அஜய். ஆர்

ஐரா லெவினின், ‘எ கிஸ் பிபோர் டையிங்’ – ஆர். அஜய்

– ஆர். அஜய்-

ஐரா லெவினின் (Ira Levin), ‘எ கிஸ் பிபோர் டையிங்’ நாவலின் முதல் பத்தியில் தன் திட்டங்கள் கலைகின்றனவே என்ற ஆத்திரத்தில் தாடை இறுகி வலியெடுக்கும் அளவிற்கு உடலெங்கும் வெறியாலும், மன அழுத்தத்தாலும் பீடிக்கப்பட்டிருக்கும் முக்கிய பாத்திரத்தை சந்திக்கிறோம். தான் கருவுற்றிருப்பதாக அவன் காதலி அப்போதுதான் சொல்லி இருக்கிறாள். தன் மேல் அவள் சாய்ந்திருப்பதைச் சகிக்க முடியாமல் தள்ள வேண்டும் என்ற உந்துதலைக் கட்டுப்படுத்தி, பதற்றம் சிறிது குறையும்வரை அமைதியாக இருந்து விட்டு பேச -அக்குள் விரையில் நனைந்திருக்க, கால்கள் இன்னும் நடுங்கிக் கொண்டிருக்க – ஆரம்பிக்கிறான். திருமணம் செய்வதைப் குறித்து எந்த தயக்கமும் இல்லை, ஆனால் அவள் கருவுற்றிருப்பது அவள் தந்தைக்கு தெரிந்தால் பெரும் பணக்காரரான அவர் அவளை ஒதுக்கி விடுவார். காதலி, அது குறித்து தான் கவலைப்படவில்லை என்கிறார். காதலனும் தனக்காக அதைச் சொல்லவில்லை, இருவருமே இன்னும் கல்லூரிப் படிப்பை முடிக்காத நிலையில் பிறக்கப் போகும் குழந்தையை எப்படி நல்லபடியாக வளர்க்க? படிப்பு முடிந்தபின் முறைப்படி அவள் தந்தையைச் சந்தித்து மணம் முடிக்க அனுமதி கேட்டு, பின் திருமணம் நடந்தால் அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்? காதலி, ஏன் அந்த நிறைவேற முடியாத கனவுகளைப் பேசுகிறாய் என்று கேட்க, இப்போதும் அவை நிறைவேற முடியும் என்கிறான். கருக்கலைப்பு செய்ய மாட்டேன் என்று உறுதியாக காதலி சொல்ல, தொடர்ந்து அவளிடம் பேசி, மாத்திரைகள் வேலை செய்யவில்லை என்றால் இப்போதே திருமணம் செய்து விடலாம் என்று சம்மதிக்க வைக்கிறான்.

நாவலின் முதல் அத்தியாயத்திலேயே அப்பாத்திரத்தின் ஆளுமை வெளிப்பட்டு, எந்தச் சூழலிலும் தன்னிலை இழக்காதவன், தன் பேச்சினால் யாரையும் வசியம் செய்யக் கூடியவன் என்ற புரிதல் கிடைக்கிறது. எனவே அடுத்த அத்தியாயங்களில் காதலியைக் கொலை செய்ய அவன் திட்டமிட ஆரம்பிக்கும்போது, வியப்பு ஏற்படவில்லை என்றாலும், அதில் அவன் வெற்றி அடைகிறானா, எப்படி பிடிபடுகிறான் என்பதைத் தவிர வேறென்ன புதிதாக இருக்க முடியும், என்று கேள்வி வாசகனுக்கு எழக்கூடும்.

காதலனின் எண்ண ஓட்டத்தை தெரிந்து கொள்கிறோமே தவிர அவன் பெயரை லெவின் வெளிப்படுத்துவதில்லை, முகமூடி போட்ட ஒருவன் நம் முன் நடமாடுவதை போல்தான் அவனை நாம் காண்கிறோம் என்பதையும், மற்ற பாத்திரங்களுக்கு அவன் முகமூடி அணிந்துள்ளான் என்பது தெரியாமல் இருப்பது மட்டுமே நமக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்பதையும் உணராதபடி நாவலை கொண்டு செல்லும் லெவின் முதல் பகுதியின் இறுதியில்தான் அதன் -அந்த காதலன் யாராக இருப்பான் என்ற கேள்வியை, அதுவரை அவனுடையை செயல்களில் ஆழ்ந்து இருக்கும் வாசகனை கேட்கச் செய்கிறார். வாசகன் பெரிதாக கவனிக்காமல் செல்லக்கூடிய சில விஷயங்களை சொல்லி அவற்றை பின்னால் மிகச் சரியாகப் பொருத்தி அதன் முக்கியத்துவத்தை, அதை -அதன் அர்த்தம் புரியாமல் – கவனித்திருந்தால் மகிழ்ச்சியும், அதில் ஒன்றுமில்லை என்று கடந்திருந்தால் வியப்பும் அடையச் செய்வதுடன் மர்ம நாவல்களின் ஒழுங்கை குலைக்கக் கூடிய இரண்டு அபாயகரமான விஷயங்களிலும் லெவின் ஈடுபடுகிறார்.

ஒன்று, தனக்கு (ஆசிரியருக்கு) மட்டும் தெரிந்திருக்கும் விஷயங்களை கொஞ்சம் கொஞ்சமாக வாசகனுக்கு வெளிப்படுத்தி/ உணர்த்தி, அவனை அதிரச் செய்வது அல்லது இனி இந்தக் கதையில் ஒன்றுமில்லை என்ற தட்டையான மனநிலைக்கு அவனைக் கொண்டு வந்த சில பக்கங்களில் மீண்டும் அவனை வசப்படுத்தி உள்ளிழுத்துக் கொள்வது. முதல் பகுதியில் நடக்கும் கொலைக்குப் பின் ஏற்படும் எதிர்பார்ப்பின்மையை, கொலைகாரன் யார் என்று தெரியாது என்ற உணர்தலினால் விலக்கி, இரண்டாம் பகுதியில் மீண்டும் ஒரு முடிச்சை உருவாக்கி, அதன் இறுதியில் வெளிப்படுத்தும் தகவல்- கொலை செய்பவனின் முகமூடி விலகும் தருணம்- ஒரு உதாரணம். அது மிகப் பெரிய திறப்பு என்றாலும், இத்தகைய நாவல்களின் முடிவாகவே- கொலைகாரன் யார் என்று தெரிந்துவிட்ட பின் என்ன சுவாரஸ்யம் – பெரும்பாலும் இருக்க முடியும் இல்லையா, ஆனால் அதற்குப் பின்னரும் கதையை நீட்டிப்பது என்ற தற்கொலை முடிவை எடுக்கும் துணிச்சல் லெவினுக்கு இருப்பதோடு மட்டுமில்லாமல் அதை வெற்றிகரமாக கொண்டும் செல்கிறார். (திருமணத்துடன் சுபமாக முடியும் காதல்/ தேவதை கதைகளை அதற்குப் பின்னான வாழ்கையையும் சித்தரித்து நீடிப்பதைப் போல)

இரண்டாவது, இனி தப்பிக்கவே முடியாது என்று நாம் எண்ணுமளவுக்கு ஒரு இக்கட்டை உருவாக்குவது. ஒரு பாத்திரத்தை பற்றி தெரிந்து கொள்ள வேறு பெயரில் அவன் குடியிருக்கும் இடத்தின் சொந்தக்காரரை -அவன் அங்கில்லாத நேரமாக பார்த்து -சந்திக்கச் செல்லும், பெரிதாக பிரச்சனை ஏற்பட முடியாத நிகழ்விலும்கூட இத்தகையை சிக்கலொன்றை உருவாக்கும் திறமை லெவினுக்கு உள்ளது. அப்படியொன்று உருவாகிய பின், அதை ஏனோதானோ என கடந்து சென்றால் வாசகனுக்கு அது அவனை வயப்படுத்த முனையும் மலிவான உத்தியாக மட்டுமே தோன்றி அதை விலக்கி விடுவான். ஆனால் லெவின் அதை தர்க்க ரீதியாக இயல்பான முறையில் அவிழ்ப்பது வாசகனை சில பக்க பதட்டங்களுக்குப் பின் ஆசுவாசமாக, அதே நேரம் தான் ஏமாற்றப்படவில்லை என்ற எண்ணத்துடன் மூச்சு விட வைக்கிறது.

நாவலின் முக்கிய பாத்திரம் தளராமல் முயற்சி செய்பவனாக இருப்பது குறித்து நாவலின் முதலிரு அத்தியாயங்களில் நமக்கு புரிதல் கிடைத்துவிட்டாலும், அப்பாத்திரத்தை நம் மனத்தில் இன்னும் துல்லியமாக கட்டமைக்கும் வகையல் அவ்வப்போது லெவின் அவனைக் குறித்து தகவல்கள் தந்துச் செல்கிறார். பெரிய சோகப் பின்னணியோ, பழிவாங்கும் காரணமோ இந்த பாத்திரத்திற்கு இல்லை. சிறிய கிராமமொன்றில் சாதாரண மத்தியத் தர குடும்பமொன்றில் பிறந்து வளர்பவன்தான் இவன். ஆனால் நீல நிறக் கண்கள், பொன்னிற தலைமுடி என்று மரபணு குலுக்கல் சீட்டில் வென்றிருக்கும் அவன் சிறு வயதிலிருந்தே மற்றவர்களை எளிதில் தன் பால் ஈர்த்து தான் பிறந்த அந்த சிறிய இடத்தின் நாயகனாக வளர்வது, அவனுடைய தன்மோகம் (narcissism) குறித்த உணர்தலை நமக்குத் தருகிறது. சிறிய குளத்தில் மிகப் பெரிய ஒற்றை மீனாக விளங்கியவன், பெரு நகரத்திற்கு வரும்போது தான் அப்படி ஒன்றும் மிகவும் தனித்துவம் கொண்டவன் அல்ல என்று ஏற்படும் புரிதல் (தன்னை விட முதிர்ந்த பணக்கார விதவை பெண்ணுடன் உறவு ஏற்பட்டதில் உண்டாகும் பெருமிதம் அப்பெண் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றும் இளைஞர்கள் வரிசையில் ஒருவன் தான் என அவனுக்குத் தெரியவருவது) அதனால் சீண்டப்படும் அவனுடைய அகங்காரம் ஆதார குணமான சுயமோகத்துடன் ஒன்றிணையும்போது, அதன் பின் அவன் மனதளவில் ஒரு முடிவுக்கு வருவதும், நிஜத்தில் அதை செயல்படுத்துவதும் அவனுடைய ஆளுமையின் மற்றொரு வெளிப்பாடாகவே, இயல்பான ஒன்றாகவே இருக்கிறது.

அவனுக்கும் அவன் தாய்க்குமான உறவிலும் வாசகன் யூகிக்கக்கூடிய சில விஷயங்கள் உள்ளன. கணவனின் எதிர்காலம் குறித்த பல கனவுகளுடன் திருமணம் செய்து கொண்டு பெரும் ஏமாற்றமடைந்த அவன் தாய், அதை வெளிக்காட்டவும் தயங்குவதில்லை. அந்த எதிர்பார்ப்புக்களை மகனிடம் திருப்புகிறார் என்று லெவின் சுட்டுகிறார். அவருடன் அவ்வப்போது பிணக்கு கொண்டாலும் தான் ஒரு நல்ல நிலைக்கு வரும் சூழல் ஏற்பட்டவுடன் தாயை அழைத்து தன் தற்போதைய நிலைமையை பார்க்கச் செய்வது, நம் பாத்திரம் எந்தளவிற்கு தாயின் எதிர்பார்புக்களால் உந்தப்பட்டான், எப்படியேனும் அவர் முன் வெற்றிகரமான மனிதனாக உருவாக ஆசைப்பட்டானா என்று யோசிக்க வைக்கிறது. இவை அவன் செய்கைகளை நியாயப்படுத்துவதாக அல்லாமல் அவனுடைய ஆளுமை உருவாக்கத்திற்கான காரணிகளாக இருக்கலாம் என்ற கோணத்தில் வாசகனைச் சிந்திக்க வைப்பவையாக மட்டுமே நாவலில் உள்ளன.

சதுரங்கத்தில் சிப்பாய்கள் ஒவ்வொரு கட்டமாக முன்னேறி ராஜாவை நெருக்குவதைப் போல் நாவலை இறுதி வரை கொண்டு செல்லும் லெவின், சிப்பாய்கள் ஆட்ட விதிகளை மீறி நாலைந்து கட்டங்கள் தாவிச் செல்லும் சில நிகழ்வுகளை வைப்பது அதுவரை இருந்த நாவலின் போக்கிற்கு நேர் எதிர்மாறாக, சற்றே ஏமாற்றமளிப்பதாகவும்கூட இருந்தாலும், ‘ழானர்’ எழுத்தின் எல்லைகள் இவை என்றளவில் அவற்றை கடந்து செல்லலாம். நாவலில் இறுதியில் இன்னொரு மீள முடியாததாக தோன்றும், ஆனால் கச்சிதமாகப் பொருந்தும் ஒரு சந்திப்பை/ கேள்வியை உருவாக்கி முடிப்பதின் மூலம் அதையும் சரி செய்து விடுகிறார். இந்த சிக்கலை லெவின் எப்போதும் போல் எளிதாக அவிழ்த்து விட்டிருப்பார், ஆனால் அவ்வாறு செய்யாமல் அதன் பொறுப்பை வாசகனிடம் விட்டு விடுவதால் நாவல் முடிந்த பின்பும் அவன் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான்.

பின்குறிப்பு:

நாவலை படிக்கும் போது, தொண்ணூறுகளின் முதற்பகுதியில் வெளிவந்த, இன்றைய ஹிந்தி திரையுலகின் பெருநட்சத்திரங்களில் ஒருவர் அந்த இடத்திற்கு செல்லும் பாதையில் அடியெடுத்து வைக்க உதவிய ஹிந்தி திரைப்படம் சிலருக்கு நினைவுக்கு வரலாம். இந்த நாவலை அதிகாரபூர்வமாக படமாக்கிய ஆங்கில திரைப்படத்தின் அதிகாரபூர்வமற்ற தழுவலான அப்படத்தை பார்த்திருந்தாலும், முற்றிலும் புதிய, அதைவிட மேம்பட்ட அனுபவத்தை தரும் இந்த நாவல் தருகிறது. அதற்கு காரணம் நாவலின் தரம் மட்டுமல்ல ஹிந்தி திரைப்படத்தின் சாதாரணத்தன்மையும்தான்.

பெயர்தல் – காலத்துகள் சிறுகதை

குளியலறைக்குள் நுழைவதற்கு முன் வெளியிலிருந்து எட்டிப் பார்த்தான். இந்த வீட்டிற்கு குடிவந்த முதல் வாரம், குளியலறையில் பக்கெட்டின் அருகில் உயிருடன் இருக்கிறதா இல்லையா என்பது சொல்ல முடியாத பருத்த தவளையொன்று படுத்துக் கிடந்தது. அப்பாவிடம் சொல்லி அதை விலக்கியபின் அடுத்த நாள் மதியம், ‘ரெண்டு நாளாச்சு, சம்மர்ல குளிக்காம இருந்தா வேர்க்குரு இன்னும் அதிகமாகும், ஸ்கின் டிசீஸ்தான் வரும்’ என்று அம்மா சொன்னபின்தான் குளிக்கச் சென்றான். அதன்பின் உள்ளே எந்த ஜந்துவையும் பார்த்ததில்லை. முதலில் கால்களிலும்,வயிற்றுப் பகுதியிலும் நீரை ஊற்றினான். குளிருக்கு உடல் பழகியது. பின் மேலுடம்பில். ‘நாங்களும் இங்கயே வந்துட்டோம்டா’ என்று சத்தம் போட்டுக் கொண்டே வந்த வினோத்தும், ப்ரித்வியும் வெளியே நின்று பேசிக்கொண்டிருக்க, நுரைத்திருந்த உடம்பில் நீரை ஊற்றியபின் உடம்பைத் துவட்டி விட்டு துண்டைக் கட்டிக் கொண்டு போர்ஷனுள் நுழைந்தான். சின்ன ஹாலுக்கு ஒரு புறம் பாத்திரம் வைக்கும் அறை, மறுபுறம் இரண்டு பேர் நிற்கக்கூடிய சமையலறை மற்றும் துணிகளும் மற்ற சாமான்கள் வைத்திருக்கும் அறை. அங்கு உடை மாற்றி வெளியே வந்தபோது ‘தங்கப்பழம் கடை அளவுக்கு ப்ரொவிஷன்ஸ் க்வாலிட்டி இங்க இல்ல’ என்று அப்பா சொல்ல, தக்காளி நறுக்கிக் கொண்டிருந்த அம்மா எதுவும் பேசவில்லை.

மாம்பலம் கிரி ஸ்ட்ரீட்டில் வசித்தபோது தங்கப்பழத்திடம்தான் மளிகை சாமான்கள் வாங்குவது, அடுத்த போர்ஷன் மாமியும் அங்குதான். முதலில் ‘தங்கப்பயம்’ என்று இவன் அழைத்தது திருத்தப்பட, பின் ‘தங்கப்பயம்னு சொல்லக் கூடாது, தங்கப்பழம்னு சொல்லணும்’ என்று கூறியதை இப்போதும் அம்மா நினைவு கூர்கிறாள். இந்த ஏப்ரல் மாதம் ரெண்டு முறை வந்து தவணை பாக்கியை கேட்டுக் கொண்டிருந்த கடைப்பையன், வீடு காலி செய்வதற்கு முதல் நாள் மாலைகூட வந்திருந்தான். அடுத்த நாள் ஞாயிறு மதியம் வீட்டைக் காலி செய்து, பொருட்களை முதலில் வண்டியில் அனுப்பி, ரெயில் நிலையத்திற்கு ஆட்டோவில் செல்கையில், ‘நா சொன்னேன்ல, சண்டே மத்தியானம் கடை கெடையாதுன்னு’ என்று அம்மாவிடம் அப்பா சொன்னதற்கு அம்மா எந்த பதிலும் சொல்லவில்லை. அதற்கு முன்பு திருவண்ணாமலைக்குச் செல்லும் 122ம், மாம்பலம் வழியே செல்லும் 5Bம் மட்டும் அறிந்திருந்தவன், தாம்பரம் வரை ரெயிலில் சென்று, அங்கிருந்து டி-சிக்ஸ்ட்டியில் செங்கல்பட்டிற்கு வந்தான். வண்டி வழியில் நின்ற ஒரு நிறுத்தத்தில், ‘இதான் சிங்கப்பெருமாள் கோவில் இங்கதான் ஸ்கூல் இருக்கு. நரசிம்மர் சக்தி வாய்ந்தவர் கும்புட்டுக்கோ’ என்றாள் அம்மா. அம்மா வேலை செய்யும் பள்ளி இந்த ஊரில்தான். பஸ்ஸிலிருந்து நரசிம்மரை பார்க்க முடியவில்லை, கும்பிட்டுக் கொண்டான்.

மஞ்சள் நிறப் ‘பக்கிள்’ பையில் புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டான். அருகில் இருந்த தகர பெட்டியில் ‘விக்னேஷ் லெண்டிங் லைப்ரரியின்’ மூன்று மூன்று கதைகளாக பயின்ட் செய்யப்பட்ட ரெண்டு ஆஸ்ட்ரிக்ஸ் மற்றும் ஒரு டின்டின் நூல்கள். அங்கிருந்து அப்பாவும் அம்மாவும் படிக்கும் வேறு இரு நூல்கள். மாம்பலத்திலிருந்து கிளம்புவதற்கு ஏழெட்டு நாட்களுக்கு முன் இறுதியாகச் சென்று எடுத்து வந்தவை. வினோத்தும், ப்ரித்வியும் ஏழரைக்கெல்லாம் ரிக்ஷாவில் பள்ளிக்குக் கிளம்பி இருப்பார்கள். இங்கு ஐந்து நிமிடத்திற்கும் குறைவான நடை தூரத்தில்தான்பள்ளி. ஒன்பது இருபதுக்கு கிளம்பினால்கூடச் சென்று விடலாம்.

எட்டே காலுக்கு அம்மா கிளம்பும் போது ‘லஞ்ச் எடுத்து வெச்சிருக்கேன். அப்பா ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போவா’ என்று சொல்ல ‘நோ மா ஐ வில் கோ மைசெல்ப்’ என்றான்.

‘பர்ஸ்ட் டே இல்லடா, இன்னிக்கு மட்டும் அப்பா வரட்டும்’

‘வேணாம்மா, த்ரீ பி செக்ஷன் ஐ நோ நா போயிப்பேன்’.

அம்மா அப்பாவை பார்க்க பேப்பரை படித்துக் கொண்டிருந்தவர் எதுவும் சொல்லவில்லை.

‘ரோட்ட க்ராஸ் பண்ணணும்டா, அப்பாவோடையே போ ‘ என்றவளின் வலது மணிக்கட்டை பற்றிக் கொண்டே ‘சின்ன ரோட் தானம்மா’ என்று சொல்ல, ‘அடமென்ட், பாத்து போ. கம் ஸ்ட்ரெயிட் ஆப்டர் ஸ்கூல். தெரியாத பெரியவங்க யாரவது கூப்ட்டா டோண்ட் டாக்’ என்று விட்டு கிளம்ப வீட்டின் பின்புறம் சென்றான். சுவற்றை ஒட்டிய பெரிய காலி மனை. கற்களும், மூன்று தென்னை மரங்களும் இருந்தாலும் இந்த மனையில் கிரிக்கெட் விளையாட முடியும். கிரி ஸ்ட்ரீட்டில் இவன் வீட்டிற்கு இரு வீடு தள்ளி வினோத் குடியிருந்த இடத்திற்கு முன்புறம் இதை விட மிகவும் சிறிய மனை உண்டு, அதில் செஞ்சுரி அடிப்பதெல்லாம் சாதாரணம்.

அதன் மறுமுனையில் அடுத்த தெருவுடன் இணையும் இடத்தில் இரு சின்ன ஓட்டு வீடுகளில் ஒன்றினுள் நுழைந்தவனுக்கும், அதன் வாசலில் இருந்த கயிற்றில் துண்டை உலர்த்தப் போட்டுக் கொண்டிருந்தவனுக்கும் இவன் வயதுதான் இருக்கும். இவன் சேர்ந்திருக்கும் பள்ளியில் படிப்பவர்களாக, ஒரே வகுப்பாகக்கூட இருக்கலாம். மாடியில் வசிக்கும் வீட்டு உரிமையாளரின் மகனும் இவனை விட சிறியவன். மற்ற இரண்டு போர்ஷன்களில் ஒன்றில் கைக்குழந்தை. இங்கு வந்தபின் தெரு முனையை அடுத்திருக்கும் கடைக்குச் சில முறை சென்றிருக்கிறான். பள்ளிச் சீருடை எடுக்க பஜாருக்கு ஒரு முறை. இந்த மாதம் முதல் தேதி மாலை அம்மாவுடன் ரெயில் நிலையத்திற்கு சென்று அங்கிருக்கும் கடையில் ‘அமர் சித்ர கதா’ வாங்கி வந்தான்.

இங்கு வந்தபின் அப்பா அம்மா தவிர யாரிடமும் பேசியதில்லை. ஒன்று வீட்டில், அல்லது இங்கு வந்து அமர்ந்திருப்பது. மனையின் வலது புறம் பாழடைந்த மண்டபம், அதையடுத்து மாட்டுக் கொட்டகை. அங்கிருந்துதான் வீட்டிற்கு பால் வருகிறது. மனையில் மாடுகள் போடும் சாணத்தை பத்து மணிக்கு மேல் அள்ளிச் செல்வார் மாட்டுக்காரர். திருவண்ணமலையில் தாத்தி வீட்டிற்கு
எதிரேதான் பால்காரர் சந்திரன் வீடு, பால் வரத் தாமதமாகும் நாட்களில் சாணி வாசம் நிறைத்திருக்கும் இடத்திற்குச் சென்று இவனே வாங்கி வருவான்.

ஒன்பதே காலுக்குக் கிளம்பினான். வீட்டின் கீழ்த் தளத்தில் உள்ள மூன்று போர்ஷன்களில் கடைசி இவனுடையது. மற்ற இரண்டைத் தாண்டி,குறுகிய நீளமான சந்தொன்றில் நுழைந்து அதைக் கடந்தால் தெரு. இருட்டான பின் கடைக்குச் செல்வதில்லை. தெருமுனையில் வலது புறம் திரும்பினான். நடந்தும், சைக்கிளிலும்பள்ளிக்குச் சென்று கொண்டிருப்பவர்கள். மெட்ராஸில் ‘தாத்தா’ என்று மட்டுமே அதில் செல்பவர்கள் அழைக்கும் முதியவர் ஓட்டும் ரிக்க்ஷாவில் பள்ளிக்குச் செல்வது. சென்ற வருட நவம்பரில் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும் போது சின்னமேட்டில் வண்டி ஏறிக் குலுங்க ஓரத்தில் உட்கார்ந்திருந்தவன் கீழே விழுந்து, அழுதபடி பள்ளிக்கு வந்தவனை ஸ்டாப் ரூமில் அமர வைத்த ராதா மிஸ் சமாதானப்படுத்தியபடியே இருந்தார். அன்று மாலை ஆறு மணியளவில் அடர்த்தியாக மழை பெய்து கொண்டிருக்க வீட்டிற்கு வந்து ‘மன்னிச்சுடுமா, மன்னிச்சுடுமா, தப்பாயிடுச்சு’ என்று குறுகிய உடலில் கைகூப்பியபடி சொல்லி கொண்டிருந்த தாத்தாவை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு வந்த அப்பா ‘ட்ரன்க்’ என்றார். இதுவரை வீட்டை விட்டு வெளியே பஜாருக்குச் சென்று வந்த ஒன்றிரண்டு முறையும் ரிக்க்ஷா தென்படவில்லை. ஊருக்கு வந்த அன்று பேருந்து நிலையத்தில் இருந்து குதிரை வண்டியில்தான் வீட்டிற்கு வந்தார்கள். வண்டியின் படிக்கட்டில் கால் வைத்து தடுமாறியபடி உள்ளே ஏறியவன், ஓட்டுபவர் பின்னால் மிக அருகில் அமர்ந்து குதிரையையே பார்த்து கொண்டு வந்தான்.

‘வாட் இஸ் தட் அரவுண்ட் இட்ஸ் அய்ஸ்’

‘டு மேக் இட் கோ இன் எ ஸ்ட்ரைட் லைன்’

குலுங்கிச் செல்லும் வண்டியில் அவ்வப்போது அதன் உட்புறத்தை பிடித்து கொள்ள வேண்டியிருந்தது. விரிக்கப்பட்டிருந்த கம்பளத்தின் அடியில் இருந்த வைக்கோலின் உறுத்தல். திருவண்ணாமலைல சந்திரன் வீட்ல இருக்கும்மா இந்த ஸ்மெல்’.

‘சும்மாரு’ முழங்கையை தட்டினார் அம்மா.

ஏழெட்டு வீடுகளையும் கடையையும் தாண்டியதும் சாலை பிரியும் இடத்தில் இடது புறம் திரும்பி பத்தடி நடந்தால், சாலையின் மறுபுறம் பள்ளி. ரோட்டை கடந்த சிறு கூட்டத்துடன் சேர்ந்து கொண்டு பள்ளியினுள் நுழைந்தவன், உடனேயே இடது புறம் திரும்பி, த்ரீ பியினுள் இருந்த கூட்டத்தை பார்த்தவாரே அதைக் கடந்து தாழ்வாரத்தின் இறுதி வரை, இரண்டாவது, ஒன்றாவது வகுப்பறைகளைப் பார்த்தபடி நடந்து சென்றான். அதையடுத்து இருந்த படிக்கட்டுக்களில் ஏறிக் கொண்டிருந்தவர்களில் பலர் பேண்ட் அணிந்திருந்தார்கள். திரும்பி வந்து தன் வகுப்பறை
வாசலில் நின்றிருந்தவனை கவனிக்காமல் புதிதாக உள்ளே நுழைந்து கொண்டும், வெளியேறிக் கொண்டுமிருந்தார்கள்.

மணி அடித்ததும் வகுப்பறை காலியாக ஆரம்பிக்க, உள்ளே நுழைந்தவன், அறையின் நுழைவாயில் பக்கமிருந்த மூன்று பேர் அமரும் இருக்கைகளில், இரண்டு புத்தகப் பை மட்டுமே இருந்த கடைசி இருக்கைக்கு முன்பிருந்த பெஞ்ச்சில் தன் பையை வைத்து விட்டு, வெளியேறிக் கொண்டிருந்த மற்றொரு மாணவனின் பின்னால் சென்று மைதானத்தில் ஸ்டேஜிற்கு முன் குழும ஆரம்பித்தவர்களில் இவனுடைய வகுப்பு வரிசையில் இணைந்து கொண்டான். அனைவரும் அடர் நீல நிற டைரி வைத்திருந்தார்கள். ‘அவர் பாதர் இன் ஹெவன்’ என்று ஆரம்பிக்கும் இறைவணக்கத்தில் ‘யுவர் கிங்டம் கம்’, ‘யுவர் வில் பி டன்’ போன்ற சில வரிகள் புரிந்தன. அதற்கும், பின் அனைவரும் சேர்ந்து -சிலர் டைரியை பார்த்தபடி – பாடிய இறை -‘வாக்கிங் வித் தி லார்ட்’ என்று ஆரம்பித்த- பாடலுக்கும் முணுமுணுப்பது போல் வாயசைத்தான். பள்ளிப் புத்தகங்களுடன் தந்திருந்த டைரி விடுப்பு எடுப்பதை குறிக்க தேவைப்படும் என்றுதான் அம்மா சொல்லி இருந்தாள்.

அசெம்ப்ளி முடிந்து வகுப்பறைக்குள் நுழைந்து தன் இடத்திற்குச் சென்றவனை அங்கு அமர்ந்திருந்த இருவரில் ஒருவன் ‘பெயிலா’என்று கேட்டதற்கு பதில் சொல்வதற்கு முன் ஆசிரியர் உள்ளே நுழைந்தார். வருகைப் பதிவேட்டில் முதலாவதாக இவன். இவனுக்கு அடுத்திருந்தவன் கார்த்தி, பெஞ்ச்சின் மறுமுனையில் முரளி. முன்பு படித்த பள்ளியில் ராதா மிஸ் ஆங்கில பீரியட் ஆரம்பித்திருப்பார். அடர் வண்ணச் சேலைகளில் பள்ளிக்கும் வருபவர், தாத்தியை விடச் சிவந்த நிறம். என்ன குறும்பு செய்தாலும் கடிந்து கொள்ள மாட்டார். முதலாம் வகுப்பு படிக்கும் போது இன்டர்வெல்லில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தவன் தனக்கு மிகவும் பிடித்த ஆசிரியை ராதா மிஸ்தான், அவர்தான் மிகவும் அழகு என்று சொல்லிய இரண்டொரு நாட்களுக்குப் பின் கழித்து மதிய உணவு இடைவேளையின்போது ஸ்டாப் ரூமிற்கு இவனை வரச் சொன்னதாக மகேஷ் தெரிவித்தான். உண்டு முடித்து அரைவட்டமாக அமர்ந்திருந்த ஆறேழு ஆசிரியைகளில், வனிதா மிஸ் ‘யூ லைக் ஒன்லி ராதா மிஸ்’ என்று இவன் நுழைந்தவுடன் கேட்க எதுவும் சொல்லாமல் இருந்தான். ‘ஆர் வீ நாட் ப்யுடிபுல்’ என்று மீண்டும் அவர் கேட்டு முடிப்பதற்குள் ‘நோ மிஸ்’ என்று இவன் சொன்னதற்கு அறையில் சிரிப்பு. ‘வாட் நோ’ என்று மீண்டும் கேட்டவரின் பார்வையைத் தவிர்த்து முகத்தை திருப்பியவன் முன் நாற்காலியின் வலது புறம் சாய்ந்து உள்ளங்கையில் தாடையை ஏந்தியபடி ராதா மிஸ். தலையை குனிந்து கொண்டான். ‘அப்போ யூ டோன்ட் லைக் அஸ் இல்லையா ‘ இப்போது சந்திரா மிஸ். ‘யார் நல்லா க்ளாஸ் சொல்லித் தருவாங்க’. அமைதியாக இருந்தான்.

‘அப்போ ஹி நீட் நாட் கம் டு அவர் க்ளாசஸ்’, ‘கரெக்ட்’, தொடர் குரல்கள். ‘ஸாரி மிஸ்’ என்றபடி நிமிர்ந்தவனை ராதா மிஸ் கையசைத்து அழைக்க அருகில் சென்றவனை மடியில் அமர்த்திக் கொண்டார். ‘ஸாரி மிஸ்’ என்று மீண்டும் ஆரம்பித்தவனை ‘டோண்ட் பி அப்ரைட், சும்மா சொல்றாங்க’ என்று இடைமறித்தவரின் காதில் இருந்த ஜிமிக்கியை பார்த்துக் கொண்டிருந்தான்.

இரண்டாவது பீரியட் முடிந்ததும் வகுப்பிலிருந்து வெளியேற ஆரம்பித்தவர்களில் இருந்த முரளியும், கார்த்தியும் இவனிடம் திரும்பி ‘பத்து நிமிஷம் இண்டர்வல், வரியா’ என்று அழைக்க அவர்களுடன் சென்றான். சிறுநீர் கழித்துவிட்டு மைதானத்திற்கு சென்றவுடன் ‘ந்யு அட்மிஷன்தான, எங்க படிச்ச முன்னாடி?’ என்ற கேட்ட கார்த்திக்கு பள்ளியின் பெயரைச் சொன்னான்.

‘எங்க இருக்கு’.

‘அட் மெட்ராஸ், கேகே நகர் ‘.

‘அப்ப செங்கல்பட்டுக்கே புதுசா’,

‘ எஸ், வி கேம் லாஸ்ட் மந்த்’.

‘என்னடா இங்கிலீஷ்லயே பேசற’ என்ற முரளியிடம் ‘இன் மை… அந்த ஸ்கூல்ல..’

‘தமிழ் பேசத் தெரியும்ல’

‘தெரியும் தெரியும்’

‘வீடு எங்கடா’ என்றான் கார்த்தி.

‘பிக் மணியக்கார ஸ்ட்ரீட்’

‘நான் சின்ன மணியக்காரத் தெருடா, அடுத்த தெருதான்’

‘ஒகே, ஒன் வீடு எங்க’ என்று முரளியிடம் கேட்க அவன் ‘என்.ஜி.ஓ நகர்.’

‘அப்பா என்ன பண்றார்’ என்றான்.

‘ஆபிஸர்’

‘எங்கடா’

‘ஆபிஸ்’ என்றிவன் சொல்லும்போது மணி அடிக்க வகுப்பறைக்குச் சென்றார்கள்.

உணவு இடைவேளையில் ‘வாடா போலாம்’ என்றான் கார்த்தி.

‘இல்ல கார்த்தி, எடுத்துட்டு வந்துட்டேன்’

‘வீட்ல போய் சாப்டலையா, பக்கத்துலதான வீடு இருக்கு, நா தினோம் போய் சாப்ட்டு ஒன்றரைக்கெல்லாம் வந்துடுவேன் முரளி இங்கதான் சாப்டுவான்’ என்றுவிட்டு கிளம்பினான்.

‘ஹவுஸ் ரொம்ப டிஸ்டன்ஸ்ஸா முரளி’ மைதானத்தில், ஸ்டேஜின் அருகே சாப்பிட உட்காரும்போது கேட்டான்.

‘ரொம்ப. அர மணி நேரம் நடந்து போணும்’.

ஸ்டேஜை ஒட்டி இருந்த கேட்டின் வழியே வந்துகொண்டிருந்த மாணவர்களைச் சுட்டி, ‘அங்க பின்னாடி என்ன க்ளாஸ், அந்த பசங்க ஷூஸ்,டைலாம் போட்டுக்கல’ என்று கேட்டான்.

‘அது தமிழ் மீடியம், அஞ்சாவது வரைக்கும். நமக்கு பத்தாவது வரைக்கும் இங்க’.

மேல் தளங்களை சுட்டியபடி ‘ஹை ஸ்கூல் க்ளாஸ் அங்க. உருளைக்கிழங்காடா, எடுத்துக்கட்டுமா’

‘எடுத்துக்க முரளி’ என்று அவனிடம் நீட்டியபடி ‘அப்ப லெவன்த்லேந்து’, என்றிவன் கேட்க, ‘அதெல்லாம் மெயின் ஸ்கூல்ல. நத்தம் பக்கம் இருக்கு. இது பிராஞ்ச் ஸ்கூல்.’

‘அது எங்க, தூரமா?’

‘பழைய பஸ்டேண்ட் தாண்டி போணும், தூரம்தான். சிக்ஸ்த்லேந்து தமிழ் மீடியம், அப்பறம் பதினொண்ணு பண்ணெண்டு எல்லாம் அங்கதான்’

டிபன் பாக்ஸ் கழுவி வகுப்பறையில் வைத்து வெளியே வரும்போது எதிரே கார்த்தி. ‘பெரிய மணியக்காரத் தெருல எங்கடா வீடு’

‘நம்ம ஸ்கூல் ரோட க்ராஸ் பண்ணிப் போனா இன்னொரு ஸ்கூல் இருக்குல, அதுக்கு ஸ்ட்ரெயிட்டா இருக்கற ரோட்ல, மிடில்ல இருக்கு’

‘டப்பா இஸ்கூலு, அப்ப நான் ஒன் வீட்டத் தாண்டிதான்டா என் வீட்டுக்குப் போவேன். ஒண்ணாவே போலாம் ‘

‘பாய்ஸ் அன்ட் கர்ல்ஸ் கம் அவுட் டு ப்ளே’ இறுதி பீரியட்டில் வழுக்கை மண்டையில் கொஞ்சம் நரைத்த முடிகள், நெற்றியில் குங்குமம் இட்டிருக்கும் ஸாருடன் அனைவரும் குரலெழுப்பிக் கொண்டிருக்க, விலாவில் தட்டிய கார்த்தி, ‘இங்க பாரு’ என்றான். கையிலிருந்த ரப்பரை தலையில் தேய்த்தபின், அதைப் பாட நூலில் இருந்த சித்திரத்தின் முகத்தில் வைத்து அழுத்தி எடுத்து இவனிடம் நீட்டினான். ரப்பரில் அந்த முகத்தின் அச்சு.

‘இது ஒனக்கு தெரியுமா’என்று கேட்டதற்கு இல்லையென்று தலையாட்டினான்.

‘நீ பண்ணு’

வாங்கித் தேய்த்தான். ‘நல்லா ஸ்ட்ராங்கா தேய்டா’. மற்றொரு முகத்தின் மீது வைத்தழுத்தி எடுத்தபோது ரப்பரில், சாயம் போனது போல் முகத்தின் அச்சு. ‘நல்லா தேச்சு அப்பறம் ஸ்ட்ராங்கா அழுத்தணும்டா’

ஸார் தொடர்ந்து சிறுவர், சிறுமியரை விளையாட அழைத்துக் கொண்டிருக்க மலங்கழிக்கும் உந்துதல். முதலாவது படிக்கும்போதும் இதே போல் நடக்க, மிஸ்ஸிடம் எதுவும் சொல்லாமல் பின்புற அழுத்தத்தை அடக்கிக் கொண்டிருந்தான். ‘மிஸ் மிஸ்’ பின்பெஞ்ச்சில் இருந்து மகேஷின் குரல். ‘இங்க பாருங்க மிஸ்’. காலில் மலம் வழிந்திருந்தது. அன்று புதன், முழு வெள்ளை சீருடை. பெஞ்ச்சுக்கள் அகற்றப்பட்டு, ஆயாவிடம் ஒப்படைக்கப்பட்டான். அவர் துவைத்துத் தந்த, இன்னும் ஈரம் காயாத டிராயரை அணிந்து கொண்டு கிளம்பியவனை ‘டோண்ட் கம் நியர்’ என்று ரிக்க்ஷாவில் செல்லும் போது வினோத்தும், ப்ருத்வியும் கிண்டல் செய்தார்கள்.

‘என்னாச்சு கைய நீவி விட்டுக்கிட்டே இருக்க’ என்ற கார்த்தியிடம் ‘பாத்ரூம் போணும்டா’ என்றான்.

‘அடக்கிக்கடா இன்னும் பதினஞ்சு இருவது நிமிஷம்தான் இருக்கும்’

‘இல்ல கார்த்தி, அது..’

‘டபுள்ஸ்ஸா’

‘ம்ம்ம்’

‘ஸார் இவனுக்கு வாந்தி வருதாம்’ என்று கார்த்தி எழுந்து சொல்ல ‘போ போ, நீயும் போ அவனோட கார்த்தி’ என்றார்.

‘என்னடா இவ்ளோ மெதுவா நடக்கற’

‘முடியலடா’

‘சரி பாத்து வா, தோ வந்தாச்சு, நா இங்க நிக்கறேன்’

வெளியே வந்தவன் ‘ரொம்ப தேங்க்ஸ்டா’ என்றான்.

‘வரேண்டா’ முரளி கிளம்பினான். இவனும் கார்த்தியும் சாலையைக் கடந்தார்கள். ‘இது நாடார் கட, நோட் புக்ஸ், பென்சில் எல்லாம் இங்க

கெடக்கும்’,

‘இங்கதான் நோட்லாம் வாங்கினேன், இது பேரு நாடார் கடையா?’

கடைக்கு எதிர்புறம் இருந்த பள்ளியை சுட்டிக் காட்டி ‘டப்பா ஸ்கூல்ல சாங்காலம், லீவ் நாள்ல வெளையாடலாம்’ என்றான் கார்த்தி.

சிறு சிறு குழுக்களாக விளையாட்டு நடந்து கொண்டிருப்பதை பள்ளியின் திறந்திருந்த கதவு வழியாக பார்த்துக் கொண்டே ‘ஏன் இத டப்பா ஸ்கூல்னு சொல்றாங்க’ என்று இவன் கேட்டதற்கு
தோளைக் குலுக்கினான் கார்த்தி.

‘இங்கதான் இருக்கேன், இந்த சந்துக்குள்ள போனா கடைசி போர்ஷன்’

வீட்டின் முன் நின்றபடி இவன் சொல்ல ‘நேரா போய் ரைட்ல திரும்பி பத்து பண்ணண்டு வீடு தாண்டி என் வீடு, கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்’ என்றவனை நோக்கி தலையாட்டிவிட்டு சந்தினுள் நுழைந்தான். போர்ஷன் வாசலில் வினோத்தும் ப்ருத்வியும் மற்ற நண்பர்களுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘வீ ஆர் ஆல்சோ கோயிங் டு ஸ்டே ஹியர், சேம் ஸ்கூல்’ வேகத்தை அதிகப்படுத்தி சந்தையும், அதையடுத்திருந்த இரண்டு போர்ஷன்களையும் கடந்து போர்ஷனை அடைந்தபோது அம்மா இன்னும் வந்திருக்கவில்லை. ‘காபி குடிக்கறியா?’ என்று அப்பா கேட்டதற்கு வேண்டாமென்று தலையாட்டினான்.

‘ஹவ் வாஸ் ஸ்கூல், தனியா போயிட்டு வந்துட்டியா’ பள்ளியில் இருந்து திரும்பியவுடன் கேட்டார் அம்மா.

‘குட் மா’

‘ப்ரெண்ட்ஸ் கெடச்சாச்சா’

‘எஸ், டூ. ஒன் இஸ் கார்த்தி, நெக்ஸ்ட் ஸ்ட்ரீட் சின்ன மணியக்காரத் தெருல இருக்கான். அனதர் முரளி, என்.ஜி.ஓ நகர்’

‘அதெங்க இருக்கு?’

‘தெரில, ரொம்ப டிஸ்டன்ஸ்ன்னு சொன்னான்’ இவனை அழைக்கும் குரல்.

‘இது கார்த்திமா’

‘உள்ள வாப்பா சின்ன மணியக்காரத் தெருலதான் இருக்கியா’

‘ஆமா’ என்றபடி உள்ளே வந்தவன் அம்மாவிடம் சுவாதீனமாக பேசிக் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தான். ‘டப்பா ஸ்கூல்ல பசங்க சாயங்காலம் வெளையாடுவாங்கன்னு சொல்றான்மா, போட்டுமா’ என்று இவன் கேட்க ‘ஓகே கோ. தெரு முனைல இருக்கற ஸ்கூல் தானே’ என்றார் அம்மா. சந்தைத் தாண்டி, தெருவிற்கு வந்தார்கள்.

‘அங்க என்ன கேம்ஸ் வெளையாடுவீங்க, க்ரிக்கெட்?’

‘எல்லாமே, கிரிகெட்டு, முதுகு பங்க்சர், கண்ணாம் பூச்சி, அட்டாக் எல்லாம்’

‘முதுகு பங்க்சர்ன்னா’

‘பிளாஸ்டிக் பால்ல முதுகுல அடிக்கறது, நீ வெளையாடினது இல்லையா’

‘நோ, அட்டாக் கூட வெளையாடினது இல்ல’

‘ஒத்தன் தொரத்துவான், மத்தவங்க எல்லாரும் ஓடுவாங்க. அவன் ஒன்ன தொட்டுட்டா நீ அப்படியே அங்கேயே நிக்கணும். அவன் மத்தவங்க, எல்லாரையும் தொட்டப் பின்னதான் நகரணும்’

‘ஓ, எவ்ளோ நேரம்டா நிக்கறது’

டப்பா ஸ்கூலை அடைந்திருந்தார்கள். ‘அட்டாக்’ ஆட்டம். மூன்றாவதாக இவன் பிடிபட்டபின் அடுத்து இன்னுமிருவர். இன்னும் ஓடிக் கொண்டிருக்கும் கார்த்தி ‘ஏண்டா அங்கேயே நிக்கற, போய் ஒக்காரு டா’ என்று சற்றுத் தொலைவில் இருந்து கத்த இவன் சென்றமர்ந்தான். அடுத்து அட்டாக்காகிய கார்த்தி இவன் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்தான்.

‘நீ யாரும் மூவ் பண்ணக் கூடாதுன்னு சொன்னியே’ என்றிவன் கேட்க ‘அதுக்காக அப்படியேவா நிப்ப, அது சும்மா சொல்றது, எல்லாரும் ஒடனேயே வெளில வந்துடுவாங்க ‘ என்றான். வீடு திரும்பும்போது ‘ஒன் வீட்டுக்கு… ‘

‘அப்பறம் கூட்டிட்டுப் போறேன்டா. நாளைக்கு எட்டே முக்காலுக்கு வந்துடறேன்’ என்றான் கார்த்தி.

‘ஏன் அவ்ளோ சீக்கரம்’

‘ஸ்கூல்ல வெளையாடலாம்டா, பிளாஸ்டிக் பால் வெச்சிருக்கேன். முதுகு பங்க்சர்’.

தேன் கிண்ணம் முடிந்ததும் ரேடியோவை அணைத்தார் அப்பா. மெட்ராஸில் இருந்து காலி செய்வதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியின்போது மூன்று புதியவர்கள் வீட்டிற்கு வந்து அது முடியும்வரை பார்த்து விட்டு, வெளியே அப்பாவிடம் பேசிவிட்டுச் சென்றார்கள். உள்ளே வந்தவர் ‘வாங்க ஒத்துக்கிட்டாங்க, நாளைக்கே எடுத்துக்கறாங்க’ என்றார். அடுத்த நாள் மாலை அவர்கள் தொலைகாட்சியை எடுத்துச் சென்றபின் இரவுணவுக்காக ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார் அப்பா. இவனுக்கு மிகவும் பிடித்த மசால் தோசையை பிட்டுப் பிட்டு வைத்து பாதி கூட சாப்பிடாமல் வந்தான். ‘மாமி வீட்ல போய் பாருடா’ என்று ஞாயிறு திரைப்படத்தைப் பார்க்க செல்லுமாறு அம்மா கூறியதற்கு எதுவும் சொல்லாதவன், அந்த இரவு யாருக்கும் தெரியாமல் அழுது முடித்து தூங்க வெகு நேரம் ஆனது.

விளக்கை அணைத்தபின் இருளில் தெரிந்த சுவற்றை நோக்கியபடி படுத்துக் கொண்டிருந்தான். ராதா மிஸ் இவனைக் குறித்து விசாரித்திருப்பார், விடுமுறைக்காக வெளியூர் சென்று விட்ட
வினோத்திற்கும் ப்ருத்விக்கும் ஒன்றும் தெரிந்திருக்காது. வினோத் பக்கத்து போர்ஷன் மாமியிடம் கேட்டிருக்கலாம். ஆங்கிலத்தில் இலக்கணப் பிழையின்றி எழுதினாலோ, பேசினாலோ இவன் கன்னத்தை வருடித் தருவார் ராதா மிஸ். பல முறை.

‘அம்மா வீட்ல இல்ல?’

‘ஸ்கூல் போயிட்டாங்கடா’

‘டீச்சராடா அவங்க, எங்க’

‘சிங்கப் பெருமாள் கோவில்ல, லெவன்த், ட்வெல்த்க்கு எடுக்கறாங்க எட்டேகாலுக்குலாம் கெளம்பிடுவாங்க’

‘ஓ, அப்ப அவங்களே ஒனக்கு சொல்லித் தந்துடுவாங்க, படிக்கலனா திட்டுவாங்களா’

‘அதெல்லாம் இல்ல’

‘தோ இத வெச்சுதான் முதுகு பங்க்சர் வெளையாடுவோம்’.

வெள்ளை ஆரஞ்சு நிறக் கோடுகள் போட்ட பிளாஸ்டிக் பந்து.

‘அப்பா எப்ப கெளம்புவாரு”‘

இப்ப… கெளம்பிடுவாரு. வெரி ஹார்ட்பா, அடிச்சா ரொம்ப வலிக்குமா’

‘அதெல்லாம் பழகிடும்’

பள்ளி மைதானத்தில் குறைவான பேர்தான் இருந்தார்கள். முரளி முன்பே வந்திருந்தான். ‘இவங்க த்ரீ ஏ’ என்று இருவர் அறிமுகமானார்கள். ‘ஷா பூ த்ரீ’ போட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முரளிதான் முதலில் பந்தை வீச வேண்டும். மற்றவர்கள் இரண்டு மூன்றடி தள்ளிச் சென்றபின் பந்தை அவனிடம் வீசிவிட்டு ‘ஓடுங்கடா’ என்றபடி கார்த்தி ஓட ஆரம்பிக்க அவனைத் தொடர்ந்த இவன் தலைக்கு மேல் சென்ற பந்து தரையில் விழ த்ரீ ஏவின் பாலாஜி அதை எடுத்து இவனை நோக்கி வீசியதைத் தவிர்க்க திரும்பியவன் தோள் பட்டையில் மோதியது பந்து. ‘எடுத்து அடிடா’. முரளியின் குரல். பந்தை எடுத்துத் துரத்த ஆரம்பித்தவன், ‘என்னடா முதுகே தெரிய மாட்டேங்குது…. சரியா, ஹவ் டு த்ரோ’ என்று மூச்சிரைத்தபடி கேட்க ‘சும்மா அடிடா ஒடம்புல எங்கேயாவது பட்டா போதும்’ என்றான் பாலாஜி.

மதியம் முரளியின் பைண்ட் செய்யப்பட்ட ‘சோசியல் சயின்ஸ்’ புத்தகத்தை வைத்து க்ரிக்கெட். மாலை வீட்டிற்குத் திரும்பும்போது ‘என் வீட்ல வூட்டன் பேட் இருக்கு, மர பேட். அத வெச்சு வெளையாடலாம்’ என்றிவன் சொன்னதற்கு ,’அப்ப ரப்பர் பால்ல கூட விளையாடலாம், அஞ்சு மணிக்கு வரேன்’ என்று கார்த்தி சொல்ல ‘இன்னிக்கு ஒன் வீட்டுக்கு போலாமா’என்றான். ‘நாளைக்கு கண்டிப்பா கூட்டிட்டுப் போறேண்டா’.

போர்ஷனை வந்தடைந்ததும் உடை மாற்றி விட்டு பேட்டை எடுத்துக் கொண்டு பின்புறம் சென்று அதை சுழற்றிக் கொண்டிருந்தான். அப்பா இவனுக்கு ஏற்றார் போல் தானே செய்த பேட். அதன் வெளிப் பகுதியில் நீல நிற ஸ்கெட்ச் பென்னில் அகர வரிசையில் ஆட்டக்காரர்களின் பெயர்கள். முதலில் ‘ஆலன் நாட்’, இறுதியாக அப்பாவுக்கு ஆதர்ச ‘விவ் ரிச்சர்ட்ஸ்’. கிரி ஸ்ட்ரீட்டில் விளையாடிய அந்த சிறிய இடத்தில் கூட பேட்டிங் மட்டும்தான் இவனுக்கு ஓரளவுக்கேனும் இயல்பாக வந்தது, ப்ருத்வி பந்து வீச்சிலும், பீல்டிங்கிலும் வல்லவன். இவர்களை விட இரண்டு வயது மூத்த கிஷோரின் பந்து வீச்சை தொடர்ந்து ஒரு ஓவர் ஆட்டமிழக்காமல் சமாளித்தால் அது பெரிய சாதனை, பந்து வரும் திசையை ஒருவாறு கணித்து அந்தப் பக்கம் பேட்டை சுழற்ற ஆரம்பிப்பதற்குள் ஆடுபவனை தாண்டிச் சென்றிருக்கும். ப்ருத்வி கிஷோரின் பந்துகளை தடுக்கவும் மட்டுமில்லாமல், ‘ஸ்ட்ரோக்கும்’ செய்வான்.

மறுநாள் குளித்து முடித்தவுடன் உடைமாற்றிக் கொண்டு பேட்டை எடுத்து வாசற்கதவின் அருகே வைத்தான்.

‘நல்லா இருக்குடா, ஸ்கூலுக்கு எடுத்துட்டு போ வேணாம், நாளைக்கும் நாளன்னைக்கும் லீவ்வுல டப்பா ஸ்கூல்ல வெளையாடலாம்.’

‘வேற எந்த க்ரவுண்ட் இல்லையா’

‘ஸ்ரீனிவாசா தியேட்டர் கிரவுண்ட் இருக்கு ஆனா அண்ணனுங்கதான் வெளையாடுவாங்க ‘

‘அது எங்க இருக்கு’

‘ஸ்ரீனிவாசா தியேட்டர் போனதில்ல, நம்ம ஸ்கூல் தாண்டி ரைட்ல டர்னிங் வரும், அங்க தான் தியேட்டரு, பக்கத்துல கிரவுண்ட்டு’

‘ஓ இல்லடா இங்க வந்து எந்த சினிமாவும் போல. எங்க போர்ஷன் பின்னாடிகூட க்ரவுண்ட் இருக்கு, அங்க கூட விளையாடலாம்டா. முரளி வருவானா’

‘கஷ்டம்டா, அவ்ளோ தூரம் லீவ் நாள்ல விட மாட்டாங்க, பாலாஜி வருவான் அவன் கிட்டக்கதான் இருக்கான், மணி, ராஜா, அப்பறம் இன்னும் ரெண்டு மூணு பேரு ஒனக்கு தெரியாது யாரும் நம்ம ஸ்கூல் இல்ல ‘

‘ஓகே ரப்பர் பால் வெச்சிருக்கியா’

‘இருக்கு இருக்கு ‘

‘பின்னாடி க்ரவுண்ட் இருக்குலமா, அங்க நாளைக்கு க்ரிக்கட் வெளையாடப்போறோம்’ படுக்கச் செல்லும் முன் அம்மாவிடம் சொன்னான்.’நாளைக்கு எனக்கு ஸ்கூல் இருக்கு’ .

இருளை நோக்கியபடி படுத்துக் கொண்டிருந்தான். மரக் குச்சிகளை உடைத்து ஸ்டம்ப் செய்து விடலாம். மெட்ராஸில் பத்து பண்ணிரண்டு பேர் வரை சேர்ந்து விடுவார்கள். கார்த்தி எத்தனை பேருடன் வருவானோ… சாயம் போன வலது கைக்கான க்ளவுஸ் ஒன்றை வைத்திருந்த ப்ருத்வி, அதை இவனுக்கும் வினோத்துக்கும் மட்டும்தான் அணியத் தருவான். ஆடப் போகும் போதும்,
தொலைக்காட்சியில் பார்த்துள்ளது போல் அதை கையில் அணிந்து கொண்டு இல்லாத ஸ்ட்ராப்பை ஒட்டி மணிக்கட்டை சுழற்றி விட்டுக் கொள்வான்.

ஒன்பதரை மணிக்கு ஐந்து பேருடன் கார்த்தி வந்தான். எலுமிச்சை பழத்தின் அளவில் ரப்பர் பந்து. ‘இங்கதான் சொன்னேன்’ பின்புற மனையைச் சுட்டியபடி இவன் கூறியதற்கு, ‘எடம் இருக்கு, கல்லுலாம் இருந்தாலும் வெளையாடலாம்’ என்றான் கார்த்தி. ‘அந்த பசங்களும் இங்க தான் குடி இருக்காங்க’ மனையின் மறுமுனையில் இருந்த இரு வீடுகளில் ஒன்றிலிருந்து வெளிப்பட்டவர்களை சுட்டி இவன் சொல்ல ‘அது கோபாலு, கிருஷ்ணமூர்த்திடா, ட்வின்ஸ்ஸு. எங்க ஸ்கூல் தான், சிக்ஸ்த் படிக்கறாங்க’ என்ற மணிகண்டனிடம் ‘அப்போ நீ அவங்கள்ட்ட இங்க வெளையாடலாமன்னு கேளு, அவங்களும் வரட்டும்’ என்று கார்த்தி சொல்ல சுவற்றை தாண்டி மனையில் குதித்தவன் அவர்களருகில் சென்று பேசி, மூவருமாக திரும்பும்போது இவர்களையும் வருமாறு சைகை கட்டினான். ‘புதுசா குடி வந்துருக்கீங்கள்ள,நீ சவுத்துல ஒக்காந்துருக்கரத பாத்திருக்கோம்’ என்று கோபால் சொன்னதற்கு தலையாட்டினான். ஸ்டம்ப் நட்டு டீம் பிரிப்பதை பார்த்துக் கொண்டிருந்த சிறுவனையும் சிறுமியையும் சுட்டி அவர்கள் யாரென்று கேட்டதற்கு ‘சித்தப்பா பசங்க’ என்றான் கோபால். விளையாட்டு ஆரம்பித்ததும் அவர்கள் மனையின் ஓரத்தில் இருந்த மற்றொரு வீட்டினுள் செல்ல, சிறிது நேரம் கழித்து வெளியே வந்த பெண் இவர்களின் ஆட்டத்தை சில கணங்கள் கவனித்த பின் வேறு பக்கம் திரும்பி கத்த ஆரம்பித்தார்.

‘என்னடா எதோ கத்தறாங்க, நம்மளத்தானா போயிடலாமா’ என்று கார்த்தி கேட்டதற்கு ‘த்தா, அதெல்லாம் கண்டுக்காத, த்தேவ்டியா முண்ட’ தரையில் எச்சில் உமிழ்ந்தபடி கிருஷ்ணமூர்த்தி சொன்னான்.

மூன்று ஆட்டங்களிலும் இவனுடைய அணிக்கு வெற்றி. கார்த்திக்கு பேட்டை சுற்ற மட்டுமே தெரிந்தது, மணி ஓரளவிற்கு ஆடினான். கோபாலின் பந்து வீச்சை மட்டும் இவன் கவனத்துடன் கையாள வேண்டி இருந்தது. இருவரும் ஒரே அணியில் இருந்திருந்தால் இன்னும் எளிதாக வெற்றி கிடைத்திருக்கும்.

ஆட்டத்தின்போது பந்து ஒருமுறை அருகிலிருக்கும் மண்டபத்தினுள் சென்று விட, கோபாலுடன் அதை எடுக்கச் சென்றான். வேட்டி மட்டும் அணிந்திருந்த,கையில் புத்தகமொன்றை வைத்திருந்த முதியவர் பந்தை எடுத்து சுவற்றில் சாய்ந்தமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருக்க ‘பந்து விழுந்துடுச்சு தாத்தா, எடுத்துக்கறேன்’ என்று கதவில்லாத பின்புற வாயிலில் நின்று கொண்டு கோபால் சொன்னான். கையசைத்து அழைத்தவரின் அருகில் சென்றவர்களிடம் எதுவும் சொல்லாமல் பந்தை நீட்டினார். அவரருகில் திறந்திருந்த தகர பெட்டி முழுதும் புத்தகங்கள். ‘யார் இவரு, சோடா புட்டி கண்ணாடி’ என்று வெளியே வந்தவுடன் இவன் கேட்க ‘இங்க தான் ரொம்ப நாளா இருக்காரு, ஒரு கண்ணு கெடயாது. இந்த மண்டபம் அவருதுன்னு சொல்றாங்க, அவர் மட்டும் தனியா தங்கிருக்காரு.’ என்றான் கோபால்.

‘எப்படி .. பேக் சைட் டோர்ரே இல்ல, ஓபன்னா இருக்கு’

மதியம் டப்பா ஸ்கூலில் ஆடும் போது காலையில் வந்தவர்களில் மணி மட்டும் இருந்தான். அங்கு புதிதாக இணைந்தவர்கள் இளையவர்கள். ஆட்டத்தில் வெற்றி பெற காலையை விட குறைவான முயற்சியே தேவைப்பட்டது. விளையாடி முடித்து கிளம்பும்போது ‘ஒரு நிமிஷம் இரு’ என்று விட்டு நாடார் கடைக்குச் சென்று எதோ கேட்டு விட்டு திரும்பிய கார்த்தி ‘அஞ்சரை தான் ஆகுது, வரியா ஸ்ரீனிவாசா கிரவுண்ட்டு போலாம்’ என்று கேட்க, ‘ஒகே, ரொம்ப நேரமாகாதில்ல’.

‘கிட்டக்க தான், போயிட்டு ஒடனே வந்துடலாம்’

பள்ளியைத் தாண்டி சாலை இரண்டாக பிரியும் இடத்தில்,’தோ இந்த லெப்ட்ல வேதாச்சல நகர், ரைட்ல தான் ஸ்ரீனிவாசா தியேட்டர், ரோட்ட க்ராஸ் பண்ணலாம் வா’

தியேட்டரில் இருந்த போஸ்டரில் ‘காக்கி சட்டையை’ பார்த்தவாறே ‘ரஜினியா கமல்லா’ என்று கார்த்தி கேட்டதற்கு ‘ரஜினி தான்’ என்றவனின் தோளை இரு கைகளாலும் பற்றியழுத்தியபடி
எழும்பி குதித்து ‘டேய் சூப்பர்… செம ஸ்டைல், பைட்ல. கமல் சுத்த வேஸ்ட். போலிஸ் மாதிரியே இல்ல’

‘எஸ், ஒன்லி டேன்ஸ், பைட் பண்ணவே தெரியாது’

‘என்ன டேன்ஸ்ஸு. போன வாரம் தான் இங்க ரிலீஸ் ஆச்சு, இங்க புது படம்லாம் ரெண்டு மூணு மாசம் கழிச்சு தான் வரும். இதான் கிரவுண்ட்டு’ மைதானத்தில் இவர்களை விட பெரியவர்கள்
கிரிக்கெட் ஆடிக் கொண்டிருக்க இவன் வயதையொத்தவர்கள் அதை பார்த்துக் கொண்டோ, ஓடிப் பிடித்து விளையாடிக்கொண்டோ இருந்தார்கள். ‘இங்க பெரியவங்கதான்
வெளையாடுவாங்க’

புற்தரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பும் போது ‘ஒனக்கு ப்ரதர்ஸ் சிஸ்டர்ஸ் இருக்காங்களா’ என்று கார்த்தியிடம் கேட்டான்.

‘ரெண்டு அக்கா’

‘நம்ம ஸ்கூல்தானா’

‘… அலிஸன் ஸ்கூல்ல படிக்கறாங்க’

‘அது எங்க இருக்கு ‘

‘அதுவும் கொஞ்ச கிட்டக்கதான்..’

‘நாளைக்கும் எல்லாரும் வெளையாட வருவாங்களா, ஆப்டர்நூன் நெறைய பேர் வரலையே’

‘மணி வருவான், மத்தவங்க தெரில’

தெருவினுள் நுழையும் போது ‘ஒன் வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னியே’ என்று கேட்டான்.

‘..நாளைக்கு கண்டிப்பா போலாம்டா’

சுவற்றை நோக்கித் திரும்பிப் படுக்கும் போது உடலெங்கும் வலி, மேற்புயங்கள் கனத்தன. பத்து பேர் இருந்தால் ஐந்து ஐந்தாக ரெண்டு டீம் நன்றாக செட் ஆகும். கார்த்தி வைத்திருப்பதை விட பெரிய ரப்பர் பந்து ஐந்து ரூபாய்க்கு கிடைக்கக்கூடும், அம்மாவிடம் பணம் கேட்கவேண்டும். அழுந்தும் இமைகள். மண்டப தாத்தாவிடம் என்ன புத்தகங்கள் இருக்கும். நாளை கார்த்தி வீட்டிற்கு செல்ல வேண்டும், முடிந்தால் என்.ஜி.ஓ நகருக்கும். கார்த்திக்கு வழி தெரிந்திருக்கும். நாளை மற்ற யாரும் வராவிட்டாலும் பின் வீட்டில் கோபாலும், கிருஷ்ணமூர்த்தியும் கட்டாயம் இருப்பார்கள். போர்வையை இழுத்து முகத்தை மூடிக் கொண்டான்.

ஒரு பிற்பகல் உரையாடல் – காலத்துகள்

காலத்துகள்

அவளிடமிருந்து விலகிப் படுத்தவனுக்கு மெலிதாக மூச்சிரைத்தது. உதடுகளை இறுக்கிக் கொண்டான். மேலெழும்பி அமிழும் வயிறும் மார்பும். முகத்திலிருந்து முடிகளை ஒதுக்கிவிட்டு இவனை கவனிப்பவளின் நிர்வாணம். சுவரில் இருந்த ஓவியத்தின் மீது பார்வையைச் செலுத்தினான். செம்மறி ஆட்டுக் கூட்டத்தை சிதிலமடைந்த பாலத்தின்மீது முக்காடிட்ட ஒருவன் விரட்டிக் கொண்டிருக்க, கீழே அதை கவனித்தபடி ஓநாய். அதன் அருகே சுருட்டை முடியும், பிதுங்கும் கன்னங்களும் கொண்ட ரோஸ் நிற குழந்தை, நீண்ட ஸ்கர்ட்டின் வலது பகுதியை மட்டும் முழங்கால் வரை மடித்து தூக்கியிருக்கும் பெண்- குழந்தையின் தாய்? உடலின் துடிப்பு அடங்க ஆரம்பிக்க, அவள் பக்கம் திரும்பி, ‘அது என்ன நரியா, ஓநாயா? அந்த லேடி, கொழந்தை எல்லாம் பாத்தா அமெரிக்கா, இல்ல ஈரோப் வில்லேஜ் மாதிரி இருக்கு. எங்க வாங்குனீங்க, நல்லாருக்கு, எவ்ளோ ஆச்சு’ என்றான்.

படுத்தபடி வலது தொடையை சற்றே தூக்கி முட்டி மடித்து, ‘நேரு ஸ்ட்ரீட்லதான், ரொம்ப இல்ல, எய்ட் பிப்டி’ என்றவளின் மார்பிலும், முகத்திலும் வியர்வைக் கோடுகள். ‘ஏஸி போட்டும் வேர்க்குது, பேன் வேற ஓடுது. ஜூலைலகூட நல்ல வெய்யில் அடிக்குது’ என்று இவன் சொல்ல, ‘ வலது காலை மீண்டும் நீட்டி இவன் பக்கம் திரும்பி, ‘வெய்யில் மட்டுமில்ல’ என்றாள். பார்வையை ஏஸியின் பக்கம் திருப்பி, ‘நாங்களும் கேரியர்தான்’ என்றவனின் தோளில் கைவைத்து திருப்பினாள்.

‘எங்க சர்விசிங் கொடுக்கறீங்க? நாங்க ஏஎம்ஸிலா இருக்கோம், வருஷம் நாலு சர்விஸ். இதுதான் எனக்கு பர்ஸ்ட் டைம்’ என்றான்.

‘ஏஸி வாங்கறதா?’

‘இல்ல..’

‘.. எனக்கும் இதுதான் பர்ஸ்ட் டைம்’

‘இல்ல நான் என்ன சொல்ல வந்தேன்னா…’

‘புரிஞ்சுது, நானும் அதத்தான்..’

இருவரும் சிரிக்க ஆரம்பித்தார்கள். ஏறி இறங்கும் மார்புகள், கருத்த காத்திரமான முலைக்காம்புகளும், அவற்றைச் சுற்றிய காம்புத் தோலும். படுக்கை அருகே இருந்த தன் அலைபேசியை எடுக்க திரும்பினாள். சதைப்பற்றுள்ள உறுதியான பிருஷ்டம், கையை நீட்டி, பின் அவள் கரத்தின் மேற்புறத்தில் வட்டமாகத் தடவியபடி, ‘இப்பல்லாம் இந்த மாதிரி ஸ்மால் பாக்ஸ் பாட்ச் இல்ல, நம்ம ஜெனரேஷனோட போச்சு’ என்றான்.

அலைபேசியில் எதையோ படித்துவிட்டு சிரித்தபடி வைத்தாள். ‘அவர்தான் அனுப்பி இருக்காரு, ஏ ஜோக். ஒங்களுக்கும் பார்வார்ட் பண்ணிருக்கேன், உஷாக்கும் அனுப்பிருக்கேன். அவ எப்ப வரா?’ என்றாள்.

‘இன்னிக்கி நைட் கிளம்பி நாளைக்கு மார்னிங் வரா. மண்டே ப்ரவீணுக்கு ஸ்கூல் இருக்கே… ஒரு நாள் ரெஸ்ட் எடுக்கலாம். நா மட்டும் நேத்து சாங்காலம் பங்க்ஷன் அட்டெண்ட் பண்ணிட்டு வந்துட்டேன். இன்னிக்கு மார்னிங் ஆபிஸ் போக வேண்டியிருந்தது’

தன் கரத்தில் இருந்த தடுப்பூசி முத்திரையைத் தொட்டு, ‘இன்னும் டார்க்காதான் இருக்குல, எத்தன வருஷம் ஆச்சு. என்ன யூஸ் பண்ணிருப்பாங்க’ என்றாள்.

‘பசங்க எங்க, ஒங்க அக்கா வீட்டுக்கு போயிருக்காங்களா?’

‘ஆமா, லாஸ்பேட். ப்ரவீண் வீட்டத் தவிர இந்த அபார்ட்மென்ட்ல இவங்க வயசுல யாரும் இல்ல, அங்க போனா அக்கா பசங்ககூட வெளையாடிட்டிருப்பாங்க. சாங்காலம் அவர் ஆபிஸ்லேந்து திரும்பி வரும்போது கூட்டிட்டு வந்துருவாரு’.

விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தான். வாசனை திரவிய வாசத்துடன் கலந்திருக்கும் உடலின் மணம். கூடவே இந்திரியங்களின் வீச்சம்.

‘என்ன பெர்ப்யூம் யூஸ் பண்றீங்க’

‘ஸ்பின்ஸ்’

‘நாங்க நிவியா’

இவன் தோளில் முகம் வைத்து, ‘இதெல்லாம் விட ஒண்ணா இருக்கறப்ப வர வாசன இருக்குல, கல்யாணம் ஆனப்ப ரொம்ப புதுசா இருக்கும்.கொமட்டற மாதிரியும் இருக்கும், அதே நேரம் என்னமோ பண்ணும்.’ என்றாள்.

‘நீங்க என்ன விட ஒரு வயசு பெரியவங்க, உஷா ஒங்க ஏஜ் சொல்லிருக்கா’

‘அப்போ… அதுலயும் பர்ஸ்ட் டைம்தானா’ என்று இவன் தோளைத் தட்டிக் கேட்டாள்.

‘என்னது.. அப்படி இல்ல, அதுவும்தான். பாத்ரூம்..’ என்றபடி எழுந்து குளியலறையுடன் இணைந்த கழிப்பறைக்குள் நுழைந்தான். கலவிக்குப் பின் அடுத்த பத்து நிமிடங்களுக்குள் சிறுநீர் முட்டிக் கொண்டு வந்துவிடும். சில நேரம் கலவியின்போது வாயு வெளியேறுவதும் நிகழ்வதுண்டு. உஷாவிற்குப் பழகிவிட்டது, உரக்கச் சிரிப்பாள், இவனும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பான். இன்று இவளுடன் முயங்கும்போதும் அந்த உந்துதல் ஏற்பட, வேகத்தைக் கட்டுப்படுத்தியவனை இறுக்கிக் கொண்டு ‘என்னாச்சு’ என்று கேட்டாள். சில கணங்களில் சப்தமிடாமல் காற்றை வெளியேற்றியபின் மீண்டும் வேகமாக இயங்க ஆரம்பித்தான். நாற்றமெடுக்கவில்லை என்பதால் அதை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தச் சில நொடி தயக்கம், என்ன நினைத்திருப்பாள், அது இப்போதும் நினைவில் இருக்குமா என்று தெரியவில்லை. ப்ளஷ் செய்து விட்டு அறையில் இருந்த பற்பசை, ஷாம்பூவை எடுத்துப் பார்த்தான். கண்ணாடியில் முகம், சதை இன்னும் தொங்க
ஆரம்பிக்கவில்லை. வயிற்றைத் தடவிக் கொண்டான், நன்கு உற்றுப் பார்த்தால் மட்டும் தெரியும் சதைப்பற்று, இப்போதும் மூச்சை உள்ளிழுத்துக் கொள்ளாமல் சட்டையை ‘டக்’ செய்து கொள்ளலாம். கதவைத் திறக்கப் போய் நின்றவன், தளர்ந்திருந்த குறியை பற்றிக் கொண்டு நீவி விட்டுக் குலுக்கி, இடுப்பை முன் பின்னாக அசைத்தான். குருதியோட்டம். குறியையும், விரைப்பைகளையும் உள்ளங்கைக்குள் பற்றிக் கொண்டு அசைத்தான். சூடு, கனம். கையை எடுத்து குறியின் நீளத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்து, ‘பாத்ரூம் க்ளீனா மெயின்டேன் பண்றீங்க, டைல்சும் வழவழப்பா இல்ல, வயசானவங்க வந்தா தைரியமா நடக்கலாம்’ என்றபடி அவளருகில் படுத்தான். உஷாவைவிட சற்றே நீளமான கூந்தல். முழங்கையில் சுருண்டிருக்கும் முடிகளின்மீது உதடுகளை உரசினான்.

‘சண்டே நானோ அவரோ வாஷ்பேசின், பாட் ரெண்டையும் க்ளீன் பண்ணிடுவோம். தரைல ப்ளீச்சிங் பவுடர்’.

‘ஆமா, இதெல்லாம் வீட்ல வேல செய்ய வரவங்ககிட்ட சொல்லக் கூடாது, நாமதான் செய்யனும்’. வீட்டில் உஷாதான் எப்போதும்ம் இதெல்லாம் செய்வது.

‘தண்ணி குடிக்கிறீங்களா’ என்றபடி எழுந்து கொண்டையிட்டுக் கொண்டு நிர்வாணமாகவே அறையை விட்டு வெளியேறினாள். டிரெஸ்ஸிங் டேபிள் மீதிருந்த அவளுடைய அலைபேசியை எடுத்தான். தொடுதிரையில் கடற்கரையில் கணவன், மற்றும் இரு குழந்தைகளுடன் அவள் எடுத்துக் கொண்ட புகைப்படம். திடகாத்திரமான ஆள். மாதமொருமுறை ஞாயிறன்று அடுக்ககவாசிகள் மொட்டைமாடியில் சந்திக்கும்போது மட்டும் அவருடன் பேசியதுண்டு. இவளும் உஷாவும்தான் அரட்டையடிப்பார்கள், காலை உஷா இங்கு வந்தால், மதிய வேளைகளில் இவள்  அங்கு. வாட்ஸாப் செயலியில் அவள் அனுப்பியிருந்த, அவளுக்கு வந்திருந்த செய்திகள், அவளுடன் தொடர்பில் உள்ளவர்கள். அலைபேசியின் புகைப்படத் தொகுப்பில், கணவன், குழந்தைகளுடனான படங்கள் மட்டும். காணொளித் தொகுப்பில் எந்த வீடியோவும் இல்லை. அலைபேசியை வைத்துவிட்டு, வார்ட்ரோபைத் திறந்தான். மேல் ஷெல்பில் இவள் கணவனின் ஆடைகள். சட்டைகளின் கழுத்துப் பகுதியை கவனித்தான், சில தைக்கப்பட்டவை, சில உயர்தர நிறுவனங்களின் ஆயுத்த ஆடைகள். குனிந்து கீழ் ஷெல்பின் மரக்கதவை நகர்த்தினான். புடவைகள், சுடிதார்கள். ஜாக்கி உள்ளாடைகள். மார்புக்கச்சையின் அளவைப் பார்த்துவிட்டு கதவை மூடி நிமிர, அவள் உள்ளே நுழைந்தாள். வார்ட்ரோப் கதவை கைமுட்டியால் தட்டிவிட்டு ‘சும்மாத்தான் ரூம பாத்துட்டு இருந்தேன், வார்ட்ரோப் நல்லா பெருசா இருக்கு, இன்னும் கலர் மங்கல’ என்று சொல்லிக்கொண்டே கட்டிலுக்குச் சென்று படுத்தான்.

இவனிடம் தண்ணீர் பாட்டிலைத் தந்துவிட்டு, ‘ப்ரவீண் போற ஷட்டில் கோச்சிங்குக்கு போணும்ங்கறாங்க என் பசங்க, எப்படி நல்லாத் சொல்லித் தராங்களாமா’ என்று இவன் மீது காலை போட்டபடி கேட்டாள்.

உள்தொடையின் சூடு. ‘ம்ம், ப்ரவீணுக்கு புடிச்சிருக்கு, எதோ கொஞ்ச நேரம் வெளில வெளையாடட்டும்னுதான் போன மாசம் சேத்து வுட்டேன். நீங்களும் சேத்து விடுங்க, யுஸ்புல்லா இருக்கும்’

‘அவர்ட்ட சொல்றேன்’

பாட்டிலை அவளிடம் திருப்பித் தந்தபடி,’ஏ ஜோக் அனுப்பினார்னு சொன்னீங்கள்ள, அதெல்லாம் பேசுவாரா?’

‘பேசாம என்ன, அப்பப்போ இப்படி ஜோக்ஸ் பார்வர்ட் பண்ணுவாரு, நான் உஷாக்கும் அனுப்பிருக்கேனே, அவ சொன்னதில்லையா? கொஞ்ச நாள் எதுவும் அனுப்பலன்னா என்ன, புதுசா எதுவும் இல்லையா, அவர்ட்ட கேட்டு அனுப்புன்னு சொல்லுவா’

‘…’

‘நீங்க எப்படி… டெய்லி..’

‘என்னது டெய்லி? டெய்லி ஜோக்கு அனுப்புவாரான்னா?’

‘அதில்ல, டெய்லி ஒண்ணா இருப்பீங்களா, பசங்க வளந்துட்டாங்கல, கொஞ்சம் ஜாக்கரதையாத்தான் இருக்கணுமே, அதான் கேட்டேன்’

‘இதுக்கு டைம் டேபிளா போட முடியும்? பசங்களுக்கு இப்போ தனி ரூம் இருக்கு. நீங்க எப்படி, உண்மைய சொல்லணும், உஷாகிட்ட இதெல்லாம் பேசிருக்கேன், சும்மா ஏமாத்த முடியாது’

‘இதெல்லாம் பேசிப்பீங்களா? பிரவீணும் தனியாத்தான் படுத்துக்கறான். இந்த வருஷம் ப்ரவீனுக்கு அது இதுன்னு கன்னா பின்னான்னு பீஸ் வாங்கிட்டாங்க, நீங்களும் கட்ட வேண்டிருந்ததுன்னு உஷா சொன்னா’

‘அதே ஸ்கூல்தான, மாத்தலாம்னா எல்லா ஸ்கூலும் இப்டித்தான் இருக்கு. இந்த அபார்ட்மெண்ட் மெயின்டனன்ஸ் வேற மாசா மாசம். லிப்ட்டுக்கு வருஷா வருஷம் தர்றது ஓகே, செக்குரிட்டி தேவையான்ன’

‘அவன் பாதி நேரம் தூங்கிட்டிருக்கான், நான் இன்னிக்கு மதியம் வரும் போது செம மயக்கத்துல இருந்தான். பேசாம சிசிடிவி காமிரா ஒன்னு ரெண்டு வாங்கி பார்கிங்ல பிட் பண்ணிடலாம்’

‘கரெக்ட், அவர்கூட அதத்தான் சொல்லிட்டிருந்தாரு. இதுல ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவ மோட்டார் ரிப்பேர் வேற. தண்டச் செலவு’

‘அவர் நல்ல பெரிய கம்பெனிலதான் இருக்கார்ல, அலவன்ஸ்லாம் நெறைய இருக்கும் எனக்கு இங்க ஆபிஸ்ல ஸிடிஸி தவிர மன்த்லி மொபைல்க்கு டூ தவுசண்ட், அதர் எக்ஸ்பென்ஸ்ன்னு இன்னொரு டூ தவுசண்ட் தந்துடறாங்க.’

‘…’

‘ஒங்களுதும் அர்ரேஞ்ட் மேரேஜ்தான, உஷாவ ரெண்டு மூணு பேரு முன்னாடி பொண்ணு பாக்க வந்திருக்காங்க, இவ வேணாம்னு சொல்லிட்டா’

‘ஒங்களப் பாத்தவுடன மயங்கிட்டாங்க போலிருக்கு’

‘அப்டி இல்ல, நீங்க எப்படி’

‘..’

‘தனி ரூம்னா பரவாயில்ல.. ப்ரீயா இருக்கலாம். எவ்ளோ நேரம் வேணும்னாலும். நம்ம கெபாசிட்டி பொருத்துதான… நெறைய நேரம் டைம் போறதே தெரியாது, நாளைக்கு வீக்டேன்னு வேற வழியில்லாம தூங்க வேண்டிருக்கும். உங்களுக்கு எப்படி, நேரமாகுமா, அவர் எப்படி..’

‘இதுக்காக பக்கத்துல க்ளாக் வெச்சு நேரத்த நோட் பண்ணுவாங்களா என்ன?’

‘அதில்ல, சும்மாத்தான். ரெண்டு வாட்டிகூட இருக்கலாம், தனியா படுத்தா. ஒடம்பு முடியனும், நெறைய பேருக்கு ரெண்டு வாட்டிங்கறது கஷ்டம், பர்ட்டிகுலர்லி ஆம்பளைங்களுக்கு. அவர்… எப்படி…’

‘இப்போ அப்படி தோணுதா’

‘இல்லல்ல, ஜஸ்ட் கேட்டேன் அவ்ளோதான்’

‘ஏன் டயர்ட்டா இருக்கா?’

‘அப்டிலாம் இல்ல, எங்களுக்கு அது சகஜம்தான்’ என்றபடி அவளை அருகில் இழுத்தான். ‘எல்லாம் மூட பொறுத்து தான், ரெண்டு வாட்டிலாம் இருக்கறது’ முகத்தில் அவள் மூச்சுக் காற்று.

‘காத்தால எழுந்துக்கறது கஷ்டம் இல்ல. வீட்ல உஷாக்கு பிரவீண ஸ்கூலுக்கு ரெடி பண்ணணும். யப்பா அடிச்சுப் போட்டாப்புல இருக்குன்னு, எழுந்தவுடன குளிக்கப் போய்டுவா அப்ப மட்டும், அதுக்கப்பறம்தான் சமையல் எல்லாம். அந்த மாதிரி நேரத்துலதான் நான் பையன ஸ்கூல் வேனுக்கு கொண்டு விடுவேன், நீங்களும் வருவீங்க. எனக்கு பெரிசா டயர்ட்டா இருக்காது, அவரு என்ன ரொம்ப லேட்டா எழுந்திருப்பாரா’

‘அவர் எப்படியும் காத்தால வாக்கிங் கெளம்ப அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்துப்பாரு. என் மூஞ்சி டயர்ட்டா இருந்தா உஷா கரெக்ட்டா கண்டு பிடிச்சு கிண்டல் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க.’

உஷா இவள் கணவன் குறித்து பொதுவாகச் சொல்லி இருக்கிறாள், அடுக்ககத்தில் நடைபெறும் புத்தாண்டு இரவுணவு கொண்டாட்டத்தில் அவனுடன் பேசி இருக்கக்கூடும். இங்கு அரட்டை அடிக்கும்போது அவனும் வீட்டிலிருந்தது உண்டா என்பது குறித்து உஷா எதுவும் சொன்ன ஞாபகம் இல்லை. இவள் தனக்கு அனுப்பும் ஜோக்ஸ் குறித்தும்.

‘…நீங்க எக்ஸர்சைஸ் எதுவும் செய்யறதில்லல’

‘ம்ம்ஹும், அவர் எக்ஸர்சைஸ் வேற செய்வாரா வீட்ல?’ விலகினான்.

‘அதெல்லாம் இல்ல, ஒரு மணி நேரம் நடக்கறது மட்டும்தான். அவருக்கு அப்படி ஒண்ணும் தேவையும் இல்ல’

‘நானும் போணும்’ என்றபடி தலையணையை எடுத்து இடுப்பின் மீது வைத்துக் கொண்டான்.

‘ஒங்களுக்கும் ஒண்ணும் அவசியமில்ல, நடந்துட்டு வந்தா பிரெஷ்ஷா இருக்கும், அவர் அதுக்குதான் போறார். நீங்களும் சேந்துக்கலாம். பேசிட்டே போனா நடக்கறது தெரியாது இல்ல’

‘…’

‘ப்ரவீணுக்கு இப்போ ஒம்போது வயசுல’

‘ஆமா மேரேஜ் ஆகி பத்து வருஷம் ஆச்சு, ஒடனே கன்சீவ் ஆகிட்டா. ஒங்களுக்கு எப்ப மேரேஜ்’

‘பதினாலாவது வருஷம் ரன்னிங்’

‘பெரியவனுக்கு எவ்வளவு வயசு, பன்னெண்டா? ரெண்டு வருஷம். வீட்ல பெரியவங்க அதுக்குள்ளே கொடச்சல் கொடுத்துருப்பாங்க.’

‘அதெல்லாம் இல்ல, நாங்கதான் ஒரு வருஷம் போகட்டும்னு டிசைட் பண்ணினோம். அவருக்கு பொண் கொழந்த வேணும்னு ஆச, அதான் இன்னொண்ணும், அதுவும் பையனாப் போச்சு. அவர் அடுத்ததுக்கும் ரெடிதான், விட்டா போயிட்டே இருப்பாரு. நான்தான் போறும்னுட்டேன். நீங்க இன்னொரு தம்பியோ பாப்பாவோ பெத்துக்கலாம்ல. தொணையா இருக்கும். உஷாட்ட அப்பப்ப சொல்லிட்டிருப்பேன், சிரிச்சுப்பாங்க, அவ்ளோதான் வேறேதும் சொல்ல மாட்டாங்க. ஒண்ணு போறும்னு முடிவு பண்ணிட்டீங்களா’

‘…ம்ம்ம்… கெளம்பறேன்’

‘டைம் என்ன’ என்றபடி அலைபேசியை எடுத்துப் பார்த்தவள் ‘நாலரை ஆயிடுச்சு’ என்றாள்.

‘கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் டைம் போனதே தெரில… பேசிட்டும் இருந்தோம்’

‘நைட் எங்க சாப்பிடுவீங்க’ என்றபடி எழ ஆரம்பித்தாள். இன்னும் சிறிது நேரம் தங்கச் சொல்லியிருக்கலாம்.

படுக்கையிலிருந்து எழுந்தவன் மீண்டும் சாய்ந்தான். ‘அவரோட …. எவ்ளோ நேரம் ஒண்ணா இருப்பீங்க, தப்பா எடுத்துக்காதீங்க, சும்மாத்தான் கேட்டேன்’ என்றதற்கு ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தவள், ‘உஷா இப்பத்தான் கால் பண்ணிருக்காங்க ‘ என்றபடி அலைபேசியை காதருகில் வைத்துக் கொண்டாள்.

‘என்ன போன் பண்ணீங்களா, கவனிக்கல’

‘..’

சிரித்தபடி ‘பிஸிலாம் இல்ல, அவருக்கு ஆபிஸ் இருக்கு இன்னிக்கு’

‘…’

‘நைட்டா.. பாக்கலாம்’

‘உஷாவா?’ என்ற இவனுடைய வாயசைப்புக்கு தலையாட்டிவிட்டு ‘போர் அடிச்சுதுன்னு கால் பண்ணீங்களா. அப்படித்தான் இருக்கும், தனியா தூங்கறதுனாலே ஒங்களுக்கு ஆகாதே ‘ என்று பேச்சைத் தொடர்ந்தாள்.

எழுந்து உடையணிய ஆரம்பிக்கும் முன் அலைபேசியை எடுத்துப் பார்த்தான், உஷா ஒரு முறை அழைத்திருக்கிறாள். அழைப்பை முடித்துக் கொண்டவள் ‘உஷாதான்’ என்று விட்டு உள்ளாடை எதுவும் உடுத்திக் கொள்ளாமல் நைட்டியை அணிந்து கொண்டாள். டீ-ஷர்டை முழங்கைக்குள் நுழைத்திருந்தவன் நிறுத்தி அவளை பார்த்தான். இவனை கவனியாமல் நைட்டியின் சுருக்கங்களை நீவி விட்டுக் கொண்டிருந்தாள்.மெல்லிய திரை போன்ற இரவாடைக்கு பின்னே வெற்றுடலின் அசைவு.

‘இன்னிக்கு ஒங்களுக்கு … நான் …’

வெறுமனே தலையசைத்து விட்டு ஹாலுக்குச் சென்று உட்புறக் கதவை திறந்து, வெளிப்புற க்ரில் கதவுப் பூட்டின் சாவியை சாவிக் கொத்திலிருந்து அவள் எடுக்க,’இப்போ யாராவது வெளில இருப்பாங்களா தாசில்தார் வைப்..  அவங்க பையன் பைனல் இயர்ல இந்த வருஷம் ‘ என்றான்.

‘நானும் உஷாவும் இங்க மதியம் பேசிட்டிருந்தா அவங்களும் வருவாங்க, மத்தபடி அவங்க இப்போ உள்ளதான் இருப்பாங்க. பையன் அஞ்சு, அஞ்சரைக்குதான் வருவான், காலேஜ் பஸ்’

‘யாரும் இல்லல’ என்றபடி வெளியே காலெடுத்து வைத்துத்’ திரும்பி க்ரில் கம்பிகளை பற்றியபடி, ‘ஆக்ச்சுவலி நான் அப்போ என்ன கேக்க வந்தேன்னா, இன்னிக்கு… நாம.. ஒங்க ஹஸ்பன்ட்..’ என்றவனை, ‘வேணாம், அதப் பத்தி பேசவேணாம்’ என்று இடைமறித்தாள்.

‘ஸாரி, வரேன்’

கதவைச் சாத்தினாள். அழைப்பு மணிக்கு அடுத்திருந்த வெண்கல பெயர்ப்பலகையில் தம்பதியரின் பெயர். அதன் கீழே பொருத்தப்பட்ட மற்றொரு, நிறம் இன்னும் பொலிவாக இருக்கும் வெண்கலப் பெயர்ப்பலகையில் அவர்கள் குழந்தைகளின் பெயர்கள். உஷாவை அலைபேசியில் அழைத்தான். ரிங் போக, கழுத்திடுக்கில் அதை வைத்தபடி அடுத்திருந்த தன் அபார்ட்மெண்ட் கதவைத் திறக்க ஆரம்பித்தான். ப்ரவீணுக்கு பயணத்தில் போது சில சமயம் குமட்டும். எளிய இரவுணவை உட்கொள்ள, பேருந்தில் ஏறும் முன்னர் ரெண்டு மூன்று தண்ணீர் போத்தல்கள் வாங்கி வைத்துக் கொள்ள சொல்ல வேண்டும். வண்டி நடுவே எங்கேனும் நிற்கும் போது ப்ரவீண் எங்கும் இறங்கிச் செல்லக் கூடாது. பெயர்ப்பலகையை எங்கு செய்தார்கள் என்று இவளிடம் கேட்டு- உஷாவை கேட்கச் சொல்லலாம்- தெரிந்து கொண்டு இங்கும் ஒன்று பொருத்த வேண்டும்.

அரிநிழல் -காலத்துகள்

காலத்துகள்

நாடார் பத்து பைசாவிற்கு இங்க் ஊற்றிக் கொண்டிருக்க, பின்னணியில் ராதா மாணிக்கம் இயேசுவின் ஜீவித சரிதத்தை பாடிக் கொண்டிருந்தார். அடுத்து ஜாலி அப்ரஹாம் பாட ஆரம்பிப்பார். ‘ஜாலி’ என்பது பெயரின் பகுதியா அல்லது அடைமொழியா என்பது நாடாருக்கும் தெரியவில்லை. தினமும் காலையில் இரண்டு மூன்று முறையாவது நாடார் கடைக்கு வருவது வாடிக்கை, பாடல் வரிகளும், அவை ஒலிபரப்பாகும் வரிசையும் அத்துப்படி. அடுத்த வருடத்தில் இருந்து இவனும் பேனா உபயோகிக்கலாம். இன்று ஒரு தகவல் ஆரம்பித்திருக்கக்கூடும், அதன் இறுதியில் வரும் குட்டிக்கதையையேனும் கேட்டு விட வேண்டும்.

தேங்காய் பத்தைகளை வாங்கிக் கொண்டு திரும்பினான், மதியம் மிளகாய்ப்பொடி தடவிய இட்லிகள். இரண்டு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும், சந்துருவுக்கு பிடிக்கும். நாளை சனி, பள்ளி இல்லை, இன்று மாலையே எல்லா வீட்டுப்பாடத்தையும் எழுதி முடித்து விட வேண்டும், பின் இரண்டு நாட்கள் செய்ய நிறைய உள்ளது. அடுத்த தெருவில் இருக்கும், வெளியிலிருந்து மட்டும்எ ட்டிப் பார்த்திருக்கும் ஐஸ் பேக்டரிக்குச் சென்று உள்ளே விடுவார்களா என்று கேட்டுப் பார்க்கலாம், டப்பா ஸ்கூலும், ஸ்ரீனிவாசா தியேட்டர் மைதானமும் தவிர்த்து ஆர்ட்ஸ் காலேஜ் க்ரவுண்டிற்கு செல்லலாம், எதுவும் இல்லாவிட்டால் வீட்டின் பின்னாலேயே விளையாடலாம். எதிரே பாட்டி வந்து கொண்டிருப்பதைப் பார்த்து அவரிடம் ஓடிச்சென்று ‘என்ன தாத்தி, வேறேதாவது வாங்கணுமா’ என்று கேட்டான். தலையசைத்து திரும்பி நடக்க ஆரம்பித்தவர், இவன் முழங்கையை பற்றிக் கொண்டு ‘தாத்தி ஒண்ணு கேட்டா உண்மையைச் சொல்லணும் என்ன. நீதானே சாவி மேகஜீன்ல வரஞ்சு வெச்சிருக்க’ என்று கேட்டார்.

‘ஹிந்து’ மற்றும் ‘எக்ஸ்பிரஸ்’ மட்டும் வீட்டில் அதிகாரபூர்வமாக வாங்குவது. பேப்பர் விநியோகிக்கும் ஸ்ரீதர் கிட்டத்தட்ட அனைத்து மாத வார- ராணி காமிக்ஸ், பூந்தளிர் போன்ற சிறார்- இதழ்களையும் போட்டுவிடுவார். ‘ஞான பூமியை’கூட வீட்டில் பார்க்க முடியும். இதற்காக தனியாக ஏதேனும் பணம் வாங்கிக் கொள்வாரா என்று தெரியவில்லை. சாவியில் ஆறேழு வாரமாக மாந்த்ரீகத் தொடர் ஒன்று வந்து கொண்டிருக்கிறது. கல்லூரி விரிவுரையாளர், அவரிடம் பயில்பவர்கள், இன்னும் சில பாத்திரங்கள். இதுவரை யார் நல்லவர், கெட்டவர் என்பது பிடிபடவில்லை.

‘நா எதுவும் பண்ணலயே தாத்தி’ என்று சொன்னதற்கு, ‘ஏய்ய் பொய்ய் சொல்லக்கூடாது, வேற யார் பண்ணிருப்பா அப்ப, நீ சொல்லு’ என்றார்.

‘என்ன சொல்றேன்னே புரியல தாத்தி, அந்த புக்குக்கு என்னாச்சு’. இதையே மீண்டும் மீண்டும் பேசியபடி சந்தினுள் நுழைந்திருந்தார்கள்.

இந்த வார அத்தியாயத்தில் படுக்கையின்மீது ஒரு காலை முட்டி போட்டபடி இரவு ஆடை அணிந்து கொண்டிருக்கும் பெண்ணொருத்தி எழும் ஓவியம். ஆடையினுள் அவள் அணிந்திருக்கும் உள்ளாடையின் உருவரை தெளிவாகத் தெரிந்தது. பெண்களும் ஜட்டி அணிவார்கள் என்றும், அதை ‘பேண்டீஸ்’ என்று கூறுவார்கள் என்றும் இரண்டு வருஷம் முன்னால்தான் அறிந்து கொண்டான். முக்கோணத்தை திருப்பிப் போட்டது போன்ற பேண்டீஸின் உருவரையை அவ்வப்போது யாரும் கவனிக்காதவாறு பார்த்துக் கொண்டிருந்தான். இன்னும் இரு நாட்களில் அடுத்த இதழ் வந்து விடும், நேற்று இரவுதான் அந்த உருவரையின் கோடுகளின் மீது சிவப்பு நிற ஸ்கெட்ச் பென்னினால் அழுத்தி முக்கோணத்தை இன்னும் அடர்த்தியாகவும், துல்லியமாகவும் ஆக்கினான்.

சுந்தரி அக்கா போர்ஷனை தாண்டும்போதே வீட்டினுள் உரத்த குரலில் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருப்பது கேட்டது. உள்ளே நுழையும்போது ‘சாவியை’ கையில் வைத்துக் கொண்டு ‘அதான் சொல்றேனே, இந்த வார இஷ்யு காணலையேன்னு தேடும்போது புக்ஸ்ல எங்கேயாவது போட்டிருப்பானோன்னு பாத்தா கெடச்சுது, அட்டைல இருக்கற பொண்ணு மூஞ்சில ரெட் ஸ்கெட்ச்ல நாமம் போட்டிருக்கான், எதோ விளையாட்டா பண்ணிருக்கான்னு நெனச்சேன், அப்பறம் உள்ள பாத்தா இப்படி பண்ணிருக்கான்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். இவனைப் பார்த்ததும் ‘ஏண்டா இப்படி பண்ணின?’

“…”

‘நீ பண்ணலனா யார் பண்ணா, நைட் பூதம் வந்து வரஞ்சுதா’

“…”

‘புஸ்தகத்துக்கு கால் மொளச்சு தானா நடந்து வந்து ஒன் புக்ஸ்ஸோட வந்து ஒக்காந்துகிச்சா’

அனைத்திற்கும் ‘எனக்கு தெரியாதுமா’, ‘நா பண்ணல’, ‘அது எப்படி என் புக்ஸ் வந்துதுன்னு தெரியாது’, ‘வந்தனிக்கே அத படிச்சு முடிச்சுட்டேன்’ என்று பதில் சொல்லிக் கொண்டிருந்தான். சத்தம் கேட்டு வந்த சுந்தரி அக்காவிடமும் விஷயத்தைச் சொல்ல புத்தகத்தை புரட்டி உடனேயே திருப்பித் தந்து விட்டார்.

‘என்ன சுந்தரி சிரிக்கற’ என்று அம்மா கேட்க, ‘சின்ன பையன்தானே தெரியாம செஞ்சிருப்பான், விட்ருங்கக்கா’ என்றார். ‘அதில்ல சுந்தரி, சரி ஏதோ பண்ணிட்டான், அத ஒத்துக்கலாம்ல ஒழக்கு மாதிரி இருந்துட்டு என்ன அழுத்தம், தெரியாது தெரியாதுன்னு சொல்லிட்டே இருக்கான்’ என்றார். அவர் தன் போர்ஷனுக்குச் செல்லும்வரை தலை நிமிராமல் இருந்தான்.

‘தோ பார்டா அம்மா அடிக்க மாட்டேன், அப்பாவும் மாட்டா, தப்பு செஞ்சிருந்தா ஒத்துக்கணும், அதுதான் நல்ல மனுஷத்தனம்’ என்பதை திரும்பத் திரும்ப சிற்சில மாற்றங்களுடன் சொல்லிக் கொண்டிருந்த அம்மா எட்டு மணிக்கு மேல் பள்ளிக்கு கிளம்பினார்.

இன்னும் குளிக்கக்கூட இல்லை. ‘போய் குளிச்சிட்டு வந்து சாப்பிடுடா’ என்றார் பாட்டி. தட்டில் இட்லியை வைத்து விட்டு, தன் நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு, ‘தாத்தி சொன்னா கேக்கணும் சரியா, தாத்திய ஒனக்கு பிடிக்கும்ல’ என்று சொல்ல தலையாட்டினான். ‘அப்போ ஏன் அப்படி பண்ணினே சொல்லு, அப்பத்தான் தாத்திய ஒனக்கு பிடிக்கும்னு நம்புவேன்’.

“—“

‘இது ஒண்ணு பெரிய தப்பில்லையே, நா ஸ்கூல்ல படிக்கும் போது எங்க மிஸ் ஸ்கர்ட்லதான் வருவா, சைக்கிள்ள அவங்க ஏறர டைம்ல நாங்க குனிஞ்சு பாப்போம்’ என்று அப்பா சொன்னதை இடைமறித்து ‘ஏண்டா கொழந்தட்ட பேசற பேச்சா இது’ என்றார் பாட்டி. ‘அதுக்கில்லமா, இது ஒரு நேச்சுரல் க்யுரியாசிடி தான்னு சொல்ல வரேன், ஆனா அத நான் பண்ணலேன்னு சாதிக்கறான் பாரு அது தான் தப்பு’.

‘ஏண்டா நாலு இட்லியோட நிறுத்திட்ட’ என்று பாட்டி சொல்லச் சொல்ல கையலம்ப வெளியே சென்றான். கிணற்றடியில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த சுந்தரி அக்கா நிமிர்ந்து பார்க்க, அவர் பார்வையைத் தவிர்த்து விட்டு கைகழுவிக் கொண்டு உள்ளே வந்து பள்ளி சீருடையை அணிந்தான்.

ஷூ போட்டுக் கொண்டிருக்கும்போது மீண்டும் அருகே வந்த பாட்டி ‘அப்போ நீ சொல்ல மாட்டேல்ல, பாட்டி மேல ஒனக்கு அப்போ கொஞ்சம் கூட பாசம் கெடையாது அப்படித்தானே’ என்றார். ‘என்ன பாட்டி, நான் தான் செய்யலங்கறேனே, யார் அத பண்ணாங்கன்னு எனக்கு தெரியாது’

‘அப்போ நான், ஒன் ஸ்கூலுக்கு வந்து டீச்சர்ட்ட, ஹெச்.எம்கிட்ட சொல்றேன், அவங்க கண்டுபிடிப்பாங்க’ என்று அவர் சொல்ல, ‘என்ன பாட்டி இதெல்லாம் போய் ஸ்கூலுக்கு வரேங்கற, அவங்க என்ன பண்ணுவாங்க’ என்று ஒரு காலில் மட்டும் ஷூவோடு எழுந்து நின்றபடி கத்தினான். ‘அப்ப நீ உண்மைய சொல்லு, இல்லேனா நான் கண்டிப்பா ஸ்கூலுக்கு வருவேன், எனக்கென்ன’ என்று பாட்டி மீண்டும் சொல்ல, ‘நீ என்ன வேணா பண்ணிக்கோ’ என்று சொல்லியபடி மீண்டும் அமர்ந்து மற்றொரு காலிலும் ஷூவை அணிந்தான். வாசற்படியை தாண்டியபின் மீண்டும் உள்ளே வந்து ‘ஸ்கூலுக்குலாம் வராதே தாத்தி’ என்று சொல்ல, ‘நீ தான் ஒத்துக்க மாட்டேங்கறல, அப்ப நான் கண்டிப்பா வருவேன்’ என்றார்.

ஐந்து நிமிட நடை தூரத்தில்தான் பள்ளி என்றாலும் எட்டரை, அதிகபட்சம் எட்டே முக்கால் மணிக்கெல்லாம் மதிய உணவை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவது வழக்கம். முதல் மணி அடிக்கும்வரை விளையாட்டும், மதிய உணவு இடைவேளையின்போது பத்து நிமிடங்களுக்குள் சாப்பிட்டு முடித்து பின் மீண்டும் ஆட்டம். இன்று கிளம்ப ஒன்பது ஐந்தாகி விட்டது. சந்தைக் கடந்து மெதுவாக நடந்து சென்றுகொண்டிருந்தான்.

போன வருடம் மரத்தடியில் வினோலியா மிஸ் க்ளாஸ் எடுத்துக்கொண்டிருக்கும் போது எதிரே இருந்த ஐந்தாம் வகுப்பு பி பிரிவில் இருந்து பத்மினி மிஸ் வெளியேறி வேகமாக நடக்க ஆரம்பிக்க பின்னால் இரு மாணவர்கள். ஒருவனின் பெயர் விக்கி என்பதைத் தவிர அவர்களைப் பற்றி வேறு எதுவும் தெரியாது. பத்மினி மிஸ் கையில் ஏதோ புத்தகம். இவர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அருகில் வரும்போது, இரு மாணவர்களும் அழ ஆரம்பித்திருந்தார்கள். வினோலியா மிஸ் என்னவென்று கேட்க ‘க்ளாஸ்ல பாருங்க மிஸ், மேகஸின் படிக்கறாங்க’ என்று அந்த புத்தகத்தை உயர்த்திக் காட்டினார். ‘ஆனந்த விகடன்’. இவர்களைக் கடந்து தலைமையாசிரியர் அறை நோக்கி மிஸ் செல்வதை, இருவரும் அவரின் முன்னால் சென்று மன்றாடுவதை, மிஸ் விலகி முன்னே செல்ல, பின்னால் சில அடிகள்நடந்து மீண்டும் அவர் முன்னே சென்று கெஞ்சுவதை குனிந்தபடி ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான். வாயசைப்பில் இருந்து அவர்கள் ‘ஸாரி மிஸ், வேணாம் மிஸ்’ என்று மீண்டும் மீண்டும் சொல்வது தெரிந்து.

சாலையைக் கடப்பதற்கு பதில் பள்ளியை தாண்டிவிட்டிருந்தான். திரும்பி சில அடிகள் எடுத்து வைத்து நின்றான். முதல் மணி அடித்திருப்பார்கள். பள்ளி வாசலில் கூட்டம் அதிகமாக இல்லை, கடைசி நேரத்தில் வரும் ஒரு சிலர் மட்டும். இப்போது சென்றாலும், காலை வழிபாட்டில் கலந்து கொள்ள முடியாது, வெளியில்தான் நின்றிருக்க வேண்டும். ப்ரேயர் முடிந்து தலைமையாசிரியை வந்து தாமதமாக வந்ததற்கு கொடுக்கும் தண்டனையை வாங்கியபின் தான் உள்ளே செல்ல முடியும். அதற்குள் பாட்டியும் பள்ளிக்கு வந்து விடலாம், இந்நேரம் கிளம்புவதற்கு தயாராகிக் கொண்டிருப்பார், கிளம்பிக்கூட இருக்கலாம். மீண்டும் திரும்பி வேதாச்சல நகருக்குள் நுழைந்து நடக்க ஆரம்பித்தவன், புதிய பேருந்து நிலையம் வர அதனுள் நுழைந்தான்.

தாம்பரம் செல்லும், டி.சிக்ஸ்டி, அம்மா பெரும்பாலும் பள்ளிக்கு இதில்தான் செல்வார். நிறைய தனியார் பேருந்துகள். பயணிகள் அமரும் இடத்தில் இருந்த பெஞ்சில் அமர்ந்து, வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்தான். சிறிது நேரத்தில் நிலையம் சற்று அமைதியடைய ஆரம்பித்தது. அருகில் அமர்ந்திருந்தவர் கையில் கடிகாரம் இல்லை, எழுந்து அங்கிருப்பவர்களின் மணிக்கட்டை பார்த்தபடி நடந்தான். பத்தேகால். மீண்டும் அதே பெஞ்சிற்கு வந்தமர்ந்தான். எதிரே பூ விற்றுக் கொண்டிருந்த பெண் இவனையே கவனிக்க எழுந்து வேறு இடத்திற்கு செல்லும் போது டையை அவிழ்த்துக் கொண்டபின், சட்டையை ட்ரவுசரில் இருந்து வெளியே எடுத்துவிட்டுக் கொண்டான்.

ஒவ்வொரு இடத்திலும் கொஞ்ச நேரம் அமர்ந்திருப்பது, பின் நிலையத்தினுள் சுற்றி வருவது. பேருந்து நிலைய கழிப்பறைக்குள் நுழையாமல், அதன் முன் சில கணங்கள் நின்றிருந்தான். புத்தகப்பையுடன் எப்படி உள்ளே செல்ல. சற்று தள்ளி வைத்து விட்டு அவசரமாக உள்ளே நுழைந்தான். மலம் கழிக்கும் அறைகள் மட்டும்தான். நுரைத்துத் தள்ளி கழிவறை துளை வரை வந்திருக்கும் மலம். சட்டையின் மேற்பகுதியை மூக்கின் மீது இழுத்து விட்டுக் கொண்டான். வெளியே வந்து சட்டையை மூக்கிலிருந்து எடுத்துவிட்டு நன்கு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டபோது, இன்னும் கடுத்தது. இன்னும் சிறிது நேரத்தில் கழிவறையை சுத்தம் செய்யக் கூடும், அதன் பின் மீண்டும் செல்லலாம்.

கூட்டம் குறைவாக இருந்த இடத்திற்கு சென்றான், அங்கு அமர்ந்திருந்தவரின் மணிக்கட்டில் பன்னிரெண்டரை ஆகியிருந்தது. பொதுவாக ஒரு மணிக்கு சாப்பிடும்போதுகூட இப்படி பசித்ததில்லை. சாப்பிட ஆரம்பித்தவன் நிமிரும்போது நிலைய வளாகத்தின் மறு முனையில் கழிவறையில் இருந்து வெளியே வருபவரைப் பார்த்தான். இரண்டு இட்லிகளுடன் எழுந்தவன், மீதி இட்லிகளை அங்கு அலைந்து கொண்டிருந்த நாயின் முன் வைக்க அது உண்டு முடித்தது. டிபன் பாக்ஸ்சை கழுவியபின், நிலையத்தில் நின்றிருந்த பேருந்தொன்றில் சென்றமர்ந்தான். உள்ளே இவனும் காக்காயொன்றும்.

போன வருடம் ஸ்டவ் எரியாமல் தொல்லை கொடுக்க, காலை விடுமுறை எடுக்கச் சொன்னார்கள் வீட்டில். மறுத்து விட்டு பள்ளிக்குச் சென்றவனின் வகுப்பிற்கு, இரண்டாம் பீரியட் முடியும் தருவாயில் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வந்துவிட்ட பாட்டி, முதல் இன்டர்வெல்லின்போது அனைவரும் பார்த்தபடி இருக்க, இவனை சாப்பிடச் செய்த பின்னரே கிளம்பினார், மதிய உணவிற்கான டிபன் பாக்ஸை வைத்து விட்டு. அதன் பின் ‘பப்பா’, ‘கொயந்த’, ‘வீட்லனா ஊட்டி விட்டுருப்பாங்கல’ என்று நண்பர்களின் கேள்விகள்.

இந்நேரத்திற்கு பள்ளிக்குச் சென்றிருப்பார். வகுப்பில் இல்லை என்பதை அறிந்தவுடன் அம்மாவிற்கு தகவல் சொல்லிவிடுவார்கள். அவர் வேலை செய்யும் பள்ளியில் தொலைபேசி உண்டு, வீட்டிலோ, தெரிந்தவர்களிடமோ கிடையாது. டெலிக்ராம் ஆபிஸ் சென்றுதான் அழைக்க முடியும். அம்மா அடித்துப் பிடித்துக் கொண்டு வரும்போது இங்குதான் இறங்க வேண்டும். பள்ளியில் இந்த விஷயம் பரவியிருக்கும், வினோலியா மிஸ்தான் இந்த வருடம் க்ளாஸ் டீச்சர், மிகவும் அன்பானவர், கோபப்பட்டு பார்த்ததில்லை.

இவனுக்கு மிகவும் பிடித்த டீச்சர். ஏதேனும் பேருந்தில் ஏறி எங்கேயாவது சென்று விடலாம், கையில் கொஞ்சம்கூட காசு இல்லை. பேருந்தினுள் பயணிகள் வந்தமர ஆரம்பிக்க இறங்கி காலியாக இருந்த இன்னொரு பேருந்தினுள் ஏறினான்.

வரலாற்றுப் புத்தகத்தை திறந்தால், இடது பக்கத்தின் எண் ஐம்பத்தி நான்கு, நான்கு ரன். புத்தகத்தை மூடித் திறந்தான், எழுவத்தி இரண்டு, ஸ்கோர் ஆறு. அடுத்தது தொண்ணூற்றி ஆறாம் பக்கம். ஸ்கோர் பண்ணிரண்டு. அடுத்து நாற்பது. முதல் விக்கெட் அவுட். பத்தாவது விக்கெட் விழும்போது ஸ்கோர் எழுவத்தி எட்டு, தொடர்ந்து மூன்று முறை பூஜ்யத்தில் முடியும் பக்க எண்கள் வந்துவிட்டன.

எழுவத்தியெட்டை இலக்காக கொண்டு அடுத்த இன்னிங்க்ஸ் ஆரம்பிக்கும்போது ‘சீக்கரம் ஏறித் தொலை’ என்று கத்தியபடி வண்டியினுள் ஏறியவருக்குப் பின் கையில் இரு மூட்டைகளுடன் ஒரு பெண்ணும் இவனை விட ரெண்டு மூன்று வயது கூடுதலாக இருக்கக்கூடிய சிறுவனொருவனும் வந்தார்கள். அவனும் பையொன்றை வைத்திருந்தான். முன்னிருக்கையில் அமர்ந்தபடி ‘பால்லாம் கரெக்ட்டா உற குத்தி வெச்சியா, கெட்டுபோவப் போகுது, சாம்பார், கொழும்புன்னு எதையாவது அப்படியே வெச்சுட்டு வந்திருக்கப் போற, திங்கக்கெழம வரும்போது கப்படிக்கும், ‘அந்தப் பையை நல்லா உள்ள வை, இல்லனா கால்ல இடிக்கும்.’ என்று உரத்த குரலில் அம்மனிதர் சொல்ல ஜன்னல் வழியே வெளியே பார்த்தபடி தலையை மட்டும் அசைத்தார் அந்தப் பெண். ‘டேய் ஜன்னல் சீட்ல ஒக்காராத இங்க வா’ என்று சிறுவனை இவனருகில் உட்காரச் செய்தார். ‘கையை ஜன்னல் கம்பி மேல வெக்காத வண்டி ஓட்டும்போது சைட்ல வேற வண்டி வந்தா அடிபடும்’ என்று அந்தப் பெண்ணிடம் அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது பேருந்தை விட்டு இறங்கினான்.

சிறுநீர் முட்டிக் கொண்டு வந்தது, கழிவறையின் அருகே செல்லும்போதே நாற்றமடித்தது. விலகிச் சென்று சுற்றிப் பார்த்தான். நிலையத்தின் ஒரு ஓரத்தில் வெளியிலேயே சுவரோரம் சிறுநீர் கழிக்கிறார்கள். சிறிது நேரத்திற்குப்பின் அங்கு சென்றான். அடிவயிற்றில் வலியுடன் இணைந்த கிளர்ச்சி, வலது கையை சுவற்றில் வைத்துக் கொண்டான். சிறுநீர் கழித்து முடித்த பின்பும் குறியின் நுனியில் ஊசி குத்துவது போன்ற வலி. நிலையத்தில் இருந்த கடையின் முன் டீ குடிக்கும் கூட்டம், கோகுலத்தின் இந்த இதழ் வந்து விட்டது, ஸ்ரீதர் நாளை போட்டு விடுவார், இந்த வார சாவியை பார்த்ததும் அங்கிருந்து விலகி முதலில் அமர்ந்த இடத்திற்கே வந்தான்.

‘என்ன தம்பி காத்தாலேந்து இங்கயே சுத்திட்டு இருக்க, இஸ்கூலுக்கு போலையா’ என்றார் பூக்காரம்மா. ‘இல்லையே கொஞ்ச நேரம்தான் இங்க இருந்தேன், ஒடம்பு சரில. அப்பறம் ஸ்கூல் போயிட்டேன்’.

‘இஸ்கூல்லு வுட்ற நேரமாலியே’ என்றவர், அங்கு பேருந்திற்காக நின்றிருந்தவரிடம் மணி கேட்டுவிட்டு,. ‘நாலற ஆவலியே அதுக்குள்ள வந்துட்ட’ என்று சொன்னார்.

‘கட் அடிச்சிருப்பான், இந்த வயசுலேயே’ என்றார் மணி சொன்னவர்.

‘எந்த ஊரு ஒனக்கு, வீட்ட விட்டு ஓடி வந்துட்டியா, இந்த நேரம்னு பாத்து எந்த போலீஸும் இல்லை’ என்று பூக்காரம்மா ஆரம்பிக்க, ‘ஐயோ இல்ல, நெஜமா எனக்கு ஒடம்பு சரியில்ல’ என்றான்.

அங்கு வந்து நின்ற பேருந்தில் மணி சொன்னவர் ஏற, ஒரு பெண் பூ வாங்க வந்தார். வீட்டிற்குச் செல்ல திரும்பினான். ஒருவேளை இவனைக் காணாமல் வீட்டினர் பயந்து போய் எதுவும் சொல்லாமல் விட்டுவிடக் கூடும். நிலையத்தின் வாயிலை அடைந்தவுடன் திரும்பிப் பார்த்தான். இன்னுமொரு பெண் பூ வாங்க வந்திருக்க பூக்காரம்மா அவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.

வேதாச்சல நகர் முனையில் இருந்து பார்த்தபோது பள்ளி வாசலில் எந்த அரவமும் இல்லை. டையை கட்டிக் கொண்டு, சட்டையை உள்ளே திணித்துக் கொண்டு, சற்று தூரம் சென்று காப்பி அரைக்கும் கடைக்கு சற்று முன்பு மரத்தடியில் நின்று கொண்டான். மூன்றாம் வகுப்புக்களுக்கு நேர் எதிரேதான் கடை, பாட்டி ஒரு முறை காப்பி அரைக்க வந்ததை வகுப்பின் ஜன்னல் வழியாக பார்த்திருக்கிறான்.

மணி அடிக்கும் சப்தம் மிக மெல்லியதாக. முதல் மாணவர்கள் வெளியே வர ஆரம்பிக்கிறார்கள், ஓட்டமும் நடையுமாக சென்று ரோட்டை கடப்பவர்களுடன் சேர்ந்து கொண்டான். கூடப் படிப்பவர்கள் பார்க்கும்முன் வீட்டிற்குச் சென்று விட வேண்டும். இவனுக்கு என்னவாயிற்று என்று சந்துரு யோசித்துக் கொண்டிருந்திருப்பான். சந்து முனையில் யாரும் நிற்கவில்லை, உள்ளே காத்துக் கொண்டிருக்கக்கூடும்.

தன் போர்ஷனின் முன் மல்லாட்டை உடைத்துக் கொண்டிருந்த சுந்தரி அக்கா அவற்றை கையில் அள்ளி நீட்டி ‘இந்தா எடுத்துக்கோ’ என்றார். ‘பசிக்கலக்கா’ என்று விட்டு தன் போர்ஷனுள் நுழைந்தான்.

‘டூ இன் ஒன்னில்’ அப்பா பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார், ‘ட்ரெஸ் மாத்திட்டு வா காபி தரேன். புள்ளாண்டான் சட்ட காத்தால இன் பண்ணினது அப்படியே இருக்கு மழதான் பெய்யப் போறது போ’ என்றார் பாட்டி. தெரியாதது போல் நடிக்கிறார். தனியாக கூப்பிட்டுக் கேட்கக் கூடும் அல்லது அம்மா வருவதற்காக காத்துக் கொண்டிருக்கலாம். ஒரு வேளை தலைமையாசிரியை இவன் பள்ளிக்கு வராதது குறித்து அறிந்திராமல் பாட்டியுடன் பேசியிருக்கக் கூடும்.

சிறிது நேரம் கழித்து ‘என்ன ஹோம்வர்க் எழுத ஆரம்பிக்கல, ப்ரைடே சாங்காலமே முடிச்சுடுவே அப்பத்தான் ரெண்டு நாளு ஜாலியா இருக்கலாம்ப’ என்று பாட்டி கேட்க புத்தகங்களை எடுத்துக் கொண்டு அமர்ந்தான். நாளை சந்துரு வீட்டிற்குச் சென்று என்ன வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று கேட்டுக் கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களாக செய்து கொண்டிருக்கும் ஸ்வெட்டர் பின்னும் வேலையை பாட்டி தொடர்ந்தார். நடுவில் ஊசியில் நூலைக் கோர்க்கும்படி இவனிடம் கேட்டார். கண்டிப்பாக அம்மாவிற்குத்தான் காத்திருக்கிறார்கள்.

அம்மா வந்த பின் உடை மாற்றிக்கொள்ள உள்ளே செல்ல, சிறிது நேரம் கழித்து பாட்டியும் அங்கு போனார். இனி அவர்களுக்குள் பேசி விட்டு ஆரம்பிப்பார்கள். வெளியே வந்த பின் சிறிது நேரம் இவனுடன் பேசிக்கொண்டிருந்தார் அம்மா.

திங்கட்கிழமை பள்ளிக்கு வரத்தான் திட்டமிட்டிருக்கிறார்கள். ஹெச்.எம் கண்டிப்பானவர், காலை இறைவணக்கத்தின்போது ஸ்டேஜிற்கு வரச் செய்து எல்லோர் முன்னிலையிலும் இவன் செய்ததை சொல்லக்கூடும், அவர் கையில் சாவி, அனைவர் பார்வையும் இவன் மீது. நிறைய வீட்டுப்பாடங்கள் கொடுத்துள்ளார்களா, சந்துரு இன்று மாலை வர வாய்ப்பில்லை, நாளை காலை முதல் வேலையாக அவன் வீட்டிற்குச் சென்று அது குறித்து கேட்டு விட்டு, இன்று வராததற்கு ஏதேனும் காரணம் சொல்லி விட வேண்டும்.

மாலையில் பாட்டி வீட்டு உரிமையாளர் மனைவியுடன் அரட்டையடிக்கக் கிளம்பினார், அப்பா உள்ளறையில் அன்றைய தினசரியை மீண்டும் புரட்டியபடி. அம்மா சமையலறையில், அங்கு சென்றான். வேக வைத்த உருளைக்கிழங்குகளை தோலுரித்து உப்பு தடவிக் கொண்டிருந்தவர் ‘எடுத்துக்கடா’ என்றார். எதுவும் சொல்லாமல் திரும்பியவன், சில நிமிடங்கள் கழித்து மீண்டும் சென்று ‘தாத்தி ஸ்கூலுக்கு வந்து ஹெச்.எம்ம பாத்து சொல்லப் போறேன்னு சொன்னாம்மா’ என்றான். தக்காளி துண்டுகளை தள்ளி வைத்து விட்டு வெங்காயத்தை நறுக்க ஆரம்பித்தவர் திரும்பாமல் ‘பின்ன நீ இப்படி பண்ணினா அப்படித்தான் செய்வா’ என்றார்.

‘தாத்தி ஸ்கூலுக்கு வந்தாளாமா, நா ஒண்ணும் பண்ணலமா, அங்கெல்லாம் வர வேணாம்னு சொல்லுமா’ என்றிவன் சொல்ல கத்தியை மேடையில் வைத்து விட்டு முன்னே வந்து இவனை இழுத்து அணைத்துக் கொண்டவர், சில கணங்கள் கழித்து இவன் விலக மீண்டும் தக்காளி நறுக்க தொடங்கினார். ‘தாத்தி வரல இல்லமா’ என்று மீண்டும் கேட்டுவிட்டு வெங்காயத்தின் பச்சை வீச்சத்துடன் முன்னறைக்கு வந்தான்.

தி பிரின்செஸ் ஆஃப் புருண்டி – ஷெல் எரிக்ஸோன்

– ஆர். அஜய்-

‘லிட்டில்’ ஜான் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்தவுடன் அந்த இடத்திற்கு காவல்துறை உயரதிகாரி வருகிறார். அவர் அங்கு வருமளவிற்கு இந்தக் கொலை பரபரப்பான நிகழ்வு இல்லையென்றாலும் ஜானின் பதினாறாவது வயதில் அவனை முதன்முதலாக கைது செய்தவர் என்பதால் இந்த வருகை. பேருந்தில் தன் பள்ளிக்கால வகுப்பறை கனவுக்கன்னியை காண்பவனுக்கு அவளிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சிறு திருப்தியை அளிக்கின்றன. ஆனால் பள்ளி நாட்களைப் போலவே இப்போதும் அவள் தன்னை சற்றும் பொருட்படுத்தாமல் இருப்பது, அவனை அடையாளம்கூட காணாதது அவன் மறக்க நினைப்பவற்றை மீண்டும் கிளர்த்தி, அவன் அடைந்திருந்த மகிழ்ச்சியை குலைக்கிறது. வெளியில் பாதுகாப்பாக நின்று கொண்டு உள்ளே எட்டிப் பார்ப்பது போல் உள்ள குற்றப்புனைவுகளில் இருந்து மாறுபட்டு அச்சமும், துன்பமும், இருளும் நிறைந்த தங்கள் புனைவுலகுகளுக்கு வாசகனை இட்டுச் சென்று, குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளி, புலனாய்வு செய்பவர்கள் என அனைவருக்கும் மனிதத்தன்மையை அளித்து வாசகனை சலனப்படுத்தும் நுட்பங்கள் மோஸ்தராகி விட்டாலும், ஷெல் எரிக்ஸோனின் (Kjell Eriksson) ‘The Princess of Burundi’ நாவலில் விரவியுள்ள, எந்தக் கணத்திலும் உடையக் கூடிய மனங்கள், முறியக் கூடிய உறவுகள் நிறைந்திருக்கும் அதன் நொய்மைத்தன்மை அதனளவில் தனித்துவம் கொண்டதாக ஆக்குகிறது.

காலத்தின் நிறுத்தவியலா பயணம், அப்பயணத்தில் எதிர்பட்ட திருப்பங்களில், வேறொன்றை தேர்வு செய்திருக்கலாமோ என்று ஜானின் நினைவுகள் அவனுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே சிந்தனையை கிளர்த்துகின்றன. ஜானின் மரணத்தை பற்றிய செய்தியைப் படிக்கும் சக மாணவி அவன் மேல் தனக்கிருந்த ஈர்ப்பை நினைத்துப் பார்க்கிறாள். எரிக்ஸோன் இத்துடன் இதை விட்டிருந்தால் ஒரு வழமையான நிகழ்வாக மட்டும் இருந்திருக்கும். இந்தப் பெண்ணும் தனியாகதான் வசிக்கிறார் என்று நமக்குத் தெரிய வருகிறது. இப்போது காப்பகத்தில் உள்ள தன் பெற்றோரின் மனம் தெளிவாக இருந்த காலத்தில் அவர்களைச் சந்தித்த ஒரு சிலரில் ஜானும் ஒருவன் என்பதை நினைத்துப் பார்க்கிறார். ஜான் சின்னச் சின்ன குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் அவனிடமிருந்து விலகியதும் தெரியவருகிறது. அந்த முடிவு சரியே என்றுதான் இப்போதும் அவர் நினைக்கிறார், ஆனால் அவருடைய இப்போதைய தனிமையும் பதின்பருவத்தில் இருந்த கனவுகளும், இன்றைய நிஜமும் முரண்படும் இடம் தரும் வலி அவருள் தன் முடிவு குறித்த சந்தேகத்தின் விதையை விதைக்கிறது. தாங்கள் பிறந்து வளர்ந்த நகரின் தெருக்களின் பெயர்கள் மாறுவது, தன் கண்முன்னே அந்நகரம் வேறுருவம் கொண்டு அடையாளம் தெரியாமலாவது குறித்து ஜானின் நண்பனும், வழக்கை விசாரிக்கும் அதிகாரியிடம் அங்கலாய்க்கின்றான்.

பிறந்து வளர்ந்த ஊரை விட்டு பிழைப்புக்காக விலகி வாழ்தல் துயரமானது என்பது உண்மையே. அதே நேரம் சொந்த ஊரிலேயே வசிப்பவர்கள் அனைவரும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பதும் இல்லை. தங்களை அறியாமல் மனதளவில் அங்கிருந்து விலக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் அந்த இடத்திற்கு அந்நியமாகிப் போவதிலும், அவர்களை அவ்விடத்துடன் பிணைக்கும் இறுதிக் கண்ணியான நினைவுகளும் துன்பம் நிறைந்ததாக மாறுவதிலும் உள்ள நகைமுரணை நாவலினூடே உணர முடிகிறது.

தம்பியின் மரணத்தால் தன்னிலை இழந்து பழிக்குப் பழி வாங்க அலையும், குற்ற வாழ்கையில் இருந்து வெளிவராத முரடனான ஜானின் அண்ணன் தம்பியின் நண்பன் மேல் சந்தேகம் கொள்கிறான். பேச்சுவாக்கில் தம்பி மனைவியின் நடத்தை குறித்து யாரோ சொல்ல, பற்றிக் கொள்ள வேறெதுவும் இல்லாததால் அதை நம்பி அவளிடம் சண்டை பிடிக்கிறான். இதுவரை ஒருவருக்கு ஒருவர் நட்பாக இருந்தவர்கள்தான் என்றாலும், ஜான் மீதுள்ள பாசத்தினால் மட்டும் இணைக்கப்பட்டவர்கள். இந்த துர்மரணத்தால் அந்த இணைப்பு துண்டிக்கப்படுகிறது. ஜானின் மகனை, தந்தை இறந்த அதிர்ச்சியோடு தாயின் நடத்தை குறித்து பெரியப்பாவின் குற்றச்சாட்டும் சேர்ந்து தாக்க, எந்த முடிவுக்கும் வர முடியாமல் தத்தளிக்கிறான். சிக்கலான பருவத்தை கடந்து கொண்டிருக்கும் அவன் வேறேதேனும் மோசமான முடிவை எடுக்கக் கூடும்.

தொலைகாட்சிகளில் வரும் புலனாய்வு அதிகாரிகள் போல் கிரேக்க தொன்மத்தில் ஆர்வம் கொண்டவர்களாக, ஒபேரா கேட்பவர்களாக இல்லாமல், பேருந்து ஒட்டுதல், தோட்ட வேலை செய்தல் போன்றவற்றை தேர்வு செய்யாமல், காவல்துறையை தேர்வு செய்த சாதாரணமானவள் நான், என்று ஜானின் கொலையை விசாரிக்கும் பெண் அதிகாரி தன்னை வரையறை செய்து கொள்கிறார். புலனாய்வில் ஈடுபடுபவர்களும் மிக நொய்மையானவர்களாகத்தான் உள்ளார்கள். திருமணமான சக அதிகாரி மீது ஈர்ப்பு கொள்ளும், தனி ஆளாக கைக்குழந்தையை வளர்க்கும் அதிகாரி, அது இட்டுச் செல்லக் கூடிய உறவின் அறம் குறித்து இரட்டை மனநிலையில் உள்ளார். வெறும் உடல் சார்ந்த தற்காலிக உறவை பேணலாமா என்று யோசிக்கிறார். அந்த ஆண் அதிகாரிக்கும் சமீபத்தில் தான் குழந்தை பிறந்துள்ளது, அவருக்கும் அவர் மனைவிக்கும் இடையே பேச்சு வார்த்தை குறைந்து விட்டது, ஒருவரையொருவர் சீண்டக் கூடாது என்ற பயத்தில்/ விலகல் மனநிலையில் ஒன்றாக வசிக்கிறார்கள். குழந்தைப் பேறு உருவாக்கக்கூடிய மனச் சோர்வு, அது உருவாகக்கூடிய உளவியல் சிக்கல்கள் பற்றிய நுட்பமான சுட்டுதல் நாவலில் உள்ளது. வேறு மனித உடலின் அருகாமையை உணர்ந்து பல காலமாகி விட்டது என்பது மட்டுமே இந்த ஈர்ப்பிற்கான காரணமாக இருக்கக் கூடும். பெண் அதிகாரியும் இவ்வாறு தன்னைச் சமாதானம் செய்து கொள்ள முயல்கிறார். ஆண் அதிகாரி தான் பெண்களால் விரும்பப்படுபவனாக உணர்ந்து பல காலம் ஆகி விட்டதால், அப்படி விரும்பப்படுவதே, புதிய உறவில் ஈடுபடுவதைவிட அவரை அதிகம் கிளர்த்துவதாக இருக்கிறது.

நாவலின் இருண்மையான தொனியை உருவாக்குவதில் இத்தகைய உறவுச் சிக்கல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சில கொலைகள், வன்முறைச் செயல்கள் நிகழ்கின்றன என்றாலும், அவற்றை, அவற்றில் உள்ள ரத்த விரயத்தை விட, எந்த பெரிய காரணமும் இல்லாமல் அவை நிகழ்த்தப்படுவதே கொலையுடன் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய ஒருவனின் நடத்தை, ஜானின் அண்ணன் எடுக்கும் முடிவு – வாசகனுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துபவை. ஒவ்வொரு வன்முறை நிகழ்வின் போதும் அதன் அர்த்தமின்மையை, அது மிக எளிதில் தவிர்க்கப்பட்டிருக்க கூடிய ஒன்று என்பதை வாசகன் உணர்கிறான்.

ஜானின் கொலை துப்புத் துலக்கப்பட்டு குற்றவாளி அடையாளம் காணப்படுவதுடன் வாசகனுக்கு முடிவு கிடைப்பதில்லை. ஜானின் மகன் மனதில் தாய் குறித்து எழுந்துள்ள சந்தேகம் தீருமா என்ற கேள்வி எழுகிறது. பதின் பருவத்தில் சின்ன குற்றச் செயல்கள்செய்ய ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் தன் பாதையை மாற்றி நாற்பத்திரெண்டாவது வயதில் கொல்லப்படும் ஜான், அந்தப் பருவத்திலேயே தன் வழியைச் சரியாக தேர்ந்தெடுத்திருந்தால் அவனுக்கு இந்த துர்மரணம் சம்பவித்திருந்திருக்குமா என்றும் வாசகன் யோசிக்கலாம். இத்தனைக்கும் பெரும்பாலானோரைப் போல சராசரி மத்தியத் தர குடும்பத்தின் குழந்தைப் பருவம்தான் அவனுடையது, மற்றொரு திருப்பத்தில் அவன் சென்றிருந்தால், வேலை, குடும்பம், குழந்தை, வேலையிலிருந்து ஓய்வு, முதுமை, மரணம் என பெரும்பாலானோருக்கு கிடைக்கும் வாழ்க்கை அவனுக்கும் அமைந்திருக்கக் கூடும். ‘இவ்வாறு நிகழ்வதை தவிர்க்க நாம் என்ன செய்திருக்கக்கூடும் என்ற கேள்வியை அனைவரும் தம்முள் எழுப்ப வேண்டும்’ என்று நாவலில் ஒரு இடத்தில் காவல்துறை அதிகாரி கூறுவது தன் சக ஊழியரைப் பார்த்து மட்டுமல்ல, இதே கேள்வியை வேறு வேறு வடிவங்களில் தன் வாழ்வில் ஒரு சில முறையேனும் எதிர்கொண்டிருக்கும் வாசகனிடமும்தான்.

நாவலின் இறுதியில் அதிகாரி ஒருவர் சொல்லும் யோசனையின் தார்மீகமும்- கனவுகள் கலையாமல் பார்த்துக் கொள்வது முக்கியமா அல்லது அது எவ்வாறு நிறைவேறுகிறது என்பது முக்கியமா- விவாதத்துக்குரியதே. புலம் பெயர்ந்தவர்கள் அதிகரிப்பதற்கும் குற்றங்கள் அதிகரிப்பதற்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்று சொல்லும் காவல்துறை அதிகாரி, நிறவெறி கொண்டவர் என்று சொல்ல முடியாது. ஆனால் அவரின் இந்த எண்ணம் அவரை அந்த இடத்திற்கு கொண்டு செல்லவே வாய்ப்பு அதிகம் உள்ளது.

‘இப்போதுதானே எல்லாம் நடந்தது போல் உள்ளது, பின் எப்படி காலம் அவ்வளவு தூரத்திற்கு பின்னால் சென்றது’ என்று மத்திய வயதுடைய ஒருவர் தன் நினைவுகளினூடே அங்கலாய்த்தபடி அலைகிறார். ஜானின் கொலை நடந்து சில நாட்கள் கழித்து அது பற்றிய விசாரணை வளையத்தில் வரும் சில பதின் பருவத்தினர் ‘அது எப்போதோ நடந்தது அல்லவா’ என்று அந்த நிகழ்வை பற்றி அசட்டையாக குறிப்பிடுகின்றனர். ஒருவர் கை தவறிவிட்ட காலத்தை மீண்டும் சிறைப்படுத்த நினைக்கிறார், மற்றொருவர் அதை விசிறி எறிகிறார். காலத்தின் பெறுமானம் நம் வயதிற்கேற்ப மாறுகிறது, ஆரம்பத்தில் அதன் இருப்பையே உணராமல் இருக்கும் நாம் பின்னர் அதன் பின் ஓட வியர்த்தமாக ஓட ஆரம்பிக்கிறோம். இந்த பதின்பருவ குழுவிலும் ஒரு ஜானும் அவன் அண்ணனும், தோழர்களும் இருக்கக்கூடும், ஓரிரு பத்தாண்டுகள் கழித்து இதே கதை மீண்டும் நிகழக்கூடும்.ஆனால் காலம் அப்போதும் தன்னுடைய வழமையான தாள கதியில் முன் சென்று கொண்டிருக்கும், அதன் பயணத்தில் விட்டுச் செல்லும் சக யாத்திரீகர்களின் முகங்களும், பெயர்களும் மட்டுமே மாறுகின்றன, உணர்வுகள் அல்ல.

ஒளிப்பட உதவி – Reader. Writer. Nerd.