சிறுகதை

பெல்லந்தூர் ஃப்ளைஓவர் சம்பவம்

  சிகந்தர்வாசி

 

கோரமங்களாவில் ஆட்டோ பிடித்தேன். ‘இகோ ஸ்பேஸ்’ என்றேன்.

ஆட்டோ கிளம்பிய முதல் ஆட்டோ டிரைவர் கன்னடத்தில் பேசிக்கொண்டு வந்தார். எனக்குத் தெரிந்த கன்னடத்தில் பதில் சொல்லிக்கொண்டு வந்தேன். முக்கால்வாசி நேரம் இருவரும் டிராபிக் பற்றி புலம்பிக்கொண்டு வந்தோம்.

எப்பொழுதும் போல் அகரா பஸ் ஸ்டாண்ட் தாண்டியவுடன் டிராபிக் அதிகமாக இருந்தது. சர்ஜாபூர் ஜங்ஷன் வந்தவுடன் சற்று மூச்சு விட முடிந்தது. ஆட்டோ சற்று வேகமாகச் செல்ல ஆரம்பித்தது.

‘இகோ ஸ்பேஸ்’ஸுக்கு முன்னால் உள்ள பாலம் ஏறும் நேரம் இடது பக்கத்திலிருந்து யாரோ ஒருவன் முகத்தில் பீதியுடன் ‘நிறுத்து நிறுத்து’ என்று ஆட்டோவை நோக்கி ஓடி வரப் பார்த்தான். ஆட்டோ அவனைக் கடந்த பின்புதான் டிரைவர் அவனை கவனித்தான். “டேய்” என்று அவனைப் பார்த்து கத்தினான். அதற்குள் ஆட்டோ ப்ளைஓவர் மேல் ஏறி விட்டிருந்தது. எல்லா பக்கமும் விரைந்து வரும் வாகனங்கள். டிரைவர் இடது பக்கம் சென்று நிறுத்தப் பார்த்தான், ஆனால் அவனால் முடியவில்லை. நாங்கள் ப்ளைஓவர் உச்சிக்கு வந்தபொழுது எல்லா வண்டிகளும் டிராபிக் ஜாமில் சிக்கியிருந்தன.

டிரைவர் தன் மொபைல் எடுத்து ஏதோ நம்பருக்கு டயல் செய்தான். “யாரு அவனு?’ என்று நான் கேட்டேன். “என் மச்சான் சார்” என்றான் தமிழில். பதட்டம். “அவனுக்கு என்ன?” என்று கேட்டேன். “தெர்ல சார். எங்க வூடு இங்க தான். என்ன பிரச்னையோ?” என்று சொல்லிவிட்டு மறுபடியும் மொபைலை அமுக்கினான். மறுமுனையில் யாரும் எடுக்கவில்லை போலும். “இதுங்களுக்கு வாங்கி குடுத்து என்ன லாபம் சார்? எங்கயாவது வச்சிட்டு போயிடும். நமக்கு எதனா எமெர்ஜென்சி இருந்தா இவளுக்கு போன் பண்ணுவோம் ஆனா அது எங்கயாவது சுத்திகினிக்கும்”

வண்டிகள் நகருவதாக இல்லை. டிரைவர் என்னிடம், “ஒரு நிமிஷம் சார்” என்று கூறிவிட்டு, ஆட்டோவை விட்டு இறங்கி, இடது பக்கமாக ப்ளைஓவர் ரோட்டிற்குச் சென்று கீழே பின்னால் திரும்பி பார்த்தான். எம்பி எம்பி பல முறை பார்த்தான். மறுபடியும் மொபைலை அமுக்கினான். பதில் எதுவும் இல்லை. அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை.  கீழே இறங்க ஒரு இரண்டடி எடுத்து வைத்தான். அப்பொழுது வண்டிகள் நகர ஆரம்பித்தன. ஓடி வந்து ஆட்டோவை கிளப்பினான்.

“உங்க மச்சான் கண்ல படலையா?”.

“இல்ல சார். அவனும் போன எடுக்க மாட்றான். என் பொஞ்சாதியும் போன் எடுக்க மாட்றா. என்ன ஆயிடுச்சோ?”

மறுபடியும் ஆட்டோ நின்றது. மறுபடியும் அவன் போன் செய்தான். “உன்ன கீள எறக்கிவிட்டு நான் யு டர்ன் பண்ணிக்கினு போறன் சார்”.

“வீடு கிட்ட தானா?”

“ஆமாம் சார்.”

ஒரு வழியாக கீழே இறங்கிவிட்டோம். நான் ஆட்டோ விட்டு இறங்கினேன். நான் இறங்கும் போழுதே அவன் மறுபடியும் மொபைலில் மச்சானையோ மனைவியையோ கூப்பிட்டுக் கொண்டிருந்தான். நான் கொடுத்த பணத்தை எண்ணிப் பார்க்காமலே பைக்குள் வைத்தான்.

டிராபிக் வார்டன் வண்டிகளை நிறுத்திக் கொண்டிருந்தான். எங்களை சாலையைக் கடக்கச் சொன்னான். நான் கடக்கும்பொழுது ஆடோ டிரைவர், ‘ஹலோ. இன்னாசி?” என்று கேட்பது காதில் விழுந்தது. அவனுக்கு என்ன பதில் வந்தது என்று தெரியவில்லை.

சாலையை கடந்த பின் திரும்பி பார்த்தேன். ஆட்டோவை ஒரு பஸ் மறைத்திருந்தது. தூரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் சப்தம் கேட்டது.

oOo

ஒளிப்பட உதவி- Onigiri and Arancini

 

 

சிசு

ஹரன் பிரசன்னா

baby

ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஒரு முறத்தில் வைத்து கையில் தரப்பட்ட குழந்தையா  இது என்று வெறித்துப் பார்த்துக்கொண்டே இருந்தாள் உமா. ட்ரைனில் சுழற்றி அடிக்கும் காற்றில் கையைக்  காலை  உதறிக்கொண்டு அவள் மார்போடு ஒட்டிக்கொண்டது அந்தப் பதினைந்து நாள் குழந்தை. பக்கத்தில் சந்துரு எதையோ யோசித்தபடி எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தான். திடீர் திடீரென குழந்தையைப்  பார்ப்பதும் உமாவைப்  பார்ப்பதும் என அவன் நிலையில்லாமல் இருந்தான்.

லேசாக நரைக்கத் தொடங்கியிருந்த தனது கூந்தலை ஒதுக்கி காதுக்குப் பின்னே சொருகிக் கொண்டாள் அவள். நடுவகிடெடுத்து மேல் நெற்றியில் பொட்டு வைத்திருந்தாள். தான் இப்போது பெண்ணா அல்லது பொம்பளையா என்று அவளுக்கு அடிக்கடி சந்தேகம் வருவதுண்டு. 35 வயதில் நரைக்குமா என்பதைவிட ‘நரை வந்துட்டு ஒரு பூச்சி பொட்டு வல்லையே’ என்ற கேள்வியை எந்நேரமும் சித்ரா அத்தை கேட்டுவிடக்கூடும் என்பதே அவளது கலக்கமாக இருந்தது. இனி அவள் கேட்கமுடியாது. இது என் குழந்தைதான். என் குழந்தையேதான்.

மெலிந்து கருத்து எதிலும் கவனமின்றித் தவிக்கும் தன் கணவனைப் பார்த்தாள். அவனுக்கு மீசை எப்போதோ நரைத்துவிட்டது. இரண்டு நாள் சவரம் செய்யாத முகத்தில் நரை ஆங்கங்கே எட்டிப் பார்த்தது. முதல் நரை கண்ணில்பட்டபோது அவளுக்குள் மெல்ல ஒரு பயம் எழுந்தது இப்போதும் நினைவில் இருக்கிறது. ‘இதெல்லாம் ஒரு பிரச்சினையாட்டி. அவனவனுக்கு 50 வயசுல புள்ள பொறக்குது. உங்க மாமா கடைசில புள்ள பெத்தப்ப 52 வயசு. நம்ம சரவணனை பெத்தேன்’ என்றாள் சித்ரா அத்தை.

சித்ரா அத்தையிடமிருந்து தப்பிப்பதற்காகவாவது ஒரு குழந்தை பிறந்திருக்கலாம். ஆனால் பிறக்கவில்லை. இரண்டு பேருக்கும் எந்தக் குறையும் இல்லை. முதல் நாள் முதல் நேற்று வரை சந்துரு அதே வேகத்தோடும் அதே ஆசையோடுதான் இருக்கிறான். ஒருவேளை அவனுக்குள்ளும் எல்லாம் விட்டுப் போயிருக்குமோ? தெரியவில்லை. ஆனால் இருக்காது. தன் கணவனின் வேகம் தனக்குத் தெரியாதா என்று நினைத்துக்கொண்டாள். உண்மையில் அவளுக்கு என்னவோ விட்டுத்தான் போயிருந்தது.

சொல்லி வைத்ததுபோல் எந்தக் குறையும் இல்லை என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் குழந்தை இல்லை என்ற குறை மிகப்பெரியதாக மாறி அவளைச் சுழற்றி அடித்தது. வெளியில் எல்லோரும் போல் சிரித்து எல்லோரும் போல் உடுத்திக் கொண்டாலும் உள்ளே எப்போதும் ஒரு கரும்பாறையைச் சுமந்துகொண்டே நடப்பது போல் இருந்தது. ஏனோ ஒரு கருகூட தங்கவே இல்லை. ஒவ்வொரு மாதமும் சரியாக உட்கார்ந்தாள். தள்ளிப் போனதுகூட இல்லை. யாரும் இவளை மலடி என்றோ வேறுவிதமாகவோ பெரிதாகக் குறை சொல்லவில்லை. ஆனால் அவர்கள் பார்வையிலேயே அடுத்து அவர்கள் கேட்க வரும் கேள்வியை இவளால் படிக்கமுடிந்தது. முதலில் அழுகை, பின்பு கோபம், பின்பு சலிப்பு, பின்பு அவளே முந்திக்கொண்டு சொல்லிவிடுவாள். ‘டாக்டர்ட்ட காமிச்சிட்டுத்தான் இருக்கோம்.’ மிக சமத்காரமாக சித்ரா அத்தை ‘நா கேக்கலியே இப்போ’ என்று சொல்லிவிட்டு, ‘அதெல்லாம் வரும், ரெண்டு பேர் வீட்டுலயும் புள்ளைக்கா குறைச்சல்’ என்பாள்.

சந்துரு எதிர்க்காற்றின் சுகத்தில் உறங்கத் தொடங்கியிருந்தான். நான்கு நாள்களாகவே அவனுக்கு உறக்கமில்லை. எப்போதும் ஒரு பதற்றத்தில் இருப்பதை அவள் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். இவளுக்குள்ளும் பெரிய பதற்றம் இருந்தது. 35 வயதில் ஓடியாடி ஒரு குழந்தையை வளர்க்க முடியுமா? ஆனால் அதை மீறிய நம்பிக்கை இருந்தது. வெறி இருந்தது. கல்யாணம் ஆகி பத்து வருடங்களில் ஒரு குழந்தையில்லை என்பது அத்தனை பெரிய விஷயமா? கையில் ஒரு ரோஜாக்கூட்டத்தின் பஞ்சுப்பொதியென வெளிர்சிகப்பு நிறத்தில் சிசு ஒட்டிக்கிடக்கும்போதுதான் தெரிகிறது, அது நிஜமாகவே ஒரு பெரிய விஷயம்தான் என.

குழந்தையை உடலோடு இறுக்கிக்கொண்டாள். சந்துரு அவள் தோள்மேல் சாய்ந்து விழுந்தான். ஏனோ அவளுக்கு நிறைவாக இருந்தது. காரணமில்லாமல் கண்ணீர் வந்தது. குழந்தை இல்லை என்று இனி அழவேகூடாது என முடிவெடுத்தது நினைவுக்கு வந்தது. குழந்தையை மெல்லத் தூக்கி முகர்ந்து பார்த்தாள். ஆசை தீர அழவேண்டும் போல் இருந்தது. மீண்டும் முகர்ந்தாள். உடலெங்கும் பால் வாசனை. மீண்டும் மீண்டும் முகர்ந்தாள். முத்தமிட்டாள். அவள் உள்ளம் வெறிகொண்டது. சந்துரு இவளைக்கிடத்தி உடலெங்கும் நுகரும்போது ‘இது என்ன லூஸாட்டம்’ என்றபோது அவன் சொன்னான், ‘ஒரு வெறின்னு வெச்சிக்கோ. ஒனக்குப் புரியாது’ என்று. இதுவும் அதே போல்தானா? அல்லது வேறு ஒரு விதமா? ஆனால் நிச்சயம் இது ஒரு வெறிதான். எல்லாமே தன்னுடையது என்னும் வெறி. உடலெங்கும் ஒரு நடுக்கம் பரவி கால் நுனி பலமிழந்து தலைசுற்றுவது போல் இருந்தது. ஒரு கையில் சந்துருவைப் பிடித்துக்கொண்டாள். அந்த வெறியுடன் முதல்முறை அவன் இவள் கையைப் பிடித்தபோது இருந்த அதே வேகம் அவளுக்குள் இப்போது இருப்பதை உணர்ந்துகொண்டாள்.

திடீரென கேட்ட மொபைல் சத்தத்தில் குழந்தை தூக்கம் கலைந்து சிணுங்கி அழுதது. சந்துரு பதறி போனை எடுத்தான். உமா சந்துருவை முறைத்துக்கொண்டே குழந்தையை கையில் ஊஞ்சல் போல வைத்துத் தாலாட்டினாள். சந்துரு போனில் என்னவோ பேசினான். அவன் முகம் கொஞ்சம் கலவரமடைந்தது போல் இருந்தது. போனை வைத்தவுடன் அவள் அவனிடம் ‘யாராம்?’ என்றாள்.

‘சித்ரா அத்தைதான். அம்மா ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி பாத்ரூம்ல கீழ விழுந்துட்டாங்களாம். பின்மண்டைல அடியாம். ஒரு மணி நேரமா நம்ம கூப்பிடுறாளாம், லைனே கிடைக்கலியாம். சீரியஸா ஒண்ணும் இல்லையாம்’ என்று சொல்லிக்கொண்டே குழந்தையைப் பார்த்தான்.

அவள் குழந்தையை அவளுக்குள் மறைத்தவாறே ‘உங்க அம்மா விழறது மொதவாட்டியா’ என்றாள்.

குழந்தையின் நட்சத்திரத்தையும் ராசியையும் சொல்லி குழந்தையைப் பெற்றவள் ஒரு முறத்தில் வைத்து தன்னிடம் ஒப்படைத்தபோது உமா சொன்னாள், ‘கடைசியா தாய்ப்பால் தந்துட்டு கொடுங்க. அதோட சரி. உங்களுக்கும் அதுக்கும் ஒரு உறவுமில்ல’ என்றாள். சந்துரு ‘சும்மா கெட’ என்றான். உமா பதிலுக்கு ‘நீங்க சும்மா கெடங்க’ என்றாள். அவள் சொன்னதை உடன்வந்த உமாவின் அக்கா கணவன் ஹிந்தியில் அந்தப் பெண்ணுக்குச் சொன்னான். அந்தப் பெண் கண்ணீருடன் ‘புரியுது’ என்று சொன்னதாக உமா ஊகித்தாள்.

அவளுக்கு 55 வயது ஆகியிருந்தது. உடல் பருத்து நிற்கமுடியாமல் உட்காரமுடியாமல் கஷ்டப்பட்டாள். அவள் மகளுக்கு 23 வயது. எதிர்பாராமல் இந்த 55 வயதில் ஒரு குழந்தை. அந்தக் குடும்பத்தால் இதை எதிர்கொள்ளமுடியவில்லை. அந்த ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருந்த உமாவின் ஒன்றுவிட்ட அக்கா கூப்பிட்டு விவரத்தைக் கூறினாள். அந்தப் பெண்ணின் குடும்பம் தனக்குத் தெரிந்ததுதான் என்றும் குழந்தையை யாருக்காவது தத்து கொடுக்கப்போகிறார்கள் என்று கேள்விப்படுவதாகவும் உமாவுக்குச் சரியென்றால் தன் கணவனைப் பேசச்சொல்வதாகவும் சொன்னாள்.

முதலில் ஒரு குழந்தையை தத்து எடுக்கலாமா என்று சந்துரு பல வருடங்களுக்கு முன்பு கேட்டபோது உமா அழுதுகொண்டே ‘எனக்கு வக்கில்லன்றீங்களா இல்ல உங்களுக்கு வக்கில்லயா’ என்று கேட்டதை பல நாள் சந்துரு மறக்கவே இல்லை என்பது அவளுக்குத் தெரியும். அதற்குப் பின் தத்து என்ற பேச்சை அவன் எடுத்ததே இல்லை. திடீரென்று உமா அவனைக் கூப்பிட்டு ‘ஒரு குழந்தை இப்ப ரெடியா இருக்காம். குஜராத்லேர்ந்து மாலினி அக்கா கூப்பிட்டா. அகமதாபாத்துக்கு உடனே போகணும்’ என்றபோது, அவளுக்குள் இருப்பது கோபமா உறுதியா குழப்பமா அல்லது அவசரமா என்பதை இவனால் புரிந்துகொள்ளமுடியவில்லை.

வீட்டின் ஓர் அறையில் நடக்கமுடியாமல் கட்டிலில் கிடக்கும் அம்மாவிடம் சென்று ‘கொழந்த தத்து எடுக்கலாம்னு அவ சொல்றா’ என்று சொல்லவும், இடுப்பு ஒடிந்து நடக்கமுடியாமல் தன் பெரிய வயிற்றை கட்டிலின் மீது கிடத்தி ஒரு ஓரமாகச் சாய்ந்து படுத்திருந்த அம்மா, கண்கள் சொருகி என்ன நடக்கிறதென்றே உணர்வில்லாமல் இருந்த அம்மா, மூத்திர நாத்தத்தில் சோர்ந்து கிடந்த அம்மா, அவன் எதிர்பாராத வேகத்தில், உயர்ந்த குரலில் ‘எவ குழந்தைய எவ வளக்கது? என்ன சாதி என்ன எழவுன்னு தெரியாததெல்லாம் என் வீட்டுக்குள்ள வரக்கூடாது, சொல்லிப்புட்டேன்’ என்று சொல்லிவிட்டாள்.

அந்த அறைக்கு வெளியே நின்றிருந்த உமா அதற்கெல்லாம் அசரவே இல்லை என்பது அவள் முகத்திலேயே தெரிந்தது. உமா ஒரு பயந்த சுபாவம் உள்ளவள் என்று மட்டுமே சந்துரு நினைத்திருந்தான். உள்ளூர சின்னதாக ஒரு வீம்பு உண்டு என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் இத்தனை தைரியம் அவளுக்குள் இருப்பது ஆச்சரியமாக இருந்தது. தத்து குழந்தை வேண்டாம் என்றபோதும் அதே உறுதி, இப்போது வேண்டும் என்னும்போதும் அதே உறுதி. இவளைப் புரிந்துகொள்ளவே இல்லையோ என்றும் நினைத்தான். அம்மாவின் அறையை விட்டு வெளியே வந்தவனிடம் மிக நிதானமாக கொஞ்சம் குரலை உயர்த்தி அவன் அம்மாவுக்கும் கேட்கும் வண்ணம் சொன்னாள், ‘உடனே கிளம்பணும்’ என்று. உள்ளே அம்மா விசும்பும் குரல் கேட்டது. சந்துரு ஒரு நிமிடம் யோசித்துவிட்டு உமாவுடன் கிளம்பிப் போனான். போகும் வழியில் ரயிலில் அவனிடம் ‘அதென்ன எழவுன்றது? உங்கம்மாவுக்கு இருக்கு ஒரு நாள்’ என்று சொன்னாள். சந்துரு ‘விடு’ என்றான்.

‘கோர்ட்ல எழுதி வாங்கணும். அதெல்லாம் நான் பாத்துக்கறேன். இன்னைக்கு நல்ல நாளு, குழந்தையை வாங்கிக்கோங்க’ என்றான் கூட வந்த உமாவின் அக்கா கணவன். பெற்றவள் குழந்தையை கடைசியாக ஒரு தடவை முத்தமிட்டுவிட்டு உமாவிடம் தந்தாள். உமா கைகள் நடுங்க கண்ணீர் கலங்க குழந்தையைப் பெற்றுக்கொண்டு அவளிடம் ‘இனிமே என்னையும் என் குழந்தையை மறந்துடுங்க’ என்று சொல்லிவிட்டு பதிலுக்குக் கூட காத்திராமல் வெளியேறினாள். பின்னால் அழும் அந்தப் பெண்ணின் கண்ணீர் வெள்ளமென தன்னைச் சூழும் முன்பு அதைக் கடந்துவிடவேண்டும் என்று எண்ணி குழந்தையை எடுத்துக்கொண்டு ஓடுபவள் போல விரைந்து நடந்தாள்.

காற்றில் அசையும் பொருள்களின் ஒலியைக் கேட்டு ட்ரைனில் மலங்க மலங்க விழித்துக்கொண்டு வந்தது குழந்தை. எல்லா வகையிலும் சட்ட ரீதியாகவும்கூட இனி இது தன் குழந்தை என்ற நினைப்பே அவளை மலரச் செய்தது. குழந்தை அவள் மேல் ஒண்ணுக்கிருந்தபோது வாயை மூடிச் சிரித்தாள். சுற்றிலும் யாருமே இல்லாததுபோல் தனது உலகத்தில் தன் குழந்தையுடன் தான் மட்டுமே இருப்பதாக அவள் நடந்துகொண்டாள். இனி சித்ரா அக்காவின் கேள்விகளுக்கு பதில் சொல்லலாம். மாமியாரின் முகத்தை தைரியமாக ஏறெடுத்துப் பார்க்கலாம். குழந்தையைப் பாக்கதே பெரிய பாடா இருக்கு என்று உறவினர்களிடம் அலுத்துக்கொள்ளலாம். எல்லாவற்றையும்விட சந்துரு இழுத்துப்பிடித்து இறுக்கும்போது இந்த வாட்டியாவது குழந்தை பிறக்குமா என்ற எண்ணம் இல்லாமல் அவனுக்கு ஈடுகொடுக்கலாம்.

‘அம்மாவுக்கு எப்படி இருக்கோ?’ என்றான் சந்துரு. உடனே உமா ‘சித்ரா அத்தை குழந்தை வந்த நேரம்னு ஆரம்பிக்காம இருக்கணும். இதுல குழந்தையோட நட்சத்திரமும் ராசியும் உங்கம்மாவோட நட்சத்திரமும் ராசியும் ஒண்ணு. சித்ரா அத்தை என்ன என்ன பேசப்போறாளோ’ என்றாள். ‘அவ வாய் மட்டும்தான், உள்ள ஒண்ணும் இல்ல. நீ அவ பேசறதையெல்லாம் காரியமாக்காத’ என்றான். அவள் கொஞ்சம் யோசித்து, ‘ஒங்களுக்குமே அப்படி தோணுதோ’ என்றாள். அது காதில் விழாதது போல, குனிந்து குழந்தையைப் பார்த்துச் சிரித்து, குழந்தையைச் சுற்றியிருந்த துணியை நன்றாக முழுக்க மூடிவிட்டான். ‘பொம்பளை குழந்தை. இப்படி கிடைக்கிறதெல்லாம் அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும். எழுதி வெச்சி காத்துக்கிட்டு இருக்கிறவங்களுக்கே கிடைக்கலை. அந்தம்மா பணம்கூட வேண்டாம்னு சொல்லிட்டாங்களாம், நல்லா வளர்த்தா போதும்னு சொல்லிட்டாங்களாம், உங்கக்கா வீட்டுக்காரன் சொன்னான்’  என்றான். உமாவுக்கு கண்ணீர் துளிர்த்தது. யாருக்கும் தெரியாமல் கண்ணைத் துடைத்துக்கொண்டாள். ‘பேரு என்ன வெக்கலாம்? எங்க வீட்டுல அம்மா பேரை வைக்கதுதான் வழக்கம்’ என்றான். உமா பதிலே பேசாமல் குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

ட்ரைனை விட்டு இறங்கி ஆட்டோவைப் பிடித்து வீட்டுப் படியேறும்போது சந்துருவுக்கு ஏனோ பயமாக இருந்தது. உமா எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாசலில் நின்று சத்தமாக ‘சித்ரா அத்தை, ஆரத்தி கரைச்சு வெக்க சொன்னேனே, கொண்டு வாங்க’ என்றாள். சித்ரா அத்தை வேகமாக ஆரத்தியுடன் வந்து எதுவும் சொல்லாமல் ஆரத்தி எடுத்துவிட்டு, சந்துருவிடம் மெல்ல ‘அம்மாவுக்கு நல்ல அடி, ஆஸ்பத்திரி வேணாங்கா, இந்த தடவை பொழைக்கறது கஷ்டம்தான்’ என்றாள். சந்துரு வேகமாக உள்ளே ஓடினான். வலது காலை எடுத்து வைத்து நிதானமாக உள்ளே சென்ற உமா, மாமியாரின் அறை வாசலில் ஓரமாக நின்றுகொண்டாள்.

சந்துரு அவன் அம்மா படுத்துக்கிடந்த கட்டிலில் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு ‘என்னம்மா எப்படி இருக்க? ஹாஸ்பிடல்ல வெச்சு பாத்தா சரியாயிடும்’ என்றான். அவள் கண்கள் எதையோ தேடி வாசலில் நின்ற உமாவிடமும் உமா கையில் இருந்த குழந்தை மீதும் நிலைத்தன. சந்துரு ‘பொம்பள குழந்தைம்மா’ என்றான். அவள் கண்களில் நீர் வழிந்தது. ‘உள்ளே வரச் சொல்லு’ என்றாள். ‘இல்லம்மா, ஒனக்குப் பிடிக்கலைன்னு தெரிஞ்சும்… வேற வழி தெரியலைம்மா… இப்படி கிடைக்கிறதே அதிர்ஷ்டம்’ என்றான் மன்னிப்புக் கேட்கும் குரலில்.

அவள் சொன்னாள், ‘அது எப்ப நம்ம வீட்டுக்குள்ள வந்துடுச்சோ, அது நம்ம வீட்டுக் குழந்தை. என்னவோ தோணிச்சு அப்ப சொன்னேன். இப்ப இப்படி தோணுது இப்படி சொல்றேன். இப்ப சொல்றதை எடுத்துக்கோ. உள்ள சாமி ரூம்ல அட்சதை இருக்கு, எடுத்துட்டு வா’ என்றாள்.

வெளியில் நின்றிருந்த உமா சத்தமில்லாமல் குலுங்கி குலுங்கி அழுதுகொண்டிருந்தாள். சந்துருவின் அம்மா குரலை உயர்த்தி ‘எல்லாம் போதும். வேணுங்கிறது அழுதாச்சு. இதுதான் கடைசி. அழுது முடி’ என்றவள், ‘ஏய் சித்ரா, அந்த அட்சதையைக் கொண்டு வா’ என்றாள். அட்சதை கொண்டு வந்த சித்ராவிடம் ‘என் ராசியாம்லா. எனக்கு சாவே இல்லைல்லா’ என்றாள். அதற்கு அவள், ‘குழந்தை அப்படியே உங்க ஜாடைல இருக்கு’ என்றாள்.

oOo

ஒளிப்பட உதவி – Pinterest

குளிர்

விஷால் ராஜா

train

எதிர்பார்க்காத குளிர். இன்று விடியற்காலை சென்னை வந்திறங்கியது முதல் உடல் குளிரில் நடுங்கி உதறியபடியே இருக்கிறது. நான் அணிந்திருந்தது அரைக்கை சட்டை வேறு. முழங்கைகளை பிணைத்துக் கட்டினால் உள்ளங்கை ஜில்லிட்டு கூசியது. ரயில் நிலையத்தில் கூட்டம் இல்லை. ரயில் வருகிறதா என்று தண்டவாளத்தோடு பார்த்தேன். கண் தூரம் வரைக்கும் வானம் இருள் பரப்பாக தாழ்ந்திருந்தது. அடுத்த ரயில் எப்போது என்று பயணச் சீட்டு கொடுக்குமிடத்திற்கு பக்கத்தில் இருந்த பெரிய நேர அட்டவணையில் தேடினேன். இன்னும் அரை மணி நேரம் இருந்தது. சோர்வுடன் கையில் பிடித்திருந்த துணிப்பையை கீழே வைத்தேன்.

குளிர் குறைவதுப் போல் தெரியவில்லை. பையில் அவசரத்திற்கென்று வைத்த ஒரு குளிர் சால்வை உண்டு. ஆனால் அதை தேடி எடுக்க வேண்டும். துவைக்காத அழுக்குத் துணிகள் சுருட்டிக் கிடக்கும் பையை பிரித்து துழாவுவதற்கு அசூயையாக இருந்தது.

குளிர் பொறுக்காமல் சூட்டிற்காக கைகளை உரசி கன்னத்தில் வைத்தேன். பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. ரயில் நிலையத்திற்கு பின்னால் , சந்தை தெருவில் கடை வாசல்கள் தோறும் கூட்டி பெருக்கி நீர் தெளித்துக் கொண்டிருந்தார்கள். சாலைக்கு மறுபக்கம் இருந்த பால் கடையில் அப்போதுதான் பால் வரத்து நிகழ்ந்துக் கொண்டிருந்தது. லாரியில் வந்த பால் டப்பாக்களை இறக்கி வைத்து வரிசையாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள். இன்னொருபக்கம் இறக்கிய டப்பாக்களை பையன்கள் வேகமாக சைக்கிளில் ஏற்றி வீடுகளுக்கு கொடுக்க விரைந்து கொண்டிருந்தார்கள். கடை முதலாளி போலிருந்தவர் ஒவ்வொரு டப்பாவையும் கணக்கெடுத்து ஒரு சின்ன சீட்டில் குறித்துக் கொண்டிருந்தார். அந்த கடையைத் தவிர சுற்றி வேறெங்கும் பெரிதாக சலனம் இல்லை.

பயண அசதியில் எனக்கு முதுகு வலிப்பது போல் இருந்தது. அங்கிருந்து விலகி அலைபேசியில் இயர்போனை பொருத்தி பாட்டுக் கேட்டவாறு ரயில் நிலையத்தின் சிமென்ட் இருக்கையில் வந்து அமர்ந்தேன். பக்கத்தில் தேநீர்க் கடையில் வானொலி சத்தமாக பாடிக் கொண்டிருந்தது. என் காதில் கேட்டுக் கொண்டிருந்த பாடலும் கடையின் ஒலிப் பெருக்கி பாடலும் ஒரு மாதிரி கலவையாகி வெறும் இரைச்சலாக மீந்தன. நான் என் அலைபேசியில் பாட்டு சத்தத்தை கூட்டினேன். ஒன்றிரண்டு நிமிடங்களில் காது வலிப்பது போலானது. இயர்போனை கழற்றி கால்சராயில் வைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். கதிர் எழும் தடயமே எங்கும் இல்லை. வானில் இருள் விலகி பனித் திரை விழுந்திருந்தது. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கும் அசைவற்ற பெரும் உயிர் போல் பனி கண் நிறைய எங்கிலும் இருந்தது.

அப்போது மத்திம வயதை கடந்த இரண்டு பெண்கள் உயரமான நீல நிற பிளாஸ்டிக் பைகளை தூக்கியபடி வந்து எனக்கு அடுத்து இருந்த இருக்கையில் அமர்ந்தார்கள். இரண்டு பேருமே குளிருக்காக தலையைச் சுற்றி கழுத்துக்குட்டை அணிந்திருந்தார்கள். விடிவதற்கு முன்பே அவர்கள் குளித்து முடித்து குங்கும முகத்தில் புத்துணர்ச்சியோடு இருப்பதை பார்த்ததும் தூக்கக் களைப்பில் என் முகம் காய்ந்து வாடியிருப்பது உணர்ச்சியில் தட்டியது. அனிச்சையாக கைக்குட்டையால் முகத்தை அழுத்த துடைத்துக் கொண்டேன். அவர்கள் கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் பைகள் பெரிதாக இருந்தன. ஆனால் கனமாகத் தோன்றவில்லை. முதலில் ஏதோ உடுப்புத்துணி என்று நினைத்தேன். பின்னர் அவர்கள் அவற்றை பிரித்தபோதுதான் உள்ளே சாமந்தி பூக்கள் குவிந்து கிடப்பது தெரிந்தது. இருவரும் முந்தானையில் பூக்களை கொட்டி வைத்து பேச்சுக் கொடுத்தப்படியே நூல் கோர்த்து அவற்றை தொடுக்க ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்திற்கு நூலோடு வேகமாக இழைந்து ஓடி பூக்களை இணைத்து விலகும் அவர்களின் விரல்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். பின் அதில் சுவாரஸ்யமிழந்து அலைபேசியை எடுத்து நேரம் பார்த்துவிட்டு திரும்பவும் பையில் வைத்தேன்.

மரங்களில் சாய்ந்து வீசிய மென் காற்றில் சாமந்தி மணமும் கலந்து வந்தது. அது நாசியில் மயக்கமாக தங்க இன்னொருபுறம் பனியில் தலையைச் சுற்றி குளிரேறிக் கொண்டிருந்தது. காதுகளை அழுந்த மூடி கால்களுக்கு நடுவே முகத்தை புதைத்துக் கொண்டேன். அருகில் யாரோ நடந்து வரும் காலடி சத்தம் கேட்டது. இயல்பாக திரும்பி பார்த்தேன். நல்ல உயரமும் கனமும் கூடிய வாட்டசாட்டமான மனிதர். மடிப்பு விழாத படு நேர்த்தியான உடை. பளபளவென்றிருந்த போலீஸ் காலணிகளில் சீராக அடிவைத்து நடந்து வந்தார். அவரைக் கண்டதும் பூக்கட்டிக் கொண்டிருந்தவர்களில் ஒருத்தி “வணக்கம் சார்” என்று பூக்கள் விழாதவாறு முந்தானையை பத்திரமாக பிடித்துக் கொண்டு பாதிக் கையில் வணக்கம் வைத்தாள். மற்றவள் எதுவும் சொல்லாமல் மரியாதையாக சிரிக்க, காவல் அதிகாரி இருவரையும் பார்த்து “வணக்கம். வணக்கம்” என்று சொல்லிவிட்டு என் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டார். அதுவரைக்கும் காலியாக இருந்ததுப் போலிருந்த சிமென்ட் பெஞ்ச் அவர் உட்கார்ந்ததும் அடைத்துக் கொண்டதுப் போலானது.

காவல் அதிகாரி என்பதாலேயே என்னில் ஒரு சின்ன ஜாக்கிரதை உணர்வு தொற்றிக் கொண்டது. அது ஜாக்கிரதை உணர்வா அல்லது பயமா என்று துல்லியமாக சொல்ல முடியவில்லை. அவரை பார்ப்பதை தவிர்த்தேன்.

நாங்கள் அமர்ந்திருந்த சிமென்ட் இருக்கைக்கு பின்னால் ரயில் நிலையத்தின் வெளிப்புறச் சுவர் சிதைந்து பிளந்திருந்தது. அதை ஒட்டிய புதர் சூழ்ந்த ஒற்றையடி பாதையில் ஒரு ஆள் விக்கி விக்கி நடந்துவருவதை பார்த்தேன். அவருடம்பில் இடது கை மட்டும் தான் தெரிந்தது. வலது கை சட்டைக்குள் இருக்கும் என நினைத்துக் கொண்டேன். காயம்பட்டு கட்டுப்போட்டிருக்கலாம். அல்லது வலது கையே இல்லாமலும் இருக்கலாம். சரியாக அனுமானிக்க முடியவில்லை. வெளிப்புற பாதைக்கும் ரயில் நிலைய நடைமேடைக்கும் நடுவே பள்ளமாக இருந்தது. கொஞ்சம் ஆழமான பள்ளம். அதனாலயே அந்த வழி பயன்படுத்தப்படாமல் பழக்கத்தின் சுவடற்று இருந்தது. வளர்த்தியான மனிதர் என்றால் பரவாயில்லை. அவர் குள்ளம். நடைமேடையில் ஒரு கையை ஊன்றி மூச்சுபிடித்து எக்கி மறுபக்கம் புரண்டு தவழ்ந்தே அவர் மேலே ஏறினார். சுற்றி நடந்து அவர் நேர் பாதையிலேயே வந்திருக்கலாம். ஒற்றை கையில்,இது வேண்டாத கஷ்டம். ஆனால் அவர் சிரமம் எதையும் காட்டிக் கொள்ளாமல் துள்ளலாக எழுந்து அழுக்கு சட்டையில் ஒட்டிய மணலை துடைத்துக் கொண்டார். இப்போது அவரை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது. வலது கையை சட்டைக்குள் தான் மறைத்திருந்தார். அது துண்டுபடவில்லை. ஆனால் நடக்கும்போது லேசாக ஒரு பக்கம் தாங்கினார். சட்டை, கால்சராய்க்கூட நைந்து சாயம் போயிருந்தது. இருந்தும் உடல்மொழியில் ஒரு அசாதாரணமான உற்சாகம்.

பழக்கமானவர் போல் அவர் நேராக காவல் அதிகாரிக்கு பக்கமாக சென்றார். செல்லும்போது வழியில் என் துணிப்பையை அவர் மிதிப்பதுப் போல் வர நான் அதை தள்ளி வைத்தேன். காவல் அதிகாரி அவரை கண்டுகொள்ளவில்லை. அவர் இன்னும் பக்கத்தில் போய் கூன் போட்டு குழைந்து சிரித்தார். காவல் அதிகாரி முகம் கொடுக்காமல் “என்னடா?” என்றார்.

“ஆங்…ஆங்” அவருக்கு குரல் வரவில்லை. ஊமை வாய் முழுக்க சிரித்து ஒற்றைக்கையில் வணக்கம் மட்டும் வைத்தார். “ஆங்…ஆங்”

“சரி போ”. காவல் அதிகாரி விரட்டுவது போல் சொன்னார்.

அவர் அகலவில்லை. ஒரு அடி பின்னால் நகர்ந்து பரிதாபமாக பார்த்தார். பின் பொறுமையாக சட்டைக்குள் கை நுழைத்து வலது கையை எடுத்து வெளியே தொங்கவிட்டார். முட்டி எலும்பில் இணைப்பு முறிந்திருப்பது போல் முழத்திற்கு கீழே வலது கை தனிச் சதையாக ஆடியது. என்னை தாக்கியது குரூரமா அருவெறுப்பா என்று பிரித்து சொல்ல முடியவில்லை. உடனேயே அதை மறைத்துக் கொள்ள விரும்பினேன். ஆனால் மனம் அடங்கவில்லை. கண்களை விலக்க இயலாமல் மறை பார்வையில் அவருடைய வலது கையையே பார்த்துக் கொண்டிருந்தேன். வெளிக்காயம் எதுவும் இல்லை. ஆனால் அவரது முழங்கை உடைந்து துவண்டிருந்தது. சுண்டிவிட்ட எலாஸ்டிக் நூல் கடைசி விசையில் மெல்ல அதிர்வது போல் அது முன்னும் பின்னும் ஆடியபடி இருந்தது. அவர் அதை இன்னும் அதிகம் அசைத்தவாறு காவல் அதிகாரிக்கு அருகாமையில் சென்றார். “ஆங்…ஆங்”. அவர் குரல் இரைந்து யாசித்தது. காவல் அதிகாரி அதை கேட்காததுப் போல் அமர்ந்திருக்க, அவர் சற்று குரலை உயர்த்தி மறுபடியும் “ஆங்…ஆங்” என்றார். காவல் அதிகாரி அவரை பொருட்படுத்தவே இல்லை. உடனே அவர் இடது கையால் தன் வலதுப் புற முழங்கையை வேகமாக ஆட்டிவிட்டார். அது தானாக ரப்பர்த் துண்டு போல் வேகமாக ஆடியது. எந்த நொடியும் பிய்ந்து தனியே கீழே விழுந்துவிடும் என்பது போல். எனினும் அவரிடம் வலி தெரியவில்லை. பொம்மை விளையாட்டு என திரும்பவும் அவரே முழங்கையை பிடித்து நிறுத்தினார். காவல் அதிகாரி துளிக்கூட அசைந்துக் கொடுக்கவில்லை. எனக்கு தான் அக்காட்சியை பார்க்கவே மனம் திணறியது. இன்னொரு பக்கம் பனி வேறு. குளிருக்காக மீண்டும் கைகளை இணைத்து கட்டிக் கொண்டேன். என் முழங்கைகளின் ஆரோக்கியத்தை திடத்தன்மையை உணரும்போதே எதிரே அவர் பஞ்சுப் பொதிப் போல் தன் கையை அசைத்து இரைஞ்சுவது கண்களிலேயே தேங்கிக் கொண்டிருந்தது.

“ஆங்…ஆங்”.

நடுங்கி ஒடுங்கும் மிருகத்தின் சத்தம். ஆனால் அவர் குரலில் வலியின் துடிப்பே இல்லை. அதுதான் என்னை கூடுதலாக அச்சமூட்டியது. பையில் இருந்து காசை எடுத்து கொடுக்கலாமா என்று எனக்கே உறுத்தியது. ஆனால் அவர் என்னை கடந்தே காவல் அதிகாரியின் பக்கம் சென்றார். ஏன் என்னிடம் பிச்சை கேட்கவில்லை? காவல் அதிகாரியிடம் தெரியும் பிடிவாதமும் பரிச்சயமானத் தோரணையும் கூட என்னை குழப்பின. பூக்காரப் பெண்கள் சாமந்தியை தொடுத்தபடி அவ்வப்போது இங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சர்க்கஸ்காரன் அடுத்த வித்தைக்கு நகர்கிற மாதிரி அவர் இம்முறை தன் முழங்கையை பின்பக்கமாக மடக்கி பிடித்து பிறகு கீழே தொங்கவிட்டார். இரண்டு தடவை அதேப் போல் அவர் வலது கையை மடக்கி மடக்கி தொங்கவிட காவல் அதிகாரி வெறுப்பாக “என்னடா வேனும் உனக்கு?” என்றார்.

“ஆங்..ஆங்”.அவர் தேநீர் கடையை சுட்டிக் காட்ட, காவல் அதிகாரி சலிப்பாக தலையை தடவினார். உணர்ச்சி காட்டாமல், “இந்தா” என்று தன் சட்டைப் பையிலிருந்து இருபது ரூபாய் தாளை எடுத்து அவரிடம் கொடுத்தார்.அதுவரை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தவர் உடனேயே உற்சாகமாகி இடது கையால் காவல் அதிகாரிக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு காசைப் பெற்றுக் கொண்டு தேநீர்க் கடையை நோக்கி நடந்தார். அவர் தாங்கி நடந்து விலகியதும் காவல் அதிகாரி என் பக்கம் திரும்பி ஏளனமாக புன்னகைத்தார். நானும் மழுப்பலாக சிரித்தேன்.

“மோசமான ஆள் தம்பி அவன்.” தேநீர்க் கடையின் திசையில் கண்ணோரமாக பார்த்துவிட்டு எச்சரிப்பதுப் போல் தொடர்ந்தார். “பார்க்கத்தான் கிறுக்கன் மாதிரி இருப்பான். ஆனா வெவகாரமானவன். பலே ஆள். சைக்கிள் திருடன்”

“அவரா?”.எனக்கு ஏதோ தொடர்பில்லாத வேறு விஷயம் பற்றி பேசுவது போலிருந்தது.

“அவனே தான். எந்த பூட்டையும் அசால்ட்டா ஒடைச்சு சைக்கிள திருடிருவான். எத்தனையோ வாட்டி சொல்லி பார்த்தோம். கேக்கவே இல்ல. அப்புறம் நாங்கதான் கைய ஒடைச்சு அனுப்பிட்டோம்”

நான் புரியாமல் விழிந்தேன். “நீங்களா?”என கேட்டு, பின் திக்கி “இல்ல. யாரு?யார சொன்னீங்க?” என்றேன்.

“நாங்கதான். ஸ்டேஷன்ல வச்சி ஒடைச்சு விட்டோம். பின்ன சொன்னா கேக்கனும்ல? ஊர்ல இருக்குறவன் பொருள எல்லாம் எவ வேணும்னாலும் தூக்கிட்டு போலாம்னா அப்புறம் எதுக்கு போலீஸ்?என்ன சொல்றீங்க”

எனக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை. மழுப்பலாக தலையாட்டினேன்.

“ஆங்…ஆங்”. தேநீர் கடைக்கு பக்கத்தில் நின்று சூடான காகித கோப்பையை கையில் பிடித்தவாறு அவர் காவல் அதிகாரியை நோக்கி சத்தம் கொடுத்தார்.

“என்னடா?”. காவல் அதிகாரியின் குரல் அதட்டலாக ஒலித்தது.

அவர் தன் கையில் இருந்த தேநீர் கோப்பையை காவல் அதிகாரியை நோக்கி நீட்டி உயர தூக்கி சமிக்ஞை காண்பித்தார். “எனக்கு வேணாம். நீயே குடி” என்று கூறிவிட்டு என் வசம் திரும்பி “நக்கல பார்த்தீங்களா?” என்றார் காவல் அதிகாரி.

என் மனம் வேறு யோசனையில் தன்னை இழந்துக் கொண்டிருந்தது. கடை வாசலில் நின்று இடது கையில் கோப்பையை பிடித்து வாயால் ஊதி ஊதி தேநீர் பருகிக் கொண்டிருந்தார் அவர். வலது முழங்கை தளர்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. பலவீனமான ஒரு மெல்லிய ஜவ்வுதான் அந்த முழங்கையை இன்னும் விழாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது.தோலுக்கடியே ரத்த வரியோடிய உள்சதை பரப்பு, தசை நார்கள், எலும்புகளை இணைக்கும் ஜவ்வு என எல்லாமும் ஒரே நேரத்தில் கவிச்சையாக என் மனதில் எழுந்தன. மனித உடலில் எல்லாமே வலுவற்றவை. சின்ன சமன் குலைவில் பிசகிவிடுபவை. நொறுங்குபவை. சாதாரண பேனாக் கத்தியில் கிழிந்துவிடுபவை. போலீஸ் அடியில் உடைபவை. பக்கத்தில் காவல் அதிகாரி எழுந்து நின்று நெட்டி முறித்து மறுபடியும் உட்கார்ந்துக் கொண்டார். எப்படி அவர் அந்த முழங்கையை உடைத்திருப்பார் என்று யோசித்தேன். லட்டியால் ஓங்கி அடித்து அல்லது கையை வெறித்தனமாக முறித்து மடக்கி… தூரத்தில் ஒரு ராட்சஸ ஓங்காரம். தொடர்ந்து தொண்டை அலறும் வலி ஓலம். பயமாக இருந்தது.

அலைபேசியை எடுத்து நேரம் பார்த்தேன். ரயில் வர வேண்டிய நேரம் தாண்டி தாமதாகிக் கொண்டிருந்தது. சீக்கிரம் வீட்டுக்கு போக வேண்டும். குளிர் வேறு தணியாமல் எரிச்சல் ஏற்படுத்தி கொண்டிருந்தது. அதற்குள் அவர் தேநீர் குடித்துவிட்டு மறுபடியும் எங்கள் திசையில் நடந்து வந்தார். காவல் அதிகாரியை கடக்கும்போது இடது கையால் வலது கையை தூக்கி வணக்கம் வைத்து விலகினார். நான் அவரை தவிர்ப்பதற்காக தண்டவாளத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என்னை தாண்டி சென்றார். “க்ரீச்” என்று எதிர் நடைமேடையில் ஒரு ரயில் தேய்ந்து நின்று பின் “பாங்” என்று கணைத்து கடந்துச் சென்றது. ரயில் சத்தம் தடதடத்து ஓய்ந்தபோது அருகாமையில் யாரோ மூர்க்கமாக காறி உமிழும் சத்தம் கேட்டு நான் துணுக்குற்று திரும்பினேன்.

“ச்சீ.பொறம்போக்கு”.பூக்காரிகளில் ஒருத்தி கை உடைந்த ஊமையனை பார்த்து கத்திக் கொண்டிருந்தாள். “பொறுக்கி நாய். எச்சக்கலை”

அவள் காறி துப்பியதில் சட்டை மேல் படிந்த எச்சிலை துடைத்துவிட்டு அடிக்குரலில் சத்தமாக சிரித்தார் அவர்.பின் ஒரு காலை ஊன்றி சுழன்று நடைமேடையில் இருந்து குதித்து மண்ணில் விழுந்து எழுந்து காய்ந்த மணல் பாதையில் விக்கியவாறே நடந்து சென்றார். நீல பிளாஸ்டிக் பைக்கு அண்டையாக தரையில் எச்சில் தடம் நுரையோடிருக்க அவர் விகாரமாக சிரித்தது மிஞ்சிய எதிரொலிப் போல் இன்னும் கேட்டது.

இன்னொரு பூக்காரி திட்டிக் கொண்டிருந்தவளின் கைபிடித்து “என்னக்கா?” என்று பதற்றமாக கேட்டாள்.

அவள் மெல்ல “இப்படி பண்ணி காட்டுறான் பொறம்போக்கு” என்று கையை மேலும் கீழும் அசைத்து சைகை காட்ட, கேள்விக் கேட்டவள் தலையிலடித்து “ச்சே பன்னாடை.” என்றாள்.

“அவனுக்கு போய் அந்தாள் காசு கொடுக்குறான் பாரு. அவன் ஒரு பைத்தியக்காரன் ”. தலை குனிந்தவாறு காவல் அதிகாரியை சுட்டி கிசுகிசுப்பாக சொல்லிவிட்டு அவள் மீண்டும் பூ தொடுக்கலானாள். காவல் அதிகாரி எதையும் கவனிக்கவில்லை.அவர் அலைபேசியில் என்னவோ செய்துக் கொண்டிருந்தார்.

“ஆமாக்கா.அவனுங்கள விடு” என்று மற்றவள் பிளாஸ்டிக் பையில் முந்தானையை உதறி உதிரிப் பூக்கள் கொட்டிவிட்டு

“யக்கா…புட்லூர்ல யாரோ ஒரு பொண்ணு வயித்துல பாம்பு வளருதாம். என் புள்ள கூட்டினு போய் காமினு உயிர எடுக்குறான்.. நாளைக்கு வர்றியா?போயிட்டு வந்துருவோம்” என்றாள்.

“வவுத்துல பாம்பு வளருதா? என்னடி சொல்ற?”

“ஆமாக்கா. இப்போதான் கலியானம் ஆன பொண்ணாம். முழுகாம இருக்கான்னுட்டு ஆஸ்பித்திரிக்கு கூட்டினு போயிருக்காங்க. அங்க மெசின்ல படம் புடிச்சு பார்த்தா வயித்துல பாம்பு வளருதாம். என் புள்ள நெட்டுல பாத்து சொன்னான்”.

“பார்ரேன்டி அம்மா.” அவர்கள் ஆச்சர்யமாக பேசிக் கொண்டிருக்க, நான் அயர்ச்சியோடு எழுந்தேன். “திருவள்ளுவர் வரை செல்லும் அடுத்த ரயில் பத்து நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும்” என்று ஒரு கரகர குரல் ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தது. நான் என் துணிப்பையை திறந்து சால்வையை தேட ஆரம்பித்தேன். குளிர் விடுவதாக தெரியவில்லை.

oOo

ஒளிப்பட உதவி – sabareesh seshadri

 

 

ஒரு சிறு காதல் கதை -ஓடோன் வோன் ஹார்வத் (மொழியாக்கம் – லிண்டா பேக்கர்)

வேனிற்காலம்தான் எவ்வளவு அமைதியாய் இருக்கிறது. அசாதாரண, அபௌதீக அமைதி.

எல்லாம் எப்போதும் இருந்தது போல்தான் இருக்கிறது; எதுவும் மாறவில்லை என்பது போல்தான் தெரிகிறது. சதுப்பு நிலங்களோ, பண்ணை நிலங்களோ, மலைகளின் ஃபிர் மரங்களோ, குளமோ எதுவும் மாறவில்லை. கோடை கழிந்தது என்பதையன்றி வேறில்லை. அக்டோபர் முடிந்தது. இப்போது மதியப்பொழுதும் முடிவுக்கு வரப்போகிறது.

விஷயம் இதுதான்- என் கண்ணில் விழுந்த ஒவ்வொரு பெண்ணையும் விரும்பினேன், அவளை முழுமையாய் அடைய விரும்பினேன்.

தொலைவில் ஒரு நாய் ஊளையிடுகிறது, மண்ணில் ஈரத்தில் நைந்த இலைகளின் மணம். கடந்த சில வாரங்களாக கடுமையான மழை பெய்கிறது, விரைவில் பனிப்பொழிவும் வந்துவிடும். இப்போது சூரியன் மறைந்து விட்டது, இறுகிய தரையில் அந்திப்பொழுது அடி மேல் அடி வைத்துத் தள்ளாடிச் செல்கிறது. புதர்களிடையே யாரோ பதுங்கிச் செல்வது போன்ற சலசலப்பு. திரும்பும் மேகங்களுடன் கடந்த காலமும் திரும்புகிறது.. உன்னைக் காண்கிறேன்- ஓ, சென்ற ஆண்டுகளின் தினங்களே! உன் மலைகள், உன் மரங்கள், உன் சாலைகள்- நாம் இப்போது ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள முடிகிறது.

நாமிருவர், நீயும் நானும். சூரிய ஒளியில் மிளிரும் உன் வெளிர்நிற கோடை ஆடை, அதனுள் எதுவுமில்லாதது போன்ற உன் ஆனந்தமும் நாணமின்மையும். கதிர்க் கற்றைகள் முன்னும் பின்னும் ஆடின, மண் உள்ளும் வெளியும் சுவாசித்ததும் வெம்மையாகவும் புழுக்கமாகவும் இருந்ததும் உனக்கு நினைவிருக்கிறதா? கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் படையெடுத்து வந்தது போல் காற்றின் ரீங்காரம். மேற்கில், அச்சுறுத்தும் புயல். நாமிருவர் மட்டும், கிராமத்தை விட்டு வெகு தொலைவில், குறுகிய  நெடிந்துயரும் ஒரு பாதையில். அதைக் கடந்து சோளக் கதிர்களுள் புகுந்து செல்கிறோம்- நீ என் முன் நடந்து செல்கிறாய்- அடக்கடவுளே, இதற்கெல்லாம் நீ என்ன செய்வாய்? ஆமாம், உன்னைத்தான் சொல்கிறேன், என் அன்புக்குரிய வாசகனே! உன்னிடம் ஏன் நான் இதைச் சொல்ல வேண்டும்? சரி வா, இதெல்லாம் வேண்டாம்! ஏதோ ஒரு முறை சோளக்கொல்லைக்குள் இருவர் புகுந்து மறைந்ததால் உனக்கென்ன? எப்படியும் அது உன்னை பாதிக்கப் போவதில்லை. வேறு எவரோ ஒருவரின் காதல் விவகாரம்தானே, இதைத் தவிர வேறு விஷயங்களுக்காக நீ கவலைப்பட வேண்டியிருக்கிறது- மேலும், இது நிச்சயமாக காதல் அல்ல என்பது வேறு.

விஷயம் இதுதான்- என் கண்ணில் விழுந்த ஒவ்வொரு பெண்ணையும் விரும்பினேன், அவளை முழுமையாய் அடைய விரும்பினேன். “ஆன்ம” பந்தம் என்று எதையும் நான் உணரவில்லை என்பது கடவுளுக்கே தெரியும். அவள்? அவள் என்னை முழுமையாய் நம்பினாள் என்று நினைத்தேன். அவள் என்னிடம் அத்தனை கதைகள் சொன்னாள், வண்ணங்கள் கொண்டும் இருண்மை நிறைந்தும் பல கதைகள்- அவளது வேலை பற்றி, சினிமா போனது பற்றி, குழந்தைப் பருவத்தைப் பற்றி- ஒவ்வொருத்தர் வாழ்விலும் நடக்கும் விஷயங்கள். ஆனால் அது எதுவும் எனக்கு சுவாரசியமாய் இல்லை, அவ்வப்போது நான் அவள் செவிடாகவும் ஊமையாகவும் இருக்கக்கூடாதா என்று நினைத்தேன். அப்போது நான் ஒரு முரடனாக இருந்தேன், தடித்தனமான வெறுமையின் திமிர் இருந்தது.

ஒரு நாள் அவள் திடீரென்ற ஒரு திடுக்கிடலுடன் அனைத்தையும் நிறுத்தி வைத்தாள்.

“ஏய்…” என்றாள் அவள்.

அவள் குரலில் வெட்கமும் வலியும் தெரிந்தது.

“நீ ஏன் என்னை விட மாட்டேன் என்கிறாய்? உனக்கு என் மேல் காதல் இல்லை, என்னைவிட மிகவும் அழகிய பெண்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்”

“நீ படுக்கையில் நன்றாக வேலை செய்கிறாய்,” என்று பதில் சொன்னேன், என்னுடைய மூர்க்கத்தனம் என்னையே மகிழ்விப்பதாய் இருந்தது. மேலும் பல முறை நான் இந்தச் சொற்களை ஆனந்தமாய்ச் சொல்லியிருப்பேன்- அப்போதெல்லாம் நான் இப்படிதான் இருந்தேன்.

நான் குனிந்து கொண்டேன். ஆர்வமில்லாதது போல் நடந்து கொண்டேன், ஒற்றைக் கண்ணை நெரித்துக் கொண்டு அவள் தலையின் வடிவத்தை கவனித்தேன். அவளது தலைமுடி ப்ரௌன் கலரில் இறந்தது, மிகவும் சாதாரணமான ப்ரௌன். சிகையலங்கார விளம்பரங்களின் புகழ்பெற்ற நடமாடும் மாடல்கள் செய்வது போல் அவள் தன் நெற்றியில் படியும் வகையில் தலைசீவிக் கொண்டிருந்தாள். ஆம், இதைவிட அழகிய தலைமுடி கொண்ட பெண்கள் இருக்கிறார்கள், வேறு பல வகைகளிலும் வசீகரமான பெண்கள் இருக்கிறார்கள்- ஆனால், சரி விடு! கடைசியில் எல்லாம் ஒரே இடத்துக்குதான் வருகிறது. தலைமுடி கருப்பாய் இருந்தாலும் சரி வெளிறி இருந்தாலும் சரி, நெற்றி மறைக்கப்பட்டிருந்தாலும் சரி, திறந்திருந்தாலும் சரி- .

“பாவம் நீ,” என்று அவள் திடீரென்று சொன்னாள், தனக்குத் தானே பேசிக் கொள்வதுபோல். என் கண்ணை நேருக்கு நேர் பார்த்து மென்மையாய் என்னை முத்தமிட்டாள். அதன்பின் போய் விட்டாள். அவளது தோள்கள் நிமிர்ந்தன, அவளது ஆடை தளர்ந்தது. நான் அவள் பின் பத்தடியோ என்னவோ ஓடினேன், பின் நின்றுவிட்டேன்.

அப்படியே திரும்பினேன். அதன்பின் மீண்டும் திரும்பிப் பார்க்கவில்லை.

பத்தடி தூரம் எங்கள் காதல் வாழ்ந்தது, நெருப்பாய்ப் பற்றி எரிந்து துவங்கிய கணமே அவிந்தது. ரோமியோ ஜூலியட்  காதல் அல்ல, கல்லறைக்குப் பின்னும் வாழும் காதல் அல்ல.

பத்தடிதான். ஆனால் அந்த ஒரு குறுகிய இடைவெளியில், மிகச் சிறிய இக்காதல் இதயப்பூர்வமாய், உக்கிரமாய் எரிந்தது- ஒரு தேவதைக் கதைக்குரிய மகோன்னதம் கொண்டிருந்தது.

oOo

நன்றி – Guardian 

சூடிக் கொடுத்த பாவை- தி. வேல்முருகன்

தி. வேல்முருகன்

“ஒங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி எம்பாவாய்…”

“ஆண்டாள் திருவடிகளே சரணம்”

ஒருமித்த பலரின் குரல்கள் சேர்ந்து ஒலித்து நின்றது தொடர்ந்து தீபாராதனை மணிச்சத்தம். பிறகு சட்டென்று நிசப்தம். பெருமாள் கோயில் காலை மார்கழி பஐனை முடிந்து தீபாராதனையும் முடிந்து விட்டது மனதில் வெறுமை. பிள்ளைகள் பள்ளிக்குப் கிளம்பிச் சென்று விட்டார்கள்  காலை நாலரை மணிக்கு எழுந்து தெருக்கூட்டி கோலம் போட்டு காலைக்கு இட்டிலியும் சட்டினியும் மதியத்திற்கு சாப்பாடும் செய்து அனுப்பியாயிற்று ‘நல்ல சோத்துக்கு ஆளாய்ப் பறக்கும் இந்த மனுசன் வீட்டுக்கு வந்து போயி மூணு மாசமாவது. நம்ம நினைப்புதான் கிடந்து அல்லாடுது, எங்க சாப்டூதோ எங்க நிக்குதோ’ என்று தன் கணவன் நினைப்பு வந்து அவள் மனம் அல்லாடியது.

“எம்மா? எம்மோவ்…” என்று சத்தம் வந்த திசையை நோக்கி அடுக்களையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தாள்.

இடுப்பில் ஒரு குழந்தையோடு தலையில் சிறு கூடை வைத்துக்கொண்டு அந்தக் கிழவி காலை இளம் வெயிலில் ஓவியம் போல் நிற்பதை திறந்திருந்த ஒற்றை நிலைக்கதவின் வழியாகப் பார்க்க முடிந்தது. அவள் இடுப்பில் இருந்த குழந்தை சிணுங்கி, “ஆயா… ஆயா…” என்றது.

“கூட, மொரம் இருந்தா குடும்மா. கட்டி மொழுவி தரேன்”

“இல்லைம்மா”

“என்ன தாயி அப்படி சொல்லிப்புட்ட, குடியான வூட்டுல கூடை மொரம் இல்லைன்னு!”

“இல்லம்மா இப்ப கூட, மொரம் எங்க வருது? அதுக்குதான் இப்ப வேலையும் இல்லையே”

கைக்குழந்தை மேலும் சிணுங்கி அழுது, “ஆயா… ஆயா…” என்று கிழக்கு நோக்கி கை காட்டியது.

“ஏம்மா அழுவூது?”

“இட்டிலி கேக்கறா. கடையில தீர்ந்துடுச்சு. ரெண்டு வயசாகப் போவுது பேச்சு வரல அதான் கையை ஆட்டிக்கிட்டு இருக்கா”

“இரு… நான் தரேன்”

இரண்டு இட்டிலியும் சட்டினியும் வைத்துத் தந்ததை குழந்தை ஆவலுடன் தின்றது.

“எந்த ஊரு?”

“தாழம்பேட்டைம்மா”

“அங்கே இருந்தா வர?”

“இல்லை தாயி, புதுப்பேட்டை தாண்டி பெரிய மதுவு இல்லை அங்கதான் பொண்ண கட்டிக் குடுத்துருக்கேன், பேரப் பிள்ளைய பாக்க வந்தேன், எல்லாம் வேலைக்கு போயிடுச்சுங்க நான் சரி பாக்கத் தெரிஞ்ச வேலையை பார்ப்போம்னு வந்தா காலையிலேருந்து பச்சத் தண்ணி பள்ளுல படாம சுத்துறேன் ஒரு மானுடம் கூப்டலம்மா”

மேலும் மூன்று இட்டிலியும் தண்ணீரும் கொடுத்து, “சாப்பிட்டுட்டு பேசு,” என்றதும் மவுனம்.

“சரி, நீ சாப்பிட்டுட்டு கூப்பிடு ஆயா, நான் கைவேலையை முடிச்சுட்டு வரேன்”

அவதி அவதி என்று அள்ளிப் போட்டு கொண்டபின் போய் பார்க்கும்போது சாப்பிட்ட இரண்டு தட்டும் கழுவி இருந்தது. கூடையில் இருந்த சின்ன கொட்டுக்கூடையை எடுத்து, “எம்மா இதை கொண்டு உள்ள வை,” என்று கொடுத்தாள்.

“இது ஏதாயா?”

“கத்தி புடிச்ச கை சும்மா இருக்குமாம்மா நான்தான் செஞ்சேன். இந்தக் கையால எவ்வளவு கூட மொரம் பின்னியிருப்பேன் தெரியுமா?”

“அப்பிடியா ஆயா?”

“என்ன தாயி அப்படி சொல்லிப்புட்ட?  இந்த ஊரு வியாழக்கிழமை சந்தைக்கு வருவேன், வெள்ளிக்கிழமை சேத்தியாதோப்பு சந்தைக்கு போயிட்டு சனிக்கிழமை வடலூர் சந்தை ஞாயிறு குள்ளஞ்சாவடி ரெண்டு நாள் வூட்டுள இருந்து கூட மொரம் பின்னி எடுத்துக்கிட்டு செவ்வாய்க்கிழமை குள்ளஞ்சாவடி புதன்கிழமை புதுச்சத்திரம் சந்தை அப்படியே ஓட்டமா ஒடுச்சு தாயி 30 வருசம் ஒரே வட்டமா குடிச்சு குடிச்சு குறவன் செத்துப் போனான், கூட மொரமும் செத்து போச்சு. நான் கிடந்து அல்லாடுடறன் இதை எடுத்து உள்ள வை, பிறகு வரும்போது கூட மொடஞ்சு கொண்டு வாரேன். பிளாஸ்டிக் வந்துதான் எங்க வாயில மண்ண போட்டுது. நான் வரேன் தாயீ, திரும்ப வந்தா நீ ஒரு வா சோறு போடு, என்ன?”

“ஆயா, இந்தா… இந்தா…”

“ஏம்மா, காசா? அட வாணாம்மா!”

“அட, வைச்சுக்க ஆயா…எதாவது செலவுக்கு ஆவும்”

30 வருட வாழ்க்கையை ஒரு சொல்லில் சொன்ன ஆயா தனக்குள் ஆழ்ந்து நடக்க ஆரம்பித்து விட்டாள். “இந்த புள்ள பொன்னாயா மாதிரி இருக்கே, கேட்டு இருக்கலாம் இந்தக் காலத்திலும் திருந்தாம கிடக்கிறேன் பாரு,” என்று அவளது எண்ணங்கள் திரண்டு வந்தன.

எப்பேர்ப்பட்ட குடும்பம். இந்தப் புள்ள இங்கேதான் கட்டிட்டுருக்கா நம்மள தெரியுமோ? தெரியல போலிருக்கு. பொன்னாயா பேத்தியா இருக்குமோ? அப்படிதான் இருக்கனும்.

கட்டிக்கிட்ட புதுசுல மப்பும் மந்தாரமா இருந்த ஒரு நாள் காலையில, ‘கலியா கலியா’ என்று பொன்னாயா  அப்பன் கூப்பிட்டாங்க ரோட்டுல வில்வண்டி நின்னுருந்துச்சு.

“கலியன் இல்லையா?”

“இல்லிங்க?”

“நீ யாரும்மா?”

“அவரு பொஞ்சாதிங்க”

அவரு அப்படியே போயிட்டாங்க. ஆளு தோரணைய பார்த்ததும் யாருன்னு கேட்க முடியல பார்த்துக் கொண்டிருக்கும்போதே வண்டி மறைஞ்சு போச்சு. வூட்டூகாரர் வந்ததும் சொன்னாள். அப்ப போன மனுசன் மறுநாள்தான் வந்தாரு, தலையில கள நெல்லோடு. என்ன, என்று கேட்டாள்.

“முதலாளி வூட்டு கோழி பிராந்துட்ட குஞ்சைப் பறி கொடுத்துட்டு நாள் முச்சுடும் கோ கோன்னு கத்திருக்கு, அதான் கூண்டு செய்யச் சொன்னாங்க”

“அதுக்கு இம்மாம் நேரமா?”

ஏ”க்கழுதை நம்ம கல்யாணத்துக்கு காசு பணம் கொடுத்து உதவுனது அவுங்கதான். மூங்கி கழி வெட்டி போட்டு வந்துருக்கேன் வேலை கொடுத்து இருக்காங்க நாளைக்கு போவும்”னாங்க

போய்ப் பார்த்தால், இன்னைக்கெல்லாம் பார்க்கலாம் போலிருந்தது.. தலை வாசல! அரிக்கால! மாலை சூடிய பூர்ண கும்பத்தை ஆனைவோ இரண்டு பக்கமும் மாலையை உயர்த்தி போட அப்படியே நெருங்குது. அவள் பார்த்து திகைத்து நின்றுவிட்டாள். இம்மாம் பெரிய வாசலும் இரண்டு பக்கமும் தின்னைவோ முன்ன பின்ன பார்த்து இல்ல, அப்படியே கன்னத்துல கை வச்சிகிட்டு நிற்கிறாள்.

அவளைப் பார்த்து, “இங்க எங்கடி வந்த?” என்று ஒரு குரல் கேட்கிறது.

யாருன்னு பார்த்தா பொன்னாயா வெளியே வருது, “ஏ ஆண்டாளு நீ எங்க இங்க?” என்கிறது.

“இங்கேதான் தாழம்பேட்டைல இவரத்தான் கட்டிக்கிட்டேன் ஆயா!”

“ஏலேய் கலியா இவ அப்பன் வீரன் சின்னப்புள்ளைலேருந்து தெரியும் ஒழுங்கா பார்த்துக்கோ”

“சரிங்க”

“முதல்ல வயிறார சாப்பிடுங்க காதடைச்சு வந்திருப்பிங்க”

இரண்டு பித்தளைத் தூக்கு வாளிகளில் சோறும் பூவரசு இலையில் துவரரிசி துவையலும் இப்ப பார்த்த அந்தப் புள்ளதான் கொடுக்குது, அப்படியே பொன்னாயா சாடை. கட்டசம்பா அரிசி இன்னும் போட்டாலும் சாப்பிடுலாம் அம்மாம் ருசி!. அது எல்லாம் ஒரு காலம், என்று நினைத்துக் கொண்டே கிழவி மகள் வீடு வந்து விட்டது

வாசலில் நிற்க்கும் மகளிட,ம் “ஏய் இங்க எங்கடி ஈச்சம் மட்டை கிடைக்கும்?” என்று கேட்டுக்கொண்ட உள்ளே போனாள்.

“ஏன் உனக்கு சும்மா இருக்க முடியாதா, உன் தொழிலத் தூக்கிட்டியா?

“ஆமான்டி அதான் உங்களுக்கு கஞ்சி ஊத்துச்சி. பிள்ளையக் குடுத்துட்டு பக்கத்துல போயி கேளு. எனக்கு தெரியும்டி யாரும் சொல்ல வாணாம், நான் பார்த்துக்கறன்,” என்றாள்.

எப்ப விடியும்னு பார்த்த கிழவி விடிந்ததும் முதல் வேலையாக மகளிடம், “கொஞ்சம் வேலை இருக்கு,” என்று ஆரம்பித்தாள். “நீ என்னை எதிர்பார்க்காத, புள்ளைய பார்த்துக்க. நான் பொறைக்கு வந்துடறேன்”

கிழவி விறுவிறுவென்று, வெள்ளாத்து ஓரம் நடைய எட்டி போட்டால் கிரேடர் போயிடலாம், எப்படியும் ரயில் ரோட்டு ஓரம் கிடக்கும் தேறினதா முத்தலும் இல்லாமல் இளசும் இல்லாம ஒரு அம்பது ஈச்சம் மட்டை, கொஞ்சம் கட்டுக்கொடி பதமானதா வெட்டிக் கொண்டு போவணும், என்று நினைத்துக் கொண்டே நடந்தாள். செத்த வெயில்ல போட்டு எடுத்தா மனசுபோல வணங்கும். பேசிக்கிட்டே செய்ய ஆரம்பிச்சா ஒரு இரண்டு மணி நேரம் அதுக்கு மேல பார்ப்போம், என்று சொல்லிக்கொண்டே வந்தவள், நெனப்பு தான் பொழப்ப கெடுக்கும் போல, இது என்ன இப்படி காடா கிடக்கு, கடவுளே!, என்று திகைத்து நின்றாள்.

“யம்மா… யம்மோவ்!”

“யாரு?”

“நான்தாம்மா”

“ஆயாவா? வா ஆயா! உனக்கு ஏன் இந்த வேலை?”

“இரு, தாயி. குச்சிய வெய்யல்ல போட்டு வரேன்”

“நேத்திலிருந்து நினைப்பு கிடந்து அடிக்குது ஆயா உன்னை எங்கியோ பார்த்து இருக்கேன் எங்கேன்னுதான் தெரியல”

“நீ பொன்னாயா பேத்தியா?”

“ஆமாம் ஆயா”

“அப்படி சொல்லு ஏன் ராசாத்தி, நேத்தி உன் கையால சாப்பிட்டதுமே நாக்கு சொல்லிடுச்சு அதே பொன்னாயா கை பக்குவம் புத்திக்கு தான் உரைக்கல. தாவத்துக்கு எதாவது குடு பிறகு சொல்றேன்”

“இந்தா ஆயா, கூச்சப்படாம சாப்பிடு”

“ஏம்மா இவ்வளளோ குடுக்குற, வயிறு சுருங்கிப் போச்சு, ருசிதான் கேக்குது நாக்கு”

“சரி ஆயா, சாப்பிடு! நான் மதிய வேலைய நெருக்கிட்டு வரேன்”

“ஆகட்டும் தாயி!” என்று சொல்லிவிட்டு வேலையைப் பார்க்கப் போனாள்.

“அம்மா, கொஞ்சம் குடிக்க தண்ணி குடு”

“தே வந்துட்டன் ஆயா, சாப்டியா”

“சாப்ட்டேன் ஆயி”

“பொன்னாயா கைப்பக்குவம் அப்படியே இருக்கு. என்னதான் மாயம் பண்ணுமோ தெரியாது, அம்மாம் ருசி”

“ஆயா பாடம்தான் எல்லாம்”

“சொல்லாயி குடும்பம் ஏன் அப்படி ஆச்சு?”

“தெரில ஆயா! அது பெரிய கதை”

“சொல்லாயி பெராக்க கேட்டுகிட்டே செய்யறேன்”

“ஒரு ராத்திரி தீடிர் தடார்ன்னு இடி மின்னலோட பெரிய மழை. ஒரு பக்க கூரை ஓட்டோடு உள்ள விழுந்துச்சு. அந்த பெரிய மழையில சுவரு விழுந்துடுச்சு. சுவருல பதிச்சிருந்த துயிலம் தூணும் அதோடு நாங்க ஆடும் ஊஞ்சல் அறுந்து பலகை  மேலே கிடந்தது ஆயா…

“எனக்கு நல்லா நியாபகம் இருக்கு பொன்னாயா உடம்பு நடுங்குது எங்கள கைல அணைச்சுகிட்டு சுவத்துல சரிஞ்சு, கடவுளேன்னே உக்காந்தது. பிறகு எதுவும் கைகூடல பங்காளி பகைச்சல். போற எடம்ல்லாம் சன்டை சச்சரவுன்னு ஆயிப் போனதுல ஆயா ஊட்ட சரி பன்ன சொன்னத அப்பா கேட்கல

“ஒரு ராத்திரி வயித்துப் போக்குல ஆயா போயிடுச்சு பிறகு அப்பா, ஆயாவ நான்தான் கொன்னுட்டேன் பாவி பாவின்னு குடிக்க ஆரம்பிச்சு குடிப்பழக்கம் ஆகி குடியில் விழுந்துச்சு பிறகு வீடு எழுந்திருக்கவே இல்லை. மிச்சம் மீதி இருந்தத வச்சு என்னை கட்டிக்கொடுத்த கையோடு எனக்கு புள்ள பொறந்த மறுவருசம் அப்பாவும் போயி சேந்துச்சு”

உணர்ச்சி மேலிட்டால் அவள் அழுவதைப் பார்த்து, “அழுவாத ஆயி முப்பது வருசம் கெட்டவங்களும் இல்ல முப்பது வருசம் வாழ்ந்தவங்களும் இல்லை. உன் புள்ள தலை எடுத்து பேரப்பிள்ளைவோ காலத்தில நல்லா வந்துடும் ஆயி. அழுவாத, அழுவாத, சொன்னா கேளு,” என்று ஆறுதல் சொன்னாள் கிழவி.

“சரி ஆயா, உனக்கு பொன்னாயாவ எப்படி தெரியும்?’

“நல்லா கேட்ட போ. நான் பொறந்து வளர்ந்தது ஆயா பொறந்த ஊருதான். எம்மாம் பெரிய ஊடு அவுங்க ஊடு நாளுகை தாழ்வாரம் வச்ச இரண்டு கட்டு வீடு இரண்டு பக்கமும் முழுசும் நெல் மூட்டைவளும் அடுத்த பக்கம் வரிசையாக  மரப்பத்தாயமும் இருக்கும். ஊருக்கு வந்துச்சுனா சொல்லி அனுப்பும். அப்பா கூட நான் பார்க்கப் போனா சாப்பிடச் சொல்லி எதாவது கையில கொடுக்கும் முருக்கோ, அதிரசமோ, சோறோ எதா இருந்தாலும் அம்மாம் ருசி.

“என் அப்பன வீரா வீரான்னு சொந்த தம்பி மாதிரிதான் பேசும். எங்கள்ட்ட கூடை மோரம் வாங்குனா கூடதான் காசி கொடுக்கும் தாயில்லா பொன்னு நான்னு எம் மேல தனி பாசம்மா அதுக்கு”, என்று முடித்தாள்.

சரி ஆயா நீ என்ன எங்க பார்த்த?”

“உன் கையால சாப்ட்டே இருக்கேன் உனக்கு பத்து வயசு இருக்கும். உங்க அப்பா எங்க ஊட்டுக்காரரத் தேடி தாழம்பேட்டை வந்துட்டாங்க இரண்டு நாள் சென்னு  கோழிக்கூண்டு செய்ய வந்தோம்”

“ஆமாம் ஆயா. என் கண் எதிரே கோழி கூண்டு செஞ்சிங்க. மூங்கிப் பட்டை ஈச்சம் பட்டை, பூலாக்குச்சி கட்டுக்கொடிலாம் காய வச்சிங்க அதான் நியாபகம் இருக்கு”

“இரண்டு கூண்டு செஞ்சோம் ஆயி. நீயும் ஒந்தங்கச்சியும் அதுல பதுங்கி விளாண்டிங்க பொன்னாயாக்கூட ஏசுச்சு”

“எனக்கு நியாபகம் இல்ல ஆயா”

“அப்ப நீலாம் வெளாட்டு பிள்ளைவோ என்னமோ போ ஆயி… போன வாரம் நடந்தது எதும் ஞாபகம் இல்ல பத்து இருபது வருசத்துக்கு முன்னாடி உள்ளது எல்லாம் அப்படியே ஞாபகம் வருது சரியா போச்சு போ!. சரி ஆயா, கட்டிகிட்டது என்னா ஊரு? உம் வீட்டுகாரர் என்ன ஆனாரு?”

“கட்டிக்கிட்டது தாழம்பேட்டை பொறந்தது மூங்கிலடி. ஊட்டுக்காரர் கத வேண்டாம்மா, நான் டீ போட்டு எடுத்தாரன்”

ஆயா சரிந்து அமர்ந்தாள் கூடை பாதி வரை ஆகி இருந்தது.

“இந்தா ஆயா, டீ குடி. சீனி போட்டுப்பல்ல?”

“அதெல்லாம் குடிப்பம்மா”

“யான் ஆயா முகமெல்லாம் மாறிடுச்சு?”

ஹூம் என்று ஆயா அழ ஆரம்பித்தார். “நான் வேற உன்ன கேட்டிருக்கக்கூடாது”

“இங்க பாரு ஆயா அழுவாத உடம்பு ஏதாவது ஆயிட போவுது”

ஆயா, “ஏன் சாமி இருக்கும்போது அருமை தெரியல…” என்று தேம்பினாள்.

“சரி ஆயா அழுவாத டீயக் குடி ஆறிட போவுது. கொஞ்சம் தெம்பா இருக்கும்,” என்றாள்.

ஆனால, “ம்க்கும்” என்று கனைத்து கொண்டு, “என் கதைய சொல்றன், கேளும்மா,” என்று ஆரம்பித்தாள். “யார்ட்டையாவது சொன்னாதான் மனசு ஆறும் நான் வாழ்ந்துட்டன்மா எனக்கு போதும். வூட்டுக்காரர் பேரு கலியன். நான் அவங்கள இந்த ஊரு பரங்கிப்பேட்டை சந்தைல வச்சிதான் பார்த்தன். நான் பார்த்தப்போ ஒரு தோளில் துப்பாக்கி, பையி மறுதோள்ல காட்டுப்பூனை தொங்குது. ஆறு அடிக்கு மேல உயரம் கைல அதே உயரத்துக்கு மூங்கிக் கழி அப்படியே வீமன் மேறி நடந்து போறாரு, நான் திகைச்சு பார்க்கிறேன்”

“அப்பிடியே உழுந்துட்டன்னு சொல்லு”

“ம்க்கும் கிண்டல் பண்ணாதம்மா”

“இல்லை, இல்லை. சொல்லு ஆயா”

“சனம் கூட்டமா அப்படியே அவரு பின்னாடி போவுது. இவரு காட்டுப்பூனைய தொளில் இருந்து எடுத்து கருவைல மாட்ராரு. அப்படியே சட்டையும் கழட்டி வச்சிட்டு பைல இருந்து பேனாக்கத்தி எடுத்து வால்ல தொடங்கி பின் வரக்கும் ஒரு கோடு. அப்படியே கத்தியால நெம்பி ஒரு காலு அடுத்த காலு பின்னாடி வால்ல இருந்து தோல பனியன் கயிட்டர மாதிரி தலை வரைக்கும் கொண்டு வந்து கழுத்த அறத்து தலையும் தொலயும் பையில்ல வைக்கிறாங்க. அதுக்குள்ள ஆளாளுக்கு எட்டு கிலோ இருக்கும் இல்லை இல்லை ஆறு கிலோதான் இருக்கும். ‘ஏக்கொறவா, வில சொல்லப்பா’ன்னு சத்தம். இவங்க ஒன்னும் சொல்லல சுவத்துல இருந்து ஒரு பழைய போஸ்டர பிச்சி கீழே போட்டாங்க. பூனைவயித்துல கத்திய வச்சாங்க கூட்டத்துல இருந்த ஒரு ஆளு ‘ஏய் கொறவா, கேட்டுக்கிட்டே இருக்கோம் நீ பாட்டுக்கு இருக்க? உதை வேனும உனக்கு’ன்னு சத்தம் போடவும், ‘என்ன அடிக்கறவன் இந்த கழிய தொடுங்குடா முதல்ல’ன்னு ஒரு சலாம் வரிசை சுத்தி முங்கிய தரையில ஊனறாரு பாராயி ஒரு பய கிட்ட போவல.

“சந்தைல ஒரே பரபரப்பு மொத்த கறியும் அறிஞ்சு பத்து கூறு வச்சாறு நான் பார்க்கறத கவனிச்சு என்ன குறுகுறுன்னு பார்க்கறாரு “ஒரு கூறு இரண்டு ரூபாய் யாருக்கு வேனுமோ காச வச்சிட்டு எடுத்துக்கங்க”ன்னு பத்து நிமிஷத்தில் எல்லாம் வித்துப் போச்சு. அப்பன் என்னத் தேடி வந்துட்டுது ‘இங்கே என்ன பன்ற யாவரம் முடிச்சு போற எண்ணம் இல்லியா?’ன்னு கேக்குது. நான் திரும்பிப் பாக்கறேன். இவரு என்னைய பார்க்கறாரு. நான் என் அப்பன்கூட மொரம் விக்க வந்துட்டன்

“கொஞ்ச நேரத்தில் இவரு கைகால் எல்லாம் கழுவிட்டு துணிய போட்டுகிட்டு வந்துட்டாரு வந்து எதுத்தால சாடை மாடையா பார்த்துட்டு அப்பன் எட்டப் போனப்ப கிட்ட வந்து, “என்ன ஊரு புள்ள?”ன்னு கேட்டாரு. மூங்கிலடின்னு சொன்னேன்

“”அப்பன் பேரு?”

“”வீரன்ங்க”

“”ஊம் பேரு?”

“”ஆண்டாளு”

“அடுத்த கேள்வி கேட்டாரு பாரும்மா நேத்து கேட்ட மாதிரி இருக்கும்மா… இரு வாரேன் இன்னைக்கு கதையாதாம் போகும் போலருக்கு”

“ஆயா எங்க கிளம்பிட்ட, சொல்லு?”

“ஆயி வெத்தலை போட்டுட்டு சொல்றேன்”

“ஏன் வேலைல்லாம் கெட்டு போச்சு ஆயா இன்னைக்கு”

“கிடக்கு போ”

“சரி, சொல்லேன்”

“ம் நேரா மூஞ்சிய பார்த்து, ‘ஏ புள்ள ஆண்டாளு என்ன கட்டிக்கிரியா எனக்கு யாரும் இல்லை சொல்லு,’ ங்கிறாரு”

“நீதான் மொதல்லிய கழி சுத்துனப்பய உழுந்துட்டிய”

“இல்ல ஆயி, அவரு யாரும் இல்லன்னு சொன்னார் பாரு அப்பத்தான். எனக்கு ஆத்தா இல்லியா, நான் கட்டிக்கிறேன்னு சொல்லிப்புட்டேன். அப்பன் வரத பார்த்துட்டு அப்படியே போயிட்டாரு. அப்புறம் நாங்க போற சந்தைக்கு எல்லாம் அவரும் சைக்கிள்ள வராரு. இரண்டே நாள்ல அப்பனுக்கு தெரிஞ்சு போச்சு என்ன மொத தடவையா அடிச்சுட்டாரு. நான் சொல்லிப்புட்டேன் உன் மகள நீ பாக்கனுமுன்னா நான் அவரதான் கட்டிப்பேன்னு சொன்னதும் பச்சைப்புள்ள மாதிரி தேம்பி அழுவுறாரு. அப்புறம், நின்னுட்ட இருந்தவர கைகாட்டி கூப்டாரு அப்பதாம்மா பார்த்தேன் இவரு பயந்தத!

“அம்மாம் பெரிய ஆளு இந்த ஊரு சந்தை சனம் பூரா வேடிக்கை பார்க்குது அப்படியே அப்பா கால்ல உழுந்துட்டாறு. அப்பனுக்கு ஒன்னும் புரியல. நான் ஓன்னு சத்தம் போட்டு அழுதத பார்த்ததும் அப்பன் வர முகூர்த்தத்திலே கல்யாணத்த வச்சிடுவம் பெரியவங்கள கூட்டிக்கிட்டு வா அப்படின்னு சொல்லிடுச்சு. வர போற சனம் எல்லாம், ‘எப்பா வீரா பொண்ணு கல்யாணத்துக்கு என்னியும் கூப்டு’ன்னாங்க அப்புறம் இவரு சார்பா உங்கப்பா தாழம்பேட்டை நாட்டாமைகிட்ட சொல்லி புதன்கிழமை புவனகிரி சந்தைல வச்சி பேசி முடிச்சாங்க. சேத்தியாதோப்பு தீ பாஞ்சாலி கோயில்ல தாலி கட்டிக்கிட்டோம்.

“கல்யாணம் முடிஞ்ச பிறகு கேட்டேன் “ஏன்யா இவ்வளவு சனம் எதுத்தாப்பல சந்தைல போய் கால்ல உழுந்தியே, ஏன்யா?” அப்படின்னு. அதுக்கு அவரு சொல்றார், “இல்ல கழுதை ஒப்பன அடிச்சுப் போட்டுட்டு தூக்கிட்டு போவனும்னு நினைச்சு இருந்தேன் ஆனா உங்கப்பன் அழுதத பார்த்ததும் எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல,’ அப்படின்னு. “சரியாதான்யா  செஞ்ச”ன்னு சொன்னேன். அப்புறம் இரண்டு மூணு மாசத்துக்கு பிறகு தான் ஒங்க வூட்டுக்கு வந்தது”

“ஞாபகம் வருது ஆயா நீ சாப்புடு, கூடதான் முடிஞ்சுடும் போல இருக்கு”

“ஆமாம் ஆயி கை செத்து போச்சுன்னு நினைச்சேன்  30 வருச பழக்கம் இல்ல எனக்கு அதான் பூக்கூடையா பிடி வச்சி செய்யறேன் அழவா பாந்தமா இருக்கு”

“ஆயா சாப்பிட்டு பேசு”

“மகராசி கொண்டா நான் இருந்து சாப்புட்டு பூரா கதையும் சொல்லிட்டு போறேன்”

“கத்திரிக்காய் போட்ட நெத்திலி கொழம்பு வச்சிருக்கேன், சாப்பிடு”

“கொண்டா ஆயி பொன்னாயா ருசிய பார்க்கனும் அதுக்கு தான் வந்ததே”

“நானும் சாப்பாடு எடுத்துட்டு வரேன் ஆயா”

“… ம் சொல்லு ஆயா”

“நீ பார்த்தன்னு சொன்னிய அப்பத்தான் பின்னாடி உங்க ஊட்டு குளத்தில இவரு விராலு மீனு ரெண்டு குத்துனாரு நான் தான் ஆஞ்சு கொடுத்தேன். பொன்னாயா வச்சிருந்தது பாரும்மா கொழம்பு அப்படி ஒரு ருசி அது உன்கிட்டேயும் இருக்கு ஆயி”

“அது வேற ஒன்னும் இல்ல ஆயா திட்டமா உப்பு உறப்பு போடரதுதான் சில பேர் திரும்ப திரும்ப பார்த்து போடுங்க அதான் வித்தியாசம். ஆயா நல்லா கூச்சப்படாம சாப்பிடு உன் ஊடு இது எப்ப வேணும்னாலும் வா போ.

“இந்தா இந்த புடவையை நீ கட்ட மாட்ட உன் மகளுக்கு கொடு”

“ஏன் ஆயி, புதுசாருக்கு…”

“‘ஆமாம் ஆயா உம் பொண்ணுக்கு எங்கூட்டு சீதனம்தான்”

“அப்படியே பொன்னாயா கொணம் ஆயி உனக்கு”

“சரி சொச்ச கதையும் சொல்லு”

“எந்த கதைய கேட்கற?”

“விராலு மீனு கொழம்பு சாப்ட்டிய..”.

“ஆமாம் தாயி ஒரு வாரம் தொடர்ந்து வந்து தங்கி வேலை செஞ்சோம். பொன்னாயா எங்கள கூலி நெல் அள்ள அளக்க என்று மூன்று மரக்கால் ஆறு மரக்கால் என்று  பல அளவுகளில் கூடைவ செய்ய சொல்லுச்சு. வாசல்ல மாமரம் இலுப்பை மரம் இருந்தது”

“ஆமாம் ஆயா திண்ணைல பொன்னாயா மடில படுத்துகிட்டு கதை கேப்போம். மரத்து மேல மினுக்கெட்டாம் பூச்சிவ மினுக்கி பறக்கும்”

“ஆயி அதுல பழந்தின்னி வவ்வால் வந்துச்சுவல்லா இவரு சும்மா இல்லாம அத சுட்டுப்பிட்டாரு. காலையிலே பொன்னாயா எங்கள கூப்ட்டு 100 ரூபாய் பணத்தை கொடுத்து போய் கூட மொரம் யாவாரம் பண்ணி ஒப்பனாட்டம் கெளரமா பொழைச்சுக்க சாப்ட்டு இரண்டு பேரும் கிளம்புங்க,” அப்படின்னு சொல்லுச்சு. அப்ப படி அரிசி 2 ரூபாய் வித்த காலம். இவரு பணத்தை அப்படியே சாமி படத்துக்கு பின்னாடி வை பிறகு பாப்பும்னு\ட்டாரு”

“சாப்பாட்டுக்கு என்ன செஞ்சிங்க ஆயா?”

“அட நீ வேற ஆயி இரண்டு வயிறு சோத்துக்கா பஞ்சம்? கொன்னா பாவம் தின்னா தீரும் கிளம்புடிம்பாரு. ராத்திரி ஆகாரத்த முடிச்சுட்டு துப்பாக்கி எடுத்து தோளில் மாட்டுவாரு நான் பைய மாட்டிப்பேன் வேட்டைக்கு”

“ம்ஹும் நீயுமா ஆயா?”

“ஆமாம் ஆயி. கைல ஆளுக்கொரு கழி. மறுநாள் எங்க சந்தைன்னு பார்ப்போம். சைக்கிள எடுத்து கிளம்புவோம். நான் பின்னாடி உக்காந்துடுவேன். புவனகிரி சந்தையா இருந்தால் சாத்தப்பாடி ஏரி பக்கம் போவோம். சேத்தியாதோப்பா இருந்தா வீராணம் ஏரி. பரங்கிப்பேட்டைய இருந்தா பிச்சாவரம் காடு பக்கம் விளைச்சல் நாள்ல வயகாட்டுல  காட்டுப்பூனை வேட்டைக்கு போவோம். ஏதாவது மாட்டும் சம்பு கோழி,உடும்பு, கௌதாரி காட்டு முசலு, நீர்க்கோழி, நாரை காட்டுப்பூனை வித்து காசாக்கி வீட்டுக்கு வருவோம். நான் சோறாக்குவேன். ஒரு கலயம் கள்ள வாங்கிட்டு வந்து வச்சிட்டு கறிய அவருதான் வைப்பாரு. ரெண்டு பேரும் குடிச்சு சாப்ட்டு படுத்தோம்னோ பொணம் மாதிரி கிடப்போம்”

“குடிக்க வேற செய்வியா நீ?’

“இல்ல ஆயி கள்ளு உடம்புக்கு நல்லதுல்ல, அத சின்னப் புள்ளயில குடிப்போம் அதான்”

“சரி சரி மேல சொல்லு”

“இப்படியே காட்ல மோட்லன்னு இரண்டு வருசம் போச்சு. ஒரு நாள் கன்னி வச்சு கௌதாரி புடிச்சுருந்தொம் 4 ஜோடிவோ காலக்கட்டி கூண்டுல போட்டு வயலூருக்கு நேர் வாய்க்கால் உள்ளேருந்து ரோடு ஏர்றோம், கூண்டு வண்டி வந்து நிக்கிது. ரெண்டு பேரும் கையும் களவுமா பொன்னாயா கிட்ட மாட்டிகிட்டோம்”

“நினைச்சன் ஆயாகிட்ட மாட்னிங்களா!”

“சொச்சத்தையும் கேளு ஆயி”

“ம்ம் சொல்லு, சொல்லு”

“பொன்னாயா ஏய் கலியான்னுச்சு. இந்த குருவி எவ்வள காசுடான்னாச்சு அவரு வாய தொரக்கல என்ன எவ்வளவு காசிடின்னிச்சு நானும் வாய தொரக்கல மஞ்சப் பையிலேருந்து 100 ரூபாய் எடுத்தது “முதல்ல அத பூரா அவுத்து வுடு”

“ஆளுக்கொன்னா அவத்து வுடறோம். சடசடன்னு பறந்தத வர சனம் எல்லாம் பார்க்குது.  “புள்ளைவோ இருக்கா?”

“இரண்டு பேரும் திருடி மாட்டின சின்னப்பிள்ளைவோ மாதிரி தல ஆட்ரோம், இல்லைன்னு.

“”எப்படி இருக்கும்? இரண்டு பேரும் தாயில்லா பிள்ளைங்க அதான் இப்படி பண்றீங்க. அதுவோ குஞ்சுவோ என்னாவும்? உங்களவிட தாண்டி கஷ்டப்படாது? இந்த காச எடுத்துட்டு போயி உங்களுக்கு தெரிஞ்ச கூடை மொரம் பின்னி பொழைங்க” ன்னுச்சு.

“”திரும்பச் சொல்றேன் கேளுங்க, நல்ல மாட்டுக்கு ஒரு சூடுதான். ஓட்டுப்பா வண்டிய”ன்னு போயே சேர்ந்துடுச்சு. ஊரு சனமே தெவச்சு பார்க்குது”

“அப்புறம் ஆயா?”

“அப்புறம் என்ன, குறவன் சாவற வரைக்கும் வேட்டைக்கே போவல. கூட மொரம் பின்னி வித்துதான் சாப்பிட்டோம் அப்புறம் நாலு வருசம் சென்னுதான் இங்கே கட்டிக்கிட்ட பொட்டப்புள்ள பிறந்துச்சு”

“வேற புள்ள இல்லியா? வூட்டூகாரர் எப்படி செத்து போனாரு?”

“வேற புள்ளைவோ இல்லை. இரண்டு வருசமாவது அவரு செத்து. குள்ளஞ்சாவடி சந்தைக்கு யாவரத்துக்கு போயிட்டு திரும்புறோம். பெருமாத்துர் இறங்கி ஆத்த குறுக்கால தாண்டுனா ஒரு மைலு துலுக்கம்பாளையம் அடுத்தது தாழம்பேட்டை ஆத்தங்கரையில தான் ஊடு. “நீ முன்ன போயி உள்ள வையி புள்ள, நான் குவார்ட்டர் வாங்கிட்டு வரேன்”னாரு சூரியன் கரகரன்னு கீழே இறங்குது சரி நேரத்த போயி விளக்கு வைப்போம்,னு நடையை எட்டிப்போட்டு போயிட்டேன். விளக்கு வச்சிட்டு அடுப்புல உளைய வச்சிட்டு சுடுதண்ணி போடுமுன்னு ஈயப் பானைல பைப் தண்ணி அடிக்கிறன், “ஆண்டாளு ஆண்டாளு போனு வந்துருக்கு, ஓடியா ஒடியா”ங்கறாங்க.

“”என்னன்னு சொல்றது எல்லாம் விதி மனச தேத்திக்க”ங்கறாங்க. “சொல்லுங்க சொல்லுங்க,”ங்கறேன், “கலியன் ஏமாத்திட்டு போயிட்டான்”ங்கறாங்க. அப்படியே இடிஞ்சு போயிட்டேன்

“எப்படி ஆச்சுன்னு கேக்கறேன். போதைல தடுமாறி ஆத்துல முட்டி தண்ணியில்ல விழுந்ததுதான் தலை தூக்க முடியல அப்படியே கிடந்து அடங்கியிருக்கு. மையிருட்டு நேரம் யாரும் பார்க்கல. பிறகு வந்தவங்க பாத்துப்புட்டு வூட்டுக்கு போன் பண்ணிசொல்லிட்டு தூக்கி வந்தது.

“நீ யான் அழுவுற ஆயி, நானே அழுவுல பாரு… கிடக்கு வுடு தாயி, எல்லாம் பிளாஷ்டிக் கூட மொரத்தால வந்ததுதான். நாலு அஞ்சு வருஷமாவே நல்ல யாவாரம் இல்ல ஆயி. அதான் அதிகமா குடிச்சு போயி சேர்ந்துட்டாரு. சாவமோது 62 வயசு. என்ன விட பத்து வயசு மூத்தவரு. ஏன் கதைதான் என்னாவுமுன்னு தெரியல. மகளும் மருமகனும் மெட்ராஸ் போவுதுவோ. வேலைக்கு என்னையும் கூப்டுதுவோ. எனக்கு வேற போக்கிடம் இல்ல ஆயி…

“இந்தா ஆயி இந்தக் கூடையப் புடி உன் கையில புள்ள குட்டியோடு என் பொன்னாயா மாதிரி நீயும் உன் குலமும் வாழனும்”

ஆயா கூந்தலைக் கொண்டையாக முடிந்து காதோரம் விழுந்த முடிகளை அள்ளிக் கொண்டையில் மறைத்துச் சொருகி தெருவில் இறங்கி நடந்தாள்

இவள் திகைத்து கிழவியை பொன்னாயாவாகவே பார்த்தாள் ….