எழுத்து

மழையில் ஒரு சிறுகுழந்தை

மூலம் : சுகதகுமாரி [ 1934 – 2020 ]
ஆங்கிலம் : மினிஸ்தி எஸ். நாயர் [ Ministhy S.Nair ]
தமிழில் : தி. இரா.மீனா

ஒரு சிறுகுழந்தை திண்ணைப் படியில் உட்கார்ந்திருக்கிறது–
வரப்போகும் மழையை உன்னிப்பாக கவனித்தபடி.
மழையும், சூரிய ஒளியும் கைகோர்த்துக் கொண்டு
சிரித்து விளையாடத் தொடங்குகின்றன.
காற்றின் வரவால் சூரிய ஒளி மறைகிறது !
காய்ந்த இலைகள், எங்கும் மிதக்கின்றன.
தாவரங்கள், நடனமாடுகின்றன
மழையில் நனைந்த மலர்கள், தலைசாய்கின்றன.
மழையால் தீண்டப்பட்ட சிறுகுழந்தை,
அகன்ற விழிகளுடன் உன்னிப்பாய் கவனிக்கிறது
மழை கனமாக, ஒரு சிறு நீரோடை பாய்கிறது,
வீட்டின் முன்பகுதியினூடே.
அதன் மேல் நீர்க்குமிழிகளும் மலர்களும்
வானவில்லும் மிதக்கின்றன.
சின்னக் குழந்தை விளையாட்டாக
சிறு பாதங்களை, கணுக்கால் உடையை நனைத்துக் கொள்கிறது.
தன் புத்தகத்தின் பக்கங்களை ஒன்றொன்றாய்க் கிழித்துப் போட்டு
அவை நீரில் மிதப்பதைப் பார்க்கிறது–
பிறகு தன் சிவப்புப் பென்சிலையும்
படகாக்கி கைகொட்டிச் சிரிக்கிறது,
திடீரெனச் சிரிப்பு நிற்கிறது!
ஒரு சிற்றெறும்பு மழை நீரோடையில் போராடிக் கொண்டிருக்கிறது,
ஐயோ பாவம் !
அழகான தன் பூ விரலின் நுனியை நீட்டுகிறாள்,
மேலே வர, உதவுகிறாள்,
’என்னைக் கடித்தாயோ அவ்வளவுதான் .பார் !’ திட்டுகிறாள்.
பிறகு விடுவிக்கிறாள்.
அருகே மற்றொன்று மிதந்து வர உதவுகிறாள்.
இன்னொன்றும் வர — பிறகு பின்னால் கணக்கற்றதாக,
அவள் என்ன செய்ய வேண்டும்?
மழையில் இறங்குகிறாள்.
ஒரு பழுத்த பலா இலையை எடுத்து
மன்றாடிக் கொண்டிருக்கிற எல்லாவற்றையும் அதன் மேல் சேர்க்கிறாள்.
மழை கனக்க ,காற்று உறும
ஆயிரக் கணக்கில் எறும்புகள் வெளிவர—
கண்களில் கண்ணீர்ப் பெருக்கை உணர்கிறாள் !
அவள் ஆடை முழுவதும் தொப்பலாகிறது,
பின்னல் அவிழ அவளது அழகிய முகம்
மழைத்துளிகளாலும் ,கண்ணீராலும் மறைக்கப்படுகிறது–
அவள் குனிந்து மூழ்கும் எறும்புகளைக் காப்பாற்றுகிறாள்.
அவளின் சிறு இரு கரங்களும் கடுமையாய்ப் பாடுபடுகின்றன.
“என் குழந்தை எங்கே?” அம்மா உள்ளிருந்து கேட்கிறாள்.
அவள் அதைக் கேட்ட போதிலும், மழையில் நிற்கிறாள்—
நூற்றுக்கணக்கான எறும்புகள் தீவிரமாக மேலும் கீழும் எம்புகின்றன;
திகைத்து, வெறித்துப் பார்த்து, அழுகிறாள்.
அந்தச் சின்னப் பலா இலை அவள் கையிலிருந்து
நழுவி நீரோடையில் மிதக்கிறது.

எழுபத்து ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டன,
ஆயிரக் கணக்கில் மழை வந்து போனது–
ஒவ்வொரு முறையும் அணிகளாக எறும்புகள் தப்பிக்கப் போராடி
கடலுக்குத் திரும்புகின்றன.
அந்தச் சிறு குழந்தை இன்னமும் அங்கேயே நிற்கிறது,
மழையில் தொப்பலாகி… கையற்று..
————-

நன்றி : மாத்ருபூமி 2016

ஏதுமற்றுப்போன நேசம்

சுசித்ரா மாரன்

ஊடலின் சுவர்கள்
மௌனத்தின் நீர் உறிஞ்சி
கடினப்படுகின்றன
நக்கிக் கரைக்கும்
நாய்க்குட்டி அன்பின்
வால் நறுக்கிய வள் வள் சொல் கூட
சுவரின் அங்கம் தான்
கனிகவர் திறனற்ற சொற்கள்
உடைபடும் பிரியத்தின் கையறு சாட்சிகள்
ஏதும் இயலா இச்சொற்களின் தகனத்தில்
தீப்பாய்ந்து ஏதுமற்றுப்போன நேசம் தான்
முன்பு எல்லாமுமாய் இருந்ததும்

டார்ச்சர்

ஏகாந்தன் 

பூங்காவைச் சுற்றிச் சுற்றி
வந்தது போதுமென கொஞ்சம்
ஓய்வு தனிமைக்கு ஆசைப்பட்டு
ஓரத்து காலி பெஞ்சில் உட்கார்ந்தேன்
நொடியில் நெருங்கிய ஒரு நோஞ்சான்
முகக்கவசத்தைக் கீழிறக்கி
பக்கத்தில் உட்கார்ந்து இளிக்க
பல்லைக் கடித்தேன் மனதுக்குள்
தள்ளி ஒரு பக்கமாக நகர்ந்தேன்
உடனே எழுந்து சென்றால்
உட்கார்ந்த மனிதனை
அவமதித்ததாக ஆகிவிடுமே ..
”இந்தக் கொரோனா விடாது சார்
எல்லாரையும் அனுப்பிச்சிட்டுத்தான் போகும்”
நூல்விட்டுப் பார்க்கும் ஆசாமியை
மேல்நோக்க ஆர்வமின்றி
பேருக்கு ஆட்டினேன் தலையை லேசாக
”கேஸ் ஜாஸ்தியாகிக்கிட்டிருக்கு சார் ..
மூணாவது அலை வந்தாச்சு !”
அதுக்கு என்னய்யா பண்ணச் சொல்ற
என்பதாக நேராக முறைத்து
போதும் என கையை உயர்த்தினேன்.
விட்டுருவானா அவ்வளவு ஈஸியா ..
”நார்த் கொரியால கொரோனா வந்த ஆளுங்கள
சுட்டுத் தள்ளிடறாங்களாம் சார்!”
இன்னும் யாரையும் நான் கொலை செய்ததில்லை
இன்று ஒரு கொலை விழுவதில் விருப்பமில்லை
என மனம் முணுமுணுக்க
எழுந்து நடக்கலானேன்

சாய்ந்திருப்பதெல்லாம் மாயத்தோள்கள்

ஹேமந்த் குமார்

தொட்டிலுக்குப் பதிலாக
நான் உறங்கிய படுக்கை,
என் தாயின் தோள்;
ஆறுதலாக கட்டித் தழுவியது,
என் தந்தையின் தோள்

பெற்றோரிடம் கூறாமுடியா
சொற்களை பெற்றுக்கொண்டது,
என் சகோதர சகோதரியின் தோள்;
இரத்த சொந்தம் இல்லாவிட்டாலும்
நெஞ்சம் நிறைய தஞ்சமளித்தது,
நண்பரின் அன்புத் தோள்

தன் உடலெனும் கட்டிலில்
என்னை சுமந்த தலையணை,
என் காதலியின் தோள்;
வாழ்க்கை முழுவதும்
குடும்ப வருத்தங்களை சுமக்கிறது,
என் மனைவியின் தோள்
வரும் மரணத்தின் தோளுக்கு முன்பு
நான் சாய்ந்திருப்பதெல்லாம்,
வெறும் மாயத்தோள்கள்.

 

 

இன்று இங்கு வந்திருக்கிறேன்

ஏகாந்தன்

சிறகு போல் மிதக்கும்
மிருதுவான நினைவுகளோடு
உன்னூருக்கு
வந்திருக்கிறேன்
போய்விட்ட காலத்தின்
பொன் சுவடுகளுக்கேங்கி
அலைகிறேன் அங்குமிங்குமாக
இதோ உன் ராஜவீதி
பின்பக்கம் தள்ளியிருக்கும் கோவிலில்
பதற்றமின்றி நிற்பார் பெருமாள்
சத்தமாக இயங்கும் பெண்கள் பள்ளி
நிசப்தமாக நெருங்கி நிற்கும் அந்த மரம்
களைத்த முகங்களோடு
இளைத்த உடல்களோடு
நினைவுகளின் சிற்றலைகள்
நெஞ்சுக்கரையில் விசிறியடிக்க
நனைந்தவாறு நடக்கிறேன்
மெல்ல நெருங்குகிறது
உன் வீடு
என் கோவில்
நீ நிலவாத அகத்தின் அகத்திற்குள்
நீர்த்துப்போன கண்களால் துழாவுகிறேன்
எங்காவது அசையாதா உன் நிழல்
ம்ஹும் ..
என்று பிடிபட்டாய் ..
இன்று தரிசனம் தர