சிறுகதை

பணக்காரன்

கா. ரபீக் ராஜா 

 

சுந்தரம் சற்று முன்புதான் பணக்காரனாக மாறியிருந்தான். சுந்தரத்துக்கு இருக்கும் ஒரே சொத்து நான்கு ஏக்கர் வானம் பார்த்த பூமியான நிலம் மட்டும்தான். பெயருக்குதான் விவசாயி. வேலை பார்ப்பதெல்லாம் இன்னொருவர் பண்ணையில். இவனுக்கு மனைவி, ஒரு மகன், மகள். சொற்ப ஊதியத்தில் குடும்பத்தை நடத்துவதே பெரும்பாடு. இவனது ஊரில் மூன்று மாதங்களுக்கு முன்புதான் நான்கு வழிச்சாலை போடப்பட்டது. அதன் விளைவாக கிராமம் கொஞ்சம் கொஞ்சமாக உருமாற்றம் அடைந்து கிராமமும் அல்லாமல் நகரமும் அல்லாமல் ரெண்டுங்கெட்டானாக மாறிவிட்டது.

நான்கு வழிச்சாலை முக்கிய நகரத்தின் இணைப்பு சாலையாக  மாறிப்போனதன் விளைவாக ஊருக்குள் நிறைய தொழிற்சாலைகள் வரத்தொடங்கியது. அதில் சுந்தரத்தின் நான்கு ஏக்கர் குறிப்பிட்ட கார்ப்ரேட் கம்பெனியின் கண் பட்டு எவ்வளவு விலையேனும் கொடுக்க தயாராக இருந்தார்கள். இந்த தகவல் சுந்தரத்துக்கு போனது. சுந்தரத்தின் மனைவி எல்லாம் சேர்த்து ஒரு பத்து லட்சத்துக்கு தள்ளிட்டு வாங்க என சொல்லியனுப்பி இருந்தாள்.

சுந்தரத்துக்கு நா வறண்டு கண்ணீர் வந்தது. கூடவே கீழ் உடுப்பும் ஈரமாகியிருந்தது. அந்த கார்ப்ரேட் செயல் அதிகாரி எடுத்த எடுப்பில் இரண்டு கோடிக்கு செக் கொடுத்தால் யாருக்குதான் வராது. கூடவே இந்த பெரிய தொகையை கையாள்வது எப்படி என்பதை ஒரு உதவியாளர் சொல்லிக் கொடுத்தார்.  அந்தளவுக்கு அது எதோ கனிம வளம் கொண்ட புதையல் பூமி என்று பின்னாளில் அறிந்து கொண்டான். அது குறித்து கவலை இல்லை. இரண்டு கோடி மகிழ்ச்சியில் இருந்தான்.  இரண்டொரு நாளில் எல்லாம் மாறியது. பிடித்தம் போக ஒண்ணே முக்கால் கோடிக்கு அதிபதியாக மாறிப்போனான் சுந்தரம்.

பக்கத்துக்கு நகரத்துக்கு குடியேறிப் போனான். பழைய வீட்டில் இருந்த பொருட்களை ஏரியாவாசிகளுக்கு பிரித்துக் கொடுத்தான். புதிய வீட்டில் எல்லா வீட்டு உபயோகப் பொருட்களும் இருந்தது. ஒண்டிக் குடித்தனத்தில் நெருக்கியடித்து படுத்துக் கிடந்தவன் மகன், மகள் என அனைவர்க்கும் தனியறை ஒதுக்கப்பட்டது. வீட்டுக்கு படித்த வேலைக்காரியை வைத்தார்கள். அவள் இங்கிலீஷ் பேசுவதாக சுந்தரத்தின் மனைவி குறைபட்டுக்கொள்ள படிக்காத சமையல் தெரிந்த வேலைக்காரி நியமிக்கப்பட்டாள்.

அந்த நகரத்திலேயே ஒரு பெரிய சூப்பர் மார்கெட் திறக்கப்பட்டு தொழிலதிபரானான். அன்று இரவு மிகுந்த யோசனைக்கு உள்ளானான் சுந்தரம். காரணம் இன்று காலை நடந்த சம்பவம். வங்கியின் வரிசையில் நின்றபோது வங்கி பணியாளர் இவரை பார்த்து ஒழுங்கா வரிசையில் நில்லுய்யா என்பது போல ஒருமையில் பேசியதை விட அருகில் நின்றவனை பார்த்து ஸார் என்று சொன்னது சுந்தரத்தை மிகவும் பாதித்துவிட்டது. காரணம் வங்கிக்குள் நுழையும்போது அந்த “ஸார்” ஆசாமி சைக்கிளில் ஸ்டாண்டு போட்டான். சுந்தரம் வந்தது  காரில். வங்கி புத்தகத்தில் ஆயிரத்து சொச்சம் வைத்திருப்பவனுக்கு கிடைக்கும் மரியாதை கூட கோடியில் புரளும் நமக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் அன்றிரவு தூக்கத்தை கெடுத்தது.

சுந்தரத்துக்கு வசதி வாய்ப்பு வந்ததும் பழைய நட்புக்களை எல்லாம் கவனமாக துண்டித்துவிட்டான். ஆகையால் யோசனை கூற யாருமில்லை. பணக்காரனாக வாழ்வது எப்படி என்கிற குறுகியகால பயிற்சி வகுப்புகள் இருந்திருந்தால் நிச்சயம் ஒரு அட்மிஷன் போட்டிருப்பான். பணக்காரனாக மாறுவது எப்படி என்ற தலைப்பில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருக்கிறது. ஆனால் வாழ்வது எப்படி என்று யாரும் எழுதவில்லை. அவன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் இவனை எப்படி பார்க்கிறார்கள் என்பதை கவனிப்பதே இவனது அன்றாட பணியாகிப்போனது. பணியாளர்களுடன் சகஜமாக பேசமாட்டான். காரணம் பணக்கார முதலாளி ஏழை தொழிலாளியிடம் பேசமாட்டான்.

இவன் பழைய ஊரில் இருக்கும் போது மில் ஓனர் ஒரு கிளப்பில் மெம்பராக இருந்தார். கிளப் பெயர் நினைவில் இல்லை. அதே போல சுந்தரமும் ஒரு கிளப்பில் அவசரமாக மெம்பரானான். அது ஏழைகளுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் ஆதரவற்றவர்களுக்கு நேசக்கரம் நீட்டும் அமைப்பு. பகலில் ஒரு மீட்டிங் போட்டிருந்தார்கள். அதில் சுந்தரம் பொன்னாடை போர்த்தப்பட்டு கவுரவிக்கப்பட்டான். அதே கூட்டத்தில் நடக்க முடியாதவர்களுக்கு சக்கர நாற்காலி வாங்க ஒரு செக் கொடுத்திருந்தான். நகரின் மிகப்பெரிய திரையரங்கு வைத்திருக்கும் தொழிலதிபர் தான் கிளப்பின் தலைவர். இவனுக்கு கொஞ்சம் நிறைவாக இருந்தது. கூட்டத்தில் இனி எதிர்காலத்தில் இந்த கிளப் செய்யவேண்டிய நலத்திட்ட உதவிகள் பற்றி பேசிவிட்டு இரவில் ஒரு பாரில் தண்ணியடித்துவிட்டு சபையை கலைத்தார்கள்.

கிளப்பில் இருக்கும் செல்வந்தர்களை கவனித்தான். எல்லோரும் சிகப்பாக இருந்தார்கள். கருப்பாக இருந்தாலும் மெருகுடன் இருந்தார்கள். சிரிக்கும்போது அனைவரது பல்வரிசையும் சீராக இருந்தது. முக்கியமாக உயரமாக இருந்தார்கள். அந்த கூட்டத்தில் சுந்தரம்தான் சற்று குள்ளமாக இருந்தான். பணத்துக்கும் உயரத்துக்கும் அறிவியல்பூர்வமான தொடர்புகள் இல்லாவிட்டாலும் ஒருவேளை இருக்கலாம் என்பது சுந்தரத்தின் நம்பிக்கை. உயரத்தை மூன்று இஞ்ச் செருப்பணிந்து ஓரளவு சரிசெய்தான்.

சுந்தரத்தின் பற்கள் அப்படி ஒன்றும் துருத்திக்கொண்டு இல்லாவிட்டாலும் சிரிக்கும்போது ஒரு எளியவனின் தோற்றம் கொடுத்தது. நகரத்தின் பெரிய பல் மருத்துவமனைக்கு சென்றான். பல்லுக்கு மூவாயிரம் என்றார்கள். ஒரு டஜனுக்கு இரண்டு குறைவான பற்களை சீரமைப்பு செய்தான். இரண்டுநாள் தங்க வேண்டும் என்றார்கள். வாழ்நாளில் தேக ஆரோக்கியம் இருந்தும் மருத்துவமனையில் தங்கியது அன்றுதான். மேலும் ஒரு பல் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேரும் பாக்கியம் எல்லோருக்கும் கிட்டிவிடாது. பற்களை சீரமைத்த பெண் மருத்துவரை இவனுக்கு மிகவும் பிடித்துப்போனது. காரணம் வேண்டுமென்றே தன் இடுப்பை பார்த்தாலும் அதை கண்டுகொள்ளாத அந்த மனப்பாங்கு மிகப்பெரிய நாகரீகவாதிகளிடம் மட்டுமே இருக்கும் குறிப்பாக செல்வந்தர்களிடம் என்று தனக்குதானே கூறிக்கொண்டான். மறுநாள் மருத்துவமனையில் இருந்து விடை பெறும்போது ஒருகட்டு ரூபாய் தாளை அந்த பெண் மருத்துவரிடம் திணித்தான். பணத்தை ரிசப்சனில் கட்டுங்கள் என்று சொல்லிவிட்டு நடந்த மருத்துவரை நீண்ட பெருமூச்சுடன் கவனித்தான்.

புதிய பல்லை எப்படி காண்பிப்பது என்ற வெட்கம் கூட வந்து போனது. வீட்டில் ஆளுக்கு ஒரு மூலையில் உட்காந்திருந்தார்கள். பிரச்சனை குழந்தைகளிடம் என்று விளங்கியது. காரணம், இரண்டு குழந்தைகளும் அரசு பள்ளியில் படித்தவர்கள். வாழ்க்கை வேறு திசையில் பயணித்ததால் ஒரு ஆங்கிலப்பள்ளியில் சேர்ந்துவிட்டான். புதிய பள்ளியில் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்பதாலும் தமிழில் பேசினால் அபராதம் என்பதாலும் சுந்தரத்தின் இரு குழந்தைகளும் அந்த பள்ளியில் தனித்து விடப்பட்டு இருந்தார்கள். மேலும் பழைய பள்ளியில் சேர்ந்து விடுமாறு அழுது ஆர்ப்பாட்டம் செய்தார்கள். சுந்தரம் தன்னைத் தவிர குடும்பத்தில் யாருக்கும் பணக்காரனாக வாழ ஆசையே இல்லையே என்று வருத்தமாக இருந்தது. மனைவியும் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறாளே என்கிற ஆதங்கம் வேறு.

எல்லாவற்றையும் மறக்க ஒரு ஹோட்டலுக்கு சென்றார்கள். அது ஒரு மூன்று நட்சத்திரம் இருக்கலாம். சாப்பிட உட்காந்ததும் ஒரு எலுமிச்சை பிழிந்த வெதுவெதுப்பான நீர் வைத்தார்கள். அதை சுந்தரத்தின் மனைவி உட்பட அனைவரும் சூப் நினைக்க, பரிமாறும் சிப்பந்தி அது கை கழுவுவதற்கு என்று சொல்லிவிட்டு லேசாக சிரித்துவிட்டான். இவனுக்கு தாங்க முடியாத அவமானத்தை பெற்றுத் தந்தது. பேசாமல் வேறு மனைவியை பார்க்கலாமா என்ற எண்ணம் கூட வந்து போனது. மெனு கார்டு கொண்டு வந்து கொடுத்தார்கள். அது அவனது தாயாரின் இறப்பு சான்றிதழை நினைவுப்படுத்தியது. அதிலும் ஆங்கிலம். வாங்க வேற ஹோட்டலுக்கு போகலாம் என்று மனைவி நச்சரிக்க தொடங்கிவிட்டாள். பார்வையால் அதட்டிவிட்டு சற்று அமைதியாக இருந்தான். இவர்களது தவிப்பை புரிந்துகொண்ட பக்கத்துக்கு டேபிள் பெண்மணி ஒவ்வொரு மெனுவாக எடுத்துரைத்தாள். அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் இந்த பெண்ணே மனைவியாக வேண்டும் என்று நினைத்துக்கொண்டான்.

மறுநாள் சுந்தரத்தின் சித்தப்பா இறந்துவிட்டார் என்ற தகவல் வந்தது. சுந்தரத்துக்கு தந்தை கிடையாது. தாயின் பராமரிப்பில் வளர்த்தவன். தந்தையின் வழி வந்தது தான் இந்த நாலு ஏக்கர். தந்தையுடன் கூடப்பிறந்த ஒரே தம்பிதான் இப்போது இறந்தது. அண்ணன் இறந்து போனதும் நல்ல வளமான சொத்துகளை தன் வசப்படுத்தி மழையே பார்க்காத நாலு ஏக்கர் இடத்தை அண்ணன் குடும்பத்துக்கு தள்ளிவிட்டார். அந்த நாலு ஏக்கர் தான் இப்போது இவனை கோடிஸ்வரனாக மாற்றினாலும் அவர் செய்த துரோகத்தை இவன் மறக்கவே இல்லை. சுந்தரம் வாலிபனாக இருந்த போது நோய்வாய்பட்டு கிடந்த தாயும்  போய் சேர்ந்துவிட்டாள். வேறு வழியில்லாமல் சித்தப்பா வீட்டில் வளர்ந்தான். அவனுக்கென்று திருமணமாகும் வரை சித்தப்பா வீட்டில் இருந்த அந்த எட்டு வருட அவஸ்தை சொல்லில் அடங்காது. வீட்டில் மீன் குழம்பு வாசம் வீசும் போதும் இவனுக்கு பழைய சோறே உணவாக கிடைத்தது. இவனுக்கு அந்த மீன் குழம்பு கிடைக்க இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டும். சின்னம்மா செய்த கொடுமைகளை ஒருவார்த்தை கூட தட்டிக்கேட்டதில்லை. அவர் காத்த அமைதி சின்னம்மா கொடுமையை விட கொடியதாக இருந்தது.

கொஞ்ச நாளில் சின்னம்மாவுக்கு அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைத்தது. இருவர் சம்பாதித்து சற்று வசதியாக வாழ ஆரம்பித்தனர். அவர்களது குழந்தைகள் பெரிய பள்ளியில் படிக்க அவர்கள் வீட்டிலேயே குழந்தை தொழிலாளராக சுந்தரம் இருந்தான். அப்படிபட்ட சித்தப்பா தான் இறந்து போனார். தொண்டையில் கான்சர். வார்த்தையே பிறக்காத அந்த தொண்டையில் எப்படி கான்சர் வந்தது என்று தனக்குள் கேட்டுக்கொண்டான்.

ஒரே ஆச்சரியம்  தனக்கு வசதி வாய்ப்பு வந்தது தெரிந்தும் கூட சித்தப்பா குடும்பம் தன்னிடம் உதவி என்று கேட்டு நின்றதில்லை, சுந்தரத்தின் விருப்பமும், பிரார்த்தனையும் அதுவே. சித்தப்பா சாவுக்கு போகும்போது எந்த மாதிரியான தோரணையில் போவது என்ற குழப்பம் இருந்தது. ஒரு செல்வந்தனாக தான் செல்லும் முதல் சாவு எந்த குழப்பமும் வந்துவிடக்கூடாது என்று நினைத்துக் கொண்டான். சாவுக்கு வரும்போது  பொருள் படைத்தவனின் செய்கைகள் எப்படி இருக்கும் என்பதை ரைஸ்மில் முதலாளியிடம் கற்றிருக்கிறான். வெள்ளை உடையில் பளீரென்று வருவார்கள். முகத்தில் ஒரு செயற்கை சோகம் இழையோடும். முகத்தில் கொஞ்சம் பூச்சு வேலைப்பாடு இருந்தாலும் அதை சோகமான முகம் மிகச்சரியாக மட்டுப்படுத்தும். யாருக்கும் தெரியாத  வகையில் கூடுமானவரை நுகரும் வகையில் ஒரு வாசனை திரவியம் பூசியிருப்பார்கள். அது இறப்பு வீடுகளுக்கு செல்லும்போது உபயோகப்படுத்தும் பிரத்யேக திரவியமா என்பது கூட சுந்தரத்துக்கு நெடுநாள் சந்தேகமாக இருந்திருக்கிறது. கூடவே ஒரு அல்லக்கை அல்லது கார் ட்ரைவர் அந்த பெரிய மாலையை சுமந்து வருவார். சாவு வீடே ஒருநிமிடம் அழுகையை நிறுத்திவிட்டு அந்த செல்வந்தனை ஏறிடும். இந்த பெருமையில் பாதி அந்த பணக்காரர்களுக்கு சென்றாலும் மீதி படுத்து கிடக்கும் அந்த சவத்துக்கு சேரும்.

சுந்தரம் ஒருமுறை ஒத்திகை பார்த்துவிட்டுத்தான் காரில் ஏறினான். வரும் வழியில் ஒரு பெரிய மாலையை வாங்கி டிக்கியில் வைக்க சொன்னான். காரணம் கடையில் இருந்த பொழுது மணம் வீசிய ரோஜா மாலை இவன் கைக்கு வந்ததும் சாவு வாசம் அடித்தது. கூடவே ஒரு இறந்த உடலுடன் பயணிப்பது போன்ற உணர்வு. ட்ரைவரிடம் நீதான் மாலையை எடுத்துக்கொண்டு என் பின்னால் வரவேண்டும். காரணம் நிறைய பேர் எனக்கு வணக்கம் வைப்பார்கள். பதில் வணக்கம் வைக்க இந்த மாலை இடையூறாக இருக்கும் என்றான். கூடவே இறந்த உடலை பார்த்து வணக்கம் வைத்துவிட்டு உன் பக்கம் திரும்பும்போது மாலையை கொடுக்க வேண்டும். மேற்கண்ட செய்முறை விளக்கத்தை சொல்லும்போது ட்ரைவர் தன்னை ஒரு மாதிரியாக பார்த்ததை கவனித்தான்.  முன்பின் ஒரு பணக்காரரிடம் வேலை பார்த்ததல்லை போல என நினைத்துக்கொண்டான்.

சித்தப்பா வீட்டை நெருங்கினான். கடைசியாக பார்த்தது போலவே இருந்தது. வாசலில் ஒரு மாங்காய் மரம். இவன் இந்த வீட்டுக்கு சிறுவனாக வந்தபோது கன்றாக வைத்தது. சித்தப்பா இந்த மரத்தை பார்த்துக்கொண்ட அளவிற்கு கூட தன்னை பார்த்துக் கொண்டதில்லை என்பது சுந்தரத்தின் சற்று முந்தய குற்றச்சாட்டு. இதையெல்லாம் தன் ட்ரைவரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது போல இருந்தது. ஆனால் பணக்காரர்கள் யாரும் தன் வாழ்வியல் சோகங்களை ட்ரைவரிடம் பகிர மாட்டார்கள் என்பதால் அமைதியாக இருந்தான்.

வீட்டின் முன் சாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. அது கிழிந்து நைந்து போன பந்தல். இழவு வீட்டுக்கு போடவே எடுத்து வைத்த பந்தல் போல இருந்தது. வீட்டுக்கு முன் ஒரு அறுபது அடி தூரத்திலேயே காரை நிறுத்தினான். நிறுத்தும் போது ஒரு ஹாரன் அடிக்க சொன்னான். முகம் முன் பக்கம் இருந்ததால் பின்னால் உட்காந்திருந்த சுந்தரத்தால் ட்ரைவர் முகம் என்ன மாதிரியாக இருந்திருக்கும் என்பதை பார்க்க முடியவில்லை. ஹாரன் அடிக்கப்பட்டது. எதிர்பார்த்தது போல இழவு வீட்டின் பந்தலில் உட்காந்திருந்த கூட்டம் காரை திரும்பி பார்த்தது. சுந்தரத்துக்கு கொஞ்சம் பெருமையாக இருந்தது. கார் கதவை தானே திறக்கலாமா இல்லை ட்ரைவரை விட்டு திறக்க சொல்வோமா என்ற எண்ணம் எழுந்தது. ட்ரைவர் முடியாது என்று மறுத்துவிட்டால்? திரும்பி போக என்ன செய்வது தனக்கும் கார் ஓட்ட தெரியாது என்று பழைய சுந்தரம் செய்த எச்சரிக்கை காரணமாக கதவை தானே திறந்து கொண்டு வெளியே வந்து நின்றான்.

மொத்த கூட்டமும் இவனை பார்த்துக்கொண்டு இருந்தது. ட்ரைவர் வேகமாக ஓடிவந்து டிக்கியை திறந்து மாலையை எடுத்துக்கொண்டு இவன் பின்னால் நின்றான். மெதுவாக அல்லாமலும் வேகமாக இல்லாமலும் ஒருவிதமாக நடந்தான். இப்போது மொத்த கூட்டத்தின் கண்கள் இவனை மொய்ப்பது இவன் பார்க்காமலே புரிந்தது. இது தவிர தூரத்தில் உட்காந்து தண்ணியடித்து கொண்டிருந்த ஒரு கூட்டம் இவனையே வெறித்து பின்பு திரும்பி வேலையைத்  தொடர்ந்தார்கள். தண்ணியடிக்க யாரேனும் காசு கேட்டால் கொடுப்பதற்கு ட்ரைவரிடம் காசு கொடுத்திருந்தான். பணக்காரன் பணத்தை தொடமாட்டான். அதுதான் அவனை தொடவேண்டும்.

சித்தப்பாவின் மூத்த மகன் அதாவது சுந்தரத்திற்கு தம்பி வெளியே சட்டையின்றி நின்று கொண்டு வருவோர்களின் துக்கத்தை ஏற்றுக்கொண்டிருந்தான். அவனும் கவனித்துவிட்டான். தான் கையை பிடிக்கும்போது அவன் உதறிவிட்டால் என்ன செய்வது? மெதுவாக வந்து வீட்டை அடைந்தான். கூட்டத்தை பார்த்து பொத்தாம் பொதுவாக ஒரு வணக்கம் வைத்தான். அதற்கு கைமேல் பலனாக பதிமூன்று பதில் வணக்கங்கள் கிடைத்தது. தம்பியின் கை பிடித்து அழுத்தினான். அந்த அழுத்தம் கையில் போட்டிருக்கும் மோதிரத்தையும் கட்டையான பிரேஸ்லெட்டையும் பார்க்குமாறு அறிவுறுத்தியது. செருப்பை உள்ளே போகும்போது எங்கே கழற்றி வைப்பது என்றே குழப்பம் வந்து போனது. பழைய சுந்தரம் புது செருப்பு வாங்கி இதுபோன்ற ஜனநெருக்கடி இடத்திற்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டால் ஜோடி செருப்பில் ஒரு செருப்பை ஒரு இடத்திலும் இன்னொரு செருப்பை மற்றொரு இடத்திலும் கழற்றி வைப்பான். இது செருப்பு திருடர்களின் தொழிலை பாதிக்கும் உத்தி என்று நம்பினான். ஒரு உயர் ரகமான பேட்டா செருப்பு பக்கத்தில் தன் செருப்பை கழற்றி வைத்தான். பணக்காரன் இன்னொரு பணக்காரன் நட்பையே விரும்புவன். பணக்காரனின் செருப்பு கூட இதை கடைபிடிக்க வேண்டும் என்ற கொள்கையை சுந்தரம் சற்று முன் மனசாசனத்தில் எழுதினான்.

சித்தப்பாவின் வீடு அப்படியே இருந்தது. முன்னால் இருந்த திண்ணையில் தான் சுந்தரம் படுத்து தூங்குவான். வீட்டின் மெயின் ஹாலில் தான் சித்தப்பா படுத்து கிடப்பார். இன்றும் அதே இடத்தில் தான் ஒரு ஐஸ் பெட்டியில் உறைந்து கொண்டிருக்கிறார். பிரீசர் பாக்ஸில் இரண்டு மொபைல் போன் நம்பர்கள் எழுதப்பட்டு இருந்தது. இந்த எண்ணை யாரெல்லாம் தன் போனில் பதிந்து வைத்துக் கொள்வார்கள் என்று யோசித்து பார்த்தான். சுந்தரம் சேர்ந்த கிளப்பில் கூட ஏழை எளிய மக்களின் பயன்பாட்டிக்கு ப்ரீசர் பாக்ஸ் வாங்க போவதாக சொல்லியிருந்தார்கள்.

சித்தப்பாவை உற்றுப் பார்த்தான். இன்றும் அதே அமைதி. பாதிக்கண் திறந்தே இருந்தது பார்க்க பயமாக இருந்தாலும் தூங்கும்போதே இப்படி தான் அரைக்கண் திறந்தே இருக்கும். ஒரு மூக்கில் சரியாக பொருத்தப்பட்டு இருந்த பஞ்சு மறுதுவாரத்தில் கீழே விழுந்து கிடந்தது. ஒருவேளை சித்தப்பா மூச்சு விட்டிருக்கலாம் என் மனதிற்குள் சொல்லி சிரித்துக்கொண்டான். தொண்டையில் பெரிய கட்டு ஒன்று போடப்பட்டு இருந்தது. சித்தப்பா கொஞ்சமல்ல நிறைய வலியில் வாழ்ந்திருப்பார் என்பதை நினைக்க சற்று பாவமாக இருந்தது. அதற்காக அழுதுவிடக்கூடாது. அது எளியவர்கள், இயலாதவர்கள் செய்யும் காரியம். திரும்பி பார்த்தான். சரியான நேரத்தில் ட்ரைவர் மாலையை கொடுத்தான். சுந்தரத்திற்கு சற்று கௌரவமான மனநிலையை தந்தது. மேலும் மனைவியை அழைத்து வராமல் இருப்பது நல்ல யோசனையாகப்பட்டது. சித்தப்பாவுக்கு ஒரு வணக்கம் வைத்தான். அசூசையாக பதில் வணக்கத்திற்கு ஒரு நொடி காத்திருந்துவிட்டு சின்னம்மாவை தேடினான். ஒரு மூலையில் உட்காந்து அழுதே ஓய்ந்து போயிருந்தாள். இவனை கவனித்து விட்டு குனித்து கொண்டு அழுதாள்.

வெளியே பந்தலில் வந்து தன் கௌரவத்திற்கு ஏற்ற மரியாதைக்குரிய நபர்கள் யாராவது தென்படுகிறார்களா என்று தேடினான். கூட்டத்தில் தன் தகுதிக்கு ஏற்றவர்கள் யாருமில்லை என்பதை உறுதி செய்துவிட்டு, சித்தி வேலைபார்க்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரை இவனுக்கு தெரியும், அவர் அருகிலேயே போய் அமர்ந்தான். கூட்டத்தில் இருந்தவர்கள் இவனை பற்றி பேசினார்கள். சுந்தரம் தானே இவன்? என்பது மட்டும் பிரமையாக இவன் காதில் விழுந்தது. வந்த வேலை முடிந்தது. இனி ஒன்றுமில்லை என்று முடிவு செய்து எழுந்து நின்றான். துக்கத்தை வாங்கிக் கொண்டிருந்த தம்பியிடம் நின்று ட்ரைவரை பார்த்தான். ட்ரைவர் ஓடி வந்து ஒரு பழுப்பு நிறமேறிய கவரை கொடுத்தான். அதை சுந்தரம் தம்பியிடம் கொடுத்துவிட்டு நடந்தான். தான் கவர் கொடுத்ததை ஒரு பத்து பேர் பார்த்தாலே ஊர் முழுக்க பரவிவிடும் என்று நம்பினான்.

காரில் ஏறி உட்காந்தான். நில்லுடா என்பது போன்ற சப்தம். வண்டியை ட்ரைவர் இயக்க முற்படும் போது டேய் சுந்தரம் என்கிற குரல் தெளிவாக கேட்டது. அது சித்தியின் குரல். சித்தி ஆவேசமாக காரை நோக்கி வந்து கொண்டிருந்தாள். வண்டியை கிளப்ப சொல்லி விடலாமா என்ற யோசனை வேறு. ஓடுவது பணக்காரனுக்கு அழகல்ல. நின்று சமாளிப்பது அவனுக்கு இன்னும் கம்பீரத்தை கொடுக்கும் என்று எண்ணி வண்டியை விட்டு கீழே இறங்கினான். டிரைவர் வண்டியை ஆப் செய்தான்.

சித்தியை வெகு அருகில் நின்று பார்க்கும் போதே கொஞ்சம் பயமாக இருந்தது. முகத்தில் ஆவேசம்.

“யாருக்கு வேணும் உன் பணம்? நாங்க நல்லாத்தான் இருக்கோம். நான் சாகுற வரைக்கும் பென்ஷன் வரும். எந்த நாய்கிட்டையும் கை கட்டி நிக்க வேண்டிய அவசியமே இல்ல!” என்று பணத்தை கவருடன் எறிந்தாள். கவருக்குள் இருந்த பணம் கட்டில் இருந்து பிரிந்து கொட்டியது. உள்ளுக்குள் இருந்த பழைய சுந்தரம் வெளியே குதித்து பணத்தை பொறுக்க தொடங்கினான். கடைசி நோட்டை எடுத்து முடிக்கும்போது உள்ளுக்குள் படுத்திருந்த சித்தப்பாவை தவிர எல்லோரும் அவனை பார்த்தார்கள். கடைசி நோட்டு வரை பொறுக்கிய சுந்தரம் அமைதியாக காருக்குள் அமர்ந்து கொண்டான்.

 

விசிறி

லட்சுமிஹர் 

ஒவ்வொரு முறையும் அவள் திட்டிக்கிட்டு எழும்போதும் “முருகா” என்று தவறாமல் சொல்லிவிடுவாள். பதட்டமிருந்தாலும் போர்வையோடு அதை உதறிவிட்டு அப்பாவிடம் செல்வதுதான் வழக்கம்.  இரவானால்  முருகன் தன்னிடம் வந்து பேசுவதாக சொல்லுவாள். தினம் ஒரு கதை. கதைகள் எப்போது தொடங்கியது என்று மறந்திடும் அளவுக்கு முருகன் அவள் கனவுகளில் வந்து கொண்டிருக்கிறான்.

மரங்கள் நிறைந்த வனத்தின் ஊடாக நடந்து கொண்டே செல்கிறார்கள்.  கதையை முடிக்கும் வரை இடையில் யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்பது அவளின் நிபந்தனை. அதுவும் அப்பா எப்போதும் எதையோ கேட்டுக்கொண்டே இருப்பார். அதனால் கட்டளைக்கு பணிந்து அமைதி நிலவியது.

அவர்கள் அந்த வனத்தினை விட்டு வெளியேறும் பாதையை கண்டு பிடித்துவிட்டனர். உடன் வந்த முருகன் “இங்கிருந்து நீ உன் வீட்டுக்கு செல்லலாம்” என்றான். இதுவரை சிரித்துப் பேசி வந்தவளின் முகம் சுருங்கி விட்டதை  அறிந்த முருகன் அதற்கு பதில் சொல்ல நினைத்து பின் வேண்டாம் என்று நிறுத்திக் கொண்டது எதற்கு என்ற காரணங்கள் தெரியாது. முருகனை பற்றிக் கொண்ட பிஞ்சுக் கைகள் “எங்க வீட்டுக்கு வரியா” என்று கேட்டதற்கு தலையை வேகமாக ஆட்டி சிரித்துக் கொண்டான். “நாளைக்கு அவன கூட்டிட்டு வரேன்” என்று கதையை முடித்தவள் உடனே ஒரு கேள்வியையும் கேட்டாள். “உனக்கெல்லாம் முருகன் கனவுல வந்தது இல்லையா அப்பா” என்று சொல்லிக்கொண்டே தூக்கி கொள்ளுமாறும் கைகளை மேல் ஏற்றினாள்.

வாழ்நாளில் ஆறுமுகம் இதுவரை அப்படி கனவுகள் ஏதும்  கண்டதில்லை. அதுவும் அவர் மகளின் கனவுகளுக்கு எப்படி ஈடு கொடுக்க முடியும். கனவுகளில் முருகனுடன் பேசுவதாகச்  சொல்லும்போது “அப்பனுக்கு இதுவரை காது கொடுக்கலனாலும் மகளோட பேச்சப் பாரு” என்று விளையாட்டுத்தனமாக மனைவியிடம் சொல்லும் போது மகள் கோவித்துக் கொள்வதும் அழகு.அந்த முகத்தை பார்க்க எத்தனை வருடம் தவமிருந்தார்.  ஆறுமுகத்தின் ஐம்பது வயதில்தான் மகள் வள்ளியாய்  வந்து தோளை  அணைத்துக் கொண்டாள். அவளின் கனவுகள் பற்றிய பேச்சு எப்படி சலித்துவிடும்.

அலைகள் ஓயாத கடற்கரையில் அமைந்திருக்கும் கோவிலுக்கு காலையில் நடை திறந்ததும் ஆறுமுகம் கூடை நிறைய விசிறிகளை எடுத்துக்கொண்டு ஸ்பெஷல் தரிசனம் கவுன்ட்டர் அருகில் வியாபாரத்திற்காக நின்று விடுவது வழக்கம். “ஒன்னு பத்துரூபா ..ஒன்னு பத்து ரூபா” என்று கைகளில் அந்த விசிறியை வைத்து பெயர் தெரியாது லைனில் நிற்பவர்களுக்கு விசிறிக்கொண்டே இருப்பார். நேரம் ஆக ஆக அறுபது வயதை நெருங்கிய உடல் சோர்வைக் கொடுக்க நா வரண்டு போய் கைகளில் விசிறியை மட்டும் வைத்து லைனில்  நிற்பவர்களின் பார்வையில்  படும்படி நீட்டிக் கொண்டிருப்பார். அவரை போன்ற பலரை அங்கு காணலாம். பெரிய வருமானம் இல்லை என்றாலும் உடல் ஒத்துழைக்கும் வேலையாக அமைந்தது, அவ்வளவுதான். முதல் பூஜைக்கு வந்தால் இரவு நடை சாத்தும் வரை அந்த கவுன்ட்டர் தரிசனம் அருகிலேயே நின்று விற்றுக் கொண்டிருப்பார்.

கோவில் நடைபாதையில் தன் நண்பன் சாரதியினுடைய  சாமி படங்கள் விற்கக்கூடிய கடைக்கு கூட்டி போய் வள்ளியிடம் ஆறுமுகம் “உன் கனவுல வந்து பேசும்ல முருகன், இதுல எது கணக்கா இருக்கும்” என்று கேட்டவருக்கு பதில் சொல்வதற்காக  அங்கிருந்த படங்களை நின்று நிதானமாகப் பார்த்துக்கொண்டே சென்றவள் குழந்தை முருகனிடம் ரொம்ப நேரமாக நின்றிருந்தாள். ஆறுமுகம் “இது மாட்டமால” என்று கேட்க, காது கொடுத்து அதை கேட்காதவள் போல் அடுத்த போட்டோவுக்கு நகர்ந்தாள். சாரதி ஆறுமுகத்தைப் பார்த்துச் சிரித்துக்கொண்டார். “உன் புள்ள எப்புடி கத சொல்லுதுடே, எங்க முருகன்ல சொல்லுது” என்று சொன்ன சாரதி தான் திருச்செந்தூர் வந்ததிலிருந்து ஆறுமுகத்திற்கு சொந்தம் போன்ற ஆறுதல்.

“ஒண்டிக் கட்டையாவே காலத்த ஓட்டிரலாம்னு நெனைக்காதீங்க அண்ணா” என்று ஆறுமுகத்தின் மனைவி பேச்சு வாக்குல பொண்டாட்டி வேனுங்குரத ஞாபகப்படுத்துரேன்ற பேருல சாரதிக்கு அவங்க அம்மா அப்பா இல்லாத நினைப்ப இழுத்து விட்டுரும். சாரதி கடை திறக்காத நேரங்களை கடற்கரையில் கழிப்பது தான் வழக்கம். “கடலுனா பாத்துட்டே இருப்பையோ” என்ற ஆறுமுகத்தின் கேள்விக்கு  சாரதி எல்லாத்துக்கும் பதிலென சிரித்துக் கொள்வார். அதற்கு பின் இருக்கும் கதை சாரதிக்கு மட்டும் தெரிந்ததே. அதை இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொண்டது இல்லை .ஆறுமுகத்தின் அந்த கேள்வியை  உள்வாங்கிக் கொண்டது போல கடல் வீச்சு. “கடலுனா பாத்துட்டே இருப்பையோ” என்பதை சாரதியின் காதிற்குள் கொண்டுவந்து சேர்த்தது மீண்டும் மீண்டும்.   .

மதிய சாப்பாட்டிற்கு எப்போதும் ஆறுமுகம் வீட்டிற்கு வந்து விடுவார். “முருகன் பாத்தா தெரியனும்ல அதுனால தான் கோவில் பக்கத்துலையே இருக்கோம்” என்ற அம்மாவின் பேச்சிற்கு ஊம் கொட்டும் வாய் அன்று நேரத்திற்கு வராத அப்பாவை பற்றி கேட்க “இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாரு” என்று மட்டும் சொல்லி வைத்தவளுக்கு கோவிலில் ஆறுமுகம் மயக்கம் போட்டு விட்டார் என்று கூட்டி வந்தனர்.

“ஒன்னும் இல்லடே, வெயிலு” என்று சமாளித்தாலும் அன்றிலிருந்து ஆறுமுகத்திற்கு உடல் ரீதியாக தன் உடம்பில் இருக்கும் குறை என்ன என்ற கேள்வி எழுந்தது. அதன் பிறகு இரண்டு மூன்று முறை மயக்கம் போட்டு இருந்தாலும் அதை யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்தார். வேண்டி உருகி தன் குறை நீக்கச் சொல்லும் லட்சக்கணக்கான பக்தர்களுள் ஆறுமுகமும் அந்த முருகனின் காதிற்கு தன் கஷ்டத்தை சொல்லாமல் இல்லை. எத்தனை முகங்கள் ஆறுமுகத்தை தினமும் கடந்து போகிறது எத்தனை வேண்டுதல்கள். எத்தனை நம்பிக்கைகள். எத்தனை எத்தனை ..எத்தனை.. என்று முருகன் நிரம்பிக் கொண்டிருக்கும்போது ஒரு கட்டத்தில் முருகனிடம் முறையிடுவதை நிறுத்திக் கொண்டார். “என் கவலைய தீக்கத்தான் முருகன் இத்தன பேர என்னத் தாண்டி சாமி பாக்க வைக்குறான்” என்று நினைத்துக் கொள்வார்.

திருச்செந்தூருல செத்தாலும் புண்ணியம் தாண்டே நீ ஏன் ஒலட்டிட்டு இருக்க என்ற சாரதியின் சிரிப்புக்கு “வாழ்க்க சத்துக்கு கொடுக்கலேனாலும் பரவால சோத்துக்கு கொடுக்கனுல” என்பார் ஆறுமுகம். வீட்டிற்கு தெரியாமல் சாரதியுடன் ஒருமுறை  மருத்துவமனை சென்று பார்த்து வந்தார். “ஒன்னும் இல்ல சரியாகிடும் சத்தா சாப்பிட்டு கவலை இல்லாம இருங்க” என்று டாக்டர் சொன்னதாக சாரதி வள்ளியிடம் சொன்னதற்கு அன்று அவள் கண்ட கனவை தன் பங்கிற்கு சாரதிக்கு சொல்லத் தொடங்கினாள்.

“ரெண்டு பேரு கடலுக்குள்ள தெரியாம மாட்டிக்கிட்டாங்க, அல பெருசு பெருசா அடிக்க யாராலயும் கடலுக்குள்ள போய் காப்பாத்த முடில, நேரம் போகப் போக அவங்களோட சத்தமும் கொறஞ்சு போய் தண்ணிக்குள்ள போய்ட்டாங்க. அவங்கள காப்பாத்த முடியாம கடலையே பாத்துட்டு  கரையில நின்னுட்டு இருந்த அவங்க பையன தூக்கிக்கிட்டு வந்து இனிமேல் நான் வளக்க போறேன்னு முருகன் சொன்னான்” என்ற வள்ளி சாரதியின் கை பிடித்து  “அந்த பையன நான் எங்கையோ பாத்துருக்கேன் சாரதி மாமா….”  என்றாள். சின்னப் புள்ள எப்படி வாயடிக்குது பாரு நேத்து டிவில போட்ட செய்திய அப்படியே சொல்றா என்ன முருகன் கனவு காணுதோன்னு அம்மா கிண்டலுக்கு சிறு வயதில் தாய் தந்தையை கடலுக்கு பலி கொடுத்து ஏதும் செய்ய முடியாமல் அதிர்ச்சியோடு  நின்றிருந்த அதே கண்களுடன்.   வள்ளியின் இறுக்கப் பிடியிலிருந்த சாரதியின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.

தரிசன வரிசையில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருக்ககையில் விசிறியுடன் நின்றிருந்த ஆறுமுகத்திற்கு மனதில் உடல் ரீதியான பயம் தொத்திக்கொண்டு “செத்துட்டா.. நம்ம குடும்பம் அடுத்து என்னா பண்ணும்,  நம்ம அவங்களுக்கு என்னத்த சேமுச்சு வச்சுருக்கோம், பொண்டாட்டி வள்ளிய பாத்துப்பா இருந்தாலும்.. இந்த விசிறிய வித்து இன்னும் எத்தனைய சம்பாரிக்க முடியும், நின்னு சம்பாதிக்கிற அளவுக்கு தெம்பு இருந்துருந்தா நான் ஏன் இத வித்துட்டு இருக்க போறேன், சொந்தமா ஒன்னும் இல்லையே” என்று அவருக்குள் பல கேள்விகள் எழும்பி அரட்டிக் கொண்டேயிருந்தது. ஆறுமுகம் கையில் வைத்திருந்த விசிறியை இன்னும் விற்காமல் இருந்த விசிறிகளுடன் கூடைக்குள் போட்டுவிட்டு நடுங்கும் கால்களுடன் கல்திட்டில் அமர்ந்தார். இப்படி ஒரு போதும் இதற்கு முன் ஆறுமுகம் நினைத்தது இல்லை. உடல் அவர் பேச்சை கேட்க நிறுத்தியது முதல்தான் இந்த பிரச்னை ஆரம்பித்தது.

“ஐயா ..விசிறி கொடுங்க” உட்கார்ந்திருந்தவர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை இளைஞனின் வேகத்திற்கு ஈடாக கூடைக்குள் இருந்த விசிறியை எடுத்துக் கொடுத்து கையில் காசை வாங்கிக் கொண்டார். இன்று வீட்டிலிருந்து கிளம்பும்போதே வள்ளி கேட்ட அந்த மூக்குத்தி ஒன்றை வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்ற முனைப்பின் உந்துதல் இதுவரை உலட்டிய அனைத்தையும் எட்டி உதைத்தது.

“ஒன்னு பத்து ரூபா.. ஒன்னு பத்துரூபா..” என்று சத்தமாக விற்கத் தொடங்கியதை சாரதி மகிழ்ச்சியுடன் பார்த்தார்.

எப்பொழுதும் விற்க வேண்டிய, விற்று முடித்,த கணக்கு வழக்குகள் பெரிதும் வைத்துக் கொள்வதில்லை ஆறுமுகம். இன்று இன்னும் எத்தனை இருக்கிறது, எத்தனை விற்றிருக்கிறது, கையில் எவ்வளவு இருக்கிறது,  என்ற நினைப்பும் புதிதாக சேர்ந்திருந்தது. அது என்ன ஏன் பிள்ளைக்கு நான் வாங்கிக் கொடுக்காத மூக்குத்தி என்று இன்னும் சத்தமாக விசிறியை விற்கத் தொடங்கினார்.

கையில் வைத்திருந்த கூடைக்குள்ளிருந்து விசிறிகள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கி வெளிகொண்டு வந்த  மகிழ்ச்சி நீண்ட நேரத்திற்கு இல்லை. மீண்டும் மண்டைக்குள் ஓடிய விசயங்கள் குரல்வளையினை நெருக்கி  வார்த்தைகளை கொன்று கொண்டிருந்தது. கண்கள் மயக்கம் கொள்ளும் அறிகுறியாக உடல் வேர்க்கத் தொடங்கியிருந்ததை  அறிந்து மீண்டும் சாய்வுக்கு தோதான கல்தூனை துணைக்கு  அழைக்க கோவிலை அழகுற செய்யப்  பொருத்தப்பட்டிருந்த இரவுக்கான விளக்குகள் தலையில் இறங்குவது போல இருந்தது. முருகனைப் பார்க்க குறையாதக் கூட்டம் அனாதையாக ஆறுமுகத்தை ஒரு மூலைக்கு தள்ளியிருந்தது.  விற்காமல் மீதியிருந்தவைகள் கவலைகளையும் இன்னும் இன்னும் என்று ஓட வேண்டிய தூரத்தை நினைவுபடுத்தும் விதத்தில் கையில் எவ்வளவு வச்சுருக்க அந்த பணம் பத்துமா மூக்குத்திக்கு என்று எண்ணிப் பார்க்கச் சொல்ல பையில் இருந்த பணத்தை எடுத்து எண்ணத் தொடங்கும் போதே மயக்கம் கண்களை சொருகியது.

உடல் முழுவதும் பரவத் தொடங்கிய வலி ஏனோ அவருக்கு  இன்று நாம் கண்டிப்பாக செத்து விடுவோம் போல தோன்றியது. எப்படியோ மிச்சமிருந்த விசிறிகளை விற்று வள்ளி கேட்டதை வாங்கிக்கொண்டு போய் கொடுக்க வேண்டும் என்கிற வைராக்கியம் இருந்தாலும் நாளைக்கு நாம் இல்லாதபோது வேண்டியதை எதிர்பார்த்து அப்பா இருந்துருந்தா வாங்கி தந்துருப்பாருன்னு ஏமாந்து போகுங்கிற நெனப்பும் எந்திரிக்க விடாமா செய்ய கண்கள் சொருகியது. கண்கள் இருளுக்குள் போக போக அதை தடுத்திர முடியாமல் பிடிகூண்டினை ஒத்திருந்தவைகளை என்னவென்று தெரியாது அதனுள் கேட்பார் யாருமின்றி சுற்றிக் கொண்டிருந்தவரை நோக்கி வந்த காற்றை புயல் என்று தெரியாது அனுபவித்தவருக்கு அது எங்கிருந்து வருகிறது என்று அறிய வேண்டும் அல்லது அது என்னவாக இருக்கும் என்கிற கேள்வி எழுந்து அதன் விசையை நோக்கி அவரால் எவ்வளவு வேகத்தில் செல்ல  முடியுமோ அதை அடைந்திட விரைந்தவருக்கு அப்புயல் பெரிய விசிறியின்  வெளியாய்  உருமாறிக்கொண்டிருப்பதை கவனிக்கத்  தொடங்கி திகைக்க வைக்கும்   அப்புயலின் விசையினை  கொண்டிருக்கும்   பிடியின் நுனி தோகையென நீண்டு ஆறுமுகத்திற்காக  விசிறுவது யாராக இருக்கும் என்று அறிந்திட விளைந்தவரிடமிருந்து விலகிக்கொண்டே இருக்க  ஆடும் மயிலேறி இதுவரை விளையாடிய அம்முகத்தை அறிந்தவராய் கண்கள் கூச்செறிய  “முருகா” என்று படுக்கையிலிருந்து அரண்டு எழ அருகில் ஏதும் அறியாது படுத்திருந்த மகள் முருகனுடன் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தாள் .அவளை மீறி ஆறுமுகத்திற்கு அவள் அணிந்திருந்த மூக்குத்தி கண்களை கவர்ந்தது.

 

 

 

 

கட்டு

ஸிந்துஜா

படுக்கை அறையிலிருந்து வெளியே வந்து கதவைச் சார்த்தி விட்டு மாடிப்படிகளில் இறங்கத் திரும்பிய மாதங்கி ஒரு கணம் உறைந்து போனாள். படிக்கட்டு கீழே முடியும் இடத்திலிருந்து சற்று முன் தள்ளி அவளுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு கோபி நின்றிருந்தான். அவன் அந்த விடிகாலையில் அங்கு நிற்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. எதற்காக இங்கு வந்து நிற்கிறான்? அண்ணனைத் தேடி வந்தானா? அவ்வளவு விடிகாலையில் அதுவும் அண்ணன் இருக்கும் படுக்கை அறையில் சந்திக்கும் வண்ணம் அவசரம் என்ன? அவன் காதில் சற்று முன்னால் எழுந்த ஒலிகள் விழுந்திருக்குமோ? அவன் நின்ற இடத்துக்கும் மாடியில் இருக்கும் படுக்கை அறைக்கும் அதிக தூரமில்லை. இப்போது கூட ஆறு மணி அடிக்கும் கடிகார ஒலி அங்கிருந்து கேட்கிறதே? மாதங்கிக்குத் தான் குறுகிப் போய் நிற்பதாகத் தோன்றும் உணர்விலிருந்து தப்பிக்க முடியவில்லை.

கீழே இறங்கி அவனை நெருங்கியபோது அவனுக்கு அவளது அருகாமை தெரிந்திருக்கும். ஆனாலும் திரும்பாது கோபி கல்லைப் போல நின்றான். இது அவள் மனதில் முளைத்த சந்தேக விதை ஆல மரமாக விரிந்து எழுவதை உறுதிப்படுத்தியது.

“கோபி, விடிகாலேல இங்க நின்னு என்ன செஞ்சுகிட்டு இருக்கே?” என்று அவள் கேட்டாள்.

திரும்பிப் பார்த்த அவனைக் கண்டு அவள் திடுக்கிட்டாள். எப்போதும் புன்னகையில் மலர்ந்து கிடக்கும் அந்த முகம் இப்போது ஏதோ கைபட்டவுடன் தலை குனிந்து விழும் தொட்டாற்சுருங்கி இலை போல சுண்டிக் கிடந்தது. என்ன ஆயிற்று அவனுக்கு?

“ஏன் என்னமோ போல இருக்கே? ஒடம்பு சரியில்லியா?”

“இல்லியே. ஐம் ஆல்ரைட்” என்று சொல்லிக் கொண்டே வாசல் பக்கம் சென்றான். அங்கிருந்து திரும்பிப் பார்த்து “ஒரு வாக்கிங் போயிட்டு வந்திர்ரேன்” என்று வெளியே நடந்தான்.

மாதங்கி இருந்த இடத்தை விட்டு நகராமல் நின்றாள். அவளைப் பார்த்ததும் சிரித்தபடியே “குட் மார்னிங் அண்ணி” என்றும் “காப்பி தரீங்களா?” என்றும் “இன்னிக்கி என்ன டிபன்?” என்றும் அவனிடம் இருந்து வரும் வார்த்தைகள் ஏன் இன்று காணாமல் போய் விட்டன? அவள் நினைத்தது சரிதானா?

அவளுக்கு அவளது கணவன் மேல் கோபம் பீறிட்டது. எல்லாம் அவனால் வந்த வினை. நேற்றிரவு மூன்று முறை ஆன பின்பும் விடிகாலையில் அவள் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது அவளை இழுத்துப் படுக்கையில் தள்ளினான் ராம்பாபு.

“ஐய, என்ன இது? விடுங்க. வெள்ளிக்கிழம. சீக்கிரம் எழுந்து எண்ணெ தேச்சுக் குளிக்கணும்” என்று அவன் பிடியிலிருந்து விலக முயன்றாள்.

“யார் உன்னய எண்ணெ தேச்சுக் குளிக்க வேணாம்னு சொல்றாங்க? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?” என்று சிரித்தபடி அவளைத் தன் மேல் இழுத்து விட்டுக் கொண்டான். “இஸ்ரேல்ல எல்லாம் காலேல நாலு அஞ்சு மணிக்குத்தான் அப்பிடி ஒரு லவ் வருமாம்!’

“அப்ப இந்த ஊர்ல யாரு உங்களக் கலியாணம் பண்ணிக்கச் சொன்னாங்க?”என்று கேட்டாள் வெடுக்கென்று. குரலில் அவளது விருப்பமின்மை சிறிய சாயலுடன் வெளிப்பட்டு விட்டதாக நினைத்தாள். ஆனால் அவன் கண்டு கொள்ளாதவன் போல இன்னும் இறுக்கமாக அவளை அணைத்தான்.

மாதங்கிக்கு எரிச்சல் மண்டியது. வெள்ளிக்கிழமை, எண்ணெய் தேய்த்துக் குளியல் எல்லாம் சாக்குதான். அவனது வேகத்துக்கு ஈடு கொடுக்க அவளால் முடியவில்லை. என்னமோ ஒரு மாதமாக அவளைக் காணாதது போலவும், அப்போதுதான் கண்டது போலவும்… அப்படி ஒரு வெறி. தினமும் இப்படியே நடக்கிறது.

அவள் தன் விருப்பமின்மையைச் செயலால் காண்பிக்க விரும்புபவளைப் போல பலவந்தமாக அவனிடமிருந்து விடுபட்டாள். படுக்கையிலிருந்து எழுந்துதன் உடையைச் சரி செய்து கொண்டாள்.

“நான் சொல்லிகிட்டே இருக்கேன். உனக்கு அவ்வளவு ராங்கியா?” என்று எழுந்து அவள் மீது பாய்ந்தான். சேலை மூடாதிருந்த அவளது இடுப்பில் வேகமாக அவனது கை விழுந்தது. சரியான அடி.

அவள் வலி பொறுக்க மாட்டாமல் “ஐயோ அம்மா !” என்று கத்தி விட்டாள்.

ராம்பாபு அவளைப் பார்க்க விரும்பாதவன் போலப் படுக்கையில் திரும்பிப் படுத்துக் கொண்டான். அவள் தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு அறையைவிட்டு வெளிவந்த போதுதான் கோபி நின்றிருந்ததைக் காண வேண்டியதாயிற்று. அவன் எதற்காக மாடிப்படி அருகில் வந்தான்? யதேச்சையாகவா? இல்லை வேறு காரணம் இருந்ததா? ஆனால் அதைப் பற்றிய விசாரம் தேவையற்றது. வந்தவன் அறிந்து கொண்டிருந்தால் அதுதான் அவளைக் கொல்லும் விஷயமாக இருக்கும். அறிந்து விட்ட முகத்தைத்தான் அவள் பார்த்தது போல அவளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவனும் பழைய மாதிரி அவளை நேருக்கு நேர் பார்க்க முடியாது என்பது போலத்தானே இப்போது வெளியே சென்றான்?

மாதங்கி மனதில் ஏற்பட்ட வலியையும் குமுறலையும் அடக்கிக் கொண்டு தின அலுவல்களில் ஈடுபட முயன்றாள்.

கோபி பார்க்கில் உட்கார்ந்திருந்தான். மனது வெதும்பிக் கிடந்தது. சுற்றிலும் காற்றுடன் சரஸமாடிக் கொண்டிருந்த மரப்பச்சை இலைகளும் செடிகளில் விரிந்திருந்த வண்ணப்பூக்களும் அவனை ஈர்க்கவில்லை. இன்று அதிகாலையில் அவன் எதற்குக் கிணற்றுப் பக்கம் போனான்? போகாமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? ஒரு வாரத்துக்கு முன்னால் வீட்டிலிருந்த சிறிய தோட்டத்தில் போட்டிருந்த ரோஜாப் பதியன் எப்படி இருக்கும் என்று
நினைப்பு வந்து கிணற்றுப் பக்கம் போனான். அதைத் தாண்டித்தான் தோட்டத்துக்குப் போக வேண்டும். செடியில் பச்சை இலைகள் தலை காட்ட ஆரம்பித்திருந்தன. அவன் அருகே வைத்திருந்த உர மூட்டையில் இருந்து ஒரு பிடி உரத்தை அள்ளி வட்டமாகத் தூவினான். பிறகு கிணறு அருகே இருந்த வாளியிலிருந்து நீரை மொண்டு செடியைச் சுற்றி விட்டான். திரும்ப செம்பை வாளியில் போட்டுவிட்டுத் தனது அறைக்குக் கிளம்பும் சமயம்தான் ‘பளார்’ என்ற சத்தமும் “ஐயோ அம்மா!” என்ற அண்ணியின் குரலும் கேட்டன. அவன் பதறிப் போய் மாடிப்படியை நோக்கிப் பாய்ந்தான். இரண்டு படிகள் ஏறியதும் சட்டென்று நின்று விட்டான். இப்போது தீனமான சத்தம் எதுவும் மாடியிலிருந்து வரவில்லை. அவன் தயங்கியபடி படிகளில் இருந்து கீழே இறங்கினான். அண்ணிக்கு என்ன ஆயிற்று என்று மனது படபடத்தது.

அவன் சென்னையிலிருந்து ஆபீஸ் டிரெய்னிங், ஒரு மாதம் தங்க வேண்டும் என்று பெங்களூருக்கு வந்தான். அப்போதுதான் அவனுக்கு ஒன்று விட்ட அண்ணனான ராம்பாபு அவனைத் தன்னுடன் வந்து தங்கச் சொன்னான். ‘இங்க வீடு வசதியா இருக்குறப்போ எதுக்கு வெளீல தங்கிகிட்டு ஓட்டல்ல சாப்பிட்டு வயித்தைக் கெடுத்துகிட்டு’ என்று சத்தம் போட்டான். மாதங்கியும் கோபிக்கு
தூரத்து உறவுதான். கணவனும் மனைவியுமாக வற்புறுத்தியதால் அவன் வந்தான். எல்லாம் நல்லபடியாகப் போய்க் கொண்டிருந்தது. சற்று முன்பு வரை.

மாதங்கி கீழே விழுந்தோ, கட்டில் அல்லது நாற்காலியில் இடித்துக் கொண்டோ அம்மாதிரி கத்தவில்லை என்று அவனுக்குத் தெரிந்திருந்தது. அவள் எழுப்பிய சத்தத்திற்கு முன்பு காதில் விழுந்த ‘பளாரெ’ன்ற சத்தம் ராம்பாபு அவள் மீது கை வைத்தான் என்று அவனுக்குத் தெரிவித்து விட்டது. புருஷன் மனைவிக்குள் மனக்கசப்பு ஏற்படுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அது அதிகாலையில் கூட நிகழலாம். ஆனால் ஒரு பெண்ணை, அவள் மனைவியாய் இருந்தாலும் கூட அடிப்பது என்பதை அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் ராம்பாபுவிடம் ஒருவித கெட்ட குணமும் கிடையாது என்று எல்லா உறவினர்களும் வாய்க்கு வாய்
சொல்லுவார்கள். இப்போதுதான் முன்கோபம் உண்டென்று தெரிகிறது. முன்கோபம் இருந்தாலும் கூட மனைவியை அடிப்பது என்பது…

கோபி தலையை உலுக்கிக் கொண்டான். அவ்வளவு கோபம் வருமளவுக்கு அண்ணி என்ன செய்தாள்? அவர்கள் இருவருக்குள் அவள்தான் கெட்டிக்காரத்தனம், பொறுப்பு, இனிமை என்று சற்று ஓங்கி நிற்பவள். ஆனால் ராம்பாபு இதற்காக நெஞ்சை நிமிர்த்திக் கொள்பவனே தவிர மற்ற கணவன்மார்களைப் போல் அசூயையில் சுருங்குபவனல்ல என்று கோபி அறிந்திருந்தான்.

சற்று முன்பே அண்ணி அவனைப் பார்த்த போது அவளிடம் அவன் கேட்டிருக்கலாம் – ஏதேனும் அடிகிடி பட்டுவிட்டதா அவளுக்கு, ஏன் அவள் அலறினாள் என்றெல்லாம். ஆனால் அண்ணியின் முகத்தைப் பார்த்த கணத்தில் வாய்க்கு வருமுன்பே வார்த்தைகள் தொண்டைக்கு வந்து அங்கேயே அடைத்துக் கொண்டு நின்று விட்டன. வழக்கமாக அவனைப் பார்த்ததும் அவள் முகத்தில் மலரும் புன்னகைக்கு என்ன நேர்ந்து விட்டது? அவள் முகத்தில் கலவரத்தின் நிழல் படிந்திருந்தது போலத் தோன்றியது அவனது பிரமையா? அவள் குரலும் கூடச் சரியாக இல்லை.

கோபி வீட்டுக்குள் வருவதைப் பார்த்து மாதங்கி கடிகாரத்தை நோக்கினாள். மணி பத்து.

“ஏன் இன்னிக்கி டிரெய்னிங் க்ளாஸ் போகலியா?” என்று அவனைப் பார்த்துக் கேட்டாள். அவள் குரல் இயல்பாக இருந்தது.

“இல்ல. இன்னிக்கி மத்தியானம்தான் போகணும்” என்றான் அவன்.

“சரி, டிபன் சாப்பிட வா. டெய்லி எட்டரை மணிக்கு சாப்பிட்டுருவே. அப்போலேந்து எங்க போயிட்டேன்னு கவலையா இருந்திச்சு” என்றாள் மாதங்கி.

“இல்ல. நான் டிபன் சாப்பிட்டு விட்டேன்” என்றான் அவன்.

“என்னது? இது என்ன புதுசா இருக்கு!” என்றாள் மாதங்கி.

அவன் அவள் கண்களை நோக்காமல் தலையைக் கீழே கவிழ்த்தவாறு “இல்ல. வழில ஒரு பிரெண்டைப் பார்த்தேன். ரெண்டு பேரும் போய் ஓட்டல்ல சாப்பிட்டோம். அதான் இவ்வளவு நேரம் ஆயிருச்சு வீட்டுக்கு வரதுக்கு” என்றான்.

“அட, கூப்பிட்டிருந்தா நானும் வந்திருப்பேனே!” என்றாள் மாதங்கி. அவள் சமையல் அறையிலிருந்து எடுத்து வந்த இட்டிலிகளை ஒரு தட்டில் போட்டு மேஜை மீது வைத்தாள்.

அவள் குரலின் உஷ்ணம் கேட்டு அவன் தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தான்.

“பொய் சொல்றதுக்கு எல்லாம் தனி திறமை வேணும் சார்” என்றாள். தட்டில்சட்டினியையும் சாம்பாரையும் போட்டாள்

அவன் பேசாமல் சாப்பிடத் துவங்கினான்.

“காலேல என்ன நடந்திச்சின்னு உனக்குத் தெரியும்?” என்று மாதங்கி கேட்டாள்.

அவன் கிணற்றுப் பக்கம் வந்த காரணத்தையும், மாடியிலிருந்து கேட்ட ஒலிகளைப் பற்றியும் அவளிடம் சொன்னான். சில சமயங்களில் அவள் முகம் சிறுத்து மீண்டும் பழைய நிலைக்குச் சென்றது.

“அதுக்கு எதுக்கு வீட்டுல சாப்பிடமாட்டேன்னு அடம் பிடிக்கிறே?” என்று அவள் கேட்டாள்.

“அண்ணன் உங்களை அடிச்சாருல்ல?” என்று அவள் முகத்தைப் பார்த்துக் கேட்டான்.

மாதங்கி அவனை உற்றுப் பார்த்தாள்.

“நான் இல்லேன்னு உன்கிட்ட பொய் சொல்லப் பிரியப்படல” என்றாள்.

“நீங்க வலி பொறுக்க முடியாம அப்பிடி கத்தற அளவுக்கு என்ன தப்பு பண்ணீங்கன்னு அவரு அடிச்சாரு?” என்று கோபத்துடன் கேட்டான். “பொம்பளைப் பிள்ளைக மேல கை வைக்கிறவன்லாம் ஆம்பிளைன்னு நான் எப்பவுமே நினச்சதில்லே.”

அவள் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள். அவனுக்கு ராம்பாபு மீது மிகுந்த பிரியம் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் இப்போது யாரோ மூன்றாம் மனிதன் மீது காறி உமிழுவது போல அவன் பேசுவது உண்மையில் ராம்பாபு மேலேதான்.

“நீ இப்பிடியெல்லாம் உங்க அண்ணன் கிட்ட பேச முடியாது” என்றாள் மாதங்கி.

“நீங்க என்ன காரணம்னு சொன்னா நான் அண்ணன் கிட்ட எப்படிப் பேசணும்னு முடிவு பண்ணிக்குவேன்” என்றான் கோபி.

அவள் திகைத்தாள். எதுவும் பேசாது நின்றாள்.

“சரி விடுங்க. அது எங்க குடும்பப் பிரச்சினை, நீ தலையிடாதேன்னா நான் சொல்ல என்ன இருக்கு? நான் இந்த மாதிரி கோபப்படறது கூட சரியில்ல. கூப்பிட்டு உக்கார வச்சு சோறு போட்டு காப்பாத்துறீங்க. ஐ ஷுட் நோ மை லிமிட்ஸ்” என்றான்.

“என்ன சொல்றே? உன்னைய கீழ கிடக்கிறவன் மாதிரி நான் பாக்கிறேன்னா?” என்று கேட்டாள்.

அவன் சாப்பிடுவதை நிறுத்தி விட்டான்.

“அண்ணி, இப்பிடியெல்லாம் என்னைப் போட்டுக் கொல்லாதீங்க” என்றான் நடுங்கும் குரலில்.

“நான் காரணத்தைச் சொன்னா நீ இன்னும் வருத்தப்படுவியேன்னுதான்” என்றாள் மாதங்கி வருத்தம் தொனிக்கும் குரலில்.

அவர்கள் இருவரும் சற்று நேரம் பேசாமல் இருந்தார்கள். சுவரில் இருந்து பல்லி கொட்டும் சத்தம் கேட்டது. சாதாரணமாக இருந்தால் சத்தம் வரும் திசை பார்த்து நல்ல சகுனமா அல்லது கெட்டதா என்று அவனுடைய அம்மா சொல்லுவாள். இப்போது கெட்ட திசையில் இருந்து கொண்டுதான் சத்தம் வருகிறது என்று கோபி நினைத்தான்.

எழுந்து தட்டைக் கையில் எடுத்துக் கொண்டு போய்க் குழாயில் கழுவி உள்ளே வைத்து விட்டு வந்தான். டைனிங் டேபிளைச் சுற்றிப் போட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றில் மாதங்கி உட்கார்ந்திருந்தாள். அவள் முகமும் கவலையில் தோய்ந்து களை இழந்திருந்தது.

அவன் மாதங்கிக்கு எதிரே வந்து உட்கார்ந்தான். அவளிடம் ஒன்றும் சொல்ல வேண்டாம் என்று சொல்லி விடலாமா என்று நினைத்தான். ஒரு வேளை அவளே ஒன்றும் சொல்லாமல் சற்றுக் கழித்து எழுந்து போகக் கூடும். அப்படிப் போனால் இதற்கு ஒரு முடிவு கட்டியாயிற்று என்று அவனும் நிம்மதியாய் இருக்கலாம். அவளும்.

“இது ஒரு மாசமா நடந்துகிட்டு இருக்கு. யாருட்டயும் போயி சொல்லற விஷயமா இல்லியே? அப்பா அம்மா அக்கான்னு போயி அழுதுட்டு நிக்கற காரியமா என்ன? வெட்கக்கேடுன்னு உள்ளுக்குள்ள புதைச்சு வச்சு தனியா சாகற விஷமால்ல இருக்கு? இல்லே அப்பிடியே யாரு கிட்டயானும் போயி கால்ல விழுந்து என்னயக் காப்பாத்துங்கன்னு சொல்லிட முடியுமா?” என்று கேட்டாள் மாதங்கி.

அவை தன்னிடமிருந்து பதில்களை எதிர்பார்த்து இறைக்கப்பட்டவை அல்ல என்று கோபி நினைத்தான். அவளுடைய ஆற்றாமையை வெளிப்படையாகச் சொல்ல முடியாத கூச்சத்தில் வார்த்தைகள் வந்து விழுகின்றன. ஆனால் குரலில்தான் என்ன ஒரு சோகம்? அவளது வார்த்தைகளின் மூலம் கிடைக்கும் சித்திரம், ஜன்னலின் மீது படர்ந்திருக்கும் புழுதியின் மேல் மழை தூறி விட்டுப் போன பின் காணக் கிடைக்கும் கலைந்த கோடுகளால் ஆனது போல. இருக்கிறது. சொல்லியதில் புரிந்தது கொஞ்சமாகவும், புரியாதாது அதிகமாகவும் என்பது போல அவன் உணர்ந்தான்.

அவள் தொடர்ந்தாள்.

“இது திடீர்னு வந்த கோளாறுதான். எதையாவது படிச்சிட்டு வந்து கெடுத்துக்கிட்ட மனசா? எவனாவது சினேகம்னு உருப்படாதது வந்து உளறிக் கொடுத்த முட்டாள்தனமா? கச்சடாவா சினிமான்னு எதாவது அசிங்கத்தைப் பாத்து புழு பூச்சியா ஆயிடணும்னு வேண்டுதலா? ஒண்ணும் புரியலையே. ராத்திரி பகல்னு வித்தியாசம் கிடையாதா? நீ ஊர்லேந்து இங்க வந்தது நல்லதா ஆச்சுன்னு மனசு ஓரத்துல துளி சந்தோஷம் இருந்திச்சுன். ஆனா போன ஞாயத்திக்கிழம நீ உன் பிரெண்டோட மாட்டினி ஷோ போறேன்னு சொன்னதும் உங்க அண்ணனுக்கு வந்த கிளுகிளுப்ப நீ பாத்தேல்ல?”

கோபி அந்தத் தினத்தை நினைவு கூற முயன்றான். ஆமாம். அண்ணன் அவனைப் போயிட்டு வா என்று சொல்லி செலவுக்குப் பணம் வேணுமான்னுகேட்டது ஞாபகத்துக்கு வந்தது. அண்ணி சொல்வது போல குரலில் உற்சாகம்எகிறியதாக இப்போது நினைத்துப் பார்க்கும் போது தெரிகிறது. அடக்கண்ணராவி !

“உன்கிட்டயும் இதையெல்லாம் நான் சொல்லக் கூடாது. ஆனா நீ என்கிட்டே கேட்ட மாதிரி உங்க அண்ணன் கிட்ட கேக்கப் போயிட்டேன்னா? மொதல்ல அவருக்கு கோபம் மண்டிக்கிட்டு வரும். நீ யார்ரா இதெல்லாம் பேசன்னு உனக்கு வாசலைக் காமிச்சா?”

“காமிச்சா ஒடனே போயிட வேண்டியதுதான்” என்றான் கோபி.

“ஆனா அதோட எல்லாம் நின்னு போயிடுமா? ‘நீதாண்டி அவன் கிட்ட போயி அழுதிருக்கணும்’னு என் மேலே பாஞ்சா? என் வார்த்தைக்கு அவர் வார்த்தைதான் கேள்வியும் பதிலும் ஆனா உண்மை என்னங்கறது நம்பிக்கை வச்சு செய்யற காரியம் ஆச்சே. உன்கிட்ட தன்னோட மரியாதை கெட்டுப் போச்சுங்கிற கோபம் கண்ணை மறச்சிட்டா உண்மைய எங்க போய் திரையை விலக்கிக் காட்டுறது?”

“அப்ப இப்பிடியே சும்மா விட்டிற வேண்டியதுதானா? நீங்க அடியையும் வாங்கிகிட்டு, வாய மூடிக்கிட்டு வீட்டு வேலை செஞ்சிட்டு இருக்கணுமா?”

“சரி. நீ போய்யான்னு விட்டு விலகிப் போயிரலாம். ஆனா அதுக்கு அப்புறம் எங்கப்பா அம்மாவைத்தான் நான் போய் நொறுக்கணும். அப்படியே நொறுங்கிப் போகாட்டாலும் அவுங்க எவ்வளவு காலத்துக்கு என்னை வச்சுக் காப்பாத்துவாங்க? அவங்க எனக்குக் கலியாணம் செஞ்சு அனுப்பி வச்சதே இந்த சுமைய இறக்கி வைக்கத்தானே? அவங்களை விடு நம்ம உறவு ஜனத்துக்கு தெரியும் போது ஊரு உலகத்துல நடக்காததா இப்ப நடந்திருச்சுன்னு வழிச்சுகிட்டு சிரிப்பாங்க. இல்லே நமக்கு எதுக்கு வம்புன்னு ஒதுங்கி நிப்பாங்க. படிச்சிருந்தாலும் வேலைக்கு போயி சொந்தக் கால்னு நிக்கலாம். அதுவும் இல்லாம போச்சு. வேணும்னா பத்துபாத்திரம் தேய்க்கலாம். இல்லே சமையக்காரியாப் போய் வேலை பார்க்கலாம்…” என்றாள்.

அவள் சொல்வதைக் கற்பனை செய்து பார்க்க கோபிக்கு நடுக்கமாக இருந்தது!

“கதப் புஸ்தகத்துல வர்ற பொண்ணா இருந்தா கொடி பிடிச்சுகிட்டு எதிர்த்துப் போராடறான்னு எழுதிரலாம். சினிமாலேன்னா அவ அவனுக்கு திருப்பி செஞ்சு பழி வாங்கினான்னு இன்னொரு ஆம்பிளையோட வாழ வச்சிரலாம். ஆனா குடும்பம் ஊரு உறவுன்னு நடைமுறைல கட்டிப் போட்டு வச்சிருக்கிற ஜென்மமா இருந்தா மறுகிக்கிட்டே கிடக்க வேண்டியதுதான். என்னாலயும்
இதுக்கு எதுவும் பண்ண முடியாது. உன்னாலயுந்தான்” என்றாள்.

தெளிவு

ராதாகிருஷ்ணன்

இன்று சனிக்கிழமை, எல்லா பிள்ளைகளுக்கும் விடுமுறை நாள், ஆனால் ராஜுவுக்கு மட்டும் வேலை நாள், அவன் அப்பா விடுமுறை நாட்களில் அவனை workshop இழுத்துக் கொண்டு போய் விடுவார், அப்பாவிற்கு வேலை என்பது டிங்கர் என சொல்லப்படும் வாகனங்களில் இரும்பு சார்ந்த பகுதிகளை சரிசெய்யும், அதாவது அடிப்பட்டால் அதை ஒடுக்கு நீக்கி மீண்டும் பழைய வடிவம் கொண்டு வரும் வேலை, உடைந்த பகுதிகளை கேஸ் வெல்டிங் பயன்படுத்தி ஒட்ட வைக்கும் வேலை, மொத்தக்காக வாகனங்களில் கட்டமைப்புகளில் வரும் பழுதுகளை சரிசெய்யும் பணி என்று சொல்லலாம்.

ராஜுவின் அப்பா லாரி டிங்கர், லாரிகளில் மட்டுமே பார்க்கும் அனுபவம் கொண்டவர், ஒன்று இரண்டல்ல, இருபத்தைந்து வருட பணி அனுபவம் கொண்டவர். அவர் பணிபுரியும் இந்த லாரி பேட்டைக்கு 10 வயதில் அண்ணனுக்கு துணையாக வந்து சேர்ந்தவர், அன்றிலிருந்து இப்போது வரை இங்குதான் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு அண்ணனிடம் சம்பளம் சேர்த்தி கேட்கவும் அவர் தனியாக நீயே வெளியே போய் ஆரம்பித்துக் கொள் என்று சொல்லி கழட்டி விட பிறகு கிருஷ்ணன் அண்ணன் மெக்கானிக் ஷாப்பில் கொஞ்சம் இடம் பிடித்து அமர்ந்தவர், இப்போதுவரை தொடர்கிறார், ஹெல்ப்ர் வேலைக்கு ஆட்கள் வைத்து கொண்டால் சம்பளம் கொடுத்து சமாளிக்க முடியாது என்பதால் அவரே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்வார், அதனாலேயே விடுமுறை நாட்களில் ராஜுவை உடனழைத்து கொள்கிறார், சிலசமயம் அப்பா மதிய உணவிற்கு சாயங்காலம் வந்து அப்படியே ராஜுவையும் அழைத்து கொண்டு போய் விடுவார். இன்றும் அவ்வாறுதான் அழைத்து செல்ல காத்திருந்தார்.

ராஜுவுக்கு அப்பாவுடன் போவது என்பது பிடிக்கும் பிடிக்காது இரண்டும் சேர்ந்துதான். அவனுக்கு பெரிதாக எல்லாம் வேலை இருக்காது, ஸ்பானர் எடுத்து தருவது, வெல்டிங் செய்ய கம்பி எடுத்து தருவது, கடைக்கு போய் டீ வாங்கி வருவது மாதிரியான சில்லறை வேலைகள்தான், சிலசமயம் மட்டும் ஏதாவது அசையாமல் இருப்பதற்காகவோ, தாங்கி பிடிப்பதற்காகவோ பிடிக்க சொல்வார், வெல்டிங் சமயத்தில் ஆடாமல் இருக்க வேண்டும், ஆடினால் வெல்டிங் சரியாக வைக்க முடியாது. இது போன்றவைகள் மட்டுமே ராஜுக்கு வேலைகள், எப்போதாவது அப்பா ராஜுவை வெல்டிங் நாசில் கொடுத்து வெல்டிங் வைத்து பழக கொடுப்பார், அப்படி கொடுத்து கொடுத்து ஓரளவு வெல்டிங் வைக்கவும் ராஜு கற்று கொண்டான்.

ராஜு பரத்தம் பிடித்தவன், பார்த்த எல்லாமே வாங்கி சாப்பிட வேண்டும் அவனுக்கு, அப்பாவுடன் வரும்போது கேட்டதல்லாம் கிடைக்கும், இப்போது 8 வகுப்பு வந்துவிட்டதால் கொஞ்சம் கேட்கும் விரும்பும் விஷயங்கள் குறைவாகி விட்டன, இளநி பார்த்தான், அப்பாவிடம் அப்போது பணம் இருந்தால் அடம் பிடித்து வாங்கி விடுவான், டீ சமயங்களில் இரண்டு போண்டாக்கள் அவன் வாய்க்குள் போய் விடும். வெங்காய போண்டா, உருளை கிழங்கு போண்டா இரண்டிலும் ஒன்றை தூக்கி விடுவான். பிறகு பரோட்டா அப்பா பணம் ஏதும் வசூல் வந்தால் வாங்கி தருவார், கூட ஆம்லெட்டும். இதெல்லாம் நல்ல விஷயங்கள் தான். ராஜுவுக்கு கெட்ட விஷயங்களும் கூட கிடைக்கும், எதாவது கஸ்டமர் கூட சண்டை என்றால், கஸ்டமரிடம் காட்ட வேண்டிய கோபத்தை அவனிடம் காட்டுவார், சாங்காலம் போவதற்குள் எப்படியாவது ஒன்றிரண்டு அடி விழுந்து விடும். இனிமேல் வரவே கூடாது, கூப்பிட்டால் வீட்டை விட்டு ஓடி விட வேண்டும் என்று திட்டமெல்லாம் போடுவான், ஆனால் அது எல்லாம் கொஞ்ச நேரம்தான், அப்பா கோபம் மறைந்ததும் டீ கடைக்கு கூட்டி போய் போனதும் ராஜு எல்லாவற்றையும் மறந்து விடுவான். ராஜுக்கு அப்பாவிடம் பிடிக்காத குணங்கள் சில இருந்தது, அதில் ஒன்று அப்பா வேலைக்கான பணத்தை மிக அதிகமாக சொல்வது, அப்பா கேட்கும் தொகை அதிகமானது என்று எண்ணுவான், அப்பா இந்த விஷயத்தில் ஏமாற்றுகாரர் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது. இன்று அதில் ஒரு இடி விழுந்தது அவனுக்கு.

வழக்கம் போல நான் வரவில்லை என்று காலையில் அப்பாவிடம் போராடினான், அம்மாவிடமும் சென்று கெஞ்சினான், அவனுக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும், தெரு பிள்ளைகள் எல்லாம் பிளாஸ்டிக் பந்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும் போது அவன் மட்டும் அப்பாவுடன் சென்று கொண்டிருப்பான். அப்பாவுடன் கூட சென்று கொண்டிருப்பதை இவனது தெரு நண்பர்கள் அணிவகுப்பு நடை என்று கிண்டல் செய்வார்கள், வீட்டின் தெரு முடியும் வரை அவனுக்கு விளையாட முடியாத ஏக்கத்துடன் இருப்பான், தெரு தாண்டி விட்டால் பிறகு பார்க்கும் விஷயங்களில் அவன் கவனம் போய் விடும், ஒவ்வொன்றும் என்ன என்ன என்று கேட்டு அப்பாவை கொன்று எடுப்பான். இன்றும் அப்படியே கேட்டபடி வேடிக்கை பார்த்தபடி லாரி பேட்டை நோக்கி அப்பாவுடன் சென்று கொண்டிருந்தான்.

லாரி பேட்டையை லாரி தொழுவம் என்று சொல்லலாம், எப்படியும் நூறு லாரிகளுக்கு மேல் இருக்கும், அதிகமும் தமிழ்நாடு, கேரளா ரெஜிஸ்டரேசன் லாரிகள், மிக சிலவை மட்டும் வேறு மாநிலங்களாக இருக்கும். லாரி புக்கிங் ஆபிஸ்கள் இங்கு மிகுதி, அதனால் உருவான இடம் இது, கூடவே லாரி பழுது பார்க்கும் workshop களும் ஏகப்பட்டது இருந்தன, வரிசையாக இருபுறமும் workshop ம் புக்கிங் ஆபிஸ்களும் மாறி மாறி இருக்கும், ஆனால் எதுவும் சாலையின் மையத்தில் இருந்து பார்த்தால் தெரியாது லாரிகள் மறித்து மறித்து நின்றியிருக்கும், வண்டி ரிவெர்ஸ் எடுக்க லாரி பின்னால் நின்று லாரி கிளீனர் போடும் சத்தம் எப்போதும் கேட்டு கொண்டிருக்கும். கிளீனரை கிளி என்றும் விளிக்கும் வழக்கம் இங்கு உண்டு.

ராஜு அப்பாவுடன் கூட நடந்து கொண்டே வண்டியின் முகப்பின் மேலிருக்கும் பெயர்ப்பலகையில் இருக்கும் ஒவ்வொரு பெயரையும் படித்து கொண்டு வருவான், சரியா என்று அப்பாவிடம் கேட்டு சரி செய்து கொள்வான், அப்பா பள்ளிக்கு 3வரைதான் போயிருக்கிறார் என்றாலும் அவருக்கு தமிழ், மழையாளம், ஆங்கிலம் எழுத படிக்க வரும், அப்பா எப்படி இதை கற்று கொண்டார் என்ற ஆச்சிரியம் ராஜுவுக்கு எப்போதும் உண்டு.

நடந்து இருவரும் அவர்களின் workshop வந்து சேர்ந்தனர், அப்பா டூல்ஸ் பெட்டியை நீக்கி ஊதுபத்தி பற்ற வைத்தார், அது சந்தன நிற கெட்டியான ஊதுபத்திகள், நின்று எரியும், அந்த வாசம் ராஜுவுக்கு பிடிக்கும், அப்பா வெல்டிங் கேஸ் உருளை செட்டை நகர்த்தி முன்னே எல்லோரும் பார்க்கும் படியாக வைத்தார், எப்போதும் யாராவது காத்திருப்பார்கள், இன்று கஸ்டமர் யாரும் அப்படி காணாததால் அப்பா முகத்தில் கொஞ்சம் கவலை தெரிந்தது. அப்பா அருகில் இருந்த லாரி பெயிண்ட்ர் அருகில் போய் அமர்ந்து அவரோட பேச ஆரம்பித்து விட்டார், ராஜுவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பிறகு அவனும் பெயிண்ட்ர் அருகில் போய் நின்று அவர் பெயர்ப்பலகை வரைந்து கொண்டிருந்ததை பார்த்தான். மயில் என பாதி எழுதி இருந்தார் ஆங்கிலத்தில், அடுத்து வாகனம் என்று வரும் என்று ராஜு அறிவான், ஏனெனில் இந்த workshop ல் வரும் பாதி லாரிகள் மயில்வாகனம் டிரான்ஸ்போர்ட்டுடையதுதான்.

கொஞ்சம் நேரம் போயிருக்கும், பனியன் போட்டு லுங்கி கட்டி சீவாத தலை கொண்ட ஒரு இளைஞன் வந்தான், டிங்கர் யாரு என்று அங்கிருந்த மெக்கானிக் கோபால் அண்ணனிடம் கேட்டான், கோபால் அண்ணன் திரும்பி அப்பாவை கைகாட்டும் முன்னரே அவர் அங்கு வந்து நின்று விட்டிருந்தார். அப்பா ” என்ன” என்று கேட்டார். அந்த இளைஞன் “சைலன்சர் கட்டாகிடுச்சு, வாங்க ” என்றான். அப்பாவும் அவனும் முன்னே நடந்தார்கள், அவர்களோடு ராஜு ஓடிப்போய் சேர்ந்து கொண்டான்.

10 வண்டிகள் காட்டிய லாரி நின்றிருந்தது, அவன் கிளீனர், அங்கே டிரைவர் காக்கி சட்டை போட்டு லுங்கி கட்டி கொண்டு நின்றிருந்தார். அப்பாவை பார்த்ததும் “குட்டப்ப அண்ணா, சைலன்சர் கட்டாகிடுச்சு, வண்டி புக்கிங் ஆகிடுச்சு, சீக்கிரம் கிளம்பனும், கொஞ்சம் சீக்கிரம் ரெடி பண்ணி கொடுங்க” என்றான். அப்பா பெயரை டிரைவர் சொன்னபோது ராஜு ஆச்சிரியப்படவில்லை, ஒருமுறை கேரளாவில் ஒரு கல்யாணத்திற்காக அம்மா, அப்பா, அவன், அக்கா எல்லாம் சாலையில் சென்றிருந்தபோது, அந்த சாலையில் சென்று கொண்டிருந்த லாரி இவர்களை தாண்டியதும் நின்று, அப்பாவை பெயர் சொல்லி டிரைவர் அழைத்து பேசி மகிழ்ந்தான், கோவை வழியாக செல்லும் எந்த லாரியும் உக்கடம் லாரி பேட்டை வரும் நீண்ட நாள் டிரைவராக இருந்தால் அப்பாவை அந்த டிரைவருக்கு தெரிய நிறைய வாய்ப்பிருக்கிறது. இதெல்லாம் உணர்ந்த ராஜுக்கு அப்பாவை தெரிந்த நபர்கள் லாரி பேட்டையில் பார்க்கும் சூழல் என்பது சாதாரண விஷயமாகதான் இருந்தது.

அப்பா குனிந்து லாரிக்கு அடியில் போய் பார்த்தார், சைலன்சரின் உடைந்த பகுதியை தட்டி பார்த்தார், பிறகு வெளியே வந்தார், ” பெருசா கட் ஆகி இருக்கு, பீஸ் வைக்கணும் 400 ரூபா ஆகும்” என்றார். டிரைவர் ”இது ஜாஸ்தி 200 ரூபாவே அதிகம்” என்றான், அப்பா “இப்ப கேஸ், கார்பைடு என்ன விலை விக்குது னு தெரியுமா, நல்லா பண்ணித்தரேன், 400 கொடுத்துடுங்க” என்றார். டிரைவர் “குட்டபண்ணா, 300 ரூபா தரேன், சீக்கிரம் முடிச்சு கொடுங்க” என்றான். அப்பா “சரி, முதல் போணி 350 கொடுத்துடுங்க” என்றார். டிரைவர் “சரி சீக்கிரம் பண்ணுங்க” என்றார். அப்பா உற்சாகமாக வெல்டிங் gas உருளை செட்டை எடுத்து கொண்டு வர போனார். ராஜுவுக்கு அப்பா கேட்ட தொகை அதிகம் என்று தோன்றியது, 20 நிமிடத்தில் முடியும் வேலைக்கு இவ்வளவு கேட்பது அதிகம் என்று நினைத்தான்,100-150 ரூபாய் தான் சரியான தொகை என்று எண்ணினான், ஆனால் அதெல்லாம் மறைந்து அப்பாவிற்கு பணம் கிடைக்க போகும் சந்தோசம் அவனுக்குள் தொற்றி கொண்டு அவனும் உற்சாகமானான்.

இருவரும் வெல்டிங் சாதனங்களை நகர்த்தி கொண்டு லாரி பக்கம் வந்தார்கள், அப்பா வெல்டிங் சிலிண்டர், கார்பைடு போடும் டேங்க் எல்லாம் சேர்த்து ஒரு பலகை தொட்டியில் வைத்து அதன் கீழ் நான்கு இரும்பு உருளையும் மாட்டி இருந்தார், எங்கு வேண்டுமானாலும் தள்ளி கொண்டு போக முடியும்.

வண்டி பக்கம் வந்தவுடன் வேகமாக நாசிலை பிரித்து சைலன்சரின் உடைந்த பகுதி பக்கம் கொண்டு சென்றார், அந்த நாசில் சிலிண்டர் உருளை மற்றும் கார்பைடு டேங்க் உடன் ரப்பர் குழாய் வழியாக இணைக்கப்பட்டிருந்தது, நாசில் தேவைக்கேற்ப டூல்ஸ் வெளியிடும் கருவி அப்படி வெளிவரும் gas உயர் அழுத்த தீயாக ஆகி வெல்டிங் அடிக்க வெல்டிங் கம்பியை உருக்கி கொடுக்கும், கூடவே வெல்டிங் பகுதியை வெப்பமாக்கும், அப்படி வெப்பமாக்கப்பட்ட பகுதியில் உருகிய கம்பி இரும்பு படர்ந்து உடைந்த அல்லது இணைக்க வேண்டிய பகுதியை இணைக்கும். வரிசையாக போட்டு வைத்து வருவது போல இப்படி இணைத்து கொண்டு இணைக்க வேண்டிய பகுதியை இணைப்பார்கள், வெல்டிங் முடிந்த பிறகு அந்த அந்த இடத்தில் இரயில் பூச்சி ஒட்டிக்கொண்டிருப்பதை போல இணைப்பு பகுதியில் வெல்டிங் இருக்கும்.

அப்படி இணைக்க லாரிக்கு அடியில் போனார், நாசிலை தீப்பெட்டி திறந்து பற்ற வைத்தார், அதற்கு முன்பே, லாரிக்கு அடியில் போகும் முன்பே gas சிலிண்டரை திறந்து தேவையாக gas நாசிலுக்கு வர திறந்து வைத்திருந்தார். சரியாக நாசில் பற்றிக் கொள்ளவில்லை போல, வெளியே வந்தார், கார்பைடு டேங்க்கை  ஆட்டிப் பார்த்தார், பிறகு தன்னையே நொந்து கொண்டவர் போல முகம் வைத்து கொண்டு, “கார்பைடு முடிந்துச்சு” என்றார், பிறகு ட்ரைவரை நோக்கி “கார்பைடு கல்லு மட்டும் வாங்கிட்டு வந்துடறேன், ஒரு 200 கொடுங்க” என்றார். ட்ரைவரின் முகத்தில் கோபம் தெரிந்தது “கார்பைடு கூட வாங்கி வைக்காம என்னத்த தொழில் பண்றீங்க” என்று கடிந்தான், பிறகு புலம்பியவாறே பாக்கெட்டில் கையை விட்டு 100 ரூபாய் நோட்டு இரண்டு எடுத்து கொடுத்தார், அப்பா ஆர்வமாக வாங்கி ராஜுவை நோக்கி “இங்கயே இருடா, இப்ப வந்துடறேன் ” என்றார்.

ராஜுவுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது, கார்பைடு டூல்ஸ் பெட்டிக்குள் அப்பா எப்போதுமே குறைந்தது 2 கிலோ வைத்திருப்பார், இன்றும் பெட்டிக்குள் இருந்ததை அவன் பார்த்தான், அப்பா ஏன் இப்படி பொய் சொல்கிறார் என்று உள்ளுக்குள் பொருமினான், ஏன் இவ்வளவு பணத்திற்கு பறக்கிறார் என்று கோபம் கொண்டான். இந்த அங்கலாய்ப்பு அப்பாவுக்குள் எப்போது வடிந்து தொலையுமோ என்று நொந்து கொண்டான், அப்பாவை மிக மோசமான நபராக எண்ணினான். அப்பா 10 நிமிடத்தில் கார்பைடு பொட்டணமோடு வந்தார், அவசர அவசரமாக கார்பைடு மாற்றினார், பிறகு வண்டிக்கு அடியில் போனார், நாசில் அழுத்த நீலநிற தீயை வேகமாக தந்து கொண்டிருந்தது, அப்பா வெல்டிங் செய்யும்போது அவர் மனம் முழுதும் அதிலேயே இருக்கும், அவருக்கு வெல்டிங் வைப்பது ஒருவகை தியானம் போல, முடித்து கொண்டு வெளியே வந்தார், நாசில் இருந்த ரப்பர் குழாயை சுற்றி கார்பைடு டேங்க் மீது வைத்தார், பிறகு டிரைவரை பார்த்தார், “முடிஞ்சது” என்றார். டிரைவர் “குட்டப்பண்ணா, பில்லு கொடுங்க, டிரைவர் நம்ப மாட்டாரு இவ்வளவு பணம் ஆச்சுன்னு” என்றான், அப்பா கொண்டு வந்து தருகிறேன் என்று சொல்லி வெல்டிங் செட்டை நகர்த்தி workshop கொண்டு போனார், ராஜுவும் சேர்ந்து தள்ளினான், அப்பா டூல்ஸ் பெட்டிக்கு அருகில் இருந்த பில் புக்கை எடுத்து பில் எழுதினார்,அந்த பில்லில் மேலே கே பி குட்டப்பன் டிங்கர் ஒர்க்ஸ் என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது, ராஜு அதை காணும் போதெல்லாம் படித்து பார்ப்பான். அப்பா பில் போட மட்டுமே எழுத வாய்ப்பு கொண்டவர் என்பதால் ஆசையாக எழுதி முடித்தார். பின் வண்டி நோக்கி நடந்தார், ராஜுவும் கூடவே போனான்.

அப்பா அதிர்ச்சியில் உறைந்தார், அங்கு வெல்டிங் பணி செய்த லாரியைக் காணவில்லை, அப்பா சுற்றி சுற்றி தேடினார், வண்டியை காண முடியவில்லை. அப்பா “தாயோளிக, தேவிடியா மவ,” என்று காணாமல் போன வண்டியின் டிரைவரை திட்டி கொண்டிருந்தார். ராஜுவுக்கு டிரைவர் பணம் தராமல் ஏமாற்றி போனதை விட எப்படி இவ்வளவு சீக்கிரத்தில் வண்டியோடு காணாமல் போனார்கள் என்று ஆச்சிரியம் கொண்டான். பிறகு அவனும் டிரைவரை மனதிற்குள் திட்டினான். பிறகு சற்று நேரம் கழித்து இருவரும் டீ கடை சென்றனர், அப்பா “கார்பைடுக்கு பணம் வாங்காம போயிருந்தா எல்லா காசும் போயிருக்கும்” என்றார்.

படுக்கை

கா. ரபீக் ராஜா 

திடீரென்று நா வறண்டது போன்ற உணர்வு. எதிரில்தான் முதலிரவுச் செம்பு இருந்தது. செம்பின் மேல் டம்ளர் ஒருக்கணித்து படுத்திருந்தது. சற்று நிமிர்ந்து செம்பை எடுக்கலாம் என்ற போது உடம்பின் உள்ளே பூச்சி ஊர்ந்து மூளை நோக்கி செல்வது போன்ற உணர்வு. இதே உணர்வோடு செம்பை எடுத்து டம்ளரில் நீரை ஊற்றும் முன்னே கை சக்தியை இழந்திருந்தது. கடைசியாக செம்பு விழுந்த சப்தமும் டிவியில் செய்திப்பெண் வணக்கம் சொல்லவும் சரியாக இருந்தது.

விழித்துப் பார்த்தபோது ஒரு செவிலிப் பெண் வான நிறத்தில் பேன்ட், சட்டை அணிந்திருந்தாள். என்னைப் பார்ப்பதும் எழுதுவதுமாய் இருந்த அவளிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் வார்த்தைகள் வரவில்லை. சைகையாக பேச கைகளை இயக்க முயற்சிக்கையில் அது முத்தி அடைந்து மூன்று வாரங்கள் ஆயிருக்கும் என்று தோன்றியது. சற்று எட்டிப்  பார்த்தேன். கழுத்தை இயக்க முடிந்தது. ஒரு தற்காலிக மகிழ்ச்சி. சற்று எட்டிப் பார்த்தேன். கால் கட்டைவிரல் தெரிந்தது. அசைக்க முடிகிறதா என்ற முயற்சியை தொடங்கினேன். ம்ஹூம், கட்டளையை ஏற்க கட்டைவிரல் தயாராக இல்லை. சரியாக ஒரு ஈ ஒன்று அதில் உட்கார்ந்து எல்லா திசையும் சுற்றி பார்த்தது. கழுத்துக்கு கீழே செயலிழந்துள்ளன என்பதை அறிய கொஞ்ச நேரம்தான் ஆனது.

சற்று நேரத்தில் மகன் வந்தான். முகத்தில் சோகம். பேச முற்பட்டேன். வாயில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றினார்கள். மீண்டும் பேச முற்பட்டேன். மீண்டும் தண்ணீர். இந்த இடத்தில் மனதை புரிந்துகொள்ள ஒரு உறவு இருந்தால் ஆறுதலாக இருந்திருக்கும் என்றிருந்தது.

என் தாய்க்கு ஐந்து ஆண் பிள்ளைகள். நான் மூத்தவன். எனக்குப் பிறகு அடுத்தவன் பிறக்க ஏழு வருடமானதால் தாயிடம் ஆறு வயது வரை பால் குடித்து வளர்த்தேன். நன்றாக நினைவில் உள்ளது. விளையாடிவிட்டு வீட்டுக்குள் நுழையும்போது அம்மாவை தேடுவேன். அப்பாவிடம் சண்டை போட்டுவிட்டு மூலையில் சோகத்துடன் உட்காந்திருக்கும் தாயிடம் சென்று மடியில் படுத்துக் கொண்டு பால் குடிப்பேன், தாய்ப் பால்தான். தெருவில் விளையாடி விட்டு தாகத்தோடு வரும் சிறுவர்கள் பானையில் தண்ணீர் குடிப்பதை போல, அம்மா என்ன நிலையில் இருந்தாலும் அவள் மார்பை எட்டி பால் குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்.

சரியாக ஒரு இரண்டு மணி நேரம் கழித்து என்னை வீட்டுக்கு தூக்கி வந்தார்கள். ஏன் மீண்டும் என்னை வீட்டுக்கு தூக்கிக்கொண்டு வருகிறார்கள். சிகிச்சை முடிந்து விட்டதா? இல்லை மருத்துவம் என்னை கைவிட்டு விட்டது. இது எனக்கு எப்படி தெரியும்? தெரியும், என் அப்பாவை நாங்கள் அப்படிதான் தூக்கி வந்தோம். என் தாத்தாவையும் கூட அப்பா இப்படித்தான் தூக்கிக்கொண்டு வந்திருப்பார். எனக்கும் இதுவே சரியென்று பட்டது. கழுத்தில் எதோ துளை போட்டிருகிறார்கள். பேசினால் என்ன, பேச நினைத்தாலே வலி. மிக துயரமான வலி.

வீட்டில் ஒரு அறையை ஒதுக்கி என்னை அங்கு ஒதுக்கி வைத்திருந்தார்கள். மனைவி செத்து ஆறு வருடமாகிறது. அந்த புண்ணியவதியை என்றுமே நான் புரிந்து கொள்ள முயற்சித்தது கிடையாது. அவள் இறப்புக்கு பின்பு என் வாழ்க்கை திண்டாட்டமாகி விடும் என்று எனக்கு முன்பே தெரியும். இந்த புரிதலும் என் அப்பாவிடம் பெற்றது தான்.

அலட்சியப்படுத்தப்பட்ட குப்பையாக இதோ ஒரு ஓரத்தில் கிடக்கிறேன். சாப்பாட்டு வேலைக்கு மட்டும் வாயில் உணவை திணிக்கிறார்கள். உணவில் எனக்கு விருப்பமா என்று யாரும் கேட்பதில்லை. பசி என்கிற உணர்வே எழாத ஒருவனிடம் புகுத்தப்படும் உணவு மலத்துக்கு சமம்.

எனக்கு ஒரு மகன், ஒரு மகள். பொதுவாக அப்பன்களுக்கு மகளை பிடிக்கும். ஆனால் எனக்கு மகனே பிடிக்கும். குழந்தை வளர்ப்பை பொறுத்தவரை கூடுமானவரை பேதம் காட்டினேன். படிப்பிலும் மற்ற விஷயங்களிலும் மகளை விட ஒருபடி மேலே மகனுக்கு செய்தேன். கூடவே செய்யக்கூடாத ஒன்றை செய்தேன். அது பணத்தின் முக்கியத்துவம் குறித்து மகனுக்கு எடுத்துரைத்த போதனைகள்தான். உலகத்தில் பணத்தை விட உயரியது எதுவுமில்லை அதற்காக எந்த அறத்தையும் மீறலாம் என்றேன். மகன் அதையே செய்தான். இதோ படுக்கையில் விழுந்து ஒரு வாரமாகிவிட்டது மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வந்தவன் இன்னும் என்னைப்  பார்க்க வரவில்லை.

சிறு குழந்தைக்கு போல மல, ஜலம் கழிப்பை உறிஞ்சிக் கொள்ளும் துணி கொண்ட ஒரு பொட்டலத்தை எனக்கு உள்ளாடையாக அணிவித்து அழகு பார்த்தார்கள். புரண்டு படுக்க திராணியற்ற ஒருவனுக்கு இது எத்தகைய அசௌகரியம் கொடுக்கும் என்று எனக்கு மட்டும்தான் தெரியும். இணைப்பாக சர்க்கரை வியாதி எனக்கு முப்பது வருடமாக இருக்கிறது. கால் மூட்டுக்கு கீழே இருந்த காயம் ஆறாமல் அதற்கு தனியாக ஒரு சிகிச்சை ஓடிக்கொண்டிருந்தது. எதோ ஒரு களிம்பை தடவிச் செல்வார்கள். ஒரு நாள் உணவு கொடுக்க வந்த மருமகள் பதறியடித்து அலறினாள். என் காலில் எறும்புகள் மொய்த்துக் கிடந்ததாக கூறினார்கள். உயிருடன் இருக்கிறேன் என்பதற்கு சான்றாக காலையாவது ஆட்டிக் கொண்டிருக்க வேண்டும் போல!

ஒருத்தி என்னை பார்ப்பதற்காக வந்திருந்தாள். அவளை பல வருடங்களுக்கு பிறகு பார்க்கிறேன். என் மாமன் மகள். முன்னாள் காதலி வேறு. மரணப்  படுக்கையில் கிடக்கும் ஒருவனுக்கு  இதைவிட கொடுமை ஒன்றும் இருக்காது. எங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்த காதல் யாருக்கும் புரியாமலே போனது. குடலிறக்க சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுக்கும் ஒருவனை பார்க்க வந்தது போல ஆரஞ்சு பழம் வாங்கி வந்திருந்தாள் அவள். உண்மையில் ஆரஞ்சு பழ தோளைக்கூட என்னால் தொட முடியாது. எனிலும் வாங்கி வந்தவளின் திருப்திக்காக பழங்களை என் தலைமாட்டில் வைத்தார்கள். என்னை நலம் விசாரித்துவிட்டு வெளியே சென்றாள். இவனை கட்டியிருந்தால் இந்நேரம் நாம்தான் அவன் தலைமாட்டில் உட்காந்திருக்க வேண்டும் என்று நிம்மதி பெருமூச்சுடன் போயிருக்க வேண்டும்.

வாங்கி வந்த ஆரஞ்சுகளை பேரப்பிள்ளைகள் தின்பதில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை. ஆனால் தின்றுவிட்டு தோல்களை என் அருகிலேயே போட்டுவிட்டு சென்று விடுகிறார்கள். எனை பார்க்க வரும் உறவினர்கள் அந்த தோலையும் என்னையும் பார்ப்பது கொஞ்சம் வெட்கமாகவே இருக்கிறது. ஒரு ரத்த சொந்தம் சுகரோட இவ்வளவு ஆரஞ்சு சாப்பிடவே கூடாது என்று சொல்லியே விட்டான். திங்க வழியில்லாமல் இருப்பவனுக்கு இது என்ன சோதனை?

ஒருசில நாளில் சாப்பாட்டுக்கு தவிர யாரும் என் அறைக்கு வருவதில்லை. அப்படி இருக்கும் போது குழந்தைகள் என் அறையில் ஒளிந்து கொள்ள வருவதே ஆறுதலாக இருக்கும். சில நேரம் என் கட்டிலை சுற்றி வந்து விளையாடுவார்கள்.

ஒருநாள் பூசாரி வந்து அறையில் எதோ மந்திரங்கள் சொல்லி தண்ணீர் தெளித்துவிட்டு போனார். அவரை பார்க்கும் போது கொஞ்சம் பயமாக இருந்தாலும் ஒரு புதிய மனிதரை சந்தித்த உணர்வை தந்தது. எனையே உற்று பார்த்துவிட்டு காதுக்குள் எதோ ஓதிவிட்டு கட்டிலை இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் மூன்று முறை சுத்தி வந்தார். வீட்டின் இருந்த உறவுகள் பயபக்தியோடு இதை பார்த்துக்கொண்டு நின்றார்கள். சோகையாக ஓடிக்கொண்டு இருந்த மின்விசிறியை அணைக்க சொன்னார். அணைத்தார்கள். கூக்குரலிட்டு கத்தினார். எனை எந்திரிக்க வைக்கும் முயற்சியாக இருக்குமோ என்று நம்பினேன். பின்பு எல்லாம் முடிந்து கிளம்பும்போது சொன்னார் அந்த பூசாரி, “கவலைப்படாதீங்க, இன்னும் பத்து நாளில் முடிஞ்சிரும்!” இதற்கு தலையணையில் என் மூச்சை நிறுத்தினாலும் எந்த எதிர்ப்பையும் காட்டியிருக்க மாட்டேனே என்று கண்ணீர் ஓடி காதுக்குள் போனது.

படுத்தே கிடப்பதால் முதுகெங்கும் புண் மற்றும் கொப்புளம் வரத் தொடங்கியுள்ளது. இதை மருமகளுக்கு நான்கு முறை சொல்ல முயற்சி செய்தேன். பதிலுக்கு அவள் எனக்கு நாப்கின் மாற்றி விட்டு சென்றாள்.

பரம எதிரி ஒருவன் என்னை பார்க்க வந்தான். எதிரியாக இருந்தாலும் நம்மை பார்க்க வந்திருக்கிறானே என அவனது பெருந்தன்மையை என் வீட்டில் இருப்பவர்களே புகழக்கூடும். அவன் முன் இப்படி சுருண்டு படுத்துக் கிடப்பது எனக்கு அவமானமாக இருந்தது. எதிரியின் எகத்தாள பார்வையை கூட புரிந்து கொள்ள முடியாவிட்டால் அவன் என்ன எதிரி? என் நிலை இவனுக்குக்கூட வரக்கூடாது என்று வேண்டிக் கொண்டேன்.

ஒருவனுக்கு பச்சையாக துரோகம் செய்திருக்கிறேன். அவனும் என்னை காண வந்தான். பாவம் அவனுக்கு தெரியாது. நான் செய்தது துரோகம் என்று. எதிரில்தான் நிற்கிறான். எனக்கு தைரியம் சொல்கிறான். இப்போது அவனிடம் செய்த துரோகத்துக்கு மன்னிப்பு கேட்க முனைகிறேன். முடியவில்லை. செய்த தவறுக்கு மன்னிப்பு கூட கேட்க முடியாத நிலையை என்னவென்று சொல்வது? மீட்டமுடியாத மன்னிப்பு தரும் குற்றஉணர்வு ஓராயிரம் முள்படுக்கைக்கு சமம். என் கண்ணீரால் மன்னிப்பு கோரினேன். புரிந்து கொண்டானா என்று தெரியவில்லை.

ஒருநாள் மருமகள் ஓடி வந்தாள். கையில் மொபைல் போன். போன் திரையில் மகன் தெரிந்தான். இதை எதோ வீடியோ அழைப்பு என்றார்கள். அவன் பேசுவதும் புரியவில்லை. உயிருக்கு உயிரான மகன் இப்போது தான் பார்க்கிறேன்.  அந்த வீடியோ அழைப்பில் வெகு நாட்களுக்கு பின்னால் என் முகத்தை காணும் வாய்ப்பு கிடைத்தது. இனி காணவே கூடாது.

இப்பொழுதெல்லாம் உணவை ஏற்றுக் கொள்ள உடல் முற்றிலும் மறுக்கிறது. மனமும் தான். கொஞ்ச உணவு உள்ளே போனாலும் அது செரிமானமாகும் வரை செய்யும் பாடு நரகத்தை விட கொடியது. திருமண பந்திகளில் போட்டிபோட்டு தின்ற நாட்களை எண்ணியே காலம் தள்ள வேண்டியிருக்கிறது. சாப்பாடு எடுக்க மாட்டுது ரொம்ப நாள் தாக்கு பிடிக்காது, என்று வெளியே பேசிக்கொண்டது காதில் விழுந்தது. கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தாலும் இப்பொழுதே வைத்து எரித்துவிடுவார்களோ என்று அவர்கள் குரலில் தெரிந்த அவசரம் குறித்து கொஞ்சம் கவலையாகவும் இருந்தது.

ஒரே விட்டத்தை பார்ப்பதை தவிர எனக்கு பிரதான பொழுதுபோக்கு எதுமில்லை. இன்று இரண்டு பல்லிகள் சந்தோசமாக இருந்ததை பார்த்து வேடிக்கையாக இருந்தது. புழு, பூச்சி, வண்டுகளை கூட கவனிக்க கூட நேரமிருக்கிறது. அவைகள் தான் நேரத்துக்கு வருவதில்லை. கம்பி கட்டிய ஜன்னல் வழியே ஒரு அணில் தினம்தோறும் எட்டிப்பார்க்கும்.

கண்களை மூடுகிறோனோ இல்லையோ எதோ ஒரு கனவு வந்துவிடுகிறது. அதில் பெரும்பாலும் நான் எழுந்து நடப்பது போலவே இருக்கும். எழுந்து நடப்பதே பகல் கனவாக மாறும் என்று’ யார் கண்டது. எனிலும் கனவுகளில் கொஞ்சம் பாதுகாப்பாகவும் கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் இருந்தது உண்மை. கழுத்துக்கு கீழே உணர்வு இல்லாதது கட்டி இழுத்த மலையை சற்று கழட்டிவிட்ட உணர்வை தருகிறது. அப்படியே ஒட்டிக்கொண்டிருக்கும் உயிரும் போய்விட்டால் வேலை முடிந்தது. பாவம் வீட்டிலும் வேறு எங்கேயும் போக முடியாமல் இருக்கிறார்கள். இரவிலும் பாதுகாப்புக்கு யாரேனும் இருக்க வேண்டும். இவர்களுக்காகவே கிளம்ப வேண்டும்.

எதோ பொங்கல் பண்டிகை வந்திருக்க வேண்டும். வெளியில் பெயின்ட் அடித்து கொண்டிருக்கும் வாசம் வந்தது. எனது அறைக்கும் வேறு வண்ணம் பூசினால் நன்றாக இருக்கும். காரணம் எதிரே இருக்கும் சுவரில் எனக்கு மட்டுமே தெரிந்த ஒரு ஓவியம் இருந்தது. இப்போது அதில் வேறு வண்ணம் பூசினால் நிச்சயம் என்னால் இன்னொரு ஓவியத்தை கண்டு பிடித்திட முடியும். மனம் எதற்கெல்லாம் ஆசைப்படுகிறது.

இப்போதெல்லாம் கனவுகள் மறைந்து மாய உருவங்கள் தோன்ற ஆரம்பித்துவிட்டது. கொஞ்சம் திடமாகவே இருக்க விரும்பினேன். மரணிக்கப்  போகும் உண்மை அறிந்த மணம் காட்சி பிழை என்றாலும் படுக்கையே பிணியாக இருப்பவனுக்கு இதுவும் ஒரு சுவாரஸ்யம் தான்.

காலை முதல் மூச்சு விடுவதே சிரமமாக இருக்கிறது. இயல்பாக செய்ய முடிந்த ஒரே விஷயமும் இப்போது உடம்பில் கல் உடைக்கும் வலியாக மாறிப்போனது. ஒருமுறை சுவாசம் விடுவதென்பது ஒரு செங்குத்து மலையில் ஏறிவிட்டு இறங்குவது போல இருந்தது. ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்த என் அறையில் இருவதுக்கு மேற்பட்டோர் குழுமியிருந்தனர். பாதி பேர் என்னை உறுதியாக வழியனுப்ப வந்திருந்தார்கள். நெஞ்சில் இருந்து கிளம்பிய சுவாசம் இப்போது இன்னும் கடினமாக மாறிவிட்டது. கை கால்களை உதறினால் கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும் என்று அப்போதும் நம்பினேன். இதற்கு மேல் முடியவில்லை. மார்புக்கும் தொண்டைக்கும் இடைப்பட்ட ஒரு கயிறு அறுந்து விழுந்தது போல இருந்தது. அது கொடுத்த வலியில் கொஞ்சம் கண்ணீர் கசிந்திருந்தது. மெதுவாக கண்ணை மூடினேன். இதுவரை இரைச்சலாக இருந்தவை ஒரு கணம் அமைதியானது. ஒரு இலவம் மூட்டையையே காதில் அடைத்தது போன்ற பேரமைதி அது.