கட்டுரை

புதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா

(புதிய குரல்கள் பகுதியில் பொதுவாக எழுத்தாளரின் விரிவான நேர்காணல் மற்றும் அவருடைய ஆக்கத்தை பற்றிய விமர்சன கட்டுரை இடம் பெறும். இம்முறை அவைத்தநித்தநியாக இல்லாமல் எழுத்தாளருடன் உரையாடிப் பெற்ற அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் முதல் பகுதியிலும், கட்டுரை இரண்டாம் பகுதியிலும் இடம்பெறும் வகையில் ஒரே பதிவாக வெளிவருகிறது. கேள்விகளுக்கு பதில் அனுப்பிய எழுத்தாளர் சாதனாவிற்கு நன்றி)

எழுத்தாளர் சாதனா – ஒரு அறிமுகக் குறிப்பு

கே: உங்களைப் பற்றி

யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுதீவில் ஒரு குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாக நான் பிறந்தேன். அப்பா ஒரு வாகனச் சாரதி. அத்தோடு பெரும் குடிகாரர். பெரிதாக உழைப்பதில்லை. அப்படியே உழைத்தாலும் கிடைக்கும் பணத்தையெல்லாம் கள்ளுத் தவறணையில் ஊற்றி விட்டு வருவார். அம்மா, தினம்தோறும் தனக்கு விதிக்கப்பட்ட விதியை நினைத்து நொந்து கொள்ளும் ஒரு அபலைப் பெண். எனக்கு ஆறு வயதாக இருக்கும்போது வறுமையின் காரணமாக என் அப்பா என்னை வளர்க்கும் பொருட்டு அவரின் மனைவியின் தமக்கையிடம் அதாவது, என் பெரியம்மாவிடம் ஒப்புக் கொடுத்து விடுகிறார்.  

என் பதின்ம வயது கொடூரமானது. கொடூரமானது என்றால் மிகவும் கொடூரமானது. உடலியல் ரீதியாக மிகவும் துன்பப்பட்டிருக்கிறேன். வீதியில், என்னைக் காணும் சிறுவர்கள், ‘ஏய் பைத்தியமே’ என்று கல்லால் அடிப்பார்கள். முப்பத்தி நான்கு வயதாயிற்று. இன்னும் திருமணமாகவில்லை. திருமணமாகவில்லை என்பதைக் காட்டிலும் யாரும் பெண் கொடுக்கவில்லை என்பதே சரி. இதற்கு, என்னுடைய கடந்த காலமும் ஒரு காரணம்.  

பதின்ம வயதில், உடலியல் ரீதியாக என்றால் இருபதுகளில், மனோரீதியான வன்முறைக்கு உள்ளாகி இருக்கிறேன். அதை விளக்குவது சிக்கலானது. ஒரு மாதிரியாக பைத்திய நிலையிலிருந்து வெளியேறி விட்டிருந்தாலும் கடந்த கால நினைவுகள் அவ்வப்பொழுது என்னைத் துன்பப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அதிலிருந்து மீள்வது பெரும் துயரமாகவும், ஆகாத காரியமாகவுமிருக்கிறது. புத்தகங்கள் என்னை மாற்றின. குறிப்பாக, தாஸ்தாயேவ்ஸ்கியும், ஆன்டன் செகாவும், சாருவும், சோபாசக்தியும் என்னை மாற்றினார்கள்.   

நான் படிப்பாளியாக இருக்கலாம். ஆனால், படித்தவன் கிடையாது. நான் என் சிறு வயதில் பெரியம்மாவிடம் ஒப்புக் கொடுக்கப்படாமல் என்னுடைய சொந்த தாய் தந்தையினாலேயே வளர்க்கப்பட்டிருப்பேனானால் நிச்சயம் நான் மாடு தான் மேய்த்திருப்பேன். ஒருவேளை, இது இரண்டுமே நடைபெறாமல் வேறொருவரிடம் நான் ஒப்புக் கொடுக்கப்பட்டிருந்தால் மருத்துவராகவோ, பொறியியலாளராகவோ குறைந்தபட்சம் வங்கி அதிகாரியாகவோ ஆகியிருப்பேன். என் சபிக்கப்பட்ட விதியானது இது இரண்டையுமே மாற்றி விட்டது. ஆகவே, நான் எழுத்தாளன் ஆகி விட்டேன்

கே: இலக்கிய பரிச்சயம் எப்போது, எப்படி நேர்ந்தது? 

 உண்மையில் அது ஒரு அசம்பாவிதம். ஏனெனில், என் குடும்பத்தில் மாத்திரமல்ல; பரம்பரையில் கூட புத்தக வாசிப்புப் பழக்கமுடையவர்கள் யாரும் கிடையாது. என்னவோ எப்படியோ அது எனக்குள் மாத்திரம் புகுந்து கொண்டு விட்டது. வாசிப்புப் பழக்கத்தில் உள்ள அதீதமான காதலால் வீட்டிலேயே பணம் திருடி இருக்கிறேன். அய்ம்பது ரூபாவைத் திருடி பத்து ரூபாய்க்கு புத்தகத்தை வாங்கினால் மீதி நாற்பது ரூபாய்யை என்ன செய்வதென்று தெரியாது. வீட்டில் மறைத்து வைக்க முடியாது.  பணம் திருடியிருக்கிறேன் என்பது கண்டு பிடிக்கப்பட்டால், முதுகுத் தோல் கிழிந்து விடும். ஆகவே, கடைக்காரரிடமே நாற்பது ரூபாய்யையும் திருப்பிக் கொடுத்து அடுத்த முறை புத்தகம் வாங்கும்போது இதில் கழித்துக் கொள்ளுங்கள் என்பேன். கடைக்காரரும் சிரித்துக் கொண்டே அதற்குச் சம்மதித்தது இப்போது இதை எழுதும் போது நினைவு வருகிறது.   

ஆரம்பத்தில், அம்புலிமாமாவில் தொடக்கி ராணி காமிக்ஸ் – மாயாவி, கரும்புலி, இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர், லக்கி லுக் நினைவிருக்கிறார்களா – முத்துக் காமிக்ஸ் என்று போய் பின்னர் ரமணிச்சந்திரன், ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், சுஜாதா, சோபா சக்தி, சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன் என்று விரிந்திற்று. இது தவிர தாஸ்தாயேவ்ஸ்கி, ஆன்டன் செகாவ், மாக்சிம் கார்க்கி, லியோ டாஸ்டாய் என்பவர்களும் என் தீவிர இலக்கியப் பட்டியலில் உண்டு.  

என் பால்ய காலத்தில் அதிகம் வாசித்த நான், இப்போது வாசிப்பது குறைவு. காரணம், சமூக வலைத்தளங்களின் வருகை. நினைத்துப் பார்த்தால் பெரும் சோர்வைத் தருகிறது. இதிலிருந்து எப்படியாவது மீண்டு மறுபடியும் புத்தகங்களை வெறி கொண்டு வாசிக்க வேண்டும். பார்க்கலாம்.

கே: உங்களை நீங்கள் எழுத்தாளராக கண்டுகொண்டது எப்போது? முதல் கதை எப்போது வெளி வந்தது? 

உன்னிடம் சொல்வதற்ககுக் கதைகள் இல்லையென்றால் நீ எப்படி வாழ்ந்தாய் என்று கேட்கிறார் தாஸ்தாயேவ்ஸ்கி. முதலில் எழுத ஆரம்பித்தபோதே வேடிக்கையாக அல்லாமல் சீரியஸாகத் தான் தொடங்கினேன். சொல்வதற்கு ஏராளமான கதைகளுமிருந்தன. ஆகவே, நான் கதை சொல்லத் தொடங்கினேன். என்னுடைய முதலாவது சிறுகதை தாய். மனித மனங்கள் ஆசைகளுக்காக சொற்ப கணத்தில் எப்படியெல்லாம் மாறிப் போகும் என்பதான ஒரு கதை. என்னுடைய இருபத்தி அய்ந்தாவது வயதில் அக் கதையை எழுதியிருந்தேன். கதையை எழுதி விட்டு எழுத்தாளர் சயந்தனுக்கே அதை முதல் முதலில் அனுப்பி வைத்திருந்தேன். கதை குறித்து பாராட்டிய அவர், உங்களுக்குள் ஒரு எழுத்தாளன் உறங்குகிறான்; ஆகவே கதை எழுதுங்கள் என்று என்னைக் கண்டு பிடித்து எனக்குள்ளிருந்த அடையாளத்தை வெளியில் கொணர்ந்தது அவர் தான்.  

எழுத்தாளன் என்பது உண்மையில் மிகப்பெரிய வார்த்தை. அதை வெறுமனே சிறுகதைகளையும், கட்டுரைகளையும் எழுதினால் ஆயிற்று என்று சுருக்கி விடமுடியாது. உண்மையில், எழுத்தாளன் என்பவன் சாதாரணவானவன் கிடையாது. அவன் இந்தக் கீழ்மையோடு இருக்கும் சமூகத்தை சீர் தூக்கி விட முனைபவன். ஒரு சமூகத்தின் பெரும் சொத்து அவன்.  

இதை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது எழுத்தாளன் என்கிற வார்த்தைக்கு நான் கொஞ்சம் கூட லாயக்கற்றவன். ஏனெனில், ஒன்று அல்ல; இரண்டு உதாரணங்கள் சொல்கிறேன். அப்போது நான் ரஷ்யாவில் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன்.  ஒருதடவை, என்னோடு கூட இருந்தவருக்கும் எனக்கும் தகராறு. கெட்ட வார்த்தைகள் சரளமாகப் புரள்கிறது. அப்போது நான் அவரை அவரின் ஜாதிப் பெயரால் பழிக்கிறேன். எவ்வளவு கீழ்த்தரமான செயலிது. வன்மத்தின் உச்சம்.   

இரண்டாவது, இதே போன்றுதான் அதுவும். ஆனால், அது சமூக வலைத்தளமொன்றில் நிகழ்ந்தது. வெளிப்படையாகவே ஒருவரை ஜாதிப் பெயரால் திட்டினேன். இதில் ஆகப் பெரும் வேடிக்கை என்னவென்றால் அப்போது முகப்புத்தகத்தில் என்னுடைய பெயர் எழுத்தாளர் சாதனா.

கே: இலக்கியத்தில் உங்கள் ஆதர்சங்கள் யார்? (ஈழ/தமிழ்/ உலக) 

நிறையப் பேர் இருக்கிறார்கள். எல்லோரும் ஏதோவொரு விதத்தில் என்னைக் கவர்ந்தவர்கள். இதில் எழுதும் ஆசையைத் தூண்டியது சாரு. நான் கண்டைந்து கொண்ட மொழியில் அவருக்கு மிகப்பெரும் பங்குண்டு. அவரின் எளிமையான, எல்லோருக்கும் புரியும்படியான கதை சொல்லல் முறை நான் பார்த்து வியந்த ஒன்று. அப்புறம் ஷோபாசக்தி என்னுடைய மிகப்பெரிய ஆதர்சனம். சிறுகதை எழுதும் நுட்பத்தை நான் அவரிடமிருந்தே கற்றுக் கொண்டேன். இது தவிர பொதுவான ஒருவரும் உண்டு. அவர் எஸ். சம்பத். அவருடைய இடைவெளி நாவல் எப்போதும் என் பையில் இருக்கும்.

 

எஞ்சியிருப்பதின் துயரம்

எழுத்தாளர் சாதனா ஈழத்தை பூர்வீகமாக கொண்டவர். தற்போது ஜெர்மனியில் வசித்து வருகிறார். ஆறு சிறுகதைகள் கொண்ட அவருடைய முதல் சிறுகதை தொகுப்பான ‘தொலைந்துபோன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்’ கடந்த ஆண்டு ஜீரோ டிகிரி பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. சாரு ஒரு நீண்ட முன்னுரை எழுதி இருக்கிறார். இளம் தலைமுறை ஈழ எழுத்தாளர்களான சயந்தன், அனோஜன், யதார்த்தன், அகர முதல்வன் போன்றோரின் படைப்புலகில் சில ஒற்றுமைகளும் சில தனித்துவங்களும் உண்டு. சாதனாவின் படைப்புலகம் அவருடைய தலைமுறை ஈழ எழுத்தாளர்களின் புனைவுலகை விட்டு முற்றிலும் விலகியது. ஆகவே தனித்துவமானதும் கூட. ஈழ நிலம் அறவே பதிவாகாத கதைகள் என சொல்லலாம்.

சாதனாவின் கதை மாந்தர்கள் அகவயமானவர்கள். இருத்தலியல் கேள்விகளை சுமப்பவர்கள். அக்கேள்விகளே அவருடைய படைப்புலகை நிறைக்கிறது, கதைகளை எழுத தூண்டுதலாக இருக்கிறது. ஆகவே அவருடைய கதை மாந்தர்கள் இயல்பாக கேள்விகளை விவாதிக்கும் பிரதிநிதிகளாக உருக்கொள்கிறார்கள். போருக்கும் இருத்தலியலுக்கும் நேரடி தொடர்புண்டு. இருத்தலியல் கேள்விகளுக்கு போர் ஒரு முன் நிபந்தனை அல்ல என்றாலும் போரின் இயல்பான விளைவு என உறுதியாக சொல்லிவிட முடியும். இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள ‘சிறுமி கத்தலோனா’ ‘தொலைந்து போன சிறிய கறுப்பு நிற பைபிள்’ மற்றும் ‘ஒ தாவீது ராஜாவே’ ‘ஜூதாசின் முத்தம்’ ஆகிய கதைகளில் சாதனா தனக்கான சில அடிப்படை கேள்விகளை பின் தொடர்ந்து செல்கிறார். அவை எடுத்துக்கொண்ட பேசு பொருள் காரணமாக முக்கியமான கதைகள் ஆகின்றன.

 ‘அக்கா’ கதையிலும் ஒரு பகுதி ஈழத் தமிழரின் புலம்பெயர் வாழ்க்கையை காட்டுகிறது என்றாலும் கூட  ‘சிறுமி கத்தலோனா’ இந்த தொகுதியில் உள்ள ஒரே ஈழக்கதை என சொல்லலாம். ஈழக்கதைக்கான வரையறைகள் எவை?  ஈழத்தை களமாக கொண்டிருக்க வேண்டும். ஏதோ ஒரு வகையில் போர் ஒரு பேசுபொருளாகவோ/ பின்னணியாகவோ/ அல்லது நினைவாகவோ கதையில் இடம்பெறும். ஈழத் தமிழர் மையக் கதாபாத்திரம் அல்லது கதைசொல்லியாக இருப்பார். கதை ஈழத் தமிழில் இருக்கும். எழுத்தாளர் ஈழத்தை சேர்ந்தவராக இருப்பார். சாதனாவின் மொழியில் ஈழத் தமிழின் சாயல் சன்னமாகவே தென்படுகிறது. சில அரிதான சொற்களை பயன்படுத்துகிறார். (உதாரணம்- ஜூதாஸின் முத்தம் கதையில் ஸ்தேயம் எனும் சொல்லை திருட்டுக்கு பயன்படுத்துகிறார்).  

ஒன்பது பகுதிகள் கொண்ட கதையில் ஐந்து பகுதிகள் சிலோன் நாதனின் வாழ்க்கையை படர்கையில் விவரிக்கிறது. இரண்டு பகுதிகள் சிலோன் நாதனின் தன்னிலையிலும் இரண்டு பகுதிகள் சிலோன் நாதனின் கதையை எழுதும் எழுத்தாளரின் தன்னிலையிலும் வருகிறது. சிலோன் நாதன் ஜெர்மனியில் வசிக்கிறார். அவருடைய கடந்த கால ஈழ வாழ்வில் ராணுவத்திடம் பிடிபடுதல், சிறையிலடைக்கப்படுதல், கொடுமைக்கு உள்ளாகுதல் என எல்லாமும் பொதுவாக ஈழக்கதைகளில் நிகழும் அதே வகையில் நிகழ்கின்றன. போரில் மருத்துவராக இருக்கும் சிலோன் நாதன் கால் சிதைந்த சிறுமி கத்தலோனாவை காப்பாற்ற முயல்கிறார். பெண் ராணுவத்திடம் பிடிப்பட்டு அவர்களால்  கடுமையாக அவமதிக்கப்படுகிறார். சிங்கள மொழியில் ‘உத்தோ’ என கேவலமாக வசைப்பாடப்படுகிறார். இந்த சிறை அனுபவம் ஆறாத காயமாக உள்ளூர உழன்றபடி இருக்கிறது. அவருடைய முதலாளி பாஸ்பெர்கின் மரணத்திற்கு பிறகு நேராக வேசியிடம் செல்லும் போது அந்த பெண்ணின் நடத்தை ராணுவ பெண்னை நினைவுறுத்துகிறது. சட்டென தடுமாறி விலகுகிறார். வேசியிடம் கூடியபிறகு அந்த நினைவுகளில் இருந்து மீள முடியாமல் கடும் குற்ற உணர்வில் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார். அனோஜனின் ‘உறுப்பு’ கதையில் சிங்கள ரானுவ வீரனின் பாலியல் இம்சைகளை அனுபவித்து அந்த வாதையிலிருந்து வெளியேற சிரமப்படும் சித்திரம் ஒன்றுண்டு. ஏறத்தாழ அம்மாதிரியான அகக் காயம் சிலோன் நாதனுள்ளும் உள்ளது. சிலோன் நாதனின் இருத்தலியல் கேள்விகளும், வாழ்வின் பொருளின்மை‌ சார்ந்த பார்வைகளும், தற்கொலை முயற்சிகளும் கதையின் இறுதியில் வெளிப்படும் உண்மையினால் துலக்கம் பெறுகிறது. அந்த இறுதி உண்மையே இக்கதையை வழக்கமான ஈழக்கதை அமைப்பிலிருந்து தனித்து காட்டுகிறது.

ஈழத்தமிழர் சிங்களவர் எனும் இருமையை கடந்து மானிடர் எனும் நிலைநோக்கி நகர்கிறது. இரண்டாவது வாசிப்பில் சிலோன் நாதன் வீட்டில் இருக்கும் புத்தர் சிலை அவருடைய அடையாளத்தை குறிப்புணர்த்துகிறது. கண்முன் காலற்ற சிறுமி கத்தலோனா கைவிடாதீர்கள் என கூறி அழும்போது சிங்களர் எனும் ஒரே காரணத்திற்காக உயிருடன் விடுதலை செய்யப்படும் சிலோன் நாதன் குற்ற உணர்வினால் உந்தப்பட்டு தான் ஏன் இனியும் வாழ வேண்டும்? எனும் கேள்வியை எழுப்பிக்கொள்கிறார். சாதனாவின் கதை மாந்தர்களின் பொதுவான மனப்போக்கு என்பது இந்த குற்ற உணர்விலிருந்தே எழுகிறது. இந்த கதையில் வரும் பாஸ்பெர்க் வழியாக பாத்திரங்களுக்கு இடையிலான முரண் பேசப்படுகிறது. அவர்  இருத்தலியல் சிக்கல் ஏதுமற்றவர். வாழ்க்கையையே மரணத்தை நோக்கிய பயணமாக காணும் சிலோன் நாதனுக்கு கிட்டாது ஒன்று பாஸ்பெர்கிற்கு எளிதாக கிடைக்கிறது. மகிழ்ந்து ஆடிக்கொண்டே இருக்கும் போது நிகழும் மரணம்.

இக்கதையில் அவர் வளர்க்கும் நத்தைக்கு சிலோன் நாதன் என பெயரிடுகிறார். “நத்தைகள் குறித்து இன்னும் சொல்லவேண்டுமென்றால் அவை தன் வீட்டைத் தானே சுமக்கும். மழை காலங்களிலோ, அல்லது தனக்கு ஒவ்வாத காலநிலையைக் கொண்ட காலங்களிலோ தன் முதுகிலுள்ள ஓடு போன்ற கூட்டினுள் தன்னை மறைத்துக் கொள்ளும். தன்னுடைய இந்தத் தன்மையை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் அவை பயன்படுத்துகின்றன.” எனும் சிலோன் நாதனின் குறிப்பில் அவருடைய அடையாள மறைப்பு வாழ்வு கோடிட்டுக்காட்டப்பட்டு நத்தை அவருடைய குறியீடாகவே இருக்கிறது. சிலோன் நாதன் ஏன் தன்னை மறைத்துக் கொள்ள வேண்டும்? தன் அரசின் குரூர முகத்தை கண்டவனின் மனசாட்சியின் தொந்திரவு. அச்சம். ஒவ்வாமை. இதற்கு நான் பொறுப்பல்ல எனும் விலக்கம் என பலவாறாக விளங்கிக்கொள்ள முடியலாம் என்றாலும் கதையில் அதற்கான காரணம் எதுவும் வலுவாக கூடி வரவில்லை. அதுவும் ஒரு தமிழர் பகுதியில் மருத்துவராக இருக்கும் சிங்களர் தன் அடையாளத்தை ஏன் மறைத்துக் கொள்ள வேண்டும்? கதையில் “எதிர்காலம் குறித்த பயம் அந்த ‘ஏதோ ஒன்றை’ என் வாயிலிருந்து வெளிவராமல் தடுத்தது.” என எழுதுகிறார். இது மர்மமாகவே விடப்படுகிறது. வாசகரிடம் இது ஒரு நம்பிக்கையை கோருகிறது. தனிப்பட்ட காரணங்கள் ஏதேனும் இருக்கும் என சமாதானம் அடைந்துகொள்ளச் சொல்கிறது. கதை இறுதியில் சிறுமி கத்தலோனாவின் காலற்ற ஊருதல் நத்தையுடன் இணைவைக்கப்படுவதன் வழியாக ஒரு தலைகீழாக்கம் நிகழ்கிறது. 

சயந்தனின் ‘ஆறாவடுவில்’ ஒரு பகுதி, குணா கவியழகனின் ‘அப்பால் ஒரு நிலத்தின்’ இறுதி பகுதி, அனோஜனின் ‘பபுலி’ போல் பெரிதும் மனவிரிவளித்த கதை. அடிப்படையில் ஒரு சிங்களவர் தமிழ் பெண்ணிற்காக பெரும் துயரத்தை சுமந்து தன்னையே அழித்து கொள்வதென்பது கற்பனாவாதத்தன்மையுடைய கதைக்கரு. ஈழக் கதைகளில் கற்பனாவாதம் ஒரு மிக முக்கிய கூறாகவே திகழ்கிறது. கற்பனாவாதத்தை முழுக்க எதிர்மறையாக அணுகவேண்டியதுமில்லை. தமிழின் முதன்மை நாவல்களில் ஒன்றாக கொண்டாடப்படும் ‘புயலிலே ஒரு தோணி’ கூட தமிழக வீரனொருவன் அந்நிய நாட்டை விடுவிக்கும் சாகச கற்பனாவாத கதையின் தன்மையுடையதே. சிலோன் நாதனின் துயரம் எஞ்சியிருப்பதின் துயரம். அறத்திலிருந்து எழும் துயரம். சிலோன் நாதனின் குற்ற உணர்வு இன்னும் நுண்மையானது. மரணம் மற்றும் அழிவுக்கு மனிதன் சாட்சியாக இருக்கும்போது வாழ்விச்சை பெருகுகிறது. பாஸ்பெர்கின் மரண சடங்கிற்கு பின் அவர் நேராக வேசியை தேடுகிறார்.  விடிந்ததும் குற்ற உணர்வில் தற்கொலைக்கு முயல்கிறார்‌. அதிலிருந்து உயிரிச்சையால் மீள்பவர் ராணுவப் பெண் நினைவை போக்க வேசியை நினைத்து சுய மைதுனம் செய்ய முயல்கிறார் ஆனால் குறி விறைக்கவில்லை. தெருவில் விளையாடும் பதின் வயது சிறுமியொருத்தி தொடை தெரிய விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்ததும் விறைக்கிறது. சிலோன் நாதனின் சிக்கல் என்பது அவர் உயிருடனிருக்க எந்த நியாயத்தையும் உணராத போதும் அவருடைய உயிரிச்சை அவரை சாக விடவில்லை என்பதே. இயேசு இறந்தபிறகு ஜூதாஸ் அடையும் அதே துயரம். இங்கிருந்துதான் அவருடைய கதை உலகின் பிரதான கேள்வியான வாழ்வு விதிக்கப்பட்டதா? மனிதர்களின் சுய தேர்வின் ( freewill) பங்கு என்ன? எனும் கேள்வியை கேட்கிறார். மனிதருக்கு வாழ்வில் வேறு சில தேர்வுக்கான சாத்தியங்கள் இருந்தபோதும் அவன் ஏன் அழிவையே தேர்வு செய்கிறான்? இக்கேள்விகள் எவையும் புதியவை அல்ல. ஆனால் விவாதித்து தீராதவை. கடவுளற்ற உலகில் மனிதர்களின் அறம் என்னவாக இருக்கும் என்பதே தாஸ்தாவெஸ்கியின் அக்கறையாக இருக்கிறது‌. தாஸ்தாவெஸ்கியின், தால்ஸ்தாயின் கிறிஸ்து இப்படி உருவானவர் தான். தால்ஸ்தாய்க்கு இயேசுவின் தேவையில் எவ்வித ஐயமும் இல்லை. தால்ஸ்தாய் இருமுனைகளுக்கு இடையேயான ஊசலில் இருந்தார் என்பது என் எண்ணம். ‘தொலைந்துபோன சிறிய கறுப்புநிற பைபிளின்’ முடிவில் அறம் தொலையும் போது கடவுளும் தொலைவது சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த ஊசலின் மறுமுனையை ‘ஒ தாவீது ராஜாவே’ சென்றடைகிறது.

‘தொலைந்து போன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்’ தொகுதியின் தலைப்பு கதை. இரண்டாம் உலகப் போரின் பின்புலத்தில் ரஷ்யாவை களமாக கொண்ட கதை.  ‘குளிரில் பூமியானது வெள்ளைநிற போர்வையோன்றைத் தன் உடல் முழுவதும் போர்த்திக்கொண்டு துயில் கொள்வதைப் போல் இருந்தது.’ போன்ற விவரணைகள் நல்ல காட்சி அனுபவத்தை அளிக்கிறது. வார்சா நோக்கி ராணுவத்தில் சேருவதற்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கிறான் கதை நாயகன். தாஸ்தாவேஸ்கி நாவல்கள் மற்றும் குடும்ப புகைப்படம் உள்ள நோட்டு மற்றும் சிறிய கறுப்புநிற பைபிள் அவன் கொண்டு செல்லும் பையில் உள்ளது. 

அங்கே விளாமிடினை சந்திக்கிறான். புவியியல் பட்டதாரியான அவன் நேசித்தவள் வேறொருவனுடன் இருப்பதை கண்டு கொலை செய்யும் அளவிற்கு ஆத்திரம் கொண்டு பின்னர் பைத்தியமாகி மீண்டு ராணுவத்திற்கு வந்தவன். அவன் தற்கொலை செய்து தலைசிதறி இறக்கிறான். அவனுடைய சிநேக சமிஞைகளை கதைசொல்லி அங்கீகரித்து அவனுக்கு திருப்பியளிக்கவில்லை. ராணுவ ஒழுங்கிற்கு பொருத்தமில்லாத மனிதனாக இருக்கிறான் என்பது விளாமிடின் ஓடிவரும்போது கீழே விழுவதையும் அவனை வேறெவரும் கவனிக்காததையும் சுட்டுவதன் வழியாக நிறுவுகிறார்.

துப்பாக்கி சுடும் பயிற்சிக்காக அவனை அழைத்து செல்கிறார்கள். ‘ஆனால் நான் எதற்காக இந்தக் கரடியைக் கொல்ல வேண்டும்?’ என்றொரு கேள்வியை எழுப்புகிறான். சம பலமற்ற எதிரி. ஆனால் அந்தக் கரடியின் சாவும் கதைசொல்லியின் வாழ்வும் பிணைந்திருக்கிறது. ஏறத்தாழ கீதையின் காட்சி இங்கு மறு ஆக்கம் செய்யப்படுகிறது. ஆனால் போதிப்பவரான ட்ரான்ஸ்கியின் உறுதி குலைகிறது. ‘உன்னுடைய மகிழ்ச்சியில் இன்னொருவருக்கு துக்கம் இருக்குமாயின் நீ அந்த மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்வாயா?’ என எழுப்பப்படும் கேள்வி ‘சிறுமி கத்தலோனா’ வில் எழுப்பப்படும் அதே கேள்வியின் நீட்சி. பெரும்பாலான கதைகளை துளைத்து செல்லும் மைய சரடு இக்கேள்வியே.

கரடியை சுடுவதற்கு முன்பு நிகழும் விவாதம் மனிதனின் சுய தேர்வுக்கும் விதிக்கும் இடையிலான ஊசலைப் பற்றிய உரையாடல். எல்லா சமயங்களிலும் வேறொரு வாய்ப்பு இருக்கு என நம்ப விரும்பும் கதைசொல்லி. அவற்றை மறுக்கும் ராணுவ அதிகாரி. ஏனெனில் ராணுவத்திற்கு அதுவே உகந்தது. ஒருவகையில் இதே கேள்வியைத்தான் சிலோன் நாதன் சிறையில் எதிர்கொள்கிறார். தவறான தேர்வு என தான் நம்புவதே அவரை வதைக்கிறது. ஜூதாசும் தனது தேர்வை எண்ணி மருகுகிறான். சுட்டுக்கொல்லப்பட்ட கரடி கனவில்  தலைகோதி தூங்க வைத்து அவனை மன்னிக்கிறது. சிலோன் நாதனை மன்னிக்க கனவில் எவரும் வரவில்லை. இறுதியில் தற்கொலை செய்துகொண்டு மரிக்கிறார்.

உயரதிகாரி லூக்கா அவனை அழைத்து பேசுகிறார். அவரிடம் தானொரு நல்ல ஓவியன் என பொய் சொல்கிறான். இயேசுமீது நம்பிக்கை இருக்கிறதா என லூக்கா கேட்கிறார். தேவாலயத்தில் அமர்ந்து சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் முகத்தைப் பார்ப்பதுபோல் வேறெதுவும் எனக்கு அமைதியைத் தந்து விடப்போவதில்லை என்கிறான். தொடர்ந்து விவாதிக்கிறார்கள்.  நேரியதான நல்லவனை படைப்பதே உலகத்தில் மிகவும் சிக்கலான காரியம்  டான் குயிக்சோட் பூரண நல்லவன். அவன் அசடனாக இருப்பதாலேயே நல்லவனாகிறான். தன் மதிப்பையறியாத நல்லவன் முட்டாளாக்கப்படுகையில் கருணையுணர்வு பிறக்கிறது. இந்த உரையாடல் கதையின் பின்புலத்தில் மிக முக்கியமான ஒன்று. படிப்படியாக மனித தன்னிலை மறைவதையே கதை சொல்கிறது.

மனைவி ஆன்யாவிற்கு கடிதம் எழுதுகிறான். போர் கொலைகள் பற்றிய விவரணைகள்- உன்னுடைய மகிழ்ச்சியில் இன்னொருவருக்கு துக்கம் இருக்குமாயின் நீ அந்த மகிழ்ச்சியை ஏற்றுக்கொள்வாயா? எனும் அந்த கேள்வியை விரிவாக்குகிறது. இயேசுவை ஆதர்சமாக  கொண்ட லூக்கா தான் கொல்வதில் இன்பமடைகிறார். போரில் அடிபட்டு கிடப்பவனுக்கு நீர் கொடுத்துவிட்டு மறைத்து வைத்த கத்தியால் அவனை குத்தி கொல்லும் போது அவன் மற்றொரு லூக்காவாக மாறுகிறான். அதற்குப்பின் அஞ்சி ஒளிந்து கொண்டிருக்கும் பெண்னை வெறும் ஆர்வத்தில் நெருங்கி அகங்காரம் சீண்டப்பட்டு அவளை துன்புறுத்தி புணர்கிறான். கிறிஸ்து ஒரு ஒளியாக அவனுடைய சாயலில் தோன்றி குரலாக ஒலிக்கிறார். அகங்கார வெறியில் இருப்பதை சொல்கிறார். புணர்ந்து கொண்டிருப்பவனின் பின்னால் நின்றுக்கொண்டு அவ்வுருவம் மீண்டும் எச்சரிக்கிறது. அவனுடைய மனைவிக்கும் பிள்ளைக்கும் இது நேரலாம் என சொல்கிறது அக்குரல். ஆனால் அவன் கேட்கவில்லை. வெறியில் அந்த பெண்ணை சிலையொன்றால் அடித்து கொல்கிறான். நம்பிக்கையாளன் கிறிஸ்துவை தொலைக்கும் கதை என சொல்ல முடியும். கிறிஸ்து ஒருவகையில் அவன் மனசாட்சியாக இருக்கிறார். கதையிறுதியில் பைபிள் தொலைந்ததும் பெரும் ஆசுவாசத்தை உணர்கிறான். இதுவே இதை ஒரு தாஸ்தாவெஸ்கிய கதையாக ஆக்குகிறது. ஜூதாஸ் மற்றும் சிலோன் நாதன் தங்களுடைய குற்ற உணர்விலிருந்து மீள முடியாமல் மரிக்கிறார்கள். ‘தொலைந்துபோன பைபிள்’ நாயகன் இயேசுவை கைவிடுவதன் வழியாக தற்கொலையிலிருந்து தப்பிக்கிறான். நிம்மதியாக வாழ்கிறான். ‘ஒ தாவீது ராஜாவே’ அகங்காரத்தை விட்டுவிட்டு இயேசுவை பற்றுவதன் வழியாக தற்கொலையில் இருந்து தப்பிக்கிறான்.

கதையை தற்காலத்திலிருந்து விலக்கி வேறொரு காலத்தில் வேறொரு நிலத்தில் நிகழ்த்தும் போது அரசியல் தரப்புகளை கடந்து ஆதாரமான கேள்விகளை எழுப்பிக்கொள்ள முடியும். சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘காலத்தின் அலமாரி’ ‘எலும்புக்கூடுகள்’ போன்றவை இப்படியாக சமகால நிகழ்வுகளிலிருந்து விலக்கிக்கொண்டு ஈழ சிக்கலை அணுகுபவை. சாதனா போர் ஒரு மனிதனின் நுண்ணுணர்வுகளை அழித்து படிப்படியாக மிருகமாக்குவதை சித்தரிக்கிறார். அ. முத்துலிங்கத்தின் ‘வெள்ளிக்கிழமை இரவுகள்’ வன்புணர்வு செய்த சிங்கள சிப்பாயின் வீட்டுக்கு அவனால் உருவான பெண் குழந்தையை அழைத்துக்கொண்டு சென்று காண்பதை சொல்லும் கதை. தன் நல்ல கணவன் , மகளின் நல்ல தந்தை, வேறொருத்தியை வன்புணர்வு செய்தவன் என அறியவரும்போது அவள் என்ன ஆவாள்?

இரண்டாம் உலகப்போர் என்பது ஸ்டாலினின் காலம். ஸ்வெட்லான அலேக்சிவிச் ‘second hand time’ நூலில் ரஷ்யாவை குறித்து கொடுக்கும் சித்திரத்தில் ரஷ்யாவின் தேவாலயங்கள் இடிக்கப்பட்டதையும் கடுமையாக ஒடுக்கப்பட்டதையும் சொல்கிறார். இரண்டாம் உலகப்போரை ஒட்டியே ஸ்டாலின் ஒரு உத்தியாக மீண்டும் கிறிஸ்தவத்திற்கு இடமளிக்கிறார். கிறிஸ்தவத்தின் ரட்சகராக தோற்றம் அளிக்கிறார். ஆனால் பிற்காலத்தில் நிலைமை மோசமாகிறது. சோவியத் உடைந்தபிறகு பெருந்திரளாக மக்கள் தேவாலயங்களுக்கு சென்றார்கள். கிறிஸ்தவ நம்பிக்கை சோவியத்தில் கிட்டத்தட்ட ராஜ துரோகமாக கருதப்பட்டது. இந்த சூழலில் ராணுவ உயரதிகாரி புதிய வீரனிடம் இப்படி உரையாடுவது முற்றிலும் சாத்தியமற்றது என சொல்லிவிட முடியாது என்றாலும், சற்றே நம்பகமற்ற பின்புலத்தை அளிக்கிறது. இங்கும் வாசகரின் நம்பிக்கையும் தனிப்பட்ட உரையாடல் எனும் சமாதானமும் தேவைப்படுகிறது.

இதே வரிசையில் ‘எஞ்சியிருப்பதன் துயரை’ பேசும் அடுத்த கதை  ‘யூதாசின் முத்தம்.’ இது ஒரு தொன்ம மறு ஆக்க ஊகப் புனைவு. நாமறிந்த யூதாசின் கதையில் உள்ள இடைவெளிகளை படைப்பூக்கமிக்க வகையில் நிரப்புகிறார். துரோகத்தின் முத்தமாக பார்க்கப்பட்ட யூதாசின் முத்தம் உண்மையில் அன்பின் முத்தமாக ஆகிறது. துரோகத்தின் சின்னமாக காலம் காலமாக கருதப்படும் யூதாஸ் முன் இருந்த தேர்வுகள் எவை? அவன் எதை தேர்ந்தான்? எனும் கேள்விகள் வழியாக அவனுடைய பிம்பத்தை தலைக்கீழாக்குகிறார். யூதாசுக்கு ஒரு காதல் வாழ்க்கை, நெருக்கடிகள், அரசியல் பின்புலம் என அனைத்தையும் உருவாக்குகிறார். பிலாத்துவின் வீரர்கள் நகர்வலம் வரும் இயேசுவை கைது செய்ய வரும்போது யூதாஸ் முதல் ஆளாக அவர்களுக்கு முன் நின்று அவர்களை விரட்டியடிக்கிறான். யூதாசின் காதலி சாரா, அவளுடைய அண்ணன் இப்ராகிம் நகர தலைமைக்கு எதிராக ஒரு புரட்சிப்படையை தொடங்கியதாக சொல்கிறாள். அதற்காக முப்பது வெள்ளிக்காசுகளை அளிக்க கோருகிறாள். அதற்காக அலையும்போது யூதாசின் குடும்பத்தை பிலாத்துவின் ஆட்கள் பிடித்து கொண்டு போய்விடுகிறார்கள் (இப்பகுதி மட்டும் சற்றே வழக்கமான பரப்பியல் பாணி எனத் தோன்றியது). சாராவின் வீட்டிலிருக்கையில் யூதாஸும் பிடிபடுகிறான். இறுதி விருந்தின்போது இயேசு கூறும் கதையில் குடிகாரன் இறந்த தந்தையை தங்க மோதிரத்துடன் சேர்த்தே புதைக்கிறான். இயேசு நன்றியைப் பற்றி பிரசங்கம் செய்வதும் வருகிறது. யூதாஸ் இயேசுவை கைது செய்யும்போது அவருக்கு முத்தமிடுகிறான். விசாரணையின்போது பராபஸ் விடுவிக்கப்படவேண்டும் என எல்லோரும் கூக்குரலிடுவதை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. இயேசுவை நிர்பந்தத்தினால் காட்டிக்கொடுத்தாலும் பிறகு மீட்டுவிடலாம் என்பதே அவனுடைய கணக்கு. எப்படியும் அவர் தன்னை காப்பாற்றிக் கொள்வார் என நம்பினான். ‘இயேசுவையே விடுதலை செய்யுங்கள் என கண்ணீர்விட்டு அழுவதை’ எவரும் கேட்கவில்லை. பிலாத்து கொடுத்த வெள்ளிக்காசை வீசிவிட்டு வனத்திற்கு செல்கிறான். இயேசுவின் மரணத்திற்கு தான் காரணம் என்பது அவனை வருத்துகிறது. பாம்பொன்று அவனிடம் ஓநாயாக உருமாறி பேசுகிறது. இவையும் இயேசுவின் திட்டம் என சொல்கிறது. நீ ஒரு துரோகியல்ல, சாக வேண்டாம் என சொல்கிறது ஆனால் காட்டுக்குள் சென்று தூக்கிட்டு சாகிறான் யூதாஸ். சாத்தான் சொல்லும் சமாதானம் எல்லாவற்றையும் இறைத் திட்டத்தின் பகுதி என ஏற்க சொல்வதே. அதை ஏற்றுக்கொண்டால் யூதாஸ் சமாதனமடைந்து நிம்மதியாக வாழ்ந்திருக்கக் கூடும். ஆனால் சுய தேர்வின் வாய்ப்பையும் அதற்கான பொறுப்பையும் முற்றிலுமாக மறுத்ததாக ஆகும். ஆகவே அவன் தற்கொலை செய்துகொள்கிறான். தற்கொலைகள் ஒருவகையில் விதியின் வலைப்பின்னலுக்கு எதிரான கலகம். பழி தீர்ப்பு. சுமத்தப்படும் விதியின் வழித்தடங்களுக்கு எதிரான மறுப்பு. சுய தேர்வுக்கான சாட்சியங்களை வலுக்கட்டாயமாக நிறுவும் யத்தனங்கள்.

‘ஓ… தாவீது ராஜாவே!’ இதே கேள்விகளை கொண்டு வேறொரு பதிலை அடைந்த கதை என சொல்லலாம். நார்வே கடலில் மீன் பிடிக்கும் கிழவரின் கதை. கிழவனும் கடலை நினைவுபடுத்தும் காட்சியனுபவம்‌. கிழவர் தாவீது தந்தை மோசேயுவுடன் மீன் பிடிக்க சென்ற நினைவுகளில் ஆழ்கிறார். தேவன் நம்மை கைவிடமாட்டான் என தத்தளிக்கும் படகில் இருந்தபடி மோசேயு ஆறுதல் சொல்லும்போது ஒரு ராட்சச அலை அடங்கி செல்கிறது. ‘இத்தனை ஆண்டுகளாக கடல் என்றால் மிகவும் அமைதியான ஒன்று, ஒரு தாயைப் போன்றோ அல்லது தந்தையைப் போன்றோ எங்களை அரவணைக்கக் கூடியது என்று நினைத்திருந்தவனுக்குக் கடலின் இத்தனை மூர்க்கத்தனங்களையும் பார்த்தபோது வேதனையும் அதேசமயம் கோபமும் உண்டாயிற்று.’ எனும் இவ்வரியில் கடல் வாழ்க்கையின் குறியீடாகி அதன் கருணையின்மையை முதன்முறையாக எதிர்கொள்ளும் இளம் மனதின் தவிப்பு புலப்படுகிறது.  ‘முட்டாள்களையும் குழந்தைகளையும் தேவன் காப்பாற்றுவார். நீ குழந்தை, நான் முட்டாள், ஆகவே எதற்கும் பயப்படாதே என்றார்.’ இந்த உரையாடல் ‘தொலைந்து போன பைபிள்’ கதையில் லூக்காவுடன் டான் குவிக்சாதே பற்றி நிகழும் உரையாடலுடன் தொடர்புடையது. கிழவர் பெரும் முயற்சிக்கு பிறகு பிடித்த சிவலை மீன் அவரிடம் பேசத் தொடங்குகிறது. கிழவரும் தனிமையை போக்கிக்கொள்ள மீனிடம் பேசுகிறார். ‘நான் தோற்றுப்போனவன்’ என அரற்றுகிறார். மரணத்தை தவிர தனக்கு வேறென்ன எஞ்சி இருக்கிறது என மீனிடம் கேட்கும் கிழவரை தேற்ற மீன் மரணத் தருவாயில் பிழைத்து வந்த தாஸ்தாவெஸ்கியின் கதையை சொல்லி அவருக்கு ஆறுதல் அளிக்கிறது. மீனிடம் “இறப்பின் இறுதி நொடியில் என்னிடமிருந்து தப்பிவிடும் சாத்தியம் உள்ளதா?” என கேட்கும் கிழவரின் கேள்வி “தொலைந்து போன பைபிள்” கதையில் கதைசொல்லி அவனுக்கு துப்பாக்கி பயிற்றுவித்த ட்ரான்ஸ்கியிடம் கரடியை சுட சொன்னப்போது கேட்ட அதே கேள்வியின் நீட்சி. கொடும் பசியில் இருக்கும் தாவீது உயிர்வாழ வேண்டும் என மன்றாடாதபோதும் மீனை முத்தமிட்டு மீண்டும் நீரில் விடுகிறார். இந்த தருணத்தையும் “தொலைந்து போன பைபிள்” கதையில் கரடி சுடப்பட்டு இறப்பதுடன் ஒப்பிட முடியும். கரடி சுடப்படுவதிலும் மீன் உண்ணப்படுவதிலும் தான் பிழைத்திருக்க முடியும் எனும் நிலையில் இருவேறு முடிவுகளை இருவரும் எடுக்கிறார்கள். வீடு திரும்பும் தாவீது தனது பாடுகளில் பங்குபெறாத இயேசுவின் மீது கோபப்படுகிறார். தாவீது தனது வயிற்றை அறுத்து உள்ளுக்குள் உழன்று கொண்டிருக்கும் மலைப்பாம்பை வெளியே இழுத்து போட்டுவிட்டு வயிறை தைத்துக்கொள்கிறார். வீடு முழுவதும் பாம்புகள் சூழ்கின்றன. கடற்கரையில் சிற்றில் கட்டிக்கொண்டிருக்கும்போது இயேசு அவர் முன் தோன்றுகிறார். வீட்டுக்குள் திரும்பும்போது பாம்புகள் மறைந்து போகின்றன. இதே கதையில் மீன் முன்னர் பேசும்போது சாத்தானை விட கர்த்தர் வலிமையானவர் என சொல்கிறது. கொடும் பசியே உள்ளுக்குள் உழலும் பாம்பாக, சாத்தானாக உருவகப்படுத்தப்படுகிறது. இக்கதை எனக்கு இரண்டு கதைகளை நினைவுபடுத்தியது. ஒன்று தால்ஸ்தாயின் ‘where love is god is’ – இதில் மார்டின் எனும் மகனை இழந்த, செருப்புதைப்பவர் கனவில் வரும் இயேசு நாளை உன் வீட்டிற்கு வருவதாக சொல்கிறார். காலையிலிருந்து இயேசுவிற்காக காத்திருக்கும் மார்டின் வெவ்வேறு பாவப்பட்ட ஜீவன்களை சந்திக்கிறான். அவர்களுக்கு உதவுகிறான். இயேசு வராததை எண்ணி மருகும் அன்றிரவு கனவில் மீண்டும் இயேசு வரும்போது ஏன் வரவில்லை என கேட்கிறான். அதற்கு நான் தான் வந்தேனே என சொல்வார். பதின்ம வயதில் பள்ளியில் படித்த கதை. இயேசுவின் வருகையையும் இருப்பையும் உணர்த்தும் கதை. ஆயிரத்தொரு அரேபிய இரவுகளில் கடலில் மீன்பிடிக்க செல்லும் கிழவனிடம் கிட்டும் பேசும் மீன் கதை ஒன்றுண்டு. இக்கதையும் அமைப்பில் அத்தகைய தேவதை கதை/ நீதிக்கதை அமைப்பைக் கொண்டிருக்கிறது. தாஸ்தாவேஸ்கியின் கதையுலகிலிருந்து நன்னம்பிக்கையும் ஆசுவாசமும் அளிக்கும் தால்ஸ்தாய் கதையுலகிற்கு சென்ற கதை என இதை சொல்லலாம். சிலோன் நாதனும் யூதாசும் தற்கொலை செய்து இறந்து விட, மீதி இரண்டு கதைகளின் நாயகர்களும் உயிர் பிழைத்து இருக்கிறார்கள். தொலைந்து போன பைபிளின் நாயகன் நம்பிக்கையை தொலைப்பதன் வழியாகவும் தாவீது நம்பிக்கையை பற்றியபடியும். ஒருவகையில் ஒரே சிக்கலின் மூன்று சாத்தியமான விடைகளை சாதனாவின் கதைகள் பரிசீலிக்கின்றன என சொல்ல முடியும்.

தொகுப்பின் மீதி இரண்டு கதைகளும் எனது வாசிப்பில் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. ‘அக்கா’ இரண்டு சரடுகள் கொண்ட கதை. கதைசொல்லியின் கதை ஒரு பகுதியும். பிற பகுதிகள் அவன் எழுதும் கதையும் கொண்ட அமைப்பு. கதை சொல்லியின் கதை சற்றே சுவாரசியமான வாசிப்பை அளிக்கிறது. அவன் எழுதும் கதை எவ்விதத்திலும் புதுமையாகவோ அரிதாகவோ இல்லை. சாதி பிரச்சனை, இன சிக்கல், ஆணவக் கொலை போன்ற பேசு பொருளையே விந்தையான ஒரு நிலப்பரப்பிற்கு கொண்டு சென்று விவாதிக்கிறது. இரண்டாம் பகுதியில் கதைசொல்லியின் வாழ்க்கை விவரிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்து பாரிசில் ஒரு இத்தாலிய உணவகத்தில் வேலை செய்கிறான். அதன் பிறகு அவனுடன் வேலை பார்க்கும் மருது பற்றிய கதை வருகிறது. மருதுவைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போதே தன்னை பற்றி பேசத் தொடங்குகிறான் (மருதுவை பற்றிய கதையாகவே வாசிக்கப்படும்). முன்னர் வேலைப்பார்த்த அலுவலகத்திலிருந்து வெளியேறிய கதை, பெண்களுக்கு எதிரான ஆவேசம், பென்னியவாதிக்கு டில்டோ அனுப்பிய ஆணாதிக்கவாதி. முள்ளி வாய்க்கால் மரணத்தின் போது தற்கொலை செய்து கொள்ள எண்ணியவன். குடும்பத்திற்கு அறையை கொடுத்தவன். தன்னை தாஸ்தாவெஸ்கியுடன் ஒப்பிட்டு கொள்கிறான்.பெயரை மாற்றும் அளவிற்கு. கதை மாந்தர்களை அங்கிருந்தே எடுப்பதாக சொல்கிறான். தான் வாழும் உலகம் நாஜிக்களின் வதை முகாம் என எழுதுகிறான்.

தாத்தாவைக் காட்டிலும் முற்போக்காக இருந்த, ஜாதிகளே ஒழிய வேண்டும் என விரும்பிய தந்தை தன் மகள் வேறொரு இன ஆணை திருமணம் செய்தது பிடிக்கவில்லை என்பதால் அக்கா வீட்டை விட்டு வந்ததை அறிகிறான் என்பதே கதைசொல்லி எழுதும் கதை. லட்சியவாதத்தின் மீதான சலிப்பு அல்லது அவநம்பிக்கையை சொல்லும் கதை. ஒரு அரசியல் அல்லது தத்துவ கேள்விகளை கதைக்களனை பெயர்க்கும் (decontextualise) போது எழும் உயரம். உறவு சிக்கல்களின்/ சமூக அமைப்பின் கதைகளை பெயர்க்கும்போது நிகழ்வதில்லை. ஒட்டகப்பால், புகையிலை செடி, பெயர்கள் என புதிய யதார்த்தத்தை அளிக்க முற்படுகிறார். இதே சிக்கலே மற்றொரு கதையான ‘தாய்’ கதையிலும் உள்ளது. உறவுகளின் சுயநலம், சுரண்டல், துரோகம் போன்றவற்றை சொல்வதற்கு ரஷ்யாவின் பனி படர்ந்த பின்புலம் எவ்வகையில் உதவுகிறது?

‘தாய்’ ரஷ்யாவில் நிகழ்கிறது. கதையில் மாசி மாச பனி என்பதால் நான்கு இன்ச் அல்லது ஐந்து இன்ச் இருக்கும் என்கிறார். ரஷ்ய பின்புல கதையில் தமிழ் மாதத்தை கொண்டுவருவது பொருந்தவில்லை. பனிவெளியில் குதிரைகள் இழுக்கும் வண்டியை பற்றிய சித்திரம் (படர்கையில்?) வருகிறது. தன்னிலையில் கதைசொல்லி தனது தந்தைக்கும் தாயுக்கும் இடையிலான உறவை பற்றி சொல்கிறான். சிறுவனாக தந்தையின் பக்கமே அவன் சாய்கிறான். ரத்தம் வரும்படி தாயை தாக்கிவிட்டு தந்தை வெளியேறி செல்கிறார். அதற்காக அவனுக்கு தாயின் மீது உள்ளுக்குள் ஆத்திரம் கனன்று கொண்டபடி இருக்கிறது. அப்பாவிற்காக காத்திருக்கும் அம்மாவின் மாற்றங்களை நுட்பமாக சொல்கிறார். அப்பா இருந்தபோது வைத்த சூப்பை விட ருசியான சூப்பை வைக்கிறாள், காசு கொடுத்து அவளும் அவனுக்கு ஷூ வாங்கித் தருகிறாள். அவனுடைய தேவையை தீர்ப்பவரிடம் அவனுக்கு அன்பு கூடுகிறது. தனது சேகரிப்பை எல்லாம் முதிர்ந்த தாய் அவனிடம் அளிக்கும்போது அவனுக்கு அவள் மேல் பாசம் கூடுகிறது. அம்மாவிற்கு எதாவது செய்ய வேண்டும் என எண்ணும்போது நல்ல நிலையிலிருக்கும் தந்தையிடமிருந்து அவனையும் வரச்சொல்லி எழுதிய கடிதம் கிடைத்ததும் தந்தையின் மீது பெரும் கோபம் கொள்கிறான் யோகோவிச். அம்மா என்றாள் என்னவென்று உனக்கு காட்டுகிறேன் எனும் ஆவேசத்துடன் தனிமையில், தந்தையின் நினைவிலேயே வாழும் முதிர்ந்த அம்மாவை வண்டியில் ஏற்றிக்கொண்டு செல்கிறான். நடுவழியில் பனிப்பொழிவில் முதிர்ந்த அம்மாவை இறக்கிவிட்டு வண்டியில் கடந்து செல்கிறான் யோகொவிச். முதிர்ந்த தாயை காசுக்காக கைவிடும் மகனின் கதை இங்கே கதைகளிலும் நிகழ்வுகளிலும் நாம் நன்கறிந்த கருதான். முதியோர் இல்லத்திற்கு சென்றால் அத்தனைபேரும் இப்படியான கதையை சொல்வார்கள். மனிதர்களை பயன் கருதி கைவிடுவது என்பது இலக்கியத்தின் சாசுவதமான பெசுபோருல்களில் ஒன்று. ஆனால் ‘அக்காவின்’ சிக்கல் இதிலும் உண்டு. இந்த கதை கருவிற்கு கதை நிகழும் வெளி எந்த அளவிற்கு பங்களிப்பாற்றுகிறது? யோகொவிச்சின் அந்த முடிவைத்தான் நவீன இலக்கியவாதி எழுதுவார். நவீன இலக்கியத்தின் கருபொருட்களில் கூட தேய்வழக்கு உண்டு. தேய் வழக்கு என்பது என்ன சொல்லப்படுகிறதோ அதுவல்ல, அது எப்படி சொல்லப்படுகிறது என்பதே. சாரு முன்னுரையில் ‘இதுகாறும் பழகியிருந்த நிலங்களிலிருந்து விலகி இந்தப் பூமிக் கோளத்தில் நம்மைப் போலவே சிரித்து நம்மைப் போலவே கண்ணீர் விட்டு நம்மைப் போலவே துரோகம் செய்து நம்மைப் போலவே கொலைகள் செய்து நம்மைப் போலவே புணர்ந்து நம்மைப் போலவே சுரண்டப்பட்டு வாழும் வேற்று நில மனிதர்களின் கதைகளைச் சொல்கின்றன. இதுதான் இந்தக் கதைகளின் விசேஷம். இதுதான் முதலில் என்னை ஆச்சரியப்படுத்தியது. சாதனாவை கவனிக்கவும் வைத்தது.’ என எழுதுகிறார். சாரு இதை பெரும்பலமாக கருதுகிறார். ஆனால் ஒரு கதைக்கும் அது நிகழும் நிலப்பரப்பிற்கும் ஆதாரமான பிணைப்பு உள்ளது. தத்துவ நோக்கோ, வரலாற்று நோக்கோ இல்லாத கதைகளுக்கு இந்த கதைகள மாற்றம் பாதகமான விளைவையே ஏற்படுத்தும். பிற நான்கு கதைகளுக்கு அவற்றின் பேசு பொருள் காரணமாக இத்தகைய கதைக்களம் சாதகமான விளைவை ஏற்படுத்துகிறது. சாருவின் கூற்றை பொத்தாம்பொதுவான வரையறையாக கொள்ளமுடியாது. ஜெயமோகனின் ‘தேவதை’ ஒருவகையில் காந்தியின் வாழ்க்கையை ஆப்ரிக்க பின்புலத்தில் புனைந்த கதை. அந்நிய கதைக்களம் எங்கு தேவைப்படும்? சற்றே விலகி நின்று நோக்கும்போது நாம் நன்கறிந்த ஏதோ ஒன்றில் பண்பாட்டு/ வரலாற்று/ சமூக பூச்சுகளுக்கு உள்ளே அறியாத வேறொன்றின் இயங்குமுறை தென்படும். அப்படி ஒரு புதிய கோணம் கிட்டாதபோது கதைகளன் மாற்றப்படுவது ஒரு உத்தியாக மட்டுமே எஞ்சிவிடும். ஒரு கணவன் மனைவி சண்டை அமெரிக்காவில் நிகழ்வதாக கதை எழுதும்போது, அங்கே அமெரிக்க பண்பாடு எவ்வகையிலாவது ஊடுபாவை நிகழ்த்தியுள்ளதா என பார்க்கப்படும். அப்படி எதையும் நிகழ்த்தவில்லை என்றால் இந்த கதையை அமெரிக்காவிற்கு கொண்டு செல்ல என்ன காரணம் என வாசகன் ஒரு கேள்வியை எழுப்பக் கூடும். அப்படிச் செய்யக் கூடாதா? என்றால் அப்படியான விதிகள் ஏதுமில்லை. ஆனால் அது வாசிப்பில் ஒரு இடராகவே கருத்தில் கொள்ளப்படும். சிறுகதையின் மற்றொரு விதியான ‘சொல்லாதே காட்டு’ நினைவில் கொள்ளப்படவேண்டியது. தத்துவ பகுதிகள் நேரடியாக விவாதிக்கப்படுகின்றன. ‘புகழ்ச்சியானது ஒரு மனிதனின் திறமையை மழுங்கடிக்கச் செய்துவிடும் என்பதே அதற்குக் காரணம்’ போன்ற பொதுவான வரிகள் ஆங்காங்கு விரவிக் கிடக்கின்றன. ‘தனது வலது கையின் கட்டை-விரலுக்கு அடுத்துள்ள விரலினால் கண்ணாடியைத் தேய்த்து நத்தையை உசுப்பினார்’ என எழுதுகிறார். வலது ஆள்காட்டி விரல் என எழுத வேண்டிய இடத்தை இப்படி சுற்றி எழுதுவதான மொழி பயன்பாடுகள் ஒரு சில இடத்தில் இடறுகின்றன.  

சாதனாவின் கதைகள் அவை எடுத்துக்கொண்ட கேள்விகளை நேர்த்தியாக பின் தொடர்ந்தவை எனும் முறையில் முக்கியமான கதைகளாகின்றன. தனிப்பட்ட முறையில் எனக்கான கதைகள் என்றும் சொல்வேன். தமிழ் சிறுகதைகள் உலக நிலப்பரப்புகளில் விரிந்து பரவுவது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. எழுத்தாளர் சாதனாவிற்கு வாழ்த்துக்கள்.

கன்னியும் கடலும் – ஜெ பிரான்சிஸ் கிருபாவின் கன்னி நாவல் குறித்து வைரவன் லெ.ரா

கவிஞனின் நினைவுக் கோப்புக்குள் பழுப்பேறிய சில காகிதங்கள்:

‘அலையெழும்பி புதையுண்ட கண்டம் உண்டாம், குமரி அதன் பேராம். ஒற்றைக்கால் தவசில் ஒருத்தி பாறையொன்றில் நிற்கிறாள், காலம் அவளின் முன்னே பின்னே நகர்கிறது. தெறிக்கும் அலை அவ்வப்போது அவளின் உதட்டில் படிந்து, அவளே அறிவாள், சொட்டின் தணுப்பை. பின் வழிந்து கடலில் கலக்கும். முத்தத்தைப் போல, அத்துளி கரையை ஒரு நாள் தொடும். ஒரு கிழவன், அக்கரையில் சாவின் ருசியறியாது காத்திருக்கிறான். ‘

‘பெரும்கவியின் காலில் மாட்டிய சங்கிலிகள், அவனை நிகழ்பிரபஞ்சத்தில் இழுத்துப் பிடிக்கலாம். நகராதே! என பயமுறுத்தலாம். கனவின் சஞ்சாரம், எங்கு வேண்டுமோ அழைத்து செல்லலாம். அங்கே தடை போட யாருமில்லை. அவன் மாத்திரமே. கண்முன் விரிந்த பரந்து கடலும். அவன் நானாய் நின்றேன். அலை ஒன்றை நோக்கி ஓடினேன், அங்கே கண்டேன் வெள்ளை ஜிப்பாவும், கசங்கிய வேட்டியும், ஒட்ட சவரம் செய்த முகமுமாய் ஒருத்தர், சிரித்தபடி ‘இதானய்யா, கபாடபுரம்’ என்றார்.’

‘கடலாய் நிற்கிறாள் அவள், கைகள் காற்றிலே அசைக்கிறாள். ஒரே ஓசையால் இசைத்துணுக்கு ஒன்று காற்றிலே அலைந்து, ஓவென அதே ஒலியுடன் கரையை தவழுகிறது, வெம்மையான அணைப்பு. கடலாய் நிற்கிறாள், அக்கன்னி. மீண்டும் பிறக்கிறாள், இறக்கவே. எதன் கணம் நிகழ்கிறதோ! இவ்விளையாட்டு. நீலப்பறவை ஒன்றை நான் அறிவேன். உயர மட்டுமே அலையும். அதன் நிழல் அவளின் மேலே வியாபித்திருக்கும். சிலநாள் கரும்பறவை, சாம்பல் பறவை மேனியின் மேலே பறக்கும். நிழலை அள்ளி உண்பவள் அவள். கடலே, எல்லையற்றது. உருவகித்தேன் உன்னாலே. கனவே, நினைவே எல்லாம் கடலே. கரையெல்லாம் பாதச்சுவடு, எல்லாமுமே நான்தான். வெறிக்கிறேன், கருவிழியை பிடுங்கி உன்னுள் எறிகிறேன். வாறி எடுத்துக்கொள். உன்வழியே என்னைப் பார்க்க பிரயாசையில் ஒரு குழந்தையின் முயற்சி அவ்வளவே. ‘

‘அக்காள், கிழவியின் கனவில் வந்தாராம் கோனார். கையிலே இளம் ஆட்டுக்குட்டி. நிகழ்வை கனவு தீர்மானித்தது. நான் உன்னாலே கவிஞன் ஆனேன் தெரியுமா? தெரியுமா! நீயே நான். உன் பின்னே அலையும் நாய்குட்டி. அக்காக்கள் சொன்னது உண்மையே. எதுவுமே நம் கையில் இல்லையா? முடிவுகள் யாரோடது. உன்னுடைய பாதை, யாராலோ தீர்மானிக்கப்படுகிறது. நீ சகிக்கிறாய். உன் ஈரக் கூந்தல், பூக்களின் மணம் நுகர தடைப் போட நீ யார். நீ பெண்ணென்றதாலே சகிக்கிறாய். பெண்மையின் வரம் அது. நான் பாவப்பட்ட ஆண், உள்ளுக்குள் குமைகிறேன். உன்னையும், என் கடலையும் விட்டு தூரத் தேசம் சென்றேன். எதிலிருந்து விடுபட, என் முட்டாள்தனம். நீதானே நான்.’

‘உன் பார்வைகளின் தடயத்தை விட்டுச்செல்ல நீ எக்காலமும் மறப்பதில்லை. என்றாவது நான் அதை கவனிப்பேன் என. பெண்ணே! எப்படி புரியவைப்பேன். ஆணின் சிறிய அறையால் ஆன இருதயத்தை. அங்கே நீயாக நுழைய முயற்சித்தாய். நானே திணித்திருந்தால் உன் திருமண அட்டையை வாங்கியிருக்க மாட்டேன். நானே சமைத்த விதி இது விஜிலா’

‘புகைப்படத்தில் இன்றுமே கன்னியாய் நிற்கிறாள். என்னுள்ளே ஆற்றாமையாய் பெருகும் நீர்த்துளி, தணுப்பை மறந்து எரிகுழம்பாய் கொதிக்கிறது. மரியே! நின்னைச் சந்தித்தது யாதொரு குற்றம். மரியபுஷ்பா. உன் பார்வையே தவிர்க்கவே தினமும் நிந்திக்கிறேன். தெரியுமா? அது மகாகாயம்.’

‘சாரா. காதலுக்கு மறுபெயர் சூட்ட வாய்ப்பு கிடைத்தால், உன் பெயரையே சூட்டுவேன். உன் கொலுசும், வளையும் எழுப்பும் ஒலி ஒரு கொடும்ஆயுதம் என அறிவாயா? நீ உதிர்க்கும் வார்த்தைகளின் கனம் அறிவாயா? பூமியின் கனம். ஒப்புக்கொள், என் மெலிந்த இதயம் அதை தாங்கும் சக்தி கொண்டதா? விட்டொழி, உன் தடுக்கத்தை. அதானே, நீ கண்களால் என்னிடம் கூற விழைவது. ஏன் அவ்விரவு, அதில் நீயும் நானும் கலக்க வேண்டும். உன் உதடு, உப்புக்கரித்தது. கடலின் சுவை நான் அறிவேன். உன் கூந்தல், உடல், முலை, அக்குள், யோனி எல்லாமுமே உப்பு. கடலின் முத்தம் உப்புக்கரிக்குமா? என் கன்னியே. சப்பிய குடம் நான், எனக்கு உன் இடையில் இடமில்லையா?’

‘அத்தை, அறியாத முகத்திற்கு அழகு அதிகம். நம் ஆழ்மனதில் அழகிற்கு என்ன இலக்கணமோ! அதையல்லவா நாம் பொருத்திக்கொள்கிறோம். பாட்டியறிவாள். அவளுக்கு மகளுமுண்டு, அதே முகம். கனவுகளில் அவளோடு நான் பல அத்தியாயங்கள் வாழ்ந்திருக்கிறேன். சிறுமியாய், குமரியாய் எல்லாமுமே என்னுள் பரவியிருக்கிறது. அவளின் மணம் கூட அறிவேன். தாழம்பூவின் மணம்.’

‘கன்னி மேரியே! எதன் பொருட்டு நீ மறைத்தாய் உன் கர்ப்பத்தை. யார் அதன் தந்தை. இதல்லவா முதல். கடவுளை பலியாக்கி, அவனின் குழந்தையாக்கி. நீ கன்னியாகி! ஏன் பெண்ணே. பெரும்பிழை’

‘கடலில் மணல் குவிவதும் நல்லது, சிலநேரம் நீட்டித்து காலம் நீள்கிறதே. அவளோடு நான் நடக்கும் போதெல்லாம், நீ மகிழ்ந்தாயா? அலையற்று கிடப்பாய் அந்நேரம். நீயும் அறிவாயா? அவள் கன்னியென்று. நீயும் கன்னிதானே! என் கடலே. கிழவன் ஒருநாள் நானாய் இருப்பேன். அன்றாவது முத்தம் இடுவாயா உன் கரைக்கு’

வழிப்போக்கனின் சில குறிப்புகள்:

பிரான்சிஸ் சந்தனப் பாண்டி, சந்தையொன்றில் சந்தித்தேன். உயிரை பிய்த்து, பிரபஞ்ச சமுத்திரத்தில் கலந்துகொண்டிருந்த ஒரு ஆத்துமாவை அவன் கையிலே வைத்திருந்தான். மெசியாவின் கருணையை அறியாத சாதாரண மனிதன், அவனை அழைத்து சென்றான் எங்கோ. மணப்பாட்டில் சந்தித்தேன் ஒருமுறை, அந்தோணியார் குகை முன்னே, சப்பணங்கால் போட்டமர்ந்து கடலோடு பேசிக்கொண்டிருந்தான். எனக்கு அதிகப்பிரசங்கித்தனம், எட்டிப் பார்க்க கன்னி வெட்கத்தோடு கடலில் அவளின் பரியில் ஏறிப் புறப்பட்டு விட்டாள். மெல்லிய புன்னகையோடு என்னைக் கடந்து சென்றான். மற்றொரு நாள் மணப்பாட்டில் இவனோடு, அழகான பெண்ணொருத்தி கடற்கரையில் பாதம் புதைய நடந்தாள், யார் என்றேன், அக்கா என்றான். பிழைத்தேன். மீண்டும், சுலோச்சன முதலியார் பாலத்தில் சந்தித்தேன். பலநாள் பரிச்சயமோ, மெல்லிய புன்னகை உதிர்த்தான். அது தாமிரபரணியில் கலந்தது. விட்ட புன்னகையை தேடி, ஆற்றில் பார்த்தேன், விட்டான் கெட்டான்.

ஏதோ அவனுள் புகுந்துள்ளது என ஊரார் கேட்டு, நானும் சென்றேன். ஏலான ஆசாரி, சங்கிலிக்கு அளவு எடுத்துக்கொண்டிருந்தார். அவனின் பம்பரம், ஆணி அடிக்கையிலே உடையும் போதும் நான் அங்கிருந்தேன். அவன் அறிவான் எல்லாமுமே, அவன்தானே அழைத்துச்சென்றான். அவன் சொற்களின், கனவுகளின் பித்தன், ஆகவே கவிஞன். அவன் மாத்திரம் தரிசிக்கும் கடல் உண்டு. அங்கே மீனும், பால் நண்டும் உண்டு. கரையிலே குடிசை உண்டு, அங்கே கள்ளுடன் கிழவனும் உண்டு. பாதம் மீன்களாகும் பாதை ஒருமுறை அவன் சொன்னான்.

வழிப்போக்கனின் கைகளில் புத்தகம். கண்களை மூடி சொற்களின், கனவுகளின் சமுத்திரத்தில் ஆசைத் தீர நீந்தினேன். கூடவே பிரான்சிஸ் கிருபா எனும் தூய ஆத்துமாவின் எழுத்தில் கரைந்தேன்.

ஒரு புத்தகம் முழுக்க கனவின் சாயல். ஏன் என்றால் ‘கன்னி’ கவிஞனின் நாவல். வழிப்போக்கன் நான் ஈரிரு நாள் வாழ்ந்தது அங்கேயே. நன்றி கூறுவேன் அவனுக்கு, அவன் ஜெ பிரான்சிஸ் கிருபா .சொற்களின் கனம், உணர்ச்சிகளின் குவியல், எது சரி? தவறு? என்பதை நிர்ணயிக்க நாம் யார்?.

பாரிஸ் – அரிசங்கர் நாவல் குறித்து வை.மணிகண்டன்

பாரிஸ் என்னும் கனவின் நிஜத்தை கண்டு விரும்பத் தொடங்கி நிழல் மட்டுமே வசமாகி இருக்கும் சமூக கைவல்ய நிலையை உரசி செல்லும் புதினம் “பாரிஸ்”.
பாரிஸ் என்னும் கனவினுள் நிஜம் உண்டு, பாவனை உண்டு, அற்பத்தனம் உண்டு,லௌகீகம் உண்டு, கனவின் லட்சியமும் உண்டு,அக்கனவு குறித்த அலட்சியமும் உண்டு.

கனவை நினைவாக்க எடுக்கப்படும் பிரயத்தனங்கள் ஏற்படுத்தும் பதற்றம் நாவலின் அடி நாதமாக இருக்கிறது. இந்த பிரயத்தனங்கள் குறித்து வாசிக்கையில் வாசகனுக்கு அசூயையும் கோபாவேசமும் தோன்ற வாய்ப்பிருக்கிறது, அசூயையும் கோபத்தையும் தூண்டும் வாசகனின் தார்மீகத்தை நம்பியே இந்த புதினம் எழுதப்பட்டிருக்கிறது. இவற்றைத் தாண்டி நாவல் காட்டும் யதார்த்தம் வாசகனின் தார்மீகம் எல்லா இடங்களிலும் செல்லுபடியாகுமா  என்ற கேள்வியை முன் வைக்கிறது. யதார்த்தம் என்பது லௌகீகம் முன் பல்லிளித்து நிற்கும் தார்மீகம் தான்  என்றும் கூறப்பார்க்கிறது.

கனவின் நியாயம் என்று ஒருவர் வகுக்க இயலாது. அக்கனவினை அடைய ஒருவன் மேற்கொள்ளும் முயற்சிகளில் நியாய அநியாயங்கள் , பாவனைகள், சோம்பல்கள் , முட்டாள்தனங்கள் இருக்க வாய்ப்புண்டு , கனவுகளை அடைய விடலைத்தனமான முயற்சிகள் தொடங்கி காரியார்த்தமான செயல்கள் வரை மேற்கொண்டு கனவுகளை துரத்திய படியே
யதார்த்தத்தை வந்தடையும் பல்வேறு கதைமாந்தர்கள் வழி புதுச்சேரியின் தெருக்களில் வாசகன் நடை பயில்கிறான்.

நாவலின் வடிவத் தேர்வு அருமை, குறிப்பாக நிகழ்வுகளையும் முன் நிகழ்ச்சிகளையும் கோர்த்திருக்கும் கொக்கி போன்ற அந்த கண்ணி  அமைப்பு வாசிப்பை சுவாரஸ்யமானத்தாக்குகிறது.

செட்டில் ஆவது – வாழக்கையை துவங்கும் முன்னரே செட்டில் ஆகத் துடிக்கும் , பொருளாதார தன்னிறைவு அடைய முயலும், தங்கள் சூழலை முற்றும் துறந்து அந்நிய நிலத்தில் தடம் பதிக்க நினைக்கும் இளம் தலைமுறையினர் காட்டும் பதற்றம் நாவலின் ஜீவநாடி. இந்த பதற்றம் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி பரவலாக அமையப்பெற்றுள்ளது,

ரபி ,கிறிஸ்டோ மற்றும் அசோக் பொருளாதாரத்தின் இரு எல்லையில் இருப்பவர்கள், இம்மூவரும் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் வேவ்வேறானவை.
ஆனால் மூவருமே விளிம்பு நிலையில் இருப்பவர்கள், ரபியின் பொருட்கனவு இன்னொருவனின் லௌகீதத்தின் முன் தோற்கிறது, அசோக் யதார்த்தத்தின் முன் தோற்கிறான், கிறிஸ்டோ அன்பை கைவிட்ட செல்வத்தின் எல்லையின்மை முன் தோற்கிறான்.

கலாச்சார ரீதியாக தன்னை அயல் குடிமகனாக காட்டிக்கொள்ள முயலும் அசோக் இன் அசல் பிரச்னை பொருளாதாரம் தொடர்பானதாக இருக்கிறது, பொருளாதார நிறைவு பெற்ற ரபி யின் ஆசை அயல் நாடு போவதேனினும் அவன் எதிர்பார விதமாக சந்தித்த சிக்கல் உறவு ரீதியானது, அன்பை அடைய முயலும் கிறிஸ்டோ வின் அசல் பிரச்சினை அவனது குடும்ப அந்தஸ்து குறித்தது. பதற்றத்தின் மூல காரணங்களாக நாம் நாவல் வழி கண்டுகொள்வது , இந்திய தேசம் குறித்த கலாச்சார தாழ்வுணர்ச்சி , அயல் நாட்டு மோகம், தனி மனிதனின் பொருளாதார சுமை, பணம் சேர்ப்பதின் எல்லையின்மை குறித்த உணர்வின்மை.

கிறிஸ்டோ விரும்பும் கலாச்சார சுதந்திரம் அசோக்கை சுற்றி அமைந்திருக்க வாய்ப்பிருக்கிறது, டைலர் என்னும் கதாப்பாத்திரம் வழி நாம் உணர்வது இதையே , உறவு தொடர்பான சிக்கல் பெரிதும் அற்ற பாரிஸ் ஒத்த கலாசார சூழல் நம் நாட்டின் பொருளாதாரத்தில் தாழ்ந்த விளிம்பு நிலை மனிதர்களிடம் உள்ளதோ ? அதே நேரத்தில் பொருள் சேர்த்தலுக்கும் உறவு சிக்கல்களுக்குமான பொருந்தாத முடிச்சு குறித்து  ரபி அறிகிறானோ ? மிதமிஞ்சிய செல்வத்தின் மலட்டுத் தன்மை கிறிஸ்டோவை தவிக்க விடுகிறதோ ? ரபியின் பொருள் x காதல் என்பதான இரட்டை நிலை கிறிஸ்டோவின் அன்பிற்கும் அசோக்கின் பொருளிற்கும் இடையே வைக்கத்தக்கது.

சமகால பொருளாதார ஏற்றத் தாழ்வின் குறியீடு போல் அமைந்துள்ளது நாவலின்  கடைசிப் பகுதி, “பாரிஸ்” என்னும் நிழலின் தன்மையை மூவரும் அறிந்து கொள்கின்றனர். அசோக், கிறிஸ்டோ,  ரபி மூவரும் கண்ட வெவ்வேறான அதே கனவினை விடுத்து எதேச்சையின் கரம் பற்றி தங்கள் பயணத்தை துவங்குகின்றனர்.
செல்வம் எனும் இந்தப் பேயுடன் நாம் வரவேற்பறையில் உரையாடி கொண்டிருக்கையில், நம் உள்ளறைகளிலிருந்து அன்பு விடைப்பெற்றுக் கொண்டே இருக்கிறது.

“பாரிஸ் “அரி சங்கர் எழுதியுள்ள முதல் நாவல். பதிலடி என்னும் சிறுகதை தொகுப்பு வெளி வந்துள்ளது

உண்டி முதற்றே உலகு! – நாஞ்சில் நாடன் கட்டுரை

அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சில சிறுகதைகள், கட்டுரைகள் வாசித்து ஷா நவாஸ் எனும் பெயரை ஏற்கனவே அறிந்திருந்தேன். எனது அறுபத்தெட்டாவது வயதில் முதன் முறையாக சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் அழைப்பின் பேரில் திருமதி. சித்ரா ரமேஷ் அவர்களின் விருந்தினராக 2016 மார்ச் மாதம் சென்று சில நாட்கள் தங்கியிருந்தபோதுதான் அவரை நேரடியாக அறிந்துகொள்ள முடிந்தது. அநேகமாகத் தினமும் சந்தித்து உரையாடினோம்.

அப்போது எனக்கவர் கையளித்த ‘ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்’ எனும் கட்டுரைத் தொகுப்பும் ‘மூன்றாவது கை’ எனும் சிறுகதைத் தொகுப்பும் இந்தியா திரும்பிய சில மாதங்களுக்குள் வாசித்து விட்டேன். ஆனால்,அயல் பசி’ என்ற கட்டுரைத் தொகுப்பு புத்தகக் குவியலில் மூச்சு முட்ட அடுக்கப்பட்டிருந்தது.

பிறகே அறிந்து கொண்டேன் அவர் இராமநாதபுரம் நத்தம் (அபிராமம்) எனும் ஊரில் பிறந்தவர் என்பதும் என்னில் பன்னீராண்டு இளையவர் என்பதும். வேதியியலில் பட்டப் படிப்பும் அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறையில் பட்ட மேற்படிப்பும் பெற்றவர். மத்திய அரசுத்துறையில் பணிபுரிந்து தற்போது சிங்கப்பூரில் குடியேறி உணவகம் நடத்துகிறவர்.

யாவற்றுக்கும் மேலான அவர் சம்பத்து, படையொடுங்காத பூரித்த சிரிப்பு. அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சத்து நேசம் காட்டும் முகம். இரண்டாம் முறை, செப்டம்பர் 2016ல் சிங்கப்பூர் சென்ற எனக்கு அன்றே ஊர் மடங்க வேண்டியதிருந்தது. தொண்ணூறு வயதில் அம்மாவின் இறப்பு. என்றாலும் 2016 நவம்பரிலும் 2017 நவம்பரிலும் மலேசிய நாட்டு ம. நவீன் ஏற்பாடு செய்திருந்த வல்லினம் அமைப்பின் இலக்கியப் பயிற்சி முகாம்களுக்கு கோலாலம்பூர் போயிருந்தபோது நண்பர் ஷா நவாஸ் சிங்கப்பூர் வந்திருந்தார். சிலமணி நேரம் உடனிருந்து உரையாட முடிந்தது.

தற்போது நாம் பேச முற்பட்ட விடயம், ஷா நவாஸ் அவர்களின் ‘அயல் பசி’ எனும் நூல் பற்றியது. 144 பக்கங்களே கொண்ட சின்னப் புத்தகம். 2014ம் ஆண்டில் உயிர்மை வெளியிட்டது. உயிரோசை’ மின்னிதழில் 2012-ம் ஆண்டு ஷா நவாஸ் எழுதிய கட்டுரைத் தொடர் இது.

2020ம் ஆண்டின் மார்ச் 24ம் நாள் முதலான ஊரடங்கு நாட்களில் முதல் வேலையாக எனது நூலகத்தின் புத்தக அடுக்குகளைத் தூசி தட்டித் துடைத்து மறு அடுக்குதல் செய்யத் தலைப்பட்டேன். எழுத்து ஊற்று வற்றிக்கிடக்கும் நாட்களில் – எப்போது அது பெருக்கு எடுத்துப் பாய்ந்தது என்று கேளாதீர் ஐயன்மீர்!ஏதோ ஒரு அடுக்கைச் சீரமைக்க ஆரம்பித்தால் அடுத்த நாளே அமர்ந்து ஏதாவது எழுதத் தோன்றும் எனக்கு.

ஒருவன் குடித்துவிட்டு வந்து பெண்டாட்டி முதுகில் சாத்து சாத்தென்று சாத்துவானாம். தினமும் நடக்கும் மண்டகப்படி. ஒருநாள் கணவன் வெளியூர் போய்விட்டான். மனைவிக்கு அரிப்பெடுக்க ஆரம்பித்ததாம். ஆபத்தான கற்பனை வேண்டாம், முதுகில்தான். முதுகுத் தினவு தாங்க முடியாமற் போனபோது, ஒரு பையில் ஐந்து பக்கா அரிசி அளந்து கட்டி, அதை உத்தரத்தில் வாகான உயரத்தில் தொங்கவிட்டு, வேகமாக ஆட்டிவிட்டு, வேகமாக வரும் அரிசிப் பைக்குத் தோதாக முதுகைக் காட்டி நிற்பாளாம் தினவு தீரும்வரை. 1960ல் என் அப்பனைப் பெற்ற ஆத்தா பறக்கை நெடுந்தெரு வள்ளியம்மை எனக்குச் சொன்ன கதை. பெண் விடுதலைப் புரட்சி அன்று தொடங்கியிருக்கவில்லை என்பதால் வள்ளியம்மையை இன்று தண்டிக்க இயலாது. அவளது சாம்பல் கரைக்கப்பட்டும் 42 ஆண்டுகள் இற்றுப் போயின. எதற்குச் சொல்லவந்தேன் என்றால், நமக்கு எழுதுவதும் வாசிப்பதும் தினமும் முதுகில் சாத்துமுறை வாங்கும் மனையாட்டிபோலப் பழகிய காரியமாகிப் போயிற்று.

மலையாளத்தில் சொல்வார்கள், எலிக்குப் பிராண வேதனை பூச்சைக்கு வீணை வாயனை’ என்று. தமிழில் சொன்னால், வேட்டையாடப்படும் எலிக்கு உயிர் வேதனை, வேட்டையாடிய பூனைக்கோ வீணை வாசிப்பதைக் கேட்பது போன்றது. எழுதுபவனுக்கு எலியின் வேதனை. தமிழ் வாழ்க எனக் கொக்கரிப்பவனுக்குப் பூனையின் சுக பாவனை.

புத்தக அடுக்குகளில் இருந்து உடனடியாகப் படிக்க என 150 புத்தகங்கள் தனியாகப் பிரித்து வைத்தேன். கடந்த 150 நாட்களில் கிட்டத்தட்ட வாசித்து ஒதுக்கினேன். எல்லாம் காசு கொடுத்து கடந்த ஈராண்டு புத்தகக் காட்சிகளில் வாங்கியவை. பள்ளி கல்லூரிகளில் உரையாற்றப் போனபோது கிடைத்தவை. இளைய எழுத்தாள நண்பர்களால் வாசித்துப் பார்க்கத் தரப்பட்டவை. வாங்கியதோ அல்லது கையளிக்கப்பட்டதோ, தன்வயம் வரும் எப்புத்தகத்தையும் வாசிக்காமல் நான் கடத்துவதில்லை. சிலவற்றை புரட்டிப் பார்த்துத் தள்ளி வைப்பேன். வாசித்த யாவற்றையுமே கருமி பொருள் சேமித்து வைப்பதுபோல் வைப்பதிலும் எந்தப் பயனும் இல. துய்ப்பேம் எனினே தப்புந பலவே!’ என்பது புறநானூற்றில் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடலின் ஈற்றடி.

இன்னொரு முறை வாசிக்க வேண்டும் அல்லது பின்னர் உதவும் என நினைப்பவற்றை மட்டுமே பாதுகாப்பேன். எனக்கு மேலால் அவசியப்படாது எனக்கருதுவன பலவற்றையும் வீட்டுக்கு வரும் நண்பர்களிடம் கடத்தி விடுவேன். சிலவற்றைத் தூதஞ்சல் மூலம் அனுப்பி விடுவதும் உண்டு. எப்படியும் எந்த நாளிலும் என்னிடம் எட்டாயிரம் புத்தகங்கள் இருக்கலாம். சித்திரபுத்திரன் கணக்குப் பார்க்கும் நாளிலும் வாசிக்கப்படாமல் இருநூறு நூல்கள் கிடக்கும்.

‘அயல் பசி’ வாசித்து முடித்த கையுடன் தனியாகத் தங்கரியம் செய்து வைத்த பிறகே இந்தக் கட்டுரையை எழுதத் துவங்குகிறேன். எங்க அம்மா வெக்கற மாரி வத்தக்கொழம்பு இந்த லோகத்திலே யாராலும் வெக்க முடியாது” என்பது போன்ற Qualifying Statements விடுகிறவர்களுக்கான புத்தகம் அல்ல அயல்பசி. திறந்த மனமும் உணவில் நேசமும் மதிப்பும் கொண்டவர்கள் வாசிக்க வேண்டிய நூல்.

கடல் உணவுகளில் மீன் சாப்பிடுகிறவர்களிடையே நண்டு, சிப்பி, திரைச்சி, சுறா, கணவாய் சாப்பிடாதவர் உண்டு. உண்ணாதவரை, உண்ண விருப்பம் இலாதவரை, நினைத்தாலே ஓங்கரித்துச் சர்த்திப்பவரை எவரும் நிர்ப்பந்திப்பது சரியல்ல. என் அம்மை சாகிறவரை கடலை எண்ணெய் பயன்படுத்தியவள் அல்ல. அவளுக்கானது நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், தரித்திரம் செலுத்தியதால்தான் ரேஷன் கடை பாமாயில் வாங்கினாள். அதற்கென்ன செய்ய இயலும்?

மெய் கூறப் புகுந்தால் 32 அத்தியாயங்களில் பேசப்பட்டிருக்கும் உணவுப் பதார்த்தங்கள், செய்முறைகள், கருவிகள், விவரிக்கப்படும் காய், கனி, கிழங்குகள், மீன்கள், விலங்குகள், பறவைகள் பற்றி எனக்கு ஒரு அறிவும் இல்லை. உலகின் ஆகச்சிறந்த உணவு சம்பா அரிசிச்சோறு, வறுத்து அரைச்ச மீன் கறுத்தக்கறி, புளிமுளம், சைவ உணவெனில் அவியல், எரிசேரி, புளிசேரி, மொளவச்சம், ஐந்து வகைப் பிரதமன், இலைப் பணியாரம், கொழுக்கட்டை, உளுந்தங்களி, வெந்தயக்களி என நம்பும் வயதும் முன்முடிவுமே எனக்கு.

நண்டு, சிப்பி என சாப்பிட்டுப் பழகியிராதவன். சொல்லப்போனால் தலைக்கறி, குடல்கறி, ரத்தப்பொரியல் யாவும் அந்நியம். கடல்மீன் தின்னும் பிராந்தியத்தவன். ஆற்றுமீன், குளத்துமீன் ருசி அறியாதவன். வளர்ந்து ஆளாகி வேலைக்குப் போய் தேசங்கள் சுற்றிக் கறங்க ஆரம்பித்த பிறகே, கஞ்சி குடிச்ச மலையாளி சோத்தக் கண்டா விடுவானா? எனும் நிலைக்கு மனம் தேறியது. நியூயார்க்கில சாப்பிட்ட கணவாயும், டொரண்டோவில் சாப்பிட்ட சுட்ட மாட்டிறைச்சியும், டோக்கியோவில் சுவைத்துத் தின்ற சூஷியும், சிங்கப்பூரில் நண்பர்கள் வாங்கித்தந்த சகல கடல்வாழ் உயிரினங்களின் தாய் சூப்பும், கொலாலம்பூரில் சக்கைப் பிரதமன் போலிருந்த இனித்த கிரேவியில் பொரித்து மிதக்கவிடப்பட்டிருந்த மீனும், மலேசியத் தமிழ்ச் சங்கத் தலைவர் வாங்கித் தந்த மான் இறைச்சியும், பிரான்சில் ஸ்ட்ராஸ்பூர் நகரில் நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் பிரஞ்சுக்கார நண்பர் வாங்கித்தந்த பன்றி இறைச்சியும் மூன்று வகை வைனும், மெல்பர்ன் நகரில் யாழ்ப்பாணத்து சகோதரி கலாவதியின் தம்பி மனைவி செய்து தந்த, வாழ்க்கையில் முதல் முறையாக நான் சாப்பிட்ட சம்பலும்

புறநானூற்றில் மிளைகிழான் நல்வேட்டனார் பாடல்வரி பேசும், நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்று” என்று. நீண்ட நேரம் சொற்பொழிவாற்றுவதும் கண்டபடி விரைந்து பயணங்கள் மேற்கொள்ளுவதும் சம்பத்து அல்ல என்பது பொருள். மேற்சென்று நான் உரைக்க விரும்புவது சுவையான விருப்பமான உணவை வயிறார உண்பதுவே செல்வம். நெடுஞ்சாலை ஓரத்து பஞ்சாபி டாபாவில், லாரி டிரைவர் ரொட்டி பிய்த்துத் தின்பதைக் கண்டவர் உணர்வாரதை.

வாஷிங்டன் டி.சி. சதுக்கத்தில் நின்றுகொண்டு தயிர்சாதமும் மோர் மிளகாயும் கேட்கும் கதாபாத்திரங்களும் உண்டு. பாம்பு தின்கிற ஊருக்குப் போனால் நடுக்கண்டம் நமக்கென்று சொல்ல வேண்டும் என்பார்கள் ஊரில். எத்தனை ஆயிரம் கோடி அபகரித்து என்ன பயன் அரை இட்டிலியை மிக்சியில் அடித்துக் கரண்டி கொண்டு ஊட்டப்படும் நிலை வருமாயின்? பசியையும் சீரணிக்கும் சக்தியையும் தந்த இறைக்கு நன்றி கூறத்தானே வேண்டும்! அதனால்தானே இறைவன் ஏழைக்கு உணவு வடிவத்தில் வருவான் என்றனர்!

1981ம் ஆண்டு Authors Guild of India மாநாட்டில் கலந்துகொள்ள புதுதில்லி சென்றிருந்தேன். என் நண்பர் வீட்டில் தங்கியிருந்தேன். பெயர் நீலமேகாச்சாரியார் சந்தானம். வடகலை வைணவர். கும்பகோணத்தில் தி. ஜானகிராமன் வீடிருந்த தெருவுக்குப் பக்கத்துத் தெரு. தி.ஜா.வின் தீவிர வாசகர். ஒருநாள் மதிய உணவின்போது “சாம்பார்ல ஏதாம் வித்தியாசம் தெரியுதாய்யா? என்றார். ஏன் நல்லாத்தானே இருக்கு!” என்றேன். வெங்காய சாம்பார்யா உமக்காக விசேஷமாச் செய்தது!” என்றார். அதாவது உணவில் பூண்டு, வெங்காயம் சேர்த்துக் கொள்வதே ஒரு மரபு மீறலாகக் கொள்ளப்பட்டது. எனில் பன்றிக்கறியும் மாட்டுக்கறியும் மறைவாய் வாங்கும் இருவழியும் தூய வந்த குலப்பெருமை பேசும் வீடுகளையும் நானறிவேன் ஐம்பதாண்டுகள் முன்பே.

நாய்க்கறி தின்ற சிறுகதை ஒன்றுண்டு ஆ.சி. கந்தராசா கதைத் தொகுப்பில். என் நெருங்கிய நண்பர் ஒருவர், தரைப்படையில் பணிபுரிந்தவர், வடகிழக்கு எல்லையில் பணிபுரிந்து, நண்பர்கள் வீட்டுத் திருமணங்களுக்குச் சென்றால் நாய்க்கறி தவிர்க்க இயலாதது என்றார். முகம் நோக்கிக் கேட்டேன் “நீங்க திண்ணுருக்கேளா? என்று. அவர் பதில் தவிர்க்க இயலாது என்பதும் மறுத்தால் அவமதிப்பாகக் கருதப்படும் என்பதும்.

நாம் முன்பு சொன்ன என் நெருங்கிய நண்பர் நீலமேகாச்சாரியார் சந்தானம் குடும்பத்துடன் கன்னியாகுமரி போயிருந்தபோது, குடும்பத்தை அங்கேயே விட்டுவிட்டு என் ஊரைக் கண்டுவர பேருந்து பிடித்துப் போனார். என் தங்கை விருந்து உபசரிக்கக் கோழி அறுத்துக் குழம்பு வைத்து இலை போட்டு சோறு விளம்பிக் கறியும் ஊற்றினார். புரிந்துகொண்ட நண்பர் துண்டைப் பொறுக்கித் தள்ளி வைத்து, பிசைந்து சாப்பிட்டு எழுந்தார். இதையவர் ஊர் திரும்பியபிறகு என்னிடம் சொன்னபோது எனக்குக் கண்கள் கலங்கின.

முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்

எனும் நற்றிணைப் பாடல் வரியின் பொருள் விளங்கியது எனக்கு.

ஷா நவாஸ் Song Bird சூப் என்றும், சேவல் கொண்டைக் கறி என்றும், ஆடு மாடு பன்றி இரத்தத்தில் செய்யப்படும் Black Pudding என்றும், Bat Paste என்றும், விடத்தன்மை கொண்ட Fugu மீன் என்றும், தெளிவாக விரிவாகப் பேசுகிறார். இவை எவை பற்றியும் இதற்கு முன் நான் கேட்டதில்லை. எக்காலத்திலும் இனி உண்ணப் போவதும் இல்லை, விருப்பும் இல்லை. யாவற்றையும் ஷா நவாஸ் ருசி பார்த்திருப்பார் என்ற உறுதியும் இல்லை.

பாரதிமணி அண்ணா அடிக்கடி சொல்வார், கடுக்காயைத் தொட்டானாம் கோவணத்தை அவிழ்த்தானாம்” என்று. கடுக்காயைத் தொட்ட உடனேயே மலம் இளகிவிடும் என்பதற்கான மிகைச் சொல்லாடல் அது. ஷா நவாஸ் ஜாவானியப் பழமொழியொன்று கூறுகிறார், டுரியான் ஜாத்து சாரோங் நைக்” என்று. அதற்கு அவர் எழுதும் மொழிபெயர்ப்பு – “மரத்தில் இருந்து டுரியான் விழுந்தவுடன் கைலி மேலே தூக்கும்” என்று. கைலி என்றால் லுங்கி அல்லது சாரம்.

நான் முதலில் பயணம் போன நாடு மலேசியா. ஜனவரி 2010ம் ஆண்டில் மலேசியா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலக்கியப் பயணம். ஏற்பாடு செய்தவர் மலேசியத் தமிழ் அமைச்சர் டத்தோ சரவணன். நல்ல சொற்பொழிவாளர். சைவத் திருமுறைகள் கற்றவர். நவீன தமிழ் இலக்கியம் வாசிப்பவர். பத்துமலை முருக பக்தர். தைப்பூசத்தின்போது மலேசியப் பிரதம மந்திரி கலந்து கொண்ட கொண்டாட்டங்களில் எங்களையும் கலந்து கொள்ளச் செய்தார். பத்துமலை குகைகளுக்கும் படியேறிப் போனோம். பன்மையில் நாம் பேசுவதன் காரணம், எங்கள் குழுவில் ஜெயமோகன், மரபின் மைந்தன் முத்தையா, இலக்கியச் சொற்பொழிவாளர் த. இராமலிங்கம் என்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர், கல்கி வார இதழ் சார்பில் சந்திரமௌலி, இளம் படைப்பாளி கனகதூரிகா. தைப்பூசம் திருவிழாக் கூட்டத்தில் நான் தப்பிப் போய் அலைந்தது தனிக்கதை.

அந்தப் பயணத்தின்போது டுரியன் பழமும் மங்குஸ்தீன் பழமும் உண்ண ஆசைப்பட்டேன். நாங்கள் தங்கியிருந்த நட்சத்திரப் பல்லடுக்கு விடுதியில் அறிவிப்பே வைத்திருந்தனர் டுரியன் பழத்துக்கு அனுமதி இல்லை என்று. என் வேண்டுகோளை ஏற்று அமைச்சர் டத்தோ சரவணன் ஏற்பாடு செய்தார். அவரது உதவியாளர் சாலையோர டுரியன் பழச்சாலைக்கு அழைத்துச் சென்றார். பார்வைக்கு பலாப்பழத்தின் சிறு வடிவம். உள்ளே சுளை அமைப்பே பலாப்பழ வரிசைதான். நம் மக்கள் சிலருக்கு பலாப்பழ மணமே தலைவலியைத் தருமாம். டுரியன் பழ வாசனை தலைச்சுற்று, மயக்கம், வாந்திகூட ஏற்படுத்தி விடலாம். டுரியன் பழ வாசனையைக் கூர்மையான, கருத்த, அடர்ந்த வாசனை எனப் பகர்ந்தாலும் அதனை வகைப்படுத்தியது ஆகாது.

பழச்சாலையில் பழம் தேர்ந்து வெட்டி எடுத்து சுளை பிரித்துப் பரிமாறினார்கள். நாங்கள் அறுவரும் உதவியாளருமாக இரண்டு டுரியன் பழத்துச் சுளைகளைத் தின்றோம். எவருக்கும் கைலி தூக்கவில்லை, காற்சட்டை அணிந்திருந்ததால் இருக்கலாம்.

ஷா நவாசின் நூலின் பல பகுதிகளில் பேசப்பட்டுள்ள பல உணவுத் தினுசுகளை எந்தக் காலத்திலும் நான் தின்னப் போவதில்லை. ஏன் பார்க்கக்கூட போவதில்லை. பிறகல்லவா பரிந்துரைப்பது! என்றாலும் நூல் முழுவதையும் ஒவ்வாமையின்றி வாசித்தேன். அது நூலாசிரியரின் செய்நேர்த்தி. சலிப்பற்ற சொல்முறை. இணக்கமான மொழி.

பாப்புவா நியூகினியில் மரத்தடியில் ஊரும் எறும்புகள், தாய்லாந்தின் Rice Bugs, ஆஸ்திரேலியாவின் பிளம் பழத்தின் புழுக்கள், சீனாவின் Boby Mice Wine, யப்பானில் கணவாய் மீனைச் சமைக்காது கரைசலில் ஊறவைத்துக் குடிப்பது, மெக்சிகோவில் பச்சை மீனை எலுமிச்சைச் சாற்றில் ஊற வைத்துச் சாப்பிடுவது எனப் பற்பல தகவல்கள் உண்டு நூலில். பூச்சியியலின்படி 1462 வகைப் புழுக்கள் உண்ணத்தகுந்தவை, Edible என்கிறார்.

இந்து மரபையும் வேத தர்மத்தையும் மநு சாத்திரத்தையும் இன்னுயிர் ஈந்தும் காத்திட, பரப்பிட, வளர்த்திட முயலும் இந்தியரும் இன்று விரும்பி உண்ணும் பிரியாணி, பஸ்தா பற்றியும் உணவு விடுதிகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் பற்றியும் அநேகத் தகவல்கள். ஒரு உணவுக் களஞ்சியமாகவே கொள்ளலாம்.

இப்போது ஷா நவாசின் பத்தியொன்றை அப்படியே மேற்கோள் காட்டுகிறேன். முழு ஒட்டகத்தின் வயிற்றைச் சுத்தமாகக் காலிசெய்து, அதனுள் ஒரு ஆடு, அந்த ஆட்டின் வயிற்றில் சுமார் இருபது கோழிகள், அந்தக் கோழிகளின் வயிற்றில் முட்டை, அரிசி உள்ளே வைத்து அவித்து சமைக்கும் கிளாசிகல் உணவுதான் Stuffed Camel” என்று எழுதுகிறார். நமக்கு Stuffed Paratha தான் பழக்கம்.

ஒட்டகக்கறி நான் தின்றதில்லை. ஆனால் தின்ற அநுபவம் கிடைத்தது கீரனூர் ஜாகிர்ராஜாவின் ‘கசாப்பின் இதிகாசம்’ என்ற சிறுகதை வாசித்தபோது. மலையாளத்தில் ஓ.வி. விஜயன் எழுதிய ‘கசாக்கின்ற இதிகாசம்’ வேறு சமாச்சாரம்.

‘அயல்பசி’ ஆசிரியரின் வாசிப்புப் பரப்பு நம்மை மலைக்க வைக்கிறது. இந்த இடத்தில் ஒரு தேற்று ஏகாரம் போட்டு நம்மையே மலைக்க வைக்கிறது என்று ஒருபோதும் எழுதமாட்டேன். அது எலி புழுத்துவது போல் ஆகிவிடும். சீனாவில் இருந்துதான் கரும்புச் சர்க்கரை வந்தது எனவும், சரித்திர காலத்துக்கு முன்பாகவே சீனாவிலும் இந்தியாவிலும் கரும்புப் பயிர் இருந்தது என்றும் சொல்கிறார். ரிக் வேதத்தில் கரும்பு பற்றிய செய்தி இருக்கிறது என்று A.T. Acharya எனும் வரலாற்று ஆசிரியரை மேற்கோள் காட்டிப் பேசுகிறார். நாலடியார் பாடலில் கரும்புத் தோட்டம் பற்றிய குறிப்பு உண்டு என்கிறார். அங்ஙன விட்டாப் பற்றுல்லல்லோ!’ என்பார் மலையாளத்தில். ஷா நவாசை அப்படி விட்டுவிடலாகாது என்று கருதி நாலடியாரைத் தேடிப்போனேன். அந்தச் செய்தி ஷா நவாஸ் எமக்கறித்த திறவுகோல்.

நாலடியார், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.

கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி

இடித்துநீர் கொள்ளினும் இன் சுவைத்தே ஆகும்

என்பது பாடலின் முதலிரு வரிகள். தருமர் அல்லது பதுமனார் உரைகளை எளிமைப்படுத்திச் சொல்லலாம். கரும்பினைத் தறித்து, கணுக்கள் தகர்ந்து போகும்படியாக நெரித்து இடித்து ஆலையில் வைத்துக் கருப்பஞ்சாற்றினை எடுத்தாலும் அதன் சுவை இனிப்பானதாகவே இருக்கும் எனப் பொருள் கொள்ளலாம்.

இன்னொரு நாலடியார் பாடல்வரிகள்,

கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும்

குருத்தில் கரும்பு தின்றற்றே

என்பன. கற்றுணர்ந்த அறிவுடையாருடன் கொண்ட உறவு எப்போதும் நுனியில் இருந்து கரும்பு தின்னத் தொடங்குவதைப் போன்றது என்று பொருள் சொல்லலாம்.

ஆனால் பல்கலைக்கழகங்களின் கருத்தரங்குகளில் கட்டுரை வாசிப்புத் தொழில் பார்க்கும் தமிழறிஞர்கள் இராசேந்திரசோழன் காலத்துக்குப் பிறகே இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவுக்குள் கரும்பு வந்தது என்று சாதிக்கிறார்கள்.

உலக நாடுகளின் உணவு பேசும் நவாஸ் கூப்பதனியும், எரிக்கலான் கொழுக்கட்டையும், பால் கொழுக்கட்டையும், சீனிக்கொழுக்கட்டையும் பேசுகிறார். உடுப்பி கிருஷ்ணாராவ் பற்றியும் தகவுரைக்கிறார். உலகின் மூன்று வகையான நாக்கு உள்ளவர்கள் பற்றி விவரிக்கிறார். அவை உண்மை பேசும் நாக்கு, கருநாக்கு, சழக்கு நாக்கு என்பவை அல்ல. சுவை பேதமுடைய நாக்குகள். அதிவேக நாக்கு, தடி நாக்கு, காய்ச்சல் கண்டவன் நாக்கு போன்ற நிரந்தரத்துவம் கொண்ட நாக்கு என்கிறார்.

வெற்றி பெற்ற கிளாடியேட்டர்களிடம் ரோமானியர்கள் ஒரு சொட்டு ரத்தம் கோரிப்பெறும் செய்தி பேசுகிறார். கெட்ச்சப்பின் வகைகள், உபயோகங்கள் பேசப்படுகிறது.

நூலில் தலைக்கறி தக்கடி என்றொரு நுட்பமான அத்தியாயம். நான் பம்பாயில் தொழிற்சாலையொன்றில் வேலை பார்த்த 1973-1980 காலகட்டத்தில் என்னுடன் பணிபுரிந்த கூர்க்கா தன்ராம்சிங் பற்றிய கதையொன்று ‘தன்ராம்சிங்’ எனும் தலைப்பிலேயே எழுதினேன். 2007ம் ஆண்டு ஆனந்த விகடன் வெளியிட்டது. அதில் திபேத்திய கூர்க்காக்கள் மலிவான விலையில் ஆட்டுக் காதுகள் வாங்கி, மயிர் பொசுக்கி, நறுக்கிச் சமைப்பது பற்றி எழுதியிருப்பேன். ஷா நவாஸ், சதையுமில்லாமல் எலும்புமில்லாமல் காது மடல்களை நச் நச்சென்று கடித்துத் தின்னும் சுகம் இருக்கிறதே அதைச் சாப்பிட்டவர்களுக்கே தெரியும்” என்கிறார்.

சிங்கப்பூர் தலைக்கறி பற்றி அருமையான பதிவொன்றும் உண்டு. சிங்கப்பூர் கிளாசிகல் உணவுகளில் முதலிடத்தில் மீன் தலைக்கறி உள்ளது’ என்கிறார். நான் முதன்முறை சென்றிருந்தபோது, முத்து கறீஸ்’ எனும் புகழ்பெற்ற உணவகத்தில் மீன் தலைக்கறியுடன் சோறு தின்றது நினைவில் உண்டு. அன்றிருந்து சிங்கப்பூர் மீன் தலைக்கறிக்கு அடியேம் யாம். சில ஆண்டுகள் முன்பு புவனேஷ்வர், கட்டக், பூரி என ஒருவார காலம் ஒடிசா மாநிலத்தில் அலைந்தபோது சொன்னார்கள் – ஒரிய மக்களின் திருமணம் நள்ளிரவில் நடக்கும் என்றும் சம்பந்திகளுக்கு மீன் தலைக்கறி பரிமாறுவது ஒரு கட்டாயம் என்றும்.

உருளைக்கிழங்கு உத்திகள் என்றொரு அத்தியாயம். இன்று இந்தியர் 130 கோடிப்பேரில் உருளைக்கிழங்கு உண்ணாதவர் இல்லை. ஒரே செடியில் 165 கிலோ உருளைக்கிழங்கு விளைவித்த சாதனையில் தொடங்குகிறது அந்தக் கட்டுரை. Macdonald பற்றி விரிவாகப் பேசுகிறது.

இன்னதுதான் என்றில்லை. சமையல் குறித்த எதைப்பற்றியும் பேசுகிறார் ஷா நவாஸ். மிகவும் பிரபலமான வினிகர் திராட்சையில் இருந்துதான் செய்யப்படுகிறது. ஆப்பிளில் இருந்து பெறப்படுவது சிடார் வினிகர். ஓட்ஸ் அல்லது பார்லியில் இருந்து பெறப்படுவது மால்ட் வினிகர். அரிசியில் இருந்து பெறப்படுவது Rice Vinigar என்று வகைப்படுத்துவதோடு நின்றுவிடாமல் ஒவ்வொரு வினிகரும் குறிப்பிட்ட வகை சமையலுக்கு மட்டுமே பொருந்தும் என்கிறார். நாமோ கடுகு எண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் யாவற்றுக்குமான சமூக நீதி செய்து பாமாயிலுக்கு நகர்ந்து விட்டோம். சூர்யகாந்தி எண்ணெய், அரிசித்தவிட்டு எண்ணெய், மாட்டுக் கொழுப்பு – பன்றிக் கொழுப்பு – நெய் – டால்டா யாவுமே சர்வஜன மகத்துவங்கள் ஆகிப்போயின.

நூலின் இறுதியில் அற்புதமாக இரு சொற்றொடர் எழுதுகிறார் “நான் சமையல் பிஸ்தாவாக நினைக்கும் ஒருவரிடம் எது நமக்கு ஆரோக்கியமான உணவு என்று கேட்டேன். நீங்கள் சிறு பிராயத்தில் இருந்து பிரியமாகச் சாப்பிட்டு வரும் உணவுதான் ஆரோக்கியமானது என்றார்” என்று.

சிவகாசி நாடார் சமூகத்துத் திருமண விருந்தில் இரவு பால்சோறு விசேடமாகப் பரிமாறுவார்கள். அது சிறப்பான உணவாகக் கொள்ளப்படுகிறது என்பதும் அறிவேன். எனினும் உளுந்தங்கஞ்சியும், சாளைப்புளிமுளமும், புட்டு பயிறு பப்படமும், கூட்டாஞ்சோறும் என்றும் நமக்குப் போதும் என்று ஆறுதல் கொள்கிறது மனது.

அரவான் – வளவ.துரையன் கட்டுரை

பாண்டவர்கள் திரௌபதியை மணம் முடித்தனர், இந்திரப்பிரஸ்தம் என்னும் அழகிய நகரை அமைத்தனர். அங்கே தங்கியிருந்து தருமன் தாயின் சொல்லைக் கேட்டும், தம்பியரை மதித்தும் நீதி தவறாது ஆட்சி செய்தான். அந்நாளில் ஒரு நாள் நாரதமாமுனிவர் அங்கு வந்தார். அம்முனியை வரவேற்ற அவர்கள ஆசனத்தில் இருத்தி வணங்கினார்கள்.

அப்போது அவர், பாண்டவர்களுக்கு ஒரு வரலாற்றைக் கூறினார். “முன்னொரு காலத்தில் சுந்தன், உபசுந்தன் என்னும் இரு அசுரர்கள் இருந்தனர். அவர்கள் இந்திரனின் ஏவலால் அங்கு வந்த திலோத்தமை என்னும் அழகியைக் கண்டனர். அவள் மீது காமம் கொண்டு இருவருமே அவளை அடைய விரும்பினார்கள். அதனால் இருவரும் போர்செய்து மாண்டனர்”

இந்த வரலாற்றைக் கூறிய நாரதர், “நீங்கள் ஐவரும் முற்பிறவியின் பயனாக திரௌபதியை ஒருங்கே மணம் புரிந்துள்ளீர்கள். ஆனால் ஒவ்வோர் ஆண்டுக்கு, உங்களுள் ஒருவர் ஒருவராகத் திரௌபதியைக் கூடி வாழ்வீர். மேலும் திரௌபதி ஒருவருடன் சேர்ந்திருக்கும் காலத்தில் மற்றவர் அவளைக் காணுதல் முறையாயாகாது. மாறாகக் கண்டுவிட்டால் அப்படிப் பார்த்தவர், ஓர் ஆண்டு வரையிலும் தன் வடிவம் மாறிப் பரிகாரமாகப் புண்ணிய தேசங்களைக் கண்டு நீர்நிலைகளில் நீராடச்செல்லவேண்டும் என்பதே முறையாகும்.

“எண்ணுறக் காணில் ஓர் ஆறு இருதுவும் வேடம் மாறி

புண்ணியப் புனல்கள் ஆடப் போவதே உறுதி”

நாரதர் இப்படி அறிவுரைகள் கூறிச் சென்றபின் பாண்டவர் ஐவரும் அந்நெறிப்படியே இல்லறம் நடத்தி வந்தனர். ஒரு நாள் ஓர் அந்தணன், இந்திரப் பிரஸ்த அரண்மனையின் முன்னால் வந்து, “வேடுவர்கள் என் பசுக்களை எல்லாம், அவற்றைக் காப்பவர்களிடமிருந்து பறித்துச் சென்றனர்” என முறையிட்டான்.

இதைக் கேட்ட அருச்சுனன், “நீ வருந்தாதே! அச்சப்படாதே! நான் உன் பசுக்களை மீட்டுத் தருவேன் என்று கூறினான். வேடர்களுடன் போரிடத் தன் காண்டீபத்தை எடுக்கப் படைக்கலக் கொட்டிலுக்குச் சென்றான். அப்படிச் செல்லும் வழியில் சோலை ஒன்றில் தருமனுடன் விளையாடிக் கொண்டிருந்த மயில் போன்ற திரௌபதியின் சிறிய அடிகளைக் கண்டான்.

“வெஞ்சாயம் எடுப்பான் வரு விசயன் தருமனுடன்

மஞ்சு ஆர் பொழில் விளையாடிடு மயில் சீறடி கண்டான்”

அப்படித்தான் பார்த்ததால் அருச்சுனன் உடல் நடுங்கினான். நாணம் கொண்டான். இருப்பினும் தான் வந்த செயலை மேற்கொண்டு வில்லையும், அம்புகளையும் விரைவாக எடுத்துக் கொண்டு சென்றான். வேடர்களிடம் சென்று அவர்களை வென்றான். பசுக்கூட்டத்தை மீட்டான். பின் அருச்சுனன் தான் செய்ததற்குப் பரிகாரமாக, நாரதர் சொன்னபடி அரச கோலத்தை விட்டு நீங்கி, வைதீகக் கோலம் கொண்டு தீர்த்த யாத்திரை புறப்பட்டான்.

அருச்சுனன் கங்கை ஆற்றில் நீராடச் சென்ற போது அங்கே ஆதிசேடனுக்கு உரிய நாகர் உலகத்து மகளிர் நீராட வந்தனர். அவர்களில் மிக அழகாக இருந்த உலூபி என்பவளின் மீது அருச்சுனன் காதல் கொண்டான். அவள் பின்னால் சென்று பாதாள லோகத்தை அடைந்து அங்கே உலூபியை மணந்து கொண்டான். அவர்கள் இருவருக்கும் அரவான் பிறந்தான்.

”செம்மென்கனி இதழாளொடு சில்நாள் நலம் உற்றான்

அம்மென்கொடி அனையாளும் இராவானை ஈந்தாள்”

[வில்லி பாரதம் அரவானை இராவான் என்றே கூறும்] மகனை உலூபியிடமே விட்டுவிட்டுத் தன் தீர்த்த யாத்திரையை அருச்சுனன் தொடர்ந்து சென்றான்.

அரவான் தன் தாயிடத்திலேயே நாகலோகத்தில் வளர்ந்து பெரியவானான். சில ஆண்டுகள் சென்றன. பாண்டவர் சூதுபோரில் தோற்று நாடு இழந்து வனவாசம் சென்று மீண்டபின்னும், துரியோதனன் அவர்களுக்கு அவர்கள் நாட்டைத் திருப்பித் தராததால் குருச்சேத்திரப் போர் நிகழ்வது உறுதியாயிற்று. கௌரவரும் பாண்டவரும் படைகளைத் திரட்டினார்கள். அச்சமயத்தில் அரவான் தன் படையுடன் பாண்டவர்களுக்கு உதவி செய்ய வந்து அவர்கள் பக்கம் சேர்ந்தான்.

தருமன் அனைவரையும் ஆலோசித்துத் தன் பாண்டவர் படைக்குச் சேனைத்தலைவனாக சிவேதன் என்பவனை நியமித்தான். அப்பொழுது அரவான், ”நான் பகைவரின் அனைத்துப் படைகளையும், ஒரே நாளில் ஒரே அம்பினால் கொல்வேன்” என்று வீரச் சொற்கள் உரைத்தான்.

“அரவமின் நகன் தெவ்வர்

கொற்ற வெம்படை அனைத்தும் ஓர் அம்பினால்

கொல்லன் ஓர் தினத்து என்றான்.

ஆக, போர் நடப்பது உறுதியாகிவிட்டது. போர்தொடங்க நாளூம் குறித்தாகி விட்டது. அடுத்துப் போர் தொடங்குவதற்கு முன்னால் ஒரு சிறந்த வீர்ரைக் களப்பலி கொடுப்பது மரபாகும். துரியோதனன், வீடுமனிடம் என்று, “போர்க்களத்தில் போர் தொடங்கு முன் களப்பலி தருவதற்கு உரியவர் யார்?” எனக் கேட்டான். அதற்கு வீடுமன், “பாண்டவர் பக்கத்தில் இராவான் என்பவன் இருக்கிறான். அவன் நம் படைகள் அனைத்தையும் ஒரு பகலில் கொல்வேன் என்று உறுதிமொழி சொல்லி உள்ளான். அச்சிறந்த வீரனிடம் சென்று, நீ வேண்டி நின்றால், அவன், “கொன்று எனைப் பலிகொடுப்பாயாக” என்று கூறிச் சம்மதிப்பான். நாம் அவனைப் பலிகொடுத்துப் போர் தொடங்கினால் அரசாட்சியையும் நல்வாழ்வையும் அடையலாம்” என்று கூறினான்.

அதைக் கேட்ட துரியோதனன், அரவானிடம் சென்று வேண்டினான். அரவானும், தந்தை முறையில் உள்ள துரியோதனன் உயிர் பிழைத்தற்குக் காரணமான வரம் கேட்பதால், மறுக்காது சம்மதித்து ‘என்னைக் கொன்று பலியிடுவாயாக” என்றான்.

“தாதை உய்வரு வரம் கேட்டு என்னை ஊட்டுக பலி நீ என்றான்”

இவ்வாறு நடந்ததெல்லாம் கண்ணபிரான் அறிந்தார். அவர் இச்செய்திகளைத் தருமனிடம் கூறினார். மேலும். “நீ துரியோதனனுக்கு முன்னால் களப்பலி கொடுக்க வேண்டும்; அப்போதுதான் அவனை வெல்ல முடியும். ஆகவே விரைவாக நீ என்னைக் களப்பலியாய்க் கொடுப்பாயாக” என்று கூறினார். அதைக் கேட்ட தருமன் அதிர்ச்சி அடைந்து, மனம் வருந்தி, “எங்களுக்கு உம்மைப் பலிகொடுத்துப் போரில் வெற்றி வேண்டாம். நாங்கள் இறப்பதே சாலச் சிறந்த்தாகும்” என்று கூறினான்.

உடனே அங்கிருந்த அரவான், ”முன்பு துரியோதனன் வேண்டிக் கேட்டபோது நான் என்னைப் பலியாகக் கொடுக்கச் சம்மதித்து உடன்பட்டேன். இப்போது நீங்கள் என்னைப் பலியாகக் கொடுங்கள்” என்றான். அப்போதும் கண்ணன், “உன்னைத் தவிர எனக்குச் சமமானவர் உலகில் எவரும் இல்லை. ஆகவே நம் இருவரில் ஒருவர்தாம் பலியாக வேண்டும்” என்றார். அப்போது அரவான். “நீ பகைவரை அழித்துப் பாண்டவர்க்குப் போரில் வெற்றியையும், அரச வாழ்வையும் அளிக்கக்கூடியவன்; அப்படி இருக்க நீ ஏன் பலியிடப்பட வேண்டும்? என்னையே பலியாகக் கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டான்.

மேலும் அச்சமயத்தில் அரவான் கண்ணனிடத்தில் ஒரு வரம் கேட்டான். ”அதாவது என்னை பலியாய்க் கொடுத்தாலும் சிலநாள்கள் நான் இப்போரைக் கண்டு பகைவர் அழிவதைப் பார்த்தபின் இறக்குமாறு அருள் செய்யவேண்டும்” எனக் கேட்டான்.

‘கடிய நேர்பலி தந்தாலும் காய்அமர் சிலநாள் கண்டு

முடிய நேரலர் வெம்போரில் முடிவு எனக்கு அருளுக என்றான்”

கண்ணபிரான் அவ்வரத்தை ஈந்தார். பின்னர் பாண்டவர் அனைவரும் யாரும் அறியாவண்ணம் தம் பிறப்பிடமான குரு நாடு சென்றனர். அங்கு அதே இரவில் அரவான் காளிதேவியின் முன்னால் தன் உடலின் உறுப்புகளை எல்லாம் ஒவ்வொன்றாக அறுக்க வேண்டிய முறைப்படித் தன் வாளால் அறுத்துத் தன்னைப் பலி தந்தான்..

அடுத்து அரவானைப் பார்ப்பது எட்டாம்நாள் போரில்தான். அன்றைய போரில் அரவான் பல ஆயிரம் வடிவங்கள் கொண்டு எதிரிப் படைகள் எல்லாம் சிதறி ஓடும்படி அம்புகள் விடுத்தான். தான் ஒருவன் மட்டுமே ஒரு பகலில் பகைவர் அனைவரையும் அழிப்பேன் என முன்னர் சொன்னதால் அரவான் பல பெரிய வடிவங்களுடன் போர் செய்து கொண்டிருந்தான். அப்போது துரியோதனனுக்காகப் படைகொண்டு வந்த அலம்புசன் என்னும் அரக்கன் தன் அண்ணன் பகாசூரனைக் கொன்றதால் பீமனைப் பழிவாங்கப் பெரும்படையுடன் வந்தான்.

அவனை இராவான் எதிர்த்துப் போரிட்டு, அவனுடன் வந்த படைகள் அனைத்தையும் அழித்தான். அலம்புசனும் புறமுதுகிட்டு ஓடினான். அப்படி ஓடிய அலம்புசன் மீண்டும் மாயையால் கருடனின் வடிவம் எடுத்துப் போரிட வந்தான். அரவான் நாகர் குலத்தைச் சேர்ந்தவன். அதனால் கருடனைக் கண்ட அளவில் தன் வலிமை அனைத்தும் ஒரு சேர ஒடுங்கியதைப் போன்று ஒடுங்கி நின்றான். அப்படி அஞ்சி நின்ற அரவானை, அலம்புசன் தன் கூரிய வாளை வீசிக் கொன்றான்.

”நின்றவன் தன்னை அந்த நிருதனும் வடி வாள் ஓச்சிக் கொன்றனன்”

இவ்வாறுதான் வில்லிபுத்தூரார் தாம் எழுதிய பாரதத்தில் அரவானைக் காட்டுகிறார். இதில் கூட தன்னைப் பலியிட்டுக் கொண்ட அரவான் எப்படி மீண்டும் முழு வடிவம் எடுத்துப் போர் செய்தான் என்பதற்கு எந்த விவரமும் இல்லை. வியாச பாரதத்தில் அருச்சுனன் தீர்த்த யாத்திரை செல்லும்போது உலூபியைக் கண்டு மனம் புரிந்து அரவானை மகனாகப் பெற்றான் என்ற அளவில்தான் உள்ளது. வேறு செய்திகள் இல்லை.

 

கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில், அரவானின் பலிக்குப் பிறகு அவரது உடல் மீண்டும் தானாகவே ஒன்றிணைந்து முழுமையானதாகவும், இதனால் போரின் எட்டாம் நாள் அரவான் வீர மரணம் அடைய முடிந்ததாகவும் விளக்கமளிக்கப்படுகிறது.

தமிழ் இலக்கியத்தில் அரவானைப் பற்றிய குறிப்பு முதன்முதலில்   பெருந்தேவனார் ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதிய பாரத வெண்பாவில்தான்   காணப்படுகிறது. இதுவே மகாபாரதத்தின் தமிழ்ப் பதிப்புகளுள் தற்போது கிடைப்பவனவற்றுள் மிகப் பழமையானது எனக் கருதப்படுகிறது. பதினான்காம் நூற்றாண்டில் வில்லிபுத்தூராழ்வார் இயற்றிய மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் நல்லாப்பிள்ளை எழுதிய மகாபாரதங்களிலும் அரவான் பற்றிய கதை காணப்படுகிறது.

கூத்தாண்டவர் கோவிலைப் பற்றிய கூத்தாண்டவர் தல புராணம் என்ற நூலில் அரவான் கதை எழுதப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இராவான் எனும் பெயர் அரவான் என்று தென்னிந்தியாவில் வழங்கப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் அரவான் இரண்டு வழிபாட்டு மரபுகளில் வணங்கப்படுவதைப் பார்க்க முடிகிறது.

கூத்தாண்டவர் வழிபாட்டு மரபு மற்றும் திரௌபதி வழிபாட்டு மரபு என்றும் அவை கூறப்படுகின்றன.  கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில் அரவான் கூத்தாண்டவர் அல்லது கூத்தாண்டர் என்று வழிபடப்படுகிறார். . கூத்தசுரன் என்ற அரக்கன் ஒருவனைக் கூத்தாண்டவர் வதம் செய்வதாகக் கூறும் ஒரு புராணக் கதையின் அடிப்படையில் இந்தப் பெயர் ஏற்பட்டது என்று கூறுகின்றனர்.

தமிழில் அரவு என்பது பாம்பைக் குறிக்கும். தமிழ்ப் பெயரான அரவான் அரவு என்ற சொல்லிலிருந்து உருவானதாகக் கூறலாம். அரவானுக்கும் பாம்புக்கும் உள்ள தொடர்பு அவரது உருவத்தோற்றத்தில் வெளிப்படுகிறது.]

 

அரவான் கூத்தாண்டவர் வழிபாட்டு மரபில் ஒரு முக்கியமான கடவுளாக இருக்கிறார்.. திரௌபதி வழிபாட்டு மரபிலும் அரவான் முக்கியப் பங்கு கொண்டு விளங்குகிறர். இந்த இரண்டு வழிபாட்டு மரபுகளும் குறிப்பாகத் தென்னிந்தியாவில் அரவானைக் கிராம தெய்வமாக வழிபடும் பகுதிகளிலிருந்து தோன்றியவை என்று கூறலாம். அரவான், அலி என்று அழைக்கப்படும் திருநங்கைகள் சமூகத்தின் காவல் தெய்வமாகவும் திகழ்கிறார்.

அரவான் அருச்சுனன் மற்றும் உலுப்பியின் மகன் என இரு புராணங்களில் காட்டப்படுகிறார். ஒன்று விஷ்ணு புராணம் மற்றொன்று பாகவத புராணம் எனலாம்.

பாரத வெண்பாவில், அரவான் கிருஷ்ணரிடம் தான் போர்க்களத்தில் ஒரு சிறந்த வீரனால் வீர மரணம் அடைய வேண்டும் என்ற ஒருவரத்தை மட்டுமே வேண்டியதாகக் கூறப்படுகிறது. ஆனால் பொதுவாகத் தமிழ் மரபுகளில் அரவான் மூன்று வரங்களைக் கேட்டதாகக் காட்டப்பட்டுள்ளது. கூத்தாண்டவர் மற்றும் திரௌபதி ஆகிய இரண்டு மரபுகளிலுமே, அரவான் 18 நாள் போர் முழுவதையும் காண வேண்டும் என்ற இரண்டாவது வரத்தையும் பெற்றதாகக் கூறப்ப்டுகிறது. வில்லிப்புத்தூராழ்வாரின் 14ஆம் நூற்றாண்டு மகாபாரதப் பதிப்பில் இரண்டாவது வரம் பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன.

இந்தப் பதிப்பில்தான், அரவான் போரில் எதிரிகள் பலரைக் கொன்று வீர மரணம் அடைந்த பின்னர் சில நாட்கள் மட்டும் போரைப் பார்ப்பதற்கான வரத்தைப் பெறுவதாக உள்ளது. மூன்றாவது வரம் பற்றிய தகவல்கள் நாட்டுப்புறக்கதைகளில் மட்டும்தான் உள்ளன. தான் தன்னைப் பலி கொடுக்குமுன் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்னும் மூன்றாம் வரத்தைப் பெறுவதன் மூலம் அரவான் தன் உடலைத்தகனம் செய்து ஈமச்சடங்குகள் நடக்க வழிவகை செய்ய எண்ணுகிறார்.

மணம் புரியாதவர்கள் புதைக்கப்படுவர். ஆனால் அரவானைத் திருமணம் செய்து கொண்டால் அவர் தன்னைப் பலியிட்டுக் கொள்வதால் மணமாகும் பெண் விதவையாவது நிச்சயம் என்பதால் அரவானை எந்தப் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. இந்தச் சிக்கலைத் தீர்க்க முடிவெடுத்த கிருஷ்ணர், உடனே மோகினி என்னும் ஒரு பெண்ணின் வடிவம் ஏற்று அரவானைத் திருமணம் செய்து கொண்டு ஓர் இரவு அரவானுடன் கழிப்பதாகக் கூத்தாண்டவர் மரபில் கூறப்படுகிறது.

அரவான் தன்னையே பலி கொடுத்த அடுத்த நாளில் கிருஷ்ணர் மோகினியின் வடிவில் தன் கணவன் இறந்துவிட்டதால் விதவைக் கோலம் பூண்டு புலம்பியதாகவும், அதன் பிறகு மீண்டும் பழைய ஆண் வடிவத்திற்கு மாறிய அரவான் போரில் ஈடுபட்டதாகவும் இம்மரபில் கூறப்படுகிறது. தெருக்கூத்துக் கதைகளில் சிறப்பான முறையில் அரவானின் திருமணச் சடங்குகள் நடைபெறுவது காட்டப்பட்டு, மோகினி திடீரென்று பிரிந்து செல்வது போலவும் காட்டப்படுகிறது.

இது இத்திருமணம் உடலுறவில் முடியவில்லை என்பதைக் குறிக்கிறது. திருநங்கைகளிடையே பிரபலமான மற்றொரு கதைவழங்குகிறது. அதில் அரவான் தாம்பத்திய இன்பத்தைப் பெற வேண்டியே திருமண வரம் பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் திருமணத்துக்கு பின் அரவான் மோகினியுடன் உடலுறவு கொள்வது கூறப்படுகிறது.] திருமணம் பற்றிய இந்த மூன்றாவது வரம் குறித்து அனைத்து நாட்டுப்புற மரபுகளிலும் ஒரே மாதிரியான செய்திகள் இல்லை எனலாம்.

இன்னும் சில மரபுகளில் கிருஷ்ணர் போருக்கு முன்பு வேறு சில திருமணங்களை ஏற்பாடு செய்வதாகக் கூறப்படுகிறது. தஞ்சாவூர் மரபுகளில் அரவானுக்கும் மோகினிக்கும் திருமணம் நடப்பதில்லை. மாறாக அரவான், கிருஷ்ணரின் இளைய ஒன்றுவிட்ட சகோதரன் சாத்யகியின் மகள் பரவநாச்சியாளை திருமணம் செய்து கொள்வதாகக் கூறப்படுகிறது.

இப்படி அரவானின் வாழ்வில் பல புதிர்களைப் பல பாரத நூல்களும் நாட்டுப்புறக் கதைகளும் கூறினாலும் அரவான் ஒரு தியாக வாழ்வு வாழ்ந்தான் என்பதில் ஐயமில்லை எனலாம்.