சிறுகதை

பொம்மை

                          பானுமதி ந

‘ரோஜாவைப் போல் இருந்தான். நீலமும், பச்சையும் கலந்த கண்கள். உன்னைப் போல் முகமெல்லாம் மூக்கு. எவ்வளவு மென்மையான காதுகள்! அவன்- ‘ம்—மா’ என்று கூப்பிட்டான். அவன் எங்கே, பிரின்ஸ்? எனக்கு அவன் வேண்டும்’

இவள் இப்பொழுதெல்லாம் கனவுகளை உண்மையென நம்புகிறாள். இருள் பிரியவில்லை இன்னமும். பனிக்காற்று அதிகம் வீசுகிறது. உறைந்த நதிகளின் கரைகளில் இருந்த நாணல்கள் என்னவாயின? கூம்பி நிற்பதாக மனதில் எழும் அந்தப் பைன் மரக் கிளைகளில் விளையாடிய அணில்கள் எந்தக் கூட்டுக்குள் சென்றன? என் மூன்று வயது மகள்  உறங்கும் கல்லறையில் அவள்  எழுந்து வருவாள் எனக் காத்திருக்கிறதோ?  லில்லி மலர்களும் அவளுடனே தூங்கச் சென்று விட்டன போலும்.வெறுமையான வெண்பனிதான் இடறிக் கொண்டிருக்கிறது.

ஜான் எதைச் சொன்னாலும் கேட்காமல் பனியில் விளையாடுவான். உருட்டி உருட்டி பொம்மைகள்- ஆறு வயதில் அவனுக்கு எவ்வளவு கற்பனை! அதிகமும் குல்லாய் போட்ட ஏசு. என்னடா இது என்றால் ‘எனக்கு குல்லா, சாமிக்கும்- அவருக்கும் குளிரும்,” என்பான். முடிவில் எங்களை விட்டுப் போய்விட்டான்.

பனியில் கானலின் வெம்மையில் நாங்கள். தலையால் கவ்விக் கொண்டு வாலால் பிணைத்துக் கொண்டு எங்களை விழுங்கும் தனிமை. எலும்புகள் நொறுங்கும் வாதை. ’எஸ்தர், சற்றுத் தூங்கு’

நான் கண் விழிக்கையில் அவள் மண்டியிட்டு ஜெபித்துக் கொண்டிருந்தாள். ஒரு சோகம் கவ்வியது என்னை. தன்னிலை மறந்த அவளும் விட்டுப் போய் விடுவாளோ? நான் தலையைக் குலுக்கி சிலுவையிட்டுக் கொண்டேன்.

மிகச் சூடான சுவையான மசித்த உருளை பான் கேக் காலை உணவிற்கு. எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது- இயல்பு நிலை வந்துவிட்டதென்று. எஸ்தர் ஆலிவ் பச்சை வண்ணத்தில் காஷ்மீர கதகதப்பு ஆடைகள் அணிந்து ஒரு பூங்கொத்தினைப் போல் இருந்தாள். என்னைப் பார்த்து சிரித்தாலும் அவள் கண்களும், உதடுகளும் எதையோ சொல்லத் தவித்தன. மீண்டும் குழந்தையைப் பற்றி சொல்லப் போகிறாள் எனத் தெரிந்தாலும் தவிர்க்க முடியாதல்லவா?

‘அவன் பால் வாசனையோடு சிரிக்கிறான் பிரின்ஸ். உன்னைப் பார்த்தால் உடனே என்னைப் பார்த்துக் கொள்கிறான். நான் ‘டாடிடா’ என்றால்தான் அரை மனதோடு உன்னிடம் வருகிறான்.ஒரு சிட்டுக் குருவியைப் போல் வாயைக் குவித்து ம்-மா என்கிறான்.’

“எஸ்தர், போதும் இந்த விளையாட்டு. உண்மையை உணர்ந்து கொள்.’ என் குரலின் கடுமையும் அதன் ஆயாசமும் அவளைக் காயப்படுத்தியிருக்க வேண்டும்.

‘பிரின்ஸ், நமக்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கிறது’

‘எஸ்தர், அது உயிரோடு இருக்கப் போவதில்லையே’

‘என்னால்தானே, எல்லாமும். அதை நான்தானே சரி செய்ய வேண்டும்’

நான் சிரிக்கப் பார்த்தேன். வெறும் ஒலி தான் எழுந்தது.

‘நீ கடவுளின் வேலையைப் பார். நான் என் வேலையைப் பார்க்கிறேன்’ என்று எழ முயன்றேன்.

அவள் ஓடி வந்து என் மடியில் உட்கார்ந்து விட்டாள். ‘என்ன, இன்று ரொமான்ஸ் இப்பொழுதே!’ அவள் இதழ்களைக் கவ்விக் கொண்டேன். மிக நளினமாக விடுவித்துக் கொண்டாள்.

‘நாம் இன்று ஒரு புதிய மருத்துவரை பார்க்கப் போகிறோம் ஒரு மணிக்கு. அவர் செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்பவராம். நெட்டில் எல்லா விவரமும் பார்த்தேன்’

நான் நிஜமாகவே சிரித்தேன்.’ தெருவிற்கு இரண்டு இருக்கிறது இப்பொழுது’

‘இது வேறு, பிரின்ஸ்’

‘தத்து எடுக்கப் போகிறோமா? இல்லை, வாடகைத் தாய், தந்தை என ஏதாவது?’

‘இது மிகவும் புதியது. நம் குழந்தைக்கு மூன்று பெற்றோர்கள்’

‘என்னது? உன் கற்பனைகள் எல்லை தாண்டிப் போகின்றன, எஸ்தர், நான் உன்னையும் இழக்க விரும்பவில்லை. நீ இப்படியே இருந்தால் உன் மனம் பாதிக்கப்படும். விடு இந்தப் பேச்சை’

‘ப்ரின்ஸ், எனக்கு சரியாகச் சொல்லத் தெரியவில்லை. நாம் டாக்டர். லீயைப் பார்ப்போம். நமக்கு சரிவராதெனில் விட்டுவிடலாம். ப்ராமிஸ், இதுவும் இல்லையென்றால் நான் குழந்தையைப் பற்றி பேசவே மாட்டேன்’

சாலைகளில் பனியை அகற்றி பாதை அமைத்துக் கொண்டிருந்தார்கள். மீண்டும் பனி பொழியும், ஆனாலும் பாதை சீராக்கப்படத்தான் வேண்டும்.

டாக்டர். லீயின் க்ளினிக் அமைதியாக இருந்தது. அவரது வயதே அவரது அனுபவம் என்று சொல்லத்தக்க தோற்றம். புரியாத ஓவியங்களைப் பார்ப்பது போல் இருந்தது அவர் அறையில் மாட்டப்பட்டிருந்த ஜெனோம் சார்ட்டுகள்.

சிறு புன்னகையுடன் ஒரு கைகுலுக்கல். இரண்டு மணி நேரம் எங்களின் பழைய மருத்துவ அறிக்கைகளைப் பார்வையிட்டார்.

‘இரு குழந்தைகளை இழந்த உங்களுக்கு என் அனுதாபங்கள். இம்முறை நாம் செய்யப் போவது உங்களுக்கு ஒரு வரமென அமையலாம். ஆமாம், ஏன் மூவர் மூலம் செயற்கைக் கரு உருவாக்கக் கூடாது?’

‘மிஸ்டர். லீ?’

‘1990 முதல் இது ஒவ்வொரு வகையாக நடந்து கொண்டிருக்கிறது. அமெரிக்காவிலே எம்ஆர்டி வரையறைக்கு முன்னால் 17 குழந்தைகள் இம்முறையில் பிறந்துள்ளனர். அதில் இன்றைக்கு 13 குழந்தைகள் பற்றி இரகசியமான விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆராயப்படுகின்றன. ஆனால், இம்முறை இன்னமும் சட்ட அங்கீகாரம் பெறவில்லை.  இம்முறையில் கரு தரிப்பது தாய்க்கு ஆபத்தில்லை’

‘மிஸ்டர். லீ,எங்களுக்குத் தலைகால் புரியவில்லை. நான், எஸ்தர்  இருவர் தானே, மூன்று என்றால்?’

‘எஸ்தரின் ஊண் குருத்துகள் (mitochondria) பழுதாகி உள்ளன. இது அவருக்கு எந்த உடல் குறைபாட்டையும் ஏற்படுத்தாது. அவரது 37 ஜீன்களில் ஏற்படும் தன் பெருக்கமானது அவரது குழந்தைகளுக்கு கடத்தப்படுவதால், புதிய உயிர்கள் செல் சக்தியைப் பெற இயலாது சிறு வயதிலே இறந்து விடுகின்றனர்.’

‘ஆம், எங்கள் மருத்துவரும் அதைச் சொன்னார்’

‘இதைச் சரி செய்வதற்குத்தான் மூன்றாவது நபர்’

எஸ்தர் முதல் முறையாக, ‘எப்படி?’ என்றாள்.

‘உங்கள் கரு முட்டையின் மையம் ஸ்பிண்டில் நுட்பம் மூலம் அணுகப்படும். அதன் திசுக்கள், ஊண் குருத்துகள் மட்டும் நீக்கப்பட்டு உங்கள் கரு மையம் கொடையாளரின் மையக் கருவிற்குள் செலுத்தப்படும். உங்களுடைய மரபணு மாறாது. கொடையாளரின் நலமான ஊண் குருத்துக்கள் இப்பொழுது உங்கள் கரு முட்டையில். பிரின்ஸின் விந்தினை இணைத்து கருமுளையை உங்கள் கர்பைப்பையில் வைத்துவிடுவோம். கரு வழக்கம் போல் வளரும். உங்கள் வாரிசு, உங்கள் குறைபாடில்லாமல்.’

‘இம்முறையில் பிறக்கும் குழந்தைகள் இயல்பாக இருக்குமா? அதாவது மனிதனாக?’ என்றேன் நான்.

‘சில்லி கொஸ்டின். மனிதக் கரு, மனித விந்து. பின்னர் பிறப்பது என்னவாக இருக்கும்?’

‘இதற்கு பதிலாக நாம் ஏன் வேற்று கருமுட்டையைப் பயன்படுத்திப் பார்க்கக்கூடாது?’

‘செய்யலாம். உங்கள் மனைவியின் அழகோடும், ஆற்றலோடும் உங்களுக்கு வாரிசு வேண்டாமா?’

‘எங்களுக்கு சிறிது கால அவகாசம் வேண்டும்’

‘நாளைக்குச் சொல்லுங்கள்’ என்றார் லீ சிரிக்காமல்.

என்னால் தீர்மானிக்க முடியவில்லை. ஆபத்தில்லையென்றால் இந்த செயல்பாட்டிற்கு ஏன் சட்ட அனுமதி இல்லை? யூகேயில் அனுமதிக்கப்பட்டதாக  லீ சொன்னாரே. இதை ஒத்துக் கொண்டு அவளையோ, குழந்தையையோ அல்லது இருவரையுமோ இழந்து விட்டால்? நான் அவளுக்குச் சொல்ல காரணங்கள் தேடிக்கொண்டிருந்தேன். அவள் அமைதியாக குழந்தைக்கான காலுறை செய்து கொண்டிருந்தாலும் அவளும் சிந்தனையில் இருப்பது தெளிவாகத் தெரிந்தது.

‘பிரின்ஸ், உனக்கு கேத்ரினை நினைவு இருக்கிறதா?’ என்றாள்

‘உன் கஸின் தானே, அவளுக்கு என்ன இப்போ?’

‘அவள் வாடகைத் தாய் ஒருத்தி மூலம் குழந்தை பெற ஏற்பாடு செய்து கொண்டாள். ஆனால், பார் அந்த பெண்ணிற்கு எதிர்பாராத விதமாக ஒரு விபத்து ஏற்பட்டு இவளின் கனவும் அழிந்தது.’

‘ஏதோ ஒருத்தருக்கு நடந்ததை வைத்து இப்படிப் பேசுவது என் புத்திசாலி மனைவிக்குப் பொருந்தவில்லை’

‘பொய்ப் புகழ்ச்சி. நான் சொல்வது ரிஸ்க் என்பது எதிலும் இருக்கிறது’

‘ஆனால், அதைத் தவிர்க்கவும், இல்லையெனில் அதன் விசையைக் குறைக்கவும் நாம் முடிந்ததை செய்கிறோம் அல்லவா?’

‘இன்று காலை உணவு எப்படி இருந்தது?’ என்றாள் சம்பந்தமில்லாமல்.

குழந்தை, ட்ரீட்மென்ட் இதை விட்டுவிட்டு இவள் ஏதோ பேசுவது மகிழ்ச்சியாக இருந்தது. ’டேஸ்டி, வெரி டேஸ்டி’

‘மதியம் வெளியில் சாப்பிட்ட லன்ச்?’

‘அது சுமார்தான்.’

‘நல்ல உணவகம். மேஜைகள் சிறப்பாக செட் செய்யப்பட்டிருந்தன. விலையும் அதிகம், மெனுவும் அதிகம். ஆனாலும் நம் பான் கேக்கிற்கு ஈடில்லை’ என்றாள் சிரித்துக் கொண்டே.

இவள் எங்கே வருகிறாள் என்று புரியாமல் பார்த்தேன்.

‘பணம் கொடுத்து பொருள் வாங்குகிறோம், ஆனால் அதை நம் பக்குவத்தில் செய்கிறோம். நமக்கே நமக்கென. அதில் அன்பு கலந்து விடுகிறது. பணம் கொடுத்து வெளியில் உண்பது நம் பக்குவத்தில் இருப்பதில்லை’

‘இது பொதுவான வாதம்’

‘பிரின்ஸ், என் உடல் நலமாக இருக்கிறது. என் கர்ப்பைப்பை நம் உயிர் தாங்கும் ஒரு அனுபவம், அது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. கருமுளையின் ஒவ்வொரு வளர்ச்சியும் என்னுள் திறக்கும் கதவுகள் தேவன் கோயிலின் வாசல்கள். நான் உன்னை நினைத்துக் கொண்டே அதனுடன் பேசுவேன். என் பாடல்களை இரகசியமாக சொல்லித் தருவேன். கடவுள் நம் பங்கில் கொடுக்க நினைப்பதை வாங்க கைகளை ஏந்துவோம்’

‘உணர்ச்சிகரமாக இருக்கிறது. எதற்கும் நாம் நம் பாதிரியாரைக் கேட்போம். இதில் மதத்திற்கு எதிரான, இயற்கைக்கு மாறான செயல் இருக்கிறது’ என்றேன்.

‘கடவுள் மனிதனுக்கு இன்பங்களை மறுப்பதில்லை. ஆனால், கடவுளைக் காட்டுவதாகச் சொல்லும் சில மனிதர்கள் மறுக்கக்கூடும்’ என்றாள் அமைதியாக.

எனக்கு அதிர்ச்சிதான். எந்த ஞாயிறும் தேவாலயம் தவறாதவள், இரு வேளை ஜெபிப்பவள், பிரசங்கக் கூட்டங்களில் கண்களில் ததும்பும் நீருடன் இருப்பவள், இவள் தேவ மைந்தனுடன் வசித்திருக்கிறாள். நான் அறியா எஸ்தர்.

நாங்கள் டாக்டர் லீயைப் பார்த்தோம்.

ரோஜாவைப் போல் இருந்தான் எங்கள் மகன்.

 

 

 

 

வேலை இல்லா பட்டதாரி

ஜிஃப்ரி ஹாஸன்

வேலையில்லா  பட்டதாரியாக வாழ்வைத் தொடங்கி  நடத்திச் செல்வது என்று அப்துல் காதர் முடிவெடுத்தபோது அது இவ்வளவு கடினமானதாக இருக்கும் என அவன் எண்ணி இருக்கவில்லை. அரசாங்கத்திலிருந்தவர்கள் எல்லா ஊழல்களையும் புரிந்து தனது குடும்பத்தின் சொத்துகளைப் பெருக்குவதில் காட்டும் அக்கறையை வேலை இல்லாத பட்டதாரிகளின் தொழிற் பிரச்சினையில் எடுத்துக் கொள்வதாக இல்லை. அதனால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவனாகத்தான் அப்துல் காதரும் இருந்தான்.  வேலை இல்லா பட்டதாரியாக வாழ்வதில் நிரம்பி இருந்த கொடுமைகளின் கனதி அவனை உயிருடன் உளவியல் சித்ரவதை செய்வதாக இருந்தது.

  அப்துல் காதருக்கு தன்னை ஒரு வேலை இல்லா பட்டதாரியாக உணர்த்தும் மகத்தான பணியை முதன் முதலில் அவனது தந்தைதான் தொடக்கி வைத்தார். ஆரம்பத்தில் குறிப்பாலும் பின்னர்  நேரடியாகவும் அவனது தந்தை தனது பணியை சிறப்பாகச் செய்து முடித்து விட்டிருந்தார். அதை அவனது தந்தை தன் வாயாலேயே சொல்லுமளவுக்கு இப்படிப் பொறுப்பற்றவனாக நடந்து விட்டோமே என்று அப்துல் காதருக்கும் ஒரு சிறிய வருத்தம் இருக்கத்தான் செய்தது.

வேலை இல்லா பட்டதாரி என்ற முதல் கிண்டலும் எதிர்ப்பும் இப்படி தன் வீட்டுக்குள்ளிருந்தே வெடிக்கும் என்பதை அப்துல் காதர் கனவிலும் நினைத்திருக்க மாட்டான். ஓசிச் சாப்பாடு, ஓசி ஃபேன் படுக்கை, அவ்வப்போது கொழும்புக்கு ஓசிப் பயணம், தம்பி கெட்ட கேட்டுக்கு ஓசிப் பணத்தில் புத்தகக் கொள்வனவு என ஓசி வாழ்வு தறிகெட்டு ஓடத் தொடங்கியபோது தந்தைக்கும் வேறு வழி இல்லாமல் போய்விட்டது. அப்துல் காதருக்கு இந்த ஓசி வாழ்வின் இன்பங்கள் தனது அன்றாட வாழ்வின் துன்பங்கள் என்பதை பாமரத்தனமாக உணர்த்த வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்

அப்துல் காதர் பட்டதாரியாக வெளியேறிய மறுதினமே அவன் ஒரு அரசாங்க உத்தியோகத்தனாக இருப்பான் என்பதுதான் அவனது தந்தையின் கணிப்பாக இருந்தது. அது பொய்த்துப் போன போது அப்துல்காதர் மீது அவருக்கிருந்த நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.

அப்துல் காதருக்குள்ளும் ஒரு வகையான கலகக்காரன் இருந்து கொண்டுதான் இருக்கிறான். சூடு, சொரணையில் உச்சக்கட்டத்தில் இருப்பவன். தன்னை அவமதிப்பவன் எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருந்தாலும் அவனது தொடர்புகளைச் சாகும் வரை துண்டிக்கும் போர்க் குணம் உள்ள அப்துல் காதருக்கு இந்த அவமானம் வீட்டுக்குள்ளிருந்து வெடித்தது பெரிய சங்கடமாகப் போய்விட்டது.

வேலை கிடைக்கும்வரை அப்துல் காதர் தனது தந்தையின் பரம்பரைத் தொழிலுக்குத் திரும்பி விடுவோமா என்றும் யோசித்தான். செங்கல்வாடி, சேனைப் பயிர்ச் செய்கை இதுதான் அவனது பரம்பரைத் தொழில். தனது பரம்பரைத் தொழிலை அப்துல் காதர் செய்யாமல் விட்டதற்குக் காரணம் அவனது தாய் அவனை அப்படியான தொழில்களைச் செய்யாமல் தடுத்ததுதான். ஆனாலும் அப்துல் காதருக்கு சிறிய வயதிலிருந்தே இந்தத் தொழில்களில் பரிச்சயம் இருந்ததால் அவன் அதை சிரமமானதாக உணரவில்லை.

‘டேய் உன்னட அங்க படிச்சவனுகளெல்லாம் வேல எடுத்துட்டானுகளா..?’ அப்துல் காதரின் தந்தை அவ்வப்போது பொறுமை இழந்து எத்தனை தடவை இப்படிக் கேட்டிருப்பார் என்பதை அப்துல் காதருக்கு இப்போது சரியாக கணக்கிட்டுக் கூற முடியாதுள்ளது. அநேகமாக அவரும் அவனும் வீட்டில் சந்திக்கக் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் இப்படித்தான் உரையாடல் தொடங்கும். யாருக்கும் வேலை கிடைக்கவில்லை என்பதை புள்ளி விபரங்களோடு தந்தைக்கு அப்துல் காதர் தெளிவுபடுத்துவான்.

ஊருக்குள்ளும் தெரிந்தவர்கள் காணும் போதுஎன்ன செய்றிங்க?’ எனக்கேட்டு தலையில் ஒரு பாறாங்கல்லைப் போட்டுக் கொண்டே இருந்தார்கள். இதனால் ஊருக்குள்ளும் தலை காட்டுவதை இயன்றளவு குறைக்கத் தொடங்கினான் அப்துல் காதர். ஆனால் வீட்டைச் சமாளிக்கும் விசயத்தில்தான் அப்துல் காதர் திணறிக்கொண்டிருந்தான்.  இதனால் தனது செலவுகளுக்கான பணத்தை இனித் தந்தையிடமிருந்து பெற்றுக் கொள்வதில்லை என ஒரு நாள் உணர்ச்சிவசப்பட்டு அப்துல் காதர் ஒரு முடிவு எடுத்து விட்டிருந்தான். அது அவனுக்குள்ளிருந்த அந்தக் கலகக்காரனின் திருவிளையாடல். அந்தக் கலகக்காரன் சூடு சொரணையில் உச்சக்கட்டதில் இருப்பவன். எப்பேர்ப்பட்ட கொம்பனுக்கும் வளைந்து கொடுக்காதவன்.

தனது செலவுகளுக்காக உம்மா இரகசியமாகத் தரும் பணத்தையும் பெற்றுக் கொள்வதில்லை என்ற முடிவும் அதன் ஒரு பகுதியாக இருந்தது. அதனால் சிறு  தொழில் நடவடிக்கை ஒன்றில் ஈடுபடுவது என அப்துல் காதர் முடிவெடுத்தான். அவனது ஊரிலுள்ள அப்துல் காதரின் நண்பன் ஒருவன், சிறிது காலம் அப்துல் காதருடன் ஒன்றாகப் படித்தவன். ஆசிரியர் சற்றும் எதிர்பாராத தருணமொன்றில் தனது புத்தகப் பையால் அவரின் மண்டையில் அடித்து விட்டு பாடசாலையை விட்டும் தப்பிச் சென்ற தனது பால்ய நண்பன் தற்போது சொந்தத் தோணி, வலை வைத்து ஆற்றில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவதை அப்துல் காதர் அறிந்திருந்தான்இப்போது அப்துல் காதருக்கு தனது பால்ய நண்பனை விட்டால் வேறு யாரும் உதவுபவர் இருப்பதாகவும் தெரியவில்லை. இது மாதிரியான தொழில்களில் அப்துல் காதருக்கு பப்ளிக்காக ஈடுபடுவதற்கு அவனது பட்டதாரிகௌரவமும்சற்றுத் தடையாக இருந்தது.

எனினும் தனது பால்ய நண்பனுடன் இணைந்து இரவு நேர மீன் பிடியில் ஈடுபடுவது என்ற உறுதியுடன் இருந்தான். தனது பால்ய நண்பனைச் சந்தித்து அதற்கான அனுமதியையும் அப்துல் காதர் பெற்றுக் கொண்டான். அந்தகெப்பில் பால்ய நண்பன்பார்த்தியா மச்சான் படிச்சி என்னடா கிழிக்கிற.. என்றும் கர்விக் கொண்டான். தனது இதுவரை கால ஆதங்கத்தையும் இறக்கி வைத்து விட்டதான ஆசுவாசம் அவன் முகத்தில் அப்போது தென்பட்டுக் கொண்டிருந்தது. அப்துல் காதரை சந்தர்ப்பம் பார்த்து அடித்து விட்ட திருப்தி அவன் முகத்தில் படர்ந்ததையும் அப்துல் காதர் கவனிக்கத் தவறவில்லை

அப்துல் காதரின் ஊருடன் அண்டி ஓடிய  இலங்கையின் புகழ்பெற்ற ஆறான மாதுரு ஓய ஆற்றில் இரவு ஒன்பது மணியளவில் இறங்கி தோணியில் மீன் பிடிப்பதுதான் இப்போது அப்துல் காதரின் தொழில். இதற்காக இரண்டு நாட்கள் பால்ய நண்பன் அப்துல் காதருக்கு பயிற்சி வழங்கினான். பயிற்சி நெறி முடிவில் அப்துல் காதர் துடுப்பு வலிப்பது பால்ய நண்பன் வலை வைத்து மீன் பிடிப்பது என அப்துல் காதரின் வாழ்வுப் படகு நகரத் தொடங்கியது.

ஆனால் வீட்டில் இந்த தொழில் நடவடிக்கை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. வாழைச்சேனையில் ரூம் எடுத்து எக்ஸாம் ஒன்றுக்கு அப்துல் காதர் படித்து வருவதாக வீட்டில் ஒரு நம்பிக்கை பொதுவாக நிலவி வந்தது. இந்த இரகசியத்தை பால்ய நண்பனும் தனது உயிருள்ளவரை காப்பாற்றுவதாக அப்துல் காதரின் தலையில் அடித்து சத்தியம் செய்திருந்தான்.

இப்போது அப்துல் காதருக்கு சிறிய தொகை பணம் கிடைத்து வந்தது. அதைக்கொண்டு வீட்டிலும் சிறிய வேலைகள் செய்து வந்தான். ஆனால் அதற்கு எந்த மதிப்பும் கிடைக்கவில்லை. வாப்பாவின் முகம் இன்னும் விடியவில்லை. அவரைப் பொறுத்தவரை அப்துல் காதருக்கு ஒரு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும். அது வரைக்கும் அப்துல் காதர் ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் உழைத்தாலும் அவனுக்கு மதிப்புக் கிடைக்காது. இந்த மடத்தனமான போக்கினால் அப்துல் காதருக்குள்ளிருக்கும் கலகக்காரன் ஆத்திரத்தின் உச்சகட்டத்துக்குப் போய் திரும்பி வந்தான். அந்த கலகக் காரன் சூடு, சொரணையில் உச்ச கட்டத்தில் இருப்பவன். எந்தக் கொம்பனுக்கும் வளைந்து கொடுக்காதவன்.

மீன் பிடி தொழிலில் கிடைக்கும் பணம் அப்துல்காதரின் கையில் புத்தகங்களாக மாறிக்கொண்டிருந்தது. அதற்காக அவனுக்கு மாதம் ஒருமுறை கொழும்புப் பயணம் மேற்கொள்ள வேண்டி இருந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் அவனது கொழும்புப் பயணத்திற்காக தனது பால்ய நண்பனிடம் 2 நாட்களுக்கு முன்னமே விடுமுறையை அறிவிக்க வேண்டி இருந்ததுதான். இத்தகையை சந்தர்ப்பங்களில்தான் அப்துல்காதர் தற்கொலை பற்றிச் சிந்தித்ததுண்டு. மார்க்கம் மட்டும் அதை தடை செய்யாமல் இருந்திருந்தால் அப்துல் காதர் எப்போதோ ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டிருப்பான்.

அப்துல்காதர், தான் கொழும்புக்குச் செல்வது புத்தகம் வாங்குவதற்காகத்தான் என்பதை பால்ய நண்பனுக்கு ஒரு போதும் சொன்னதில்லை. சொல்லியிருந்தால் சில வேளை தற்கொலைக்கு பதிலாக கொலையே நடந்திருக்கலாம். அதாவது  பால்ய நண்பன் அப்துல்காதரை ஆத்திரம் தாங்க முடியாமல் அடித்தே கொன்றிருக்ககூடும். இந்த அச்சம்தான் அப்துல் காதரை அவனிடம் சொல்லவிடாமல் தடுத்தது.

சிலவேளைகளில் பால்ய நண்பன் தன்னை ஒரு முதலாளி போன்று பாவனை செய்ய நினைக்கிறபோதும் அப்துல் காதருக்குள்ளிருக்கும் கலகக்காரனைக் கவனத்திற் கொண்டு அந்த எண்ணத்தை நடைமுறைப்படுத்துவதில்லை. ஏனெனில் அந்தக் கலகக் காரன் சூடு, சொரணையில் உச்ச கட்டத்தில் இருப்பவன். எந்தக் கொம்பனுக்கும் வளைந்து கொடுக்காதவன்.

000

ஆற்றின் முதுகு நிலவொளியில் பளபளத்தது. பால்ய நண்பன் நிலாக்காலங்களில் வீச்சுக்கு வருவதில்லை. ஆனால் இன்று வந்திருந்தான். இன்று அவன் வந்தது மீன் பிடிக்க அல்ல என்பதை அப்துல்காதர் நடு ஆற்றின் முதுகில் மிதந்த தோணியில் இருந்தபடி உணர்ந்தான். மீன் பிடிக்கும்போது ஆற்றிலும் வலையிலுமே பால்ய நண்பனின் கண்கள் நிலை குத்தி நிற்பதையும் மீன்கள் அகப்படாத சந்தர்ப்பங்களில் சவலால் ஆற்றின் முதுகில் ஓங்கி அடிப்பதுமே பால்ய நண்பனின் வழக்கமாக இருந்தது. இன்று எந்த மீனும் அகப்படாவிட்டாலும் எந்த சலனங்களுமின்றி ஆற்றின் அமைதியை ஒத்த ஒருவகை அமைதி பால்ய நண்பனில் ஊடுறுவி இருந்ததை அப்துல் காதர் நோட்டமிட்டான்.

ஆற்றின் முதுகில் பட்டுத் தெறித்த நிலவொளியில் அப்துல் காதரின் முகத்தை ஏறிட்ட படி பால்ய நண்பன் ஒரு முக்கிய விடயம் குறித்து அப்துல் காதருடன் பேச்சுத் தொடுத்தான்.

“மச்சான், என்ட தங்கச்சி வெளிநாட்டிலிருந்து வந்திருக்காள்றா..முதல் இருந்தத்த விடவும் இப்ப அவள் நல்ல அழகுடா மச்சான், உன்ன அவளுக்கு கலியாணம் பேசிப் பார்க்கச் சொல்லி உம்மா சொன்னாடா..”

அப்துல் காதருக்கு அந்தக் கதை இலைக்கறிச் சட்டியில் இடி விழுந்ததைப் போல இருந்தது. அப்துல் காதர் தனது வாழ்க்கைத் துணைவி படித்தவளாகவும் அவனது கனவுகளுக்கு இயைந்து கொடுப்பவளாகவும் இருக்க வேண்டும் என்பதை ஒரு இலட்சியமாகவே கொண்டிருந்தான். இலக்கியம் பற்றி, புத்தகங்கள் பற்றி, தெரியாத ஒரு பாமரப் பெண்ணால் தனக்கு ஒரு போதும் நல்ல துணைவியாக இருக்க முடியாது என்பதை அப்துல் காதர் உறுதியாக நம்பி வந்தான். தனது தந்தையைப் போல் தன்னைப் புரிந்து கொள்ளாத ஒரு மனைவியால் அவனது இலக்கியமும் கனவுகளும் கருகிப் போய்விடும் என அப்துல் காதர் கடுமையாக அஞ்சினான். பால்ய நண்பனின் சகோதரியால் அவனது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியும் என்று அவன் கொஞ்சமும் நினைக்கவில்லை.

பால்ய நண்பன் என்றுமில்லாதவாறு இந்த நிலாக் காலத்திலும் ஆற்றுக்கு வந்தது மீன்பிடிக்க அல்ல மாப்பிள்ளை பிடிக்கத்தான் என்பதை அப்துல் காதரால் உணர்ந்து கொள்ள முடியுமாக இருந்தது.

“அவளுக்கென்னடா குற, கலியாணத்த முடிச்சிட்டு வெளிநாட்டுக்குப் போய் ஊட்ல இரிக்கிற குற வேலயையும் முடிச்சிருவாள்..அதுக்குப்புறகு அவள் வெளிநாடு போக மாட்டாள்..தொழிலப்பத்தி நீ யோசிக்கத் தேவல மச்சான், வாப்பா உனக்கு ஒரு புதுத் தோணி வாங்கித் தாரெண்டும் சொல்லி இருக்காரு..”

பால்ய சினேகிதன் தனது தங்கச்சிக்கு மாப்பிள்ளை கிடைத்துவிட்டான் என்ற தீர்மானத்தை ஏற்கனவே எடுத்துவிட்டவனைப் போலவே பேசிக் கொண்டிருந்தான்.

இப்போது இருள் சூழ்ந்து கொண்டது. மேகங்கள் நிலவை மூடி இருக்க வேண்டும். தூரத்தில் மீன்கள் துள்ளும் ஓசை அப்துல் காதருக்கு துல்லியமாகக் கேட்டது. அப்துல் காதர் பால்ய சிநேகிதனை நேர் கொண்டு பாராமல் வேறு எங்கேயோ திரும்பிப் பார்த்தபடி யோசித்தான்.

அரசாங்க வேல கிடைக்கு மட்டும் இவனோட மீன் பிடிக்க வந்தா ஒரேயடியா நம்மல வீச்சு வலக்காரனாவே ஆக்கிருவான் போல இருக்கு, என்றுதான் அப்போது அப்துல் காதர் அநேகமாக யோசித்திருப்பான். அப்துல் காதருக்குள்ளிருக்கும் கலகக்காரனை இந்த இடத்தில் பேச அனுமதிக்கக் கூடாது என்பதில் அப்துல் காதர் உறுதியாக இருந்தான்.

 நடு ஆற்றில் வைத்து பால்ய நண்பனின் கோரிக்கையை ஒரேயடியாக மறுத்து விடுவது அவ்வளவு உசிதமானதல்ல என அப்துல் காதரின் உள் மனம் அவனை எச்சரித்தது. இலேசான, தற்காலிகமான ஒரு பதிலை வழங்குவது என்ற தீர்மானத்துக்கு இப்போது அப்துல் காதர் வந்துவிட்டிருந்தான்.

இப்போது நிலவொளியில் மீண்டும் ஆற்றின் முதுகு பளபளக்கத் தொடங்கிற்று. நிலவை விட்டும் மேகங்கள் விலகி இருக்க வேண்டும். பால்ய சினேகிதனின் ஊடுறுவும் கண்களில் பதிலுக்கான ஏக்கம் தெரிந்ததை அந்த மங்கலான ஒளியிலும் அப்துல் காதர் நோட்டமிட்டான்.

 ‘பார்ப்பம்என்று மட்டும் சொல்லத்தான் அப்துல் காதர் அதிகம் விரும்பினான். இருந்தாலும் அதற்கு கொஞ்சம் சமனான ஆனால் நண்பனுக்கு சற்று நம்பிக்கையூட்டக்கூடியதான ஒரு பதில் அப்துல் காதரிடமிருந்து வெளிப்பட்டது.    

வீட்டயும் கதச்சிட்டுச் சொல்றன் மச்சான்..!’

இதற்கிடையில் அப்துல் காதர் தனது எதிர்கால துணை பற்றி அதிகம் கனவுகள் கண்டவன். தற்போது ஒரு வேலை இல்லா பட்டதாரியாக அவன் இருந்தாலும் வாழ்க்கையில் எதையாவது செய்தாக வேண்டும் என்ற குறிக்கோளில் அவன் உறுதியாகவே இருந்து வந்தான். எத்தகைய சந்தர்ப்பத்திலும் அத்தகைய கனவுகளை அவன் கலைத்துவிட விரும்பியதில்லை. இதெல்லாம் பால்ய சிநேகிதனுக்கு புரியாது என்பதையும் அப்துல் காதர் நன்கறிவான். அதனால் அது பற்றி அவனுடன் அப்துல் காதர் எதுவும் பேச விரும்பவில்லை.

ஆனால் தன்னை எவ்வாறு பால்ய சினேகிதன் நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை அதற்கு மேலும் அறிந்து கொள்ள அப்துல் காதருக்குள்ளிருக்கும் கலகக்காரன் இடங்கொடுக்கவில்லை. ஒரு சாமான்ய வீச்சுவலைக்காரன் போல்தான் அப்துல் காதர் பால்ய நண்பனின் கண்களுக்குத் தென்படுகிறானா? இப்போது அப்துல் காதர் எனும் வேலை இல்லா பட்டதாரியை அவனுக்குள்ளிருக்கும் கலக்காரன் கழுத்தை நெரித்துக் கொள்ளுமளவுக்கு ஆத்திரத்தின் உச்ச கட்டத்தில் இருந்தான். ஏனெனில் சூடு, சொரணையில் உச்ச கட்டத்தில் இருப்பவன் அவன்.  

ஒரு வேலை இல்லா பட்டதாரியாக வாழ்வதில் அப்துல் காதரால் எதிர்கொள்ள நேரிட்ட மிகப்பெரிய ஒரு சோதனைக் கட்டமாக அதை அப்துல் காதர் கருதினான். நாளை இந்த வீச்சு வலைத் தொழிலுக்கு முற்றுப் புள்ளி வைப்பது என்ற உறுதியான தீர்மானத்துக்கு அப்துல் காதருக்குள்ளிருக்கும் கலகக்காரன் வந்துவிட்டிருந்தான். எவனுக்கும் வளைந்து கொடுக்காத கலகக்காரன் அவன். அநேகமாக அப்துல் காதரும் பால்ய சிநேகிதனும் வீச்சுக்கு வந்த கடைசி இரவாக அன்றைய இரவு இருந்ததை பால்ய சினேகிதன் கடைசி மட்டும் அறியாமல்தான் இருந்தான்.

மறு நாள் தனது ஊரில் வளர்ந்து சடைத்துக் கிளை பரப்பி நின்ற ஆல மரத்தின் கீழ் தன் பால்ய நண்பனைச் சந்தித்த அப்துல் காதர் அவனது திருமணக் கோரிக்கையை முற்றாக நிராகரித்தான். தனது எதிர்கால வாழ்வு பற்றியும் வாழ்க்கைத் துணை பற்றிய கற்பனைகளையும் பால்ய நண்பனிடம் ஒரு நாகரீகத்துக்காக அப்துல் காதர் பகிர்ந்து கொண்டான். பால்ய நண்பனோ இதுவெல்லாம் நடக்கிற காரியமா என்பதைப் போல் அலட்சியமாக எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.

000

திருமணப் பேச்சுவார்த்தையால் தன் பால்ய சிநேகிதனின் நட்பையும் அவன் புண்ணியத்தால் கிடைத்த வீச்சு வலைத் தொழிலையும் இழந்துவிட்ட அப்துல் காதரை திருமணம் என்ற பேய் விடாது தொடர்ந்தும் விரட்டிக் கொண்டே இருந்தது. வேலை இல்லா பட்டதாரியாக ஒரு மாதிரியாக தட்டுத்தடுமாறி நகர்ந்து கொண்டிருந்த அவனுக்கு வீட்டிலும் கலியாணப் பேச்சுகள் களை கட்டத் தொடங்கி இருந்தன. அவனது பெற்றோருக்கோ, உறவினர்களுக்கோ வாழ்க்கைத் துணை பற்றிய அவனது கனவுகளை அறிந்து கொள்ளத் தெரியாமலிருந்தது. அது பற்றி அவன் கவலைப்படவுமில்லை. அப்படி எல்லாம் யோசிக்குமளவுக்கு அவர்கள் படித்தவர்களோ, புரிதலுள்ளவர்களோ இல்லை என்பதை அப்துல் காதர் நன்கறிவான்.  அப்படி திருமணமும் நடந்து விட்டால் பால்ய சிநேகிதனும் இனி ஆற்றுக்கு கூட்டிச் செல்லமாட்டானே என்ற படபடப்பு அப்துல் காதரை அலைக்கழித்தது. அவனது தந்தையும் அப்துல் காதரை திருமணம் முடித்துக் கொண்டு வீட்டைக் காலி செய்யும் யோசனையை அண்மைக்காலமாக தொடர்ச்சியாக முன்வைத்து வரத் தொடங்கி இருந்தார். அதனை வேலை இல்லா பட்டதாரியான அப்துல் காதர் தனது வாழ்வில் தனக்குக் கிடைத்த மிகப்பெரிய அவமானமாகக் கருதினான்.

எனினும் இந்த சூழலிலிருந்து தப்பிச் செல்வதற்காக தாயுடன் மட்டும் இரகசிய ஒப்பந்தமொன்றைச்  செய்து கொண்டு வெளியூருக்குத் தப்பிச் செல்வது பற்றியும் அப்போது அப்துல் காதருக்கு ஒரு யோசனை வந்து தொலைத்தது.

இப்படியாக வேலை இல்லா பட்டதாரியான அப்துல் காதரின் வாழ்வு உள் வீட்டில் நாறிக் கொண்டிருந்தாலும் அவனது அயல் வீட்டுச் சாச்சியின் தயவால் அக்கம் பக்கத்தில் சூடு கிளப்பிக் கொண்டுதான் இருந்தது. வருவோர் போவோரிடமெல்லாம் அப்துல் காதரின் அருமை பெருமைகளை கொஞ்சம் மிகைப்படுத்தி அள்ளி வைப்பதுதான் அவரின் ஒரே பொழுது போக்காக இருந்தது. இப்படித் தூர இடம் சென்று படித்துப் பட்டம் பெற்று வந்தும் எதுவுமே படிக்காத பக்கத்து வீட்டுச் சாச்சியின் ஒரே பொழுது போக்குப் பொருளாக தான் ஆகிவிட்டோமே என்ற வெட்கம் அப்துல் காதரை மிக மோசமாக வாட்டத்தான் செய்தது. இருந்தாலும் அதை அப்துல் காதர் வெளிக்காட்டிக்கொள்ள விரும்பவில்லை. காரணம் வேலை இல்லா பட்டதாரி என்ற அவனது சமூக அடையாளத்தை மறைத்துக் கொண்டு தன்னையும் ஒரு படித்த மனிசனாக ஊரில் காட்டிக்கொள்ள அந்தப் புகழுரைகளை அனுமதிப்பதைத் தவிர வேறு வழிகளும் அவனுக்கிருக்கவில்லை.

மச்சி நம்மட அத்துக் காதன்ட படிப்பு இந்த ஊர்ல ஆரும் படிக்கலயாம் மச்சி.. முஸ்லிம் ஆக்கள்ளேயே மூணு பேருதான் இந்தப்படிப்பு படிச்சயாம். அதில ஒண்டு நம்மட அத்துக் காதனாம்

பேன் பார்த்துக் குத்திக் கொண்டே சாச்சி காதர் புராணம் பாடுவது வீட்டுக்குள் கவட்டுக்குள் கைவைத்துக் கொண்டு ஓசிப் பேன் காற்றில் ஒய்யாரமாக படுத்துக் கிடக்கும் அப்துல் காதரின் காதுகளிலும் விழுந்து கொண்டுதானிருந்தது.

மெய்தானா மச்சி அப்ப மத்த ரெண்டு பேரும் எங்கயாம்?’ பேன் பார்க்க வந்த அயல் வீட்டுப் பெண் சாச்சியின் புகழுரையை ஐயத்துடன் நம்புவது போல்தான் அப்துல் காதருக்குப் பட்டது. எதற்கும் அவர்கள் வெளியேறிச் செல்லும் வரைக்கும் தான் வெளியேறிவிடக்கூடாது என்ற உறுதியான முடிவை அப்துல் காதரும் அப்போது எடுத்துவிட்டிருந்தான்.

000

புறக்கணிப்பும் அவமானமும் அப்துல் காதரை கடுமையாக சிதைக்கத் தொடங்கின. திருமணத்தில்கூட அவன் அதுவரை கண்டு வந்த கனவுகளுக்கேற்ற ஒரு பெண்ணைத் தெரிவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருந்தான். வேலை இல்லா பட்டதாரிக்கு கனவுகள் தேவையில்லை. இலட்சியங்கள் தேவையில்லை என சில நாட்களாக அப்துல் காதர் அரற்றத் தொடங்கி இருந்த ஒரு நாளில் யாருக்கும் தெரியாமல் அப்துல் காதருக்குள்ளிருந்த கலக்காரன் தற்கொலை செய்துகொண்டான். அந்தக் கலகக்காரன் சூடு, சொரணையில் உச்ச கட்டத்தில் இருப்பவன். எந்தக் கொம்பனுக்கும் வளைந்து கொடுக்காதவன்.

எல்லா வாயில்களும் தனக்கு மூடப்பட்டு விட்டிருப்பது போல் அப்துல் காதர் உணர்ந்தான். வேறு வழியின்றி மீண்டும் பால்ய சிநேகிதனுடன் வீச்சுக்குச் செல்வது என்ற முடிவை அப்துல்காதர் எடுத்து விட்டிருந்தான். இன்று மாலை அவனைச் சந்தித்து தனது வருகையை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினான். பால்ய சிநேகிதனும் வேறு ஒரு உதவியாளரை சேர்த்திருக்காதிருக்க வேண்டும் என அப்துல் காதரின் உள் மனம் இறைவனைப் பிரார்த்தித்தது. பால்ய நண்பனைச் சந்தித்து அப்துல் காதர் தனது விருப்பத்தைச் சொன்ன போது பால்ய நண்பனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

 ‘வா மச்சான் எனக்குத் தெரியுண்டா நீ சொன்னதெல்லாம் நடக்காதெண்டு..ராவைக்கு நாம வீச்சுக்குப் போவம்..“

தனது தொழிலுக்கு உதவியாளன் கிடைத்து விட்ட சந்தோசத்தை விடவும் தனது தங்கைக்கு ஒரு மாப்பிள்ளை கிடைத்துவிட்ட மகிழ்ச்சிதான் பால்ய நண்பனின் முகத்தில் அப்போது படர்ந்து கொண்டிருந்ததை அப்துல் காதர் அவதானித்தான். அப்துல் காதருக்குள்ளிருக்கும் கலகக்காரன் மட்டும் இருந்திருந்தால் நிச்சயமாக அவன் அதை சகித்துக் கொண்டிருக்க மாட்டான் என்பதை அப்துல் காதர் நன்றாகவே அறிந்திருந்தான்.   

 

பாதர் என்ன பண்றார்?

காலத்துகள்

முழிப்பு தட்டியவுடன் தலையணையில் இருந்த கோழை குமட்ட,   புரண்டு திரும்பும்போது தோள் வலித்தது, கையில் வரி வரியாக பாயின் அச்சு.  அப்பா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தார், மணி பார்த்தான்,  ஏழரை. பாயைச் சுருட்டும்போது முனகச் செய்த முதுகுப் பிடிப்பு சரியாக இன்னும் பத்து பதினைந்து நிமிடங்களாகும்.

சமையலறைக்குள் சென்றவனிடம் பல் விளக்கும்படி சைகை செய்தார் அம்மா. வீட்டின் பின்புறச் சுவற்றில் அமர்ந்தபடி நாவில் எஞ்சியிருந்த க்ளோஸ்ஸப் சுவையுடன் டிக்காஷனின் கசப்பு கலப்பதை அப்போதே கூச ஆரம்பித்திருந்த கோடை வெய்யிலில் ருசித்துக் கொண்டிருக்கும்போது மெல்லிய  குரலெழுப்பியபடி அருகில் வந்து உரசி நின்றது அலமேலு. கொஞ்சம் காப்பியைச் சுவற்றில் ஊற்ற, அதைக் குடித்துவிட்டு மீசை இழைகளைச் சுத்தம் செய்தபின் வெண்ணிற உடலை வளைத்து சிறிய பிங்க் நிற நாவால் உடலெங்கும் சுத்தம் செய்துவிட்டு நீட்டிப் படுத்து ஒற்றைக் கண்ணால் பார்த்தது. வீட்டில் காலை நேர ரேடியோச் சத்தம், பேச்சுச் சத்தம் எதுவும் இல்லை. வேலைக்கு கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்த அம்மா  பாத்திரம் தேய்ப்பதையும் சாப்பாட்டுப் பொருட்களை எடுத்து வைப்பதையும் வழக்கத்தைவிட மெதுவாக, அதிக ஒலி எழுப்பாமல் செய்து கொண்டிருந்தாள். இவன் அன்றைய தினசரியைப் புரட்டிக் கொண்டிருந்தான்.

எட்டு மணி அளவில் அம்மா கிளம்பும்போது, ‘சாப்பாடு எடுத்து வெச்சுருக்கேன், அப்பாட்ட சொல்லு,’ என்று மெல்லிய குரலில் கூறிவிட்டுச் சென்றாள். இவன் குளித்து முடித்தபோது எட்டரை ஆகியிருந்தது. அப்பா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தார், சாப்பிடத் தோன்றவில்லை. பெரியமணியக்காரத் தெருவிலிருந்து பழைய பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் மாவட்ட நூலகத்திற்கு நடந்து செல்ல பதினைந்து நிமிடங்களாவது ஆகும், வெய்யிலை சமாளித்து விடலாம்.

வருகை பதிவேட்டில் முன்னரே  பத்து பதினைந்து பேர் கையொப்பங்கள். நேற்று எடுத்து வந்திருந்த புத்தகங்களை திருப்பியாயிற்று. புத்தக அறையில் இந்த நேரத்தில்  யாரும் இல்லை, பதினொரு மணிக்கு மேல்தான் வர ஆரம்பிப்பார்கள். எந்தப் புத்தகம் எந்த ஷெல்பின் எந்த வரிசையில் இருக்கும் என இந்த ரெண்டு வருடங்களில் கிட்டத்தட்ட மனப்பாடமாகிப் போன அறையில் இந்த முறை எடுத்துச் செல்ல வேண்டிய  புத்தகங்களை தேட அதிக நேரமாகவில்லை. அனைத்து அடுக்குக்களையும் ஒரு சுற்று சுற்றி வந்ததில், நேற்று புத்தகம் எடுத்துச் சென்ற பின் பிற உறுப்பினர்களால் கொண்டு  செல்லப்பட்ட நூல்கள் எவையென்று காண முடிந்தது.

பத்திரிக்கைகள் படிக்கும் இடம் நிறைந்திருந்தது. எந்த இதழும், தினசரியும்  மொத்தமாக படிக்கக் கிடைக்காது, கையில் அகப்படும் தாள்களை வாசிக்க வேண்டியதுதான். படித்துக் கொண்டிருந்த ஒருவர் எழ அவரிடத்தில் அமர்ந்து அவர் விட்டுச் சென்ற ஞானபூமியின் சில தாள்களை படித்தான். அடுத்து அமர்ந்திருந்த இளைஞர் வேலைவாய்ப்பு தாள்களில் இருந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். பின் இவனும்  அவற்றை புரட்டியதில் மருத்துவர், பொறியாளர் வேலைகளைவிட மற்ற, கேள்விப்படாத துறைகளில் இருந்து அழைப்புக்கள் அதிகமாக தென்பட்டன.  வீட்டிற்கு கிளம்பும்போது மணி பன்னிரெண்டு, அப்பா இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருப்பார்.

அப்பா இன்னும் எழுந்திருக்கவில்லை. சாப்பிடப் பிடிக்காமல், எடுத்து வந்திருந்த புத்தகங்களை வாசலில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும்போது ‘எங்கடா போய்ட்ட நேத்து விளையாடலாம்னு சொன்னியே, வந்து பாத்தேன். அப்பா தூங்கிட்டிருந்தாரு, ஒடம்பு சரில்லயா?’ என்று கேட்டுக்கொண்டு முரளி வந்தான்.

‘ஆமாண்டா, மருந்து வாங்கத்தான் போயிருந்தேன்’

‘இப்ப வரியா, கோபால், மணிலாம் பின்னாடிதான் இருக்காங்க’

உள்ளே திரும்பிப் பார்த்தவன் முரளியுடன் சென்றான். இவன் போர்ஷனுக்கு பின்னால் உள்ள காலி மனை கிரிக்கெட் மைதானமாக செயல்படும். அங்கிருந்த தென்னை, பஞ்சு மரங்களின் நிழல் கோடையின் உக்கிரத்தில் இருந்து கொஞ்சமே கொஞ்சம் பாதுகாப்பு தந்தது. ஒரு மணி வாக்கில் சாப்பிடுவதற்காக அனைவரும் வீட்டிற்குச் சென்றார்கள். அப்பா எழுந்திருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ‘சாப்பாடு வெச்சுருக்குன்னு அம்மா சொன்னா’ என்று சொல்லிவிட்டு மீண்டும்  புத்தகம் படிக்கத் துவங்கினான். அப்பா சாப்பிட்டவுடன் மீண்டும் தூங்க ஆரம்பித்தார்.

மெல்ல எழுந்து ரேடியோவை எடுத்துக் கொண்டு பின்புறம் சென்று எலுமிச்சை மரத்தின் அடியில் அமர்ந்தான். ‘ஆப் கி ப்ஹர்மாயிஷ்’ஷில், ‘காதல் பைத்தியக்காரத்தனமானது, போதையூட்டுவது’ என்று கிஷோர் குமார் குரலில் ராஜேஷ் கன்னா உருகிக்கொண்டிருக்கும்போது- நிஜத்தில் நேரில் பார்த்தே இராத பியானோவை, நடிகருக்கு பதிலாக இவன் மெய்மறந்து வாசித்துக் கொண்டிருக்க –  ‘என்னடா இந்த வெய்யில்ல வெளில இருக்க’ என்று குரல் கேட்டது. சுந்தரி அக்கா வந்து விட்டார்.

‘இல்லக்கா உள்ள புழுக்கமா இருக்கு அதான்’

‘எப்போ ஸ்கூல் தொரக்கறாங்க’

‘வர  மண்டேக்கா’

அடுத்த பாடலில் ‘நான் எழுதிய கடிதம் ஆயிரக்கணக்கான வண்ணங்கள் கொண்ட அழகிய காட்சியாக’ மாறிக்கொண்டிருக்கும்போதே அந்த வகுப்பறைக் காட்சி இடைவெட்டி, அனைத்தையும் நிறமிழக்கச் செய்தது. எல்லா வருடமும் அது கண்டிப்பாக  நிகழும் என்று சொல்வதற்கில்லை, போன வருடம்கூட அதற்கு தேவையேற்படவில்லைதான். ஆனால் இழந்த வண்ணங்களை மீட்க முடியவில்லை. ‘நீ அழை, உனக்காக காத்திருக்கிறேன்’ என்று ஹேமந்த் குமார் அதற்கடுத்த பாடலை முடித்துக் கொள்ளும்போதுதான் ஒலிபரப்பில் மீண்டும்      கவனம் செலுத்த முடிந்தது.  இதை இனி மீண்டும் எப்போது ஒலிபரப்பி எப்போது   பாடியபடியே மாடியில் உலவ என்று கவலைப்பட முடியாமல் இந்த புதுப் பிரச்சனை பயமுறுத்தியது.

நான்கு மணி அளவில் அப்பா எழுந்து நாளிதழ் படித்து, பின் மீண்டும் தூங்கி விட்டார். வேலை முடிந்து வந்த அம்மாவின் முகத்தில் அவள் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனதின் ஆயாசம். சமையலறையிலிருந்து சைகை செய்து இவனை அழைத்தவள், ‘எழுந்தாளா, எப்ப எழுந்தா?’ என்று கேட்டாள். ‘ஒண்ணாயிருக்கும், அப்பறம் நாலு மணிக்கு எழுந்தா அப்பறம் திரும்பி தூங்கியாச்சு’. ஒன்றும் சொல்லாமல் தலையாட்டியவள் இரவுணவை தயார் செய்து விட்டு அப்பாவை எழுப்பினாள். பத்து முறைக்கு மேல் கூப்பிட்ட பின் எழுந்தவர் எதுவும் பேசாமல் சாப்பிட்டார். எட்டு மணிக்கெல்லாம் வீட்டில் விளக்கணைத்தாகி விட்டது.  பின்புறம் சென்று காலி மனையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவன், கொசுக்கடி அதிகமாகவும் உள்ளே வந்தான். அம்மாவும் படுத்திருந்தாலும் தூங்கி விட்டாளா என்று தெரியவில்லை. பாயை விரித்து வைத்தவன், சுவற்றில் சாய்ந்தபடி இருளை நோக்கிக் கொண்டிருந்தான்.

அடுத்த நாள் காலையில் ‘ஒடம்பு செரியில்லையா’ என்று கேட்டபடி அப்பாவை எழுப்ப முயன்று கொண்டிருந்தாள் அம்மா. இந்த நேரங்களில் அது அத்தனை எளிதல்ல. பத்து நிமிடத்திற்கு மேல் மன்றாடியப் பின் புரண்டு படுத்த அப்பா, ‘என்ன வேணும், மனுஷன் தூங்கக்கூட கூடாதா’ என்று முகத்தை சுளித்துக் கொண்டே கடித்துப் துப்பினார். ‘அதுல்லமா, ஒடம்பு சரியில்லையானுதான் கேட்டேன்’ என்று சமாதானமான குரலில் சொல்லிவிட்டு அம்மா, ‘ஆபிஸுக்கு  லீவ் லெட்டர் அனுப்பணுமா’ என்று மீண்டும் மெதுவாக கேட்டதும் ‘மனுஷன நிம்மதியா இருக்க வுடாத, எப்பப்பாரு வேல வேல, ஒடம்புக்கு முடியலனா என்ன பண்ண முடியும்’ என்று கத்திவிட்டு மீண்டும் திரும்பி படுத்துக் கொண்டார்.

பின் அம்மா எவ்வளவு சொல்லியும் எதுவும் பேசவில்லை, கண்ணைக்கூட திறக்கவில்லை. அம்மா அழுகையை அடக்கிக் கொள்வதைப் பார்த்தான். காலை உணவை சாப்பிடாமல் ஒன்பது மணிக்கெல்லாம் நூலகம் சென்றவன் மதியம் வரை அங்கேயே இருந்தான். இரவுணவை சாப்பிட மட்டும் எழுப்பியதைத் தவிர அன்று மாலை அம்மா எதுவும் பேசவில்லை. மீண்டும் எட்டு மணிக்கு விளக்கணைப்பு, மீண்டும் இருளின் அமைதியினுள் மூழ்கியபடி இவன். அன்று அத்தனை தூரம் நடந்தும் தூக்கம் எளிதில் வரவில்லை. அம்மாவும் அடிக்கடி புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த நாள், வெள்ளி. நூலகத்திற்கு விடுதலை. இருந்தும் ஒன்பது மணிக்கே  கிளம்பினான். ‘என்னடா நேத்தும் ஆள காணும், அப்பாக்கு இன்னும் முடியலையா?’ என்று கேட்ட முரளிக்கு ‘ஆமாம்டா, இன்னும் நாலஞ்சு நாளாகும் போல’ என்றான்.

‘இப்போ எங்க போற?’,

‘சந்துரு வீட்டுக்குடா,’

‘சண்டேதானே ஊர்லேந்து வர்றதா சொன்னான்?’

‘இல்லயே… சும்மா போய் பாக்கறேன்’.

‘வந்துட்டான்னா வர்றப்ப அவனயும் கூட்டிட்டு வா, ஒங்கப்பாக்கு இன்னும் முடியலல?’

‘வைரல் பீவரா இருக்கலாம்னு டாக்டர் சொல்றார்’

பள்ளி முகப்பில் இருந்த வாட்ச்மேனிடம்  டை வாங்கவேண்டும் என்று சொல்லி உள்ளே நுழைந்தான். மிகக் குறைவான ஆள் நடமாட்டத்துடன் பள்ளி இன்னும் பிரமாண்டமாக, தன்னுள் நிறைந்திருக்கும் மௌனத்தோடு புதிதாக இருக்கிறது.  இலக்கில்லாத சுற்றுதல். பள்ளியில் வளர்க்கப்படும், உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் ‘லவ் பேர்ட்ஸ்களின்’ கீச்சுக்கள், பல வண்ணங்கள். தலைமையாசிரியர் அலுவலக அறையருகே சுவற்றில் பொறிக்கப்பட்டிருந்த, பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த, மாணவர்களின் பட்டியல் மதிப்பெண்களுடன்.  இரண்டு வருடங்களில் இதில் இடம் பெற முதல் வாய்ப்பு வரும்.   கேள்விப்பட்டிருந்த கிசுகிசுக்கள் தந்த  குறுகுறுப்பில்  தலைமையாசிரியர் அறை உள்ள தளத்திற்கு செல்லும்போது யாரோ பேசியபடி இறங்கும் ஒலி கேட்டதால் அவற்றை உறுதிப்படுத்த முடியாமல்  திரும்பி இறங்க வேண்டியிருந்தது.

இத்தனை வருடங்கள் அமர்ந்திருந்த வகுப்பறைகளில்  ஒன்றன்பின் ஒன்றாக சிறிது நேரம் கழித்தான். இரண்டு மாதமாக யாரும் புழங்காமல் இருந்ததால் அறைகளில் கார நெடி, இறுதி வகுப்பு நாளன்று குறிக்கப்பட்ட பட்ஸ்/ ப்ளாசம்ஸ் இன்னும் அழிக்கப்படாமல். பரீட்சைக்கு முன் சுவர்களில் இருந்து சார்ட்கள் அகற்றப்படும்போது கீழே உதிர்ந்த பசை திரிகளில் இன்னும் கோந்தின் கிறுகிறுப்பான வாசம். பல ஆசிரியர்கள், சம்பவங்கள், ஆண்டு விழா பரிசுகள் என ஆற்றுப்படுத்தும் அதே நேரத்தில் பள்ளியாண்டின் முதல் நாளில் உள்ளூர குறுகி நின்ற சில  தருணங்களை நினைவூட்டும் அறைகள். செவன்-எப்பில் இந்த ஒரு வருடமாக   பகற்கனவுகளில் மட்டும் அமர்ந்திருந்த பெஞ்சில் உட்காரும்போது ஏதோ சாதித்த அற்ப திருப்தி.  அங்கேயே கண்ணயர்ந்து படுத்து  எழும்போது கழுத்தில் வலி. வரும்  வருட வகுப்பறைக்குச் சென்றான். பொதுவாக  எப்போதும் நண்பர்களோடு அமரும் இறுதி பெஞ்சிற்கு முந்தைய டெஸ்கில் யாரோ எப்போதோ செதுக்கிய பெயர்.

வீட்டில் நுழையும்போது ‘ரெண்டு மூணு நாளா வெளிலயே சுத்திட்டிருக்கியே ஸ்கூல் தொறக்கற நேரத்துல படுத்துக்கப் போற’ என்று கேட்டார் சுந்தரி அக்கா.

‘சும்மதான்க்கா’

‘சாப்டியா, உங்கம்மா கெளம்பும்போது சொன்னங்க, ரெண்ட் நாளா காத்தால  வெச்சுட்டு போன  சாப்பாடு அப்டியே இருந்துதாமே. இன்னிக்கு இங்க சாப்டு, உருளக்கெழங்கு காரக்கொழம்பு பண்ணிருக்கேன்’

‘இலக்கா வீட்லயே சாப்டறேன்’ என்றவனை வற்புறுத்தி தன் போர்ஷனுக்கு அழைத்துச் சென்றார். தலைகுனிந்தபடி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பேச்சுவாக்கில், ‘எப்பம் போல படிக்கணும்டா, கவலைப்படாத, எல்லா வீட்லயும் நடக்கறதுதான்’ என்று அக்கா சொன்னார். சோற்றை அளைந்தபடி இருப்பதை பார்த்து ‘நான் வாசல்ல ருக்கேன்’ என்று வெளியே சென்றார்.  சாப்பிட்டுப்பின் வெளியே வர, ‘ஓன் பிரெண்ட்ஸ் பின்னாலதான் இருக்காங்க’ என்றார். ‘நா இங்க கொஞ்ச நேரம்  படுத்துக்கறேன் கா’ என்று சொல்லி அங்கேயே தூங்கி  எழும்போது மணி ஐந்துக்கு மேல் ஆகியிருந்தது.

அம்மா  அன்று மாலை விடாப்பிடியாக அப்பாவை எழுப்பி, உடம்புக்கு என்ன, வேலைக்கு மீண்டும் எப்போது போகப் போகிறார் என்று கேட்டார். கடுகடுப்பாக அப்பா சொல்லும் பதில்களை முன்வைத்து மேலும் கேள்விகள் கேட்டு ஒரு கட்டத்தில் அம்மா அழ ஆரம்பித்தார். இனி எப்படியும் நாளைக்குள் எல்லாம் முடிந்து விடும்.

அடுத்த நாள் சண்டை இன்னும் தீவிரம் அடைந்தது. தனக்கு மரியாதை தரவில்லை, அப்படிப்பட்ட இடத்தில் வேலை பார்க்கப் போவதில்லை என்ற எப்போதும் சொல்லும் காரணத்தை அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். அம்மா செய்திருந்த டிபனை தட்டோடு வீசினார். அறையில் தாளித்த கடுகின் மணம், தேங்காய் பிசிறல்கள். ‘நா வேணா போய் பேசறேன், திருப்பி சேத்துப்பாங்க’ என்று சொன்ன அம்மாவை நோக்கி செருப்பை தூக்கி எறிந்தார். அம்மா சுவற்றோரம் ஒண்டி அமர, டேப் ரெக்கார்டரின் வயரைப் பிடுங்கி கையில் சுற்றிக்கொண்டு அம்மாவின் முகத்தை நோக்கி நீட்டியபடி அப்பா மிரட்டுவதை சுந்தரி அக்கா எட்டிப் பார்த்து விட்டு போனார்.  ஒரு  மணி வாக்கில் சண்டையின் அந்த அலை ஓய்ந்தபின் நாளிதழை அப்பா படிக்க ஆரம்பிக்க, இவனிடம் வந்த அம்மா ‘ராமசாமி ஸார கூட்டிட்டு வா’ என்றார்.

சின்ன மணியக்காரத் தெருவில் இருந்த மாவட்ட கல்வி அலுவலகம்,  ஒரு காலத்தில் பங்களாவாக இருந்திருக்கக்கூடும்.  கூடப்படிப்பவர்கள்  கண்ணில் பட்டுவிடக் கூடாது.  இரண்டு நாட்களில் பள்ளிகள் திறக்க இருப்பதால் ஆள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. கூட்டம் அதிகமாக இருக்கும்போது உள்ளே செல்லாமல், அதிகாரிகள் உபயோகத்திற்கான வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் வழியாகச் சென்று அவர் அறை ஜன்னலின் அருகே நிற்பதுதான் வழக்கம். எதிரே ஒருவர் ஏதோ சொல்லிக்கொண்டிருக்க ‘மாவட்ட கல்வி அலுவலர்’ ராமசாமி, கோப்புக்களை பார்த்துக் கொண்டிருந்தார். உருண்டையான உடலுக்கு பொருத்தமான வட்ட முகத்தில், இரண்டுடனும் ஒத்துப்போகாத தீவிரத்தன்மை, கொஞ்சம் எல்லை மீறினாலும் விழுந்து பிடுங்கி விடுவார் என்பது போல். அம்மாவுடன் வேலை பார்க்கும் அவரைவிட பதினைந்து இருவது வயது மூத்த தோழி எல்.எல்லின் கணவர். பெரியவர்கள் சொன்னால் கணவன் கேட்பான் என்ற நம்பிக்கை இன்னும் அம்மாவிற்கு உள்ளது.

பின்னந்தலை வியர்வையில் நனைந்திருக்க, உதட்டில் விழுந்த வியர்வைத் துளியை நா வருடியது. உள்ளே இருந்தவர் சென்றபின் அடுத்து வந்தவர் இவனை கவனித்து, ராமசாமியிடம் சொல்ல, திரும்பிப் பார்த்து உள்ளே வருமாறு சைகை காட்டினார். உள்ளே சென்று அவர் முன்னே பேசாமல் நின்று ‘என்னடா’ என்று அவர் கேட்ட பின்பும் எதுவும் சொல்லவில்லை. ‘அப்பா திரும்ப வேலக்கு போலயா’ என்று அவர் தலை தூக்காமல் கேட்டபோது அவர் எதிரே அமர்ந்திருந்தவர் திரும்பிப் பார்த்தார். ராமசாமி சொன்னது அறைக்கு வெளியே நின்றிருப்பவர்களுக்கு கேட்டிருக்கக்கூடும். உடலில் வியர்வைச் சுரப்பு இன்னும் அதிகரித்து, அக்குளில் ஈரம் அதிகமாகியபடியே இருந்தது. காதின் பின்புறத்தில் உஷ்ணம். ‘நா வரேன்னு சொல்லு’ என்றார். வெளியே வரும்போது அங்கு நின்றிருந்தவர்களின் பார்வை கூசச்செய்தது.

ஆள் நடமாட்டமில்லாத தெரு வெயிலையும் மீறி கொஞ்சம் அமைதியளித்தது.  தொடை இடுக்குகளில் வியர்வை வழிந்து கால்கள் உரசும்போது உணரும் ஈரப் பிசுபிசுப்பு அசூயையாக இருந்ததால் கால்களைச் சற்று அகட்டி  நடக்க வேண்டியிருந்தது. வீட்டில் கேள்விகள், மன்றாடல், கோபம் என அதே சுழற்சியில் சண்டை. சொன்னபடி கொஞ்ச நேரம் கழித்து ராமசாமி வந்தார். அப்பா முகம் கொடுத்துப் பேசாதது வழக்கம்தான் என்பதால் நாற்காலியில் அமர்ந்தபடி எப்போதும் போல் அறிவுரைகள் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் இன்று அப்பா ‘நீங்க இதுல்லாம் இன்டெர்பியர் ஆகாதீங்க’ என்று சொல்லிவிட்டார். ராமசாமியின்  உடலசைவுகளில் இன்னும் இறுக்கம். ‘இனி என்ன வரச் சொல்லாதம்மா’ என்று அப்பா பேசியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்த அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினார். ‘நீ நல்லா படிக்கறத விட்றாத’ என்று போகும்போது, சொன்னபோது கண்கள் தன்னிச்சையாக விரிந்து இமைத்தன. வீட்டினுள் கவிந்திருந்த அமைதியின் பாரத்தை தாங்க முடியவில்லை. பின்புறம் சென்று அமர்ந்த கொஞ்ச நேரத்தில் வியர்வையோடு  கண்ணீரும் சேர்ந்து கொண்டது. சத்தமிடாமல் அழுவது பழக்கம்தான். உள்ளே இறுதிகட்டச் சண்டை நடந்து கொண்டிருக்கும்.

நான்கு  மணி அளவில் இவனருகே  வந்த அம்மா ‘வந்து காப்பி குடிடா, மத்தியானமே சாப்டல’ என்றார். முகம் காலையில் இருந்ததை விட திடமாக இருந்தது.  உள்ளே அப்பாவும் காபி குடித்துக் கொண்டிருந்தார்.  மாலை உண்ணும்போது அம்மாவும் அப்பாவும் சில வார்த்தைகள் பரிமாறிக்கொண்டார்கள். வேலைக்குச் செல்வதைப் பற்றிய பேச்சு எழவில்லை. அன்றிரவு வீட்டில் டிவியும், ரேடியோவும் ஒலித்தது. அடுத்த நாள் காலை, அன்று சமைக்க வேண்டிய உணவைப் பற்றி பேசிக் கொண்டார்கள். வீடு மெல்ல இயல்பு நிலைக்கு திருப்பப்பட்டுக் கொண்டிருந்தது. ஹிந்தி தொடரில் கிருஷ்ணன் என்ன சொல்கிறான் என அம்மாவிற்கு மொழிபெயர்த்தார் அப்பா. ‘நாளக்கு ரெடியா’ என அப்பா கேட்க, தலையாட்டினான். ‘புக்ஸ்க்கு கவர் போட்டு கொடுத்துடுங்களேன், நீங்கதான் க்ளீனா பண்ணுவீங்க’ என்று அம்மா சொன்னதில் தெரிந்த செயற்கையான உற்சாகம் இவனுக்கு புதிதல்ல.

திங்கள் காலை வழக்கம் போல் எழுந்த அப்பா காய்கறி நறுக்குவது, இவனுக்கு மதிய உணவை எடுத்து வைப்பது போன்ற சின்ன உதவிகளை அம்மாவிற்குச் செய்தார். ‘சாப்டாம இருந்துராதீங்க’ என்று அப்பாவிடம் சொல்லி விட்டு அம்மா கிளம்பியபின்  தினசரியை எடுத்து படிக்க ஆரம்பித்தார். ஒரு வரி விடாமல் படித்து முடிக்க பதினொன்று ஆகிவிடும். இன்றிலிருந்து பள்ளிக்கு ‘பேண்ட்’. தையல் அளவைக் கொடுக்கும்போதும் தைத்த உடையை வாங்கும்போதும் இருந்த மகிழ்ச்சி இப்போது  இல்லை. மூட்டையை தூக்கிக் கொண்டு நடை.

பள்ளி மீண்டும் உயிர்பெற்றிருந்தது. துள்ளும் வெள்ளை, சிவப்பு இரட்டைச் சடைகள், பல விதங்களில் கட்டப்பட்ட டைகள். புதிய சீருடைகளைவிட அதிகமாக   சற்றே சாயம் போன சென்ற வருடத்திய உடைகள். முட்டிவரை நீளும், ஆடுசதை வரை  மூடும், நைந்து, கணுக்காலுக்கு சற்று மேல் வரை மட்டுமே வரும், எனப் பலவித காலுறைகள், அவற்றுக்கு இணையான தரத்தில் ஷூக்கள். தேர்வாகாமல் அதே வகுப்பில் மீண்டும் படிக்க வேண்டியவர்களின் அசௌகர்யம். புதிதாக பள்ளியில் சேர்ந்திருப்பவர்களின் ஆரம்ப கட்ட கூச்சம்.

வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் நண்பர்களின் உற்சாக வரவேற்பு. பசங்களிடம் புதிதாக பேண்ட் போட்ட சந்தோஷம். கோடையை கழித்ததை பற்றிய பரஸ்பர பிரஸ்தாபங்கள். இந்த ஆண்டு பாடமெடுக்கப் போகும் ஆசிரியர்கள் யாரென்று ட்யூஷன் செல்லும் ஓரிரு மாணவர்களை கேட்டான். விடுமுறை நாட்களின் சோம்பல் இன்னும்  மிச்சமிருக்கும் புதிய ஆரம்பத்தின் கிளர்ச்சியில் தளும்பி இருந்த வகுப்பறைச் சூழலில்  அச்சத்தை தள்ளி வைக்க முடிந்தது. முதல் மூன்று பீரியட்களுக்கு இவர்களுக்கு ஏற்கனவே சொல்லிக் கொடுத்துள்ள ஆசிரியர்கள். இன்னும் நான்கு பீரியட்கள்தான். அடுத்து வந்த ஆசிரியர் புதியவர். தன்னை அறிமுகம் செய்துகொண்டபின்  ஒவ்வொருவராக சொல்லிக் கொண்டு வர இவன் முறை. எழுந்து தன் பெயரைச் சொன்னான்.

‘பாதர் என்ன பண்றார்?”

எச்சங்கள்

செந்தில் நாதன்

remnants

தேசிய நெடுஞ்சாலை 27ல் இருந்து பிரிந்து மாநில நெடுஞ்சாலைக்கு இறங்கியவுடன் ”ஹரப்பா நாகரிகத்தின் பெரு நகரம் உங்களை வரவேற்கிறது” என்ற ஆங்கில வரவேற்புப் பலகை கண்ணில் பட்டது. கீழே பொடி எழுத்துகளில் ”தோலாவிரா அகழ்வாராய்ச்சிக் களம் – 116 கிமி”.

சிந்து சமவெளி (ஹரப்பா) நாகரிகத்தின் முக்கியமான அகழ்வாராய்ச்சிக் களங்களில் ஒன்று தோலாவிரா. ஹரப்பாவும் மொகஞ்சதாரோவும் இன்றைய பாகிஸ்தானில் உள்ளன. இந்தியாவில் இருக்கும் அகழ்வாராய்ச்சி களங்களில் முக்கியமானது தோலாவிரா. எகிப்திய பிரமிடுகள் அளவிற்குத் தொன்மையான நகரம். கார்த்திக்கின் நீண்ட நாள் கனவு. இன்னும் 116 கிலோ மீட்டர் தூரத்தில்.

“அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா” என்று செளராஷ்டிராக்காரர் டி.எம்.எஸ். காருக்குள்ளே தமிழில் பாடிக் கொண்டிருந்தார். தமிழர்களான கார்த்திக்கும் வள்ளியும் அவரோடு சேர்ந்து உரக்கப் பாடிக்கொண்டே குஜராத்தில் பயணித்தார்கள்.

இருவரும் வேலை பார்ப்பவர்கள். வேலைப் பளு, குழந்தைகள், அவசர நகர வாழ்க்கை என்று எப்போதும் ஒரு படபடப்பிலேயே இருப்பவர்கள். நீண்ட நெடுஞ்சாலைப் பயணங்கள் தினசரி வாழ்க்கையிலிருந்து தப்பித்துச் செல்லும் உணர்வைத் தரும். விட்டு விடுதலையாகிப் பறக்கும் சிட்டுக்குருவி போலே. அதற்காகவே அவர்களிருவருமாக அடிக்கடி பயணம் செய்வதுண்டு. இந்த முறை சற்று அதிக தூரம். சென்னையிலிருந்து குஜராத் வரை.

ஆளரவமற்ற சாலை. இரு பக்கங்களிலும் முள் செடிகள் மட்டுமே. இருபது கிலோ மீட்டரில் ராப்பார் என்னும் சிறுநகரம். அதைத் தாண்டியதும் கைபேசியில் சிக்னல் மாயமானது. கூகுள் மேப்ஸ் இனிமேல் பயனளிக்க இயலாது என வருத்தம் தெரிவித்தது. தோலாவிரா 95 கிமி என்றது நெடுஞ்சாலைப் பலகை. ஒரே சாலை தானே, பார்த்துக் கொள்ளலாம் என்று சென்றார்கள்.

தோலாவிரா என்ற பெயர்ப்பலகை மட்டும் அத்துவானக் காட்டில் நின்றுகொண்டிருந்தது. சரியான குக்கிராமம். யாரும் கண்ணில் படவில்லை.

சற்று முன்னே சென்றதும் எல்லைப் பாதுகாப்புப் படை அலுவலகம் வந்தது. அங்கிருந்த காவலர்கள் முறைத்துப் பார்ப்பது போலத் தோன்றியது. எதற்கு வம்பு என்று கார்த்திக் வண்டியை நேராக குஜராத் சுற்றுலாத்துறை விடுதிக்குச் செலுத்தினான். பயண இணையதளங்களில் குறிப்பிடப் பட்டிருந்த இடம். அங்கே யாரும் வழிகாட்டி இருந்தால் கூட்டிக்கொண்டு செல்லலாம் என்று பார்த்தால் விடுதி பூட்டப்பட்டிருந்தது. காவலாளி கூட இல்லை.

அப்போது தான் அவனைப் பார்த்தார்கள். சின்னப் பையன், பத்துப் பன்னிரெண்டு வயதிருக்கும். விடுதிக்குப் பின்னால் இருக்கும் கூரை வீடு ஒன்றிலிருந்து வந்தான். தலை படிய வாரப்பட்டிருந்த்து. முக்கால் காலுக்கு ஒரு பேண்ட், பளீர் சிகப்பில் டி ஷர்ட்.

உடைந்த இந்தியில் “இங்கே யாரும் கைடு உண்டா பையா” என்று கேட்டான் கார்த்திக்.

“நானே கைடு தான் சார். ஃபாசில் பார்க் பார்க்க 150 ரூபாய், எக்ஸ்கவேஷன் சைட் பார்க்க 150 ரூபாய் – மொத்தம் 300 ரூபாய் கொடுங்க போதும். இதே பெரியவங்களைக் கூட்டிப் போனால் 500 ரூபாய் கேப்பாங்க” என்றான் அந்தப் பையன். அவனது இந்தி கார்த்திக் பேசிய இந்தியை விட நன்றாகவே இருந்தது.

சூட்டிகையான பையனாய்த் தெரிந்தான். சரி, இவனையே வழிகாட்டியாய் கூட்டிப் போனால் என்ன என்று யோசித்தான் கார்த்திக்.

“ரொம்ப சின்னப் பையனா இருக்கானே, இவனுக்குத் தெரியுமா” வள்ளி சந்தேகத்துடன் கேட்டாள்.

“இரு அவன் கிட்டயே கேப்போம்” என்றபடி “உனக்கு எல்லாம் தெரியுமா பையா?” என்று கேட்டான் கார்த்திக்.

“தெரியும் சார். எங்க தாத்த இங்க கைடா இருக்கார், அவர் கூடப் போய் நான் எல்லாம் கத்துகிட்டேன்”

”சரி, வா கார்ல ஏறு. உன் பேர் என்ன”

“கண்பத் சார்”

வள்ளி பின் சீட்டுக்குப் போக கண்பத் முன்னால் வந்து அமர்ந்தான்.

“நேரா போங்க சார். முதல்ல ஃபாசில் பார்க் போயிடுவோம், வெயில் வரதுக்கு முன்னாடி அங்க பாத்துட்டு அப்புறமா எக்ஸ்கவேஷன் சைட் பார்க்கலாம்” என்றான்.

இரண்டு கிலோமீட்டர் போனதும் சாலை முடிவடைந்த்து. எதிரில் கரடு முரடான பொட்டல். வழி என்று எதுவும் இல்லை.

”இது தானா?” கார்த்திக் சந்தேகமாகக் கேட்டான்.

கண்பத் உற்சாகமாக “இன்னும் அஞ்சு கிலோமீட்டர் போகணும் சார். இந்த மண் பாதைலயே போக வேண்டியது தான்”.

அவனது உற்சாகம் கார்த்திக்கையும் தொற்றிக் கொண்டது. சரி, போய்த் தான் பார்ப்போம் என்று காரை அந்த மண் பாதையில் இறக்கி ஓட்டினான். இரண்டு கிலோ மீட்டர் போவதற்குள் வள்ளிக்குப் பயம் வந்துவிட்டது.

“அவன் தான் சொல்றான்னா, நீயும் போய்கிட்டிருக்க. ஈ காக்கா கூட காணோம். வா, திரும்பப் போயிடலாம்” என்று தமிழில் சொன்னாள்.

அவளது பயம் கண்பத்துக்குப் புரிந்திருக்க வேண்டும். “இல்ல மேடம், தைரியமா வாங்க. இன்னும் கொஞ்ச தூரம் தான்” என்றான்.

கார்த்திக்கை முறைத்துக் கொண்டே வள்ளி முகத்தைத் திருப்பிக் கொண்டாள். கார்த்திக்குக்கும் ஏடாகூடமாக வந்து மாட்டிக் கொண்டோமோ என்று கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. தூரத்தில் இருந்த சிறு குன்றைச் சுட்டிக் காண்பித்தான் கண்பத்.

“அதோ அங்க தான் சார். அந்த மலை ஏறி அந்தப் பக்கம் இறங்கினா ஃபாசில் பார்க்” என்றான். கார் பரிதாபமாகக் கதறியது.

குன்றின் உச்சியில் இரண்டு எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) வீரர்கள் இருந்தார்கள்.

“பி.எஸ்.எஃப் இங்க என்ன பண்றாங்க”.

“இங்கருந்து அம்பது கிலோமீட்டர் போனா பாகிஸ்தான் வந்துடும் சார்”

”அடப்பாவி, இங்க தான் இங்க தான்னு பாகிஸ்தானுக்கே கூட்டி வந்துட்டான்” வள்ளி அடிக்குரலில் முனகினாள்.

குன்று ஏறி இறங்கியதும் பயம் எல்லாம் பறந்தோடிவிட்டது. எதிரே ராண் என்று சொல்லப்படும் உப்பு சதுப்பு நிலம். கண்ணுக்கெட்டிய வரை நீண்டு கிடக்கும் உப்புக் கடல். அதன் வெண்மை கண்ணைக் கூசியது. சில நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியவில்லை. பார்க்காமலும் இருக்க முடியவில்லை. அந்த உப்புக்கடலின் நடுவே தூரத்தில் ஒரு மலை.

”இங்கே மத்த மாசங்கள்ள தண்ணி இருக்கும் சார். நவம்பர்லேந்து பிப்ரவரி வரை நாலு மாசத்துக்குத் தண்ணி பின்வாங்கிடும். அப்ப தான் நீங்க இதைப் பார்க்கலாம்” கண்பத் சொல்லிக் கொண்டிருந்தான்.

கரையோரத்தில் கம்பி வேலிகளுக்கிடையே சில கெட்டித்துப் போன மரத் துண்டுகள் இருந்தன. கல் மரங்கள்.

“இதான் சார் ஃபாசில் பார்க். இந்த மரங்களெல்லாம் டைனோசார் காலத்தவை. பாறைக்குள் மாட்டிக்கொண்டு இதல்லாம் கல் மாதிரியே கெட்டியாயிடுச்சு. இந்த மாரி இங்கே பன்னெண்டு மரத் துண்டுகள் இருக்கு. முன்னாடி சும்மா தான் இருந்தது. இப்ப தான் கவர்மெண்ட்ல வேலி போட்டிருக்காங்க”

”தூரத்தில இருக்கே மலை, அது பேர் என்ன.”

“அது காலா டங்கர் சார். அங்க தான் குரு தத்தாத்ரேயர் திருவிழா வருஷா வருஷம் நடக்கும். அந்த மலைக்கு அந்தப் பக்கம் பாகிஸ்தான் இருக்கு”

திரும்பிப் போகும் போது பயமில்லை. வறட்டு வெயில் கூட அழகாயிருந்தது. எதிரே ஒரு மாருதி கார் கடந்து போனது. அதிலிருந்த வயதானவர் கண்பத்தைப் பார்த்துக் கைஅசைத்தபடி சென்றார்.

“உனக்குத் தெரிஞ்சவரா அவர்”

“எங்க தாத்தா சார். அங்க இருக்க பி.எஸ்.எஃப். வீரர்களுக்கு சாப்பாடு கொண்டு போறார்”

“உங்க அப்பா அம்மா இங்க தான் இருக்காங்களா” பின் இருக்கையிலிருந்து வள்ளி கேட்டாள். காரைக்குடியைச் சேர்ந்தவளாயிருந்தாலும் அவள் ஹிந்தி நன்றாகவே பேசுவாள்.

“இந்த வருஷம் மழை இல்லை மேடம், விவசாயம் படுத்துடுச்சு. அதனால் பக்கத்துல இருக்க ரேவத் ஊருக்குக் கூலி வேலை செய்யப் போய்ட்டாங்க. நான் இங்க எங்க மாமா வீட்ல தங்கி இருக்கேன்.”

“என்ன படிக்கிற”

“ஏழாங்கிளாஸ் படிக்கிறேன் மேடம். சனி ஞாயிறுகள்ல இந்த மாதிரி கைட் வேலை பாப்பேன்”

“இவனுக்கு நம்ம அனி வயசு தான் இருக்கும். எவ்வளவு பொறுப்பா இருக்கான் பாரு” வள்ளி கார்த்திக்கிடம் தமிழில் கூறினாள். அவளுக்கு கண்பத்தை மிகவும் பிடித்துப் போய்விட்டது.

”இங்க இருக்க தனியார் விடுதில சாப்பாடு வேணும்னா இப்பயே ஆர்டர் கொடுக்கணும். சொல்லிட்டுப் போயிடுவோமா சார்” என்றான்.

”ஒரு வாரமா ஹோட்டல்ல நான், பனீர் பட்டர் மசாலா சாப்பிட்டு வெறுப்பாயிருக்கு. குஜராத்தி பாஜ்ரா ரோட்டி கிடைக்குமா”

“அது எங்க வீட்ல தான் சார் கிடைக்கும்”

“சரி, அப்ப உங்க வீட்லயே சாப்பிடலாம்” வள்ளி விளையாட்டாகக் கூறினாள்.

அதற்குள் கண்பத் வீட்டுக்கருகே வந்து விட்டிருந்தார்கள்.

“ஒரு நிமிஷம் சார்” என்றபடி காரில் இருந்து இறங்கி ஓடினான்.

சிறிது நேரத்தில் மூச்சிரைக்க ஓடி வந்து “எங்க அத்தை கிட்ட சொல்லிட்டேன் சார், எக்ஸ்கவேஷன் சைட் பாத்துட்டு வந்து நம்ம வீட்லயே சாப்பிடலாம்” என்றான்.

எதிரில் பிரம்மாண்டமாக இருந்த்து தோலாவிரா புதையுண்ட நகரத்தின் கோட்டைச்சுவர். கண்பத் பழக்கப்பட்ட வழிகாட்டியாய் அவர்களுக்கு அந்த நகரத்தின் வரலாற்றை விவரித்தான். அவன் வார்த்தைகள் வழியே அந்த 4500 வருடப் பழங்கால நகரம் உயிர்பெற்று எழுந்தது. கோட்டை வாசல், அரசர் இருக்கை, தானியக் கிடங்குகள், நீர்த் தேக்கங்கள் எல்லாவற்றையும் விலாவாரியாகச் சொல்லிச் சுற்றிக் காண்பித்தான்.

”தோலாவிரா அந்தக் காலத்துல கடற்கரையோர நகரமா இருந்தது சார்.

வெளிநாட்டிலிருந்தெல்லாம் வியாபாரிகள் வருவாங்க. ராஜா இங்க தான் உக்காந்து அவங்கள வரவேற்பார்.” உற்சாகமாகப் பேசிக்கொண்டே போனான் கண்பத்.

”எதுக்கு இத்தன ரிஸர்வாயர் கட்டி வச்சிருக்காங்க?”

“இங்கல்லாம் ரெண்டு மூணு வருஷம் கூட மழை பெய்யாமப் போகும். அந்த சமயத்துல தேவைப் படும்னு தான் இப்படிப் பதினாறு ரிஸர்வாயர் கட்டி வச்சிருக்காங்க. இப்ப கூட அப்படித்தான் சார். இந்த வருஷம் முழுக்க மழை இல்ல. ஏ.எஸ்.ஐ. குவார்ட்டர்ஸ் உள்ள இருக்கற ஒரு கிணத்துல தான் தண்ணி இருக்கு. எங்க கிராமத்தில இருந்து இங்க வந்து தான் தண்ணி எடுத்துட்டுப் போவாங்க”

வெயில் சுள்ளென்று முகத்தில் அறைந்தது.

“இது தான் சார் குளியல் தொட்டி.. மேலே இருக்க கல்பாதை வழியாத் தண்ணி வரும். கீழே இருக்க குழியக் கல்லால அடைச்சிருப்பாங்க. அந்தக் கல்ல எடுத்துட்டா தண்ணி போயிடும்” என்று பெரிய விஞ்ஞானக் கோட்பாட்டை விவரிப்பது போல் விவரித்தான்.

“எங்க ஊர்ல இன்னமும் வளவுல தூப்பாக்குழிய கல் வச்சு தான் அடைக்கிறோம்” வள்ளி தமிழில் சொல்லிச் சிரித்தாள். ஒன்றும் புரியவில்லை என்றாலும் கண்பத்தும் சிரித்தான்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது. வரலாற்று எச்சங்களைப் பார்க்க இவ்வளவு கஷ்டப்பட்டு யாரும் வருவதில்லை போலும்.

அங்கிருந்த சிறு அருங்காட்சியகத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பும் போது மணி பன்னிரெண்டாகி விட்டிருந்தது.

“அவ்வளவு தான் சார். வாங்க, சாப்பிட வீட்டுக்குப் போகலாம்” என்றான்.

அவர்களும் களைத்துப் போயிருந்தார்கள். அவன் பின்னே மெதுவாக நடந்து சென்றார்கள். வீட்டுக்கருகே போனதும் கண்பத் சற்று நின்றான்.

கூச்சத்துடன் “சார், சாப்பாட்டுக்கு நூறு ரூபாய் எங்க அத்தை கிட்ட கொடுத்துடுங்க” என்றான். அவ்வளவு நேரம் பெரிய மனுஷ வழிகாட்டியாய் இருந்தவன் சட்டென்று சின்னப் பையனாய் மாறியதைப் பார்த்ததும் கார்த்திக்குக்கு சிரிப்பு வந்தது.

வட்ட வடிவமான சுதை சுவர் கொண்ட கூரை வேய்ந்த வீடு. ஒன்றரை அறைகள் தான் மொத்தமே. சுத்தமாக இருந்தது. உள் அறைக்கு அவர்களை அழைத்தான் கண்பத். தரையில் அமரப் போனவர்களைத் தடுத்து, அங்கு இருந்த ஜமுக்காளம் ஒன்றை விரித்து உட்காரச் சொன்னான். முகத்திரையுடன் வந்த அவனது அத்தை வணக்கம் சொல்லிவிட்டு சாப்பாடை எடுத்து வைத்து விட்டுப் போனாள்.

ஒரு தட்டு நிறைய முரட்டு பாஜ்ரா (கம்பு) ரொட்டி, தொட்டுக்கொள்ளப் பல காய்கள் போட்ட ஒரு சப்ஜி, சூடான சாதம். சொம்பு நிறைய மோர். ஊர் பேர் தெரியாத இடத்தில் வீட்டு சாப்பாடு தேவாமிருதமாக இருந்தது. கண்பத் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு நாசூக்காக வெளியே சென்றான்.

“பாரு, எவ்வளவு நல்ல பையன். சாப்பிடறப்ப பக்கத்துல இருந்தா நமக்குக் கூச்சமாயிருக்கும்னு விட்டுட்டுப் போய்ட்டான்” என்றாள் அவனது விசிறியாகவே மாறிவிட்டிருந்த வள்ளி.

திருப்தியான சாப்பாட்டுக்குப் பிறகு அவனது அத்தைக்கு நன்றி சொல்லிவிட்டு கையில் இருநூறு ரூபாய் கொடுத்தார்கள். சிரிப்புடன் வாங்கிக் கொண்டாள். கார் வரை வந்து அவர்களை வழியனுப்பி வைத்தான் கண்பத்.

கார் கண்ணாடியில் தோலாவிரா பின்னோக்கி சென்று கொண்டிருந்தது.

அருங்காட்சியகத்தில் கொடுத்த துண்டுப் பிரசுரத்தைப் பார்த்தபடி “நாலாயிரம் வருஷம் முன்னாடியே எவ்வளவு அமைப்பா இருந்துருக்கோம் என்ன. தொன்மையான நாகரிகம் தான்” என்று வள்ளி முணுமுணுத்தாள்.

“ஆமாம், நாகரிகமான ஊர் தான்” என்றான் கார்த்திக்.

பிரசவ வெளி

கலைச்செல்வி

அடிமுதுகு வலியில் துவண்டிருந்தது. வயிற்றின் அசைவுகள் குழந்தை வெளி வருவதற்கான இறுதி முயற்சியில் உயிரை கரைத்துக் கொண்டிருந்தன. வலியை நீட்டியோ நிமிர்ந்தோ அனுபவிக்க இயலாதவண்ணம் இடது கை சிறைப்படுத்தப்பட்டு குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. டெட்டனஸ் ஊசி செலுத்தப்பட்ட இடம் வலியால் கடுத்தது. வாழ்வு நித்தியமானது என்ற மாயைக்குள் முழுதாக தன்னை ஒளித்துக் கொண்ட பரபரப்பில் இயங்கியது அந்த பிரசவ வார்ட். ஆர்வமும் எதிர்ப்பார்ப்பும் குரல்களாக கசிய சொந்தங்கள் கதவுக்கு வெளியே காத்திருப்பது நர்ஸ் கதவை திறந்து மூடுவதில் தெரிந்தது. குடும்ப எண்ணிக்கையொன்று கூடுகையில் ஏற்படும் இயல்பான சந்தோஷம்.

என்னையும் சேர்த்து நான்கு பெண்கள் அந்த லேபர் வார்டில் இருந்தோம். சற்றே பெரிய சதுரமான அறை. என்னை தவிர்த்த இரு பெண்களும் உச்சக்கட்ட வலிக்கான காத்திருப்பில் இருப்பது போலிருந்தனர். பக்கத்திலிருந்தப் பெண் பிரசவத்தின் வெகு நெருக்கமான இடைவெளியில் இருப்பதை அவளின் அங்க அசைவுகள் உணர்த்திக் கொண்டிருந்தன. அந்தப் பெண்ணைச் சுற்றிலும் வைக்கப்பட்டிருந்த பச்சைத் திரைத் தடுப்புகளினால் உள்ளே நடப்பவை துல்லியமான பார்வைக்கு மறைக்கப்பட்டிருந்தாலும் காட்சிகள் தெளிவற்று தெரிந்துக் கொண்டுதானிருந்தன. மருத்துவரும் செவிலியரும் தாதியுமான சிறு கூட்டம் அவளை சூழ்ந்திருந்தனர். தாளாத வலியில் அவள் முனகியது என் உயிர் வரை ஓடி பய நரம்பை சுண்டியது. எண்ணிப் பார்த்தேன். இந்த பயம் இன்றில்லை.. நாள் தள்ளிப் போன பிறகு செய்த சிறுநீர்ப் பரிசோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் காட்டிய அன்று வந்த பயம்.

அன்று குடும்பமே ஆரவாரத்தில் மூழ்கி விட எனக்குள் சந்தோஷத்தை விட பயமே அதிகமாக வந்து உட்கார்ந்தது. இத்தனைக்கும் சினிமா.. சீரியல்களில் வருவது போல் எனக்கு மயக்கம் வரவில்லை. வாந்தி போன்ற தொந்தரவுகளும் இல்லை. மயக்கம் தெளிந்த கதாநாயகிகள் கட்டிலில் போர்வைக்குள் படுத்தப்படி வருங்கால குழந்தையை பற்றி வெட்கமும் ஆசையுமாக கணவருடன் பகிர்ந்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். எனக்கு அப்படியேதும் தோன்றாமல் பயம் வந்ததுக் குறித்து பயமாகதான் இருந்தது. ஓருவேளை அடிக்கள்ளி.. என்ற தேய்ந்த வசனத்தை என் கணவர் பேசாததுதான் காரணமோ என்ற எண்ணவோட்டம் உதட்டில் புன்சிரிப்பை வரவழைத்தது.

கர்ப்பவதி.. புள்ளத்தாச்சி என்ற வார்த்தைகளின் புனிதம் ஜீன்களின் வழியாகவும் சமுதாய கற்பிதங்களாலும் என்னுள் கடத்தப்பட்டிருந்தாலும் எதிர்ப்படும் கர்ப்பவதிகளின் மனநிலை குறித்த ஆராய்ச்சி என் மனதில் அனிச்சையாக ஓடிக் கொண்டேயிருந்தது. என் நாத்தனாரின் பிரசவம் குறித்து பேசும்போதெல்லாம் என் மாமியார் “எம்பொண்ணு செத்து தான் பொழச்சா..” என்றது வேறு பயத்தை அதிகப்படுத்தியது. “பொண்ணுக்கு பிரசவங்கறது மறுஜனனம்தான் என்றாலும் இந்த நவீன மருத்துவ யுகத்தில்..’ என்று டி.வியில் பேசிக் கொண்டே போகும் மகப்பேறு மருத்துரின் முதல் வரிகளோடு மனம் நின்று போனது. பெரிய வயிறுடைய பெண்கள் அடுத்து வரும் மாதங்களில் பூந்துவாலைக்குள் குழந்தையை இறுக்கியப்படி நடப்பதுதான் சற்று ஆறுதலாக இருந்தது. இப்போது எனது பழக்கவழக்கங்கள் கூட மாறியிருந்தது. முன்பெல்லாம் கோபம் வரும்போது சாப்பாட்டில்தான் அது வெளிப்படும். ஆனால் இப்போது கோபம் கிளம்பும் போதே சமாதானப்படுத்தப்பட்டதில் சலிப்புதான் வந்தது. ‘சாப்பாட்டுல கோவத்த காட்டாதே.. இப்ப நீ ரெண்டு உயிர்..’ எல்லோரும் சொல்லும் போது பயம் இன்னும் கூடிப் போனது.

வாரிசு ஏக்கத்தை கண்களில் சுமந்திருந்த கணவரிடம் வயிற்றுச்சுமையை தள்ளிப் போட எண்ணும் என் எண்ணம் அரங்கேறாமலேயே அஸ்தமித்துப் போனதில் வயிறு மேடிட துவங்கியிருந்தது. வெளிப்படுத்தியிருந்தால் மட்டும் என்ன நடந்திருக்கும்..? சமாதானத்தின் இறுதியிலோ அல்லது சண்டையின் இறுதியோ வயிற்றுச் சுமைக் கட்டாயமாக்கப்பட்டிருக்கும். என் சம வயது பெண்களில் குழந்தைப்பேற்றை தள்ளிப் போட்டவர்கள்.. குழந்தை தரிப்பதற்காக மருத்துவ ஆலோசனையிலிருப்பவர்கள்.. இன்னும் திருமணமாகாதவர்கள்.. இவர்களோடு என்னை ஒப்பிடுவதில் என்னுடைய தாய்மைப்பேறுக் குறித்து என் அம்மாவுக்கும் பெருமைதான். தனது மகள் பெண்ணாக பிறப்பெடுத்ததை பூர்த்தி செய்து விட்டாள் என்ற நிறைவுடனேயே இந்த பத்து மாதங்களும் வளைய வந்திருந்தாள் அவள். என் மனதை வெளிப்படுத்தியிருந்தால் முதலில் ஆச்சர்யம்தான் வந்திருக்கும் அம்மாவுக்கு. ‘இப்டி கூட யாராவது நினைப்பாங்களா..?’ என்பாள். பிறகு நிச்சயமாக மருமகனின் கட்சிக்கு தாவி விடுவாள்.

மூன்றாம் மாதம் வீட்டுக்கு அழைத்து வருவது.. ஐந்தாம் மாதம் மருந்துக் கொடுப்பது.. என நேரங்கள் நெரிசலாகக் கடந்துக் கொண்டிருந்தது. துறுத்தலான வயிற்றை ஆசையாக வருடி புளங்காகிதம் அடையும் கணவருக்கு இப்போதெல்லாம் வயிற்றுக் குழந்தையை தவிர்த்து என்னிடம் பேச விஷயங்களற்றுப் போனது. தடுப்பூசிகள், ஸ்கேன் ரிப்போர்ட் இவைகளோடு மாதாந்திர செக்கப் முடிந்து மருத்துவர் அறையிலிருந்து வெளியே வரும் போது எனது திகில் நிறைந்த கண்களை பார்த்து பதறும் கணவரிடம் ‘பேபி நல்லாயிருக்காம்..’ என்ற வார்த்தைகள் அவரை திருப்திப்படுத்த போதுமானதாக இருந்தது. ஆனால் மருத்துவ செக்கப் செய்யும் முறை என்னை விரக்தியடைய வைத்திருந்தது.

இரவுகள் கூட கலக்கத்திலேயே கழிந்துக் கொண்டிருந்தது. புதிதாக குழந்தைப் பெற்ற உறவுக்காரப் பெண்கள் குழந்தையே உலகமாக மாறி போவதை மனக்கண்ணுக்குள் இருத்தி பார்க்கும் போது வரும் இன்பம், பிரசவம் குறித்த பயத்தில் கரைந்துப் போகும்.  வரப்போகும் குழந்தையை பற்றிய கனவுகளில் மூழ்கியப்படியே மெல்லிய குறட்டையில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு படுத்திருப்பார் கணவர். பத்து பனிரெண்டு குழந்தைகளை உடல் உழைப்பு மிகுந்த அந்த காலக்கட்டத்தில் சர்வசாதாரணமாக பெற்றெடுத்த பாட்டிமார்கள் எனக்கு சாதனையாளர்களாக தெரிந்தனர். மருத்துவச்சி பார்க்கும் பிரசவம்.. வளராத விஞ்ஞானம்.. சமுதாய அழுத்தம்.. புனித வேள்விக்குள் அடைப்படும் தாய்மை இவைகளுக்கு மத்தியில் கயிற்றில் நடக்கும் சாகஸகாரர்களாகவே ஒவ்வொரு பெண்ணும் வாழ்ந்திருப்பதாக எனக்கு தோன்றியது. விஞ்ஞானம் போர்த்திய இன்றைய சமுதாயத்தில் கூட மலடி.. போன்ற ஆண்பாலற்ற சொற்கள் வெகு விமரிசையாகவே வலம் வந்துக் கொண்டுதானிருக்கிறது. தாங்கள் பெறும் குழந்தைகள் குறித்த உரிமையை  பெண்கள் இன்னும் பெறவில்லை என்று ஏதேதோ எண்ணங்கள் மூழ்கடிக்க மீதி இரவும் துாக்கம் தொலைந்தே கடக்கிறது. துாக்கமின்மை பகல்களை அரைமயக்க நிலையிலேயே வைத்திருப்பது போலிருக்கும். “நாள் நெருங்க நெருங்க துாக்கம் வராதுடீ.. இதெல்லாம் வயித்துப்புள்ளக்காக நாம செய்ற தவம்டீ.. குடுத்து வச்சிருக்கணும்..” என்பாள் அம்மா உருக்கமாக.

வயிறு பெரிதானதில் கைகளின் துணையின்றி உட்காரவோ எழுந்துக் கொள்ளவோ.. புரண்டு படுக்கவோ முடியாத களைப்பு நிரந்தரமாக முகத்தில் படர்ந்துப் போனது. “உள்ள இருக்கறது பொம்பளப்புள்ளதான்.. பொண்ணுங்கதான் தாயோட அழகை களவாடிக்கும்பாங்க..” என்ற ஜோதிடம் சொல்லும் அம்மாவுக்கு “இல்லீங்க.. ஆம்பளப்புள்ளதான் அசதிய கொடுக்கும்..” என்பார் மாமியார் விட்டுக் கொடுக்காதவராக. டபக்.. டபக்.. என உள்ளிருந்து வரும் அசைவுகள் சற்று நேரம் வராது போனாலும் பயமேற்பட்டது. ‘குழந்தை மூவ்மெண்ட்டே இல்லையாம்..’ வீடே அல்லோலகல்லோலப்பட்டது. ஸ்கேன் எடுத்ததில் குழந்தை ‘நார்மல்’ என்றது ரிப்போர்ட். நான் தான் நார்மலாக இல்லாமல் நடுக்கத்துடன் பிரசவ தேதியை எதிர்ப்பார்த்திருந்தேன். வளைகாப்பு வளையல்கள் உடைந்து விடாமல் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருந்ததில் யாருடைய உடலுக்குள்ளோ புகுந்துக் கொண்டது போலிருந்தது. என் அலைபேசியிலிருந்து போகும் அழைப்புகளோ அலைபேசிக்கு வரும் அழைப்புகளோ பிரசவத்தைப் பற்றிய பேச்சிலேயே சுற்றி வந்து முடங்கிப் போவது ஒரு வித சலிப்பை தந்தது.

ஒன்பதாவது மாதம் தொடக்கத்திலேயே மருத்துவமனைக்கென பெரிய பேக் ஒன்று எப்போதும் தயார் நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தது. அம்மாவும்தான். ஃபிளாஸ்க் டம்ளர்கள்.. பெரிய பெரிய டவல்கள் சலவை செய்து புதிதாக்கப்பட்ட வெள்ளை வேட்டிகள் ஸ்பூன் சாத்துக்குடி பிழியும் கருவி குளுக்கோஸ் பாக்கெட்டுகள் நைட்டி நாப்கின் பாக்கெட் என நிரம்பியிருந்த அந்த பேக் கண்ணில் படும் போதெல்லாம் பீதியை கிளப்பிக் கொண்டேயிருக்கும். “மாப்ளை நம்ம பொண்ண நல்லா கவனிச்சுக்குறாரு.. குழந்தை மூவ்மெண்ட்ட வாட்ச் பண்ணிக்கிட்டே இரு.. வலி வர்றாப்பல இருந்தா ஒடனே ஆஸ்பிடலுக்கு கௌம்பிடு.. நேரத்துக்கு சாப்புடுன்னு ஒரே அட்வைஸ்தான் பொண்டாட்டிக்கு..” அம்மாவுக்கு பெருமைப்பட விஷயமிருந்தது. எனக்கோ என் கணவர் என்னிடமிருந்து விலகி விட்டது போலிருந்தது.

தயாராக இருந்த அந்த பெரிய பேக்கிற்கு நேற்று மாலை உபயோகம் ஏற்பட்டதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். முதலில் கர்ப்பபையில் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதால் சிசேரியன் செய்ய வேண்டும் என்றார்கள். எனக்கு அனஸ்தீஷியா அலர்ஜி என்பதால் நார்மல் டெலிவரிக்கு காத்திருப்பதில் பிரச்சனையில்லை என்றார்கள். பெல்விஸ் எலும்பு விரிவடைந்திருப்பது நல்ல அறிகுறி என்றார்கள். இரு வீட்டார் குலதெய்வங்கள் சிறு தெய்வங்கள் என பிரசாதங்களால் எனது நெற்றி நிறைந்திருந்தது. ‘எம்பொண்ணு நல்லப்படியா பெத்து பொழைக்கணும்..’ அம்மாவின் சத்தமான வேண்டுதல் வலியை அதிகரித்தது. பயத்தில் கண்களை இறுக மூடியிருந்த  என்னை இனிமா கொடுக்க அழைத்துச் சென்றனர்.

பொங்கி வழிந்த வயிற்றோடு ஒருக்களித்து கால்களை முன்னும் பின்னுமாக்கி படுக்க சூடான சோப்புத் திரவம் எனக்குள் இறங்கியது. பிறகு கழிவறைக்கும் படுக்கைக்குமாக அலைந்தேன். ‘தண்ணி வழுக்கும்டீ.. பாத்து நட..’ முதுகில் ஒலித்த அம்மாவின் குரல் பலித்தால் தேவலாம் என்றிருந்தது. வலியோடு அவஸ்தைப்படுவதை விட குழந்தையோடு இறந்து போகலாம். கழிவறை கதவை மூடுவதற்குள் கால்களின் வழியே சிறுநீர் வழிந்தோடியது. வழக்கமாக இருப்பது போலின்றி சற்று பிசுபிசுப்பாக இருந்தது அது. நான் அம்மாவிடம் சொல்ல.. அம்மா நர்ஸிடம் அலற.. உடனே பச்சை அங்கிக்குள் நுழைக்கப்பட்டு ஸ்ரெச்சரில் கிடத்தப்பட்டேன். ஸ்ரெச்சரோடு பயணித்த என் கணவரின் பதற்றம் நிறைந்த விழிகள் என்னை கோபப்படுத்தியது. ‘இந்த பதட்டமெல்லாம் வயித்துக் கொழந்த நல்லப்படியா வெளிய வருணும்னுதான்..’ பொறுமலோடு கண்களை மூடிக் கொண்டேன். ஸ்டெச்சர் நகர்ந்தது. மனம் வெறிச்சோடியிருந்தது.

இதுதான் உள்நோயாளியாக எனது முதல் மருத்துவமனை அனுபவம். அறையின் தோற்றம் பயமுறுத்தலாக இருந்தது. பலியாடுகளாக கிடந்த மூவரோடு நானும் சேர்ந்ததில் நால்வராகிப் போனோம். அங்கிருந்த பெண் மருத்துவர் என்னை சோதித்து விட்டு ‘லேபர் பெயின் வர்ட்டும்.. வெயிட் பண்ணலாம்..” என்றபடியே எனது பச்சை உடுப்பை கீழே இழுத்து விடாமலேயே நகர்ந்தார். படுத்தவாறே குனிய முயன்றேன்.  “எழுந்திரிக்காதம்மா.. டிரிப்ஸ் போய்ட்டுருக்கல்ல..” என்றார் ஒரு நர்ஸ். பிறகு நான் கேட்டுக் கொண்டதன் போல் பட்டும்படாமலும் என் உடையை சரிப்படுத்தி விட்டு நகர்ந்தார். உடைப் பற்றிய பதற்றம் நீங்கியதில் மெல்ல கண்களைச் சுழற்றினேன். பக்கத்து படுக்கையிலிருந்த பெண் ஹீனஸ்வரத்தில் முனகிக் கொண்டிருந்தாள்.

நேரம் செல்ல செல்ல அந்தப் பெண்ணின் சத்தம் கூடிக் கொண்டேயிருந்தது. மரணத்தின் உச்சமே ஜனனம். மரணம் என்றால் அது மனதின் அந்தரங்க வலியாக இருக்கலாம். அல்லது உடல் வலியின் உச்சமாக இருக்கலாம். அல்லது நேரடி மரணமாகக் கூட இருக்கலாம். தத்துவார்த்தமான சிந்தனைகள் எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது அந்நேரத்திலும். இம்மாதிரியான சிந்தனைகள் எனக்கு புதிததல்ல. எனது பள்ளிநாட்களில் அவ்வவ்போது நான் அள்ளி விடும் வசனங்கள் நீதிபோதனை வகுப்பில் என்னை முன்னிலைப்படுத்தும். பதினோராம் வகுப்பு படிக்கும் போது ஒருமுறை நீதிபோதனை டீச்சர் ‘உன் வயசு ஸிக்ஸ்டீனா.. ஸ்க்ஸ்டீயா..’ என்று கிண்டலடித்தார்.

பக்கத்து படுக்கைப் பெண் வலியில் எனக்கு சீனியர். அவள் அனுபவிப்பதையெல்லாம் இன்னும் சற்று நேரத்தில் நானும் அனுபவிக்க வேண்டும். வாழ்க்கையின் உச்சக்கட்டம். வலியின் உச்சக்கட்டம். பொறுக்கவியலாத வலியை பொறுக்க வேண்டிய கட்டாயம். பிளாஸ்டிக் பக்கெட்டும் கையுமாக அவசரமாக உள்ளே நுழைந்த இரு தாதிகள் பச்சைத்திரைக்குள் ஐக்கியமானார்கள். அந்தப் பெண்ணின் கால்களை இருவர் மடக்கி பிடித்திருப்பது தெரிந்தது. அவள் ஏதோ செய்ய பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தாள்.

அதற்குள் பொல்லாத வலி என்னை திசைத் திருப்பியது. வாய் விட்டு முனகினேன். நர்ஸ் என்னருகே வந்தார். ‘அடிவயித்துல வலி இறுக்கி புடிக்குதா..” என்றார். அப்படிதான் இருந்தது எனக்கும். “வலி வுட்டு வுட்டு வரணும்.. ரெண்டு நிமிஷத்துக்கொரு தடவை வந்து வந்து நின்னுச்சுன்னா பேபி வெளிய வர போவுதுன்னு அர்த்தம்..” வலியின் இறைச்சலுக்குள் மழலையின் குரல் மெலிந்து கேட்டது. அவளுக்கு குழந்தை பிறந்து விட்டது. ஆவலில் தலையை திருப்பிப் பார்த்தேன். அவளைச் சுற்றியிருந்த கூட்டம் குறையவில்லை. இடுப்புக்கு மேல் தான் தெரிந்தாள். பச்சைத்திரையை சற்றே நகர்த்தியிருந்தார்கள். நல்ல உணர்வுடன்தான் இருந்தாள். உடல் தொய்ந்து கிழிந்த நாராகி போனதை முகம் உள்வாங்கி களைப்பை வெளித்தள்ளியிருந்தது. குழந்தை இடைவிடாது அழுதது. அந்த ஒலி அவளை சலனப்படுத்தியிருக்குமோ.. தாங்க முடியாமல் அழுவாளோ.. முகத்தை உற்றுப் பார்த்தேன். சலனங்களற்றிருந்தது அந்த முகம்.

இரண்டு நிமிடத்திற்கு முன் விட்டு போயிருந்த அடி வயிற்றுவலி இப்போது மீண்டும் கவ்வி இழுத்தது. ‘அதே தான்.. அதே தான்..’ மனசு பயத்தில் சில்லிட்டது. “சிஸ்டர்.. சிஸ்டர்..” என்று கத்தினேன். நர்ஸ் வேகமாக வந்தார் என்னிடம். பழக்கப்பட்டுப் போன நிகழ்வாக நான் கால்களை விரித்துக் கொடுக்க “நாலு ஃபிங்கர் கேப் விட்டுருக்கு டாக்டர்..” என்றார் அவசரமாக.

இப்போது அவளிடமிருந்த பச்சைத்திரையை முழுவதும் நீக்கி என்னை நோக்கி நகர்த்தினர். நான் மற்றவர்களின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டேன். என்ன நடக்கிறது எனக்கு..? மறுத்து போயிருந்தது மனம். உடை மாற்றும் அறையிலோ குளிக்கும் அறையிலோ கூட இதுவரை யாரையும் அனுமதித்ததில்லை நான். கையறு நிலை என்பது இதுதானோ..? “முக்கு.. நல்லா ஸ்டெயிரன் பண்ணி முக்கு.. ம்.. அப்டி தான்.. ம்ஹும்.. பத்தாது.. இன்னும்.. இன்னும்.. இன்னும் பெட்டரா டிரை பண்ணு.. ம்ம்.. அப்டி தான்.. இன்னும் கொஞ்சம்.. இங்க பாரும்மா.. நீ கோவப்ரேட் பண்ணலேன்னா நாங்க ஒண்ணும் பண்ண முடியாது.. கால நல்லா விரிச்சு வக்கலேன்னா பேபி வெளிய வர முடியாது.. முக்கும்மா.. ஏற்கனவே பனிக்கொடம் ஒடஞ்சுடுச்சு.. லேட் பண்ணுனீன்னா பேபிக்கு ஸஃபகேட் ஆயிடும்..” மிதமாகவும் கோபமாகவும் கிரிக்கெட் கமெண்ட்ரி போல தொடர்ச்சியாக வந்த பெண் மருத்துவரின் குரல்கள் என்னை திக்குமுக்காட வைத்தன. சொன்னவைகளையெல்லாம் செய்தாலும் குழந்தை ஏன் வெளியே வரவில்லை..?  விரித்து பிடிக்கப்பட்ட என் கால்கள் வலியில் சோர்ந்திருந்தன. உடலின் கீழ்பாகம் முழுவதும் வலியால் சூழ்ந்திருந்தது. இந்த பிரசவத் தினத்தைக் குறித்து நான் கொண்டிருந்த பயங்கள் ஒன்றுக் கூட மிகையானதல்ல. ‘பிரசவம் ரொம்ப கஷ்டமானதுன்னா இத்தனைக் கோடி ஜனக்கூட்டம் எப்படி பெருகியிருக்கும்’ என்று எனக்கு நானே தேற்றி வைத்தவைகளெல்லாம் பொலபொலத்து உதிர்ந்துக் கொண்டிருந்தன.

சினிமாவில் கதாநாயகி கால்களை வலியில் அடித்துக் கொள்வாள். வேதனையில் துடிக்கும் அவள் முகத்தில் காமிரா படரும் நேரம் வீறிட்ட மழலை ஒலி எல்லா பின்னணி இசைகளையும் நிறுத்தி விட்டு தியேட்டர் முழுதும் எதிலொலிக்கும். வலிகளை மறந்து கதாநாயகி குழந்தையை வாரி அணைத்துக் கொள்வது என் மனக் கண்ணில் ஓடியது. என் பெரியப்பாவின் மகள் குழந்தையை பிரசவித்திருந்த போது அவளை பார்க்க போயிருந்தேன். அப்போது எனக்கு திருமணமாகியிருக்கவில்லை. அவளது ஒருநாள் வயதுடைய குழந்தையை என் பெரியம்மா கைகளில் ஏந்தியிருக்க அக்கா அவஸ்தையாக என்னை பார்த்து சிரித்தாள். இப்போதுதான் அந்த சிரிப்பின் அர்த்தம் எனக்கு புரிந்தது. வலிகளின் உச்சத்தை வென்று வந்த வேதனை சிரிப்பு அது. ‘நான் உங்கம்மாவ பெத்தெடுத்தது உங்க தாத்தனுக்கு கூட ரெண்டு நாளைக்கு பொறவுதான் தெரியும்..’ கூட்டுக் குடும்பத்திலிருந்த என் அம்மாச்சி எட்டாவதாக பெற்றிருந்த என் அம்மாவை பற்றி பேசியது இந்த நேரத்திலும் நினைவிற்கு வந்து ஆச்சர்யப்படுத்தியது.

“அப்டிதான்.. இன்னும் ஒரு தடவ.. அவ்ளோ தான்.. குட்..” பேசிக் கொண்டே இருந்த மருத்துவர் திடீரென வெகு உன்னிப்பானார். உடல் முழுவதும் வலி ஆக்கிரமித்த நேரம். என்னுள்ளிருந்து ஏதோ உருவப்பட்டது போன்ற உணர்வு. உடலை அசைக்கவியலாத நிலையில் பார்வையை மட்டும் திருப்பினேன். மருத்துவரின் கைகளுக்குள் உடலெங்கும் வெள்ளையும் சிவப்புமாக படிந்திருந்த அந்த சின்னஞ்சிறு உருவம் குறித்து மூளையில் உறைக்க எனக்கு சில நொடிகள் பிடித்தது.  ‘விடுதலை.. விடுதலை.. விடுதலை..’ மௌனமாக பாடியது மனம். வீறிட்டு அழுத குழந்தையை ஏந்திக் கொண்டு நகர்ந்தார் ஒரு நர்ஸ். குளிப்பாட்ட சென்றிருப்பாராக இருக்கும். எனது பெட்டில் தொங்கிக் கொண்டிருந்த எனது கேஸ் ஷீட்டில் குழந்தை பிறந்த நேரத்தை பதிவு செய்தார் ஒரு நர்ஸ். எனக்கு என்ன நடக்கிறது என்பது எனக்கே தெரியாத நிலை. நேரடி வலியின் வீச்சு நின்றிருந்தாலும் உடல் முழுக்க வலியும் உதிரமுமாக அவஸ்தை கூடியிருந்தது. தாதி ஒருத்தி அடிவயிற்றை மசாஜ் செய்வது போல அமுக்கியதில் அடிவயிறு வலித்தது. என் வலியையோ அவஸ்தையோ சட்டைச் செய்யாதவளாக கடமையே கண்ணாக இருந்தார் அந்த தாதி. இறுதியாக கட்டி கட்டியாக உதிரம் நிறைந்த வாளி என் படுக்கைக்கு கீழிருந்து அகற்றப்பட்டது. உதிரப்போக்குக்கு நாப்கின் வைக்கப்பட்டது. இரத்தக்கறை படிந்த எனது நீள அங்கிப் போன்ற உடை நீக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்த எனது நைட்டி அணிவிக்கப்பட்டது. என்னிடமிருந்த சகலமும் என்னிலிருந்து பிடுங்கப்பட்டு முற்றிலும் மற்றவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்த எனக்கு கையில் என்னவோ கட்டப்பட்டது. திருப்பிப் பார்த்தேன். சின்ன டோக்கன். எனக்கும் பேபிக்கும் மூன்றாம் எண் டோக்கன். குழந்தை மாறிவிடாதிருக்க. பூஞ்சையாய் கிடந்த தேகத்தை இரண்டு பேராக சேர்ந்து  மெதுமெதுவாக ஸ்டெரச்சருக்கு மாற்றினார்கள். ஊண்சத்தற்ற உடல் போல சக்கையாக உணர்ந்தேன்.

ஸ்ரெச்சர் லேபர் வார்டை விட்டு வெளியே நகர்ந்தது. யாரையும் பார்க்க ஆவலின்றி கண்களை மூடிக் கொண்டேன். ஆதரவாக அம்மா தலையை கோதுவது தெரிந்தது. சின்ன விசும்பல் சத்தம். அம்மா அழுகிறாள் போல. ‘ரொம்ப கஷ்டப்பட்டுட்டா எம்பொண்ணு..’ அவளின் வாய் முணுமுணுத்தது. கணவனின் விழிகள் குழந்தையை தேடியிருக்கும். ஸ்ரெச்சரின் வீல்கள் வளைந்தன. அறைக்குள் நுழைகிறேன் போலும்.

சுடுநீரில் துடைக்கப்பட்ட உடலும் இதுவரை அனுபவித்த வலியும் துாங்க வேண்டும் என்ற உணர்வை உண்டாக்கியது எனக்கு. அம்மா அழைத்துக் கொண்டேயிருந்தாள். பிரயத்தனப்பட்டு லேசாக விழித்துப் பார்த்ததில் சூழ்ந்திருந்த அனைவரும் வேற்றுக்கிரகவாசிகளாய் தெரிந்தனர். அல்லது நான்தான் இறந்து வேற்றுக்கிரகத்திற்கு வந்து விட்டேனா..? எதுவும் விளங்கவில்லை. ‘சமுதாயமானது தாய்மையை புனிதப்படுத்தி பெண்களை வாய் மூடி மௌனிகளாக்கி மிக சரியாக காய்களை நகர்த்தி மாறாத வெற்றியை தக்க வைத்துக் கொண்டே வந்துக் கொண்டிருக்கிறது. அதன் மிகச்சமீபமான பலி நான்..’ என்று கறுப்பு அங்கியோடு கோர்ட்டில் வாதிடும் போது நான் எழுப்பப்பட்டேன். சிறு அசைவு கூட எனக்கு சாத்தியப்படவில்லை என்பதை அப்போது தான் உணர்ந்தேன்.

“ஏன் இவ்ளோ கும்பல்.. எல்லாரும் கௌம்புங்க..” அதட்டியப்படியே உள்ளே நுழைந்த நர்ஸ் அதே அதட்டலோடு “எழுந்திரிம்மா.. பேபிக்கு பால் குடுக்கணும்..” என்றார். தலையணையில் சாய்ந்து அமர வைக்கப்பட்டேன். குழந்தையை மார்போடு ஏந்துகையில் வலுவின்றி கை நடுங்கியது. அம்மா உதவினாள். “நீங்க நவுருங்கம்மா.. அவளுக்கு பழக்கப்படுத்தணும்..” நர்ஸ் வெகு இயல்பாக குழந்தையை துாக்கி என் கைகளில் வைத்தாள். அவள் சர்விஸில் என்னை போல ஆயிரம் பேரை பார்த்திருந்த அனுபவம் அதில் தெரிந்தது.

“இங்க பாரும்மா.. இத்தன மாசம் சுமந்தது பெருசில்ல.. பெத்ததும் பெருசில்ல.. வளக்கறதுதான் பெரும்பாடு.. குழந்தைக்கு சரியான நேரத்துக்கு பால் குடுக்குணும்.. பசின்னாலும் அதுங்க அழுவும்.. எறும்பு கடிச்சாலும் அழுவும்.. வயித்த வலிச்சாலும் அழுகைதான்.. பேபி எதுக்காக அழுவுதுன்னு நமக்குதான் தெரியணும்.. அழுவாம துாங்கிட்டே இருந்தாலும் அப்டியே விட்டுடக் கூடாது.. எழுப்பி விட்டு பால் கொடுக்கணும்.. பால் குடிக்கும் போதே கூட அதுங்களுக்கு துாக்கம் வந்துடும்.. வாய் வைக்க தெரியாம அல்லாடுங்க.. பால் மூக்குல ஏறிக்காம கவனமாக இருக்கணும்..” ஒப்பிப்பது போல சொல்லியப்படியே நைட்டியை விலக்கினாள். இப்போது உடலின் மேல்பகுதி என் கட்டுப்பாட்டிலிருந்து விலகியிருந்தது. சிறிய சதைக்குவியலில் ஒரு கோடு போலிருந்தது அதன் வாய். குழந்தைக்கும் என்ன செய்ய வேண்டும் என புரியவில்லை. எனக்கும் என்ன செய்ய வேண்டும் என விளங்கவில்லை. நர்ஸின் அனுபவம் வென்றதில் குழந்தை வீறிட்டு பின் எதையோ சப்பி விட்டு துாங்கி போனது. நர்ஸ் கிளம்பிய பிறகு  “அப்டியே மருமகன்மாதிரியே இருக்குதுடீ புள்ள..” என்றாள் அம்மா. அதுவரைதான் நினைவிருந்தது. பிறகு நானும் துாங்கிப் போனேன்.

யாரோ எழுப்பியது யுகங்களை கடந்து மீண்டது போலிருந்தது.  “புள்ளக்கு பசி வந்துருக்கும்.. பால் குடும்மா..” என்றாள் அம்மா. கண்களை திறக்க முடியாத அசதி. குழந்தையை என்னருகே படுக்க வைத்தாள். “கண்ண தொறந்து பாத்து பால் குடுடீ.. மூக்குல ஏறிக்கும்..” திறக்க முடியாதிருந்த கண்களை யாருடைய வருகையோ திறக்க கட்டாயப்படுத்தியது.

இரு வீட்டு ஆட்கள்.. தோழர்கள்.. அக்கம்பக்கத்தோர் என யாரோரோ வந்தபடியே இருந்தனர். ‘பால் குடுக்குறா.. குடுத்தவொடன கூப்டுறன்..” அம்மா சமாதானப்படுத்தும் போது ‘அவங்கள அப்டியே போக சொல்லும்மா.. நான் துாங்கணும்..” என்று சொல்லத் தோன்றியதை அடக்கிக் கொண்டேன். ஆண் உறவினர் மருத்துவமனை செலவுக் கணக்கு கேட்பதும் பெண்கள் அறையை நோட்டமிடுவதும் பிறகு குரலை தழைத்துக் கொண்டு ‘பால் இருக்குல்ல..’ என்று கேட்பதும் எரிச்சலாக இருந்தது. ‘எல்லாரும் வெளிய போய் தொலைங்க.’ என்று கத்த வேண்டும் போலிருந்தது. அம்மா கைத்தாங்கலாக பிடிக்க செருப்பணிந்த கால்களுடன் ரெஸ்ட் ரூமிலிருந்து வெளியே வந்தேன். அதற்குள் யாரோ வந்திருந்தார்கள். அப்படியே செருப்பைக் கழற்றி அடித்து விடலாமா என்று தோன்றிய எண்ணத்தை கஷ்டப்பட்டு உள்வாங்கிக் கொண்டேன். அத்துமீறிய அலுப்பில் சற்று கண்ணயறும் அம்மாவை அங்கிருந்த டி.வி ரிமோட்டால் துhக்கி அடிக்க வேண்டும் போலிருந்தது. எங்கு பார்த்தாலும் வெறுமை. யாருமற்ற தனிமை என மனசு ரணக்களமாகியிருந்தது. “ஏன்டீ.. பசிக்குதாடீன்னு தான கேட்டேன்.. அதுக்கு ஏன் இப்டி சள்ளுபுள்ளு வுளுவுற..?” அம்மாவுக்கு சமயங்களில் கோபம் வந்து விடும். துாங்கும் தனது வாரிசைப் பார்த்துக் கொண்டேயிருப்பதும் பார்க்க வருபவர்களை கவனித்துக் கொள்வதுமாக என் கணவரின் நேரங்கள் பிஸியாகவே கழிந்ததில் மூன்று நாட்கள் கடந்தது.

வீடு ஆரத்தி எடுத்து வரவேற்றது. தொட்டில், புதிதாக வாங்கிய டேபிள்ஃபேன், மாற்றம் செய்யப்பட்ட கட்டில்,  என் படுக்கைக்கு அருகே உருவாக்கப்பட்ட புதிய சிறிய படுக்கை என வீடே மாறியிருந்தது. விதவிதமான ருசியற்ற உணவுகள் அதிகமான கட்டுப்பாடுகள் புதிதாக பிறந்திருக்கும் பொறுப்பு இவைகள் எனது தனிமையின் அளவை கூட்டிக் கொண்டே போயின. படுத்தே கிடந்ததில் சற்றே ஊதிப் போயிருந்த என் முகம் மற்றவர்களின் பார்வையில் தாய்மையின் பூரிப்பாக தெரிந்தது. ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைந்த கணவர் பொறுப்பை மாற்றி விட்ட திருப்தியில் குழந்தைக்கான விளையாட்டு சாமான்களை சேகரிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள அம்மா குழந்தைக்கான சவரட்டணையில் முழ்கிப் போனாள். குழந்தையை எடுத்துக் கொடுக்க.. பால் குடித்தப்பிறகு துாளியில் போட.. பத்திய சாப்பாடு சமைக்க.. குழந்தையை குளிப்பாட்ட.. உறை மருந்து ஊற்ற.. என அம்மா பிஸியாகி விட சூழ்ந்து நின்ற தனிமை எரிச்சலைக் கூட்டியதில் தொட்டதெற்கெல்லம் எழுந்து விழ ஆரம்பித்தேன்.

ஒரு வாரம் ஓடி விட்டிருந்தது. குழந்தையை குளிக்க வைத்து என்னருகே படுக்க வைத்தாள் அம்மா. “நைட்டி ஸிப்ப இழுத்து வுடுடீ.. புள்ளப் பெத்த மாரு.. ஒருத்தரு கண்ணுப் போல இருக்காது.. திருஷ்டிப்பட்டுப் போச்சுன்னா பால் கட்டிக்கும்..” இயல்பாக சொல்லி விட்டு அம்மா சமையலறைக்கு சென்று விட்டாள். கூச்ச சுவாபியான எனக்குதான் அதிர்ச்சியாக இருந்தது.

‘புள்ள துாங்குதுன்னு பேசாம இருந்துடாதடீ.. கால சுண்டி விட்டு பால் குடு.. புள்ளக்கு பசி வந்துடும்..” கிச்சனிலிருந்து குரல் கொடுத்தாள் அம்மா. குழந்தையைப் பார்த்தேன். உடல் முழுவதும் பவுடர் வாசத்துடன் நெற்றியிலும் கன்னத்திலும் வைக்கப்பட்ட திருஷ்டிப் பொட்டுமாக துாங்கிக் கொண்டிருந்தது. திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டாற் போல் துாக்கத்திலேயே சிரித்தது. அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. குழந்தையின் வலது உள்ளங்காலை மெதுவாக நிமிண்டினேன். எழுந்துக் கொள்ளவில்லை. திரும்ப திரும்ப சீண்டியதில் நான் படுத்திருந்த பக்கம் திரும்பியது. அதன் பிஞ்சுக் கை எதையோ தேடி அலைந்து பிறகு எனது நைட்டியை பற்றிக் கொண்டது.

குழந்தையை வாரி நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன்.

“தல நிக்காத புள்ளடீ.. பாத்து..” என்றாள் அறைக்குள் நுழைந்த அம்மா.

***