எழுத்து

அறமும் எழுத்தும் – ஜென் வெப்

இது அவ்வப்போது பேசப்படுகிறது. அறமும் எழுத்தும். பொருத்தமற்ற மணவுறவில் பிணைக்கப்பட்ட இரு கருத்துகள். அறம் சார்ந்து எழுதுவது எப்படி? அழகியல் தேவைகளுக்கும், கதைகூறலின் ஆரத்துக்கும், வாசக தேவைகளுக்கும், துரோகம் இழைக்காமல் அறம் சார்ந்து எழுதுவது எப்படி? அது தவிர, அறம் சார்ந்த எழுத்து என்றால் என்ன?

கல்வித்துறையில் இதற்கான பதில் நேரடியானது: அறம் சார்ந்து எழுதுவது என்பது பிறர் எழுத்தைத் திருடாமல் இருப்பது, பொய்த் ‘தகவல்களை’ அளிக்காமல் இருப்பது.

மிலன் குந்தேராவைப் பொறுத்தவரை இதற்கான பதில் நேரடியானது.

“இருத்தலில் இதுவரை அறியப்படாதிருக்கும் கூறொன்றைக் கண்டு சொல்லாத நாவல் அறமற்றது. அறிவொன்றே நாவலில் அறம்”

ஆஸ்கார் வைல்டுக்கும் நேரடி பதில் இருந்தது- “அறம் சார்ந்த, அல்லது அறமற்ற புத்தகம் என்பது கிடையாது,” என்று அவர் ‘தி பிக்சர் ஆஃப் கிரே‘யின் முன்னுரையில் எழுதுகிறார்.

நன்றாக எழுதப்பட்ட புத்தகங்கள், மோசமாக எழுதப்பட்ட புத்தகங்கள். அவ்வளவுதான்.

இந்தப் பதில்கள் அவ்வளவு பயனுள்ளதாய் இல்லை. படைப்பெழுத்தாளர்கள் அவசியம் பிறர் எழுத்தைத் திருடக்கூடாதுதான், ஆனால் நாம் நிச்சயம் புது விஷயங்களை புனைந்தாக வேண்டும். எல்லா எழுத்தாளர்களும் அறிவூட்டும் உந்துதலை உணர்வதில்லை. வைல்ட், ‘நன்றாக எழுதப்பட்ட’ புத்தகத்துக்கும், ‘மோசமாக எழுதப்பட்ட’ புத்தகத்துக்கும் என்ற வேறுபாடு?

நல்லது; கெட்டது: ‘அறம்’ என்பதைப் போல் இந்தச் சொற்களை ‘வெற்று குறிப்பான்கள்” (“empty signifiers”) என்று மொழியமைப்பியல் வல்லுனர்கள் அழைக்கின்றனர். அது சுட்டும் பொருள் அல்லது விஷயத்தை எந்த ஒரு சொல்லும் குறிக்கலாம். உரித்தான பெயர்ச்சொற்கள் தவிர பிற சொற்கள் எதுவும் வேறு எதற்கும்மட்டுமே உரியவையல்ல. அவையனைத்தும் எந்தப் பொருளை அல்லது கருத்தைப் பெயரிட்டு அழைக்கின்றனவோ, அவற்றால் அதைச் சுட்டும் வகையில் நம் கவனத்தைத் திருப்ப மட்டுமே முடியும். வெற்று குறிப்பான்கள் திண்மம் கொண்ட பொருள், அல்லது, ஏற்றுக்கொள்ளப்பட்ட அர்த்தம் எதையும் சுட்டுவதில்லை. அவை, “அர்த்தத்தை உமிழ்கின்றன என்பதை விட, உறிஞ்சிக் கொள்கின்றன”

“நல்ல எழுத்து”, “அறம் சார்ந்த எழுத்து” என்றெல்லாம் சொல்வது, ‘நாமனைவரும்’ புரிந்துகொள்ளும் கருத்துகளுக்கு பெயர் சூட்டுவது போல்தான் தெரிகிறது; ஆனால் ‘நாமனைவரும்’ நம் தேர்வுகளை ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. (நான் ‘நல்ல எழுத்து’ என்று அழைப்பது உங்களுக்கு குப்பையாய் இருக்கும்)

ஓரளவுக்கு இது ரசனை சார்ந்த விஷயம்; அல்லது சமகால விழுமியங்கள் சார்ந்த விஷயம்; அல்லது அரசியல். இங்கேதான் நாம் அறம் நோக்கித் திரும்புகிறோம். இங்கு நான் அறம் பற்றி எழுதப்பட்ட மிகப்பெரும் தொகுதியைச் சுருக்கித் தர முயற்சி செய்யப்போவதில்லை. நாம் உயிருள்ள ஒரு குறிப்பிட்ட ‘உண்மையை’ கொண்ட கதைகளை போதனைகளாய் இல்லாத வகையில் எப்படிச் சொல்கிறோம், பிம்பங்களாய் எப்படி உருவாக்குகிறோம், என்பதுதான் இங்கு என் அக்கறை (‘உண்மை’ என்ற சொல்லை நான் வேண்டுமென்றேதான் மேற்கோள்களுக்குள் தந்திருக்கிறேன், அதுவும் ஒரு வெற்று குறிப்பான் என்பதால்)

நான் ஏன் எழுதுகிறேன்‘ என்ற தன் கட்டுரையின் துவக்கத்தில் ஜோன் டிடியன், எழுத்தென்பது பிறர் மீது தன்னை வலியுறுத்தும் கலை என்கிறார், நான் சொல்வதைக் கேள், நான் பார்க்கும் வகையில் பார், உன் மனதை மாற்றிக் கொள் என்று சொல்வது அது.

நிச்சயம் உண்மைதான். ஆனால் தொடர்ந்து நம்மைப் பிறர் மீது வலியுறுத்துவது என்பது ‘மாண்ட்டி பைதன் அண்ட் தி ஹோலி கிரெயிலில்‘ வரும் சாமியார்கள் போல் நம்மை மாற்றிவிடும்: முடிவில்லாமல் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டு, நம்மையும் (நம் வாசகர்களையும்) முடிவில்லாமல் தலையில் அடித்துக் கொண்டிருக்கச் செய்யும்.

அறம் சார்ந்த எழுத்து எது என்பதற்கு முழு விடை இல்லை, ஆனால் மிசேல் பூக்கோ, சிந்தனையால் தெளிவடைந்த விடுதலையுணர்வு அற வடிவைத் தேர்ந்தெடுக்கிறது என்று சொல்லும்போது இதற்கு அருகே வருகிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

அதாவது, நாம் உருவாக்கும் அர்த்தங்கள், நாம் உருவம் அளிக்கும் உலகம் குறித்து பிரக்ஞைப்பூர்வமாக சிந்தித்து எழுதப்படும் எழுத்தே அறம் சார்ந்த எழுத்து. நான் ஒரு படைப்பை விரும்பாமல் இருக்கலாம், அதன் உலகப் பார்வையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போகலாம். ஆனால், வைல்ட் சொன்னதற்கு மாறாக, யோசித்து எழுதப்படும் சூழலில் அது நிச்சயம் அறம் சார்ந்த எழுத்துதான்.

எழுத்தாளர்கள் எப்போதும் பிரதிமைப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்: உலகுக்கும் அதனுள்ளிருக்கும் உறவுகளுக்கும் உருவம் அளித்துக் கொண்டேயிருக்கிறார்கள்; வார்த்தைகள் தாம் எவற்றின் குறிகளாய்ப் பெயர் சூட்டி நிற்கின்றனவோ அவற்றுக்கு அப்பாலும் செயலாற்றுகின்றன. சொற்றொடர்களாய், வாக்கியங்களாய், பத்திகளாய், முழு படைப்புகளாய் ஒருங்கமைப்பட்ட வடிவில், வாசகர்கள் உணர்ந்து, கண்டு, செவித்து, முகரக்கூடிய சூழலைச் சொற்கள் அளிக்க முடியும்.

இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட சொற்கள், மொழியின் அருவ நிலைக்கும், பருண்ம உலகின் திண்மத்தன்மைக்கும் இடையில் உள்ள வெளியை இணைக்க முடியும். தன்னால் விவரிக்கப்படும் உலகை இருப்பதாய்ச் செய்ய முடியும், மெய்ம்மை கொண்டதாய் உணர்த்த முடியும்.

அறம் சார்ந்த எழுத்தை நாம் இப்படிச் சொல்லலாம்: திண்ம உலகை எதிர்கொண்டு, பல்கூட்ட மக்களின் வாழ்வனுபவத்தை விவரிக்கும் வகையில் மொழிகளைப் பயன்படுத்தும் படைப்பு.

கதைசொல்லல் மற்றும் கவிதையின் பிரதிமைப்படுத்தும் ஆற்றலை, பருண்மத்தன்மையைச் சிறப்பாய்க் கையாளும் படைப்புகளின் முன் தம் உணர்வாலும் புலனனுபவத்தாலும் வாசகர்கள் எதிர்வினையாற்றும்போது நாம் காண முடிகிறது. சிரிப்பாகட்டும், அழுகையாகட்டும், நம் அனுபவத்தை நண்பர்களுடன் பகிர்வதாகட்டும்- ‘நல்ல’ எழுத்து நம்மை நெகிழச் செய்கிறது.

வெவ்வேறு மக்களின் பங்களிப்பை ஆவணப்படுத்தும் படைப்புக்களைத் தணிக்கை செய்ய அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகள் அவற்றின் ஆற்றலைச் சுட்டுகின்றன. 2001ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசு, அகதிகள் குறித்து, ‘தனிநபர்களாய் உணர்த்தும், அவர்களின் மானுடத்தன்மையை வெளிப்படுத்தும் சித்தரிப்புகள்” நிராகரிக்கப்பட வேண்டும் என்று மேற்கொண்ட முயற்சிகள் இப்படிப்பட்ட ஒரு உதாரணம்.

இந்த ஆணையைக் கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஆஸ்திரேலிய எழுத்தாளர்களும் கலைஞர்களும் மௌனத்தாலோ பொதுமைப்படுத்தப்பட்ட கருத்தாக்கங்களாலோ எதிர்கொள்ளவில்லை; மாறாய், தனியாளுமைகளாய், தனித்தன்மை கொண்டவர்களாய் உணர்த்தும் படைப்புகளை உருவாக்கினார்கள். ஆஸ்திரேலியாவிலும் பசிபிக் பகுதிகளிலும் சிறைப்படுத்தப்பட்டுள்ள எழுத்தாளர்கள் தம் சமூகங்களை தனி நபர்கள் கொண்டதாய், அவர்கள் ஆளுமைகளை வெளிப்படுத்துவதாய், மானுடத்தன்மையை உணர்த்துவதாய் தம் கவிதைகளாலும் கதைகளாலும் நினைவுக் குறிப்புகளாலும் சித்தரித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட படைப்புகளில் சில கொள்கை பிரசார வகைமையைச் சேர்ந்ததாக இருக்கலாம், சில பேதைத்தன்மை கொண்டிருக்கலாம், சில படிப்பினைகளை உணர்த்துவதை நோக்கமாய் கொண்டிருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, வைல்டும் குந்தேராவும் வரையறை செய்த பொருளில் இவற்றில் பலவும் அறம் சார்ந்தவையே: இவை, நளினமான வாக்கியங்களும் புதிய அணுகுமுறைகளும் கொண்டு ‘நன்றாக எழுதப்பட்டிருக்கின்றன,’ ‘இருப்பின் இதுவரை அறியப்படாத கூறொன்றை” அம்பலம் செய்கின்றன.

நன்றி, The Conversation – http://theconversation.com/ethics-and-writing-63399

ஒரு நீதிக்கதை – தேஜூ கோல்

எதிரி பிற பூதங்களை உயிர்ப்பித்திருந்தான் என்பது உண்மைதான். ஒவ்வொன்றும் அதனதன் வழியில் தீமை செய்தன. ஒவ்வொன்றும் ஏழு பாபங்களில் ஏதோ ஒன்றின் முழுவுருவமாய் இருந்தன, ஒவ்வொன்றும் வலுவானதாகவும் தோற்கடிக்கக் கடினமானதாகவும் இருந்தன. சில பூதங்கள் இன்னும் மண்ணில் சுற்றித் திரிந்தன. ஆனால் இந்த பூதத்தை கவனிக்கத்தக்கதாய்ச் செய்தது எது என்று பார்த்தால், ஏன், அதற்கு தனித்தன்மை கொண்ட கள்ளத்தனம் அளிப்பதாக எது இருந்தது என்று பார்த்தால், அது சக்தியற்றது என்பதுதான். உண்மையில் அது மெலியது. பிற பூதங்கள் தோற்றுப்போகக் காரணமாக இருந்த குறைகள், இந்த பூதத்துக்கு பத்து மடங்கு அதிகம் இருந்தன. இந்தப் புதிய பூதம் ஒழுக்கமில்லாதது, ஆனால் ஒழுக்கம் பூதங்களின் இயல்பல்ல. இந்த பூதம் அழகாகவும் இல்லை, புத்திசாலியாகவும் இல்லை, வீரமாகவும் இல்லை, நன்றாக உடை அணியவுமில்லை, வசீகரமாகவும் இல்லை, பேச்சாற்றல் கொண்டதாகவும் இல்லை- எப்போதும் பூதங்களுக்கு இதில் ஏதோ ஒரு சில குணங்களாவது இருப்பது வழக்கம். எதிரி இந்தப் புது பூதத்தை அனுப்பி வைக்கும்போது அது ஒரே ஒரு இடத்திலிருந்து சக்தியை திரட்டிக் கொள்ளும் வகையில் வடிவமைத்திருந்தான், பழங்காலத்தில் சாம்சனையும் அவனது சிகையையும் பற்றிச் சொன்னது போல்தான்- அந்த ஆதார சக்தி அறுபட்டால், நண்பகல் வெயிலில் வாடிப்போகும் துண்டிக்கப்பட்ட மலர்த்துளிர் போல் இந்த பூதமும் வாடிப் போகும். புது பூதத்தின் சக்திக்கான ஆதாரம் ஓசைதான். தனக்குத் தொடர்புடையச் சிறு ஓசை கேட்டாலும் அது இன்னும் கொஞ்சம் வலுவானதாக மாறும். அது நிறைய சப்தம் கேட்கும்போது, போற்றுதலோ தூற்றுதலோ, ஆனந்தம் மிகுந்து மேலும் வலுவானதாக வளர்ந்தது. ஒட்டுமொத்த அமைதியே அதைத் தோற்கடிக்க முடியும், தியானத்தின் அமைதியும் செயல்பாடுகளுமே அதைத் தோற்கடிக்கும்.

இதுபோல் வடிவமைக்கப்பட்ட பூதத்தை எதிரி ஓசைப்பேட்டைக்கு ஏவிற்று. “புதுப்பூதம்” என்ற அலறல் எழுந்தது, பூதம் இன்னும் கொஞ்சம் பலமடைந்தது. “பூதத்துக்கு இன்னும் பலம் சேர்ந்து விட்டது,” என்று கூட்டத்தினர் கத்தினார்கள், பூதம் இன்னும் வலுவானது. இவ்வாறாகத்தான் ஓசைப்பேட்டையின் புதுப்பூதம், எதிரி அதுவரை அனுப்பிவைத்த அத்தனை பூதங்களைவிட எளிய பூதம், அங்கிருந்தவர்கள் எல்லாரும் பேசும் ஒரே விஷயமானது. காதைச் செவிடாக்கும் கூச்சலாக அந்தச் சப்தம் வளர்ந்து விட்டது. ஓசைப்பேட்டையின் ஒவ்வொரு நாளிதழிலும் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் பூதத்தைப் பற்றிய கட்டுரைகள்தான். தொலைக்காட்சியில் நிருபர்கள் பூதத்தைப் பற்றிய சப்தம் எழுப்பியபடியே பெரும்பொழுது கழித்தனர். ஊரார் தங்களோடு கொண்டு சென்ற சிறு கருவிகளை பூதம்தான் ஆக்கிரமித்திருந்தது. பூதம் சிரித்தால், அதற்கொரு எதிர்வினையாய் ஓசை எழுந்தது. பூதம் முறைத்தால், அதற்கும் பதில் சத்தம். அது இருமும்போது இருமல் கரகோஷம், பூதம் எப்படி இருமுகிறது என்பது பற்றி விவாதங்கள். தனது எளிய உத்தி எவ்வளவு வெற்றிகரமாகச் செயல்படுகிறது என்பது எதிரியையே திகைக்கச் செய்தது. பூதம் சிரித்தது, முறைத்தது, இருமியது, மேலும் மேலும் ஓசை எழுப்பக்கூடிய விஷயங்களைப் பேசக் கற்றுக் கொண்டது. இன்னும் இன்னும் அது வளர்ந்தது.

“ஆனால் இது பலமே இல்லாதது,” என்று மக்கள் கத்தினார்கள். “இது அழகாக இல்லை, இதற்கு அறிவில்லை, இதற்கு வீரமில்லை, இது நன்றாக உடுப்பதில்லை, இதற்கு வசீகரமில்லை, இதற்கு பேச்சாற்றல் இல்லை. இது எப்படி மேலும் மேலும் பலசாலியாகி நம்மை பாதிக்கிறது?” ஓசையின் அளவு இம்மி குறைந்தாலும் பூதம் ஏதாவது செய்தது, எது வேண்டுமானாலும் செய்யும், உடனே சப்தம் மீண்டும் அதிகரிக்கும். விழித்திருக்கும் பொழுதெல்லாம் இந்த பூதத்தைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதையே மக்கள் விரும்பினார்கள், தூக்கத்தில் பூதத்தைத் தவிர வேறு எந்த கனவும் இல்லை. அவ்வப்போது அவர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டார்கள், தாம் போடும் சத்தத்தில் பிறர் சேர்ந்துகொள்ளத் தவறுவது அவர்களை கோபம் கொள்ளச் செய்தது. வெறுமே யோசித்துக் கொண்டிருப்பது என்பது பூதத்தை ஏற்றுக் கொள்வதற்கு இணையானது என்று கருதப்பட்டது. கடந்த காலத்தில் இருந்த பிற பூதங்கள் போதுமான முழக்கத்தால் மூழ்கடிக்கப்பட்டிருந்தன. மேலும், இதுவோ ஓசைப்பேட்டை, ஓசை எழுப்பாமல் இருப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. உலகில் மிக உரத்த, மிகச் சிறந்த ஓசையின் தாயகம் அது, மிக அழகிய ஓசை, என்று எப்போதும் சொல்லப்பட்டது, உலக வரலாற்றில் மிகவும் மகத்தான ஓசை அதற்கேயுரியது. இவ்வாறாக ஓசைப்பேட்டையின் எல்லைகள் வரை ஓசைகள் வளர்ந்து எழுந்தன, லில்லிப்புட்டியர்களின் உலகில் கல்லிவர் வளர்ந்தது போல் புதுப்பூதமும் ராட்சத அளவுக்கு வளர்ந்தது- அவர்களிடமிருந்த கயிறுகளால் அதற்கெதிராய் எதுவும் செய்ய முடியவில்லை, அதன் வளர்ச்சிக்கும் எல்லைகள் இல்லாதது போலிருந்தது, இத்தனைக்கும் அப்போதுதான் அந்த ஆண்டின் எட்டாம் மாதம் பிறந்திருந்தது.

நன்றி – The New Inquiry

பழக்கம்

ஸ்ரீதர் நாராயணன்

தோளை தட்டி, திரும்பியதும்
விரியப் புன்னைகைத்து
நலம் விசாரித்தபடி
பேச்சைத் தொடங்கலாம்தான்.

நரைக்கு பூசும் சாயம்
பெண்ணுக்கு பிடித்த பிங்க் உடை,
வேனலுக்கான வாசஸ்தலங்கள்,
தளிர்த்திருக்கும் கறிவேப்பிலைக் கன்றுகள்,

இயந்திரத்தில் போட்டு
மாடுகளை வெட்டும்
வாட்சப்பில் வந்த அசைபடம்,

மணிகோர்த்த மயிற்கற்றைகள் ஊசலாட
அங்கங்களை அழகாக குலுக்கும்
நாரீமணியின் நடனம்,

‘அவன் கை குட்டை’
என்னும் அரசியல் விமர்சனத்தின்
இடக்கரடக்கல் பொருள்,

என தளும்பிக் கொண்டிருக்கும்
பேசுபொருட்களுடன்
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அவசரமாக வாயோரங்களை
அரைகுறையாக துடைத்த
பேப்பர் நாப்கினை
உள்ளங்கைக்குள் வைத்து உருட்டியபடி

ஜாக்கிரதையான விறைப்புடன்
விலகிச் செல்லும் அவருக்கும்
இது போன்று பேசுவதற்கு
நிறைய இருந்திருக்கும்

என்ன செய்ய முடியும்

அதிகாரநந்தி

நான் வரும் நேரம் அறிந்து
எதிரே வருகிறார்.
தேகசக்திக்கு மீறிய வேகம்.
ஏன் இப்படி? என்றெனக்கு படபடப்பு.
கெட்ட சேதி கேட்டேன், என்கிறார்.
கெட்ட செய்திதான்.
அவருக்காக நானும்
எனக்காக அவரும்
எதையும் வெளிக்காண்பிக்காமல்,
என்ன செய்ய முடியும், என்கிறோம்.

இராகப் பெண்கள் – 2. தர்பாரி கானட (தர்பார் கானடா)

பானுமதி. ந

2. தர்பாரி கானட (தர்பார் கானடா) – ஒளியும் ஒலியும்  

கானடா நம் நினைவில் தன்னிரக்கத்தையும், சுகமான சோகத்தையும் ஏற்படுத்தும். தர்பாரில் ஒரு கம்பீரம் கலந்த நிலை. இவ்விரு ராகங்களைப் போல்,  பூர்வா மற்றும் அம்மணி இருவரும் இரு மாபெரும் எழுத்தாளர்கள் படைத்த ராகங்கள்..

பெயரில் ஒரு பாவம் பொதுவாக இருக்கிறது. பெயரைக் கேட்கும்போதே ஒரு கோட்டுச் சித்திரம் மனது வரைந்துவிடுகிறது. அதிகம் கேள்விப்படாத பெயரோ அல்லது பொதுப்பெயரோ நம்மைச் சிறிது நேரம் சிந்திக்க வைக்கிறது.

பூர்வா ஒரு அபூர்வ பெயர். அம்மணியோ பொதுப் பெயர். இப்பாத்திரப் பெயர்களே நம்முள் அலை எழுப்புகின்றன. இந்தக் கதாநாயகிகள் உயிர்ப்புடன் உலா வர உறுதுணை செய்கின்றன..

இரைச்சலும், மௌனமுமான சூழ்நிலையில்தான் அறிமுகமாகிறாள் பூர்வா!

ஒளியும் ஒலியுமாக அம்மணி.

அம்மணிக்கு அவள் ஊரைப் பற்றி பிறர் பேச விருப்பமில்லை. தன்னுள் நினைத்துக்கொள்ளவே ஆசை.

பூர்வா ஊரை நினைப்பதேயில்லை.

அம்மணி ஆதிப் பெருங்காற்று, ஊழிப் பெருவெள்ளம், தடை உடைக்கும் பிரவாகம்! காட்டாற்றின் வேகம். பிரபஞ்ச தாண்டவம். வெளியே இரைச்சல். உள்ளே நிறைவு. அழகின் செருக்கு. மனிதர்களைத் தொட்டு உணரும் மனப்பழக்கம். ஊரில் பெரிய மனிதரின் சிறு கால் அழுக்கைக்கூடத் தாளாத சிறுமி- அவர் மனக்குப்பையை அறிகையில் பந்தத்தையும், சொந்தத்தையும் துறக்கிறாள். பாடலும், ஆடலுமாக வாழப் பிடித்திருக்கிறது.

இறைவன் இணைக்கும் பந்தங்கள் வேடிக்கையாக இருக்கிறது அவளுக்கு!

கோபாலி இசைக்க மறந்த ராகம் அவள். அவளே இசையென பொங்குகிறாள். நிறைக்கிறாள், நிறைகிறாள். தன் போதி மரத்தை கண்டுகொள்கிறாள்.

பூர்வா நீர் நிறைந்த குடம். தன்னுள் தானே மூழ்கும் சிலை. மௌனமே இயல்பு. பேசும் அபூர்வ தருணங்கள் கலக்கமே! வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் அதைப் பற்றி பெருமையுமில்லை, நிறைவுமில்லை, குறையுமில்லை. கணவன் கூட நுழையமுடியாத உள் ஆழம். இந்த உலகைப் படைத்த பின்னர் கடவுள் கொண்ட மௌனம். இரு பாதியெனப் பிரித்த பின்னர் சேர்க்கும் விளையாட்டில் அவன் கொண்ட ஆசை! அதில் வென்றும், தோற்றும் இருள், ஒளியென அவன் காணும் காட்சி.

வலி என்பதையே வெளிப்படுத்தாத பூர்வா ஒரு அபூர்வா! அமைதியாக அனுபவித்துக் கொள்ள அவளால் முடிகிறது. தன் முடிவை அறிந்த மௌனமோ அது!. முடிவில், கதறலில், வலி அவளை வெல்கிறது. இரு குழந்தைகள் வயிற்றிலேயே இறக்க அவளும் இறக்கிறாள்.

ஒலி நிறைந்த, வண்ணமயமான உலகில் இருந்து அம்மணி ஆர்ப்பாட்டமில்லாத அமைதிக்கு வருகிறாள். அவளுக்கு என்றுமே மனதில் இரைச்சலில்லை. வெளியே மௌனமில்லை.

பூர்வாவிற்கு வெளியே இரைச்சலில்லை, உள்ளேயோ அமைதியின் ஒலம்.

பூர்வா புன்னகையின் புதிர். கதாநாயகன் நினைத்துக் கொள்வான், “நான் இவளை மணந்தேனா அல்லது இவள் புன்னகையை மணந்தேனா?” என்று. அவள் “பொருள் புரியாப் புன்னகையுடன்” உட்கார்ந்திருப்பாள். “அவள் பத்திரம் என் மனதின் நிம்மதியைக் குலைத்தது” ஆனாலும் அவள் பால் கொண்ட காதல் குறையவில்லை.

ச ரி  ம ப த நி ச    ச  நி ச த ப ம க ரி. தர்பார். அம்மணி

ஆரோகணத்தில் அவள் காட்டாறு என்றாலும் அவரோகணத்தில் நீர்வீழ்ச்சி

ச ரி ப க ம த நி ச      ச  நிப ம  க ம ரி ச. – கானடா. பூர்வா

இவள் பனி உறைந்த பாறை  கடலுள்ளே சிதறும் எரிமலை

அம்மணியும் பூர்வாவும் ஒரு புள்ளியில் தொடங்கி  இரு கிளையெனப் பிரிந்து இணையும் இராகங்கள்.

தர்பாரி கானடா:

ச ரி க  ச ம ப த நி ச        ச த நி ப ம ப க  ரி ச

வாழ்வைத் தன் போக்கில் அணுகி, வாழ்ந்து பிறர் கவனங்களைக் கவர்ந்து, அனைத்தையும் தழுவும் காற்றாய், ஒலியாய் வாழ்ந்த அம்மணி அமைதியை உள்வாங்குகிறாள்.

தன்னுள்ளே மூழ்கி, உள்ளே இரைச்சலாய், வெளியே மௌனமாய், கேட்காத கேள்விக்கு விடை தேடி, வலியை ஒலியாய் வெளிப்படுத்தி பூர்வா விடை பெறுகிறாள்.