எழுத்து

இராகப் பெண்கள் – 4: மோகனக் கல்யாணி

பானுமதி. ந

4. மோகனக் கல்யாணி- அன்னவாசல் அழகு

சிலவற்றிற்கு ஒரு புனிதம் உண்டு. அவை மாசுபடாது தூசு படாது தெய்வீகத்தின் மறு உருவாய் வாழ்வில் காணக் கிடைக்கும்.

அம்மா அன்பானவள், காருண்யம் மிக்கவள், புனிதமானவள், போற்றத்தகுந்தவள். தாய் பிறன் கைபட சகிப்பவனாகி நாயென வாழ்பவன் நமரில் இங்கில்லை.

ஆனால், தி. ஜா வின் “அம்மா வந்தாள்” -அகிலாண்டமாக- அனைத்து அண்டமாக எழிலும், கம்பீரமும் கொண்டவள். விளையும் நிலம் இவள். செழுமையின் இனம் கொண்டு நிலம் கூடிக் களிப்பவள். முழுமையாக தன் நாயகனை அடையவிட்டு அந்த அனுபவத்துடன் அவனை விலகச் செய்பவள். அவள் தரிசு நிலமல்ல. சிவசுவின் விளைநிலம். அன்பும் எளிமையும் அறிவும் மட்டும் அவளை அடையப் போதுமானதில்லை. அதற்கு மேலும் ஒன்று – அவளே ஆளுமை, அதைச் சீண்டும் ஆளுமை, செயல் ஊக்கம் கொண்ட ஆண்மை; அதன் மூலம் பெற்ற பிள்ளைகள் எல்லாமும் ஒரு குடும்பத்தின் அங்கமாக.

மீள இயலாத கவர்ச்சி அவ்வழியில் அவளுக்கு இருக்கிறது. ஒரு அற்புத அனுபவம் நல்வழியில் கிடைத்தால் அது கொண்டாடப்படுகிறது. அது உலகோர் ஏற்றுக் கொள்ளும் பாதை இல்லையென்றால், சமுதாய நியதிகளை மீறியது என்றால்  மனிதர்கள் என்ன செய்வார்கள்?இச்சையும் உடலும் தன் இரையைத் தேடித் தேடி உண்கையில் மனம் ஒருமிகத் தூய்மையான ஒன்றை தனக்காக ஏற்படுத்திக் கொண்டு விடுகிறது. அழுக்கை விழுங்கும் தீ… எந்த நேரத்திலும் தூய்மையான விளக்கு.. இருளை விரட்டும் தீ.. காமங்கள் அண்டாத தீ.. நீருள் இருக்கும் நெருப்பு போன்ற தீ.

காமாக்னியை அழிக்கும் வேதத்தீ. அம்மாவின் அன்பிற்குரிய அப்பு வேதம் கற்பவனாகி அவளுடைய பரிகாரமாக விளங்க அம்மா விரும்புகிறாள். முகப் பொலிவும், உடல் வலிமையும் மிகத் தூயமனமும் ஒருங்கே அவனிடம் உள்ளன. அவன் இந்துவின் மனக் கணவன். அவன் உணராமலேயே இந்து அவனைக் காதலிக்கிறாள். பரசுவுடன் அவளுக்குத் திருமணம் ஆகி 3 வருடங்கள் குடித்தனம் நடத்தியும் அவள் உடலாலும் மனதாலுமாக இருவாழ்க்கை வாழ்கிறாள். அந்த நலமற்ற கணவனையும் இழந்து ஊர் திரும்பும் இந்து ஒரு தருணத்தில் அப்புவிடம் மனம் திறக்கும் இடம் நயம் மிக்கது. பெண் தானே தன்னைத் தரும்போதும்கூட விலகி ஓடும் அப்பு வேள்வித்தீ என மிளிர்கிறான். அம்மாவைப் பற்றி இந்து சொல்கையில் உள்ளே கொதிக்கிறான். தி.ஜா படைக்கும் காட்சிகள் அந்த எண்ண ஓட்டத்திற்கும் நிகழ்வுகளுக்கும் அவற்றின் மறைமுகத் தன்மைகளுக்கும் எத்தனை பொருத்தம்! ”இந்து மாதிரி ஒரு பெண்ணை விட்டுவிட்டு நீ சாதிக்கப் போவது என்ன?” என்று ஒரு வேலையாள் மூலம் கேட்கிறார் தி ஜா மறைமுகமாக. இதை பின்னர் நினைக்கிறான் அப்பு.

அம்மாவின் மறுபுறம் தெரிகையில் அப்பு அம்மாவைவிட அப்பாவை வெறுக்கிறான். குமையும் கையாலாகாத சினம். தனிமையில் மட்டும் கசடு கொப்பளித்து மேலே வருகிறது. அந்திக் கருக்கலில் அலைகளின் ஓலத்திற்கிடையே அப்புவும் அவன் தந்தையும் பேசுவது நாகரிகத்தின் உச்சம்.

அப்புவின் மேல் கறையே படக்கூடாதென நினைக்கும் அம்மா, அவன் அப்பா பார்த்து வைத்துள்ள பெண்ணின் இறந்து போன தாயின் நடத்தை சரியாக இல்லை என மறுத்துவிடுகிறாள். அந்த அளவிற்கு அவன் புனிதத்தில் அவளூக்கு விருப்பம்.  நீள்விழிகள் கொண்ட அந்த பெண்ணை வியந்த போதும் அம்மாவை அப்பு தட்டவில்லை. தன் உறவினர் அனைவரும் அறிந்த அம்மாவின் மறுபக்கம் அப்புவைப் பந்தாடுகிறது. தன் புனிதத்தினால் தான் தனிமைப்பட்டுப் போனதாக எண்ண வைக்கிறது.

தான் படித்த வேதபாடசாலைக்குத் திரும்பும் அப்பு இந்துவின் அன்பில் இணைகிறான். அவனைத் தேடி வரும் அம்மா அவன் அம்மா பிள்ளையாகி விட்டான் என்றும், இனி தான் தன் கணவனை வதைப்பது சரியல்ல என்றும், காசிக்குப் போய் கர்மம் தொலைக்கப்போவதாகவும் சொல்கிறாள்.

அம்மா மோகினி. ஒரு அரசியின் ஆளுமை, நடை, பேச்சு, செயல் அத்துடன் தன் வசப்படுத்தும் ஒரு திறன். அந்த கம்பீரத்தின் முன்னே அனைத்தும் தோற்றுவிடுகின்றன. பூரணம், பூரணத்தில் சம்பூர்ணம்… அவளின் இசை.அன்னிய ஸ்வரம் வந்தும் கணவன் வெறுக்காத மோகனம். சொந்தங்கள் வாய் மூடி மௌனித்துக் கிடக்கின்றன . அவளின் ஆளுமை அவள் குறையைக் காணவொட்டாமல் அடிக்கிறது. ஒரு உரிமையுடனே சிவசுவிடம் அவள் நடந்து கொள்கிறாள். இரு குதிரைகளில் சவாரி செய்வது போல் தோன்றினாலும் அரசப் பட்டயமிட்டுச் செல்லும் குதிரை நினைவை அசை போடுகிறது. அரசியின்போகத்தில் மற்றொன்று திளைக்கிறது.

ச ரி க ப த ச  ச த ப க ரி ச

இல்லை நி இல்லை. ஆனால் என்ன ஒரு அழகு இதில்! மோகன இராமா, கோபிகா மனோகரம் இவையெல்லாம்  மட்டும் மோகனமில்லை. அகிலாண்டமும்தான். ஆரோகணத்தில் தொடங்கி, அவரோகணத்தில் பயணித்து அவள் பின்னர் அவரோகணத்தில் கரைந்து கரைந்து ஆரோகிக்கிறாள். அப்புவைப் பெற்றதாலேயே, அவனை வேதம் கற்க வைத்ததாலேயே, புனிதத்தின் அரவணைப்பில் தன்னை புடம் போட நினைக்கிறாள். கூர்க்கில் சிறு வடிவம் கொண்டு எழுந்து கன்னித் தமிழகத்தில் பெருக்கெடுத்தோடும் காவிரி. ஆம்… அவள் விரிந்தவள், பரந்தவள், புனித நீராட்டுபவள், புண்ணிய நதிகளின் பாவம் போக்குபவள். தன் வேள்வியாய் தன்னையும் தருபவள். அவள் அனைவரும் இரசிக்கும் மோகனம், ஆனால்  அனைவராலும் பாட முடியா “மருங்கு வண்டு கிடந்தார்ப்ப மணிப்பூ ஆடை அது போர்த்து கருங்கயற்கண் விழித்து ஒல்கி” நடக்கும் நதி அவள்.

ஜனனி

இவள் யார்? நம் புராணங்களில் அன்னை மனித வயிற்றில் பிறப்பதில்லை. அவள் கண்டெடுக்கப்படுபவள். கரு வாசம் அவளுக்கு இல்லை. இந்த விதியை சிறிது மாற்றி, குழந்தை வெளிப்படுகையில் அன்னை அதில் புகுந்து கொள்வதாக லா ச ரா எழுதுகிறார். பிறந்ததுமே அனாதை ஆகிறாள். ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு அவர் மனைவியால் ஏற்றுக் கொள்ளமுடியாமல்  “ஜனனி” ஆகிறாள். அவள் உலகின் தாய். ஆனால் அவள் விரும்பிய தாய்ப்பால் அவளுக்குக் கிடைக்கவில்லை. அவள் கழுத்தில் கடயம் போடப்பட்ட தாய்ப் பசு. ஒரு கல்யாணமும் நடக்கிறது அவளுக்கு. தன் உடல் மாறுதல்கள், அவை கவரும் கண்கள், உள்ளே படரும் இனம் தெரியா ஏக்கம். தன்னுள் தன்னை ஒடுங்கச் செய்து விடுகிறது. ”நீ நானாக இருப்பினும், நான்  நானாகத்தான் இருக்க முடியும். ஆனால், நீ –மறுபடியும் ‘நா’னாகிக் கொண்டிருக்கிறாய்.  ‘உன்னின்’ மீட்சி” லா ச ராவைத் தவிர யாரால் இதை எழுத முடியும்?

இக்கதையில் ஜனனி தன்னை “நித்திய சுமங்கலி” என்று சொல்வாள். பரம்பொருளிலிருந்து பிரிந்த உயிர் அவனை மறந்து, அல்லல்பட்டு, தன்னைத்தானே உணர்ந்து அவனைச் சேரும் ஒரு செய்தி கதையில் உள்ளது. உடல் கொள்ளும் அவஸ்தைகள், உயிர் உருகும் சம்பவங்கள் எல்லோருக்கும் நேர்வதே. அதை அன்னை தானே அனுபவிக்கிறாள். அவள் கல்யாணி- மங்களங்கள் நிறைந்தவள். மாயா வினோதினி- “மானிடர்கென்று பேச்சுப்படின் வாழகில்லேன்” என்றாள் ஆண்டாள்.

அன்னை ஒரு பட்டாளத்தானை மணமும் செய்கிறாள்.  சாந்தி மூகூர்த்தத்தின்போது அவனை வதைத்தும் விடுகிறாள். அவன் இறந்த பின்னரும் அவள் பூவும், மஞ்சளும், தாலியும் அவளுடனே இருக்கிறது. அவள் கல்யாணிதான். பல ஜனன இராகங்கள்  அவளுக்கு உண்டு. ஆனால் அவளுக்கு அமுது ஊட்ட யாருண்டு? கல்யாணிகளுக்கும் ஆசை உண்டோ? புனிதமான அம்மா, தன் உடல் அமைப்பினாலேயே பால் நினைந்து ஊட்டும் அன்பு, அதில் அடங்கியுள்ள அந்தக் கடமை, அன்னையைக் கடயம் போட்ட பசுவாக காட்டத் துடித்தாலும், அவள் மீறுகிறாள். ஆணின் மீது வரும் கட்டற்ற சினத்தின் வெளிப்பாடு அது. ஆனாலும் அவள் பரம கல்யாணி. யார் அறிவார் இதை?அவளை பீடத்தில் ஏற்றி நீ அன்னை என்று சொல்லிவிட்டான் ஆண். அவள் தூய்மைக்காக கர்ப்ப வாசம் அவளிக்கில்லை என்றும் சொல்லிவிட்டான். ஆனால், தான் மட்டும் “மன்னு புகழ் கோசலை தன்  மணிவயிறு வாய்”க்கிறான். ஜனனியாகப் பிறப்பெடுக்க அவள் ஏன் தீர்மானிக்கிறாள்?தன்னைக் கொஞ்சிக் கொண்டாட தனக்கும் அமுதூட்ட ஒரு தாய் வேண்டுகிறாள். அந்த அனுபவம் அவளுக்குக் கிடைக்கவேயில்லை.முனைப்பால் கூட முலைப்பால் அருந்தாத கல்யாணி.

அகிலாண்டம், ஜனனி  இருவருமே மக்கள் அறியும் இனிய மோகனமும், கல்யாணியும். அகிலாவை நாம் சிறிது நேரம் பெண்ணாகவும் பார்க்க முயல்கிறோம்; அவள் மோகம் நமக்குப் புரிகிறது. அவள் தேடும் புனிதம் அவளுக்குக் கிடைத்தால் நமக்கு மகிழ்ச்சி, இல்லையெனில் வருத்தமில்லை. அந்தக் கவர்ச்சியும், குழைவும், கம்பீரமும், இயல்பும் ஆளுமையும் நாம் பார்க்கும் பெண்களிடத்தில் ஒரு சேரக் கிடைத்தால் நாம் கொள்ளும் பரவசம்! அங்கே சமுதாய நியதிகள் சற்றுக் கண்ணயரும்.

ஜனனி –கல்யாணி- “நிதி சால சுகமா”வும் கல்யாணி தான் “வாசுதேவயனியும்” கல்யாணிதான். அவள் ஜனக இராகமாகத்தான் இருக்க முடியும். ஜன்யமாக முடியுமா?அவள் நிறைவானவள். முதல்“ப்ரதி மத்ய “ இராகம். ஏழு ஸ்வரமும் கொண்டவள். ஆனாலும் ஒரு ஏக்கம் உண்டு.

மோகனம்  ஜன்ய இராகம்- ஒளடத இராகம். தன் மயக்கில் நம்மையும் கடத்துபவள்.

ஜனனியின் ஒரு ஆவல், அகிலாண்டத்தின் ஒரு ஆவல்

அவள் ஆவலை அறிவார் இல்லை. இவளது வெளித் தேடலில் மன்னிப்பு இல்லை. ஆனால், இருவரின் உள்ளார்ந்த சினம் மோகனகல்யாணி.

“என் தனிமையின் உருவற்றமையாலே, நான் காலம், இடம், உரு நியமங்கள் கடந்த மெய். சப்தத்தின் சத்யம். நான் சொல். சொல்லின் பொருள். பொருளின் செயல். மூன்றும் ஒன்றாய் இயங்கும் திரிசூலம்”

கல்யாணி-   ச ரி க ம ப த நி ச,   ச நி த  ப ம க ரி ச

மோகனம்-   ச ரி க ப த ச ,  ச த ப க ரி ச

மோகனக்கல்யாணி- ச ரி க ப த ச, ச நி த ப ம க ரி ச

ஏறுகையில் இல்லாத ஸ்வரம் இறங்குகையில் பூரணம்.

ஒரு ஒளடத சம்பூர்ண இராகம்

oOo

அபி ந ஜாவோ சோட்கர்

எஸ்.சுரேஷ்

abhi na

அபி ந ஜாவோ சோட்கர் யெஹ் தில் அபி பரா நஹி” என்று நான் பாட, “நஹி நஹி நஹி நஹி” என்று பதிலுக்கு ஃபரீன் பாட பாடல் முடிந்தது. கைதட்டல் பலமாக இருந்தது. எங்கள் இருவர் முகத்திலும் புன்னகை. மேடையை விட்டு கீழே இறங்கிய இருவரையும் பலர் கைகுலுக்கி “பஹுத் அச்சா காயே தோனோன்” என்றனர். அப்பாவும் அம்மாவும் வெகு மகிழ்ச்சியுடன் இருந்தனர். ஃபரீன்னின் அப்பா என்னை வந்து கட்டிக்கொண்டார். அவள் அம்மாவின் முகத்தில் மட்டும் மகிழ்ச்சி இல்லை.

“நம்ப பேட்டி இது போல பாட்டு பாடக்கூடாது. அதுவும் கணேஷ் சதுர்த்தில பாடுறது ரொம்ப தப்பு,” என்று நாங்கள் பாடப்போகும் முன்பு கூறியிருந்தாள். நிகழ்ச்சி முடிந்த பின்பு எங்கள் வீட்டில் ஃபரீன் குடும்பத்திற்கு தாவத் வைத்திருந்தோம்.

“உங்க பொண்ணு ரொம்ப நல்லா பாடிச்சு. பத்தாவது படிக்கும்போதே இவ்வளவு நல்ல குரல். இவ நம்ப ஹைதராபாத்த ஒரு கலக்கு கலக்கப்போறா” என்று பாப்பா சொல்லிவிட்டுச் சிரித்தார்.

மரியம் பீவி, ஃபரீனின் அம்மா, “எனக்கு பெண்கள் மேடை ஏறி பாடறது பிடிக்காது. பத்தாவது முடிஞ்சிச்சுன்னா ஷாதி பண்ணி வச்சா சரியா இருக்கும்” என்றாள்.

“அம்மி ஜான். மெரெகு ஷாதி நக்கோ. பாருங்க பாப்பா” என்று ஃபரீன் சிணுங்கினாள்.

“அர்ரே. இப்போ ஷாதிக்கு என்ன ஜல்தி. நம்ப பேட்டி முதல்ல படிச்சி டிகிரி வாங்கட்டும். நம்ப எப்போவும் போடற சண்டைதானே. இவங்க வீட்லயும் எதுக்கு,” என்று அந்த பேச்சை முடித்தார் மக்பூல் பாய்.

பிறகு என் பக்கம் திரும்பி, “ரொம்ப நல்லா பாடின பேட்டா. அப்படியே ரஃபி சாப் மாதிரி இருக்கு உன் குரல். நீங்க ரெண்டு பேரும் ஜோடியா பாடினா அருமையா இருக்கு” என்று மெச்சிக்கொண்டார்.

அந்த நிமிடம்தான் என் காதல் துளிர் விட்டது.

தாவத் முடிந்த பிறகு, அம்மி ஜான் என்னை பார்த்து, “ஷௌகத், நீயும் ஃபரீனும் ஒரு பாட்டு பாடுங்க” என்று சொன்னாள். பிறகு மரியம் பீபியிடம், “நம்ப வீட்ல பாடலாம் இல்ல?” என்று கேட்டாள்

“மஜாக் மத் கரோ” என்று சொல்லிவிட்டு மரியம் பீபி சிரித்தாள். ஃபரீன்னை பார்த்து, “காவோ” என்றாள்.

நானும் ஃபரீனும் “காஷ்மீர் கி கலி” என்ற படத்தில் வரும், “தீவானா ஹுவா பாதல்” என்ற பாட்டைப் பாடினோம். இன்னும் சில பாடல்கள் பாடியபிறகு அவர்கள் எல்லோரும் வீட்டிற்கு கிளம்பினார்கள். தூங்கும்பொழுது நான் ஃபரீனை நினைத்துக்கொண்டேன்.

அடுத்த நாள் ரூப் வீட்டிற்கு வந்திருந்தான். அவர்கள் நடத்தும் இசைக்குழுவில் நானும் ஃபரீனும் பாடவேண்டும் என்று பாப்பாவிடம் கேட்டான். எங்கள் வீட்டில் ஒத்துக்கொண்டார்கள். மரியம் பீபி முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் மக்பூல் பாய், சரி என்று சொன்னதால் ஃபரீன் பாட வந்தாள்.

இதற்கு முன் நாங்கள் எந்த வாத்தியமும் இல்லாமல் பாடியே பழகியிருந்தோம். வாத்தியங்களுடன் எங்கள் குரல்கள் ஒலித்தபொழுது எங்கள் பாட்டு இன்னும் அருமையாக இருந்தது போல் எங்களுக்கு தோன்றியது. நரேஷ் என்பவன் கிஷோர் குமார் குரலில் அருமையாக பாடுவான். அவன் ஃபரீன்னுடன் பாடும்போது எனக்கு பொறாமையாக இருக்கும். எங்கு ஃபரீன்னுக்கு அவன் மேல் காதல் வந்துவிடுமோ என்று பயமாக இருக்கும். அவனுக்கு வேறொரு பெண் மேல் காதல் இருக்கிறது என்று ரூப் எனக்கு ரகசியமாக சொன்ன பிறகு பயம் குறைந்ததே தவிர முழுவதாக விலகவில்லை.

ஃபரீன்னைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வது என் கடமை என்று நானே நினைத்துக் கொண்டேன். ரூப் வீடு அடுத்த தெருவில்தான் இருந்தது. என்றாலும், நான் ஃபரீன் வீட்டுக்குச் சென்று அவள் தயாராகும் வரை உட்கார்ந்திருந்து அவளை அழைத்துச் செல்வேன். பல முறை அவள், “தூ ஜா. மை ஆத்தி ஹூன்” என்று சொன்னாலும் கேட்காமல் இருந்து அவளை அழைத்துக்கொண்டுதான் செல்வேன். அவள் அம்மாவிற்கு இது பிடித்திருந்தது.

நாங்கள் ரூப் குழுவில் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகியிருக்கும். ஃபரீன் மேல் எனக்கு காதல் அதிகமாகிக்கொண்டே போனது. அப்பொழுதுதான் ‘ஆராதனா’ படம் வெளிவந்திருந்தது. அதில் கிஷோர் குமார் பாடல்களை நரேஷ் பாட, நான் ரபியின் “பாஹோன் மே பஹார் ஹய்” என்னும் பாடலை ஃபரீன்னுடன் பாடினேன். அதில் கடைசியில், “தும்கோ முஜ்சே ப்யார் ஹய்” என்று நான் கேட்க, “ஹான் பாபா ஹய்“என்று அவள் சொல்ல, நான் நிஜமாக அவள் என்னை காதலிப்பதாக நினைத்துக்கொண்டு அன்று இரவு முழுவதும் தூக்கமில்லை.

நான் வெஸ்லி காலேஜில் பி.காம். படித்துக்கொண்டிருந்தேன். ஃபரீன் +2 முடித்துவிட்டு செயின்ட் பிரான்சிஸ் காலேஜில் பி.ஏ. சேர்ந்தாள். இப்பொழுதும் நான்தான் அவளுக்குக் காவலன் என்பது போல், மாலையில் காலேஜ் முடிந்தபிறகு மனோகர் தியேட்டர் வாசலில் இறங்கி அவள் காலேஜ் முன் சென்று நிற்பேன். சில நாட்கள் அவளுடன் அவள் தோழி வருவாள். நான் அவர்கள் பின்னால் நடப்பேன். அவள் தோழி சிகந்தரபாத் ஸ்டேஷனில் பஸ் ஏறிவிடுவாள். நான் பிறகு ஃபரீன்னுடன் அவள் வீட்டு வரையில் நடப்பேன். அப்படி தினம் அவளுக்காகக் காத்து நின்று அவளுடன் நடந்து வந்தாலும் அவளுக்கு என் மேல் ஆசை இருக்கிறதா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நானும் பல முறை அவளிடம் என் காதலைச் சொல்லவேண்டும் என்று நினைப்பேன், ஆனால் எனக்கு தைரியம் வரவில்லை.

ஒஸ்மானியா ஆர்ட்ஸ் காலேஜில் கல்சுரல் பெஸ்ட் நடைப்பெற்றது. அதற்கு நாங்கள் இருவரும் சென்றிருந்தோம். ஃபரீன் “ஆப் கே நஜரோன்னே நெ சம்ஜ்ஹா ப்யார் கே காபில் முஜே” என்ற பாட்டை பாடினாள். அவள் என்னைப் பார்த்துதான் பாடினாள் என்று எனக்கு ஒரு பிரமை இருந்தது. பாடி முடித்தவுடன் பலத்த கைத்தட்டல். பல மாணவர்கள் வந்து அவளை வாழ்த்தி கைகுலுக்கினார்கள். அவள் அம்மா சொல்வது சரிதானோ, என்ற எண்ணம் என் மனதிற்குள் ஒரு முறை எட்டி பார்த்துவிட்டு சென்றது. நான் “தேரே மேரே சப்னே” பாடலை அவளைப் பார்த்து பாடினேன். அவள் முகத்தில் மகிழ்ச்சி இருந்தது. ஆனால் அது அவள் பாட்டுக்கு கிடைத்த வரவேற்பினாலா இல்லை நான் பாடுவதைக் கேட்டா என்று என்னால் கணிக்க முடியவில்லை.

ஒரு நாள் மாலை அவளுக்கு காலேஜில் ஸ்பெஷல் கிளாஸ் இருந்ததால் அவள் காலேஜை விட்டுக் கிளம்ப ஆறு மணியளவு ஆகிவிட்டது. மரியம் பீபி, பத்திரமாக அழைத்துவா பேட்டா, என்று என்னிடம் சொல்லியிருந்தாள். நாங்கள் இருவரும் ஸ்டேஷன் பக்கத்தில் தெரு வழியாக அந்தி வேளையில் போயகுடாவிற்கு நடந்து வந்து கொண்டிருந்தோம். அவளுக்கு அந்தே நேரத்தில் தனியாக வருவது பற்றி பயம் இருந்ததாலோ என்னவோ அவ்வப்போது எங்கள் கைகள் உரசிக்கொண்டிருந்தன. ரயில்வே போலிஸ் ஸ்டேஷன் தாண்டியவுடன், நான் அவளோடு கைகோர்த்துக் கொள்ளலாம், என்று அவள் பக்கத்தில் என் கையைக் கொண்டு போனேன். ஆனால் என் தைரியம் என்னைக் கைவிட்டது. நான் விலகிக்கொண்டேன். அடுத்த நாள் நாங்கள் நடக்கும்பொழுது அவளாகவே என் விரல்களுடன் அவள் விரல்களை கோர்த்தாள். ஒருவர் கையை ஒருவர் பற்றிக்கொண்டு சிறிது தூரம் நடந்தோம். அன்று இரவு முழுவதும் நான் தூங்கவில்லை. அதற்குப் பிறகு தினமும் இப்படி நடப்பது எங்களுக்கு பழக்கமாகிவிட்டது. ஒரு நாள் இப்படி நடக்கும் பொழுது, “சாத்தி ஹாத் பாடான சாத்தி ரே” என்ற பாடலை பாட ஃபரீன் மெதுவாக சிரித்தாள்.

ஃபரீன் பி.ஏ. இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராமல் ஒரு நாள் மக்பூல் பாய் திடீரென்று மாரடைப்பில் மரணம் அடைந்தார். நான் பதறிக்கொண்டு ஃபரீன் வீட்டுக்கு ஓடினேன். அம்மி ஜானும் பாப்பாவும் முன்பே வந்திருந்தார்கள். ஃபரீன் என்னை பார்த்தவுடன் இறுக்கமாக அணைத்துக்கொண்டு கதறி அழுதாள். இனி இவளை இந்த உலகில் காக்கப் போவது நான்தான் என்று உறுதியாக நம்பினேன். இனி இவளுக்கு இது போன்ற துன்பம் வராமல் பார்த்துக் கொள்வேன், என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

பாப்பாவும் நானும் தான் அடிக்கடி அவர்கள் வீட்டுக்குச் சென்று என்ன வேண்டுமோ அதைச் செய்து கொடுத்துக்கொண்டிருந்தோம். ஒரு மாதம் கழித்து மரியம் பீபியின் உறவுக்காரர்கள் அவர் வீட்டை ஆக்கிரமித்தனர். காலேஜிலிருந்து வீடு திரும்பும்போது ஒரு நாள் தன்னை காலேஜிலிருந்து நிறுத்திவிட போவதாக அம்மா சொன்னாள் என்று ஃபரீன் சொன்னாள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இரண்டு நாட்களுக்கு பிறகு ஃபரீன் காலேஜுக்கு வருவதை நிறுத்திவிட்டாள்.

நான் அவள் வீட்டிற்கு சென்றேன். வீட்டின் மொஹோல் வேறு மாதிரி இருந்தது. மரியம் பீபியின் பல உறவுக்காரர்கள் ஹாலில் இருந்தார்கள். மக்பூல் பாய் இருந்தவரையில் அவர் வீடு கலகலப்பாக இருக்கும். யார் வந்தாலும் உரத்த குரலில் வரவேற்பார். மரியம் பீபி முகத்திலும் மகிழ்ச்சி தெரியும். இன்று அது இருக்கவில்லை. ஃபரீன்னை உள்ளே போகச் சொன்னாள். ஃபரீன் ஏன் காலேஜுக்கு வரவில்லை, என்று நான் கேட்டதற்கு “அவள் இனிமேல் வரமாட்டாள்” என்று ஃபரீன்னின் மாமா ஒருவர் பதில் சொன்னார். நான் கிளம்பும்பொழுது இன்னொரு மாமா என் பக்கத்தில் வந்து, “பேட்டா, நீ அடிக்கடி இங்க வரத நிறுத்தணும். அப்பா இல்லாத பொண்ணு இருக்கற இடம். ஆஜ் கல் ஜமானா பஹுத் புரா ஹய்,” என்றார்.

நான் அவள் வீட்டுக்குப் போவதை நிறுத்திவிட்டாலும் அவள் வீட்டு வழியாகப் போவதை நிறுத்தவில்லை. அவள் கண்ணில் படுவாளோ என்ற நப்பாசைதான். அதேபோல் ரேஷன் கடைக்கும், காலையில் பால் வாங்கவும் சென்றேன். அவள் தென்பட்டால் அவளுடம் பேசலாம், பேசி அவளுக்கு தைரியம் கொடுக்கலாம் என்றெல்லாம் கனவு கண்டேன். ஆனால் அவள் கண்ணிலேயே படவில்லை.

ஒரு நாள் நான் இரவு வீட்டுக்குள் நுழைந்தபோது பாப்பாவும் அம்மி ஜானும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“…. நான் நினைக்கிறேன். மக்பூல் பாய் நினைச்சது என்ன ஆகறது?”

“பர் ஹம் கியா கரே. இப்போ எல்லாம் மிரியமோட உறவுக்காரங்க கைல இருக்கு. நம்ப வார்த்தைய கேக்க மாட்டாங்க. நான் மிரியம பாக்கப் போனேன். மூஞ்சி குடுத்தே பேசல. அபன் கய கர் சக்தே” என்றால் அம்மி ஜான்.

“ஆனாலும் படிப்ப நிறுத்திவிட்டு நிக்காஹ் பண்றது சரியில்ல. ஃபரீன் டிகிரி பாஸ் பண்ணனும்னு மக்பூல் பாய் எவ்வளவு ஆசைப்பட்டார்.” என்றார் பாப்பா

முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. புரிந்தவுடன் எனக்கு வேர்த்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை.

“யாரு தாமாத்?”

“அவங்க உறவுக்கார பையனாம். மகபூப்நகர்ல இருக்காங்களாம்”

“அவன் படிச்சிருக்கானா?”

“அச்சா பூச்சே” என்றாள் அம்மி ஜான்.

“கிஸ்மத்” என்று கூறிவிட்டு தலையை ஆட்டிக்கொண்டு அங்கிருந்து பாப்பா நகர்ந்தார்.

எனக்கு அம்மியிடமும் பாப்பவிடமும் நான் ஃபரீன்னை கல்யாணம் செய்துகொள்கிறேன் என்று சொல்லவேண்டும் போல் இருந்தது. ஆனால் சொல்லமுடியவில்லை. அடுத்த நாள் அவள் வீட்டுப் பக்கம் சென்றேன். வீடு பூட்டியிருந்தது. ஃபரீன் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டாள் என்று நான் உறுதியாக நம்பினேன்.

நல்ல வேளையாக நிகாஹ் என் பரீட்சைப் பொழுது நிகழ்ந்தது. நான் பரீட்சையை காரணம் வைத்து நிகாஹ்வுக்கு செல்லவில்லை. ஃபரீன் சோகமாக இருந்ததாக தனக்கு தோன்றியது என்று அம்மி சொன்னாள். எனக்கு அழுகை வரும் போல் இருந்தது.

நிகாஹ்வுக்கு பிறகு ஃபரீன் மகபூப்நகர் சென்றுவிட்டாள். மரியம் பீபி இங்கு தனியாக இருந்தாள். என்னைப் பார்க்கும்பொழுது சிரித்து, “வீட்டுக்கு வா பேட்டா” என்று அழைத்தாள். ஆனால் எனக்கு அங்கு செல்லப் பிடிக்கவில்லை.

ஆறு மாதம் கழித்து ஒரு நாள் ஃபரீன் வந்திருப்பதாக அம்மி சொன்னாள். என்ன கஷ்டத்தில் இருக்கிறாளோ பாவம், படிக்காத கணவன் அவளை எப்படி பார்த்துக்கொள்கிறானோ, அவள் இன்னும் பாட்டு பாடுகிறாளா, என்று இப்படி பல கேள்விகள் எழுந்தாலும் அவள் என்னை இன்னும் நினைவில் வைத்துக்கொண்டிருகிறாளா என்ற கேள்வி மட்டும் எழவில்லை. என்னை மறந்து விட்டு இன்னொருவனுடன் வாழ்வது அவளுக்கு நரகமாகத்தான் இருக்கும். அது முடியாத ஒன்றும்கூட என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

நான் தெரு முனையில் சென்று நின்றேன். பெட்டிக் கடையில் ஏதோ வாங்குவது போல் அவள் வீட்டைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஒரு முரட்டு ஆசாமி ஸ்கூட்டரில் வந்து ஃபரீன் வீட்டுக்கு முன் நின்றான். “அந்த பொண்ணு இந்த முரடனதான் கல்யாணம் கட்டிருக்கு” என்று கடைக்காரன் அவன் மனைவியிடம் சொல்வதை கேட்டேன். “ஐயோ இவனா?” என்றாள் அவள் மனைவி.

“ஜல்தி கரோ” என்று அவன் கத்துவது என் காதுக்கு கேட்டது. “இதோ வரேன்” என்று சொல்லிக்கொண்டே ஃபரீன் வெளியே வந்தாள். அவள் எடை சற்று கூடி இருந்தது. அவள் ஸ்கூட்டர் பின் சீட்டில் ஏறி உட்கார்ந்தாள். ஸ்கூட்டரில் இருந்தவன் கழுத்தை திருப்பி ஃபரீன்னிடம் ஏதோ சொன்னான். அவள் உரக்கச் சிரித்துவிட்டு அவன் முதுகில் இரண்டு முறை செல்லமாக குத்தினாள். அவன் கியர் போட்டு ஆக்சிலேட்டர் கொடுக்க ஸ்கூட்டர் பறந்து மறைந்தது.

oOo

குறிப்பு: சுபா தேசிகன் அவர்கள் சுட்டிக்காட்டியதையடுத்து ‘மிரியம் பீவி’ என்று எழுதப்பட்டிருந்தது ‘மரியம் பீவி’ என்று 15.8.2016  இரவு திருத்தப்பட்டது

செரினா

மாயக்கூத்தன்

ஷாராபோவாவின் முதல் கிராண்ட்ஸ்லாம் வெற்றி செரினாவுக்கு எதிராக 2004 விம்பிள்டனில் கிடைத்தது. அந்தப் போட்டி எனக்கு இப்போதும் நினைவில் இருக்கிறது. எப்போதுமே வில்லியம்ஸ் சகோதரிகளை எனக்குப் பிடித்ததில்லை. அவர்களுடைய தோற்றம், ஆக்ரோஷம், போட்டிகளில் அவர்கள் ஆதிக்கம் செலுத்திய விதம், நிறைய காரணங்கள் இருக்கக்கூடும். அதனால், ஷாராபோவா ஜெயிக்க வேண்டுமென்று விரும்பினேன். நினைத்தது நடந்தபோது, ரொம்பவே மகிழ்ச்சி. ஷாராபோவா, செரினாவுக்கு எல்லா விதத்திலும் மாற்றாக இருந்தார் என்பது என் நினைப்பு.

எந்த விளையாட்டை எடுத்துக் கொண்டாலும் அதன் நுட்பங்களை நான் அறியேன். எனக்கு அதுவொரு காணும் பொழுதுபோக்கு. இரண்டு பேர் விளையாடுகிறார்கள் என்றால், யாராவது ஒருவரை சப்போர்ட் பண்ணுவேன். சட்டென்று ஒரு நொடியில் இது நடக்கும். இவர் அருமையான ப்ளேயர் என்றெல்லாம் யாரைப் பற்றியும் தெரியாது. ஆக, ஒவ்வொரு முறை வில்லியம்ஸ் சகோதரிகள் ஜெயிக்கும்போதும் கடுப்பாக இருக்கும். அதனால் ஷாராபோவா ஜெயிக்க விரும்பினேன்.

சமீப வருடங்களில் செரினா ஒரு விம்பிளிண்டனில் ஜெயித்து, பின் பரிசை தலையில் வைத்து கரகம் ஆடியதுகூட ரசிக்கக்கூடியதாக இல்லை. முதன் முறை நான் சந்தோஷப்பட்டதற்கும் 2015க்கும் பதினோரு வருடங்கள். ஹிங்கிஸ், ஹெனின், டேவர்போர்ட், கிம் கிளிஸ்டர்ஸ், அனா, மெளரிஸ்மோ, இப்படி நிறைய பேர் வந்து போயிருந்தாலும், செரினா இன்னமும் வெல்கிறார் என்பது ஆச்சரியம். அதுவும் முப்பது வயதுக்கு மேல் ஒரு விளையாட்டு வீரரின் ஆதிக்கம் எப்படி செல்லுபடியாகிறது? ஃபெடரர் ரொம்பவே திணறுகிறார். நாடலின் ஃபிட்னெஸ் அவருக்கு சாதகமாக இல்லை. ஆனால், செரீனா இன்னமும் இருக்கிறார்.

2004ல் நான் கல்லூரிக்குச் செல்லத் தொடங்கவில்லை. அப்போது என்னைப் பற்றிய என் எண்ணம் ரொம்பவே வண்ணமயமாக இருந்தது. செரினாவையும் அவருடைய ஆக்ரோஷத்தையும் ஏதோ பண்படாத முரட்டுத்தனமாகத்தான் என்னால் எடுத்துக் கொள்ள முடிந்தது. ஆனால், 2015ல் அப்படியில்லை. செரினாவின் உழைப்பும் மீண்டும் மீண்டும் வெளிப்படும் ஆக்ரோஷமும் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றன. 2004ல் என்னைப்பற்றி எனக்கிருந்த நம்பிக்கை தொடரவில்லை. பத்து வருடங்களில் நான் தேங்கிவிட்டதாகவே நினைக்கிறேன்.

இப்போது செரினா எனக்கு அணுக்கமாகத் தெரிகிறார். என்னுடைய பல நண்பர்களைப் போல, சரளமான ஆங்கிலமும் அடிப்படையான ஒரு லாகவமும் எனக்கு கைவரவில்லை. நான் எத்தனை ரூபாய் கொடுத்து துணி வாங்கினாலும் அதை அடுத்தவர் போல உடுத்த முடியாது. எத்தனை கற்றுக்கொண்டாலும், பிறரைப் போல் என்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாது. இது என் எண்ணமாக மட்டும் இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு. இன்றைக்கு புதிதாக வந்திருக்கும் வீரர்களுக்கு இடையிலேயும் செரினா தனித்தே தெரிகிறார். நம்பிக்கைகளையும் எண்ணங்களையும் திருப்பிப் போடும் ஒருவர் செரினாவுக்குப் பிறகு வரவில்லை.

After the women’s final, the BBC played a montage of Williams reading Maya Angelou’s poem “from a past that’s rooted in pain / I rise . . .” She never asked for this, not for the pain or hate or chance to redeem history. But, at this Wimbledon, she has owned not only her greatness but her role as a transcendent figure in society. Still, she rises. She generates her own context. I thought of that at the end of her match, as she and Kerber lingered at the net in a long, tight hug. The picture—an African-American and a blond German of Polish descent, their arms intertwined—stayed with me. There was nothing political meant by that embrace, of course. It was a gesture of admiration, affection, and respect. It was no more a political act than an ace. And yet there was something powerful to it. We sometimes project our problems onto sports. But sports can also be, in some small but real ways, where we start to work them out.

2016ல் செரினா விம்பிள்டன் வென்றபிறகு வந்த கட்டுரையின் கடைசி பத்தி இது. அவர் அளவிற்கு கஷ்டங்களையோ சாதனைகளையோ நான் கண்டதில்லை. இப்போது அவர் எனக்கு ஒரு தேவதையாகத் தெரிகிறார். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். எனக்கும்தான்.

தொடர்புடையவை
1. Kerry Howley, The Unretiring serena Williams, http://nymag.com/thecut/2015/08/serena-williams-still-has-tennis-history-to-make.html
2. Louisa Thomas, Serena Williams, Andy Murray, and a Political Wimbledon, http://www.newyorker.com/news/sporting-scene/serena-williams-andy-murray-and-a-political-wimbledon

ஒளிப்பட உதவி – விக்கிப்பீடியா

ஹைட்டியின் பூகம்பத்தில் பிழைத்தவன்

சரவணன் அபி

 

அவன்
வண்டியோட்டிக் கொண்டிருந்தான்

கனத்த குரல்
இடையறாத
உற்சாகக் குரலோசையிடையே
பரபரவென
காற்றில் அலையும்
கரங்கள்
முழுதும் பாதியுமாய்
வெண்சுண்ணம் பூசி
உயராது நிற்கும்
போர்ட் ஆ பிரின்ஸின் கட்டிடங்கள்
காட்டி
போக்குவரத்தின் நெரிசல் கண்டு
பதறி நான் அலறும்போது
சிரித்து காரை
நெறிப்படுத்தும்

இது எங்கள் தேவாலயம்
இதுதான் நாடாளுமன்றம்
இது என் தந்தை சிக்கிக் கிடந்த
சிறைச்சாலை
இது தான் என் தாய்
நிலம்விளை பொருள் விற்கும்
வாரச்சந்தை
நானும் என் தங்கையரும்
ஆடி மகிழ்ந்த பூங்கா
பாதியில் நின்ற பள்ளி
புன்சிரிப்பு வழியும்
கனத்த குரலில்
சொல்லிச்சென்றவனின்
கரம்தொடர்ந்து
பார்வை தொடர
எதுவும் இல்லை
எங்கும்

இடையில் விழுந்த
அமைதி உணராது
கூடைச்சுமை தாங்கித்திரியும்
ஆடவர் பெண்டிர்
கூட்டம் தவிர்த்து
நிலைச்சின்னம் இருமருங்கும்
தேடி
திரும்பிப் பார்த்தேன்
அவனை

கண்ணாடியின் முன்னால்
பதிந்திருந்த
அவன் பார்வையில்
இன்றுமில்லை
நாளையுமில்லை

விழித்து எழுந்தால்
ஆடியிருந்த
எந்தச்சின்னமும் இல்லை
கூடிமகிழ்ந்த
பள்ளி இல்லை பூங்கா இல்லை
சந்தை இல்லை வீடு இல்லை
ஆலயம் இல்லை சாலையும் இல்லை

பின்னிக் கிடந்த
எந்த
நினைவுகளும் இல்லை

திரும்பிக் கேட்டான்
கண்ணீர் வழிய
என் புன்னகை உறைய

துடைத்தெறியப்பட்டுவிட்ட
எங்கள் நினைவுச்சின்னங்கள்
சுவடின்றி மறைந்த  பாலியங்கள்
புரியுமோ என்னவோ
உங்களுக்கு
புரியுமோ என்னவோ

ஒளிப்பட உதவி – Radio Tginen

இராகப் பெண்கள் – 3: காம்போதி யதுகுல காம்போதி- பூவும், காயும்

பானுமதி ந

lasara

புவனா…. புவனேஸ்வரி… அகிலத்திற்கெல்லாம் தலைவி. புன்னகையும் பொறுமையும் பூண்ட பூமாதேவி. தன்னைக் காத்து, தற்கொண்டான் பேணி தகை சான்ற சொல் காத்து சோர்வில்லாமல் இருந்தவள். இவள்தான் கையகல….. இல்லை… அதைவிட அதிகமான வடிவும், நிறமும், திடமும், தனி மணமும் கொண்ட செம்பருத்தி. இந்தப் பெண்ணை தி. ஜா. எங்கே பார்த்தார்? இனிமையே உருவான இவள் எப்படியெல்லாம் அந்தக் குடும்பத்திற்குள் கலந்து விடுகிறாள்?

அவள் ஒரெ பெண். வீட்டிலே வளர்ந்த செம்பருத்தி. பதியமிட்டு, பதியமிட்டு வளர்த்த பூ.. உள்கூடம் முழுவதும், சாமியின் அறையிலும் மலர்ந்து மலர்ந்து சிரிக்கும் பூ. அவள், குழலிலும் சூடும் அருமைப் பூ. கன்னங்கரிய கேச பாசத்தில் செம்மையாய், கம்பீரமாய் வீற்றிருக்கும் அழகுப் பூ.

திருமணம் செய்யப் பேச்சு நடக்கும் முன்னரே, கணவனாக வரப் போகிறவனின் குடும்பத்தில் இத்திருமணத்திற்கு காரணமாக இருந்தவன் மரணிக்கிறான். அடுத்தடுத்த சோதனைகள். நாயகனின் அண்ணனும் அடுத்தவன் கடனிற்கு ஈடுகட்ட அனைத்தையும் இழக்கிறான். மனித மாண்புகள் மங்காத இடங்கள் இருக்கின்றன என்று காண்பித்தது தி.ஜா வின் வெற்றி.

சொன்ன சொல், கொடுத்த வாக்கு, சொல்லாத விடயம் எல்லாம் காப்பாற்றத்தான் மனித பிறப்பே! படுக்கையில் படுத்திருந்தவன் தரையில் எழுந்தாற்போல் மாறியது சட்டனாதன் நிலை. இந்த மாறுதல் அந்தத்  திருமணத்தை நிறுத்தவில்லை. மாறாக, தயக்கங்களை அறுத்து வெளியே தெரியாத மனக் கசடுகளை அகற்றி நல்லபடியாக நடக்கிறது. இது யாருடைய வெற்றி? நாயகன் பெற்றுக் கொள்ளும் இடத்தில்: நாயகி மறுதலித்தாலும் கேட்பதற்கு ஒன்றுமில்லை. நாயகனுடன் அப்பொழுது இருக்கும் தாயும், அண்ணியும் சற்றுக் கசப்புடன்தான் இருக்கிறார்கள்.

தந்தையின் எண்ணமும், இறந்தவனின் கடைசி எண்ணமும் புவனாவை செலுத்தியதைவிட சட்டத்தின் மேல் அவள் கொண்ட காதல்… அந்தக் காதலும் மிகப் பூடகமாகக் கையாளப்படுகிறது.

அவள் காதலொருவனைக் கைப்பிடித்தாள். அவன் காரியம் யாவினும் கைகொடுத்தாள். எப்படிப்பட்ட உயர்வான பாத்திரம். அவள் வேலை செய்வதே தெரியாது… அவள் பூ வாடாது… உருவி துடைத்துவிட்டாற்போல் ஒரு தோற்றம். எல்லாக் குழந்தைகளுடனும் ஒட்டு, உறவு. கரிக்கும் முதல் ஓரகத்தியையும், காய்ந்து ஏங்கும் இரண்டாம் ஓரகத்தியையும் சாதுர்யமாகக் கையாள்கிறாள். தன் வாழ்வு என்று ஒன்று அவள் வாழ்ந்தாளா என்றால்… எனக்கு சொல்லத் தெரியவில்லை. இதைவிட நிறைந்த வாழ்க்கை உள்ளதா என்ன?

இத்தனை நிறைவான, ததும்பாத நிறைகுடமாக நம் கண் முன்னே வரும் புவனா…. கொஞ்சம்கூட அப்பழுக்கற்றவளா? மானிட இனத்தின் குறைகளை அவளிடமும் வைக்கிறார் அவர். வாழ்க்கையில் நம்ப இயலாத குணக் குன்றாக மனிதர்கள் இருப்பதில்லை என்பதையும் குணம் மிகுந்த அவள் பாத்திரத்தின் வாயிலாகவே அவர் சொல்கிறார். இதில்தான் அவர் படைப்பு முழுமை கொள்கிறது என்பேன்.

விஷாத ஸ்வரம் வராத இராகம்…. பாசாங்குகள் அற்ற இராகம்.. பாடப்பாட மெருகேறும் இராகம். தன்னுள் ஒரு ஸ்வரத்தை மறந்து மாறுபடும் ஒன்றென ஒலித்து, பின்னர் மீண்டு தன் நிலை பெறும் இராகம். இதை பெண் உடலில் நடுவயதில் ஏற்படும் இரசாயன மாறுதலுடன் இணைக்கும்  நுட்பத்தை என்னவென்று சொல்வது?

சிவனைக் கவர்ந்த இராகம். குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட இராகம். தேவாரப் பண்ணில் மணக்கும் இராகம். ”எந்தன் தாய் சீதா தேவியின் முன் உன் பாணங்கள் ஒன்றுமில்லை இராமா” என்று  தியாகையர் சொன்ன இராகம். தேவ கந்தர்வ இராகம்.

அப்படியெனில், யதுகுல காம்போதி எப்படி?

இவள் லா.ச. ராவின் கௌரி. இமவானின் புதல்வி. தீக்குளியின் நாயகி. இவளும் ஒரே பெண்தான். ஆனால் தம்பியர் ஐவர். வாழ்க்கையின் யதார்த்தம் புரியாத மேட்டிமை மனப்போக்கு. கணவன் எத்தகைய சூழலிலும் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்வது இவள் நெஞ்சின் நெருடல். அவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனுள் தென்படும் பல்வேறு வடிவங்களில், இவளுக்கான தனிப்பட்ட வடிவம் எது? நெருக்கமாக அதே சமயம் விலகலாக ஏனிப்படி இருக்கிறான்? அவன் இவள் தவறுகளைச் சுட்டுவதில்லை. ஆனால் ஒரு புன்னகையில், ஒரு வார்த்தையில் இவளையே  தன் தோல்விக்கு வருந்துமாறும் செய்து விடுகிறான். அவன் அழகும், தெளிவும், நடத்தையும், அவன் அனைவருக்குமான ஒரு மனிதனாக இருப்பதும் இவளை பெருமையும் கொள்ளச் செய்கிறது; அவனைச் சிறுக அடிக்கவும் மனம் ஏங்குகிறது. இவள் கணவனை மனதளவில் காய்கிறாள். அதற்காக தன்னையும் நொந்து கொள்கிறாள். ஆனாலும் அந்த அசூயை போவதில்லை. இரவில் தலையணையில் ஒரு நீலமலர் போல் தூங்கும் அவன் முகத்தை சிதைத்து ஒரு கறையேனும் ஏற்படுத்த நினைக்கிறாள். நல்ல வேளை, செயல்படுத்துவதில்லை.

இவளின் எண்ணம் ஓங்கி ஓங்கி அவன் ஒரு தீபாவளியன்று தீக்குளிக்கு ஆளாகிறான். வெந்து, கருகி, அழகினை இழந்து, உடல்நலம் குலைந்து அவனும் இவளும் துன்புறுகிறார்கள். இவளின் உள் எண்ண வேட்கைக்கு தானே தன்னைக் காவு கொடுத்து  அதிலும் அவன் இவளை வீழ்த்துகிறான்- இவள் அகந்தைக்கு அவன் மனோபலமும் காணிக்கைதான். இவள் அவனுக்காக மாங்கல்யப் பிச்சை ஏந்துகிறாள். அவன் உடலில் காணும் தீ வடுக்கள் இவளின் மனப் போரின் வெளிமுகங்கள்.

இறுதியில் பெண்ணிற்கே உண்டான பரிவில் இவள் அவனைத் தழுவி தன்னையும் கரைத்துக் கொள்கிறாள். உள்ளே பொங்கிய அபரிமிதமான அன்பினை அப்பொழுது உணர்ந்து கொள்கிறாள்.

சிவமும் சக்தியும் அர்த்தநாரீஸ்வரராக இணைந்தாலும், வலமும் இடமும் முந்தைய தோற்றத்தின் எச்சங்களே.

சட்டம் தான் வாழ்வு புவனாவிற்கு.

கிலேசம் போர்த்தும் முள் ஆடை கௌரிக்கு

தவழ்ந்து, தளர் நடையிட்டு, மழலை பேசி, தென்றல் என அலையாடி, பெண் எனும் பேரழகாய் உருக்கொண்டு, தாயாகி, அன்பென உருக்கொள்ளும் காம்போதியில் ஒரு  நொடி சுர பேதம் நடந்து பின்னர் தன் முழுமைக்குத் திரும்பும் புவனா  ஒரு முழு இராகம்.

கௌரியும் அப்படித்தான். ஆனால், தன் சுயத்திற்காக சுகத்தை பலியிட்டு, தன் தீயில் தானே கருகி பின்னர் ஆறு போல் அன்பில் ஆழ்த்திவிடுகிறாள்.

இவள் யதுகுல காம்போதி. இவளும் இராக பாவங்கள் கொண்டவள். பாடுபவரை வசப்படுத்துபவள். கேட்பவருக்கு பரவசமூட்டுபவள்.

காம்போதி     ச ரி க ம ப த ச   ச நி த ப ம க ரி ச

யதுகுல காம்போதி  ச ரி ம ப த ச  ச நி த ப ம க ரி ச

oOo