எழுத்து

விரியும் காட்சி: ஜூலியோ கொர்த்தசாரின் “Blow-up” சிறுகதை குறித்து – வெ. கணேஷின் வாசிப்பின் மீதொரு வாசிப்பு

“விரியும் காட்சி: ஜூலியோ கொர்த்தசாரின் “Blow-up” சிறுகதை குறித்து” – வெ. கணேஷின் வாசிப்பின் மீதொரு வாசிப்பு

blow up image

பல்விரிவுத்தன்மை கொண்ட வாசிப்பு குறித்து வெ. கணேஷ் எழுதும் இரண்டாம் கட்டுரை இது. இதற்கு முன், குரோசவாவின் திரைப்படம் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார்- “ரஷமோன் – மாறுபாடுகளும் ஒற்றுமையும்“.  இந்த வரிசையில் அவர் மேலும் பல கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும்போதும் சில விவாதப் புள்ளிகளை முன்வைக்கலாம்.

பலதரப்பட்ட உணர்வு நிலைகளுக்குரிய பல்வகை யதார்த்தங்கள் வெளிப்படும் பல்வாசிப்பு ஆற்றல் கொண்ட படைப்புகள், யதார்த்தத்தின் பன்முகத்தன்மையை, அதன் பொது பிடிமானமின்மையை பிரதிபலிக்கும் காரணத்தால் சரியாகவே போற்றப்படுகின்றன. அதற்கு அடிப்படையாய் அமையும் பிரதியின் ambiguity எப்படிப்பட்டது என்பதையும் பேசுவது நம் பார்வையைச் செறிவாக்கக்கூடும். அதாவது, ஒரு படைப்பு பன்முகத்தன்மை கொண்டதாக உள்ளது என்பதற்காகவே அது பாராட்டுக்குரிய தகுதியை அடைவதில்லை. வெவ்வேறு உணர்வு நிலைகள் வெவ்வேறு வாசிப்புகளுக்கு இடம் கொடுக்கின்றன என்பது மட்டும்தான் பன்முக விரிவு குறித்து நாம் சொல்லக்கூடிய விஷயமா?. இதற்கு பதில் காண, ஒரு விளையாட்டாய், வெ. கணேஷின் வாசிப்பின் மீதொரு வாசிப்பு நிகழ்த்தினால் என்ன?

இந்தக் கதையில், மிக்கேல் புறச்சித்தரிப்பிலிருந்து உன்முகமாய் பயணிக்கிறான். அதை அவன் வார்த்தைகளில் விவரிக்கையில் சொல் பிம்பம் ஆகிய இரண்டும் (நாமரூபங்கள்!) அவனுக்கு பேயோட்டு கருவிகளாகின்றன- மிக்கேல் தற்பாலின கலவி குறித்த அச்சங்களை, அதன் துன்பியல் நினைவுகளை, இக்கதைசொல்லலைக் கொண்டு மீள்கிறான். கொர்த்தசாரின் கதைசொல்லிக்கு எதிர்த்திசையில், பிரதியிலிருந்து உன்முகம் நோக்கிய பயணம் மேற்கொள்கிறார் கணேஷ் – வாசிப்பு என்ற செயல், அவரது குழந்தைப்பருவத்தின் ஒரு சிறு துண்டத்தை பெரிய அளவில் விரித்துக் காட்டுகிறது, அப்படி ப்ளோ அப் செய்யப்பட்ட வாழ்வனுபவத்தை வாசிப்புக்கு உட்படுத்தும்போது, அது அவர் தற்போது வாசித்துக் கொண்டிருக்கும் “ப்ளோ-அப்” என்ற சிறுகதையைப் புரிந்து கொள்ளும் கருவியாகிறது. சிறுகதையின் கதைசொல்லி பிரதியிலிருந்து பயணப்பட்டு தன் குழந்தைப் பருவ குழப்பங்களை சமநிலைக்கு கொண்டு வருகிறார், இந்தக் கட்டுரையில் வெ. கணேஷ் குழந்தைப்பருவ நினைவுகளிலிருந்து பயணப்பட்டு பிரதியின் குழப்பங்களைச் சமநிலைக்குக் கொண்டு வருகிறார்.

தான் பல்வகை வாசிப்புகளை நிகழ்த்தும்போதும் சிறுகதை தன் மையப் பொருளைப் புலப்படுத்துவதில்லை என்ற ஆதங்கத்தை ஒரு வாசகராய் வெ. கணேஷ் வெளிப்படுத்துகிறார். ஆனால் அதே சமயம், பல்வகை யதார்த்தங்கள் இருக்கக்கூடும் என்ற உண்மையை இந்தப் பிரதி நம்பச் செய்கிறது என்றும் வாசிக்கிறார். இதற்கு அடுத்த கட்டமாய், பிரதியின் பல்வகை வாசிப்புகள் பல்வகை யதார்த்தங்களை உருவாக்கக்கூடும் என்பதையும் அவர் ஏற்றுக் கொள்வார் என்று நினைக்கிறேன். அவரது இந்தக் கட்டுரை ஒரு பிரதியாய் எந்த உண்மையைச் சுட்டுகிறதோ, அதுவும் பல்வகை வாசிப்புகளுக்கு இடம் கொடுக்கக்கூடியதுதான்.

வாசிப்பே பிரதியாகும் நிலையில், சற்று விலகி நின்று யோசித்தால், எது யதார்த்தம் என்ற கேள்விக்கு இணையாக எது பிரதி, எது வாசிப்பு, என்ற கேள்வியும் எழுகிறது. இந்தக் கேள்வி, ஜூலியோ கொர்த்தசாரின் சிறுகதையிலும் தொக்கி நிற்கும் ஒன்றுதான். கதைசொல்லி தன் புகைப்படப் பிரதியின் ஒரு சிறு பகுதியை வாசிக்கத் தேர்ந்தெடுத்து அதற்கு பேருருத்தன்மை அளிக்கும்போது (ப்ளோ-அப்) அது வேறொரு யதார்த்தத்தைத் திருப்பித் தருகிறது, பரிசளிக்கிறது, விளைவிக்கிறது.. இத்தகைய தேர்வுகளுக்கு இடமுள்ள வரை, எது யதார்த்தம், எது பிரதி, எது வாசிப்பு என்ற கேள்வி முடிவற்ற ஒன்றுதான்.

இதைப் பேசும்போது டிஜிடல் போட்டோகிரபியில். அதிகம் பயன்படுத்தப்படும் இரு சொற்கள்- scan, என்ற சொல், ‘”close investigation,”‘ என்ற பொருளிலும், render என்ற சொல், “give back, present, yield”” என்ற பொருளிலும் முதலில் பயன்படுத்தப்பட்டவை என்று தெரிகிறது. ஆனால் இன்றோ scan என்ற சொல் நகலெடுப்பது என்ற பொருளிலும் render என்ற சொல் கூடுதல் பரிமாணம் சேர்ப்பது என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது- பிரதி நெருக்கமான வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு, வாசிப்பே வேறொரு வாசிப்புக்கு உட்படுத்தப்படக்கூடிய பிரதியுமாகிறது.

வெ. கணேஷ் கட்டுரை இங்கே 

ஒளிப்பட உதவி – Corpse from “Blow-Up” speaks!, Roger Ebert 

ஓடோன் வோன் ஹார்வத்தின் ‘ஒரு சிறு காதல் கதை’ – ஒரு சிறு குறிப்பு

ஒரு சிறு காதல் கதை -ஓடோன் வோன் ஹார்வத் (மொழியாக்கம் – லிண்டா பேக்கர்)

‘A Little Love Story’ என்ற தலைப்பு மட்டுமல்ல, “Everything is just as it always was, it seems nothing has changed…”, என்று ஆரம்பிக்கும் முதல் பத்தி, “… Only that summer’s gone…” என்று கோடைப் பருவம் மாறிவிட்டதை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லும்போது, இனி திரும்பி வர இயலாத காலத்தின் ஒரு துளியை மட்டுமல்ல, அந்தக் காலத்தில் உறைந்துப் போயுள்ள, இனி மீண்டும் கிடைக்க வாய்ப்பில்லாத காதலைப் பற்றிய கதை இது என்று உணர்த்தி விடுகிறது ((‘Shall I compare thee to a summer’s day?’ என்ற கவிதையில் ஷேக்ஸ்பியர், பருவ நிலையில் எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டு காலப்போக்கில் எல்லாம் அழிந்தாலும், “But thy eternal summer shall not fade,” என்று தன் காதலைச் சொல்கிறார். ஆங்கில இலக்கியத்தில் உணர்ச்சி வேகத்தையும் இளமையையும் உணர்த்தும் படிமமாக கோடைப் பருவம் உள்ளது)). அடுத்து, இலையுதிர் காலத்தைப் பற்றிய சிறிய, செறிவான வர்ணனை தொடர்கிறது இங்கு ஏன் இலையுதிர் காலத்தைச் சுட்ட வேண்டும் என்று கதையில் போக்கில் புரிந்து கொள்ள முடியுமா என்று பார்க்கலாம்.

இப்போது கதைசொல்லியின் ஒரு கோடை கால நினைவோடைக்குள் வாசகன் அழைத்துச் செல்லப்படுகிறான். இதில் திடீரென்று ‘இது பற்றியெல்லாம் உங்களிடம் ஏன் சொல்ல வேண்டும்?’ என்று கதைசொல்லி/ ஆசிரியர் வாசகனிடம் நேரடியாகக் கேட்கும் சித்து வேலையும் நடக்கிறது. இன்று இத்தகைய உத்திகள் மலிந்து விட்டன. Tristram Shandy போன்ற நாவல்கள் இவற்றை இன்னும் முன்னரே செய்திருந்தாலும், 1900களின் ஆரம்பப் பகுதிகளில் இத்தகைய உத்திகள் இன்னும் வியப்பை உருவாக்கக் கூடியவையாகவே இருந்திருக்கக் கூடும். கதையின் ஓட்டத்திற்கு இது பொருத்தமில்லாத ஒன்றாகவே இருக்கிறது.

அடுத்து, கதைசொல்லி தன்னைக் குறித்தும் சொல்கிறார். இப்போது, கதையில் முதல் பத்திகள் அவர் குறித்து உருவாக்கக் கூடிய நெகிழ்வான சித்திரத்திற்கு நேர்மாறாக இருக்கிறார் அவர். பெண்களைப் போகப் பொருளாக, இச்சையின் வடிகாலாக மட்டுமே பார்த்தவனாக (” I wanted every girl I saw, I wanted to possess her”) தான் அந்தக் கோடையின்போது இருந்ததாக சொல்கிறார். தன் காதலி குறித்தும் அவருக்கு பெரிய அபிப்ராயம் இல்லை, அவள் செவிடாகவும்/ ஊமையாகவும் இருந்திருக்கலாம் என்று எண்ணுகிறார். அதே நேரம், தான் அப்போது மூர்க்கமான மனிதனாக இருந்தேன் என்பதை இப்போது ஒப்புக் கொள்ளுமளவிற்கு காலம் அவரைக் கனியச் செய்துள்ளது.

ஒரு நாள் அவர் காதலி, தயக்கத்துடன், நீ ஏன் என்னை விட்டு விலகாமல் இருக்கிறாய், என்று கேட்கிறார். இதை அவர் கழிவிரக்கத்துடனோ, அவனிடமிருந்து தன்னைக் குறித்த புகழ்ச்சியை சுற்றி வளைத்து வரவழைக்கவோ கேட்கவில்லை என்பதையும், அவள் நுண்ணுணர்வு உள்ளவர் என்பதையும் ” You don’t love me at all, …” என்று அவர் தொடர்ந்து பேசுவதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இதற்கும் நம் கதைசொல்லி மிக மட்டமான பதிலையே சொல்கிறான். அவன் குணாதிசயமே இதுதான் என்றாலும், தன் உள்ளத்தை அவள் ஊடுருவிப் பார்க்கிறாள் என்பதும், அதில் (அவளைக் குறித்து அவன் எண்ணுவது) காண்பதைக் குறித்து அவள் அதிகம் வருத்தமடைவது போல் தெரியவில்லை என்பதும் கதைசொல்லியின் அகங்காரத்தைச் சீண்டி அவனை அப்படியொரு இழிவான எதிர்வினைக்குத் தூண்டியிருக்கக் கூடும்.

இப்போதும் அவன் காதலி தன்னிலை இழப்பதில்லை. “You poor thing” என்று கூறி அவனை மென்மையாக முத்தமிட்டு அவனை விட்டு நீங்குகிறாள். அவள் செய்கையில் காதலோ, வருத்தமோ தெரிவதில்லை. இவன் வாழ்வு முழுதும் அலைக்கழிந்து கொண்டே இருப்பான் என்பது அவளுக்கு புலப்பட அது குறித்த பரிதாப உணர்வோடேயே அவள் செல்கிறாள்.

”On Chesil Beach’ நாவலில், வேறொரு சூழ்நிலையில், ஆனால் ஒரு விதத்தில் இக்கதையின் பாத்திரங்களைப் போல் அதே கொதிநிலையில் உள்ள தம்பதியரின் வாழ்வு எப்படி “This is how the entire course of a life can be changed: by doing nothing-.” முற்றிலும் மாறுகிறது என்று சொல்லப்படுகிறது. நம் கதைசொல்லி, ஒன்றுமே செய்யாமல் இல்லை, அவள் விலகிச் செல்லும்போது பத்தடி தொடர்ந்து செல்பவன், அதற்குப் பின் திரும்பி விடுகிறான். இன்னும் சில அடிகள் எடுத்து வைத்திருந்தால் அவன் வாழ்வு மாறி இருக்கக் கூடும், ஆனால் முதலில் மனதளவில் எடுத்து வைக்க வேண்டிய காலடியே முடியாமல் போகும் போது, அவன் நின்று விடுகிறான்.

இதுவரை, சிற்சில நுட்பங்கள் இருந்தாலும், மொத்தமாகப் பார்க்கும்போது வழமையான கதையாக இருந்தது, “Only ten paces. But for that brief interval of time, this tiny love blazed heartfelt and intense, filled with splendor like a fairy tale,” என்று முடியும்போது இன்னொரு தளத்தை எட்டுகிறது. இப்போது கதையின் ஆரம்பத்தில் அவன், திரும்ப வர முடியாத கோடையை நினைத்துப் பார்ப்பதற்கு அர்த்தம் கிடைக்கிறது.

கோடையில் அக்காதல் வெந்தழிந்தபின் அவன் பல வசந்தங்களைப் (உறவுகளிலும்) பார்த்திருப்பான். இப்போது காலநிலை மட்டுமல்ல அவன் வாழ்வும், இலையுதிர் காலத்தில் இருக்கக் கூடும் (கோடையில் இளமை வேகம் என்றால் இலையுதிர் காலம் மனமுதிர்ச்சியை சுட்டும் படிமம் என்று கருதலாம்).. அதனாலேயே அகங்காரம் உதிர்ந்து, தன் மனதின் ஆழத்தில் புதைத்து வைத்திருந்ததை வெளிக்கொணர்ந்து அதை நோக்கும் முதிர்ச்சியை, கனிவை அவன் அடைந்திருக்கக்கூடும். தன் காதல் குறித்து “..Not a love like Romeo and Juliet, that lasts beyond the grave.” என்று இப்போது என்ன சொன்னாலும் உண்மையில் அக்கோடையில் தீ பற்றிய அவன் உள்ளமும் சரி காதலும் சரி பிறகெப்போதும் அணையவேயில்லை என்பதும் கதைசொல்லியைப் பொருத்தவரையிலேனும் (இவர்கள் பிரிந்த பிறகு அப்பெண் குறித்து கதையில் வேறு எதுவும் சொல்லப்படாததால்) எப்போதும் தன் கோடைக் காதலின் தழல் அவனைச் சுட்டெரித்துக் கொண்டே இருக்கும் என்றும் புரிகிறது.

– ஆர். அஜய்

கதையை இங்கு வாசிக்கலாம் – ஒரு சிறு காதல் கதை -ஓடோன் வோன் ஹார்வத் (மொழியாக்கம் – லிண்டா பேக்கர்)

oOo

ஒளிப்பட உதவி – English with a Twist

ஜெயந்தா மகாபாத்ராவின் கவிதை- “கோடை” – நகுல்வசன் தமிழாக்கம் குறித்து

ஜெயந்தா மகாபாத்ராவின் கவிதை- “கோடை” – நகுல்வசன் தமிழாக்கம் குறித்து 

நிலப்பிரபுத்துவ நடைமுறைகள் இன்னும் புழக்கத்தில் இருக்கும் இந்தியாவின் தொலைதூர பகுதிகளில் வாழும் பெண்களின் நிலையைச் சுட்டும் கவிதையாகவும் இதை வாசிக்கலாம் (பிற வாசிப்புகளின் சாத்தியத்தை இது நிராகரிப்பதில்லை).

சொத்து பெண்களுக்கு அளிக்கப்படும் பழக்கம் இல்லாத இடத்தில், பிறந்து வளர்ந்த வீடு எத்தனை நெருக்கமானதாக இருந்தாலும் அது ஆண்களுக்கே செல்கிறது. மா பழுப்பதற்கு முன் விழுவது, நிறைவேறாமல் பொய்க்கும் நம்பிக்கைகளைச் சுட்டுவதாக எடுத்துக் கொள்ளலாம். அவள் மணமாகி வேறெங்கோ செல்வார், அவளது பெண் அவளுக்கு தலை சீவி விடுவாள், வேறு இடங்களில் வேறு உள்ளங்களில் கண்டுகொள்ளப்படாத வேறு மூலைகளில் வேறு மாம்பழங்கள் கனியும் முன்பே விழக்கூடும். வெம்மையற்ற சாம்பல் இந்தச் சுழற்சியின் மீட்சியின்மையைச் சித்தரிக்கிறது- பீனிக்ஸ் போன்ற மறுமலர்ச்சி எதுவும் சாத்தியமில்லை.

ஆனால் இது ஒரு புதிரான கவிதை. மூளையைக் கொண்டு கவிதை வாசிப்பவர்கள் குறுக்கெழுத்தை அணுகுவது போல் இதை அணுகலாம்.

கவிதையின் முதல் வரி, Not yet., என்று வருகிறது. தலைப்பு கோடை என்பதால், அதனுடன் இணைத்து, கோடை இன்னும் வரவில்லை என்று புரிந்து கொள்ளலாம். அடுத்து, மாமரத்தின் கீழ், The cold ash of a deserted fire. வட இந்திய இலக்கியத்தில் கோடையும் மாங்கனியும் காமத்தின் குறியீடாகக் கருதப்படுகின்றன என்று நினைக்கிறேன் (இங்கு இந்தக் கவிதை நினைவுக்கு வருகிறது – – “பச்சையின்/ நிர்வாணத்தாலான/ அதன் உடல்/ ஒரு கோடைக் கரம்”. – மேஜையின் மீதிருக்கும் ஆரஞ்சு பழங்கள், ஸ்ரீனிவாஸ் ராயப்ரல்“. cold ash என்பதை அவிந்த நெருப்பின் சாம்பல் என்று வாசிக்கலாம், deserted fire, அனாதையாய் விடப்பட்ட, கைவிடப்பட்ட நெருப்பு- மாமரத்தின் கீழ் யாரோ எதற்கோ நெருப்பு வைத்திருக்கிறார்கள், அந்த நெருப்பை வளர்க்கத் தவறி கைவிட்டதால் அது அவிந்து கிடக்கிறது.

அடுத்து வரும், Who needs the future? என்பதை கோடை இன்னும் வரவில்லை என்பதோடு சேர்த்து யாருக்கு வேண்டும் எதிர்காலம் என்று வாசிக்கலாம். மாமரத்தின் கீழிருக்கும் நெருப்பை வளர்க்க ஆளில்லை, அது தணிந்து சாம்பலாகி விட்டது. இனி எதிர்காலத்தால் ஒன்றும் ஆகப் போவதில்லை.

அடுத்து ஒரு காட்சி. ஒரு பெண் தன் தாய்க்கு தலை பின்னி விடுகிறாள். பத்து வயது, அவள் அம்மாவின் தலைமுடியில் crows of rivalries are quietly nesting. இந்த சச்சரவுகள் முடிந்து போனவையாக இருக்கலாம், அப்படியானால் நடந்தது அத்தனையையும் அம்மா தன் கூந்தலில் அள்ளி முடிந்து வைத்திருக்கிறாள். அல்லது, இனி அம்மாவுக்கும் பெண்ணுக்கும் உருவாகப் போகும் சச்சரவுகளாக இருக்கலாம். அம்மா- பெண் போட்டியின் சச்சரவுக் காகங்கள் இப்போதைக்கு கூடடைந்து மௌனமாய் இருக்கின்றன.

அது என்ன போட்டி என்று கேட்டால், சிறுமி ஒரு போதும் தனக்கு இந்த வீடு சொந்தமாகாது என்று தெரிந்து வைத்திருக்கிறாள், அவள் போக வேண்டிய வீடு வேறு.

எனவேதான் இன்னும் உயிர்ப்புள்ள ஒரு மாங்காய், இன்னும் பச்சை அதன் மாறாத அத்தனை சாத்தியங்களோடும் (மீண்டும் அந்த மேற்கோள்  – “பச்சையின்/ நிர்வாணத்தாலான/ அதன் உடல்/ ஒரு கோடைக் கரம்.), மண்ணில் வீழ்கிறது, மென்மையாக. அவள் கோடை வரக் காத்திருக்கிறாள் என்று கொள்ளலாம். ஆனால் பத்து வயது பெண்ணின் உணர்வுகளா இவை என்று கேட்கும்போது இது அத்தனையும் அடிபட்டுப் போகிறது.

நாம் இந்தக் கவிதையை அம்மா, பெண், அல்லது இருவரையும் பார்க்கும் கவிஞர் என்று மூவரில் யாருடைய பார்வையில் வாசித்து யாருடைய உணர்வுகளை அடைகிறோம் என்பதில்தான் கவிதை அனுபவம் காத்திருக்கிறது.

கவிதை இங்கே

ஜெயந்தா மகாபாத்ராவின் கவிதை- “எனக்கே தெரியாமல் உன் வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டிருக்கிறேன்” – நகுல்வசன் தமிழாக்கம் குறித்து –

ஜெயந்தா மகாபாத்ராவின் கவிதை- “எனக்கே தெரியாமல் உன் வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டிருக்கிறேன்” – நகுல்வசன் தமிழாக்கம்  குறித்து –

பயனற்ற இல்லற வாழ்வு என்ற புள்ளியிலிருந்து இந்தக் கவிதையைப் பார்ப்பது வசதியாய் இருக்கலாம். தனது இல்லற வாழ்வின் நசிவை அவன் உணர்வதில்லை, எல்லாம் நல்லபடிதான் இருக்கும் என்று கவனிக்காமல் இருந்து விடுகிறான். ஆனால் ஒரு நாள் அவன் தன் மணமுறிவு துவங்கும் சாத்தியத்தைக் கண்டு கொள்கிறான். இது நாள் வரை, தான் அலட்சியப்படுத்திய விஷயங்கள் இப்போது அவன் மனக்கண் முன் அவனது சிறுமைகளைச் சித்தரிக்கின்றன. காலமோ கடந்து விட்டது, ஆண்களுக்கே உரிய கண்டுகொள்ளாமையினால் அவன் எண்ணற்ற ஆண்டுகளாகச் செய்ததை இப்போது அவனால் திருத்த முடியாது. தன் மனைவியின் இதயத்தை மீண்டும் அடைவது எப்படி என்பதற்கான வழி அவனுக்குத் தெரிவில்லை (வீடு திரும்ப முடியாதது போலவே).

இனி கவிதையை இன்னும் கொஞ்சம் நெருங்கி வாசிக்கலாம்.

“வெளியே ராப்பகலாக மழை கொட்டிக்கொண்டு இருக்கிறது. நான் நிச்சயம் என் வீடு திரும்பப் போவதில்லை (வீட்டுக்கு வெளியே இங்கே சிக்கிக்கொண்டு இருக்கிறேன்), விபரீதமாய் எதுவோ நடக்கப் போவது நன்றாகத் தெரிகிறது. (என்னோடு இப்போது இருப்பது) (என்னை அச்சுறுத்துவது) சில்லிட்டு வரும் தரைதான்”

இதைத் தலைப்புடன் தொடர்புபடுத்தி வாசிக்கும்போது இது தாம்பத்ய கவிதையாகும் சாத்தியம் கொள்கிறது.

இரவு பகலாய் மழை, வீடு போய்ச் சேரப் போவதில்லை என்பதை இவர் தன் வீடு திரும்பப் போவதில்லை என்று பொருள் கொள்ளாமல், இந்த இருவரும் அவர்கள் கனவுகண்ட வீட்டைச் சென்றடையப் போவதில்லை. மழை கண்ணீராக இருக்கலாம், அல்லது இவர்களை ஆழ்த்தும், முறிவிறக்கு இட்டும் செல்லும் அன்றாடச் சூழல். நிச்சயம் என்னவோ நடக்கப் போகிறது என்பதை, எப்போதும் இப்படியே நாம் இருந்துவிட முடியாது, ஏதோ ஒரு இடத்தில் முறியத்தான் போகிறது, என்று புரிந்து கொள்ளலாம். இப்போதொ வீட்டுக்கு வெளியே மழை, அதன் ஈரத்தால் தரை சில்லிட்டு வருகிறது. இதயம் என்றால் வெம்மை இருக்க வேண்டும், இங்கே அது மெல்ல மெல்ல அடங்குகிறது.

கவிதை இங்கே

சிமோன் பொலிவர் (Simon Bolivar)/ ஸ்டோனர் (Stoner) – இரு வாழ்வுகளின் அந்திமக் கணங்கள்

அஜய் ஆர்

generalinhislabyrinth

‘The General In His Labyrinth’ நாவலில் நாம் சந்திக்கும் சிமோன் பொலிவர் (Simon Bolivar), ஒரு கண்டத்தையே ஸ்பானியர்களின் ஆதிக்கத்திலிருந்து மீட்ட அதிநாயகர் அல்ல. ஒன்றுபட்ட லத்தீன் அமெரிக்கா என்ற கனவு தன்னுடைய கண் முன்னே கலைவதை தடுக்க முடியாத, தென்னமெரிக்க கண்டத்தின் சர்வாதிகாரியாக இருக்க விழைந்தவர் என அவர் எதிரிகளால் தூற்றப்படுகிற, அச்சந்தேகம் மக்களிடமும் பரவி, தான் விடுவித்த நாடுகள் பெரும்பாலானவற்றில் சந்தேகத்தோடு பார்க்கப்படுகிற, இத்தனை இக்கட்டிலும் மக்கள்/தன் முன்னாள் தோழர்கள் தன்னைக் கை விடமாட்டார்கள் என்ற மாயையை இழக்க விரும்பாத, மனதளவிலும் உடலளவிலும் உடைந்து போன ஒருவரையே பார்க்கிறோம். அவருக்கு இருந்த இறுதி நம்பிக்கையும் ஒரு கட்டத்தில் கலைய, ஐரோப்பாவிற்குச் செல்ல முடிவு செய்கிறார்.

அதீதமாக வாசனைத் திரவியங்களை உபயோகிப்பதற்காக பணத்தை வாரி இறைத்தவர் என்று அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் ஒரு புறமிருக்க, தன் பயணத்திற்கு நல்ல குதிரையைக்கூட ஏற்பாடு செய்ய முடியாமல், கோவேறுக் கழுதை ஒன்றே கிடைக்கிறது. அவருடைய தரப்பில் உள்ள ஒருவர் முக்கியஸ்தர், நாட்டைக் காப்பாற்ற இறுதி தியாகத்தைச் செய்யுமாறு வேண்ட, “I no longer have a country to sacrifice for” – ஒரு கண்டத்தையே மீட்டவன், ஒரு காணி நிலத்தைக் கூட தனக்கென்று/தன்னுடையதென்று கூற முடியாத – அவல நிலையை சுட்டும் பதிலோடு – தன்னுடைய இறுதிப் பயணம் என்று அப்போது அறிந்திராமல் – பயணத்தை பொலிவர் தொடங்குகிறார்.

மாபெரும் சாதனைகளைச் செய்வதற்கான உந்து சக்தியை இழந்த ஒருவரை இப்பயணத்தின்போது நாம் பார்க்கிறோம். அவர் நாடு கடத்திய எதிரிகள் தாயகம் திரும்புகிறார்கள், புதிய நாடுகள் அவற்றின் தலைவர்கள் என ஒன்றிணைந்த தென்னமெரிக்க தேசம் என்ற கனவு அவர் கண் முன்பே கலைந்து, அவர் விரும்பாத உருக்கொள்கிறது. சீட்டாட்டத்தில் ஏற்படும் தோல்வியைக்கூட ஏற்றுக்கொள்ளும் சகிப்புத்தன்மை அவருக்கு இப்போது இல்லை. அவர் செல்லுமிடங்களில், மக்கள் அவர் மீது சேறு வீசுகிறார்கள், அவருக்கு எதிரான கோஷங்கள் சுவர்களில் எழுதப்படுகின்றன. இனி எதுவும் செய்ய முடியாது என்ற செயலின்மையும், மீண்டும் முதலிலிருந்து புரட்சியைத் தொடங்க வேண்டும் என்ற அடங்கா விழைவுமாக ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்ட உணர்வுகள் மாறி மாறி குடி கொள்ளும் மனதோடு நகரும் அவரின் இறுதி நாட்கள், தனிமையான ஒரு மாலை வேளையில்

“…  of his last days and for the first time he saw the truth: the final borrowed bed, the pitiful dressing table whose clouded, patient mirror would not reflect his image again, the chipped porcelain washbasin with the water and towel and soap meant for other hands, the heartless speed of the octogonal clock racing toward the ineluctable appointment at seven minutes past one on his final afternoon of December 17. Then he crossed his arms across his chest and began to listen to the radiant voices of the slaves singing the six o’ clock Salve in the mills, and through the window he saw the diamond of Venus in the sky that was dying forever, the eternal snows,the new vine whose yellow bellflowers he would not see bloom on the following Saturday in the house closed in mouring, the final brilliance of life that would never, through all eternity be repeated again”

என்று உள எழுச்சியையும் துயரையும் ஒரே சேர அளிப்பதோடு முடிகிறது.

மரணத்தின் வலு குறித்து “Death is the greatest leveler” போன்ற சொற்றொடர்கள் எப்போதும் உபயோகத்தில் இருந்துள்ளன.

“THE glories of our blood and state
Are shadows, not substantial things;
…..
Death lays his icy hand on kings:
…..
And in the dust be equal made
With the poor crooked scythe and spade. “

என்று ஜேம்ஸ் ஷெர்லியின் (James Shirley) ‘Death the Leveller’ கவிதையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டுள்ளது போல், தன் புகழ்/ அடைந்த வெற்றிகள் அனைத்தும் எந்த பொருளும் இல்லாதவையாக மாறி, யாருமற்றவராக மரணிக்கிறார் பொலிவர்.

stoner

ஜான் வில்லியம்ஸ் (John Williams ) எழுதிய ஸ்டோனர் (‘Stoner’) நாவலின் மைய பாத்திரம், இலக்கிய உலகில் நிறைய இடங்களில் உதிர்க்கப்படும் ‘எளியவர்கள்/ சாதாரணர்கள்’ என்ற பதத்தின் மிகச் சிறந்த பிரதிநிதி என்பதை ஸ்டோனரின் மரணத்தைப் பற்றிய “Stoner’s colleagues, who held him in particular esteem when he was alive, speak of him rarely now; to the older ones, his name is reminder of the end that awaits them all, and to the younger ones it is merely a sound that evokes no sense of the past…” குறிப்போடு நாவல் ஆரம்பிப்பதிலிருந்தே உணர முடிகிறது. ஆம், இது ஒரு ‘சாதாரணனின்’ வாழ்வையும் மரணத்தையும் பற்றிய நாவல்.

மாபெரும் சாதனைகள் செய்த – நிஜத்தில் வாழ்ந்த – ஓர் ஆளுமையின் (உண்மைகள் கலந்த) புனைவுச் சித்திரமும், முற்றிலும் புனைவுப் பாத்திரமான – பொலிவரின் வாழ்க்கைக்கு முற்றிலும் நேர் மாறான வாழ்வை வாழ்ந்த, வாழும் போதும் சரி, மரணத்திலும் சரி எந்த பெரிய சலனத்தையும் உருவாக்காத – ஸ்டோனரின் ஆளுமைச் (அல்லது ஆளுமையின்மையின்) சித்திரமும் எந்தத் தொடர்பும் இல்லாதவை போல் முதற்பார்வையில் தோன்றுவதால், இவற்றை ஒரே கட்டுரையில் அணுக வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழலாம். ஆனால் ஸ்டோனரை மீள்பார்வை செய்வது, அவரது வாழ்வின் அர்த்தம் குறித்த இன்னொரு கோணத்தை தருவது மட்டுமின்றி, இறப்பு எப்படி தனிப்பட்ட ஒருவரின் வாழ்வை சமன் செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல், இவர்களைப் போல் முற்றிலும் வேறுபட்டவர்களாக இருப்பவர்களையும் ஒரே புள்ளியில் இணைக்கின்றது என்ற இன்னொரு கோணத்தையும் உணர்த்துகிறது.

ஸ்டோனரின் வாழ்க்கை குறித்து நாவலின் போக்கில் தெரிந்து கொள்கிறோம். வேளாண் கல்வி படிப்பதற்காக கல்லூரியில் சேரும் ஸ்டோனர், ஆங்கில இலக்கியத்தின்பால் ஈர்க்கப்பட்டு கல்லூரி பேராசியர் ஆகிறான். காதலில் விழுந்து விட்டோம் என்று எண்ணி, – துரித கதியில் திருமணம் செய்து, பெரிதும் துன்பத்தையே தரும், மகளே தந்தையிடம் இருந்து விலகிச் செல்லும் – இல்வாழ்க்கையில் இணைந்து கொள்கிறான். கல்லூரியில் செல்வாக்கு மிக்க இன்னொரு பேராசிரியருடன் ஏற்படும் கருத்து வேறுபாடு அவ்வாசிரியர் மனதில் ஸ்டோனர் பால் பெரும் பகையை உருவாக்க, ஆசிரியப் பணியிலும் பலச் சங்கடங்களை அவன் சந்திக்க நேர்கிறது.

ஸ்டோனர் மட்டுமே நல்லவன், மற்ற அனைவரும் தீயவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளார்களே என்ற விமர்சனம் வாசகன் மனதில் எழலாம் (எழுந்து கொண்டும் இருக்கின்றது). ஸ்டோனரின் கோணத்திலேயே முழு நாவலும் நகர்வதால் அப்படிப்பட்ட உணர்வு நாவலில் தோன்றுவது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது என்றாலும், சற்று கூர்ந்து கவனித்தால் வில்லியம்ஸ் யாரையும் கொடியவர்களாக சித்தரிக்காமல், மனப் பொருத்தம் இல்லாத இருவர் தொடர்பில் வரும்போது ஏற்படும் மனக்கோணல் எத்தகைய வஞ்சத்தை உருவாக்கும் என்பதை மட்டுமே சொல்ல வருகிறார் என்பது புரியும். மற்றவர்கள் கோணத்தில் எழுதப்படும்போது (அல்லது வாசகனே அப்படி யோசிக்கும்போது) ஸ்டோனர் தரப்பில் உள்ள சில பிரச்சனைகள் – மனைவியின் மனநிலைக்கு நேர்மாறாக, பெரிய லட்சியங்கள் இன்றி அவர் இருப்பதே இல்வாழ்க்கையில் அவருக்கு ஏற்படும் சிக்கல்களுக்கான ஊற்றுக்கண், பிடிவாதத்தோடு ஒரு நிலையில் இருந்து, ஆனால் ஒரு கட்டத்தில் ஆயாசத்தோடு அதை விட்டுவிடுவது, எதையும் இறுதி வரைக்கும் கொண்டு செல்ல இயலாத மனநிலை – இருக்கக்கூடும் என்று தெரிய வரலாம். ஸ்டோனரின் வாழ்வில் ஒரு பெண் வருகிறாள். அவர் மனதிற்கு மிக மிக அணுக்கமாக இருக்கும் அந்த உறவையும் அவர் முறித்துக் கொள்ள வேண்டியதாகிறது. மத்திய வயது ஆணின் நிம்மதியற்ற குடும்ப வாழ்க்கை, அவருக்கு ஏற்படும் இல்லறத்தைத் தாண்டிய காதல் என்ற வழமையான ஒன்றுதான் என்றாலும் அக்காதல் உருவாவதை மட்டுமின்றி, அது முறிவதையும் கண்ணியத்தோடு விவரிக்கிறார். அக்கண்ணியம் அவ்வுறவு குறித்த காத்திரமான/ தூய்மையான பிம்பத்தை உருவாக்கி, – இலக்கியத்தில் இத்தகைய உறவுகள் குறித்த பரிச்சயம் இருந்தாலும் – வாசகனை அகம் நெகிழச் செய்கிறது.

இதெல்லாம் நடந்தது/ இவற்றை ஸ்டோனர் அடைந்தார் என்பதாக இல்லாமல், இவையெல்லாம் நடக்கவில்லை/ இவற்றையெல்லாம் அவர் இழந்தார் என்பதாக மட்டுமே ஸ்டோனரின் வாழ்கை விரிகிறது. அனைத்திற்கும் முத்தாய்ப்பாக அவர் மிகவும் விரும்பும் ஆசிரியப் பணியைச் செய்வதிலும் இடறி விழுந்து, அவர் விருப்பத்திற்கு மாறாக பணி மூப்பிற்கு தள்ளப்படுகிறார்.
இதிலும் அவர் தோல்வியையே சந்திக்கிறார். நோயால் பீடிக்கப்படும் அவர், அந்திமக் கணங்களில், தான் மிகவும் விரும்பிய இலக்கியத்தின் (புத்தகங்களின்) அருகாமையில், அவற்றைப் பார்த்துக்கொண்டே, ஒரு புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கும்போது அவர் உயிர் பிரிகிறது.

மிக எளிய அறையில், இன்னொருவரின் மஞ்சத்தில் படுத்தபடி, அதிக பொருட்கள் இல்லாத அணிமேஜையை, கலங்கிய முகக்கண்ணாடியைப் பார்த்தப்படி மரணிக்கும் பொலிவரைவிட தான் விரும்பிய சூழலில் மரணிக்கும் – நிராசையின் நிழலிலேயே வாழ்நாளை கழித்த – ஸ்டோனரின் அந்திமக் கணங்கள் சற்றே ஆசுவாசமளிப்பவையாக இருந்திருக்கக் கூடும் என்பது ஒரு நகை முரண் தான்.

மரணத்தைப் பற்றிய ஷெர்லியின் கவிதை

“Only the actions of the just
Smell sweet and blossom in their dust. “

என்று முடிகிறது. பொலிவரின் செயல்கள் குறித்து அவை நியாயமா இல்லையா என்று வாதிட முடியும் என்றாலும், அவற்றின் செயற்கரியத் தன்மையை, அவர் ஒரு வரலாற்று நாயகர் என்பதை யாரும் மறுக்கவியலாது. அவருடைய அந்திமக் கணங்கள் நிராகரிப்பின் வலியில், தனிமையின் பிடியில் கழிந்திருக்கலாம். ஆனால் “… the final brilliance of life that would never, through all eternity be repeated again” என்று அந்நாவல் முடியும்போது அனைத்தையும் சரி செய்து ,அவர் புகழ் (அவர் செயல்கள் குறித்த விமர்சனங்களோடு) என்றும் நீடித்திருக்கும் என்பதை வாசகனுக்கு உணர்த்துகிறது.

ஆனால் ஸ்டோனரின் நிலை? அந்திம நேரத்தில் “What did you expect” என்று தன் வாழ்க்கை குறித்து அவர் மீண்டும் மீண்டும் தன்னையே கேட்டுக்கொள்வது வாசகனை மனமுடையச் செய்கிறது. யாரும் பார்க்காமலே மொட்டவிழ்ந்து, யாரும் முகராமலே மணம் வீசி, யாருக்கும் இழப்பதற்கு இல்லாமல் உதிரும் பூ போன்ற வாழ்க்கையை மட்டுமே அவர் வாழ்ந்திருக்கிறாரா, எந்த அர்த்தமும் அதற்கு இல்லையா என்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால் நாவலின் மீள் பார்வை செய்தால், முதலில் வாசகன் உணரக்கூடிய வாழ்க்கை சார்ந்த ஆயாசத்தையும்/ அவநம்பிக்கையையும் தாண்டி உண்மையில் எழுச்சிமிக்க வாழ்க்கை அனுபவத்தையே, அத்தகைய ஒரு வாழ்வையே ஸ்டோனர் வாழ்ந்திருக்கிறார் என்று வாசகன் உணர முடியும்.

ஸ்டோனர் வாழ்வில் இரு சம்பவங்கள் இது குறித்த சிலத் தெளிவுகளைத் தரக்கூடும். வேளாண்மை படிக்க வந்துள்ள ஸ்டோனரை, நீ ஆசிரியராகப் போகிறாய் என்று அவருடைய ஆசிரியர் சொல்கிறார். அதுவரை அப்படி எண்ணிக்கூட பார்த்திராத ஸ்டோனர் புரியாமல் ஆசிரியரை நோக்க “It’s love, Mr.Stoner,’ Sloane said cheerfully. ‘You are in love. It’s as simple as that.‘”, என்று சொல்கிறார். இன்னொரு நிகழ்வு. தன் காதலை முறித்துக் கொள்வதைப் பற்றி ஸ்டோனர் பேசும் போது, நாம் மற்றவர்களுக்கு பயந்தோ, இதனால் நாம் சந்திக்கக் கூடிய இன்னல்களைத் தவிர்க்கவோ இதைச் செய்யப்போவதில்லை என்று சொல்லி “It is simply the destruction of ourselves, of what we do” என்பதால் காதலைத் துறக்கிறோம் என்று முடிக்கிறார்.

ஸ்டோனர் அனைத்திலும் தோல்வி அடைந்திருக்கலாம். சில விஷயங்களில் மாற்று கோணத்தை பார்க்க இயலாதவராக, மனத்திடம் இல்லாதவராக இருந்திருக்கலாம். ஆனால் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரு நிகழ்வுகள் வாசகனுக்குச் சுட்டுவது என்ன? அவருடைய முதற் பெருங்காதலான இலக்கியத்தை/ கற்பித்தலை அவர் எப்போதும் கைவிடவில்லை. “I want to thank you all for letting me teach” என்றே தன் மேல் திணிக்கப்பட்ட பணி நிறைவு விழாவின் போது சொல்கிறார். காதலைத் துறக்கும்போது “… what we do” என்று அவர் குறிப்பிடுவது, தங்களைக் குறித்து அவர்களே கட்டமைத்துள்ள பிம்பத்தை மட்டுமின்றி, இலக்கியத்தை /கற்பித்தலையும் சுட்டுகிறது என்று உணரலாம். அதற்கேற்ப, தான் வகுத்துக் கொண்ட விழுமியங்களையும் (அவை மற்றவர்களின் கோணத்தில் தவறானவையாக – தன் காதலை முறிக்க அவர் சொல்லும் காரணத்தைப் போல- தேவையற்றவையாக இருக்கலாம்), ஏற்றுக்கொண்ட பொறுப்புகளையும் (இறுதி வரை தன் மனைவியிடம் இருந்து அவர் பிரிவதில்லை, தன்னை ஒதுக்கிய மகள் இக்கட்டில் சிக்கும் போது அவள் தரப்பையே எடுக்க விழைகிறார்- கைவிடாமல், அவற்றுக்கு நியாயம் செய்யவே எப்போதும் முயல்கிறார். எதையும் வென்றிலன் எனும் போதும் அவரும் பொலிவரைப் போல் ஒரு நாயகரே.