எழுத்து

மாசிலாமணி- ந. பானுமதி சிறுகதை

பானுமதி. ந

“மாசு, எலே, மாசு, எங்கிட்டடா தொலஞ்ச? இன்னெக்கு உன்ன பலி போடாம உங்கறதில்ல”. இரு கைகளாலும் வறட்வறட்டென்று தலையைச் சொறிந்து கொண்டே ராணி குடிசையிலிருந்து கத்திக் கொண்டு தெருவில் இறங்கினாள்.

“அய்ய, இம்மாம் கூப்பாடு ஏன் போடுதே? வருமில்ல. அத்த மணின்னு விளிச்சா என்ன?” என்றாள் கனகு.

“மணியாமில்ல, மணி, தாத்தைக்கு தாத்தன் பேரு நொண்டிப் பயலுக்கு! அவன் உனக்கு மச்சானா, சீறிக்கிட்டு வர, உள்ளார போயி கலயத்தை எறக்கிட்டு வெஞ்சனம் ஆக்கு. நாயம் பேசுதா?”

“குலவயிடாட்டா உனக்கு சாமி ஏறாது, அம்மையும், புள்ளயும் வாய் வலிச்சுக்கிட்டு நில்லுங்க”.

“இந்தா, கனகு, அத்த எம் புள்ளயின்னு இன்னொரு வாட்டி சொன்ன, சூட்டாங்கோலால நாவ அத்திடுவேன், ஆமா”.

ஊரின் கடைசி வீடு அவர்களுடையது. பழவூர் என்ற பெயருக்கு ஏற்றபடி மிகப் பழமையான ஊர் அது. மொத்தமே நாற்பது குடும்பங்கள்தான். புஞ்சையில் அவர்கள் பிழைப்பு ஓடிக் கொண்டிருக்கிறது. வடக்குத்  தெற்காக ஓடும் வீதிகளில் அவரவருக்குத் தோன்றிய விதங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகள், குடிசைகள். சிலது தெருவையும் வளைத்து முன் துருத்தி நிற்கும். சில குடிசைகள் பம்மிக் கொண்டிருக்கும். அதனால் அதிகமாக கிழக்கு பார்த்த வீடுகள் காணப்படும். பெரும்பாலும், நாட்டு ஓடுகள் அல்லது கூரைகள்; தாழ் கூரை அமைப்புகள், குறுக்குச் சுவர் மட்டுமே எடுக்கப்பட்டு இரு அறைகளாகத் தோன்றும் வசிப்பிடங்கள். மிகச் சிறிய ஜன்னல்களும், மேற்கூரையில் ஒளிக்காக சிறு சதுரக் கண்ணாடிகளும் பதிக்கப்பட்டிருக்கும். ராணியின் குடிசைதான் குடித்தனங்களின் எல்லை. அதை அடுத்து பருவங்களில் சடைக்கும் காய்களோடு ஊராரின் பேய்க் கதைகள் வாழும் பெரிய புளிய மரம். அதை அண்டிப்படர யத்தனிக்கும் காட்டுக்கொடி. பிறகு உடைக்காடுகள், முள் மரங்கள், கத்தாழைச் செடிகள், குறும்பூக்களும், காட்டுப் பூக்களும் படர்ந்திருக்கும் பாதை வழிகள். அவற்றின் ஊடாகத்தான் எந்த கிராமத்திற்கும் செல்ல முடியும்.

முருகேசன் செட்டிகிட்ட எண்ணை வாங்கி வருவதற்காக சின்னம்மா கொடுத்தனுப்பிய குப்பியுடனும் பணத்துடனும், தன் வளைந்த காலை இழுத்து இழுத்து குறும்பூக்களிடம் நெருங்கி பேசிக்கொண்டிருந்தான் மாசிலாமணி. ”நீங்க பூமில காங்குறீங்க, என்னய மாரி வளஞ்சு வளஞ்சு அந்த மானத்தையே தொடப் பாக்குது அந்தால நிக்குற தென்ன. குள்ளயன், குள்ளயங்குது என்னய! பாத்துக்கிடுங்க, நான் தென்னய மாரி உசந்து மான நிலாகிட்ட போவன். உங்களுக்கு என்ன வாங்கியாரட்டம்?”

“தத்தாரி நாயே! எண்ணக்கு காத்துக் காத்து கூவுதேன். வரப்புல பெனாத்திக்கிட்டு கிடக்க,” என்று கத்திக்கொண்டே அவன் காலை அவள் எத்தவும் அவன் உருண்டு முள் படுகையில் விழுந்தான். உடலை இழுத்து இழுத்து அவன் மேடேறுகையில் அவளுக்கு ஒரு குரூர திருப்தி ஏற்பட்டது. சிராய்ப்புகளில் துளிர்க்கும் குருதிக்கோடுகளில் தன் மனம் கொக்கரிப்பதை அவள் உணர்ந்தாள். அவனை மேலும் இம்சிக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது. இவனால் அல்லவா அவள் இந்த கேடுகெட்ட ஊருக்கு வாழ வந்தாள்? ”பச்ச புள்ள தாயீ, அப்பன் காட்டுல பாடுபடுதான், புள்ளய எப்படிப் பாக்க; உன்னக்க முறதான் தாயீ” என்று சொல்லிச் சொல்லி அவளை ஒரு பட்டி ஆட்டுக்கு அப்பன் இங்கே பத்தி விட்டு விட்டான். மறு வருடமே சீக்கில் விழுந்து செத்தும் போய்விட்டான். கனகுவும் இந்தப் பொட்டக்காட்டுக்கு வந்துவிட்டாள். ஆனால், இப்போது எண்ணை வேண்டும். இவளே போய் வாங்கி வரலாம். ஆனால், முருகேசன், கையைப் பிடித்து நேரம் காலம் தெரியாமல் வழியத் தொடங்கிவிடுவான். இவள் போய் நின்றால் கொஞ்சம் மளிகை கூடுதல் நிறையுடன் கிடைக்கும். மேலும் வீட்டில் கட்டியவனும், இவள் தங்கையும் தனியாக இருக்கிறார்கள்.

‘அய்ய, சின்னம்மை மூஞ்சி செவசெவன்னு கடக்கே. எண்ணதான இந்தா கொண்டிட்டு வாரேன்”.

‘ஆமா, நொண்டிக்கால வச்சுக்கிட்டு குருதையில வர மகராசரு.’.

அளவு குறைந்திருந்த எண்ணைக் குப்பியைப் பார்த்ததும் அவளுக்கு மீண்டும் ஆவேசம் அதிகமாகிவிட்டது. ”என்னடா எண்ணய குடிச்சுப் போட்டயா, பேதியில போக நீயி, உன்னய பெத்து அதால செத்தும் போனாளே மவராசி, என்னயக் கூட்டிக்கிடு தாயி. உம்மவங்கூட தாளல இம்ச,” என்று அவள் ஒப்பாரி வைக்கவும் அவள் கணவன் மணியை முறைத்தான். “ராஸ்கோல், என்ன முழிக்கே, என்ன புரணி பேசலாம்னு எண்ணிக் கிடக்கீரோ வாத்தியாரு? எண்ணைய எங்க கொட்டின?”

மாசிலாமணிக்கு பொய் சொல்லத் தெரியவில்லை. ”அங்கத்தாளுக்கு களுத்து சுளுக்கிட்டு. அத்தான் எண்ணய தெளிச்சு சுலட்டி விட்டன்,” என்றான். இப்போது அப்பன் பளாரென்று அறைந்தான். “காட்டுல சவமா சாவறேன் இதுல, எவளுக்கோ என்னலே கொடுக்கே? உந்தொடுப்பா அது?”

“ஆமாய்யா, உம்புள்ள மம்மத ராசா, தொடுப்பு வருவாளுகல்லா?” என்றாள் ராணி.

“இந்தா புள்ள, இன்னி முச்சூடும் இவனுக்குத் திண்டியில்ல. கட்ட தொட்டிக்கு உடச்ச ஒடமுள்ளு வோணும். அத்த செய்யச்சொல்லு. சோறு காட்டாதே.”

“கனகு எப்படியும் தின்னக் கொடுக்கும்,” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டே அவன் வேலையைத் துவங்கினான்.

“வெரசா குடிச்சுப் போட்டு சட்டியத் தா. உன் ஆயி பாத்துச்சோ பலி போட்டுடும்,” என்றவாறே வந்தாள் கனகு.

“வவுறு கத்துது கனகு, சோறு, சோறுங்குது. இம்மாம் வேல செய்யச் சொல்ல காந்திக் காந்தி வருது”.

“பொறவு? உன்னயைல்ல சொல்லோணும்? எங்கனாச்சும் ஓடிப் போயிரு, முழு கஞ்சியாச்சும் கிட்டும்.”

“மெய்யாலுமா சொல்லுறவ?” என்று கேட்டுக்கொண்டே அவன் தன்னை நோக்கி வாலைக் குழைத்து வந்த நாய்க்கு கஞ்சியில் துளாவி சில பருக்கைகளை எடுத்து வைத்தான்.

‘பிச்ச எடுத்த பெருமாளுகிட்ட புடுங்கித் தின்ன கதையாட்டமில்ல இருக்கு? உன் ஆயி வந்துடும், நா வாரேன்’.

“உனக்க அக்கையென சொல்ல நா வல்ல,” என்றவனைப் பார்த்து அவள் கழுத்தை நொடித்துப் போனாள்.

மாசிலாமணிக்கு என்னவோ போலிருந்தது- கனகு ஏன் போகச் சொல்லுது? எங்கிட்டுப் போவன்? என்னா வேல தெர்யும்? இங்கன அதுவாச்சும் கஞ்சி ஊத்துது. முகம் பாத்து சொல் எடுக்குது. அது எம்மாம் அளகாயிட்டே வருது. அதப்பாக்கச் சொல்ல மேலுக்கு சுரம் அடிக்குது, உள்ளுக்கு குளிரெடுக்குது. வடக்கால கோயிலில பாட்டு போடுற மாசம் ஊசிக் குளிரு அடிக்குதில்ல, அத்த மாரி. ஆனா, என்னைய எங்கிட்டு போச் சொல்லுது, அதுக்கும் என்னயப் புடிக்கலையா?

ஊருக்கே ஒரு ஊரணி. ஆடு, மனிதன் யாவரும் சமம். இவர்களைப் போல பாவப்பட்ட பிள்ளையார் தானும் முன்னேறாமல், இவர்களையும் முன்னேற்றாமல் அசையாமல் சலித்துப் போய் உட்கார்ந்திருந்தார். அவருக்கு மாசிலாமணிதான் பேச்சுத்துணை. அவர் இடைத் துண்டையே உருவி அந்த ஊரணியிலேயே அதை நனைத்து அவர் உடம்பை துடைப்பவன் அவன்தான். ஒரு குவளையைக்கூட அவருக்கென கொடுக்காத ஊர் அது. பிள்ளையார் சதுர்த்தி அன்று மட்டும் எட்டுக்கல் தொலைவிலிருந்து ஒருத்தர் புதுத் துண்டு, மாலை, விளக்கு, சர்க்கரைப் பொங்கல் என எடுத்து வருவார். அன்று மட்டும் ஊரும், பிள்ளையாரும் மகிழ்வாக இருப்பார்கள். படையாச்சி முனி என்ற அவர்கள் ஊரின் தெய்வமும்கூட எட்டுக்கல் தொலைவில்தான் இருந்தது. அந்த ஊர் பங்காளிகள் படையல் வைக்கும்போது இவர்களுக்கும் அழைப்பு உண்டு, விருந்தும் உண்டு.

மணி ஏன் சோகமாக இருக்கிறான் எனக் கேட்க பிள்ளையாருக்கு ஆசை எப்படியும் அவனாக சொல்லத்தானே போகிறான்?

“நீ சொல்லு சாமி, நீ மட்டும் அளகாவா இருக்க? உந்தொப்பை முன் நிக்குது, எம் மண்ட முன் நிக்குது, அம்மாம் பெரிசு நீ, உன் காலு சின்ன சில்லாட்டம் காங்குது. எங்காலு வளஞ்சு நிக்குது. உன்னய தூக்கிக்கிணு அந்த சுண்டெலி ஊர் சுத்துதாம். அய்ய, கோவிக்காத, நான் நாயம்தான் சொல்லுதேன். உன்னய விட்டா ஆரு கேப்பா? ஆனா, நீ சாமி, அல்லாம் உனக்கு அளகு. அல்லாம் உன்னால ஏலும். ஊரு சனம்தான் என்னய காங்கையிலெல்லாம் சிரிக்கு. கனகு இருக்கில்ல, கனகு, அதுக்கும் என்னையப் புடிக்கலை போல. என்னய ஊர விட்டுப் போங்குது. உனக்கும் சோடியில்ல, எனக்குமில்ல”.

தன் தனிமையை அவன் உணர்ந்த விதம் அவருக்குச் சிரிப்பாக இருந்தது. ”சரி, போயாரேன், உனக்கு இருட்ல பயந்து வராதில்ல? ஆமா, நீ சாமியில்ல, கால முச்சூடும் நீ இப்படித்தான்” பிள்ளையாருக்கு இதற்கும் சிரிப்புதான் வந்தது.

ஆனால், கனகு சிரிக்கவில்லை. கண்களால் சிரித்து, உதட்டைச் சுழிப்பாளே, அது இல்லை. அவனுக்குப் பசித்தது. ஆனால், யாரிடம் கேட்பான் அவன்? அலுமினிய தட்டை ஓசைப்படுத்திப் பார்த்தான். அவள் துளிக்கூட நகரவில்லை. இளித்துக் கொண்டே, அவள் பார்க்கச் சத்தம் செய்து தண்ணீர் குடித்தான். அப்பொழுதும் அசைவில்லை.

எங்கோ சென்றிருந்த ராணி நல்ல சேலை உடுத்தி குடிசையின் உள்ளே வந்தாள். வெளியில் போகப் போகும் சந்தோஷத்தில் அவனிடம், ”எலே, மாசு, அப்பனும் நானும் புல்லூர் கொடைக்கு போயாரோம். சாக்க விரிச்சு தெருவில படு. கனகு பயணம் வல்ல,” என்றாள். அப்பொழுதும்கூட கனகு ஒன்றும் சொல்லவில்லை.

அவள் போனபிறகு, “கனகு, கொடைக்குப் போவணுமா?” என்று கேட்டான். அவள் கண்களில் நீர் திரண்டது. “அழுவாத, புள்ள, உன் மாப்பிள உன்னய ப்ளேனில்ல அதிலயே கூட்டிப் போவான்.” அவள் இன்னமும் அழுதாள். மணிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வயிறோ கத்துகிறது, இவளோ அழுகிறாள். அவன் பிள்ளையாரை நினைத்துக் கொண்டான். தூக்கம் வரவே சாக்கை எடுத்துக்கொண்டு வெளியில் போனான்.

பூமியில் பார்க்கும் குறும்பூக்கள் வானத்திலும் சிதறிப் படர்ந்திருந்தன. காற்றில் பூக்களின் உயிர் தெரிவதைப் போல் அவைகளின் கண் சிமிட்டல்களில் உயிர் இருந்தது. ஆனால், இரண்டுக்குமே வாசமில்லையோ?கனகு வருவதை அவன் கவனிக்கவில்லை.

‘வா, உள்ளார, சோறு துன்ன,’ என்றாள்.

“நீ உங்கலயா?”

‘அத்தவிடு, நீ துன்னு. மெய்யாலுமே கொடைக்கா போறாஹ?’

“பொறவு?”

‘எனக்க பயந்து வருது. மாமாவும், அக்கையும் என்னைய என்னைய…’ அவள் விசும்பினாள்.

அவன் விழித்தான். ”அளுவாதே, அளுவாதே,” என்று சொல்வதைத் தவிர அவனுக்கு ஒன்றும் சொல்ல வரவில்லை.

பல நொடிகளுக்குப் பிறகு அவள் சொன்னாள், ‘நமக்கு கண்ணாலம் கட்டி விடுவாஹ போல’

மணியின் உணர்ச்சிகள் கலவையாயின. சின்னம்மையா கனகுவ எனக்குக் கட்டி வக்கும்? அப்பன் ஒக்கவே மாட்டாரு. இது சின்னப் புள்ள,என்னாத்தையோ போட்டு மசக்குது. “அய்ய, என்னய ஆருக்கும் புடிக்காது புள்ள. குருதயில வந்து மானத்ல உன்ன மவராசா தூக்கிக்கிணு போவாருங்கேன்.என்னயக் கட்டிக்கிட வேணாம் ஆத்தா, இதுக்கா அழுவரவ”

“உன்னய எனக்கு புடிக்கும். முன்னால எனக்கும் கட்டிக்கிட ஆசதான். ஆனா, இப்ப உன்னைய மோசம் செய்யப் பாக்குறாங்க.”

மாசிலாமணிக்கு அவள் சொல்வது புரியவில்லை. கனகுவை கண்ணாலம் செஞ்சா அது அவனுக்கு சோறு தரும், சிரிக்கும். அது தன்ன கட்டிக்கிட விரும்பலயா?முன்னால ஆசைன்னு ஏதோ சொல்லுது? கனகு பிச்சியைப் போல வெறித்துக் கொண்டிருந்தாள். “கனகு, நம்ம கண்ணாலம் வோணாம், அம்புட்டுத்தானே? நா ஓடிப்போயிடுதேன். அளுவாத புள்ள,” என்றான்.

“எம்மேல ஆண. நீ எங்கிட்டும் போயிடாத. நம்ம புள்ளயாருக்கு பூச செய்வாங்கள்ள, அது நெனைப்பிருக்கா?”

அவன் மறுபடியும் முழித்தான்.

“அந்த அய்யரு, அல்லா எடத்தையும் பெருக்கி, நீரு தெளிச்சு, கோலம் வரஞ்சு, சாமிக்கு குளியாட்டி, துண்டு கட்டி, பத்தி கொளுத்தி, தென்னங்காய் ஒடச்சு, பளம் வச்சு, சூடம் கொளுத்தி, அதான் பொங்கலு படயல் காட்டி நமக்கெல்லாம் தருவாரில்ல’.

“ஆமாங்கேன், அதுக்கு நா கெடக்கு”.

“அத்த மாரி நீ! உனக்கு பளுத என்னாத்துக்கு? என்னய உனக்கு கட்டி ஏமாத்தப் பாக்குறாவ,” என்றாள் கனகு.

“என்னா பேசுறவ, நீயி அம்சமில்ல!”

“இல்ல, மணி நானு அப்படியில்ல”.

சுவர்க்கோழிகளும், தெரு நாயின் ஊளையும் இவர்களின் ஊமைப் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டிருந்தன.

சில நாட்கள் ஒன்றும் சலனமில்லாமல் சென்றன.

அதிகாலையில் ஒரு நாள் கனகுவையும், மாசுவையும் புளிய மாரால் அடித்துக் கொண்டே குடிசையின் வாயிலுக்கு வந்த ராணியின் பெருங்குரல் ஊரை எழுப்பியது. “சீமயில வளந்த புள்ள சீப்பட்டுப் போனாளே! நொண்டி முடத்துக்கு முந்தி பந்தி விரிச்சாளே!”

“என்னாலே, முழிக்கச் சொல்ல ஒப்பாரி வக்கறவ,” என்றாள் அங்கத்தாள்.

“வாரி முடிஞ்சுக்கிட்டு வந்துட்டாளுக! சிரிச்சுப் போச்சே எம் பொளப்பு! அட, மாசு,எம்புட்டு நா கருவின நீ, சின்னப் புள்ளய… சீச்சீ…” என்று ராணி கூவுகையில் அவன் நடுங்கினான். இதெல்லாம் என்ன என்று மலைத்தான். தெரு நாய் அவனைப் பாவமாகப் பார்த்துவிட்டு கல்லடிபட்டு ஓடியது.

“இந்தக் குள்ளனா, இந்த மாசுவா, நொண்டிக்காலனா, அந்த சிறுக்கியா, எடுபட்ட கைகாரி” என்று ஊர் சுவாரசியமாக மேய்ந்தது. ஊர்ப்பெரியவர்கள் மாசுவை தாறுமாறாகக் கேள்வி கேட்டார்கள்.

“அது எனக்க சின்னம்ம மாரி. சின்னம்மைக்கு அது உடம் பொறப்புல்ல, அதும் புள்ளாட்டமா நானு. அதும் புள்ள என்னக்க தம்பி,’ என்றான் மாசு. “அவன் கிறுக்கன், நீ சொல்லு தாயீ,” என்றார் தலைவர்.

துடிக்கும் உதடுகளோடு கண்ணீர் மல்க நின்ற கனகு, மணியை ஏறிட்டுப் பார்த்தாள். “என்னய விட்டுப் போடாத, அன்னைக்கு நானு சொன்ன பேச்சு கியாபகம் வருதா?” என்று அவள் கண்ணீர் கேட்டது.

“பச்சப் புள்ளய கேக்குறீக நல்லா? அது தாயீ, நா மக்க. அம்புட்டுத்தான். அது இத ஒத்துக்கிடுச்சுன்னா நாயம் பேத்தறத நிப்பாட்டுங்க,” என்றான் மாசிலாமணி.

“கனகு, நீ என்னலே, சொல்ற, அந்தத் திருட்டுப் பயல தண்டிக்க வேணாம்?”

“வேணா, மணி சொன்னா சரி,” என்றாள் கனகு.

 

சாத்தன் மரம் – மந்திரம் கவிதை

மந்திரம்

அந்தியில் பூக்கின்றன
ஏலக்காய் வாசம் பொதிந்த
வெள்ளைப் பூக்கள்.
கொத்துக் கொத்தாய்
பச்சை இலைகளுக்குள்
பொங்கித் தெரிகின்றன.

மோகம் தலைக்கேறும்
அடர் வாசம்
அப்பெருமரத்தில்
குர்கானின் பனிக்காலம் வரை
மோனத்தவம் வீற்றிருந்து
நறுமணம் கிளர்ந்தெழும்
குளிர்க் காற்றில்
தாபமாய் மெல்லச் சூழ்கிறது.

காலநிலை தடம் மாறும்
ஓர் நாளில்
சுற்றி அலையும் பட்டாம்பூச்சி போல்
நகரின் மேல் தீராக் காமமென
கவிந்து விரிகிறது.

யாருமற்ற அதன் காலடியில்
அவள் தீராக் காதலை
எல்லா இரவுகளும் சுவாசிக்கிறேன்

நிலம் – ராதாகிருஷ்ணன் சிறுகதை

ராதாகிருஷ்ணன்

முதல் பார்வையிலேயே என்னை வெளியாள் எனக் கண்டுகொண்டு விட்டது. கண நேரத்தில் சுறுசுறுப்பாகி எழுந்து பாயும் தோரணையில் நின்று கத்த ஆரம்பித்துவிட்டது, பல முறை இவைகளிடம் சிக்கி கடிபட்டு தெறித்து ஓடி கற்றுக்கொண்ட ஞானமான அப்படியே அந்த இடத்திலேயே நகராது சிலையாகி நிற்கும் யுக்தியை கடைபிடித்தேன், ஆனாலும் இவைகளைக் கண்டால் உள்ளுக்குள் உருவாகும் நடுக்கம் எவ்வளவு அனுபவம் பெற்றாலும் மறைய மாட்டேன் என்கிறது. விடாமல் கத்திக் கொண்டிருந்தாலும் அது நின்ற இடத்திலிருந்து நகரவில்லை. நகராததைக் கண்டு இது கடிக்கின்ற ரகமல்ல என்று என் அனுபவ மனம் உணர்ந்து கொண்டதும் தன்னியல்பாகவே உடலிலிருந்த படபடப்பு குறைந்து நிம்மதி உண்டானது, சிறிது நேரத்திலேயே அதுவும் தன்னுடைய வேடத்தை நான் கண்டு கொண்டு விட்டதை உணர்ந்து அதை அப்படியே உதிர்த்து அமைதியானது, பிறகு ஒன்றும் நடக்காத பாவனையில் பழையபடி முன்னங்கால்களை நீட்டி அமர்ந்து கொண்டது, ஆனாலும் பார்வையை அது என்னிலிருந்து விலக்கவில்லை.

நாய் என்ன ரகமென்று சரியாகக் கண்டறிய முடியவில்லை, காதுகள் மேல்தூக்கி விடைத்திருந்தன, பளபளப்பான கரிய நிறம், காக்கிநிற கழுத்துப்பட்டை இறுகி நல்ல கொழுகொழுவென இருந்தது, இந்த தெருவின் செல்லப்பிள்ளையாக இருக்கலாம், சுகவாசி என்று எண்ணி கொண்டேன். பிறகு நாயை அப்படியே விட்டுவிட்டு தெருவில் கவனம் சென்றது, முதல் பார்வையிலேயே வசதியானவர்கள் குடியிருக்கும் சூழலுக்குரிய அழுக்கில்லாத சுத்தமானச் சூழலை உணர முடிந்தது, நல்ல பழுதில்லாத 20அடி தார்ச்சாலை, அதிகாலை பெய்திருந்த மழை காரணமாக தன் சுயநிறமான ஜொலிக்கும் அடர்கருப்பினை திரும்பப் பெற்று புதிது போல காட்சியளித்தது. வீடுகள் அளவான சுற்றுச்சுவருடன் கிட்டத்தட்ட ஒருபோலவே காட்சி அளித்தன. வீடுகளின் முன்பு பாதுகாப்புத் தடுப்பு கொண்ட பூக்களைச் சொரியும் அலங்காரச் செடிகளும், குட்டையான சிறு பூமரங்களும் இருந்தன, மேலும் இவையெல்லாம் அசல் வசதியானவர்களின் இயல்பிற்குரிய சுற்றுச்சுவர்க்கு வெளியே சாலையினை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டவைகளாக இருந்தன.

பாதையில் மனித நடமாட்டமே இல்லை, வீடுகளின் முகப்புகளிலும்கூட, அதற்கு பதிலாக இங்கிருக்கும் மனிதர்களின் இருப்பை, தோரணையை, மன இயல்பை மாறா வடிவம் கொண்ட வீடுகள் பறைசாற்றிக் கொண்டிருந்தன, வாய் மூடி,முகம் திருப்பி, முதுகு காட்டி என. இருப்பினும் ஒவ்வொன்றும் தான் அமைதியான இயல்பு கொண்டதைச் சொல்லியபடி இருந்தன. வீடுகளைத் தொடர்ந்து பார்க்கப் பார்க்க இந்த இயல்புள்ளேயேகூட சிறுசிறு வித்தியாசங்கள் தெரிந்தன, வெளித் தோற்றத்தின் நிறங்கள் வெண்மையின் வெவ்வேறு கலவைகளில் இருந்தன, இந்த வீடுகளை அமைதியானவையாக தோன்றச் செய்வதே இந்த வெண்மை நிறம்தான் என்று தோன்றியது.

திருப்பூரில் இப்படி அமைதியான பகுதிகள் மிக அபூர்வம், 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நகருக்கு வந்த புதிதில் இங்கிருந்த பரபரப்புச் சூழல் கடுமையான மனவிலக்கத்தைக் கொடுத்தது, திடீர் பணவரவால் வீங்கிய நகர் இது, குண்டும் குழியுமான நெரிசலான சாலையில் ஆடி கார் போய்க் கொண்டிருக்கும், எப்போதும் பரபரத்துக் கொண்டிருக்கும், டீக்கடை, டிபன் கடை, அதைவிட பிராந்திக்கடை, எப்போதும் திருவிழா போல கூட்டமிருக்கும், ஓட்டப்பந்தயத்தின் எல்லைக் கோட்டை நெருங்கும் அவசரத்திலேயே எல்லோரும் ஓடி கொண்டிருப்பார்கள், துரித ஸ்கலிதம் போல. ஆனால் சமீப காலங்களில் பரபரப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது, பணவரவு குறைகிறதா அல்லது அனுபவ முதிர்ச்சியா என்றறிய முடியவில்லை, அல்லது இரண்டும் காரணமாக இருக்கலாம்.

பரபரப்பு இல்லாத இந்தச் சாலை என் சொந்த ஊரை ஞாபகப்படுத்தியது. அப்படியே ஊர் ஞாபகங்களில் மனம் அலைந்தது. அமைதியான குளத்தில் சிறுமீன் மேல் வந்து எட்டிப் பார்ப்பதைப் போல எதிரில் ஒரு கேட் திறந்து அதில் நடுத்தர வயது பெண்ணுருவம் என்னைப் பார்த்து பின் பார்க்காததை போல பாவித்து கேட்டை சாத்தி மறைந்தது கற்பனையில் உலவிக் கொண்டிருந்த என் மனதை கலைத்து கவனத்தை மீண்டும் சாலையின் மீது கொண்டுவந்து நிறுத்தியது, மீண்டும் வீடுகளின் அமைப்பை பார்த்து கொண்டிருந்தேன், சட்டெனத் தோன்றியது இங்கிருக்கும் வீடுகள், அவற்றின் சுவர்கள், கதவுகள், படிகள் எல்லாமே சதுரம் மற்றும் செவ்வகங்களின் வெவ்வேறு அளவுகள் என, அதுதான் எல்லாவற்றையும் ஒருபோல காண்பிக்கும் சீர்மையை தருகின்றது என்று, ஓட்டு வீடுகள் இல்லாமல் ஆனதும் முக்கோணங்களும், சாய்வுக் கோணங்களும் வீடுகளின் புற அமைப்பிற்கு தேவையில்லாமல் ஆகிவிட்டன. அதுவும் இந்தத் தெருவின் கட்டிட அமைப்புகளில் முகப்பு அலங்காரங்கள் இல்லாதது இவற்றிற்கு ஒரு மேட்டிமைத் தன்மையை அளித்தது, வெண்ணிறத் துணிகளை போல. நின்றிருந்த சில மணி நேரங்களிலேயே இடம் மிக பிடித்ததாகி விட்டது, இங்கு வீடு கிடைத்தால் கோதை மகிழ்ந்து பரவசமடைவாள் என்பதை யோசிக்கவே குதூகலமாக இருந்தது.

நேற்றிரவு தமதமாகத்தான் வீடு வந்து சேர்ந்தேன், கோதை வாசலில் சுஸ்மியை மடியில் தூங்க வைத்தபடி அமர்ந்திருந்தாள், பைக்கை நிறுத்தியபடி, “ஏன் வெளியவே உட்கார்ந்திருக்கற, பனி பெய்து,உள்ள போக வேண்டியதுதான,” என்று சொல்லியபடி அவள் அருகில் சென்றபோதுதான் அவள் முகம் அழுது வீங்கியிருந்ததைக் கண்டேன்.

“என்னாச்சு,” என்று கேட்கத் துவங்கும்போதே பதில் சொல்லாமல் எழுந்து தூக்கத்திலிருந்த குழந்தையை மார்பில் போட்டு உள்ளே சென்றாள், குழந்தையை கட்டிலில் கிடத்திவிட்டு நாளைக்கும் இந்த வீட்டில் இருந்தேன்னா நான் செத்துடுவேன் என்றாள், அவள் முகத்தைப் பார்க்கத் தயங்கி வேறு பக்கம் திருப்பி, “சரிம்மா, தூங்கு போ,” என்று சொல்லியபடி என்னிலிருந்த பதட்டத்தை மறைக்க ஏதாவது செய்ய வேண்டி உடைகள் மாற்றத் துவங்கினேன், அவள் குழந்தை மீது கைவைத்தபடி ஒரு பக்கமாக படுத்துக் கொண்டாள், கட்டப்படாமல் விரிந்திருந்த முடி முகத்தைப் பாதி மறைத்திருந்தது, இடைவெளியில் கண்கள் கலங்கி நீர் பெருகுவதைக் காண முடிந்தது, ஒன்றும் சொல்லாமல் அருகில் அவள் நோக்கித் திரும்பாமல் படுத்து கொண்டேன், நீண்ட நேரம் விசும்பல் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.

ருமல் வந்த காசநோயாளியின் சத்தத்துடன் ஒரு புராதன மொபெட் மெதுவான வேகத்தில் என்னை நோக்கி வருவது தெரிந்தது, வீடு ப்ரோக்கர் லிங்கமூர்த்தியாகதான் இருக்கும் என எண்ணிக்கொண்டேன், இதுவரை நேரில் பார்த்ததில்லை, கொஞ்சம் பழுப்படைந்த வெண்மை நிறம்கொண்ட வேட்டிச் சட்டையில் வந்து நின்றார், முன்வழுக்கைத் தலை, கம்பீரமான உடல், பெரிய மீசையின் அதீத பளபளப்பு தான் சாயம் பூசி கொண்டதை அறிவித்தபடி இருந்ததைப் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது, வேட்டியின் கரையில் அவர் இன்னொரு பகுதி தொழிலாக அரசியல் வேலையும் செய்கிறார் என்பதும் தெரிந்தது, அறிமுகப்படலம் இல்லாமலேயே, ”தம்பி,கொஞ்சம் லேட்டாகிடுச்சு, இந்த வீடுதான் வாங்க,” என்றழைத்தபடி செயற்கையான பரபரப்புடன் முன்னால் நடந்தார், நாய் முன் நின்ற அதே வீடுதான், நான் பின்தொடர்ந்து வராததை உணர்ந்து திரும்பிப் பார்த்து பின் நாயை நோக்கி, ”இது கடிக்காது வாங்க,” என்றார், நாய் இப்போது என்னைப் பார்த்து கொஞ்சம் பயந்த தோரணை கொண்டிருந்த மாதிரி தோன்றியது.

கேட்டின் ஓரத்தில் இருந்த அலாரத்தை தேடிக் கண்டடைந்து அழுத்தினார், சத்தம் கேட்டு ஒரு முதியவர் நடந்து வருவது கேட்டின் இடைவெளியில் தெரிந்தது, துளி பரபரப்பின்றி பொன்நகையை கையாள்வது போன்ற கவனத்துடன் மெதுவாக கேட்டினை திறந்தார், அவரிடம், ”முனுசாமி, பெரியவர் இருக்காரா!” எனக் கேட்டு பதில் வாங்க முற்படாமலேயே உள்ளே நடந்தார், முனுசாமி என்னைப் பார்த்து, ”வீடு பாக்கவா, உள்ள போங்க,” என்று சொல்லியபடி கேட்டை அதே இயல்புடன் சாத்தினார், எங்களைப் பார்த்தபோது அவரில் இருந்த புன்னகை பிறகு கதவை சாத்தும் பொழுதும், பின் நடந்து செல்லும் பொழுதும் இருந்தது.

பெரிய வீடு, முன்வாசலுக்கு வெளியே நேர்த்தியான மூங்கில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன, வார்னிஷ் பூசப்பட்ட மூங்கில்களைப் பார்த்தபோது பாடம் செய்யப்பட்ட இறந்த உடல்கள் என்ற பதம் ஞாபகம் வந்து அதை வலுக்கட்டாயமாக மனதிலிருந்து நீக்கினேன். லிங்கமூர்த்தி அதில் அமரச் சொல்லி தானும் அமர்ந்து கொண்டார், உட்கார தயக்கம் உண்டாகி பின் அமர்ந்து கொண்டேன், வரவேற்பு மேசையில் தினமலர் பிரிக்கப்படாமல் இருந்தது. லிங்கமூர்த்தியின் உடலில் ஒவ்வொரு கணமும் ஏதாவது ஒரு உடலசைவு வெளிப்பட்டு கொண்டே இருந்தது, முகத்தை என் பக்கமாக திருப்பி இரகசிய குரலில், “தம்பி அட்வான்ஸ் கொடுக்கும்போதே கமிஷனை கொடுத்துடுங்க,” என்றார், அவர் மீது எரிச்சலும் அதேசமயம் பிரியமும் கலந்து வந்தது, காலையில் போனில் அழைத்து இன்னைக்கே வீடு வேண்டும் என்று மன்றாடிக் கேட்டபோது, “தம்பி, சாமான் சட்டியெல்லாம் தூக்கிட்டே வந்துடுங்க, வீடு ரெடியா இருக்கு,” என்று இவர் சொன்னபோது மொத்த பாரமும் அந்த நொடியிலேயே நீங்கியதைப் போல் உணர்ந்தேன்.

உள்ளே இருந்து 70 மதிக்கத்தக்க ஒரு பெரியவர் வெளியே வந்தார், முண்டா பனியனும், வெள்ளை வேட்டியுமாக. ஒட்ட வெட்டிய தலையில் புதிதாக முளைத்திருந்த வெண் நாற்றுகள் போன்று முடிகள் இருந்தன, கழுத்து வரை வெண் மார்புமுடிகள் பரவியிருந்தன, காதுகளின் ஓரங்களில்கூட நாற்றுகள் நட்டுவைத்ததை போல சில வெண்முடிகள் இருந்தன. லிங்கமூர்த்தி அவரை பார்த்ததும் எழுந்து நின்றதை பார்த்து நானும் எழுந்து நின்றேன், ”என்னடா இந்தப் பக்கம் ஆளை காணோம்,” என்று அவர் கேட்டதற்கு லிங்கமூர்த்தி பதில் சொல்லாமல் குழைந்து சிரித்தார்.

“இந்த தம்பிதாங்க” என்று என்னைக் காட்டினார், நான் பாதி எழுந்து வணக்கம் தெரிவிப்பது மாதிரி ஒரு செய்கையை செய்தேன். அவர் உட்காரச் சொல்லிச் செய்து எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டார், முதல் வார்த்தையிலேயே ,”தம்பி என்னாளுக,” என்றார் சாதாரணமாக.

நான் அவர் சொல்வது புரியாததை போல பாவனை காட்டினேன், பிறகு அதெல்லாம் வேலைக்காகாது என்று புரிந்து கொண்டு, ”ஆசாரிங்க” என்றேன்.

“மர ஆசாரியா”

“இல்லைங்க, இரும்பு ஆசாரி”

“இல்ல, சும்மாதா கேட்டேன், என்ன பண்றீங்க”

“பிரின்டிங் காண்ட்ராக்ட்ங்க”

அவருக்கு பேசும் ஆர்வம் வந்ததை அவருடலும், முகமும் காட்டியது, ஆனால் அருகிலிருந்த லிங்கமூர்த்தியின் முகத்தில் சுணக்கம் தெரிந்தது.

“தம்பி, இந்த ஏரியாவே முன்னாடி எங்களோடதுதான், முன்னாடி பஸ் போற ரோடுல இருந்து பின்னாடி இருக்கற பி டி காலனி வரைக்கும், பி டி காலனிகூட அந்த காலத்துல எங்க பெரியவங்க வெளியிலிருந்து விவசாயக் கூலிகளா வந்தவங்களுக்கு தங்கறதுக்கு தானமா கொடுத்த நிலம்தான், அது மொத்தம் 5 ஏக்கர், இப்ப அங்க சென்ட் 9 லட்சம் போவுது”

நான் ஆர்வமாக கேட்பதைப் போல பாவனை செய்தேன், லிங்கமூர்த்தி பாதி எழுந்து நின்று, ”அப்ப வீட்டை பாக்களாங்களா,“ என்றார், பெரியவர் அவரைப் பொருட்படுத்தவே இல்லை, லிங்கமூர்த்தி ஏமாற்றமாகி என்னை திரும்பிப் பார்த்தபின் பழையபடி அமர்ந்து கொண்டார், ஏதோ வாய்க்குள் முணுமுணுப்பது தெரிந்தது.

“கடைசியா இந்த வீதி என்னோட பாகமா வந்துச்சு, நா பிளாட் போட்டு வித்துட்டேன், இப்ப ஐயோனு இருக்கு, வித்ததுக்கு இப்ப 10 மடங்கு விலை கூடி போச்சு”

“முன்னாடி விவசாயம்களா…”

“தம்பி அது காசை விடற பொழப்பு, ஆனா இப்பவும் மனசு அத விட மாட்டேன்கிது, இப்பக்கூட இரண்டு நாட்டுமாடு பின்னாடி கிடக்கு, தினம் 1.5 லிட்டர்தான் கறக்குது, நா ஜெர்சிதான் வாங்கச் சொன்னேன், நாட்டுமாடு வச்சாதான் கவுரவம்னு பையன் திட்டிவிட்டு இத வாங்கிக் கொடுத்தான்”

“பையன் என்ன செய்யறார்ங்க”

“பனியன் தொழில்தான், முன்ன நிறைய பணம் நாசம் பண்ணிட்டான், பிறகு மறுபடியும் கொஞ்சம் நிலம் வித்துக் கொடுத்து பணம் போட்டு, இப்ப நல்லா போகுது, முன்ன நிக்கறது அவனோட இரண்டு கார்ல ஒன்னுதான், இப்பதான் வாங்கினான், ஒரு காரை ரெண்டு வருஷம் கூட வைக்க மாட்டேன்றான், அதுக்குள்ள மாத்தி வேறொன்ன வாங்கிடறான்”

திரும்பி காரைப் பார்த்தேன், தான் பென்ஸ் என்பதை ஒவ்வொரு பாகத்திலும் சொல்லியபடி நின்றிருந்தது, அதன் வெண்ணிறம் ஏனோ வெள்ளைக்காரியை ஞாபகப்படுத்தியது.

லிங்கமூர்த்தி கடுப்பாகி இப்போது எழுந்தே நின்று விட்டார், பின் இடைபுகுந்து, ”அய்யா நேரமாச்சுங்க,” என்றார்.

பெரியவர் புதிதாக யாரையோ பார்ப்பதைப் போல லிங்கமூர்த்தியைப் பார்த்து பிறகு, ”சரி போய்ப் பாரு, திறந்துதான் இருக்கு, டே முனுசாமி…” என்று அழைத்தார்.

அடுத்த இரண்டு நொடிகளில் முனுசாமி அங்கு வந்து நின்றது ஆச்சிரியமாக இருந்தது, அதே மாறாத குழந்தைமை புன்னகை.

“போய் காட்டிக் கொடு, போடா”

“சரிங்க”

மூவரும் பின்பக்கம் நடந்தோம், பெரியவர் மறைந்ததும் லிங்கமூர்த்தி கோபத்துடன், ஆனால் சத்தமில்லாமல் என்னிடம் கத்தினார், ”வீடு பாக்க வந்தியா, அரட்டையடிக்க வந்தியா?” நான் பதிலேதும் சொல்லவில்லை, திரும்பி முனுசாமியைப் பார்த்தேன், அவர் சிரித்தார்.

வீடு நான் எதிர்பார்த்ததை விட பெரிதாகவும் அழகாகவும் இருந்தது, மெல்ல உள்ளுக்குள் ஒரு நடுக்கம் ஆரம்பித்தது. லிங்கமூர்த்தியிடம், ”வாடகை எவ்வளோ சொல்றாங்கண்ணே” என்றேன்.

“16 ஆயிரம்”

தொண்டை விக்கித்துக் கொண்டதை போல் உணர்ந்தேன், அட்வான்ஸ் பற்றி அவரிடம் கேட்காமலேயே மனதிற்குள் கணக்கிட்டேன், என்னால் திரட்ட முடியாத தொகை.

திரும்ப வெளிவந்தபோது பெரியவர் அங்கேயே அமர்ந்திருந்தார். “தம்பி வீடு பிடிச்சதா” என்றார் ஆர்வமாக.

“பிடிச்சதுங்க, வீட்டுல பேசிட்டு லிங்கம் அண்ணன்கிட்ட சொல்லிடறேங்க”

நான் சொல்வதிலேயே நான் வரமாட்டேன் என்பதை அவர் யூகித்துக் கொண்டதை அவர் முகம் காட்டியது.

“இரண்டு நாள்ல வந்துடுறேங்க,” சொல்லும்போதே இது சாத்தியப்படாது என மனதிற்குள் எண்ணம் வந்து போனது. கேட்டருகில் வந்தபோது முனுசாமி புன்னகையுடன் விடை கொடுத்தார்.

வெளியே வந்ததும் லிங்கமூர்த்தி, ”சரி தம்பி, யோசிச்சு சொல்லுங்க, வந்த பிறகு வாடகை ஜாஸ்தின்னெல்லாம் திணறக் கூடாது, முடியும்னா சொல்லுங்க,” என்றபடி மொபட்டுக்கு உயிர் கொடுக்கத் தொடங்கினார். பின் அந்தச் செயலை நிறுத்தி ஏதோ யோசித்து, ”தம்பி இவனுங்களுக்கு இது பரம்பர சொத்து, தொழில்ல நொடிஞ்சாங்கன்னா ஒரு துண்டு எடுத்து வித்தா போதும்,மீண்டுடுவானுக, நிலம்கிறது என்னனு நினைக்கற, தங்கப் புதையல் அது,” என்றார். நான் பதில் சொல்லாமல் புன்னகைத்தேன்.

” நீயும் நானும் இப்படி தெருத்தெருவா அலைஞ்சாதான் காசு, காலம் பூரா அலஞ்சாலும் ஒரு துண்டு நிலம் கூட வாங்க முடியாது”

“அண்ணே, அது அவங்க அதிர்ஷ்டம், முந்தின தலைமுறைக சம்பாதிச்சுக் கொடுத்ததை அவங்க அனுபவிக்கறாங்க, நமக்கு அந்த கொடுப்பின இல்ல, அவ்வளவுதான்”

” மண்ணாங்கட்டி, இது சம்பாதிச்சு வந்த சொத்தில்ல, முன்னாடி அவங்க பாட்டபூட்டனுக பிடிச்செடுத்த நிலம் இது, அவ்வளவுதான், முதல்ல அவங்க வச்சுருந்ததால அவங்களோடதாகிடுச்சு, பின்னாடி வந்தவன் எல்லாம் நிலம் இல்லாம ஆகிட்டானுக, இதான் நிஜம்”

பதில் சொன்னால் பேச்சை வளர்ப்பார் என எண்ணி வெறுமனே கேட்பதை போல முகத்தை வைத்து கொண்டேன்.

“தம்பி, இவங்க முன்ன விவசாயத்துக்காக சும்மா கிடந்த நிலத்தை பிடிச்செடுத்தாங்க, அப்படியே அவங்களோடதாக்கிட்டாங்க, இப்ப இந்த பனியன் தொழில் இங்கு வந்து நிலத்தை பொன்னு விலைக்கு ஏத்திடுச்சு, இவனுக கஷ்டப்படாமையே பணக்காரங்க ஆகிட்டாங்க, அவ்வளவுதான், தம்பி ஒன்னு மட்டும், எவனுக்கும் தன் தேவைக்கு மீறி இருக்கற நிலம் அவனொடதில்ல,” பேச்சில் பொங்கி உணர்ச்சியில் மேலேறியவர் சொல்லி முடித்ததும் அமைதியாகி நிதானமானார்.

பிறகு, ”சரி தம்பி, மறுபடியும் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க, அட்வான்ஸ் கொடுக்கும்போதே கமிஷன் கொடுத்துடுங்க, அலைய வச்சுடாதீங்க”

எனக்கு உடனே கோதையின் அவளுக்கு மிக பிரியமான தங்க முறுக்குச் சங்கலி ஞாபகம் வந்தது, அது பத்தாது என்று தோன்றியவுடனே மாமனார் சுஸ்மிக்கு போட்ட மெல்லிய வளையலும் ஞாபகம் வந்தது.

லிங்கமூர்த்தி, ”தம்பி ஊர்ல சொந்தமா வய வீடு ஏதும் இருக்குங்களா?” என்று கேட்டபோதுதான் புத்தி கணக்கிடலிலிருந்து வெளியேறி மீண்டது.

“இல்லைண்ணா, இருந்தது எல்லாம் போச்சு, இனிதான் வாங்கணும்”

“தம்பி, நமக்குன்னு ஒரு இடம் இல்லைன்னா வேர் இல்லைன்னு அர்த்தம், இப்படி வருசத்துக்கு ஒரு முறை, ஆறு மாசத்துக்கு ஒருமுறை தெருத்தெருவா தேடி அலைஞ்சுட்டு இருக்கணும், முதல்ல சம்பாதிச்சு ஒரு இடம் வாங்கி போடுங்க, பிறகு அங்க தன்னால அதுல வீடு கட்டிட முடியும், நிலம்கிறது நமக்கான சொத்து இல்ல, நமக்கு பிள்ளைகளுக்கு, பிள்ளையோட பிள்ளைகளுக்கு நாம கொடுக்கற நிம்மதி, உள்ள பார்த்தீங்கள கிழவனை, என்ன திமிரா, ஒரு கவலையுமில்லாம இருக்கான்னு?” பிறகு முகபாவத்தில் லேசான புன்னகையுடன் விடைபெற்றுக் கிளம்பினார்.

பைக் எடுத்துக் கிளம்பும் கிளம்பும்போது திடீரென ஞாபகம் வந்து அந்த நாயைத் தேடினேன், அங்கு முன்பு இருந்த இடத்தில் காணவில்லை, திரும்பிப் பார்த்தபோது எதிர் இடத்தில் இருந்தது, நிழல் காரணமாக இடம் மாறி இருக்கிறது, என்னைப் பார்த்ததும் எழுந்து நின்றது, ஆச்சரியமாக குரைக்காமல் வாலாட்டியது, பைக்கிலிருந்து இறங்கிச் சென்று அதன் புறங்கழுத்தை தடவிக் கொடுத்தேன்.

தனிமையை வரைபவன் மற்றும் சில ஏ.நஸ்புள்ளாஹ் கவிதைகள்

ஏ. நஸ்புள்ளாஹ்

அவளிடம் மட்டுமே திருடிய சொற்கள்.

அவளது கலாசாரம்
வித்தியாசமான சூழலின்
சொற்களால் திருடப்பட்டிருந்தது.

அவள் வழமையாக வந்தமரும்
அந்த இருக்கையில் அமர்ந்தாள்.

பின் மல்லாந்து
படுத்துக் கொண்டு
அவளது முகத்தில் விழுந்த
மழைத் துளிகளை வாங்கி
மிகவும் சுதந்திரமாய் ரசித்தாள்.

நடைபாதையில் பயணிக்கும்
மக்களின் வாழ்வும் இயக்கமும்
கடவுளின் வரம் என உணர்ந்தாள்.

சாரல் மழை
மெல்லியதாய்
அவளுக்குச் சுட்டது.
அவள் பறவையாக தொலைந்தாள்
மனதில் சிறகுகள் விரிந்து
மேகத்தில் ஏறினாள்.

தனிமையை வரைபவன்

நேற்றும் தனிமையை வரைய வேண்டியிருந்தது
தனிமையை ஓர் இரவாக வரைந்தேன்
இரவிற்குள்
சில நட்சத்திரங்கள் வந்தமர்ந்தன
இன்னும் சில பறவைகளும்
வந்து சேர்ந்தன
நிலா ராஜகுமாரி மேகத்திற்குள்
மறைந்து மறைந்து
புதிது புதிதாய் காட்சி தந்தாள்
பேச்சுக்கு துணை கிடைத்தது
ஒரு யுகத்தைக் கடந்தது போல் இருந்தது

தனிமை கறுப்பு நிறத்தையொத்தது
அது ஒரு பெரும் வனத்தின்
இருளை என் மீது சுமத்தியிருக்கிறது
இருள் என்பதும்
ஒரு வகை வலிதான்
அதனைத்தான்
பல நேரங்களில் தலையணைக்கடியில்
மறைத்து வைக்க வேண்டியிருக்கிறது
எப்படி மறைத்து வைத்த போதும்
அறை முழுக்க அது பரவிடுகிறது

இப்போது
மூன்றாம் சாமம் தாண்டியிருந்தது
தனிமையை ஒரு பகலாக வரையத் தொடங்குகிறேன்
பகலுக்குள் சில மனிதர்கள் நடமாடலாம்.

 

சாம்பனின் பாடல் – தன்ராஜ் மணி சிறுகதை

தன்ராஜ் மணி

மண்ணுருக மணல் கொதிக்க
நீரவிய , செடி கருக
சித்திரை வெயில்
சுட்டெரித்த மதிய வேளையில்
அப்போர் நிகழ்ந்தது
பனையின் அடிமரம் போல் கருத்த மேனியும்
கற்பாளம் போல் மார்பும்
அளவெடுத்து அடித்து வைத்த
கோவில் தூண் போன்ற கைகளும்
அக்கைகளின் நீட்டம் போல்
கதிரொளியில் மின்னும் போர் வாளும்
தன் உதடுகளில் மெல்லிய
புன்னகையும் சூடி
குதிரையில்
வீற்றிருந்தான் தளபதி சாம்பன்-
தோல்வியறியா மாவீரன்
பகைவர்க்கு காலன்

போர் முரசம் கொட்டத் தொடங்கியது
இடியும் மின்னலுமென
வான் விட்டு மண்ணிறங்கும்
பெருமழையென
சாம்பனின் படை
கொம்புகள் பிளிற
முழவுகள் முழங்க
பறைகள் அதிர
பகையரசின் படை மேல்
பொழிந்தது
ஒரு மின்னல் மின்னி மறையும்
பொழுதில் பகைவரின்
படை வீரர்கள் மண்ணில் கிடந்தனர்
எதிர்பட்ட தலைகள் கொய்து
மார்கள் பிளந்து
கொழுங்குருதி ஆடி
சாம்பனின் கைகளில் நின்றது
அவன் வாள்
படை நோக்கித் திரும்பி நின்று
வான் நோக்கி உயர்த்தினான்
தன் செவ்வாளை
வெற்றிக் களிப்பில்
ஆர்த்தது படை

புறமுதுகிட்டோடிய
பகையரசனின் உபதளபதி
வாள் உயர்த்தி ஆர்ப்பரிக்கும்
சாம்பனைக் கண்டான்
தோல்வியின் சீற்றம் எழ
வெறி கொண்டு குதிரையை
சாம்பனை நோக்கிச் செலுத்தினான்
அருகணைந்தால் தலை தப்பாது
என தெளிந்து ஈட்டி தாக்கும் தொலைவிலிருந்து
தன் கையிலிருந்த ஈட்டியை
சாம்பனின் முதுகை நோக்கி வீசினான்
ஈட்டி தன் பின்னால் அணுகுவது
சாம்பனின் மனம் அறிந்தது
சாம்பன் குதிரையை திருப்பினான்
ஈட்டி சாம்பனின் மாரைத் துளைத்து
முதுகில் வெளிவந்தது
அந்நிலையிலும் தன் கையிலிருந்த
வாளை வேல் போல வீசினான் சாம்பன்
அது உபதளபதியின் மார் பிளந்து குத்தி நின்றது.
கொதித்தனர் சாம்பனின் வீரர்கள்
கதறினர் வெறி கொண்டு
பகையரசின் படைகளை
துரத்திச் சென்று ஒருவர் மிஞ்சாமல்
வெட்டி சாய்த்தனர்
அதிலும் நிறைவுறாமல்
பகை நாட்டில் புகுந்தனர்
ஊர்களை எரித்தனர்
குளங்களில் நஞ்சிட்டனர்
கண்டவரை வெட்டி வீசினர்
சாம்பல் பூத்த மண்ணையும்
புகை மூடிய விண்ணையும்
சமைத்துவிட்டு
தங்கள் நாடு வந்து சேர்ந்தனர்
நாடே கதறியது
குலம் கண்ணீரில் கவிந்தது
சாம்பன் மாவீரனாய் மண்ணில்
விதைக்கப்பட்டான்
விதைக்கப்பட்ட பதிமூன்றாம் நாள்
நடுகல்லாய் நடப்பட்டான்
நாள்தோறும் பூசனை ஏற்றான்
குலப்பாடல்களில் நிறைந்தான்
வெறியாட்டில் தம் குலத்தாரில்
இறங்கி நற்சொல் உரைத்தான்
சாமி ஆனான்

இன்னும் சில காலம் சென்றது
பகையரசு சாம்பலிலிருந்து
எழுந்தது
புகை போல் படை கொணர்ந்து
நாட்டைச் சூழ்ந்தது
அது வஞ்சத்தின் வெறி கொண்டிருந்தது

சாம்பனின் வீரகதைகள் உருமியுடன் உருவேற்ற
அவன் கொடிவழியினர்
அவன் வெற்றிகளின் பெருமிதங்கள் கண்ணில் மிதக்க
பகைவர்கெதிராக போருக்கெழுந்தனர்
வஞ்சத்தின் வெறி
பெருமிதத்தின் மிதப்பின்
மேல் வெற்றி கொண்டது

இது பகைவரின் முறை…
அவர்களின் வாட்கள்
எதிர் வந்த அனைத்தையும் தீண்டி
செம்மை குளிக்க தொடங்கின
போரில் தப்பிய சிலரும்
பெண்டிரும் குளவிகளும்
சாம்பனின் நடுகல்
வண்டியில் முன் செல்ல
கண்ணீரும் கதறலுமாய்
அதன் பின் நடந்தே
பகைவனின் வாளும் வஞ்சமும்
தீண்டா தொலை நிலம்
சென்று சேர்ந்தனர்

சாம்பன் புது நிலத்தில் நடப்பட்டான்
அன்னத்திற்கு பதிலாய் ஆற்றாமையும்
குருதிக்கு மாற்றாய் கண்ணீரையும்
படையலாய் கொண்டான்
சோற்றுக்கு வழியில்லாத குடிக்கு
தினம் தினம்
பூசை செய்ய வாய்க்கவில்லை
நாள் பூசை வாரமாகி
வாரம் மாதமாகி
மாதம் வருடமாகியது
வருடத்திற்கு ஒரு முறை
சித்திரை முழு நிலவு நன்னாளில்
வான் பார்க்க பொங்கலிட்டு
பல விலங்கு பலி கொடுத்து
ஊர் கூடி குலவையிட்டு
பேர் சொல்லி புகழ் பாடி
அவனை ஏத்தி வணங்கியது
அவன் குடி

இனியும் ஒரு காலம் வந்தது
வாள் வீச்சும் மற்போரும்
வீரமும் மறமும்
சோறும் பேரும் தராது,
சிறையும் இழிவும் தந்தது
பழம் பெருமை பொருளாகாமல் போனது
அழியாப்புகழ் அன்னமாகாமல் போனது
உயிர் உடல் தங்க சாம்பனின் குடி
வேல் விட்டு
வேறு வேலை தேடி போனது
சோறீட்டச் சென்ற குடி
சொல் பேண நேரமற்றுப் போனது
மண் மறைந்த இறுதி குலப்பாடகனுடன்
சாம்பன் சொல்லில் இல்லாமல் ஆனான்
சொல் பேண நேரமில்லையெனினும்
வருடத்திற்கொரு பூசை
சித்திரை முழு நிலவில்
வான் பார்க்க பொங்கலிட்டு
பல விலங்கு பலி கொடுத்து
ஊர் கூடி குலவையிட்டு
அவன் புகழை மனதில் நிறுத்தி
வணங்கியது
அவன் குடி

இனியும் ஒரு காலம் வந்தது
கரப்பானும் கருகிச் சாகும்
பஞ்சம் சூழ்ந்தது
கொத்து கொத்தாக சாவு விழுந்தது
மக்கள் கூட்டம் நாதியற்று போனது
குடிகள் பிழைக்க ஊர் விட்டெழுந்தது
சாரி சாரியாய் சோறிருக்கும்
திசைகள் நோக்கி சிதறி சென்றது
அரை உயிர் ஏந்தி அன்னம் தேடி
சென்ற குடிக்கு
சாம்பனை தூக்கி சுமக்கும்
வலுவற்று போனது

எம் உயிரில் நீ கலந்திருப்பாய் எப்போழுதும்
உயிர் தங்கி பிழைத்திருந்தால் வந்திடுவோம் அப்பொழுதும்
என்று சொல்லி
நட்ட இடத்தில் அவனை நிற்க விட்டு
கண்ணீருடன் விடை கொண்டது

புகழ் சூடி வாழ
வாள் தூக்கி சமர் செய்த குடி
ஒரு வேளை களி உண்டு வாழ
வாழ்வோடு பெரும் சமர் செய்தது
பலிகள் பல வலிகள் பல கடந்து
பஞ்சம் வென்று பிழைத்து நின்றது
உயிர் இனி தங்கும் அது உறுதி என்றானதும்
சாம்பன் குடிகளின் கனவுகளில் எழுந்தான்
மறந்திருந்த குடி அனைத்தும்
அவனை நினைவில் எழுப்பியது
நம் தெய்வம்
நமக்காக தனித்திருக்கிறது
நம்மை காக்க ராப்பொழுதும் விழித்திருக்கிறது
அதைப் பசித்திருக்க விட்டு விட்ட
தம் நிலையை நொந்து கொண்டது
சிதறிவிட்ட குடி கூடி பூசை வைக்க வாய்ப்பில்லை
கனவில் கண்ட குடிகள் மட்டும்
சாம்பனைக் காண ஊர் சென்றது
மண் மூடி புதர் அண்டி
மறைந்திருந்த சாம்பனை
கண்ணீர் வழிய அகழ்ந்தெடுத்து
நீராட்டி தூய்மை செய்து
வான் பார்க்க பொங்கலிட்டு
ஒரு சிறு கோழி பலி கொடுத்து
காத்தருள வேண்டி நின்றது

வருஷத்துகொருக்கா வந்து போக ஏலாது
ஒண்டிக்கிட்ட எடத்துக்கும்
கூட்டிப் போக முடியாது
அதனால எஞ்சாமி
முடிஞ்சப்போ நாங்க வர்ரோம்
முடிஞ்சத செஞ்சு தர்ரோம்
கோவிக்காம ஏத்துக்கப்பா
எங்கள எல்லாம் காப்பத்தப்பா
எங்க குல சாமி நீதானப்பான்னு
அழுது பொலம்பிச்சு சனம்
மனசெறங்கின கொல சாமி
“உன் புள்ளைக்கி மொத சோறு
எம் முன்னால ஊட்டு
நீ அறுத்த மொத கதிர
எனக்கு பொங்கி போடு

நீ தொடங்கும் எதுவானாலும்
என் காலடியில் தொடங்கு
இத மட்டும் தப்பாம செஞ்சியனா
இனிமேலு ஒன்னுத்துக்கும்
கொறவில்ல உங்களுக்கு
வூடு நெறய புள்ளைங்களும்
குதிரு நெறய தானியமும்
பொட்டி நெறய பொன்னும் மணியும்
பொங்கி பொங்கி பெருகும்”னு
பெரியாத்தா மேல ஏறி வந்து
போட்டுச்சு உத்தரவு

சனம் மொத்தம் கன்னத்துல போட்டுகிட்டு
தப்பாம செஞ்சிருவோஞ் சாமி
கொறவொண்ணும் வெக்காம இனின்னு
சூடந்தொட்டு சத்தியம் பண்ணுச்சி

சாமி சொல்ல தட்டாம பக்தியோட
இருந்துச்சு சனம்
சாமியும் மனங்குளுந்து போயி
எட்டு மங்கலமும்
பதினாறு செல்வங்களும்
எட்டுக்கண் விட்டெரிய
வாழுற ஒரு வாக்கயயும்
சனங்களுக்கு வாரி வாரி
குடுத்துச்சு

ஒண்டிக் கெடந்த எடத்துல
ஓங்கி வளந்த சனம்
இன்னும் ஒசரம் தேடி
பல ஊரு பரவி குடி போச்சி
ஒதுங்க எடமில்லாம திரிஞ்ச சனத்துக்கு
போய் ஒக்காரும் எடமெல்லாம் சொந்தமாச்சு
பருக்க சோத்துக்கு பல நாள் பரிதவிச்ச சனத்துக்கு
பருப்பும் நெய்ச் சோறும்
பாலும் பாயாசமும்
எல நெறச்ச தொடு கறியும்
கவிச்சும் காய் கனியும்
ஒரு நாளும் கொறயல

வசதிய தொரத்திப் போன சனம்
வசதியா சாமிய மறந்து போச்சு
சாமி குத்தம் ஆகிப் போகும்னு
பயத்துக்கு பொங்க வெச்சு
சாங்கியத்துக்கு ஆடு வெட்டி
பேருக்கு கும்பிடு போட்டுட்டு
நிக்க நேரமில்லாம ஒடுச்சு சனம்

சனத்துக்கு இப்போ
பல ஊரு சொந்தம்
ஆனா சாமிக்கு வாச்சது அதே
வன்னி மரத்தடி தஞ்சம்

பயப்பட்டு வந்தாலும்
படையலிலே
கொறவில்ல
பொங்கச் சோறும்
பலியாடும் பகுமானமா
பாத்து செஞ்ச
சனத்துக்கு
எதுக்கு செஞ்சோம்
ஏஞ் செஞ்சோம்
தெரியல்ல
செஞ்சியினா
அள்ளி தரும்
செய்யாட்டி
கொன்னுப் போடும்
பாத்துக்கனு
சொல்லி சொல்லி
வளந்த சனம்
நான் குடுக்கேன்
நீ குடுனு
சாமிகிட்ட வேவாரம்
பேசுச்சு
கொற காலம் இப்படி போக
வந்துச்சி ஒரு புது காலம்.

 

“பெரியவனுக்கே சொல்ல சொல்ல கேக்காம குருவாயூர்ல போயி சோறு ஊட்டிட்ட, இவளுக்காவுது நம்ம கொல சாமிக்கு முன்னாடி செய்யனுண்டா” என்றார் அம்மா.

“ஏம்மா தொண தொணனு சொன்னதயே சொல்லிட்டு இருக்க. அந்த காட்டுக்குள்ள கை கொழந்தய தூக்கிட்டு எப்புடி போறது? ரோடு சரியில்ல , தங்கறதுக்கு பக்கத்துல ஒரு நல்ல ஹோட்டல் கூட இல்ல, பேசாம இருமா, குருவாயூர்லயே இவளுக்கும் செஞ்சிரலாம் , எல்லாரும் இப்ப அங்கதான் செய்றாங்க, அப்படியே ஆழபுழா போனம்னா ஒரு ரெண்டு நாளு நல்லா ரிலாக்ஸா இருந்துட்டு வரலாம்” என்றான் அரவிந்த்.

“உங்கப்பாரு பத்து வருசமா கொலசாமிக்கு படையல் வெச்சிரனும்னு சொல்லிகிட்டே இருந்தாரு, பண்ண முடியாமயே போய்ட்டாரு. நா போய் சேர்ரதுக்குள்ளயாவுது ஒரு படையல போட்டுட்டு வந்துரலாம்னா… “ முடிக்காமலே கேவ ஆரம்பித்தார்.

“எப்பப் பாரு எமோஷனல் ப்ளாக் மெயில்” என்று சிடு சிடுத்து விட்டு, மொபலை எடுத்தான்.

“மாமா, எப்படி இருக்கிங்க, ஆங் எல்லோரும் சூப்பர் மாமா. ஆங் நடக்கறா இப்போ. ஒன்னில்ல மாமா அம்மா குலதெய்வம் கோயில்ல வெச்சுதான் தியாவுக்கு அன்னப்ப்ரசன்னம் பண்ணனும்னு சொல்லுது, எப்படி என்னானு கேக்கலாம்னு”.

“…”

“நானும் அதத்தான் சொன்னென் மூணு நாளா ஒரே பாட்ட பாடிகிட்டு இருக்கு, இன்னைக்கி ஒப்பாரியே வெக்க ஆரம்பிச்சிருச்சு அதான் போய்ட்டு வந்துரலாம்னு. மாமா நீங்களும் கொஞ்சம் வரிங்களா , சேலம் வரைக்கும் போயிருவேன் அங்கருந்து ஊருக்கு எப்படி போகனும்னெல்லாம் தெரியல, கூகுள் மேப்ல ஊரு பேரே வரல”.

“…”

“ரொம்ப தாங்க்ஸ் மாமா, ஆங் நான் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்”.

“சந்தோசமா..,? கொஞ்சம் ஒப்பாரிய நிறுத்து, இந்த வீக் எண்ட் போயிட்டு வந்துரலாம். சண்முகம் மாமா வர்றாரு கூட. அவரு நம்ம கூடதான் கடைசியா வந்தாராம், கேட்டுகிட்டு போயிரலாம்னு சொன்னாரு”.

வெள்ளி மாலை அரவிந்த் குடும்பம் அவன் மாமாவோடு கிளம்பியது.
வண்டி ஏறியவுடனே உற்சாகமாகப் பேச ஆரம்பித்துவிட்டார் மாமா. பல வருடம் கழித்து குலதெய்வம் கோயில் போகும் குஷியில் இருந்தார். “உங்க பைப்பு கம்பெனி ஆரம்பிச்சப்பதான் கடைசியா போனது, ஏங்க்கா ஒரு இருவது வருசமிருக்குமா?” என்றார்.

“மேலயே இருக்கும்” என்றார் அம்மா.

“அந்த ட்ரிப்ப மறக்கவே முடியாது. கோயிலுக்கு போறதுக்கு ரோடே கெடயாது, முள்ளுக்காட்டுல ஒத்த அடி பாத மாதிரி இருக்கும். போற வழியில அந்த முள்ளுக் காட்டுக்குள்ள வேன்ல நால்ல மூணு டயரு பஞ்சராயிருச்சு, அப்பெல்லாம் ஏது மொபைலு, நானும் சேகருந்தா நாலு கிலோமீட்டர் நடந்தே ஊருக்குள்ள போயி லிப்ட்டு கேட்டு சங்ககிரி போயி ஆளு கூட்டியாந்து…, போதும் போதும்னு ஆயிருச்சு. அதுக்கப்புறம்தான் அங்க போற ஆசயே உட்டுப்போச்சு போ” என்றார்.

“மாமா, தமிழ் நாட்ல குக்கிராமுத்துகெல்லாம் ரோடு இருக்குனு சொல்றாங்க நம்மூருக்கில்லயா” என்றான் அரவிந்த்.

“ஊருக்கு ரோடு வசதியெல்லாம் அப்பவே இருஞ்ச்சிடா. ஊரு நம்ம கோயில் இருக்க எடத்துல இருந்து பல வருசத்துக்கு முன்னாடியே ஒரு ஆரேழு கிலோமீட்டர் தள்ளிப் போயிருச்சு. ஊரு தள்ளி போனதுல பொழக்கமில்லாம கோயில சுத்தி இருக்க ஏரியா பூராவும் முள்ளுக்காடா ஆயிப்போச்சி. ஊருக்கு வெளியே இருந்து அந்த முள்ளுக் காட்டுக்குள்ள போறதுக்குதா இவ்ளோ சிரமம்”.

“இன்னுமும் அப்படியேதா இருக்குமா அப்போ?” என்றான் அரவிந்த் கவலையாய்.

“கண்ல பாக்குற எல்லா நெலத்தையும் ப்ளாட் போட்டு வித்துகிட்டு இருக்கானுங்களே, அந்த காட்ட மட்டும் உட்டா வெச்சிருக்க போறானுங்க. புதுசா ஏதாவுது ஒரு நகர் முளச்சிருக்கும் காட்டுக்குள்ள, “ என்றார் சிரித்துக் கொண்டே.

அரவிந்த் “நம்ம சொந்த காரங்க யாருமே பக்கமா போவலயா அங்க?”

“நீ போன் பண்ணப்பறம் நானும் எல்லாத்துக்கும் போன போட்டு பாத்தேன், யார கேட்டாலும் போயி பத்து வருசமாச்சு, எட்டு வருமாச்சுனு தான் சொல்றானுங்க, கொழந்தங்க சோறூட்டுக்குதான் நிறைய பேரு போயிட்டிருந்தாங்க, கொழந்தங்கள தூக்கிட்டு அந்த காட்டுக்குள்ள இப்படி போக வர ரொம்ப செரமமா இருக்குனு எல்லாரும் வேற வேற கோயில்ல, வீட்லனு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. வேற பக்கம் இருக்க நம்மாளுங்க யாராவுது போவாங்கலா இருக்கும்.” என்றார் மாமா.

அதன் பிறகு அவர் கோயில் சென்ற அனுபவங்களையெல்லாம் சிறு குழந்தைக்குரிய ஆர்வத்துடன் வாய் சலிக்காமல் சொல்லி கொண்டே வந்தார். தங்க நாற்கர சாலையின் தயவில் நினைத்ததைவிட சீக்கிரமாக சேலம் வந்து சேர்ந்தனர். அரவிந்த் ராடிஸனில் ஏற்கனவே இரண்டு ரூம் புக் செய்து வைத்திருந்தான்.

“ரோடெல்லாம் சூப்பரா இருக்குல்ல மாமா, டோலு தான் வெச்சு தீட்றான் பரவால்ல இவ்ளோ சீக்கிரம் வந்துட்டோம்ல. நல்லா தூங்கிட்டு காலைல ஒரு எட்டு மணிக்கு போனா போதுமில்ல மாமா” என்றான் அரவிந்த்.

“டேய், காலைல ஆறு மணிக்கெல்லாம் கிளம்பிறுவோம், போயி எடத்த வேற கண்டு புடுக்கணுமில்ல. அப்பறம், ஆளு யாரும் கொஞ்ச நாளு வராம போயிருந்தா நாமதான் முள்ளு வெட்டி, சுத்தம் பண்ணி, பண்ணாரி பொடி போட்டு சாமிய கழுவினு எல்லாம் பண்னனும், அதுக்கு ஊருக்குள்ள இருந்து ஆளு வேற கூட்டிடு போவனும், நீ பாட்டுக்கு லேட் பண்ணிட்டு இருக்காத” என்றார் மாமா.

“சரி மாமா, ரெடி ஆயிட்டு வந்துர்ரோம்” என்றான்.

காலையில் ஐந்து மணிக்கே மாமா வந்து கதவை தட்டிவிட்டார்.

“தூக்கமே புடிக்கலக்கா, போயி சாமிய பாத்துட்டம்னா கொஞ்சம் நல்லாருக்கும்” என்றார் பல் தெரிய சிரித்து கொண்டு.

“எனக்கும் என்னவோ தூக்கமில்ல சண்முகம், அவங்கெல்லாம் நல்ல தூக்கம், இப்பதான் எழுப்பி உட்டேன், குளிச்சிட்டு இருக்காங்க, காப்பி சாப்புடுரியா” என்றார் அம்மா.

“எதுவும் வேணாடாங்கா எல்லாம் அங்க போயி பாத்துக்கலாம்” என்றார் மாமா.

அரை மணி நேரத்தில், பட்டு வேட்டி, சட்டை, சேலை, பட்டு பாவாடை என கட்டி தயாராகி வந்தனர் அரவிந்தும், அவன் மனைவியும் , குழந்தைகளும்.

“அம்மா காபி சொன்னியா” என்றான் அரவிந்த்.

“நாந்தான் வேணாம்னு சொன்னேன், அங்க போயி பாத்துக்குலாம், கொழந்தங்களுக்கு ஏதாவுது வேனும்னா வேணா சொல்லு, பார்சல் பண்ணி கார்ல எடுத்துட்டு போயிரலாம்” என்றார் மாமா.

“அவங்களுக்கெல்லாம் ஊர்ல இருந்தே கொண்டாந்தாச்சு, சுடு தண்ணி மட்டும் ப்ளாஸ்க்ல எடுத்துகிட்டா போதும். ஒரு காபி குடிச்சிட்டு போயிரலாம் மாமா” என்றான் அரவிந்த்.

“சீக்கிரம் போனா வேல செய்ய ஆள் கிடைக்கும், இல்லனா அவங்கெல்லாம் வேற கூலி வேலைக்கு போயிருவாங்கடா, சொன்னா கேளு அங்க போயி பாத்துக்கலாம் வா” என்று அவனை தள்ளிக் கொண்டு போனார் மாமா.

அரவிந்த் கீழே வந்து காரை எடுத்தான். வெளியில் இருந்த செக்யூரிட்டியிடம் ஊர் பெயரைச் சொல்லி வழி கேட்டான்.

“அந்தூருங்களா, கோயமுத்தூரு போற ரோட்ட புடிங்க,சங்ககிரி தாண்டி கேளுங்க சொல்லுவாங்க” என்றார் செக்யூரிட்டி.

“இது மாமாங்கம்னு போர்ட பாத்தாதா தெரியுது, எல்லாம் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போச்சு” மாமா ஒவ்வொரு ஊர் தாண்டும் போதும் அவர் முன்பெல்லாம் வந்த போது அந்த ஊர் எப்படி இருந்தது என மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டே வந்தார்.

சங்ககிரி வந்தது, பை பாஸில் இருந்து இறங்கி ஊருக்குள் காரை விட்டான் அரவிந்த். அங்கு ஊருக்கு வழி கேட்டான், “பைபாஸ்ல இருந்தா உள்ள வந்திங்க?” ,

“ஆமா” என்றான் அரவிந்த்.

அட பைபாஸ் மேல தாங்க அந்த ஊரே இருக்கு, பைபாஸ்லயே இன்னும் ஒரு 10 கிலோ மீட்டர் போனிங்கன்ன லெப்ட்ல ஒரு போர்டு வரும் பாருங்க”.

மீண்டும் பை பாஸில் ஏறி 10 கீ மீ வந்தவுடன், ஊர் பெயரில் போர்ட் இருந்தது, இடதுபக்கம் திரும்பி சில நிமிட பயணத்தில் ஊரின் சிறிய கடைவீதி வந்தது.

கண்ணாடியை இறக்கி விட்டு பைக்கில் அமர்ந்து டீ குடித்து பேசிக்கொண்டிருந்த இருவரிடம் “ஏங்க வீராசாமி கோயிலுக்கு எப்படி போகனும்?” என்று கேட்டார் மாமா.

“வீராசாமி கோயிலா? தெர்லங்க , பக்கத்துல கடையில கேளுங்க” என்றார் அதில் ஒருவர்.

மாமா “ஓரமா நிறுத்து அரவிந்து, போயி கேட்டுட்டு வரேன்” என்றார்.

வண்டியை சற்று ஓரமாக நிறுத்தி விட்டு,”நானும் வரேன் , வாங்க மாமா” என்று அரவிந்தும் இறங்கி உடன் நடந்தான்.

டீக் கடை கல்லாவில் உட்கார்ந்திருந்த நடுத்தர வயதுடையவரிடம் அதே கேள்வியை மாமா கேட்டார். “அப்படி ஒரு கோயிலு நானு கேட்டதே இல்லிங்களே” என்றார் நடு வயதுக்காரர் குழப்பமாக.

“கோயிலுனா கோயில் இல்லங்க, ஒரு பெரிய மரத்துக்கு கீழே உருண்ட கல்லு மாரி நட்டு வெச்சுருக்கும், நானு இந்த பக்கம் வந்தே இருவது வருசமாச்சு, அப்பல்லாம் முள்ளுக்காடா இருக்கும், உள்ளார கொஞ்ச தூரம் போனா ரெண்டு மூணு மரமுருக்கும், அதுல பெரிய மரத்துக்கு கீழ தான் சாமி இருந்தது, இங்கெல்லாம் ரொம்ப மாரி போயி இருக்குது நெப்பே தெரியல” என்றார் மாமா.

“ஏங்க அந்த முள்ளுக்காட்ட நெரவிதானுங்க பைபாஸி போட்ருக்குது, ஆனா அதுக்குள்ளார சாமி இருந்த மாதிரி தெரியிலிங்களே” என்றார் அவர். அரவிந்தும் மாமாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர், எதுவும் பேசவில்லை.

மாமா “கண்டிப்பா இந்த ஊரு தாங்க இங்கதான் எங்கியாவுது இருக்கணும்” என்றார் அழுத்தமாக.

“நானிங்க கட வெச்சே கொஞ்ச நாள் தாங்க ஆச்சு. இருங்க ஒரு அஞ்சு நிமிசத்துல மேஸ்திரி ஒருத்தரு வருவாரு, அவர்ட்ட கேட்டுப் பாப்போம், அவரு இந்தூர்ல தான் பொறந்தது வளந்ததெல்லாம், அவருக்கு தெரிஞ்சிருக்கும்” என்றார் நடுவயதுக்காரர்.

இருவரும் டீ வாங்கி குடித்துக் கொண்டு மேஸ்திரிக்காக காத்திருந்தனர். சிறிது நேரம் போனதும், பழுப்பேறிய வெள்ளை வேட்டியும், முட்டி வரை மடித்துவிட்ட கோடு போட்ட வெள்ளை சட்டையும் அணிந்து கொண்டு அறுபது வயது மதிக்கதக்க மனிதர் ஒருவர் வந்து கடையில் அமர்ந்து தினத்தந்தி பேப்பரை கையில் எடுத்தார்.

“மேஸ்திரி, இங்க வீராசாமி கோயிலுனு ஏதாவுது உனக்கு தெரியுமா? மெட்ராஸில இருந்து இவங்க வந்துருக்காங்க, அவங்க குலதெய்வமா, இந்த ஊர்ல தான் இருக்குனு சொல்றாங்க” கல்லாவில் காசு வாங்கி போட்டுக் கோண்டே அவரை பார்க்காமல் சத்தம் கொடுத்தார் நடுவயதுக்காரர்.

மேஸ்திரி நிமிர்ந்து அரவிந்தையும், மாமாவையும் பார்த்தார். “உங்க ஆளுங்க யாரும் பல வருசமா இந்த பக்கமே வரதில்லயேப்பா” என்றார்.

“எல்லா ஒவ்வொரு ஊர்ல இருக்கரம் முன்னாடி மாரி வர முடியறதில்ல, கோயிலு எங்க இருக்குனு உங்களுக்கு தெரியுமா” என்று ஆர்வமாய் கேட்டார் மாமா.

“எம்ப்பா வருசத்துக்கு ஒருத்தராவுது வந்திட்டுருந்திங்க, ஆறேழு வருசமா ஒராளு கூட வரல, உங்காளுங்க யாரும் இப்போ ஊருக்குள்ள இல்ல, பூச படையிலுனு ஒன்னும் இல்லாம, எடமே முள்ளு மண்டி போச்சுப்பா. ரோடு போட வந்தவங்ககிட்ட சொன்னோம், அந்த மரத்த உட் ருங்க அது கோயிலுனு, யாராவுது கும்முட்டாதான் சாமி, இங்க வெறும் முள்ளுதான் இருக்கு, சாமின்னு சொல்ல ஒரு கல்லுகூட இல்ல போங்கய்யானுட்டானுங்க, எல்லாத்தையும் நெரவி உட்டுதாம்ப்பா ரோட்டை போட்டாங்க. முள்ள வெட்டி எடுத்தா பெரிய மரத்தடியில சாமி நட்டுருக்கும் அதையாவுது குடுங்க, மாரியிம்மன் கோயிலுக்குள்ள போட்டு வெக்கரோம்னு கேட்டோம். அதெல்லாம் ஆள வச்சு முள்ளெல்லாம் வெட்டிக்கிட்டு இருக்க முடியாது, மரத்த புடுங்கிட்டு அபப்டியே புல்டோசர் உட்டு நிரவிடுவோம்னு சொல்லிட்டாங்க” என்றார் மேஸ்திரி வருத்தம் தோய்ந்த குரலில்.

என்ன சொல்வதென்று தெரியாமல் சிறிது நேரம் எதுவும் பேசாமல் அரவிந்தும், மாமாவும் நின்று கொண்டிருந்தனர். சில நிமிடங்கள் கழித்து “அந்த மரம் எங்க இருந்தது” என்றான் அரவிந்த். மேஸ்திரி எழுந்து கொண்டு “வாங்க” என்று முன்னால் நடந்தார். அரவிந்தும் மாமாவும் இறுகிய முகத்தோடு பின்னால் சென்றனர்.

அவர்கள் வந்த பைபாஸ் சாலையின் விளிம்பில் சென்று நின்றார், “தடுப்புக்கு இந்தப் பக்கம் இருக்கற ரோடு முள்ளுக்காட்டு மேலதான் போகுது. குத்து மதிப்பா சொல்லனும்னா நம்ம நிக்கறதுக்கு நேரா பத்தடிலதான் மரம் நின்னுச்சு” என்றார். அவர் சொன்ன இடத்தின்மேல் வாகனங்கள் 80 கிலோ மீட்டர் வேகத்தில் விரைந்து கொண்டிருந்தன.