மழையில் ஒரு சிறுகுழந்தை

மூலம் : சுகதகுமாரி [ 1934 – 2020 ]
ஆங்கிலம் : மினிஸ்தி எஸ். நாயர் [ Ministhy S.Nair ]
தமிழில் : தி. இரா.மீனா

ஒரு சிறுகுழந்தை திண்ணைப் படியில் உட்கார்ந்திருக்கிறது–
வரப்போகும் மழையை உன்னிப்பாக கவனித்தபடி.
மழையும், சூரிய ஒளியும் கைகோர்த்துக் கொண்டு
சிரித்து விளையாடத் தொடங்குகின்றன.
காற்றின் வரவால் சூரிய ஒளி மறைகிறது !
காய்ந்த இலைகள், எங்கும் மிதக்கின்றன.
தாவரங்கள், நடனமாடுகின்றன
மழையில் நனைந்த மலர்கள், தலைசாய்கின்றன.
மழையால் தீண்டப்பட்ட சிறுகுழந்தை,
அகன்ற விழிகளுடன் உன்னிப்பாய் கவனிக்கிறது
மழை கனமாக, ஒரு சிறு நீரோடை பாய்கிறது,
வீட்டின் முன்பகுதியினூடே.
அதன் மேல் நீர்க்குமிழிகளும் மலர்களும்
வானவில்லும் மிதக்கின்றன.
சின்னக் குழந்தை விளையாட்டாக
சிறு பாதங்களை, கணுக்கால் உடையை நனைத்துக் கொள்கிறது.
தன் புத்தகத்தின் பக்கங்களை ஒன்றொன்றாய்க் கிழித்துப் போட்டு
அவை நீரில் மிதப்பதைப் பார்க்கிறது–
பிறகு தன் சிவப்புப் பென்சிலையும்
படகாக்கி கைகொட்டிச் சிரிக்கிறது,
திடீரெனச் சிரிப்பு நிற்கிறது!
ஒரு சிற்றெறும்பு மழை நீரோடையில் போராடிக் கொண்டிருக்கிறது,
ஐயோ பாவம் !
அழகான தன் பூ விரலின் நுனியை நீட்டுகிறாள்,
மேலே வர, உதவுகிறாள்,
’என்னைக் கடித்தாயோ அவ்வளவுதான் .பார் !’ திட்டுகிறாள்.
பிறகு விடுவிக்கிறாள்.
அருகே மற்றொன்று மிதந்து வர உதவுகிறாள்.
இன்னொன்றும் வர — பிறகு பின்னால் கணக்கற்றதாக,
அவள் என்ன செய்ய வேண்டும்?
மழையில் இறங்குகிறாள்.
ஒரு பழுத்த பலா இலையை எடுத்து
மன்றாடிக் கொண்டிருக்கிற எல்லாவற்றையும் அதன் மேல் சேர்க்கிறாள்.
மழை கனக்க ,காற்று உறும
ஆயிரக் கணக்கில் எறும்புகள் வெளிவர—
கண்களில் கண்ணீர்ப் பெருக்கை உணர்கிறாள் !
அவள் ஆடை முழுவதும் தொப்பலாகிறது,
பின்னல் அவிழ அவளது அழகிய முகம்
மழைத்துளிகளாலும் ,கண்ணீராலும் மறைக்கப்படுகிறது–
அவள் குனிந்து மூழ்கும் எறும்புகளைக் காப்பாற்றுகிறாள்.
அவளின் சிறு இரு கரங்களும் கடுமையாய்ப் பாடுபடுகின்றன.
“என் குழந்தை எங்கே?” அம்மா உள்ளிருந்து கேட்கிறாள்.
அவள் அதைக் கேட்ட போதிலும், மழையில் நிற்கிறாள்—
நூற்றுக்கணக்கான எறும்புகள் தீவிரமாக மேலும் கீழும் எம்புகின்றன;
திகைத்து, வெறித்துப் பார்த்து, அழுகிறாள்.
அந்தச் சின்னப் பலா இலை அவள் கையிலிருந்து
நழுவி நீரோடையில் மிதக்கிறது.

எழுபத்து ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டன,
ஆயிரக் கணக்கில் மழை வந்து போனது–
ஒவ்வொரு முறையும் அணிகளாக எறும்புகள் தப்பிக்கப் போராடி
கடலுக்குத் திரும்புகின்றன.
அந்தச் சிறு குழந்தை இன்னமும் அங்கேயே நிற்கிறது,
மழையில் தொப்பலாகி… கையற்று..
————-

நன்றி : மாத்ருபூமி 2016

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.