயம் நீளமாக இழுத்து மூச்சுவிட்டார். சில சமயம் பூனையிடமிருந்து தப்பி ஓடும் எலியைப் போல வேகவேகமாக மூச்சுவிட்டார். இப்படிப்பட்ட மனிதருடைய மேற்ச்சட்டைக்கு அடியில் தூங்குவதைவிட வானத்தில் ஒரு புயலுக்கு நடுவிலே தூங்க முயற்சித்திருப்பேன்.

“பிறகு அந்த நாய். நான் அதை மறக்கவும் முடியுமா? கோண்ட், அதைச் சேர்ததுக் கொண்ட போது நான் பயந்து போனேன். ஆனால், என் உடம்பு வாடை அதற்குத் தெரியவில்லை. கீழிருந்து எழும்பி வந்த காற்று, ஒரு நல் வாடை கொண்ட பேயைப் போல, இது எங்களை நட்பாக்கிக் கொள்ள வந்திருக்கிறது என்று எனக்குச் சொல்லியது. அதனுடைய காலடி ஓசையை நான் காலம் முழுதும் நினைவில் வைத்திருப்பேன். ஒரு பூனையைப் போல மென்மையாக நடந்தது. அது ஒரு காட்டு நாயாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் மனித கலாச்சாரத்தில் வாழும் நாய்கள் சத்தம் மிகுந்தவை. அவற்றால் சத்தம் போடாமல் நடக்கக் கூட முடியாது. மனித சகவாசம் கெடுதல் செய்யும். மனித சமூகத்தில், பூனைகளைத் தவிர, எல்லா மிருகங்களும் கவனக்குறைவானதாகவும் இரைச்சல் மிகுந்ததாகவும் ஆகிவிடுகின்றன. ஆனால் அந்த நாய் முழுவதும் காட்டு சுபாவம் கொண்டது. அது சத்தமில்லாமல் நடந்தது. சத்தமில்லாமல் மூச்சுவிட்டது. பிறகு அது அங்கே இருந்தது என்பது எனக்கு எப்படித் தெரியும்? கீழே இருந்து வந்து என் நாசியைத் துளைத்த அந்த வாடை தான் காரணம். (more…)

வண்ணக்கழுத்து 14: உளவு பார்க்கப்போன கோண்ட்

டிசம்பரின் முதல் வாரத்தில் கோண்டும் வண்ணக்கழுத்தும் தன்னந்தனியாக உளவு பார்க்கப் போக வேண்டியிருந்தது. அவர்கள் போன இடம் ஒரு காடு. அது ஏப்ரெ, அர்மெண்டியர் மற்றும் ஹெஸ்ப்ரோக் நகரங்களில் இருந்து வெகு தொலைவில் இல்லை. ஃபிரெஞ்சு வரைபடத்தை எடுத்துக் கொண்டு, கலேவிலிருந்து தெற்கு நோக்கி ஒரு நேர்க்கோட்டை வரைந்தீர்கள் என்றால், பிரிட்டிஷ் மற்றும் இந்திய ராணுவம் நின்றிருந்த இடங்கள்அடுத்தடுத்து இருப்பதைக் காண முடியும். அர்மெண்டியருக்குப் பக்கத்தில் இந்திய மொகம்மதிய வீரர்களின் கல்லறைகள் நிறைய இருக்கின்றன. இந்திய இந்து மத வீரர்களின் கல்லறைகள் ஏதுமில்லை. ஏனென்றால் இந்துக்கள் ஆதிகாலத்திலிருந்தே இறந்தவர்களை எரியூட்டி வந்தார்கள். எரியூட்டப்பட்டவர்களுக்கு கல்லறைகள் கிடையாது. அவர்களுடைய அஸ்தி காற்றில் தூவப்படுகின்றன. அவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் இல்லை, ஆம், எந்தவொரு இடமும் அவர்களின் நினைவை பாரமாய்ச் சுமப்பதில்லை..

மீண்டும் கோண்டிற்கும் வண்ணக்கழுத்திற்கும் வருவோம். எதிரியின் எல்லைக்கு அப்பால், ஹெஸ்ப்ரோக் அருகில் காட்டிற்குள் இருக்கும் மிகப்பெரிய இரகசிய ஆயுதக் கிடங்கின் இருப்பிடத்தை துல்லியமாய் அறிய அவர்கள் இருவரும் அனுப்பப்பட்டார்கள். அதைக் கண்டுபிடித்தால், கோண்டும் வண்ணக்கழுத்தும் தனியாகவோ இருவருமாகவோ, ஒரு துல்லியமான வரைபடத்தோடு பிரிட்டிஷ் ராணுவ தலைமையகத்திற்குத் திரும்ப வேண்டும். அவ்வளவு தான். ஆக, தெளிவான டிசம்பர் மாத காலையில் ஒரு நாள் வண்ணக்கழுத்தை ஒரு விமானத்தில் ஏற்றிக் கொண்டார்கள். அது காட்டின் மேலே இருபது மைல் தூரம் பறந்தது. அந்தக் காட்டின் ஒரு பகுதி இந்தியப் படை வசமும் மற்றொரு பகுதி ஜெர்மானியப் படை வசமும் இருந்தது. ஜெர்மனியர்களின் இடத்திற்குள் நுழைந்த பிறகு வண்ணக்கழுத்து விடுவிக்கப்பட்டது. அவன் காடு முழுக்கப் பறந்தான். பிறகு அந்த நிலப்பரப்பைப் பற்றி அறிவை வளர்த்துக் கொண்டு வீடு திரும்பினான். வண்ணக்கழுத்து தன்னுடைய பாதையை அறிந்து கொள்ளவும், அவனிடம் எதிர்பார்க்கப்படும் வேலையைப் பற்றி அவனுக்கு அறிவுறத்தவுமே இந்த ஏற்பாடு.

அன்று மாலை சூரியன் மறைந்ததும், நியூ யார்க்குக்கு வடக்கே பத்து பாகையில் இருக்கும் அந்த இடத்தில் சுமார் நான்கு மணிக்கே அந்தி சாய்ந்துவிடும்,, குளிருக்கு கணப்பான உடைகளை அணிந்து கொண்டு, வண்ணக்கழுத்தை தன் மேல் சட்டைக்கு உள்ளே வைத்துக் கொண்டு, கோண்ட் கிளம்பினார். அவர்கள் ஒரு ஆம்புலன்ஸில் அந்தப் பெரிய காட்டில், இந்திய ராணுவத்தின் இரண்டாவது எல்கை வரை சென்றார்கள். முழு இருட்டில், உளவுத்துறை ஆட்கள் வழிநடத்த அவர்கள் போர்முனை நோக்கிச் சென்றார்கள்.

சீக்கிரமே அவர்கள் இரு படைகளின் ஆக்கிரமிப்பிலும் இல்லாத மையப்பகுதியை அடைந்தார்கள். அதிர்ஷ்டவசமாக அது மரங்களால் மறைக்கப்பட்டிருந்தது. குண்டுவீச்சில் அம்மரங்களில் பல இன்னும் சேதமடையாமல் இருந்தது. பிரெஞ்சோ ஜெர்மனோ, ஆங்கிலத்தில் ‘யெஸ்’, ‘நோ’, ‘வெரி வெல்’ என்பதைத் தாண்டி ஒன்றும் அறியாத கோண்ட், தன்னுடைய மேல் சட்டைக்கு அடியில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் புறாவின் துணையோடு, ஜெர்மனியப் படையின் ஆயுதக் கிடங்கை கண்டுபிடிக்க தனித்து விடப்பட்டார்.

முதலில் அவர், தான் குளிர்ந்த இமாலயத்தின் சீர்தோஷணம் கொண்ட ஒரு நாட்டில், குளிர் காலத்தில் மரங்கள் மொட்டையாக நிற்க, இலையுதிர்கால சருகுகளும் உறைபனியும் தரையை மூடியிருக்கும் இடத்தில் இருக்கிறோம் என்பதை தனக்கு நினைவூட்டிக் கொள்ள வேண்டியிருந்தது. மரங்களிலும் மரக்கன்றுகளிலும் குறைந்த அளவே இலைகள் இருக்க அவருக்கு தன்னை மறைத்துக் கொள்வது அத்தனை எளிதான காரியமாக இல்லை. அந்த இரவு இருள் சூழ்ந்திருந்தது; பிணத்தைப் போல சில்லிட்டிருந்தது. ஆனால், எந்த ஒரு மனிதனைவிடவும் இருட்டில் சிறப்பாக அவரால் காண முடியும் என்பதாலும், அவருடைய மோப்பம் பிடிக்கும் சக்தி எந்தவொரு விலங்கை விடவும் கூர்மையானது என்பதாலும், யாரும் புக முடியாத இடத்தைக் கடந்து முன்னேறுவது என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த இரவில் காற்று கிழக்கிலிருந்து வீசியது.

மரங்களுக்கு இடையே கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்த அவர், தன்னால் முடிந்த அளவிற்கு விரைவாக முன்னேறினார். ஒரு ஜெர்மனியப் படை தன் வழியைக் கடக்கப்போகிறது என்பதை அவர்கள் வருவதற்கு சில நிமிடங்கள் முன்னதாகவே அவருடைய முக்கு அவருக்குச் சொல்லிவிட்டது. அவர், ஒரு சிறுத்தையைப் போல மரத்தின் மீது ஏறி காத்திருந்தார். அவர்களுக்கு ஒரு சிறு அசைவின் ஓசை கூடக் கேட்கவில்லை. அதுவே பகலாக இருந்திருந்தால் அவர் இருப்பதைக் கண்டுபிடித்திருப்பார்கள். ஏனென்றால், உறைபனியின் மீது நடந்து வந்திருந்த அவருடைய கால்களில் இருந்து ரத்தம் சொட்டி, கறைபடிந்த கால்தடத்தை விட்டிருந்தது.

ஒருமுறை அவர் மிக குறுகிய இடைவெளியில் தப்பித்தார். இரண்டு ஜெர்மானிய வீரர்கள் கீழே கடந்து செல்ல வழிவிட்டு அவர் மரத்தின் மீது ஏறியிருக்க, ஒரு கிளையிலிருந்து அவர் காதில் யாரோ ஒருவர் கிசுகிசுத்ததைக் கேட்டார். உடனே அவருக்கு அது ஒரு ஜெர்மானிய துப்பாக்கி வீரர் என்பது புரிந்து விட்டது. ஆனால், அவர் தன் தலையைத் தாழ்த்தி கவனமாகக் கேட்டார். அந்த ஜெர்மானியர் ‘குடன் நாட்ஜ்’ என்றார். பிறகு, வெளிவந்து மரத்திலிருந்து இறங்கினார். அவர் கோண்ட் தன்னை பணியிலிருந்து விடுவிக்க வந்த சக வீரர் என்று தவறாக நினைத்துக் கொண்டார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. சில நிமிடங்கள் கழித்து, கோண்ட் மரத்திலிருந்து இறங்கி, அந்த ஜெர்மானியரின் கால் தடத்தை பின்தொடர்ந்தார். இருட்டாக இருந்தாலும் அவருடைய வெற்றுப் பாதம், அந்த மனிதனின் காலடி தடம் பதித்திருந்த மண்ணை உணர்ந்தது. அது அவருக்கொன்றும் கடினமில்லை.

கடைசில் அவர் நிறைய மனிதர்கள் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் இடத்தை அடைந்தார். அவர் மெதுவாக அவர்களைச் சுற்றிச் சென்று முன்னேற வேண்டியிருந்தது. தன் காலடியில் ஏதோவொரு புதிய சத்தத்தைக் கேட்டார். நின்று, கவனித்தார். சந்தேகமே இல்லை, அது அவருக்கு பழக்கமான சத்தம்தான். அவர் காத்திருந்தார். ஒரு மிருகத்தின் காலடி. பட்டர்ர் பட், பட்டர்ர்! கோண்ட் அந்த சத்தத்தை நோக்கி நகர்ந்தார். உள்ளழுந்திய ஒரு உறுமல் சத்தம் வந்தது. பயத்திற்கு பதிலாக, சந்தோஷம் அவர் மனதை நிறைத்தது. புலிகள் நிறைந்த இந்தியக் காடுகளில் இரவைக் கழித்த அவர், ஒரு காட்டு நாயுடைய உறுமலுக்கு பயந்துவிடவில்லை. சீக்கிரமே இரண்டு சிவப்புக் கண்கள் அவருடைய பார்வைக்கு வந்தது. கோண்ட், கவனமாக தனக்கு முன்னால் இருக்கும் காற்றை முகர்ந்தார். அந்த நாயின் மீது சிறிதளவு கூட மனித வாசனை இல்லை. அந்த நாய் காட்டு விலங்காகிவிட்டிருந்தது. அந்த நாயும், தான் என்ன விதமான விலங்கை எதிர் கொண்டிருக்கிறோம் என்பதை அறிய காற்றை முகர்ந்தது. கோண்ட் சாதாரணமாக மனிதர்கள் வெளிப்படுத்தும் பய வாசனையை வெளிப்படுத்தவில்லை என்பதால், அந்த மிருகம் முன் வந்து தன்னை அவர் மீது உரசி, தீவிரமாக முகர்ந்தது. அதிர்ஷ்டவசமாக, கோண்ட் வண்ணக்கழுத்தை அந்த நாயின் மூக்கிற்கு மேலே தூக்கிக் கொண்டிருந்தார். மேலும், காற்று பறவையின் வாசனையைக் கொண்டுபோய்க் கொண்டிருந்தது. ஆக, அந்த நாய் தனக்கு முன்னால் இருந்த மனிதனை பயமில்லாத ஒரு நண்பனாகவே பார்த்தது. அது தன் வாலைக் குழைத்துக்கொண்டு கொண்டு செல்லம் கொஞ்சியது. தன் கையால் அதன் தலையை தட்டிக் கொடுப்பதற்கு பதிலாக கோண்ட், மெதுவாக தன் கையை நாயின் கண்களுக்கு முன்னால், அது பார்ப்பதற்காகவும் முகர்வதற்காகவும் நீட்டினார். அடுத்த ஒரு நொடி நிச்சயமின்மை தொடர்ந்தது.

அந்த நாய் கையைக் கடிக்கப் போகிறதா? இன்னொரு நொடியும் கழிந்தது. பிறகு… அந்த நாய் கையை நக்கியது. இப்போது சுகமாய்க் கொஞ்சியது. “ஆக, இது வேடனுடைய நாய். தலைவனைப் பிரிந்திருக்கிறது. இதனுடைய எஜமானன் இறந்திருக்கக் கூடும். ஜெர்மானியப் படைக்கு வரும் உணவுப் பொருட்களைக் கவர்ந்து தின்று உயிர் பிழைத்திருக்கிறது. ஏனென்றால், இது இதுவரை மனித மாமிசத்தை தின்றதாகத் தெரியவில்லை. இதுவரைக்கும் பரவாயில்லை” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார் கோண்ட்.

கோண்ட் மெதுவாக சீட்டியடித்தார். எந்த நாடாக இருந்தாலும் எக்காலத்திலும் இது தான் வேடர்களின் சமிக்ஞை. ‘வழிநடத்து’ என்பது அதன் அர்த்தம். அந்த நாயும் அவரை வழிநடத்தியது. ஒரு ஆண் கலைமான், புலியின் குகையை மிகத் திறமையுடன் கடப்பதைப் போல, அந்த நாய் ஜெர்மானிய வீரர்களின் தற்காலிக முகாமை சுற்றிக் கொண்டு சென்றது. பல மணிநேர அலைச்சலுக்குப் பின், அவர்கள் தங்கள் இலக்கை அடைந்தார்கள். சந்தேகமே இல்லை. கோண்ட் அவர் தேடி வந்த ஆயுதக் கிடங்கை கண்டுபிடித்துவிட்டார். ஆயுதங்கள் மட்டுமல்ல ஜெர்மானியர்களின் உணவுக் கிடங்கும் அது தான். அவரை வழிநடத்திக் கொண்டு போன காட்டு நாய், ஒரு ரகசியப் பொந்துக்குள் சென்று அரை மணி நேரம் கழித்து ஒரு கன்றின் கால் இறைச்சியோடு திரும்பியது. அதுவொரு மாட்டிறைச்சி என்று அதன் வாடையைக் கொண்டே கோண்டால் கணிக்க முடிந்தது. அந்த நாய் உறைபனித் தரையில் தன்னுடைய இரவுணவோடு அமர்ந்தது. அதே நேரத்தில், கோண்ட் தான் இரவு முதல் தோளில் போட்டுக் கொண்டிருந்த பூட்ஸ்களை எடுத்து அணிந்து கொண்டு, மேலே உற்று நோக்கினார். நட்சத்திரங்களின் நிலை இருப்பை வைத்து அவரால் தன் இருப்பிடத்தை அறிய முடிந்தது. அங்கே கொஞ்ச நேரம் காத்திருந்தார்.

மெதுவாக விடியத் துவங்கியது. தன் பையிலிருந்து ஒரு திசைகாட்டியை எடுத்தார். அந்த இடத்தின் வரைபடத்தை தன்னால் வரைய முடியும் என்று நிச்சயமாக உணர்ந்தார். அப்போது, அந்த நாய் மேலே குதித்து, கோண்டின் மேல் சட்டையை பற்களால் கடித்து இழுத்தது. மீண்டும் அந்த நாய் தன்னை வழிநடத்த விரும்புகிறது என்பதில் அவர் மனதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அந்த நாய் முன்னால் ஓட, கோண்ட் விரைவாக பின்தொடர்ந்தார். விரைவிலேயே அவர்கள் முட்களாலும் உறைந்த கொடிகளாலும் அடர்த்தியாக மறைக்கப்பட்டிருந்த ஒரு இடத்தை அடைந்தார்கள். அந்த பாதை விலங்குகளுக்கு மட்டுமே சாத்தியமானது. அந்த நாய் பல கூரான முட்களுக்கு கீழே தவழ்ந்து சென்று மறைந்துவிட்டது.

இப்போது கோண்ட் நட்சத்திரங்களின் நிலை இருப்பை ஒரு படமாக வரைந்து, தன்னுடைய திசைகாட்டியின் சரியான நிலையையும் வரைபடத்தில் குறித்து இரண்டையும் வண்ணக்கழுத்தின் காலில் கட்டிப் பறக்கவிட்டார். அந்தப் புறா ஒவ்வொரு மரமாகப் பறந்து, ஒவ்வொன்றிலும் ஒரு நிமிடம் வரை உட்கார்ந்து தன் அலகுகலால் இறகுகளை ஒழுங்குபடுத்துவதைப் பார்த்தார். பிறகு, காலில் கட்டப்பட்ட தாள் இருக்கிறதா என்று சரிபார்ப்பது போல தன் அலகால் கொத்தி ஒழுங்குபடுத்திக் கொண்டு, இருப்பதிலேயே உயரமான மரத்தின் உச்சிக்கு சென்று, அங்கே அமர்ந்து கொண்டு அந்த இடத்தின் அமைப்பை ஆய்வு செய்தது. அந்த நொடியில், மேலே பார்த்துக் கொண்டிருந்த கோண்ட் தான் இழுக்கப்படுவதை உணர்ந்தார். குனிந்து தன் காலின்கீழ் பார்த்தார். அந்த நாய் முட்களுக்கு அடியிலிருந்த ஒரு குழிக்குள் அவரை இழுத்தது. கோண்ட் தாழக் குனிந்தார். தன்னுடைய வழிகாட்டியை தொடரும் அளவிற்கு கீழே வளைந்தார். ஆனால், கடைசியில் தலைக்கு மேலே இறக்கைகள் அடிக்கும் சத்தமும், துப்பாக்கிகள் வெடிக்கும் சப்தமும் கேட்டது. எழுந்து வண்ணக்கழுத்து கொல்லப்பட்டுவிட்டானா இல்லையா என்று ஆராயக் கூட அவருக்கு விருப்பமில்லை.

முட்களுக்கு அடியில், தன் வயிறும் முதுகெலும்பும் ஒட்டிக் கொண்டது போலும், இரண்டும் சேர்ந்து தரையோடு தைக்கப்பட்டது போலும் அவர் தவழ்ந்தார். அவர் உந்தித் தவழ்ந்து திடீரென்று எட்டு அடி வரை வழுக்கிக் கொண்டு போய், ஒரு இருண்ட குழியில் விழுந்தார். கும்மிருட்டாக இருந்தது. சிராய்த்த தலையை தேய்த்துக் கொண்டிருந்த்தால் கோண்ட் அதை முதலில் கவனிக்கவில்லை.

கடைசியில் எங்கே இருக்கிறோம் என்பதை அவர் அறிய முற்பட, திருடர்களின் குகை போல முட் புதர்களால் பாதுகாக்கப்பட்ட உறைந்த தண்ணீர்க் குழியாக இருக்கலாம் என்று நினைத்தார். குளிர்காலத்திலும், தலைக்கு மேலே உள்ள கிளைகளிலும் கொடிகளிலும் இலைகளே இல்லாத போதும், பகற்பொழுதிலும்கூட அந்தக் குழியில் இருள் அடர்த்தியாகவே இருந்தது. அந்த நாய் இப்போதும் அவருடன் தான் இருந்தது. அது தான் அவரை பாதுகாப்பான இடத்திற்கு இழுத்து வந்திருந்தது. பாவம், அந்த விலங்கு ஒரு நண்பன் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தது. அந்த நேரத்திலும் கோண்ட்டோடு மணிக்கணக்காக விளையாடிக் கொண்டிருக்க விரும்பியது. ஆனால், களைப்படைந்த கோண்ட், கிட்டத்தில் ஒலிக்கும் துப்பாக்கிச் சத்தத்தையும் பொருட்படுத்தாது தூங்கிவிட்டார்.

மூன்று மணிநேரங்கள் கழித்து அந்த நாய் திடீரென்று சிணுங்கியது. பைத்தியம் பிடித்ததைப் போல ஊழையிட்டது. அதன் பிறகு பயங்கர வெடிச் சப்தங்களால் பூமி அதிரந்தது. அதைப் பொறுக்க முடியாமல், அந்த நாய் கோண்டின் மேல் சட்டையைப் பிடித்து இழுத்தது. வெடிச் சத்தம் படிப்படியாக, கோண்ட் இருந்த இடம் ஒரு தொட்டில் போல ஆடும் வரை உயர்ந்தது. ஆனால், அவரால் மறைவிடத்திலிருந்து வெளியே வருவதாய் இல்லை. ”ஓ வண்ணக்கழுத்தே, ஒப்பில்லாத பறவையே, எவ்வளவு சிறப்பாக உன் வேலையைச் செய்திருக்கிறாய். அதற்குள், அந்த செர்ரிப்பழ முகம் கொண்ட தளபதியிடம் செய்தியைக் கொண்டு சேர்த்திருக்கிறாய். எனவேதான் இந்த இடி போன்ற பதில். நீ பறவை இனத்தின் மாணிக்கம்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். அவர் முனகிக் கொண்டிருக்க விமானங்கள் போட்ட குண்டுகள் ஜெர்மானிய ஆயுதக் கிடங்கை வெடிக்க வைத்தது.

அப்போது, அவரை மேற்சட்டையின் கையைப் பிடித்து இழுக்க முயன்று கொண்டிருந்த அந்த நாய், காய்ச்சல் வந்தவன் போல ஊழையிட்டு நடுங்கியது. அந்த நொடியில் காற்றில் ஏதோ உரசிக் கொண்டு வந்து பொத்தென்று பக்கத்தில் விழுந்தது. ஒரு அழுகையான ஊளையோடு அந்த நாய் தன்னுடைய மறைவிடத்திலிருந்து வெளியே விரைந்தது. கோண்டும் அதைப் பின் தொடர்ந்தார். ஆனால், காலம் கடந்துவிட்டது. அந்த முட்களின் ஊடே அவர் பாதி தூரம் கடந்திருக்க, அவருக்கு கீழே இருந்து காதைப் பிளக்கும் வெடிச்சத்தம் பூமியை நொறுக்கியது. கொடூரமான வலி அவருடைய தோளைத் துளைத்தது. ஏதோ ஒரு பேயால் தூக்கி, கடும் வலிமையுடன் தரையில் எறியப்பட்டதைப் போல அவர் உணர்ந்தார். கருஞ்சிவப்பு வைரங்களில் ஒளி அவர் கண்களின் முன்னே சில நொடிகள் ஆடிவிட்டு, திடீரென்று ஆற்றுப்படுத்தும் இருள் சூழ்ந்தது.

ஒரு மணிநேரம் கழித்து அவருக்கு நினைவு திரும்பிய உடன், முதன் முதலில் அவர் உணர்ந்தது ஹிந்துஸ்தானி குரல்களைத்தான். தன்னுடைய ஊர் மொழியை மேலும் தெளிவாகக் கேட்க அவர் தன் தலையை உயர்த்தினார். அந்த நொடியில், அவர் ஆயிரம் நல்ல பாம்புகள் கொத்தியதைப் போன்ற வலியை உணர்ந்தார். தான் தாக்கப்பட்டதையும் உயிர் போகுமளவிற்கு காயம்பட்டிருப்பதையும் அவர் புரிந்து கொண்டு விட்டார். அதே நேரத்தில், ஒவ்வொரு முறை ஹிந்துஸ்தானி ஒலி கேட்கும் போதும், இந்தக் காடு எதிரியின் வசம் இல்லை, இந்தியப் படையின் வசத்தில் இருக்கிறது, என்பதை அறிந்து அவர் உள்ளம் மகிழ்ந்த்து. ’ஆ! என் வேலை முடிந்தது. இனி நான் சந்தோஷமாகச் சாகலாம்’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார்.

(தொடரும்…)

வண்ணக்கழுத்து 13: இரண்டாம் சாகசம்

”ரசெல்தார் மேலோட்டமான காயங்களிலிருந்து குணமடைந்த பின்பு நாங்கள் இரண்டாவது முறை போர்முனைக்கு கொண்டு செல்லப்பட்டோம். இந்த முறை அவர் என்னுடன் ஹிராவையும் எடுத்துக் கொண்டார். அப்போதே நாங்கள் கொண்டு செல்லப்போகும் செய்தி மிக முக்கியமானது என்பதைப் புரிந்து கொண்டேன். இரண்டு பேரிடம் நம்பிக்கை வைத்தால் இருவரில்ஒருவராவது செய்தியைக் கொண்டு சேர்ப்பார்களே.

“குளிர் கடுமையாக இருந்தது. ஏதோ பனிப்பிரதேசத்தில் வாழ்வது போல உணர்ந்தேன். எப்போதும் மழை பெய்துகொண்டிருந்தது. தரை மிக மோசமாக இருந்தது. ஒவ்வொரு முறை தரையில் கால் வைக்கும் போதும், புதை மணலைப்போல சகதியில் சிக்கிக் கொண்டது, பிணத்தின் மீது கால் வைத்தது போல சில்லிட்டது.

“இப்போது நாங்கள் ஒரு புதிய இடத்தை வந்தடைந்தோம். அது பதுங்கு குழி அல்ல. ஒரு சிறிய கிராமம். அதைச் சுற்றிலும், எரிந்து கொண்டிருக்கும் அழிவின் அலை வீசியது. அது எதோ புனிதமான முக்கியமான இடம் அந்த மனிதர்களின் முகத்தைப் பார்க்கையில் தெரிந்தது. கிட்டத்தட்ட அந்த இடத்தின் எல்லாக் கூரைகளையும், சுவர்களையும், மரங்களையும் சாவின் சிவப்பு நாக்குகள் தீண்டியிருந்த போதும், அந்த இடத்தை அவர்கள் இழக்க விரும்பவில்லை. திறந்த வெளியில் இருப்பதை நான் பெரிதும் விரும்பினேன். சாம்பல் நிற வானத்தை கீழே, மிகவும் கீழே பார்க்க முடிந்தது. இன்னமும் எந்த குண்டும் விழுந்திருக்காத வெண்பனி நிலத் துண்டைகளையும் பார்க்க முடிந்தது. அத்தனை குண்டு வீச்சுக்கும் துப்பாக்கிச் சூட்டுக்கும் நடுவில், பெருங்காற்றில் சிதைந்த பறவைக்கூடுகள் போல வீடுகள் நொறுங்கிப் போயிருந்த இடத்தில், எலிகள் ஒவ்வொரு பொந்தாக ஓடின, சுண்டெலிகள் பாலாடைக் கட்டிகளைத் திருடி ஓடின, ஈக்களைப் பிடிக்க சிலந்திகள் வலைகள் பின்னின. மனிதர்கள் சக மனிதர்களால் கொல்லப்படுவதில் பொருட்படுத்த ஒன்றுமில்லை,, அன்று வானைச் சூழ்ந்திருந்த மேகங்களைப் போலவே அதில் கவலைப்பட ஒன்றுமில்லை என்றபடி அவை பாட்டுக்கு தங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தன.

“சிறிது நேரம் கழித்து குண்டுவீச்சு நின்றது. அந்தக் கிராமம், அதாவது எஞ்சிய கிராமம், அந்தத் தாக்குதலில் தப்பித்துவிட்டது போலப்பட்டது. மேலும் மேலும் இருண்டது. வானம், நான் என் மூக்கை அதில் நுழைக்கும் அளவிற்கு மிகவும் கீழே இறங்கியிருந்தது. என்னுடைய ஒவ்வொரு சிறகையும் குளிர் பிடித்துக் கொண்டு, என் உடம்பிலிருந்து அவற்றை பிய்க்கத் துவங்கியது. எங்கள் கூண்டில் அசையாது உட்கார்ந்திருப்பது முடியாத காரியம் என்பதை உணர்ந்தேன். எங்களைக் கதகதப்பாக வைத்துக்கொள்ள நானும் ஹிராவும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டோம்.

“மீண்டும் துப்பாக்கிச் சூடு துவங்கியது. இந்த முறை அனைத்து திசைகளிலிருந்தும். எங்கள் சின்ன கிராமம் எதிரியால் சூழப்பட்ட தீவாக ஆகிவிட்டது. எல்லாவற்றையும் மூடுபனி போர்த்தியிருக்க, எதிரிகள் பின் பக்கத்திலிருந்து எங்களுடைய தொடர்பை துண்டித்துவிட்டார்கள். பிறகு, ஏவுகனைகளை வீசத் துவங்கினார்கள். மதியம் கழிந்து அதிக நேரம் இருக்காது, ஆனாலும் இமாலய இரவைப் போலவே, இருட்டாகவும் நசநசப்பாகவும் இருந்தது. இன்னும் இரவாகவில்லை என்பதை மனிதர்கள் எப்படி அறியக்கூடும் என்று யோசித்துப் பார்த்தேன்.. என்ன இருந்தாலும் மனிதர்கள் பறவைகள் அளவிற்கு விஷயம் தெரிந்தவர்கள் அல்லவே.

“எங்களுடைய செய்திகளைக் கொண்டு செல்வதற்காக நானும் ஹிராவும் திறந்துவிடப்பட்டோம். நங்கள் மேலே பறந்தோம். ஆனால், அதிக தூரம் செல்ல முடியவில்லை. சீக்கிரமே அடந்த பனியினால் விழுங்கப்பட்டோம். எங்கள் கண்கள் எதையும் பார்க்க முடியவில்லை. ஒரு குளிர்ந்த ஈரப்பதம் மீக்க திரை ஒன்று எங்கள் கண்களை அழுத்தியது. ஆனால், நான் இதைப் போல ஒன்றை எதிர்பார்த்துதான் இருந்தேன். போர்க்களத்திலோ இந்தியாவிலோ இப்படிப்பட்ட நேரத்தில் நான் என்ன செய்வேனோ அதையே செய்தேன். நான் மேலே பறந்தேன். ஒரு சமயம் இன்னும் ஒரு அடி கூட மேலே செல்ல முடியாது என்பது போலத் தோன்றியது. என் இறக்கைகள் ஈரமாகி இருந்தன. என் மூச்சு, தொடர்ந்த தும்மல்களால் தடைப்பட்டது. எக்கணமும் செத்து விழுந்துவிடப் போகிறேன் என்று நினைத்தேன். புறா கடவுளர்களின் உதவியால், இப்போது என்னால் சில கஜம் வரைக் காண முடிந்தது. எனவே, நான் மேலே பறந்தேன். இப்போது என் கண்களில் எரிச்சலை உணர்ந்தேன். என் கண்கள் குருடாவதிலிருந்து தப்பிக்க, புழுதிப்புயலில் ஊடே பறக்கும் போது நான் பயன்படுத்தும் என்னுடைய இரண்டாவது கண் இமையை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்பதை திடீரென்று, உணர்ந்தேன். ஏன் என்றால், நாங்கள் மூடுபனிக்கிடையே இல்லை. மனிதர்கள் பரப்பிவிட்ட, மட்டமான வாடை கொண்ட, கண்களை அழிக்கும் புகை அது. யாரோ ஊசியால் கண்களிலேயே குத்தியது போல என் கண்கள் வலித்தன. என் கண் திரை மூடியிருக்க, மூச்சைப் பிடித்துக் கொண்டு நான் போராடி மேலே ஏறினேன். என்னுடன் வந்து கொண்டிருந்த ஹிராவும் மேலே ஏறினான். அந்த வாயுவால் மூச்சடைத்து சாகும் நிலைக்கு வந்துவிட்டான் அவன். ஆனால், அவன் தன்னுடைய போராட்டத்தை நிறுத்திக் கொள்ளப்போவதில்லை. கடைசியில் அந்த விஷவாயுவைத் தாண்டி நாங்கள் மேலே பறந்தோம். அங்கே காற்று சுத்தமாக இருந்தது. என் கண்களின் திரையைத் திறந்து, சாம்பல் நிற வானத்தை நோக்கினேன். அங்கே எங்களுடைய படைவரிசை தெரிந்தது. நாங்கள் அதை நோக்கிப் பறந்தோம்.

”எங்கள் இடம் நோக்கி பாதி தூரம் சென்றிருப்போம், அப்போது உடம்பு முழுக்க கருப்புச் சிலுவை போட்டுக் கொண்டிருந்த ஒரு கொடூர கழுகு எங்கள் அருகே பறந்து, பக் பஃப், பக் பஃப், பாப் பா… என்று எங்கள் மீது நெருப்பை உமிழ்ந்தது. நாங்கள் குனிந்து கொண்டோம். எங்களால் முடிந்ததைச் செய்தோம். அதன் பின்பக்கம் பறந்து சென்றோம். அந்தப் பக்கத்திலிருந்து அந்த இயந்திரங்களால் எங்களைத் தாக்க முடியவில்லை. அந்த இயந்திரக் கழுகின் வாலுக்கு மேலே நாங்கள் பறந்து செல்வதை நினைத்துப் பாருங்கள். அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அது வட்டமடிக்கத் துவங்கியது. நாங்களும் வட்டமடித்தோம். அது குட்டிக்கரணம் போட்டது. நாங்களும் போட்டோம். நிஜமான கழுகைப் போல் இல்லாமல், அதனுடைய வால் ஒரு செத்த மீனைப் போல விறைப்பாக இருந்தது. அதை அசைக்கமுடியாமல், அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதன் முன்னே மறுபடி சென்றால், அந்த நொடியிலேயே கொல்லப்படுவோம் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.

“நேரம் போய்க்கொண்டிருந்த்து. அந்த இயந்திர கழுகின் வாலுக்கு மேலேயே காலம் பூராவும் சுற்றிக் கொண்டிருக்க முடியாது என்பதை நான் உணர்ந்தேன். நாங்கள் கிளம்பி வந்த, விஷவாயு சூழப்பட்ட கிராமத்தில் ரசெல்தாரும் எங்கள் நண்பர்களும் இருந்தார்கள். அவர்களின் பாதுகாப்புக்காகவும் அவர்களுக்கு உதவி கிடைக்கவும் நாங்கள் எங்கள் செய்தியைக் கொண்டு சேர்க்க வேண்டும்.

“அப்போது அந்த இயந்திரக் கழுகு ஒரு தந்திரம் செய்தது. அது தன்னுடைய இடம் நோக்கி திரும்பிப் பறந்து சென்றது. அது எங்களைச் சுடாமல் இருக்கும் பொருட்டு, அதன் வாலுக்கு மேலேயே பறந்து சென்று எதிரியின் எல்லைக்குள் நுழைய நாங்கள் விரும்பவில்லை. குறி பார்த்துச் சுடுபவர்கள் அங்கு எங்களைச் சுட்டு வீழ்த்தி விடுவார்கள். இப்போது நாங்கள் எங்கள் இடம் நோக்கி பாதி தூரம் வந்துவிட்டோம், எங்கள் எல்கையும் கண்களுக்குத் தெரிகிறது, எனவே நாங்கள் கவனமாக இருப்பதில் அவ்வளவு அக்கறை செளுத்தவில்லை. அந்த இயந்திரக் கழுகிடமிருந்து திரும்பி எங்களால் முடிந்த அளவு வேகமாகப் பறந்தோம். ஒவ்வொரு முறை இறக்கையை அடிக்கும் போதும் மேலே உயர்ந்தோம். நாங்கள் இப்படிச் செய்த உடனே, அந்த பரிதாப மிருகம் திரும்பி எங்களைத் தொடர ஆரம்பித்தது. அதிர்ஷ்டவசமாக, அதற்கு கொஞ்சம் நேரம் பிடித்தது. இப்போது நாங்கள் எங்கள் எல்கைக்கு மேலே பறக்கிறோம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில், அந்தக் கழுகும் எங்கள் உயரத்திற்கு வந்து, எங்களை நோக்கி நெருப்பைக் கொட்டியது, பஃப் பஃப் பாப் பா. இப்போது நாங்கள் குனிந்து மூழ்க நிர்பந்திக்கப்பட்டோம். நான் ஹிராவை எனக்கு கீழே பறக்கச் செய்தேன். அது அவனை பாதுகாத்தது. அப்படியே நாங்கள் பறந்தோம். ஆனால், விதி என்பது விதியே தான். எங்கிருந்தோ ஒரு கழுகு வந்து எதிரியை நோக்கிச் சுட்டது. நாங்கள் இப்போது பாதுகாப்பாக உணர்ந்தோம். நானும் ஹிராவும் அருகருகே பறந்தோம். அப்போது நான் தவிர்த்த ஒரு குண்டு அவனுடைய இறக்கையை முறித்தது. பாவம்! ஹிரா காயம்பட்டுவிட்டான். அவன் வட்டமடித்து ஒரு உடைந்த வெள்ளி இலையைப் போலே காற்றின் ஊடே கீழே விழுந்தான். நல்லவேளை எங்கள் எல்லையில் விழுந்தான். அவன் இறந்துவிட்டதைக் கண்டதும், இரண்டு கழுகுகளுக்கும் இடையில் நடக்கும் சண்டையைக் காணத் திரும்பிக்கூட பார்க்காமல், நான் மின்னல் வேகத்தில் பறந்தேன்.

“நான் எங்கள் இடத்தை அடைந்தவுடன், தலைமைத் தளபதியிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர் என் முதுகைத் தட்டிக் கொடுத்தார். அந்த வயதான மனிதர் அந்த காகிதத் துண்டைப் படித்துவிட்டு, சில்வண்டு போல் ஓசை எழுப்பிக்கொண்டிருந்த அதிசய வஸ்துக்கள் சிலவற்றைத் தொட்டு ஒரு கொம்பை எடுத்து அதில் என்னவோ உறுமினார். இதைக் கண்டு, முதன் முறையாக ஒரு முக்கியமான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். இப்போது கோண்ட் என்னை என்னுடைய கூண்டிற்கு கொண்டு போனார். அங்கு, ஹிராவை நினைத்துக் கொண்டு நான் உட்கார்ந்திருக்க, எனக்கு கீழே இருக்கும் பூமி மொத்தமும் அதிர்ந்த்தை உணர்ந்தேன். வெட்டுக்கிளிகள் போல இயந்திரக் கழுகுகள் பறந்தன. அவை ஊளையிட்டன, இரைந்தன, குரைத்தன. கீழே, நிலத்திலிருந்து, எண்ணற்ற உலோக நாய்கள் வெடித்து உறுமின. பிறகு, காட்டிலிருக்கும் ஒட்டு மொத்த புலிகளுக்கும் பைத்தியம் பிடித்துவிட்டதைப் போல, அடர்ந்த குரலில் ஊளைச் சத்தம் கேட்டது. கோண்ட் என் தலையைத் தட்டிக் கொடுத்து, ‘இன்று நீ காப்பாற்றிவிட்டாய்’ என்றார். எனக்கு தான் நாள் ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. இருண்ட சாம்பல் நிற வானத்திற்கு கீழே, மரணம் ஒரு டிராகனைப் போலவே சுற்றிக் கொண்டும் அலறிக் கொண்டும், தன் பிடியிலிருந்த அனைவரையும் கசக்கிக் கொண்டும் இருந்தது. அடுத்த நாள் பயிற்சிக்காக எங்கள் தளத்திற்கு பக்கத்தில் பறந்த போது, என் கூண்டிலிருந்து ஒரு மைல் தொலைவிற்குள் நிலம் குண்டுகளால் துளைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். எலிகளாலும் சுண்டெலிகளாலும் கூடத் தப்பிக்க முடியவில்லை. டஜன் கணக்கில் அவை கொல்லப்பட்டு, பிய்த்து எறியப்பட்டிருந்தன. என்ன ஒரு சேதம் ஏற்பட்டிருக்கிறது என்பதை இதிலிருந்தே நீங்கள் அளவிட்டுக் கொள்ளலாம். ஓ! எத்தனைக் கோரம். எனக்கு துக்கமாக இருந்தது. இப்போது ஹிராவும் செத்துப் போய்விட்டான். நான் தனிமையாகவும் சோர்வாகவும் உணர்ந்தேன்.