அஜய். ஆர்

இரவுக்கு ஆயிரத்தொரு கண்கள் – 1

– ஆர். அஜய்-

lyons1

“... They embraced each other and she took him and lay back, undoing her drawers. The tool that his father had bequeathed him moved and he called out: ‘Help me, Shaikh Zacharias, father of veins’. He put his hands on her hips and, setting the vein of sweetness to the Gate of the Cleft, he pushed it until it reached the Lattice Gate and passed through the gate of Victories. After that, he entered the Monday market, the Tuesday market, the Wednesday market and the Thursday market. He found that the carpet filled the room and he moved the tuber round against its covering until the two met“.

லிட்டிரரி ரெவ்யு‘ பல ஆண்டுகளாக அளித்து வரும் ‘மோசமான கலவி எழுத்து’ (‘Bad sex in fiction’) விருதுக்கு போட்டியிடும் தகுதி கொண்ட இந்தப் பத்தி – இந்த விருதுக்கான இறுதிப் பட்டியல் வரை தேர்வு செய்யப்பட்டுள்ள பிலிப் ராத், முரகாமி போன்ற- நம் சமகால இலக்கிய ஜாம்பவான்களால் எழுதப்படவில்லை. குழந்தைகள் படிக்கும்படியாக, பல அம்சங்களை நீக்கி எளிமையான முறையில் பலரால் பல பதிப்புக்களில் -சில புதிய சேர்க்கைகளோடு- மொழிபெயர்க்கப்பட்டு, மாயாஜால, சாகச கதைகளின் தொகுப்பாக மட்டுமே அறியப்படும் ‘ஆயிரத்தொரு அரேபிய இரவுகளின் கதைகளி’ல் (The Arabian Nights Tales of 1001 nights) உள்ள ஒரு கதையின் பகுதி இது என்பது வியப்பளிக்கக்கூடும்.

அரேபிய இரவுகளின் கதைகள் மட்டுமல்ல, க்ரீம் சகோதரர்களின் (Grimm Brothers) தேவதைக் கதைகள் முதற்கொண்டு மற்ற புகழ் பெற்ற நட்டார் கதைகளும் இத்தகைய சுத்திகரிப்புக்கு உள்ளாகியுள்ளன. உதாரணமாக அரேபிய இரவுகளின் மிகவும் புகழ்பெற்ற கதைகளில் ஒன்றான ‘அலிபாபாவின்’ கதை தொகுதியின் பிறசேர்க்கை என்பதும் நூல்களிலும்/ திரைப்படங்களிலும் அலிபாபாவின் காதலியாக வரும் மற்யானா (Marjana/ Morgiana), உண்மையில் அவன் அடிமை என்பதும், அவளே கொள்ளையர்களை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதும், இறுதியில் அலிபாபா அவளை தன் மகனுக்கு மணம் முடித்து வைப்பதும் பரவலாக அறியப்படாத ஒன்றாக இருக்கும்.

வழமையான ஆண்- பெண் உறவு மட்டுமில்லாமல், தற்பால் விழைவு, ரத்த உறவுகளுக்குள் ஏற்படும் விபரீத சம்பந்தம் என பாலியல் விழைவுகளின் பல சாத்தியங்களை தன்னுள் கொண்டுள்ள ‘அரேபிய இரவுக்’ கதைகளை ‘பாலியல்’ என்ற கோணத்தில் தொகுத்து நோக்குவது சுவாரஸ்யமான சில புரிதல்களை தரக்கூடும். ‘ரோஜா போன்ற கன்னங்கள்’, ‘பதினான்கு முழு நிலவுகளை ஒன்று சேர்ந்தது போன்ற ஒளிமிக்க அழகிய முகம்’, ‘உறுதியான உடற்கட்டு’, இந்த வர்ணனைகள் பெண்ணை விவரிப்பவை அல்ல, ஆண்களை. ‘அரேபிய இரவுக் கதைகளில் பெண்களுக்கு நிகராக ஆண்களின் அழகும் மிக விரிவாக வர்ணிக்கப்படுவது முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

இத்தகைய வெளிப்படையான விவரிப்புக்கள் ஒரு புறம் இருக்க, கதைகளில் வரும் ஆண் பாத்திரங்கள் தற்பால் விழைவுள்ளவர்களாக இருப்பின் அவர்கள் தீயவர்களாக வார்க்கப்பட்டிருப்பதின் பின்னால் உள்ள உளவியல் சிக்கல் யோசிக்கப்பட வேண்டியது. தன்னை குறித்து எந்த நேரடி பொருளையும் தராத விவரிப்பில் வெளிப்படையாக இருக்கும் கதைசொல்லி(கள்), தங்கள் விழைவு குறித்து குற்றவுணர்வை தீய தற்பால் பாத்திரங்களின் மூலம் கடந்து செல்கிறார்களா? தற்பால் விழைவுள்ள பெண்களும் இவ்வாறே படைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பட்டி விக்கிரமாதித்தியன் கதைகளில் வரும் ஒரு தொடர் அம்சம், பெண்களின் சலன புத்தி மற்றும் அதனால் அவர்கள் எளிதில் சோரம் போவது குறித்த குற்றச்சாட்டுக்கள். நீராடச் செல்லும் முனிவர் ஒருவர் தன் ஜடாமுடியில் இருந்து ஒரு பெண்ணை விடுவித்து செல்ல, அவளோ தன் ஆடையின் முடிச்சில் இருந்து தன் சோர நாயகனை விடுவித்து அவனுடன் களித்திருப்பதாக வரும் பட்டி- விக்கிரமாத்தியன் கதை நிகழ்வை வேறு வேறு வடிவங்களில் பிற நாட்டார் கதை தொகுதிகளிலும் காணலாம். (‘கதா சரித சாகரம்’ போன்ற சம்ஸ்கிருத இலக்கியங்களுக்கும் அரேபிய இரவுகளுக்கும் உள்ள சில ஒற்றுமைகள், கொடுக்கல்/ வாங்கல்கள், இரண்டும் அவற்றுக்கும் முந்தைய வேறு பல மூல ஆக்கங்களில் இருந்து பெற்றுக் கொண்டவை பற்றியும், பஞ்சதந்திர கதைகளுக்கும், மிருகங்களை பற்றிய அரேபிய இரவுகளில் உள்ள கதைகளுக்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்தும் இலக்கிய ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள், இவை வேறொரு கட்டுரையில் பார்க்கப்படவேண்டியவை). அரேபிய இரவு கதைகளிலும் பெண்கள் இரண்டாம் தரத்தில்தான் வைக்கப்படுகிறார்கள். பேரழகியை கண்டதும் அண்டமே பொசுங்கிப் போகும் அளவிற்கும் பெருமூச்சு விடும், அவளைப் பிரிந்தால் உடல் நலம் குன்றி துயரத்தில் உழலும் ஆண்கள் இருந்தாலும், ‘ஆடமின் விலா எலும்பில் இருந்து வந்தவர்கள்’ என்று வசையாக பயன்படுத்தப்படும் சொற்றொடரின் மூலம் பல இடங்களில் இகழ்ச்சியாக பெண்கள் சுட்டப்படுகிறார்கள்.

பாலியல் விழைவுகள் இட்டுச் செல்லும் முடிவுகளிலும் ஆண்- பெண் வேறுபாடுகள் உள்ளன. மாற்றந்தாய் மூலம் பிறந்த பெண்ணுடன் (step-sister) உறவு கொண்டு குழந்தை பெற்று கொள்ளும் சகோதரன், தன் மகனின் காதலி/ மனைவிக்கு உணவில் மயக்க மருந்து கலந்து அவளுடன் கலவி கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளும் தந்தை பெரிய தண்டனைக்கு உள்ளவதில்லை. சகோதரனாவது பழிக்கு அஞ்சி சகோதரியை இன்னொருவனுக்கு மணம் முடிக்கிறான், அரசனான தந்தையோ தன் இச்சை தீர்ந்தவுடன் அவளை மறந்து விடுகிறான். அதே நேரம், கணவனின் மற்றொரு மனைவி மூலம் பிறந்த மகனிடம் (step-son) இச்சை கொள்ளும் பெண்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.

பெண்கள் சுதந்திரமாக தங்கள் விழைவுகளை அனுபவிக்கும் நிகழ்வுகளும் இந்தக் கதைகளில் உள்ளன. தன் ஏழு சகோதரர்கள் குறித்து நாவிதன் சொல்லும் கதைகளில் இரண்டாவது சகோதரன் சந்திக்கும் பெண்ணும் அவள் சேடிகளும் அவனை மயக்கம் வரும் அளவிற்கு அடிக்கிறார்கள், மீசையையும், தாடியையும் பிடுங்குகிறார்கள், புருவத்திற்கு சாயம் அடிக்கிறார்கள். இவற்றை பொறுமையாக சகித்துக் கொண்டிருந்தால், அதன் பின் அப்பெண் குடி மிகுதியில் உடைகளைக் களைந்து விட்டு நிர்வாணமாக ஒவ்வொரு அறையாக அவனிடமிருந்து தப்பிப்பது போல் ஓட, இவனும் உடைகளை களைந்து அவளை துரத்தியபடி ஓடி அவன் குறி விறைப்படைந்த பின்னரே அவனை தன்னுடன் இணைய விடுவாள் என்று சொல்லப்படுகிறது. ஐம்பது விதமான விசித்திர பாலியல் விழைவுகளுக்கு (fetish) முன்னோடியாக இப்பெண் இருக்கக்கூடும்.

‘கூலி சுமப்பவன் மற்றும் மூன்று பெண்கள்’ கதையில் அவர்கள் அவனுடன் உடல் பற்றிய உணர்வின்றி, தங்கள் நிர்வாணத்தை குறித்து சுவாதீனமாக இருப்பதும், அவனுடன் குடித்து மகிழ்ந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது. பார்த்தவுடன் காதல் வயப்படும் கன்னிப் பெண்களும் மீறல்களை ஓரளவு வரை அனுமதித்து, கலவி அல்லாத மற்ற களியாட்டங்களில் காதலனுடன் ஈடுபடுகிறார்கள். ‘..played with him..‘, ‘..played with each other..‘ என்றே இத்தகைய களியாட்டங்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தன் கணவன் வேறொரு பெண்ணுடன் உறவு கொள்வதை பார்த்துவிடும் பெண், அதற்கு பழி வாங்கும் விதமாக நகரத்திலேயே மிகவும் அழுக்கான மனிதனை தேர்ந்தெடுத்து அவனுடன் உறவு கொள்கிறாள். பின் கணவன் மன்னிப்பு கேட்டதும் அதை ஏற்றுக் கொள்பவள், தன் கணவன் மீண்டும் தவறு செய்தால் அவனை அழைப்பதாக அந்த அழுக்கான ஆசாமியிடம் கூறுகிறாள்.

இவற்றை பெண்ணியப் பிரதிகளாக பார்க்கத் தேவையில்லை, அடுக்குமுறை கொண்ட ஒரு -அரசர்கள்/ பிரபுக்களால் கவரப்பட்டு அல்லது அடிமைகளாக வாங்கப்பட்டு அந்தப்புரத்தில் உள்ள பலப் பெண்களில் ஒருவராக வாழ்வை கழிக்க வேண்டிய- சூழலின் ஆழத்தில் பதுங்கி இருக்கும் சுதந்திரத்திற்கான விழைவாக அணுகலாம்.

சிறு குற்றங்களுக்கும் கசையடிகள், கை, கால் வெட்டப்படுதல் போன்ற கடும் தண்டனைகள் கொண்ட சட்ட திட்டங்களின் – இத்தகைய பல நிகழ்வுகளை இக்கதைகளில் காண முடிகிறது – காலத்திய பாக்தாத்திலோ, கெய்ரோவிலோ இரவு நேரம். ஜன சந்தடி மிகுந்த வணிக/ குடியிருப்பு வீதிகள். எங்கும் காவலர்களின் கண்காணிப்பு, தண்டனை குறித்த பயம். பொதுவெளியில் மாதிரி குடிமகன்களாக தங்கள் வேலையை மட்டும் கவனித்தபடி அவசரமாக சென்று கொண்டிருப்பவர்கள். குற்றங்கள் எதுவும் நடக்காதது போல் வெளித்தோற்றம் அளிக்கும் சமூகம், எங்கும் ஒழுங்கின் அரசாங்கம். அதே நகரங்களில் அதே இரவு நேரத்தில், தாழிடப்பட்ட, எண்ணெய் விளக்குகளால் மஞ்சள் நிற ஒளிரூட்டப்பட்ட, வாசனை திரவியங்களின் மணத்தால் நிரம்பிய வீடுகளுக்குள்ளும், வணிக நிறுவனங்களின் உள்ளறைகளிலும் அரங்கேற்றப்படும் அனைத்து விதமான மனித ஆசைகளின் ஆடல்கள். இரவுக்கு ஆயிரம் கண்கள் இருப்பின், இச்சைகளின் கூர்மையான ஒளியால் நிரம்பித் ததும்பும் இக்கதைகளின் 1001*1000 கண்களும் அவற்றைக் கொண்டு இரவின் இருளை துளைத்து ஊடுருவிச் செல்கின்றன. அவற்றில் சில நம்முடைய கண்களே, அவை பருகும் இருளும் நம் ஆழ்மன விழைவுகளே.

burton

பின்குறிப்பு:

மால்கம் லாயன்ஸ் (Malcom Lyons), அர்சுலா லாயன்ஸ் (Ursula Lyons) தம்பதியர் இணைந்து மொழிபெயர்த்து, பெங்குயின் பதிப்பாக வந்துள்ள மூன்று தொகுதிகள் கொண்ட நூல்களில் (The Arabian Nights Tales of 1001 Nights Volumes 1, 2 & 3) இருந்து மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. ரிச்சர்ட் பர்டனின் மொழிபெயர்ப்புக்குப் பின் செய்யப்பட்ட முழு மொழிபெயர்ப்பு என்று அறியப்படும் இவை முன்னதோடு ஒப்பிடுகையில் இன்றைய ஆங்கிலத்திற்கு அணுக்கமாக உள்ள நடையை உடையவை (பர்டனின் மொழிபெயர்ப்பில் அலிபாபாவின் மருமகன் மற்யானாவை மணந்து கொள்வது என்பது போன்ற பல பாடபேதங்கள் இரண்டிற்கும் இடையே உள்ளன). மொழிபெயர்ப்பில் ஆர்வமுள்ளவர்களுக்கு இரண்டுமே படிக்கப்பட வேண்டியவை.

மிட்டு மியா

காலத்துகள்

நான் ஆறாவது படிக்கும்போது எங்களுக்கு தெரிந்தவரொருவர் அவர் வீட்டு நாய் ஈன்ற குட்டிகளில் ஒன்றை எங்களுக்கு கொடுத்தார். டாமி, ஜிம்மிகளுக்கு மத்தியில் வித்தியாசமாக, என் அம்மா குழந்தையாக இருக்கும்போது அவர்கள் வீட்டில் வளர்த்த ‘ஐவன்’ என்ற அல்சேஷனின் பெயரே இதற்கும் சூட்டப்பட்டதும், அந்தப் பெயரை கேட்பவர்கள் ஒரு கணம் துணுக்குறுவதும்,  எனக்கு பெருமிதத்தை அளித்தது.

பெயருக்கு  ஏற்றாற்போல்  ஆஜானுபாகுவாக,  சிங்கம் போல் பிடரியுடன் கம்பீரமாக இருந்ததாக  அம்மா குறிப்பிட்ட ஐவன் போல் இதுவும் இருப்பதாக கற்பனை செய்து கொண்டாலும், அது என்னவோ சராசரி நாய் போல்தான் வளர்ந்தது. வீட்டிற்கு அருகில் சின்ன சலனம் இருந்தாலும்  குறைப்பது ஆரம்பத்தில் பாதுகாப்பு உணர்வைத் தந்தாலும் என் வீட்டிற்கு பலமுறை வருபவர்கள், அடுத்த போர்ஷனுக்கு வரும் விருந்தாளிகள் என யாரை, எத்தனை முறை பார்த்த பின்பும்  குரைத்துத் தள்ளுவது அதன் மனநிலை குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

வீட்டின் பின்புறத்தில் இருந்த எங்கள் போர்ஷன்களுக்கு வர இருள் நிறைந்த சந்துதான் வழி. எங்களுக்கு நேர் பின்வரிசையில் சிதிலமடைந்த கல்யாண மண்டபம், யாரும் குடியிருக்காத பேய் நடமாட்ட புரளிகள் உலவும்  பங்களா பாணி வீடு, காலி மனை. எனவே இப்படி ஒரு காவல் தேவைதான் என பக்கத்து குடித்தனக்காரர்கள் நினைத்திருக்கக்கூடும். ஐவனின் குரைப்பு குறித்து   பிரச்சனை எழவில்லை, அதுவும் இஷ்டம் போல் குரைத்துத் தீர்த்தது. அதன் சத்தம் முன்  சந்தையும் தாண்டி தெருவரை கேட்பதால், ‘அந்த கத்து கத்துனு கத்தற நாய் வீடு இருக்கற தெரு’ என்பது பெரிய மணியக்காரத் தெருவிற்கு அடையாளமாகிவிட்டது.

ஒரு நாள் சனிக்கிழமை மதியம் மூன்று மணி அளவில் நூலகம் செல்லக் கிளம்பியவன் தூங்கிக் கொண்டிருந்த ஐவனுக்கு  மூக்கில் முத்தமிட முயன்றேன். பயமோ, தூக்கம் கலைந்த கோபமோ, உறுமியபடி என் மீது பாய்ந்தது. சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் எழ, ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு வெளியே சென்றவனை அடுத்த போர்ஷன் சுந்தரி அக்காதான் முகத்தில் ரத்தம் என்று தடுத்து நிறுத்தினார். ஐவனின் நகமோ பல்லோ பட்டு கண்ணிற்கு  மிக அருகில் கன்ன எலும்பில் காயம். எதனால் என்று சரியாக தெரியாவிட்டாலும் ஊசி போட்டுக் கொள்வது நல்லது என்றார் டாக்டர்.

தொப்புளைச் சுற்றி  பத்து பன்னிரண்டு ஊசி போடப்படுமே என்ற பீதியில் இருந்தவனுக்கு, நாய்க்கடிக்கு புதிதாக சந்தைக்கு வந்திருந்த, ஒரு முறை மட்டுமே போட வேண்டிய முன்னூற்றி ஐம்பது ருபாய் தடுப்பூசி கொஞ்சம் நிம்மதி அளித்தாலும் வேறொரு  சந்தேகம் உண்டானது. சமீபத்தில்தான் ‘கெனி பிக்’ என்ற வார்த்தையின் அர்த்தத்தை அறிந்து கொண்டிருந்தேன்.  இரண்டொரு நாட்களில்  கன்னவெலும்பு கருநீல நிறமாகி , கொருக்குத் தட்டியிருந்தது.  இரண்டு வாரங்கள்  கழித்து அது உதிர்ந்து தோல் இயல்பான நிறத்திற்கு மாறும் வரை எங்கு சென்றாலும் எல்லோரும் என்னையே பார்ப்பது போன்ற உணர்வு.

வீட்டில் ஐவனைக் கொடுத்து விடும் முடிவுக்கு  வந்து விட்டார்கள். அது தெரியாமல் செய்து விட்டது என்று நான் சொன்னதை யாரும் கேட்பதாயில்லை, கண் தப்பித்தது என் அதிர்ஷ்டம்தான் என்றும் அடுத்த முறை அது மீண்டும் கை கொடுக்காமல் போனால் என்ன ஆகும் என்றும் கேட்டார்கள். அழைத்துச் செல்பவர் வந்த அன்று ஓலமிட்டபடி இருந்த ஐவனை அவர் இழுத்துச் செல்வதை தெருமுனை வரை அழுதபடி சென்று பார்த்தேன். அன்று ஐவன் செய்த ரகளையைப் பற்றி பெரிய மணியக்காரத் தெரு சில நாட்கள் நெகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருந்தது.  வீட்டிற்கு வந்தால் என் அப்பாவின் கண்ணும் கலங்கி இருந்ததுதான் ஆச்சரியம். அம்மா அழுவது எனக்கு புதிதல்ல, அதற்கான சூழ்நிலை அடிக்கடி என் வீட்டில் உருவாகும். என் வயது பையன்கள் அழுதும் பார்த்திருக்கிறேன். ஆனால் பெரியவர்களில் ஆண்கள்கூட அழுவார்கள் என்று அன்றுதான் தெரிந்தது.

அதன்பின் திருமணம் முடிந்து மகனும் பிறந்து பின், எந்த யோசனையோ, காரணமோ இன்றி   கிளி ஒன்றை வாங்குவது வரை  வளர்ப்பு  பிராணிகள் பற்றிய எண்ணம் தோன்றியதில்லை. என் பால்யத்தில் நடந்த, எப்போதோ மறந்திருக்க வேண்டிய மிக எளிய, ஆனால் மனதின்  ஆழத்தில் இருந்து அவ்வப்போது மேலெழுந்து வரும் நிகழ்வு ஒன்றுதான் கிளிக்கும் எனக்குமான ஒரே நேரடி சம்பந்தம்.

எங்களை ஆரியர்கள்  என்று  சொல்ல முடியாது, எங்கோ எப்போதோ என் குடும்பத்தின் குடிமரபில் எங்கும் நேர்வது போல் இயல்பான கலப்பு ஏற்பட்டிருக்கும் என்பதற்கு என் மூக்கையும் ஒரு  சான்றாக  நான் முன்வைப்பதுண்டு.  தாயைப் போல் தீர்க்கமான  நாசி இல்லாமல் என் மகனும்    ‘சப்ப மூக்கு சப்பான் பொம்மையாகிப்’ போனது குறித்து இரு குடும்பத்திலும் கொஞ்சம் வருத்தம்.      லவ் பர்ட்ஸ், பஞ்சவர்ணக் கிளி எனப் பலவகைப் பறவைகளை விற்றுக்கொண்டிருந்தவனிடம் அவற்றை எல்லாம் விட்டுவிட்டு நான் கிளி வாங்க இவைகூட  தூண்டுதலாக இருந்திருக்கக்கூடும்.  இத்தனைக்கும் லவ் பர்ட்ஸ் பார்ப்பதற்கு  அத்தனை  அழகு, குரலும் இனிமை.  ஒரு கிளியின் விலைக்கு இரு லவ் பர்ட்ஸ் வேறு.

வீட்டிற்கு வந்தவுடன், கிளியை கொஞ்ச நேரம் ரசித்து விட்டு கூண்டை எங்கு மாட்டுவது, என்ன உணவு, யார் கொடுப்பது போன்ற, நான் அதுவரை யோசித்திராத நடைமுறை விஷயங்கள் குறித்து என் மனைவி முடிவுகள் எடுக்க ஆரம்பித்தாள். நானே உணவளிக்கும் பொறுப்பையும், கூண்டைச் சுத்தம் செய்யும் பொறுப்பையும் எடுத்துக்கொள்வதாக சொன்னேன். பள்ளி முடிந்து வந்த  மகனுக்கும் கிளியைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷம். ‘அம்மா மூக்கு மாதிரி இருக்குலப்பா’ என்று அவன் சொல்ல என் மனைவிக்கு கோபமாக வெளிப்படும் சந்தோஷம். ‘இதுக்கு என்ன பேருப்பா’ என்று கேட்டவுடன் தான் அதை பற்றிய நினைவு வந்தது. என் பாட்டி, சிறுவயதில் தன் வீட்டில் கிளி வளர்த்தார்கள் என்றும் அதன் பெயர் ‘மிட்டு’ என்றும் சொன்னார்.

நான் குழந்தையாக இருக்கும்போது என் பாட்டி தன் பால்ய கால அனுபவங்கள் பலவற்றை சொல்லி இருக்கிறார். பத்து பன்னிரண்டு வயது வாக்கில்  அவர்  மிகப் பெரிய கதைசொல்லி என்பது புரிந்தது. ஆனால் அதற்குப் பின் இத்தனை வருடங்கள் கழித்தும், அவர் சொல்வதில் எது உண்மை, பொய் என்பது எனக்கு பிடிபடுவதே இல்லை என்பதால் அவர் சொல்வதெல்லாம் பொய் என்ற இடத்திலிருந்தே ஆரம்பிப்பது என் வழக்கம்.  கிளி விஷயம் எப்படியோ,  இப்போது  பெயர்தான் முக்கியம் என்பதாலும், அவர் சொன்ன பெயர் எல்லோருக்கும் பிடித்துப் போனதாலும் அதை பற்றி நான் கவலைப்படவில்லை. ‘மிட்டு’வை  இன்னும் வாஞ்சையாக ‘மிட்டு மியா’ என்று    அழைக்கலாம், வட மாநிலங்களில் இந்த உருது பின்னொட்டு சேர்க்கும் வழக்கம் உண்டு என்ற கூடுதல் தகவலையும் பாட்டி அளித்தார்.  வட இந்தியாவில் பல ஆண்டுகள் வசித்தவர்தான் என்றாலும் வழக்கம் போல் இது குறித்தும் சந்தேகம் எழத்தான் செய்தது.

எழுந்தவுடன் ‘குட்மார்னிங்’, படுக்கும் முன் ‘குட்நைட்’ என மிட்டுவுடன் ஒட்டிக்கொண்டுவிட்ட என் மகன் பெரிதாக முடியாவிட்டாலும் கூண்டைச் சுத்தப்படுத்துவதில் எனக்கு உதவினான். கூண்டின் சிறு கதவைத் திறந்து உள்ளே ‘துவரம் பருப்பு’, தண்ணீர் கிண்ணங்களை வைப்பது அவனுக்கு ஒரு சாகசம். மிட்டு உண்டு முடித்து மூக்கை கூண்டின் கம்பிகளில் தேய்க்கும்போது, ஒற்றைக் காலை மட்டும்  கொண்டு கம்பியை பற்றிக் கொண்டு நிற்கும்போது கிளர்ந்து சத்தம் போடுவான்.

அனைவருக்கும் மிட்டுவை பிடித்துப் போனாலும், அது என்னவோ விலகியே இருந்தது. முதலில் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் வருத்தம் என்று நினைத்தாலும் அப்படியல்ல  என்று விரைவில்  புரிந்தது, அது உண்பதில் எல்லாம் எந்த சுணக்கமும் இல்லை. மிட்டுவிடம் எப்போதும் ஒரு அலட்சிய தோரணை, உள்ளே வைக்கப்படும் உணவையும் திறை  ஏற்றுக்கொள்ளும் அரசனின் பாவனையுடன்தான் உண்ணும். என் அறையின் ஜன்னலோரத்தில் பறவைகளுக்கு வைக்கப்படும் தானியங்களை உண்ண அவை வரும்போதுகூட எந்த உணர்ச்சியையும் காட்டாது. இரவு நேரத்தில்  என் மகன் தன் பாடங்களை அதற்கு படித்துக் காட்டும்போது மட்டும், கூண்டின் அருகில் வந்து  ஒரு கண்ணை மூடியபடி கவனிப்பது போல் நின்றிருக்கும்.

ஒரு மாதம் கழிந்து கிளி எப்போது பேசும் என்ற கேள்வியை மகன் எழுப்பினான். அதற்கு தொடர்ந்து சொல்லிக் கொடுக்க வேண்டுமென்றும், மிளகாயை அதன் நாவில் தேய்த்தால் விரைவில் பேசும் என்றும், தாங்கள் வளர்த்த கிளி அவ்வாறுதான் பேசியது என்றும் என் பாட்டி கூறினார். பயல் அதைச் செய்ய வேண்டும் என்றான், அவனுக்கு பத்து வயதாக இன்னும் சில ஆண்டுகள் உள்ளன. யார், எப்படி  மிளகாயை  அதற்கு தருவது? பாட்டி நடுங்கும் கையுடன் அப்படியே மிளகாயை நீட்ட அன்று மிட்டு என்ன மனநிலையில் இருந்ததோ பாட்டி கொஞ்சம் அசந்திருந்தால் விரலைப் பிடுங்கி விட்டிருக்கும்.’கோணக்கேடு பிடிச்சது, வயத்தாலி  சனியன்’ என்று  திட்டித் தீர்த்த பாட்டி அரைத்து விழுதாகக் கொடுக்கலாம் என்று அடுத்த யோசனையை  சொன்னார்.  மிளகாய் சாப்பிட்டு ஒத்துக்கொள்ளாமல் கழிய ஆரம்பித்து இறந்து விடப்போகிறது, என்று என் மனைவி கூற அந்த யோசனையை கைவிட்டோம்.

ஆங்கிலமா, தமிழா என்று யோசித்து, பேச்சு வழக்கில் இருப்பது போல் இரண்டிலும்  கற்றுத்  தருவது, பின் மிட்டுவின் சமர்த்து என்று முடிவு செய்து, ‘குட்மார்னிங்’, ‘வணக்கம்’, ‘வெல்கம்’ என்று கலந்து கட்டிச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன்.  நானொருவன் அங்கு கத்திக் கொண்டிருப்பதை கவனிக்காமல், நான் அங்கில்லாதது போலவே மிட்டு நடந்து கொண்டது.  இரவு நேரங்களில் அதற்கு தானறிந்த சில மாயாஜாலக்  கதைகளை என் மகன் சொன்னதில்  மந்திரவாதியின் உயிர் கிளியில் இருந்து குருவிக்கு குடிபெயர்ந்து, குருவி செத்தது. மிட்டு எப்போதும் போல் தலை சாய்த்து அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்ததே ஒழிய பேச மட்டும் செய்யவில்லை.

என் பாட்டி வேறு, தங்கள் ஊரில் கிளிகள் இந்த நேரத்தில் பேசக் கற்றுக் கொண்டிருக்கும் என்றும், ஒன்று இங்குள்ள கிளிகள் சாமர்த்தியசாலிகள் அல்ல, அல்லது சொல்லிக் கொடுப்பவர்கள்  திறமையானவர்கள் இல்லை என்று பொருள்படுமாறு சொல்ல ஆரம்பித்தார். பாட்டியின் சொல்வன்மையை நான் நேரடியாக உணர்ந்தவன். மகனுக்கு என் திறமை மீது சந்தேகம் வந்து விடப் போகிறது என்று கிளியைப் பேச வைத்தல் பற்றி இணையத்தில் தேடி படித்து அவற்றில் சொல்லி இருந்தது போல் சில முயற்சிகள் செய்தேன்.  மகன் பேச ஆரம்பித்த காலகட்டத்தில் அவனுக்குக்கூட நான் இத்தனை சிரத்தையாக வார்த்தைகள் சொல்லிக் கொடுக்க்கவில்லை என்பது என் மனைவியின் அவதானிப்பு. எதுவும் பலன் அளிக்கவில்லை, மிட்டு கல்லுளிமங்கனாகத்தான் இருந்தது.

அடுத்த முயற்சியாக அறையில் யாரும் இல்லாபோது நான் அதற்கு வசைச் சொற்களையும், ஆபாச வார்த்தைகளையும் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்க அதை கவனித்த என் மனைவி கடுப்பாகி விட்டாள். நல்லவற்றைவிட தீயவைதான் எளிதில் பதியும் என்பதால் அப்படி செய்தேன் என்று நான் சொன்னதற்கெல்லாம் அவள் சமாதானம் ஆகவில்லை.  நான் சொல்வதை  மகனும் கேட்டு அப்படியே பேச ஆரம்பித்துவிட வாய்ப்பிருக்கிறது என்று அவள் சொன்னது நியாயம் என்பதால் அந்த முயற்சியை  நிறுத்தினேன்.

மிட்டு மகா கர்வியாக அல்லது படு முட்டாளாக இருக்க வேண்டும். அது அந்த வசை, ஆபாசச் சொற்களில் இருந்துகூட ஒரு வார்த்தையையும்   கற்றுக்கொள்ளவில்லை.  ஏன் மிட்டு  நல்ல, பண்புள்ள கிளியாக இருக்ககூடாதா என்று என் மனைவி சொன்னதை நான் ஏற்கவில்லை, அதற்கும் பண்பிற்கும் எந்த சம்பந்தமும் இருக்க முடியாது என்பது என் வாதம். கிளி மீதுள்ள என் ஆர்வம் குறைய ஆரம்பிக்க, அதை பராமரிக்கும் பொறுப்பு  என் மனைவியிடம் சென்றது.  மகனுக்கு நீதானே பொறுமையாக சொல்லிக் கொடுத்தாய், என்று அதையும் அவள் தலையில்  கட்டி விட்டேன்.  யாருக்கும், எதற்கும் மிட்டு மசிந்து கொடுக்கவில்லை, அதற்கு  சிறிதளவேனும் ஒட்டுதல் இருந்ததாக நாங்கள் நினைத்திருந்த மகனுக்கும்கூட. ஒவ்வொரு இரவும், விடுமுறை நாளிலும் அவன் அதன் முன்  பொறுமையாக ஒரே வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்க்க சகிக்கவில்லை.

இந்த நேரத்தில் மிட்டுவை விடுதலை செய்து விடலாமா  என்று யோசிக்க ஆரம்பித்திருந்தேன். மனைவியிடம் பேசிப் பார்த்தேன், முதலில் ஒப்புக்கொள்ளாதவளை, கிளிக்கு ஆயுசு குறைவு, அது இறந்தால் மகன் மிகவும் வருந்துவான், குழந்தையின் மனதை  பாதிக்கக்கூடும்,  எனவே இப்போதே அதை வெளியே விட்டு விடலாம் என்றெல்லாம் பல காரணங்கள் சொல்லி  என் வழிக்கு வர வைத்தேன். மகனிடம் இந்தப் பேச்சை ஆரம்பித்தபோது அவனும் ஒப்புக்கொள்ளவில்லை. கிளியை கூண்டில் அடைப்பது பாவம் என்று நான் இறுதியாக  சொன்ன காரணத்தில் இருந்த அப்பட்டமான பொய்யை  அவன்  உணர்ந்திருக்கக் கூடும். அதை வெளிப்படையாக சொல்லும் வயதில்லை அவனுக்கு. ஆனால் ‘மிட்டுக்கு  ப்ளை  பண்ண தெரியும்லபா’ என்று மட்டும் கேட்டான்.

அந்த ஞாயிறு அன்று காலையிலேயே மாடிக்குச் சென்றேன். கலங்கிய கண்களுடன் இருந்த மனைவி, வர மாட்டேன் என்று சொல்லி விட்டாள், மிளகாய் கொடுக்க முயன்ற சம்பவத்திற்கு பின் மிட்டு மேல் கோபமாக இருந்த பாட்டிகூட கொஞ்சம் கனிந்திருந்தார். முகத்தில் சுரத்தே இல்லையென்றாலும் மகன் மட்டும் வந்தான். இறுதி நேர ஊசலாட்டத்தைக் கட்டுப்படுத்தி கூண்டை திறந்தேன். முதலில் புரியாமல் வழக்கம் போல்  உள்ளேயே அமர்ந்திருந்த மிட்டு பின் வெளியே வந்து சில அடிகள் எடுத்து வைத்து  திரும்பிப் பார்க்காமல் பறந்தது.  அது கண்ணில் இருந்து மறைந்த பின்னும் தொடுவானத்தை பார்த்தபடி இருவரும் நின்று கொண்டிருக்க ‘மிட்டு  வீட்டுக்கு போய் சேந்துடும்லபா’ என்று கேட்டான். எனக்கோ, ஐவன்  வீட்டை விட்டுச் சென்று  சில நாட்கள் கழித்து புதிய இடத்தில் சந்தோஷமாக இருப்பதாக கேள்விப்பட்டபோது ஏற்பட்ட அதே  ஏமாற்ற  உணர்வு.

பாதர் என்ன பண்றார்?

காலத்துகள்

முழிப்பு தட்டியவுடன் தலையணையில் இருந்த கோழை குமட்ட,   புரண்டு திரும்பும்போது தோள் வலித்தது, கையில் வரி வரியாக பாயின் அச்சு.  அப்பா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தார், மணி பார்த்தான்,  ஏழரை. பாயைச் சுருட்டும்போது முனகச் செய்த முதுகுப் பிடிப்பு சரியாக இன்னும் பத்து பதினைந்து நிமிடங்களாகும்.

சமையலறைக்குள் சென்றவனிடம் பல் விளக்கும்படி சைகை செய்தார் அம்மா. வீட்டின் பின்புறச் சுவற்றில் அமர்ந்தபடி நாவில் எஞ்சியிருந்த க்ளோஸ்ஸப் சுவையுடன் டிக்காஷனின் கசப்பு கலப்பதை அப்போதே கூச ஆரம்பித்திருந்த கோடை வெய்யிலில் ருசித்துக் கொண்டிருக்கும்போது மெல்லிய  குரலெழுப்பியபடி அருகில் வந்து உரசி நின்றது அலமேலு. கொஞ்சம் காப்பியைச் சுவற்றில் ஊற்ற, அதைக் குடித்துவிட்டு மீசை இழைகளைச் சுத்தம் செய்தபின் வெண்ணிற உடலை வளைத்து சிறிய பிங்க் நிற நாவால் உடலெங்கும் சுத்தம் செய்துவிட்டு நீட்டிப் படுத்து ஒற்றைக் கண்ணால் பார்த்தது. வீட்டில் காலை நேர ரேடியோச் சத்தம், பேச்சுச் சத்தம் எதுவும் இல்லை. வேலைக்கு கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்த அம்மா  பாத்திரம் தேய்ப்பதையும் சாப்பாட்டுப் பொருட்களை எடுத்து வைப்பதையும் வழக்கத்தைவிட மெதுவாக, அதிக ஒலி எழுப்பாமல் செய்து கொண்டிருந்தாள். இவன் அன்றைய தினசரியைப் புரட்டிக் கொண்டிருந்தான்.

எட்டு மணி அளவில் அம்மா கிளம்பும்போது, ‘சாப்பாடு எடுத்து வெச்சுருக்கேன், அப்பாட்ட சொல்லு,’ என்று மெல்லிய குரலில் கூறிவிட்டுச் சென்றாள். இவன் குளித்து முடித்தபோது எட்டரை ஆகியிருந்தது. அப்பா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தார், சாப்பிடத் தோன்றவில்லை. பெரியமணியக்காரத் தெருவிலிருந்து பழைய பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் மாவட்ட நூலகத்திற்கு நடந்து செல்ல பதினைந்து நிமிடங்களாவது ஆகும், வெய்யிலை சமாளித்து விடலாம்.

வருகை பதிவேட்டில் முன்னரே  பத்து பதினைந்து பேர் கையொப்பங்கள். நேற்று எடுத்து வந்திருந்த புத்தகங்களை திருப்பியாயிற்று. புத்தக அறையில் இந்த நேரத்தில்  யாரும் இல்லை, பதினொரு மணிக்கு மேல்தான் வர ஆரம்பிப்பார்கள். எந்தப் புத்தகம் எந்த ஷெல்பின் எந்த வரிசையில் இருக்கும் என இந்த ரெண்டு வருடங்களில் கிட்டத்தட்ட மனப்பாடமாகிப் போன அறையில் இந்த முறை எடுத்துச் செல்ல வேண்டிய  புத்தகங்களை தேட அதிக நேரமாகவில்லை. அனைத்து அடுக்குக்களையும் ஒரு சுற்று சுற்றி வந்ததில், நேற்று புத்தகம் எடுத்துச் சென்ற பின் பிற உறுப்பினர்களால் கொண்டு  செல்லப்பட்ட நூல்கள் எவையென்று காண முடிந்தது.

பத்திரிக்கைகள் படிக்கும் இடம் நிறைந்திருந்தது. எந்த இதழும், தினசரியும்  மொத்தமாக படிக்கக் கிடைக்காது, கையில் அகப்படும் தாள்களை வாசிக்க வேண்டியதுதான். படித்துக் கொண்டிருந்த ஒருவர் எழ அவரிடத்தில் அமர்ந்து அவர் விட்டுச் சென்ற ஞானபூமியின் சில தாள்களை படித்தான். அடுத்து அமர்ந்திருந்த இளைஞர் வேலைவாய்ப்பு தாள்களில் இருந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். பின் இவனும்  அவற்றை புரட்டியதில் மருத்துவர், பொறியாளர் வேலைகளைவிட மற்ற, கேள்விப்படாத துறைகளில் இருந்து அழைப்புக்கள் அதிகமாக தென்பட்டன.  வீட்டிற்கு கிளம்பும்போது மணி பன்னிரெண்டு, அப்பா இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருப்பார்.

அப்பா இன்னும் எழுந்திருக்கவில்லை. சாப்பிடப் பிடிக்காமல், எடுத்து வந்திருந்த புத்தகங்களை வாசலில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும்போது ‘எங்கடா போய்ட்ட நேத்து விளையாடலாம்னு சொன்னியே, வந்து பாத்தேன். அப்பா தூங்கிட்டிருந்தாரு, ஒடம்பு சரில்லயா?’ என்று கேட்டுக்கொண்டு முரளி வந்தான்.

‘ஆமாண்டா, மருந்து வாங்கத்தான் போயிருந்தேன்’

‘இப்ப வரியா, கோபால், மணிலாம் பின்னாடிதான் இருக்காங்க’

உள்ளே திரும்பிப் பார்த்தவன் முரளியுடன் சென்றான். இவன் போர்ஷனுக்கு பின்னால் உள்ள காலி மனை கிரிக்கெட் மைதானமாக செயல்படும். அங்கிருந்த தென்னை, பஞ்சு மரங்களின் நிழல் கோடையின் உக்கிரத்தில் இருந்து கொஞ்சமே கொஞ்சம் பாதுகாப்பு தந்தது. ஒரு மணி வாக்கில் சாப்பிடுவதற்காக அனைவரும் வீட்டிற்குச் சென்றார்கள். அப்பா எழுந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ‘சாப்பாடு வெச்சுருக்குன்னு அம்மா சொன்னா’ என்று சொல்லிவிட்டு மீண்டும்  புத்தகம் படிக்கத் துவங்கினான். அப்பா சாப்பிட்டவுடன் மீண்டும் தூங்க ஆரம்பித்தார்.

மெல்ல எழுந்து ரேடியோவை எடுத்துக் கொண்டு பின்புறம் சென்று எலுமிச்சை மரத்தின் அடியில் அமர்ந்தான். ‘ஆப் கி ப்ஹர்மாயிஷ்’ஷில், ‘காதல் பைத்தியக்காரத்தனமானது, போதையூட்டுவது’ என்று கிஷோர் குமார் குரலில் ராஜேஷ் கன்னா உருகிக்கொண்டிருக்கும்போது- நிஜத்தில் நேரில் பார்த்தே இராத பியானோவை, நடிகருக்கு பதிலாக இவன் மெய்மறந்து வாசித்துக் கொண்டிருக்க –  ‘என்னடா இந்த வெய்யில்ல வெளில இருக்க’ என்று குரல் கேட்டது. சுந்தரி அக்கா வந்து விட்டார்.

‘இல்லக்கா உள்ள புழுக்கமா இருக்கு அதான்’

‘எப்போ ஸ்கூல் தொரக்கறாங்க’

‘வர  மண்டேக்கா’

அடுத்த பாடலில் ‘நான் எழுதிய கடிதம் ஆயிரக்கணக்கான வண்ணங்கள் கொண்ட அழகிய காட்சியாக’ மாறிக்கொண்டிருக்கும்போதே அந்த வகுப்பறைக் காட்சி இடைவெட்டி, அனைத்தையும் நிறமிழக்கச் செய்தது. எல்லா வருடமும் அது கண்டிப்பாக  நிகழும் என்று சொல்வதற்கில்லை, போன வருடம்கூட அதற்கு தேவையேற்படவில்லைதான். ஆனால் இழந்த வண்ணங்களை மீட்க முடியவில்லை. ‘நீ அழை, உனக்காக காத்திருக்கிறேன்’ என்று ஹேமந்த் குமார் அதற்கடுத்த பாடலை முடித்துக் கொள்ளும்போதுதான் ஒலிபரப்பில் மீண்டும்      கவனம் செலுத்த முடிந்தது.  இதை இனி மீண்டும் எப்போது ஒலிபரப்பி எப்போது   பாடியபடியே மாடியில் உலவ என்று கவலைப்பட முடியாமல் இந்த புதுப் பிரச்சனை பயமுறுத்தியது.

நான்கு மணி அளவில் அப்பா எழுந்து நாளிதழ் படித்து, பின் மீண்டும் தூங்கி விட்டார். வேலை முடிந்து வந்த அம்மாவின் முகத்தில் அவள் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனதின் ஆயாசம். சமையலறையிலிருந்து சைகை செய்து இவனை அழைத்தவள், ‘எழுந்தாளா, எப்ப எழுந்தா?’ என்று கேட்டாள். ‘ஒண்ணாயிருக்கும், அப்பறம் நாலு மணிக்கு எழுந்தா அப்பறம் திரும்பி தூங்கியாச்சு’. ஒன்றும் சொல்லாமல் தலையாட்டியவள் இரவுணவை தயார் செய்து விட்டு அப்பாவை எழுப்பினாள். பத்து முறைக்கு மேல் கூப்பிட்ட பின் எழுந்தவர் எதுவும் பேசாமல் சாப்பிட்டார். எட்டு மணிக்கெல்லாம் வீட்டில் விளக்கணைத்தாகி விட்டது.  பின்புறம் சென்று காலி மனையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவன், கொசுக்கடி அதிகமாகவும் உள்ளே வந்தான். அம்மாவும் படுத்திருந்தாலும் தூங்கி விட்டாளா என்று தெரியவில்லை. பாயை விரித்து வைத்தவன், சுவற்றில் சாய்ந்தபடி இருளை நோக்கிக் கொண்டிருந்தான்.

அடுத்த நாள் காலையில் ‘ஒடம்பு செரியில்லையா’ என்று கேட்டபடி அப்பாவை எழுப்ப முயன்று கொண்டிருந்தாள் அம்மா. இந்த நேரங்களில் அது அத்தனை எளிதல்ல. பத்து நிமிடத்திற்கு மேல் மன்றாடியப் பின் புரண்டு படுத்த அப்பா, ‘என்ன வேணும், மனுஷன் தூங்கக்கூட கூடாதா’ என்று முகத்தை சுளித்துக் கொண்டே கடித்துப் துப்பினார். ‘அதுல்லமா, ஒடம்பு சரியில்லையானுதான் கேட்டேன்’ என்று சமாதானமான குரலில் சொல்லிவிட்டு அம்மா, ‘ஆபிஸுக்கு  லீவ் லெட்டர் அனுப்பணுமா’ என்று மீண்டும் மெதுவாக கேட்டதும் ‘மனுஷன நிம்மதியா இருக்க வுடாத, எப்பப்பாரு வேல வேல, ஒடம்புக்கு முடியலனா என்ன பண்ண முடியும்’ என்று கத்திவிட்டு மீண்டும் திரும்பி படுத்துக் கொண்டார்.

பின் அம்மா எவ்வளவு சொல்லியும் எதுவும் பேசவில்லை, கண்ணைக்கூட திறக்கவில்லை. அம்மா அழுகையை அடக்கிக் கொள்வதைப் பார்த்தான். காலை உணவை சாப்பிடாமல் ஒன்பது மணிக்கெல்லாம் நூலகம் சென்றவன் மதியம் வரை அங்கேயே இருந்தான். இரவுணவை சாப்பிட மட்டும் எழுப்பியதைத் தவிர அன்று மாலை அம்மா எதுவும் பேசவில்லை. மீண்டும் எட்டு மணிக்கு விளக்கணைப்பு, மீண்டும் இருளின் அமைதியினுள் மூழ்கியபடி இவன். அன்று அத்தனை தூரம் நடந்தும் தூக்கம் எளிதில் வரவில்லை. அம்மாவும் அடிக்கடி புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த நாள், வெள்ளி. நூலகத்திற்கு விடுதலை. இருந்தும் ஒன்பது மணிக்கே  கிளம்பினான். ‘என்னடா நேத்தும் ஆள காணும், அப்பாக்கு இன்னும் முடியலையா?’ என்று கேட்ட முரளிக்கு ‘ஆமாம்டா, இன்னும் நாலஞ்சு நாளாகும் போல’ என்றான்.

‘இப்போ எங்க போற?’,

‘சந்துரு வீட்டுக்குடா,’

‘சண்டேதானே ஊர்லேந்து வர்றதா சொன்னான்?’

‘இல்லயே… சும்மா போய் பாக்கறேன்’.

‘வந்துட்டான்னா வர்றப்ப அவனயும் கூட்டிட்டு வா, ஒங்கப்பாக்கு இன்னும் முடியலல?’

‘வைரல் பீவரா இருக்கலாம்னு டாக்டர் சொல்றார்’

பள்ளி முகப்பில் இருந்த வாட்ச்மேனிடம்  டை வாங்கவேண்டும் என்று சொல்லி உள்ளே நுழைந்தான். மிகக் குறைவான ஆள் நடமாட்டத்துடன் பள்ளி இன்னும் பிரமாண்டமாக, தன்னுள் நிறைந்திருக்கும் மௌனத்தோடு புதிதாக இருக்கிறது.  இலக்கில்லாத சுற்றுதல். பள்ளியில் வளர்க்கப்படும், உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் ‘லவ் பேர்ட்ஸ்களின்’ கீச்சுக்கள், பல வண்ணங்கள். தலைமையாசிரியர் அலுவலக அறையருகே சுவற்றில் பொறிக்கப்பட்டிருந்த, பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த, மாணவர்களின் பட்டியல் மதிப்பெண்களுடன்.  இரண்டு வருடங்களில் இதில் இடம் பெற முதல் வாய்ப்பு வரும்.   கேள்விப்பட்டிருந்த கிசுகிசுக்கள் தந்த  குறுகுறுப்பில்  தலைமையாசிரியர் அறை உள்ள தளத்திற்கு செல்லும்போது யாரோ பேசியபடி இறங்கும் ஒலி கேட்டதால் அவற்றை உறுதிப்படுத்த முடியாமல்  திரும்பி இறங்க வேண்டியிருந்தது.

இத்தனை வருடங்கள் அமர்ந்திருந்த வகுப்பறைகளில்  ஒன்றன்பின் ஒன்றாக சிறிது நேரம் கழித்தான். இரண்டு மாதமாக யாரும் புழங்காமல் இருந்ததால் அறைகளில் கார நெடி, இறுதி வகுப்பு நாளன்று குறிக்கப்பட்ட பட்ஸ்/ ப்ளாசம்ஸ் இன்னும் அழிக்கப்படாமல். பரீட்சைக்கு முன் சுவர்களில் இருந்து சார்ட்கள் அகற்றப்படும்போது கீழே உதிர்ந்த பசை திரிகளில் இன்னும் கோந்தின் கிறுகிறுப்பான வாசம். பல ஆசிரியர்கள், சம்பவங்கள், ஆண்டு விழா பரிசுகள் என ஆற்றுப்படுத்தும் அதே நேரத்தில் பள்ளியாண்டின் முதல் நாளில் உள்ளூர குறுகி நின்ற சில  தருணங்களை நினைவூட்டும் அறைகள். செவன்-எப்பில் இந்த ஒரு வருடமாக   பகற்கனவுகளில் மட்டும் அமர்ந்திருந்த பெஞ்சில் உட்காரும்போது ஏதோ சாதித்த அற்ப திருப்தி.  அங்கேயே கண்ணயர்ந்து படுத்து  எழும்போது கழுத்தில் வலி. வரும்  வருட வகுப்பறைக்குச் சென்றான். பொதுவாக  எப்போதும் நண்பர்களோடு அமரும் இறுதி பெஞ்சிற்கு முந்தைய டெஸ்கில் யாரோ எப்போதோ செதுக்கிய பெயர்.

வீட்டில் நுழையும்போது ‘ரெண்டு மூணு நாளா வெளிலயே சுத்திட்டிருக்கியே ஸ்கூல் தொறக்கற நேரத்துல படுத்துக்கப் போற’ என்று கேட்டார் சுந்தரி அக்கா.

‘சும்மதான்க்கா’

‘சாப்டியா, உங்கம்மா கெளம்பும்போது சொன்னங்க, ரெண்ட் நாளா காத்தால  வெச்சுட்டு போன  சாப்பாடு அப்டியே இருந்துதாமே. இன்னிக்கு இங்க சாப்டு, உருளக்கெழங்கு காரக்கொழம்பு பண்ணிருக்கேன்’

‘இலக்கா வீட்லயே சாப்டறேன்’ என்றவனை வற்புறுத்தி தன் போர்ஷனுக்கு அழைத்துச் சென்றார். தலைகுனிந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பேச்சுவாக்கில், ‘எப்பம் போல படிக்கணும்டா, கவலைப்படாத, எல்லா வீட்லயும் நடக்கறதுதான்’ என்று அக்கா சொன்னார். சோற்றை அளைந்தபடி இருப்பதை பார்த்து ‘நான் வாசல்ல ருக்கேன்’ என்று வெளியே சென்றார்.  சாப்பிட்டுப்பின் வெளியே வர, ‘ஓன் பிரெண்ட்ஸ் பின்னாலதான் இருக்காங்க’ என்றார். ‘நா இங்க கொஞ்ச நேரம்  படுத்துக்கறேன் கா’ என்று சொல்லி அங்கேயே தூங்கி  எழும்போது மணி ஐந்துக்கு மேல் ஆகியிருந்தது.

அம்மா  அன்று மாலை விடாப்பிடியாக அப்பாவை எழுப்பி, உடம்புக்கு என்ன, வேலைக்கு மீண்டும் எப்போது போகப் போகிறார் என்று கேட்டார். கடுகடுப்பாக அப்பா சொல்லும் பதில்களை முன்வைத்து மேலும் கேள்விகள் கேட்டு ஒரு கட்டத்தில் அம்மா அழ ஆரம்பித்தார். இனி எப்படியும் நாளைக்குள் எல்லாம் முடிந்து விடும்.

அடுத்த நாள் சண்டை இன்னும் தீவிரம் அடைந்தது. தனக்கு மரியாதை தரவில்லை, அப்படிப்பட்ட இடத்தில் வேலை பார்க்கப் போவதில்லை என்ற எப்போதும் சொல்லும் காரணத்தை அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். அம்மா செய்திருந்த டிபனை தட்டோடு வீசினார். அறையில் தாளித்த கடுகின் மணம், தேங்காய் பிசிறல்கள். ‘நா வேணா போய் பேசறேன், திருப்பி சேத்துப்பாங்க’ என்று சொன்ன அம்மாவை நோக்கி செருப்பை தூக்கி எறிந்தார். அம்மா சுவற்றோரம் ஒண்டி அமர, டேப் ரெக்கார்டரின் வயரைப் பிடுங்கி கையில் சுற்றிக்கொண்டு அம்மாவின் முகத்தை நோக்கி நீட்டியபடி அப்பா மிரட்டுவதை சுந்தரி அக்கா எட்டிப் பார்த்து விட்டு போனார்.  ஒரு  மணி வாக்கில் சண்டையின் அந்த அலை ஓய்ந்தபின் நாளிதழை அப்பா படிக்க ஆரம்பிக்க, இவனிடம் வந்த அம்மா ‘ராமசாமி ஸார கூட்டிட்டு வா’ என்றார்.

சின்ன மணியக்காரத் தெருவில் இருந்த மாவட்ட கல்வி அலுவலகம்,  ஒரு காலத்தில் பங்களாவாக இருந்திருக்கக்கூடும்.  கூடப்படிப்பவர்கள்  கண்ணில் பட்டுவிடக் கூடாது.  இரண்டு நாட்களில் பள்ளிகள் திறக்க இருப்பதால் ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. கூட்டம் அதிகமாக இருக்கும்போது உள்ளே செல்லாமல், அதிகாரிகள் உபயோகத்திற்கான வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் வழியாகச் சென்று அவர் அறை ஜன்னலின் அருகே நிற்பதுதான் வழக்கம். எதிரே ஒருவர் ஏதோ சொல்லிக்கொண்டிருக்க ‘மாவட்ட கல்வி அலுவலர்’ ராமசாமி, கோப்புக்களை பார்த்துக் கொண்டிருந்தார். உருண்டையான உடலுக்கு பொருத்தமான வட்ட முகத்தில், இரண்டுடனும் ஒத்துப்போகாத தீவிரத்தன்மை, கொஞ்சம் எல்லை மீறினாலும் விழுந்து பிடுங்கி விடுவார் என்பது போல். அம்மாவுடன் வேலை பார்க்கும் அவரைவிட பதினைந்து இருவது வயது மூத்த தோழி எல்.எல்லின் கணவர். பெரியவர்கள் சொன்னால் கணவன் கேட்பான் என்ற நம்பிக்கை இன்னும் அம்மாவிற்கு உள்ளது.

பின்னந்தலை வியர்வையில் நனைந்திருக்க, உதட்டில் விழுந்த வியர்வைத் துளியை நா வருடியது. உள்ளே இருந்தவர் சென்றபின் அடுத்து வந்தவர் இவனை கவனித்து, ராமசாமியிடம் சொல்ல, திரும்பிப் பார்த்து உள்ளே வருமாறு சைகை காட்டினார். உள்ளே சென்று அவர் முன்னே பேசாமல் நின்று ‘என்னடா’ என்று அவர் கேட்ட பின்பும் எதுவும் சொல்லவில்லை. ‘அப்பா திரும்ப வேலக்கு போலயா’ என்று அவர் தலை தூக்காமல் கேட்டபோது அவர் எதிரே அமர்ந்திருந்தவர் திரும்பிப் பார்த்தார். ராமசாமி சொன்னது அறைக்கு வெளியே நின்றிருப்பவர்களுக்கு கேட்டிருக்கக்கூடும். உடலில் வியர்வைச் சுரப்பு இன்னும் அதிகரித்து, அக்குளில் ஈரம் அதிகமாகியபடியே இருந்தது. காதின் பின்புறத்தில் உஷ்ணம். ‘நா வரேன்னு சொல்லு’ என்றார். வெளியே வரும்போது அங்கு நின்றிருந்தவர்களின் பார்வை கூசச்செய்தது.

ஆள் நடமாட்டமில்லாத தெரு வெயிலையும் மீறி கொஞ்சம் அமைதியளித்தது.  தொடை இடுக்குகளில் வியர்வை வழிந்து கால்கள் உரசும்போது உணரும் ஈரப் பிசுபிசுப்பு அசூயையாக இருந்ததால் கால்களைச் சற்று அகட்டி  நடக்க வேண்டியிருந்தது. வீட்டில் கேள்விகள், மன்றாடல், கோபம் என அதே சுழற்சியில் சண்டை. சொன்னபடி கொஞ்ச நேரம் கழித்து ராமசாமி வந்தார். அப்பா முகம் கொடுத்துப் பேசாதது வழக்கம்தான் என்பதால் நாற்காலியில் அமர்ந்தபடி எப்போதும் போல் அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் இன்று அப்பா ‘நீங்க இதுல்லாம் இன்டெர்பியர் ஆகாதீங்க’ என்று சொல்லிவிட்டார். ராமசாமியின்  உடலசைவுகளில் இன்னும் இறுக்கம். ‘இனி என்ன வரச் சொல்லாதம்மா’ என்று அப்பா பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்த அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினார். ‘நீ நல்லா படிக்கறத விட்றாத’ என்று போகும்போது, சொன்னபோது கண்கள் தன்னிச்சையாக விரிந்து இமைத்தன. வீட்டினுள் கவிந்திருந்த அமைதியின் பாரத்தை தாங்க முடியவில்லை. பின்புறம் சென்று அமர்ந்த கொஞ்ச நேரத்தில் வியர்வையோடு  கண்ணீரும் சேர்ந்து கொண்டது. சத்தமிடாமல் அழுவது பழக்கம்தான். உள்ளே இறுதிகட்டச் சண்டை நடந்து கொண்டிருக்கும்.

நான்கு  மணி அளவில் இவனருகே  வந்த அம்மா ‘வந்து காப்பி குடிடா, மத்தியானமே சாப்டல’ என்றார். முகம் காலையில் இருந்ததை விட திடமாக இருந்தது.  உள்ளே அப்பாவும் காபி குடித்துக் கொண்டிருந்தார்.  மாலை உண்ணும்போது அம்மாவும் அப்பாவும் சில வார்த்தைகள் பரிமாறிக்கொண்டார்கள். வேலைக்குச் செல்வதைப் பற்றிய பேச்சு எழவில்லை. அன்றிரவு வீட்டில் டிவியும், ரேடியோவும் ஒலித்தது. அடுத்த நாள் காலை, அன்று சமைக்க வேண்டிய உணவைப் பற்றி பேசிக் கொண்டார்கள். வீடு மெல்ல இயல்பு நிலைக்கு திருப்பப்பட்டுக் கொண்டிருந்தது. ஹிந்தி தொடரில் கிருஷ்ணன் என்ன சொல்கிறான் என அம்மாவிற்கு மொழிபெயர்த்தார் அப்பா. ‘நாளக்கு ரெடியா’ என அப்பா கேட்க, தலையாட்டினான். ‘புக்ஸ்க்கு கவர் போட்டு கொடுத்துடுங்களேன், நீங்கதான் க்ளீனா பண்ணுவீங்க’ என்று அம்மா சொன்னதில் தெரிந்த செயற்கையான உற்சாகம் இவனுக்கு புதிதல்ல.

திங்கள் காலை வழக்கம் போல் எழுந்த அப்பா காய்கறி நறுக்குவது, இவனுக்கு மதிய உணவை எடுத்து வைப்பது போன்ற சின்ன உதவிகளை அம்மாவிற்குச் செய்தார். ‘சாப்டாம இருந்துராதீங்க’ என்று அப்பாவிடம் சொல்லி விட்டு அம்மா கிளம்பியபின்  தினசரியை எடுத்து படிக்க ஆரம்பித்தார். ஒரு வரி விடாமல் படித்து முடிக்க பதினொன்று ஆகிவிடும். இன்றிலிருந்து பள்ளிக்கு ‘பேண்ட்’. தையல் அளவைக் கொடுக்கும்போதும் தைத்த உடையை வாங்கும்போதும் இருந்த மகிழ்ச்சி இப்போது  இல்லை. மூட்டையை தூக்கிக் கொண்டு நடை.

பள்ளி மீண்டும் உயிர்பெற்றிருந்தது. துள்ளும் வெள்ளை, சிவப்பு இரட்டைச் சடைகள், பல விதங்களில் கட்டப்பட்ட டைகள். புதிய சீருடைகளைவிட அதிகமாக   சற்றே சாயம் போன சென்ற வருடத்திய உடைகள். முட்டிவரை நீளும், ஆடுசதை வரை  மூடும், நைந்து, கணுக்காலுக்கு சற்று மேல் வரை மட்டுமே வரும், எனப் பலவித காலுறைகள், அவற்றுக்கு இணையான தரத்தில் ஷூக்கள். தேர்வாகாமல் அதே வகுப்பில் மீண்டும் படிக்க வேண்டியவர்களின் அசௌகர்யம். புதிதாக பள்ளியில் சேர்ந்திருப்பவர்களின் ஆரம்ப கட்ட கூச்சம்.

வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் நண்பர்களின் உற்சாக வரவேற்பு. பசங்களிடம் புதிதாக பேண்ட் போட்ட சந்தோஷம். கோடையை கழித்ததை பற்றிய பரஸ்பர பிரஸ்தாபங்கள். இந்த ஆண்டு பாடமெடுக்கப் போகும் ஆசிரியர்கள் யாரென்று ட்யூஷன் செல்லும் ஓரிரு மாணவர்களை கேட்டான். விடுமுறை நாட்களின் சோம்பல் இன்னும்  மிச்சமிருக்கும் புதிய ஆரம்பத்தின் கிளர்ச்சியில் தளும்பி இருந்த வகுப்பறைச் சூழலில்  அச்சத்தை தள்ளி வைக்க முடிந்தது. முதல் மூன்று பீரியட்களுக்கு இவர்களுக்கு ஏற்கனவே சொல்லிக் கொடுத்துள்ள ஆசிரியர்கள். இன்னும் நான்கு பீரியட்கள்தான். அடுத்து வந்த ஆசிரியர் புதியவர். தன்னை அறிமுகம் செய்துகொண்டபின்  ஒவ்வொருவராக சொல்லிக் கொண்டு வர இவன் முறை. எழுந்து தன் பெயரைச் சொன்னான்.

‘பாதர் என்ன பண்றார்?”

2016ஆம் ஆண்டில் படித்த குறிப்பிடத்தக்க சில புத்தகங்கள்

– ஆர். அஜய்-

  1. நிலவில் பூத்த முல்லை – உ.வே.சா.

தலைப்பு கட்டுரையில் ‘பத்துப் பாட்டை’  தேடி அலைகிறார் உ.வே.சா. ஒரு ஊரில் இரவு நேரத்தில் சுவடி கிடைக்கிறது. நிலவொளி மட்டுமே உள்ள இடம். அவசர அவசரமாக சுவடிக்கட்டை பிரிப்பவரின் கண்ணில் ‘முல்லைப் பாட்டு’ படுகிறது,  நிலவில் முல்லை பூக்கிறது.

புனைவின் சாயல் கொண்ட பல நிகழ்வுகள் இந்த நூலில் உள்ளன. வாழ்ந்து கெட்ட குடும்பத்தில் பிறந்து சொத்து அனைத்தையும் ஜப்தியில் பறி கொடுத்து, தன்னிடமுள்ள- அன்று விற்றிருந்தால் கணிசமாக தொகை கிடைத்திருக்கக்கூடிய – சுவடிகளை இலவசமாக விட்டுச் சென்ற, இறுதிவரை தன் பெயரைச் சொல்லாதவர் பற்றிய பதிவு சிறுகதையாக மாறக் கூடியது. இவை ‘உண்மை புனைவை விட புரிந்து கொள்ள கடினமானது’  என்பதை மீண்டும் நிரூபிக்கின்றன.

திருமணமான மாணவர்கள் தங்கள் செலவுக்காக தந்தை கொடுப்பது போதாமல், மாமனாரை அதிகாரம் செய்து பணம் பெற்றுக்கொள்வது அன்றைய சமூகச் சூழலை, கடந்து போன காலத்தை  குறித்த ஒரு சித்திரத்தை அளிக்கிறது என்றால் வகுப்பறைகளில் மாணவர்களின் குறும்பு சில இடங்களில் காலம் அப்படியே உறைந்துள்ளதைச் சுட்டுகிறது.

இறுகிப் போகாத, இன்னும் வாசகனுக்கு அணுக்கமாக இருக்கும் புன்சிரிப்பை உருவாக்கும் நடையும்,  உள்ளன. ‘சீவக சிந்தாமணியின்’ செய்யுள்களில் ஒரு வரி குறித்து குழம்பிக் கொண்டிருக்கிறார். அந்த காலகட்டத்தில் முதியவரொருவர் அவர் இல்லத்தில் அவ்வப்போது வந்து உண்பது வழக்கம். எப்போதும் போல் அவர் புலம்பிக்கொண்டே இருக்க, உ.வே.சா வழக்கம் போல் ‘சிறிதும் சிரத்தை’ இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்ததை விவரிக்கிறார். பேச்சுவாக்கில் கிழவர் ஏதோ பழமொழி சொல்ல, அது சீவக சிந்தாமணியில்  உ.வே.சாவிற்கு சந்தேகம் உள்ள பகுதியோடு தொடர்புடையது. உடனே உற்சாகமாகும் உ.வே.சா கிழவரிடம் பேச்சு கொடுத்து தன் சந்தேகத்தை தீர்த்துக் கொள்கிறார்.

தனக்கு நேர்ந்த அனுபவங்களை விலகலோடு பார்க்கும் மனநிலையும் அவருக்கு உள்ளது.  வார இறுதிகளில், மற்றும் பிற விடுமுறை நாட்களில், அவர் வீட்டில் இருந்ததாகவே தெரிவதில்லை, பெரும்பாலும் ஏதேனும் தொலைவில் உள்ள ஊருக்கு சுவடி தேடி செல்கிறார். சுவடி தேடிச் சென்ற இடத்தில் அங்கிருப்பவர் இவரை கவனிக்காமல் இருப்பது போல் பாவனை செய்ய அதை பொருட்படுத்தாமல் அங்கேயே நின்றிருந்ததை எந்த சுயபச்சாதாபமும் இல்லாமல் விவரிக்கிறார்.

இரு  நிகழ்வுகள். மணிமேகலையில் ‘கும்மாயம்’ என்ற சொல்லின் அர்த்தத்தை தேடுகிறார். கும்பகோணத்தில் ஒரு கோவிலுக்கு செல்பவருக்கு பட்டாச்சாரியார், பல பிரசாத சிற்றுண்டிகளை தருகிறார். அவற்றின் பெயர்களை கேட்கும் உ.வே.சா, ஒன்றின் பெயர் ‘கும்மாயம்’ என்று கேள்விப்பட்டதும் உணவை மறுக்கிறார். அச்சிற்றுண்டி  நாவிற்கு தந்த சுவையை விட, அந்தப் பெயர் காதில் விழுந்தபோது உருவான சுவையே சிறந்தது என்கிறார்.  வில்லி பாரதத்தில்    ‘செண்டை’ என்ற சொல்  ஒரு  செய்யுளின் உபயோகிக்கப்பட்டுள்ள விதம்  ‘பூச்செண்டை’     குறிக்காது என்று தெரிந்தாலும் வேறெதை குறிக்கிறது என்று அதன் அர்த்தத்தை தேடுகிறார்.  கோவிலொன்றில் தரிசனத்தின்போது, பெருமாள் கையிலிருந்த ஆயுதத்தை பார்ப்பவர் அது என்னவென்று கேட்க, ‘செண்டு’ என்கிறார் அர்ச்சகர்.  உ.வே.சா அகக்கண்ணில் திரௌபதியை இழுத்து வரும் துச்சாதனன்தான் இப்போது தெரிகிறான். அவர் சந்தேகம் தீர்கிறது. அறுசுவை  உணவை விட,  இறை தரிசனத்தை விட அவற்றின் மூலம் தன் சந்தேகங்கள் தீர்ந்ததே அவருக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும்.

அன்றாட லௌகீக வாழ்வில் ஈடுபட்டிருந்தாலும், அப்போது என்ன செயல் செய்து கொண்டிருந்தாலும் அவர் மனம் உள்ளூர இலக்கியங்கள் குறித்தே யோசித்துக் கொண்டிருந்துள்ளது.

2. The Ancestor’s Tale – Richard Dawkins.

டாக்கின்ஸின் சரளமான நடையில் நமது பரிணாம வளர்ச்சியின் பாதையை அறிய உதவும் சுவாரஸ்யமான பயணம் இந்த நூல். என்னைப் போன்ற பொது வாசகர்களையும் அன்னியப்படுத்தாமல், அதே நேரத்தில் தான் சொல்லும் விஷயத்தை மிகவும் எளிமையாக்கி  நீர்த்துப் போகச் செய்யாமலும் கம்பி மேல் நடக்கும் வித்தை டாக்கின்ஸ்சுக்கு புதிதல்ல. அதே நேரத்தில் ஓரளவுக்கு மேல்  எளிமைப்படுத்த முடியாத துறைசார்ந்த நுணுக்கமான விஷயங்கள் சம்பந்தப்பட்ட சில இடங்களில், இவை பொது வாசகருக்கு கடினமாக இருக்கலாம், எனவே அடுத்த ‘சில’ பக்கங்களை நீங்கள் கடந்து செல்லலாம், அதனால் இழப்பு இருக்காது என்றும் சொல்லி விடுகிறார். இவையும் பொதுவாசகனுக்கு உதவுவதோடு அவன் குறைந்தபட்ச தயாரிப்பு செய்து கொள்ளவும் உதவுகின்றன.

முற்றிறுதியாக பல விஷயங்களை சொல்பவர்,  அனைத்திற்கும் பதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்ற தரப்பை எடுப்பதில்லை. அறிவியல்  இன்னும் இறுதி முடிவுக்கு வராததையும் குறிப்பிட்டு அவை குறித்த தன் யூகங்களையும் (இவை  யூகங்கள் மட்டுமே என்பதையும்  வெளிப்படையாக) கூறுகிறார்.  உதாரணமாக நம் பரிணாம வளர்ச்சியில் இன்னொரு கிளையான, நம் பங்களிகளான, நியாண்டர்தால்கள், அவர்களுக்கும்   நமக்கும் இருந்திருக்கக்கூடிய உறவு பற்றி அவர் குறிப்பிடும் சில கருத்துக்கள்.  இந்தப்  புத்தகம் வெளிவந்தபின் இன்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு ‘நியாண்டர்தால்களுக்கும் நமக்குமான  உறவுக்கான  சான்றுகள்  மரபணு சார்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

Backward chronology and forward chronology are each good for different purposes. Go backwards and, no matter where you start, you end up celebrating the unity of life. Go forwards and you extol diversity.’

என்று நூலின் ஆரம்பத்தில் டாக்கின்ஸ் அழகாகச்   சொல்வதில் உள்ள பரவசத்தை  நூல் முழுதும் உணர முடிகிறது.

  1. Letters to a Nation – Nehru’s letters to his chief ministers

தன் இலட்சியங்கள் மற்றும் மனசாட்சிப்படி உறுதியாக இருந்த, அதே நேரத்தில் பிடிவாதமாக இல்லாமல் எப்போதும் மாற்று தரப்புடன் உரையாடலில் ஈடுபட தயாராக இருந்த ஜனநாயகவாதியை இந்த கடிதங்களில் காண்கிறோம். “I cannot advise you because the responsibility is yours and you have to judge finally”, “,”I would like you to give some thought in your province also to the question of the reorganization of the government machinery with a view to seeing whether it is functioning at the maximum possible level of efficiency,” போன்ற வரிகள் இந்தக் கடிதங்களில் அடிக்கடி வருவது, கூட்டாட்சி முறையில் அவருக்கிருந்த நம்பிக்கையை உணர்த்துகிறது. தரையில் கால் பதித்தபடி வானத்தை தொடும் கனவில் -இரண்டிற்கும் உள்ள முரண்பாடை எப்போதும் சமன் செய்தபடி – உள்ளவரும் இந்த கடிதங்களில் இருக்கிறார் . திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்படும் காலதாமதங்களை, தடங்கல்களை எதிர்கொண்டு பல்வேறு பிரிவினைகளால் வெவ்வேறு திசைகளில் இழுக்கப்படும் தேசத்தை பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்ல, ஜனநாயக வளர்ச்சிக்கும் இட்டுச் செல்ல முயன்ற ஒரு தலைவர் இக்கடிதங்கள் மூலம் நமக்குத் தெரிகிறார். அனைத்தையும் விட, “I have supreme faith in India, a faith which transcends even an accumulation of faults and futilities on our part” என்ற ஒரு கடிதத்தில் குறிப்பிடும், எந்தச் சூழலிலும் மேம்பட்ட இந்தியா குறித்த தன் கனவை, நம்பிக்கையை இழக்காத ஒருவர்தான் நூல் முழுதும் உள்ளார்.

  1. To the Brink and Back – Jairam Ramesh

1991ல் தாராளமயமாக்கத்தின் முதல் அடிகளை நரசிம்ம ராவும், மன்மோகன் சிங்கும் எடுத்து வைத்துக் கொண்டிருக்கும்போது தொழில்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ரெட்டி மற்றும் , MoS ரங்கராஜன் குமாரமங்கலத்துடனான அது குறித்த பேச்சுவார்த்தைகளில் முட்டுச் சந்தில் நிற்கிறார்கள். மன்மோகன் சிங் குமாரமங்கலத்தை சந்தித்து அவர் தந்தை குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டு நாட்டின் நலனிற்கான மாற்றங்களை அவர் ஏற்றுக்கொண்டிருப்பார் என்று விளக்குகிறார். இந்த சந்திப்பு முடிந்து வெளியே வரும் குமாரமங்கலம் ‘Yaar, Sardar ne kamaal kar diya‘ என்று ரமேஷிடம் சொல்கிறார். உரையாடல் அடுத்து சுமூக முடிவை எட்டுகிறது என்பது நமக்கு புரிகிறது. மன்மோகன் சிங் குறித்து இப்போது பொது புத்தியில் படிந்திருக்கும் எண்ணத்திற்கு நேர்மாறான நிகழ்ச்சி இது.

80களின் ஆரம்பத்தில் தாராளமயமாக்கம் குறித்து எடுக்கப்பட்ட முயற்சிகளில் ஆரம்பித்து, 91ம் பெரும் கொந்தளிப்பான சூழலில் அது அமலுக்கு கொண்டு வரப்பட்டதை இத்தகைய திரைக்கு பின்னால் நடந்த விஷயங்களோடு ரமேஷ் சொல்கிறார்.

நாம் காணும் நரசிம்ம ராவ், சிங் மற்றும் ரமேஷ் போல இயல்பாகவே தாராளமயமாக்கம் குறித்த நேர்மறை எண்ணங்கள் கொண்டவர் அல்ல, சூழ்நிலையால் அதை நோக்கி தள்ளப்பட்டவர். கட்சியிலேயே அதற்கு பலத்த எதிர்ப்பை சந்தித்தவர். இந்த பின்புலத்தில் வைத்துப் பார்க்கும்போது, தாராளமயமாக்கம் அமல்படுத்துவதில் சிங் போன்றவர்களின் திட சித்தத்தை விட ராவ் உறுதியாக இருந்ததே பெரிய விஷயமாக இப்போது தோன்றுகிறது. ஆனால் ரமேஷ் அதை உணர்ந்து போல் தெரியவில்லை அல்லது அதை ஒப்புக்கொள்ளவில்லை. ராவ் சமரசம் செய்ய நேரும் போதெல்லாம் அதை அவரின் தனிப்பட்ட தோல்வியாக சித்தரிக்கிறார். ஆனால் வரலாற்றின் குப்பைத்தொட்டிக்குள் நரசிம்ம ராவை தள்ள காங்கிரஸ் செய்த முயற்சிகள் பெருமளவில் வெற்றி பெற்று விட்ட நிலையில் அவருக்கான இடத்தை இந்த நூலில் ரமேஷ் அளிப்பது வரவேற்க்கத்தக்கது.

  1. The Complete Adventures of Feluda – Volume 1&2 – Satyajith Ray

சிறார், வளரிளம் பருவத்தினருக்காக எழுதப்பட்ட துப்பறியும் கதைகள் என்றாலும், குற்றங்களின் முடிச்சுக்களை கட்டமைப்பதும், வாசகனை ஏமாற்றாமல் போலி துப்புக்களோடு புதிருக்கான விடையையும் அவன் முன் வைப்பதும், இறுதியில் நுட்பமாக  முடிச்சவிழும்போது அவனை – கண் முன் இருந்த விடையை கவனிக்காமல் இருந்ததற்காக – வியப்படைய செய்வதும் இவற்றை பெரியவர்களுக்கான கதைகளாகவும் ஆக்குகின்றன. டார்ஜிலீங்கின் பனிப்பொழிவும், எப்போதும் மெல்லிய மழை பெய்து கொண்டிருக்கும் திபெத்தும், காசியின் கங்கைக்கரை சித்திரங்களும், ராஜஸ்தானின் ஒளி வீசும் மணற்பரப்பும், வட இந்திய பழங்கால கோட்டைகளும் உருவாக்கும் விரிவான நிலவியலை பெரும்பாலான குற்றப்புனைவுகளில் காண இயலாது. எனினும்  இந்தக் கதைகளுக்கான உத்தேச வாசகப்பரப்பு சிறார், வளரிளம் பருவத்தினர் என்பதால், இவற்றை ‘தூய்மையாக’ – ஆண்-பெண் உறவுப் பிறழல்கள், ரத்த விரயம், அதீத வன்முறை போன்ற குற்றப்புனைவின் சம்பிரதாய அம்சங்கள்  இல்லாதிருப்பது – வைத்திருக்கிறார் ரே. குறிப்பாக முதல் தொகுதியில் பெண்களே இல்லை என்று சொல்லலாம்.

இந்த தூய்மையின் தாக்கம் எந்தளவுக்கு உள்ளதென்றால், இரண்டாம் தொகுதியின் ஒரு கதையில் ‘அழகாக இருந்தார்’ என்று ஒரு பெண்ணை பற்றிய ஒற்றை வரி வர்ணனை வாசகனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கக்கூடும். இது குறித்து தன் முன்னுரையில் குறிப்பிடும் அவர், பெரியவர்கள் இவற்றைப் படிக்கும்போது இவற்றின் வாசகப் பரப்பை நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார்.

  1. அசோகமித்திரன் கதைகள் மறுவாசிப்பு –

மொத்தமாக இல்லாமல், குறிப்பாக இவற்றை படிக்க வேண்டும் என்ற நோக்கமில்லாமல் வாசிக்கப்பட்ட கதைகள். தனது சானட் ஒன்றில் ஷேக்ஸ்பியர் ஒரே அகத்தூண்டுதலைப் பற்றி ஏன் பாடுகிறேன் என்ற கேள்வியை எழுப்பி

“For as the sun is daily new and old,
So is my love still telling what is told”

என்று முடிக்கிறார். ஒவ்வொரு நாளும் சூரியனை புதிதாக பார்ப்பது போல், ஒவ்வொரு மறுவாசிப்பிலும் ஏதேனும் புதிதாக பெற்றுக் கொள்ள இந்தக் கதைகளில் உள்ளது.

விழுந்தது என்ன?- ஹரன் பிரசன்னாவின் ‘சோழி’

பீட்டர் பொங்கல்

பதாகை இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளைப் பதிப்பித்திருந்தாலும், முதல் முறையாக எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் வாயிலாய் பதாகையில் வெளிவரும் சிறுகதைகளுக்கு முழுமையான முதல் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ‘தமிழ் சிறுகதையின் பத்து முகங்கள்‘ என்ற கட்டுரையில்  எஸ். ராமகிருஷ்ணன், இணைய இதழ்களில் வரும் சிறுகதைகளை தான் வாசிப்பதாய் எந்தச் சலிப்பும் இல்லாமல் சொல்லிக் கொள்வதோடல்லாமல், பதாகையில் எழுதும் காலத்துகள் சிறுகதைகள் குறித்து, “பதாகை இதழில் இவரது சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். இவர் யார் என்று தெரியவில்லை. அசோகமித்ரன் பாணியில் சிறப்பாகக் கதைகளை எழுதுகிறார். வேதாளத்தின் மோதிரம் என்ற சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது“, என்று எழுதியிருக்கிறார்.

யார் எவரென்றே தெரியாத ஒருவரை முன்னணி எழுத்தாளர் ஒருவர் வாசிப்பதில் தமிழ் இலக்கியத்தின் இனிய முகமொன்று வெளிப்படுகிறது- பாராட்டுகள் யாருக்குமே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் என்றாலும், மூத்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எந்த கோரிக்கையும் இல்லாமல் தன் கதைகளை வாசிப்பதாய்க் குறிப்பிடுவதற்கு மேல் புதிதாய் எழுத வருபவனுக்கு வேறென்ன அங்கீகாரம் வேண்டும்? எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு பதாகை மற்றும் காலத்துகளின் மனமார்ந்த நன்றிகள்.

எஸ். ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருக்கும் பத்து முகங்களில் இன்னொரு முகமான ஹரன் பிரசன்னாவும் பதாகையில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்- ஹரன் பிரசன்னா குறித்து, “… வித்தியாசமான கதைகளை எழுதுகிறார். மெல்லிய பகடியுடன் கூடிய சரளமான எழுத்து. சில கதைகள் ஆதவனை நினைவூட்டுகின்றன. குரலை உயர்த்தாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது இக்கதைகளின் சிறப்பு,” என்று குறிப்பிடுகிறார் எஸ். ராமகிருஷ்ணன்.

ஹரன் பிரசன்னா பதாகையில் எழுதிய, ‘சோழி’ என்ற சிறுகதை இப்படி துவங்குகிறது

“முரளிதர ராவ் தனது எண்ணத்தின் கனம் தாங்காமல் எப்போது வேண்டுமானால் விழுந்துவிடுவார் போல அலைந்து அலைந்து நடந்தார். அவரது மெல்லிய உடலில் அதைவிட மெல்லிய பூணூல் காற்றில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தது. பூணூலையும் அதோடு சேர்த்து தன்னைப் போர்த்தியிருந்த மேல் துண்டையும் இழுத்து, சூம்பி தொங்கிப் போயிருந்த தன் மார்பின் இரு கருநிறக் காம்புகளையும் அவர் மூடிக்கொண்டார். வழுக்கைத் தலையில் வெளிப்பட்டிருந்த ஒன்றிரண்டு வெண்மயிர்கள் மிக நீண்டிருந்தன. வழுக்கையைச் சுற்றி மயிர்கள் சீவாமல் சீரில்லாமல் படிந்து கிடந்தன. முன்நெற்றியில் அவரது நாமத்தைக் கரைத்துக்கொண்டு வியர்வை வழிந்தது. தன் தோள்துண்டால் முகத்தை அழுந்தத் துடைத்தார். நாமத்துக்கிடையே அவர் இட்டிருந்த கரிக்கோடுபட்டு துண்டு கருப்பாகியது. கண்ணாடி மாட்டிக் கொண்டு வெளுத்த உளுத்த மரக்கொம்பு ஒன்று நடந்து வருவதுபோல் அவர் நடை இருந்தது. தள்ளாத வயதிலும் மனதில் இருந்த குழப்பம் காரணமாக வேகமாக நடக்க முயன்று தோற்றுப் போனார். மீண்டும் வேகமாக நடந்தார்.”

குரலை உயர்த்தாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது இக்கதைகளின் சிறப்பு,’ என்று எஸ். ராமகிருஷ்ணன் மிகச் சரியாகவே சொல்கிறார். இந்த முதல் பத்தியில் நமக்குக் கிடைக்கும் சித்திரம் சிறிது புன்னகைக்க வைக்கிறது, கூடவே இக்கதையின் மிக முக்கிய இயல்பான நிலையின்மை, கதையின் துவக்கத்திலேயே வந்து விடுகிறது. முதல் வாக்கியத்தில் அலைந்து அலைந்து என்று அலைதல் இரு முறை வருகின்றன- இந்தத் தடுமாற்றம் எண்ணத்தின் கனம் தாங்காமல் ஏற்பட்ட ஒன்று, எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடுவார் போல் அலைந்து அலைந்து நடந்தார் என்று வாசிக்கும்போது தடுமாறிச் செல்லும் அவரது நடையின் கூடவே எண்ணங்களின் சுமையால் அழுந்திய அவரது முகமும் நம் கண் முன் தோன்றுகிறது- இந்த வாக்கியத்தில் மட்டுமல்ல, இந்தப் பத்தியில் அவரது முக பாவனை சொல்லப்படவே இல்லை. ஆனால், முரளிதர ராவின் முகத்தில் ஆடும் உணர்ச்சிகளைக் காண புற விவரணைகளே போதுமானதாய் இருக்கின்றன.

அவர் அலைவது போதாதென்று, அவரது மெல்லிய உடலில் தரித்த பூணூலும் காற்றில் அலைகிறது- கதை நெடுக ஒரு தீர்மானமான முடிவுக்கு அலையும் முரளிதர ராவ், இங்கு அலையும் பூணூலை மட்டுமல்ல, சூம்பித் தொங்கிக் கொண்டிருக்கும் மார்க்காம்புகளையும் மேல் துண்டு கொண்டு மூடிக் கொள்கிறார் (தொங்குவதால், அவையும் ஆடுகின்றன என்று நினைக்கிறேன்). இது போதாதென்று வழுக்கைத் தலையில் ஒன்றிரண்டு வெண்மயிர்கள் மிக நீண்டிருந்தன என்ற குறிப்பு வேறு – அவையும் காற்றில் அலைகின்றன என்று தோன்றுகிறது. வழுக்கைத் தலையில் இருக்கும் பிற மயிர்களோ சீவாமல் சீரில்லாமல் படிந்து கிடக்கின்றன – அவை ஓய்ந்து விட்டன போலிருக்கிறது. கதையின் சீரற்ற தன்மையை மேலும் உணர்த்தும் வகையில் வியர்வை வழிந்து அவரது நாமத்தைக் கரைக்கிறது, அதைத் துடைக்கும் துண்டோ நாமத்துக்கிடையே உள்ள கரிக்கோட்டை அழித்து கறுப்பாகிறது. தள்ளாத வயது, மனக்குழப்பம் அவரை வேகமாய்ச் செலுத்துகிறது, அவர் தோற்றுத் துவண்டு விரைகிறார் என்று துவங்குகிறது கதை.

ஹரன் பிரசன்னா இது போலவே எழுதிக் கொண்டு சென்றால் அவர் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். பாத்திர விவரணைகள், உரையாடல்கள் என்று இருக்க வேண்டியது எல்லாம் மிகச் சரியாக இருக்கின்றன. ஆனால், அவரிடம் உள்ள ஒரு குறை, அதிபுத்திசாலித்தனம்தான் (இதைத்தான் எஸ். ராமகிருஷ்ணன், “சில கதைகள் ஆதவனை நினைவூட்டுகின்றன” என்று எழுதுகிறார் என்று நினைக்கிறேன்). ஒரு நல்ல கதை என்பது எலிப்பொறி போலிருக்க வேண்டும். மசால் வடை வாசனைக்கு ஓடி வரும் எலி, தன் மீது பொறியின் கதவுகள் விழுவதை மிகத் தாமதமாகத்தான் தெரிந்து கொள்கிறது. இங்கு மசால் வடை மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும் அது மணக்கிறது என்பதால் அதுவல்ல, அதைச் சுற்றியுள்ள பொறிதான் பூடகம். கண் முன் முழுசாக இருந்தாலும், புலன்களின் மயக்கத்தில் பொறி காணப்படுவதில்லை- வேலையைக் காட்டும்போதுதான் அது புலனாகிறது.

எது முழுமையாய் விவரிக்கப்படுகிறதோ, அதன் இயல்பு இறுதி வரை மறைந்திருப்பதில் ஒரு கலை இருக்கிறது. வாசகன் மனதில் தெறிக்கும் ஸ்ப்ரிங்தான் பூடகமே தவிர, கதை வெளிப்படை. ஹரன் பிரசன்னா இதை மிகச் சிறப்பாய்ச் செய்யக்கூடியவர். ஆனால் அவர் வைக்கும் பொறிகளோ அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் வரும் மூத்த சகோதரனின் பொறிகள் போல் சிக்கலானவை, கண்கள் நிலைகுத்தி நிற்கச் செய்பவை- எலிப்பொறி போல் எளிமையானவையாய் இல்லாத அவரது பொறிகள் ஒரு தேர்ந்த தோட்டக்காரனின் maze போன்றவை: பொறி விழுந்து விட்டது என்று தெரிந்தாலும் நாம் எங்கேயிருக்கிறோம், நம் மீது விழுந்த பொறி எப்படிப்பட்டது என்பதில் ஒரு குழப்பம் இருக்கிறது: “கதை நல்லா இருக்கு ஸார், ஆனா என்ன ஆச்சு?” என்று கேட்கிறோம்.

சோழி கதை சிறப்பான கதையாக இருந்தாலும் அப்படிப்பட்ட கதைதான். படித்துப் பாருங்கள் – சோழி, ஹரன் பிரசன்னா.