சிறுகதை

அம்புப் படுக்கை

– நரோபா – 

IMG_0276

துருவேறிப்போன தர்மாவின் பச்சை நிற ஹெர்குலஸ் சைக்கிள் நுரை தப்பி முரண்டு பிடித்தது. அவன் அழுத்துவதற்கு சம்பந்தமில்லாமல் பிடிவாதமாக இறுக்கிக்கொண்டு முனகியபடி மெதுவாக முன்னகர்ந்து வருவதை சுதர்சனின் காதுகள் தொலைவிலேயே கண்டுகொண்டன. தர்மாவின் சைக்கிளுக்கென்றே இருக்கும் ஓசை, பசையற்று உலர்ந்த எலும்புகள் ஒன்றையொன்று உரசிக்கொள்ளும் ஓசை. அவனுக்கு தாத்தாவின் நினைவெழுந்தது. வலி மிகுந்து இருக்குமோ?

மூச்சிரைக்க காலூன்றி அவனிடம் நின்ற தர்மாவை நோக்கி. “இன்னமும் இந்த சைக்கிள விடலையாண்ணே?”.என்றான். “வேற போக்கில்லையே தம்பு” என்றபோது வழக்கமாக காதுகளைத் தொட முனையும் உதட்டோரக் கோடுகள் தயங்கிப் பாதி வழியில், கறைபடிந்து மழுங்கிய முன்பற்களைக் காட்டுவதோடு நின்றன. “தம்பு.. நம்ம ஆனாரூனா செட்டியாருக்கு சொகமில்ல .ஒரு எட்டு வந்து பாத்துட்டு போவச் சொல்லி ஆச்சி தாக்க சொல்லிவிட்டாக”.

மாலைச் சூரியன் மேகங்களுக்குள் மறைந்து மேக முனைகளில் மட்டும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. கிரிக்கெட் பேட்டை கவ்வியிருக்கும் கேரியரை இழுத்துச் சரிசெய்தபடியே, “அம்மா உள்ளதான் இருக்காங்க..சொல்லிருங்க.” என்றான்.

“அப்பச்சி ஒன்னையதான் பாக்கணுமாம்”

அவர் பேரனும் சுதர்சனும் பள்ளித் தோழர்கள். அவன் இப்போதெல்லாம் இங்கு வருவதில்லை எனும் வருத்தம் இருக்கலாம். அவனை வரவழைக்க உதவி தேவையாய் இருக்கும் என எண்ணிக்கொண்டான்.

“நாச்சி இருக்கானா?’

“எல்லாரும் இங்கேயேதான் ரெண்டு நாளா இருக்காக”

“நானும் அம்மாவும் வர்றோம்” என்றபடி சைக்கிளை மீண்டும் காம்பவண்டுக்குள் நிறுத்தினான்.
ஆனாரூனா ஊரின் முக்கியஸ்தர்களில் ஒருவர். ஒரு காலத்தில் அவருடைய பாத்திரக்கடை மிகப் பிரபலம். இப்போது கவனிக்க ஆளில்லை. டவுனில் நான்கைந்து காம்ப்ளெக்ஸ்கள் அவருடையது. வாடகையில் நல்ல வரும்படி. தர்மா அவருடன் பட்டறையில் இருந்தவன்தான். அது இதுவென்று எல்லா வேலையும் செய்வான். ஆள் தேவை என்றால் மருந்து இடிக்கவும் வருவான்.

தாத்தா மரணக் குறிகளில் தேர்ந்தவர். முதன்முறையாக அவர்கள் சந்தித்து கொண்டது பல வருடங்களுக்கு முன்னர். ஆனாரூனாவின் மூத்த மகன் பதினாலு நாள் காய்ச்சலில் துவண்டு கிடந்தான். மிஷன் ஆஸ்பத்திரி துரை டாக்டர் ஊசிக்குக்கூட மட்டுப்படவில்லை. நினைவிழந்து அரற்ற ஆரம்பித்தவுடன் பங்காளிகள் வைத்தியரைப் பற்றி கூறி அழைத்து வந்தார்கள். நாடி பார்த்து “யான நடதான்..மெதுவான்னாலும் வலுவா இருக்கு..பொழச்சிக்கிடுவான்” என்று அவர் சொன்னபடியே இரண்டொரு நாளில் மீண்டெழுந்தான். மூச்சிழுத்துக் கொண்டிருந்த பெரியாச்சியின் நாடியைப பார்த்துவிட்டு “தளந்துருச்சு..ஆனாலும் ஆத்தா கடிவாளத்த இறுக்கமா பிடிச்சிருக்கா.. பொறுக்காம போதும்னு விட கொஞ்சம் நாழியாகும்.. ரெண்டு நாள் கழிச்சிதான் ஆகும்” என்றார். அவர் வாக்கைக் காக்கவே மூச்சைப் பிடித்துக் கொண்டிருந்தவள் போல் மூன்றாம் நாள் உதயத்தில் உயிர்விட்டாள் பெரியாச்சி.

அதன் பின்னர் ஆனாரூனா வைத்தியரைப் பார்க்க அடிக்கடி வரத் துவங்கினார். வாயு குத்தல் கால் குடைச்சல் என ஏதாவது மருந்து வாங்கிக்கொண்டு போவார். ஒவ்வொரு முறையும் பர்மாவிலிருந்து தான் தப்பிவந்த கதையை தவறாமல் புதுப்புது கிளைக் கதைகளோடும் கதாபாத்திரங்களோடும் சொல்வார். தாத்தாவும் பொழுது போக வேண்டுமே எனக் கேட்டுகொண்டிருப்பார். ஆனாரூனா கிண்டல் செய்வது கூட பிடிபடாத அளவுக்கு வெள்ளந்தி.

“நெலம சரியில்லன்னு பட்டவுடனே பணத்த தங்கமா மாத்தி கப்பல பிடிச்சு வந்துட்டேன்ல….எல்லாம் அந்த ஆறுமுகசாமி அருள். வாங்கடான்னு சொன்னேன் ..என் வார்த்தைய நம்பாத பயலுக எல்லாம் ஓட்டாண்டி ஆய்ட்டைங்க” என்று ஒருமுறை சொன்னபோது “கப்பல்ல ஏற முன்ன ஒரு ஃபைட் சீனு உண்டுங்கானும் மறந்துட்டீர்” என தாத்தா எடுத்துக் கொடுப்பார். “சப்பான்காரன் போட்டாம் பாரு குண்டு.. மொத்தமும் காலி.. நானும் பாகனேரி சம்முகமும் மட்டும் கெடச்சத சுருட்டிகிட்டு ஊருக்கு ஓடியாந்தோம்…. போக்கு தெரியாம லாத்திகிட்டு கிடந்தோம்.. சோத்துக்கு வழியில்ல.. இங்கிலிஷ்காரன் இங்கிலிஷ்காரன் தான்.. அவம்புட்டு டாங்கு வண்டியில ஏத்தி இந்த லக்குல கொண்டாந்து விட்டுட்டான்” என்றால் “வழியில டாங்கு சக்கரத்துல காத்து போயிருக்குமே?” என்பார் தாத்தா.

ஒருமுறை பர்மாவிலிருந்து தன் தலைமையில் ஒரு படையை நடத்தியே ஊருக்குக் கூட்டிவந்த பிரதாபத்தைக் கூறினார். இவருடைய வீரச்செயலை பாராட்டி நேதாஜி வங்காளத்தில் எழுதிய நன்றிக் கடிதத்தைதான் காணவில்லை என்றும். கிடைத்தவுடன் காண்பிப்பதாகவும் சொன்னார்.

ஆனாரூனா கதைகளில் மாறாதது ஒன்றுண்டு. ஒவ்வொரு முறையும் அவர் மயிரிழையில் தப்பிப் பிழைப்பார். புறங்கழுத்தில் மூச்சுவிட்டுக் கொண்டிருந்த மரண தேவதையை மூச்சு வாங்கச் செய்து தப்பித்து வந்தார். “குண்டு போடுறான் போடுறான்னு கத்திகிட்டு சனமெல்லாம் தெருவுல ஓடுதுங்க.. பிளேனு சத்தம் கேட்டாலே வயித்துல அரளும்.. அவென் என்னத்துக்கு வாரான்னு தெரியாது.. ஒருநா ராத்திரில பொண்டு புள்ளைகளோட யங்கூன் கேம்புக்குள்ள உறங்கிட்டு கெடந்த சனம் மேல குண்டு போட்டான்.. ஒரு யுத்த தர்மம் வேணாம்?.. தண்ணி மோள எந்திருச்சு வெளிய வந்தவேன்.. தெகச்சு நின்னுட்டேன் .. டமார்ன்னு பெருஞ்சத்தம்.. அப்பிடியே தரையோட தரையா மட்டமா படுத்துக்கிட்டேன்.. கண்ணு முன்னாடி கேம்ப் பத்தி எரியுது….. இந்தக் காது மந்தமானது அன்னிலேந்துதான்..நீங்க கூட கேப்பீகளே” என்றார்.

“எப்படியோ எவென் கையிலும் ஆப்படாம இந்த பக்கட்டு வந்து சேந்து நிம்மதி மூச்சு விட்டா அந்த பகவானுக்குப் பொறுக்கல.. பெரிய ஆறு.. முழங்கால் மட்டு தண்ணில சனம் இறங்கி நடக்க ஆரம்பிக்குது.. எங்கையோ மலைக்கு அங்குட்டு மழ கொட்டி திடுமுன்னு தண்ணி.. சுதாரிக்க முடியல. .. அடிச்சுக் கொண்டே போயிடுச்சு.. கண்ணுமுன்னாடி பாத்தேன்.. இவளுக்கு முள்ளு குத்துனதால நெம்பிகிட்டு கிடந்தேனோ பொழச்சேன்.. ரெண்டு நிமிஷம் தான்”. ஒருமுறை ஆற்றில் கண்ணாடி விரியன் தன்னுடன் வந்தவரைக் கடித்து சாகடித்ததாக சொல்வார். பழனிக்கு நடக்கும்போது திருடர்களிடம் மாட்டி கவரிங்க் கடுக்கனை கொடுத்து தப்பியதை சொல்வார்.

கர்னல் சாமுவேல் மிகக்கறாரான பேர்வழி. சுதேசி எனச் சந்தேகம் வந்தால்கூட போதும், லாடம் கட்டிவிடுவார். விசாரணைக்குச் சென்ற பலரும் ஊமைக் காயங்களால் இரண்டு மூன்று நாட்களில் ரத்த பேதியாகி இறந்து போவார்கள். சுதேசி போராட்டத்திற்கு நிதி சேகரித்த வகையில் செட்டியாரும் மாட்டிக் கொண்டாராம். “என்னிக்கி இருந்தாலும் அவுகதான பாதுகாப்பு, நீங்க போயிருவீக.. நாளைக்கு எங்கள அவுக ஒதுக்கிடப்பிடாது பாருங்க” என நைச்சியமாக கர்னலிடம் நிலைமையை எடுத்துச்சொல்லி சரிக்கட்டி தப்பித்தாராம். அவருக்கு மரணம் தன்னை வேட்டையாடுவதாக ஒரு பயம்.

தாத்தா நல்ல அறிவுத் தெளிவோடு இருந்த கடைசி நாட்களில் ஒருநாள் அவரும் ஆனாரூனாவும் பேசிக்கொண்டிருந்தது சுதர்சனுக்கு நன்றாகவே நினைவில் இருந்தது. ஆனாரூனா, “நம்மள குறி வெச்சுகிட்டே இருக்கு.. எப்படியோ ஆறுமுகசாமி அருளால இம்புட்டு நாளா இன்னும் தல தப்பி இருக்கேன்” என்றபோது தாத்தா “குறி வெக்குற அளவுக்கெல்லாம் பகவானுக்கு பொறும இருக்காது ஓய்…. நாம என்ன ராவணனா கம்சனா.. அதுக்கும் ஒரு ஆகிருதி வேணும்.. குத்துமதிப்பா மொத்தமா அம்பு மாரி தான்.. அதிஷ்டம் இருந்தா பொழச்சிக்கலாம் ..நீர் சொல்லிட்டீர்.. ஒவ்வொரு நாளும் எல்லாருக்கும் இதே கததான்…” என்றார்.

பாம்புகளிடமும் தோட்டாக்களிடமும், திருடர்களிடமும், இராணுவத்திடமும், கிளர்ச்சியாளர்களிடமும், குண்டுகளிடமும், தப்பித்து பிழைத்திருக்கிறார் ஆனாரூனா. “ஒங்க தாத்தா நல்லா ஜேம்ஸ்பாண்ட் பட சீனெல்லாம் அடிச்சு விடுறார்” என சுதர்சன் நாச்சியிடம் சொன்னதற்காக கொஞ்சகாலம் கோபித்துக் கொண்டு அவன் பேசாமலிருந்தான்.

எது உண்மை என்று எவரும் தோண்டித் துருவியதில்லை. தேவையுமில்லை. பர்மாவில் இருந்தார். பர்மிய மனைவிமார்களை வேறு வழியின்றி உதறிவிட்டு, குழந்தைகளை மட்டும் தூக்கி வந்த அப்போதைய வழமைக்கு மாறாக தன் வாரிசைச் சுமந்த பர்மிய ஆச்சியையும் அத்தனை இக்கட்டுகளை மீறி ஊருக்கு கூட்டிக்கொண்டு வந்தார் என்பதும். அன்றைய தினத்தில் பேரழகியாக அறியப்பட்ட, தன்னை விட பல வருடங்கள் இளமையான, ஆச்சியின் பூர்வாசிரம வரலாற்றைப் பாதுகாக்க பெரும்பாடு பட்டார் என்பதும். பர்மாவிலிருந்து வரும் வழியில் காலில் அடிபட்டு எலும்பு முறிந்ததில் கெந்தி கெந்தித்தான் நடக்கிறார் என்பதும். இன்றும் பர்மிய முகச்சாயல்கொண்ட பேரன் பேத்திகள் புழங்குகிறார்கள் என்பதும் மூத்த ஆச்சியும் அவர் வழி வந்தவர்களும் இவரோடு புழங்குவதில்லை என்பதும் தீர்மானமான உண்மைகள். ஆச்சியைப் பார்க்கும்போதெல்லாம் எங்கிருந்தோ வந்தவர் தன்னை எப்படி முழுவதுமாக இந்த மண்ணில் கரைத்துக் கொண்டார் என்பது சுதர்சனுக்கு வியப்பாய் இருக்கும். தர்மாதான் ஏதாவது கதைகளைச் சொல்வான். “கேட்டுக்க தம்பு ஆச்சி ரொம்ப ராங்கி அப்பல்லாம், அப்பச்சிக்கும் எடுத்ததுக்கெல்லாம் சந்தேகம்.. ஆருட்டையும் பேச மாட்டாக பொழங்க மாட்டாக.. மெதுமெதுவா எல்லாமுமா ஆய்ட்டாக.. மீனாச்சி ராச்சியம்தான்..” எனச் சொல்லிச் சிரித்தான்.

இரும்புக் கட்டிலில் எவர் முகமும் காணப் பிடிக்காதவர் போல் ஜன்னலைப் பார்த்து வலது புறமாக கண்மூடி ஒருக்களித்து படுத்திருந்தார் ஆனாரூனா. உடல் முழுவதும் அடர்ந்திருந்த ரோமம் வெள்ளி புற்களாக நீண்டிருந்தன. வேட்டி நெகிழ்வின் ஊடாக மூத்திரப்பை நாளம் வெளித்தெரிந்தது. நாச்சியும் வேறு பலரும் நின்று கொண்டிருந்தார்கள். “ஐயா நீ நாடி பிடிச்சு பாக்கனும்னு சொல்றாரு.. தாத்தா இருந்த வரைக்கும் அவருதான் பாப்பாரு.. தாங்குமா தாங்காதான்னு பாத்து சொல்லுப்பா.” சொற்கள் முடிவதற்குள் ஆச்சிக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.

சுதர்சனுக்கு எரிச்சலாக இருந்தது. நாடியில் என்ன இழவைப் பார்த்துவிட முடியும்? இன்னமும் இதை நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அதுவும் விஜயதசமிக்கு ஆயுர்வேத கல்லூரியில் சேர்ந்தவன் தீபாவளிக்கு திரும்பி வந்திருக்கும்போது. வேண்டா வெறுப்புடன் முதல்நாள் முதல் வகுப்பில் சென்று அமர்ந்தவுடன் பேராசிரியர் ஸ்ரீகாந்த ரெட்டி “இது ஒரு கல்லூரி அல்ல, செத்த காலேஜ்.. நீங்கள் படிப்பது மருத்துவ அறிவியல் அல்ல வெறும் வரலாறு” என்று இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் உருவிச் சென்றிருந்தார்.

தாத்தாவினால்தான் இந்த கதி. அவருக்குப் பிறகு சுதர்சன்தான் மருத்துவனாக, அதுவும் ஆயுர்வேத மருத்துவனாக, வரவேண்டும் என்பதே தனது ஆசை என திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். அவனுக்காக மூட்டை நிறைய சுவடிகளையும் ட்ரங்க் பெட்டி நிறைய மருத்துவ நூல்களையும் சொத்தாக விட்டு சென்றார். எத்தனையோ முறை அவர் வாத பித்த கபம் என வகுப்பெடுக்க முயலும்போதெல்லாம் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி விடுவான். கடைசி காலங்களில் நினைவு தப்பத் துவங்கியதும் மருந்துகள் மறந்து அனைவருக்கும் நிரந்தர புன்னகையுடன் திருநீறு அளித்து கொண்டிருந்தார். அதற்கும் நோய் சரியாகிவிட்டது என காலில் விழுந்து கொண்டிருந்தார்கள். சாய்ந்து உறங்கிக்கொண்டிருப்பவர் திடுமென்று விழித்து “ஆரட்டியம் ..சீ ச்சீ..போயிரனும் சீக்கிரம் போயிரனும் “ எனப் புலம்புவார்.

தாத்தாவிற்கு தண்டுவட டி.பி. மிகக்கொடூரமான வலி. “அம்புப் படுக்கைன்னா என்னன்னு கிருஷ்ணன் எனக்கு காட்டுறான்.. போதும் கிருஷ்ணா..” எனப் புலம்புவார். தண்டுவடம் முழுக்க ஆயிரம் கூர்வாட்கள் குத்திக்கொண்டிருப்பது போல வலி. உச்சகட்ட வலிக்கு அப்பால் வாழ எப்படியோ பழகிக்கொண்டார். அங்கே அவர் என்னவாக இருந்தார் என்பது யாருக்கும் தெரியாது. பெரும்பாலும் புன்சிரிப்புடன் கண்மூடிக் கிடந்தார். மனம் அதிலிருந்து வழுவி போதம் திரும்பும்போதுதான் வலி அவரால் தாங்கிக்கொள்ள முடியாமல் ஆனது. “என்னக் கொண்டுபோ.. கொன்னுடு” என அரற்றுவார். மரணக் குறிகள் மட்டும் நினைவில் எழுந்தன. “இன்னும் சக்கரவட்டம் வரல..” என்பார். மரணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் “காட்டுப்பீ..” என புன்னகைத்தார். கடைசியில் நேராகப் படுக்கக்கூட முடியாத நிலை. வலியின் தீவிரத்தில் ஒருநாள் இதயம் ஸ்தம்பித்து மரித்தார்.

“ஆச்சி நாடில ஒன்னும் தெரியாது”

“அதெல்லாம் நீ பாத்து சொல்லுப்பா.. தாக்க சொல்லிவிடனும்” என்றாள் ஆச்சி. சுதர்சனைக் காட்டிலும் அவன் மீது அவளுக்கு அதீத நம்பிக்கை.

“ரிபோர்ட்ஸ் கொடுங்க” எனக் கேட்டு ஃபைலை பிரித்து பார்த்தான். சுதர்சனின் சங்கடத்தைப் புரிந்துகொண்டது போல் செட்டியாரின் இளைய மகன் அருகில் வந்து காதில் கிசுகிசுத்தார் “இஸ்கீமிக் ஹார்ட் டிசீஸ்னு சொன்னாங்க தம்பு.. இப்ப தண்ணி கோத்துகிட்டு கெடக்கு.. ஒன்னும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க” என்றார். ஊரிலேயே இருந்து செட்டியாரைப் பார்த்துக் கொள்பவர் அவர்தான். டவுனில் ஹார்ட்வேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.

செட்டியார் அருகே ஸ்டூலில் அமர்ந்தான். மூடிய திரைகளுக்கு அப்பால் விழிகள் துடித்துக் கொண்டிருந்தன. உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன. தொண்டையைக் கடக்கும் காற்றின் ஒலி புறா அகவல் போல் வெளியே கேட்க முடிந்தது. ஆவல் மின்னும் விழிகள் சூழ சுதர்சன் அமர்ந்திருந்தான்.

“அய்யா.. நல்லா இருக்கீகளா.. நாடி பாக்க வைத்தியர் பேரன் வந்திருக்காரு.. தெரியுதா?” என கூட்டத்திலிருந்த முன் வழுக்கையர்களில் ஒருவர் உரக்க கூவினார். பெரிய சலனமேதும் இல்லை. “அய்யா சுதர்சன் வந்திருக்கான்” என்று நாச்சி காதருகே குனிந்து சொன்னான்.

தலைமாட்டில் செட்டியாரின் மூத்த மருமகள் லோட்டா பாலில் நெய்க் கரண்டியுடன் தயாராக இருந்தார். கங்கை நீர் நிரப்பிய தாமிரச் சொம்பை வைத்துக்கொண்டு இரண்டாம் மருமகள் நின்றிருந்தார். கோயம்பத்தூரிலிருந்து வந்திருந்த பெரிய மகன் எவரிடமோ “காரியம் முடிச்சு நாலாம் நாள் வந்து கையெழுத்து போடலன்ன ஏன்னு கேளுங்க” என உணர்ச்சிகரமாக கிணற்றடியில் மன்றாடிக் கொண்டிருந்தது அசாதாரண நிசப்தத்தை கீறிக்கொண்டு அறையை நிறைத்தது.

மெதுவாக இடக்கரம் தொட்டு நாடியை நோக்கினான். ஆள்காட்டி விரல் வாதம், நடுவிரல் பித்தம், மோதிரவிரல் கபம். வாதம் – பித்தம் – கபம் மனதிற்குள் சொல்லிக்கொண்டே இருந்தான். நாடி ஒரு அலை போல எழுந்து மூன்று விரல்களையும் தொடுவது போலிருந்தது. வாதம் – பித்தம் – கபம். மோதிரவிரலையும் நடுவிரலையும் தீண்டாமல் வளைந்து சென்ற ஒரு பாம்பு விருட்டென ஆள்காட்டி விரலை கொத்தியது. சிற்றலைகள் எழுந்தன தாமரை மிதக்கிறது. ஆழத்திலிருந்து ஒரு கடலாமை நிதானமாக மேலெழுந்து வருகிறது. அதன் ஓடு மோதிரவிரலை தொட்டு மூச்சிழுத்து மீண்டும் ஆழத்திற்கு சென்றது. மெல்லச் சலனமற்று அடங்கியது. பதட்டத்தில் கனவு கலைந்து எழுந்த சுதர்சன் கண் விழித்து நோக்கினான். மீண்டும் பேரலை விரல்களை தொட்டு சென்றது.

எழ முற்பட்டபோது அவர் விரல்கள் அவனைத் தீண்ட முனைவது போலிருந்தது. மீறி எழுந்தான். நாசி வளைவு கண்ணீரின் ஈரத்தில் மின்னியது. உதடுகள் துடித்து எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன. சொல்லிவிடு, சொல்லிவிடு, என மன்றாடித் துடிக்கும் கண்கள் அவனுக்கு மிகப் பரிச்சயமானவை என தோன்றியது. சுதர்சன் எழுந்தான். அவனையும் மீறி உதட்டில் ஒரு சிரிப்பு எழுந்தது. “அய்யா உங்களுக்கு ஒண்ணுமில்ல.. நாடி எல்லாம் நல்லா இருக்கு.. பழைய மாதிரி ஆயிடலாம்.. கவலப்படாதீங்க.. நீங்க சொல்ல இன்னுமொரு கத பாக்கியிருக்கு” எனக் கையை இறுகப் பற்றி உரக்கச் சொல்லிவிட்டு, “வர்றேன்,” என்றபடி வெளியே வந்தான்.

“என்ன தம்பு ஆளுகளுக்கு தாக்க சொல்லிவிடலாமா?” என்றார் இளையவர்.

“அவசியம் இருக்காது “ என்றபடி சைக்கிளில் ஏறிக் கிளம்பியபோது வாயிலில் புங்கை மர நிழலில் தன்னுடைய சைக்கிளைச் சாய்த்துக்கொண்டு அமர்ந்திருந்த தர்மா, “வாங்க தம்பு” என உதட்டோர கோடுகள் காது தொட வழக்கம் போல் சிரித்தான்.

சைக்கிள் தெரு முக்கைக் கடப்பதற்கு முன்பே ஆச்சியின் பெருங்குரல் கேட்டது. அவனை நிறுத்த விடாமல் சைக்கிள் உந்திக் கொண்டு போனது.

ஊழ்

 

தி வேல்முருகன்

 

oozh_poem

அப்போது செட்டியார் வீட்டு வேலை நடந்து கொண்டு இருந்தது. இவனது மேற்பார்வையில். முகப்பில் போர்ச்சும், இரண்டு மாஸ்டர் பெட்ரூமும், ஹால், டைனிங் ஹால், கிச்சன், சிட் அவுட் பின்னால் அவுட்-ஹவுஸ் என நவீன வில்லாவுக்கு உருவம் கொடுத்து கொண்டு இருந்தார்கள். முருகன் மேஸ்திரிதான் தினக்கூலிக்கு ஆட்களை வைத்து பார்த்துக் கொண்டு இருந்தார்.

தீபாவளி வருகிறது, பிள்ளைக்கு ஏதாவது செய்ய வேண்டும். குழந்தை பிறந்த அன்று வெறும் கையாய் நின்றது, இப்போது ஏதாவது செய்ய வேண்டும் காசுக்கு, என்று உருட்டிக் கொண்டு இருந்தது.. இந்த வேலையில் ஒன்றும் பைசா பெறாது. ஏற்கனவே கழுத்துவரை வாங்கியாகி விட்டது இப்போது வட்டிக்குச் செய்வது போலதான் அவன் அந்த வேலை பார்த்து கொண்டு இருந்தான்.

புரட்டாசி மாதம் ஆரம்பித்து கடைசி வாரமாகியும் மழை இல்லை. ஆனால் அன்று பார்த்து மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாமலிருந்து திடீர் என்று காற்று மாறி மழை வந்து வேலையைக் கெடுத்தது. எனவே, திரும்பி வரும்போது அதே தெருவில் வசிக்கும் ஒய்வு பெற்ற வாத்தியார் இவனைக் கூப்பிட்டார். வாத்தியார் மகன் அவனது நண்பன்.சிஆர்பிஎப்பில் நார்த்தில் பணிபுரிகிறான்.

“என்ன பாக்கறப்பா, வா, அம்மா கூப்டுது பாரு”

வாசலில் இருந்த வெள்ளை நாய் உறுமியது.

தயங்கி வெளியில் நின்றவனை, “வாப்பா உள்ளே”, என்று கூடத்துக்கு அழைத்தனர்.

“என்னம்மா?”

‘மேலே பாரு தம்பி”

மேலே பார்த்தபோது ரூப் சிலந்தி வலை போல் விரிசல் விட்டு அது வழியாக காலையில் பெய்த சிறு மழைக்கே தண்ணீர் கசிந்தும் சொட்டிக் கொண்டும் இருந்தது..

“சார் காலம் போட்டு கட்டிய வீடுதானே?” என்றான்.

“ஆமாம் தம்பி ஐய்யாரு மேஸ்திரிதான் கட்டினாரு செஞ்சாரு.மணி கொத்தனாருதான் கிட்ட இருந்து எல்லாம் வேலையும் செஞ்சாரு”.

“இங்கே மட்டும் தான் தண்ணீர் சொட்டுதா?”

‘இல்லப்பா ரூம்ல,கிச்சன்ல அப்படியே ஊத்துதுப்பா”

பார்த்தபோது எல்லா இடமும் சிலந்தி வலை போல் விரிசல் இருந்தது. கிச்சனில் மிக அதிகமாக விரிசல் விட்டு ரீபார்லாம் துருப்பிடித்து உதிர்ந்து விடும் நிலையில் இருந்தது.

“ஏன் சார் தண்ணி கசியறத பாக்காம விட்டுடீங்களா?”

“நீ வேறப்பா போன வருசம்தான் மேல கொத்திட்டு புதுசா டைல்ஸ் எல்லாம் போட்டன், அதுக்குள்ள ஒழுகுது.”

“சார் வாங்க வீட்ட வெளிப்பக்கமும் மேல்தளத்தையும் பார்ப்போம்”.

அவன் பார்த்தபோது காலம் போட்டு இருந்த இடமெல்லாம் நேர்க்கோடாக விரிசல், பழைய வீட்டு அஸ்த்திவாரத்தின் மேலேயே சுவர் வைத்து எழுப்பிருக்கிறார்கள். கீழே பீம் கொண்டு இணைப்போ லிண்டல் பீமோ கொடுக்காமல் வெறும் சுவற்று மேலே ரூப் தளம் அமைத்ததால் கீழே அஸ்திவாரம் கனம் தாங்காமல் உட்கார்ந்து விரிசல் விடுகிறது. ‘மற்றபடி நகாசு வேலைகளால் தரையும், பூவூம், கைப்பிடியில் குழவும் கார்னரில் திரனையும் செய்து தங்களது அனுபவத்தால் மேஸ்திரி இழைத்து வைத்திருந்தார்.

“சார் வீட்டிற்கு மேல மேல செலவு செய்வது வேஸ்ட், கீழே அஸ்திவாரம் ஒக்காருது. இப்ப சரி செஞ்சாலும் திரும்ப பழையபடி ஒழுவும், இந்த வீடு தாங்காது அண்ணன்கிட்ட சொல்லுங்க லோன் போட்டு இடிச்சுட்டு புதுசா கட்டிடுவோம்,” என்றபோது கையில் காப்பி வைத்து கொண்டு எதிரில் நின்ற அம்மாவின் கண்ணில் நீர் பொலபொலவென வடிந்தது. காப்பியை மேஐையில் வைத்துவிட்டு ரூமுக்குச் சென்று விட்டார். தொடர்ந்து அழுவது தெரிந்தது. ஏன் சொன்னோம் என்றாகி விட்டது அவனுக்கு.

அதைப்பற்றி கவலைப்படாமல் வாத்தியார் காப்பியை எடுத்து உறிஞ்சும் சத்தம் நிசப்தத்தை உடைத்து நாராசமாக்கியது. ”

”என்ன தம்பி காப்பி ஆறிடும், எடுத்துக் குடி”

இவனுக்கு காப்பியை கையில் எடுத்தும் குடிக்க முடியவில்லை நெருப்பை விழுங்குவது போல் இருந்தது இரண்டு நிமிடமும்.

வாத்தியார் ரூமைப் பார்த்து, “இப்ப என்ன செய்யறது>” என்று ஆரம்பித்ததும் ;இவன், “சார் நான் உள்ளதச் சொன்னேன். இப்ப பேருக்கு செஞ்சிட்டு திரும்ப கன்டிப்பாக ஒழுவும் அப்ப கேட்க மாட்டிங்களா?” என்றான்..

ரூமில் இருந்தே அம்மா, “வேற வழியில்லையா?” என்று கேட்டார்.

‘இருக்கும்மா. செலவு ஆகும் செஞ்சா இரண்டு மூன்று வருசமாவது தாங்கும்”

“அப்படியே செஞ்சுடுப்பா,” என்றார் அம்மா.

வாத்தியார், “என்ன மாதிரி செய்யனும்?” என்று விசாரித்தார்.

“சார் பழைய டைல்ஸ் எல்லாம் கொத்தி எடுத்துட்டு ரூப் விரிசல் எல்லாம் ரிப்பேர் பார்த்து வாட்டர் புருப்பிங் பண்ணிட்டு வாட்டம் காட்டி வேற டைல்ஸ் போட்டா தாங்கும்.”

“அதெல்லாம் ஒன்றும் வாணாம், இப்படி மேலேயே ஏதாவது செய்ய முடியுமா பாரு”

‘சரி சார் அளவு எடுத்து இரண்டு தார்ப்பாய் வாங்கி போடுவோம் ஒழுவாத மாதிரி ”

“என்னப்பா நீ போவாத ஊருக்கு வழி சொல்ற?”

“இல்லை சார் வேற எப்படி செய்யறதுனு தெரியல நீங்க முடிவு பண்ணி சொல்லுங்க எனக்கு வேல இருக்கு” என்று அவன் கிளம்பினான்.

அம்மா வெளியே வந்து, “சாயந்திரம் வா தம்பி என்ன செய்யலாம்ன்னு நான் சொல்றேன்,” என்றார்.

வெளியே சிறு சாரல் மழை தூறி கொண்டு இருந்தது. நனைந்து கொண்டு வீடு வந்து சேர்ந்தான் துணி மாற்றிவிட்டு “தீவாளிக்கு வழி பொறந்திருக்கு,” என்றான் மனைவியுடம் குழந்தையை வாங்கி கொண்டே. பையனிடம், “கடையில உள்ள விலக்கூடிய டிரஸ்தான் உனக்கு,” என்றான்,

குழந்தை கையை ஆட்டி வழக்கம் போல கே கே என்று புன்னகைத்தது.

“என்னது அப்பாவும் பிள்ளையும் சேர்ந்துட்டிங்க, அப்படியே நாளு கிழமையில என் நகைக்கு ஒரு வழி பொறந்தா நல்லா இருக்கும் ”

“மேலும் மனைவியின் ஆவலைத் தூண்டாமல் நடந்ததைச் சொன்னதும், “வேல செஞ்ச மாதிரிதான் நீங்க வாங்குன மாதிரிதான், ஊருல அவன் அவன் எப்படி ஏய்ச்சு பொழைக்கறானுவ ” என்றாள் மனைவி. “நீங்க இப்படி ஊம கனா காண வேண்டியதுதான் ”

அவளைச் சொல்லி குற்றமில்லை, அவள் வந்ததிலிருந்தே இவனது உழைப்பும் முயற்சியும் பலன் அளிக்கவில்லை வெறுங்கையுடன் வருவதே வாடிக்கையாகி விட்டது !”செய்த வேலையெல்லாம் நஷ்டப்பட்டு நகையெல்லாம் அடகுக்கடையில் பத்திரமாக இருக்கிறது, திருப்பும் வழி எட்டிய தூரம்வரை தெரியவில்லை. மத்தளம் போல் இருந்தது அவன் நிலமை, ஏன்டா சொன்னோம் என்று ”

“மாலையானதும், “சரி அந்த வேலையை வாத்தியாருக்கு இல்லைன்னாலும் அந்த அம்மாவின் கண்ணீருக்காகவது செய்வோம்,” என்றான் மனைவியிடம்.

‘போய் பார்த்துட்டு வாங்க, என்ன செய்யறது அவங்களுக்கு என்ன கஷ்டமோ”

“அவன் சென்று பார்த்தபோது வாசல் கேட்டில் நாய் நின்று கொண்டு இருந்தது. ஒரே சீரான உறுமல். அடுத்த அடி வைத்தவுடன் வேகமாக குரைத்துக்கொண்டு மேலே பாய்ந்து விடும் போல் வந்தது.

“டைகர் ” என்று சத்தமிட்டு அம்மா வெளியே வந்தார்கள். “நாய் அவர் மீது உரசி செல்லம் கொஞ்சியது

“வாப்பா உள்ளே வா ”

“சொல்லுங்கம்மா”

“எனக்கு மருமகள நினைச்சுதானப்பா பயம், பையன் ஒத்துக்கிட்டான் செய்யச் சொல்லி நீ நாளைக்கே ஆளுகள ரெடி பண்ணி பெரிய மழைக்கு முன்ன முடிச்சு குடு”

“சார் இடையில வேற மாதிரி செய்யனும்னு சொன்னா…”

“சார் அப்படிதான் ஆனா இனி ஒன்னும் சொல்ல மாட்டார், பையன் சொல்லிட்டான்ல”

“சரிம்மா”

“நாளைக்கு இரண்டு ஐோடி ஆட்களை விட்டு உடைக்க விடுவோம். சார்ட்ட சொல்லிடுங்க. நான் போய் ஆட்கள் ஏற்பாடு பண்றம்மா,” என்றவன், “அம்மா இந்த நாய்…” என்று தயங்கினான்.

“டைகரா? நான் பின்னாடி கட்டிப் போடறன், பயப்படாதே ”

“அவன் மேஸ்திரியிடம் வேலையைப் பற்றி சொல்லி மறுநாள் காலையில் ஆட்களை ரெடி செய்து வேலையை ஆரம்பித்து விட்டான். செட்டியாரைப் பார்த்து “வாத்தியார் வீட்ல ஒழுகுது, ரிப்பேர் வேலை”, என்றதற்கு செட்டியார் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், மனதில் என்ன நினைக்கிறார் என்ன சொல்லுவார் என்ற பயம் உள்ளுக்குள் அவனுக்கு இருந்தது ‘

‘மேஸ்திரி தினக்கூலிக்கு ஆள் அனுப்புவதால், மாலையானதும் சம்பளம் கையில் வந்திடும், அவரது கமிஷன் எடுத்துக் கொண்டுதான் ஆட்களுக்கு தருவார். இவனுக்குதான் பயம் திட்டமிட்டபடி வேலை முடியல என்றால் கூடுதல் செலவு ஏற்படும் அதற்கான காரணம் சொல்ல வேண்டும். அதும் செட்டியாரை சமாளிப்பது பெரும் பாடு.

மேஸ்திரி கலியமூர்த்தியுடன் சேர்ந்து இரண்டு ஐோடி ஆட்களை அனுப்பியிருந்தார், கணவன் மனைவியாகதான் வருவார்கள் ஒட்டர் இன பழங்குடியினர் அவர்கள், வேலையை கான்ராக்ட்டாக பேசிக்கொண்டுதான் வேலை செய்வார்கள். அதிலும் மேஸ்திரி கமிஷன் கொடுத்தாக வேண்டும். இல்லை என்றால் அவர்களுக்கு அடுத்த வேலை கிடைக்காது. இதெல்லாம் அவனுக்கும் தெரியும் ஆனால், ஒன்றும் செய்ய முடியாது.

வாத்தியாரை வைத்துக் கொண்டு மேஸ்திரி கலியமூர்த்தியிடம் வேலையைச் சொன்னதும், “சார் இது எல்லாம் கடுக்காய் கருப்பட்டி போட்டு ஐல்லி போட்டு இருக்கு இது கான்ராக்ட்டாக செய்ய முடியாது, சம்பளம் கொடுத்து மதிய சாப்பாடு போட்டுடுங்க, ” என்றார் அவர்.

“வாத்தியார் “இங்கே சாப்பாடுலாம் செய்ய முடியாது,” என்றார்.

“மேல என்ன செய்யறது சொல்லு தம்பி”

“சார் சாப்பாடு கடையில வாங்கி கொடுத்துடலாம்,” என்று சொல்லிவிட்டு கலியமூர்த்தியிடம், “ஒரே நாளில் முடிச்சுடனும்,” என்றதும் “சார் நாளைக்கு முடிஞ்சாலே பெரிய விஷயம்” என்றார் அவர்.

இவன் வாத்தியாரை பார்த்ததும் அவர், “சரிப்பா சாப்பாடு வாங்கி கொடுத்துடறன். வேலையை ஆரம்பி ஆனா எனக்கு நாளைய பொழுதுக்குள் முடிச்சுடனும் ” என்று கறாராகச் சொன்னார்.

‘கலியமூர்த்தி ஆட்கள் வேலையைத் தொடங்கினர், முன்பே சொல்லியிருந்ததால் தயாராக சம்மட்டி, உளி பான்டுவுடன் வந்திருந்தனர் இயல்பாக வேலை நடந்தது, ஆனால், வாத்தியாரிடம் சொல்லிவிட்டு வீடு வரை சென்று வருவதற்குள் வாத்தியார் ஆட்களுடன் சன்டை போட்டு விட்டார். அவன் திரும்பி வந்ததும் அவனிடம், “என்னப்பா நீ இவன் இங்கே அடிக்கற அடி கீழே எல்லாம் கொட்டுதுப்பா. என் கெட்ட நேரம் இருக்கிறது பத்தாமல் மேலேயும் நீங்க ஒழுவ வப்பீங்க போலிருக்க” என்று கொபமாககக் கத்தினார்.

கலியமூர்த்தியும் அவனது ஆட்களும் வருத்தத்துடன் வேலை செய்வது தெரிந்தது, முகத்தில் ஈயாடவில்லை. நாளைக்கு வேலைக்கு வருவார்களா என்று இவனுக்கு கவலையாகி விட்டது.

“வாத்தியார் கீழே போய், “பாரு எப்படி கிடக்குன்னு என் பேச்ச எங்க கேட்கறா,ரிட்டையர்மென்டுக்கு பிறகு கிடந்து அல்லாடுடறன்,” என்றார்.,

இரண்டு மூன்று இடங்களில் மேலே ஐல்லியை உடைத்ததும் ஏற்கனவே இருந்த விரிசலில் இருந்து சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்திருக்கிறது, அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதை போல் இவர்களுக்கு பயம். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கும்போது அம்மா, காப்பியோடு வந்து நிற்கிறார்கள் வாத்தியார் சண்டை போட்டு திட்டியதில் அழுதிருப்பார்கள் போல் இருந்தது.

அவன் அப்போதுதான் பழைய சாதம் தயிரோடு சேர்ந்து சாப்பிட்டிருந்தான் காப்பி வேண்டாம் என்றால் வருத்தப்படுவார் என்று வாங்கி கண்ணை மூடிக்கொண்டு குடித்து விட்டு வைத்தான்

“அம்மா கீழே விரிசல் எல்லாம் தட்டிவிட்டு புதிதாக கெமிக்கல் பூசி சரியாக்கனும் கொட்டினால் வேலைக்கு நல்லதுதான். நீங்க சாருகிட்ட கொஞ்சம் சொல்லுங்க, ஆட்களை சத்தம் போட்டா வேலைக்கு வரமாட்டாங்க., பிறகு வேலை முடிப்பதற்கு சிரமமாயிடும்!

“கேட்டுக் கொண்டு வந்த வாத்தியார், “நீ என்னப்பா, அவங்களுக்கு வக்காலத்து வாங்கற உனக்கு என் கஷ்டம் புரியாதப்பா,பையன் நாளைக்கு கேட்டால் பதில் சொல்ல வேண்டிய சங்கடம் எனக்கு. நீ கொஞ்சம் கிட்ட இருந்து இதை முடிச்சுக் கொடு, எனக்கு இந்த வேலை ஒன்றும் புரியல” என்றார்.

சரி சார் நான் பார்த்துக்கரன், ”

அப்படா என்று இருந்தது அவனுக்கு இனி கலியமூர்த்தியுடன் சமாளிச்சு வேலைய எப்படியாவது முடிக்கனும். கலியமூர்த்தி கள்ளமில்லாமல் வேலை செய்யற ஆள், வெடவெடவென்று நல்ல உயரம் கருப்பு. ஆனால் எங்கே போனாலும் கூலிக்காரன் என்று நினைத்துக் கொண்டு சற்று விரட்டினால் சன்டை போட்டு விடுவான். எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று குழம்பி, “கலியமூர்த்தி உடைச்ச ஐல்லியை எங்க போடறிங்க.” என்று கேட்டான்.

சார் அத ஏன் கேட்குற, வாத்தியார் மனுசன் மாதிரியா பேசராரு?.

‘ஏம்பா என்னாச்சு ”

சார் வேலை செய்யறவன் வெத்தலை பாக்கு போடமாட்டான்? பீடி குடிச்சு போடமாட்டான்? அதுக்கெல்லாம் பேசராரு, சீரா அடிக்க சொல்ராரு, கொஞ்சம் கூட பேற மாட்டேங்குது ஓங்கி அடிச்சா மட்டு மரியாதை இல்லாமல் பேசராரு. நீ யாராவது வச்சி பாரு சார், நம்ம கொண்டு ஆவாது”.

ஏம்பா உனக்கு நாலஞ்சு நாள் வேல இருக்கு அவசரப்படாத. ஐல்லியை உடைத்து அள்ளுன பிறகு சுத்தமாக்கி விட்டு தார் பெயின்ட் அடிக்கனும், உன்னைத்தான் நம்பி இருக்கன், செஞ்சு குடு” என்றான் “நாளைக்கு வாத்தியாரோடு நீ டவுனுக்கு போய் பொருள் எல்லாம் வாங்கிட்டு வா, உனக்கு செலவுக்கு ஆகும்”

கலியமூர்த்தி மவுனமாகி வேலை செய்து கொண்டு இருந்தான், ஒன்றும் பதில் இல்லை.

கீழே வந்து அம்மாவிடம், “ஆட்களுக்கு டீ போட்டு கொடுங்கள்” என்று கூறி விட்டு வேலையைப் பார்த்தான் வாத்தியார் டீ கொண்டு வந்து அனைவருக்கும் கொடுத்தார், ஆட்கள் சிறிது இயல்பாய் பேசி கொள்ள ஆரம்பித்ததும், “சார் நாளைக்கு பெயின்ட், தார் சீட் எல்லாம் வாங்கனும் மானம் மப்பு மந்தாரமா இருக்கு எதுக்கும் பக்கத்து சுருட்டு கம்பேனியில் தார்ப்பாய் கேளுங்க, சாயந்திரம் வேலை முடிந்து மூடி வச்சிடுவோம்” என்றான். வாத்தியார் வேகமாக பக்கத்தில் தார்ப்பாய் கேட்க சென்றார்.

“தெ உன் புத்திய காட்டாத வேலை செய்ய பாரு தீவாளிக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்ல புள்ளைவோ துணி கேட்டு அழுவுதுவோ என்ன நா சொல்றது கேட்குதா என்றார் கலியமூர்த்தி மனைவி புவனா.

கலியமூர்த்தி முறைத்து விட்டு சம்மட்டியால் வேகமாக அடிக்க ஆரம்பித்ததும் கீழே இருந்து வாத்தியார் தார்ப்பாய் எடுக்க கூப்பிட்டார்

“போயி எடுத்துட்டு வா” என்றான் இவன்.

கலியமூர்த்தி போனதும், “தினம் வேலை செய்யறத குடிச்சுட்டு புள்ளைவோளுக்கு ஒன்னும் செய்ய மாட்டார் சாரு நான் பொம்பளை சம்பாரிச்சு அதுவள பார்க்கறன் ரா சோறு ஆக்கறதுதான் மீச்சம் மீதிய காலைல போட்டுட்டு வேலைக்கு ஒடி வரேன்,” என்றார் புவனா.

” மதியத்திற்கு?”

”பால்வாடி சோறுதான்”

‘அவனுக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை..

வாத்தியார் கலியமூர்த்தியோடு மேலே தார்ப்பாய் கொண்டு வந்தார்.

“சார் மணி 12. ஆவுது சாப்பாடு வாங்கி வரனும்”

“இது நல்லாருக்குபா, வேளைக்கு சாப்பாடு, டீ நம்ம பாடு தான் சிரிப்பா சிரிக்குது யார் போய் வாங்கி வரது| கீழே வா காசு தரன்”

“‘கலியமூர்த்தி நீ போய் வாங்கி வாயேன் ”

‘சரி சாரு!

”ஏ பூனா 4, 4 பரோட்டா வாங்கியாரன்”

‘தெ காசு இருந்தா 4 வாங்கி புள்ளைவோளுக்கு குடுத்துட்டு வா”

கலியமூர்த்தி சென்றதும், “செட்டியார் வீட்டுல பூச்சு வேலை நடக்குது போயி பாத்துட்டு சாப்பிட்டுட்டு வந்துடறன் சார்” என்றான் இவன்.

” ம்ம்” என்றார் வாத்தியார், சுரத்தில்லாமல்.

‘பூச்சு வேலை சொல்லியிருந்தபடி சாரம் போட்டு ஆரம்பித்திருந்தனர், நேரம் ஓடியிருந்த அளவு வேலை நடந்திருக்கவில்லை.

“பழனி ஏன் வேலை ஆவல?”

‘வசந்து கையில சாரத்திலிருந்த தேள் போட்டுடூதுன கலவை குடுக்க ஆள் இல்லாமல் வேலை தேங்கி போச்சு”

”மேஸ்திரி வரலையா?”

” இல்லைண்ணா, காலையிலிருந்தே காணும்”

” எங்க வசந்து”

“செட்டியார் பையன் ஆஸ்பத்திரிக்கு இட்டுட்டு போயிருக்காரு, நான் அப்படியே மேஸ்திரியிடம் சொல்ல சொன்னேன்,” என்றான் கொத்தனார் பழனி.

“என்ன பழனி இவ்வளவு கலவையை போட்டு வச்சிருக்க, எப்ப முடிக்கறது?”

“சாப்பிடப் போவாம 4 மணி வேலை செய்யலாம்ன்னு பிளான் பண்ணுனோம், கடைசில இப்படி ஆயிப் போச்சு”

கொத்தனார் மணி எங்க?”

“வசந்துக்கு பதிலா யாராவது பசங்க கூப்ட்டு வரேன்னு சைக்கிள் எடுத்து போயிருக்கான்,இப்ப வந்துடுவாண்ண”

பேச்சுக்குரல் கேட்டு செட்டியார் வெளியில் வந்து விட்டார். ஐயோயோ என்றது அவன் மனம்

“என்னப்பா காலையிலிருந்து ஆள காணல?”|

“இல்லிங்க வாத்தியார் வீடு ஐல்லி உடைக்க ஆரம்பிச்ச உடனே கீழே பூச்சு எல்லாம் கொட்ட ஆரம்பிச்சதும் சார் வேலை செய்ய விடல, புரிய வைக்க போதும் போதுமுனு ஆயிடுச்சு அதான் நிக்க வேண்டியதா போயிடுச்சுங்க”

“இங்கே பாத்தியா இந்த வசந்து பயல தேளு கொட்டிடுச்சு, வேல எப்படி ஆவுமுனு தெரியல”

“அதெல்லாம் முடிச்சுடலாங்க, மணி ஆள் கூப்பிட்டு வந்துடுவாப்பல நான் போவாம இருந்து பாத்துக்கறன்”

செட்டியார் உள்ளே சென்று விட்டார்

“ஏய் பழனி ஒரு காரியம் செய்,கலவையை வாங்கி இளக்கி வாரி மேலே அடிச்சுடு , மணி வந்ததும் அப்படியே சுத்தம் பண்ணி கட்டைய புடிச்சு ஸ்பான்ச் போட்டு கீழே இறங்கலாம்”.

“சரிண்ண”

“அருளு நீ சாரத்தில் ஏறு. அமுதா கலவையை அள்ளிக் குடு, நான் ரோடு வரை போய் யாராவது கண்ணுல பட்டா கொண்டு வரேன்.”

அதற்குள் வண்டி சத்தம் கேட்டது, செட்டியார் பையன் சந்துரு வெறும் ஆளாய் வந்தான். சந்துரு அவன் பள்ளித் தோழன்

” மேஸ்திரி இல்லடா”

“ஏய் சந்துரு ஆளுவ சாப்பாடுக்கு கலையாமல் வேல செய்ய முடிவு பண்ணி இருக்கு, நீ காசு வச்சிருக்கியா டீ பிஸ்கட் ரெடி பண்ண போ… ”சாப்பாட்டு நேரம் தாண்டிப் போச்சு பாரு”

டீ வருவதற்குள் மணி இரண்டு பசங்களுடன் வந்து விட்டான். டீயைக் குடித்து விட்டு பழனி வாரி அடித்து இருந்ததை சுத்தம் பண்ணி முடிக்க 4 மணி ஆகி விட்டது./ பாதி வேலை பாக்கி நிற்கிறது வெளிப்பூச்சு வேலை அது, சாரம் பிரித்து விட்டு மிச்சம் உள்ளதைப் பூச வேண்டும். பார்த்தபோது மலைப்பாக இருந்தது இன்று எப்படியாவது முழுவதும் குறையில்லாமல் முடித்து விட வேண்டும். சிறுநீர் கழிக்காதது வலி எடுத்து விட்டது சென்று திரும்பும்போது பழனியும், மணியும் சாரத்தை பிரிக்க ஆரம்பித்து இருந்தனர்,

‘4 மணிக்கு டீ பிஸ்கட் வந்தது குடித்து விட்டு ஆரம்பித்தது வேலை, இடையில் தண்ணீர் கேட்டு குடிப்பதை தவிர யாரிடமும் பேச்சே இல்லை. “ஒருவழியாய் வேலை நெருங்கி முடிக்கும் போது மணி 7 ஆகிவிட்டது. மேஸ்திரி தேடிக்கொண்டு வந்து விட்டார், அவனிடம் “கலியமூர்த்திக்கு சம்பளம் வாங்கி குடுத்துட்டு வரம்பா, வாத்தியார் பேச்சு குடுத்துட்டாரு” என்றார். ‘”முடிஞ்சுதுன்ன நீங்க பார்த்துங்க ”

இதையெலாம் “பார்த்து கொண்டு இருந்த செட்டியார், “மேஸ்திரி நீங்க வரலான்ன எப்படி நடக்கும் வேலை?” என்று கேட்டார்.

”இல்லீங்க பையனுக்கு உடம்பு சரியில்லாமல் போச்சு, ஆஸ்பத்திரியில் லேட்டா போயிடுச்சு. அதலாம் நாளைக்கு கிட்ட இருந்து பார்த்துக்கரன் ”

‘ஆட்களைப் பார்க்க பாவமாக இருந்தது, பசியில் துவண்டு உள் வாங்கி இருந்த கண்களில். செட்டியார் அடுத்து என்ன சொல்லுவார் என்ற கவலை அவனால் பார்க்க முடிய வில்லை, செட்டியாரிடம் தலையாட்டி விட்டு கிளம்பினான். ஆனால், வீடு வந்தால்,’ “என்ன ஊர் வேலை முடிஞ்சாச்சா?” என்கிறாள் மனைவி! மதியம் சாப்பிட வராத எரிச்சலில் அவன் ஒன்றும் சொல்லவில்லை தாவிய பிள்ளையிடம், “இரு தங்கம் குளிச்சிட்டு வந்துடறன்” என்றான்.

”பச்சை தண்ணிரில் உடம்பு குளிர குளித்த போது ஆற்றாமையும் கரைந்து ஒடி சிறிது ஆறுதலாக இருந்தது சாப்பிட்டு படுக்கும்வரை பேச்சு இல்லை மனைவியுடன் குழந்தை ஆழ்ந்து உறங்கி கொண்டு இருந்தது. ‘”கோபமா?” என்று நிலைகொள்ளாமல் அவள் அவன் தலைமுடியில் கையை கொண்டு அலைந்தாள், உடம்பு குறுத்து சிலிர்த்தது திரும்பிய அவன் அவளுக்களித்த பதிலில் உடல் களைத்துப் படுத்தவள், இழுத்தணைத்து திரும்ப முத்தமிட்டாள்.

மறுநாள் வேலை திட்டமிட்டபடி மேஸ்திரி வந்ததால் அதிக சிரமமில்லாமல் இரண்டு இடத்திலும் செய்ய முடிந்தது, வாத்தியார் மதியத்திற்கு பிறகு வராததை பற்றி அதிகம் கேட்கவில்லை, செட்டியார் வீட்டீல் நடந்ததை அறிந்த பிறகு நம் வேலை சீக்கிரம் முடிந்தால் சரி என்ற மன நிலையில் இருந்தார் மாலை, வேலை நடந்து கொண்டு இருக்கும்போதே தேவையானவற்றை வாங்க கலியமூர்த்தியை இட்டுக் கொண்டு சென்று வந்தார். இந்த கலியமூர்த்தியும் வாத்தியார் பின்னாலே நின்று கொண்டு இருக்கிறான், அவரும் அவனைத்தான் கூப்பிடுகிறார், குறையில்லாமல் வேலை நடந்தால் சரி என்றது அவன் மனம்.

அடுத்த நாள் செட்டியார் வீட்டு அவுட்டா் பூச்சு வேலை முடிந்தது. வாத்தியார் வீட்டில் கலியமூர்த்தி மற்றும் ஆட்களைக் கொண்டு சுத்தம் பண்ணி தார் பூசி மணி கொத்தனாரை கொண்டு பிட்டுமன் சீட்டை சூடுபடுத்தி ஒட்டி விட்டு அதன் மேல் மர உருளையை உருட்டி முடிக்க இரவாகிவிட்டது. வழக்கம் போல நேரமாகிவிட்டது, ஆட்களுக்குப் புரியாத வேலை என்பதால் சாப்பிடவும் போகவில்லை, இடிமுழக்கத்தை எதிர்பார்த்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றான் அவன் ஆச்சரியமாக அவள் ஒன்றும் சொல்லவில்லை

“அப்பா வந்து உங்களுக்காக இத்தனை நேரம் இருந்து பார்த்து விட்டு போயிடுச்சு”

“சரி”

“இது என்ன சட்டை பேண்ட் எல்லாம் தாரு?”

அப்போதுதான் பார்க்கிறான், தார் பெயிண்ட் ஒட்டி இருக்கிறது

“போங்க கரித்துணிக்குக்கூட ஆவாது போலிருக்கு,” என்றாள்

“விடு, இப்ப என் நிலமையும் அப்படிதான் இருக்கு,” என்றான்

தீவாளி வரிசையைக் காட்டினாள் அதில் பையனுக்கும் அவளுக்கும் இரண்டு இரண்டாக துணி மணிகள் இருந்தன.

அன்று இரவு மழை பெய்தது, அது மிதமான மழைதான் அடுத்த நாள் காலை, எங்கு வாத்தியார் வீடு திரும்ப ஒழுவுதோ என்று பயத்தில் அவன் சென்று பார்த்தபோது இரண்டு இடங்களில் கசிவு இருந்தது

‘வாத்தியார், “என்னப்பா இது?” என்று சலித்துக் கொண்டார்.

“இல்ல சார் சரி பண்ணிடுவம், தண்ணி ஓடாமல் தேங்கி நிக்குது, அதான்”, என்றான் அவன். “கீழே சாரம் போட்டு விரிசல் எல்லாம் கெமிக்கல் பூசனும், மேல தளத்தில் ஐல்லி போட்டு வாட்டம் காட்டி டைல்ஸ் பதிக்கனும் சார் எல்லாம் செஞ்ச பிறகு பாருங்க ”

“என்னம்மோ செய்யுங்க” வாத்தியார்க்கு நம்பிக்கை இல்லை, அம்மா முகத்தில் கவலை தெரிந்தது

ஆட்களை எதிர்பார்த்து வெளியே வந்தான். மேஸ்திரி மொத்த ஆட்களோடு வந்து கொண்டு இருந்தார், இன்னும் இரண்டு நாட்கள் வேலை இருக்கிறது ”

“என்னப்பா செட்டியார் இப்படி பண்ணிட்டாரு>|

“ஏன்ணன் என்னாச்சு?”

“தீவாளி கழிச்சு செய்யலாம்னு சொல்ராரு. இந்த பயலுவல மண்ண ஏத்தி வைங்கடானு சொன்னன்,உட்டுட்டானுவ. அமுதா காலையிலே சலிக்கப் பார்த்து இருக்கு செட்டியார் பார்த்துட்டு வேலை ஆவாதுனு நெறித்துட்டாரு, என்ன செய்யறது?”

“மேலே வாங்க வாத்தியார்ட்ட பேசி பார்ப்போம்” என்றான் அவன்.

“சார் ஆளுவ நிறைய இருக்கு, நீங்கள் ஒத்துகிட்டா நாளைக்கே வேலையை முடித்துக் தரேன்,” என்று வாத்தியாரிடம் சொன்னார் மேஸ்திரி. வாத்தியார் அவனை பார்த்தார்.

|என்ன சொல்ரப்பா?”

அவன் சொல்வதற்க்குள் மேஸ்திரியே, “தீவாளி வருது சார், ஆளுவ இப்ப எங்க போவும்? நீங்க மூணு ஆள் சம்பளம் குறைச்சு கொடுங்க, நான் நிரவி கொடுத்து விடுறேன்.,” என்றார்.

வாத்தியார் ஒத்துக் கொண்டு உள்ளேயிருந்து கருப்பு கலர் பாலித்தீன் சீட் கொண்டு வந்து கொடுத்து அதை தளத்தில் விரித்து அதன் மேல் கான்கீரிட் இடவேண்டும் என்றார்

“அதுக்கு என்ன சார், ஐோரா செய்வோம்,” என்றார் மேஸ்திரி. அவன் மறுத்து, ஐல்லி கொட்டும்போதே பாலித்தீன் ஓட்டை விழுந்துடும் பிறகு இட்டு என்ன பிரயோசனம் என்றதற்கு வாத்தியார் ஒத்து கொள்ளவில்லை மேஸ்திரியும் வாத்தியாருடன் சேர்ந்து கொண்டார், அவன் என்ன செய்ய முடியும், வேடிக்கை பார்ப்பதை தவிர? ஐல்லி மணல் ஏற்றும்வரை அதையேதான் செய்தான். வாட்டம் காட்ட புல்லோடு வைத்த பழனி இரண்டு நாளில் தங்கச்சிக்கு வரிசை கொண்டு போவனும் என்றும், மணி தலை தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்கு போவனும் என்றும், கலவை கொண்டு வந்த அமுதா கூரை வீட்டை பெருமழைக்கு முன் பிரித்து கட்டனும் என்றும் கவலைப்பட்டனர். அதில் அவனது கவலை அடிபட்டுப் போனது

“ஆனாலும் செட்டியார் இப்படி செய்ய கூடாதுண்ண” என்றனர் அவனிடம்

“பொறுங்க, மேஸ்திரிட்ட சொல்லி செட்டியாரிடம் அட்வான்ஸ் பணம் வாங்கி தர சொல்றேன் கவலைப்படாம வேலை செய்ங்க,” என்றான் அவன்.

பழனியும் மணியும் சிறுவயது முதலே இவ்வேலைகள் செய்து வருவதால் தேர்ந்த குயவன் போல் கை வணங்கி வரும், அருமையாகச் செய்தனர்” நினைத்ததைவிடச் சிறப்பாக வேலை நடந்தது தினம் இரவு எட்டு மணி வரை வேலை செய்து முடிக்கும்போது வாத்தியாருக்கு முகமெல்லாம் பல்லாக தெரிந்தது. மேஸ்திரியிடம் சம்பளம் கணக்கு தீர்த்து அனுப்பிவிட்டு இவனிடம், “பையன் வந்துடட்டுமே”, என்று சொல்லி அனுப்பிவிட்டார்..

மனம் வெறுமையாக இருந்தது, விடிந்ததிலிருந்தே மழை சிறு தூறல் விட்டுவிட்டுப் பெய்தது. குழந்தைக்கு விளையாட்டு காட்டியபடி மழையைப் பார்த்து கொண்டு இருந்தான். மேஸ்திரி அவனைத் தேடி வந்தார், செட்டியார் நாளை வரச் சொல்லி இருப்பதாகவும் அவனையும் உடன் அழைத்து வரச் சொன்னதாகவும் காலையில் வருவதாகவும் சொல்லிச் சென்றார் பணம் சீக்கிரம் கிடைத்துவிடும் என்று சிறிது நப்பாசை தோன்றியபோது வானம் கிடும்புடும் என்று கமறியது

“ஏங்க வெளியே போவாதிங்க. கீழ் மாரி கொள்ளுது சரி மழை பிடிக்கப் போவுது,” என்றாள் மனைவி

இடிச்சத்தம் வரும்போது குழந்தையோடு அவன் உடம்பும் ஆடியது மாலையில் கல்லூரியில் படிக்கும் தம்பி அவன் நினைத்த கத்தரிப்பூ கலரில் குழந்தைக்கு துணியும் சென்னையில் வேலை பார்த்த தம்பி அவனுக்கு துணிமணியும் எடுத்து வந்து பார்த்து சென்றனர் மனம் நெகிழ்ந்திருந்தது அவனுக்கு

இரவு முழுவதும் மழை விட்டுவிட்டுப் பெய்தது. காலையிலே மேஸ்திரி வந்து விட்டார். செட்டியாரை சென்று பார்த்தபோது, எவ்வளவு என்று கேட்டு அவன் முன்னிலையில் மேஸ்திரிக்குக் கொடுக்க வேண்டியதை எண்ணிக் கொடுத்து நோட்டில் எழுதி கொண்டார். இருவருமே பணம் வேண்டுமா என்று அவனைக் கேட்கவில்லை, அவனும் கேட்டு விடலாமா என தயங்கிக் கொண்டிருந்தபோது, “வா தம்பி, வழியில் டீ சாப்பிட்டு போவலாம் என்று பேச்சை முடித்துவிட்டார் மேஸ்திரி. சரி என்று அவனும் போக வேண்டியதாகிவிட்டது. டீ சாப்பிடும்போது, மேஸ்திரியிடம் காசு கேட்கலாமா, இதுவரை அப்படி கேட்டதில்லையே” என்று அவனுக்குக் குழப்பமாக இருந்தது. மனது வேண்டாம் என்றது மேஸ்திரியிடம், “எல்லாருக்கும் பிரிச்சுக் கொடுத்துடுங்க” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

வரும் வழியில் வாத்தியார் வீடு செல்லத் தோன்றியது, கேட்டில் நின்ற டைகர் இவனைக் கண்டதும் குரைக்காமல் ஊம்ம் என்று பிரியமாய் குரல் எழுப்பிய சத்தத்தில் அம்மா வெளியே வந்தார்கள்

“வா தம்பி உன்னைத்தான் பார்த்துட்டு இருந்தேன்”.

அவன் பயந்து மேலே பார்த்தான் அங்கெல்லாம் ஒழுவியிருக்கவில்லை

“தம்பி ராத்திரிதான் வந்துச்சி, உன்னைத்தான் கேட்டுக்கிட்டு இருந்துச்சி இரு கூப்பிடறேன்,” என்று உள்ளே சென்றார்கள்

டேபிளில் புதுத்துணிகளோடு பைகள் சுவிட் எல்லாம் இருந்தது அவனுக்கு ஒரே சமயத்தில் மகிழ்ச்சியும் பரபரப்பும் தோன்றியபோது உள்ளிருந்து பேச்சுக் குரல் கேட்டது.

“தம்பி அந்தப் புள்ள கஷ்டப்பட்டு எல்லாம் செஞ்சுச்சுப்பா,ஏதாவது செய்யணும்பா”

“என்னம்மா சொல்ற, அவன் என் பிரண்டும்மா கோவிச்சுபாம்மா,” என்று வெளியில் வந்தான் நண்பன்.

“நல்லா இருக்கியா?”

“இருக்கேன்ண”

“ஏய் உன் புண்ணியத்துல வீடு ஒழுவுல. அப்பா அம்மாவுக்கு தீவாளி பரிசு கொடுத்துருக்க” என்று சிரித்தான். “ஏதாவது வேணுமா, சாப்பிடுரியா?”

இல்ல சாப்பிட்டுட்டன், வரேங்க,” என்று கூறியபோது குரல் மேலன்னத்தில் ஒட்டி தாழ்ந்து ஒலித்தது அவனுக்கே கேட்டது. அவனுக்கு அவனையே பிடிக்கவில்லை, இறங்கி நடந்தான் மழை பெய்தது…….

(Art credit to http://www.surrealismnow.com/jeroenvanvalkenburg.html)

தண்டவாளம் ஒன்று தடம் புரண்டது

மு வெங்கடேஷ்

தற்போது பெய்து வரும் கனமழை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றை ஞாபகப்படுத்துகின்றது, எனக்கும்தான். இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது இப்போது ஞாபகத்துக்கு வருகிறது.

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள எனது வீட்டின் ஒரு அறையில் மனைவியும் மகளும், மற்றொரு அறையில் மாமனாரும் மாமியாரும் தூங்கிக் கொண்டிருக்க, இன்னொரு அறையில் நான் இரண்டு நாளில் இன்னொரு குழந்தைக்கு அப்பாவாகப் போகும் மகிழ்ச்சியை பேஸ்புக் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டிருந்தேன்.

ஜன்னல் வழியாகக் காற்று சிலுசிலுவென வீசியது. சிறிது நேரத்தில் இடியும், மின்னலுமாய் மழை சோவென பெய்யத் தொடங்கியது. எழுந்து வீட்டிலுள்ள அனைத்து ஜன்னல்களையும் மூடிவிட்டுப் பார்க்கையில் மணி இரவு 11ஐத் தாண்டியிருந்தது. தூங்கலாம் என்று எண்ணத்தில் மடிக்கணினியை எடுத்து வைத்துவிட்டு, சிறுநீர் கழிக்கச் சென்றேன்.

மொபைல் ஒலிக்கும் சத்தம் கேட்கவே, ஓடி வந்து பார்த்தால், “மது” என்று ஆங்கிலத்தில் என் மாப்பிள்ளையின் பெயர். மது – என் அக்காவின் கொழுந்தன். என் உயிர் நண்பன். சொந்தத்தையும் தாண்டி நாங்கள் நண்பர்களாகவே பழகினோம், பழகிக் கொண்டிருக்கிறோம்.

“இவன் எதுக்குடா இந்த நேரங்கெட்ட நேரத்துல போன் பண்றான்? ஒருவேளை போதையில் இருப்பானோ?”

அழைப்பை எடுத்தேன். சற்று மௌனம்….

“மாப்ள மாமா நம்மள விட்டுப் போய்ட்டாங்கடா”.

ஒன்றும் புரியாத நான், “லேய் என்ன சொல்ற???” என்று கேட்டேன்.

“மாப்ள மாமா நம்மள விட்டுட்டுப் போய்டாங்கடா” என்று மறுபடியும் கத்தினான். அப்போதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

மாமா – என் மாமாவா (அவன் அப்பா) இல்லை அவன் மாமாவா (என் அப்பா) என்று ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தேன். மீண்டும் மௌனம். உடனே அவனிடம் “மொபைலை அக்காவிடம் கொடு,” என்றேன். கொடுத்தான்.

“தம்பி அப்பா நம்மள விட்டுப் போயிட்டுப்பா” என்று அழ ஆரம்பித்தாள்.

அப்பாவை – அப்பா வந்துட்டு, அப்பா போய்ட்டு, அப்பா சாப்டுட்டு என்று அக்றிணையில்தான் எப்போதுமே கூப்பிடுவோம். அப்பாவை மட்டும் அல்ல, மாமா வந்துட்டு, மாமா சாப்டுட்டு என்று அனைவரையும் அவ்வாறேதான் கூப்பிடுவோம். இன்று வரை ஏன் என்று தெரியவில்லை.

அதைக் கேட்டவுடன் என் இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு அப்படியே நின்றது. பின் என்னையும் அறியாமல் “ஓ”வென்று கத்தினேன். அந்த இரவு நேரத்தில் ஊரே தூங்கிக் கொண்டிருக்கையில் என் ஓலம் என் மனைவியையும், மாமனார், மாமியாரையும் தூங்கவா விடும்? எழுந்து ஓடி வந்தார்கள், ஒன்றும் புரியாதவர்களாய்.

கத்தி அழுது கொண்டிருந்தேன். நான் அப்படி அழுது அவர்கள் இதுவரைப் பார்த்திருக்க மாட்டார்கள். யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கோ ஒன்றும் புரியவில்லை. என் மனைவி என்னிடம் “என்னாச்சு, என்னாச்சு?” என்றாள். பதில் கூறக்கூட முடியாதவனாய் “அப்பா…அப்பா…” என்று மட்டும் சொல்லி அழுது கொண்டிருந்தேன். அவர்களுக்குப் புரிந்து விட்டது. மனைவியும் அழத் தொடங்கினாள்.

என் வாழ்நாளில் அப்படி ஒரு அழுகை அதுவரை நான் அழுததில்லை. ”ஓ” என்றும் “அப்பா” என்றும் கத்திக் கத்தி அழுததால் வாந்தியே வந்து விட்டது. அழுது கொண்டும், கத்திக் கொண்டும், வாந்தி எடுத்துக் கொண்டும் இருந்தேன். இதற்கிடையில் மொபைலில் வேறு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. மூத்த சகோதரி, இளைய சகோதரி, சகோதரர்கள், மாப்பிள்ளை, அத்தான், மாமா, நண்பர்கள் இப்படி ஒவ்வொருவராக அழைத்துக் கொண்டே இருந்தார்கள். எப்போதெல்லாம் அழைப்பை எடுக்கிறேனோ அப்போதெல்லாம் அனைவரும் “அப்பா…அப்பா….” என்பதைத் தவிர வேறு எதையும் கூறவில்லை. அந்த இடத்தில் “அப்பா…அப்பா…” என்று கூறுவதிலேயே எனக்கு புரிந்திருக்கும் என்று அவர்கள் நினைத்தார்கள்.

மணி 12 கடந்திருந்தது.

அடுத்து எப்படி இப்போது சென்னையில் இருந்து நெல்லை செல்வது என்ற ஏக்கம் என்னைத் தொற்றிக்கொண்டது. காரிலா, பஸ்சிலா, விமானத்திலா என்று மண்டையை உடைத்துக் கொண்டிருந்தேன். மனைவியை இன்டர்நெட்டில் பார்க்கச் சொன்னேன். விமானம் ஏதும் அப்போது இல்லை என்றாள். சரி தனியார் பேருந்தாவது இருக்கா என்றால் அதுவும் இல்லை. ஒரே வழி காரில் செல்வதுதான் என்று முடிவெடுத்தேன். அதில் என்ன ஒரு சிக்கல் என்றால் நான் மட்டும்தான் ஓட்டிச் செல்ல வேண்டும், சென்னையில் இருந்து நெல்லை வரை. இதுவரை அவ்வளவு தொலைவு ஒட்டியதில்லை. அப்பாவை உடனே பார்க்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்ததால் நான் அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

என் முடிவை மதுவிடம் சொல்லிவிட்டு காரை எடுக்கச் சென்றேன். மீண்டும் என்னை அழைத்த அவன், “மாப்ள இந்த நிலமையில காரைத் தனியாக ஒட்டிக் கொண்டு வர வேண்டாம்”, என்றான். மனைவியும் சேர்ந்து கொண்டாள். வேறு என்ன செய்வது? யோசிக்கக்கூட நேரமில்லை, பொறுமையும் இல்லை. கால் டிரைவர் யாரையாவது அழைத்துப் பார்க்கலாம் என்று கூறினாள் மனைவி.

நான் எதையும் கண்டு கொள்வதாக இல்லை. என்னமோ பண்ணுங்க ஆனா நான் இப்போ உடனே என் அப்பாவைப் பார்க்கப் போக வேண்டும், என்றேன்.

மணி 12ஐ கடந்திருந்ததால் ஒரு கால் டிரைவரும் வரவில்லை. யாரைக் கேட்டாலும் காலை 5 மணிக்கு மேல் வருகிறேன் என்றார்கள். எனக்கோ 5 மணி வரை காத்திருக்கும் எண்ணம் சுத்தமாக இல்லை. மனைவி வேண்டாம் என்கிறாள், மாப்பிள்ளை வேண்டாம் என்கிறான், மாமனார் வேண்டாம் என்கிறார், அக்கா வேண்டாம் என்கிறாள். இது எதையுமே காதில் கேட்கத் தயாராக இல்லாத நான், காரை நானே ஓட்டி செல்கிறேன், என்று சொல்லிவிட்டு வேகமாக கீழே வந்து காரை எடுத்தேன். நிறைமாத கர்ப்பிணி என்பதால் மனைவியும் என்னுடன் வர இயலாது. எனக்கோ அந்த நேரத்தில் யார் வருகிறார்கள் யார் வரவில்லை என்றெல்லாம் யோசிக்கக்கூடத் தோணவில்லை.

காரை ஸ்டார்ட் செய்தேன். என் மாமனாருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, “நானும் உடன் வருகிறேன்” என்றார். தனியாக என்னை அந்த நிலமையில் அனுப்ப மனமில்லை போலும். சரி ஏறுங்க, என்றேன். ஏறிக் கொண்டார். “பார்த்து மெதுவா போங்க” என்றாள் மனைவி. கார் வீட்டின் வெளியே வர, மீண்டும் மதுவிடம் இருந்து அழைப்பு. “ஏல சொல்லச் சொல்ல கேட்காம எதுக்கு கார்ல தனியா வார?”என்று ஏசினான்.

“மாமனாரும் வராங்க” என்றேன். அவன் அதற்கு சம்மதித்தபாடில்லை. கடைசியாக, எனக்குத் தெரிந்த நண்பன் ஒருவன், டிரைவர், சென்னையில் இருக்கிறான், அவனிடம் கேட்டுச் சொல்கிறேன், அதுவரை வீட்டிலேயே இரு, என்றான் மது. மறுக்கவும் முடியாமல் போகவும் முடியாமல் என்ன செய்வதென்றே தெரியாமல் நின்று கொண்டிருந்தேன். 5 நிமிடம் கழித்து மீண்டும் மதுவிடம் இருந்து அழைப்பு. “மாப்ள அவன் இப்போ சென்னையில் இல்லையாம் நீ தயவு செய்து காரில் வராதே ப்ளீஸ் பஸ்ல வா”என்றான். இதைக் கேட்ட உடன் அவன் மேல் எனக்கு கோபம் வந்ததே தவிர, என் மேல் உள்ள அக்கறையில்தான் கூறுகிறான் என்று தோனவே இல்லை. ஒருபக்கம் அவன் வேண்டாம் என்கிறான் மறுபக்கம் மனைவி வேண்டாம் என்கிறாள். எதையும் பொருட்படுத்தாத நான் காரை எடுத்துப் புறப்பட்டேன்.

மழை வேறு அடித்து ஊத்திக் கொண்டிருந்ததால் கார் மடிப்பாக்கம் ரோட்டில் மிதந்து சென்றது. இடை இடையே மனைவி, மது, அக்கா இப்படி பலரும் காரில் வர வேண்டாம் என்று கூறிக் கொண்டிருந்தார்கள். போகிற வழியில் தாம்பரத்தில் சித்தப்பா மகன் சரவணனையும் காரில் ஏற்றிக் கொண்டேன். கார் பெருங்களத்தூரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. மழை அதிகமாக இருப்பதாலும், இந்த நிலைமையில் காரில் வர வேண்டாம் என்று எல்லோரும் கூறுவதாலும், சரி பஸ்சிலேயேப் போய் விடலாம், என்று முடிவு செய்தேன். சரவணனின் நண்பனையும் காரில் ஏற்றிக் கொண்டு பெருங்களத்தூர் சென்றோம். அங்கு என் அக்கா மகன் ரத்னகுமார் எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தான்.

பெருங்களத்தூர் பேருந்து நிலையம் ஏதோ ஹார்பர் போல் காட்சி அளித்தது. எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்து கொண்டிருந்தது. ஒருவழியாக மதுரை செல்லும் அரசு பேருந்து ஒன்று வர, காரை சரவணனுடைய நண்பனிடம் கொடுத்தனுப்பிவிட்டுப் பஸ்ஸில் ஏறினோம். பஸ் மெல்ல மெல்ல மிதந்து சென்றது. எனக்கோ பொறுமையே இல்லை. காரில் சென்றிருந்தால் இந்நேரம் மேல்மருவத்தூரைத் தாண்டி இருக்கலாமே என்ற எண்ணம். தூக்கம் சிறிதளவும் வரவில்லை. அழுது அழுது கண்ணீரும் வற்றி விட்டது. பேசாமல் இருக்கையில் அமர்ந்திருந்தேன்.

அப்பாவின் எண்ணங்கள் ஒவ்வொன்றாக வரத்தொடங்கின. குழந்தையாக இருக்கும்போது கிளாசில் ஸ்பூனைப் போட்டு கிலுக்கு ஆட்டியதும், நீச்சல் கற்றுக் கொடுத்ததும், மடியில் படுக்க வைத்து காதில் அழுக்கு எடுத்து விட்டதும், நடக்க முடியாதபோது தோளில் தூக்கிச் சென்றதும், தேனி நாடார் பள்ளி விடுதியில் தங்கிப் படித்தபோது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் என்னை வந்து பார்த்ததும், அவருடன் சேர்ந்து குடித்த டொரினோ, சேர்ந்து சென்ற எவரெஸ்ட் ஹோட்டல், இப்படி எண்ணற்ற நினைவுகள் ஒவ்வொன்றாக வர என்னை அறியாமல் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது, விடிய விடிய.

பக்கத்து இருக்கையில் ஒரு சிறுவன் சொகுசுப் பேருந்தில் வந்த சந்தோஷத்தில் சீட்டை சாய்த்துச் சாய்த்து விளையாடிக் கொண்டிருந்தான். அரசு சொகுசுப் பேருந்து முன்பு திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம். மற்ற பேருந்துகளைவிட இதில் டிக்கெட் விலை அதிகம். சிறு வயதில் திருவள்ளுவர் பஸ்ஸில் செல்வதென்றால் அவ்வளவு சந்தோசம். அம்மா என்ன ஏசினாலும் அப்பா எனக்காக அதில் ஏறுவார். நான் ஆசைப்பட்டேன் என்ற ஒரே காரணத்துக்காக.

பொழுது விடியவும் மதுரை வரவும் சரியாக இருந்தது. மதுரை, மறக்க முடியாத மதுரை. மதுரைக்கும் எனக்கும் என் அப்பாவுக்கும் நிறைய தொடர்பு உண்டு. குடும்பத்தோடு எங்கு சென்றாலும் மதுரைதான் எங்களுடைய பொது இடம். அங்குதான் அனைவரும் சந்திப்போம். அப்பாவுடன் வந்து அடிக்கடி தங்கும் ஜுபிட்டர் லாட்ஜ், காளவாசல், நகைக் கடை பஜார், மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோவில், ஜெயராம் பேக்கரி, முனியாண்டி விலாஸ், சினிப்பிரியா-மினிப்பிரியா- சுகப்பிரியா தியேட்டர்கள், ராஜ் மகால் சில்க்ஸ், பால் பாண்டி மாமா வீடு, அப்பா கைபிடித்துச் சென்ற மதுரை வீதிகள்.
முதன்முதலாக வேலை தேடிச் சென்னை வரும்போது அப்பாதான் மதுரையில் இருந்து சென்னைக்கு வழியனுப்பி வைத்து செலவுக்கு 5000 ருபாய் கொடுத்தார். பின் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தைவிட்டுப் பேருந்து வெளியே வரும்போது, ஜன்னல் வழியாக ஒரு கை வந்து 1000 ரூபாவை என் சட்டைப் பையில் திணித்தது. சென்னை போயிட்டு செலவுக்குப் பணம் வேணும்னா அப்பாக்குப் போன் பண்ணுடா, என்று சொல்லிவிட்டு சென்றார் அப்பா. இப்படி ஒவ்வொன்றாக மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

அப்பா மிகவும் கண்டிப்பானவர்.ஆனால் இதுவரை யாரையும் ஒருமுறை கூட அடித்ததில்லை. அவரைப் பார்த்தால் எங்களுக்கு ஒரு பயம், மரியாதை தானாக வந்து விடும். பாசமிக்கவர் ஆனால் வெளிக்காட்ட மாட்டார். என்னவென்றே தெரியவில்லை, சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுடன் அவ்வளவு நெருக்கமாகப் பழக மாட்டார். வேண்டியதை எல்லாம் வாங்கித் தருவார், பணம் தேவைக்கு அதிகமாகவே தருவார். ஆனால் அவ்வளவாகப் பேச மாட்டார். வளர்ந்தபின், அவருடன் அதிகமாக பேசியது, “நா ராஜேஸ் பேசுறேன், போன அம்மாட்ட குடுங்க” வாகத்தான் இருக்கும். பல நேரங்களில் “நல்லா இருக்கீங்களா?” என்று கேட்கத் தோன்றியும் கேட்காமல் விட்டு விடுவேன். ஒரு மகனுக்கும் அப்பாவுக்குமான உறவும், உரையாடலும் அவ்வளவுதானா என்று பல நேரம் யோசித்ததுண்டு. எங்களுக்குள் எப்போதுமே ஒரு இடைவெளி இருந்து கொண்டே இருந்தது.

வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் கற்றுக் கொடுத்தார். கல்வியைத் தவிர. ஏனென்றால் அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அன்யோன்யமாகப் பேசிப் பழகும் அப்பாவையும் மகனையும் பார்த்தால் பொறாமையாக இருக்கும், எனக்கு இந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்று.

அடுத்து நெல்லை செல்ல வேண்டும். எனக்கோ பஸ் பிடித்து ஊர் செல்லும் பொறுமை இல்லை. உடனடியாக ஒரு டாக்ஸி எடுத்துக் கொண்டு நெல்லை புறப்பட்டோம்.

ஓட்டுனரிடம், அண்ணா கொஞ்சம் வேகமாப் போங்க, வேகமாப் போங்க, என்று கூறிக்கொண்டே வந்தேன். கோவில்பட்டி வந்தது. என் வாழ்நாளில் நான்கு வருடங்களைக் கழித்த இடம். நான் கல்லூரி பயின்ற இடம். நான் செய்த ஒவ்வொரு தவறுக்கும் ஒவ்வொரு முறையும் எனக்காக வந்து கைகட்டி மன்னிப்பு கேட்டுச் செல்வார் அப்பா. இரண்டாமாண்டு படிக்கும்போது அப்பாவை அழைத்த கல்லூரி முதல்வர், நான் செய்யாத தவறை நான் செய்தததாகக் கூறவே அப்பாவோ ‘என் பையனப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும், அவன் இதைப் பண்ணிருக்க மாட்டான் நீங்க என்ன செய்யணுமோ அத செஞ்சிக்கோங்க’ என்றார். கல்லூரி வாசலில் இருக்கும் புளியமரத்தடி. அப்பா என்னை வந்து பார்த்துவிட்டுச் செல்லும்போதெல்லாம் பஸ் ஏற்றிவிடும் இடம். அந்த புளியமரத்துக்கு நன்றாகத் தெரியும் எனக்கும் என் அப்பாவுக்குமான பாசம்.

இத்தனை நாள் எங்களை வழி நடத்திய அப்பா இனி இல்லை, ஒவ்வொரு முறை நாங்கள் சறுக்கியபோதும் தூணாக இருந்துத் தாங்கிய அப்பா இனி இல்லை, பொருளாதார நெருக்கடியில் எங்களைத் தூக்கிச் சுமந்த அப்பா இனி இல்லை, வாழ்க்கையில் அடிபட்டுக் கீழே விழும்போதெல்லாம் கை கொடுத்துத் தூக்கி விட அப்பா இனி இல்லை, எத்தனை இடையூறுகள் வந்தாலும் ‘நான் இருக்கேன்டா’ என்று தைரியம் ஊட்ட அப்பா இனி இல்லை. துடுப்பை இழந்த கட்டுமரம் கடலில் தனியே தவிப்பதுபோல் தவிக்கிறோம்.

வண்டி கயத்தாரை நெருங்கிக் கொண்டிருக்கும்போது என் மொபைல் ஒலிக்கும் சத்தம் கேட்டது. இம்முறை என் மாமியார். “சுதாவுக்கு வயிறு வலி வந்துட்டு, டாக்ஸிய வரச் சொல்லிருக்கேன், இப்போ ஆஸ்பத்திரிக்கு கிளம்புறோம்” என்றார். இதைக் கேட்ட எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. சில தினங்களுக்கு முன் மனைவி கூறியதுதான் நினைவுக்கு வந்தது. “ஏங்க மூத்த பொண்ணு பிறக்கும்போதுதான் நீங்க கூட இல்ல, இப்போ ரெண்டாவது குழந்தைக்காது நீங்க கூடவே இருங்க”.

சரியாக 3 மணி நேரத்தில் நெல்லை வந்தடைந்தோம்.வீடு நெருங்க நெருங்க என் இதயத் துடிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது.கை கால் எல்லாம் நடுங்கத் தொடங்கியது.

எங்கள் தெருவிற்குள் டாக்ஸி நுழையவும் ஊரே எங்கள் வீட்டில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தேன். மனம் சோகத்தின் உச்சத்தில் இருந்தது. எங்கு பார்த்தாலும் அப்பா, தாத்தா என்ற அழுகுரல்கள். பல வருடங்களுக்கு முன் பார்த்த சொந்த பந்தங்கள். அழுகையை அடக்கிக் கொண்டு வீட்டினுள் நுழைந்தேன்.

எப்போதும் போல் அப்பா வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி சகிதமாகத் தூங்கிக் கொண்டிருந்தார். என் முதல் சம்பளத்தில் நான் வாங்கிக் கொடுத்த அதே விலை உயர்ந்த வெள்ளைச் சட்டை. “இவ்வளவு பணம் கொடுத்து எனக்கெதுக்குடா வாங்குன” என்று சொல்லி போடாமல் பத்திரமாக வைத்திருந்த அதே வெள்ளைச் சட்டை. அவர் எப்போதும் சட்டையுடன் தூங்கும் பழக்கம் உடையவர். ஆனால் இம்முறை ஒரு சின்ன மாற்றம். அவர் தூங்கிக் கொண்டிருந்தது குளிரூட்டப்பட்ட அறையில் அல்ல, மாறாக குளிரூட்டப்பட்ட கண்ணாடிப் பெட்டிக்குள்.

அதற்குப் பின் அங்கு சொல்ல முடியாத சோகம் சூழ்ந்திருந்தது.

அவ்வப்போது மாமியாரிடம் மனைவிக்கு எப்படி இருக்கிறதென்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் செய்து விட்டு அன்று இரவு அப்பாவின் அறையில் தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்தேன். சரியாக இரவு 8.25 க்கு மாமியாரிடம் இருந்து அழைப்பு ‘மகன் பிறந்திருக்கான்’ என்று. பதில் ஒன்றும் கூறாமல் கேட்டுக் கொண்டிருந்தேன், கண்ணீர் தலையணையை நனைத்துக் கொண்டிருந்தது.

இதைக் கண்ட என் அம்மா தன் சோகத்தையும் மறைத்துக் கொண்டு நான் அழக் கூடாது என்பதற்காக என்னிடம் வந்து ஆறுதல் சொல்லத் தொடங்கினாள்.

மகன் பிறந்திருக்கிறான் என்றேன். என்னைக் கட்டியணைத்து ஓவென்று கதறி அழுதாள். பின் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். சந்தோசமும் பட முடியாமல், சோகத்தையும் அடக்க முடியாமல் ஒருவித குழப்ப நிலை வீடு முழுவதும் நிறைந்திருந்தது.

சற்று நேரம் கழித்து, வா வெளியே வா, இந்த ரூம விட்டு முதல்ல வெளியே வா, என்று கூறி முற்றத்திற்கு அழைத்துச் சென்றாள் அம்மா.

“நீ முதல்ல சென்னைக்குக் கிளம்பிப் போ. போய்ப் பையனப் பாரு.அங்க அவங்க தனியா இருப்பாங்க.”

“இந்த நிலைமையில நா எப்படிப் போறது?”

“சொல்றதக் கேளு, அழாதப்பா. நம்ம அப்பா நம்மள விட்டு எங்கயும் போகல. நம்மளோட தான் இருக்கார்.அப்பா செய்த புண்ணியத்திற்கு அவருக்கு நல்ல சாவு கிடைச்சிருக்கு.அலுந்தாம சந்தோசமாக் கடைசி வரைக்கும் யார்டயும் கை ஏந்தாம ராசா மாதிரிதானே போயிருக்கார்.அத நினைச்சு நாம சந்தோசப்படனும் அழக்கூடாது,” என்று கூறி அழுதாள்.

ஒன்றும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“பாரு நம்ம அப்பாவ இந்த ஊரே எப்படி வழி அனுப்புது பாரு.”

நான் தலை நிமிர்ந்து மேலே பார்த்தேன். ஊரே பிரகாசமாய் இருந்தது. வான வேடிக்கைகளாலும், விளக்குகளாலும் பிரகாசப்படுத்தி இருந்தனர்.

அன்று கார்த்திகைத் திருநாள். ஊரே விளக்குகளாலும், வானவேடிகைகளாலும் மின்னிக் கொண்டிருந்தது எங்கள் வீட்டைத் தவிர…..

இருள் சூழ்ந்திருந்த வீட்டில் மாலையுடன் சிரித்துக்கொண்டிருந்த அப்பா கேட்டார், “இங்க என்னடா பண்ணிட்டு இருக்க அங்க போய் உம்புள்ளையப் பாக்காம?” என்று.

இரவு

– கலைச்செல்வி

பால் ஆடைக் கட்டிப் போயிருந்தது. ஒரு செயலை செய்வதற்கான எண்ணம் எழாமல் அதனைச் செய்யவே முடியாது போலிருக்கிறது என்று தோன்றியது அவளுக்கு. பால் குடிக்கத் எண்ணமில்லை என்பதை இத்தனை பெரிய வார்த்தைகளுக்குள் மனம் அடைத்ததை வெளியிலிருந்து பார்ப்பது போல கவனித்தாள். iகையிலெடுத்த டம்ளரை டீப்பாயில் வைத்து விட்டு கட்டிலில் சாய்ந்துக் கொண்டாள்.

கணவன் இல்லையேயொழிய புகுந்த வீட்டில் ஆட்களுக்கு குறைவில்லை. மாமியார்.. மாமனார்.. திருமணமாகாத நாத்தி ஒருத்தி.. கணவனிடம் கோபித்துக் கொண்டு வீட்டோடு வந்திருக்கும் நாத்தி ஒருத்தி பூஜை.. புனஸ்காரம் என்ற ஆன்மீக தேடலோடு சம்பாதிக்கும் நாட்டமில்லாத கொழுந்தன் ஒருவன் இவர்களோடு தானும் மகளுமாக வாழ்ந்த வாழ்க்கையில் இத்தனை பொறுமையாக படுக்க வாய்த்ததில்லை அவளுக்கு. தலையை உயர்த்தி கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்தாகி பத்து நிமிடங்களாகி இருந்தது. கோயில் கோயிலாக சுற்றி விட்டு இந்நேரம்தான் கொழுந்தன் வீடு திரும்புவான். இரவு விளக்கின் ஒளியில் கடிகாரத்தின் தங்க கரங்கள் மின்னின. மகளுக்கு சீராக அளித்த கடிகாரம்தான் இது.

சீர்வரிசை சாமான்கள் வாங்க மொத்த குடும்பத்தோடு இவளும் சென்றிருந்தாள். கடை முழுக்க கடிகாரங்கள் பெரிதும்.. சிறிதுமாக.. ஆளுயரத்திலிருந்து கைக்கு அடக்கமானது வரை. எல்லாமே இதே நேரத்தையே காட்டிக் கொண்டிருந்தன. வாங்கிய கடிகாரத்திற்கான பில் தொகையை செலுத்திய பின் பேட்டரி போட்டு சரியான நேரத்திற்கு மாற்றிக் கொடுத்தார் கடைக்காரர். இத்தனை கடிகாரங்களை ஒரே தடவையில் பார்ப்பது முதலில் அவளுக்கு பிரமிப்பாக இருந்தது. பிறகுதான் நேரத்தைக் கவனித்தாள். பத்து பத்து என்றது எல்லாமே. ஏசி குளிரை வெளியே விடாத இறுக்கமான கதவை அழுத்தித் தள்ளி கடைக்குள் நுழைந்த போது சாயங்காலம் மணி நான்கிருக்கும். இதென்ன இந்த மணி காண்பிக்கிறது..? அதிகாலையோ.. அந்திமாலையோ.. நான்கு சுவரைத் தாண்டி எதற்கும் உள்ளே வர அனுமதி கிடையாது போல. அதனால்தான் அலங்காரமாக தொங்கிக் கிடந்த அத்தனை கடிகாரங்களும் நகர வழியின்றி உறைந்து போய் கிடக்கிறது. “கடியாரக் கடைக்குள்ளயே மலச்சுப் போயி நின்னுட்டா மத்தக் கடைங்களுக்கு எப்பப் போறது..? கல்யாண வேலக் தலைக்கு மேல கெடக்கு..“ வெறித்துப் பார்த்தவளை மாமியாரின் குரல்தான் கலைத்துப் போட்டது.

படுக்கையறை கதவை திறக்கும் ஓசைக் கேட்டதும் கண்களை இறுக்க மூடிக் கொண்டாள். இரவு விளக்குதான் என்றாலும் சிறிய அறை என்பதால் வெளிச்சம் நிறையவே இருந்தது. கணவன் இறந்து போன பிறகு அவளும் கைக்குழந்தையான மகளும் கணவனுடன் இருந்த அதே அறையைதான் உபயோகித்துக் கொண்டனர். நாத்தனாருக்கு திருமணமான பிறகு மாப்பிள்ளை வரும்போதெல்லாம் அறையை ஒழித்துக் கொடுக்க வேண்டி வரும். இடம் மாறினாலும் வேலை களைப்போ என்னவோ துாக்கம் பாதிப்பதில்லை அவளுக்கு. மகனின் நினைப்பை பேத்தியின் அருகாமையில் மறக்க முயன்றதில் துாங்குவது கூட பாட்டி தாத்தாவுடன் என்றாகிப் போனது மகளுக்கு. “நாங்க எத்தன நாளைக்கு காவந்து பண்றது..? இனிம எல்லாம் ஒன் மாமனாரு.. மாமியாருதான்.. அணுசரணையா போய்க்கோ.. கைல ஒரு பொட்டப்புள்ள இருக்கு.. பாத்து நடந்துக்கம்மா..“ கண்ணீரோடு கழித்து கட்டி விட்ட பிறந்த வீட்டுக்கு எப்போதோ ஒருமுறை மாமியார் அனுமதிப்பார். இவளுக்கு அங்கு அதிகமாக ஒட்டவில்லை.

இருவரில் யாருக்கோ கழிவறைக்குப் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும் போல. அவள் படுத்திருக்கும் அறையை கடந்து குறுகலான சிறிய வராண்டா இருக்கும். அதை தாண்டி இருந்தது குளியலறையும் கழிப்பறையும். கதவை திறந்துக் கொண்டு வருவது மகள்தான். கால் கொலுசின் ஒலி அம்மாவுக்கு கேட்டு விடாதப்படி அடி மேல் அடி வைத்துச் செல்கிறாள். பெண்களுக்கு திருமணம் அத்தனை ரகசியங்களையும் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. சென்ற மாதம் வரையிலும் கூட குழந்தையாகதான் இருந்தாள்.. பதினேழு வயது குழந்தையாக. பனிரெண்டாம் வகுப்பை முடித்திருந்த நேரம் இந்த வரன் வந்திருந்தது. மழையடித்து ஓய்ந்ததுப் போல ஒரு மாத காலத்தில் எல்லாமே மாறிப் போனது. “கல்யாண நேரம் வந்துட்டா கட்டி வச்சாலும் நிக்காது..“ என்றாள் மாமியார். “எம்மவன் இருந்து செய்ய வேண்டிய தேவை.. குடுப்பின இல்லாமப் போச்சு.. நான் நடஒடயா இருக்கும்போதே முடிச்சு வுட்டுட்டா நிம்மதியா போய் சேந்துடுவன்..“ என்றார் மாமனார். அவர்தான் பேத்திக்கு வீட்டு வேலைகள் கற்று தந்து விட்டு வருமாறு மருமகளை இங்கு அனுப்பியிருந்தார்.

மகள் திரும்பிச் சென்று கதவை தாழிடும் சத்தம் கேட்டது. கைகளை ஆட்டி ஆட்டி தாழிட்டதில் கண்ணாடி வளையல்கள் சன்னமாக சத்தமிட்டன. இவள் கூட தனது திருமணத்தின்போது கை நிறைய கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்தாள். ஒரு வருடத்திற்குள் டைஃபாயிடு காய்ச்சல் அவனை பிரித்து அழைத்து போகும்போது கண்ணாடி வளையல்கள் உடையாமல் மிச்சமிருந்தன. முற்றத்தில் காற்றாட படுத்து உறங்கும் பெருசுகளுக்கு வளையல்களின் ஓசை கேட்காது என்று திட்டவட்டமாக தெரிந்தும் கணவன் வளையல்களை அவிழ்த்து வைக்கச் சொல்வான். “அவுத்து அவுத்து போட்டா வளவி ஒடைஞ்சுடும்..“ என்பாள் சிறுமியாய். அவள் காலத்தில் பதினேழு வயதில் சிறுமியாகதான் இருக்க முடிந்தது. பிறகும் கூட அதிகமாக வளர்ந்து விடவில்லை.

குடும்பச்சுமையை கை மாற்றி விடாத மாமியாரிடம் ஏவலாக பணியாற்றுவதில் இதுவரை அவளுக்கு விமர்சனம் ஏதும் இல்லை. மகளை போல நோகாமல் நடப்பதும் தாழிடுவதும் அவளுக்கு வராது. அதனால்தான் கணவன் வளையல்களை அவிழ்த்து வைக்க சொல்கிறான்.

“கண்ணாடி வளவின்னா ஒடஞ்சுதான் போவும்..” என்பான். சொல்வானே தவிர வளையல்களை அவிழ்த்து வைக்கும் நேரம் வரை கூட அவனுக்கு பொறுமை இருப்பதில்லை. அவன் கைகள் அதீதமான சுதந்திரத்தோடு அவள் உடலில் எதையோ தேடுவதைப் போல அங்குமிங்கும் நகர்ந்து அலையும். பின்புறமிருந்துக் கட்டிக் கொள்வான். புறங்காதில் படு ஆவேசமாக முத்தமிடுவான். அவனின் ஆவேசம் பிடித்திருந்தாலும் சில சமயங்களில் உடல் தாக்கு பிடிக்க முடியாமல் சோர்ந்துப் போகும். இதை அவனிடம் வெளிப்படுத்துவது தவறு என்று வீட்டு பெண்கள் அவளுக்கு ஏற்கனவே தெரியப்படுத்தியிருந்தார்கள். அவளின் சிறு எதிர்ப்பு கூட அவனை கிளர்ந்தெழுப்பும். அழுத்தமாக இறுக்கிக் கொள்வான். கழுத்தடியில் குறுகுறுத்து நெளிவது போலிருக்கும் அவளுக்கு இரண்டொரு வளையல்கள் அப்படி உடைந்ததுதான்.. பகல் நேரங்களில் யாருமில்லா தருணங்களில் பாய்ந்து வந்து அவள் கைகளை பிடித்து முகத்தை திருப்பி முத்தமிடுவான். அப்போதும் இரண்டொரு வளையல்கள் உடைந்திருக்கின்றன.

“தகப்பனில்லாத புள்ள.. ஏதோ இந்த தாத்தன் எனக்கு தெரிஞ்சமுட்டும் வளத்திருக்கேன்.. கம்னாட்டி வளத்தப் புள்ளன்னு நாக்கு மேல பல்ல வச்சு பேசிப்பிட கூடாதேன்னுதான் இத சொன்னேன்..“ என்றார் மாமனார் அவள் மகளை பெண் பார்க்க வந்த அன்றே.

”ஆளும் பேருமா இம்புட்டு பேரு இருக்கீங்க.. தப்பாவா வளத்திருப்பீங்க..” என்றார் இவளின் சம்பந்தி. ஆண் சம்பந்தி மட்டும்தான். பெண் சம்மந்தி இறந்துப் போயிருந்தாள். பெண்ணில் ஒன்று.. ஆணில் ஒன்றுமாக இரு வாரிசுகள். பெண்ணுக்கு திருமணம் முடிந்து விட மகனுக்குதான் இவளின் மகளை பெண் கேட்டு வந்திருந்தனர். சம்பந்தி நல்லமாதிரிதான் என்று எண்ணிக் கொண்டாள். “பொம்பளங்க இல்லாத வீடு.. ஒங்க மருமகளை கொஞ்ச நாள் அனுப்பி வச்சீங்கன்னா எம்மருமகளுக்கு வீட்டு வேலயெல்லாம் கத்துக் குடுத்துடுவாங்க..“ என்று இவளின் மாமனாரிடம் அனுமதி வாங்கியதே சம்பந்திதான். இவள் வந்ததும் அவர் தன் மகள் வீட்டுக்கு கிளம்பி விட்டார்.

கட்டிலிலிருந்து எழுந்து அமர்ந்துக் கொண்டாள். சுத்தமாக துாக்கம் கண்களிலிருந்து நகர்ந்திருந்தது. கழுத்து குறுகுறுத்துக் கிடந்தது. கடிகாரத்தை நிமிர்ந்துப் பார்த்தாள். மணி பனிரெண்டைக் கடந்திருந்தது. மீ்ண்டும் படுக்கையறை கதவை திறக்கும் ஒலி. சட்டென்று படுத்து கண்களை இறுக்க மூடிக் கொண்டாள். இம்முறை மாப்பிள்ளை. திருமணமாகி ஒரு மாதம்தான் ஆகியிருக்கும். அதற்குள் “ஒங்கள அத்தைன்னு சொல்றதா.. அக்கான்னு சொல்றதான்னுதான் கொழப்பமாயிருக்கு..“ என்று கிண்டலடிக்கும் அளவுக்கு பழகி விட்டிருந்தார். கண்களை மூடியிருந்தாலும் மருமகன் சங்கோஜமாக நகர்வதை அவளால் உணர முடிந்தது.

இவளின் கணவன் கூட முற்றத்தை கடப்பதற்கு இப்படிதான் சங்கோஜப்படுவான். ஒரு முறை என்பது சற்று இயல்பாக இருக்கும். இரண்டாவது முறையாக முற்றத்தைக் கடந்து கொல்லைக் கதவைத் திறக்கும் போது அந்த ஒலியே அவனின் தயக்கத்தை வெளிப்படுத்தும். அவனாவது பரவாயில்லை. அவள் அறையிலிருந்து நகரவே சங்கடப்படுவாள். உள்ளாடைகளை கிணற்றடியின் பின்புறத்திற்கு கொண்டு சென்று துவைப்பாள். இல்லையெனில் நீர் போகும் பாதையிலிருக்கும் துளசிச் செடி அதனை உள்வாங்க வேண்டியிருக்கும். யாரும் பார்ப்பதற்குள் விறுவிறுவென்று துவைப்பாள். அப்போதெல்லாம் கணவன் மீது செல்ல கோபம் வரும். அதை அவனிடம் ஒருநாள் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொள்வாள்.

ஆனால் இவளை போலின்றி மகள் ஒரு மாத காலத்திற்குள் கணவனிடம் நன்றாக பழகி விட்டாள். அடித்துப் பேசுவதும், தொட்டு விளையாடுவதுமாக இருவரும் இயல்பாக இருப்பதைப் பார்ப்பதில் இவளுக்கு திருப்தியாக இருந்தது. சாப்பாட்டை எடுத்து வைத்து விட்டு பின்பக்கம் ஏதோ வேலையிருப்பதுப் போல சென்று விடுவாள். அப்படிதான் பக்கத்து வீடுகளில் சிறு பழக்கம் ஏற்பட்டதும். ஒருமுறை பேச்சுவாக்கில் பக்கத்து வீட்டுப் பெண் உறைமோர் கேட்க போக, அவசரமாக உள்ளே நுழைந்தவள் இருவரும் முத்தமிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் சட்டென்று நகர்ந்து பின்பக்கம் வந்து விட்டாள். ஆடி மாதம் பிறக்கப் போகிறது. எப்படி பிரிந்திருப்பார்களோ.. என்று எண்ணிக் கொண்டாள்.
அவளுக்கும் தலை ஆடி வந்தது. மாப்பிள்ளைக்கும் மகளுக்கும் புது துணிமணிகள் எடுத்து வந்திருந்தனர் அவளின் பெற்றோர்கள். பிறந்த வீட்டுக்கு செல்லவே அவளுக்கு விருப்பம் இல்லை. அவள் கணவனுக்கும் மனைவியை அனுப்ப எண்ணமில்லை. முதல் நாளிரவு இரண்டு பேருமே பிரியப் போகும் ஒரு மாத காலத்தை எண்ணிக் கொண்டே அருகருகே படுத்து இரவை கழித்திருந்தனர். “மாசம் முழுக்கன்னா எங்கம்மா ஒண்டியாளா சோறாக்க செரமப்படும்.. பதினெட்டு முடிஞ்சதும் அவள அனுப்பி வுட்டுடுங்கத்தே..“ என்றான் கிளம்பும்போது மாமியாரிடம். ஆனால் அதற்கு தேவையேயின்றி பதினைந்தாவது நாளே இறந்து போனான். மகள் அப்போதுதான் உருவாகியிந்தாள். அவனின் இறப்புக்குப் பிறகு அவளை யாரும் தொட்டுப் பேசியதேயில்லை. காய்ச்சல்.. தலைவலி.. என்று படுத்தாலும் மாத்திரை தலைமாட்டில் தயாராக இருக்கும். யாருடைய தனிப்பட்ட விருப்பமும் சாப்பாட்டில் பிரதிபலிப்பதில்லை. ஆனாலும் வெளியூருக்கு போகும் தருணங்கள்தோறும் மாமியாருக்கு பிடிக்கும் என்று மாமனார் சர்க்கரைப்பாகு பூத்த பாதுஷா வாங்கி வரத் தவறியதேயில்லை.

எப்போது உறக்கம் வந்தது என்று தெரியவில்லை. “அசந்து துாங்கீட்டிருந்தியா.. அதான் ஒன்ன எழுப்பாம நானே காபி போட்டுக் கொண்டாந்தேன்..” என்றாள் மகள் கட்டிலருகே வந்து நின்று.

நேரம் தாழ்த்தி எழுந்ததில் சற்றே குற்றவுணர்வுத் தோன்ற வேகமாக கழிவறையை நோக்கி நடந்தாள் அவள்.

“அப்டியே பல் வௌக்கீட்டு வந்துடும்மா.. காபி ஆறிடும்..” முதுகுபுறமாக மகளின் குரல் கேட்டது.

“சரி..” முகத்தில் வழிந்த எரிச்சலை சில்லென்ற நீரால் கழுவித் தள்ள முயற்சித்தாள் அவள்.

முறுக்கு

மு வெங்கடேஷ்

அன்று நான் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். என்னை அன்போடு அழைத்த அம்மா, “ஏல ராசா நாம இன்னைக்குப் படத்துக்குப் போகலாம்டா” என்றாள்.

எனக்கு அம்மாவோடு படத்துக்குப் போகப் பிடிக்காது.

”இல்லமா நா வரல, விளையாடிட்டு இருக்கேன் நீ போய்ட்டு வா,” என்று சொல்லிப் பார்த்தேன்.

அம்மா விடவில்லை. “போலாம்பா. ரஜினிப் படம் நல்லா இருக்கும். நா உனக்கு இடைவேளையில முறுக்கு வாங்கித் தாரேன்” என்றாள்.

அப்போதெல்லாம் வெளியே ஒரு தின்பண்டம் வாங்கித் தின்பதே அபூர்வமான விஷயம். அதிலும் தியேட்டரில் முறுக்கு சாப்பிடுவதில் எனக்கு ஒரு தனிச் சந்தோஷம் உண்டு. “சரி வாரேன்.” என்று உடனே கிளம்பிவிட்டேன்.

அம்மாவின் அத்தனை அன்பிற்கும் பின்னால், வேறொரு பெரிய காரணம் இருந்தது அப்போது எனக்குப் புரியவில்லை.

“ஏல படம் போட்ருவான், சீக்கிரம் போய் அப்பாட்டக் காசு வாங்கிட்டு வால, நாங்க முன்னால போய்ட்டு இருக்கோம். நீ சீக்கிரம் வாங்கிட்டு ஓடி வந்துருல” என்றாள் அம்மா.

எங்கள் ஊரில் இரண்டு திரையரங்குகள் இருந்தன. ஒன்று கே.ஆர். தியேட்டர், மற்றொன்று ஸ்ரீ தேவி தியேட்டர். கே.ஆர்.தியேட்டர் – ஊரின் நடுவே அமைந்திருக்கும் பெரிய தியேட்டர். பார்ப்பதற்கு திருமண மண்டபம் போல் காட்சியளிக்கும். மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்கள் இரண்டையும் மாற்றி மாற்றி வெளியிடுவார்கள். நடந்து செல்லும் தொலைவில்தான் இருக்கும். தினமும் மாலை 6 மணி ஆனதும் சொல்லி வைத்தாற் போல் இளையராஜா இசை அமைத்த, கமல்-ராதா நடித்த ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் வரும் ‘நானாக நான் இல்லைத் தாயே’ என்ற ஒரே பாடல் தான் போடுவார்கள்.எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் அந்தப் பாட்டு மட்டும் தான் கேட்டதாக ஞாபகம்.

ஸ்ரீ தேவி தியேட்டர் – ஊரிலிருந்து சற்று தொலைவில் தேயிலைத் தோட்டத்திற்கு நடுவில் அமைந்திருக்கும் அழகான இடம். கே. ஆர். தியேட்டரை ஒப்பிடும்போது சற்று சிறியதுதான். ஆனால் பார்ப்பதற்கோ மிகவும் அழகாக இருக்கும். தமிழ்ப் படம் மட்டுமே திரையிடுவார்கள். இத்தியேட்டருக்கு நடந்தோ அல்லது பேருந்திலோ செல்லலாம். ஆனால் தேயிலைத் தோட்டத்தின் நடுவே நடந்து செல்லத்தான் அனைவரும் விரும்புவோம். சிறு வயதில் எங்களின் ஒரே பொழுதுபோக்கு படம் பார்ப்பதுதான். அடிக்கடி படத்துக்குப் போவோம்.

அம்மா, அக்கா, சித்தி, அத்தை, அவள் மகன் முருகேசன் என அனைவரும் தேயிலைத் தோட்ட ஒற்றையடிப் பாதையில் முன்னால் நடந்து சென்றார்கள். நடந்து என்ன நடந்து, ஓடினார்கள். நான் கடை வீதியில் இருக்கும் எங்கள் கடைக்குச் சென்று அப்பாவிடம் காசு வாங்கிக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்து ஓடினேன். எவ்வளவு வேகமாக ஓடியும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. நானும் மூச்சு வாங்க பின்னாலே விரட்டிக் கொண்டு போய் அம்மாவைப் பிடிக்கும்போது அவள் டிக்கெட் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தாள். நான் வந்தவுடனே என்னை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டாள். மூச்சு வாங்க ஓடி வந்த என்னை ஆசுவாசப்படுத்தத்தான் பாசத்தோடு தூக்கி வைத்துக் கொண்டாள் என்று நினைத்தேன். வழக்கம் போல அம்மாவின் செயலுக்கான அர்த்தம் சில நிமிடங்கள் கழித்துத்தான் தெரிய வந்தது.

தியேட்டர் வாசலில் நின்று கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகர் பொங்கி வரும் காட்டாற்று வெள்ளமென போய்க் கொண்டிருந்த எங்களை மடக்கிப் பிடித்தார்.

“என்னம்மா பையனோட சேர்த்து மொத்தம் 8 பேர் வந்துருக்கீங்க, ஆனா 7 டிக்கெட் தான் இருக்கு?” என்று கேட்டார்.

அவருடைய கூர்மையான பார்வைக்கு அசராத அம்மா என்னை இன்னமும் ஏற்றி தோளில் சாய்த்துக் கொண்டு, “ஏம்பா இந்த பால் குடி கூட மறக்காத பச்ச புள்ளைக்குப் போய் டிக்கெட் கேட்குறியே?” என்றாள்.

அம்மா கொடக்கண்டவள் என்றால் அவர் விடாக்கண்டவராக இருந்தார்.

“அதெல்லாம் முடியாதும்மா போய் இன்னொரு டிக்கெட் வாங்கிட்டு வா, இல்லேன்னா பையன இங்கயே விட்டுட்டுப் போ,” என்றார் அதிரடியாக.

அடப் பாவி இப்படி முதலுக்கே மோசம் செய்கிறாரே என்று நினைத்தேன். கண்டிப்பாக டிக்கெட் வாங்கிட்டு வாவென சொல்லாமல் இப்படிச் சொன்னால், இவர்கள் வந்த வேகத்திற்கு என்னை அப்படியே விட்டுவிட்டுப் போய்விடுவார்களே என்று பயமாக இருந்தது.

நல்லவேளை, தியேட்டர் மேனேஜர் அவ்வழியே வந்தார். எங்களைப் பார்த்தவர் டிக்கெட் பரிசோதகரிடம், “சரிப்பா அவங்கள உள்ள விடு” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அவர் என் அப்பாவின் நெருங்கிய நண்பர் என்பதால் அந்தச் சலுகை. இப்படிச் சண்டை போட்டு உள்ளே செல்வதற்குள் படத்தில் 10 நிமிடம் முடிந்து விட்டது. உள்ளே சென்று இருக்கையில் உட்கார்ந்தவுடன் அம்மா பக்கத்து இருக்கையில் இருபவரிடம் பேச்சுக் கொடுத்தாள்.

“என்னக்கா படம் எவ்ளோ போச்சு?”

“ஒரு 10 நிமிஷம் போயிருக்கும்கா”

“எழுத்து போட்டு ரொம்ப நேரம் ஆச்சோ?”

“இல்லக்கா இப்போதான் போட்டு முடிச்சான்.”

“முக்கியமான சீன் ஏதும் போயிடுச்சாக்கா?”

“அதெல்லாம் ஒன்னும் போகலக்கா, இன்னும் ஹீரோ ஹீரோயனியே வரல பேசாம படத்தப் பாருவேன்” என்றாள் எரிச்சலுடன்.

படத்தில் சண்டைக் காட்சி வருவதற்குள் இங்கு ஒரு சண்டைக் காட்சி ஓடி முடிந்தது. ஒரு வழியாக படத்தின் இடைவேளையும் வந்தது. கையில் ஒரு தட்டுடன் அழகாக முறுக்குகளை அடுக்கி வைத்து முறுக்கு விற்பவன் வந்தான். நான் அவனை ஆவலோடு பார்ப்பதை மோப்பம் பிடித்தவன் போல அவனும், எங்கள் இருக்கைக்கு அருகில் வந்து, “முறுக்கு முறுக்கு முறுக்கேய்…. முறுக்கு முறுக்கு முறுக்கேய்” என்று என் ஆவலை மேலும் முறுக்க ஆரம்பித்தான்.

“எம்மா…” என்று அம்மாவின் கையைச் சுரண்டினேன். பதிலேயில்லை. சினிமா வந்து விட்டால் அம்மா இந்த உலகத்திலேயே இருக்க மாட்டாள்.

“எம்மா…. முறுக்கு வாங்கித் தாம்மா” என்று மேலும் அழுத்தமாக சுரண்டினேன். கிளம்பும்போது அவள் வாக்கு கொடுத்திருந்ததால் கொஞ்சம் தைரியம் இருந்தது.

சட்டென்று விழித்துக் கொண்ட அம்மா, ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டதுபோல் என்னைப் பார்த்து முறைத்து விட்டு, “இதான் உன்னெல்லாம் படத்துக்குக் கூட்டிட்டு வர கூடாதுன்னு சொன்னேன்” என்றவள், வீட்டில் இருந்து கொண்டு வந்திருக்கும் அவித்த கடலையை நீட்டினாள்.

“எனக்கு கடலை வேணாம் முறுக்கு தான் வேணும். நீதான விளையாடிட்டு இருந்த என்ன முறுக்கு வாங்கித் தாரேன்னு சொல்லிக் கூட்டிட்டு வந்த” என்று அழாக்குறையாகக் கேட்டேன்.

“ஆமா சொன்னேன். அது அப்போ. இப்போ ஒழுங்கா இந்தக் கடலையத் தின்னு. காசு என்ன மரத்துலயா காய்க்கி?” என்று ஒரேயடியாக அடித்து விட்டாள். என் பக்கத்தில் இருக்கும் பையனோ முறுக்கை வாங்கிக் கருக்கு முறுக்கு என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தான். “பணக்காரப் பையன் போல” என்று நினைத்துக் கொண்டேன். அதைப் பார்த்த எனக்கு மேலும் ஆவல் பெருகியது.

“எம்மா எனக்குத்தான் நீ டிக்கெட் எடுக்கலையே, அந்த காசுலயாது முறுக்கு வாங்கித் தாம்மா” என்றேன் பரிதாபமாக.

“பேசாம இருக்கியா இல்லையா? உன்ன அங்க வெளிலையே விட்டுட்டு வந்திருக்கணும். அப்போதான் நான் நிம்மதியா படம் பாக்க முடியும்” என்று அம்மா அதட்டினாள்.

நானும் விடுவதாக இல்லை. முறுக்குப் பையனின் கூவலும் என்னை விடுவதாக இல்லை.

“எம்மா வாங்கித் தாம்மா” என்றேன்.

குஷ்பு நடித்த ஒரு படத்தில் 108 சாமி பெயர் சொல்லி ஒரு பாடல் வருமே அதில் வரும் அத்தனை சாமிகளின் மொத்த ஆங்கார உருவமாய் மாறிய அம்மா, “பேசாம இருக்கியா இல்ல அந்தக் கடலையையும் புடுங்கிரவா? உன்னப் பட்னி போட்டாத்தான் சரி வருவ, பெரிய ராசா வீட்டு கன்னுக்குட்டி இவரு, படத்துக்கு வந்தா முறுக்கு வாங்கித் திங்காம இருக்க முடியாதோ தொரைக்கு? எத்தனை பேர் படத்துக்குக்கூட வர வழி இல்லாம இருக்காங்க?” என்றாள்.

இதற்கு மேல் அழுத்திக் கேட்க முடியாது. அப்புறம் கையில் இருக்கிற கடலைக்கும் ஆபத்து வந்துவிடும் என்றெண்ணிக் கொண்டு என் முறுக்கு ஆசையை குழிதோண்டி புதைத்தேன்.

மறுநாள் மதியம் அப்பா சாப்பிட்டுவிட்டு கடைக்குச் சென்றதும், பக்கத்துக்கு வீட்டு மாலதி அத்தை வந்தாள். அதெல்லாம் கணக்காக அப்பாவின் நடமாட்டம் தெரிந்துதான் வருவாள்.

“எக்கா இன்னைக்குப் படத்துக்குப் போலாமா?”

நேற்றைக்கு தியேட்டருக்கு பாய்ந்த காட்டாற்று வெள்ளத்தில் மாலதி அத்தையும் இருந்தாள்தான். மாலதி அத்தையின் கேள்வியைக் கேட்டதும், உற்சாகத்தின் எல்லைக்கே சென்றுவிட்ட அம்மா, “சரிடி போலாம். நேத்து வேற படத்தை மொத 10 நிமிஷம் பாக்காம விட்டுடோம். இன்னைக்காவது சீக்கிரமா கிளம்பி போலாம்டி” என்று சந்தோஷமாகத் தயாரானாள்.

இதை நானும் என் அக்காவும் கேட்டுக் கொண்டிருந்தோம். எப்படியும் இன்று எங்களைக் கூட்டிச் செல்ல மாட்டாள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதனால் எதுவும் பேசாமல் இருந்தேன். ஆனால் அக்காவால் வாயைக் கட்டி வைக்க முடியவில்லை, பாவம்.

“எம்மா நானும் படத்துக்கு…” என்று கேட்டு முடிப்பதற்குள், “தெனமும் படம் கேக்குதோ உனக்கு? பெரிய மகாராணி இவ. போய் ஒழுங்கா வீட்டு வேலையப் பாரு,” என்று அக்காவின் ஆசையில் மண்ணளிப் போட்டாள் அம்மா.

நேற்று நான் தியேட்டரில் வாங்கிய அதேப் பரிசு இன்று என் அக்காவுக்கும் கிடைத்ததில் எனக்கு கொஞ்சம் சந்தோசம்தான்.

சிறிது நேரத்தில் மாலதி அத்தை கிளம்பி வந்தாள்.

“என்னடி இவளே… இம்புட்டு நேரமா கெளம்பிட்டிருக்கே… சரி வா, இன்னைக்காவது சீக்கிரம் போய், படத்த முதல்ல இருந்து பார்க்கலாம்”, என்று கால்களை வீசிப்போட்டுக் கிளம்பினாள் அம்மா.

“சரிக்கா,” என்று கிட்டத்தட்ட கூடவே ஓடிய அத்தை, ”இருந்தாலும் உங்க வீட்டுக்காரருக்கு ரொம்ப தாராள மனசுக்கா, தெனமும் படத்துக்குக் காசு கொடுக்கிறாரு” என்று ஆச்சரியப்பட்டாள்.

“அடிப் போடி பைத்தியக்காரி, நல்லா சொன்ன போ. உனக்குத்தான் நல்லா தெரியுமே எங்க வீட்டுகாரரப்பத்தி. அவர் ஒரு கடைஞ்செடுத்த கஞ்சாம்பட்டினு… அவராச்சும் காசு குடுக்குறதாச்சும். நேத்து இந்தப் பயலுக்கு டிக்கெட் எடுக்கலேல்ல அந்தக் காசுதாண்டி” என்று அம்மா தன் ராஜதந்திரத்தைப் போட்டுடைத்து என்னை அதிர வைத்தாள்.

“ஆமா உனக்கு ஏதுடி காசு?” என்று அத்தையிடம் கேட்க, அவள் பதில் சொல்வதற்குள் அவர்கள் சிறிது தூரம் சென்று விட்டதால் எனக்கு என்ன பேசிக் கொண்டார்கள் என்பது கேட்கவில்லை. ஆனால் மாலதி அத்தையின் மகன் முருகேசனும் முறுக்கும் தான் நினைவுக்கு வந்தார்கள். அவனையும் இன்றைக்குக் காணோம்.