சிறுகதை

அந்தர்வாஹினி

மாலதி சிவா

 

அவன் நிழல் நீண்டு அவர் காலைத் தொட்டது.

ரேழியில் நின்று கொண்டு கையில் இருந்த துண்டு கடுதாசியைப் படிக்க முயன்று கொண்டிருந்தவர் நிமிர்ந்து பார்த்தார்.

“கதவு திறந்துதான் இருக்கு வாங்கோ” என்றார்.

கம்பி அழிக்கதவைத் திறந்துகொண்டு வந்தவன் திண்ணைகளுக்கு இடைப்பட்ட ஆளோடியில் தயக்கமாக நின்றபடி

“ஈஸ்வர அய்யர் வீடு….?.” என்று கேள்வி மாதிரி கேட்டான்.

“ஆமா! ஈஸ்வர அய்யர் , எங்க அப்பாதான், ஆனா அவர் காலம் ஆகி ஆறேழு வருஷம் ஆறதே” என்றார்.

“ஆமா! மாமா! எங்க அப்பா சொல்லியிருக்கார்”

வந்தவனுக்கு இருபத்தைந்து வயது இருக்கும்.வேஷ்டியும் சட்டையும் பழையதாயிருந்தாலும் துவைத்து மொரிச்சென்று இருந்தது. சட்டை காலரின் மடித்த பகுதியில் நைந்து பிசிர் தெரிந்தது. தொண்டையின் முழை ஒரு சிறிய கோலிக்குண்டு. கையில் ஒரு பழைய காக்கிப் பை சுருட்டின வாக்கில் இருந்தது.

“உள்ளே வாங்கோ”  என்றபடி ரேழியைக் கடந்து கூடத்துக்குப் போனார்.

திரும்பிப் பார்த்து மறுபடி” வாங்கோ”’ என்றார்.

“உக்காருங்கோ” என்றார்.

அவருக்கு அருகில் இருந்த மர நாற்காலியைத் தவிர ஒரு மர முக்காலியும் , வர்ணமிழந்த தகர நாற்காலியும் இருந்தன. அவன் முக்காலியில் அமரப் போனான்.

“இல்ல! அது வேண்டாம். ரண்டு மரப் பலகையைச் சேத்து வச்சு பண்ணியிருக்கான். அதுல இடை வெளி விட்டுப் போயிடுத்து. உக்காந்தா கடிக்கறது. சேர்லயே உக்காந்துக்கோங்கோ!”என்றார்.

அவன் உட்கார்ந்த பின் கேட்டார்,

“நீங்க?”

“என்பேர் நீலகண்டன். அப்பா பேரு சதாசிவம்”

“சரி…..”

உள்ளேயிருந்து ஒரு சின்னக் குட்டி சமையல் ரூமுக்கும் கூடத்துக்கும் இடையிலான நிலைப்படியில் வந்து நின்றது. நாலைந்து வயதிருக்கும், தலையை இழைய வாரி  நுனியில்   சிவப்பு பட்டு நூலில் முடிந்திருந்தது.

இவனுடைய தொண்டடையின் கோலிக்குண்டையே உறுத்துப் பார்த்தது. கோலிக்குண்டு இன்னும் வேகமாக அசைந்தது.

அவர் குழந்தைகளிடம் பேசும் பொழுது வருகிற  ஒருமென்மையான குரலில் இடை வெளி விட்டு விட்டு  நிதானமாக

“தர்மு! மாமா வெய்யில்ல வந்திருக்கா பாரு! கொஞ்சம் ஜலம் கொண்டு வரயா?” என்றார்.

அது தலையை அசைத்து விட்டு உள்ளே போனது. பின்பக்கத்திலிருந்து யாரோ பேசுகிற சத்தமும், மாடியிலிருந்து குழந்தைகள்  சச்சரவிடுகிற சத்தமும்  கேட்டுக் கொண்டிருந்தன.

“இவ திருவையாறு போஸ்டிங்க்ல இருக்கும் போது பொறந்தா, அதான் தர்மசம்வர்தனின்னு பேரு. எந்த ஊர் போஸ்டிங்க்ல குழந்தை பொறக்கறதோ அந்த ஊர் அம்பாள் பேரை வச்சுடறது. இப்போ வீடு நிறைய அம்பாள்தான்“ அவர் சிரித்தார்.

“சரி! நீங்க சொல்லுங்கோ? எங்கேயிருந்து வரேள்? என்ன சமாசாரம்?” என்றார்.

“ நா ஜீயபுரம் , அம்மங்குடியிலேந்து வரேன்!”

குழந்தை அதற்குள் ஒரு சொம்பு ஜலத்தைத் தூக்கமாட்டாமல் தூக்கிக்கொண்டு வந்தது.

“ அடடே! நீயே தூக்கிண்டு வந்தயா? அம்மாகிட்டயோ , அத்தை கிட்டயோ சொல்ல மாட்டயோ” என்றார்.

அவனிடம் தண்ணீரைக் கொடுத்துவிட்டு,

“ஜீயபுரம் ஜாஸ்தி பழக்கமில்லை!  முந்தி எப்பவோ ஒரு தரம் வந்திருக்கேன்!”

அதற்குள் உள்ளேயிருந்து ஒரு மடிசார் மாமி ஒல்லியாய் வெடுவெடுவென்று உயரமாய் “ சாமினாதா” என்று  சத்தமாக கூப்பிட்டுக்கொண்டே வந்தாள்.

வேற்று மனிதனை  அங்கு எதிர்பாராததால்  சட்டென்று தயங்கி நின்று  மெதுவான குரலில் “வாங்கோ” என்றாள்.

“யாரு?” என்று இழுத்தாற்போல் கேட்டாள்.

சாமினாதன் “ அக்கா! இவருக்கு ஜீயபுரமாம்!” என்றார்.

அவனிடம் “ இது எங்க அக்கா!” என்றார்.

“அப்பிடியா? ஜீயபுரத்தில யாரு? எங்க ஜாகை?” மாமி கேட்டாள்.

“ஸ்டேஷன் மாஸ்டர் ஜம்புனாதையர்  இருக்காரில்லையா? அவாத்துக்கு மேலண்டைப் பக்கம் ரண்டு ஆம் தள்ளி” என்றான் வந்தவன்.

“ அடடே!  அப்பிடியா சமாசாரம்? ஜம்பு நாதய்யர் எங்க புக்காத்து வழியில தூரத்து சொந்தம்.

அவாத்துல ஒரு சீமந்தத்துக்கு ஜீயபுரம் வந்திருக்கேன், ரொம்ப வருஷத்துக்கு முன்னால!” என்றாள்.

“அப்பா என்ன பண்றார்?” அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“அப்பா இப்ப இல்லை! அவர் மூணாம் வருஷம் போயிட்டார்!”

சாமினாதன் “அடடா!” என்றார்

மாமி “த்ஸோ! த்ஸொ! பாவமே!” என்றாள்.

“இங்க தெப்பக்குளம் பக்கத்துல மெடிகல் ஸ்டோர்ல வேலை பாத்துண்டிருந்தார்.”

“ரங்கனாதா மெடிகல் ஸ்டோரா?”என்றாள்.

“இல்லை மாமி , அதைத் தாண்டி மூணு நாலு கடைக்கப்பறம் வினாயகா மெடிகல்ஸ்னு”

“ ஒல்லியா கண்ணாடி போட்டுண்டு , மருந்து எடுத்துக் குடுக்கறது, பில்லு போடறது எல்லாம் பண்ணுவாரே அந்த மாமாவா உங்க அப்பா?”

அவன் “ஆமா மாமி!! முதலாளிக்கு வலது கை மாதிரி  இருந்தார். முதலாளியும் அப்பா பேர்ல ரொம்ப மதிப்பும் , மரியாதையுமாதான் இருந்தார்” என்றான்.

“என்ன பண்றது, நல்ல மனுஷாளுக்கெல்லாம் இப்படி சட்னு முடிவு வந்துடறது கஷ்டமாத்தான் இருக்கு”

கொஞ்ச நேரம் மௌனம் நிலவியது.

தர்முவைப் பார்த்து

“ நீ என்னடி இங்க வாயைப் பாத்துண்டு நிக்கறே? அவாளோட விளையாடப் போகலையா?  என்றாள்.

அது தலையை அசைத்து “நீ போ அத்தை!” என்றது.

“அது சரி ! நா போய் விளையாடறேன்! நீ பெரிய மனுஷி! பேச்சைக் கவனி!” என்று சிரித்துவிட்டு.

“நீங்க பேசிண்டிருங்கோ!  நான் காபி எடுத்துண்டு வரேன்” என்றபடி மாமி உள்ளே போனாள்.

“அதெல்லாம் வேண்டாம் மாமி!”

அவர் “இருக்கட்டும் , இருக்கட்டும் , காபிக்கென்ன? குடிக்கலாம்” என்றார்.

கூடத்து மாடப் பிறை பக்கத்தில் இந்திய வரைபடம் மாதிரி காரை உதிர்ந்து இருந்தது. ஜம்மு காஷ்மீர் ஏரியா மாத்திரம் கொஞ்சம் பெரிதாக இருக்கிற இந்திய வரைபடம்.

தொண்டையை லேசாக கனைத்துக்கொண்டே ஆரம்பித்தான்.

“எங்க அப்பாவோட இந்தாத்துக்கு ஏழெட்டு வருஷத்துக்கு முன்னால  வந்திருக்கேன். உங்களை அப்ப பாக்கல. அதான் உங்க பேர் தெரியல. மன்னிச்சுக்கோங்கோ!”

“அதனால என்ன பரவாயில்லை. நான் இப்பத்தான் நாலு வருஷமா இங்க இருக்கேன். அதுக்கு முன்னாடி ஊர் ஊரா  போஸ்டிங்க்! இங்க இருக்கும் படி நேரலை! படிக்கற காலத்தில இங்க இருந்ததோட சரி , அப்புறம் இப்பதான் நாலைந்து வருஷம் முன்னாடிதான் இங்க வந்தேன். அப்பாக்குத் தள்ளாமை வந்தப்புறம், ஆத்துக்காரி  குழந்தைகள் எல்லாரும் இங்க முன்னாடியே வந்துட்டா.  நா மாத்திரம் ஊர் ஊரா போயிண்டிருந்தேன்” என்றார்.

“ எட்டு வருஷத்துக்கு முன்னாடி அப்பா ரண்டாம் அக்கா கல்யாணத்துக்கு மாமா கிட்ட , அதான் உங்க அப்பாகிட்ட ஆறாயிரம் ரூபா கடன் வாங்கியிருந்தா. அடுத்த வருஷமே திருப்பித் தரதா பேச்சு! ஆனா அடுத்த வருஷம் பெரிய அக்கா பிரசவத்துக்கு வந்துட்டா.

உங்களுக்குத் தெரியுமே சம்சாரிகள் ஆத்துல பிரச்னைகளுக்குப் பஞ்சமேது? அதுக்கடுத்த வருஷம் அறுவடை சமயத்துல வெள்ளம் வந்து சாகுபடியெல்லாம் வீணாப் போச்சு!”

தர்மு பெரிய கண்களை விரித்து அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தது.

“அப்பாவுக்குத்தான் ரொம்ப தாபமா இருந்தது.  திருப்பி தரதா சொன்ன டயத்திலே பணத்தைக் கொடுக்க முடியலயேன்னு சொல்லிச் சொல்லி ஆத்துப் போயிட்டார்.

சாகற அன்னிக்குக் காத்தால கூட என் கையைப் பிடிச்சுண்டு அழுதார், நான் கடனாளியா சாகறேனேன்னு. எப்பிடியாவது சீக்கிரம் வட்டியும் முதலுமா குடுத்துடுடா குழந்தைன்னார்”

அவன் குரல் கரகரத்து ரகசியம் போலவும் அழுவது போலவும் ஒலித்தது.

தர்மு மெதுவாக அவன் பக்கத்தில் வந்து நின்றது.

“ ஆறாயிரத்தோட வட்டியா ஒரு மூவாயிரம் சேத்துக் கொண்டு வந்திருக்கேன். இப்போதைக்கு அவ்வளவுதான் சேக்க முடிந்தது. பாக்கி வட்டியை மொள்ள மொள்ள கொஞ்சம் கொஞ்சமா குடுத்துடறேன்.”

கலங்கிய கண்களொடு அவரைப் பார்த்தான்.

அவர் “ இருங்கோ! இருங்கோ! அவசரப் படாதீங்கோ! எங்க அப்பா கொஞ்ச நாள் படுத்துண்டு இருந்துட்டுதான் போனார். யார் யாருக்கு எவ்வளவு கொடுக்கணும், எங்களுக்கு எங்கேர்ந்து எவ்வளவு வரணும் எல்லாம் சொல்லிட்டுத் தான் போனார்.  உங்க அப்பா பேரு என்ன சொன்னேள்? சதாசிவமா?  அப்படி யாரும் எதுவும் கொடுக்கணும்னு சொல்லலையே?” என்றார்.

அவன் தொண்டையின் கோலிக்குண்டு வேக வேகமாக அசைந்தது.

“இல்ல மாமா! எங்க அப்பா சொல்லியிருக்காளே மாமா! அப்படி இருக்காது. எங்கயாவது எழுதி வச்சுருப்பா! கொஞ்சம் பாருங்கோளேன் ப்ளீஸ்!” என்றான்.

“ நீங்க சொல்றது கரக்ட்! அப்பா எல்லாத்தையும் சப்ஜாடா எழுதி வைப்பார். நான்  பல தடவை அந்த நோட்டைப் பாத்திருக்கேனே! உங்க அப்பா பேர் இல்லையே” என்றார்.

தர்மு அவர்களை மாறி மாறிப் பார்த்தது.

“இன்னும் ஒரு தடவை எனக்காகப் பாருங்களேன் “ அவனுக்குத் தொண்டை அடைத்தது.

அவர் மேஜை டிராயரை சாவி போட்டுத் திறந்து, கொஞ்ச நாழி தேடினார்.

கூடத்தின் பக்கவாட்டில் இருந்த கதவுக்கு அப்பால் கொல்லை பசுமையாய் தளதளத்துத் தெரிந்தது. கொய்யாவும் , மாதுளையும் செடி கொள்ளாமல் காய்த்துத் தொங்கின.

கொல்லைக் குழாயில் தண்ணீரும் , காற்றும் கலந்து கொர் புர்ரென்று சத்தம் கேட்டது.

“தண்ணி விட்டுருக்கான் போலிருக்கே! ஒரு நா விட்டு ஒரு நா ஒரு மணி நேரம்தான் வரும். அவாளுக்குக் கேக்கலை போலிருக்கு! இருங்கோ ஒரு நிமிஷம் ! அவாட்ட சொல்லிட்டு வறேன்!”

அவன் கொல்லையையே பார்த்துக் கொண்டிருந்தான். இப்பல்லாம் காவிரி வருஷத்தில்  பெரும்பாலும்  மணலாய் இருந்தாலும் ஆயிரம் வருஷமா ஓடிண்டிருந்த காவேரியின் கருணையும் தாய்மையும் அங்கே காயாய் , கனியாய்  திரண்டிருந்தன என அவனுக்குத் தோன்றியது.

திரும்பி  காபி டம்ளர் டபராவோடு வந்தவர் இவனிடம் கொடுத்து விட்டு “ குடியுங்கோ!  அதுக்குள்ள நோட்டைக் கண்டு பிடிக்கறேன்” என்றார்.

“ இதோ கிடைச்சுடுத்தே”

பக்கங்களைத் திருப்பி “ இதோ! குத்தகைக் கணக்கு, தான் வாங்கிய கடன், திருப்பித்தந்த விவரம், தனக்கு  வர வேண்டிய கடன் எல்லாம் தனித் தனியா எழுதியிருக்கார் பாருங்கோ! என்ன பேரு? சதாசிவம் இல்லையா? “ என்று கையை நோட்டில் ஓட்டியபடி தேடினார்.

அவர் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினார்.

“ஊ ..ஹூம்! கடன் குடுக்கப் பட்டவா பக்கத்துல உங்க அப்பா பேர் இல்லையே” என்றார்.

“மாமா! நா இப்ப என்ன பண்றது? கொடுக்க வேண்டிய கடனை இல்லேங்கறேளே! அப்பா கடனைத் திருப்பிக் கொடுக்க முடியலயேன்னு ரொம்ப வருத்தப் பட்டுண்டே போனார் மாமா!”

கிட்டத்தட்ட அழுவது போல் சொன்னான்.

“நான் என்ன பண்றது சொல்லுங்கோ? எனக்கு உரிமையில்லாததை  நான் எப்படி எடுத்துக்க முடியும் ? அது நியாயமில்லையே! நீங்க வருத்தப் படாதீங்கோ” என்றார் சாமினாதன்.

“மாமா உங்க நியாயத்துல என் தர்மம் அடிபட்டுப் போறதே ! அது சரியா? “   அவரைக் கெஞ்சுவது போலப் பார்த்தான்.

தர்மு அப்பாவை ஒரு பார்வை பார்த்து விட்டு அவன் கைகளைத் தொட்டு

“அயாதீங்கோ மாமா! நீங்களே வச்சுக்கோங்கோ! பவ்வால்லை!” என்றது.

 

********************************************

 

விசித்திரம்- கன்னடமொழி சிறுகதை மூலம் : யு.ஆர்.அனந்தமூர்த்தி ஆங்கிலம்: தீபா கணேஷ் தமிழில் : தி. இரா.மீனா

தி இரா மீனா

ஏரியில் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் எண்ணத்துடன்தான் அவள் இங்கு வந்திருக்கிறாள். காரை நிறுத்த முயன்றபோது அவள் பார்த்த காட்சிகள் : வைக்கோல் மூடிய குடிசை, அதன் முன்னாலி்ருக்கும் தற்காலிகக் கடை, கடையில் உள்ள குண்டு பெண்மணி, அவள் மடியில் ஒரு குழந்தை, இரண்டு குலை வாழைப்பழங்கள், பீடி பற்ற வைத்துக் கொண்டிருக்கும் ஒரு முதியவர். ஏரியில் படர்ந்திருக்கும் பச்சை இலைச் செடி.

அங்கிருக்கும் சிறுகுன்றின் வலது புறத்திலிருந்த சாலை தெளிவாகத் தெரிய, விளக்கு வெளிச்சத்தோடு வந்த ஒரு கார் கணத்தில் கண்ணிலிருந்து மறைந்து விட்டது. பௌர்ணமியின் போது கூவுமே, கீச்சென்று ஒலிக்குமே! அது என்ன பட்சி? ஏரியிலிருந்து குளிர்ந்த காற்று வீசுகிறது. இப்படியே நான் உட்கார்ந்திருந்தால், என்னால் பார்க்க முடியும், கேட்க முடியும். விரைவில் விடியல் வர என்னைப் பார்த்து சூரியன் எழுந்து விடுவான். நான் இறந்து விட்டால், இவை எதுவுமில்லை.

இதற்கு பின்னாலுள்ள புதரில் கார நெடியுடைய இலைகள் இருக்கின்றன. அதற்குப் பின்னால் யாரோ உட்கார்ந்திருக்க வேண்டும். அவர் சீக்கிரமாக வர மாட்டார். ஓர் ஆணாக இருக்க வேண்டும். அல்லது என்னைப் போல நவீனமான பெண்ணாக இருக்கலாம். நான் முடித்ததற்குப் பின்னால் அந்த ஆள் வந்திருந்தால், எனக்கு காலடிச் சத்தம் கேட்டிருக்கும். இப்போது அந்தப் பக்கத்திலிருந்து சிகரெட் புகை நெடி.

தலைமுடி முதுகில் விரிந்திருக்கும்படியாக அவள் தளர்வாகக் கட்டியிருந்தாள். தண்ணீரில் மூழ்கி இறக்கும்போது பிணத்தின் முகம் வீங்கி விடும். அவள் சிறுமியாக இருந்தபோது எல்லோரையும் கவர்ந்த இடது கன்ன மச்சம் முகவீக்கத்தில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடும். உடல் மேலிருந்து கீழாக மிதக்கும்; அவளுடைய கருமையான தலைமுடி தண்ணீரின் மேல் படரும். அனாதை கால்நடையின் அசை போடும் தொலை பார்வையைப் போல அவள் கண்கள் ஒன்றுமில்லாததை வெறித்திருக்கும். நிர்வாணம்–ஆணாக இருப்பினும், பெண்ணாக இருப்பினும் அதைச் சொல்வது எளிதல்ல.

அந்த உறுதியான கணத்தை ஞாபகத்தில் வைத்திருக்க முடியவில்லை; அப்படி ஒன்று இருந்ததாக நினைவு; அது நித்திய நிலையாகவும் தெரிந்தது. மனைவியின் கன்னத்தில் கணவன் அறைவது பெரிய விஷயமில்லை; காதலிக்கும் ஒருவரை அடித்து கூட விடலாம். செத்துப் போ, செத்துப் போ செத்துப் போ—அவன் அந்நியமான தொனியில் சொன்னான். அந்தச் சத்தம் அவளுக்குள்ளிருந்து வெளிப்பட்டு வந்ததைப் போலிருந்தது. அவன் கண்கள் கொலை வெறியோடு உற்றுப் பார்த்தன.அந்தக் கத்தலுக்குப் பிறகு அவன் தளர்ந்து சரிந்தான். அவன் முகம் பிணம் போல வெளிறிக் கிடந்தது. காதுகளைச் சம்மட்டியால் அடித்தது போலானான். அவன் மீசை, வில் புருவங்கள், இன்னமும் பெண்களைக் கவரும் அழகான முடி ஆகியவை உல்லாசமானவனாகக் காட்டின. அவனிடமிருந்து சிரிப்பு எழுந்து மறைந்தது. மகன்? ஊட்டியில் படிக்கிறான். முன்னாள் டென்னிஸ் சாம்பியனான தந்தையை அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவன் எப்படியோ வளர்ந்து விடுவான். மெதுவாக எல்லாவற்றையும் மறந்து விடுவான்.

இவற்றிற்கெல்லாம் காரணம்? கண்டுபிடிக்க முடியவில்லை.

யாருடைய தவறு? அவன்தானே என்னைக் காதலித்தான்? தன் தந்தையோடு சண்டை போட்டு என்னைத் திருமணம் செய்து கொண்டான். தனது சொத்தில் பாதியை விற்று என்னை அமெரிக்காவிற்கு அழைத்துப் போய் நாடகக் கல்லூரியில் படிக்க வைத்தான். யார் முதலில் தவறு செய்தது? அது குறித்து நாங்கள் நூறு தடவை சண்டை போட்டுக் கொண்டாகிவிட்டது.

அந்தத் தவறுகள் எங்களை பதினைந்து வருடம் பின்னிப் பிணைய வைத்திருந்தது. இப்போதும் கூட நான் இல்லாதபோது அவன் எப்படி மனம் விட்டுச் சிரிக்கிறான். அவனுடைய ஆரோக்கியமான பற்கள் கருப்பு மீசையின் பின்புலத்தில் ஒளிரும். பெண்கள், எங்கள் இருவரையும் அறிந்தவர்கள் என்னை மட்டுமே பொறுப்பாக்கினர்கள். வெறுப்பும் கூட காதலைப் போல களங்கமற்ற உணர்ச்சிதான் என்பது அவளுக்கு ஆச்சர்யம் தருவதாக இருந்தது.

அவள் தன் முடியைத் தொங்கவிட்டாள். அவள் கண்கள் நிலவொளியில் மிளிர்ந்தன; அவைகளைச் சுற்றிக் கோடுகளிருந்தன. அவளுக்கு முப்பத்தி ஐந்து வயது. இன்னும் இளமையாகத்தானிருந்தாள்.

கடந்த இரண்டு வருடங்களாக அவர்களிடையே எதுவுமில்லை. இந்த வெறுப்பின் கொடூரத்தில் அவள் உடல் வேறுவிதமான பொலிவு பெற்றது. அவள் மற்றவர்களால் பார்க்கப்பட்டாள். அதை அவள் அழுத்தமாகவும் சொன்னாள். அது ஒருவிதமான கர்வத்தையும் அவளுக்குத் தந்தது. அதனால் அவனுக்கு அவளைக் கொல்லவேண்டும் போலிருந்தது என்பது கூட ஞாபகத்தில் வந்தது.

புதரின் பின்னாலிருந்த மனிதன் அணைக்காமல் சிகரெட்டைத் தூக்கிப் போட்டான். அத்துண்டு நிலவொளியில் இன்னமும் ஒளிர்ந்தது.

அவள் தன் பையிலிருந்த சிகரெட் பாக்கெட்டை எடுத்தாள். ஆனால் அவளிடம் நெருப்புப் பெட்டியில்லை.

தூங்கும் பறவைகளைப் போல அவள் கைகள் மடியின் மீது இன்னமும் இருந்தன. அந்த மனிதனிடம் நெருப்புப் பெட்டி கேட்கலாமா? செத்துப் போவது அர்த்தமற்றது என்று திடீரென அவள் நினைத்தாள். இது புதிய உணர்வில்லை, ஆனால் அவள் எப்போதும் உணர்வதுதான் என்று அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள். இன்னொரு கார் மேலே போகிறது. பறவை கூவுகிறது. ஏரியின் தண்ணீர் நிலவொளியில் லேசாக நடுங்குகிறது. அந்த முதியவர் பீடி பற்ற வைத்ததை நினைக்கிறாள். சிறுமியாக இருந்த போது படர்ந்திருந்த செடியின் இலையைப் பறித்து முகர்ந்து பார்த்தது படமாக நினைவில் ஓடுகிறது. பிறப்பு, இறப்பு இரண்டும் அர்த்தமற்றது. நான் இருக்கிறேன் என்று நினைத்தால்தான் இருக்கிறேன், இல்லையா? யாரிடமாவது நெருப்புப் பெட்டி வாங்கலாமா என்று நினைத்தாள். ஆனால் அதில் அவ்வளவு வேகம் இல்லை என்பதால் தன் கைகளை மடியில் வைத்தபடி தலை குனிந்து அமைதியாக நிலவொளியில் உட்கார்ந்திருந்தாள். அவளது கருங்கூந்தல் முதுகில் பரவியிருந்தது. இடது கால் பெருவிரல் மண்ணில் அரையாகப் புதைந்திருந்த மெல்லிய கல்லைத் துழாவிக் கொண்டிருந்தது. அதன் வடிவத்தைக் கண்டுபிடிக்க முயன்று கொண்டிருந்தாள். அது தவறும் போது
வலது பெருவிரல் அதன் கசட்டைத் துருவி எடுத்தது.

பத்துவயதுச் சிறுமி. இரட்டைச் சடை. சிவப்பு கவுன்,சிவப்பு ஷு கறுப்பு ரிப்பன்கள் இதுதான் அவள். எல்லோரையும் கவர்ந்தாள். அவளுடைய சதைப்பற்றான மச்சமிருக்கிற கன்னத்தைக் கிள்ளுவார்கள். அது இன்னமும் நினைவிலிருப்பது ஆச்சர்யமாக இருந்தது. அவள் அப்போதும் கூச்சமுடையவளாக இருந்தாள்; பயமும், அவமானங்களும் இருந்தாலும் யாருடனும் அவளால் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. இவையெல்லாம் நடக்கிறதே நான் உண்மையானவளா, இதுதான் என்னுடைய பெயரா—அப்போதும் நிகழ்வுகள் அவளைக் குழப்பின.

நான் அப்பாவுடன் ராட்சஸ ராட்டினத்திலிருந்தேன். அவர் பட்டுக் குர்தாவும், வேட்டியும்–தன்னுடைய பண்டிகை ஆடையை அணிந்திருந்தார். சந்தனம் வைத்திருந்த பெட்டியில் இருந்ததால் குர்தா நல்ல வாசனை உடையதாக இருந்தது. முதல்முறையாக பயத்தோடும்,ஆர்வத்தோடும் நான் ராட்டினத்தில் உட்கார்ந்திருந்தேன்.அதன் சக்கரம் சுற்றத் தொடங்கியவுடன் என் பயம் மும்மடங்கானது. அது மேலே போகப்போக வேகம் அதிகமாக தான் இறப்பது போன்ற உணர்வில், அவள் அப்பாவை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் இறக்கி விடுங்கள் .. இறக்கி விடுங்கள்.. என்று கத்தினாள். அப்பா அதை நிறுத்தவில்லை. எதையும் செய்துவிட முடியும் என்று நான் நினைத்திருந்த அப்பாவால் அந்தச் சக்கரத்தை நிறுத்த முடியவில்லை. அப்பா சிரித்திருக்க வேண்டும். அவர் என்னை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். குளிர்க்காற்று பட, நான் சில்லிப்பாக உணர்ந்தேன்.

கவுனை நான் ஈரப்படுத்தி விட்டால் அம்மா கத்துவாள். அப்பாவையும்தான். வயிறு வெடித்துவிடும் போல உணர்ந்தாள். கவுனை ஈரப்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் பயம் அவளை விட்டுப் போயிருந்தது. ஏன் இப்போது அவளுக்கு கடந்த காலம் நினைவில் வரவேண்டும்? அதுவும் இந்த வகையிலான ஒரு மனநிலையில்? அவள் உள்ளங்கைகள் ஈரமாகியிருந்தன. கடந்த சில மாதங்களாகவே அவள் தன்னை விட்டேற்றியான ஒரு மனநிலைக்குத் தயார்படுத்திக் கொண்டிருந்தாள்.

அப்பா இப்போது மிக வயதான மனிதர். தளர்ந்து போன அவரிடம் தன்னைப் பிடிக்குமா பிடிக்காதா என்ற கேள்வியைக் கேட்பது கூட அர்த்தமற்றது. வாரா வாரம் அவள் அவருக்கு எழுதும் கடிதம் வராத போது அவள் பிரிவை அவர் உணரலாம் .மும்பையிலிருக்கும் என் தங்கையின் மகளுக்கு பிறந்தநாள் பரிசாக நான் வாங்கிய கொலுசு மேஜையில் இருக்கிறது. பல கடிதங்களுக்கு பதில் அனுப்பவேண்டும் ; திட்டக் கமிஷனிலிருந்து வந்த அழைப்பிதழ், மரம் நடும் அமைப்பு, குதிரைப் பயண அமைப்பு –ஆனால் எல்லாம் அர்த்தமற்றவை.

***

அவன் என் சங்கடமான நிலையை உணர்ந்திருக்க வேண்டும்; என் சிகரெட்டைப் பற்ற வைத்தான். “நீங்கள் தினமும் காலையில் குதிரை சவாரி செய்வதைப் பார்த்திருக்கிறேன் ஆங்கில நாடகங்களில் நடிப்பதையும் பார்த்திருக்கிறேன்..” நகரத்திற்கு வெகு தொலைவில், தனியான மூலைப் பகுதியில் ஏரியருகே ஒரு பெண் இருப்பது மிகச் சாதாரணம் என்பது போல அவன் நடந்து கொண்டான். அவள் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு உட்கார்ந்தாள். அவள் வசதியாக உட்காரும் வகையில் அவன் சிறிது நகர்ந்து உட்கார்ந்தான். அந்த உரையாடலைத் தொடர்வதில் அவன் எந்த வேகமும் காட்டவில்லை. எந்த விவரத்தையும் எதிர்பார்க்காத, நட்பின் அமைதியான தன்மையைக் காட்டுவது போலிருந்தான். அவனுக்குத் தன்னைத் தெரிந்திருப்பது சிறிது அமைதியைத் தந்தது என்றாலும் தனது அடையாளம் தெரியப்படாத நிலை மறைந்து விட்டது வருத்தம் தந்தது.

அவன் தன்னை அறிமுகம் செய்து கொள்ளாதது பெரியதாகப் படவில்லை. அவள் தன்பழைய மனநிலைக்குத் திரும்ப விரும்பி, தோற்று தன்அமைதியைத் தானே உடைத்தாள்.

“ இது மிகச் சின்ன உலகம். ”

அவன் இயல்பான சிரிப்போடு அமைதியாக உட்கார்ந்திருந்தான். அவளுக்கு அமைதி தேவை என்பதை புரிந்து கொண்டவன் போல இருந்தான். தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள அங்கு வந்திருக்கும் விஷயத்தை அவனிடம் இயல்பாகத் தன்னால் சொல்ல முடியுமென்று அவளுக்குத் தோன்றியது. அதே நேரத்தில் அவனிடம் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் எந்த மாறுதலும் வரப்போவதில்லை என்றும் தோன்றியது . அவள் சிகரெட்டைப் புகைத்தாள். பறவையொன்று கெஞ்சுவது போல அவர்களைப் பார்த்து ஒலித்தது. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“திருமதி…”

அவளைப் பார்த்த அவன் , அவள் பேச விரும்பாததைப் புரிந்து கொண்டவன் போல பாதியில் பேச்சை நிறுத்திவிட்டான். அவன் ஆழமான அமைதியில் ஆழ்ந்து விடுவான் என்றும் அவன் பேசவேண்டும் என்றும் நினைத்து அவள் “ஷைலி என்று கூப்பிடுங்கள்” என்று சொன்னாள்.

அவள் காத்திருந்தாள். தன் அடர்த்தியான கூந்தலை முதுகில் பரவவிட்டு அவனைப் பார்த்துத் திரும்பி இயல்பாகச் சிரித்தாள்.ஓ.. தன் கணவனுடன் சேர்ந்து, இப்படி நிம்மதியாகச் சிரித்து பல ஆண்டுகளாகி விட்டன! அவனுடைய அமைதியான முகம் ,நிலவொளியில் ஒரு மென்மையான உணர்வை வெளிப்படுத்தியது. அவன் கண்கள் மின்னின

“ஷைலி, என் மனைவி இறந்திருக்கலாம்’ அவன் அவளிடமிருந்து பதிலை ,எந்தவித அனுதாபத்தையும் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் குரல் வெளிப்படுத்தியது. அவள் அதிர்ந்தாள்.

“விசாரணைக்காக வரும் போலீசிடம் என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆமாம். தொடக்கத்தில் எங்களிடையே இருந்த காதல் மெல்ல, மெல்ல மறைந்து விட்டது. அது யாருடைய தவறு என்று கண்டுபிடித்துச் சொல்வது அசாதாரணமானது. நாம் சொல்லக் கூட முடியாது. காதல் மறைகிறது.—அது பரஸ்பரம் காணமுடிகிற ஒன்றல்ல. அது மந்திரமான மயக்கம், சிறிது நேரத்திற்குப் பிறகு அப்படி உணர்வது நின்று விடும். பிறகு இந்த ஏரி, குன்று, இந்த வானம்.. எல்லாம் மரணித்துவிடும்.

“நீங்கள் இதை வேடிக்கையாக உணரலாம் ஷைலி —ஆனால் இந்தப் பறவை ஒலித்தபோது நான் ஆச்சர்யப் பட்டேன். நீங்களும்தான். அது மிகவும் அற்புதம் .இல்லையா? நீங்கள் உங்கள் கூந்தலைப் பிரித்து முதுகில் பரவ விட்டுச் சிரித்த போது நான் வியப்படைந்தேன்., ஏன் என் மனைவியால் இது போல் இனிமையாகச் சிரிக்க முடியாது என்று நினைத்தேன். இந்த நாட்களில், நான் ஆச்சர்யப்படுவதும் கூட நின்று விட்டது. இல்லாவிட்டால் நான் ஒரு கலைஞனாக வாழும் தைரியம் பெற்றிருப்பேன்.எனக்கு அந்த தைரியம் இருந்திருந்தால் ஒருவேளை அவள் எதிர்ப்பு தெரிவித்திருக்க மாட்டாள். எங்களுக்குத் திருமணமான புதிதில் கல் போன்றிருந்த படுக்கையில்தான் படுப்போம். வறுமை.. எனக்கு ஏராளமான கனவுகளிருந்தன. ஆனால் இப்போது எதுவுமில்லை. அது போய் விட்டது. ஏன் போனது என்று எனக்குத் தெரியவில்லை. அவமானகரமான அந்த நாட்கள் போய்விட்டன. இவை எல்லாவற்றோடும், என்னுடைய , காரணமின்றிச் சந்தோஷப்படும் இயல்பும் கூடப் போய்விட்டது அதிகத் தேவை நமக்கிருக்கிறது என்று எப்போதும் புலம்பிக் கொண்டிருக்கும் எல்லைக்கு அவள் போய்விட்டாள்.. எதுவும் வேண்டாமென்று சொல்பவனில்லை நான்.

“நான் என் மனைவியை இன்று கொன்றிருப்பேன். எதற்குச் சண்டை போடத் தொடங்கினோம் என்பது கூட எனக்கு நினைவில்லை. பயங்கரம்.. இல்லையா? தற்கொலை செய்துகொள்ளப் போவதாகச் சொன்னாள். செய்து கொள் என்று சொல்லி அவளைத் தள்ளினேன். செத்துப் போ..செத்துப் போ.. நான் கத்தினேன். அவள் தன் அறைக்குள் போய் பூட்டிக்கொண்டாள். அப்போது எனக்கு எந்தவித உணர்வும் ஏற்படாதது குறித்து அதிர்ந்தேன். அவள் ஒரு நாற்காலியின் மீதேறி மேலே கயிற்றைப் போட்டு சுருக்குவதை கதவின் ஓட்டை வழியாக நான் பார்ப்பதை அவள் பார்த்தாள். அல்லது அவள் பார்க்காமலும் இருந்திருக்கலாம்.! ஆனால் அவள் கதவு இருந்த திசையைப் பார்த்தாள். எங்களுக்கு இரு குழந்தைகள் –ஓர் ஆண்,ஒரு பெண்—அவர்கள் விளையாடிவிட்டுத் திரும்பும் போது என்ன விதமான வேதனைக்கு ஆளாவார்கள் என்று நினைத்து வெந்து போனேன்.

“அவளுக்கு அப்படித் தோன்றவில்லை என்பது ஆச்சர்யம் தந்தது. அவள் சாவு பற்றிய சிந்தனையை நான் உணர்ந்த போது என் முழு உலகமே மாறிப் போனது .நான் எழுந்து வீட்டை விட்டு வெளியேறி, நடந்து இங்கு வந்து உட்கார்ந்தேன். ஏறக்குறைய இரண்டு மணி நேரம் நடந்திருக்கிறேன். நடந்து வரும் போது நான் நானாக இல்லை, வேறு யாரோ என்பதாவும் உணர்ந்தேன்.

“இப்போது அவள் உடல் உத்திரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். குழந்தைகள் அழுது கொண்டிருப்பார்கள். போலீஸ் வந்திருக்கலாம். வீட்டிற்கு முன்னால் அக்கம் பக்கத்தவர்கள் கூடியிருப்பார்கள். எதுவெனினும், வேறு யாருக்கோ இது நடந்திருப்பதாகத்தான் நான் உணர்கிறேன்”.

“என் திருமணத்திற்கு முன்பான கதையைக் கேளுங்கள். அவளுக்கு பதினெட்டு வயது. அவர்கள் கிராமத்தில் நான் நான்கைந்து நாட்கள் தங்கியிருந்தேன். அவர்களது ஒரே வீடுதான் அந்தக் காட்டில். ரப்பர் செடியால் வீடு சூழப்பட்டிருந்தது. இரண்டு புறத்திலும் வரிசையாகக் குன்றுகள். நாங்கள் சுள்ளிபொறுக்கச் சேர்ந்து போவோம். கிணற்றில் தண்ணீர் இறைப்பது, காய்கறிகள் நறுக்குவது, துணிகள் துவைப்பது வரிசையாகக் காய வைப்பது என்று அவள் செய்யும் எல்லா வேலைகளிலும் ஒரு நடனப் பாங்கிருக்கும். காரணமின்றி நாங்கள் சிரித்துக் கொண்டிருப்போம். அவள் தன் தாய்க்கு உதவியாகச் சமையலறையில் இருககும்போது நான் பேச விரும்ப மாட்டேன். அவள் எனக்காக சுடுதண்ணீர் வைத்துத் தருவாள். தாய் அறியாமல் முதுகு தேய்த்து விடுவாள். இரவில் நான் எழுந்திருக்கும் போது தான் விழித்திருப்பதைக் காட்டுவாள். இரவு
நேரத்தில் சாணக் கிடங்கிற்குப் போகும்போது துணைக்கு அழைப்பாள். சிறிது நேரம் தனியாக நெருக்கமாக நின்றிருப்போம்.அவள்தான் இது எல்லாவற்றையும் செய்தாள் என்று சில சமயம் எனக்குத் தோனறும்.

“அவளுக்கு ஒரு தாத்தா இருந்தார். ரப்பர் தோட்டம் போட அவர் காட்டைச் சமப்படுத்தினார். நாங்கள் சந்திப்பதற்கு ஐந்து வருடங்கள் முன்னதாகவே அவர் இறந்து விட்டாலும் எல்லோரும் அவரைப் பற்றி தினமும் பேசிக் கொண்டிருப்பார்கள். உண்மையில் அவர் சிறிது குறும்புக்காரர். காதல் கடிதங்கள் எழுதுவதில் திறமைசாலி. அந்தப் பழக்கம் சிறுவயது தொடங்கி அவர் சாகும்வரை இருந்தது. கடிதங்கள் எழுதுவது மட்டுமின்றி, தனது ஆதாரத்திற்காக அதன் பிரதிகளையும் வைத்திருந்தார். அந்தக் கடிதங்கள் தன் காதலியைச் சந்தித்ததையும், கவனமற்ற வார்த்தைகளால் வர்ணித்ததையும் விவரிக்கும்.. காதலியின் போக்கு வித்தியாசமாக இருந்தால் கடிதத்தின் தொனியும் மாறுபடும். சில கடிதங்கள் எளிமையாக – நெஞ்சு, பூக்கள் , பட்டாம்பூச்சிகள், அழகான வெள்ளை உடையுடனான இளம்பெண் என்ற வர்ணனைகளோடு. அவள் மாடிக்கு வந்து அந்தக் கடிதங்களை படித்துக் காட்டி சிரிப்பாள். அந்தத் தாத்தாவின் மனைவிக்கு எப்போதும் எங்கள் மீது ஒரு கண். ஒரு தடவை கடிதங்களைப் படித்துக் கொண்டிருந்தபோது வந்துவிட்டாள் புண்ணாக இருந்த தன் முதுகை பெருமையாகக் காட்டி அது தாத்தாவின் வேலை என்றாள். நாங்களிருவரும் விழுந்து விழுந்து சிரித்தோம். தன் கணவனின் சாகசங்கள், பில்லி சூனியத்தில் அவர் காட்டிய ஈடுபாடு, அவருடைய பிடிவாத குணம், அதை அவள் பொறுத்துக் கொண்ட விதம் என்று எல்லாவற்றையும் சொன்னாள். ஷைலி, உங்கள் முகத்தைப் பார்த்ததும், எனக்கு இவை எல்லாம் ஏன் ஞாபகம் வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவள் உங்களைப் போன்றில்லை. வீடே அவள்
உலகம். நன்றாகப் பாடுவாள். இப்போது அதையும் நிறுத்தி விட்டாள். அவர்கள் வீட்டில் ஓர் ஆடு இருந்தது. கண்ணில் பட்டவை எல்லாவற்றையும்மேய்ந்துவிடும். கட்டியிருக்கும் கயிறையும் சேர்த்துச் சாப்பிட்டுவிடும். ஒரு தடவை அது என் நிக்கரையும் கூடச் சாப்பிட்டு விட்டது. கட்டுப்படுத்த முடியாமல் அவள் சிரித்தாள். என் இறுகிய முகத்தைப் பார்த்து விட்டு இன்னும் அதிகமாகச் சிரித்தாள். நானும்தான். அவள் ஏன் சிரிக்கிறாள் என்று தெரியாமல் சிரித்தேன். அது அல்ப விஷயம்தான். ஆனால் அதுபற்றி நினைத்து நாங்கள் இரண்டு மூன்று வருடங்கள் சிரித்திருக்கிறோம். நான் உங்களிடம் இப்படிப் பேசிக் கொண்டிருப்பது— நான் இப்படிப் பேசுவேன், நினைப்பேன் என்று எல்லாம் அவளுக்குத் தெரியாது. என் வெறி அதிகமாகி இருந்திருக்கிறது, உங்களைப் பார்க்கும் வரை அது எனக்குத் தெரியவில்லை.” அவன் இடைவெளியில்லாமல் பேசிவிட்டு அமைதியானான்

அவள் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். அவன் தன் கைகளை அவள் கை மேல் வைத்தான்.மீண்டும் அவள் ஆச்சர்யமடைந்தாள். ஈரப்பதமான மேகங்கள் நிலாவின் மேல் மிதப்பதைப் பார்த்தாள். காற்று வீசியது.

“வாருங்கள், நாம் போகலாம்…” சொல்லிவிட்டு எழுந்தாள். காரில் ஏறி உட்கார்ந்த பிறகு அவன் வீடு இருக்குமிடத்தைக் கேட்டாள். காரின் பின் இருக்கையிலிருந்த விஸ்கி பாட்டிலை எடுத்து “உங்களுக்கு வேண்டுமா?” என்று கேட்டாள். அவன் சிறிது உறிஞ்சி விட்டு, “நன்றி” என்றான். அவள் பாட்டிலை மூடினாள். “ வேண்டுமென்றால் பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டுக் காரை கிளப்பினாள்.

“உங்கள் மனைவி இறந்திருக்க மாட்டாள் என்று நம்புகிறேன்” என்று கார் ஓட்டும் போது சொன்னாள்.

“ஆனால் எதுவும் மாறியிருக்கப் போவதில்லை” என்று சொன்னான் அமைதியாக.

”ஆமாம். மாறப் போவதில்லை” என்று அவள் தனக்காகவும் சேர்த்துச் சொன்னாள். அவனுடைய அமைதியான, மென்மையான முகம், மெலிந்த உதடுகளைப் பார்த்தாள். எதுவும் பேசவில்லை. அவன் வீட்டின் முன்பு காரை நிறுத்தினாள். தன் மகன் அமைதியாக பாடம் எழுதுவதை அவனால் பார்க்க முடிந்தது. அவள் கைகளை அவன் அழுத்தினான். அவள் அவன் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு “குட்பை “என்றாள்.’

*****
நன்றி:
Apoorva [ Uncanny ] first appeared in the collection Akasha Mattu Bekku Akshara Prakashana, Sagar, 1981

கலவி, வன்முறை, ஒரு அரைநிழற் நிகழ்வு

காலத்துகள்

‘இவரும் செங்கல்பட்டு தான்’ என்றாள் இவனுடைய மனைவி. வார ஆரம்பத்தின் சலிப்பு இப்போதே கவிய ஆரம்பித்திருக்கும் ஞாயிறு மாலையில் வீட்டிற்கு வந்தவர்களிடம் அசிரத்தையாக உரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவன், தலையசைத்து வைத்தான்.

‘எங்க இருந்தீங்க’ என்று எதிரில் அமர்ந்திருந்தவன் கேட்டான். ரவி என்று தானே பெயரை சொன்னான்? வெள்ளி தான் அடுத்த ப்ளாட்டில் குடிவந்திருந்தான்.

மெயின்டனன்ஸ் செலவு, கரண்ட் பில் குறித்து குறித்து தெரிந்து கொள்ள நேற்று வந்திருக்கலாம். விடுமுறையின் உற்சாகம் வடிந்து விட்ட நேரத்தில் தம்பதியராய் வந்து எரிச்சலேற்றுகிறார்கள். இவளும் ‘எப் ஒன்ல மெயின்டனன்ஸ் கரெக்ட்டா தரவே மாட்டாங்க, எங்க வீட்ல ரெண்டு பேரு தான், என்னோட வாட்டர் பில் பங்கு ஏன் இவ்ளோ இருக்குன்னு ஏதாவது சொல்லிட்டே இருப்பாங்க’, ‘எஸ் போர்ல பதினஞ்சாம் தேதிக்கு மேல தான் தருவாங்க’ என்று அபார்ட்மெண்ட் குறித்த பெருங்கதையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாள்.

‘கோகுலபுரம்’

‘நாங்க அண்ணா நகர். எந்த ஸ்கூல்’, ரவி தான்.

‘ஜோசப்’

‘நானும் அங்க தான், நைன்டி ஸிக்ஸ் பேட்ச்’..

‘நான் நைன்டி பைவ்’. போய்த் தொலையேண்டா.

பள்ளியின் அப்போதிருந்த வாத்தியார்கள், இப்போதைய நிலை குறித்து பேசிய பின் ரவி கிளம்பினான்.

 

‘கொயின்சிடன்ஸ்ல’

‘மாடிக்கு போறேன் வரியா, தலைவலி. டீசன்ஸி வேண்டாம், இப்படியா வந்து டார்ச்சர் பண்ணுவாங்க’

‘உங்களுக்கு யாராவது வீட்டுக்கு வந்தாலே பிடிக்காது’

‘வரட்டும், அதுக்காக சண்டே ஈவ்னிங்கா’

‘நீங்க போங்க, குக்கர் ஏத்திட்டு வரேன்’.

 

எதிர் ப்ளாட் முதியவர் கைகளை பின்னால் கட்டிக் கொண்டு, நெஞ்சையும் வயிற்றையும் புடைத்து நிமிர்த்தி , முதுகை வளைத்து ஏதோ செய்து கொண்டிருந்தார், ஏதாவது யோகாசனமாக இருக்கும். தினமும் குறைந்த பட்சம் ஒரு மணி நேர நடை, யோகா. எண்பது வயதிற்கு வலுவான உடற்கட்டு. அந்த வயதில் என்னால் மாடிக்கு ஏறி வந்து பத்து நிமிடம் நடக்க முடியுமா?

‘என்ன லேட்டா’ என்று கேட்ட பெரியவர் புட்டத்தை தூக்கி சத்தமாக காற்று பிரிக்க, ‘புதுசா வந்திருக்காங்கல்ல, அவங்க பேசிட்டிருந்தாங்க’ என்றபடி விரைவாக நகர்ந்தான். இது கண்டிப்பாக யோகப் பயிற்சியாக இருக்க முடியாது.

தானும் செங்கல்பட்டு தான் என்று அந்த ரவி சொல்வதற்கு முன் எதுவும் தோன்றவில்லை. இப்போது பரிச்சயமானவனாக தெரிகிறான். ஒரே ஊர், பள்ளி என்பதால் வரும் உளமயக்கம். மாடிச் சுவற்றினருகே நின்று தெருவை கவனித்துக் கொண்டிருந்தான். ட்யுஷன் முடித்து சைக்கிளில் மூன்று சிறுவர்கள் வந்து கொண்டிருந்தார்கள், பள்ளி திறக்கவிட்டாலும், ட்யுஷன் நடந்து கொண்டுதானிருக்கிறது. காலை நடைக்கு பதிலாக சைக்கிள் வாங்க வேண்டும் என்று சில மாதங்களாக இவன் யோசித்துக் கொண்டிருக்கிறான். குறைந்த பட்சம் பத்தாயிரம் ரூபாய் என்கிறார்கள். வாங்கி சில நாட்கள் மட்டுமே ஒட்டி, மீண்டும் நடக்க ஆரம்பித்தால் வீணாகிவிடும்.

பள்ளி சைக்கிள் ஸ்டாண்டில் நெரிசல். இரு கைகளையும் இவன் ஆக்ரோஷமாக வீசிக்கொண்டிருக்க , எதிரே உள்ளவனும் இவனை தாக்குகிறான். கன்னத்தில், நெற்றியில் படும் அடிகள். எதிரே உள்ளவன் காலால் உதைக்க, இவன் நிறுத்தியிருந்த சைக்கிளின் மீது விழ , நாலைந்து சைக்கிள்கள் சரிகின்றன. சண்டையை யாரோ தடுக்கிறார்கள். அந்தப் பையன் தன் வண்டியை எடுத்துக் கொண்டு செல்ல, இவனும் கிளம்புகிறான்.

இதுவரை வாழ்வில் இவனுடைய ஒரே கைகலப்பு, அதனாலேயே அவ்வப்போது நினைவுக்கு வரும் நிகழ்வு. முகம் மறந்திருந்த அந்தப் பையன் ரவியா, அதனால் தான் முன்பே பார்த்தது போல் தோன்றுகிறதோ? இல்லை, ரவியை பார்த்திருக்க வாய்ப்புகள் நிறையவே இருந்திருக்கும், காலை இறை வணக்கத்திற்கு செல்லும் போதும், அது முடிந்து திரும்பு போதும் அல்லது உணவு இடைவேளையில் எங்கேனும் பார்த்திருப்பான். பள்ளியில் இல்லாவிட்டாலும், பஜாரில் அல்லது தசரா சந்தையில். இல்லை, அப்படி மட்டுமே எதிர்பட்டிருந்தால் இப்போது நினைவுக்கு வராது, இந்த நிகழ்வோடு அவனை பொருத்திப் பார்க்கத் தோன்றாது. மாடியின் இன்னொரு முனைக்குச் சென்று அடுத்து கட்டிக் கொண்டிருந்த வீட்டை கவனிக்க ஆரம்பித்தான்.

ஸ்டாண்டில் வகுப்புவாரியாகத் தான் சைக்கிள்களை நிறுத்த வேண்டும். அந்தப் பையனுடைய சைக்கிள் இவனுடைய வண்டிக்கு சற்று முன்னால் தான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவன் எட்டாம் வகுப்பு மாணவனாகத் தான் இருந்திருக்க வேண்டும், எனவே அவன் ரவியாக இருக்கலாம்.

அருகில் வந்து நின்ற இவன் மனைவி

‘ரவி வைப் சொன்னதை கவனிச்சீங்களா, பார்ட்டி டூ லாக்ஸுக்கு வாங்கிருக்காங்களாம், உள் வேலைக்கு டூ லாக்ஸ் எக்ஸ்ட்ரா’

‘நம்ம வாங்கினப்ப இருந்ததை விட கொஞ்சம் தான் இன்க்ரீஸ் ஆயிருக்கு’

‘நீங்க அவரை பார்த்திருக்க சான்ஸ் இருக்குல’

‘இப்ப எதுவும் ஞாபகம் இல்லை, .. மேபி’

மாடியை சுற்ற ஆரம்பித்தாள். மாலை பதினைந்து, இருபது நிமிடங்கள் நடந்தால் தான் இரவுணவு எடுத்துக் கொள்ள முடிகிறது என்கிறாள். முதியவர் வேட்டியை அவிழ்த்து, உதறி கட்ட, அவர் அணிந்திருக்கும் நீல நிற உள்ளாடை சில நொடிகளுக்கு கண்ணில் படுகிறது. கிழத்திற்கு விவஸ்தையே கிடையாது, நிதானமாக சரி செய்து கொள்கிறார். நல்லவேளையாக இவள் அப்போது தான் அவரைக் கடந்து சென்றிருந்தாள்.

 

ஞாயிறு இரவின் கலவி. அட்டவணை போடவில்லையென்றாலும் வார இறுதியில் மட்டும் முயங்குதல் என்பது எப்படியோ நடைமுறைக்கு வந்துவிட்டது. மதியம், முன்மாலை என்று உடலெங்கும் இச்சை பரவியிருந்த காலம் முடிந்து விட்டது. சலிப்புடன், அசுவாரஸ்யமாக ஈடுபடாமல் அல்லது தலைவலி என்று அவள் தவிர்க்காமல் இருப்பதை எண்ணி தேற்றிக் கொள்ள வேண்டியது தான். சில வார இறுதிகளில் இவன் தான் தவிர்க்க காரணங்கள் தேடி, பின் அப்படிச் செய்தால் பொய்யென்று கண்டுபிடித்து விடுவாள் என்பதால் சமாளிக்க வேண்டியுள்ளது. உடலுறவில் ஈடுபட விருப்பமில்லை என்று ஆண் கூறுவது இழிவில்லையா? ‘ஆண்ட்ரோபாஸாக’ இருக்கலாம், இதற்கு யோகாவில் ஏதாவது உள்ளதா என்று பெரியவரிடம் கேட்கலாமா? இன்று ரவி பிரச்சனை வேறு, அவள் மீது கவிழ்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் போது, ரவியுடன் மனதில் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். உதட்டருகே இருந்த அவள் கழுத்தை கடிக்க, அவள் முகத்தில் குத்த தோன்றிய உணர்வை கட்டுப்படுத்த செல்ல சிரமப்பட வேண்டியிருந்தது.

பள்ளி சைக்கிள் ஸ்டாண்டில் நெரிசல். இரு கைகளையும் இவன் ஆக்ரோஷமாக வீசிக்கொண்டிருக்க , எதிரே உள்ளவனும் இவனை தாக்குகிறான். கன்னத்தில், நெற்றியில் படும் அடிகள். எதிரே உள்ளவன் காலால் உதைக்க, இவன் நிறுத்தியிருந்த சைக்கிளின் மீது விழ , நாலைந்து சைக்கிள்கள் சரிகின்றன. மங்கலாகிவிட்டிருந்த அந்தப் பையனின் முகம் ரவியின் ஜாடையில் இருப்பதாகத் தான் இப்போது தெளிவுறுகிறது.

 

ஆனால் எதுவும் ஞாபகம் இருப்பது போல் ரவி காட்டிக் கொள்ளவில்லை. வீட்டிற்குச் சென்றப் பின் அவனுக்கும் நினைவிற்கு வந்திருக்கக் கூடும். ‘என் சீனியர் தான். ஒரு நாள் சண்டை, அடி பின்னிட்டேன்’ என்று மனைவியிடம் கூறியிருப்பான். அவள் இனி ஏளனமாக தான் என்னைப் பார்ப்பாளோ? அபார்ட்மெண்டில் வசிப்பவர்களிடையே சிறு சிறு தற்காலிக மனஸ்தாபங்கள் எழுவதுண்டு, அப்போது ‘என் ஹஸ்பன்ட் கிட்ட ஓத வாங்கினவன் தான் ஒன் புருஷன்’ என்று அவள் கூறி விடலாம். அபத்தம். பேச்சு வாக்கில் சொல்லிவிடவே அதிக வாய்ப்புண்டு. ‘நம்ம ரெண்டு பேர் வீட்டுக்காரங்களும் ஸ்கூல் டேஸ்ல சண்ட போட்டாங்களாம், உங்க ஹஸ்பண்டுக்கு நல்லா அடி பட்டுருச்சாம்’. அதன் பின் இவளிடம் எப்படி முகம் கொடுத்து பேச முடியும், தன்னைக் காக்கக்கூடிய பலமுடையவனையே கற்காலத்திலிருந்து பெண்கள் தேர்வு செய்ய விரும்புவார்கள் என்று கூறுகிறார்கள். நாற்பது வயதுக்கு மேல் அந்த உயிரியல் இச்சை இருக்காதா என்ன? தன்னை விட வயது குறைந்தவனிடம் அடி வாங்கியவன் என்று அபார்ட்மெண்டில் வசிப்பவர்கள் அனைவருக்கும் இந்தச் செய்தி பரவக் கூடும். ஆனால் ரவிக்கு என் வயதிருக்கலாம், நவம்பர், டிசம்பருக்கு பின் பிறந்திருந்தால் ஒரு வருடம் தாமதமாக பள்ளியில் சேர்ந்திருப்பான். பெயிலாயிருந்தால் என்னைவிட பெரியவனாகக் கூட இருக்கக் கூடும். அன்று தாக்கிக் கொள்ளுமளவிற்கு என்ன நடந்தது?

காலை நடந்து முடிந்து திரும்பிக் கொண்டிருந்தவன் மெயின் ரோட்டிலுள்ள பேப்பர் கடையின் வாசலில் ரவி நின்றுகொண்டிருப்பதை கவனித்து வேறு பக்கம் பார்த்தபடி கடந்தான். ‘என்ன ஸார், வாக்கிங்கா’, என்றழைத்தான் ரவி.

‘டெய்லி ஒன் அவர்’

‘உங்களுக்கு யார் பேப்பர் போடறாங்க, நேத்து அதை கேக்க மறந்துட்டேன் ’

‘நம்பர் தரேன்’ நேற்று வெட்டி அரட்டை அடித்து, மாலையை பாழாக்கியதற்கு இதையும் கேட்டுத் தொலைத்திருக்கலாம்.

‘வர்க் ப்ரம் ஹோமா இல்லை ஆபிஸா ஸார்’

‘வீக்லி ஒன்ஸ் போகணும்’

‘நான் மூணு நாள் போகணும்.’

‘கம்பெனி வண்டியா’

‘அதெல்லாம் கிடையாது, பைக் தான்’

‘…’

‘அண்ணா நகர் ஸ்கூல்லேந்து தூரமாச்சே, எப்படி வருவீங்க, சைக்கிளா’ என்று கேட்டானிவன்.

‘ஆமா ஸார், பிப்த் வரைக்கும் வாலாஜாபாத் போற பஸ்ல வருவேன். அப்பறம் சைக்கிள்’

‘ஈவ்னிங் ஸ்டாண்ட்லேந்து வண்டிய எடுக்கறது ரொம்ப கஷ்டம்ல’

‘ஆமா ஸார், மத்த வேண்டிமேல இடிக்காம எடுத்துட்டு வரது ரொம்ப கஷ்டம்’

அபார்ட்மென்ட்டை அடைந்திருந்தார்கள்.

‘மூணு ப்ளோர் ஏற கொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கு, மார்னிங்கே பவர் கட்டு ஆகுமா ஸார்’

‘இல்ல, லைன் மாத்தறாங்க போல, அஞ்சு பத்து நிமிசத்துல வந்துடும்.’

 

‘சொல்லு நாயே’ என்றான் சசி.

‘டேய், நான் ஸ்கூல் டேஸ்ல சைக்கிள் ஸ்டான்ட்ல சண்டை போட்டது உனக்கு ஞாபகம் இருக்கா’

‘சண்டையா, என்னது’

‘ஒரு ஈவ்னிங் ஸ்கூல் முடிஞ்சு கிளம்பும் போது , நாம நயனத்ல இருக்கும் போதுன்னு நெனக்கறேன்.’

‘என்னடா சொல்ற, நாம எங்கடா சண்டைலாம் போட்டோம்’

‘நீ இல்லடா, நான் மட்டும் தான். எய்த் ஸ்டான்டார்ட் பையனோட. ஜான், இல்ல பெப்ரவரில இருக்கும்’

‘நோ, அப்படி எதுவும் ஞாபகம் இல்ல’

‘நல்லா யோசிச்சு பாரு நாயே’

‘‘நானே மண்டே மார்னிங் வெறுப்புல இருக்கேன், சண்ட போட்டேனா , குண்ட போட்டேனான்னு சாவடிக்காத’

‘ஸ்டாண்ட்டுக்கு அந்தப் பக்கம் கர்ல்ஸ் ஸ்கூல் க்ரவுண்ட், பாத்ரூம் இருக்குமே, அது ஞாபகம் இருக்குமே’

‘நீ ரொம்ப ஒழுங்கு, நீயும் தானடா எட்டிப் பார்த்த’

‘அத கரெக்ட்டா சொல்லு. ஈவ்னிங் கால் பண்றேன், அதுக்குள்ள ஏதாவது தோணுதா பாரு’

‘இன்னிக்கு சில பல ஆபிஸ் பஞ்சாயத்துக்கள் இருக்கு, கொசுவத்தி கொளுத்தறதுக்குலாம் வாய்ப்பில்ல ராஜா’

‘ரவின்னு நமக்கு அடுத்த பேட்ச்சுல யாரையாவது உனக்குத் தெரியுமா’

‘ஒத்தா, போன வைடா வெண்ண’

 

சசியும் இவனும் ஒன்றாகத் தான் பள்ளிக்கு சென்று வருவார்கள், பின் எப்படி நினைவில்லை என்கிறான். அப்படியொரு சண்டை நடக்கவே இல்லையோ? இல்லை, சசி அன்று பள்ளிக்கு வராமல் இருந்திருக்கலாம். அல்லது இப்படியிருக்கக் கூடும், சண்டை நடந்தது உண்மை, ஆனால் ரவியும் வேறொருவனும் அடித்துக் கொண்டது இவன் மனதில் இப்படி பதிந்திருக்கலாம். இல்லை, இதுவும் சாத்தியமில்லை. அன்று மாலை முகத்தில் தெறித்துக் கொண்டிருந்த வலி உண்மை.

பள்ளி சைக்கிள் ஸ்டாண்டில் நெரிசல். இரு கைகளையும் இவன் ஆக்ரோஷமாக வீசிக்கொண்டிருக்க , ரவியும் இவனை தாக்குகிறான். கன்னத்தில், நெற்றியில் படும் அடிகள். மூக்கில் அடிபட்டு நிறுத்தியிருந்த சைக்கிளின் மீது சாய்ந்து விழுகின்றவனை, ரவி எட்டி உதைக்கிறான்.

எட்டி உதைத்ததெல்லாம் நடக்கவில்லை. முகம் சற்று வீங்கியிருந்ததைத் தவிர அந்த சண்டையில் வேறெந்த அடியும் படவில்லை. மூக்கிலும் எந்த காயமும் இல்லை. முக வீக்கமும் கூட விரைவில் குறைந்து விட்டது. அதனால் தான் வீட்டில் யாரும் எதுவும் கேட்கவில்லை. தவிர, இலக்கில்லாத ஆறேழு கை வீசல்களைத் தவிர வேறெதுவும் ஸ்டாண்டின் மாலை நேர நெரிசலில் நடந்திருக்க முடியாது. அதிகபட்சம் ஒரு நிமிட சண்டை, அதற்குக் குறைவாகக் கூட இருக்கலாம். அதற்குள் தடுத்திருப்பார்கள்.

ரவிக்கு இப்போதே பெரிய தொப்பை, மூன்று மாடி ஏற சிரமப்படுகிறான், இன்னும் சில வருடங்களில் இன்னும் பருத்து விடுவான். அந்தப் பையன் அப்போதே கொஞ்சம் பூசினாற் போல் தான் இருந்தான் என்று தோன்றுகிறது. ஆனால் அப்படியிருந்திருந்தால் அந்த உடம்புடன் எப்படி சண்டை போட்டிருக்க முடியும். அந்தப் பையன் ரவி தானா?

அடுத்த நாள் பள்ளிக்குச் சென்றது நினைவில் உள்ளது. அன்று ரவியை பார்க்கவில்லை, அதன் பின்பும் ஸ்டாண்டில் அவன் எதிர்பட்டது போல் தெரியவில்லை. பள்ளியில் எங்காவது ஒரு சில கணங்களுக்காவது எதிரெதிரே வந்திருக்க வேண்டும். அடி வாங்கிய பயத்தில் ரவி என் முன் வருவதை தவிர்த்திருக்கலாம்.

இரு கைகளையும் குத்துவது போல் இவன் வீசிக்கொண்டிருக்க , ரவியும் இவனை தாக்குகிறான். கன்னத்தில், நெற்றியில் படும் அடிகள். மூக்கு உடைபட்டு சைக்கிளின் மீது சாய்ந்து விழும் ரவியை எட்டி உதைக்கிறான்.

‘ஜன்னலை இப்பவே சாத்திட்டீங்க, ஆபிஸ்ல வீடியோ காலா’ என்று படுக்கையறைக்குள் நுழைந்த மனைவி கேட்க இல்லையென்று தலையசைத்தவன்,

‘அருண் வர ஒன்னாயிடும்ல’ என்றான்.

‘ஆமாம்… இப்பவே ஏஸி வேற போட்டிருக்கீங்க’

அவள் மேல் கவிழ்ந்திருந்தவன் விலகி படுத்தான்.

‘நேத்து நைட்டே உன்ட்ட சொல்லனும்னு நினைச்சேன், மறந்துட்டேன். ரவி வந்திருக்கான்ல அவன் கூட ஒரு வாட்டி சண்ட போட்டேன்’

வலது காலை மடித்தவள் இவனை நோக்கி திரும்பி ‘நீங்களா’ என்றாள்.

‘லைப்ல என்னோட பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் பைட். ஸ்கூல் சைக்கிள் ஸ்டாண்ட்ல வண்டி எடுக்கறதுல ஏதோ ஆர்க்யுமென்ட். செம அடி அடிச்சுட்டேன். பாவம் கீழ விழுந்தவனை எட்டி வேற ஓதச்சேன். அவன் அப்பவே கொஞ்சம் குண்டாத் தான் இருந்தான். சசி தான் வந்து தடுத்து விட்டான்.’

‘நெஜமாவா’

‘எஸ்’

‘என்னால நீங்க சண்ட போட்டதை இமாஜினே பண்ண முடியலை’

‘ஒரு நிமிஷம் கூட இருக்காது , சினிமா பைட்டான்ன. ரெண்டு அடி அடிச்சவுடன விழுந்துட்டான். மூக்கொடைஞ்சு ரத்தம்’

‘அடிச்சீங்கன்னு சொல்லுங்க, கொஞ்சமாவது நம்பற மாதிரி இருக்கு. அதுக்காக மூக்கலாம் ஓடச்சேன்னு..’

‘நெஜமாத்தான்டி. சில்லுமூக்குன்னு சொல்வாங்கல’

‘சின்ன விஷயத்தால கூட சில்மூக்குல வரும். காலேஜ் டேஸ்ல என் கூட படிச்சவ, மதியம் மூஞ்சி கழுவும் போது, அழுத்தி தேய்ச்சு ரத்தம் வந்துடுச்சு, செம அழுகை, அப்பறம்…’

‘இவனுக்கு நான் அடிச்சு தான் ரத்தம்’

‘ஒகே..’

‘நான் ஏண்டி பொய் சொல்லப்போறேன்’

‘..’

‘எனக்கு நேத்து வரை அவன் ஞாபகமே இல்ல, அவனைப் பத்தி எதுக்கு நான் பொய் சொல்லணும்’

‘சண்ட போட்டீங்க சரி, மூக்க ஓடச்சீங்கன்னே வெச்சுப்போம். ஆனா அந்தப் பையன் ரவி தானா. நிச்சயமா தெரியுமா?’ இடது காலை மடித்துக் கொண்டபடி கேட்டாள். உள் தொடையின் மென் மயிர்கள், ரவி மனைவியின் முழங்கையில் படர்ந்திருந்ததைப் போல.

‘ரவிக்கே கூட ஞாபகம் வந்திருக்கும் போல , அதான் இன்னிக்கு காத்தால வாக்கிங் போயிட்டு வரும்போது அவன பார்த்தப்ப சரியா பேசல. அந்தப் சண்டைக்கப்பறம் கூட அவன் அந்த இடத்துல சைக்கிளை வெக்கவே இல்ல’

‘..’

‘அவனால ஸ்டெப்சே ஏறே முடியல, மூச்சு வாங்குது.’

‘நீங்களும் கொஞ்சம் வெயிட் போட்டுடீங்க’ என்றபடி எழுந்தவள் ‘சண்ட போட்டீங்களோ இல்லையோ, அது ரவியாவே இருந்தாக் கூட, இந்த வயசுல அதெல்லாம் வேண்டாம்’ என்று கூறிவிட்டு கழிவறைக்குச் செல்ல, வயிற்றைத் தடவிப் பார்த்தான். ரவி அளவுக்கு தொப்பை இல்லை, சொஞ்சம் சரித்துள்ளது அவ்வளவு தான், கொஞ்சம் மூச்சை இழுத்துப் பிடித்தால் தட்டையாகிவிடும். இப்போது சண்டையிட்டால் ரவியால் ஒரு அடி கூட அடிக்க முடியாது.

ரவியை வயிற்றிலும், முகத்திலும் குத்தி அவனை வீழ்த்துகிறான். ‘விட்ருங்க’ என்று உரக்க கத்தியபடி இருவருக்கும் இடையில் ரவியின் மனைவி வருகிறாள். வியர்வை படிந்த அவள் முழங்கையில் மயிர்கள் இன்னும் கருமையாக படர்ந்துள்ளன. விலகிச் நிற்கிறான்.

வயிற்றை தடவிக்கொண்டிருந்த கை கீழிறங்கியது.

எழ முயலும் ரவிக்கு அவன் மனைவி உதவுகிறாள். ‘எதுக்கு வீண் சண்ட’ என்று அவனிடம் அவள் கேட்க குறுகி நிற்கும் ரவி.

உள்ளங்கைக்குள் இறுகும் குறி.

எழ முயலும் ரவிக்கு அவன் மனைவி உதவுகிறாள். ‘எதுக்கு வீண் சண்ட’ என்று அவனிடம் அவள் கேட்க குறுகி நிற்கும் ரவி, மீண்டும் இவன் மீது பாய முயற்சிக்க ‘விடுங்க, திருப்பி அவர்கிட்ட அடி வாங்கதீங்க’ என்று அவன் மனைவி தடுக்கிறாள்.

உள்ளங்கையில் பரவும் குறியின் ரத்த ஓட்ட சூடு. கழிவறையிலிருந்து வெளிய வந்து தொடைகளுக்கிடையில் துண்டால் துடைத்துக் கொண்ட பின் படுக்கையிலிருந்த உள்ளாடையை எடுக்க குனிந்தவளின் கைகளைப் பற்றி இழுத்தான்.

ஆனந்த யாழ்

பானுமதி ந 

 

சில வார்த்தைகள், எப்போதோ கேட்டவை, ஏன் நம்முடன் பயணிக்கின்றன என பிரமீளா அதிசயித்தாள். ஊதுவத்தியின் புகை காற்றில் வளைந்து எழுந்து தோடியெனக் கமழ்வது போல, ஒரு யாழின் மீட்டலென, உள் நரம்புக்குள் உட்புகுந்து, அதுவாகவே ஆவதான ஒரு வார்த்தை. இராகமாக, சோகமாக, ஆச்சர்யமாக, ஆனந்தமாக தனக்கே உரித்தான பொருள் மயக்கம் தரும் அதை ஏன் அவள் நினைத்துக் கொண்டே இருக்கிறாள்? குழந்தைகளின் பருவங்கள் பற்றி அவளது ஆசிரியை எத்தனைப் பாடல்கள் வகுப்பிலும், தனியாகவும் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஆனால், செங்கீரை ஏன் அப்படிப் பதிந்தது?

சரவணன் எட்டு மாதங்களில் மெதுவாகப் புரண்டான்; ஆனால், எழ முடியவில்லை. தவழடா, என் கண்ணே, ஒரு கால் ஊன்றி, மற்றொன்றை மடக்கி, நீ செங்கீரை ஆடமாட்டாயா என்று எப்படி ஏங்கினாள் அவள்.

“கொஞ்சிடு கிண்கிணி பொன்னரை ஞாணுடன்
கூடிய திர்ந்து மசைந்தாடக்
கோதறு தண்டை சிலம்பு கிடந்திசை
கொண்டு புரண்டு புரண்டாடச்
சிஞ்சித இன்னொலி யுங்குதலைச் சொலுஞ்
சிந்திட ஆடுக செங்கீரை
செந்தமிழ் சேர் பொருனைத்துறை தங்கிய
சேவல ஆடுக செங்கீரை”

வரிவரியாய் மனதினுள் முகிழ்த்தப் பாடல். கருவில் இருந்த போதே அவள் அவனுக்குச் சொல்லித் தந்த பாடல்.

ஐந்து வயதில் அவன் இரண்டு வயதுக் குழந்தையாய், மாதம் இருமுறை குருதி ஏற்றும் மருத்துவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவனைக் காப்பதற்காகவேப் பிறந்த கார்த்திகேயன் வளர்வதற்கு அவள் காத்திருக்கிறாள்.

சரவணனின் விநோத சத்தம் கேட்டு அவள் சமையலறையிலிருந்து ஓடி வந்தாள். கார்த்தி அவளை ஏமாற்றவில்லை. புரண்டு, நிமிர்ந்து, வலக்காலை மடக்கி, இடக்காலை ஊன்றி அவன் செங்கீரை ஆடினான். ‘ஏலும் மறைப் பொருளே, ஆடுக செங்கீரை’ என்று பித்தியைப் போலப் பாடினாள். இரு குழந்தைகளையும் வாரி அணைத்துக் கொண்டாள்.

கார்த்திகேயனைக் கருவுற்றது அவள் நினைவிலாடியது. சரவணன் செந்நிற இரத்த அணுக்கள் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தை. குடும்பத்தில் உள்ளவர்களின் எலும்பு மஜ்ஜை குழந்தைக்கு ஒத்துவரவில்லை. இரத்தம் ஏற்றி ஏற்றியே வாழும் ஒரு மழலை. இந்த ஐந்து வயதிற்குள் நூறு முறையேனும் சரவணனுக்கு இரத்தம் கொடுக்கப்பட்டுவிட்டது. சரவணன் நாளுக்கு நாள் சோர்ந்து வந்தான்.

“மிஸ்டர். சுப்ரமண்யன், இப்டியே செஞ்சுண்டிருக்க முடியாது யு நோ,  பேபி ஃபுல்லா இம்ப்ரூவாவான்னு, ஐ மீன், இந்த மெதட்ல தோணல.  ஒன்னு செய்லாம். உங்களுக்கு இன்னொரு குழந்தை பொறக்கணும். ஆனா, ஐ வி எஃப் லதான் செய்யணும். அவனுக்கு ஹீமோக்ளோபின் ரொம்பக் கொறைவாயிருக்கு. அவன் கண்டிஷன ‘தலசீமியா மேஜர்’ன்னு சொல்வோம். அவனோட திசுவோட ஒத்துப் போற ‘போன் மேரோ’ வேணும். அப்பத்தான் அவன் உடம்பு தானே சரி செஞ்சுக்கும்.”

‘டாக்டர், நீங்க சொல்றது சுத்தமாப் புரியல. எதுக்கு ஐ வி எஃப் ? இன்னொரு கொழந்தைன்னு நெனைக்கவே பயமாயிருக்கு.’

“சேவியர் சிப்ளிங்’ அப்படின்னு பேரு இதுக்கு. அதே அம்மா, அப்பா, அதே கரு வளர்ற முறதான். ஆனா, லுகோசைட் இஸ்யூ இருக்கில்லியா? சரி சரி பயமுறுத்தல. அவன் டிஷ்யுவுக்கு சேர்ற மாரி இருக்கான்னு பாத்து அந்தக் கருவை வளக்கணும். முதல்ல ஐ வி எஃப் ல, கருவ சோதிச்சுட்டு, எது சரவணனுக்கு ஒத்து வருதோ அத மட்டும் உங்க மனைவியோட கருப்பைல வைப்போம். அது வளந்து, பொறந்து, பத்து கிலோவாவது வெய்ட்டுக்கு வரணும். அப்போ அதோட எலும்பு மஜ்ஜைலேந்து ஒரு பகுதி எடுத்து இவன் உடம்புல சேத்துடுவோம்.”

‘அப்ப, இவனுக்காகப் பொறக்கப் போற கொழந்தயோட நெல?’

“அது சேஃப்பா இருக்கும், அதைக் கொன்னு இத வாழ வைக்க மாட்டோம். மெடிகல் சைன்ஸ் அப்படியெல்லாமில்ல.”

‘டாக்டர், அந்தக் கொழந்த ஒருக்கால் பொண்ணா பொறந்துட்டா?’

“அது எதுவா வேணா இருக்கலாம். அது ப்ராபளமே இல்ல.”

இருவது முறை இன்வெர்டோ செய்தார்கள். இருவத்தியோரில் கார்த்தி மிகச் சரியாகப் பொருந்தி அவள் கருப்பையில்           நுழைந்தான். இன்று செங்கீரையும் ஆடிவிட்டான். தளதளவென்று வளர்கிறான்; கொழுவிய பால் சதையில் கொள்ளை கொள்கிறான்; அவன் இன்னும் சில மாதங்களில் பத்து கிலோ எடையைத் தாண்டி விடுவான். சரவணனும், கார்த்திகேயனும் ஒருவரல்லவா? ஆனந்த யாழின் இசையை ஒலிக்கும் கூட்டின் இந்த இரு பறவைகளும்.

 

கிருஷ்ணனுக்குப் புரியும்

மீனாட்சி பாலகணேஷ்

மழை வரப்போவதற்கு அறிகுறிகள் தெரிந்தன. அரண்மனை நந்தவனத்து மரத்தடியில் அமர்ந்து தான் செய்துகொண்டிருந்த கைவேலையை கிருஷ்ணா (திரௌபதி) மளமளவென முடித்து எடுத்துக்கொண்டாள். அதனை பத்திரமாக ஒரு பட்டுத்துணியில் சுற்றிவைத்தாள். மேலே நிமிர்ந்து ஆகாயத்தைப்பார்த்தாள். கூட்டங்களாகக் கருமேகங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவளுடைய எண்ணங்களும் நீர்கொண்ட மேகங்கள்போல் கனத்து எங்கேயோ விரைந்தன. அதற்குள் பணிப்பெண் நந்தினி ஓடோடி வந்து, “அம்மா, ரதம் தயாராகி விட்டது. தாங்கள் சொன்னவாறே பழக்கூடைகளையும், பலகாரப் பாத்திரங்களையும் அதில் வைத்து விட்டோம்,” என்றாள். மெல்ல எழுந்த கிருஷ்ணா ரதத்தை நோக்கி நடந்தாள். குதிரைகளைத் தட்டிக் கொடுத்தபடி தயாராக இருந்த ரதசாரதி, அரசியைக்கண்டதும் பணிந்து வணங்கினான்.

“பரிமளா, நான் இரண்டுபேரும்தான் தங்களுடன் வருகிறோம் தேவி,” என்றாள் நந்தினி. “போதும், இந்தப் பால்பாயசப் பாத்திரம் சிந்தாமல் கூடையைப் பிடித்துக்கொள்,” என்றபடி ரதத்தில் ஏறிக்கொண்டாள் திரௌபதி.

பட்டத்தரசி திரௌபதியின் அலங்காரத்தைக் கண்டு பணிப்பெண்கள் அர்த்தபுஷ்டியோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். இத்தனை கஷ்டங்களையும் சகித்துக்கொண்டு சாதித்த பெருமிதம் அவள் முகத்தில் பிரகாசித்தது. வாடிவதங்காமல் மினுமினுத்த தேகம். யாகத்தீயிலிருந்து உதித்த கரியதேகமானாலும் (கிருஷ்ணா) அழகிற்கும் கட்டமைப்பிற்கும் சிறிதும் பங்கமின்றி, இளமையில் பல அரசர்களின் கனவாக, அடைய விரும்பிய பொக்கிஷமாக இருந்தவள்; இன்றும் இருப்பவள். அழகான கருங்கூந்தலை அருமையான கொண்டையாகப் புனைந்து அதில் அலட்சியமாகச் சுற்றிவைத்த முத்துச்சரம்; பொன்போன்ற சில சண்பகமலர்கள். தாமரை வண்ணக் கச்சும் அதேநிறத்தில் புடைவையும். மிகக்குறைவான ஆபரணங்கள். இந்த வயதிலும் அரசி எப்படி அழகில் ஜ்வலிக்கிறாள் என்று இவர்கள் மயங்கினார்கள்.

ரதத்தைவிட விரைவாக அவளுடைய எண்ணங்கள் சிறகடித்தன. இவள் கொண்டுவருவதனைக்கண்டு கிருஷ்ணன் என்ன சொல்லுவான் என்று எண்ணியபோது முகத்தில் ஒரு புன்னகை விரிந்தது. அப்படி என்ன கொண்டு செல்கிறாள் இந்தப் பாஞ்சாலி?

கிருஷ்ணன் கேட்கப்போகும் கேள்வி அவளுக்கு ஏற்கெனவே தெரியும். “இத்தனை நாட்களாக இல்லாத இந்த வழக்கம் இப்போது ஏன் யக்ஞசேனி?”

அவள் சொல்லப்போகும் பதில்???

ஆம், ‘இத்தனை நாட்களாக இல்லாத இந்த வழக்கம் இப்போது ஏன் யக்ஞசேனி?’ தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள் அவள், யக்ஞசேனி!

விடை அவள் மட்டுமே அறிந்தது!

கிருஷ்ணனுக்கும் தெரிந்திருக்கலாம். அவன் அறியாததும் ஒன்றுண்டா?

*******

மிகுந்த தலைவலியுடன் தனதறையில் படுத்துக்கொண்டிருந்தாள் திரௌபதி; பணிப்பெண் நந்தினிதான் எதையெதையோ தடவி அவள் நெற்றிப்பொட்டினைத் தேய்த்துவிட்டபடி இருந்தாள். அரசி உறங்கிவிட்டாள் என்று எழுந்து மற்ற பணிப்பெண்களுடன் நந்தவனத்துக்குப் போய்விட்டாள். கிழவியொருத்தி மட்டும் அந்த அறைவாயிலில் காவலுக்கு உட்கார்ந்திருந்தவள் தானும் தூங்கி விழுந்து கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்திலேயே எழுந்துவிட்ட திரௌபதிக்கு நந்தவனத்தில் காற்றாட உலவிவிட்டுவந்தால் நன்றாக இருக்குமே எனத்தோன்ற அதை உடனே செயல்படுத்தினாள். மலர்களின் பலவித மணங்களை ஆழ்ந்து சுவாசித்தவாறு மெல்ல நடந்தவளை மல்லிகைப்புதர்களின் பின்பு அமர்ந்து ரகசியம் பேசிக்கொண்டிருந்த பெண்களின் குரல் தடுத்து நிறுத்தியது!

“பரிமளா, எப்படித்தான் மகாராணி ஐந்து கணவர்களை சமாளிக்கிறார்களோ தெரியவில்லை. என் கணவர் ஒருவரை சமாளிப்பதற்கே எனக்கு முடியவில்லை,” என்று நகைத்தாள் நந்தினி.

“அதுதான் அவ்வப்போது துவாரகைக்குப்போய் அவர்களுக்கு இஷ்டமான கிருஷ்ணராஜாவை சந்தித்துவிட்டு வருகிறார்களே! இங்க ஐந்தோட அவரும் ஒன்று, ஆறு!” என்று கூசாமல் கூறி வாயைமூடிக்கொண்டு சிரித்தாள் அடுத்தவள்.

“ஆமாம், அங்கேயும் அவருக்கு ஆயிரக்கணக்கானபேர் ராணிகள். ஆனாலும் இவர்களுக்கு என்று ஒரு தனியிடம் இருக்கும்போல….” என்று சொல்லி எல்லாரும் பெரிதாக சப்தம் எழாமல் சிரித்தனர்.

பெரிதாகப் பொங்கிய கோபத்தையும், அதன் அடிநாதமான துயரத்தையும் அடக்கிக்கொண்டாள் திரௌபதி. அவள் பகிரங்கமாக சபையில் கேட்காத பழிச்சொற்களா? ஆனால்,அவளுடைய உயிர் நண்பனை, கிருஷ்ணனை எடைபோட உலகம் எவ்வாறு துணிந்தது?  ‘நேற்றுப்பிறந்த சின்னப்பெண்கள், வாழ்வை இன்னும் என்னைப்போல் எதிர் கொள்ளவில்லை; மேலெழுந்தவாரியாகப் பார்ப்பதனை வைத்துத் தங்கள் அரசியையும்  கிருஷ்ணனையும் எடைபோடுகிறார்கள்; பைத்தியங்கள்.’ தான் வந்த சுவடே தெரியாமல் நகர்ந்தாள் அவள்.

அப்போது எழுந்ததொரு எண்ணம் விரைவில் கிருஷ்ணனைப் போலவே விசுவரூபம் எடுத்தது. அதற்கேற்றாற்போல அந்தத் திருநாளும் வந்தது.

கடவுள் மனிதனாகப் பிறந்தால், மனித தர்மங்களுக்குக் கட்டுப்பட வேண்டும். நரம்பில்லாத மனித நாக்குகளிலும்கூடப் புரண்டெழ வேண்டும் என்பதுதான் மனிதர்கள் வாழும் இந்த உலகின் நியதியோ?

‘கிருஷ்ணா! என் ஆத்ம சினேகிதனே! புன்மை மிகுந்த இந்த உலகத்தோர், உன்னை ‘ஸ்த்ரீலோலன்’ என எண்ணிக்கொள்ள விடமாட்டேன். ஏதாவது செய்து உன் அன்பின், நட்பின் புனிதத்தைப் பறைசாற்றுவேன் இந்த உலகுக்கு.’

*****

குதிரைகள் மனோவேகம், வாயுவேகத்தில் விரைய, பழைய நாட்களின் நிகழ்வுகளை உள்ளம் ஒன்றொன்றாக அசைபோட்டது.

*****

திரௌபதியின் ஸ்வயம்வரம் அறிவிக்கப்பட்டு விட்டது. தோழி சௌதாமினி மூலம் கிருஷ்ணனுக்குச் செய்தி அனுப்பினாள் திரௌபதி. அவனோ நேரிலேயே வந்துவிட்டான்! ஸ்வயம்வரத்திற்கு அல்ல! தான் ஸ்வயம்வரத்தில் பங்கேற்க இயலாததையும், அவளை மணமுடிக்க இயலாததனையும் சொல்லத்தான் வந்திருக்கிறான்.

ஆயிரமாயிரம் மனைவியர்கள் அவனுக்கு. அவர்களுள் ஒருத்தியாக இருக்க திரௌபதி விரும்பவில்லைதான். இருப்பினும் ருக்மிணி, சத்யபாமா போன்றவர்களுக்குத் தனி இடங்கள் அவன் உள்ளத்திலும் அரண்மனையிலும் இருக்கவில்லையா? அதேபோல் தனக்கும் ஒரு இடமளித்துத் தன்னையும் அவன் மனையாளாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என விரும்பினாள் அவள். கிருஷ்ணனிடம் யார்தான் காதல் வயப்படவில்லை?

கடந்த இரு நாழிகைகளாக அவளுக்கும் கிருஷ்ணனுக்கும் வாக்குவாதம் தொடர்ந்தபடி இருக்கிறது. சேடிப்பெண்கள் பட்டாடைகளையும் பூஷணங்களையும் அணிவித்து அவளைத் தயார்செய்து ஸ்வயம்வர மண்டபத்திற்கு அழைத்துச்செல்லக் காத்து அறையின் வெளியே அவர்கள் பேச்சு காதுக்கு எட்டாத தூரத்தில் நிற்கிறார்கள்.

“பாஞ்சாலி! இத்தனை சொல்லியும் புரியவில்லையா உனக்கு?” மௌனத்திலாழ்ந்து தலைகவிழ்ந்து சிந்தனையில் மூழ்கியிருக்கும் அவளிடம் கேட்டான் கிருஷ்ணன்.

கவிழ்ந்த தலையை ‘வெடுக்’கென்று நிமிர்த்தி, திரௌபதி கிருஷ்ணனை ஏறெடுத்து நோக்கினாள்: அவளுடைய கரிய பெரிய விழிகளில் சோகமும் ஆற்றாமையும் ததும்பி வழிந்தது. “கிருஷ்ணா! என்னிடமும் நீ விளையாடுகிறாயா? எத்தனை நாட்களாக நான் உறக்கமின்றி, உன்னையே எண்ணியபடி ஏங்கித் தவித்திருக்கிறேன் என்று உனக்குத் தெரியுமா? இன்றா, நேற்றா? குழந்தைப் பருவத்திலிருந்து நான் செய்து கொள்ளும் அலங்காரங்களும், பூஜைகளும், இன்னபிறவும் உனக்காகவே என உணர்ந்திருக்கிறாயா?” ஆத்திரத்துடன் அவனிடம் சீறினாள் அவள்.

அவளுடைய ஆத்திரத்தைக் கண்டு ‘கலகல’வெனச் சிரித்தான் கிருஷ்ணன்.

“யக்ஞசேனி! (திரௌபதியின் மற்றொரு பெயர். யாகத்தீயிலிருந்து வெளிவந்தவளாதலால் இப்பெயர் அமைந்தது) உன் உள்ளத்தை நானறிவேன். நீ எனக்காக ஏங்குவதையும் நான் அறிவேன். ஆனால் …………. இதனைக் கேள்.

“உனது பிறப்பிற்கு ஒரு காரணம் உண்டு. திரௌபதி எனும் பெண்ணால் மட்டுமே க்ஷத்திரியர்களின் அதர்மப் போக்கைக் கண்டித்துத் தர்மத்தை நிலைநிறுத்த இயலும் என்பது  முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டுவிட்டதொன்று. ஒரு பெண், தனது அசாதாரணமான மனோபலத்தால் மட்டுமே இதையெல்லாம் சாதித்தாள் என்பதை உலகத்தோர் உணர்ந்துகொள்ள வேண்டும். எதிர்கால க்ஷத்திரியச் சந்ததியினர் இந்தப் பூவுலகில் தர்மத்தை நிலைநிறுத்த, பெண்ணான நீ ஒருத்தி மட்டுமே துணையிருப்பாய்! அதற்காக எனது அம்சமான ஒருவனை நீ ஸ்வயம்வரத்தில் கணவனாக அடைவாய்!” என்றான் கிருஷ்ணன்.

“யார்? யாரவன் கிருஷ்ணா? உன்னைவிட உயர்ந்தவன் என உன் வாயாலேயே நீ கூறும் அவன் யார்?” கிருஷ்ணனை விட உயர்ந்தவன் இன்னொருவனும் உண்டா எனும் கோபத்திலும் கிருஷ்ணன் கூறும் செய்திகளாலும் நிராசையில் கண்களில் நீர் படலம் கட்டியது அவளுக்கு! ஆனால் அது புனலெடுத்து ஓட அவள் அனுமதிக்கவில்லை!

“ஐந்து பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனனே அவன்! இந்திரனின் அம்சமாக விளங்கும் அவன் உனது வாழ்க்கைத் துணைவனாவான். எனது ஆத்மாவின் ஒரு பகுதி அவனிடம் இருக்கிறது. நானே அவன். அவன் என்னில் அடக்கம். அவன் மகா வீரபுருஷன்; ஆணழகன்; நீ அவனுடன் இணைந்து தர்மத்தை நிலைநாட்டுவாய். நீ இல்லாவிட்டால் அர்ஜுனனும் மற்ற நான்கு பாண்டவர்களும் தர்மத்தைவிட்டு விலகி விடுவார்கள்; இது உலக நன்மைக்காக உனக்காக விதிக்கப்பட்ட கடமை, உனது பிறப்பின் அர்த்தம்,” என்றான் அனைத்தும் அறிந்த பரந்தாமன்.

கைகளை மார்பின் குறுக்காகக் கட்டிக்கொண்டு அவன் நின்ற கோலம் அவள் கண்களை, உள்ளத்தை, சிந்தையை நிறைத்தது. சில கணங்கள் கண்களை இறுக மூடி, அதனை அப்படியே இதயத்தில் அழியாததொரு சித்திரமாகப் பதித்துக் கொண்டாள் அவள். கண்ணீரை அணைபோட்ட கண்களுடன் அவன் கூறுவதையும் கேட்டுக்கொண்டாள் திரௌபதி!

“கிருஷ்ணே! என் அருமைத் தோழியே! உனக்கும் எனக்கும் இடையிலான இந்த உறவு பந்தங்களுக்கும் சொந்தங்களுக்கும் அப்பாற்பட்டது. என்னிடம் அன்பு கொள்வது எவருக்குமே மிகவும் எளிது! ருக்மிணி, பாமா, அனைத்து கோபிகைகள், எனது பதினாறாயிரம் மனைவியர் அனைவருமே என்னிடம் எல்லையற்ற, தீராத அன்பு பூண்டவர்கள். ஆனாலும் ருக்மிணி, சத்யபாமா ஆகிய எட்டு அரசிகள் தவிர மற்ற அனைவருமே என்னை மனதால் மட்டுமே காதலனாக, கணவனாக வரித்துக் கொண்டவர்கள்.

“உன்னுடனான எனது இந்த பந்தம் அழிவற்றது. நான் என்றுமே உனது உயிர் நண்பன், உயிர்த்தோழன், நீயும் எனது உயிர்த்தோழி, உனது அன்பை நான் பரிபூரணமாக ஏற்றுக்கொண்டுவிட்டேன் கிருஷ்ணே!” என்றான் கிருஷ்ணன். தானும் அவளும் இணைக்கப்பட்ட பந்தத்தை அவளுக்கு உணர்த்த வேண்டுமென்றே அவளை அப்பெயரால் அழைத்தான். (யாகத்தீயினால் கருநிறம் கொண்ட மேனியளாக உதித்தவளை கிருஷ்ணை என்றும் அழைத்தனர்).

கேட்ட அவள் இதயம் சிலிர்த்தது. உடல் புல்லரித்து நடுநடுங்கியது; கண்களில் வழிந்த துயரம் இப்போது துடைக்கப்பட்டு சிலிர்ப்பாகப் பெருகி ஓடியது. “கிருஷ்ணா! என் ஆத்மநண்பனே! என் இதய தெய்வமே! நீ எனது சிந்தையில் துணையாக இடம் பெற்று விட்டாய், என்னை என்றென்றும் காத்து வழிநடத்துவாயா?” கைகளைக் கூப்பி அஞ்சலி செய்தாள் திரௌபதி. அவன் கால்களில் விழுந்து நமஸ்கரித்தாள்.

“கட்டாயமாக, கிருஷ்ணே! நான் உன்னருகே இல்லாவிட்டாலும் எந்த நிலைமையிலும் என்னை நீ நினைத்தால் நான் அங்கிருப்பேன்; உனக்கு உதவுவேன்,” என வாஞ்சையுடன் அவள் தலையை வருடினான் கிருஷ்ணன்.

“வா, சீக்கிரம்; ஸ்வயம்வர மண்டபத்தில் உன் தரிசனத்துக்காக எல்லாரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். நானும் அங்கு செல்ல வேண்டும்!” என்று அன்போடு புன்னகைத்தான் அந்த மாயக்கிருஷ்ணன்.

அன்று, அவனுடைய அச்சொற்களை வேதவாக்காக ஏற்ற பாஞ்சாலி அதனை என்றுமே மறக்கவில்லை!

*****

ஆண் – பெண் நட்பென்பது காதலாக மட்டுமே இருக்க வேண்டியதில்லை என்பதனை நிரூபிப்பது திரௌபதி – கிருஷ்ணனின் நட்பு. உடுக்கை இழந்தவன் கைபோல, பரஸ்பரம் ஒருவர் மனதை, தேவையை மற்றவர் அறிந்து, உதவிக்கொண்டு மலருக்குள்ளே பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் மணம்போல சுகந்தம் வீசிய நட்பு அது. எத்தனை எத்தனை சம்பவங்கள்!

அர்ஜுனனை ஸ்வயம்வரத்தில் மணந்த திரௌபதி அவனுடன் வீட்டை அடைந்ததும்தான் ஐந்து பாண்டவர்களின் மனைவியாகவும் தான் வாழவேண்டிய நிலைமையை உணர்ந்து திகைக்கிறாள். உலகியலின் இயற்கைக்கு அப்பாற்பட்டதல்லவா இது? பின்பு கிருஷ்ணன் முன்பு தன்னிடம் கூறியதனை நினைவிலிருத்திக்கொண்டு அவ்வாழ்க்கையைத் தனக்கு விதிக்கப்பட்ட ஒரு கடமையாகவே ஏற்றுக் கொள்கிறாள்.

பஞ்சபாண்டவர்களின் பத்தினியாக, அரசியாக வாழ்ந்த காலத்தில், பாண்டவர்கள் புது அரண்மனை நிர்மாணித்து, அதில் குடிபுகும் விழாவைக் கோலாகலமாக நடத்தினார்கள். துரியோதனாதிகளும் அழைக்கப் பட்டிருந்தனர். கிருஷ்ணனும் தன் மனைவியரோடு வந்திருந்தான். மதிய விருந்திற்கு முன்பு அனைவரும் ஜலக்கிரீடை செய்து நீராடி மகிழ்ந்தனர். விருந்திற்கு இலை போடப்பட்டதும் ஒருவர் ஒருவராக அனைவருமே குளத்தைவிட்டு வெளியே வந்து உலர்ந்த ஆடைகளை அணிந்துகொண்டு உணவுண்ணச் செல்லலாயினர். கிருஷ்ணன் மட்டும் நீரிலேயே துளைந்து கொண்டிருந்தான்.

“என்ன கிருஷ்ணா! யமுனையில் விளையாடிய நாட்களின் நினைவில் வெளியேவர மனமில்லையா?” எனக் கேலி செய்தவண்ணம் வந்தாள் திரௌபதி. பட்டத்தரசியான அவள் அன்று அழகான வேலைப்பாடமைந்த பட்டாடைகளை உடுத்துக்கொண்டு, நவரத்தின ஆபரணங்கள் ஜொலிக்க, இளமையின் பொலிவில் அழகின் சிகரமாக ஒளிர்ந்தாள். அவளைக் கண்ணுற்ற கிருஷ்ணனின் இதயம் பல உணர்ச்சிக் கலவைகளில் கணநேரம் கொந்தளித்தது. அவளை எதிர்நோக்கியிருக்கும் அனைத்துத் துயரங்களும் சவால்களும் அவன் மட்டுமே அறிந்ததொன்றல்லவோ?

ஆனால், புன்னகை ஒன்றையே மறுமொழியாக வழங்கினான் கிருஷ்ணன். அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கினாள் திரௌபதி. அது போலிப்புன்னகை; ஒரு இக்கட்டான நிலைமையைச் சமாளிக்க விளைந்தது எனக் கணப்பொழுதில் இனம் கண்டு கொண்டுவிட்டாள் அவள். விஷயம் இதுதான். கிருஷ்ணனின் அரைத்துணி விலகி நீரோடு எங்கோ சென்றுவிட்டது. எவ்வாறு நீரிலிருந்து வெளிவருவது? அதனால் என்ன செய்வது என்று எண்ணியவண்ணம் தடுமாறிக் கொண்டிருந்தான் அவன்.

அவன் முகத்தைப் பார்த்த உடனேயே புரிந்து கொண்டுவிட்டாள் பாஞ்சாலி. ஒரே நொடிதான்; சிந்திக்கவேயில்லை! தனது உயர்ந்த பட்டாடையின் தலைப்புப் பகுதியைச் ‘சரக்’கெனக் கிழித்து நீரில் கிருஷ்ணனின் பக்கம் வீசி எறிந்தாள். அதனை அரையாடையாக உடுத்துக்கொண்டு நீரிலிருந்து எழுந்து வந்தான் கிருஷ்ணன்.

திரௌபதியும், “அண்ணா! சீக்கிரம் வேறு உடை உடுத்திக்கொண்டு விருந்துக்கு வாருங்கள்,” என்றுவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல் சென்றுவிட்டாள். கிருஷ்ணனின் பார்வை அவளுடைய கிழிக்கப்பட்ட அழகான புடவைத்தலைப்பைப் பார்த்து நெகிழ்ந்தது. உள்ளமோ அந்த அன்பின் ஆழத்தில் சென்று அமிழ்ந்து சிலிர்த்தது.

அந்த ஆழ்ந்த அன்பின் பிரதிபலிப்பே அவள் பின்னொருநாள் சபையில் துகிலுரியப்பட்டபோது  எல்லையில்லாமல் வளர்ந்த அவளுடைய துகிலாகப் பெருகியதோ?!

நாடிழந்து, வீடிழந்து, எல்லாமிழந்து பாண்டவர்கள் வனவாசத்திற்காகப் புறப்பட்டபோது நடுவில் ஒரு இரவு வேளையில் மரத்தடியில் தங்கி இளைப்பாறி உறங்கவேண்டி நேர்ந்தது. அரசகுமாரியான திரௌபதிக்குக் காட்டின் கட்டாந்தரையில் உறங்க வேண்டிய கட்டாயம். ஐந்து கணவன்மார்களும் ஆழ்ந்த நித்திரையில்!! யாராவது ஒருவர் அவளுடைய நிலைமையை எண்ணிப்பார்த்தார்களா? பெண்ணுக்குத்தான் பதிவிரதா தர்மமா? மனைவியைக் காப்பதும் அவள் சுகதுக்கங்களில் பங்குகொள்வதும் கணவனுக்கு இல்லையா? ஒன்றுக்கு ஐந்தாக இருக்கிறார்களே! ஒருத்தர் கூடவா இப்படி மனைவி பற்றிய பிரக்ஞை இல்லாமல் இருப்பர்? உடன் வந்த துணையான கிருஷ்ணன் மட்டுமே விழித்திருந்தான்!

“என்ன பாஞ்சாலி! உறக்கம் வரவில்லையா? ஹம்சதூளிகா மஞ்சம் இல்லையா?” எனக் குறும்பாக வினவியபடி அவளருகே வந்தமர்ந்தான் கிருஷ்ணன். “விளையாடாதே கிருஷ்ணா! எனக்கு இதெல்லாம் பழகச் சில நாட்களாகும் என்று உனக்குத் தெரியாதா?” என்று பொய்க்கோபம் காட்டியவளிடம், “இதோ, எனது புஜத்தை உன் தலையணையாக எண்ணிக்கொண்டு இப்போது நிம்மதியாக உறங்கு,” என வாஞ்சையுடன் தன் கரத்தைத் தலையணையாக்கி அரசகுமாரியான அவளை உறங்க வைத்த பாசப்பிணைப்பல்லவா அந்த நட்பு! ஆனால் அவளுடைய ஐந்து கணவர்களும் அந்த நிகழ்ச்சியை ஒரு பொருட்டாகவே கருதவில்லையே! கிருஷ்ணனிடம் அவர்களுக்கு இருந்த அசாத்திய நம்பிக்கையா அல்லது பாஞ்சாலிமீது கொண்ட நம்பிக்கையா? இரண்டும்தான் என இப்போது தோன்றியது அவளுக்கு.

வனத்தில் வாழும் பஞ்சபாண்டவர்கள் பசியில் வாடாதிருக்க சூரிய பகவான் ஒரு அட்சய பாத்திரத்தைக் கொடுத்திருந்தார். ஐந்து பாண்டவர்கள் சாப்பிட்டு, பாஞ்சாலியும் உண்டுமுடித்தபின் அன்றைய பொழுதுக்கு அதிலிருந்து மேலும் உணவைப்பெற முடியாது.

ஒருநாள்….. கோபத்திற்கும் அது தொடர்பான சாபங்களுக்கும் பெயர்பெற்ற துர்வாச முனிவர் தனது பரிவாரங்களுடன் பாண்டவர்களைக் காண வந்தார். அனைவருக்கும் விருந்தளிக்க வேண்டுமே! அனைவருக்கும் உணவளித்து, திரௌபதியும் உண்டுமுடித்து பாத்திரத்தைக் கழுவிக் கவிழ்த்தாயிற்று. பின்னால் அன்று அட்சய பாத்திரத்திலிருந்து திரும்பவும் உணவைப் பெற இயலாது. பெருங்குழப்பத்திலாழ்ந்த பாஞ்சாலி, “கிருஷ்ணா, என் உயிர்த்தோழா, நான் என்ன செய்வேன்?” எனப் பிரலாபிக்கிறாள். எதேச்சையாக வந்ததுபோல அவள்முன் தோன்றிய அப்பரந்தாமன், “அட்சய பாத்திரத்தைக் கொண்டுவா,” எனக் கேட்கிறான். அதில் ஒரேயொரு சோற்றுப்பருக்கை ஒட்டிக் கொண்டிருக்கின்றது. சர்வவியாபியான அவன் அதனை எடுத்து உண்கிறான். இப்போது அவன் வயிறு மட்டுமல்ல; அனைத்துயிர்களின் வயிறும் நிரம்பி விடுகிறது. நீராடச்சென்ற துர்வாசர் தமது பரிவாரங்களுடன் வந்தவழியே சென்று விடுகிறார். விருந்திற்காகப் பாண்டவர்களின் குடிலுக்குத் திரும்ப வரவே இல்லை!

அவன் தெய்வமாக இருக்கலாம்; அது அவளுக்குத் தெரிந்தோ தெரியாமலோ இருந்திருக்கலாம். தனக்குத் துன்பம் வந்தபோதெல்லாம் தன் உயிர்த்தோழனான அவனைத்தான் அணுகினாள் அவள்; வாழ்வின் அனைத்துக் கட்டங்களிலும் வந்த இடர்களையும் துயரங்களையும் கிருஷ்ணனின் தோழமை தந்த தைரியத்தால்தான், ‘அவன் இருக்கிறான்,’ எனும் எண்ணம் ஒன்றைப் பற்றிக்கொண்டுதான் அவளால் கடக்க இயன்றது.

ஆனால் இதன் உச்சகட்ட நிரூபணம் அவளைத் துச்சாதனன் துகிலுரிந்தபோதுதான் உலகத்திற்கும் தெரிந்தது. சூதாடிய தருமபுத்திரன், நாடிழந்து, மனையிழந்து, மனைவியையுமிழந்து, சபையில் அந்த மனைவி அலங்கோலமாகக் கேவலப்படுத்தப் படுவதனையும் பார்த்துக்கொண்டு கையாலாகாதவனாக அமர்ந்திருக்கிறான். சபையில் பீஷ்மர் முதலான பெரியோர்கள், அரசர்கள், தனது ஐந்து கணவர்கள் என அனைவரையும் பார்த்து நியாயம் கேட்டுக் கதறினாளே திரௌபதி. தனக்கொரு அநீதி இழைக்கப்படும்போது தனக்கு வேண்டிய உறவினர்களை உதவிக்கு அழைப்பது எனும் பதற்றச் செயல் அது! ஒருவரும் ஒன்றும் உதவாத நிலையில், “கோவிந்தா! பரந்தாமா,” எனத்தன் உயிர்த்தோழனை உதவிக்கழைத்துக் கண்மூடிப் பிரார்த்திக்கிறாள்; கணப்பொழுதில் துகில் கணக்கின்றி வளர்ந்துகொண்டே செல்கின்றது. பீஷ்மர், விதுரர் ஆகியோர் உண்மையுணர்ந்து திகைக்கின்றனர். என்ன உண்மை? பரந்தாமன் அருள், அருகாமை, தோழமை அவளுக்குப் பூரணமாக இருக்கிறது  என்பது நிரூபணமாகிறது.

திரௌபதியை ‘சூதில் எடுத்த விலைமகள்’, ‘ஐவர்கூட்டு மனைவி’, ‘ஆடி விலைப்பட்ட தாதி’, ‘அடிமைச்சி’, ‘சீரிய மகளல்லள்’, ‘ஐவரைக் கலந்த தேவி’, என்றெல்லாம் இழித்துப்பேசியது துரியோதனனின் கூட்டம். கர்ணன் அவளை இழிவுபடுத்த அவள் துகிலைக் களையச் சொன்னான். இன்னும் என்னென்னவோ பேசினார்கள். யாருக்காக அவள் இவையனைத்தையும் பொறுத்துக் கொண்டாள்? தன் கணவர்களுக்காகவா? இல்லவேயில்லை! கிருஷ்ணன் அவளிடம் அன்று சொன்னனே, “உன் ஒருத்தியால் மட்டுமே க்ஷத்திரிய தர்மம் நிலைநிறுத்தப்படும்,” என்று. அவளால் மட்டுமே நடக்கவேண்டிய மாபெரும் செயலை, அவள் எப்படிச் செய்து முடிப்பாள் என்று விதியானது வேடிக்கை பார்த்துநிற்க, கிருஷ்ணன் எனும் உயிர்த்தோழமை தந்த தைரியத்தால் மட்டுமே அவள் அனைத்தையும் சாதித்து முடித்தாள் அல்லவோ! அவள் வரையில் அவள் பிறப்பும், திருமணமும், பட்ட துன்பங்களும், சகித்துக்கொண்ட அவமரியாதைகளும் அவள் செய்யவேண்டிய சாதனைக்கான படிக்கற்கள்.

தடங்கல்கள் ஏற்பட்டபோது தடுமாறினாளே தவிர, அவற்றைக் கடக்க கிருஷ்ணனின் தோழமை அவளுக்குக் கைகொடுத்தது.

இப்போது அவள் இந்திரப்பிரஸ்தத்தின் பட்டத்தரசி. குருக்ஷேத்திரப்போர் முடிந்து மெல்லமெல்ல நாட்டில் அமைதி தவழ ஆரம்பித்திருந்தது. பற்பல காரணங்களால், பாஞ்சாலியின் உள்ளம் அனவரதமும் அலைபாய்ந்தது; கொந்தளித்தது. இன்னும் அவ்வப்போது ஓடோடிச்சென்று துவாரகையில் கிருஷ்ணனைச் சந்தித்து அறிவுரை பெற்று வருவதில் தவறவில்லை. அவனது நட்பே அவளை இன்னும் உயிரோடும் வைத்திருக்கிறது.

*****

திரௌபதியின் ரதம் துவாரகையை அடைந்து விட்டது. துவாரகை அரசன் கிருஷ்ணனின் மாளிகை முகப்பில் நின்றது. ருக்மிணியும் பாமாவும் உப்பரிகையிலிருந்து அவள் வருகையைக் கண்டுவிட்டு ஓடோடி வருகிறார்கள். “வாருங்கள் அக்கா,” என ஆசையாக அணைத்துக் கொள்கிறாள் பாமா. “பிரயாணம் சௌகரியமாக இருந்ததா பாஞ்சாலி?” என அன்போடு அவள் கூந்தலை வருடியபடி கேட்ட ருக்மிணி அவளுடைய கம்பீரமான அழகைக் கண்களால் ஆசைதீரப் பருகினாள்.

“வா, கிருஷ்ணே! என்ன திடீர் விஜயம்?” எனக் குறும்புப் புன்னகையோடு வரவேற்றான் எல்லாம் அறிந்த பரந்தாமன். மெல்ல அசைந்துகொண்டிருந்ததொரு ஊஞ்சலில் அமர்ந்து கொண்டிருந்தான். வழக்கம்போல திரௌபதியின் நெஞ்சம் ஆனந்தத்தால் நிரம்பித் தளும்பியது. அவனைக் கண்டதும் உள்ளம் அடைந்த ஆசுவாசத்தில் முகம் விகசித்தது. “கிருஷ்ணா அண்ணா! நீ சௌக்கியமா?” என்று அன்புததும்பக் கேட்டவள், பின்னால் பணிப்பெண்கள் கொண்டுவந்த பழக்கூடைகளையும், பலகாரப் பாத்திரங்களையும் ஒரு பக்கமாக வைக்கச் சொன்னாள். வைத்தவர்கள் தங்கள் அரசியின் அடுத்த கட்டளைக்காக ஒருபுறமாக ஒதுங்கி நின்றனர்.

தானே பால்பாயசம் இருந்த வெள்ளிச் செம்பை எடுத்து, பாயசத்தை வெள்ளிக்கிண்ணத்தில் நிரப்பினாள் பாஞ்சாலி. ஊஞ்சலில் கிருஷ்ணன் அருகே வைத்தாள். தனது இடையில் செருகியிருந்த சின்ன பட்டுப்பையை எடுத்தாள்.

அதற்குள் ஒன்றும் பெரிதாக இல்லைதான். ஆனால் அவள்வரையில் அவள் தன்னுடைய ஆத்மநண்பனுக்காகக் கொண்டுவந்திருந்த காப்பு- ரட்சை அதற்குள் இருந்தது! பத்திரமாக வைத்திருந்த தனது கிழிந்த (கிழிக்கப்பட்ட எனலாமா?) பட்டுப்புடவையின் சரிகை இழைகளை கவனமாகப் பிரித்தெடுத்து அவற்றை முறுக்கி ஒரு அழகிய பின்னலாகப்பின்னி, இடையிடையே அழகான நல்முத்துக்களைச் சேர்த்துச் செய்த ஒரு ‘ராக்கி’ – ரட்சை, காப்பு – என்றெல்லாம் சொல்வார்கள். இத்தனை ஆண்டுகள் நட்பில் இப்போதுதான் முதல்முறையாக தன் நண்பன் கிருஷ்ணனுக்குக் (ரக்ஷாபந்தன்) காப்பு அணிவிக்கப் போகிறாள் அவள்!

ருக்மிணி, சத்யபாமையின் கண்கள் ஆச்சரியத்தில் பெரிதாக விரிந்தன. கிருஷ்ணன் ‘அறி’முறுவல்  பூத்தபடி அவள் செய்கைகளை நோக்கினான். தன்னிச்சையாகக் கையை நீட்டினான்.

“என் ஆத்ம நண்பனுக்கு, என்றென்றும் நீண்ட ஆயுள், சந்தோஷம் எல்லாம் இருக்கப் பிரார்த்திக்கிறேன்.” அவன் கையில் அழகான அந்த ரட்சையைக் கட்டினாள். கூடவே இருந்த சிமிழிலிருந்து சந்தனம், குங்குமத்தை அவன் நெற்றியில் திலகமாக அணிவித்தாள். பாயசக் கிண்ணத்தை எடுத்துக் கையில் கொடுத்துப் பருகச் சொன்னாள். “உனக்காக நானே தயாரித்தது கிருஷ்ணா, நன்றாக இருக்கிறதா?” என்று கேட்டபோது அவளுக்குத் தொண்டையை அடைத்தது. காலில் விழுந்து நமஸ்கரித்தாள். “என்னை ஆசிர்வதிப்பாய் கிருஷ்ணா,” என வேண்டினாள்.

“என்ன பாஞ்சாலி இது? புதியதாக இந்த வழக்கம்?” என்ற ருக்மிணியிடம் கிருஷ்ணன் பொருள்பொதிந்த பார்வையைப் பரிமாறிக் கொண்டான்.

“கிருஷ்ணா, உனக்குப் புரியும் அல்லவா?” என்று மெல்லக் கேட்டாள் திரௌபதி. கிருஷ்ணனுடைய முகத்தில் எப்போதும் போலப் புன்னகை தவழ்ந்தது.

oooOOOooo