எழுத்து

சரியான சொற்களைத் தேடி – ஹிலாரி மேன்டல் நேர்முகம்

நீங்கள் எழுத்தாளராவதற்கான காரணம் என்ன?

எழுத்தாளராகும் விருப்பம் சிறு வயதில் எனக்கு இருக்கவில்லை, ஆனால் ஏதோ ஒன்றைச் சாதிக்கும் ஆசை இருந்தது. பள்ளியில் என்னால் எல்லாரையும் போல் இருக்க முடியவில்லை: என் வயதுக்கு மீறிய முதிர்ச்சி கொண்டவளாக இருந்தேன், ஏராளமாய் படித்தேன் – எனக்கு பத்து வயதாகியிருந்தபோது, என் அம்மா Complete Works of Shakespeare வாங்கிக் கொடுத்தார், அது என்னை முழுமையாய் வசீகரித்துக் கொண்டது. ஆனால், அதன்பின் எல்லாம் மாறிவிட்டது: அம்மா என் அப்பாவைவிட்டுப் பிரிந்து, வேறொரு புதிய ஊருக்கு எங்களை அழைத்துச் சென்று எங்கள் பெயர்களை மாற்றிவிட்டார். அங்கு நான் மானுடவியல் ஆய்வாளர் போல் நடந்து கொள்ளத் துவங்கினேன், இந்த ஊரின் வினோத மத்திய வர்க்க மக்களைக் கூர்ந்து கவனித்து அவர்களைப பற்றி கோட்பாடுகளை உருவாக்கிக் கொள்ள ஆரம்பித்தேன். தனியாய் நெடுந்தொலைவு பள்ளி நடந்து செல்லும் வழியில், தென்படும் பொருட்களை எனக்கு நானே விவரித்துக் கொள்ளப் பழக்கிக் கொண்டேன், அவற்றுக்குத் துல்லியமாய் பொருந்தும் சொற்களை அறிந்துகொள்ள முயற்சித்தேன். (more…)

அன்றாட வாழ்வை அச்சுறுத்தும் கணங்கள் – ஹிலாரி மேன்டல் சிறுகதைத் தொகுப்பு

அஜய் ஆர்

hm

Bachman என்ற புனைப்பெயரில் ஸ்டீபன் கிங் எழுதிய ‘Thinner’ நாவல், ஜிப்சி ஒருவனால் தீச்சொல்லிடப்படும் பில்லியின் உடல் எடை இழக்க ஆரம்பிப்பதையும், அதன் பின்னர் நடக்கும் சம்பவங்களையும், திகில் நாவல்களின் பாணியில் சொல்கிறது. நம்மை எவ்வளவு அச்சுறுத்தினாலும், அனைத்தும் ஆசிரியருக்கும்/ வாசகனுக்கும் உள்ள எழுதப்படாத ஒப்பந்தத்தின் பேரில் நடப்பது என்று உணர்ந்திருப்பதால் (பயமுறுத்துவது ஆசிரியரின் பங்கு – கிளர்ச்சியடைவது வாசகனின் பங்கு) நாவலில் இருந்து நாம் சற்று விலகியே இருக்கிறோம். இங்கு பயம் என்பது கிளர்ச்சியாகவே உள்ளது. நாவல் முடிந்தவுடன், இரவு நம்மை பயமுறுத்தலாம், அன்று தூங்குவது எளிதாக இல்லாமல் போகலாம் ஆனால் நம் அன்றாட வாழ்விற்கு வெகு தொலைவிலேயே நாவல் இருக்கிறது என்ற ஆசுவாசம் அடைகிறோம். (more…)

டேவ் எக்கர்ஸ் – ஒரு சிறு அறிமுகம்

டேவ் எக்கர்ஸ் எழுத்தாளர் மட்டுமல்ல, வெற்றிகரமாகச் செயல்படும் பதிப்பகம் ஒன்றின் நிறுவனரும்கூட. வணிக நிறுவனமாக 1998ஆம் ஆண்டு, இவரால் துவக்கப்பட்ட McSweeney’s  தற்போது லாபநோக்கற்ற அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு அளிக்கப்படும் நன்கொடைகளுக்கு வரிவிலக்கு கோர இயலும்.

மக்ஸ்வீனிஸ் நிறுவனம் புத்தகங்கள், McSweeney’s Quarterly Concern என்ற காலாண்டிதழ் மற்றும் The Believer என்ற மாத இதழைப் பதிப்பிக்கிறது. இவை தவிர குழந்தைகளுக்கான நூல்கள், கவிதைப் பிரசுரங்கள் வெளியிடுவதோடு, மற்றும் மறக்கப்பட்ட கிளாசிக் நூல்களை மறுபிரசுரம் செய்கிறது. காலாண்டிதழ்களையும் சேர்த்து இதுவரை கிட்டத்தட்ட இருநூறு புத்தக்கங்கள் எக்கர்ஸின் நிறுவனத்தால் பதிப்பிக்கப்பட்டுள்ளன. முதல்நிலை எழுத்தாளர்களான Michael Chabon, Nick Hornby, David Foster Wallace முதலியோரையும் இவர்கள் பதிப்பித்துள்ளனர். அண்மையில் இவர்கள் அச்சிட்டுள்ள இசைநூல்கள் குறிப்படத்தக்கவை அதிலும் David Byrne எழுதிய “How Music Works,” என்ற நூல் விற்பனைச் சாதனை படைத்துள்ளது.

தகவல் உதவி – http://blog.sfgate.com/bookmarks/2014/10/16/mcsweeneys-to-become-a-nonprofit-publishing-house/ (more…)

கற்பூர வாசனை

எஸ். சுரேஷ்

 

என்ன கவிதை எழுதலாம் என்று
மேஜை முன் உட்கார்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தபொழுது
‘படார்’ என்ற ஓசையுடன் வாசற்கதவு திறக்க
கழுதை ஒன்று உள்ளே நுழைந்து,
“நீதான் கவிஞனா?” என்று என்னைப் பார்த்து கேட்டது
திகைத்திருந்த நான் தலையாட்டினேன்
“உன் புத்தகம் சுவையாய் இல்லை. சுத்த வேஸ்ட்” என்றது

“கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” என்றேன்,
கவிஞனின் ஆணவத்துடன்.

“தெரிந்து என்ன ஆகப்போகிறது?
சாமி கும்பிடப் போகிறோமா என்ன?”
என்று கூறி பின்னங்கால்களால் மேஜையை உதைத்துச் சென்றது.

போகிறபோக்கில்,
“அடுத்த புத்தகமாவது ருசியாக இருக்கட்டும்”,
என்று சொன்னதைக் கேட்டு என் மனைவியும் மகளும்
இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்

 

image credit: Directors Notes

கவியின் கண்- உடல்களைக் கொள்ளும் வெளி

 

கடற்கரை – சோபியா தி மெலொ ப்ரெனர் ஆந்த்ரிஸன்

கடந்து செல்லும் காற்றில் பைன் மரங்கள் முனகுகின்றன
வெயிலடிக்கிறது மண்ணில், கற்கள் சுடுகின்றன

உலகின் விளிம்பில் உலவுகின்றனர் விசித்திர கடற்கடவுளர்
உப்புப் பொருக்கிட்டு, மீன்களைப் போல் மின்னுகின்றனர்

வானின் ஒளியினுள் கற்களைப் போல்
திடீரென்று காட்டுப் பறவைகள் வீசப்பட்டு
செங்குத்தாய் உயர்ந்து மரணிக்கின்றன
அவற்றின் உடல்களை வெளி எடுத்துக்கொள்கிறது

ஒளியைத் தகர்க்க அலைகள் ஆர்ப்பரிக்கின்றன
அவற்றின் புருவங்களில் தூண்களின் அலங்காரம்

பாய்மரத் தொல்நினைவு
பைன்களில் ஆடிக் கொண்டிருக்கிறது.

(from “Marine Rose : Selected Poems”, Sophia de Mello Breyner, translated by Ruth Fainlight, Published by Black Swan Books, Redding Ridge, CT, 1988. கவிதையின் ஆங்கில மூலம் இங்கிருக்கிறது.)

முன்னொரு பதிவில், கலை எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளில் தகவல் தொடர்பும் ஒன்று என்று எழுதியிருந்தேன். மாபெரும் கலைஞர்கள் கலையைக் கொண்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர்.

மனிதர்களுக்கிடையே துல்லியமான உணர்வுப் பரிமாற்றம் என்பது மிகவும் கடினமான விஷயம், சஹ்ருதயர்கள் மட்டுமே ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியும். இதனால்தான் கலைஞர்கள் தங்கள் படைப்பைப் புரிந்து கொள்ளக்கூடியாவர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். இதனால்தான் மாபெரும் கலைஞர்கள் தங்கள் கற்பனையின் எல்லையைக் குறுக்க எதையும் அனுமதிப்பதில்லை. கலைத்தேடல், காலத்துக்கும் இடத்துக்கும் அப்பாற்பட்டது. (more…)