மாயக்கூத்தன்

வண்ணக்கழுத்து 17அ: லாமாவின் மெய்யறிவு

gay_neck_the_story_of_a_pigeon

மாயக்கூத்தன்

பத்து நாட்கள், லாமா சொன்னபடியே கடுமையாகவும் ஆத்மார்த்தமாகவும் தியானம் செய்த பிறகு அவர் என்னையும் வண்ணக்கழுத்தையும் கூப்பிட்டனுப்பினார். வண்ணக்கழுத்தை என் கைகளில் ஏந்திக் கொண்டு அவருடைய அறையை நோக்கி ஏறிச் சென்றேன். வழக்கமாக மஞ்சள் நிறத்தில் இருக்கும் அவருடைய முகம் இன்றைக்கு பழுப்பு நிறத்தில், மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது. அவருடைய பாதாம் வடிவக் கண்களில் ஒருவித புதுமையான சமநிலையும் சக்தியும் ஒளிர்ந்தது. அவர் வண்ணக்கழுத்தை தன் கைகளில் எடுத்துக் கொண்டு,

“வாடைக் காற்று உன்னை குணப்படுத்தட்டும்
தென்றல் உன்னைக் குணப்படுத்தட்டும்
கோடைக் காற்றும் கொண்டல் காற்றும் ஆரோக்கியத்தை உன் மீது பொழியட்டும்
அச்சம் உன்னைவிட்டுப் போகிறது
வெறுப்பு உன்னைவிட்டுப் போகிறது
சந்தேகமும் உன்னைவிட்டுப் போகிறது
தைரியம் பொங்கும் புதுவெள்ளமென உனக்குக்குள்ளே விரைகிறது
உன் இருப்பு மொத்தத்தையும் அமைதி ஆள்கிறது
அமைதியும் வலிமையும் உனது இரு இறக்கைகள் ஆகிவிட்டன
உன் கண்களில் துணிவு ஒளிர்கிறது;
இதயத்தில் சக்தியும் வீரமும் உறைகின்றன
நீ குணமடைந்துவிட்டாய்
நீ குணமடைந்துவிட்டாய்
நீ குணமடைந்துவிட்டாய்
ஷாந்தி! ஷாந்தி! ஷாந்தி!

சூரிய அஸ்தமனத்தில், இமாலய சிகரங்களை வெவ்வேறு வண்ணச் சுவாலைகளாய் ஒளிரும் வரை நாங்கள் அங்கேயே உட்கார்ந்து இந்த எண்ணங்களை தியானித்தோம். எங்களைச் சுற்றி இருந்த பள்ளத்தாக்குகள், குகைகள், காடுகள் எல்லாம் ஊதாப் போர்வை போர்த்திக் கொண்டிருந்தன.

வண்ணக்கழுத்து மெதுவாக லாமாவின் கைகளில் இருந்து கீழே குதித்து, அந்த அறையின் வாசலுக்கு நடந்து சென்று சூரிய அஸ்தமனத்தைப் பார்த்தான். தன்னுடைய இடது இறக்கையை விரித்து காத்திருந்தான். பிறகு மென்மையாக, அவ்வளவு மெதுவாக, ஒவ்வொரு சிறகாக, ஒவ்வொரு தசையாக, கடைசியில் பாய்மரத் துணியைப் போல விரிய, வலது இறக்கையை உயர்த்தினான். உடனடியாகப் பறப்பதைப் போல நாடகத்தனமாக எதையும் செய்யாமல், ஏதோ மதிப்புமிக்க, ஆனால் உடைந்துவிடக் கூடிய இரு காற்றாடிகளைப் போல தன்னுடைய இறக்கைகளை மூடிக் கொண்டான். அந்திச் சூரியனுக்கு எப்படி வணக்கம் சொல்ல வேண்டும் என்பதை அவனும் அறிந்திருந்தான். ஒரு பூஜாரியின் மாண்புடன் அவன் படிகளில் இறங்கினான். என் பார்வையை விட்டு அவன் மறைந்தவுடன், தன் இறக்கைகளை அடித்துக்கொள்ளும் சத்தததைக் கேட்டேன், கேட்ட மாதிரி கற்பனை செய்தேன். உண்மையில் என்ன நடந்தது என்பதைக் காண விரைந்து எழுந்தேன். ஆனால், லாமா என் தோள்களில் கையைப் போட்டு என்னை தடுத்து நிறுத்தினார். அவருடைய இதழ்களில் இன்னதென்றுபுரிந்து கொள்ள முடியாத ஒரு புன்னகை தவழ்ந்திருந்தது.

அடுத்த நாள் காலையில் நடந்த விஷயங்களை கோண்டிடம் சொன்னேன். அவர் சாதாரணமாக பதில் சொன்னார். ”வண்ணக்கழுத்து தன் இறக்கைகளை விரித்து அஸ்தமிக்கும் சூரியனுக்கு வணக்கம் சொன்னான் என்று நீ சொல்கிறாய். அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. விலங்குகள் ஆன்மீக எண்ணம் கொண்டவை. ஆனால் மனிதன் தனது அறியாமையால் அவை அப்படியில்லை என்று நினைக்கிறான். குரங்குகள், கழுகுகள், புறாக்கள், சிறுத்தைகள், ஏன் கீரிப்பிள்ளைகள் கூட சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் வணங்குவதை நான் பார்த்திருக்கிறேன்.”

“எனக்கு அவற்றைக் காண்பிக்க முடியுமா உங்களால்?”

“முடியும். ஆனால் இப்போது இல்லை. நாம் போய் வண்ணக்கழுத்துக்கு காலையுணவைக் கொடுப்போம்” என்றார் கோண்ட்.

நாங்கள் அவனுடைய கூண்டை அடைந்த போது, அது திறந்திருப்பதையும் அதற்குள் அவன் இல்லாததையும் கண்டோம்.  நான் ஆச்சரியப்படவில்லை. ஏனென்றால், மடாலயத்திற்கு வந்த பிற்பாடு ஒவ்வொரு இரவும் அவனுடைய கூண்டை நான் திறந்து தான் வைக்கிறேன். ஆனால், அவன் எங்கு போனான்? பிரதான கட்டிடத்தில் அவனைக் காணவில்லை என்பதால் நாங்கள் நூலகத்திற்குச் சென்றோம். அங்கு ஆளில்லாத வெளிப்புற அறையில் அவனுடைய சிறகுகள் கிடப்பதைக் கண்டோம். பக்கத்திலேயே கோண்ட், மரநாய் ஒன்றின் பாதச் சுவடுகளைக் கண்டுபிடித்தார். பிரச்சனை இருந்திருக்கும் என்று நாங்கள் சந்தேகித்தோம். ஆனால், அந்த மரநாய் அவனைத் தாக்கி கொன்றிருந்தால், தரையில் அவனுடைய ரத்தம் இருந்திருக்குமே. பிறகு எங்கு பறந்து போயிருப்பான்? என்ன செய்திருப்பான்? இப்போது எங்கே இருப்பான்?

நாங்கள் ஒரு மணிநேரம் அலைந்தோம். எங்களுடைய தேடலை நிறுத்தலாம் என்று நினைத்த போது, அவன் எழுப்பும் ஒலியைக் கேட்டோம். நூலகத்தின் கூரையில், இறவாணத்தில் தங்கள் கூடுகளில் இருந்த தன்னுடைய பழைய நண்பர்களான உழவாரக் குருவிகளுடன் அவன் பேசிக் கொண்டிருந்தான். இவனுடைய ஒலிக்கு அவர்கள் பதிலளிப்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது. திருவாளர் உழவாரக்குருவி “சீப் சீப் சீப்” என்று கத்தினார். நான் உற்சாகத்தில் வண்ணக்கழுத்தை நோக்கிக் கூவினேன். “ஆயா ஆய்!” என்று காலைச் சாப்பாட்டிற்காக அவனை அழைத்தேன். அவன் கழுத்தை வளைத்து கவனித்தான். பிறகு, நான் மீண்டும் அவனை அழைக்க, அவன் என்னைப் பார்த்தான். உடனடியாக தன் இறக்கைகளை சப்தமாக அடித்து, கீழ் நோக்கிப் பறந்து என்னுடைய மணிக்கட்டில், சிறிதும் அலட்டிக்கொள்ளாதது போல் வந்து அமர்ந்தான்.

அன்றைய சூரிய உதயத்தின் போது, காலை தியானத்திற்காகச் செல்லும் பூசாரிகளின் காலடிச் சத்தங்களைக் கேட்டு, கூண்டிலிருந்து வெளி வந்து, வெளிப்புற அறைக்குச் சென்ற போது, அங்கு ஒரு அனுபவமில்லா இளம் மரநாய் அவனைத் தாக்கியிருக்க வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. வண்ணக்கழுத்தைப் போன்ற அனுபவசாலியால், ஒன்றிரண்டு சிறகுகளை மட்டுமே உதிர்த்து அந்த மரநாய்க்கு எளிதாக போக்குகாட்டிவிட முடியும். அந்த இளம் மரநாய், குவிந்திருக்கும் இறகுகளுக்கு இடையே புறாவைத் தேடிக் கொண்டிருக்க, அவனுக்கு இரையாகி இருக்க வேண்டியதோ வானத்தை நோக்கிப் பறந்திருக்கும். வானத்தில், உதிக்கும் சூரியனுக்கு வணக்கம் செலுத்த பறந்து கொண்டிருந்த தனது பழைய நண்பனான உழவாரக் குருவியைப் பார்த்திருக்க வேண்டும். இருவரும் இணைந்து காலை வழிபாட்டை முடித்த பின்னர், உரையாடுவதற்காக மடாலய நூலகக் கூரையில் இறங்கியிருக்கிறார்கள்.

வண்ணக்கழுத்து 16இ: வெறுப்பும் பயமும்

gay_neck_the_story_of_a_pigeon

மாயக்கூத்தன்

இப்போது நான் முன்னே சென்று, அந்த மடத்தின் தலைமை லாமாவை வணங்கினேன். அவர் என்னை ஆசீர்வதிக்க, அவருடைய இறுக்கமான முகம் புன்னகையால் மலர்ந்தது. மற்ற லாமாக்களையும் வணங்கிய பின் நானும் கோண்டும், சின்னச் சின்ன மர இருக்கைகளை வரிசையாக அடுக்கி எங்களுக்காக உருவாக்கப்பட்ட மேஜைக்கு முன் அமர்ந்தோம். தரையில் சம்மண்மிட்டு நாங்கள் உட்கார, அந்த மேஜை எங்கள் மார்பு உயரம் வரை வந்தது. வெப்பம் மிகுந்த நாளில் பயணம் செய்துவிட்டு, குளிர்ந்த தரையில் உட்கார்வது இதமாக இருந்தது. பருப்பினால் செய்யப்பட்ட கஞ்சி (soup), பொறித்த உருளைக்கிழங்கு மற்றும் கத்திரிக்காய் கறி தான் எங்கள் சாப்பாடு. நானும் கோண்டும் சைவர்கள் ஆதலால், அங்கு பரிமாறப்பட்ட முட்டைகளை நாங்கள் சாப்பிடவில்லை. எங்களுக்கான பானம் சுடச்சுட க்ரீன் டீயாக அமைந்தது.

மதிய உணவிற்குப் பின், தன்னுடன் மதியத் தூக்கத்தை எடுத்துக்கொள்ள என்னையும் கோண்டையும் அழைத்தார் தலைமை லாமா. அவருடன் மலையின் உச்சி சிகரத்திற்கு ஏறினோம். அது ஒரு கழுகின் பொந்து போல இருந்தது. அதற்கு மேலே நெருக்கமாக தேவதாரு மரங்கள் வளர்ந்திருந்தன. அங்கே, மரச்சாமான்கள் ஏதுவும் இல்லாத வசதிகளற்ற வெற்று அறை ஒன்றைப் பார்த்தோம். அதற்கு முன் அப்படி ஒன்றை நான் பார்த்திருக்கவில்லை. அங்கே நாங்கள் உட்கார்ந்த பிறகு அந்தத் துறவி, ”இந்த மடாலயத்தில் ஒவ்வொரு நாளும் இரண்டு முறை, இந்தப் பூமியின் தேசங்களைக் குணப்படுத்துவதற்காக நாங்கள் எல்லையற்ற கருணையிடம் பிரார்த்திக்கிறோம். இருந்தும் யுத்தம் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. பறவைகளையும் விலங்குகளையும் கூட, வெறுப்பும் பயமும் தொற்றிக் கொள்கிறது. உணர்வுகளால் உண்டாகும் நோய்கள், உடல் நோய்களைவிட வேகமாகப் பரவுகின்றன. மனிதகுலம் பயத்தினாலும், வெறுப்பினாலும் சந்தேகத்தினாலும் வன்மத்தினாலும் நிரம்பப் போகிறது. இவற்றிலிருந்து மொத்தமாக மனிதர்களை விடுவிக்க வேண்டுமானால், ஒரு தலைமுறையையே நாம் கடக்க வேண்டியிருக்கும்.” என்றார்.

இதுவரை சுருக்கங்களற்று இருந்த லாமாவின் நெற்றியை  எல்லையற்ற சோகம் கவலை ரேகைகளால் நிறைத்தது. பயங்கர களைப்பினால் அவருடைய இதழோரங்கள் தாழ்ந்தன. யுத்தங்களுக்கு மேலே அவற்றைத் தாண்டி, அவருடைய கழுகுக் குகையில் அவர் வாழ்ந்த போதும் கூட இந்த உலகத்தைப் போரில் ஆழ்த்தியவர்களைவிட அவர் மனிதர்களின் பாவச் சுமையை நன்கு உணர்ந்திருந்தார்.

ஆனால், அவர் மறுபடியும் புன்னகைத்தார். “நம்முடன் இருக்கும் வண்ணக்கழுத்தையும் கோண்டையும் பற்றிப் பேசுவோம். உன்னுடைய புறா மீண்டும் வானத்தின் அமைதியில் பறக்க வேண்டும் என்றால், கோண்ட் இத்தனை நாட்கள் தனக்காகச் செய்து கொள்வது போல, நீ எல்லையில்லா துணிவை தியானிக்க வேண்டும்.”

“எப்படிப் பிரபுவே?” என்று ஆர்வமாகக் கேட்டேன். அந்தத் தலைமை லாமாவின் மஞ்சள் முகம், சிவந்தது. என்னுடைய நேரடிக் கேள்வியால் அவரை சங்கடப்படுத்திவிட்டேன் என்பதில் சந்தேகமே இல்லை. அதற்காக நான் வெட்கினேன். நேரடித்தன்மை அவசரத்தைப் போலே மிகவும் இழிவானது.

என்னுடைய எண்ணங்களை உணர்ந்தவரைப் போல, என்னை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வரும்வகையில் லாமா சொன்னார், “ஒவ்வொரு சூரிய உதயத்தின் போதும் அஸ்தனமத்தின் போதும், வண்ணக்கழுத்தை உன் தோளில் அமர்த்திக் கொண்டு, உனக்குள்ளே இதைச் சொல் ’எல்லையில்லா துணிவு எல்லா உயிர்களிடத்திலும் இருக்கிறது. இவ்வுலகில் உயிர் பிழைத்து சுவாசிக்கும் ஒவ்வொரு உயிரும் எல்லையற்ற துணிவின் நீர்நிலை. நான் யாரைத் தொடுகிறேனோ அவர்களிடத்தில் எல்லயற்ற துணிவைக் கடத்தும் அளவிற்கு பரிசுத்தம் அடைவேனாக”. இதைத் தொடர்ந்து செய்து வந்தால், ஒருநாள், உன்னுடைய இருதயம், மனம் மற்றும் ஆன்மா மொத்தமாக பரிசுத்தமாகிவிடும். அந்த நொடியில், பயமில்லாத, வெறுப்பில்லாத, சந்தேகம் இல்லாத, உனது ஆன்மாவின் சக்தி, வண்ணக்கழுத்துக்குள் ஊடுறுவி அவனுக்கு விடுதலை அளிக்கும். எவன் ஒருவன் மிகப் பெரிய அளவில் தன்னை சுத்தப்படுத்திக் கொள்கிறானோ, அவனால் இந்த உலகத்திற்குள் மிகப்பெரிய ஆன்மசக்தியை செலுத்த முடியும். நான் சொல்வதை நாளுக்கு இரண்டு முறை செய். எங்கள் லாமாக்கள் அனைவரும் உனக்கு உதவி செய்வார்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.”

ஒரு நொடி மெளனத்திற்குப் பின் லாமா தொடர்ந்தார், “வேறு யாரையும்விட மிருகங்களைப் பற்றி நன்கு அறிந்தவரான கோண்ட் உனக்குச் சொல்லியிருப்பார், நம்முடைய பயம் மற்றவர்களை பயமுறுத்தி, நம்மை தாக்கச் செய்கிறது. உன்னுடைய புறா ரொம்பவே பயந்து போய் இருக்கிறான். மொத்த வானமும் தன்னைத் தாக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். ஒரு இலை கூட அவனைப் பயமுறுத்தாமல் கீழே விழுவதில்லை. அவன் உள்ளத்தைக் கலங்கடிக்காமல் ஒரு நிழல் கூட விழுவதில்லை. இருந்தாலும் அவனுடைய வேதனைக்கு அவனே காரணம்.

“நாம் பேசிக் கொண்டிருக்கும் இதே நேரத்தில், இங்கிருந்து கீழே வடமேற்கில் இருக்கும் கிராமம், வண்ணக்கழுத்து சந்திக்கும் அதே பிரச்சனையால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இது மிருகங்கள் வடக்கே வரும் காலம். மிரட்சியில் இருக்கும் கிராமவாசிகள், காட்டு மிருகங்களைக் கொல்வதற்காக பழைய துப்பாக்கிகளோடு சுற்றித் திரிகிறார்கள். இதோ, அந்த மிருகங்கள் இப்போது அவர்களைத் தாக்குகின்றன. ஆனால், இதற்கு முன்னர் அவை அப்படிச் செய்ததே இல்லை. காட்டெருமைகள் வந்து அவர்களின் பயிர்களை சாப்பிடும். சிறுத்தைகள் அவர்களுடைய ஆடுகளை திருடிக் கொண்டு போகும். இன்றைக்கு இங்கே வந்த செய்தி, ஒரு காட்டெருமை ஒருவனைக் கொன்றுவிட்டது என்பது. பிரார்த்தனையாலும் தியானத்தாலும் அவர்கள் மனத்திலிருந்து பயத்தை ஒழித்துவிடுங்கள் என்று நான் சொன்னாலும் அவர்கள் செய்யப்போவதில்லை.”

“ஏன்?” என்று கேட்டார் கோண்ட். “நான் அங்கே சென்று அந்த விலங்குகளை அவர்களிடமிருந்து விரட்ட எனக்கு அனுமதி தரமட்டீர்களா?”

“இப்போதைக்கு இல்லை” என்றார் லாமா. “விழித்திருக்கும் கணங்களில் நீ பயத்திலிருந்து  குணமடைந்திருந்தாலும், உன்னுடைய கனவுகள் அச்சத்தின் சாபத்துக்கு இன்னும் இடம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்கள் தொடர்ந்து பிரார்த்தித்து தியானம் செய்வோம், உன்னுடைய ஆன்மாவில் இருக்கும் கசடுகள் எல்லாம் வெளியே போய்விடும். நீ குணமடைந்த பின்பும் கீழே இருக்கும் கிராமத்தார்கள் விலங்குகளால் தாக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்றால், நீ போய் அவர்களுக்கு உதவி செய்யலாம்.”

வண்ணக்கழுத்து 16ஆ: வெறுப்பும் பயமும்

gay_neck_the_story_of_a_pigeon

நான் கோண்டின் அறிவுரையை ஏற்று, வண்ணக்கழுத்தை ஒரு கூண்டிலும் அவன் பெடையை மற்றொரு கூண்டிலும் போட்டுக் கொண்டு வடக்கு நோக்கி பயணித்தேன்.

முந்தைய இலையுதிர்காலத்தை விட இந்த வசந்தகாலத்தில் மலைகள் எத்தனை வித்தியாசமாய் இருக்கின்றன! திடீர்த் தேவையை முன்னிட்டு என் பெற்றோர்கள் டெண்டாமில் உள்ள அவர்களுடைய வீட்டை வழக்கத்திற்கு மாறாக பல மாதங்கள் முன்பாகவே திறந்திருந்தனர். அங்கே எல்லாம் சீரான பிறகு, ஏப்ரல் மாத கடைசியில் வண்ணக்கழுத்தை எடுத்துக் கொண்டு குதிரைகளில் பயணித்த ஒரு திபெத்திய நாடோடிக் கூட்டத்தின் துணையோடு சிங்காலிலா நோக்கிப் புறப்பட்டேன். அவனுடைய பெடையை வீட்டிலேயே விட்டுவிட்டேன். ஒருவேளை அவனால் மீண்டும் பறக்க முடிந்தால் பெடையைத் தேடி வருவானே என்பதற்காக. அவனை குணமாக்கச் சரியான யுத்தி, அந்தப் பெடையை ஒரு ஈர்ப்பு சக்தியாக பயன்படுத்துவது. அவன், புதிதாக இடப்பட்ட முட்டைகளை அடைகாத்து பொறிக்க தனது துணைக்கு உதவிகரமாக இருக்க திரும்புவான் என்று கோண்ட் நினைத்தார். ஆனால், நாங்கள் கிளம்பிய மறுநாளே என் பெற்றோர் அந்த முட்டைகளை அழித்துவிட்டனர். வண்ணக்கழுத்தின் பெயருக்கு பங்கம் செய்யும் விதமாக சீக்கான, குறைபாடுடைய குஞ்சுகள் உருவாவதை நாங்கள் விரும்பவில்லை.

என் பறவையை என் தோளிலே தூக்கிச் சென்றேன். அவன் நாள் முழுக்க அங்குதான் உட்கார்ந்து கொண்டு வந்தான். இரவில் அவனை பாதுகாப்பாக அவனுடைய கூண்டில் அடைத்து வைத்தோம். அது அவனுக்கு நன்மை செய்தது. பன்னிரெண்டு மணிநேர மலைக்காற்றும் அதன் வெளிச்சமும் அவனை உடலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும், அவன் என் தோளிலிருந்து தன் பெடையைத் தேடி, அவள் முட்டையைப் பொறிக்க உதவி செய்ய, பறந்து செல்ல ஒருமுறை கூட முயற்சி செய்யவில்லை.

வசந்தகால இமாலயம் தனித்துவம் வாய்ந்தது. பூமி முழுக்க வெள்ளை வயலட் மலர்களால் ஒளிர்ந்தது. சூடான ஈரப்பதம் நிரம்பிய பள்ளத்தாக்குகளில் இருந்த ஃபெர்ன்கள்(ferns), கருநீல வானத்தில் இருக்கும் விலைமதிப்பற்ற கல்லைப் போல இருந்த வெள்ளை மலைகளை, தங்கள் பெரிய கரங்களைக் கொண்டு எட்டிப் பிடிக்க முயற்சி செய்வது போல படர்ந்து கொண்டிருந்தன, இடையிடையே அதற்குள் பழுக்கத் தொடங்கியிருந்த ராஸ்பெர்ரி பழ மரங்கள். சில சமயங்களில், வளர்ச்சி தடைப்பட்டிருந்த ஓக், மிகப்பெரிய இலம், தேவதாரு மற்றும் கஷ்கொட்டை மரங்கள் இருந்த அடந்த காடுகளைக் கடந்து சென்றோம். சூரிய ஒளியை முழுவதும் மறைக்கும்படியான எண்ணிக்கையில் அவை வளர்ந்திருந்தன. மரங்களோடு மரமும், கொம்புகளோடு கொம்பும், வேர்களோடு போராடும் வேர்களும், வெளிச்சத்திற்காகவும் உயிருக்காகவும் போராடின. அவற்றுக்கு கீழே இந்த மரங்களினால் உண்டான இருட்டில், தம் பங்குக்கு புலிகளாலும், சிறுத்தைகளாலும் கருஞ்சிறுத்தைகளாலும் வேட்டையாடப்படுவதற்காகவே, நிறைய மான்கள் செழித்து வளர்ந்திருந்த புற்களையும் செடிகளையும் மேய்ந்து கொண்டிருந்தன. எங்கெங்கு உயிர் செழிப்பாக வளர்ந்திருந்ததோ, அங்கெல்லாம் பறவைகள், விலங்குகள் மற்றும் செடிகளுக்கு இடையில் இருத்தலுக்கான போராட்டம் இன்னும் உக்கிரமாக இருந்தது. இத்தகைய தன்முரண் வாழ்வின் இயல்புகளுள் ஒன்று. பூச்சிகளுக்கு கூட இதிலிருந்து விடுதலை கிடையாது.

நாங்கள், காட்டின் இருளிலிருந்து வெளிவந்து வெட்ட வெளியை நோக்கிய போது, சூடான வெப்பமண்டல சூரிய ஒளி, திடீரென்று தன்னுடைய வைர நெருப்பு முனைகளால் எங்கள் கண்களைப் பறித்தது. தட்டான்களின் பொன்னிற அசைவு காற்றுவெளியை நிரப்பியது. வண்ணத்துப்பூச்சிகள், குருவிகள், ராபின்கள், ஜேக்கள் மற்றும் மயில்கள் சப்தங்கள் எழுப்பி, மரத்திலிருந்து மரத்திற்கும், சிகரங்களிலிருந்து உயர்ந்த சிகரங்களுக்கும் தாவிக் காதல் செய்தன.

ஒருபக்கம் தேயிலைத் தோட்டங்களும் வலது பக்கம் பைன் காடுகளும் கொண்ட திறந்த வெளியில், கத்தி முனைகளைப் போன்று நேரான சரிவுகளில் நாங்கள் கஷ்டப்பட்டு தடுமாறி முன்னேறினோம். அங்கே காற்று அடர்த்தியை இழந்திருந்ததால், சுவாசிப்பது சிரமமாக இருந்தது. சப்தங்களும் எதிரொலிகளும் வெகு தூரம் பயணித்தன. கிசுகிசுப்புகள் கூட சில மையில் தூரம் தாண்டியும் கேட்கப்படுவதிலிருந்து தப்ப முடியவில்லை. மனிதர்களும் விலங்குகளும் ஒருசேர அமைதியானார்கள். கால் குளம்புகளின் தடதடக்கும் சப்தங்களைத் தவிர குதிரைகளும் மனிதர்களும், எங்கள் மீது கவிந்திருக்கும் தனிமைக்கும் அமைதிக்கும் களங்கம் ஏற்படாதவாறே முன்னேறினோம்.

கருநீல வெட்டவெளிவானம் மேகங்கள் அற்று தூய்மையாகவும், வடக்கே ஒரு பெருமூச்செரிந்தாற்போல் செல்லும் நாரைக் கூட்டங்களையும், சரிவுகளில் ஒரு அடிநாதமாய் விரைந்து இறங்கும் கழுகுகளையும் தவிர எந்தச் சலனமும் அற்று இருந்தது. எல்லாமுமே குளிர்ந்து, கூர்மையாகவும் விரைவாகவும் நடந்தன. ஒரே இரவில் ஆர்கிட்கள் வெடித்து, தங்களுடைய ஊதா நிறக் கண்களை எங்களை நோக்கித் திறந்திருந்தன. சாமந்திப் பூக்கள் காலைப் பனியினால் நிறைந்திருந்தன. கீழே இருந்த ஏரிகளில் நீலத்தாமரையும் வெள்ளைத் தாமரையும் தேனிக்களுக்காக தங்கள் இதழ்களை விரித்தன.

இப்போது நாங்கள் சிங்காலிலாவுக்கு அருகே வந்திருந்தோம். மலை உச்சியிலிருந்து மடாலயம் தன் தலையை உயர்த்தி எங்களை அழைத்தது. இறக்கை வடிவிலமைந்த அதன் கூரையும் பழமையான சுவர்களும் தொடுவானத்தில் ஒரு பதாகையைப் போல மிதந்தன. நான் விரைந்து நடக்க அறிவுறுத்தப்பட்டேன். அடுத்த ஒரு மணிநேரத்தில் மடாலயத்தின் செங்குத்தான பாதையில் நான் ஏறிக் கொண்டிருந்தேன்.

நமது அன்றாட வாழ்வின் போராட்டங்களில் இருந்து உயர்ந்து மேலே வாழும் மனிதர்களுக்கு இடையே இருப்பதுதான் என்னவொரு நிம்மதி! அது மதியப் பொழுது. நான் கோண்டுடன் ஒரு பால்சம் காட்டின் வழியே கீழே இறங்கி ஒரு நீரூற்றுக்குச் சென்றேன். அங்கே நாங்கள் குளித்ததுடன் வண்ணக்கழுத்தையும் சுத்தமாக கழுவினோம். வண்ணக்கழுத்து தன்னுடைய கூண்டில் மதிய உணவை உண்டு முடித்த பின்னர், நானும் கோண்டும் சாப்பாட்டு அறைக்குச் சென்றோம். அங்கே லாமாக்கள் எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். அந்த அறை கருங்காலி மரத் தூண் மண்டபம் போல இருந்தது. தூண்களின் உச்சி தங்கத்தினால் ஆன டிராகன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பல நூற்றாண்டுகளாக கருத்து வளர்ந்திருந்த தேக்கு உத்திரங்களில் பெரிய தாமரை வடிவங்கள் செதுக்கப்பட்டிருந்தன. அவை மல்லிகையைப் போல மென்மையாகவும் உலோகத்தைப் போல உறுதியாகவும் இருந்தன. தரையில் செம்பாறைகளில், காவி நிற உடையணிந்த துறவிகள் தியானத்தில் ஆழ்ந்திருந்தனர். உணவுக்கு நன்றி கூறும் பிரார்த்தனை அது. அனைவரும் ஒன்றாக, க்ரிகோரியன் ஸ்லோகம் போன்ற ஒன்றைச் சொல்லி தங்கள் பிரார்த்தனையை முடிக்கும் வரை நானும் கோண்டும் சாப்பாட்டு அறையின் வாயிலில் நின்று கொண்டிருந்தோம்.

“புத்தம் மே சரணம்

தர்மம் மே சரணம்

ஓம் மணி மதமே ஓம்”

புத்தர் என்னும் அறிவே எங்கள் புகல்

மதமே எங்கள் புகல்

வாழ்வு என்னும் தாமரையில் ஒளிரும்

உண்மை மணிவிளக்கே எங்கள் புகல்

 

செரினா

மாயக்கூத்தன்

ஷாராபோவாவின் முதல் கிராண்ட்ஸ்லாம் வெற்றி செரினாவுக்கு எதிராக 2004 விம்பிள்டனில் கிடைத்தது. அந்தப் போட்டி எனக்கு இப்போதும் நினைவில் இருக்கிறது. எப்போதுமே வில்லியம்ஸ் சகோதரிகளை எனக்குப் பிடித்ததில்லை. அவர்களுடைய தோற்றம், ஆக்ரோஷம், போட்டிகளில் அவர்கள் ஆதிக்கம் செலுத்திய விதம், நிறைய காரணங்கள் இருக்கக்கூடும். அதனால், ஷாராபோவா ஜெயிக்க வேண்டுமென்று விரும்பினேன். நினைத்தது நடந்தபோது, ரொம்பவே மகிழ்ச்சி. ஷாராபோவா, செரினாவுக்கு எல்லா விதத்திலும் மாற்றாக இருந்தார் என்பது என் நினைப்பு.

எந்த விளையாட்டை எடுத்துக் கொண்டாலும் அதன் நுட்பங்களை நான் அறியேன். எனக்கு அதுவொரு காணும் பொழுதுபோக்கு. இரண்டு பேர் விளையாடுகிறார்கள் என்றால், யாராவது ஒருவரை சப்போர்ட் பண்ணுவேன். சட்டென்று ஒரு நொடியில் இது நடக்கும். இவர் அருமையான ப்ளேயர் என்றெல்லாம் யாரைப் பற்றியும் தெரியாது. ஆக, ஒவ்வொரு முறை வில்லியம்ஸ் சகோதரிகள் ஜெயிக்கும்போதும் கடுப்பாக இருக்கும். அதனால் ஷாராபோவா ஜெயிக்க விரும்பினேன்.

சமீப வருடங்களில் செரினா ஒரு விம்பிளிண்டனில் ஜெயித்து, பின் பரிசை தலையில் வைத்து கரகம் ஆடியதுகூட ரசிக்கக்கூடியதாக இல்லை. முதன் முறை நான் சந்தோஷப்பட்டதற்கும் 2015க்கும் பதினோரு வருடங்கள். ஹிங்கிஸ், ஹெனின், டேவர்போர்ட், கிம் கிளிஸ்டர்ஸ், அனா, மெளரிஸ்மோ, இப்படி நிறைய பேர் வந்து போயிருந்தாலும், செரினா இன்னமும் வெல்கிறார் என்பது ஆச்சரியம். அதுவும் முப்பது வயதுக்கு மேல் ஒரு விளையாட்டு வீரரின் ஆதிக்கம் எப்படி செல்லுபடியாகிறது? ஃபெடரர் ரொம்பவே திணறுகிறார். நாடலின் ஃபிட்னெஸ் அவருக்கு சாதகமாக இல்லை. ஆனால், செரீனா இன்னமும் இருக்கிறார்.

2004ல் நான் கல்லூரிக்குச் செல்லத் தொடங்கவில்லை. அப்போது என்னைப் பற்றிய என் எண்ணம் ரொம்பவே வண்ணமயமாக இருந்தது. செரினாவையும் அவருடைய ஆக்ரோஷத்தையும் ஏதோ பண்படாத முரட்டுத்தனமாகத்தான் என்னால் எடுத்துக் கொள்ள முடிந்தது. ஆனால், 2015ல் அப்படியில்லை. செரினாவின் உழைப்பும் மீண்டும் மீண்டும் வெளிப்படும் ஆக்ரோஷமும் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றன. 2004ல் என்னைப்பற்றி எனக்கிருந்த நம்பிக்கை தொடரவில்லை. பத்து வருடங்களில் நான் தேங்கிவிட்டதாகவே நினைக்கிறேன்.

இப்போது செரினா எனக்கு அணுக்கமாகத் தெரிகிறார். என்னுடைய பல நண்பர்களைப் போல, சரளமான ஆங்கிலமும் அடிப்படையான ஒரு லாகவமும் எனக்கு கைவரவில்லை. நான் எத்தனை ரூபாய் கொடுத்து துணி வாங்கினாலும் அதை அடுத்தவர் போல உடுத்த முடியாது. எத்தனை கற்றுக்கொண்டாலும், பிறரைப் போல் என்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாது. இது என் எண்ணமாக மட்டும் இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு. இன்றைக்கு புதிதாக வந்திருக்கும் வீரர்களுக்கு இடையிலேயும் செரினா தனித்தே தெரிகிறார். நம்பிக்கைகளையும் எண்ணங்களையும் திருப்பிப் போடும் ஒருவர் செரினாவுக்குப் பிறகு வரவில்லை.

After the women’s final, the BBC played a montage of Williams reading Maya Angelou’s poem “from a past that’s rooted in pain / I rise . . .” She never asked for this, not for the pain or hate or chance to redeem history. But, at this Wimbledon, she has owned not only her greatness but her role as a transcendent figure in society. Still, she rises. She generates her own context. I thought of that at the end of her match, as she and Kerber lingered at the net in a long, tight hug. The picture—an African-American and a blond German of Polish descent, their arms intertwined—stayed with me. There was nothing political meant by that embrace, of course. It was a gesture of admiration, affection, and respect. It was no more a political act than an ace. And yet there was something powerful to it. We sometimes project our problems onto sports. But sports can also be, in some small but real ways, where we start to work them out.

2016ல் செரினா விம்பிள்டன் வென்றபிறகு வந்த கட்டுரையின் கடைசி பத்தி இது. அவர் அளவிற்கு கஷ்டங்களையோ சாதனைகளையோ நான் கண்டதில்லை. இப்போது அவர் எனக்கு ஒரு தேவதையாகத் தெரிகிறார். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். எனக்கும்தான்.

தொடர்புடையவை
1. Kerry Howley, The Unretiring serena Williams, http://nymag.com/thecut/2015/08/serena-williams-still-has-tennis-history-to-make.html
2. Louisa Thomas, Serena Williams, Andy Murray, and a Political Wimbledon, http://www.newyorker.com/news/sporting-scene/serena-williams-andy-murray-and-a-political-wimbledon

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா

துயரமும் இலக்கியமும்

 – மாயக்கூத்தன்

Capture

ட்விட்டர் உலகில் ஸ்க்ரீன்ஷாட் எடுப்பதென்பது ஒருவிதமான மிரட்டல். எனக்கு அப்படி எந்த நோக்கமும் இல்லை. ஒரு ட்விட்டிற்கு வந்த பதில் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது, அவ்வளவுதான்.. மேலே படியுங்கள், நான் நினைப்பதை எழுத முடிகிறதா பார்க்கிறேன்.

வாழ்க்கை கொள்ள முடியாத அளவிற்கான துயரம் என்று ஒன்று இல்லை, அப்படி ஒரு துயரம் நேரும் போது நாம் நம்முடைய முடிவைச் சந்தித்திருப்போம் என்று வாதாட வேண்டும் என்ற நினைப்பிலேயே ‘வாழ்வு கொள்ளாத துயரம்’ என்ற தலைப்பை வைத்தேன். பிறகு, அப்படியொரு வாதம் செல்லுபடியாகுமா என்ற சந்தேகம் வலுக்க, அந்த வாதத்தை விட்டுவிட தலைப்பு மட்டும் நிலைத்தது. சிறப்பிதழில் வந்திருந்த மற்ற கட்டுரைகளின் தலைப்போடும் (நிர்க்கதியின் நிழலில், மானுடத்துயர், கரை சேர்ந்தார் காணும் கடல், நிறைவின்மையின் வழியே) பொருந்திப்போனது. ஆனாலும், துயரங்கள் எழுத்தில் எவ்வளவு விரிவாகச் சொல்லப்பட வேண்டும் என்ற கேள்வி இல்லாமல் இல்லை.

சு.வே சிறப்பிதழில் ஒரு கதையில் வரும் ஒரே இடம் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளில் கவனத்தைப் பெற்றிருக்கிறது. தன் மகனுடைய ஆடம்பரத்திற்காக அம்மா தன்னுடைய ஆட்டுக்குட்டியை விற்பது, தான் வளர்த்த நாய்க்குட்டியை தன்னிடமிருந்து பிரிக்கும் போது வெள்ளந்தியாய், ஆனால் அர்த்தத்தோடு கேள்வி கேட்கும் பெண் குழந்தை, இந்த இடங்கள் படிக்கும் எவருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கும். இவை எல்லாவற்றையும் விட சேதுபதி அருணாசலத்தின் கட்டுரையில் அவர் இரண்டாவதாக குறிப்பிடும் பத்திகள்- அவர் ஏன் அந்தப் பத்திகளைத் தேர்வு செய்தார் என்பது எனக்கு விளங்கவே இல்லை. ஒருவருக்கு நடக்கும் வன்முறையை இத்தனை விரிவாகச் சொல்லியாக வேண்டியதன் அவசியம் தான் என்ன? நான் இங்கே சு.வேயின் படைப்புகளைப் பற்றி மட்டுமே சொல்லவில்லை. சுஜாதாவின் ‘நகரம்’ கதையையும்கூட இந்த வகையில் சேர்த்துக் கொள்ளலாம். என்னைச் சில நாட்கள் தூக்கமில்லாமல் செய்த சில ஸ்ரீரங்கத்துக் கதைகளும் கூட.

இசை, ஓவியம், இலக்கியம் என்று ஒவ்வொரு கலையும் நம்மை சமநிலையில் வைத்திருந்து ஒரு உயர்வான சிந்தனை நிலைக்கு இட்டுச் செல்பவை என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். எழுத்து என்னுடைய நம்பிக்கைகளை கேள்வி கேட்கலாம், முன்முடிவுகளை உடைத்துப் போடலாம். ஆனால், வாழ்வு வலி மிகுந்தது என்று உரைப்பது எழுத்தின் நோக்கமாக இருக்கமுடியுமா? வாழ்வில் வலியே இல்லையா என்றால், வலி மட்டுமே இல்லையே. நாம் பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்றோம். பெருமகிழ்ச்சியும் துன்பமும் நம்மை எப்போதும் ஆட்கொண்டிருப்பதில்லை. இன்பமோ துன்பமோ, அவரவருக்கு ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்து நாம் நம்முடைய சமநிலைக்கு மறுபடியும் வந்துவிடுகிறோம்.

வலியும் துன்பமும் நிறைந்த படைப்புகளின் மீது தேவைக்கதிகமாக ஒரு பிரியம் இருப்பதாகத் தோன்றுகிறது. முழுக்க முழுக்க நகைச்சுவையாக நகரும் திரைப்படம், பதறச் செய்யும் முடிவோடு அதிகம் பேசப்படும் ஒன்றாகிவிடுகிறது. புனைவுகளுக்கும் இது பொருந்தும். துயரம் மிகுந்த படைப்புகளை, அதுவும் விளிம்புநிலை மனிதர்களின் துயரை விவரிப்பதாகச் சொல்லப்படும் படைப்புகளைக் கேள்வி கேட்க ஒரு தயக்கம் இருப்பது போல் இல்லையா?

கல்கியின் சிறுகதையை விமர்சனம் செய்த ஒருவர், அவை நம்மை உலுக்குவதாய் இல்லை என்று எழுதியிருந்தார். கல்கியின் கதைகளை நான் வாசித்ததில்லை. ஆனால், ஒரு கதை நம்மை உலுக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறோம்? ஒருவேளை நம் வாழ்வை விட மோசமாக ஒன்று இருக்கிறது என்று ஒரு ஆறுதலா? சில சமயம் உலுக்குவது மாதிரி எழுதுவதில்லை என்றால், ஒரு மாதிரி ஒதுக்கிவிடுவார்கள் என்று கூட தோன்றுகிறது. துயரக் கதைகள் எழுதப்படுவது கூட, ஒருவருக்காவது நேர்ந்திருக்கலாம் அதனால் பிழை சொல்ல முடியாது என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால், இது மாதிரி கதைகள் அதிகம் அங்கீகரிக்கப்படுவதைப் பற்றி என்ன சொல்ல?

ஏன் நகரத்தில் நல்ல வேலையில் இருப்பவர்களின் வாழ்க்கை இது போல எழுதப்படுவதில்லை. பெங்களூரூவில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் எல்லோருமே பணத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள் என்று நினைப்பது போல, குறிப்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் நினைப்பதைப் போல, இதுவும் ஒரு பொதுமைப்படுத்தல் தானா?. ஒருவேளை மேல்நிலையில் இருப்பவர்கள் வருடத்தில் நூறு நாட்கள் சமநிலையில் இருக்க, விளிம்பு நிலையில் இருப்பவர்கள் வருட்த்தில் இருநூறு நாட்கள் சமநிலையில் இருந்தால்? இதைப் பற்றிய ஆராய்ச்சி எதுவும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

இன்னொன்று, எது சவாலாக இருக்கும்- ஒருவனுடைய அவநம்பிக்கையை உடைத்து வாழ்வின் மேல் நம்பிக்கை எழச் செய்வது எளிதா அல்லது துளிபோல இருந்தாலும் அந்த அவநம்பிக்கையை ஊதிப் பெரிதாக்குவது எளிதா? கதைமாந்தர்களின் மீதெழும் அனுதாபம் நம்மை மேலானவர்களாக, மனிதர்களாக உணரச் செய்கிறதா? அதற்காகவாவது துயரக் கதைகள் அவசியம் வேண்டுமா? நான் எத்தனை கருணையோடும் அக்கறையோடும் இருக்கிறேன் என்று எழுதுபவர்களும் வாசிப்பவர்களும் காண்பித்துக் கொள்ள துயரக் கதைகள் அவசியமா?

எத்தனையோ கேள்விகள் இருந்தாலும் இந்தக் கதைகளின் இருப்பிற்கு என்னவோ அவசியம் இருக்கிறது. அது என்ன என்பது தான் விளங்கவில்லை. எழுத்தாளர் பேயோன், திசை காட்டிப் பறவைகள் புத்தகத்தில் ‘ரஷ்ய இலக்கியம் பேசுகிறேன்’ என்ற கட்டுரையை இப்படி முடித்திருப்பார். ”மனித வாழ்க்கை அர்த்தமற்றது, துயரமானது, எதுவும் நிலைக்காது என்று எழுத இத்தனை பேர்.”