எழுத்து

சாயல்

ஐ கிருத்திகா

லாரி நான்கு வழிச்சாலையில் ஊர்ந்து கொண்டிருந்தது. உக்கிர வெயிலின் பிடிக்குள் சிக்கியிருந்த முற்பகலில் அந்த லாரி சென்னையிலிருந்து அரியலூர் திரும்பிக் கொண்டிருந்தது.

நவீன் டிரைவரைப் பார்த்தான். மாட்டுவண்டி ஓட்டும் தொனியில் முகத்தை வைத்திருந்தவர் ஸ்டியரிங்கை வளைக்க வேண்டிய அவசியமின்றி வெறுமனே பிடித்தபடியிருந்தார். நவீன் நோக்குவதை உணர்ந்து திரும்பியவர்,

” ஒண்ணுக்குப் போவணுமா…?” என்றார்.

” இ… இல்ல….” என்ற நவீனுக்குப் போனால் தேவலாமென்றிருந்தது. காலை ஐந்து மணிக்குப் போனது. ஒன்பது மணிவரை வயிறு எந்த அறிகுறியும் காட்டாதிருந்தது பயமாக இருந்தது. ஏறியதிலிருந்து தண்ணீர் குடிக்காதது ஞாபகத்துக்கு வர, சற்று ஆசுவாசமாகிப் போனது.

” டீக்கடையில நிறுத்துங்க. டீ குடிச்சிட்டுப் போகலாம். ”

நவீன் சொல்ல, அவர் தலையை மட்டும் ஆட்டினார். சென்னையிலிருந்து வெளியூருக்குச் செல்ல பேருந்தோ, ரயிலோ கிடையாது. ஊரடங்கு வேறு அறிவிக்கப் போகிறார்கள். கொரோனா ரொம்பத்தான் ஆட்டம் போடுகிறது என்று நினைத்துக் கொண்டான்.

இரண்டு மாதங்கள் நாகர்கோவிலில் இருந்தவனை வேலைக்கு வரவழைத்தது நிர்வாகம். அப்போது இரண்டு ஊரடங்குகள் கடந்திருந்தன. மார்ச் மாதத்தின் மத்தியில் முதல் ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு இரு தினங்கள் முன்பு ரயிலில் அடித்துப் பிடித்து ஊருக்கு வந்தவனைப் பார்த்து அம்மா நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

இரண்டு மாதங்கள் அலுப்பும், சலிப்புமாக கழிந்தாலும் வேலைப்பளு இல்லாமல் செல்போனே கதியென்று கிடந்தவன் மெதுவாக சென்னைப் போய் சேர்ந்தான். பத்து தினங்கள் ஆகவில்லை. சக ஊழியர் ஒருவருக்கு காய்ச்சல் வர அலுவலகம் இழுத்து மூடப்பட்டது. அதோடு கொரோனாவின் தீவிரமான பிடியில் சென்னை திக்குமுக்காடியது.

” தம்பி எப்படியாவது ஊர் வந்து சேர்ந்துடுப்பா. அங்க இருந்தா உனக்கும் கொரோனா வந்துடும்,” என்று அம்மா கண்ணீர் வடித்தாள்.

நவீன் வேலை பார்க்கும் அலுவலகத்தின் தொழிற்சாலை அரியலூரிலிருந்தது. அங்கிருந்து சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு சென்னை வந்த லாரி திரும்பியபோது மேலதிகாரியின் சிபாரிசோடு நவீன் அதில் தொற்றிக்கொண்டான்.

டிரைவர் வண்டியை ஓரம் கட்டினார்.

” ஏண்ணே…?”

அவர் எதுவும் பேசாமல் இடுப்பில் சொருகி வைத்திருந்த உள்ளங்கையளவு பாட்டிலை எடுத்து வாயில் கவிழ்த்துக் கொண்டார். நவீனுக்குத் திகிலேறியது.

” டிரைவிங்ல குடிக்கிறீங்களேண்ணே. தப்பில்ல….?”

ஏற்கனவே லாரிக்குள் உட்கார முடியவில்லை. இன்ஜின் அருகாமையிலிருந்ததில் சீட் கொதித்தது. ஏசி பேருந்திலோ, ரயிலிலோ சென்று பழக்கப்பட்டவனுக்கு அக்கொதிப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதில் அவர் குடித்த சரக்கின் நாற்றம் வேறு குடலைப் புரட்டியது.

” நேத்திக்கி சாயங்காலம் அஞ்சு மணிக்கி வண்டியெடுத்தேன். சென்னைக்குப் பன்னண்டு மணிக்கி வந்தேன். லோடை எறக்கி வுட்டுட்டு படுத்தா பொட்டுத் தூக்கம் வரல. மறுபடி விடியக்காலையில கெளம்ப வேண்டியதாப் போச்சி. ஒடம்பெல்லாம் அசதியா இருக்கு. கொஞ்சம் உள்ளத் தள்ளலைன்னா ஒளுங்கா ஊர்போயி சேரமுடியாதுப்பா.”

டிரைவர் பீதியைக் கிளப்பினார். பின்னால் வந்த கார்கள் விர், விர்ரென்று முந்திக்கொண்டு விரைந்தன. எதிர்த்திசையில் வாகனப்போக்குவரத்து பெரிய அளவிலில்லை.

அன்றிலிருந்து சென்னை உள்ளே செல்ல வாகனங்களுக்கு அனுமதியில்லை என்று அறிவித்திருந்தார்கள். பாஸ் வாங்கிக்கொண்டு சொந்த வாகனத்தில் சென்னையை விட்டு வெளியேறுபவர்கள் எண்ணிக்கை அதிகமாயிருந்தது. வலுவான காரணங்களுக்கு மட்டும் பாஸ் வழங்கப்பட்டு வந்த நிலைமை மாறி பணத்துக்காக பாஸ் வழங்கப்பட்டது. சென்னையிலிருந்து கிளம்பிய அநேகருடன் கொரோனாவும் கிளம்பிற்று. இதனால் தாக்கம் குறைவாயிருந்த பகுதிகளில் எண்ணிக்கை கூடத் துவங்கிற்று.

” அவந்தான் ஏவிவுட்டான்னு சொல்றாங்களே தம்பி… உண்மையா…?”
டிரைவர் அப்பாவியாக கேட்டார்.

” ஏவிவிடறதுக்கு அதென்ன பில்லி, சூனியமா…’ என்று நினைத்துக்கொண்டவன்,

” தெரியலையே…” என்றான் மெதுவாக. அரியலூர் எப்போது வருமென்றிருந்தது.

தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம் என்று ஒவ்வொரு ஊரையும் கடக்கும்பொழுது நாகர்கோயிலுக்கான தூரம் நீண்டுகொண்டே போவது போலிருந்தது. ரெக்சினால் ஆன சீட் கட்டை போலிருந்ததில் உட்காருமிடத்தில் வலி உண்டானது. நவீன் சில நிமிடங்களுக்கொரு முறை அப்படியும், இப்படியுமாக உடலை அசைத்து நெளிந்தான். டிரைவர் சிரித்தார்.

“சொகுசு பஸ்ஸுல போயி பளக்கமாயிருக்கும் ஒங்களுக்கு. இந்த கட்டவண்டி நாலுநாளு ஒங்க கட்டைய சாய்ச்சிப்புடும் பாருங்க. படுத்தா எந்திரிக்க மாட்டீங்க…..” என்ற டிரைவர் கரையேறிய பற்கள் தெரிய சிரித்தார்.

பக்கவாட்டிலிருந்து வெப்பக்காற்று வீசிற்று. காற்றில் அனல் கங்குகள் தெறித்தன. முழுக்கை சட்டை போட்டு வந்தது தவறென்று நவீனுக்கு அப்போதுதான் உறைத்தது. இரு பொத்தான்களை விடுவித்தான். போட்டிருந்த மாஸ்க் பெரும் அவஸ்தையைக் கொடுத்தது. ஆரம்பத்தில் மூச்சுத் திணறுவது போன்ற உணர்வு. அதற்கே மனம் பீதியடைந்துவிட்டது.

” மாஸ்க்கைப் போட்டா மூச்சுவிட முடியாம பெரிய அவஸ்தையா இருக்குடா……” என்று நண்பன் சொன்னபோதுதான் அது பொதுவான பிரச்சனை என்று புரிந்தது.

டிரைவர் மாஸ்க்கை தாடைக்குப் போட்டிருந்தார். சோதனைச்சாவடி கண்களில் தென்பட்டால் வெடுக்கென்று இழுத்துவிட்டுக் கொண்டார். அவர் அணிந்திருந்த நிறமிழந்த பனியன் வியர்வையில் நனைந்திருந்தது. இன்ஜின் சூட்டைக் கக்கி அவரை வியர்வையில் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது.

” வண்டி உங்களுதா…?”

நவீன் நேரத்தைக் கடத்த கேட்டான்.

” என்னைப் பாத்தா லாரி ஓனர் மாதிரியா தெரியிது. நான் வெறும் டிரைவர்தான் தம்பி. எங்க ஓனருக்கு ஆயிரம் லாரிகள் இருக்கு. பெரிய ஆளு அவரு. எப்பவும் வெள்ளையுஞ் சொள்ளையுமா பாக்க சினிமா நடிகராட்டம் இருப்பாரு. இந்த ஆறு வருசத்துல நானே அவர பத்து தடவதான் பாத்துருப்பேன். அவருக்கு கீள ஏகப்பட்ட ஆளுங்க இருக்காங்க. அவங்கள்ல ஒருத்தனுக்கு கீளதான் நாங்க வேலப் பாக்குறோம். ”

” இதுக்கு முன்னாடி எங்க வேலைப் பார்த்தீங்க…?”

” காய்கறி லாரி ஓட்டிக்கிட்டிருந்தேன். அப்ப வடநாட்டுக்கெல்லாம் போயிருக்கேன். வெங்காயம் ஏத்துமதி பண்ண மகாராஸ்ட்ரா போவோம். இருவது வருசமா அந்த வேலப் பாத்துட்டு முடியாம வந்துட்டேன். என் சகலை இந்த வேலைய வாங்கிக் குடுத்தான். அவனும் இங்கதான் வேலப் பாக்குறான்.”

அவர் பேசியபடியே டீக்கடையருகில் லாரியை நிறுத்தினார். நவீன் அவரைக் கூப்பிட்டபோது மறுத்துவிட்டார்.

” ஏற்கனவே வயறு கலக்கியடிக்கிது தம்பி. ராத்திரி புரோட்டா சாப்புட்டேன். அது செரிக்கலையா என்னான்னு தெர்ல. வயறு கடமுடங்குது. நீங்க குடிச்சிட்டு வாங்க. அதுக்குள்ள நான் என் மிஸஸ் கிட்ட பேசிடுறேன்”

அவர் கைக்கு அடக்கமாயிருந்த அந்த நோக்கியா செல்போனில் எண்களைத் தட்டத் தொடங்கினார். நவீன் கீழே குதித்தான். இடுப்பில் கைவைத்து உடலை வளைத்து ஆசுவாசித்துக் கொண்டான்.

ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்குக் கீழே டீக்கடையும் கொதித்துக் கிடந்தது. பாய்லருக்கருகில் நின்றிருந்த மனிதர் நவீனைக் கண்டதும் கழுத்தில் கிடந்த மாஸ்க்கை மூக்கில் மாட்டிக்கொண்டார்.

மாஸ்க் டீ வடிகட்டும் துணி நிறத்திலிருந்தது. நிறமே அதுதானா அல்லது துவைக்கப்படாமல் அப்படி ஆகிப்போய்விட்டதா என்று புரியவில்லை. நவீன் தயக்கத்தோடு காலடி எடுத்து வைத்தான்.

” வாங்க சார்… மசாலா டீ . ஏலக்கா டீ, இஞ்சி டீ இதுல எது குடிக்கிறீங்க…?”

அவர் சுறுசுறுப்பாய் கிளாசைக் கழுவினார். டிரேயில் மொய்த்துக் கொண்டிருந்த ஈக்கூட்டம் திடீரென்று மேலே பட்ட தண்ணீரில் அதிர்ந்து விலகின. நவீன்,

” இஞ்சி டீ…” என்றான்.

” எங்கேயிருந்து வர்றீங்க சார்…?”

” விழுப்புரத்துலேருந்து ” என்றான் சட்டென்று. சென்னை என்ற பேரைக் கேட்டாலே எல்லோருக்கும் அலர்ஜியாகிவிட்டது. சென்னை கனவுகளை வசமாக்கும் நகரமாக இருந்தது ஒரு காலம். சென்னைக்குப் போனால் பிழைத்துக் கொள்ளலாம் என்று சொல்வதுண்டு. இப்போது, சென்னையிலிருந்தால் பிழைக்க முடியாது என்று வார்த்தைகள் மாறிவிட்டன.

தப்பித்தால் போதுமென்று சனம் சொந்த ஊரைப் பார்க்க ஓடுகிறது. கடைக்காரர் டீ கிளாசை மேசை மீது வைத்தார். நவீன் பட்டும்படாமல் பெஞ்சில் அமர்ந்தான். எங்கே கிருமி அதில் ஒட்டியிருந்து தன்மீது தொற்றிக் கொள்ளுமோ என்ற பயம்.

மடக், மடக்கென்று டீயைக் குடித்தவன் ரூபாய் நோட்டை நுனிவிரலால் தந்துவிட்டு லாரியருகில் வந்து பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்திருந்த சானிடைசர் பாட்டிலை எடுத்து கைகளை சுத்தம் செய்து கொண்டான். சுத்தம் செய்வதற்கு முன் பாட்டிலை தொட்டுவிட்டது ஞாபகத்துக்கு வர மீண்டும் திரவத்தை உள்ளங்கையில் நிரப்பி பாட்டிலை மெழுகினான்.

” தம்பி, கெளம்பலாமா…?”

டிரைவர் குரல் கொடுக்க பாய்ந்து ஏறிக்கொண்டான். ஆட்டுக்கல்லில் மாவாட்டுவது போல கியரை ஒரு சுற்று சுற்றி வண்டியைக் கிளப்பியவர்,

” இன்னும் ஒருமணி நேரத்துல அரியலூர் போயிடலாம்,” என்றார். லாரியின் நெற்றியில் ‘ஒண்டி கருப்பண்ணசாமி துணை’ என்று எழுதப்பட்டிருந்தது. நவீன் அதைப் படிப்பதைக் கவனித்தவர்,

” ஓனரோட கொலதெய்வம். ஆயிரம் லாரியிலயும் இதான் எளுதியிருக்கும்,” என்றார்.

” ரெண்டாவது ஊரடங்கு அமல்ல இருந்தப்ப அரசாங்கம் தளர்வுகளை அறிவிச்சுதே. அப்ப வண்டி ஓட்டினீங்களாண்ணே..?”

” ஓட்டாம… மொத ஊரடங்க சமாளிச்சிட்டேன். ரெண்டாவது அறிவிச்சப்ப பகீர்ன்னுச்சி. ஏன்னா கையில் காக்காசு கெடையாது. இருந்ததக் கொண்டுதான் மொத ஊரடங்க கொண்டாடுனோம். நல்லவேளையா கட்டட வேல நடக்கலாமுன்னு அரசாங்கம் அறிவிச்சிது. லாரி ஏறிட்டேன். ஒண்ணு பசியால சாவணும், அல்லது கொரோனாவால சாவணும். வூட்டுல எவ்வளவோ சொல்லிப் பாத்தாங்க. ரெண்டு புள்ளைங்க எனக்கு. அதுங்க பசியோட கெடந்தா என்னால தாங்கிக்க முடியிமா சொல்லுங்க…”

அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே ஒரு டெம்போ வேன் மிக வேகமாக கடந்து போனது.

” தூ…”

மிகவும் மோசமான கெட்ட வார்த்தை ஒன்றை உதிர்த்தார். ஸ்டியரிங்கைப் பற்றியிருந்த அவரது இடது கை V வடிவில் வளைந்திருந்தது. முழங்கையின் மேற்பரப்பில் பூரான் வடிவ தையல் ஓடியிருந்தது. அவர் அனிச்சையாக அந்தத் தையலை அடிக்கடி தடவி விட்டுக்கொண்டார்.

” ஒருதடவ உள் கிராமம் ஒண்ணுக்கு லோடு அடிக்க வேண்டியிருந்தது. அது சிங்கிள் ரோடு. நான் நிதானமாத்தான் போயிக்கிட்டிருந்தேன். எதுத்தாப்ல வந்த பிரைவேட் பஸ் வேகமா வந்து மோதுனதுல லாரி கவுந்து போச்சி. எனக்கு பெருசா அடிபடல. சோத்தாங்கால் பிராக்சர் ஆயிப்போச்சி. கை சதை கிளிஞ்சிடுச்சி. அப்ப போட்ட தையல்தான் இது.”

நவீன் கேட்காமல் அவரே சொன்னார். நவீன் அவரைக் கண்களால் அளந்தான்.

அவர் உதடுகள் உலர்ந்து போயிருந்தன. கண்களுக்கு கீழே இரு பைகள் கனத்து தொங்கின. அடர்த்தியில்லாத செம்பழுப்பு நிற மயிர் காற்றுக்கு மடிந்து நிமிர்ந்தது.

பிளாஸ்டிக் ஒயர் பின்னிய நாற்காலியில் ஒரு அழுக்கான தலையணை போட்டு அவர் அதில் அமர்ந்திருந்தார். ஒயர் முடிச்சுகள் சில இடங்களில் அறுந்திருந்தன. உட்காருமிடத்தில் ஒயர் பின்னல்கள் சுமை அழுத்தத்தில் கீழ் நோக்கி தொய்ந்திருந்தன. நாற்காலிக்குப் பொருத்தமாக செய்து வைத்தது போல அவர் அதில் அமர்ந்திருந்தார். அவர் கைகள் வெகு நிச்சயமாக காய்த்துப் போயிருக்கக்கூடும் என்று நவீனுக்குத் தோன்றியது.

அவர் இன்ஜினுக்கு மிக அருகாமையில் அமர்ந்திருந்தார். அதன் சூட்டுக் கொதிப்பு அவரை உருக்கிவிட்டதா அல்லது மெலிந்த தோற்றம் அவரது இயல்பான உடல்வாகா என்று அவனுக்குத் தெரியவில்லை.

” இருவத்தாறு வருசமா லாரி ஓட்டுறேன். ” அவரே திடுமென கூறினார்.

‘ பயணங்கள் மனதுக்குப் பிடித்தமானவை. ஆனால் இவரது பயணம் இவருக்கு எப்படிப்பட்டதாயிருக்கும்…’

நவீன் யோசித்தபடியே வெளியே பார்வையை பதித்தான். லாரி அரியலூர் எல்லைக்குள் நுழைந்திருந்தது. அதற்குள் முழுதாய் ஏழு மணி நேரங்கள் கரைந்திருந்தன. நவீனுக்கு இடுப்பும், முதுகும் கழன்று விடும் போலிருந்தது.

அவ்வபோது தன்னையுமறியாமல் உறங்கி கழுத்து மளுக், மளுக்கென்று சாய்ந்ததில் திரும்ப முடியாமல் வலி பின்னியெடுத்தது. இன்னொரு ஏழு மணி நேரத்தைக் கடந்தாக வேண்டுமே என்றெண்ணி அவன் மலைத்துப் போனான். டிரைவர் லாரியை தொழிற்சாலை கேட் அருகில் நிறுத்தினார்.

” தம்பி எறங்கிக்கிறீங்களா…?”நவீன் நூறு ரூபாய்த் தாளை இன்ஜின் மேல் வைத்தான்.

” வச்சிக்குங்கண்ணே…”

” இதெல்லாம் எதுக்கு தம்பி…”

அவர் நெளிந்தார். கண்கள் விரிந்தன. வெள்ளைப் பரப்பில் சிவப்பு நிறமிகள் சாயப்பூச்சு போல படர்ந்திருந்தன.

” பரவாயில்லண்ணே. பத்திரமா கொண்டுவந்து இறக்கி விட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்…”

நவீன் பையை மாட்டிக்கொண்டு பக்கவாட்டுக் கைப்பிடியை பற்றி திரும்பி டயரில் கால் வைத்து பொத்தென்று குதித்தான்.

” தம்பி ஞாபகம் வச்சிக்குங்க… வரட்டுமா…?”

டிரைவர் குனிந்து சல்யூட் அடித்துவிட்டு வண்டியைக் கிளப்பினார்.

அடுத்த அரைமணி நேரத்தில் நாகர்கோயில் செல்லும் லாரி சிமெண்ட் மூட்டைகளுடன் கிளம்பிற்று. இந்த டிரைவர் முன்னவர் போலில்லை. கிட்டத்தட்ட நவீனுக்கு சமவயதுக்காரன் போலத் தெரிந்தான்.

முகம் கடுகடுப்பாயிருந்தது. ஒரு வார்த்தை பேசவில்லை. நகர எல்லையைத் தாண்டியதுமே வண்டி வேகமெடுத்தது. ஒரு கையால் ஸ்டியரிங்கைப் பிடித்தபடியே மறுகையால் அவன் சிடி பிளேயரை ஓடவிட்டான்.

டார்லிங்கு டம்பக்கு பாட்டு அதிர்ந்தது. விழுப்புரத்தில் சாப்பிட்ட வயிறு பகபகவென்றிருந்தது.

” ஹோட்டல் எதுனா வந்தா நிறுத்துங்க…”

” சரி…”

அவன் ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொண்டான். அந்த லாரி புதிதாயிருந்தது. மஞ்சள் பெயிண்டின் மினுமினுப்பு வெயிலில் பளபளக்க வேகமாய் பறந்தது. முகப்பில் ‘ செல்லாண்டியம்மன் துணை ‘ என்று எழுதப்பட்டிருந்தது.

‘ அந்த செல்லாண்டியம்மன்தான் நம்மளை பத்திரமா கொண்டுபோய் சேர்க்கணும் ‘ என்று நவீன் நினைத்துக்கொண்டான்.

டிரைவர் ஒரு கையால் செல்போனைப் பிடித்தபடி அடிக்கடி யாரிடமோ பேசிக்கொண்டே வந்தான். பாட்டு சத்தத்தில் எதிராளியின் குரல் கேட்காமல்,

” சத்தமா பேசித் தொலையேன்…” என்று கத்தினான்.

ஏறியதுமே சட்டையைக் கழற்றி சேரில் மாட்டி விட்டவனது கழுத்தில் சுண்டுவிரல் நீளத் தாயத்து தொங்கியது. கருப்புக் கரையிட்ட சிவப்பு பனியன் அணிந்திருந்தான். முகக் கவசத்தைக் காணவில்லை. வண்டி திருச்சி பைபாஸிலிருந்த அந்த சுமாரான ஹோட்டல் முன் நின்றது. கடைக்காரர் முகக்கவசம், கையுறை சகிதம் காட்சி தந்தார். நவீன் இரு பார்சல்கள் வாங்கி ஒன்றை டிரைவரிடம் தந்தான்.

” எனக்கு வேணாம் சார்…”

அவன் மறுத்ததை பொருட்படுத்தாமல் பார்சலை அவனருகில் வைத்துவிட்டு வந்து மரநிழலில் அமர்ந்து சாப்பிடத் துவங்கினான். பசித்த வயிற்றை நிரப்பி லாரியில் ஏறியபோது உச்சிவானில் சூரியன் மிதந்தது. அதற்குள் அம்மா இருமுறை போன் செய்து ஆசுவாசப்பட்டுக்கொண்டாள்.

” கொஞ்சநேரம் பாட்டு வேண்டாமே. எனக்குத் தூக்கம் வருது,” என்ற நவீனை அவன் ஒருமாதிரியாகப் பார்த்தான். பின்,

” பாட்டுப் பாடலைன்னா எனக்குத் தூக்கம் வந்துடும் ” என்றான் நிதானமாக.

நவீனுக்குத் திக்கென்றானது. இரு கைகளையும் கட்டிக்கொண்டு விறைப்பாக அமர்ந்து பக்கவாட்டில் நகரும் மரங்களைப் பார்க்கத்துவங்கினான்.

” சிங்கம், சிங்கம் ஈஸ்வர சிங்கம்…”

பாட்டு அலறத் துவங்கியது. சிங்கம் படத்தை கோயமுத்தூர் சித்தப்பா வீட்டுக்குப் போனபோது அங்கிருந்த மால் ஒன்றில் நவீன் பார்த்தான். மாலில் இளஞ்சிட்டுகள் கண்ணுக்குக் குளிர்ச்சியாக நடமாடிக் கொண்டிருந்தன.

சினிமாவின் மீதான ஈர்ப்பு பறிபோய் அவர்களையே பார்த்தபடி நின்றிருந்தவனை சித்தப்பா கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனார். அது ஞாபகத்துக்கு வர தனக்குள் சிரித்துக்கொண்டான்.

“சார் சூர்யா ரசிகரா…?”

டிரைவர் திடீரென்று கேட்டான். அவனது கடுகடுத்த முகத்தின் இறுகினத்தன்மையில் லேசான இளக்கம். எதையோ சொல்லத் துடிக்கிற ஆர்வம் அவன் கண்களில் தெரிய,

“ரசிகர்கலாம் இல்ல. ஆனாப் பிடிக்கும் ” என்றான் நவீன். அவன் பாட்டு சத்தத்தைக் குறைத்தான்.

“நமக்கு தலதான் எல்லாம். நான் அவரோட தீவிர பேன். அவர் படம் ரிலீசான அன்னிக்கி மொத ஷோ மொத வரிசையில ஒக்காந்து பாத்துடுவன். அவரு பேரை நெஞ்சில பச்சக்குத்தி வச்சிருக்கன் பாருங்க.”

அவன் பெருமையாகக் காட்டினான். அவனுக்குத் தன்னை திறந்து காட்டிவிட்ட திருப்தி. அதற்காகத்தான் தூண்டில் போட்டதே. நவீனுக்குப் புரிய மேலும் நாலைந்து கேள்விகளைக் கேட்டான். எல்லாமே தல பற்றிய கேள்விகள்.

பேசுவதை நிறுத்திவிட்டால் பாட்டு சத்தத்தைத் கூட்டிவிடுவானே என்கிற பயம். அவன் உற்சாகமாகப் பேசினான். சாலையில் லாரியின் வேகம் குறைந்திருந்தது. சில வாகனங்கள் கடந்து போயின.

“தலய ஒருதடவ நேர்ல பாக்கணும்னு ரொம்ப ஆசை. முயற்சி பண்ணிக்கிட்டிருக்கன். வூட்ல அதுக்கு இதெல்லாம் புரியாது. ஒளுங்கா சம்பாதிய்யா, அத வுட்டுட்டு தல, கிலன்னு அலையிறியேன்னு கோச்சிக்கும். ”

“கல்யாணமாயிடுச்சா…?”

“இப்பதான் ஆறு மாசத்துக்கு முந்தி ஆச்சி. தல படத்த வச்சி அதுக்கு முன்னாடி தாலி கட்டுனன். என்னப் பொறுத்தவரைக்கிம் அவருதான் கொலதெய்வம். ”

” எத்தனை வருஷமா லாரி ஓட்டுறீங்க…?”

கேள்வி மூலம் நவீன் அவனை மடைமாற்றிவிட்டான். அவன் முகத்தில் முன்பிருந்த பளீர்த்தன்மை மறைந்திருந்தது.

” அஞ்சு வருசமா ஓட்டுறன்” என்றான் அசிரத்தையாக.

” முகக்கவசம் அணியறது பாதுகாப்பு. நீங்க ஏன் அணியல…?”

” அதப் போட்டுக்கிட்டா மூச்சடைக்கிற மாதிரி இருக்கு. எரிச்சலா வருது. லாரி ஒட்டுறதுல கவனமில்லாம போயிடுது. அதான் பாக்கெட்டுக்குள்ள வச்சிருக்கன்” என்று அவன் சட்டைப் பையைத் தொட்டுக்காட்டினான். பின்,

” சிமெண்டு கம்பெனியில வேலப் பாக்குறீங்களா சார்…?’ என்றான்.

” ஆமா… சென்னையில இருக்க ஆபீஸுல வேலை. ஒரு வாரத்துக்கு முன்னாடி ஆபீஸை இழுத்து மூடிட்டாங்க. எவ்ளோ நாள்தான் சும்மாவே அங்க உட்கார்ந்திருக்கறது. அதான் கிளம்பிட்டேன்.”

” உங்கள மாதிரி உத்தியோகம் பாக்குறவங்களுக்கு பிரச்சினையில்ல.”

அவன் அதற்குப் பிறகு பேசவில்லை. மதுரை கடந்து கோவில்பட்டியும் விசுக்கென்று மறைந்து போயிருந்தது. சூரியன் மேற்கு நோக்கி இறங்கிக் கொண்டிருக்க, வானில் சோகையான நீலம் படிந்திருந்தது. வெள்ளை மேகங்கள் சில ஊர்ந்து போயின.

” ஒரு அஞ்சு நிமிசம் எறங்கிட்டு வந்துடறன் சார்…”

அவன் வண்டியை அந்த அரசமரத்தினருகில் ஓரங்கட்டிவிட்டு இறங்கினான். மரத்தையொட்டிய சந்திலிருந்து நைட்டி மேல் துப்பட்டா அணிந்த பெண்ணொருத்தி ஓடிவந்தாள். கீரைத்தண்டு போல் மெல்லிசாய் இருந்தாள். முகமும், தாலிக்கயிறும் மஞ்சள் நிறத்தில் மினுமினுத்தது. அவன் இரண்டடி எடுத்து வைப்பதற்குள் அவள் நெருங்கி வந்திருந்தாள்.

” நைட்டு வந்துருவீல்ல…”

அவசரமாக கேட்டாள். கிளர்ந்தெழுந்த உணர்வுகளின் திரள் போல் நின்றிருந்தவளுடைய கண்களில் ஒருவித தவிப்பு.

” லாரிய பேக்டரியில வுட்டுட்டு பத்து மணிக்கெல்லாம் வந்துருவன்.”அவன் காது குடைந்தபடியே சொன்னான்.

” காசு வச்சிருக்கியா….நைட்டு சோறாக்கணும்…”

மடித்து கட்டியிருந்த கைலியைத் தூக்கி வலது பக்கமிருந்த டிரவுசர் பாக்கெட்டிலிருந்து இருபது ரூபாய்த்தாளை எடுத்து நீட்டினான். வாங்கிக்கொண்டு ஏதோ சொல்ல வாயெடுத்தவள் நிமிர்ந்து உள்ளே அமர்ந்திருந்த நவீனைப் பார்த்துவிட்டு அமைதியானாள்.

கன்னங்களில் தேமல் படர்ந்திருந்தது. உதடுகள் காய்ந்து வெடித்திருந்தன. விலா எலும்புகள் புடைத்திருந்தன. துப்பட்டா வேலிமுள்ளில் மாட்டிய துணிபோல் படபடத்தது.

நவீன் எங்கோ பார்ப்பதுபோல் அவர்களிருவரையும் பார்த்தான். முதலில் ஏறிவந்த லாரியின் டிரைவர் ஞாபகத்துக்கு வந்தார். மூவர் முகத்திலும் ஒத்த சாயலிருந்தது.

நவீன் லாரியை விட்டு இறங்கியபோது அந்த மாத சம்பளம் அவனுடைய வங்கிக்கணக்கில் சேர்ந்து விட்டதற்கு அடையாளமாக அலைபேசியில் குறுஞ்செய்தி வந்தது.

செய்வலர்: செமிகோலன்

எகிப்திய எழுத்தாளர் தாரிக் இமாமுடன் ஒரு நேர்முகம் – காதரீன் வான் டெ வேட்

எகிப்திய எழுத்தாளர், வானொலி ஊடகவியலாளர், விமரிசகர், 1977 ஆம் ஆண்டு பிறந்தவர் தாரிக் இமாம் . ‘தி செகண்ட் லைப் ஆப் கான்ஸ்டன்டைன் கவபி’ மற்றும் ‘தி சிட்டி ஆப் எண்ட்லஸ் வால்ஸ்’ உட்பட பத்து நாவல்கள் மற்றும் சிறுகதை தொகுப்புகள் எழுதியுள்ளார். எகிப்தின் மதிப்பு மிக்க சவிரிஸ் பரிசு உட்பட பல விருதுகள் பெற்றவர். கலாச்சார பேரதிகார அமைப்பின் ‘ஸ்டேட் இன்சென்டிவ் அவார்ட்,’ எகிப்திய கலாச்சார அமைச்சகத்தின் இலக்கிய விருதான “சு’அத் சபாஹ் பரிசு,” மற்றும் ஸ்பானிஷ் மியூஸியோ டி லா பாலாப்ராவின் சிறந்த குறுங்கதை பரிசு பெற்றவர். மாய யதார்த்தம், மிகுகற்பனை உட்பட பரிசோதனைத் தன்மை இமாமின் எழுத்தைத் தனித்து நிற்கச் செய்வன.

மொழியாக்கம் செய்யப்படுவது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தனது எழுத்து மொழிபெயர்க்கப்படுவது எழுத்தாளனுக்கு முக்கியமா? ஆங்கிலம் இன்னும் பெரிய சந்தைக்கு இட்டுச் செல்வதா, அல்லது, பிற மொழிகளில் உங்கள் படைப்பைக் காண்பதில்தான் உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறதா? உங்கள் எழுத்து மொழிபெயர்க்கப்பட்டபின் உங்கள் எழுத்து முறையில் எந்த தாக்கமும் ஏற்பட்டிருக்கிறதா?

ஒவ்வொரு எழுத்தாளனும் தனது இலக்கியப் பிரதியை ஒட்டுமொத்த மானுடத்துக்கும் அளிப்பதாக நினைத்துக் கொள்கிறான், அது உண்மையும்கூட. ஆனால் நிஜத்தில், அவனது பிரதி அந்த “மானுடத்தை” சென்றடைய வேண்டுமென்றால் அது மொழிபெயர்ப்பால்தான் சாத்தியப்படுகிறது. உள்ளபடியே சொல்வதானால், எனக்கு மொழியாக்கம் குறித்து அக்கறை கிடையாது. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, எனக்கு அதில் இடமில்லை. ஆர்வமிக்க மொழிபெயர்ப்பாளர்கள், அவர்கள் அளிக்கும் வாய்ப்பை வரவேற்கும் பதிப்பாளர்கள் சார்ந்த விஷயம் இது. இரண்டாவதாக, இது இன்னும் முக்கியமானதும்கூட, நான் அரபியில், எனக்கு ஆளுமை வாய்க்கப்பெற்ற அந்த ஒரு மொழியின் அழகியலுக்கு ஏற்ப, எழுதுபவன். ஆக, நான் எழுதும் நடை எனக்கு திருப்தி கொடுப்பதாக இருக்கிறது. இதில் எனக்கு இழப்பு எதுவும் இருப்பதாய் தெரியவில்லை. என் எழுத்து ஏதோ ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி நகர்வதும் அல்ல. அப்படி இருப்பது மிக அதீத அடிமைத்தனம் போன்றது என்பதுதான் என் பார்வை. என்னைப் பொறுத்தவரை, இதை நான் வெறும் பேச்சுக்குச் சொல்லவில்லை, ஒவ்வொரு வாசகனும் அத்தனை வாசகர்களையும் பிரதிநிதிப்படுத்துபவன். என்னைப் பொறுத்தவரை, அரபி மொழி அத்தனை மொழிகளையும் பிரதிநிதிப்படுத்துகிறது.

எழுதும்போதோ அதற்கு பின்னோ, நான் மொழியாக்கம் பற்றி நினைத்தே பார்ப்பதில்லை. அப்படியானால் மொழியாக்கம் முக்கியமில்லை என்று அர்த்தமாகுமா? இல்லை. அது நிச்சயம் முக்கியமானது. பதிப்புத் துறையாகவும் பிற மொழிகளைச் சென்றடைய உதவுவதிலும், ஆங்கிலமே உலகின் முதன்மை மொழி என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் முதலில் சொன்னது போல், நான் இந்த ஆட்டத்தில் இல்லை. வெளிப்படையாய்ப் பேசினால், எனக்கு இந்த ஆட்டத்தில் சேர்ந்து கொள்ளும் ஆசையும் இல்லை. புகழ் பெற்ற மொழிபெயர்ப்பாளர்கள் அவ்வப்போது கெய்ரோ வருவதுண்டு. அவர்களைச் சந்திக்கும் விருப்பம் உண்டா என்றோ, அவர்கள் வரும் இடத்தில் “இருக்க” வேண்டும் என்றோ என்னிடம் கேட்டுக் கொள்ளப்படுவது உண்டு. எனக்கு இதில் எல்லாம் நிச்சயம் எந்த ஆர்வமும் இல்லை.

வெளிப்படையாய்ச் சொல்கிறேன். என் எழுத்தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வது குறித்து மொழிபெயர்ப்பாளர்கள் என்னை கடந்த காலத்தில் அணுகியிருக்கிறார்கள். ஆனால் அது எதுவும் நிறைவு பெறவில்லை. காரணம், அவர்கள் அளித்த எடிட்டோரியல் பரிந்துரைகள் நான் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாய் இருக்கவில்லை. பிரதியின் குறிப்பிட்ட ஒரு கூறு விரித்துரைக்கப்பட வேண்டும் என்று சொல்வார்கள், அல்லது, நான் முக்கியத்துவம் அளிக்காத ஒரு கூறு அழுத்திச் சொல்லப்பட வேண்டும் என்று சொல்வார்கள். முழு உண்மையைச் சொன்னால், இதில் என் சோம்பேறித்தனத்துக்கும் ஒரு பங்கு உண்டு. நான் ரொம்ப சோம்பேறி. ஒரு வேலையாய் யாரையாவது சந்திக்க வேண்டுமென்றால் அது அலுப்பூட்டுவதாய் இருக்கிறது. அவற்றைத் தள்ளிப் போடவே எப்போதும் முயற்சி செய்கிறேன். ஏதோ ஒரு காரணத்தால் அவை தாமதமாகின்றன, அல்லது ரத்து செய்யப்படுகின்றன என்றால், மதிப்புமிக்க ஒரு வாய்ப்பைத் தவற விட்டு விட்டோமே என்ற வருத்தத்துக்கு மாறாய் உண்மையாகவே அப்பாடா என்றுதான் இருக்கிறது.

ஆங்கில மொழிபெயர்ப்புக்கு, அதிலும் குறிப்பாக உணர்வளவிலும்கூட ஒப்பீட்டளவில் நெருக்கமாய் உள்ள மெடிட்டரேனிய ஐரோப்பிய வாசகர்களை விட தொலைவில் உள்ள பிரிட்டிஷ் அல்லது அமெரிக்க வாசர்களுக்காக, எப்படிப்பட்ட பிரதிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்ற கேள்வி, சிக்கலான ஒன்று. சில மேற்கத்திய மொழிபெயர்ப்பாளர்களைப் பொறுத்தவரை அராபிய உலகம் என்பது மாலைச் செய்தியில் காட்டப்படும் நிகழ்ச்சிகளின் கோர்வை. அவை நேரடியாய் இலக்கியத்தில் பிரதிபலிக்கப்படுவதைப் பார்க்க சில சமயம் முயற்சி செய்கிறார்கள். காரணம், அவர்களும்கூட சுதந்திரமாய் முடிவெடுப்பதில்லை. என்ன இருந்தாலும் பதிப்புத் துறை ஒரு வர்த்தகம், அதில் விற்பனைத் துறை மிக முக்கியமான ஒன்று. எனவே தேவைப்பட்ட விஷயம் ஒரு பிரதியில் இல்லை என்றால் மொழிபெயர்ப்பாளர்கள் அதைத் தேர்ந்தெடுப்பதில்லை. இப்படிச் சொல்வதை, இலக்கியம் வேறு அது உருவான காலக் கணம் வேறு என்று நான் பிரித்துப் பேசுவதாய்க் கொள்ளக் கூடாது. மாறாய், அது இக்கட்டான காலகட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதை ஆதரிக்கிறேன். ஆனால் அழகியல் பார்வையில், ஒரு செய்தித்தாள் படிப்பது போன்ற ஒரு எளிய வடிவமல்ல இலக்கியம்.

நான் சொல்வது மொழியாக்கம் செய்பவர்களுக்கு அநீதி இழைப்பதாக இருந்துவிடக் கூடாது, இன்னொரு விஷயத்தையும் கருத வேண்டும். இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய எண்ணிக்கையில் அரபு மொழி இலக்கியம் படைக்கப்படுகிறது. ஒரு மொழிபெயர்ப்பாளரால் எப்படி அத்தனையையும் அறிந்து கொண்டு, அதிலிருந்து தேர்ந்தெடுக்க முடியும்? ஒரு அராபிய விமரிசகரோ வாசகரோ கூட இதைச் செய்ய முடியாது. எனவே, இத்தனை பெரிய உருவாக்கத்திலிருந்து சிறிய எண்ணிக்கை கொண்ட தலைப்புகளுக்கு வடிகட்டித் தரும் “மடைகளை” மொழிபெயர்ப்பாளர் சார்ந்திருக்க வேண்டியதாகிறது: மதிப்புமிக்க பரிசுகள் வென்ற நாவல்கள், தம் தாயகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியவை, விற்பனைச் சாதனை படைத்தவை, இது போல். மொழிபெயர்ப்பாளர்கள் சிக்குண்ட முக்கோணத்தின் மூன்று சுவர்கள் இவை. ஆனால் எந்த இலக்கியப் படைப்புகள் சிறந்தவை என்றோ, எவை மதிப்புக்குரியவை என்றோ, எவை மிக உயர்ந்த தரத்தில் அமைந்தவை என்றோ தீர்மானிக்கத்தக்க ஆதர்ச அளவைகள் இவை என்று சொல்வதற்கில்லை.

என் நாவல்களில் இரண்டு மட்டுமே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இரண்டும் இதாலிய மொழியில், ஒரே மொழிபெயர்ப்பாளரால்- பார்பரா பெனினி. பெனினி தன் பார்வைக்கு ஏற்ற வகையில் இயங்குபவர். இதாலிய பதிப்பாளர்களின் மரபார்ந்த நெறிமுறைகளையும்கூட சாராதவர். அதைவிட முக்கியமாக, புதிய விஷயங்களை, அவான் கார்டை ஆதரிப்பவர். அவர் எகிப்தில் வாழ்ந்திருக்கும் காரணத்தால், அதன் இலக்கியச் சூழலை, இடையில் இருப்பவர்கள் மூலமல்ல, உள்ளிருந்தே அறிந்திருக்கிறார். நான் அவரை இதுவரைச் சந்தித்ததில்லை என்பதையும் சொல்ல வேண்டும். இந்தக் காரணங்களால், தன் மொழிபெயர்ப்பு பிரதிகளை சுயமாக தேர்ந்தெடுக்கிறார். அவற்றின், “இலக்கியத்தன்மை.’ மட்டுமே அவரது அளவுகோல். தனக்கு பிடித்தவற்றை மொழிபெயர்த்து, அதன் பின்னரே அவற்றைப் பதிப்புக்கும் சாத்தியங்களைத் தேடுகிறார். அவற்றை பெறுவதும் அவ்வளவு சுலபமல்ல. என் பார்வையில்,அவர் ஒரு தீரமிக்க மொழிபெயர்ப்பாளர். ஒரு படைப்பாளியைப் போல் சாகசத்தில் தன்னை ஆழ்த்திக் கொள்கிறார், அதற்கான விலையையும் ஏற்றுக் கொள்கிறார். இந்த மொழிபெயர்ப்பாளருக்கு பொது வெளியில் நான் இப்படி நன்றி சொல்வது இதுவே முதல் முறையாக இருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட ஒரு நேர்முகத்தின் பின்புலத்தில் இதைச் சொல்வது என் கடமை என்று கருதுகிறேன்.

நீங்கள் பரிசோதனை முயற்சிகளை அஞ்சும் எழுத்தாளரல்ல. பிற எழுத்தாளர்கள், இலக்கிய மரபுகள், பாணிகளின் தாக்கங்களுக்கு அனுமதி அளிக்கிறீர்கள். தா’ம் அல்-நாம் இதற்கு ஒரு பிரத்யேக உதாரணம்- யாசுநாரி கவாபாட்டாவின் ‘ஹவுஸ் ஆப் தி ஸ்லீப்பிங் பியூட்டிஸ்’ மற்றும் காபிரியல் கார்சியா மார்க்வெஸ்சின் ‘மெமரீஸ் ஆப் மை மெலான்கலி வோர்ஸ்’ ஆகியவற்றின் கூறுகளை உள்வாங்கிக் கொண்ட நாவல் அது. ஆனால் அதே சமயம் அது ஆயிரத்து ஒரு இரவுகளின் வடிவத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. அரபி அல்லது அரபியல்லாத இலக்கியம், எது உங்கள் மீது அதிக தாக்கம் ஏற்படுத்தி இருக்கிறது? இப்போது நீங்கள் வாசிக்கும் எழுத்தாளர்கள் யார்?

எனக்கு எழுத்தும் பரிசோதனை முயற்சியும் வேறல்ல. மொழியிலும் யதார்த்தத்தை விவரிப்பதிலும் உவமைத்தன்மை கொண்ட இலக்கியத்தை விரும்புகிறேன். எனது எழுத்து கவித்துவம் கொண்டதாய் இருக்கிறது என்று சிலர் விவரித்ததுண்டு. நான் சொல்வதை அது உறுதி செய்கிறது என்று நினைக்கிறேன்: என்னைப் பொறுத்தவரை, என் எழுத்தில் உள்ள கவித்துவ கூறுகள் உரைநடையைக் காட்டிலும் முக்கியத்துவம் குறைந்தவையல்ல. குறிப்பிட்ட ஒரு கதையைச் சொல்வது அதில் மறைந்துள்ள கவித்துவத்தை வெளிப்படுத்தவே, வெறும் தகவல்களைத் தெரிவிப்பதற்கு அல்ல.

பிரதிகள் ஒன்றையொன்று எழுதிக் கொள்கின்றன என்று நம்புகிறேன். ஒரு இலக்கியப் படைப்பின் சுனைகள் பல்வகைப்பட்டவை, அதில் இலக்கியமும் அடக்கம். இலக்கியமும் இலக்கியத்தை எழுதிக் கொள்கிறது, இலக்கியம் குறித்து மரபார்ந்த ஆசிரியர்கள் சொல்வது போல் நேரடி யதார்த்தமல்ல, கலையே கலையின் கருப்பொருளாகவும் இருக்கக் கூடும். அதனால்தான் உதாரணமாக, pastiche குறித்து நான் அச்சம் கொள்வதில்லை, என் புதிய நாவல், ‘தி டேஸ்ட் ஆப் ஸ்லீப்’ இதையே மையமாய்க் கொள்கிறது. ஒரு புதிய கோட்பாடு இருக்கிறது, அதன்படி “பிரதி நினைவு,” என்று நான் அழைப்பதை ஒரு புதுப்பிரதி கவனப்படுத்துவதில் இது அடிப்படை பங்காற்றுகிறது. அதே நேரம், கலாச்சாரம் முதல் அரசியல் வரை தன் காலத்தை ஒரு நாவல் பிரதி அத்தனை தளங்களிலும் எதிர்கொள்ள வேண்டும் என்றும் நான் நம்புவதால். தன் காலத்துக்கே பிரத்யேகமான தருணத்தில் வேர் கொள்ளவும் இதன் இயங்குதன்மை உதவுகிறது. நாவல் கலையில் கிசுகிசுப்பான குரல் மற்றும் உரத்து ஒலிக்கும் குரல் இரண்டுக்கும் இடமுண்டு. எகிப்தின் சரித்திரம் மற்றும் யதார்த்தம் பற்றி இன்னும் ஆழப் பேசும் நோக்கத்தில் நான் ‘தி டேஸ்ட் ஆப் ஸ்லீப்’ நாவலில் ஒரு ஜப்பானிய நாவல், கொலம்பிய நாவல் மற்றும் அராபிய சரித்திர கதையாடலுடனும் போராடுகிறேன்.

இலக்கியத்தை இப்படி பார்க்கிறேன்: பிரதிகள், சரித்திரம், யதார்த்தம் மற்றும் கற்பனை குறித்து, ஒன்று பிறவற்றை நீக்கவோ பிறவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தவோ அனுமதியாமல், முடிபற்று நிகழ்த்தும் விசாரணை. ஏற்கனவே நிறுவப்பட்ட, அல்லது முன் அடையாளம் செய்யப்பட்ட வரையறையின் சார்பின்றி தன்னைத் தானே எவ்வாறு விசாரணை செய்து கொள்கிறது என்பதுதான் ஒரு இலக்கிய பிரதிக்கு அடையாளம் அளிக்கிறது என்று நம்புகிறேன். இந்த பாணி பல எகிப்திய நாவல்களிலும் வெளிப்படத் துவங்கி விட்டது என்று. ‘தி டேஸ்ட் ஆப் ஸ்லீப்’ வெளிவந்த அதே காலத்தில் குவைத்திய நாவலாசிரியர் புதைனா அல்-இஸ்ஸா ஒரு துணிச்சலான நாவல் எழுதினார். குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் கொண்ட ஐந்து இலக்கியப் பிரதிகள், ‘ஜோர்பா தி கிரீக்,’ ‘ ஆலிஸ் இன் தி வண்டர்லண்ட்’, ‘பினோச்சியோ’, ‘1984’ மற்றும் ‘பாரன்ஹீட் 451’ ஆகியவற்றை உந்துவிசையாய்க் கொண்டது ‘ஹாரிஸ் சாத் அல்-அலாம்’. அந்த நாவலின் முடிவில் சென்சார் என்ற கருத்துவாக்கத்தால் பிரதிநிதிப்படுத்தப்படும் அராபிய ஒடுக்குமுறையின் இயங்கு கருவிகளைப் பற்றிய மிகத் துல்லியமான கலாச்சாரக் கேள்வியினை அவர் எழுப்பினார்.

எனவே இலக்கியம் என்பது நம் யதார்த்தத்தை அதன் அத்தனை நுண்விபரங்களுடனும் புரிந்து கொள்வதற்கான ஆதார சாதனம். காலம், சுதந்திரம், மரணம் ஆகியவற்றுடன் பிணைப்பு கொண்ட இருப்பு குறித்த பெரும் கருத்துக்களில் உள்ள கருத்துருவாக்கமாகிய நான் என்ற ஆளுமை அதே நேரம் ஒரு தனி மனிதன், அராபிய, எகிப்திய எழுத்தாளன் என்ற வகையில் என் காலத்தின் குறிப்பிட்ட ஒரு தருணத்தில் அதன் அத்தனை வரலாற்று, கலாச்சார, சமூக சிக்கல்களுடனும் எழுதிக் கொண்டிருக்கிறேன். தூய அடையாளம், அல்லது ஒருமைப்பட்ட அதிகாரம், ஏகத்துவத்தை பிரதிபலிக்கிறது என்று கருதுகிறேன். அது இறுதியில் சர்வாதிகாரத்தைக் கொண்டு வருகிறது.

எனக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார் என்று பார்த்தால், பல்வேறு இலக்கிய வரிசைகள், காலகட்டங்கள், இடங்களுக்கு உரிய நாவலாசிரியர்களைச் சொல்ல வேண்டும்: நகீப் மாபூஸ், ஆல்பர் காம்யூ, காபிரியல் கார்சியா மார்க்வெஸ், கார்லோஸ் பியூண்டஸ், முகமது ஹபீஸ் ரகாப், யூஜீன் இயனஸ்கோ, மைக்கேல் ஒன்டாட்ஜே, டோனி மாரிசன், சல்மான் ருஷ்டி, யுவான் யோசே மில்லாஸ், ஜாவியர் மாராஸ், மைக்கேல் கன்னிங்கம், பால் ஆஸ்டர்.

அராப்லிட் தளத்தில் வந்த நீண்ட நேர்முகத்தின் சிறு பகுதி. முழு பேட்டியும் இங்கு ஆங்கிலத்தில்  வாசிக்கலாம்: 

Tareq Imam: ‘The Writer Has Become Everyone’s Target’

சாலை- இரண்டு குறிப்புகள்

செல்வசங்கரன்

 

குறிப்பு ஒன்று – சாலையென்றால் ஓடும்

எனக்கு காரோட்டத் தெரியாதுதான்
ஏறிக்கொள்ளுங்கள் சாலையை ஓடச் சொல்கிறேன் என்றால்
ஒருவரும் நம்பவில்லை
ஓடுகிறேன் என்பதை சாலையையே சொல்ல வைத்தேன் அது தனிக்கதை
எல்லாரும் காருக்குள் ஏறினோம்
நான் ஸ்டீரிங்கைப் பிடித்து போஸ் கொடுத்தேன்
கீழே பார்த்தால் தலை தெறிக்கிற மாதிரி சாலை ஓட ஆரம்பித்தது
நடந்து சென்ற ஒருவர் காரை முந்தினார்
எங்கள் மூளையின் பிசுபிசுப்பை இளையராஜா தொட்டுப் பார்த்த போது
ஒரு நிமிடம் இளையராஜா என அவரிடம் கேட்டு
சாலை சோர்வடைந்தால் இறங்கி யாராவது சாலையை
தள்ளவேண்டியது வரும் என்றேன்
இதை முதலிலேயே சொல்லவில்லை என்று சண்டை செய்தார்கள்
நானே ஓடிக்கொள்கிறேனென்று
வழியில் நெல்மணியை கொத்திக் கொண்டிருந்த மைனாவை
சூவென பத்திவிட்டது சாலை
சாவகாசமாக தலையை திருப்பி மைனா சாலையை தூர விரட்டியது
யாருடைய ஸ்டாப்பும் வரவில்லை
தூங்கி எழுந்த போது சாலை ஒரே வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது
ஏறிய இடம் வந்துவிட்டது இறங்குங்கள் இறங்குங்களென
அவசரப்படுத்தியதும்
ஓடிக்கொண்டிருக்கும் சாலையில் கவனமாக காலை வைத்து
கீழே ஒவ்வொருவராக இறங்கினோம்

 

குறிப்பு இரண்டு – தன்னு மொட்டை

சொகுசு வேனிலிருந்த ஒன்றரை வயதுக் குழந்தை தன்யாவை
எல்லாரும் கொஞ்சினர்
வண்டி போகயில் ஓட்டுநர் எழுந்து வந்து குழந்தையைத் தூக்கி
மடியில் வைத்துக் கொண்டார்
இன்னொருவர் ஓட்டுநர் அருகே வந்து ஸ்டீரிங் இடிக்காதவாறு
ஓட்டுநரைத் தூக்கி மடியில் வைத்தார்
இன்னொருவர் அவர்களைத் தூக்கி மடியில் வைக்க
இப்படித் தூக்கி வைத்துக் கொண்டே அடுக்கியவாறு சென்றனர்
வண்டி எப்போதும் வென்றானைக் கடந்ததும்
ஓட்டுநர் சும்மா இராமல் குழந்தையின் கன்னத்தைக் கிள்ளி தன்னுமா
என்று தனது வாயில் ஒன்று வைக்க அவ்வளவு தான்
ஓட்டுநரை மடியில் வைத்திருந்தவர் ஓட்டுநர் வாயிலிருந்து எடுத்து
ஒன்று இட்டுக் கொண்டார்
மாற்றி மாற்றி வாயில் இட்டுக் கொண்டே போயினர்
ஒரே நேரத்தில் அந்தக் குழந்தை
இருபத்து மூன்று பேர்கள் மடியில் இருந்தது
அவர்கள் கிடக்கிறார்கள் நான் கிச்சு கிச்சு மூட்டுகிறேனென
தூத்துக்குடி சாலையில்
தன்னைத் தானே ஓட்டிச் சாகசம் காட்டியது அந்த வண்டி
தனக்காக எல்லாரும் இவ்வளவு மெனக்கெடுகிறார்களென்று
மயிர்கள் குத்திட்டு நின்ற தன்னு
சுனைக்கோயில் வந்ததும் இறங்கி முதல் வேலையாக
சவரக்காரரிடமிருந்த கத்தியை தானே வாங்கி
அதன் பளபளப்பின் முன்னால் தன் மண்டையைக் காட்டி
உடலையே நன்றாக நாலாப் பக்கமும் சுழற்றி வர
மொட்டை நிகழ்வு அன்றைக்குச் சிறப்பாக நடந்தேறியது
மொட்டையின் போது உங்கள் எல்லாருக்குமாகத் தான்
ஒரு சொட்டு கூட கண்ணீர் சிந்தவில்லையென்று தன்னு சொல்ல
அத்தனை பேரும் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர்

தொ.ப. படிக்கப்பட வேண்டியவர்

முனைவர் ம இராமச்சந்திரன்

‘இவ்வளவு காலமாக எங்கையா இருந்தீங்க’ – கா.சிவத்தம்பி

தமிழ் இலக்கியப் பரப்பில் மக்களிடம் இருந்து இலக்கியத்திற்கு என்ற சிந்தனை மரபு பல ஆளுமைகளை உருவாக்கித் தந்தது. படித்தல் என்ற செயல் நூல் வழியாகக் கற்றல் என்ற மரபான சிந்தனைக்கு மாற்றாகப் படித்தல் என்பது வாழ்க்கையைப் படித்தல், மனிதர்களைப் படித்தல், பண்பாட்டுக் கூறுகளைப் படித்தல் என்று புதிய நோக்கில் பயணித்தவர்களில் தொ.ப.வும் ஒருவர். இலக்கிய வளமையும் சிந்தனைத் தெளிவும் காலம் காலமாக வேர்விட்டு வளர்ந்த நெல்லை மண்ணில் தனக்கான வேர்களைத்தேடி பயணித்தவர் தொ.பரமசிவன். நா.வானமாமலை, சி.சு.மணி என்று தனது சிந்தனை முன்னோடிகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து இயங்கியவர்.

நெல்லை மண் இடதுசாரி சிந்தனைக்குப் பெயர் பெற்றது. அதேபோலச் சமூக வரலாற்றில் அனைத்து நிகழ்வுகளுக்கும் எதிர்வினை ஆற்றும் திராணியும் கெத்தும் கொண்டது. தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில் நெல்லை மண்ணைத் தவிர்த்துவிடவே முடியாது. அத்தகைய வளமான பின்புலத்தில் சோடை போகாமல் தன்னைக் கல்வெட்டாகச் செதுக்கிக் கொண்டார் தொ.ப. மார்க்சியச் சிந்தனை, தேசியச் சிந்தனை, திராவிடச் சிந்தனை, பண்பாட்டுச் சிந்தனை என்று முரண்பாடுகளில் சிக்கிக்கொண்ட தமிழ்ச் சிந்தனை மரபில் தனக்கான தனிவழியை உருவாக்கிக் கொண்டு சாதித்துக் காட்டியவர் தொ.ப.

தொடர் வாசிப்பின் வளர்ச்சியில் சிந்தனைப் போக்குகளை அறிந்து கொண்டு அவற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பகுத்துப் பார்க்கவேண்டும் என்று ஆழமாகச் சிந்தித்தார். நா.வானமாமலை வெளிப்படுத்தும் ஆராய்ச்சிமுறை அவரைக் கவர்ந்தது. அதேபோலச் சி.சு.மணி கருத்துக்களை எடுத்துரைக்கும் விதம், சான்று காட்டுதல், சொல்லாட்சி என்று பல நெறிமுறைகளைப் பின்பற்றும் போக்கைத் தனது வெளிப்பாட்டு முறையியலாக உருவாக்கிக் கொண்டார். சி சு.மணி சைவ சித்தாந்த நூல்களில் பெரும் புலமை மிக்கவர். இவரின் இறைவன், உயிர், உலகம் (பதி, பசு, பாசம்) ஆகியவற்றின் உண்மை நிலையை எடுத்துக்கூறும் தர்க்கவியலை விரும்புபவர் தொ.ப. வைணவ இலக்கியத்தின் பேரன்பு கோட்பாடு அவரை ஆழப் பாதித்தது. அகலச் சிந்திக்கத் தூண்டியது.

இத்தகைய பின்புலத்தில் தனது முனைவர் பட்ட ஆய்விற்கு அழகர் கோயிலை ஆய்வுப் பொருளாக எடுத்துக்கொண்டார். “பண்பாடு என்பதே உற்பத்தி சார்ந்தது, உற்பத்தி நடவடிக்கைகளிருந்து அது உருப்பெறுவது” என்ற மார்க்சியச் சிந்தனை மரபும் சித்தாந்த சிந்தனை மரபுவழி தாக்கமும் கொண்ட தொ.ப. அழகர் கோயிலை ஆய்வுக்கு உட்படுத்தும்போது பண்பாட்டுச் சிக்கல்களையும் சமூக வாழ்வியல் போக்குகளையும் நேரடியாகக் கள ஆய்வு மூலம் கண்டுகொண்டார். தொடர்ந்த வாசிப்பும் மக்களின் வாழ்க்கையும் அவருக்கு தனக்கான யதார்த்த நிலையை உருவாக்க கற்றுத் தந்தன. நடைமுறைக்கும் சிந்தனைக்கும் இடையே காணப்பட்ட வேறுபாடும் அகலமும் அவரைப் புதியத் தளத்திற்கு எடுத்துச்சென்றன. மக்களின் அறிவுத் தெறிப்பின் எளிமை அவரை ஆழமாகக் கவர்ந்தது. இதன் காரணமாகத் தனது சிந்தனைத் தெறிப்புகளைப் பெரும்பாலும் எளிமையான உரைநடையில் பம்பாத்து இல்லாமல் நேரடி உரையாடலில் அமைத்துக்கொண்டார். தான் என்ற இருத்தலை ஒதுக்கித் தள்ளிவிட்டு அறிவு என்ற தளத்திற்கு முதன்மை தந்தார். அவரின் அனைத்துச் சிந்தனை வெளிப்பாட்டு முறைகளும் புதுமையானவை, முன்மாதிரியற்றவை.

அழகர்கோயில் வழிபாடு என்பது கருப்பணசாமி வழிபாட்டிலிருந்து தொடங்குகிறது. மதுரை மாவட்ட மக்களில் கள்ளர் மற்றும் பிற சாதியினர் வழிபடும் தெய்வம் பதினெட்டாம் படி கருப்பணசாமி. இந்த நாட்டார் வழிபாடு பிற்காலத்தில் பெருந்தெய்வ வழிபாட்டால் உள்வாங்கப்படும்போது அம்மக்களின் வழிபாட்டுமுறைகளும் சடங்குகளும் எப்படி மாற்றம் பெற்றன என்பதும் இதன்வழி அம்மக்களின் வாழ்வியல் பண்பாட்டுக் கூறுகளை ஆய்வுக்கு உட்படுத்திப் புதிய கருத்துக்களை வெளிக்கொணர்தலுமாகத் தொ.ப.வின் ஆய்வு அமைந்திருந்தது. அவர் முன்வைத்த கருத்துகளும் அதனை உறுதிப்படுத்த கொடுத்தச் சான்றுகளும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின. வாழ்க்கையில் அனைவரும் கேட்டிருக்கும், புழங்கியிருக்கும் சொல்லை, கருத்தை மிக விரிவாக ஆவணப்படுத்தும் போக்கில் கையாளும் இவரின் ஆய்வுநெறி புதுமையானது.

தொ.ப. தனக்கான கருத்துப் புலப்பாட்டுத் தன்மையை உருவாக்கிக் கொண்டார். கருத்துக்களின் புதுமை, செறிவு, சொல்லாராய்ச்சி என்று தனது சிந்தனைப்போக்கில் சித்தாந்த முரண்பாடுகள் ஏற்படுவதை உணரத்தான் செய்தார். திராவிட நெறியில் நின்றுகொண்டு மக்களின் பண்பாட்டுக் கூறுகளைப் பகுப்பாய்வு செய்வதில் பல சிக்கல்கள் தோன்றினாலும் அவற்றின் யதார்த்த பின்னணியை அறிவியல்பூர்வமாக இல்லாமல் வாழ்வியல் தேவையாக வெளிப்படுத்த தயங்கியதில்லை. பண்பாட்டில் சாதிச் சிக்கல், வர்ணாசர்ம தர்மம் என்பவைகளுக்குத் தனது கருத்துகளை, “இல்லைங்கிறது உண்மையே தவிர, அத யாரும் எதிர்த்து நிலை கொள்ளாம போச்சுனு சொல்றதுக்கில்ல. எழுத்திலதான் அது இருக்கே தவிர அது வாழ்நிலைல ஒரு போதும் இல்ல. எழுத்துலதான் நான்கு வர்ணம்னு இருக்கு. நடைமுறைல சாதிகள்தான் இருந்தன. வர்ண பேதம் இல்லை” என்று தெளிவாகத் தமிழகத்தில் வர்ணாசர்ம கொள்கை நடைமுறையில் இல்லை என்று சான்றுகளுடன் விரிவாக விளக்குகிறார். இன்றைய சாதிமுறையும் பிற்காலத்தில் வந்திருக்க வேண்டும் என்று கூறி இதில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று கூறுகிறார். சாதிகள் பற்றிய சிக்கல் என்பது இன்றும் தீர்க்கப்படாத பிரச்சினையாக இருந்து வருகிறது.

தொ.ப. தனது சமகாலச் சிந்தனை ஆளுமைகளை அடையாளம் காட்டாமல் இருந்ததில்லை, நல்ல நூல்களை நல்ல அறிஞர்களைத் தனது எழுத்துகள் வழியாகவும் உரையாடல்கள் வழியாகவும் அங்கீகரிக்க தவறுவதில்லை. நேர்காணல் ஒன்றில் தமிழ் இசை குறித்த கேள்விக்குப் பேராசிரியர் மம்மது அவர்களின் பணியை மெச்சிக் கூறி பதிவு செய்தது வியக்கத்தக்கது. இதுபோலப் பலரையும் தனது செயல்பாடுகள் வழியாகப் பிறருக்குக் கடத்திச் சென்றுள்ளார். ஓர் ஆய்வாளருக்கு இருக்கவேண்டிய கண்ணியமாக இதனைக் கூறலாம்.

தொல்லியல் நாட்டம் தொ.ப. அவர்களுக்குக் கள ஆய்வின் அனுபவத்தில் கிடைத்தது. மக்களையும் வரலாற்றையும் அறிய எண்ணியவர் கல்வெட்டு ஆராய்ச்சியில் செயல்படத் தொடங்கினார். கல்வெட்டுக்களை அடையாளம் காணுதல், படித்தல் என்று தன்னை ஆய்வாளராக என்றும் வளர்த்துக் கொண்டேயிருந்தார். தான் மட்டுமல்ல ஒரு கூட்டத்தையே எப்போதும் தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்லுதலும் விவாதித்தலும் அவரது பண்பாக இருந்தது. மதுரை மாவட்டத்தில் காணப்படும் சமணப் படுக்கைகள், கல்வெட்டுகள், தொல்லியல் சான்றுகள் என்று தனது சிந்தனைக்கு வலிமை சேர்க்கும் ஆதாரங்களை ஆழமாகக் கவனத்தில் வைத்துக் கொண்டார். இவரின் உரையாடல்கள் பலரையும் புருவம் உயர்த்த செய்வதற்கு காரணம் அவர் முன்வைக்கும் சான்றுகளும் அதற்கான பின்புலமும்தான். பண்பாட்டு ஆய்வுகள் மானுடவியல் துறையாக வளர்ச்சி கண்ட நிலையில் இதன் செயல்பாடுகளைக் கூறும்போது இன்றைய ஆய்வாளர்களின் செயல்பாடுகளையும் அவர்களின் நூல்களையும் வெளிப்படுத்த தயங்கியதில்லை. மானுடவியல் என்றதும் பக்தவச்சல பாரதியின் பணிகளை எடுத்துக் கூறும் பண்பாளர் தொ.ப.

சூழலியல் பற்றிய தொ.ப. வின் கருத்துகள் யதார்த்த புரிதல் கொண்டவை. தமிழாய்வில் சங்க கால மக்கள் இயற்கையைப் போற்றினார்கள். நிலமும் பொழுதும் அவர்களின் முதன்மை சிந்தனையாக இருந்தது என்று உயர்த்திக் கூறும்போது சங்க கால மக்களின் வாழ்க்கை இயற்கையோடு இயைந்தே இருந்தது என்றும் அன்றைய மக்களுக்குச் சூழலியல் விழிப்புணர்வு தேவைப்படவில்லையென்றும் யதார்த்தத்தை இயல்பாகக் கூற வேண்டும் என்ற புரிதலும் தொ.ப.வை மற்றவர்களிடமிருந்து உயர்த்திக் காட்டுகிறது.

திராவிடச் சிந்தனை மரபில் பாரதிதாசனை உயர்த்திக் கூறுவதும் பாரதியை ஏற்க மறுப்பதுமான போக்குத் தொ.ப. காலத்தில் இருந்தது. தொடக்கத்தில் பாரதியாரைப் பற்றிய புரிதல் தொ.ப. அவர்களுக்குப் பார்ப்பன எதிர்ப்பு என்ற எல்லையில் நின்றுவிட்டது. ஆனால் தனது ஆழ்ந்த வாசிப்பின் மூலம் இந்த நிலைபாட்டை மாற்றிக் கொண்டார். பாரதியின் ஆளுமையை உணரத் தொடங்கியதாக அவரே கூறியுள்ளார். இவ்வாறு கோட்பாட்டு முரண்பாடுகள் பலவற்றை இலகுவாகக் கடந்து சென்றவர் தொ.ப. இவரின் சிந்தனை மரபு மக்கள் மரபோடு இணைத்துப் பார்க்கும் தன்மையும் யதார்த்த இருத்தலுக்கு வழங்கும் முதன்மையும் வியக்க வைக்கின்றது.

மதமாற்ற தடைச் சட்டம், ஆடு கோழி பலியிடுதல் தடை என்ற அரசின் செயல்பாடுகளுக்கு இயல்பான தனது கருத்துகளைச் சான்றுகளோடு வெளிப்படுத்தியுள்ளார். மதம், சாதி, கோயில், வழிபாடு என்று எதுவாக இருந்தாலும் வயிறு (பசி) என்று வரும்போது மக்கள் எதையும் மாற்றிக் கொள்ளும் பண்பு கொண்டவர்கள் என யதார்த்த வாழ்வியலைக் கூறுவது தொ.ப.வின் சிறப்புகளில் ஒன்று.

இந்திய சமூக ஆய்வில் பெரும் சிக்கலாகச் சாதி உருவாக்கம் விளங்கி வருகிறது. ஒற்றைத் தன்மையான புரிதலை நோக்கிய ஆய்வில் பன்முகத்தன்மையே எஞ்சி நிற்கிறது. இதன் காரணமாகச் சாதி ஒழிப்பு சிந்தனையும் அதற்கான தீர்வும் நீண்டுகொண்டே செல்கிறது. இது குறித்த உரையாடலில் “தமிழ்ல ‘சாதி கெட்டவன்’ னு ஒரு வசவுச்சொல் உண்டு. ராஜாக்கள் எல்லோரும் சாதி கெட்டவன்தான். ஏன்ன எல்லா சாதியிலயும் பெண் எடுத்துருக்கான். ராஜராஜனும் அப்படித்தான். மனைவிமாரே நாலு பேரு” என்று தமிழ்ப் பொதுப்புத்தியில் போற்றப்படும் மன்னனைச் சாதி கெட்டவன் எனக் கூறுவதற்கு ஆய்வுத் துணிச்சல் வேண்டும் இது தொ.ப.விடம் இயல்பாகக் காணப்படுகிறது.

இவ்வாறு பண்பாடு, மதம், வழிபாடு, கல்வெட்டு, நாட்டார் வழக்கு, வரலாறு, சொல்லாராய்ச்சி, திராவிடச் சிந்தனை, கள ஆய்வு, அகழாய்வு, அரசியல் எனப் புதிய கண்ணோட்டத்தில் படிக்கப்பட வேண்டிய மனிதர் தொ.ப.

கவாஸ்கரும் கபில்தேவும்

மு. முத்துக்குமார்

பரபரத்துக் கொண்டிருந்த கடைவீதிக்கு, சற்றும் பொருந்தாமல் தூரத்தில் ஒரு வாழைமரம் தெரிந்தது. ஸ்டார் ஐஸ் பேக்டரி, ராஜேஸ்வரி ஹோட்டல், ஒரு வங்கி, பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடை, மீன் அங்காடியின் நுழைவு வாயில் என அனைத்தையும் தாண்டி தூரத்தில் தெரிந்த வாழைமரத்திற்கு அருகில் வந்திருந்தார் கோவிந்தன். சற்றுமுன் பெய்த மழையால் சேறும் சகதியுமாய் இருந்த சாலையில் நடந்த அயர்ச்சியை, வாழையிலையில் அரும்பியிருந்த மழைத்துளி சற்று குறைத்து கோவிந்தனை ஆசுவாசப்படுத்தியது..

அந்தக் கடையின் பெயர் இப்போது கோவிந்தன் மருந்துக் கடையல்ல. ‘அஜாஸ் மெடிக்கல்ஸ்’ என்று மாறியிருந்தது. “என்ன அங்கிள் இவ்வளவு தூரம்?..மருந்த சொல்லி விட்டிருந்தா நடராஜன்ட்ட கொடுத்து விட்டிருப்பேன்ல…” என்ற ஜாகீரிடம், “பரவாயில்லப்பா…” என்று மருந்து சீட்டை கொடுத்து விட்டு விசாலமான அந்த கடையின் முகப்பிலிருந்த கண்ணாடிப் பெட்டிக்கு முன்னாலிருந்த வாடிக்கையாளர் நாற்காலியில் மெல்ல அமர்ந்தார்.

ஐந்தாறு வருடங்களுக்கு முன்புவரை அக்கடையின் உரிமையாளராக இருந்த நினைவுகள் மேலெழும்பி வருவதை தவிர்க்க நினைத்தாலும், கோவிந்தனால் முடியவில்லை. அப்போதுதான் அஜாஸ் மெடிக்கலுக்கு புதிதாக வந்திருந்த மருந்துகளை சரிபார்த்து உள்ளே அடுக்கிக் கொண்டிருந்த அவர் பேரன் நடராஜன், தன் ஊதாரித்தனத்தால் இக்கடையை தன்னிடமிருந்து இழக்க வைத்த இறந்து போன தன் மகனை நினைவுக்கு கொண்டு வந்தான்.

கோவிந்தன் வாழும் தெரு தலைமுறைகளாக வெளியாட்களை சுவீகரித்துக் கொண்டதில்லை. அவர் ஃபார்மஸிஸ்டுக்கு படித்த காலத்தில் இருந்தே இத்தெரு இப்படித்தான் இருக்கிறது. எதிர் வீட்டில் இப்போதிருந்தால் 90 வயது தாண்டியிருக்கும் சீனிவாசய்யரின் மூன்றாம் தலைமுறை குடியிருக்கிறது. அவருடைய கொள்ளுப் பேரன்கள் நடராஜனுடன் தான் பள்ளி இறுதியில் படிக்கிறார்கள். இத்தெருவிலுள்ள பையன்கள் எல்லாம் கிரிக்கெட் மேல் மோகம் கொண்டு ஈடுபாட்டுடன் விளையாடுவதற்கு காரணம் சீனிவாசய்யர் குடும்பத்திற்கு விடுமுறை தோறும் வந்து போகும் அவருடைய உறவினர் ஒருவர்தான். பக்கத்து வீட்டு ஜாகீர் அவருடைய கண்டுபிடிப்புதான். இந்தியாவிற்கு முதல் உலகக் கோப்பையை கபில்தேவ் பெற்றுத் தந்திருந்த காலக்கட்டமது. எண்பதுகளின் நடு. கவாஸ்கரின் ஆட்டம் சற்று தொய்வடையத் தொடங்கிய காலகட்டமும் கூட.

“இந்தாங்க கோவிந்தன் நீங்க கேட்ட ரெண்டு லட்சம்…” என்ற ஜாகீரின் தந்தையிடம், “அபுபக்கர் பாய், இன்னொரு யோசன எனக்குத் தோணுது…” என்றார் கோவிந்தன்.

” சொல்லுங்க கோவிந்தன்…”

” என் பையனும் ஊதாரியா போய்ச் சேந்துட்டான். இனிமே என்னாலயும் இந்த மருந்துக் கடய நடத்த முடியாது. இன்னும் மேல ரெண்டு லட்சம் குடுத்துட்டு நிலத்தோட அந்தக் கடய எடுத்துக்குங்க. உங்க ரெண்டாவது பையன் ஜாகிருக்கு ஒரு தொழில் அமைஞ்ச மாதிரி இருக்கும்…நானும் கடன்காரனாகாம இருப்பேன்…” என்றார் கோவிந்தன்.

நீண்ட யோசனைக்குப் பிறகு கிரிக்கெட் விளையாட்டு தகராறில் தன் கையையும், வாழ்க்கையையும் இழந்திருந்த தன் மகனுக்கு அது உகந்ததாக இருக்கும் என்று எண்ணி ஒப்புக் கொண்டார் அபுபக்கர்.

ஜாகிரின் பந்து வீச்சு அந்த ஊரில் உள்ள கிரிக்கெட் ஆடுபவர்களிடம் மிகவும் பிரசித்தி பெற்றது. எதிரணிகளின் பேட்ஸ்மென்களுக்கு, அவனுடைய தெத்துப் பல்லும் நீண்ட தூரத்திலிருந்து ஓடிவந்து, பந்தை கையிலிருந்து விடுவிக்கும் முன் தேர்ட்மேன் திசையை கண நேரம் நோக்கும் அந்த பெரிய கண்களும் எப்போதும் கபில்தேவை ஞாபகப்படுத்தும். சீனிவாசய்யரின் அந்த உறவினர் தந்த பயிற்சியாலும், ஊக்கத்தாலும் ஒரு கிரிக்கெட் அணியை உருவாக்கி அதன் கேப்டனாகவும் இருந்தான் ஜாகிர். கல்லூரியில் தன்னை செதுக்கிக் கொள்வதைவிட தன்னுடைய ரெயின்போ கிரிக்கெட் அணியைச் செதுக்குவதில்தான் நேரம் செலவழித்தான்.

கிரிக்கெட் பிடிபட்டதுபோல் மருந்து வியாபாரம் பிடிபடவில்லை ஜாகிருக்கு. கோவிந்தன் ஆறு மாதங்களுக்கு மேலாக அவனுடன் கடையில் இருக்க வேண்டியிருந்தது.

இலையின் நுனியிலிருந்து புழு தொங்கி ஆடுவது போல் தன் இடது தோளிலிருந்து சின்னதாய் தொங்கிக் கொண்டிருந்த வெட்டப்பட்ட கையின் அடிக்கூம்பு அங்குமிங்கும் ஆட பரபரப்பாய் இருந்த ஜாகிர், “இப்ப ஓரளவுக்கு எல்லாம் புடிபடுது அங்கிள்…” என்று கோவிந்தனின் நினைவுகளை கலைத்தான்.

சாலையில் நிலைகுத்தியிருந்த பார்வையை விலக்கி, மூக்கிலிறங்கியிருந்த கண்ணாடியை சற்று மேலேற்றியவாறு, ஜாகிரின் எஞ்சியிருந்த கையை நோக்கினார் கோவிந்தன்.

“பாழாப் போன அந்த கிரிக்கெட் சண்டைல என் ஊதாரிப் பையன காப்பாத்துறேன்னு, கையத் தொலைச்சுட்டயே ஜாகிரு…” என்று கலங்கியவரிடம், “அதெல்லாம் நான் எப்பவோ கடந்தாச்சு அங்கிள். கை போயும் அண்ணன காப்பாத்த முடியாம போச்சுங்குற வருத்தந்தான் இன்னு இருக்கு…சரி இந்தாங்க உங்க மருந்து. நட்டு, தாத்தாவ விட்டுட்டு வந்துர்ரயா…”

“இல்லப்பா…நானா போயிருவேன்…” என்று மெல்ல எழும்பியவர், “நட்டு, மதியம் சாப்பாட்டுக்கு வந்துரு…” என்று கிளம்பினார். தன் மகனுடைய இடத்தில் ஜாகிர் அமர்ந்திருப்பது தன்னை பெரிதாக பாதிக்காவிட்டாலும், அவனிடம் நடராஜன் வேலை செய்வது ஏதோ ஒரு விதத்தில் அவரைப் பெரிதும் சோர்வடையச் செய்தது.

நடராஜன் அவர் செல்வதையே சற்று நோக்கி விட்டு மீண்டும் வேலைகளில் தொலைய முயன்றான். அப்பா இறப்பதற்கு முன்னாலும் தாத்தாவின் மருந்துக் கடை வருமானம்தான் அவனையும், அவன் அம்மாவையும் காத்தது. அப்பாவின் அரசாங்க சம்பளம் முழுதும் கிரிக்கெட், சீட்டு விளையாட்டு என்று விரயம்தான் ஆனது என்பார் தாத்தா. அப்பாவிற்கு பிறகு தான் அந்த சம்பளம் அவர்கள் குடும்பத்திற்கு உதவியது, அம்மாவிற்கு கொடுக்கப்பட்ட அரசாங்க வேலை வழியாக. ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் இந்த மருந்துக் கடைக்கு வந்துருவான். இங்கு வந்த முதல் கோடை விடுமுறையின்போது தாத்தா அமர்ந்திருந்த இடத்தில் இப்போது ஜாகிர் அங்கிள் இருக்கிறார். இங்கு கிடைக்கும் பணம், அவனுடைய கல்விச் செலவுகளை சமாளிக்க உதவுகிறது. அப்பா, இங்கு அமர்ந்திருந்தால் நான் இங்கு வரவேண்டியிருந்திருக்குமா? என்று அவனை எப்போதும் தொந்தரவு செய்யும் கேள்வி ஜாகிர் அங்கிளை பார்த்தவுடன் காணாமல் போய் விடுவது அவனுக்கு எப்போதும் ஆச்சரியத்தையும் விடுதலையுணர்வையும் ஒரு சேர அளிப்பது.

கவாஸ்கர் வரும் ‘ஒன்லி விமல்…’ விளம்பர ஈர்ப்பில் அந்தக் கம்பெனி சட்டையை அடுத்த வருடம் முதல் முறையா கல்லூரிக்கு போகும் போது போடவேண்டும் என்ற நினைப்பையும் ஜாகிர் அங்கிள் நிறைவேற்றுவார் என்று அதிகம் விற்பனையாகும் லோபரட் மற்றும் லாசிக்ஸ் மாத்திரைகளை எளிதில் எடுக்குமிடத்தில் அடுக்கிக் கொண்டிருந்தான்.

கடையின் இரும்பு சுருள் கதவை நடராஜன் மேலிருந்து இழுத்து பூட்டியபோது, இரவு மணி ஒன்பதைத் தொட்டிருந்தது. கடைவீதி கிட்டத்தட்ட காலியாயிருந்தது. ராஜேஸ்வரி ஹோட்டல் மட்டும் திறந்திருந்தது. அங்குதான் பெரும்பாலும் இவர்களிருவருக்கும் இரவுணவு.

“அதென்னடா, கவாஸ்கர் மேல இவ்வளவு ஈர்ப்பு…” என்ற ஜாகிரிடம், ” வீடு ஃபுல்லா அவர் போட்டாவத் தான அஙகிள், அப்பா ஒட்டி வச்சிருந்தாரு… உங்களுக்கு தெரியாதா?… அப்பா போனதுக்கப்புறம் தாத்தா எல்லாத்தயும் கிழிச்சுப் போட்டுட்டாரு…அப்பாவும் கவாஸ்கரும் இன்னமும்…”

“… ம்ம்ம்… உங்கப்பா அசாருதின் மாதிரி உயரமா இருக்குற ஒரு கவாஸ்கர்டா. இவன் பேட்ல மேக்னட் எதுவும் வச்சுருக்கானாடாம்பாரு சீனிவாசய்யரோட வீட்டுக்கு வர்ர சொந்தக்காரர். அவன் பேட்டு போகுற இடத்துக்கெல்லாம் பந்து போகும்.. அதுவும் அந்த பேக் ஃபுட்ல போய் ஃபிளிக் பண்ற ஸ்டைல பாத்து அப்படியே அசந்து போயிருவோம். அவனோட பேட், சில சமயம் அவனோட கையோன்னு தோணும்… பௌலரோட ரன்னப், கையில பந்து வச்சுருக்கிற விதம் இத எல்லாத்தயும் வச்சு பந்து எங்க விழும்ங்கறத அவனால துல்லியமா கணக்கு போடமுடியும். உங்கப்பா ஒரு கிரிக்கெட் ஜீனியஸ்டா. உங்க தாத்தா கடைசிவர இத புரிஞ்சுக்கல. சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணி வச்சிட்டாரு, அவரோட விதவை தங்கச்சி பொண்ண. கவர்மெண்ட வேலயும் வாங்கி கொடுத்துட்டாரு. ரெண்டுலயும் உங்கப்பாவால ஒட்ட முடியல…

“உங்கப்பா போனதோட என்னோட ரெயின்போ கிரிக்கெட் கிளப்பும் போயிடுச்சி… எளவு அன்னக்கு மட்டும் உங்கப்பாவுக்கு ரன் அவுட் கொடுத்துருந்தா, நார்த் ஸ்டார் கிளப்பு ஜெயிச்சுருப்பாங்க. உங்கப்பாவோட உயிரும், என்னோட கையும் மிஞ்சியிருக்கும். நம்ம ஊர் எம்எல்ஏ பேர்ல நடக்குற பிரமாண்டமான கிரிக்கெட் டோர்ணமென்ட் அது. பெரிய பெரிய ஊர்ல இருந்தெல்லாம் வந்து விளையாடுவாங்க.”

“என்னப்பா மேட்லாம் இல்லயா, டர்ப்லதான் ஆடணுமா? கிரிக்கெட் பாலா இல்ல கார்க் பாலா…” என்று ஏளனம் செய்யும் நகர அணிகளின் தொழில் முறை ஆட்டக்காரர்கள் ஒரு போட்டிக்குப் பின் ஆச்சரியமடைந்து ஜாகிரிடம் ஆடுகளம் தயாரிக்கப்பட்ட விதத்தை கேட்டறிந்து வியப்பார்கள். ஆறு மாத இடைவிடா பணியிது. ஜாகிரும், அவனுடைய ரெயின்போ கிரிக்கெட் கிளப்பும் இந்த டோர்ணமென்டில் ஆடுவது, அதை நடத்துவது, அதற்கான தயாரிப்பில் ஈடுபடுவது என்றே வருடம் முழுதுமிருப்பார்கள். படிப்பு, வீடு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் மட்டுமே.

ஒவ்வொரு முறையும் ரெயின்போ கிளப், இறுதி ஆட்டம் வரை வந்து விடும். ஆனால், கோப்பையை மட்டும் வென்றதில்லை. ஏதாவது ஒரு வெளியூர் அணிக்கே கோப்பையும் ரொக்கப் பரிசான 25001 ரூபாயும் கிடைக்கும். இவ்வளவு பெரிய தொகைக்காகவே, அந்த ஊர் எம்எல்ஏ பெயரில் இந்த டோர்ணமென்ட் நடத்தப்படுகிறது. நடராஜின் அப்பா கொல்லப்பட்ட அந்த ஆண்டும் இறுதி வரை முன்னேறியிருந்தது ஜாகிரின் ரெயின்போ கிளப்.

அந்தக் கண்மாயை போர்த்தியிருந்த இருளாடை, மெதுவாக விலக ஆரம்பித்திருந்தது. எப்போதாவது வெள்ளம் வந்தால் மட்டுமே கிட்டத்தட்ட பத்து கி.மீ சுற்றளவுள்ள முழுக்கண்மாயும் நிரம்பும். ஊரையும், கண்மாயையும் ஊடறுத்துச் சென்று கொண்டிருந்தது ரயில் தண்டவாளம். அந்த அதிகாலையிலும், இருவர் மிகப் பெரிய இரும்பு உருளையை, மெதுவாக அக்கண்மாயிலுள்ள ஆடுகளத்தின் மேல் உருட்டிக் கொண்டிருந்தார்கள். நேற்றைய ஆட்டத்தின் சுவடுகள் அந்த உருளையின் கனத்தில் மறைய, சுற்றியிருந்த பசும்புல் பரப்பால் புதுப்பொலிவு கொள்ள ஆரம்பித்தது ஆடுகளம். ஒரு ஐந்தாறு பேர், எல்லைக் கோட்டிலிருந்து ஆடுகளம் நோக்கிப் பரந்திருந்த அப்பசும் புல்பரப்பில் குனிந்து தேவையற்ற கற்களையும், சிப்பிகளையும் பொறுக்கி எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஊரின் முடிவில், இயற்கையாகவே அமைந்த இந்த கிரிக்கெட் மைதானம், மிகப் பெரிய கொடை. சாலையிலிருந்து ஏறி தண்டவாளத்தைத் தாண்டி இறங்கினால் ஒரு கி.மீ. தொலைவில் மைதானத்தின் எல்லைக் கோடு வந்து விடும்.

செயற்கையை பராமரிப்பதைவிட இயற்கையை பராமரிப்பது மிகக் கடினம். இதைச் செம்மையாகச் செய்வது, ஜாகிரும் அவனுடைய ரெயின்போ கிரிக்கெட் கிளப்பும் தான். இறுதி ஆட்டத்திற்கான ஆடுகளம் கிட்டத்தட்ட தயாராயிருந்தது. எல்லைக் கோட்டைத் தாண்டி உருட்டி நிறுத்தப்பட்டிருந்த, இரும்பு உருளை தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது. எல்லைக் கோடு முழுவதும், ‘V’ வடிவத்தில் ஆழமாக வெட்டப்பட்டு சுண்ணாம்பால் நிரப்பப்பட்டு, பல வண்ணச் சிறு கொடிகளை சீரான இடைவெளியில் ஏந்தியிருந்தது.

நார்த் ஸ்டார் கிளப்பும் உள்ளூர் அணி எனபதால், இந்த தடவையாவது வெற்றிபெற வேண்டிய அழுத்தம் ரெயின்போ கிளப்பிற்கு அதிகமாக இருந்தது. காலையின் மென்வெயில் தற்போது சுட்டெரிக்க, ஆடுகளம் இறுகி பந்துகள் இடுப்பளவு எகிற ஆரம்பித்தன. அதிலும், ஜாகிரின் அவுட் ஸ்விங்கர்கள் விசேஷமானவை. நார்த் ஸ்டாரின் விக்கெட்டுகள் சீரிய இடைவெளியில் விழுந்து கொண்டே இருந்தன. ஆட்டத்தின் கடைசி ஓவர் வரைக்கும் கூட இரண்டு சிலிப்கள் இருந்தன. முதல் ஸ்லிப் எப்போதும் நடராஜின் அப்பாவுக்கானது. பேட்ஸ்மென்களின், பேட்டைத் தவிர வேறெங்கும் நோக்காத அவன் சிலிப் கேட்சுகளை தவற விடுவதேயில்லை.

நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவரில், எட்டு விக்கெட்டுகளை இழந்து, நூற்றி எழுபத்தெட்டு ரன்கள் மட்டுமே எடுத்தது நார்த் ஸ்டார். எளிதான இலக்கை விரட்டிய ரெயின்போவினர் திணறினார்கள். ஒரு முனையில் விக்கெட்டுகளாக விழுவதை, மறுமுனையில் துவக்க ஆட்டக்காரனான நடராஜின் தந்தையால் வேதனையுடன் வேடிக்கை பார்க்கத்தான் முடிந்தது. பெரும்பாலும் அவனை எதிர்முனையில் வைத்திருக்கவே நார்த் ஸ்டார் முயற்சித்தனர். இருந்தும், அவனுடைய கவர் டிரைவ்களாலும், ஃபிளிக்குகளாலும் நூற்றைம்பதை தாண்டியிருந்தார்கள் ரெயின்போ. ஆறு ஓவர்கள் மீதம் இருந்தது, கையில் இன்னும் மூன்று விக்கெட்டுகள் இருந்தது. வழக்கம் போல், தன்னை பேட்டிங் முனையில் தக்க வைத்துக் கொள்வதற்காக அந்த ஓவரின் கடைசிப் பந்தை, சார்ட் மிட் ஆன் திசையில் நளினமாக தட்டி விட்டு விரைந்து ஓடினான். அவன் எதிர்பாராத விதமாக, சார்ட் மிட் விக்கெட் திசையில் இருந்த ஃபீல்டர் பாய்ந்து அந்த பந்தை தடுத்தெடுத்து ஸ்டம்புகளை நோக்கி வீச, என்ன செய்வதென்று அறியாமல் தடுமாறி கிரீசைத் தொடுவதற்குள் ஸ்டம்புகள் சிதறியிருந்தன.

“அது ரன் அவுட் தாண்டா…. ஆனா நாங்க ஜெயிக்கணும்னு அம்பயர் தான் அவுட் தரல… அதுக்கப்புறம் நடந்ததெல்லாம்…” என்று கலங்கிய ஜாகிரின் பெரிய கண்களில் தானும் கலங்குவதை பார்த்தான். தன் தந்தையை கடைசியாக தாங்கிப் பிடித்த மிச்சமிருக்கும் அந்தக் கையை கலக்கத்துடன் இறுக்கிப் பிடித்தவாறு ராஜேஸ்வரி ஹோட்டலில் இருந்து வெளியேறினான் நடராஜன்.

செய்வலர்: செமிகோலன்