சிறுகதை

கல்விளக்கு -ஜிஃப்ரி ஹாஸன் சிறுகதை

-ஜிஃப்ரி ஹாஸன் – 

இருள் கவியத் தொடங்கியதும் புத்தர் சிலை ஒளிரத்தொடங்கியது. சிறு நியான் விளக்குகள் கற்களில் வைத்துப் பொருத்தப்பட்டிருந்தன. அவை கல்விளக்குகள் என அழைக்கப்பட்டன. நானும் அதை கல்விளக்கு என்றுதான் அழைக்க விரும்பினேன். மாலையானதும் ஒளிரத் தொடங்கும் கல்விளக்கின் ஒளியில் புத்தரின் அமைதி ததும்பும் தியானத் தோற்றம் பகல் வெளிச்சத்தில் வெளிப்படுத்தாத மர்ம சாசுவதத்தை நியான் ஒளியில் வெளிப்படுத்தியது.

அந்தப் பகுதியில் ஒவ்வொரு சந்தியிலும் அரசமரத்தின் கீழ் கல்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த புத்தர் சிலைகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அந்த நகரத்திலுள்ள சிறிஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் ஒரு கற்கை நெறியைத் தொடரும்போது எனக்கு சரத் ஆனந்தவுடன் நட்பு ஏற்பட்டது. அவன் மாத்தறையிலிருந்து இந்தக் கோர்ஸ் செய்வதற்காக வந்திருந்தான். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் எங்களுக்கு விரிவுரை வகுப்புகள் நடைபெற்று வந்தன. பொரலஸ்கமுவயிலுள்ள சமுத்ரா தேவி பிரிவேனாவில்தான் வகுப்புகள் நடந்தன. பிரிவேனாவின் நுழைவாயிலில் இரண்டும், பிரிவேனாவின் உள்ளே எட்டுமாக மொத்தம் பத்துக் கல்விளக்குகள் பல் வர்ண அழகுடன் புத்தர் சிலையைப் போர்த்தி இருந்தன. மாலைப்பொழுதில் அதிலிருந்து கசிந்து வரும் வர்ண ஒளி ஒருவித மர்ம அழகை வளாகத்தின் சூழலுக்கு கடத்தியது.

சரத் ஆனந்த வர்ண ஒளியில் ஜொலிக்கும் புத்தர் மீது எந்தவித ஈடுபாடும் அற்றவன் போல் அவரைச் சட்டை செய்யாமல் பிரிவேனாவுக்குள் நுழைவதையும், வெளியேறுவதையும் நான் அவதானித்திருக்கிறேன். அவன் எதிலும் கூடுதல் ஆர்வமற்றவன் போலிருந்தான். அதிலும் குறிப்பாக இந்த மத விசயங்களில் பெரியளவு உடன்பாடான அபிப்ராயங்களை அவன் சொல்லி நான் கேட்டதில்லை.

நான் ஒருவித விறுவிறுப்பான ஆர்வத்துடனும் (மேலும் துல்லியமாகச் சொல்வதானால் ஆர்வக்கோளாறுடனும்), உற்சாகத்துடனும், சரத் ஆனந்த ஒருவித சலிப்புடனும், அலைச்சலுக்குள்ளான வேட்கை குன்றிய மனநிலையுடனும் விரிவுரைகளில் கலந்துகொண்டோம்.

இந்தக் கோர்ஸ் ஆங்கில இலக்கியக் கோர்ஸ். நான் ஓர் ஆங்கில ஆசிரியராகவும், இலக்கிய ஆர்வலனாகவும் இருந்ததே இந்தக் கோர்ஸைத் தொடர்வதற்கான காரணமாக இருந்தது. ஆனால் சரத் ஆனந்த இந்தக் கோர்ஸைத் தெரிவு செய்ததற்கான காரணம் விநோதமானதாகத் தோன்றியது. இதே கோர்ஸைத் தொடரப் பதிவு செய்திருக்கும் லுக்மினியை காதலித்து திருமணம் செய்வதுதான் அவன் இந்தக் கோர்ஸைத் தொடர்வதற்கான உயர்ந்தபட்ச இலக்காக இருந்தது. என்னவொரு இலட்சியம் என அவன் குறித்து ஓர் இளக்காரமான பெருமிதம் எனக்குள் தோன்றியது. லுக்மினியை நான் நேரில் கண்டிராத குறையை ஒரு நாள் சரத் ஆனந்த போக்கினான்.

பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலையை அண்டிக் கிடந்த பென்ஞ்சில் இரண்டு உருவங்கள் உட்கார்ந்திருந்ததை என் கண்கள் ஆர்வமாக நோக்கின. அந்த ஆண் உருவம் சரத் ஆனந்த என்பதை உறுதிப்படுத்திக்கொண்டதும் பார்வை மற்ற உருவத்தை நோக்கி அநிச்சையாக நகர்ந்தது. மங்கல் வெளிச்சத்திலும் பளபளப்பான அவள் முகம் பிரகாசமாகத் தெரிந்தது. ஒரு மெல்லிய புன்னகை அவள் உதடுகளில் பூப்பதும் மறைவதுமாக இருந்தது. அருகிலிருந்த கல்விளக்கின் ஒளி அவள் மீது மெல்லிதாகப் படர்ந்து கொண்டிருந்தது. கல்விளக்கின் ஒளியில் அவள் முகத்திலும் புத்தரின் முகத்தில் ஓடிய அதே சாஸ்வதம் தெரிகிறதா எனப் பார்ப்பதற்கு நான் ஏனோ தவறி இருந்தேன். அந்த செக்கல் பொழுதில் ஒரு மெல்லிய புன்னகையுடன் ஒரு நாகரீகம் கருதி நான் அவர்களைக் கடக்க முற்பட்டபோது, என்னை அடித் தொண்டையால் அன்பாக அழைத்தான் சரத் ஆனந்த.

“மச்சான், இங்க வா…”

மாத்தறைச் சிங்களம் சற்றுக் கரடுமுரடானதாக எனக்குத் தோன்றியது. நான் பசப்பும் வார்த்தைகளால் அழைப்பை மறுதலித்துச் சைகை செய்துவிட்டு வந்த வழியே நகர ஒரு பூனையைப் போல் தருணம் பார்த்தேன். அவன் முகம் இறுகுவது மங்கலான நியான் வெளிச்சத்திலும் தெளிவாகத் தெரிந்தது. இறுகிப் போயிருக்கும் இப்படியான ஒரு பெளத்த சூழலில் அவன் நட்பை நான் ஓர் அரசியல் நோக்கமும், சுய பாதுகாப்பு நோக்கமும் கருதி விரும்ப வேண்டி இருந்தது. அதனால் அவன் மீண்டும் ஒரு முறை அழைப்பதற்காக காத்திராமலே ஒரு விசுவாசமுள்ள பிராணியைப் போல் வாஞ்சையுடன் அவன் பக்கமாக நடந்தேன்.

அவள் கழுத்துக்குக் குறுக்காக சரத் ஆனந்த தன் கைகளைப் போட்டபடி இன்பத்தில் சற்று அசைந்துகொண்டிருப்பது மங்கலான ஒளியிலும் எனக்குத் துல்லியமாகத் தெரிந்தது.

அப்போதும் அவனது கைகள் அவளது கழுத்துக்குக் குறுக்காக இருந்தன. ஆனால் பிடி சற்றுத் தளர்ந்திருந்தது. நியான் வெளிச்சத்தில் அவள் வெட்கத்தில் நெளிவதை நான் மீண்டும் ஒரு முறை பார்ப்பதில்லை என அப்பாவித்தனமாக எனக்குள் முடிவுசெய்து கொண்டேன்.

எனக்கு முதன் முதலில் அவன் லுக்மினியை அறிமுகம் செய்து வைத்தான்.

நானும் பென்ஞ்சில் உட்கார்வதற்கு வசதியாக இருவரும் சற்றுத் தள்ளி உட்கார்ந்தனர். ஆனால் நான் நின்றுகொண்டிருப்பதையே அப்போதைக்கு விரும்பினேன்.

“இது லுக்மினி…நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புறம்”

கல்விளக்கின் வெளிச்சம் இப்போது லுக்மினியில் படுவதை நான் என் உடலால் தடுக்கும் தோரணையில் நின்றிருந்தேன். அது எதேச்சையாக நடந்துவிட்டது. ஆனாலும் அவள் முகத்தில் இயல்பாக இருந்த ஒளியில் அவளது நாணத்தை நான் கண்டேன். அப்போது அவர்கள் இருவரின் உடல்மொழியிலிருந்து சரத் ஆனந்த மிகவும் வெளிப்படையானவன் எனவும், லுக்மினி ஒளிவுமறைவுள்ளவள் என்றும் என் மனதில் இருவரையும் பற்றிய சித்திரத்தை வரைந்தேன்.

சந்திப்பின் முடிவு வரைக்கும் நான் நின்றுகொண்டே இருந்தேன். அது பற்றி இருவரும் அலட்டிக்கொண்டதாகவும் தெரியவில்லை. வேறு பல சோடிகளும் வளாகத்தின் மறுகோடியை நோக்கி வேகமாக நடந்து போய்க்கொண்டிருப்பது தெரிந்தது. இந்த மாலைப்பொழுதுகள்தான் அவர்களது காதலை மேலும் வளர்த்துக்கொள்ள உகந்த நேரம் என்ற உண்மை நியான் ஒளியில் எனக்கு வெளிச்சமாகியது.

கெண்டினைச் சூழ்ந்து காதலர்களுக்கு விசுவாசமுள்ள நாய்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு படுத்துக்கிடந்தன. சில நாய்கள் கெண்டினுக்குள்ளேயே அலட்சியமாக படுத்துக்கிடந்தன. அவற்றின் கண்களில் எப்போதும் பசியின் ஏக்கம் குடிகொண்டிருப்பதை நான் பலமுறை கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட அவற்றுக்குப் பிரத்தியேகமாக ஏதும் உணவுகள் வாங்கிக் கொடுத்ததில்லை. சிலவேளை சரத் ஆனந்த தான் லுக்மினியுடன் காதல் இன்பத்தில் சுகித்துக்கிடந்தபோது எதையேனும் நாய்களுக்கு விட்டெறிந்திருக்கலாம். அதன் அடையாளமாக அவனை எப்போதும் ஒரு நாய் நன்றியுடன் பார்த்துக் கொண்டு படுத்துக்கிடந்தது.

லுக்மினியின் அறிமுகம் கிட்டிய அந்த மாலைப்பொழுது என்னால் என்றுமே மறக்க முடியாததாக என்னைச் சுற்றி வந்துகொண்டிருந்தது. அதன் அர்த்தம் கொஞ்சமும் எனக்குப் பிடிபடுவதாக இல்லை. அவளுடன் நட்பாக இருப்பதில் எனக்குள் ஒரு தனிப்பட்ட ஆர்வம் முளைவிட்டிருந்தது. ஒவ்வொரு வாரமும் சரத் ஆனந்தவைப் போல் என்னுடனும் அவளது நட்பு ஓரளவு வளர்ந்துகொண்டு சென்றது. சரத் ஆனந்த பின்னர் சில வார நாட்களில்  அவசியம் கருதி லீவெடுக்கும் சந்தர்ப்பங்களில் லுக்மினிக்கும் எனக்குமிடையில்  நட்பு தங்குதடையின்றி முன்னேற்றங்கண்டு வந்தது.

இங்கு பொதுபலசேன எனும் தீவிரமான பெளத்த இயக்கம் ஒன்று முஸ்லிம்களுக்கெதிரான பிரச்சாரத்திலும், பள்ளிவாசல்களையும், முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகளையும் உடைப்பதிலும் தீயிட்டுக் கொளுத்துவதிலும் மும்முரமாக இருந்தது. சிறிஜெயவர்தனபுர போன்ற இடங்கள் அவர்களின் பிரதான கோட்டைகளாக இருந்தன. இந்த நகரத்தில் முஸ்லிம்கள் அவ்வளவாக இல்லை. இங்கு தனிமையில் இருப்பது ஆபத்தானது என்பதால்தான் இதுபோன்ற நட்புகளை நான் பெரிதும் விரும்பி வளர்த்துக்கொள்ள வேண்டி இருந்தது. நான் ஒரு முஸ்லிம் மதவாதியோ, இனவாதியோ இல்லாவிட்டாலும் அது அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது. போட்டுத் தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருப்பார்கள் என்ற அச்சத்தில் நான் சரத் ஆனந்த, லுக்மினி போன்றவர்களின் தயவுக்குள் ஒளிந்துகொள்ள வேண்டி இருந்தது. ஆனாலும் எனக்குள்ளிருந்த ஒரு தாழ்வுணர்ச்சியும் அந்த நட்பை நான் பூசிக்க காரணமாயிற்று. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு அதுவும் லுக்மினி போன்ற அழகான தலைநகரத்துப் பெண்ணுக்கு நாட்டின் யுத்தம் நடைபெற்று அழிபாடுகளுக்குள்ளான பின்தங்கிய கிராமமொன்றிலிருந்து சென்ற, ஒரு பெண்ணைக் கவரக்கூடிய அழகில்லாத சிறுபான்மை இனத்தவனான என்னை அவள் தன் இதயத்தில் வைத்திருப்பதோ அல்லது குறைந்தபட்சம் அப்படியான ஒருவனை அவள் தெரிந்து வைத்திருப்பதோ எனக்கு கௌரவமான ஒன்றாகப் பட்டது.

சரத் ஆனந்த வெளிப்படையாகவே பொதுபலசேன எனும் இந்த பௌத்த தீவிரவாத அமைப்பை கடுமையாக எதிர்ப்பவன். பெரும்பான்மைச் சமூகத்தில் அவன் ஒரு மாற்றுக்குரலாக இருந்தான். சரத் ஆனந்த நாட்டில் உருவாகி வந்த முஸ்லிம் மக்களுக்கெதிரான பொதுபலசேன போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கும் அடிப்படைவாத அரசியல் சித்தாந்தங்களுக்கும் எதிரானவனாக இருந்தான். அவன் அரசியல் சார்ந்து ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிப்பதாக எனக்கு ஏனோ தோன்றியது. அவன் நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களின் உரிமைகள் விசயத்தில் தெளிவாக இருந்தான். அனைவரும் இலங்கையர் என்ற எண்ணம் அவனிடம் இருந்தது. மிக அபூர்வமாக சிரிக்கும் குணம் கொண்ட அவனிடம் உள்ளூர ஈரம் இருப்பதை நான் தெரிந்துகொண்டது இதுமாதிரியான உரையாடல்களின்போதுதான். பின்னர்தான் அவனுடனான நட்பை நீடிக்க விரும்பி இருந்தேன்.

ஒரு நாள் இரவு சமுத்ராதேவி பிரிவேனாவின் விடுதியில் நாங்கள் தங்கி இருந்தோம். விடுதி புத்தரின் தியானத்தை ஒத்த ஓர் ஆழ்ந்த அமைதியில் மூழ்கியிருந்தது. பிரிவேனாவில் பிரித் ஓதி முடிந்து எல்லோரும் அமைதிக்குத் திரும்பி இருந்தனர். வெளியில் கல்விளக்கின் வெளிச்சத்தில் புத்தர் ஜொலித்துக்கொண்டிருந்தார். பிரிவேனாவின் வளாகத்தில் இப்படி எட்டு வெவ்வேறு இடங்களில் அவர் எந்தக் கவலையுமற்று ஜொலித்துக்கொண்டிருந்தார்.  அப்போது பொதுபலசேனவின் கருத்துகளைத் தீவிரமாக ஆதரிக்கும் இளம் பிக்கு ஒருவரும் எங்களுடன் தங்கி இருந்தார். நான் முஸ்லிம் என்பதை அறிந்துகொண்ட அவர் என்னுடன் வாக்குவாதத்தில் இறங்கினார். இந்தப் பிரிவேனா விவாதம் எங்களுக்குள் இடம்பெறுவதற்கு சரியாக நான்கு நாட்களுக்கு முன்னர்தான் இலங்கையின் புராதன நகரங்களுள் ஒன்றான குருநாகலவில் பள்ளிவாயல் ஒன்றை பொதுபலசென ஆதரவாளர்கள் தீயிட்டுக் கொளுத்தி இருந்தனர்.

இளம் ஹாமதுரு தனது கொள்கைக்கு ஏற்ற விதத்தில் கடுகடுப்பானவராகவும் சரியான புரிதலற்றவராகவும் இருந்தார். சிலவேளைகளில் அவர் உளறுவது போன்றும் எனக்குத் தோன்றியது. இலங்கையில் ஒரு உன்னத நாகரீகமோ அறிவெழுச்சியோ நிகழ்வதாக இருந்தால் அது சிங்கள சமூகத்திடமிருந்துதான் உருவாகும் என்ற எனது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாகவே நான் இதுவரை சந்தித்த சிங்கள நண்பர்கள் இருந்து வந்துள்ளனர். ஆனால் இலங்கையை ஒரு சாக்கடை நாடாக மாற்றும் சிந்தனையுடனும் சிலர் இருப்பதை இந்த ஹாமதுரு மூலமாக நான் அறிந்துகொண்டேன்.

நடுநிசி நேரம். பிரிவேனாவில் நிலவிய அமைதியை பிரிவேனாவின் எல்லைக்குள் வாசஸ்தலத்தை அமைத்திருந்த நாய்களின் ஊளைச்சத்தம் கலைத்தது. நான் அப்போதும் விடுதிக்கு வெளியே எட்டிப் பார்த்தேன். கல்விளக்கின் வெளிச்சத்தில் புத்தர் சரமாரியாக ஜொலித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அந்த ஊளைச் சத்தத்தையடுத்து விடுதிக்குள்ளிருந்த இளம் ஹாமதுரு பேசத் தொடங்கினார்.

“முஸ்லிம்கள் ஒரு புதிய சவர்க்காரம் ஒன்றைப் பாவிக்கிறீர்கள். அது என்ன சவர்க்காரம்? அதுதான் ஹலால் சவர்க்காரமா?” என ஹாமதுரு என்னிடம் கேட்டார். அவர் தொனியில் ஒரு நையாண்டி இழையோடியது. அப்போது சரத் ஆனந்த ஹாமதுருவை ஒருவித ஏளனத்துடனும் அலட்சியத்துடனும் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் அதுமாதிரியான உரையாடல்களில் ஆர்வமற்றவன். போதாக்குறைக்கு அவன் பொதுபலசேன போன்ற அமைப்பின் கருத்துகளுக்கு மிகவும் எதிரானவனாகவும் இருந்தான். முஸ்லிம் கடைகள், பள்ளிகளை எரியூட்டுவது மகா முட்டாள்தனம் என ஹாமதுருவிடம் சற்றுக் கடுமையாகவே பேசிவிட்டு மரியாதை கருதி அவன் அமைதியானான். ஆனால் நான் ஹாமதுருவுக்கு பதில் வழங்க வேண்டி இருந்தது. ஹாமதுருவின் முகத்தில் இருந்த ஏளனமும் வெறுப்பும் தொடர்ந்தும் நீடிப்பதை நான் அவதானித்தேன். அது பெரும்பாலும் என்னைக் குறித்ததாக இருந்தது.

“நாங்க அப்படி ஒரு சவர்க்காரமும் பாவிக்கல ஹாமதுரு,“ என நான் பணிவாக பதிலளித்தேன். அந்த பதிலால் ஹாமதுரு திருப்தியடையவில்லை என்பதையும் அது அவரது ஏளனத்தையும் வெறுப்பையும் மேலும் அதிகரித்திருப்பதையும் நான் அவரது முகபாவத்திலிருந்து புரிந்து கொண்டேன். அப்போது இரண்டு பூனைகள் மறியேறும் சத்தம் ஈனக் குரலில் தொந்தரவூட்டும் சத்தமாக கேட்டது. சரத் ஆனந்த மூர்க்கம் அடைந்தவனாக கடுமையான தூஷண வார்த்தைகளால் அந்தப் பூனைகளைத் திட்டினான். அவன் உண்மையிலேயே கோபம் கொண்டிருந்தான். அந்தக் கோபம் பூனைகள் மீதன்றி ஹாமதுரு மீதுதான் என்பதை நான் புரிந்துகொண்டேன். பூனைகளை திட்டுவதற்காக சரத் ஆனந்த பாவித்த சொற்கள் ஒரு ஹாமதுருவின் முன்னால் ஒரு பௌத்தன் சாதாரணமாக பயன்படுத்தி நான் கேட்டதில்லை. அது ஹாமதுருவுக்கும் தெரிந்திருந்தது. சரத் ஆனந்தவுக்கும் தெரிந்திருந்தது. ஆனால் ஹாமதுரு சரத் ஆனந்தவை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டதாக எனக்குத் தோன்றவில்லை. அப்படித்தான் சரத் ஆனந்தவும் ஹாமதுருவை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்று எனக்குத் தோன்றியது. அவன் அப்போதும் லுக்மினியைத்தான் நினைத்துக் கொண்டு இருந்திருக்கக்கூடும்.

“சந்துபொந்துகளிலெல்லாம் பள்ளிவாசல்கள கட்டுறதாலதான் பள்ளிகள உடைக்காங்க,” எனச் சொல்லி நான் என்னை ஒரு மாற்றுக் கருத்தாளன் எனவும் இனவாதி இல்லை எனவும் நிரூபிக்க முற்பட்டபோது சரத் ஆனந்த அதை மறுத்துரைத்தான்.

“இங்கு பௌத்த விகாரைகளுந்தான் சந்திக்குச் சந்தி இருக்கே,” கல்விளக்கின் வெளிச்சத்தில் அமைதிச்சுடராக வீற்றிருந்த புத்தரைச் சுட்டிக்காட்டியபடி சொன்னான். நான் தர்க்கத்தை தவிர்க்கும் பொருட்டு அவனை ஆமோதித்தேன். ஒரு மின்னல் போல்தான் அவனது பேச்சில் எப்போதும் ஒரு வெளிச்சமும் அதிர்வும் இருக்கும். ஆனாலும் நான் எனது கருத்தில் உறுதியாகவே இருந்தேன். தலைநகரத்தில் முஸ்லிம் வர்த்தகத் தளங்களிலும், பள்ளிவாசல்களிலும் பல கசப்பான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டிருந்தன.

டுத்த வாரம் சனி மாலை கெண்டினில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன்.

“நாளை உன்னால் லுக்மினியைச் சந்திக்க முடியுமா?” என்று என்னிடம் கேட்டபடியே என்னை நோக்கி நெருங்கி வந்து என் எதிரே கிடந்த கதிரையில் உட்கார்ந்தான் சரத் ஆனந்த. அவன் அப்படிக் கேட்டதிலிருந்தே நாளை விரிவுரைகளில் கலந்து கொள்ளாமல் இன்றுடன் கிளம்பப் போகிறான் என்பதை ஊகித்துக்கொண்டேன். எனக்கும் நாளை கலந்துகொள்ளாமல் இன்றுடன் கிளம்பிவிடும் ஓர் எண்ணம் இலேசாக இருந்தது. அவன் சார்ந்து லுக்மினியிடம் எனக்கு ஒரு வேலை இருப்பதை உணர்ந்து கொண்டு நான் அதை வெளிப்படுத்த விரும்பாமல் மறைக்க விரும்பினேன். சரத் ஆனந்தவுக்கு உதவுதன் மூலம் அவனுக்கும் எனக்குமிடையிலான நெருக்கம் மேலும் அதிகரிக்கும் அதேநேரம் லுக்மினிக்கும் எனக்குமிடையிலான உறவும் வலுவடையும் என நான் எண்ணினேன்.

சரத் ஆனந்தவின் அன்பை மேலும் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தயக்கமின்றி “ஆம் நான் சந்திக்கிறேன்“ என்றேன்.

அப்போது என் கடைவாயிலிருந்து ஒரு அசட்டுத்தமான புன்னகை வழிந்துகொண்டிருந்ததை அவன் பெரும்பாலும் கவனித்திருக்கக்கூடும். அதை அலட்சியம் செய்தபடி கெண்டின் சர்வரை பார்த்து இரண்டு முட்டை ரொட்டிக்கும் இரண்டு பிளேண்டிக்கும் ஓர்டர் கொடுத்தான். சென்ற வாரம் நான் அவனுக்கு இதேபோன்று முட்டை ரொட்டியும் டீயும் வாங்கிக் கொடுத்திருந்தேன். அதனால் இந்த வாரம் அவன் எனக்கு வாங்கித் தருகிறான். அந்த விஷயத்தில் அவன் மிகவும் கறாராக இருப்பதாக எனக்குத் தோன்றியது. ஒரு வாரம் அவன் வாங்கினால் மறு வாரம் நான் வாங்க வேண்டும் என்ற ஒழுங்கை அவன் கடைப்பிடிப்பதில் மிகவும் உறுதியாக இருந்து வந்தான். சாப்பிடுவதற்கு முன் ஹராமா ஹலாலா எனக் கேட்டுக்கொள்வான். பொதுபலசேனா சில ஆண்டுகளுக்கு முன் ஹலால் உணவுப் பிரச்சினையைக் கிளப்பி இருந்தது. அப்போதிருந்துதான் அவனுக்கு உணவில் ஹலால் பிரச்சினை ஒன்று இருப்பது தெரிய வந்திருக்க வேண்டும். ஹலால் உணவுகளை மட்டும்தான் நாங்கள் சாப்பிடுவோம் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது. மனிதர்களை மதம், இனம், சாதி பார்த்து வகைப்படுத்தி அணுகுவது அவன் நோக்கமில்லை. இருந்தாலும் அவரவர் உணர்வுகளுக்கு, எண்ணங்களுக்கு அவன் வாய்ப்பளிப்பதையே பெரிதும் விரும்பினான். கிட்டத்தட்ட நானும் அதே மனோநிலையில்தான் இருந்தேன். மதரீதியாக எனக்குள்ளும் பெரிய கற்பனைகள் ஈடுபாடுகள் இருந்ததில்லை. மதம் குறித்து விவாதம் புரியுமளவுக்கு அதில் ஆர்வமோ ஈடுபாடோ எனக்கு இருப்பதாக நான் நினைக்கவுமில்லை.

நாளடைவில் லுக்மினிக்கும் எனக்கும் கல்விளக்குக்கும் புத்தருக்குமிடையிலான நெருக்கம் போல் அதிகரித்தது. சரத் ஆனந்தவுக்கும் லுக்மினிக்குமிடையிலான காதலை விடவும் எனக்கும் லுக்மினிக்குமிடையிலான நட்பு அசுர பலம் கொண்டு மேலெழுவதாகத் தோன்றியது. சரத் ஆனந்த என் நினைவிலிருந்து மெல்ல மெல்ல அழிந்துகொண்டிருந்தான். அவன் இருந்த இடத்தில் லுக்மினி வந்துவிட்டிருந்தாள்.

லுக்மினியும் அவனுடனான தொடர்பை நான் அறியாத வேறு சில காரணங்களுக்காக குறைத்து விட்டிருந்தாள். அவர்களின் காதல் கெண்டின் அருகில் கிடக்கும் பென்ஞ்சில் கல் விளக்கின் வெளிச்சத்தில் அநாயாசமாக வளர்ந்து வந்ததைப் போல இப்போது எங்களுக்குள் அது இருட்டில் நடப்பவனைப் போல் தட்டுத்தடுமாறிக் கொண்டு வளர்ந்தது. இது என்னை அறியாமல் நடந்துவிட்டது என்று என் மனம் நம்பியது. நாளடைவில் லுக்மினிக்காக நான் அவனைத் தவிர்த்தேன். லுக்மினி எனக்காக அவனைத் தவிர்த்தாள்.

லுக்மினி அன்று மிகவும் அட்டகாசமாக உடுத்தி வந்திருந்தாள். அவள் ஆடைகள் அவளின் அழகை மேலும் மெருகூட்டியது. அதை உள்ளூர இரசித்துக்கொண்டு வெளியில் அதைக் கண்டுகொள்ளாதவன் போல் பாவனை செய்தேன். அவள் அன்று ஏதோ ஒரு பரபரப்பில் இருப்பது தெரிந்தது.

“ஷேக்ஸ்பியர் கவித நோட்ஸ் முழுசா இருக்கா?” என்னிடம் அது முழுமையாக இருந்தபோதும் நான் அவளை சும்மா கேட்டேன்.

“இருக்கு” சொல்லிக்கொண்டே ஹேன்ட் பேக்குக்குள் கைவிட்டுத் துளாவினாள். வேறு வேறு விசயங்கள் அவள் கையில் சிக்கிக் கொண்டிருந்தன.

“இன்றைக்கு நான் நண்பி ஒருத்தியின் பேர்த்டே பார்ட்டிக்குப் போகனும்… ஃபைவ் மினிட்ஸ்ல பஸ்…” தேடிக்கொண்டே சொல்லிக்கொண்டிருந்தாள். நான் அவள் பதட்டத்தை இரசித்துக்கொண்டிருந்தேன்.

“பரவால்ல… பிறகு எடுப்பம்” நான் சமாளித்தேன். அவள் கைக்கு அது கிடைக்காத அவதியும், அவசரமும் அவள் முகத்தில் உறைந்திருந்தன. சரத் ஆனந்தவுக்கு இந்தப் பயணம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது எனக்குத் தெரிந்திருந்தது. நானும் அது பற்றி அவளிடம் கேட்கவில்லை. அவன் அந்த பென்ஞ்சில் அவளுக்காக காத்திருப்பான். இருவரும் வேறு வழியால் வெளியேறினோம். பூக்கள் அள்ளிச்சொரிந்திருந்த பல வர்ணக்குடையை எடுத்து விரித்துப் பிடித்தபடி பேவ்மெண்டில் அவள் நிதானமாக நடந்து வந்தாள். நான் அவள் விருப்பம் பற்றி அக்கறை கொள்ளாது அவளை சற்றே உரசினாற்போல் நடந்து சென்றேன். சரத் ஆனந்தவின் நினைப்பு அவளுக்கு வராத வகையில் அவளை சூழலுக்கு மாற்றிக்கொண்டு வந்தேன். தேவையற்ற ஜோக்குகள் சொல்லி அவள் மனதில் இடம்பிடித்தபடி கூடவே இழுபட்டுக் கொண்டிருந்தேன். அவளை பத்திரமாக பஸ் ஏற்றிவிட்டு அவள் அழைப்பு இல்லாததால் சற்றே ஏமாற்றத்துடன் மீண்டும் பிரிவேனா நோக்கி நடந்தேன். சரத் ஆனந்த எப்போதும் உட்கார்ந்திருக்கும் பென்ஞ் வெறுமையாய்க் கிடந்தது.

அடுத்த வாரம் எங்கள் பண்டிகை உணவுகளை அவளுக்காகப் பொதி செய்து கொண்டு வந்திருந்தேன்.

“இது எங்கட பண்டிகை உணவு” எண்ணெய் ஊறிய வெள்ளைக் காகிதத்தில் சுற்றப்பட்டிருந்த பலகாரங்களை அவளிடம் நீட்டினேன். அதை தன் அகலத் திறந்த அழகான ஆச்சரிய விழிகளோடு பெற்றுக் கொண்டாள். எனக்குள் உள்ளூர மகிழ்ச்சி திரண்டது. சரத் ஆனந்தவின் கண்களில் படாமல் இந்த கலாசார உணவுப் பரிமாற்றம் நடந்து முடிந்தது. ஆனால் கல்விளக்கின் ஒளியில் புத்தர் மட்டும் அதனை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

சரத் ஆனந்த வழமையான அந்த பென்ஞ்சில் லுக்மினிக்காக காத்திருந்து ஏமாறத் தொடங்கினான். லுக்மினியும் நானும் அவனை சந்திப்பதைத் தவிர்ப்பதற்காகவே பிரிவேனாவை விட்டு வெளியேறுவதற்கு வேறு வாயிலைத் தெரிவுசெய்திருந்தோம். அந்த வாயிலிலும் கல்விளக்கின் ஒளியில் புன்னகைக்கும் புத்தர் அந்தரத்துடன் எங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

கல்விளக்கின் வெளிச்சத்தில் பிரகாசமாக ஒளிர்ந்த சரத் ஆனந்தவின் காதல் இப்போது மங்கலாகி முழுமையாகவே இருளாகிவிட்டிருந்தது. சரத் ஆனந்தவின் கண்களில் இப்போது புதிதாக ஒரு நெருப்பு எரியத் தொடங்கி இருந்தது.

”அடோ..! தம்பிலா, என் காதல் கோட்டைய உடைச்சிட்டு நீ இடத்தப் புடிச்சிட்டாய்… எனடா…?” சரத் ஆனந்தவின் குரல் மேலும் தடிப்பேறி இருந்தது. சிங்களவர்கள் முஸ்லிம்களை ஏளனமாக அழைக்கப் பயன்படுத்தும் “தம்பிலா“ என்ற வார்த்தையை அன்றுதான் அவன் முதன் முதலாகப் பயன்படுத்தியதைக் கேட்டேன். அது எனக்கு ஒருவித குற்றவுணர்ச்சியைத் தந்தது. என்னை பூமி விழுங்கிக்கொள்வது போல் உணர்ந்தேன். என்னில் உரசினாற் போல் வந்துகொண்டிருந்த லுக்மினி சற்று மிரட்சியுடன் விலகி நகர்ந்தாள். சரத் ஆனந்தவின் நட்பு அது உருவாகிய அதே இடத்தில் அதே போன்றதொரு மாலைப்பொழுதில் அஸ்த்தமனமாகிப் போனது.

யாரும் பார்வையில் புலப்படாத மாலைப்பொழுது என்பதால் என்னை அடிக்கும் ஆவேசம் சரத் ஆனந்தவுக்குள் கனன்று கொண்டிருந்தது. அவன் என்னை அடிக்க முனைந்தபோது லுக்மினி அதைத் தடுத்து விட்டாள். அதுதான் அவனைக் கடுமையாகப் பாதித்தது. மிகவும் கடுமையான வார்த்தைகளால் என்னைத் திட்டிக்கொண்டே அன்று என் பார்வையிலிருந்து மறைந்து சென்றான் சரத் ஆனந்த.

அதன் பின் சில வாரங்களாக சரத் ஆனந்தவை நான் காணவில்லை. பிரிவேனா விடுதியில் அன்றிரவு தங்கி இருந்தேன். லுக்மினியுடன் தொலைபேசி உரையாடலை முடித்துவிட்டு படுக்கைக்குச் செல்லும்போது வெளியில் பரபரப்பான சத்தம் ஒன்று கேட்டது. பிரிவேனா விடுதியின் மேல்மாடி அறையின் சாளரத்தை திறந்து சத்தம் வந்த திசையை நோக்கி பார்வையை வீசினேன். அடுத்த தெருவில் தீக்கதிர்கள் ஆவேசமாக மூண்டெழுவது தெரிந்தது. அந்த இடத்தில் முஸ்லிம் பள்ளி ஒன்று இருப்பது எனக்கு சடுதியாக நினைவுக்கு வந்தது. வெளியேறிச் செல்வதா அல்லது உள்ளேயே ஒளிந்து கொள்வதா என்ற பதட்டத்தில் சில கணங்கள் அப்படியே சமைந்து நின்றேன். விடுதிக்குள்ளிருந்த மாணவர்கள் சிலர் சத்தமிட்டுக்கொண்டு வெளியே ஓடுவது தெரிந்தது. அதில் என்னைத் தெரிந்த சிலர் வெளியே வராமல் உள்ளே இருக்கும்படி சொல்லிக்கொண்டு ஓடுவதை அசைவற்றுக் கேட்டுக்கொண்டு நின்றேன். இது பிரிவேனா என்பதால் எனக்கு சற்றுப் பாதுகாப்பான இடம் என்றும் தோன்றியது. சிறிது நேரத்தின் பின் திரும்பி வந்த நண்பன் ஒருவனிடம் களநிலவரங்களை விசாரித்தேன்.

“உங்கட பள்ளிவாசலத்தான் பத்த வெச்சிருக்கு”

மிக நிதானமாகச் சொன்னான். என் மீது ஒரு பரிதாபப் பார்வை பார்த்தான். தன் செல்போனில் அவன் பிடித்த காட்சிகளை காட்டினான். நான் சில கணங்கள் திடுக்கிட்டுப் போனேன். பள்ளிக்குத் தீமூட்டும் பொதுபலசேனக் கும்பலில் மிக முக்கியமானவனாகவும் மும்முரமாகவும் ஆவேசமாக இயங்கிக் கொண்டிருந்தான் சரத் ஆனந்த. அந்தக் குளிர்ச்சியான இரவிலும் எனக்கு வியர்த்துக் கொட்டியது. அவனது இந்த சடுதியான மாற்றம்  கண்ணாடிச் சில்லுகளாக என்னை உடைத்துக் கொண்டிருந்தது.

அந்த இரவு  எனக்கு வெறுமையாகத் தெரிந்தது. பிரிவேனாவின் மேல்தளத்தில் தூணில் சாய்ந்துகொண்டு உணர்ச்சியற்ற கண்களால் சாளரத்தின் வழியே வெளியை நோக்கினேன். பலவர்ண நியான் ஒளி மாறி மாறி தன் பிரகாசத்தை வெளிப்படுத்தியது. அருகில் கிடந்த பென்ஞ் தனிமையாய் இருந்தது. அந்த பென்ஞ்தான் லுக்மினிக்கும், சரத் ஆனந்தவுக்கும் மிகப்பிடித்தமானது. அதன் அருகில் சரத் ஆனந்தவுக்கு விசுவாசத்தை வெளிப்படுத்தும் நாயொன்று பசித்த கண்களால் அவனில்லாத பென்ஞை வெறித்தபடி படுத்துக்கிடந்தது.

கல்விளக்குகள் இப்போது எனக்கு ஒளியற்றுத் தெரிந்தன. புத்தரின் முகம் தன் வழமையான பொலிவை இழந்து ஒரு வித இறுக்கத்துள் புதைந்திருப்பதாக எனக்கு ஏனோ தோன்றியது.

 

செண்பகா பேக்கரி – ப்ரியன் சிறுகதை

ப்ரியன்

ரெண்டு நாளா பேக்கரி பக்கம் போகாம இருக்கிறது உள்ளுக்குள் என்னவோ மாதிரி இருந்தது. வேலை வெட்டிக்கு போகாம கவர்மெண்ட் வேலைக்கு பரீட்சை எழுதிக்கிட்டு திரியுறவன். யாரைப் பார்த்தாலும், “என்னங்க எப்படி இருக்கீங்க? வீட்ல எல்லாரும் சுகமா,” என்று கேட்கிறவன். ஊருக்குள்ள எல்லாரும் இவன மதிச்சி பேசுற அளவு குணம் இருக்கறவன். இப்போ வீட்டுலய குத்தூக்காலிட்டு உட்கார்ந்துகிட்டு இருக்கான்னா என்னா காரியமா இருக்கும்னு அவன் அம்மா அவனை யோசனை செய்தபடியே வந்து காபி தம்ளரை வைத்துவிட்டு, ’’இன்னா ராசா இன்னிக்கு ஊர்கோலம் போலாய்ப்பா… உன் சிநேகிதக்காரனுங்க காத்திருக்க மாட்டாங்க?’’

’’இல்லம்மா உடம்பு ஒரு மாதிரி இருக்கு’’

’’என்னாச்சு ராசா’’ என்று கழுத்தை தொட்டுப் பார்த்து கை பிடித்துப் பார்த்தாள்.

’’சொரம் கூட அடிக்கிலியே ராசா’’

உடம்பு சரியில்லனா வெறும் உடம்ப மட்டும் யோசிக்கிறாங்கள, இந்த மனசும் உடம்போட சேர்ந்ததுதான்னு ஏன் யோசிக்க மாட்றாங்க- உள்ளுக்குள்ளே ஆதங்கப்பட்டேன்.

’’ஒன்னுமில்ல நீ போம்மா,’’ அவளை விரட்டினேன்.

போன் வந்தது.

’’மாப்ள என்ன படித்துறைக்கு வரலையா’’

’’வரலைடா உடம்பு சரியில்ல,” என்று சுரத்தையில்லாமல் சொன்னேன்.

’டேய் நீ என் வரலனு தெரியும்டே’’

’’என்னாடா ஏன்?’’

’’ பேக்கரி திறக்கல அதானே?’’

’’லேய் மூடிட்டு உங்க வேலைய பாருங்கடா,” என்று போனைத் துண்டித்தேன்.

செண்பகா பேக்கரி திறந்து ஆறு மாசம் ஆகி இருக்கும். படித்துறை நண்பர்கள் கூடுகை நடக்குமிடம்.பேக்கரியை கடந்துதான் அங்கு செல்ல வேண்டும். பேக்கரிக்கு இந்தப் பக்கம் இருந்து நான் மட்டுமே போவேன்.

கடை திறந்த முதல் நாளே நான் கையில் இருந்த பத்து ரூவாய்க்கு பக்கோடா வாங்கினேன். அந்தப் புள்ள செண்பகாதான் கொடுத்துச்சு. நல்ல வடிவா களையான முகம். ஆளை இழுக்கும் அழகான சிரிப்பு. பேச்சும் இன்னும் கொஞ்சம் பேசலாம் போலயே எனத் தோன்றும்.

தினம் படித்துறைக்கு போரப்பலாம் கையில் பத்து ரூவா வைச்சுகிட்டு பேக்கரி பக்கம் போறப்போ செண்பகா உள்ள ஏதாச்சும் வேலை இருந்து என்ன பார்க்கலன்னா அப்படியே போயிடுவேன். பாத்துட்டா அவ பார்வைக்கு மரியாதை செய்யும் விதமா போயி பத்து ரூவாய்க்கு ஏதாச்சும் வாங்கி மென்னுகிட்டே போவேன்.

நாளாக நாளாக என்னாலே பேக்கரில ஏதும் வாங்காம, இல்லன்னா செண்பகாகிட்ட பேசாம, இருக்க முடியல. ஒரு நாள் அவ ரொம்ப வேலையா இருந்தப்போ பேக்கரில போய் நின்னுகிட்டு பேச்சு கொடுத்தேன். அவ அசரல. பின் என்னன்னமோ பண்னேன். அவ வேலையிலெ கருத்தா இருந்தா.

அப்போ அவளோட ரெண்டு வயசு பொண்ணு என்கிட்ட உசுரா இருந்தா. அவள தூக்கிக்கிட்டு ஊர்கோலம் போனேன். ஆமாங்க, செண்பகாக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வயசுல ஒரு பெண் குழந்தை இருக்கு. அவ புருசன் மார்க்கெட் போறது பன்னு, பக்கோடா போடுறது முடிஞ்சதும் போயிடுவான். புறவு ராவிக்கிதான் வருவான். என்ன புடுங்குவான் தெரியல அம்மா நேரம்.

ஆனா அதுவும் எனக்கு சாதகமாதான் இருந்துச்சு. அவகிட்ட பேசாத பொழுதே வாழ்க்கையில இல்லனு ஆனாமாதிரி படித்துறைக்கு போறேனு சொல்லிட்டு பேக்கரில பொழுத கழிக்க ஆரம்பிச்சேன். அவ ஊட்டுக்காரன் கொஞ்சம் காரமான ஆள்தான். ஆனாலும் என் மேல ஏதோ நல்ல அபிப்ராயத்திலே அவரு வரப்போ நான் இருந்தா கண்டுக்க மாட்டாரு. போதாதுக்கு செண்பகா, அந்தா வந்துட்டாரு அண்ணே அந்த சேரை நவுத்துங்க, வண்டிய ஓரமா விடுங்கண்ணே, என்பாள். எனக்குத் தெரியும் அவள் மனசார கூப்பிடலனு. ஒரு நாள் வேண்டும்னே பேக்கரிப்பக்கம் போகாம இருந்தேன். மறுநாள் போனதுக்கு, என்னங்க ஏதாச்சும் கோபமா? காய்ச்சலானு வந்து கழுத்த தொட்டு பார்த்தா… கிறுக்கிமவ எனக்கு உள்ளுர இப்போ நிஜமாவே காய்ச்சல் வந்துடும்போல இருந்துச்சி… மனசே சரியில்ல நேத்து உங்கள காணலைனு, என்றாள்.

பொறவு ஊர்த்திருவிழாவுக்கு போறேனு பேக்கரிய நாலுநாள் லீவு வுட்டாங்க. பயங்க எவனும் என்னைச் சீண்டலா, எண்டா வெண்ணமக்கா இப்போ மட்டும் நாங்க தேவப்படுதா, இம்புட்டு நாள் அந்த பேக்கரியதானே கட்டிட்டு அழுதே… போய் அவ எங்கே திருவிழா காண போயிருக்காளோ அங்கனே போய் இருந்து சாகு, என்று சபித்தார்கள்… பொழுது ஓடவில்லை. இரவு விடியவில்லை. பல்லைக் கடித்துக்கொண்டு நாட்கள் கடந்தன.

அவ பிள்ளையை கொஞ்சியதெல்லாம் அவளதான்னு அவளுக்கு மட்டும் புரிஞ்சுருக்கு. ஒரு நாள் பேக்கரி உள்ளே அவ வேலை செஞ்சுட்டு இருந்தப்போ நான் ப்ரேட் எடுக்க போனேன்.. அவ குனிஞ்சு மாராப்பு விலகி வேலை செஞ்சுட்டுருந்தா. நான் சத்த நேரம் அவளையே பார்த்து அசந்து நின்னுட்டேன்.

உள்ளே என்னப்பா பண்றே, என்ற குரல் கேட்டுத் திரும்ப, அவ புருஷன் காட்டமா பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஒன்னுமில்லனே பன்னு எடுக்க வந்தேன்’’

“எதா இருந்தாலும் நாங்க எடுத்து தர்றோம். நீங்க உள்ள வராதிங்க தம்பீ”

நான் அவன் சூடு தெரிந்து, ‘’ மன்னிச்சுக்கோங்க’’ என்றேன்.

பிறகு ரெண்டு நாள் பேக்கரி பக்கமே போகல. சினிமா பாக்க அவ பேக்கரிய சிவநேசன் வண்டியில கடந்து போகயில. அவ இருக்காளான்னு பார்த்தேன். அப்பதான் எதையோ எடுத்துகிட்டு வெளியே வந்தவ கண்ணூத்தி பாம்பா பார்த்தா… எனக்கு அடி மனசு பெசய ஆரம்பிச்சுது.

மாப்ள சரக்கு அடிக்கலாமா?, என தோதா அவன் கேட்டான்.

யோசிக்காமல், சரி, என்றேன்.

மப்பு தலைக்கேறி வண்டிய தள்ளிட்டு வரும்போது, “சிரிக்கி மவ என் உயிர வாங்குறளே”

“யாரு மாப்ள?”

“அந்த பேக்கரிக்காரிதான்.”

“அவ என்னடா பண்ணா?”

“என்ன பண்ணல… அவ பார்வை, நடை , நெருக்கம் இதெல்லாம் அனுபவிச்சா தெரியும்டே… புருசன் வந்தா அப்படியே பத்தினியாகிட்றாடா…”

“விடு மாப்ள இந்த மாதிரி தான் ஊருக்குள்ள எல்லாம் அலையுதுங்க”

“டேய் இவள அவளுக கூட சேக்காத இவ வேற சாதிடா… அவ மனசு எனக்கு தெரியும்டா…”

மறுநாள் பேக்கரிக்கு போனப்போ செண்பகம் கமகமனு மஞ்ச முகத்தோட ஓடியாடி வேலை செஞ்சுட்டு இருந்தா. நான் போயி சேரில் உட்கார்ந்து அவளையே கவனிச்சுட்டு இருந்தேன், மதிய நேரம் ஆள் நடமாட்டமில்லாத நேரம் குழந்தை உள்ளயே ஓரமா படுக்க வைச்சுட்டா… உள்ள இருந்து எண்ணெய், டின், மாவுலாம் எடுக்க ஆரம்பிச்சா. நான் எழுந்து, ஒத்தாசைக்கு வரட்டுமான்னு கேட்டேன். வேண்டாங்க பரவாயில்ல, எனச் சொல்லியும் உள்ளே போனேன். அவ மனம் மனசு பூரா அடிச்சு துவைச்சுது. பின்னாடியே போயி கேக் செய்யுற அறையுள்ள அவ மாவு எடுக்க குனிஞ்சப்போ பின்பக்கமா அவ மார்போடு செத்துப் புடிச்சு இறுக்கி செண்பகம்னு கண்ணு சொருக சொல்லிகிட்டே அவளக் கட்டிக்கிட்டேன். அவளும் திமிரிட்டு அடங்குனா… கொஞ்சம் நேரம் என்ன ஆச்சுன்னு தெரியாத அளவு கிறக்கத்துல இருந்தோம். திடீர்னு எழுந்து வெளிய போனவ துடப்பத்த எடுத்துட்டு வந்து என்ன அடிச்சிட்டா. நான் அழுதுட்டே அவ காலைப் பிடிக்க போனேன் அவ என்ன தாண்டி வெளியே போயி உட்கார்ந்துட்டா. நான் சட்டையையும் தலையையும் சரி செஞ்சுகிட்ட வெளிய வந்து இறுக்கமா வீட்டுக்கு வந்துட்டேன்.

பொறவு ரெண்டு நாள் மாமா ஊருக்கு போயிட்டு வந்தேன். வந்தா செண்பகம் கடை அங்கன இல்ல.  சிவநேசன் குடிச்சுட்டு செண்பகா கிட்ட தப்பா நடந்துகிட்டிருக்கான். நான் செண்பகா பத்தி சொல்லி வைச்சதாலதான் அப்படி பண்ணிருக்கான். அவ புருஷன் இவன அடிக்க, பொழைக்க வந்த நாயிங்க எங்க மேலேயே கை வைக்குறீங்களானு எல்லாரும் கடைய அடிச்சு நொறுக்கி போட்டுட்டானுங்க. அவங்களும் அவமானம் தாங்க முடியாம ராவோடு ராவா காலி பண்ணிட்டு போயிட்டாங்க.

 

விளிம்புகளைக் கண்டு பிடி – காலின் ஃப்ளெமிங்: மைத்ரேயன் புனைவு மொழியாக்கம்

தமிழாக்கம்: மைத்ரேயன்

[இங்கிலிஷ் மூலம் பிரசுரமானது ஹார்ப்பர்ஸ் மாகஸீன் மாதாந்திர சஞ்சிகையின் ஏப்ரல் 2018 இதழில். தமிழாக்கம்: மைத்ரேயன்/ மே, 2018]

அவர் மனைவி திருகுவெட்டுப் புதிர்களை[1]  விடுவிக்க முனைந்திருப்பதைப் பார்க்கையில் நீரெலிகள் (பீவர்கள்) இப்படித்தான் மரக்கட்டைகளை வைத்து வேலை செய்யும் என்று அவருக்குத் தோன்றியிருந்தது. நீங்கள் ஒரு பீவராக இருந்து, மரக்கட்டைகளை வைத்து வேலை செய்தால், இந்த மாதிரி வேலைகளை சாதாரணமாக எடுத்துச் செய்யாதவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க உங்களிடம் ஒன்றிரண்டு சொலவடை இருக்கும்: “இரவில் சந்திரனை நோக்கி இருக்கும் பக்கத்திலிருந்து துவங்கு- அப்போது உனக்கு மேலும் நன்றாகப் பார்க்க முடியும்- அங்கிருந்து உள்புறம் நோக்கி வேலை செய்.”

அவருடைய மனைவி சொன்னார், “விளிம்புகளைக் கண்டு பிடிக்கணும்.” விளிம்புகளில் துவங்கு, ஒரு மூலையைப் பூர்த்தி செய், பிறகு உள் நோக்கி நகர். புதிரே, விடையைச் சந்தி. இப்போது அவர் அமர்ந்திருந்த சமையலறையில்தான் (அன்று) அவள் வேலை செய்து கொண்டிருந்தாள். பையன்களோடு அவள் தீர்வு காண முயன்ற புதிர்கள் அந்த மேஜையை விடப் பெரியதாகத் தோன்றின.

இப்போது அந்த மேஜையில் நிறைய காகிதங்கள் இறைந்திருந்தன. கட்டணத்தைக் கேட்டுக் கோரிக்கைக் காகிதங்கள், தனக்கே எழுதிக் கொண்ட குறிப்புகள். மலர் வளையங்களுக்கு கோரிக்கை கொடுத்தாயிற்று.  தனக்குள் ‘நினைவுச்சின்ன மனிதன்’ என்று பெயரிட்டிருந்தவரைப் பார்க்க அவர் வெளியே போயிருந்த போது ரெண்டன் தம்பதிகள் இடையில் வந்து போயிருக்கிறார்கள் போல. அந்த மனிதன் ஒரு சுத்தியல் வைத்திருந்தார். பழைய காலத்து ஆள். ஆனால், அந்த மனிதர் வேலை செய்யும்போது இவர் பார்த்ததில்லை, அனேகமாக அம்மனிதர் அழுத்தப்பட்ட காற்றால் இயங்கும் துரப்பணம் வைத்திருக்க வேண்டும், அதுவும் விலை உயர்ந்ததாக இருக்கும். இதென்ன 1947 ஆ, இல்லையே. அவர் மனைவி பிறந்தது 1975 இல். அவரோ 1977 ஆம் வருடத்தவர்.

பொதிவுள்ள ஓர் அப்பம் காகிதங்களின் நடுவில் அமர்ந்திருந்தது. துயர் போக்கும் உணவு, என்று திருமதி ரெண்டன் இவரிடம் சொல்லி இருந்தார். அவளுடைய கார் இவருடைய வீட்டுக் கார் நிறுத்துமிடத்தில் அடிக்கடி நின்றது, அவள் இருந்த வீடு என்னவோ இருநூறு கஜம் கூடத் தள்ளி இருக்கவில்லை.  அவர் எதையும் ஃபுட்பால் மைதானங்களின் பரப்பளவால் அளப்பார், அவருடைய மகன்கள் இப்போது ஃபுட்பால் விளையாடுகிறார்கள் என்பதால் வந்தது அது. “திருமதி ரெண்டன் நடக்கத்தான் வேண்டும்,” என நினைத்தவர், பொதிந்த அப்பத்திலிருந்து ஒரு துண்டை எடுத்து உண்டார். அவருக்கு அப்போது தோன்றியது, கூடிய சீக்கிரம் ஒரு நாள் தான் வேலைக்குத் திரும்பிப் போக வேண்டி இருக்கும். தான் இன்னும் இறக்கவில்லை என்பதால், பிறர் நாம் உயிரோடு இருக்கிறோம் என்று பாவனையாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என நினைத்தார்.

மருத்துவ மனையில், எல்லாரும் தொலைக்காட்சிகளைப் பார்த்தனர். சிலர் சிரித்தனர். யாரும் சிரிக்கக் கூட முடியாத அளவுக்கு வாழ்வு நின்று போய் விடுவதில்லையே- அவரும் கூட ஒன்றிரண்டு தடவைகள் சிரித்திருந்தார். அப்படிச் சிரித்ததை நினைத்தபடி இருக்கையில், கழுவும் ஸிங்கின் மீது குனிந்து அப்பத்தை வாந்தி எடுத்தார். மருத்துவ மனையின் தொலைக்காட்சிப் பெட்டி எப்போதும் ஒரே அலைவரிசையைத்தான் காட்டும், ஏதோ கேளிக்கைத் தொழில் துறை விதிகளின் கட்டுப்பாட்டால் அப்படிச் செய்வது போலிருந்தது.

இந்த விஷயங்களில் தன் மனைவியின் அறிவுறுத்தல்களை நினைத்துக் கொண்டார்.  ஒரு சமயம், மகன் க்ளே நிமோனியாவிலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்தான், இன்னொரு மகன் டானிக்கு ஒரு பிரச்சினை என்பதால் ஆலோசகரோடு சந்திப்புகள் தேவைப்பட்டன, அப்போது அவருக்கு வேலையும் போய் விட்டது, அதற்கு அவர் மனைவி சொன்னார், “இதையெல்லாம் கொஞ்சம் இலேசா எடுத்துக்குங்க, டெட்.” “நாம இதையெல்லாம் தாண்டிடுவோம்.” டானி பள்ளிக்குப் போய்ச் சேருமுன், குப்பைத் தொட்டிக்குப் பின்னே ஒவ்வொரு நாளும் அடித்துத் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருந்தான். அப்புறம் தெரிய வந்தது, அவனே மற்ற சிறுவர்களைக் கேட்டுக் கொண்டதால்தான், அப்படி அடிக்கப்பட்டான் என்பது. அவரோ, அவர் மனைவியோ ஏன் என்று புரிந்து கொள்ள முடியவில்லை, அந்தக் குழந்தைகளுக்கும் புரியவில்லை, ஆனால் அவர்கள் கேட்டுக் கொண்டபடி செய்தார்கள், காலம் முடிவுக்கு வரும் போது கூட குழந்தைகள் குழந்தைகளாகத்தான் இருப்பார்கள்.

அவர் தன் அம்மாவிடம் பேசுவதை நிறுத்திய பின் மூன்றே மாதங்களில் அவருடைய அம்மா இறந்து போன போது, “இப்ப இலேசா எடுத்துக்குங்க,டெட்,” என்றாள் அவர் மனைவி. அது ஒரு சிறிய வாக்குவாதம்தான், ஆனால் கடல் வாரிக் கப்பல்கள் அடித்தளத்தில் இருப்பதை, அங்கேயே இருந்திருக்க வேண்டியதை, வாரி மேலே கொண்டு வருவது போல ஆகியிருந்தது.

அந்த மாதிரி விஷயங்கள் அப்படியே இருக்க விடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் எப்போதுமே ரொம்ப கவலைப்படுபவராக இருந்தார், ரொம்பவே ஆர்வமுள்ளவராக, அனைத்தையும் மேம்படுத்த விரும்புபவராக இருந்தார். அவர் இன்னும் மேலான துணைவராக இருக்க விரும்பினார். அவருடைய மகன்கள் அம்மாவிடம்தான் எதற்கும் போனார்கள். அவர்களைப் பொறுத்த வரை அவருடைய கடமைகள் வேறெங்கோ இருந்தன. ஐஸ்க்ரீமுக்கான ஆள். அவர் மனைவி சிக்கல்களைத் தீர்த்து வைத்த பின், மகிழ்வு தரும் எதற்காவது அவர்களை அழைத்துப் போவது அவர். டெய்ரி க்வீன் ஐஸ்க்ரீம் கடைக்குப் போகும் அந்தப் பயணம் ஒரு புதுத் துவக்கம் என்று பாவனை செய்வது அவர் வேலை. இனிமேல் எல்லாம் நல்லபடியாக நடக்கும். அவர் மேற்பார்வையில் பாதி திருகுவெட்டுப் புதிர்ச் சில்லுகள் சரியாகக் கோர்க்கப்பட்டிருந்தன, ஆனால் அனேகமாக அவரது மனைவியின் அன்பாலும், ஆலோசனையாலும் நடந்ததால், அவளுக்கு நன்றி சொல்ல வேண்டி இருக்கும்.

கழுவுதொட்டியில் கிடந்த அப்பத்தின் மேற்புறத் துண்டங்களைப் பார்த்தபடி. “தொலையட்டும்,” என்றார். சிரித்தார். தனியாக இருப்பது நல்லது என்று நாம் ஒரு போதும் நினைப்பதில்லை, ஆனால் சிரிக்கக் கூடாத சமயத்தில் சிரிக்கும் சமயங்கள் மட்டும் விதி விலக்கு. அப்பொது நாம் தனியாக இருக்க வேண்டும். அத்தனை துணைதான் அப்போது நீங்கள் வேண்டுவது.

அவருடைய அம்மா இறந்த போது மிஸர்ஸ். ரெண்டன் ஒல்லியாக இருந்தார், பையன்களைத் தன் வீட்டுக்கு அழைத்துப் போயிருந்தார். ட்ரிவியல் பர்ஸூட் விளையாட்டின்போது எப்படி அவள் இவருடன் சரசமாடினாள் என்று சொல்லி இவர் மனைவி கேலி செய்தாள். அந்தப் பகுதியில் மிஸ்டர். ரெண்டன் அப்படி பல உறவுகள் கொள்வது உண்டு என்று பேச்சு இருந்தது. அவர் சார்ல்ஸ் அட்லாஸ் போல இருந்தார், தன் வீட்டுக் கார் வெளி வரும் பாதையில் தண்டால் எடுத்தார். பனிக்காலத்தில் அவரது கார் நிறுத்துமிடத்தில் அறையை உஷ்ணப்படுத்த ஹீட்டர் இருந்ததால் அங்கு தண்டால் எடுப்பார், ஆனால் அதைத் துவங்குமுன், காராஜின் கதவை முதலில் திறந்து வைத்துக் கொள்வார்.

அவர் மனைவிக்கு என்ன நோய் என்று கண்டுபிடிக்கப் படுவதற்குச் சில தினங்கள் முன்னதாக டானி அப்படி மோசமாக மொத்தப்பட்டிருந்தான், சுத்தப்படுத்துமுன் அவனை அடையாளம் காண்பது கடினமாக இருந்தது. சில பத்தாண்டுகள் முந்தைய காலத்தை நினைவுபடுத்திய, அவனுடைய ஸ்டார் வார்ஸ் சட்டை பூராவும் அவன் வாயிலிருந்தும், மூக்கிலிருந்தும் கொட்டிய ரத்தம். அவர் தன் மகனைக் கட்டிக் கொண்டார், ஆனால் அவன் அவரைக் கட்டிக் கொள்ளவில்லை. அவருடைய மனைவி டானியை வேகமாக புறமகற்றி அழைத்துப் போனாள். அவள் அவனை வாழ்வு அறைக்கு (லிவிங் ரூம்) அழைத்துப் போனாள். தன் வாயைத் துடைத்துக் கொண்டு, ஸிங்கைக் கழுவி அதிலிருக்கும் கழிவைத் துகளாக்கும் எந்திரத்தை ஓட விட்டு திருமதி ரெண்டனின் பொதிவு அப்பத்தை இரண்டாம் முறையாக, ஒழித்துக் கட்டியபடி இருந்தபோது, அந்தப் பெயர், லிவிங் ரூம் என்பது, இப்போது அவருக்கு ஒரு அங்கதமாகத் தோன்றியது.

அவர் மனைவி, தன் தோளுக்கு மேலாக அவரிடம் ரகசியமாகச் சொல்லி இருந்தாள், ஏதோ டானிக்கு அது கேட்காது என்பதாகப் பாவித்தவளாக, சூடான, ஈரமான துண்டு ஒன்றைக் கொண்டு வந்து அறையின் கதவருகே வைக்கச் சொன்ன வார்த்தைகள் அவை.

அவர் அதனால் மனம் நோகவில்லை. அவர் ஒரு போதுமே மனம் புண்பட்டதில்லை. ஆனால் சில தினங்கள் கழித்து, பையன்களை சிறுவர் குழுக்களின் பேஸ்பால் பயிற்சிக்கு அழைத்துப் போக விரும்பி இருந்தார். பொதுவாக, அவளுக்கு வேறு வேலைகள் இல்லை எனில் அவர் மனைவி இவற்றுக்குப் போவாள். அப்போது பையன்கள் அவரிடம் பேசினார்கள், பின் இருக்கைகளிலிருந்து அரற்றியபடி இருந்தார்கள்- டானி கூட, அவனுடைய பல் ஒன்று உடைந்திருந்ததால், அவன் பேச்சில் இலேசான ஒரு விஸில் ஒலி கேட்டது. அவர் மனைவி இறந்த பின், அவர் ஒரு துண்டுப் பிரசுரத்தைப் படித்தார், அதில் சிறு குழந்தைகளுக்கு அன்றாடப் பழக்கவழக்கங்கள் சீக்கிரம் மறுபடி ஒழுங்காவது என்பது துரிதமாகத் தேறுவதற்கு எவ்வளவு அவசியம் என்று இருந்தது. ரிடர்ன் ஆஃப் தெ ரொடீன். அந்தச் சொற்களின் சுருக்கப் பெயர் அவருக்கு பிடித்திருந்தது ஆர் ஓ ஆர் (ROR). சிங்கம் உறுமுவது போல, ஒரு எழுத்துதான் குறைச்சல். கொஞ்சம் குறைக்கப்பட்ட சிங்கம்- ஆனால் இன்னும் சிங்கம்தான். அவர் முகச் சவரம் செய்து கொள்கையில் வெட்டிக் கொண்ட போது ஒரு முறை மெலிவாகக் கர்ஜித்திருந்தார், பிறகு முகத்தில் ஒட்டுப் போட்டுக் கொண்டு, பையன்களை அன்றைய சிறுவர் குழுப் பயிற்சிக்கு இட்டுப் போனார். திரும்பி ஒழுங்காகும் வழக்கம்.

இப்போது பின் இருக்கையிலிருந்து பையன்கள் அதிகம் பேசவில்லை. அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டபோது ரகசியக் குரலில் பேசிக் கொண்டார்கள். திருமதி ரெண்டன் வந்த போது அவளுடன் பேசுவார்கள். அவர்கள் குளித்த போது, அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு, கைகளைத் தன் மடியில் கோர்த்து வைத்தபடி, அவள் அறை வாயிலில் காத்திருப்பாள். க்ளே முழு வாக்கியங்களைப் பயன்படுத்துவதை நிறுத்தி இருந்தான், அது இயற்கையானது போலத் தெரிந்தது: இன்னொரு மனித ஜீவனை எதிர் கொண்ட போது அவருமே சொற்களைப் பயன்படுத்துவதற்கு தன்னைக் கட்டாயப்படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது.

டானியின் முகம் இன்னும் கட்டுப் போடப்பட்டிருந்தது. அப்படி, மருத்துவக் காரணங்களை முன்னிட்டுத்தான், திருமதி. ரெண்டன் அவன் குளியலறையிலிருந்து வெளி வருவதற்குக் காத்துக் கொண்டிருந்தார் போலும். மம்மி திரைப்படங்களில் போரிஸ் கார்லாஃபாக அந்தப் பையன் இருந்திருக்க முடியும்- நிஜமாக ஒரு ஹாலோவீன் தினத்தன்று அவன் போரிஸ் கார்லாஃபாக வெளியே போயிருந்தான், அவனுடைய ஆசிரியர் ஒருவர் அப்படிச் செல்ல அவனை ஊக்குவித்திருந்தார். அந்த ஆசிரியர் குடிப்பார். டானி நிறைய நாட்களில், பள்ளி நேரம் முடிந்த பின்னும் பள்ளியில் தங்கி இருந்தான். அவன் எப்போதுமே படிப்பில் கஷ்டப்பட்டிருந்தான். அவர்கள் அவனிடம் நீ புத்திசாலி என்று சொன்னார்கள், ஏனெனில் சில வகைகளில் அவன் அப்படியும் இருந்தான். திருகுவெட்டுப் புதிர்களைப் பொறுத்தும், எண்கள் சம்பந்தப்பட்டவற்றிலும் புத்திசாலியாக இருந்தான். ஒரு விளையாட்டுக்காரரின் மட்டையடிகளின் சராசரியை மூன்று விநாடிகளுக்குள், பளிச்சென்று அப்படியே சொல்லி விடுவான்.

அந்த ஆசிரியர் டானிக்குக் குடிக்க எதையோ கொடுத்தார். அது சக்தி கொடுக்கும் பானம், அவனுக்குக் கவனம் கூடுவதற்கு உதவும் என்று அவர் சொல்லி இருந்தார். டானிக்குத் தலை சுற்றுவது போல இருந்தது. ஓய்வெடுக்கப் படுத்துக் கொள்ளலாமா என்று கேட்டிருந்தான். ஒரு சோப்புக் கல் மேஜையில் அவன் படுத்திருக்கையில் ஆசிரியர் அவனுக்குக் கையடித்து விட்டார். என்ன நேர்ந்தது என்று அவருக்குத் தெரிந்த போது, அவர் அடுத்த நாள் பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியரின் தலையை அந்த மேஜையில் மோதினார், அப்போது அந்த மேஜையில் இன்னமும் மகனின் விந்துவின் வெள்ளை தெரிந்ததாக அவருக்குத் தோன்றியிருந்தது, அல்லது விந்து அங்கு இருந்ததாக அவர் கற்பனை செய்திருந்திருக்கலாம். தன் மனைவியிடம் அவர் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. அந்த ஆசிரியர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். பிறகு ஏதோ தண்டனையும் கொடுக்கப்பட்டிருந்தது. அது என்ன என்பதை அவர் தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. அது கேலிக் கூத்தாகத் தெரியலாம். உங்களுடைய பையனுக்கு இப்படி ஒன்று நேர்ந்தால், அந்த ஆசிரியருக்கு என்ன ஆயிற்று என்று தெரிந்து கொள்ள நீங்கள் நிச்சயம் முயல்வீர்கள். அவர் அந்த ஆசிரியரைத் தன் கைகளால் தண்டிப்பதில்தான் கவனம் கொண்டிருந்தார். எல்லாரும் தம் கைகளால் ஏதாவது செய்கிறார்கள்.

அவருடைய மகன் அவரிடம் பிறகு அதிகம் பேசவில்லை. அப்போதுதான் குப்பைத் தொட்டிக்குப் பின்னே உதை வாங்குவது துவங்கியது. க்ளேயாவது அவரிடம் பேசுவான், இருவரும் குடும்ப அறையில் அமர்ந்து பேஸ்பால் விளையாட்டுகளைத் தொலைக்காட்சியில் பார்ப்பார்கள், டானியும் அவன் அம்மாவும் படுக்கை அறையில் இருப்பார்கள். நோய் கண்டு பிடிக்கப்பட்டது அவருக்கு முன்னமே, டானிக்குத் தெரிந்திருக்கலாம். அதனால்தான் அவன் தன் அம்மாவோடு நிறைய நேரம் தங்கினான் போலிருக்கிறது. மீதமிருக்கும் விநாடிகளை எல்லாம் உறிஞ்சிக் கொள்கிறவன். உங்களுக்குச் சில விஷயங்கள் தெரிய வரும்போது நீங்கள் நேரத்தைப் பதுக்கி வைக்க விரும்புகிறீர்கள்.

 

அவர்கள் மூன்று பேர்கள்தான் (வீட்டில்) என்றான பிறகு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வரும்போது ஒரு புது பொதிவு அப்பம் காத்திருந்தது. அவர்களுடைய தனிப்பட்ட அப்பம் தயாரிப்பவராக எத்தனை நாட்கள் ரெண்டன்கள் இருப்பார்கள் என்று அவர் யோசித்தார். நிச்சயமாக, அந்த அப்பம் (pie) முடிவில்லாததில்லை. அந்த ஜோக்கை ஒரு நாள் இரவு படுக்கை அறையில், தனக்குத் தானே, அவர் உரக்கச் சொல்லிப் பார்த்தார். அது சிகிச்சை போல இருந்தது. பையன்கள் முன்னறைக்குச் செல்வதைக் கை விட்டிருந்தார்கள். படுத்துக் கொள்ளப் போன பின்னர் அவர்கள் பேசுவதில்லை.

இப்போது இரண்டு கால்கள் குளியலறைக்கு நடந்து போயின, தண்ணீர்க் குழாய் திறக்கப்பட்டது, பிறகு இன்னும் இரண்டு கால்கள், நீர் இன்னும் வேகமாகத் திறக்கப்பட்டது. குளியலறையிலிருந்து ரகசியக் குரல்கள். அவர் தண்ணீர் கொட்டுவது நிறுத்தப்படுவதற்குக் காத்திருந்தார், அந்த நான்கு கால்களின் ஒலிகள் எழுவதைக் கேட்கக் காத்திருந்தார், ஆனால் அவர் கேட்டது தெளிவில்லாத தேய்வான அசைவின் ஒலிதான். படுக்கையறையின் கதவு சத்தப்பட்ட ஒலி மறுபடி கேட்டது.

அவர் மனைவி இறந்து கொண்டிருந்தபோது, அவர் அவள் இறப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார், அப்போது அவர் அதெல்லாம் முடிந்த பிறகு, தான் எத்தனை நேரம் மருத்துவ மனையில் இருக்க வேண்டி வரும் என்று யோசித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தார். அங்கு என்ன விதிமுறை? இது தன் வாழ்வின் மிக மோசமான நேரம் என்பதால்- அவர் இதை ஒத்துக் கொள்வதற்கு வெட்கப்பட்டார், ஆனால் தன் குழந்தை இறக்க நேர்வதை விடவும் மோசமான நேரமாகவே இது இருக்கும் –  சீக்கிரமாகப் போய் விடுவோமா? அது கெட்ட எண்ணம், அவர் முடிவுக்கு வந்தார். இதை யாரிடமும் சொல்ல விரும்ப மாட்டோம். க்ளே பதினோரு வயதே ஆன சிறுவன், ஆனால் அதற்குப் பிறகு, ஒரு தனியறையில், அவனைத் தன் மடியில் இரண்டு மணி நேரம் அமர்த்தி வைத்திருந்தார. தொடர்ந்து அழுததால் அந்தப் பையன் உடலில் நீர் வற்றிப் போன நிலை வரும் வரையில் அப்படி இருந்தார். டானியின் முகம் இன்னொரு தடவை அடிக்கப்பட்டு தையல்கள் போடப்பட்டிருந்த நிலையில் இருந்தது. அதுதான் கடைசித் தடவையாக இருந்தது. காலம் முடியும் நிலையில் கூட பையன்கள் பையன்களாக இருப்பார்கள்தான், ஆனால் சில காலம் கழித்துப் பையன்கள் கூட அப்படி நடந்து கொள்வதை நிறுத்தியும் விடலாம்.

ரத்தக் குழாய் மூலம் அவன் உடலில் நீர் ஏற்றப்படும் சிகிச்சைக்கு க்ளே அனுப்பப்பட்டபோது, ‘நான் ரெண்டன்களின் வீட்டில் தங்கிக் கொள்ளட்டுமா?’ என்று டானி கேட்டான்.  “நான் அந்த வீட்டில் இருக்க விரும்பவில்லை. உங்களோடு தனியாக நான் அந்த வீட்டில் இருப்பது எனக்குப் பிடிக்கவில்லை.” அவனோடு தனியாக அந்த வீட்டில் இருப்பது அவருக்கும் பிடிக்கவில்லை. அப்போது அவர் யாரும் சிரிக்க முடியாதபடி மோசமான ஜோக்குகளைச் சொல்லும் சிகிச்சை முறையைக் கண்டு பிடித்திருக்கவில்லை. “சரி,” அவர் சொன்னர், பள்ளத்தாக்கின் செங்குத்தான சுவர்களை விடத் தட்டையாக அவருக்கே தன் குரல் ஒலித்தது. அதனால் அவர் மறுபடி சொன்னார், “சரி. நீ போகலாம்.”

 

மறுபடி தனியாக ஆன அவர், ஆசிரியரைத் தான் அடித்த பள்ளிக்கூடத்துக்கு காரை ஓட்டிக் கொண்டு போனார், தன் மகனைத் தான் எங்கே இழந்ததாக அவர் முன்பு நினைத்தாரோ அந்த வகுப்பறையின் ஜன்னலைப் பார்த்தபடி காரில் அமர்ந்திருந்தார். தன் மனைவி எப்படி அந்தப் பள்ளிக்கூடத்தில் நடந்த சில நிகழ்ச்சிகளுக்குத் தன்னை அழைத்துப் போவாள், அவர்களின் குழந்தைகள் செய்யும் சில சாதாரண விஷயங்களை, தரையிலிருந்து எதையோ பொறுக்கி எடுப்பது, தங்கள் நண்பர்களில் ஒருவரைப் பார்த்துக் கண் சிமிட்டுவது, இருமும்போது தங்கள் வாய்களைக் கையால் மறைக்க மறப்பது, ஆனால் அடுத்த தடவை சரியாகச் செய்வது இப்படி ஏதேதோ பொருளற்ற விஷயங்களைப் பார்க்கையில் அவள் எத்தனை பெருமிதம் அடைந்தவளாகத் தெரிவாள் என்பதை அவர் நினைவு கூர்ந்தார். அவள் அவரைப் பார்க்கும்போது அது வேறு விதமான பார்வையாக இருக்கும். அதை மேலும் நேசமுள்ள பார்வை என்று அழைக்க அவர் விரும்பவில்லை. அப்படிச் சொல்வது தவறாக இருக்கும். அது ஒன்று சேர்ந்ததைச் சொல்லும் பார்வை. என்னுடையவர்கள் அல்ல, உம்முடையவர்களும் அல்ல: நம்முடையவர்கள்.

அவர் அழுதார், இரைந்து கத்துவதற்கு எழும் உந்துதலுக்கு இடம் கொடுக்காமல் இருக்கப் போராடினார், அப்போது இன்னொரு கார் அவருக்குப் பின்னே வந்து நின்றது. அது போலிஸ் காராக இருக்கும் என்று கவலைப்பட்டார், ஆனால் அது பழக்கமான சுபரு வகைக் கார் என்பதை உணர்ந்தார். திரு. ரெண்டன் அந்தக் காரைக் கழுவிய பிறகு,  தன் வீட்டுக் கார் நிறுத்துமிடத்தின் ஒரு கோடியில் நிறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.  அப்போதுதான் அவர் தண்டால் எடுப்பதை எல்லாரும் பார்க்க முடியும்.

அவர் தன் மகன்களின் தலைகளை அந்தக் காரின் பின் இருக்கையில் பார்த்தார். ரெண்டன்கள் காரின் விளக்குகளை அணைத்தனர், எல்லாரும் அவரவர் இருந்த இடத்திலேயே இருந்தனர். வேறு யாரும் இப்படித் தன் மகன்களை எதிர் கொள்ளுமுன், அழுவதை நிறுத்துவதற்குத் தனக்கு நேரம் கொடுத்திருக்க மாட்டார்கள் என்று அவர் நினைத்தார். ஆனால் எல்லாருக்கும் இப்படி ஒரு ரெண்டன் ஜோடி கிட்ட மாட்டார்கள். அவர்கள் மறுபடி காரை ஓட்டிக் கொண்டு போவதைக் கூட அவர் கவனிக்கவில்லை. திடீரென்று டானி காரின் பயணிகள் பக்கக் கதவைத் திறந்தான், அவனும் க்ளேயும் முன் இருக்கையில் ஏறிக் கொண்டனர்.

டானி தன் சகோதரனைத் தாண்டித் தன் மூடிய கையை முஷ்டியாக்கி நீட்டினான். அவனுடைய அப்பா, அந்தக் கையைத் தன் கையில் எடுத்துக் கொண்டார். நடுவில் இருந்த பையன் தன் கண்களை மூடுவதை மட்டும் செய்தான். அவர் மனைவி இந்தக் காரில் இந்த நேரத்தில் இருந்திருந்தால், இப்போது பேசி இருக்க மாட்டாள், அவர் பேச வேண்டும் என்றும் எதிர்பார்த்திருக்க மாட்டாள், அது குறித்து அவருக்கு நிச்சயமாக இருந்தது. மையம் இல்லாத இடத்தில் விளிம்புகளும் கிடையாது. இடம் இடத்துக்கு வழி விட்டு, அது மேலும் இடத்துக்கு வழி விட்டு- தன் மகன்களைத் தாங்கிப் பிடித்திருக்கும் ஒரு அப்பா, வேறெதுவும் படிவங்களால் மூடப்படாமல், எந்த வண்டலும் இல்லாது, அங்கே ஒரு கடலின் அடித்தளம் மட்டும் இருந்தது.

***

[1] ஜிக்ஸா பஸில்

oOo

நன்றி : Find the Edges, Colin Fleming, Harper’s Magazine

(This is an unauthorised translation of the short story, “Find the Edges” by Colin Fleming, published at Harper’s Magazine . The Tamil translation is intended for educational, non-commercial display at this particular web page only).

பேய் விளையாட்டு – காலத்துகள் சிறுகதை

காலத்துகள்

தீம் பார்க்கினுள் நுழைந்த அந்த குள்ளமான மனிதரை டிக்கெட் கவுண்ட்டர் அருகே நின்றிருந்தவர் தடுக்க, அவரிடம் தன் அடையாள அட்டையை தந்தார். கவுண்ட்டர் ஆசாமி அதை வாங்கிப் பார்த்து விட்டு எதுவும் சொல்லாமல் திருப்பித் தந்தவுடன் நடக்க ஆரம்பித்தவர், தன் பின்னால் எழுந்த மெல்லிய சிரிப்பொலியை கவனித்ததைப் போல் காட்டிக்கொள்ளவில்லை. படிக்கட்டில் இறங்கியவுடன் உடை மாற்றும் அறைகள். அருகே நடப்பட்டிருந்த துணியினால் செய்யப்பட்ட பந்தலுக்கு கீழே இருந்த இருபது முப்பது நாற்காலிகளில் சிலர் அமர்ந்து, எதிரே இருந்த நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த தங்கள் நண்பர்களை, உறவினர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். பிதுங்கும் தொந்திக்கு கீழே மிகச் சிறிய உள்ளாடையுடன் உடை மாற்றும் அறையிலிருந்து வெளியே வந்த ஒருவர் மூன்று குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த இரு பெண்களுக்கு அருகே வர, அனைவரும் நீச்சல் குளத்தில் இறங்கினார்கள்.

‘குட் மார்னிங் ஸார்’ என்று குரல் கேட்டு திரும்பி ‘குட் மார்னிங் வய்’ என்றார் குள்ளமான மனிதர்.

‘என்ன ஸார் பேர் இது?’

‘இந்தக் கதைக்கு மட்டும்தான்யா நான் எக்ஸ், நீ வய். இப்போதைக்கு இதுக்கு மேலலாம் யோசிக்க முடியாது, அடுத்த கதைல பேர் வெச்சிடறேன்னு சொல்லிட்டாரு ஆத்தர், என்ன செய்யறது. இது பரவாயில்லை, மொதல்ல ட்ரிப்பிள் எக்ஸ், ட்ரிப்பிள் வய்னு பேர் வெச்சார், நல்ல காலம் எடிட்டர் அதெல்லாம் வேணாம்னு சொல்லிட்டார்’

‘கதையே வேணாம்னு சொல்லியிருக்கலாம்’

‘என்னய்யா’

‘ஒண்ணுமில்ல ஸார், ஏதோ பேருன்னு ஒண்ணு வெச்சாரே, போன கேஸ்ல பெயரிலியா இருந்ததுக்கு பரவாயில்லை. ஆனா பெர்மனென்ட் பேர் வைக்கும்போது நம்ம ஊர் பேரா வெக்கச் சொல்லுங்க, மேக் இன் தமிழ் நாடு. அவர் பாட்டுக்கு ஏதேதோ நாட்டு குற்றப் புனைவ படிச்சுட்டு உச்சரிக்கவே முடியாத பெயரா வெச்சிடப் போறார், அதுவும் ஐஸ்லேண்ட் நாட்டு க்ரைம் பிக்க்ஷன் ரைட்டர்ஸ் பெயரெல்லாம் சொல்றதுக்குள்ள வாய் சுளுக்கிடும் ஸார்’

‘மேக் இன் இந்தியாலாம் வடக்கத்திய கருத்தாக்க திணிப்புய்யா, நமக்கெல்லாம் மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும், யாதும் ஊரே யாவரும் கேளிரதானே, அதனால எந்த பேர் வெச்சாலும் நம்ம கடமைய நாம சரியா செய்யணும். ஆனா கரடுமுரடா பெயர் வெச்சா அவருக்கு அத தமிழ்ல டைப் பண்றது கஷ்டமா இருக்குமே, அதனால ஈஸியாவே வைப்பார், கவலைப்படாத.’

‘சரி ஸார், எந்தப் பெயரா வேணா இருக்கட்டும், உலகத்திலேயே ஸ்காட்லாண்ட் போலீஸுக்கு அடுத்தது தமிழ் நாட்டு போலிஸ்னு ப்ரூவ் பண்ணுவோம்’

‘நாம அவங்களுக்கு அடுத்ததுன்னுலாம் யாருய்யா சொன்னது’

‘ஸி.ஐ.டி சங்கர், ரகசிய போலிஸ் 115, விருத்தகிரி, சங்கர்லால், விவேக்ன்னு ஒரு கூட்டமே பல காலமா இதைத்தான் சொல்லிட்டிருக்காங்க ஸார்’

‘அந்த ரகசிய போலிஸ்தான ஒரு குட்டைல குதிச்சு நீந்தி பாகிஸ்தான்லேந்து இந்தியாவுக்கு வருவாரு, ‘இந்தியான்னு’ தமிழ்ல வேற எழுதிருக்குமே.’

‘ரகசிய போலீஸ் பத்தி எதுவும் தப்பா பேசாதீங்க ஸார், அவர் வாத்தியார்’

‘அதுவும் சரிதான் நம்ம புலனாய்வை ஆரம்பிப்போம். எப்படி போகணும்?’ என்று கேட்டார் எக்ஸ்.

‘இந்தப் பக்கம் ஸார்’

ஐம்பதடி சென்றவுடன் இன்னும் ஆழமாக நீர் நிரப்பட்டிருந்த மற்றொரு நீச்சல் குளம். ‘அங்க பார்யா’ என்றார் எக்ஸ். முக்காடிட்டிருந்த பெண்கள் குளத்தின் முன் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

‘மார்வாடீஸ் ஸார், இந்த முக்காடுல எந்தளவுக்கு மூஞ்சி தெரியும்’

‘அத விடு, எப்படி ஸ்விம் பண்ணுவாங்க?’ என்று எக்ஸ் சொல்லிக் கொண்டிருக்கும்போதே முக்காடுப் பெண்களில் ஒருவர் புடவையுடனேயே நீரினுள் குதிப்பதைச் சிரித்தபடி பார்த்துக் கொண்டே நகர்ந்தார்கள். ‘காத்தால சாப்பிடக்கூட இல்ல ஸார்’ என்று மூடப்பட்டிருந்த புட் கவுண்ட்டரை கடக்கும்போது வய் சொல்ல, ‘மத்தியானம் நல்லா சாப்பிட்டுடலாம்யா, அதுக்குள்ள கேஸ் சால்வ் பண்ணிடுவோம்’.

‘முடியுமா ஸார்?’

‘கண்டிப்பா, இது ஷார்ட் ஸ்டோரிதானே. ஆரம்பிச்சு ஒரு பக்கம் முடிஞ்சிருக்கும், இது வரைக்கும் ஆத்தர் கதைக்கே வரல, வெட்டிப் பேச்சு பேச வைக்கிறார். இனிமே கதைய ஆரம்பிச்சு சட்டு புட்டுன்னு முடிச்சுடுவார். ஆனா இங்க எதுவும் ப்ராப்ளம் இல்ல போலிருக்கே, எல்லாரும் ஜாலியாத்தானே இருக்காங்க’

‘பேய் ஸார், இங்க ஏதோ பேய் நடமாட்டம் இருக்கறதா கம்ப்ளைண்ட் வந்திருக்கு, தீம் பார்க் ஓனர் செல்வாக்கானவர் ஸார், அதனால இத பெரிசா எடுத்துக்கிட்டு நம்மள கவனிக்க சொல்லிருக்காங்க.’

‘பேய்லாம் எதுவும் இருக்காது, மனுஷங்க வேலைதான்’

‘எப்படி ஸார் சொல்றீங்க’

‘இது குற்றப் புனைவுயா, இதுல ஆரம்பத்துல பேய், பிசாசு, குட்டிச் சாத்தான்னுலாம் வந்தாலும், கடசில யாரோ ஒரு மனுஷன்தான் எல்லாத்தையும் செய்யறான்னு முடியணும்,’ என்ற எக்ஸ் தொலைவில் இருந்த குதிரை ராட்டினத்தைச் சுட்டி, ‘யாருமே இல்ல, குட்டிப் பசங்க வந்திருக்காங்களே’

‘அது யூஸ்ல இல்ல ஸார், ஆனா அங்கயும் பேய பாத்திருக்காங்க, பெருசா எடுத்துக்கல போல. ஆனா நேத்து ஈவினிங் ஹாரர் ஹவுஸ்ல பிரச்சனையாயிடுச்சு’

‘அது எங்க?’

‘தோ எதுத்தாப்ல அந்த கார்னர்ல ஸார்’

‘என்னய்யா, இங்கயும் யாரையும் காணும்’

‘இதெல்லாம் ஈவினிங்லதான் ஓபன் ஆகும், அதுக்குப் பக்கத்துல இருக்கறது கார், ஹெலிகாப்டர் ஓட்டற எடம். அதையும் ரொம்ப யூஸ் பண்றதில்லயாம்’

‘அப்ப தீம் பார்க்குன்னு சொன்னாலும் இது கிட்டத்தட்ட ஸ்விம்மிங் பூல்தான் இல்லையா’ என்று எக்ஸ் சொல்லிக் கொண்டிருக்கும்போது எதிரே வந்தவரை, மேனேஜர் என்று அறிமுகப்படுத்தினார் வய்.

‘என்ன ஏதோ பேய் இருக்குன்னு கம்ப்ளைண்ட் பண்ணிருக்கீங்க போல’

‘ஆமா ஸார், ஏதோ ஒரு ப்ரிசென்ஸ வேலை செய்யறவங்க நோட்டிஸ் பண்ணிருக்காங்க’

‘ஆம்பள பேயா, பொம்பள பேயா? ஆம்பளனா ஒரு சேஞ்சா இருக்கும்’

‘பையன் ஸார்’

‘இன்டிரெஸ்ட்டிங், என்ன செய்யுது அந்தப் பேய், அதாவது பையன்?’

‘இங்க நிறைய இடங்கள் ஈவினிங்தான் ஸார் ஓபன் பண்ணுவோம், சிலது யூஸ் பண்றதே இல்லை. இந்த இடங்கள்லதான் அந்தப் பையன பாத்திருக்காங்க. நீங்க வரும்போது என்ட்ரன்ஸ் பக்கத்துல பாத்திருப்பீங்கல அந்த குதிரை ராட்டினத்துல அந்த பையன் ஆப்டர்நூன் டைம்ல ஒக்காந்திருக்கானாம். அப்பறம் இங்க கார் ஓட்டற எடத்துல சில சமயம்.’

‘நீங்க நேரா பாத்திருக்கீங்களா?’

‘ஆமா ஸார். நாலஞ்சு நாள் முன்னாடி நான் இந்த வழியா வந்திட்டிருக்கேன், அப்போ இங்க ஹெலிகாப்டர்ல ஒரு பையன் ஒக்கந்திட்டிருந்தான்’

‘கிட்டக்கக் போனீங்களா, என்னாச்சு?’

‘இந்த இடத்துக்கு வந்தப்போ யாரும் இல்ல’

‘இதுவரைக்கும் ஏன் ரிபோர்ட் பண்ணல?’

‘நா ஒரு வாட்டிதான் ஸார் பாத்தேன், இந்த எடத்த கவனிச்சுக்கற பெரியவர் கிட்ட கேட்டதுக்கு யாரும் இங்க வரலைன்னு சொன்னாரு. நானும் மத்தவங்க சொல்றத கேட்டுக் கேட்டு ஏதோ கற்பனை பண்ணிட்டேன் போலிருக்குன்னு விட்டுட்டேன். நேத்து பாருங்க, ஈவினிங் ஹாரர் ஹவுஸ்ல ஒரு பேமிலி போயிருக்காங்க. திடீர்னு எக்ஸ்ட்ராவா ஒரு பையன் அங்க இருந்திருக்கான். யாரு நீன்னு கேட்டதுக்கு எதுவும் சொல்லலையாம், அங்க இருட்டா, திடீர்னு லைட்ஸ், சவுண்ட்ஸ் வந்து போகுமா, ரொம்ப பயந்துட்டாங்க. வெளில வந்துட்டு அடுத்து உள்ள போறதுக்கு காத்துக்கிட்டிருந்தவங்க கிட்டயும் இத அவங்க சொல்ல எல்லாரும் உள்ள வராம கிளம்பிட்டாங்க. அப்பறம்தான் விஷயம் ஓனருக்கு போச்சு’

‘ஏதாவது வயலன்ட்டா பிஹேவ் பண்றானா அந்தப் பையன்?’

‘அப்டிலாம் இல்லை, விளையாடறான் அவ்ளோதான். க்ளோசிங் ஹவர்ஸ்ஸுக்கு அப்பறம்தான் அவன் அடிக்கடி கண்ல படறாங்கறதுனால வேலை செய்யறவங்க பயப்படறாங்க. கிட்டக்க போய் பார்த்தா காணாம போயிடறான்’

‘இவ்ளோ பெரிய எடத்துல மறஞ்சுக்கறது ஈஸி. எல்லா இடத்துலையும் அவன பாத்திருக்காங்களா?’

‘எஸ் ஸார்’

‘இந்த இடத்துக்கு யார் இன்சார்ஜ்?’

காது கேட்கும் மெஷினைப் பொருத்திக் கொண்டிருந்த முதியவரை மேனேஜர் அழைக்க அவர் அருகே வந்தார். ‘நீங்கதான் இந்த இடத்தோட இன்சார்ஜா?’

‘ஆமா ஸார்’ என்றவரிடம், ‘இங்க ஏதோ பையன் பேயா உலாத்தறான்னு சொல்லிக்கறாங்களே, நீங்களும் பாத்திருக்கீங்களா?’ என்று கேட்டார் வய்.

‘என் கண்ல அப்படி யாரும் பட்டதில்லை ஸார், மத்தவங்க சொல்றாங்க’

‘இந்த இடத்துலயே பாத்திருக்காங்க இல்லை, ஹாரர் ஹவுஸ்லகூட.’ என்றார் வய்.

‘நேத்து சொன்னாங்க, நான் பாக்கல ஸார்’

‘ஒரு குடும்பமே பாத்திருக்காங்களே, உங்க மேனேஜர்கூட பாத்தேன்னு சொல்றார்’

‘நேத்து இருட்டுல அவங்க பசங்களையே தப்பா பேய்னு நினைச்சிருக்கலாம் ஸார்’

‘நீங்க இதப் பத்தி என்ன நினைக்கறீங்க?’ ஹெலிகாப்டர் அருகே நின்றுகொண்டிருந்த எக்ஸ் கேட்க, ‘தெரியல ஸார், நெறைய சின்னப் பசங்க இங்க தினோம் வராங்க, அதுல யாரையாவது பாத்து தப்பா புரிஞ்சுக்கிறாங்க போல’

‘ஆனா அந்த குதிரை ராட்டினம் பக்கம் யார் போ…’ என்று ஆரம்பித்த வய்யை இடைமறித்த எக்ஸ் ஹெலிகாப்டரைச் சுட்டி, ‘இது எலெக்ட்ரிசிடிலதான ஓடுது, ஸ்விட்ச் எங்க இருக்கு’ என்று கேட்க, எழுந்து வந்த முதியவர் ஸ்விட்ச் போர்ட்டை காட்டினார்.

‘நீங்க பாக்கும்போது ஹெலிகாப்டர் சுத்திட்டிருந்துதா?’

‘ஆமா ஸார், கொஞ்சம் உயரமா பறந்து திருப்பி இறங்கிடும், அன்னிக்கும் அப்படித்தான்,’ என்றார் மேனேஜர்.

‘மெயின் போர்ட் எங்க இருக்கு ஒங்க ட்யு டைம் என்ன?’ என்று முதியவரிடம் கேட்டார்.

‘டென் டு பை ஸார்’

‘ஒங்க வீடு எங்க இருக்கு?’

‘இங்கதான் ஸார் இருக்கேன், ஆபிஸ் ரூம் பக்கத்துலையே இன்னொரு ரூம் இருக்கு ஸார் அங்கதான் தங்கறேன்’

‘கார் ரைடுக்கு எவ்ளோ பணம்?’

‘நாலு நிமிஷத்துக்கு முப்பது ரூபாய்’

இடத்தை ஒருமுறை சுற்றி வந்த எக்ஸ், ‘மத்த இடத்தையும் பாத்துடலாம் ஹாரர் ஹவுஸ் சாவி இருக்கா, தொறந்து காட்ட முடியுமா?’

‘இப்பவே பாக்கலாம் ஸார், பன்னிரண்டுதான் ஸார் ஆகுது, பத்து நிமிஷத்துல நீங்க பாத்திடலாம்’.

ஹாரர் ஹவுஸை விட்டு வெளியே வந்தவுடன், ‘குதிரை ராட்டினம் பக்கம் போகலாம் வாங்க, அந்த இடத்துல பையன யாரோ பாத்தாங்கன்னு சொன்னீங்கல, அவர கூப்பிடுங்க’

‘நீங்க பாக்கும் போது பையன் என்ன செஞ்சிட்டிருந்தான்?’

‘குதிரை மேல ஒக்கந்திட்டிருந்தான் ஸார்’

‘சுத்திட்டிருந்துதா, இல்ல?’

‘இல்ல ஸார், ஜஸ்ட் அவன் சும்மா ஒக்கந்திருந்தான் அவ்ளோதான்.’

‘இங்கயும் குதிரைங்க சுத்தற மாதிரி ஆப்பரேட் பண்ண முடியும் இல்லையா, யார் இன்சார்ஜ்?’

‘முடியும் ஸார், நான்தான் இன்சார்ஜ். நாலு மணிக்குதான் ஆன் பண்ணுவேன், அதுக்கு முன்னாடி மதியம் செக் பண்ண வருவேன் அப்பதான் அந்தப் பேய்ப் பையன பார்த்தேன்.’

மீண்டும் ஒரு முறை தீம் பார்க்கை சுற்றி வந்தார்கள். ‘ஸ்விம்மிங் பூல்ல அந்த பையன யாரும் பாத்ததில்லையா’ என்று மேனேஜரிடம் கேட்டார் வய்.

‘இல்ல ஸார், இங்க வேலை செய்யறவங்க மட்டும் தான் நேத்து வரைக்கும் பாத்திருக்காங்க’

முதியவரிடம் இரு பொட்டலங்களை தந்து கொண்டிருந்தவரைச் சுட்டி ‘அங்க என்ன தராங்க?’ என்று எக்ஸ் கேட்க, ‘லஞ்ச் ஸார், இங்க வேலை செய்யறவங்களுக்கு நாங்களே லஞ்ச் தந்துடுவோம்’

அதன் பின் மேனேஜர் அறைக்கு வரும் வரை எக்ஸ் எதுவும் சொல்லவில்லை.

‘இப்ப என்ன ஸார் பண்றது’ என்று மேனேஜர் கேட்க, ‘இனி இன்னிக்கு இங்க நாம செய்யறதுக்கு ஒண்ணுமில்ல, கெளம்பறோம். நாளைக்கு வந்து அப்சர்வ் பண்றோம், அதுக்கு முன்னாடி எதாவது நடந்தா கால் பண்ணுங்க’ என்று சொன்ன எக்ஸ் ‘ஒங்க நம்பர் அவர் கிட்ட இருக்குல?’என்று வய்யிடம் கேட்க ‘இருக்கு ஸார்’. ‘ஓகே நாளைக்கு பாப்போம்’ என்று கைகுலுக்கி விட்டு கிளம்பினார்கள்.

நுழைவாயில் படிக்கட்டருகே வந்தவுடன் ‘வாங்க அப்படி போலாம்’ என்று வய்யிடம் சொல்லிவிட்டு மீண்டும் வேறொரு திசையில் உள்ளே சென்ற எக்ஸ், சிறிது தூரம் நடந்த பின் இரு புதர்களுக்கு பின்னாலிருந்த பெஞ்ச்சில் அமர்ந்து, ‘இங்க வெயிட் பண்ணலாம்’ என்று சொன்னார். அந்த இடத்திற்கு எதிரே இருந்த அரங்கைச் சுட்டி, ‘அப்ப இவர்தான்..’ என்று கேட்ட வய்யிடம், ‘பாப்போம்’ என்றார் எக்ஸ். சிறிது நேரம் கழித்து ‘என்ன ஸார் யாரும்…’

‘டைம் ட்வெல் தர்ட்டி ஆகப்போது வய், எனி டைம் நவ், அங்க கவனிங்க’

‘தலைக்கு மேல ஹூட் போட்டிருக்கற பையனா ஸார்’

‘யெஸ்’

அந்த சிறுவன் அரங்கினுள் நுழைய, ‘ போலாம் ஸார்’ என்ற வய்யிடம் ‘பத்து நிமிஷம் வெயிட் பண்ணலாம்யா,’ என்றார் எக்ஸ்.

‘சாப்பாடு நல்லா இருந்ததா?’ என்று எக்ஸின் குரல் கேட்டவுடன் தடுமாறி எழுந்த முதியவர் ‘ஸார் யார்கிட்டயும் சொல்லிடாதீங்க ஸார் ‘ என்று கைகூப்பியபடி அவர்கள் அருகே வரவும் ‘பதட்டப்படாதீங்க’ என்று எக்ஸ் நாற்காலியில் அமரச் செய்தார். ஓட ஆரம்பித்தச் சிறுவனை பிடித்து நிறுத்தினார்.

‘பயப்படாதீங்கய்யா, தண்ணி குடிக்கறீங்களா’

இரு மிடறுகள் விழுங்கி விட்டு தொடைகளில் கைகளை தேய்த்துக் கொண்ட முதியவரிடம் ‘ஏன் இப்படி பண்றீங்க’ என்று எக்ஸ் கேட்க ‘பயமுறுத்தனும்னு பண்ணலைய்யா, மாட்டி விட்டுடாதீங்க’ என்று முணுமுணுத்தார்.

‘ஸார்கிட்ட விஷயத்தச் சொல்லுங்க, எதுவும் நடக்காது,’ என்றார் வய்.

துள்ளுவதை நிறுத்தியிருந்த சிறுவனைச் சுட்டி, ‘இவன் ஒங்க பேரன்னு நினைக்கறேன், சரியா?’ என்று எக்ஸ் கேட்க, ‘ஆமாம் ஸார், பையனோட பையன். என் மகன் மருமகள விட்டுட்டு ரெண்டு வருஷம் முன்னாடி எங்கயோ ஓடிட்டான், அவதான் வளத்துட்டிருந்தா. போன மாசம் அவளும்…’ அழ ஆரம்பித்த முதியவரைப் பார்த்து சிறுவனும் அழ, வய் அவனைத் தேற்றினார்.

‘இவனப் பாத்துக்க வேற யாரும் இல்ல ஸார், எனக்கும் இந்த இடத்த விட்டா தங்கறதுக்கு வேற எங்கயும் போக முடியாது. அதனாலதான் இப்போதைக்கு இவன யாருக்கும் தெரியாம இங்கயே தங்க வெச்சிருக்கேன். என்னத் தவிர வேற யாரும் தங்க ஒத்துக்க மாட்டாங்க. வேற வேலை பாத்திட்டிருக்கேன் ஸார், கடச்ச உடன கெளம்பிடுவேன்.’

எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்கள்.

‘ரூம்லேயே எவ்ளோ நேரம் அடச்சு வைக்கிறது ஸார், அதனால கும்பலோட சேர்ந்திட்டா ஒண்ணும் கண்டுக்க மாட்டாங்கன்னு…’ என்று முதியவர் ஆரம்பிக்க அந்தப் பையன் பக்கம் எக்ஸ் திரும்பினார்.

‘நெறய பேர் இருப்பாங்க ஸார், யாருக்கும் என்னத் தெரியாது. தனியா எல்லாரோடையும் சுத்திட்டிருப்பேன். அப்பறம்தான் நானே விளையாட ஆரம்பிச்சேன்’ என்றான் அவன்.

சிறிது நேர அமைதிக்குப் பின் ‘சமூக நலத்துறைகிட்ட சொன்னா அவங்க ஒங்க பேரன ஹாஸ்டல்ல சேப்பாங்க. நீங்க சனி ஞாயிறு அவன போய் பாக்கலாம். நான் அவங்க கிட்ட பேசறேன்’ என்றார் எக்ஸ்.

‘வேணாம் ஸார், நானே இவன பாத்துக்கறேன்’ என்று முதியவர் சொல்லவும், பேரனும் ‘தாத்தாவோடத்தான் இருப்பேன்’ என்றான்.

‘இங்க ஒங்ககூட இருந்தா அவன் படிப்புலாம் எப்படி? ஓனர் கிட்ட பேசி இப்போதைக்கு இங்க தங்க வைக்க சொல்றேன், அப்பறம் ஒன்னு ஹாஸ்டல்ல சேக்கணும், இல்ல நீங்க வேற வேலை பாத்துக்கணும்’

‘ஸார் ஓனர்..’

‘எதுவும் சொல்ல மாட்டாரு, நான் பாத்துக்கறேன். இப்பதான் அவன் இங்க தங்க வர மாதிரி சொல்லிக்கலாம். பேய், பிசாசு புரளிலாம் இனி திரும்பி வரக் கூடாது சரியா’

முதியவர் தலையாட்டினார்.

தீம் பார்க் உரிமையாளரிடம் பேசி அவரிடம் முதியவரின் பேரன் அவருடன் சில நாட்கள் தங்க அனுமதி பெற்றார்கள். ‘இன்னும் பத்து பதினஞ்சு நாள்ல வேற ஏற்பாடு பண்ணிடலாம், நாங்களே வந்து சொல்றோம்’ என்று முதியவரிடம் தெரிவித்து விட்டு கிளம்பினார்கள். ‘ஒரு நிமிஷம் இருங்க’ என்ற எக்ஸ், மீண்டும் உள்ளே சென்று முதியவரிடம், ‘இத வெச்சுக்குங்க’ என்று பணம் கொடுக்க, அதை வாங்கத் தயங்கிவரைப் பார்த்து, ‘பேரனுக்குதான் தர்றேன், வாங்கிக்குங்க’ என்றவுடன் வாங்கிக் கொண்டார்.

‘வாங்க வய்’

‘என்ன ஸார் திரும்பி உள்ள போனீங்க?’

‘ஒண்ணுமில்ல’ என்று எக்ஸ் சொல்ல, ஏதோ கேட்க வந்ததை நிறுத்தினார் வய்.

‘முந்தைய கேஸ்போது கொஞ்சம் நெர்வஸா இருந்த மாதிரி தோணிச்சு வய், இந்த தடவை அப்படி தெரியல, குட் ஜாப்’

‘புனைவுலகம்கூட ஒரு நாடக மேடைதானே ஸார். போன தடவை நம்ம அரங்கேற்றம், வாசக பார்வை நம்ம மேலேயே இருக்குங்கற உணர்வு என்னை இயல்பா இருக்க விடல. இப்ப கொஞ்சம் பழகிடுச்சு’

‘தனியாவே கேஸ் ஹேண்டில் பண்ணலாம் நீங்க’

‘கண்டிப்பா ஸார், அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா…’ என்று ஆரம்பித்தவர் எக்ஸின் முக மாற்றத்தை கண்டதும் தொடரவில்லை. எதுவும் பேசாமல் நடந்து கொண்டிருந்த எக்ஸிடம் ‘ஆத்தர் தன் வசதிக்கு கதைய எங்கேயோ கொண்டு போய் திடீர்னு முடிச்சிட்டார்னு சொல்லப் போறாங்களோன்னு தோணுது ஸார். ஜாய்லேண்ட் நாவல்லேந்து…’

‘அது வாசகர் பாடு, எழுத்தாளர் பாடு நமக்கென்ன வந்தது. பாஸ்டீஷ், ஸெல்ப்-பாரடி வகை கதை இப்படி ஏதாவது சொல்லி நியாயப்படுத்துவார்.’

‘நெஜமாவே அவர் இந்த பாஸ்டீஷ் வகைமைலாம் மனசுல வெச்சுகிட்டு தான் எழுதறாரா ஸார், அப்ப நாம என்ன கோமாளிகளா. நான் ஸ்காட்லாண்ட் யார்ட்..’

‘யோவ் நிறுத்துய்யா ஸ்காட்லாண்ட் யார்ட் புராணத்த. எழுத்தாளர் என்ன வெச்சுக்கிட்டா வஞ்சனை செய்யறார். அவருக்கு ஒத்துழைப்பு குடுக்கணும்யா. என்னைக்  கூடத் தான் குள்ளமான மனிதர்னு இந்தக் கதைல சொல்லி இருக்கார் , கடுப்பா இருக்கு. இப்ப அதைப் பத்தி கேட்க  முடியாது, அதனால புகழ் பெற்ற நம் சமகாலத்து பிரஞ்சு  குற்றப்புனைவு காவல்துறை அதிகாரி கேமெலிய வெஹவென் கூட குள்ளம் தானேன்னு என்னை தேத்திக்கறேன். இன்னும் ஒண்ணு ரெண்டு கேஸ் சால்வ் ஆகட்டும், ஹைட்ட இன்க்ரீஸ் பண்ணிடறேன் பாரு. இப்போதைக்கு அவர் செய்யறதை பொறுத்துத்தான் ஆகணும், அப்பறம் நாம நினைத்ததை செய்யலாம். பாத்திரங்கள் உயிர் பெற்று எழுத்தாளனை மீறிச் செல்வது புனைவுலகில் ஒன்றும் புதுசில்லையே, வி ஹேவ் டைம் பார் தட். இலக்கிய அமரத்துவம் காத்திக்கிட்டிருக்குங்கறத மறந்துடாத’

‘ஓகே ஸார், ஆனா குற்றப் புனைவுன்னா, அது பகடியாவே இருந்தாலும் வாசகர்களுக்கு எப்படி மர்மத்தை கண்டு பிடிச்சோம்னு சொல்லி ஆகணும் இல்லையா.எப்படி பெரியவர சஸ்பெக்ட் பண்ணீங்கன்னு அவங்களுக்கு நாம தெரிவிக்கணும்’

‘ரெண்டு மூணு விஷயம் இருக்குயா. பர்ஸ்ட் அந்த பையன் குதிரை ராட்டினத்துல குதிரை மேல ஒக்காந்திருந்திருக்கான் அவ்ளோதான், அதை அவன் ஓட்டலை, ஆனா ஹெலிகாப்டர ஓட்டிருக்கான். அப்ப இன்னொருவர் யாராவது அதை ஆப்பரேட் பண்ணிருக்கணும் இல்லையா, ஏன்னா பையன் ஒரே ஆளா ரெண்டையும் செய்ய முடியாது. ரெண்டாவது விஷயம் இது, ரொம்ப முக்கியம். வேலை செய்யறவங்க பல பேர் பையன பாத்திருக்காங்க, ஆனா தான் யாரையும் பாத்ததில்லைன்னு பெரியவர் அடிச்சு சொன்னார். அதுவும் இவர் வேலை செய்யற இடத்துலேயே, மேனேஜர் பார்த்ததா சொல்லியும் ஒத்துக்க மாட்டேங்கறார்னா அது சந்தேகத்தை கிளப்பியது. நேத்து ஹாரர் ஹவுஸ்ல வெளியாள் ஏழெட்டு பேர் பார்த்திருக்காங்க, இவர் அந்த இடத்துக்கு பக்கத்திலேயே இருந்தும் அப்பவும் யாரையும் பாக்கலைன்னுதான் சொன்னார். உளவியல் ரீதியான க்ளூன்னு இதை வெச்சுக்கலாம்னு ஆத்தர் சொல்றார்’

முதல் நீச்சல் குளத்தை வந்தடைந்திருந்தார்கள்.

‘இன்னொரு க்ளு இருக்குல ஸார்’

‘…’

‘ரெண்டு சாப்பாட்டு பொட்டலம் வந்ததே. ஒரே ஆளுக்கு ரெண்டு எதுக்கு, அதுவும் வயசானவர் புல் கட்டு கட்ட வாய்ப்பில்லையே. அது தான் உங்களுக்கு முக்கியமமான க்ளூஇல்லையா ஸார்’

‘யோவ், எப்படியா அத கண்டு பிடிச்ச’

‘நானும் ஷெர்லாக் ஹோல்ம்ஸ் படிச்சிருக்கேன் ஸார்’

‘சரி, அந்த ஷெர்லாக் ஹோல்ம்ஸ் கதைய பத்தி வேற எதுவும் பேச வேண்டாம். அது நுட்பமான க்ளூன்னு ஆத்தர் நெனச்சாருய்யா..’ என்று எக்ஸ் சொல்லிக் கொண்டிருக்கும்போது அதீத ஒலியில் பாடலொன்று ஒலிக்க ஆரம்பிக்க, நீச்சல் குளங்களில் இருந்தவர்கள் வெளியேறி, திறந்த வெளி ஷவரை நோக்கி ஓடினார்கள். தொந்தி மனிதர் தொப்பை, தொடை, மேலுடம்பு என பாகங்களை தனித் தனியாக அசைத்துக் கொண்டு செயற்கை மழையில் நனைந்தபடி நடனமாட ஆரம்பித்தார்

‘எங்கய்யா சாப்பிடலாம், ராம் இன்டர்நேஷனலா இல்ல சற்குருவா?’

‘ஸார் எவ்ளோ சீக்கிரமா பிரச்சனைய தீர்த்திருக்கோம், அத இப்படியா     கொண்டாடுறது. நம்ம கதைதான் ரொம்ப சாத்வீகமா இருக்கு, சாப்பாடாவது…’

‘சரி காரை ரெஸ்டாரண்டுக்குப் போவோம், இல்ல பஞ்சாபி தாபா’

ஷவரை கடக்கும்போது ‘காட்ஸ் இன் ஹிஸ் ஹெவன் எவ்ரிதிங் இஸ் ரைட் வித் த வர்ல்ட்’ என்றார் வய்.

‘என்னய்யா திடீர்னு சம்பந்தம் இல்லாம, அதுவும் தப்பா வேற சொல்ற, அது ஆல்ஸ் ரைட் வித் த வர்ல்ட்’

‘ஒரு வார்த்தைதான ஸார் மாறியிருக்கு, ஆனாலும் இப்ப நமக்கு பொருந்துதே. இன்னொரு கேஸ ரொம்ப சீக்கிரம் சால்வ் பண்ணிட்டோம், தாத்தாவோட பிரச்சனை தீர்ந்திடுச்சு, இனி தீம் பார்க்ல பேய் இருக்காது, இங்க வர ஜனங்க ஜாலியா இருக்கலாம், அங்க பாருங்க ஷவர் டான்ஸ்ல என்னமா கூத்தடிக்கறாங்க, நாமளும் நல்லா மூக்கு முட்ட வெட்டப் போறோம், பஞ்சாபி தாபால பட்டர் சிக்கனும் லஸ்ஸியும் செம காம்பினேஷன். எல்லாம் சுபம் இல்லையா’

எக்ஸ் எதுவும் சொல்லாமல் வர, சில கணங்கள் கழித்து வய், ‘தன்னோட புனைவுகளுக்கு இலக்கிய அந்தஸ்து கிடைக்கணும்னு ஆத்தர் ரொம்ப ஏங்கறார். இலக்கிய மேதைகளின் வரிகளை கதைல பொருத்தமா சேர்த்தா அப்படியொரு அதிசயம் நடக்கும்னு ஒரு எண்ணம் அவருக்கு. அதனால குடுக்கற டயலாக்க சொல்லிட்டுப் போவோம் ஸார், நம்மால முடிஞ்ச உதவி. மனுஷன் என்னலாமோ ட்ரை பண்றார் பாவம்.’

பதிலடி – அரிசங்கர் சிறுகதை

அரிசங்கர்

ஐய்யனாருக்கும் முதலாளிக்கும் ஆகாது என்று பழனிக்கு வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் கழித்தே தெரிந்தது. தன்னை வேலைக்குச் சேர்த்ததும் ஐய்யனாரை சீக்கிரம் கணக்கு முடிக்கத்தான் என்று தெரிந்துகொண்டான். இதை ஏதோ உளவறிந்தெல்லாம் அவன் கண்டுபிடிக்கவில்லை. ஐய்யனார் இல்லாதபோது முதலாளியே வருவோர் போவோரிடமெல்லாம் சொல்லியதுதான். முதலாளியின் பல நண்பர்கள் கடைக்கு வந்து பலமணி நேரம் முதலாளியிடம் பேசிக்கொண்டிருப்பார்கள். வியாபாரமெல்லாம் பெரிசாக ஒன்று இருக்காது. அது வெறும் அரிசிக்கடைதான். முதலாளி ஒரு பொழுதுபோக்குக்குதான் இதை நடத்துகிறார் என்று பழனி நினைத்தான்.

பழனிக்குத் தெரியவில்லை, ஐய்யனார் நல்லவனா, கெட்டவனா என்று. அவன் வேலைக்கு என்று வரும்போதே ஐய்யனாருக்கு நிச்சயம் தெரியும் தனக்கு மாற்றாகத்தான் புதிதாக ஒரு ஆள் வந்துள்ளான் என்று. இருவருக்கும் நான்கு அல்லது ஐந்து வயது வித்தியாசம் இருக்கும். பழனிக்கு 17 வயது. கொஞ்சம் சதைப்பிடிப்பான உடல். நல்ல உயரம். ஆனால் ஐய்யனாரோ நல்ல ஒல்லியான உடலுடையவன். ஆனால் நல்ல பலசாலி. இருபத்தஞ்சி கிலோ அரிசி மூட்டையை அவன் தூக்கிச் செல்வதைப் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். மூட்டையைத் தூக்கி தோளில் போட்டுக் கொள்வான். ஆனால் அதைப் பிடித்துக் கொள்ளமாட்டான். அதைத் தோளில் வைத்துக்கொண்டே சிரித்துக் கொண்டு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பான். அப்படி ஒன்று அவன் தோளில் இருக்கும் உணர்வே அவனுக்கு இருக்காது. பழனி வேலைக்கு வந்ததும் முதல் இரண்டு நாள் அவன் பழனியிடம் எதுவுமே பேசவில்லை. மூன்றாம் நாள் மதியம் முதலாளி இல்லாத நேரம் பார்த்து அவன் பழனியிடம் பேச்சு கொடுத்தான். அவன் நிலையையும் குடும்ப கஷ்டத்தையும் அறிந்து அவனிடம் பிறகு சகஜமானான்.

முதலாளி ஐய்யனாரை பற்றி சொல்லும் பெருங்குறை, ‘அவன் வெளியே போனால் சீக்கிரம் வரமாட்டான்’ என்பதுதான். மேலும் சமீபகாலமாக அவன் மேல் சிகரெட் நாற்றமும் சில முறை சாராய நாற்றமும் அடிப்பதாகக் கூறுவார். பழனிக்கும் தெரியும் ஐய்யனார் இதெல்லாம் செய்கிறான் என்று. ஆனால் அவன் இதுவரை எந்த வேலையையும் செய்யமாட்டேன் என்று சொன்னதே இல்லை.

ஒருநாள் மதியம் முதலாளி இல்லாதபோது திடீரென ஐய்யனார் அழ ஆரம்பித்தான். பழனிக்கு ஒன்றும் பிரியவில்லை. மெதுவாக அவனிடம் விசாரித்தான். ஐய்யனார் தன் காதல் கதையை சொன்னான். பெரிதாக எதிர்பார்த்த பழனிக்கு அந்தக் கதை சப்பென முடிந்ததில் கொஞ்சம் கடுப்புதான். அந்த வயதில் காதலிப்பதை விடக் காதல் கதையைக் கேட்பதிலேயே ஒரு அதிக விருப்பம் இருக்கும். இது ஒர தலைக் காதல். ஐய்யனார் பார்த்தான், பார்த்துக்கொண்டிருந்தான், அப்படியே இருந்துவிட்டான். அந்தப் பெண்ணுக்கு திருமணம் முடிந்துவிட்டது. அவ்வளவுதான் கதை. இதற்கு இவன் இவ்வளவு அலம்பல் செய்கிறானா என்று பழனி சற்று இளக்காரமாகக் கூடநினைத்தான். ஆனால் அதை காட்டிக்கொள்ளவில்லை.

வீடுகளுக்கு அரிசியைக் கொண்டுபோய் கொடுக்க பழனியே அதிகமாகப் போக ஆரம்பித்தான். முதலாளி ஐய்யனாரை அனுப்பவில்லை. அவனை வேலையை விட்டு அனுப்ப அவர்   நாள் பார்த்துக் கொண்டிருந்தார். அது ஐய்யனாருக்கும் தெரியும். இங்கிருந்து போனால் அவனை வேலைக்கு எடுத்துக் கொள்ள பல கடை முதலாளிகள் காத்திருந்தார்கள். அவன் வேலை அப்படி. ஆனால் அவன் அந்தக் கடையிலேயே ஒட்டிக்கொண்டிருக்கக் காரணம் அந்தப் பெண்தான். அவள் தினமும் அந்த வழியாகத்தான் வேலைக்குச் செல்வாள்.

அன்று மதியம் ஐய்யனார் சாப்பிட்டுவிட்டு வந்ததும் முதலாளி சாப்பிட புறப்பட்டார். வழக்கம் போல பழனி   அரிசி மூட்டை மேல் அமர்ந்திருந்தான். ஐய்யனார் முதலாளி இருக்கையின் அருகில் இருந்த எஃப்.எம் ஐ இயக்கிவிட்டு வந்து ஒரு மூட்டையின் மீது அமர்ந்தான். பழனி சோகமாக இருப்பதைப் பார்த்து, “என்னடா” என்றான்.

அவன் பதில் எதுவும் சொல்லவில்லை. அமைதியாகப் பாட்டுக்கேட்டுக்கொண்டு பேப்பர் படிக்க ஆரம்பித்தான். சிறிது நேரம் கழித்து கொஞ்சம் கடுப்பாக பழனியிடம், “டேய்… என்னானு கேக்கறன்ல…” என்றான்.

பழனி சொல்ல ஆரம்பித்தான். அவன் சோகமாகச் சொல்கிறானா அல்லது கோவமாக சொல்கிறானா என்று ஐய்யனாருக்கு புரியவில்லை.

“அண்ணே, நீங்கச் சாப்பிடப் போனதும் ஒரு போன் வந்தது. முதலாளி வெங்கட்டா நகர்ல ஒரு வீட்டுல போய் அரிசி கொடுத்துட்டு வாடானு சொன்னாரு.”

“எது அந்த ரோஸ் அப்பார்ட்மெண்ட்டா” என்றான் ஐய்யனார்.

குனிந்து கொண்டிருந்த பழனி இப்போது நிமிர்ந்து ஐய்யனாரை பார்த்து, “ஆமா” என்றான்.

“அப்பறம்” என்றான் ஐய்யனார்.

“நான் கஸ்டப்பட்டு அஞ்சி மாடி மூட்டைய தூக்கினு போய் அந்த வீட்டுப் பெல்ல அடிச்சன். கத துறந்தவரு என்ன பாத்துட்டு உள்ள கொண்டுவந்து போடுன்னாரு. நான் போய் சமையல் ரூம்ல வெச்சிட்டு திரும்பறன், அந்த வீட்டம்மா என்ன மேலயும் கீழயுமா பாத்துட்டு அப்பறம் கதவ துறந்தவர பாத்து, ‘அவாளெல்லாம் ஏன் உள்ள விடறேள், சாயங்காலம் பூஜைக்கு வீட்ட முழுக்க காலைலதான் கழுவி விட்டன். இப்போ ஏன் எனக்கு ரெண்டு வேலை வைக்கறேள்னு’ திட்டனாங்க. அவங்க திண்றதுக்குதான நான் அரிசி எடுத்துனு போனேன். அதுக்குக்கூட அவங்க வீட்டுக்குள்ள நாம போகக்கூடாதா?” என்றான் பழனி.

“இத முதலாளி கிட்ட சொன்னியா?” என்று கேட்டான் ஐய்யனார்.

“அவருகிட்ட சொல்லி என்ன ஆவப்போவுது, சொன்னாலும் அவர் இன்னா சொல்ல போறாரு ‘அவங்க சொல்றதெல்லாம் நீ ஏண்டா காதுல போட்டுக்குற, நமக்கு வியாபாரம் தான் முக்கியம்னு’ சொல்லுவார்” என்றான்.

சத்தமாகச் சிரித்த ஐய்யனார், “ஒரே மாசத்துல அந்தாள புரிஞ்சிக்கினடா நீயி” என்றான்.

அவனைக் கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்த ஐய்யனார், “சரி வுடு நாம் பொழப்பதான் பாக்கனும், காசு இல்லாதவனே ஜாதி வெறி புடிச்சி அலையறான். அவன் காசு இருக்கறவன் சொல்லவா வேணும். எல்லா முதலாளியும் காசு இருக்கறவனுக்குதான் கால கழுவுவானுங்க. வேலை செய்யறவன பத்திலாம் அவனுகளுக்கு கவலையே இல்ல” என்றான்.

ஆனால் பழனி அமைதியாகவே இருந்தான். அவனை சமாதானப்படுத்தும் விதமாக ஐய்யனார் பேசினான்.

“நாமதான் இவன் வேலைய விட்டு தூக்கிடுவானோன்னு பயந்துகினே இருக்கோம். ஆனா அவனுகளுக்கு நம்மள விட்டா நாதியில்ல. ஏன் என்னைய எடுத்துக்கோ, என்ன அனுப்பனும்ன்னுதான் உன்னைய வேலைக்கு வெச்சான். என்ன அனுப்பிட்டானா சொல்லு. ஏன் தெரியுமா, அவனுக்கு உன் மேலையும் சந்தேகம், நீ இருப்பியா ஓடிடுவியான்னு. நான் சொல்றதுலாம் ஒண்ணுதான் எவனையும் நம்பாத. உன் உழைப்ப மட்டும் நம்பு” என்றான்.

பழனி அமைதியாகவே இருப்பதைக் கண்ட ஐய்யனார் சற்று எரிச்சலுடன், “இப்பன்னாடா வேணும் உனக்கு, அந்த வீட்டுக்காரன ஓடவுடனும் அவ்வளவோதான, அடுத்த மாசம் வரட்டும் நான் பாத்துக்கிறன்” என்றான்.

பழனிக்கு உண்மையாகவே வேலையை விட்டுப் போக வேண்டும் போல்தான் இருந்தது. உடனடியாகச் செல்ல முடியாது. சேர்த்து விட்டவருக்குப் பதில் சொல்ல வேண்டும். பிறகு அவரிடம் உதவியும் கேட்க முடியாது. பல்லைக் கடித்துக்கொண்டு கொஞ்ச நாள் ஓட்ட வேண்டியதுதான் என்று முடிவெடுத்தான். ஐய்யனாரும் சில நாட்களாக முன்பு போல் இல்லை. ஒழுங்காக இருந்தான். முதலாளிக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஐய்யனாரை போன்ற ஒரு வேலைக்காரனை விட்டுவிட எந்த அறிவுள்ள முதலாளியும் விரும்பமாட்டான்.

ஒரு மாதம் ஓடியது. ஒரு நாள் மதியம் முதலாளி சாப்பிடக் கிளம்பும் நேரம் போன் அடிக்க, அதை எடுத்த முதலாளி வழக்கம் போல் வழிந்தார். அவர் அப்படி வழிந்தால் எதிரில் பேசுவது வாடிக்கையாளர் என்று புரிந்துகொள்ள வேண்டியது தான். “சரிங்க”

“………….”

“உடனே அனுப்பிடறன்”

“……………………………………….”

“அது பரவாயில்லங்க, போன தடவ குடுத்த அதே அரிசியே அனுப்பறன்”

“…………………………”

“இதோ பையன அனுப்பிட்டன், பத்து நிமிஷத்துல அங்க இருப்பான்” என்று போனை வைத்தார். பிறகு பழனியை பார்த்து, “டேய்… அந்த ரோஸ் அப்பாட்மெண்ட்ல பொன்னி ஒரு மூட்டைய போட்டுட்டு வா, சீக்கிரம் வா” என்று சொல்லிவிட்டு மதியம் சாப்பாட்டுக்குச் சென்றார். முதலாளி மறைந்ததும் இதற்காகவே காத்திருந்தது போல் மூட்டையிலிருந்து துள்ளி குதித்தான் ஐய்யனார்.

“டேய் பழனி… நீ இரு நான் போய்ட்டு வரன்,” என்றான் ஐய்யனார்.

“வேணாம்ன்னே அவர் வந்த கத்தப் போறார்,” என்றான் பழனி.

“அத நான் பாத்துக்கிறன்” என்று சொல்லிவிட்டு அரிசி மூட்டையை எடுத்துக்கொண்டு சென்றான் ஐய்யனார். அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான் பழனி.

அரிசியை எடுத்துக்கொண்டு கிளம்பிய ஐய்யனார் நேராக ராஜா தியேட்டர் அருகில் இருந்த முனியாண்டி விலாஸுக்கு சென்று நன்றாகச் சாப்பிட்டான். சைக்கிளை அருகில் இருந்த ஒரு தெரிந்த கடையில் நிறுத்தியிருந்தான். வழக்கமாகத் தான் சாப்பிடும் அளவைவிடச் சற்று அதிகமாகவே சாப்பிட்டான். முழு வயிறு நிரம்பியதும் அங்கிருந்து நேராக ஒரு ஒயின் ஷாப்பிற்கு சென்று ஒரு பியரை வாங்கி வேகமாகக் குடித்துவிட்டு, சைக்கிளை எடுத்துக்கொண்டு குபேர் பஜார், பாண்டிச்சேரியின் பழைய பேருந்து நிலையம் எனச் சுத்திவிட்டு அந்த அப்பாட்மெண்டை அடைந்தான். இப்போது ஐய்யானாருக்கு வயிறு கொஞ்சம் வீங்கியது போல் இருந்தது. ஆனால் தெளிவாகவே நடந்தான். நேராக அரிசி மூட்டையை எடுத்துக்கொண்டு ஒரே நடையாக ஐந்து மாடி ஏறிச் சென்று அந்த வீட்டு பெல்லை அடித்தான். அந்த வீட்டுக்காரர் வந்து கதவைத் திறக்க இவன் வாசனை தெரியாமல் இருக்கத் தலையை குனிந்துகொண்டான்.

அவர் இவனிப்பார்த்து,“தம்பி இப்படி வெச்சுட்டு போப்பா” என்றார்.

இவன் நிமிர்ந்து பார்த்து அவரை ஒற்றைக்கையால் விளக்கித் தள்ளி நேராக உள்ளே நுழைந்தான்.

அவர் “தம்பி, தம்பி, டேய்” எனப் பின்னால் ஓடிவர இவன் சமையல் அறைக்குச் சென்று அரிசியை வைத்துவிட்டு தன் விரலைத் தொண்டை வரை விட்டு வாந்தி எடுத்தான். வாந்தி எடுத்துக்கொண்டு அப்படியே வாசல் வரை ஓடிவந்து வாயைத் துடைத்துக்கொண்டு அவன் பாட்டுக்கு படி இறங்கினான். வீட்டுக்குள் பெருங்கூச்சல் கேட்டுக்கொண்டிருந்தது.

ஐய்யனார் சென்று வேகு நேரம் ஆகியும் வராததால் பழனி படபடப்புடன் இருந்தான். ஏதோ விபரீதமாக நடப்பது போல் அவனுக்குத் தோன்றியது. சாப்பிடச் சென்ற முதலாளி வந்துவிட்டார். ஐய்யனாரை காணாததை கண்டு பழனியுடன், “டேய், அவன் எங்கடா” என்றார். பழனி சொன்னான். உடனே அவர் கோவமாக, “உங்கிட்ட ஒரு வேலைச் சொன்னா அத நீ செய்ய மாட்டியா? அவனுக்கு ஊர் சுத்தாம இருக்க முடியாதே. கொஞ்ச நாள் நல்லா இருந்தானேன்னு நினைச்சேன். மறுபடியும் ஆரம்பிச்சிட்டான், வரட்டும்” என்று தன் இருக்கையில் அமர்ந்து காத்திருந்தார். போன் மணியடித்தது. வழக்கமான சிரிப்புடன் போனை எடுத்த முதலாளியின் முகம் வழக்கத்துக்கு மாறாக மாறத்தொடங்கியது.

“இல்ல… சார்…”

“…………….”

“அப்படியா பண்ணிட்டான், அய்யோ”

“………………………”

“போலிஸ்லாம் வேண்டாம் சார்”

“……………………………………….”

“நான் இன்னிக்கே அனுப்பிடறன் சார்”

பழனிக்குப் புரிந்துவிட்டது ஏதோ பண்ணி விட்டான் ஐய்யனார் என்று. முதலாளி தொலைபேசியில் காலில் விழாத குறையாக பேசிக்கொண்டிருந்தார். தொலைபேசியை வைத்த முதலாளி பழனியை எரித்துவிடுவது போல் பார்த்தார். அவன் அமைதியாக இருந்தான். இருவருமே ஐய்யனாரின் வருகைக்காகச் சாலையை பார்த்தவாறு காத்திருந்தனர்.