கட்டுரை

எதற்காக எழுதுகிறேன்? – குமரன் கிருஷ்ணன்

குமரன் கிருஷ்ணன்

உயிரணுக்களால் உண்டாவது உடம்பு. நினைவணுக்களால் உருவாவது மனது. ஓயாமல் மனது உருப்பெற்றுக் கொண்டே இருக்கிறது. இந்த உருவாக்கத்தின் தொடர்வினையாக, ஒரு நிகழ்வின் நொடியை நினைவின் பிரதியாய் மனது சேகரிப்பதை நாம் அனுபவம் என்று அழைக்கலாம். ஆனால் எந்தவொரு நிகழ்வின் நொடியும் தனித்திருப்பதில்லை என்பது காலத்தின் விதி. அதன் முன்னும் பின்னுமாய் கோர்க்கப்பட்ட நிகழ்வுகளுக்குரிய‌ நொடிகளின் பிரதியை கொண்டே குறிப்பிட்ட நிகழ்வை உள்வாங்க முடியும் என்பது காலம் ஏற்படுத்திய உயிரியல் கட்டமைப்பு. ஓரறிவு துவங்கி ஆறறிவு வரை அனைத்திற்கும் இதனை பொது விதி எனக் கொள்ளலாம். இவ்விதியை கொண்டு காலம் நம் மனதை கையாளும் பாங்கு அலாதியானது. நினைப்பின்றி நிகழ்வில்லை, நிகழ்வின்றி நினைப்பில்லை என்னும் விசித்திர வளையத்திற்குள் நம்மை சுற்ற விட்டு வேடிக்கை பார்க்கும் காலத்திற்கு நாம் வைத்திருக்கும் பெயர் வாழ்க்கை. உலகில் உலவும் அனைத்து விதமான விழுமியங்களும் ‍ அது தனிமனித தத்துவ விசாரங்கள் சார்ந்ததோ, சமூகம் சார்ந்ததோ, மதம் சார்ந்ததோ…அறிவியல் சார்ந்ததோ…எப்படியிருப்பினும் இந்த விசித்திர வளையத்தில் அடங்கி விடும். இவ்விசித்திர வளையம் தரும் வியப்பினால் எழுதுகிறேன் அவ்வியப்பை பற்றி எழுதுகிறேன்.இத்தகைய வியப்பை ஊட்டும் படைப்புகளை பற்றியும் எழுதுகிறேன் அவற்றின் வாசிப்பு அனுபவங்களை சுற்றியும்  எழுதுகிறேன்.

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்று காலங்கள் இருப்பதாக நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் காலம் ஒன்றே எனத் தோன்றுகிறது. அது இறந்த காலம் தான். அதுவே, நாம் பார்த்த இறந்த காலம், பார்த்துக் கொண்டிருக்கும் இறந்த காலம், நாளை பார்க்கப் போகும் இறந்த காலம் என்று திரிகிறது…ஒரு நினைப்பிலிருந்து மற்றொரு நினைப்புக்கு மனம் நகரும் கால அளவை நிகழ் காலம் என்றும் ஒரு நினைப்பிலிருந்து மற்றொரு நினைப்பை உருவாக்கும் மனதின் விழைவை எதிர் காலம் என்றும் சொல்லலாம் இல்லையா?  காலம் என்பதே நினைப்பு தான். நினைப்பும் நினைப்பை பற்றிய நினைப்பும்…! காலம் சில சமயங்களில் நம் தோள் அணைத்து அழைத்துச் செல்கிறது. சில சமயங்களில் தரதரவென்று இழுத்துச் செல்கிறது. இரண்டும் இவ்வாழ்வின் இயல்பென்று புரியத்துவங்குகையில் காலத்தை ஒரு அற்புதமான ஆசானாய் பார்க்கும் ஆர்வம் சுரக்கிறது. அதன் விளைவாய் ஒவ்வொரு நொடியையும் கூர்ந்து பார்க்கும் நோக்கம் கிடைக்கிறது. கூர்ந்து பார்த்தல் என்பதே கூடுதல் அனுபவத்திற்கான வழி என்ற பக்குவம் பிறக்கிறது. இவ்வாறு சேர்க்கும் அனுபவத்தின் அச்சாணி நினைப்பு. நினைப்பு என்பது ஒரு விசித்திர வஸ்து. ஒரு நினைவு, அது நினைக்கப்படும் பொழுதில் என்ன பொருள் தரும் என்பது காலத்தின் கையில் இருக்கிறது. இடைப்பட்ட பொழுதுகளில் கிடைக்கும் மேற்கூறிய அனுபவத்தின் ஆழ நீளங்களின் அமைப்பைப் பொறுத்து இருக்கிறது. நினைப்பின் பரிமாணங்கள் நினைப்பை பற்றிய ஒவ்வொரு நினைப்பு தோறும் மாறிக்கொண்டே இருக்கும் விசித்திரம் நிகழ்கிறது. இத்தகைய நினைப்பு தரும் உணர்வை, அதன் விசித்திரத்தை, அதற்கு நிகரான சொற்களின் வடிவேற்றி படிம‌ப்படுத்தும் படைத்தல் அனுபவம் தரும் பரவசத்திற்காய் எழுதுகிறேன்…

காலம் நம் நினைப்புடன் உறவாடும் மாயம் தான் எத்தனை வியப்புக்குரியது? காலம் ஒரே அலகில் தான் உலகில் உலவுகிறது. ஒரு இலையின் அசைவுக்கும் ஒரு இறுதி மூச்சுக்கும் காலத்தின் அலகு ஒன்றே. ஆனால் அதைப் பார்ப்பவர் அவற்றுடன் கொண்ட நினைப்பின் பரிமாணங்களைப் பொறுத்து அந்நிகழ்வும், பின் அந்நிகழ்வு சார்ந்த நினைப்பும் கால அலகின் கணக்கில் அடர்த்திமிகு நீளம் கொண்ட நினைப்பாக மாறும் மாயம் சொல்லி அடங்குமா சொல்லில் தான் அடங்குமா? நாளும் பொழுதும் நிகழும் இம்மாயத்தை மொழியின் வழியே சேகரித்துக் கொள்ளும் தீராத ஆவலில் எழுதுகிறேன்.

“நெருப்பு என்று எழுதினால் சுட வேண்டும்” என்பார் லா.ச.ரா. அது போல் நினைப்பென்று எழுதினால் நெகிழ வேண்டும். மனதின் நெகிழ்வு உள்ளிருக்கும் மனிதத்தை உரமேற்றிக் கொண்டே இருக்கிறது. அதை வேண்டி எழுதுகிறேன். வாசிப்பவருக்கும் அத்தகைய நெகிழ்தல் நேரும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

நினைப்பு உறவுகளாலும் உணர்வுகளாலும் உண்டான கலவை. இங்கே உறவு, உணர்வு என்பதை மனிதருடன் மட்டும் தொடர்புபடுத்திக்கொள்ளாமல், நம் அகத்திற்கும் புறவெளிக்குமான உறவும் உணர்வும் என்று பொருள் கொள்க. இத்தகைய நினைப்பு காலத்துடன் உறவாடும் நிகழ்வுதானே வாழ்க்கை? இந்த உறவைப் பற்றி எழுதுகிறேன்…இந்த உறவின் உன்னதம் பற்றிய புரிதல் தரும் விசாலமான பார்வைக்காய் எழுதுகிறேன்…

காலம் நொடி தோறும் நினைப்பை பிரசவித்தபடி நகர்ந்து கொண்டே இருக்கிறது. காணும் திசையெங்கும் கடக்கும் பொழுதெங்கும் நினைப்புக்கான கருவை சுமந்தபடி திரிகிறது காலம்.  உறவையும் பிரிவையும் உட்பொருளாய் கொண்டது காலம். அதை உள்வாங்கி ஊழ்வினையாய் மாற்றுகிறது நினைப்பு. இந்த ரகசியத்தை, அதிசயத்தை, அதன் உட்பொருள் பற்றிய என் புரிதலை பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன்.

நிகழ்கால நாக்கில் நினைப்பை அள்ளி தடவுகையில் மனதில் ஊறும் சுவைதானே நம் வயது? எனவே வயதின் வார்ப்பு பற்றி எழுதுகிறேன் அதன் சாரமான அனுபவ ஈர்ப்பு பற்றி எழுதுகிறேன்.

இதுவரை சொன்ன அகம் சார்ந்த “எதற்காக?” தந்த எழுத்துக்கள்,  பிறர் வாசிக்கும் நிலையை அடையும் பொழுது, ஒரு மிக முக்கியமான “எதற்காக?” நிகழ்கிறது. இங்கும் காலமே கருவியாய்…ஆம்.ஒரு நுனியை மற்றொன்றில் கோர்த்து விடுவதில் காலம் வெகுவாய்த் தேர்ந்தது!

எனவே, இவ்வாறு, என் நினைப்பை தேக்கி வைத்த சொல்லடுக்கு ஒன்றை வாசிக்கும் ஒருவர் எதிகொள்ளும் ஒற்றைவரியின் அடியில் அவரின் நினைப்பின் நுனி ஒன்று ஒட்டிக் கொண்டிருக்கக் கூடும். அதன் பின் என் வரி அவரின் பிரதி. அவருக்கான பிரதி. நினைப்பின் பிரதி என்பது வெறும் நகலன்று. அதன் பொருளடக்கம் வாசிப்பவரின் நினைப்புக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும் பண்பு உடையது. இப்பண்பு பயில‌ வாசிக்கிறேன். இப்பண்பு பகிர எழுதுகிறேன்.

மாயக் கதவுகளுக்கு முன்…

சித்ரன் ரகுநாத்

ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும் நம் எல்லோரிடமும் இரண்டு கேள்விகள் முன் நிற்கும். 1) சென்ற ஆண்டு என்ன செய்தோம் அல்லது என்ன நடந்தது? 2) புத்தாண்டில் என்ன செய்யப்போகிறோம்?

சென்ற வருடம் நிகழ்ந்த அனுபவங்கள், சம்பவங்கள், நிகழ்வுகள், துக்கங்கள், மகிழ்ச்சிகள், ஏமாற்றங்கள், சாதனைகள், இழப்புகள், கிடைத்தது, கிடைக்காதது, நடந்தது, நடக்காதது என்று ஃப்ளாஷ்பேக்குகளில் மனது உலா வரும். அது சந்தோஷமான நிகழ்வாக இருப்பின் அதுபோல் மீண்டும் வருங்காலங்களில் தொடரவேண்டும் என்று ஆசைப்படுவதும், விரும்பத்தகாத சம்பவமாக இருப்பின் அது திரும்பவும் நிகழ்ந்துவிடக்கூடாதே என்ற பதட்டத்துடன் வரும் புதிய நாட்களை எதிர்கொள்வதுமாக ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும் சில பல கலவையான எண்ண ஓட்டங்களில்தான் நாம் இருப்போம்.

நாம் எங்காவது வெளியே கிளம்பலாம் என்று நினைக்கும் போதுதான் மேகங்கள் கவிந்து  மழைத்துளிகள் விழ ஆரம்பிக்கும். இன்றைக்கு ரசம் சாதத்துடன் சமையலை முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கும்போது விருந்தினர் வந்து நிற்பார். அவசரத் தேவைக்கு பணம் எடுக்கப் போனால் ஏ.டி.எம்மில் காசில்லை என்று வரும். ஏன் குறுக்கே போகும் ஒரு பூனைக்குட்டிகூட நமது தினத்தைத் தீர்மானிக்கக்கூடும்.

எதிர்மறையான விஷயங்கள் நம்மைச் சுற்றிப் பெருகிவிட்டன என்பதை மறுப்பதற்கில்லை. எதையாவது புலம்பிக்கொண்டிருப்பதற்கான  சந்தர்ப்பங்களும் பெருகிவிட்டன. நாம் சுவாசிக்கும் காற்று மாசுபட்டிருக்கிறது. நாம் சாப்பிடும் உணவு வேதிப்பொருள்களின் ஆதிக்கத்தால் விஷமாகிக் கொண்டிருக்கிறது. உலகமயமாகுதல், உலகம் வெப்ப மயமாகுதல் தரும் நேரடி பாதிப்புகளை நாம் ருசிக்கத் துவங்கிவிட்டோம். குடிதண்ணீரை பாட்டிலில் வாங்கிக் குடிப்பதும், வியாபாரமயமாகிவிட்ட மருத்துவமனைகளில் கட்டுக்கட்டாக பணத்துடன் டிவி பார்த்தபடி வரிசையில் காத்திருப்பதும் நமக்கு பழக ஆரம்பித்துவிட்டது. குண்டு வீசப்பட்டு நாசமான கட்டிட இடிபாடுகளுக்குள்ளிருந்து கேட்கும் குழந்தைகளின் அலறல்கள், அழுகைகள் செய்திகளாக நம்மைச் சிதறடிக்கின்றன.

நிமிர்ந்தால் குட்டுவதும், குனிந்தால் நெட்டுவதுமான மனிதர்களின் போக்கு. சுயநலக்காரர்கள் பெருகிவிட்டார்கள். அடுத்தவர் மீது யாருக்கும் அக்கறையில்லை. நம் மீது நம்மை ஆளும் அரசாங்கத்திற்கும் அக்கறையில்லை. இவையெல்லாவற்றையும் தினசரி கடந்துதான் போகிறோம். இதெல்லாம் அடுத்த ஆண்டும் இப்படியேதான் தொடரப் போகின்றன. அதில் மாற்றமில்லை. யாரும் அதை மாற்றப் போவதில்லை.

ஆனால் எல்லாவற்றிக்கும் நடுவே புத்துணர்ச்சியுடன் ஒரு புதிய தினத்தை, நமக்கான ஒரு புதிய உலகைக் கண்டடையும் உத்வேகத்துடன்தான் நாம் வாழ்க்கைப் பாதையில் பயணிக்கிறோம். எதிர் மறைகளுக்கிடையேயும் நேர் மறைகளைத் தேடிக் கண்டெடுக்கிற உத்வேகம் அது.  விரும்பாத விஷயங்களின் முன் ஒரு வெண்திரையைப் போட்டு அதற்குமுன் நமக்கு வேண்டிய, நாம் காண விரும்புகிற விஷயங்களைத் திரையிட்டுப் பார்த்து மகிழ்வதற்கான முயற்சியை நாம் எப்போதும் செய்து கொண்டேதான் இருக்கிறோம்.

புத்தாண்டில் என்ன செய்யப் போகிறோம்? நாம் வாழ்வில் எதை அடைய விரும்புகிறோம் என்கிற முனைப்பில், உறுதியில் இருக்கிறது இந்தக் கேள்விக்கான பதில். எதிர்மறையாய் என்ன வேண்டுமானாலும் நடந்துவிட்டுப் போகட்டும், கவ்விப் பிடித்திருக்கும் எந்த இருட்டிற்கும் வில்லனாக இருக்கும் ஒரு ஒளி உண்டு. தூரத்தில் எப்போதும் தெரியும் அந்த ஒளியைப் பார்த்து ஓடலாம். நடந்ததெல்லாம் நன்மைக்கே, நடக்கப்போவதும் நன்மைக்கே என்ற நம்பிக்கை வரிகளைத் தாங்கிய கண்களுக்கு மட்டுமே அந்த ஒளி தெரியும். அது மிக உயரிய மனோபாவம் சம்பந்தப்பட்டது. எல்லா நலன்களையும், வளங்களையும், நிலைத்த சிரிப்பையும், நீடித்த ஆயுளையும் தரும் ஒளி அது.

நமக்கு எது வேண்டும் என்று நாம் தீர்மானிப்போம். நம் உணர்வுகளைச் சிறுமைப்படுத்தும் விஷயங்களை சவால்களாகப் பார்க்கும், சமாளிக்கும் திறனை, உறுதியை வளர்த்துக் கொள்வோம். இடைவிடாது கற்றுக்கொள்வோம். கற்றுக்கொடுப்போம். இழந்தவைகளை மீட்டெடுப்பதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்க முயற்சி செய்வோம். நம்மால் அடுத்தவர்க்கு ஏற்பட்ட காயங்களுக்கு முடிந்தால் மருந்திடுவோம். நமக்கேற்பட்ட காயங்களை மறந்திடுவோம். திறமைகளைத் திரும்பக் கொணர்வோம்.

நாம் உருவாக்கிய, நம்மை உருவாக்கிய சமூகத்திற்கு நம்மாலான துரும்பைக் கிள்ளிப்போடுவோம். மனோபாவமே வாழ்வில் எல்லாம் என்பதை தாரக மந்திரமாக்கிக் கொள்வோம். எதுவும் அடைய முடியா உயரமல்ல என்பதை எப்போதும் நினைவு கொள்வோம். செவ்வகக் கருவித் திரைகள் மூலம் மனிதர்களைத் தேடாமல் நேரில் சென்று கைகுலுக்க முயற்சி செய்வோம். நம் வாழ்வை எந்த விதத்திலாவது அர்த்தப்படுத்திவிட முடியாதா என்ற கேள்வியை புத்தாண்டில் புதிதாய் முன்வைப்போம். அதற்கான பதிலை மித மிஞ்சிய நம்பிக்கையுடன் கண்டறிய முயற்சி செய்வோம்.

நம்பிக்கைகளைக் கொண்டு நமக்கான உலகத்தை இந்தப் புத்தாண்டில் நிர்மாணிக்க நினைப்போம். நமது நம்பிக்கைகள் நமக்கானவை. அவை உறுதியானதாக இருக்கட்டும். இந்தப் புது வருடத்தில் திறக்கப்படாத மாயக் கதவுகளையும் அது தட்டித் திறக்கட்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

கடல்

சத்யராஜ்குமார்

img_3605

போன வருஷம் இந்நேரம் ஃப்ளோரிடாவில் இருந்தேன். கீ வெஸ்ட் என்ற இடம். இது அமெரிக்காவின் ராமேஸ்வரம். அதாவது தென் கோடி முனை. படு அழகான கடல் பிரதேசம். கேளிக்கை விடுதிகளும் உணவகங்களுமாலான நகரம். இரவு நேரம் பகல் போல உயிர் பெற்றியங்கும். அங்கே மைல் ஜீரோ என்ற இடத்திலிருந்து ஜஸ்ட் தொண்ணூறு மைல் தொலைவில் உள்ளது க்யூபா.

அந்த தீபகற்பத்தைச் சுற்றிச் சுற்றிக் கடல் நீர். எங்கே திரும்பினாலும் அலைகளும், தொடுவானமும்.

ஸ்டீம் போட் வாடகைக்குக் கிடைக்கும். சற்றே பெரிய படகுகளை ஓட்டிச் செல்ல கேப்டனோடு புக் செய்யலாம். கடலில் போட்டிங் போவதும், நடுக்கடலில் ஆழம் குறைவான பகுதிகளைக் கண்டறிந்து படகை நங்கூரமிட்டு நிறுத்தி கீழே இறங்கி நீரில் விளையாடுவதும் த்ரில்லிங் அனுபவமாயிருக்கும்.

பங்கீ ஜம்ப், ரோலர் கோஸ்டர் போல எல்லாம் சாகசம் போலத் தெரியாவிட்டாலும் எல்லா த்ரில்லிங்குமே எந்த விபரீதமும் நிகழாத வரைக்கும் மனம் குதூகலித்து மகிழும்.

நாங்கள் குழந்தைகளையும் சேர்த்து கிட்டத்தட்ட பதினைந்து பேர் இருந்தோம். ஆகவே கேப்டனோடு ஒரு பெரிய படகை புக் செய்ய விரும்பினோம். முந்தைய இரவு சில நிறுவனங்களைத் தொடர்பு கொண்ட போது – மறுநாள் வானிலை சரியில்லை என்பதால் போட் வாடகைக்கு விடப் போவதில்லை என்று மறுத்து விட்டார்கள்.

மதியத்துக்கு மேல் வானிலை நன்றாக இருப்பதாகப்பட்டதால் டைரக்டரி பார்த்து ஒவ்வொரு நிறுவனமாய் முயற்சி செய்து கொண்டே இருந்தோம். எல்லோரும் கிளிப்பிள்ளை போல ஒருவர் சொன்னதையே மற்றவரும் சொன்னார்கள். தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்யனாய் கடைசியில் ஒரு நிறுவனத்தில் விசைப் படகு புக் பண்ணி விட்டோம். எல்லோரும் சொல்வது போல நாளை வானிலை கொஞ்சம் சரியில்லைதான். ஆனால் பதினோரு மணிக்கு மேல் கடலில் செல்வதாயிருந்தால் கொஞ்சம் நிலைமை சரியாயிருக்கும் என்று சொல்லி படகை புக் செய்து தந்தார்கள்.

எங்களுக்கு அப்பாடா என்றிருந்தது. எங்கே இவ்வளவு தூரம் வந்து கடலில் போட்டிங் செல்லாமல் திரும்ப வேண்டியிருக்குமோ என்ற கவலை அகன்று ஹோட்டலில் நிம்மதியாகத் தூங்கினோம்.

மறுநாள் உற்சாகமாய்க் கிளம்பிக் கொண்டிருக்கும்போது படகுக் கம்பெனியிலிருந்து போன் வந்தது. வானிலை சரி இல்லாததால் கேப்டன் வர மறுத்து விட்டார் என்று சொன்னார்கள். எங்களுக்கு ரொம்ப ஏமாற்றமாயிருந்தது. எங்கள் ஏமாற்றத்தைப் புரிந்து கொண்டவர்களாக மேலும் சொன்னார்கள். கேப்டன்தான் வர மறுத்து விட்டார். நீங்களே போட் ஓட்டிக் கொண்டு செல்வதாக இருந்தால் படகை வாடகைக்கு விடுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்றார்கள்.

படகுச் சவாரி செய்து நடுக்கடலில் நங்கூரமிட்டு விளையாடி விட்டு வராமல் எங்களுக்கு ஜென்ம சாபல்யம் கிடைக்காது போலிருந்தது. நாங்களே படகை ஓட்டிக் கொள்கிறோம் என்று சொல்லி விட்டோம். எங்களில் ஒருவர் முன்னர் அந்தப் பகுதியில் வசித்தவர். வாரா வாரம் மோட்டார் படகுச் சவாரி செய்வது அவர் வழக்கம். ஆகவே அவர் இருக்க பயமேன்.

சுமார் பதினொண்ணேமுக்காலுக்கு அங்கே போய் விட்டோம். கடற்கரையை ஒட்டிய ஒரு ஹோட்டலுக்குப் பின்னால் இருந்தது அந்த போட் கம்பெனி. முதலில் எங்கள் எல்லாரிடமும் ஒரு படிவத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள். அதாவது கம்பெனி சார்பாக நியமிக்கப்பட்டிருந்த அந்த அழகான பெண் சிப்பந்தி ப்ளூ பெர்ரி குரலால் படிவத்தில் எழுதியிருந்ததை விளக்கி கையெழுத்து வாங்கிக் கொண்டாள்.

எங்கள் சுய புத்தியின் பேரில், சொந்தப் பொறுப்பில் இந்தப் படகுச் சவாரி செய்கிறோம். இதனால் ஏற்படும் உடமை இழப்பு முதல் உயிர் இழப்பு வரை எதற்குமே கம்பேனி பொறுப்பேற்காது என்பதே அந்தப் படிவத்தின் சாராம்சம். குழந்தைகளுக்காக பெற்றோர் கையெழுத்திட்டோம்.

ஒரு கேளிக்கை மனநிலையில் இதெல்லாம் மனதில் ஒட்டுவதில்லை. நாங்கள் பாட்டுக்கு மென்பொருள் தரவிறக்கும் முன்பு அக்ரீ அக்ரீ என்று குத்துவோமே அப்படி கையெழுத்தைப் போட்டுத் தள்ளிக் கொண்டிருந்தோம்.

அந்தப் பெண் ஆளுக்கொரு லைஃப் ஜாக்கெட் எடுத்துக் கொடுத்தாள். நானும், சிலரும் நீச்சல் தெரியும் என்று அதை வாங்க மறுத்து விட்டோம். அவள் எல்லா ஜாக்கெட்டையும் ஒரு ஓரமாய்ப் போட்டு விட்டு – உங்கள் இஷ்டம், வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டுப் போய் விட்டாள். அவள்தான் ஏற்கெனவே எங்களிடம் எகையெழுத்து வாங்கிக் கொண்டு விட்டாளே, இனி நாங்கள் எக்கேடு கெட்டாலும் அவளுக்கு எந்தக் கவலையும் இல்லை.

img_1438

அந்த யமஹா விசைப் படகை கொண்டு வந்து நிறுத்திய ஆசாமி ஒரு ட்ரையல் ரன் போய் எங்களில் ஓரிருவருக்கு பயிற்சி தருவதாகச் சொன்னான். எஞ்சினை ஆன் செய்வது, ஆஃப் செய்வது, பொருட்களை எங்கே வைப்பது. போன்ற பல அடிப்படை விஷயங்களைச் சொல்லிக் கொடுத்து விட்டு – “இந்த இடத்தைப் பார்த்து வெச்சுக்கங்க. சாயந்தரம் ஆறு மணிக்கு திருப்பிக் கொடுத்தால் போதும். இட்ஸ் ஆல் யுவர்ஸ்” என்றான்.

தண்ணீரில் குலுங்கும் போட்டில் பேலன்ஸ் பண்ணி ஏறி அமர சில பெண்களும், குழந்தைகளும் தடுமாறினார்கள்.

“வானிலை மோசம் என்றார்களே, இப்போது பரவாயில்லையா?” எனக்கு அவனிடம் கேட்கத் தோன்றியது.

“மழை இனி இல்லை. ஆனால் காற்று அதிகம்.” – இடது புறம் கை காண்பித்தான். “இந்தப் பக்கம் போக வேண்டாம்.”

ஃப்ளோரிடாவில் பழம் தின்று கொட்டை போட்டவரான எங்கள் ஆள் இந்தப் பக்கம் போனால்தான் தாழ்வான பகுதி வரும், அங்கே படகை நிறுத்தினால் கீழே இறங்கி விளையாட முடியும், குழந்தைகள் மனமகிழ்வார்கள் என்றார்.

சினிமா பட வில்லன்கள் போல் நடுக்கடலில் அருந்த பியர், பீட்ஸா எல்லாமும் கூட வாங்கி அடுக்கியாயிற்று.

படகு என்பது வெறும் பலகை. பலகையின் ஒரு முனையில் எஞ்சின் மாட்டியிருக்கிறது. இரண்டு பென்ச்சுகள் பொருத்தப்பட்டுள்ளன. அவ்வளவுதான். யமஹா மோட்டார் ஸ்டார்ட் ஆனது. அப்போதுதான் கவனித்தேன், நாங்கள் சிலர் லைஃப் ஜாக்கெட் வேண்டாம் என்று சொன்னதைப் பார்த்தோ என்னவோ யாருமே லைஃப் ஜாக்கெட் வாங்கிக் கொள்ளவில்லை. குழந்தைகள் உட்பட. அவர்களில் பலருக்கு நீச்சல் தெரியாது.

படகு கொஞ்ச தூரம் போனதும் ஒரு பெரிய அலை தண்ணீரை வாரியிறைத்து படகில் நுழைந்து வழிந்து ஓடியது. பழம் தின்றவர் அப்படித்தான் இருக்கும் என்றார். ஏதோ  ரோலர் கோஸ்டர் ரைடு போல எண்ணி ஒவ்வொரு முறை அலை வந்து படகு முழுக்கத் தண்ணீரை இறைக்கும்போதும் ஓ வென கத்தி மகிழ்ந்தார்கள்.

நாங்கள் புறப்பட்ட இடம் புள்ளியாகி மறைந்து விட்டது. நாலாபுறமும் அசைந்தாடும் கன்னங்கரேல் தண்ணீர் தவிர வேறொன்றும் தெரியவில்லை.

போகப் போக அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் பெரிசு பெரிசாக வேக வேகமாக அலைகள் வந்து தூக்கித் தூக்கிப் போட ஆரம்பித்தன. படகின் ஆட்டம் ரொம்ப ஜாஸ்தியானது. இன்னொரு பேரலையில் சிலரின் செருப்புகள் கழண்டு  கடலோடு கலந்தன. பெட்டியில் வைத்திருந்த பீட்ஸா எல்லாம் நனைந்து நமுத்துப்போன அப்பளம் போலானது. குழந்தைகள் வீறிட்டழ ஆரம்பித்தார்கள்.

இதைத்தான் வானிலை சரியில்லை என்று சொன்னார்களா? இதனால்தான் படகுக் கம்பெனிகள் பலர் வாடகைக்கு விட மறுத்தார்களா?

எல்லோர் முகமும்  சற்றே வெளிறத் துவங்கியது. பருமனான நபர்களை இடம் மாறி அமரச் சொல்லி ஜோக் அடித்துப் பார்த்தார் ஒரு நண்பர். யாருக்கும் சிரிப்பு வரவில்லை.

அதே நேரம் அடித்த இன்னொரு மிகப் பெரிய அலை படகை ஏறக்குறைய புரட்டிப் போட்டது. ஒருபக்கமாய் சரிந்து ஆட்களை தூக்கி வீசியது. ஒருவரை ஒருவர் இறுக்கமாய்ப் பற்றிக் கொண்டார்கள். அவ்வளவுதான் கவிழ்ந்தோம் என்று நினைத்தேன். சற்று நேரம் மிதக்கும் அளவுக்கு எனக்கு நீச்சல் தெரியும். ஆனால் லைஃப் ஜாக்கெட் அணியாத நீச்சல் தெரியாத பலரை எப்படிக் காப்பாற்றுவது? சுறா மீன்கள் இருக்குமா? அந்த பய கணத்திலும் பல்வேறு யோசனைகள்.

ஆனால் படகை ஓட்டும் பழம் தின்று கொட்டை போட்ட நண்பர் கொஞ்சமும் கலவரம் அடையாமல் அல்லது கலவரத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் லாகவமாக அந்தப் பெரிய அலையைக் கையாண்டு கவிழ இருந்த படகை நேராக்கி விட்டார்.

“இன்னும் கொஞ்ச தூரம் போனா அலைகள் அடங்கிரும். அந்த இடம் ரொம்ப நல்லா இருக்கும்.” என்றார்.

“போதும். திரும்பிப் போயிடலாம்.” என்று எல்லோரும் சத்தம் போட ஆரம்பித்தனர். அலைகளின் கோரத் தாண்டவத்துடன் போராடி படகைத் திருப்புவதே பெரும்பாடாக இருந்தது. ஒரு வழியாய்த் திருப்பி திக்கு திசையை உணர்ந்து புறப்பட்ட இடத்துக்கு வந்து சேர்ந்த பின்புதான் பலருக்கு உயிரே வந்தது.

ஏற்கெனவே எழுதி வாங்கிக் கொண்ட படகுக் கம்பெனி பேரழகி பேயறைந்தது போலிருந்த எங்களைப் பற்றிய எந்தப் பிரக்ஞையுமின்றி – “என்ன போட்ல சீட்டெல்லாம் கழண்டிருக்கு?” என்றாள்.

இதைப் போன்ற கட்டுரைகள் எழுதுவதற்காகவாவது முட்டாள்த்தனமான முடிவுகளை சில சமயம் எடுக்க வேண்டும்.

ஈரம் நிரந்தரம் – வண்ணதாசன் முன்னுரை

தேர்வு மற்றும் தட்டச்சு உதவி – சிவா கிருஷ்ணமூர்த்தி

(நவீன தமிழிலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளுள் ஒருவரான திரு. வண்ணதாசன் அவர்களுக்கு 2016 வருட சாகித்ய அகாதெமி மற்றும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் ‘விஷ்ணுபுரம் விருது’ம் வழங்கப்படும் இந்த தருணத்தில், அவரது பல முக்கிய எழுத்துகளை நினைவுபடுத்திக் கொள்ளும் நோக்கத்திலும், அவருக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்தை தெரிவிக்கும் விதத்திலும் ‘நடுகை’ என்ற தொகுப்பிற்கு அவர் எழுதிய முன்னுரையை வெளியிடுவதில் பதாகை பெருமகிழ்வு கொள்கிறது.)

oOo

ஈரம் நிரந்தரம்
(நன்றி அகரம் பதிப்பகம்)

தண்டவாளங்களும் மின்சார ரயில் பயணங்களும் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாகிவிட்ட நிலையில் இதை எழுத ஆரம்பிக்கிறேன். எதிர்பார்த்ததைவிடக் குறைந்த நெரிசல் உடைய பயணங்கள்தான். நெரிசல்களை ஊடுறுவிச் செல்கிற மனம் இன்னும் வரவில்லை. அடுத்த வண்டி, அடுத்த வண்டி என்று இந்த வண்டித் தொங்கல்களை நகர அனுமதித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே ஒருநாள் ‘வெண்டார்’ வண்டியில் ஏறிய போது, சேத்துபட்டிலோ, எழும்பூரிலோ பிணம் ஒன்றை ஏற்றினார்கள். விபத்துப் பிணம். முகம் நசுங்கி இருந்திருக்கலாம். இடுப்புத் துணி விலகிக் கிடக்க, இறந்த உடம்பின் திறந்த பெருந்தொடையில் நிறையப் புண்கள். பிணந் தூக்கியவர்கள் சிரித்துக்கொண்டு ஒருவர் மேல் ஒருவர் பீடிகளை எறிந்து கொண்டார்கள். பத்திருபது பீடிகள் பிணத்தின் மேலும் அருகிலும் சிதறிக் கிடந்தன.

இன்னொரு தினம் காத்திருக்க வேண்டிய நிலை. வண்டி வருகிற திசையைப் பார்த்துக்கொண்டே, சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தேன். என் முகத்தைப் பாராமலே, பத்திரிக்கையை பார்த்தபடியே உடம்பு சற்று நகர்ந்து கொண்டது. பத்திரிக்கைப் பார்வையின் தீவிரத்தை ஆசுவாசப்படுத்த அவ்வப்போது வேர்க்கடலை கொறித்துக் கொண்டது. தற்செயலாக இடதுபுறம் திரும்புகிறேன். யாரோ படுத்துக் கிடப்பது போல் இருந்தது.

சரியாகப்பார்த்தால் இன்னொரு பிணம். பிணத்தை மூடி, மேலேயே ஒரு மஞ்சள் பையையும் வைத்திருந்தார்கள். அந்த துணிப்பை கொடுத்த அதிர்ச்சி அதிகம். இறந்து போனவர் நிச்சயம் எங்கள் ஊர்க்காரர் என்று தோன்றிவிட்டது. அதுவும் எனக்கு இரண்டாம் வகுப்பு சொல்லிக்கொடுத்த ஒரு ஆசிரியர் என்று தோன்றிவிட்டது. ஏற்கனவே இறந்து போய்விட்ட அவர், மறுபடி இப்படி மின்சார ரயிலில் அடிபட்டு கிடப்பார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். முகத்தை விலக்கிப் பார்க்க முடியவில்லை. என்னால் முடிந்தது எல்லாம், இதையெல்லாம் மறந்து, இதற்கெல்லாம் சகஜமாகி, பத்திரிக்கை படிக்காமல் இருப்பது, வேர்க்கடலை கொறிக்காமல் இருப்பது மட்டும்தான்.

பிணங்களுடன் பயணம் செய்வது போல் பூக்களுடனும் பயணம் உண்டு. சனிக்கிழமை பிற்பகல்களில் கோட்டை நிலையத்தில் பூ மூட்டைகளுடன் ஏறுவார்கள். ஏறி இறங்குகிற பாதையில் உட்கார்ந்து கொள்வார்கள். அங்கேயே நார் கிழிப்பார்கள். தொடுக்க ஆரம்பிப்பார்கள். வாய் பேச முடியாத ஒரு பெண், பூக்கட்டிக்கொண்டே, அவளுடைய பூக்காரச் சினேகிதனோடு சைகைகளில் ‘பேசிக்’ கொண்டும், பேச்சை விட அதிகம் சிரித்துக்கொண்டும் இருந்த பயணத்தின் பாதி வழியில் நான் இறங்க வேண்டியது தவிர்க்க முடியாது போயிற்று.

எல்லா ஊரையும் போல இங்கேயும் கண் தெரியாத இசைஞர்கள் இருக்கிறார்கள். புல்லாங்குழல் வாசிப்புக்கும், பார்வைக் குறைவுக்கும் சமன்பாடுகள் உண்டோ என்று மீண்டும் யோசிக்க வைக்கிறது போல் அருமையாக வாசிக்கிறார்கள். பழைய பாடல்கள் அமிர்தமாக இருக்கின்றன. ‘தென்றல் உறங்கிய போதும்’ என்று துவங்கி நீல இரவுக்கும் நிலவுக்கும் தாவுகிறது பாடல். வண்டி இதற்கு சம்பந்தமே இல்லாத அடையாறு சாக்கடைப் பாலத்தைத் தாண்டிக் கொண்டிருக்கும். நுங்கம்பாக்கம் இடுகாட்டுப் புகையின் நிணம் பரவும். நிண வாடையில் நான் என்றென்றோ கலந்து கொண்ட ஈமச்சடங்குகளும், தோள் கொடுத்த இறுதி ஊர்வலங்களும் விரியும். உதிர்த்து உதிர்த்து வீசிய ரோஜாப்பூக்களின் பாதையில், நண்பனின் உடல் அசைந்தசைந்து நகரும். குளிப்பாட்டி திருநீறு பூசப்பட்ட ஏழு வயது, ஐந்து வயது சிறுவர்கள் தூக்கக் கலக்கத்துடன் மைய வாடியில் தாய்மாமா மடியில் உட்கார்ந்திருப்பார்கள்.

இப்படியே, கதை எழுதினாலும், கவிதை எழுதினாலும், கடிதம் எழுதினாலும் நேற்று வரை நிகழ்ந்ததையே திருப்பித் திருப்பி நினைக்கவும் பகிர்ந்து கொள்ளவும் தோன்றுகிறது. நகரச் சந்தடி நிறைந்த, இந்த தனித்த, இரண்டாவது தளத்தில் இருந்து கொண்டு யாருடன் பேச, யாருடன் வாழ என்று தெரியவில்லை. எதிரே இருக்கிற அடர்ந்த மாமரங்களை மட்டும் நம்பிக்கொண்டே என் காலைகள் துவங்குகின்றன. ஒவ்வொரு நாள் காலையிலும், இந்த வீட்டுச் சொந்தக்காரரின் தாயாரான அந்த எண்பத்து நான்கு வயது பெரிய மனுஷி, அந்த மாமரம் வரை போய், தன் கூனல் முதுகும் கைத்தடியுமாக, உதிர்ந்து கிடக்கிற மாம்பிஞ்சுகளைப் பொறுக்குகிற நேரம் எனக்கு முக்கியமானது. மழையும் காற்றுமாக இருந்த ஒரு அதிகாலையில், ஒரு பச்சை நூல் சேலையுடன் அந்த முதிர்ந்த உடல் குனிந்து குனிந்து நடமாடிக் கொண்டதிலிருந்து, நான் இந்த நகரத்தின் நூல்கண்டுச் சிக்கல்களை அவிழ்த்துக் கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

அடிக்கடி நினைவு பிறழ்ந்துவிட்ட நிலையில், தன் மகன் வீட்டுக்கதவு என்றும், தன் மகள் வீட்டுக் கதவு என்றும் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டு அந்த பெரிய மனுஷி நிற்கிற நிலையும் என்னுடைய நிலையும் வேறு வேறு அல்ல என்று தோன்றுகிறது. நேர்த்தியான இசை எழுப்புகிற அழைப்பு மணியைப் புறக்கணித்துவிட்டு, நானும் என் வீட்டு மரக்கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கத் தடையில்லை. அகல விரித்த விரல்களும், கனத்த உறுதியான மரப்பலகைகளும் அதிர்ந்து அதிர்ந்து எங்கெங்கோ இருக்கிற மனிதர்களையும் எங்கெங்கோ மறைந்த வனங்களையும் கூப்பிடுகிற குரலை, ஒரு ஒற்றை விரல் அழுத்த அழைப்பு மணியில் இழந்துவிட்டது எவ்வளவு பெரிய விலை.

என் தாத்தாவைப் போலத் தச்சு வேலை அறிந்தவன் இல்லை எனினும் நான் உளிகளைத் தீட்டிக்கொடுத்த சில தினங்கள், ‘ஆக்கர்’ என்ற பட்டப் பெயர் உள்ள ஒரு இளைய தச்சனுடனும், அவரது மூத்த தச்சருடனும் நான் கொண்டிருந்த உறவுகள் மிகவும் உயர்ந்தவை. இழைத்த மரச்சுருள்கள் அடங்கிய சாக்குகளைத் துளாவித் துளாவி எவ்வளவு தடவை முகர்ந்திருக்கிறேன். வீட்டில் வந்து யாராவது விறகு கீறும் போது எனக்கு விறகுகளின் வாசனையை அறிமுகப்படுத்திய காற்று இப்போது எங்கு போயிற்று? சம்மட்டியும் ஆப்பும் கோடாரியும் வியர்வையும் அதிர்ந்து அதிர்ந்து நகர்கிற மண்ணும் விலகி விலகி எந்த வெளியில் கலந்தன?

நான் இப்படியான வாசனைகளுடனும், தோற்றங்களுடனும், அவற்றுடன் சம்பந்தப்பட்ட இடங்களுடனும் மனிதர்களுடனும்தானே பேசவும், எழுதவும், இருக்கவும், சிரிக்கவும், கலங்கவும் முடியும். அவைகளைத்தானே நானும் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு அடுப்புக் கட்டி மேல் பூசப்படுகின்ற குருவமண் வாசனை தெரியுமெனில், ஊர்க்காட்டிலோ, காருகுறிச்சியிலோ குழைக்கிற வேளாரின் விரலிடுக்குகளில் பிதுங்கி வழிகிற செம்மண் வாசனை தெரியும் எனில், அதைப் பற்றியும் யாரிடமேனும் சொல்ல எனக்கு அனுமதி உண்டுதானே.

வாழ்க்கை எல்லாவற்றையும் அனுமதிக்கத்தானே செய்கிறது. எந்த அத்துமீறல்களுக்கும் இயற்கையின் கதியில் முன்னடையாளம் இருக்கிறதா என்ன? இவ்வளவு பெரிய நகரத்துத் தோட்டங்களில், எந்த அபாயமும் இன்றித் தன்போக்கில் கீரிப்பிள்ளைகள் நடமாடிக்கொண்டுதானே இருக்கின்றன?

நான் கீரிப்பிள்ளையா, அணில் பிள்ளையா, வீட்டு மிருகமா? தெரியாது. நான் புல்லா, முருங்கை மரமா, சோளக் கதிரா, சோற்றுக் கற்றாழையா, வரவேற்பறைத் தாவரமா? தெரியாது.

நான் பூவெனில், எனக்கு மணமுண்டா, மணமில்லாத பூவா? தெரியாது.

நான் தாவரமாகவும், மிருகமாகவும் மனிதனாகவும் இந்த வாழ்வுக்குரிய அடிப்படையான உயிருடன் இருக்கிறேன். என் உயிரிலும் உயிர்ப்பிலும் மட்டுமல்ல, எல்லோருடையதிலும் அக்கறை கொண்டிருக்கிறேன்.

அப்படி அக்கறை கொண்டிருப்பதால்தான், ‘நடுகை’ சிறுகதையில் வருகிற கிழவரை என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.

‘ஒண்ணைப் பிடுங்கினால் ஒண்ணை நடணும் அல்லவா?’ என்ற குரலைப் பதிவு செய்ய முடிகிறது.

ஒருவர் என்னைப் பிடுங்கட்டும். ஒருவர் என்னை நடட்டும்.

ஒருவர் மணமற்றது என்று வீசட்டும். இன்னொருவர் மணமுள்ளது என்று சூடட்டும்.

ஒருவர் தன் கைவிரல்களை உருவிக்கொள்ளட்டும். பிறிதொருவர் வந்து என் விரல்களைப் பற்றிக் கொள்ளட்டும்.

யாராவது எனக்கிருப்பார்கள் என்றும், யாருக்காகவோ நான் இருக்கிறேன் என்றும் நம்பி, எல்லார்க்கும் அன்புடனே எழுதிக் கொண்டிருக்கவே நான் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறேன்.

இந்த மின்சார வண்டித் தடங்களுக்கு மத்தியிலும், எங்கோ என் தாமிரபரணி ஓடுவதை நான் அறிந்தே இருக்கிறேன். ஈரம் நிரந்தரம் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
எஸ்.கல்யாணசுந்தரம்
15.9.96 – ராஜூ நாயக்கன் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை.

(நடுகை, 1996, முன்னுரை)

ஜேகே.வின் ‘பொண்டிங்’- கதை சொல்லும் விளையாட்டு

பீட்டர் பொங்கல்

குழந்தைகள் கையில் ஒரு புதுப்பொருள் கிடைத்தால் அதை எல்லா இடங்களிலும் பொருத்தி விளையாடுகின்றன- ஸ்க்ரூ டிரைவர் இருந்தால் எல்லாவற்றையும் கழற்றிப் போடப் பார்த்தல், பசை இருந்தால் எதையெல்லாம் ஒட்டி வைக்கலாம் என்று தேடுதல், தீப்பெட்டி இருந்தால் எதற்கெல்லாம் தீ வைக்கலாம் என்று யோசித்தல் – நாம் வளர்ந்து, நமக்கு பொறுப்பு வந்து விட்டால் மட்டும் இது பெரிய அளவில் மாறுவதில்லை. எப்போதும் நாம் கைவசம் உள்ள கருவிகளைக் கொண்டே இவ்வுலகைப் புரிந்து கொள்கிறோம், அவ்வாறு புரிந்து கொள்ளும்போதே உலகின் இயல்பை நம் மனதில் திருத்தி வடிவமைக்கவும் செய்கிறோம். இதில், பொறுப்புடன் கூடவே வெற்றியும் அதனால் ஏற்படும் தன்னம்பிக்கையும் வாய்த்து விட்டால், நாழியே  நம் கருவி என்றாலும் அதைக் கொண்டு உலகளந்து விடலாம் என்ற உறுதியான நம்பிக்கை வந்து விடுகிறது. ஆற்றலும் வெற்றியும் நாம் சரியாக இருப்பதற்கான அத்தாட்சிகள் என்பதால் அதை வேறு பலரும் ஏற்கப் போய் நம் நாழி ஒரு அலகும் ஆகிறது. ஆனால், யானையைப் போல் உலகும் தடவிப் பார்க்கும் கரங்களுக்கும் புறத்தகவல்களைத் தொகுத்து அதற்கொரு உருவம் அளிக்க உதவும் கருவிகளாகிய கருத்துச் சட்டகங்களுக்கும் அப்பால் தன் போக்கில் போகிறது.

ஆங்கிலத்தில் லிடரேச்சர் என்பதை நாம் இலக்கியம் என்கிறோம். ஹை-லிட், லோ-லிட் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்த காலம்கூட இப்போது போய் விட்டது. எழுதப்படும் எல்லாவற்றையும் லிடரேச்சர் என்று சொல்ல ஆரம்பித்து, திரைப்படங்கள் உட்பட நம் விசாரணைக்குரிய பிரதி நிலையை அடையக்கூடியவை எல்லாம் லிடரேச்சர் என்ற இடத்தில் வந்து நிற்கிறோம். அதற்காக எல்லாம் ஒரே அளவில் சம மதிப்பு கொண்ட இலக்கியம் ஆவதில்லை – புனைவுத்தன்மை, வடிவத்துக்கு ஏற்ற மொழி கொண்டிருத்தல், பயன்பாட்டு நோக்கமின்மை, கற்பனையைத் தூண்டுதல் போன்ற விஷயங்கள் ஒரு படைப்பை இலக்கியம் என்று பாராட்டத்தக்க இடத்துக்கு அருகில் கொண்டு செல்கின்றன.

மொழி பல திசைகளில் விரியக்கூடியது, பல்பொருள் அளிக்கக்கூடியது. குறிப்பிட்ட ஒரு தொடர் வரிசையில் முன்னும் பின்னும் வரக்கூடிய வாக்கியங்களைக் கொண்டே எந்த ஒரு வாக்கியமும் அதன் பொருள் இன்னது என்று வரையறை செய்யப்படக்கூடியது. அப்படியும் அதன் பொருள் பல கற்பனைகளுக்கு இடம் தரலாம். மொழியின் இத்தன்மையை அழகியலாய்க் கொள்வதாலேயே இலக்கியம் என்பது சுட்டுதல் என்று பொருள் கொண்டு, ஒரு படைப்பு எதைச் சுட்டுகிறது, தான் சுட்டும் பொருளைத் தன்னுள் எவ்வளவு கொண்டிருக்கிறது, எவ்வகையில் இச்சுட்டல் நிகழ்கிறது என்று பலவாறு பேசுகிறோம். ஒரு படைப்பு தான் நேரடியாய்ச் சொல்வதற்கு முற்றிலும் முரணான பொருள் தரலாம், அல்லது நேரடியான பொருள் ஒன்று மறைபொருள் ஒன்று என்று இருவேறு வகைகளில் பொருள்படலாம், படைப்பில் உள்ளதன் ஒரு பகுதியை மறைத்து அது சுட்டுவதாய் நாம் கொள்ளும் பொருளை, சொன்னது பாதி சொல்லாதது பாதி என்று அதிலுள்ள இடைவெளியில் நிரப்பும் சாத்தியம் கொண்டிருக்கலாம்.

இது எதுவும் நாம் அறியாதது அல்ல. ஒரு படைப்பு கற்பனைக்கு இடம் கொடுக்காதபோது, அதன் வாசிப்பனுபவத்தில் அகத்தூண்டுதல் நிகழாதபோது, தட்டையான மொழி, தட்டையான வடிவம் என்று அது நிராகரிக்கப்படுகிறது. புனைவென்றால், திரைக்குப்பின் உள்ள நிழலாட்டத்தின் சாயல் அதில் வெளிப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நிழல், சொல்லப்படும் விஷயத்துக்குப் பின்னுள்ள சொல்லப்படாத விஷயத்தின் சுட்டல், புனைவுக்கு, ஏன் மொழிக்கே, ஒரு கூடுதல் பரிமாணம் அளிக்கிறது. இது தொடர்பாகவே இலக்கியம் குறித்த விவாதங்கள் நிகழ்கின்றன.

இந்த அழகியலோடு அறம் சேரும்போது ஒரு சிறிய நுண்மையாக்கம் நிகழ்ந்து தீவிர நிலைப்பாடுகள் தோன்றுகின்றன. எதை எழுதலாம், எதை எழுதக்கூடாது, எது மதிப்பு கொண்டது, எது மதிப்பற்றது என்ற விவாதங்களில் கதைசொல்லலின் விளையாட்டுத்தனம் அடிபட்டுப் போகிறது. எத்தனை பேசினாலும் கதை சொல்லல் ஒரு மொழி விளையாட்டும்தான் என்பதை மறுக்கவே முடியாது, ஆனால் விளையாட்டுத்தனமான கதைகளில் இலக்கியத்தின் ஒளி பெரும்பாலும் பாய்வதே இல்லை. விளையாட்டுத்தனம் குறையும்போது இலக்கியத்தின் ஒரு முக்கிய இயல்பான பயன்பாட்டு நோக்கமின்மைக்கு இடமில்லாமல் போகிறது – இலக்கியம் ஒரு இயக்கம் என்ற இடத்தை அடையும்போது அதன் இலட்சியங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன, விளையாட்டுத்தனம் அர்த்தமற்றுப் போகிறது. குழந்தைகள் விஷயத்தில் பார்ப்பது போல், விளையாட்டுத்தனம்தான் கற்பனையைத் தூண்டுகிறது, நம் கருவிகளின் புதுப் பயன்பாட்டைக் கண்டறிய உதவுகிறது.

oOo

பொண்டிங் இன்னமும் வந்து சேரவில்லை‘, என்று துவங்கும் ஜேகேவின் கதையில்  பிரிந்து வாழும் அருணும் மயூரியும் உரிமை கொண்டாடும் அதிர்ஷ்டம் வாய்க்கப் பெற்றவன் பொண்டிங். பெரும்பாலும் அருனின் பார்வையில் சொல்லப்படுகிறது- மயூரி நிறைய பொய் சொல்பவள் என்பதையும் அவள் சூடானியன் ஒருவனோடு சேர்ந்து வாழ்கிறாள் என்பதையும் அது குறித்த அருணின் கவலைகளையும் நாம் துவக்கத்திலேயே அறிகிறோம்- “பாவம். பிள்ளைக்கு வாய் திறந்து சொல்லவுந் தெரியாது. அந்த சூடானியன் பொண்டிங் முன்னாலேயே மயூரியை… Stop it Arun, அப்படி எல்லாம் நடக்காது.” அவன் கவலையெல்லாம் பொண்டிங் மீதே என்று சொல்லிக் கொண்டாலும் மயூரி மீது அருண் கொண்டுள்ள உரிமையை மணமுறிவுக்குப் பின்னும் அவன் மனம் விலக்கிக்கொள்ள மறுக்கிறது.

பொண்டிங் என்ற பெயரைத் தேர்வு செய்வது மயூரிதான். கதைக்களம் ஆஸ்திரேலியாவில் உள்ள ப்ரெஸ்டன் என்பதால் பொண்டிங்கைத் தேர்ந்தெடுக்கும் மயூரி ஆஸ்திரேலிய அடையாளத்தை ஏற்றுக் கொண்டு விட்டாள் என்றும் ‘ராம், சிவாஸ், கண்பத்’ என்ற சாமி பெயர்கள், அல்லது, ‘சச்சின், சனத்’ என்ற ஆசிய கிரிக்கெட்டர்களின் பெயர்களை அருண் விரும்புவதில் அவனது அடையாளச் சிக்கல் தொடர்கிறது என்றும் கொள்ளலாம். ஆனால் குடியேறியவர்களின் இந்தச் சிக்கல்கள் கதையில் இன்னும் விரித்தெடுக்கப்படவில்லை. போகிற போக்கில் இது இடம் பெறுகிறது, எப்படி மயூரி சூடானியனுடனும் அருண் அலெக்சாந்திராவுடனும் மணமுறிவுக்குப்பின் வாழ்கிறார்களோ அது போல் இதுவும் கதைக்கு பின்னணி சேர்க்கிறது.

பொண்டிங் குறித்த சண்டை எண்ணற்ற பல சண்டைகளில் ஒன்று, இறுதிச் சண்டை, ‘அது பத்தாயிரத்து முந்நூற்று நாற்பதாவது சண்டையாக இருக்கலாம். நகரத்தின் இத்தாலிய உணவுவிடுதி ஒன்றில் அவன் அலெக்சாந்திராவோடு உணவருந்திக்கொண்டிருந்தவேளையில் தற்செயலாக மயூரி அவர்களைக் கண்டதிலிருந்து முளைவிட்ட சண்டை‘. இது ஏன் இறுதிச் சண்டையாக ஆகிறது, ஏன் அவ்வளவு பலமான அடிதடி என்பது கதையின் கடைசி வரியில்தான் புலப்படுகிறது. இதற்கு வேண்டிய அழுத்தம் கொடுக்கப்படவில்லை என்பதால் அருணுக்கும் மயூரிக்கும் நடுவில் என்ன நடந்திருக்கும், அவர்களின் சண்டை எது குறித்து இருந்திருக்கும் என்பதை வாசகனே ஊகிக்க வேண்டியதாகிறது. பொண்டிங்கைவிட கதைக்கு இதுதான் முக்கியம், இதில் இல்லாத கவனம் பொண்டிங் மீது விழுவதில் உண்மையை எதிர்கொள்ள மறுக்கும் அருணின் பலவீனம் இருக்கிறது.

இன்னும் சொல்வதானால், அருண் சில உண்மைகளை நம்மிடமிருந்தும் மறைக்கிறான்- “மயூரி தனக்குத் தீர்க்கப்பட்ட பொருட்கள் எல்லாவற்றையும் நான்காயிரம் டொலர்களுக்கு அருணுக்கே திரும்பவும் விற்றாள். சாமியறைப் படங்களை இலவசமாகக் கொடுப்பதாகச் சொல்லிவிட்டாள். ஒரு பென்சும், டொயோட்டாவும் வீட்டில் நின்றது. மயூரி பென்ஸ் தராவிட்டால் விவாகரத்தை இழுத்தடிப்பேன் என்று அடம்பிடித்தாள். நம்பர் பிளேட்டில்கூட “MAYURI3” என்று இருந்தது. அருணுக்கு அவள் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வைத்தாலே போதும் என்ற நிலை. பென்ஸ் மயூரிக்குப்போனது,” என்று பல தகவல்களுக்கு இடையே அருண் விவாகரத்து பெற அவசரப்படுகிறான் என்ற தகவலும் இருக்கிறது, ஆனால் அது ஏன் எதனால் என்ற கேள்வி கதையில் இல்லை. அருண் அதைச் சொல்வதில்லை, அருண் பார்வையில் கதைசொல்லும் ஜேகேவும் சொல்வதில்லை. ஆனால் சிறிது ஊகித்தால் நாம் கண்டு கொள்ளலாம். அதற்கும் கதையின் இறுதிக்கு வர வேண்டியிருக்கிறது.

ஆங்கில துப்பறியும் கதைகளில் red herring என்று ஒன்று சொல்வார்கள், வாசகனின் கவனத்தைத் திசை திருப்ப வேறு திசையில் சந்தேகம் கொள்ள வைக்கும் உத்தி. அதற்கு இணையான ஒன்றாக, அருண் மீது சந்தேகம் எழாத வகையில் இங்கு பொண்டிங் யார் என்ற கேள்வி கதை முழுக்க, தலைப்பு துவங்கி இறுதி வரை நீடிக்கிறது – “இருவரும் பொண்டிங்கை அழைத்துக்கொண்டு பூங்காவுக்கு நடையெல்லாம் போயிருக்கிறார்கள். குழந்தை என்றாலும் பெயருக்குத் தகுந்தமாதிரி பொண்டிங் நன்றாக பந்து விளையாடுவான். “கட்ச் இட்” என்று சொல்லி பந்தை வீசுகையில் குழந்தை ஆர்வத்தோடு பந்தை நோக்கிப் பாய்கையில் நிஜ ரிக்கி பொண்டிங் போய்ண்டில் கட்ச் பிடிப்பதுபோலவே இருக்கும்,” என்ற ஒரு புதிர்த்தனமான இடத்தைத் தவிர கதை முழுவதும் பொண்டிங்கை அருண் ‘பிள்ளை’ என்றே சொல்லிக் கொண்டிருக்கிறான்- “சாதாரண குடும்பப்படம் அது. அருண், மயூரி, நடுவில் பொண்டிங். பொண்டிங் சிரிக்காமல் உர்ர்ரெண்டு முறைத்துக் கொண்டிருக்க இருவரும் அவனைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவுதான்.  படம் கன்வாஸ் செய்யப்பட்டு வீட்டுக்கு வந்தது. மயூரியின் படத்துக்குக் கீழே “மயூரி ரட்ணம்”, அருணுக்குக் கீழே “அருண் இளையதம்பி”, பொண்டிங்குக் கீழே “பொண்டிங் மயூரி” என்று எழுதிக்கிடந்தது. அருணுக்குக் கோபமோ கோபம். “பொண்டிங் அருண்” என்று எழுதியிருக்கவேண்டும் என்றான்,” என்றெல்லாம் வேறு எழுதுகிறார். பொண்டிங் மீது யாருக்கு கூடுதல் உரிமை இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான ஆதாரங்களில் இதுவும் ஒன்று.

கதையின் இறுதியில் அலெக்சாந்தரா வெளிப்படும்போதுதான் பொண்டிங் யார் என்ற நம் சந்தேகமும் உறுதிப்படுகிறது. ஆனால் காலத்தில் முன்னும் பின்னும் சென்று மிகத் தேர்ந்த வகையில் கதை சொல்லும் ஜேகே, பாண்டிங் குறித்த மர்மத்தை அவிழ்க்கும் அதே வரியில் இதனுள் உள்ள இன்னொரு கதையின் மர்மத்துக்கும் விடையளிக்கிறார். ஆனால், இப்படியொரு மர்மம் இருப்பதே கதையை இரண்டாம் முறை படிக்கும்போதுதான் தெரிகிறது.

இந்தக் கதை நமக்கு அளிப்பது முழுக்க முழுக்க ஒரு அறிவு நிலை திருப்தியைதான். ஒரு குறுக்கெழுத்துப் புதிரை நிறைவு செய்த திருப்தி போன்றது இது. அருண், மயூரி, பொண்டிங் என்று எவரது உணர்வுகளையும் நாம் அறிந்து கொள்வதில்லை. புறத்தகவல்கள் என்ற அளவிலேயே கதை சொல்லப்படுகிறது, முரண்கள் குறித்த அகவுணர்வுகள் பெரிதுபடுத்தப்படுவதில்லை. அருணின் உணர்வுகள் விவரிக்கப்படுவதும் ஒரு விளையாட்டுப் போக்கில்தான் என்பதை யோசித்துப் பார்த்தால் நாம் அறிய முடியும். விளையாட்டாகக் கதை சொல்வது என்று பார்த்தால் ஜேகே மிகச் சுவாரசியமாக, படித்து முடித்த பின்னரும் அசை போடக்கூடிய கதையைச் சொல்லியிருக்கிறார், அதில் சந்தேகமில்லை.

பொண்டிங், ஜே.கே.