எழுத்து

விரும்பி வாசிப்பவை

நந்தா குமாரன்

nundhaa

“நீங்கள் விரும்பி வாசிக்கும் கவிஞர்கள் யார், விரும்பும் கவிதைகள் எப்படிப்பட்டவை?”

முதலில் இந்த “மழை கேட்டல்” கவிதையைப் பற்றிச் சொல்லிவிடுகிறேன். இது “கணையாழி” பத்திரிக்கையில் April 1998இல் வெளியானது. அப்போது ஞானக்கூத்தன் கவிதைத் தேர்வு செய்து கொண்டிருந்தார். பின்னர் ஒரு தினம் அம்பலம் இணைய அரட்டையில் சுஜாதா இந்தக் கவிதை தனக்குப் பிடித்திருப்பதாகச் சொன்னார்.

இப்போது கேள்விக்கு வருவோம். வழக்கமான பதில் தான், எனினும் சொல்கிறேன். நம் ஜனத்தொகையில் பாதி பேருக்கு மேல் கவிஞர்களாகவே பிறப்பெடுக்கிறார்கள், எழுதியும் குவிக்கிறார்கள். எனவே நாம் படிப்பவற்றுள் பாதிக்கு மேல் கவிதையாகவே இருக்கும் … நாம் விரும்புகிறோமோ இல்லையோ கவிதையை வாசிக்காமல் இருக்க முடியாது. கவிதைக் கடல் என்பதை விட இங்கே இருப்பது கவிஞர்களின் கடல் என்பது தான் பொருத்தம். நல்ல வேளை புத்திசாலித்தனமாக “விரும்பி வாசிக்கும்” எனக் கேட்டீர்கள். (more…)

நகை எனும் மெய்ப்பாடு

Public Seminar என்ற தளத்தில் Dmitri Nikulin எழுதிய, “Why Comedy Matters”, என்ற கட்டுரையின் தமிழாக்கம்

தார்மீக முடிவுகளோ அரசியல் முடிவுகளோ தீர்மானிக்கப்பட வேண்டியிருக்கும் நிலையில், நம் கைவசமுள்ள நாடகங்கள் மற்றும் இலக்கியத் தொகுப்பில் பதியப்பட்டுள்ள வழமைச் சொற்களை அடிக்கடி பயன்படுத்துகிறோம். அவற்றை நாம் எவ்வாறு வடிவமைத்துக் கொள்கிறோம் என்பதையொட்டி அவை புரிந்து கொள்ளப்படுகின்றன என்பதையும் அவ்வாறே நம் செயல்களும் அமைகின்றன என்பதையும் அறிந்திருக்கிறோம். நம் வசமுள்ள வகைமைகள் அனைத்தைக் காட்டிலும், நகைச்சுவையையே நாம் எப்போதும் ரகசியமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது – பிறரோடு நாம் எவ்வளவு தீவிரமாகவும் நேர்மையாகவும் பழகுகிறோம் என்பதைச் சரியாக விவரித்து விவாதிக்கும் ஆற்றல் நகைச்சுவைக்கு உண்டு என்பதை முழுமையாக விளங்கிக் கொள்ளாமல்தான் இதைச் செய்கிறோம்.

ரோமானியப் பேரரசில் உள்நாட்டு யுத்தம் துவங்கும் சீஸர், “பகடையை உருட்டியாயிற்று,” என்று பிரகடனம் செய்தான் (“The die has been cast.”). சீஸர் இதைத் தன் தாய்மொழியான லத்தீனில் கூறினார் என்கிறார் சூடோனியஸ் (alea iacta est). ஆனால், ப்ளூடார்க்கோ, சீஸர் கிரேக்க மொழியைப் பயன்படுத்தினான் என்று பதிவு செய்கிறார் (anerrhiphtō kybos)- இதைச் செய்கையில் அவன், நியூ காமெடி என்று அழைக்கப்படும் வகைமையின் பிதாமகர் மெனாண்டர் எழுதிய, தற்போது தொலைந்துவிட்ட, நகைச்சுவை நாடக வசனம் ஒன்றை மேற்கோள் காட்டியிருக்க வேண்டும். கோரிந்தியர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் புனித பால்கூட மெனான்டரை நோக்கித் திரும்புகிறார், Thais என்ற நகைச்சுவை நாடக மேற்கோள் ஒன்றை அவர் இங்கு கையாள்கிறார்: “ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்” (more…)

மழை கேட்டல்

நந்தா குமாரன்

வழக்கம் போலவே
அது விழுந்ததும்
விமர்சனங்கள் எழுந்தன
அக்கறையில்லாமல் அது
Asbestos Sheetகளை
அவசரமாக வாசித்துக் கொண்டே போனது
அவ்வப்போது கேட்ட அசரீரிகளை
துக்க செய்தி கேட்டது போல பயந்தார்கள்
மண்ணில் வெடித்தது
தூள் தூளாய் சரிந்தது
கிணற்றில் குதித்தது
நீரோடு நீர் மோதும்
குதூகலக் குரல்
ஒளி வடிவங்களாய் விரிந்தது
அடுத்த பாடல்
ஜன்னல் கண்ணாடியில் அரங்கேறியது
அதன் நோக்கமற்ற ஒழுகலின்
உராய்வு ஓசை கேட்க
என் காதுகளைத் தீவிரப்படுத்தினேன்
கடைசி தீக்குச்சியைப் பற்ற வைக்கும்
கவனத்தோடு.

கணையாழி
April 1998

காமாகுரா

 எஸ். சுரேஷ்

இன்றைக்கும் ஜப்பான் என்றால் எனக்கு முதலில் ஞாபகம் வருவது காமாகுராதான். நரூசே சானின் அன்பும், அமைதியான புத்தரும், கூடவே அந்த தலைவலியும்.

அன்று திடீரென்று, “இந்த சனிக்கிழமை நான் உங்களை காமாகுரா அழைத்து செல்கிறேன். நீங்கள் வருவீர்களா?” என்று நரூசே சான் கேட்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

தன்பாத், சிந்த்ரி, ராஜ்கன்க்பூர், ஜகதீஷ்ர், நாக்தா என்று யாரும் பார்க்காத ஊர்களாக சுற்றிக் கொண்டிருந்த எனக்கு அதுதான் முதல் வெளிநாட்டு பயணம். இரண்டு நாட்களுக்கு முன் நரீதாவில் இறங்கி, வேக ரயில் பிடித்து டோக்கியோ வந்து சேர்ந்திருந்தேன். அடுத்த நாள் விடுமுறை நாள். முதல் முறையாக ‘வெண்டிங் மெஷின்’ பார்த்து, அதில் பணம் போட்டு ஒரு குளிர்பானம் கையில் எடுத்து, தெருவில் நடக்கும் எல்லோருக்கும் ஜப்பானிய விதிப்படி தலை குனிந்து வணக்கம் சொல்லிக்கொண்டே நடந்தேன். அன்று தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த எல்லோரையும் வணங்கியிருப்பேன். இந்தியாவிலிருந்து வந்தவனுக்கு ஜப்பான் சம்பிரதாயம் தெரியாது என்று யாரும் நினைக்கக் கூடாதல்லவா? வெளிநாட்டிற்குச் செல்லும்பொழுது எப்படியெல்லாம் நம் நாட்டின் பெயரை காப்பாற்ற வேண்டியிருக்கிறது! (more…)

நமக்கும் ஒரு காலம் வரும்

சிகந்தர்வாசி

ஏழு அல்லது எட்டு பேர்தான் இருப்பார்கள்
முன்பு மூன்று முறை
எல்லோரும் எதிர்பார்ப்புடன் வந்து
ஏமாந்து திரும்பினார்கள்

இம்முறை காலன் அறிவிக்காமல் வந்தான்

குளிர் கண்ணாடி பெட்டிக்குள் அவர் முகத்தை
உற்று பார்க்கும்போது என் முகம் தெரிந்தது

தன் மிருதுவான கைகளினால்
விட்டுச் சென்ற தடம் எல்லாம்
மெதுவாக அழிக்கத் துவங்குகிறது காலம்

 

image credit – Genetologic Research