எழுத்து

சிசு

ஹரன் பிரசன்னா

baby

ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஒரு முறத்தில் வைத்து கையில் தரப்பட்ட குழந்தையா  இது என்று வெறித்துப் பார்த்துக்கொண்டே இருந்தாள் உமா. ட்ரைனில் சுழற்றி அடிக்கும் காற்றில் கையைக்  காலை  உதறிக்கொண்டு அவள் மார்போடு ஒட்டிக்கொண்டது அந்தப் பதினைந்து நாள் குழந்தை. பக்கத்தில் சந்துரு எதையோ யோசித்தபடி எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தான். திடீர் திடீரென குழந்தையைப்  பார்ப்பதும் உமாவைப்  பார்ப்பதும் என அவன் நிலையில்லாமல் இருந்தான்.

லேசாக நரைக்கத் தொடங்கியிருந்த தனது கூந்தலை ஒதுக்கி காதுக்குப் பின்னே சொருகிக் கொண்டாள் அவள். நடுவகிடெடுத்து மேல் நெற்றியில் பொட்டு வைத்திருந்தாள். தான் இப்போது பெண்ணா அல்லது பொம்பளையா என்று அவளுக்கு அடிக்கடி சந்தேகம் வருவதுண்டு. 35 வயதில் நரைக்குமா என்பதைவிட ‘நரை வந்துட்டு ஒரு பூச்சி பொட்டு வல்லையே’ என்ற கேள்வியை எந்நேரமும் சித்ரா அத்தை கேட்டுவிடக்கூடும் என்பதே அவளது கலக்கமாக இருந்தது. இனி அவள் கேட்கமுடியாது. இது என் குழந்தைதான். என் குழந்தையேதான்.

மெலிந்து கருத்து எதிலும் கவனமின்றித் தவிக்கும் தன் கணவனைப் பார்த்தாள். அவனுக்கு மீசை எப்போதோ நரைத்துவிட்டது. இரண்டு நாள் சவரம் செய்யாத முகத்தில் நரை ஆங்கங்கே எட்டிப் பார்த்தது. முதல் நரை கண்ணில்பட்டபோது அவளுக்குள் மெல்ல ஒரு பயம் எழுந்தது இப்போதும் நினைவில் இருக்கிறது. ‘இதெல்லாம் ஒரு பிரச்சினையாட்டி. அவனவனுக்கு 50 வயசுல புள்ள பொறக்குது. உங்க மாமா கடைசில புள்ள பெத்தப்ப 52 வயசு. நம்ம சரவணனை பெத்தேன்’ என்றாள் சித்ரா அத்தை.

சித்ரா அத்தையிடமிருந்து தப்பிப்பதற்காகவாவது ஒரு குழந்தை பிறந்திருக்கலாம். ஆனால் பிறக்கவில்லை. இரண்டு பேருக்கும் எந்தக் குறையும் இல்லை. முதல் நாள் முதல் நேற்று வரை சந்துரு அதே வேகத்தோடும் அதே ஆசையோடுதான் இருக்கிறான். ஒருவேளை அவனுக்குள்ளும் எல்லாம் விட்டுப் போயிருக்குமோ? தெரியவில்லை. ஆனால் இருக்காது. தன் கணவனின் வேகம் தனக்குத் தெரியாதா என்று நினைத்துக்கொண்டாள். உண்மையில் அவளுக்கு என்னவோ விட்டுத்தான் போயிருந்தது.

சொல்லி வைத்ததுபோல் எந்தக் குறையும் இல்லை என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் குழந்தை இல்லை என்ற குறை மிகப்பெரியதாக மாறி அவளைச் சுழற்றி அடித்தது. வெளியில் எல்லோரும் போல் சிரித்து எல்லோரும் போல் உடுத்திக் கொண்டாலும் உள்ளே எப்போதும் ஒரு கரும்பாறையைச் சுமந்துகொண்டே நடப்பது போல் இருந்தது. ஏனோ ஒரு கருகூட தங்கவே இல்லை. ஒவ்வொரு மாதமும் சரியாக உட்கார்ந்தாள். தள்ளிப் போனதுகூட இல்லை. யாரும் இவளை மலடி என்றோ வேறுவிதமாகவோ பெரிதாகக் குறை சொல்லவில்லை. ஆனால் அவர்கள் பார்வையிலேயே அடுத்து அவர்கள் கேட்க வரும் கேள்வியை இவளால் படிக்கமுடிந்தது. முதலில் அழுகை, பின்பு கோபம், பின்பு சலிப்பு, பின்பு அவளே முந்திக்கொண்டு சொல்லிவிடுவாள். ‘டாக்டர்ட்ட காமிச்சிட்டுத்தான் இருக்கோம்.’ மிக சமத்காரமாக சித்ரா அத்தை ‘நா கேக்கலியே இப்போ’ என்று சொல்லிவிட்டு, ‘அதெல்லாம் வரும், ரெண்டு பேர் வீட்டுலயும் புள்ளைக்கா குறைச்சல்’ என்பாள்.

சந்துரு எதிர்க்காற்றின் சுகத்தில் உறங்கத் தொடங்கியிருந்தான். நான்கு நாள்களாகவே அவனுக்கு உறக்கமில்லை. எப்போதும் ஒரு பதற்றத்தில் இருப்பதை அவள் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். இவளுக்குள்ளும் பெரிய பதற்றம் இருந்தது. 35 வயதில் ஓடியாடி ஒரு குழந்தையை வளர்க்க முடியுமா? ஆனால் அதை மீறிய நம்பிக்கை இருந்தது. வெறி இருந்தது. கல்யாணம் ஆகி பத்து வருடங்களில் ஒரு குழந்தையில்லை என்பது அத்தனை பெரிய விஷயமா? கையில் ஒரு ரோஜாக்கூட்டத்தின் பஞ்சுப்பொதியென வெளிர்சிகப்பு நிறத்தில் சிசு ஒட்டிக்கிடக்கும்போதுதான் தெரிகிறது, அது நிஜமாகவே ஒரு பெரிய விஷயம்தான் என.

குழந்தையை உடலோடு இறுக்கிக்கொண்டாள். சந்துரு அவள் தோள்மேல் சாய்ந்து விழுந்தான். ஏனோ அவளுக்கு நிறைவாக இருந்தது. காரணமில்லாமல் கண்ணீர் வந்தது. குழந்தை இல்லை என்று இனி அழவேகூடாது என முடிவெடுத்தது நினைவுக்கு வந்தது. குழந்தையை மெல்லத் தூக்கி முகர்ந்து பார்த்தாள். ஆசை தீர அழவேண்டும் போல் இருந்தது. மீண்டும் முகர்ந்தாள். உடலெங்கும் பால் வாசனை. மீண்டும் மீண்டும் முகர்ந்தாள். முத்தமிட்டாள். அவள் உள்ளம் வெறிகொண்டது. சந்துரு இவளைக்கிடத்தி உடலெங்கும் நுகரும்போது ‘இது என்ன லூஸாட்டம்’ என்றபோது அவன் சொன்னான், ‘ஒரு வெறின்னு வெச்சிக்கோ. ஒனக்குப் புரியாது’ என்று. இதுவும் அதே போல்தானா? அல்லது வேறு ஒரு விதமா? ஆனால் நிச்சயம் இது ஒரு வெறிதான். எல்லாமே தன்னுடையது என்னும் வெறி. உடலெங்கும் ஒரு நடுக்கம் பரவி கால் நுனி பலமிழந்து தலைசுற்றுவது போல் இருந்தது. ஒரு கையில் சந்துருவைப் பிடித்துக்கொண்டாள். அந்த வெறியுடன் முதல்முறை அவன் இவள் கையைப் பிடித்தபோது இருந்த அதே வேகம் அவளுக்குள் இப்போது இருப்பதை உணர்ந்துகொண்டாள்.

திடீரென கேட்ட மொபைல் சத்தத்தில் குழந்தை தூக்கம் கலைந்து சிணுங்கி அழுதது. சந்துரு பதறி போனை எடுத்தான். உமா சந்துருவை முறைத்துக்கொண்டே குழந்தையை கையில் ஊஞ்சல் போல வைத்துத் தாலாட்டினாள். சந்துரு போனில் என்னவோ பேசினான். அவன் முகம் கொஞ்சம் கலவரமடைந்தது போல் இருந்தது. போனை வைத்தவுடன் அவள் அவனிடம் ‘யாராம்?’ என்றாள்.

‘சித்ரா அத்தைதான். அம்மா ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி பாத்ரூம்ல கீழ விழுந்துட்டாங்களாம். பின்மண்டைல அடியாம். ஒரு மணி நேரமா நம்ம கூப்பிடுறாளாம், லைனே கிடைக்கலியாம். சீரியஸா ஒண்ணும் இல்லையாம்’ என்று சொல்லிக்கொண்டே குழந்தையைப் பார்த்தான்.

அவள் குழந்தையை அவளுக்குள் மறைத்தவாறே ‘உங்க அம்மா விழறது மொதவாட்டியா’ என்றாள்.

குழந்தையின் நட்சத்திரத்தையும் ராசியையும் சொல்லி குழந்தையைப் பெற்றவள் ஒரு முறத்தில் வைத்து தன்னிடம் ஒப்படைத்தபோது உமா சொன்னாள், ‘கடைசியா தாய்ப்பால் தந்துட்டு கொடுங்க. அதோட சரி. உங்களுக்கும் அதுக்கும் ஒரு உறவுமில்ல’ என்றாள். சந்துரு ‘சும்மா கெட’ என்றான். உமா பதிலுக்கு ‘நீங்க சும்மா கெடங்க’ என்றாள். அவள் சொன்னதை உடன்வந்த உமாவின் அக்கா கணவன் ஹிந்தியில் அந்தப் பெண்ணுக்குச் சொன்னான். அந்தப் பெண் கண்ணீருடன் ‘புரியுது’ என்று சொன்னதாக உமா ஊகித்தாள்.

அவளுக்கு 55 வயது ஆகியிருந்தது. உடல் பருத்து நிற்கமுடியாமல் உட்காரமுடியாமல் கஷ்டப்பட்டாள். அவள் மகளுக்கு 23 வயது. எதிர்பாராமல் இந்த 55 வயதில் ஒரு குழந்தை. அந்தக் குடும்பத்தால் இதை எதிர்கொள்ளமுடியவில்லை. அந்த ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருந்த உமாவின் ஒன்றுவிட்ட அக்கா கூப்பிட்டு விவரத்தைக் கூறினாள். அந்தப் பெண்ணின் குடும்பம் தனக்குத் தெரிந்ததுதான் என்றும் குழந்தையை யாருக்காவது தத்து கொடுக்கப்போகிறார்கள் என்று கேள்விப்படுவதாகவும் உமாவுக்குச் சரியென்றால் தன் கணவனைப் பேசச்சொல்வதாகவும் சொன்னாள்.

முதலில் ஒரு குழந்தையை தத்து எடுக்கலாமா என்று சந்துரு பல வருடங்களுக்கு முன்பு கேட்டபோது உமா அழுதுகொண்டே ‘எனக்கு வக்கில்லன்றீங்களா இல்ல உங்களுக்கு வக்கில்லயா’ என்று கேட்டதை பல நாள் சந்துரு மறக்கவே இல்லை என்பது அவளுக்குத் தெரியும். அதற்குப் பின் தத்து என்ற பேச்சை அவன் எடுத்ததே இல்லை. திடீரென்று உமா அவனைக் கூப்பிட்டு ‘ஒரு குழந்தை இப்ப ரெடியா இருக்காம். குஜராத்லேர்ந்து மாலினி அக்கா கூப்பிட்டா. அகமதாபாத்துக்கு உடனே போகணும்’ என்றபோது, அவளுக்குள் இருப்பது கோபமா உறுதியா குழப்பமா அல்லது அவசரமா என்பதை இவனால் புரிந்துகொள்ளமுடியவில்லை.

வீட்டின் ஓர் அறையில் நடக்கமுடியாமல் கட்டிலில் கிடக்கும் அம்மாவிடம் சென்று ‘கொழந்த தத்து எடுக்கலாம்னு அவ சொல்றா’ என்று சொல்லவும், இடுப்பு ஒடிந்து நடக்கமுடியாமல் தன் பெரிய வயிற்றை கட்டிலின் மீது கிடத்தி ஒரு ஓரமாகச் சாய்ந்து படுத்திருந்த அம்மா, கண்கள் சொருகி என்ன நடக்கிறதென்றே உணர்வில்லாமல் இருந்த அம்மா, மூத்திர நாத்தத்தில் சோர்ந்து கிடந்த அம்மா, அவன் எதிர்பாராத வேகத்தில், உயர்ந்த குரலில் ‘எவ குழந்தைய எவ வளக்கது? என்ன சாதி என்ன எழவுன்னு தெரியாததெல்லாம் என் வீட்டுக்குள்ள வரக்கூடாது, சொல்லிப்புட்டேன்’ என்று சொல்லிவிட்டாள்.

அந்த அறைக்கு வெளியே நின்றிருந்த உமா அதற்கெல்லாம் அசரவே இல்லை என்பது அவள் முகத்திலேயே தெரிந்தது. உமா ஒரு பயந்த சுபாவம் உள்ளவள் என்று மட்டுமே சந்துரு நினைத்திருந்தான். உள்ளூர சின்னதாக ஒரு வீம்பு உண்டு என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் இத்தனை தைரியம் அவளுக்குள் இருப்பது ஆச்சரியமாக இருந்தது. தத்து குழந்தை வேண்டாம் என்றபோதும் அதே உறுதி, இப்போது வேண்டும் என்னும்போதும் அதே உறுதி. இவளைப் புரிந்துகொள்ளவே இல்லையோ என்றும் நினைத்தான். அம்மாவின் அறையை விட்டு வெளியே வந்தவனிடம் மிக நிதானமாக கொஞ்சம் குரலை உயர்த்தி அவன் அம்மாவுக்கும் கேட்கும் வண்ணம் சொன்னாள், ‘உடனே கிளம்பணும்’ என்று. உள்ளே அம்மா விசும்பும் குரல் கேட்டது. சந்துரு ஒரு நிமிடம் யோசித்துவிட்டு உமாவுடன் கிளம்பிப் போனான். போகும் வழியில் ரயிலில் அவனிடம் ‘அதென்ன எழவுன்றது? உங்கம்மாவுக்கு இருக்கு ஒரு நாள்’ என்று சொன்னாள். சந்துரு ‘விடு’ என்றான்.

‘கோர்ட்ல எழுதி வாங்கணும். அதெல்லாம் நான் பாத்துக்கறேன். இன்னைக்கு நல்ல நாளு, குழந்தையை வாங்கிக்கோங்க’ என்றான் கூட வந்த உமாவின் அக்கா கணவன். பெற்றவள் குழந்தையை கடைசியாக ஒரு தடவை முத்தமிட்டுவிட்டு உமாவிடம் தந்தாள். உமா கைகள் நடுங்க கண்ணீர் கலங்க குழந்தையைப் பெற்றுக்கொண்டு அவளிடம் ‘இனிமே என்னையும் என் குழந்தையை மறந்துடுங்க’ என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் கூட காத்திராமல் வெளியேறினாள். பின்னால் அழும் அந்தப் பெண்ணின் கண்ணீர் வெள்ளமென தன்னைச் சூழும் முன்பு அதைக் கடந்துவிடவேண்டும் என்று எண்ணி குழந்தையை எடுத்துக்கொண்டு ஓடுபவள் போல விரைந்து நடந்தாள்.

காற்றில் அசையும் பொருள்களின் ஒலியைக் கேட்டு ட்ரைனில் மலங்க மலங்க விழித்துக்கொண்டு வந்தது குழந்தை. எல்லா வகையிலும் சட்ட ரீதியாகவும்கூட இனி இது தன் குழந்தை என்ற நினைப்பே அவளை மலரச் செய்தது. குழந்தை அவள் மேல் ஒண்ணுக்கிருந்தபோது வாயை மூடிச் சிரித்தாள். சுற்றிலும் யாருமே இல்லாததுபோல் தனது உலகத்தில் தன் குழந்தையுடன் தான் மட்டுமே இருப்பதாக அவள் நடந்துகொண்டாள். இனி சித்ரா அக்காவின் கேள்விகளுக்கு பதில் சொல்லலாம். மாமியாரின் முகத்தை தைரியமாக ஏறெடுத்துப் பார்க்கலாம். குழந்தையைப் பாக்கதே பெரிய பாடா இருக்கு என்று உறவினர்களிடம் அலுத்துக்கொள்ளலாம். எல்லாவற்றையும்விட சந்துரு இழுத்துப்பிடித்து இறுக்கும்போது இந்த வாட்டியாவது குழந்தை பிறக்குமா என்ற எண்ணம் இல்லாமல் அவனுக்கு ஈடுகொடுக்கலாம்.

‘அம்மாவுக்கு எப்படி இருக்கோ?’ என்றான் சந்துரு. உடனே உமா ‘சித்ரா அத்தை குழந்தை வந்த நேரம்னு ஆரம்பிக்காம இருக்கணும். இதுல குழந்தையோட நட்சத்திரமும் ராசியும் உங்கம்மாவோட நட்சத்திரமும் ராசியும் ஒண்ணு. சித்ரா அத்தை என்ன என்ன பேசப்போறாளோ’ என்றாள். ‘அவ வாய் மட்டும்தான், உள்ள ஒண்ணும் இல்ல. நீ அவ பேசறதையெல்லாம் காரியமாக்காத’ என்றான். அவள் கொஞ்சம் யோசித்து, ‘ஒங்களுக்குமே அப்படி தோணுதோ’ என்றாள். அது காதில் விழாதது போல, குனிந்து குழந்தையைப் பார்த்துச் சிரித்து, குழந்தையைச் சுற்றியிருந்த துணியை நன்றாக முழுக்க மூடிவிட்டான். ‘பொம்பளை குழந்தை. இப்படி கிடைக்கிறதெல்லாம் அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும். எழுதி வெச்சி காத்துக்கிட்டு இருக்கிறவங்களுக்கே கிடைக்கலை. அந்தம்மா பணம்கூட வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம், நல்லா வளர்த்தா போதும்னு சொல்லிட்டாங்களாம், உங்கக்கா வீட்டுக்காரன் சொன்னான்’  என்றான். உமாவுக்கு கண்ணீர் துளிர்த்தது. யாருக்கும் தெரியாமல் கண்ணைத் துடைத்துக்கொண்டாள். ‘பேரு என்ன வெக்கலாம்? எங்க வீட்டுல அம்மா பேரை வைக்கதுதான் வழக்கம்’ என்றான். உமா பதிலே பேசாமல் குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

ட்ரைனை விட்டு இறங்கி ஆட்டோவைப் பிடித்து வீட்டுப் படியேறும்போது சந்துருவுக்கு ஏனோ பயமாக இருந்தது. உமா எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாசலில் நின்று சத்தமாக ‘சித்ரா அத்தை, ஆரத்தி கரைச்சு வெக்க சொன்னேனே, கொண்டு வாங்க’ என்றாள். சித்ரா அத்தை வேகமாக ஆரத்தியுடன் வந்து எதுவும் சொல்லாமல் ஆரத்தி எடுத்துவிட்டு, சந்துருவிடம் மெல்ல ‘அம்மாவுக்கு நல்ல அடி, ஆஸ்பத்திரி வேணாங்கா, இந்த தடவை பொழைக்கறது கஷ்டம்தான்’ என்றாள். சந்துரு வேகமாக உள்ளே ஓடினான். வலது காலை எடுத்து வைத்து நிதானமாக உள்ளே சென்ற உமா, மாமியாரின் அறை வாசலில் ஓரமாக நின்றுகொண்டாள்.

சந்துரு அவன் அம்மா படுத்துக்கிடந்த கட்டிலில் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு ‘என்னம்மா எப்படி இருக்க? ஹாஸ்பிடல்ல வெச்சு பாத்தா சரியாயிடும்’ என்றான். அவள் கண்கள் எதையோ தேடி வாசலில் நின்ற உமாவிடமும் உமா கையில் இருந்த குழந்தை மீதும் நிலைத்தன. சந்துரு ‘பொம்பள குழந்தைம்மா’ என்றான். அவள் கண்களில் நீர் வழிந்தது. ‘உள்ளே வரச் சொல்லு’ என்றாள். ‘இல்லம்மா, ஒனக்குப் பிடிக்கலைன்னு தெரிஞ்சும்… வேற வழி தெரியலைம்மா… இப்படி கிடைக்கிறதே அதிர்ஷ்டம்’ என்றான் மன்னிப்புக் கேட்கும் குரலில்.

அவள் சொன்னாள், ‘அது எப்ப நம்ம வீட்டுக்குள்ள வந்துடுச்சோ, அது நம்ம வீட்டுக் குழந்தை. என்னவோ தோணிச்சு அப்ப சொன்னேன். இப்ப இப்படி தோணுது இப்படி சொல்றேன். இப்ப சொல்றதை எடுத்துக்கோ. உள்ள சாமி ரூம்ல அட்சதை இருக்கு, எடுத்துட்டு வா’ என்றாள்.

வெளியில் நின்றிருந்த உமா சத்தமில்லாமல் குலுங்கி குலுங்கி அழுதுகொண்டிருந்தாள். சந்துருவின் அம்மா குரலை உயர்த்தி ‘எல்லாம் போதும். வேணுங்கிறது அழுதாச்சு. இதுதான் கடைசி. அழுது முடி’ என்றவள், ‘ஏய் சித்ரா, அந்த அட்சதையைக் கொண்டு வா’ என்றாள். அட்சதை கொண்டு வந்த சித்ராவிடம் ‘என் ராசியாம்லா. எனக்கு சாவே இல்லைல்லா’ என்றாள். அதற்கு அவள், ‘குழந்தை அப்படியே உங்க ஜாடைல இருக்கு’ என்றாள்.

oOo

ஒளிப்பட உதவி – Pinterest

சொல் விழுந்த வனம்

நித்ய சைதன்யா

 

கரிய சொல் ஒன்றிலிருந்து
கிளைத்துப் பரவும் வனத்தில்
இளைப்பாறும் பறவைகளுக்கு
உண்ணத்தருகிறாய்
கனவின் ருசிதிகட்டும் கனிகளை

ஆசுவாசம் மிகுந்து
உனதன்பில் சிக்குண்டு
பறத்தலை மறந்த அச்சிறிய
உயிர்களில் நானும் ஒருவன்

அலகிலா உனது லீலைகள்
இடையறா உற்சவ தினங்களாக
நிகழ்ந்தேறி
உன்மத்தம் கொண்டலைகிறேன்

உனதன்பில் ஒளிர்ந்த
ஒற்றைச்சொல்லை கையிலேந்தி
உந்தும் கணத்தில்
உடன் வருகின்றன
உனை விழைந்த ஓராயிரம் சிறகுகள்

oOo

ஒளிப்பட உதவி – Jacob Scriftman

Wisdom for a song in a temple town

Nakul Vāc

 

tirupuvanam

For just five and a quarter rupees :

Rituals at six canonical hours of the day,

Circumambulation in the crowd free corridors
shrouded by the noise free darkness,

An overflowing Vaikai
spurning its sandy confines,

A beauteous Lord
contrary to his true form
sheathed in Gold
Whom
only the courtesan Ponnanaiyaal
got to pinch amorously

All of this and

the wisdom
espousing
the futility of
all relations

In

The holy town of Thirupuvanam.

 

oOo

நன்றி – ந. ஜயபாஸ்கரனின் மூலக்கவிதை

குளிர்

விஷால் ராஜா

train

எதிர்பார்க்காத குளிர். இன்று விடியற்காலை சென்னை வந்திறங்கியது முதல் உடல் குளிரில் நடுங்கி உதறியபடியே இருக்கிறது. நான் அணிந்திருந்தது அரைக்கை சட்டை வேறு. முழங்கைகளை பிணைத்துக் கட்டினால் உள்ளங்கை ஜில்லிட்டு கூசியது. ரயில் நிலையத்தில் கூட்டம் இல்லை. ரயில் வருகிறதா என்று தண்டவாளத்தோடு பார்த்தேன். கண் தூரம் வரைக்கும் வானம் இருள் பரப்பாக தாழ்ந்திருந்தது. அடுத்த ரயில் எப்போது என்று பயணச் சீட்டு கொடுக்குமிடத்திற்கு பக்கத்தில் இருந்த பெரிய நேர அட்டவணையில் தேடினேன். இன்னும் அரை மணி நேரம் இருந்தது. சோர்வுடன் கையில் பிடித்திருந்த துணிப்பையை கீழே வைத்தேன்.

குளிர் குறைவதுப் போல் தெரியவில்லை. பையில் அவசரத்திற்கென்று வைத்த ஒரு குளிர் சால்வை உண்டு. ஆனால் அதை தேடி எடுக்க வேண்டும். துவைக்காத அழுக்குத் துணிகள் சுருட்டிக் கிடக்கும் பையை பிரித்து துழாவுவதற்கு அசூயையாக இருந்தது.

குளிர் பொறுக்காமல் சூட்டிற்காக கைகளை உரசி கன்னத்தில் வைத்தேன். பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. ரயில் நிலையத்திற்கு பின்னால் , சந்தை தெருவில் கடை வாசல்கள் தோறும் கூட்டி பெருக்கி நீர் தெளித்துக் கொண்டிருந்தார்கள். சாலைக்கு மறுபக்கம் இருந்த பால் கடையில் அப்போதுதான் பால் வரத்து நிகழ்ந்துக் கொண்டிருந்தது. லாரியில் வந்த பால் டப்பாக்களை இறக்கி வைத்து வரிசையாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள். இன்னொருபக்கம் இறக்கிய டப்பாக்களை பையன்கள் வேகமாக சைக்கிளில் ஏற்றி வீடுகளுக்கு கொடுக்க விரைந்து கொண்டிருந்தார்கள். கடை முதலாளி போலிருந்தவர் ஒவ்வொரு டப்பாவையும் கணக்கெடுத்து ஒரு சின்ன சீட்டில் குறித்துக் கொண்டிருந்தார். அந்த கடையைத் தவிர சுற்றி வேறெங்கும் பெரிதாக சலனம் இல்லை.

பயண அசதியில் எனக்கு முதுகு வலிப்பது போல் இருந்தது. அங்கிருந்து விலகி அலைபேசியில் இயர்போனை பொருத்தி பாட்டுக் கேட்டவாறு ரயில் நிலையத்தின் சிமென்ட் இருக்கையில் வந்து அமர்ந்தேன். பக்கத்தில் தேநீர்க் கடையில் வானொலி சத்தமாக பாடிக் கொண்டிருந்தது. என் காதில் கேட்டுக் கொண்டிருந்த பாடலும் கடையின் ஒலிப் பெருக்கி பாடலும் ஒரு மாதிரி கலவையாகி வெறும் இரைச்சலாக மீந்தன. நான் என் அலைபேசியில் பாட்டு சத்தத்தை கூட்டினேன். ஒன்றிரண்டு நிமிடங்களில் காது வலிப்பது போலானது. இயர்போனை கழற்றி கால்சராயில் வைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். கதிர் எழும் தடயமே எங்கும் இல்லை. வானில் இருள் விலகி பனித் திரை விழுந்திருந்தது. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கும் அசைவற்ற பெரும் உயிர் போல் பனி கண் நிறைய எங்கிலும் இருந்தது.

அப்போது மத்திம வயதை கடந்த இரண்டு பெண்கள் உயரமான நீல நிற பிளாஸ்டிக் பைகளை தூக்கியபடி வந்து எனக்கு அடுத்து இருந்த இருக்கையில் அமர்ந்தார்கள். இரண்டு பேருமே குளிருக்காக தலையைச் சுற்றி கழுத்துக்குட்டை அணிந்திருந்தார்கள். விடிவதற்கு முன்பே அவர்கள் குளித்து முடித்து குங்கும முகத்தில் புத்துணர்ச்சியோடு இருப்பதை பார்த்ததும் தூக்கக் களைப்பில் என் முகம் காய்ந்து வாடியிருப்பது உணர்ச்சியில் தட்டியது. அனிச்சையாக கைக்குட்டையால் முகத்தை அழுத்த துடைத்துக் கொண்டேன். அவர்கள் கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் பைகள் பெரிதாக இருந்தன. ஆனால் கனமாகத் தோன்றவில்லை. முதலில் ஏதோ உடுப்புத்துணி என்று நினைத்தேன். பின்னர் அவர்கள் அவற்றை பிரித்தபோதுதான் உள்ளே சாமந்தி பூக்கள் குவிந்து கிடப்பது தெரிந்தது. இருவரும் முந்தானையில் பூக்களை கொட்டி வைத்து பேச்சுக் கொடுத்தப்படியே நூல் கோர்த்து அவற்றை தொடுக்க ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்திற்கு நூலோடு வேகமாக இழைந்து ஓடி பூக்களை இணைத்து விலகும் அவர்களின் விரல்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். பின் அதில் சுவாரஸ்யமிழந்து அலைபேசியை எடுத்து நேரம் பார்த்துவிட்டு திரும்பவும் பையில் வைத்தேன்.

மரங்களில் சாய்ந்து வீசிய மென் காற்றில் சாமந்தி மணமும் கலந்து வந்தது. அது நாசியில் மயக்கமாக தங்க இன்னொருபுறம் பனியில் தலையைச் சுற்றி குளிரேறிக் கொண்டிருந்தது. காதுகளை அழுந்த மூடி கால்களுக்கு நடுவே முகத்தை புதைத்துக் கொண்டேன். அருகில் யாரோ நடந்து வரும் காலடி சத்தம் கேட்டது. இயல்பாக திரும்பி பார்த்தேன். நல்ல உயரமும் கனமும் கூடிய வாட்டசாட்டமான மனிதர். மடிப்பு விழாத படு நேர்த்தியான உடை. பளபளவென்றிருந்த போலீஸ் காலணிகளில் சீராக அடிவைத்து நடந்து வந்தார். அவரைக் கண்டதும் பூக்கட்டிக் கொண்டிருந்தவர்களில் ஒருத்தி “வணக்கம் சார்” என்று பூக்கள் விழாதவாறு முந்தானையை பத்திரமாக பிடித்துக் கொண்டு பாதிக் கையில் வணக்கம் வைத்தாள். மற்றவள் எதுவும் சொல்லாமல் மரியாதையாக சிரிக்க, காவல் அதிகாரி இருவரையும் பார்த்து “வணக்கம். வணக்கம்” என்று சொல்லிவிட்டு என் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டார். அதுவரைக்கும் காலியாக இருந்ததுப் போலிருந்த சிமென்ட் பெஞ்ச் அவர் உட்கார்ந்ததும் அடைத்துக் கொண்டதுப் போலானது.

காவல் அதிகாரி என்பதாலேயே என்னில் ஒரு சின்ன ஜாக்கிரதை உணர்வு தொற்றிக் கொண்டது. அது ஜாக்கிரதை உணர்வா அல்லது பயமா என்று துல்லியமாக சொல்ல முடியவில்லை. அவரை பார்ப்பதை தவிர்த்தேன்.

நாங்கள் அமர்ந்திருந்த சிமென்ட் இருக்கைக்கு பின்னால் ரயில் நிலையத்தின் வெளிப்புறச் சுவர் சிதைந்து பிளந்திருந்தது. அதை ஒட்டிய புதர் சூழ்ந்த ஒற்றையடி பாதையில் ஒரு ஆள் விக்கி விக்கி நடந்துவருவதை பார்த்தேன். அவருடம்பில் இடது கை மட்டும் தான் தெரிந்தது. வலது கை சட்டைக்குள் இருக்கும் என நினைத்துக் கொண்டேன். காயம்பட்டு கட்டுப்போட்டிருக்கலாம். அல்லது வலது கையே இல்லாமலும் இருக்கலாம். சரியாக அனுமானிக்க முடியவில்லை. வெளிப்புற பாதைக்கும் ரயில் நிலைய நடைமேடைக்கும் நடுவே பள்ளமாக இருந்தது. கொஞ்சம் ஆழமான பள்ளம். அதனாலயே அந்த வழி பயன்படுத்தப்படாமல் பழக்கத்தின் சுவடற்று இருந்தது. வளர்த்தியான மனிதர் என்றால் பரவாயில்லை. அவர் குள்ளம். நடைமேடையில் ஒரு கையை ஊன்றி மூச்சுபிடித்து எக்கி மறுபக்கம் புரண்டு தவழ்ந்தே அவர் மேலே ஏறினார். சுற்றி நடந்து அவர் நேர் பாதையிலேயே வந்திருக்கலாம். ஒற்றை கையில்,இது வேண்டாத கஷ்டம். ஆனால் அவர் சிரமம் எதையும் காட்டிக் கொள்ளாமல் துள்ளலாக எழுந்து அழுக்கு சட்டையில் ஒட்டிய மணலை துடைத்துக் கொண்டார். இப்போது அவரை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது. வலது கையை சட்டைக்குள் தான் மறைத்திருந்தார். அது துண்டுபடவில்லை. ஆனால் நடக்கும்போது லேசாக ஒரு பக்கம் தாங்கினார். சட்டை, கால்சராய்க்கூட நைந்து சாயம் போயிருந்தது. இருந்தும் உடல்மொழியில் ஒரு அசாதாரணமான உற்சாகம்.

பழக்கமானவர் போல் அவர் நேராக காவல் அதிகாரிக்கு பக்கமாக சென்றார். செல்லும்போது வழியில் என் துணிப்பையை அவர் மிதிப்பதுப் போல் வர நான் அதை தள்ளி வைத்தேன். காவல் அதிகாரி அவரை கண்டுகொள்ளவில்லை. அவர் இன்னும் பக்கத்தில் போய் கூன் போட்டு குழைந்து சிரித்தார். காவல் அதிகாரி முகம் கொடுக்காமல் “என்னடா?” என்றார்.

“ஆங்…ஆங்” அவருக்கு குரல் வரவில்லை. ஊமை வாய் முழுக்க சிரித்து ஒற்றைக்கையில் வணக்கம் மட்டும் வைத்தார். “ஆங்…ஆங்”

“சரி போ”. காவல் அதிகாரி விரட்டுவது போல் சொன்னார்.

அவர் அகலவில்லை. ஒரு அடி பின்னால் நகர்ந்து பரிதாபமாக பார்த்தார். பின் பொறுமையாக சட்டைக்குள் கை நுழைத்து வலது கையை எடுத்து வெளியே தொங்கவிட்டார். முட்டி எலும்பில் இணைப்பு முறிந்திருப்பது போல் முழத்திற்கு கீழே வலது கை தனிச் சதையாக ஆடியது. என்னை தாக்கியது குரூரமா அருவெறுப்பா என்று பிரித்து சொல்ல முடியவில்லை. உடனேயே அதை மறைத்துக் கொள்ள விரும்பினேன். ஆனால் மனம் அடங்கவில்லை. கண்களை விலக்க இயலாமல் மறை பார்வையில் அவருடைய வலது கையையே பார்த்துக் கொண்டிருந்தேன். வெளிக்காயம் எதுவும் இல்லை. ஆனால் அவரது முழங்கை உடைந்து துவண்டிருந்தது. சுண்டிவிட்ட எலாஸ்டிக் நூல் கடைசி விசையில் மெல்ல அதிர்வது போல் அது முன்னும் பின்னும் ஆடியபடி இருந்தது. அவர் அதை இன்னும் அதிகம் அசைத்தவாறு காவல் அதிகாரிக்கு அருகாமையில் சென்றார். “ஆங்…ஆங்”. அவர் குரல் இரைந்து யாசித்தது. காவல் அதிகாரி அதை கேட்காததுப் போல் அமர்ந்திருக்க, அவர் சற்று குரலை உயர்த்தி மறுபடியும் “ஆங்…ஆங்” என்றார். காவல் அதிகாரி அவரை பொருட்படுத்தவே இல்லை. உடனே அவர் இடது கையால் தன் வலதுப் புற முழங்கையை வேகமாக ஆட்டிவிட்டார். அது தானாக ரப்பர்த் துண்டு போல் வேகமாக ஆடியது. எந்த நொடியும் பிய்ந்து தனியே கீழே விழுந்துவிடும் என்பது போல். எனினும் அவரிடம் வலி தெரியவில்லை. பொம்மை விளையாட்டு என திரும்பவும் அவரே முழங்கையை பிடித்து நிறுத்தினார். காவல் அதிகாரி துளிக்கூட அசைந்துக் கொடுக்கவில்லை. எனக்கு தான் அக்காட்சியை பார்க்கவே மனம் திணறியது. இன்னொரு பக்கம் பனி வேறு. குளிருக்காக மீண்டும் கைகளை இணைத்து கட்டிக் கொண்டேன். என் முழங்கைகளின் ஆரோக்கியத்தை திடத்தன்மையை உணரும்போதே எதிரே அவர் பஞ்சுப் பொதிப் போல் தன் கையை அசைத்து இரைஞ்சுவது கண்களிலேயே தேங்கிக் கொண்டிருந்தது.

“ஆங்…ஆங்”.

நடுங்கி ஒடுங்கும் மிருகத்தின் சத்தம். ஆனால் அவர் குரலில் வலியின் துடிப்பே இல்லை. அதுதான் என்னை கூடுதலாக அச்சமூட்டியது. பையில் இருந்து காசை எடுத்து கொடுக்கலாமா என்று எனக்கே உறுத்தியது. ஆனால் அவர் என்னை கடந்தே காவல் அதிகாரியின் பக்கம் சென்றார். ஏன் என்னிடம் பிச்சை கேட்கவில்லை? காவல் அதிகாரியிடம் தெரியும் பிடிவாதமும் பரிச்சயமானத் தோரணையும் கூட என்னை குழப்பின. பூக்காரப் பெண்கள் சாமந்தியை தொடுத்தபடி அவ்வப்போது இங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சர்க்கஸ்காரன் அடுத்த வித்தைக்கு நகர்கிற மாதிரி அவர் இம்முறை தன் முழங்கையை பின்பக்கமாக மடக்கி பிடித்து பிறகு கீழே தொங்கவிட்டார். இரண்டு தடவை அதேப் போல் அவர் வலது கையை மடக்கி மடக்கி தொங்கவிட காவல் அதிகாரி வெறுப்பாக “என்னடா வேனும் உனக்கு?” என்றார்.

“ஆங்..ஆங்”.அவர் தேநீர் கடையை சுட்டிக் காட்ட, காவல் அதிகாரி சலிப்பாக தலையை தடவினார். உணர்ச்சி காட்டாமல், “இந்தா” என்று தன் சட்டைப் பையிலிருந்து இருபது ரூபாய் தாளை எடுத்து அவரிடம் கொடுத்தார்.அதுவரை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தவர் உடனேயே உற்சாகமாகி இடது கையால் காவல் அதிகாரிக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு காசைப் பெற்றுக் கொண்டு தேநீர்க் கடையை நோக்கி நடந்தார். அவர் தாங்கி நடந்து விலகியதும் காவல் அதிகாரி என் பக்கம் திரும்பி ஏளனமாக புன்னகைத்தார். நானும் மழுப்பலாக சிரித்தேன்.

“மோசமான ஆள் தம்பி அவன்.” தேநீர்க் கடையின் திசையில் கண்ணோரமாக பார்த்துவிட்டு எச்சரிப்பதுப் போல் தொடர்ந்தார். “பார்க்கத்தான் கிறுக்கன் மாதிரி இருப்பான். ஆனா வெவகாரமானவன். பலே ஆள். சைக்கிள் திருடன்”

“அவரா?”.எனக்கு ஏதோ தொடர்பில்லாத வேறு விஷயம் பற்றி பேசுவது போலிருந்தது.

“அவனே தான். எந்த பூட்டையும் அசால்ட்டா ஒடைச்சு சைக்கிள திருடிருவான். எத்தனையோ வாட்டி சொல்லி பார்த்தோம். கேக்கவே இல்ல. அப்புறம் நாங்கதான் கைய ஒடைச்சு அனுப்பிட்டோம்”

நான் புரியாமல் விழிந்தேன். “நீங்களா?”என கேட்டு, பின் திக்கி “இல்ல. யாரு?யார சொன்னீங்க?” என்றேன்.

“நாங்கதான். ஸ்டேஷன்ல வச்சி ஒடைச்சு விட்டோம். பின்ன சொன்னா கேக்கனும்ல? ஊர்ல இருக்குறவன் பொருள எல்லாம் எவ வேணும்னாலும் தூக்கிட்டு போலாம்னா அப்புறம் எதுக்கு போலீஸ்?என்ன சொல்றீங்க”

எனக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை. மழுப்பலாக தலையாட்டினேன்.

“ஆங்…ஆங்”. தேநீர் கடைக்கு பக்கத்தில் நின்று சூடான காகித கோப்பையை கையில் பிடித்தவாறு அவர் காவல் அதிகாரியை நோக்கி சத்தம் கொடுத்தார்.

“என்னடா?”. காவல் அதிகாரியின் குரல் அதட்டலாக ஒலித்தது.

அவர் தன் கையில் இருந்த தேநீர் கோப்பையை காவல் அதிகாரியை நோக்கி நீட்டி உயர தூக்கி சமிக்ஞை காண்பித்தார். “எனக்கு வேணாம். நீயே குடி” என்று கூறிவிட்டு என் வசம் திரும்பி “நக்கல பார்த்தீங்களா?” என்றார் காவல் அதிகாரி.

என் மனம் வேறு யோசனையில் தன்னை இழந்துக் கொண்டிருந்தது. கடை வாசலில் நின்று இடது கையில் கோப்பையை பிடித்து வாயால் ஊதி ஊதி தேநீர் பருகிக் கொண்டிருந்தார் அவர். வலது முழங்கை தளர்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. பலவீனமான ஒரு மெல்லிய ஜவ்வுதான் அந்த முழங்கையை இன்னும் விழாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது.தோலுக்கடியே ரத்த வரியோடிய உள்சதை பரப்பு, தசை நார்கள், எலும்புகளை இணைக்கும் ஜவ்வு என எல்லாமும் ஒரே நேரத்தில் கவிச்சையாக என் மனதில் எழுந்தன. மனித உடலில் எல்லாமே வலுவற்றவை. சின்ன சமன் குலைவில் பிசகிவிடுபவை. நொறுங்குபவை. சாதாரண பேனாக் கத்தியில் கிழிந்துவிடுபவை. போலீஸ் அடியில் உடைபவை. பக்கத்தில் காவல் அதிகாரி எழுந்து நின்று நெட்டி முறித்து மறுபடியும் உட்கார்ந்துக் கொண்டார். எப்படி அவர் அந்த முழங்கையை உடைத்திருப்பார் என்று யோசித்தேன். லட்டியால் ஓங்கி அடித்து அல்லது கையை வெறித்தனமாக முறித்து மடக்கி… தூரத்தில் ஒரு ராட்சஸ ஓங்காரம். தொடர்ந்து தொண்டை அலறும் வலி ஓலம். பயமாக இருந்தது.

அலைபேசியை எடுத்து நேரம் பார்த்தேன். ரயில் வர வேண்டிய நேரம் தாண்டி தாமதாகிக் கொண்டிருந்தது. சீக்கிரம் வீட்டுக்கு போக வேண்டும். குளிர் வேறு தணியாமல் எரிச்சல் ஏற்படுத்தி கொண்டிருந்தது. அதற்குள் அவர் தேநீர் குடித்துவிட்டு மறுபடியும் எங்கள் திசையில் நடந்து வந்தார். காவல் அதிகாரியை கடக்கும்போது இடது கையால் வலது கையை தூக்கி வணக்கம் வைத்து விலகினார். நான் அவரை தவிர்ப்பதற்காக தண்டவாளத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என்னை தாண்டி சென்றார். “க்ரீச்” என்று எதிர் நடைமேடையில் ஒரு ரயில் தேய்ந்து நின்று பின் “பாங்” என்று கணைத்து கடந்துச் சென்றது. ரயில் சத்தம் தடதடத்து ஓய்ந்தபோது அருகாமையில் யாரோ மூர்க்கமாக காறி உமிழும் சத்தம் கேட்டு நான் துணுக்குற்று திரும்பினேன்.

“ச்சீ.பொறம்போக்கு”.பூக்காரிகளில் ஒருத்தி கை உடைந்த ஊமையனை பார்த்து கத்திக் கொண்டிருந்தாள். “பொறுக்கி நாய். எச்சக்கலை”

அவள் காறி துப்பியதில் சட்டை மேல் படிந்த எச்சிலை துடைத்துவிட்டு அடிக்குரலில் சத்தமாக சிரித்தார் அவர்.பின் ஒரு காலை ஊன்றி சுழன்று நடைமேடையில் இருந்து குதித்து மண்ணில் விழுந்து எழுந்து காய்ந்த மணல் பாதையில் விக்கியவாறே நடந்து சென்றார். நீல பிளாஸ்டிக் பைக்கு அண்டையாக தரையில் எச்சில் தடம் நுரையோடிருக்க அவர் விகாரமாக சிரித்தது மிஞ்சிய எதிரொலிப் போல் இன்னும் கேட்டது.

இன்னொரு பூக்காரி திட்டிக் கொண்டிருந்தவளின் கைபிடித்து “என்னக்கா?” என்று பதற்றமாக கேட்டாள்.

அவள் மெல்ல “இப்படி பண்ணி காட்டுறான் பொறம்போக்கு” என்று கையை மேலும் கீழும் அசைத்து சைகை காட்ட, கேள்விக் கேட்டவள் தலையிலடித்து “ச்சே பன்னாடை.” என்றாள்.

“அவனுக்கு போய் அந்தாள் காசு கொடுக்குறான் பாரு. அவன் ஒரு பைத்தியக்காரன் ”. தலை குனிந்தவாறு காவல் அதிகாரியை சுட்டி கிசுகிசுப்பாக சொல்லிவிட்டு அவள் மீண்டும் பூ தொடுக்கலானாள். காவல் அதிகாரி எதையும் கவனிக்கவில்லை.அவர் அலைபேசியில் என்னவோ செய்துக் கொண்டிருந்தார்.

“ஆமாக்கா.அவனுங்கள விடு” என்று மற்றவள் பிளாஸ்டிக் பையில் முந்தானையை உதறி உதிரிப் பூக்கள் கொட்டிவிட்டு

“யக்கா…புட்லூர்ல யாரோ ஒரு பொண்ணு வயித்துல பாம்பு வளருதாம். என் புள்ள கூட்டினு போய் காமினு உயிர எடுக்குறான்.. நாளைக்கு வர்றியா?போயிட்டு வந்துருவோம்” என்றாள்.

“வவுத்துல பாம்பு வளருதா? என்னடி சொல்ற?”

“ஆமாக்கா. இப்போதான் கலியானம் ஆன பொண்ணாம். முழுகாம இருக்கான்னுட்டு ஆஸ்பித்திரிக்கு கூட்டினு போயிருக்காங்க. அங்க மெசின்ல படம் புடிச்சு பார்த்தா வயித்துல பாம்பு வளருதாம். என் புள்ள நெட்டுல பாத்து சொன்னான்”.

“பார்ரேன்டி அம்மா.” அவர்கள் ஆச்சர்யமாக பேசிக் கொண்டிருக்க, நான் அயர்ச்சியோடு எழுந்தேன். “திருவள்ளுவர் வரை செல்லும் அடுத்த ரயில் பத்து நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும்” என்று ஒரு கரகர குரல் ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தது. நான் என் துணிப்பையை திறந்து சால்வையை தேட ஆரம்பித்தேன். குளிர் விடுவதாக தெரியவில்லை.

oOo

ஒளிப்பட உதவி – sabareesh seshadri

 

 

இரு நாயகர்கள்

தன்னுடைய பன்னிரெண்டு ஆண்டுகால விடுதலைப் போராட்டத்தில் சிமோன் பொலிவர் மூன்றுமுறை ஒன்றுபட்ட இலத்தீன் அமெரிக்காவை நிர்மாணிக்க முயன்று தோற்றுப் போகிறார். எண்ணிக்கையில் சிறிய அளவே கொண்ட படையுடன் நியூ கிரனெடா மேல் அவர் நடத்திய படையெடுப்பு சரித்திர புகழ் பெற்றது. விடுதலையாளர் எனப் போற்றப்பட்டாலும், அவர் முதலில் தன்னை ஒரு சர்வாதிகாரியாகத்தான் நிலைநிறுத்திக் கொள்ள விழைந்தார். அவருடைய கனவான ஒன்றுபட்ட இலத்தின் அமெரிக்கா நிகழாமலே போய்விட்டது. மார்க்குவெஸ் இப்படிச் சொல்கிறார்

“அவருடைய உடலிலிருந்தும் ஆன்மாவிலிருந்தும், இருபதாண்டு கால பயனற்ற போர்களையும், அதிகார மாயையும் துப்புரவாக்கும் வண்ணம், அன்றைக்கு அவர் பொறுப்பேற்றுக்கொண்ட தினசரி திருப்பலியை வழமையைவிட மிகையான தீவிர எழுச்சியுடன் நிகழ்த்தினார்.”

வரலாறு காட்டும் நாயகர்கள் எப்போதும் ஒளிவட்டத்தினூடே பொலியும் வீரகதைகளைக் கொண்டவர்களாக மட்டும் இருப்பதில்லை. அவர்களை நாம் தரிசிக்கும் நெருக்கம் குறையக் குறைய ஒளிரும் முகங்கள் மறைந்து சாதாரணரின் முகம் அங்கே நிலைகொள்கிறது. சுயபச்சாதாபமும், தோல்வியின் கருமையும் படிந்திருக்கும் அந்த முகங்களில் நமது சாயலும் சமயத்தில் தெரிகிறது. “இரு வாழ்வுகளின் அந்திமக் கணங்கள்” கட்டுரையில் அஜய் நம்மை மார்க்குவெஸ்ஸின் புதிர்ப்பாதை வழியே தளபதி பொலிவரின் பொருளற்ற முடிவை நோக்கிக் கொண்டு செல்கிறார். மரணம்தான் எத்தகைய நிவாரணியாக இருக்கிறது.

முற்றிலும் மாறுபட்ட நிலையிலிருந்து மற்றொரு பாத்திரத்தை கொண்டு வந்து தளபதியின் எதிர்த்தராசில் வைக்கிறார் அஜய். ஸ்டோனரின் ஆளுமையின்மைதான் இப்படியானதொரு இணை வாசிப்பை நிகழ்த்த காரணமாக இருந்திருக்க வேண்டும்.

“நீ யார், எப்படிப்பட்டவனாக ஆக விரும்புகிறாய், நீ செய்வதன் முக்கியத்துவம் எல்லாவற்றையும் நினைவில் கொள்ள வேண்டும். வரலாற்று ஏடுகளில் பதியப்படாத, இராணுவத்தால் ஆகாத போர்களும், வெற்றிகளும் தோல்விகளும் இருக்கின்றன. நீ என்ன செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்கும் பொழுதில் இதை நினைவில் கொள்”,

என்று வரும் வரிகள் மூலம் ஸ்டோனரின் வாழ்க்கையைப் பற்றிய சித்திரம் நமக்குத் துலக்கமாகத் தெரிகிறது. தோல்விகளால் மட்டுமே தொகுக்கப்பட்ட வரலாற்றின் அந்திமக் கணங்கள் ஸ்டோனருக்கு அளிக்கும் மனச்சாந்தியை சுட்டிக் காட்டுகிறது கட்டுரை.

கொந்தளிக்கும் எரிமலைக் குழம்பின் வலிமை அதன் பீறிட்டு வெளியேறும் வீச்சில் இருக்கிறது. ஆழமான ஏரியின் வலிமை அது அசையாமல் இருப்பதில்தான் இருக்கிறது.

– ஸ்ரீதர் நாராயணன்

கட்டுரை இங்கே- சிமோன் பொலிவர் (Simon Bolivar)/ ஸ்டோனர் (Stoner) – இரு வாழ்வுகளின் அந்திமக் கணங்கள்

 

oOo

ஒளிப்பட உதவி- Jacob Bender Has a Blog