சிறுகதை

வீடு

கலைச்செல்வி

”ஏங்க.. கீழ வர்றீங்களா.. மணி பத்தாச்சு.. துாக்கம் சொக்குது..” என் மனைவியிடமிருந்து இது மூன்றாவது அழைப்பு. ஒரு வார காலமாக ஊர் பரபரத்துக் கிடந்ததில் யாருக்குமே நிம்மதியான துாக்கம் வாய்க்கவில்லை. பாப்பா துாளியில் துாங்கிக் கொண்டிருப்பாள். அவளை தனியே விட மனமில்லாமல் கீழிருந்தே அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தாள் என் மனைவி. சற்றே பெரிய வீடு. நானும் என் மனைவியும் என் சின்னஞ்சிறு மகளும்தான் மொத்த ஆட்களே. தரை முழுவதையும் கான்கீரீட் கட்டடத்துக்கு தாரை வார்க்காமல் தாத்தாவின் எண்ணப்படி தோட்டத்துக்கு மத்தியில்தான் வீட்டை அமைத்திருந்தார் அப்பா. தோட்டம் கூட வளர்ப்புத் தாவரங்களை விட தானாகவே மண்டி வளர்ந்த காட்டுத் தாவரங்களின் வனப்பில் வாசமும் நேசமும் காட்டிக் கொண்டிருந்தன. மொட்டை மாடியில் தவழ்ந்து கிடக்கும் வேப்பமரத்தின் காற்று உடலுக்குள் புகுந்து மனதையும் வருடிக் கொடுத்ததில் சொக்கிப் போய் படுத்திருந்தேன்.

யாருமற்ற வெளியில் இயங்குவது கூட தனிச் சுகம்தான். கைகளிரண்டையும் பின்புறமாக கோர்த்து தலையணையாக்கி வானத்தை பார்த்து படுத்திருப்பது அதனை ஓரளவு சாத்தியப்படுத்தியிருந்தது. படர்ந்து கிடந்த வானவெளியில் சிதறியிருந்த நட்சத்திரங்கள் கண் சிமிட்டி சமிக்கைச் செய்ய மேகத்தினுள் ஒளிந்துக் கொண்டு ஜாலம் காட்டிய நிலவு மகிழ்ந்துப் போய் மதிமுகம் காட்டியதில் முழு வட்டம் பெற்றது. முழுமைப் பெற்ற இன்பத்தை நிலவு ஒளியாக்கிப் பரப்ப, பூமி விருப்பத்தோடு அதில் தன்னையும் இணைத்துக் கொண்டது. கண்களுக்கு நிறைவான நிலவொளி உலகியல் தொடர்புகளற்ற உறுத்தாத பயணத்தைச் சாத்தியப்படுத்தியதில் மனம் நிரம்பிக் கொண்டிருந்தது. என்னைக் கேட்டால் குற்றம் புரியும் மனப்போக்கு கொண்டவர்களை நிலவொளியில் நனைய வைத்தால் குற்றமற்ற சமுதாயத்தை வளர்த்தெடுக்கலாம் என்பேன். மனத்தின் வெளிகள் திறந்துக் கொள்வது வாழும் போதே நிறைந்துப் போவதையொத்தது.

காடுகள் கூட மனவெளிகளுக்குள் ஊடுருவக் கூடியவைதான். துாரத்துக் காடுகள் பயமூட்டுபவை. விஷப்பூச்சிகளையும் கொடும் மிருகங்களையும் தன்னுள்ளேக் கொண்டவை. மரங்களாலும் கனிமவளங்களாலும் ஆக்கப்பட்டவை. மழைகளாலும் சேறுகளாலும் நிரம்பியவை. ஆனால் அண்மைக்காடு அமைதியானது. ஆர்ப்பரிப்பற்றது. புதிர்களை உள்ளடக்கியிருப்பது. ஏகாந்தத்தின் எல்லை வரை பயணிக்கும் உரிமைப் பெற்றது. விசித்திரங்களை.. வீரியங்களை தனக்குள் புதைத்து.. அவிழ்க்க முற்படுவோர்க்கு அகப்படமால் சுரந்துக் கொண்டே போவது.

இது தாத்தாவுக்கு மட்டுமல்ல.. இங்குள்ள யாருக்குமே பூர்வீக பூமியல்ல. வந்தேறிக்குடிகளாக நிலைத்துப் போனவர்கள் சூழ்ந்த ஊர் இது. தாத்தா சிறுவயதில் தன் வீட்டாருடன் ஏற்பட்ட பிணக்கில் ஏதோ ஒரு நம்பிக்கையில் நண்பனின் வீட்டுக்கு வந்து விட, அந்நேரம் நண்பனின் வீட்டாருக்கு சம்பளம் உட்பட எதையும் எதிர்ப்பார்க்காத திடகாத்திரமான மனித உழைப்புத் தேவைப்பட தாத்தா இங்கேயே தங்கி விட்டார். காந்தி தாத்தா மாதிரி என் தாத்தாவுக்கும் மேல்சட்டை உடுத்திக் கொள்வதில் பிடித்தம் இருப்பதில்லை. விசேட நாட்களில் மட்டும் சட்டையும் மேல் துண்டுமாக காட்சியளிப்பார். “ஏன் தாத்தா சட்டைய கழட்டீட்ட.. ஒனக்கு குளுருல..“ என்பேன். ”எல்லாம் வீடுங்களாயிடுச்சு.. ஊருங்களாயிடுச்சு.. இன்னும் என்னய்யா குளுவுரு..” என்பார்.

தாத்தா யாரிடமும் சொல்லாத ரகசியங்களைக் கூட என்னிடம் சொல்லுவதுப் போல மிக மென்மையாகப் பேசுவார். காடு அவரைப் பதப்படுத்தி மிதப்படுத்தியதில் ஏற்பட்ட மென்மை என்று இப்போது தோன்றுகிறது. தாத்தாவைப் போன்ற ரசனையோ.. அல்லது மென்மையான சுபாவமோ ஏதோ ஒன்றினால் என்னை தாத்தாவோடு எப்போதும் ஒப்புமைப்படுத்திக் கொண்டேயிருப்பார்கள். அப்பா சின்னப்பெட்டிக் கடையில் ஆரம்பித்து பிளாஸ்டிக் கடை வரை விரிவுப்படுத்தி ஒரே மகனான என்னிடம் தந்து விடும் போகும் போது ஐம்பதுகளின் இறுதியில்தானிருந்தார். அம்மாவுக்கு நான் மட்டுமே ஆதரவென்றிருந்தாலும் தாத்தாவுடன் நேரங்கழிப்பதே எனக்கு பிடித்தமானதாக இருக்கும். அவரின் இறுதிப்படுக்கை நாட்களில் கூட காடுக் குறித்த பழம்நினைவுகளிலேயே புத்துணர்வு பெறுபவராக இருந்தார். பேச்சு குறைந்து பிறகு நின்றே போனபோதும் நிறைவாகவே இறந்துப் போனார். என்னை திருமண பந்தந்துக்குள் நுழைத்த திருப்தியில் என் மகளைக் கூட பார்க்க சிந்தையற்று அம்மா செத்துப் போக நாங்கள் மூவராகிப் போனாலும் தாத்தா என்னுடன் நிலைத்துப் போனதில் தனிமை என்னுள் அதிகம் படராதிருந்தது.

சவரம் செய்யும் கண்ணாடி.. சோப்பு.. பல் துலக்கும் பிரஷ்.. துவைக்கும் கல்லில் கும்மிப் போடப்பட்ட என் மகளின் சிறு உடுப்புகள்.. கிளைகளுக்குள் பெருகிக் கிடக்கும் வேம்பின் இலைகள் என நிலவொளியில் எல்லாமே பார்வைக்கு தெளிவாக இருந்தன. நிலவை தன் உடலெங்கும் பூசிக்கொள்ளும் பௌர்ணமிக் காடுகள் கூட துல்லியமானதுதான். கழனிக்கு இடம் கொடுத்து காடு நகர்ந்து உள்வாங்கிக் கொண்டாலும் தாத்தா விடுவதாக இல்லை. பழையக் காதலியைத் தேடிப் போகும் முகபாவமிருக்கும் அவரிடம். முதன்முதலாக காடு அறிமுகமானபோது பயத்தில் தாத்தாவின் கையை இறுக்கிக் கொண்டே நடந்தேன். அறிமுகக்காடுகள் கால்களில் ஒட்டி இரத்தம் உறிஞ்சும் அட்டைகளைப் போல பயமுறுத்துபவையாக இருந்தன. சரசரப்பொலி பாம்புகளாகி அச்சமூட்டின. பறவைகள் சதா ஓலமிட்டு கொண்டேயிருந்தன. நாகரீகமற்ற விறகுவெட்டிகளும் தேனடை எடுப்போரும் ஒரு கையில் தலைகீழாக கருநாகமே தொங்கினாலும் மற்றொருக் கையால் பீடி வலிக்கும் அலட்சியவாதிகளாக இருந்தனர். ஏதோ இலையை மென்றுக் கொண்டே பாம்புப் புற்றுக்குள் கை விடும் காட்டுமிராண்டிகள் அவர்கள். காடுகளில் இலந்தை.. அத்தி.. நாகப்பழ மரங்கள் நிறைந்திருந்தது மட்டுமே ஆறுதலாக இருக்கும். நாட்போக்கில் தாத்தாவின் மொழிகளனைத்தும் காடுகளால் நிரம்பி வழிந்துக் கொண்டே வந்ததில் ஏதோ நிரம்பிக் கொண்டேயிருந்தது.

“நான் வர்றப்ப நம்ப வீடு இருக்கற எடமெல்லாம் ஒரே காடாதாய்யா இருந்துச்சு.. எங்கூட்டாளியோட அப்பா காட்ட வாங்கித் திருத்திக்கிட்டுருந்த நேரம் நான் வந்து சேர்ந்தேன்.. படிப்பு ஏறாம கெடந்த மவனுக்கு சோடியா என்னையும் காவலுக்கு அனுப்பி வுட்டாரு.. நாள்பூரா நானும் அவனும் இங்ஙனதான் சுத்திக்கிட்டுக் கெடப்போம்.. வெலக்கு வாங்குன எடத்த உசிர்வேலி போட்டு பராமரிக்கறதுதான் எங்க பொழப்பு..  பொழுதண்டும்போதுதான் வீட்டுக்குப் போவோம்..”

”வீடுன்னா.. அது எங்க இருந்துச்சு..?”

”அதாய்யா.. எங்கூட்டாளியோட வீடுதான்.. இங்கேர்ந்து நாப்பது கிலோ மீட்டர் தொலவுன்னாலும் இருக்கும்.. பொடிநடையா நடந்து பஸ்சு போற எடத்துக்கு வந்துட்டமுன்னா ரவைக்கு வீடு போய் சேந்துடுவோம்..”

”உனக்கு பயம்மா இருக்காதா தாத்தா..” என்பேன்.

”எல்லாம் மொதல்ல அப்டிதாய்யா இருக்கும்.. பேசாம ஊருக்கே ஓடிடுலாமின்னு தோணுச்சு.. ராவெல்லாம் படுத்து அளுவேன்.. துாங்குனாலும் காட்டுக்குள்ள கெடக்கறமாதிரியே கனாவெல்லாம் வந்து பயமுறுத்தும்.. இங்க கெடைக்கிற மூணுவேளச் சோறு எங்க வீட்ல கெடைக்காது.. வேணாம்னு ஒதறிட்டு வந்துட்டு திரும்ப வீட்டோட போயி ஒட்டிக்கிக்க கூடாதுன்னு வீம்பு ஒரு பக்கம்.. எல்லாஞ்சேந்து இங்ஙனயே தங்கிக்கிட்டேன். ஆச்சு வருசம் ஒண்ணு.. காட்டை திருத்தி பட்டாவும் போட்டாச்சு..”

”அப்றம் ஏன் போகல..?” பத்து வயது ஞானத்தில் இவ்வளவுதான் கேட்க முடிந்தது எனக்கு.

”வுட்டா தானேய்யா போறதுக்கு..?” என்றார் கண்கள் பளபளக்க.

”யாரு தாத்தா ஒன்னை புடிச்சு வச்சுக்கிட்டா..?” எனக்கும் கண்கள் பளபளக்கத் தொடங்கிய நேரம் அது.

”காடுதாய்யா.. காடுதான் என்ன போவ வுடல.. இங்ஙனயே கெடந்தேன்.. இந்தப் பக்கத்துப் பொண்ணப் பாத்துக் கட்டி வச்சாங்க.. என் ஒழைப்புக்கு கூலியாக ஒதுக்கி வுட்ட எடத்துலதான் உங்கப்பன் இந்த வூட்டக் கட்டுனான்..” பருவ வயது எட்டியிருந்த எனக்கு காட்டின் மீது காதல் வேர்விடத் தொடங்கியிருந்தது.

கீழேயிருந்து மீண்டும் அழைப்பு. எழுந்துச் செல்ல மனமில்லை. காட்டிலிருந்து கிளம்பும்போது கூட இப்படிதான் இருக்கும். இறைக்க இறைக்க சுரந்துக் கொண்டிருப்பது நீர் மட்டுமல்ல.. காடும்தான். எங்கும் எதிலும் அது முடிவதேயில்லை. வழி மாறிப் போகும் நாட்களில் கூட பயமோ.. பதட்டமோ ஏற்படுவதில்லை எங்கள் இருவருக்குமே. கவிழ்ந்த மேகம் சில்லென்ற காற்றாய் உடலை ஏந்திக் கொள்ள ஏகாந்த அமைதிக்குள் மனம் உறைந்துப் போகும். விருப்புவெறுப்பற்ற மனவெளி பாம்பாய் ஊர்ந்து அகத்தினுள் படிந்துப் போகும். தாத்தாவின் கைப்பிடியை இறுக்கிக் கொள்ள தேவைகள் குறைந்துக் கொண்டே வந்தன. மழை கிளப்பி விடும் காட்டின் வாசனை உள்ளே போதையாய் இறங்கத் தொடங்கும். மரங்களில் வழியும் மழை, தண்டுகளை ஈரமாக்கி.. இலைத்துளிர்களை நீவி விட்டு.. பழுத்த இலைகளை கீழே உதிர்த்து மாயஜாலம் நிகழ்த்தும். மதர்த்த பெரிய இலைகள் மழை நீரை உள்வாங்கியும் பின் வழிந்தோடவும் வைத்து விளையாடிக் கொண்டிருக்கும். இரவா.. பகலாவென கணிக்கவியலாத வெளிச்சம் கவிழ்ந்து காட்டை நிரப்புவதில் சலனங்களற்ற புது வெளிக்குள் புகுந்துக் கொள்ளும் மனம் அமைதியின் ஆர்ப்பரிப்பிற்குள் இறுத்திக் கொள்ள எத்தனிக்கும். இனம் புரியாத சிறுச் சிறு பறவைகளின் ஒலிகள் சூழலின் ரம்மியத்தைக் கூட்டும். கால்களில் ஒட்டிக் கொண்டச் சேறு உயிர் கரைந்து ஓடுவதுப் போல மழை நீரில் தன் பிடிமானத்தை இழந்து வழிந்தோடும்.

மழையின் தீண்டலில் கிறங்கிக் கிடக்கும் மரங்களில் சில தான் பெற்ற இன்பத்தை பிறருக்கும் கடத்தி விடும் நன்நோக்கில் பின்னிக் கிடந்த வேர்களை நிலத்திற்கு வெளியே பின்னிப் பிணைத்திருக்கும். சூல் கொண்ட வரையாடுகள் சிலிர்த்துக் கொள்ள.. செந்நிற மொந்தை வால் அணில்கள் கிளைகளில் தாவிச் செல்ல இதமான மழை இசையாக அகத்தை நிரப்பி விடும். அதிரடிக்காத காட்டு மழை உடலுக்குப் பழகிப் போனதில் சளி.. ஜுரம் என தொடர் அத்யாயங்கள் நிகழ்வதில்லை என்பதால் காட்டு வாழ்க்கைக்குத் தடை ஏற்படுவதில்லை. பள்ளி விடுமுறைத் தினங்கள் குதுாகலமாகிப் போயின.

இரண்டு மலைத் தொடருக்கு இடையே அமைந்துள்ளப் பள்ளத்தாக்குப் பகுதிதான் எங்கள் ஊர். இயற்கையின் இறகுகளுக்குள் பதவிசாக பம்மிக் கிடப்பது போலிருக்கும் வான்பார்வைக்கு. மலையில் உருவாகி வழிந்தோடும் சாரல் தெளிப்பிற்குள் அமிழ்ந்து நின்று அழகுக் காட்டும் ஊர்களாக சூழ்ந்துக் கிடந்தாலும், சுற்றுலாத்தலமாக புகழடையாத பாக்கியத்தில் பொலிவு விலகாத பவித்திர அழகைப் பொத்தி வைக்க ஏதுவாயிருந்தது. நெல் வயல்களும் வாழை மரங்களும் தென்னந்தோப்புகளும் கரும்பங்கொல்லைகளும் கிராமங்களை சோலைகளாக்கியிருந்தன. காடுகளைப் போலச் சரணாலயங்களும் நகர்ந்துக் கொண்டதில் கிராமங்களுக்கும் விலங்குகளுக்குமான இடைவெளி அறுபது கிலோ மீட்டர் என்றது.

என் மனைவி மேலேறி வந்து விட்டாள். “வீடே அடைஞ்சுப் போயி புழுக்கமா கெடக்குது.. கொழந்தை அழுதுக்கிட்டே இருந்துட்டு இப்பதான் துாங்குனா.. சத்தம் போடாம மேல வந்தேன்..“ மலைச்சாரல் காற்று புதிதாக பிறந்தக் குழந்தையை கூட அரவணைத்துப் பழக்கியிருந்தது. கதவையடைத்து காற்றை வழியனுப்பியதில் வந்தப் பாதிப்பு இது.. சிரித்துக் கொண்டேன்.

”எல்லாரும் உயிரக் கையில புடிச்சுக்கிட்டு கெடக்குறோம்.. உங்களுக்கு எதுக்கெடுத்தாலும் சிரிப்புதான்..” என் சிரிப்பு அவளை கோபப்படுத்தியது. சென்ற வாரம் இதே நாளில்தான் சிறுத்தைப்புலியொன்று எங்கள் ஊருக்கு விஜயம் செய்திருந்தது. வனத்துறைக்கும் காவல் துறைக்கும் தகவல் பறக்க ஊர் மொத்தமும் ஜீப்புகளாலும் சீருடைகளாலும் நிறைந்துப் போனது. பதறிப்போன சுற்றுபற்று கிராமங்கள் மொத்தமும் உள்ளுக்குள் முடங்கிப் போனது. தேவைகளிருந்தும் வாங்குவோரின்றி கடைகளும் பள்ளிகளும் மூடப்பட ஊர் முழுமையும் பாதுகாப்பு வளையம் அணிந்துக் கொண்டதில் ஊரே அந்நியமாகிப் போனது அனைவருக்கும்.

அதற்கு அடுத்தநாள் என் மனைவியின் தங்கைக்கு என் வீட்டில் வைத்து வளைக்காப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தோம். ”தாயில்லாதப் புள்ள.. கூடப் பொறந்தவளுக்கு நான் செய்யாம யாரு செய்வா..” என்று இழுத்துப் போட்டுக் கொண்டு சொந்தங்களை அழைத்திருந்த என் மனைவி சிறுத்தைப்புலியின் வரவிலும் யாரும் வெளியே வர வேண்டாம் என்ற வனத்துறையின் அறிவிப்பிலும் உடைந்துப் போனாள். சமீபத்தில்தான் ஒரு குழந்தைக்குத் தாயாகியிருந்த அவளுக்கு பிரசவ நேரத்தில் தாயின் தேவையை அதிகமாக உணரமுடிந்ததில் தங்கையின் பிரசவத்திற்கு தானே பொறுப்பேற்க முடிவு செய்த நிலையில்தான் இந்த களேபரம். மக்கள் வீடடங்கிக் கிடந்தாலும் தகவல் தொழில்நுட்பத்தின் நவீனங்கள் வதந்திகளையும் புரளிகளையும் பரப்பும் விரைவுச் சாதனமாகின்றன. சிறுத்தைப்புலி தண்ணீர் டேங்கின் மீது நின்றுக் கொண்டிருக்கிறது.. வீட்டுக் கதவை தட்டியது என்றல்லாம் வதந்திகள் சூடாகிக் கிடந்தாலும் அது அகப்படும் வழி மட்டும் தெரியவில்லை. அதன் செழுமையானக் காலடித் தடங்களைப் பரிசோதனைக்கு அனுப்பியதில் வனத்துறையினரால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட விலங்குதான் என்றும் இது சற்றே மூர்க்கம் கூடியது என்றும் தெரிந்துக் கொண்டதில் ஊர் இன்னுமாக உறைந்தது. “சனியன்.. மொதல்ல கூண்டுக்குள்ள சிக்குட்டும்.. பிற்பாடு கலெக்டருக்கிட்ட போயி மனு கொடுப்போம்..” என்று குறுந்தகவல்கள் பரிமாறப்பட்டன. “மனுவெல்லாம் தர்மமில்ல.. போராட்டந்தான் சரியான வழி..” என்றது அடுத்து வந்தத் தகவல். “யாரை நம்பியும் உசிர ஒப்படைக்க முடியாது.. பேசாம நாம்பளே சுட்டுத் தள்ளிட வேண்டியதுதான்..” துப்பாக்கி லைசென்ஸ் வைத்திருந்தவரிடமிருந்து வீரமான தகவல் வெளியானது. எது எப்படியிருந்தாலும் வீரமெல்லாம் வீட்டுக்குள்ளேயே அடைப்பட்டாக வேண்டியக் கட்டாயத்தில் நான்கு நாட்கள் கடந்து விட்டன.

சில சமயங்களில் கதாநாயகனாகும் ஆசையில் பள்ளித் தோழர்களிடம் தாத்தாவின் அனுபவங்களை என் அனுபவங்களாக எடுத்து விடுவேன். “நான் பெரிய யானையப் பார்த்தேன்.. கோவில்ல இல்ல.. காட்டுல..” வாயடைத்துப் போயினர் நண்பர்கள். ”காட்டுலயா..?” என்றனர். ”ஒரு தடவை ஃபாரஸ்ட்காரங்க காட்டுக்கு போக வழிக் கேட்டாங்க.. நானும் ஜீப்ல வாரேன்னு சொல்லி ஏறிக்கிட்டேன். போற வழியில இன்னொரு காட்டுவாசி ஆளையும் ஏத்திக்கிட்டாங்க. மலைப்பாதையில ஜீப்பு போயீட்டு இருந்துச்சா.. அப்ப திடீர்ன்னு ஆறேழு யானைங்க..  பெருசுலேர்ந்து குட்டி வரைக்கும் நிக்குதுங்க.. அதுல ஒரு யானை ரொம்பப் பெருசு.. அது சண்டை போடுறாப்புல வேகமா ஜீப்ப நோக்கி வந்துச்சு.. ஆபிசருங்கள்ளாம் பயந்துட்டாங்க.. யாரும் பயப்புடாதீங்க.. நான் பாத்துக்கிறேன்னாரு சாடை செஞ்சாரு அந்த காட்டுவாசி ஆள். அதுக்குள்ள அந்த பெரிய யானை ஜீப்புக்கிட்டே வந்துடுச்சு.. என்னா செய்யறதுன்னே எங்களுக்கு புரியல. காத்துல தும்பிக்கை ஒரு வீசு வீசுச்சுப் பாரு.. குலை நடுங்கிப் போச்சு எல்லாத்துக்கும்.. திரும்பவும் நான் பாத்துக்கிறேன்னு சாடை செஞ்சுட்டு வண்டியிலேர்ந்து இறங்கினாரு அந்த ஆளு..“

எல்லாருடையக் கண்களும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. ”எலந்தவடை வாங்கியாந்தாதான் சொல்லுவேன்..“ நான் அடம் பிடிக்க நாலைந்து இலந்தை வடைகள் என் கைக்கு வந்தன. நிறைய உப்பும் காரமும் இலந்தைப்பழ புளிப்புமாக நான் விடும் கதையைப் போல சரிவிகித மசாலா கலந்த வடைகள். காட்டுக்குள் பொறுக்கும் இலந்தைப்பழங்களை வெளியூர் விற்பனைக்கு அனுப்பியதுப் போக மீதமுள்ளவற்றை இடித்து வடைகளாக தட்டி விற்பனைச் செய்வார்கள்.

”அப்றம்…” ஆவலாகியதுக் கூட்டம். ஆனால் தாத்தா என்னை இதுபோல காத்திருக்க விட்டதில்லை. ”அவவன் வேலய அவவனைச் செய்ய வுட்டுடுணும்.. வெள்ளாமைச் செய்யறவன் பிளேன் ஓட்டுறதுக்கணக்கா எல்லா பயலுங்களுக்கும் காடு புரிஞ்சுப் போவுமா… மொத்த ஆளுங்களும் நடுங்கிப் போயிட்டாங்க. ஆனா அந்த காட்டுவாசி ஆளு கலங்கல.. யானை எச்சரிக்கை பண்றதுக்குதான் இப்டி தும்பிக்கைய வீசுதுன்னு சாடைக் காட்டிட்டு கண்ணாடிப் பாட்டில்ல சின்னக் கல்லு வச்சு வொரசினாரு.. பொறவு என்னென்னமோ வினோத சத்தமெல்லாம் எழுப்பிக்கிட்டே அந்த யானைக்கூட்டத்துக்கிட்ட போனாரு.. பயமே இல்ல அவர் முகத்துல.. நேரா போய் அங்கன இருக்கற கல்லு ஒண்ணுல உக்காந்துக்கிட்டு அந்த யானைகளையே பார்த்துக்கிட்டு இருந்தாரு.. அம்புட்டு யானைங்களும் செத்த நேரத்துல காட்டுக்குள்ளே போயிடுச்சு…” இதை கேட்டு முடிப்பதற்குள் என் உள்ளங்கை வியர்த்திருந்ததை உணர்ந்தவர்போல வழியிலிருந்த செடியை கசக்கி முகர்ந்தார். என் மூக்கிலும் வைத்தார். “பாம்பு அண்டாது.. வாய்யா..“ என்றார்.

காடு நீண்டிருந்தது. ஒருநாள் தாத்தா என்னை வெகுத் தொலைவிற்கு அழைத்துச் சென்றார். ஒற்றையடிப்பாதை அது. வெவ்வேறு அளவுகளிலான நிலப்பரப்பு என்பதால் பாதையின் நீளம் தெரியவி்ல்லை. நடந்து நடந்து அளந்தாலும் கால்களின் சோர்வு மனத்திற்கு எட்டவில்லை. இரண்டுப் பக்கமும் உயர்ந்துக் கொண்டேப் போகும் மலைகள் காட்டுப்புதர்களாலும் விதவிதமான செடிகளாலும் நிறைந்துக் கிடந்தது. வீசும் காற்று ஏதோ ஒருவித நறுமணத்தை தன்னுள் புதைத்திருந்தது. ஒற்றையடிப்பாதை புதர்களின் அடர்வில் துண்டாகிப் போக புதுப்பாதையொன்று பிரிந்துச் சென்றது. திடிரென்று காற்று பூந்துாவலைகளாக மாற “பக்கத்துல அருவி இருக்கு..” என்றார் தாத்தா.

தாத்தாவின் கணிப்புப்படி சற்றே தள்ளி பாறை நுரைத்து மெல்லிய கோடாக வழிவதுப் போல அருவிக் கொட்டிக் கொண்டிருந்தது.  தொட்டுப் பார்க்கத் துாண்டும் ஆவல் உடல் முழுவதும் வியாபிக்க தாத்தாவிடம் வெளிப்படுத்தினேன். பாதையற்ற பாதையில் புதர்களை விலக்கி நடந்தோம். உடுத்தியிருந்த முரட்டுக் கம்பளியையும் மீறி தோலை உரசிச் சென்றது முற்செடிகள். பிறவிப்பயனை அடையப் போவதுப் போன்றதொரு தெறிப்புடன் முன்னேறிய தாத்தாவுக்கு இது ஏதும் பொருட்டில்லை. நானும் பின்தொடர்ந்தேன். பாசியேறி அடர்ப்பச்சை நிறத்திலிருந்தது பாறை. நீர்க்கரைகளை சுமந்த உலர்ந்தப் பாறைகள் கூட வழுவழுவென்றிருந்தன. அதில் ஆங்காங்கே நெட்டுக்குத்தாக முளைத்திருந்த செடிகள் உயிரோட்டமற்றிருந்தன. நீர் வழிய இடம் கொடுத்தப் பாறைகள் சற்றே உள்வாங்கியும் கருத்தப் பாறைகள் புடைத்துமாக சீரற்று இருந்தன. வீசிப் போகும் காற்று, வழியும் நீரைத் தொட்டு உடலில் துாவி விளையாடியது. மிக மெல்லிய நீர்தான் என்றாலும் நீரில் வேகமிருந்தது.  மென்சாரல் உடலெங்கும் நனைக்க சில்லிப்பாக வழிந்தோடிய நீர் கைகளின் வழியே உள்ளுக்குள் சிலிர்ப்பாக இறங்க.. நிஜமான சொர்க்கம் இதுதானோ எனத் தோன்றியது.

பெரிய அருவியொன்றின் கசிவாகயிருக்கும் என்றார் தாத்தா. கீழேச் செல்ல செல்ல நீரின் அகலம் மேலும் குறைந்து வெண்பட்டு வேட்டியின் கரையாக மாறி கண்களுக்கு எட்டும் தொலைவில் அதிக நீரற்றப் பள்ளத்தில் விழுந்தது. பெரிய ஓடையின் பள்ளம் அது. நீரின் தடங்கள் பதிந்தும் பதியாமலுமாக வறண்டிருந்தது. சிறுக் குட்டையாக தேங்கியிருந்த நீர் அருவி வழிந்து விழும் இடத்தைத் தவிர்த்து மீதமிடத்தில் அசைவற்றிருந்தது. சுற்றிலுமான பெருமரங்கள் இவ்வோடையை நம்பி பிழைப்பனவாகவும் நீரற்றுப் போனதில் சற்றே வாட்டமுற்றதுப் போலவும் தோன்றியது. கட்டாறுகள் எல்லா நேரமும் ஒன்றுப் போலிருப்பதில்லை. திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றார் தாத்தா.

இத்தனை அழகுகளையும் வஞ்சனையோடு தனக்குள் மட்டும் பொதித்து வைத்திருக்கும் காட்டின் மீது கோபம் கூட வந்தது. மெதுவாக நடந்ததில் துாரத்து மரங்கள் நெருங்கி கைத்தொடும் அருகாமைக்கு வந்திருந்தன. அதன் அடர்வுகள் தலைக்கு மேல் குடை விரித்ததுப் போல் நிழல் பரப்பியிருந்ததில் சூரியனுக்கும் எங்களுக்குமான தொடர்புகளற்று போயிருந்தது அந்த நண்பகல் பொழுதில். சற்றுத் தொலைவில் குடிசைகளின் தலைப்பாகங்கள் தெரிய அதை நோக்கி நடந்தோம். நகரத்தின் எந்த சாயல்களுக்குள் தன்னை ஒப்புக் கொடுக்காத வீடுகளும் மனிதர்களுமாக நிரம்பியிருந்தது அந்த மிகச் சிறிய ஊர். தாமரையிலைப் போன்ற பெரிய இலையில் மலை வாழைப்பழமும் கருப்பட்டியும் வைத்து பரிமாறினார்கள். தேனில் துவைத்தெடுத்த வேர்ப்பலாவும் நறுக்கிய சிறிய வெங்காயம் சீராகத் துாவப்பட்ட ராகி ரொட்டியும் சுவையாக இருந்தன. தொலைந்துப் போன கலோரிகளை மீண்டும் ஏற்றிக் கொண்ட தென்பில் எங்களின் நடைத் துள்ளாட்டமானது.

ஆணும் பெண்ணுமாக மயில்கள் இரண்டு சற்றும் எதிர்பாராதத் தருணத்தில் பக்கவாட்டில் கடந்தன. மனத்தில் வந்துப் போன உணர்வு கிளர்ச்சியா.. பயமா..  என புரியவில்லை என்றாலும் கடந்துப் போனவைகளை விட்டு கண்ணெடுக்க முடியவில்லை. அன்று இரவு கூட என் கனவில் அந்த மயில்களைப் பார்த்தேன். அம்மா.. காட்டுமயிலு எவ்ளோ பெரிசு தெரியுமா.. என்றேன். “காட்டுக்கு போனீயாடா..” என்று பதறினார் அம்மா. ”தாத்தாவுக்கும் பேரனுக்கும் வேற பொழைப்பே கெடையாது..” அப்பா சுலபமாகக் கடந்துப் போனது தந்த சுதந்திரத்தில் எனக்கும் தாத்தாவுக்கும் வீட்டை ஏமாற்ற அதிக சிரமம் இருப்பதில்லை.

நிறைவுக் கூட நிரம்பி வழிந்து விடும் சில நேரங்களில். ஒண்டவியலாதபடி நடுக்காட்டில் பெய்ந்து விடும் பெருமழையை விட செந்தட்டியின் முட்கள் அதிகம் படுத்தி விடும். அடங்காத அரிப்பு எரிச்சலைக் கொண்டு வந்து விடுகிறது. வழித்தவறி மாட்டிக் கொண்டத் தருணமொன்று இரவு நேர தரிசனத்தையும் எனக்கு சாத்தியமாக்கியது. பொழியும் நிலவுக்குள் கோட்டோவியமாக வெளிப்படும் காடு வரை எனக்கு பழக்கம்தான். ஆனால் நள்ளிரவுக் காடுகள் சற்றே திகிலுாட்ட வைக்கின்றன.

காட்டுவாசிகளின் குடிசையில் இரவு தங்க நேரிட்டபோது நெருப்பு மூட்டத்தில் குளிரையும் பயத்தையும் ஓட்ட முயற்சி செய்தேன். மூட்டப்பட்ட தீயின் ஒளிக்குள் கானகம் முழுவதையும் திணித்துக் கொள்ளத் தோன்றியது. கீறலாகத் தெரிந்த நிலவுக் கூட இருட்டை விரட்ட அஞ்சி மேகத்திற்குள் ஒளிந்துக் கொண்டது. இரவு உணவாக அவர்கள் அளித்த எருமைப்பால் தயிறுடன் கலந்த காட்டுயானம் சோறு உள்ளே இறங்க மறுத்தது. கானகத்து இருட்டை கவ்வித்தள்ளும் முயற்சியில் இரவு முழுவதும் நெருப்புத் தேவையாக இருந்தது… அம்மனிதர்களின் அருகாமையும்தான். மலைவாழையும் ஆகாசக்கருடன் கிழங்கு மாவுமாக வழியனுப்பினார்கள். இந்த மாவு பாம்பு விஷத்தை முறித்து முடக்கி விடும் என்றார் வரும்வழியில் தாத்தா.

”நான் ஒருத்தி இருக்கேங்கிற நெனப்பெல்லாம் உங்களுக்கெங்க இருக்கப் போவுது.. காடு.. காடுன்னு.. அதையே கட்டிக்கிட்டு அழுவ வேண்டியதுதானே..? கட்டியவள் அழத் தொடங்க சமாதானப்படுத்தும்விதமாக படுத்தவாறே அவளை அணைத்து இழுத்தேன். என் கனவுகளுக்கு மதிப்பளிக்கிறாளோ இல்லையோ.. நான் தனித்திருக்கும் தருணங்களை அனுமதிக்கும் தன்மைக் கொண்டவள்தான் என் மனைவி. தங்கையைப் பற்றிய கவலை.. ஒரு வாரப் புழுக்கம்.. சிறுத்தைப்புலி விஷயத்தை நான் இத்தனை சுலபமாக எடுத்துக் கொண்டதால் ஏற்பட்ட பகிர்தலற்ற நிலை போன்றவைகள் அவளின் கோபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று தோன்றியது.

நேற்று அந்த சிறுத்தைப்புலி பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் மேற்புறம் திறந்த குளியலறைக்குள் தஞ்சமடைய யாருக்கு வாழ்வு.. யாருக்கு சாவு என்பது விளங்காமலேயே இறுதியாக மயக்க ஊசி மூலமாக போராட்டம் முடிவுக்கு வந்தது. வனகாவலர்களும் அதிகாரிகளுமாக எடுத்திருந்த குத்தகை நேற்றோடு முடிவுக்கு வந்திருந்தாலும் இறுக்கத்தின் முனை முற்றிலும் அவிழாத நிலையில் அடைப்பட்ட வீடுகள் இன்னும் திறக்கப்பபடவில்லை. வீட்டின் வராண்டா.. மாடிப் படிக்கட்டு என எல்லாமே வலுவான இரும்பு கிராதிக்குள் அகப்பட்டுப் போனதில் குரல்கள் எதிரொலிப்பதான பிரமை எனக்கு. ஏதோ சொன்னாள் அவள். ”என்னப்பா சொன்னே..?” என்றேன்.

”எப்பப் பாத்தாலும் கனவுதான்.. அப்டி என்னாதான் வானத்துல கொட்டிக் கெடக்கோ..” என்றாள் அதே கோபத்துடன்.

இதைப் போன்றக் கேள்விதான் எனக்கும் தாத்தாவுக்குமிடையே ஊடாடிக் கொண்டிருந்தது.. ”அப்டி காட்ல என்னதான் இருக்கோ..?” பதிலாக என்னையும் தனக்குள் பிணைத்துக் கொண்டது காடு. காடுகளில் வழிந்தோடும் பால் நிலவு பித்தங்கொள்ள வைப்பதாக இருக்கும். புடைப்பாகப் பிணைந்துக் கிடக்கும் வேர்களும் மண்டிக் கிடக்கும் புதர்களும் வழிந்தோடும் நிலவைத் தாங்கித் தனக்குள் பொதித்துக் கொண்டது போல இறுமாந்து நிமிர்ந்திருக்கும். கிளைகளிலும் இலைகளுக்குள்ளும் சிறைப்பிடித்த நிலவை சில மரங்கள் சுயநல மிகுதியில் அடம்பலாக்கி தனக்குள்ளே மறைத்துக் கொள்ளும் சிறிதும் கருணையின்றி. பொழியும் பால் ஒளியை உண்டப்பின் மிகுதிகளை புதர்களுக்குக் கடத்தி அவற்றைக் கோட்டோவியங்களாக்கி விடும் சில நன்மரங்கள். வளைந்து நெளிந்தோடும் மரங்கள் நிழலும் வெள்ளொலியுமாக நிலவைத் தன்னகப்படுத்த நீண்டு நெடிந்த மரங்கள் நிலவுத் தொட்டு விடும் துாரமென்ற தொடர் நம்பிக்கையில் தனது முயற்சியைத் தொடர்ந்துக் கொண்டேயிருந்தன. விட்டக்குறையாக தன்னை தொட்டு விடும் நிலவுக்குள் புல்வெளிகள் முகம் புதைத்து பூரிக்கும். மெல்லிய சாரலும் பனியும், சலசலக்கும் இலைகளை சலனமற்று காட்ட.. மெத்தென்ற புல்வெளிகள் பூச்சிகளுக்கும் பாம்புகளுக்கும் கூட ஏதுவாகதான் இருக்கும்.

”தாத்தா.. ஏதாவது மிருகம் வந்துடுச்சுன்னா என்னா செய்வே..?” என்பேன். கேட்கும்போதே தாத்தாவின் விரல்களை அழுத்தமாக இறுக்கிக் கொள்வேன்.  ”அதுங்களுக்கும் நம்பள வுட்டா யாருதான் இருக்கா..?” என்பார். புரிந்ததுப் போல தலையாட்டிக் கொண்டேன். என்னவென்று கேட்க விழையும் என்னுடைய குறுக்கீடு அவரை எதனுள்ளிருந்தோ நகர்த்தி விடும் என்பதாக தோன்றுவதில் என்னால் கேட்க முடிவதில்லை. புரிந்த சில விஷயங்கள் எனது தோழர்களிடம் பெருமையடித்துக் கொள்ள போதுமானதாக இருக்கும். ஒருமுறை காட்டுவாசி அக்கா ஒருவர் புலியைப் பற்றிச் சொன்னத் தகவல்களை சொந்த சரக்காக்கி அவிழ்த்து விட அதனை நம்பாதத் தோழர்களும் இருக்கவே செய்தனர்.

”புலி பொம்பளப்புள்ளங்களாட்டம் வெக்கப்படுமாம்..” புலி பொதுவாக சாந்தமும் வெட்கப்படும் சுபாவமும் உடையது என்று நான் சொல்வதை அவர்கள் நக்கலாக எதிர்க்கொள்வார்கள். நானும் விடுவதில்லை.

”ஆமா.. வெக்கப்பட்டு குச்சுக் கட்டிக்கிட்டு ஒக்காந்துக்கும்.. சீரியஸா பேசும்போது கிண்டலடிக்காதீங்கடா..” பதிலில் கோபத்தை ஒளித்துக் கொண்டு தொடர்வேன். ”நீ பசிக்கும்போது சோறு திங்க மாதிரி அதுவும் பசிக்கும் போது சாப்டுது.. எல்லா நேரமுமா பசிக்கும்..? பசியில்லாத நேரத்துல யாரையும் எதுவும் பண்ணாது தெரியுமா.. மனுஷன்னா வயசானக் காலத்தில ஒக்கார வச்சு சோறுப் போடுவோம்.. புலிங்களுக்கு யாரு இருக்கு.. தானா தனக்கு வேணுங்கறத வேட்டையாடிக்குணும்.. முதுமை.. இயலாமை.. யாரும் நம்பளக் கண்டுக்கலையேங்கிற தனிமை உணர்வு எல்லாம் சேரும் போதுதான் அதுங்களுக்கு கோவம் வந்துடுது.. மத்தப்படி அது சாந்தமான மிருகந்தான்.. ஆனா ஒண்ணு மிருகங்கள்ல்ல நல்லது.. கெட்டது.. பழகினது.. பழகாததுன்னு எதுவுமில்ல..” என்றேன்.

“நெனப்பு.. உயிரெல்லாம் எங்கயோ இருக்கு.. உருவம் மட்டுந்தான் இங்க இருக்கு..” மனைவியின் புலம்பல் என்னை நடப்புக்குள் இழுத்தது.

”சகலைக்கிட்டே நானே பேசி வளைக்காப்புக்கு வேறொரு நாள் பாக்குறேன்.. போதுமா.. நீ கவலய வுடு..” என்றேன்.

“என்ன பேசுவீங்க.. சிறுத்தையும் புலியும் வந்தா தடியால அடிச்சு விரட்டிடுலாம்னா..? பாத்திரக்கடைதானே.. எங்க வச்சாலும் ஓடும்.. பேசாம எல்லாருமே வெளியூர்ப்பக்கம் போயீட்டா இந்த பிரச்சனையலெ்லாம் இல்லாம நிம்மதியா இருக்கலாம்ல்ல..” நக்கலா.. கிண்டலா.. கெஞ்சலா.. என்று கணிக்கவியலாதத் தொனியில் பேசினாள் என் மனைவி.

”பிரச்சனைக்குள்ளதான்டீ தீர்வும் இருக்கு.. அதான் இயற்கை.. செங்காந்தாள் பூ பாத்திருக்கில்ல.. அழகா.. செவப்பும் மஞ்சளுமா இருக்குமே.. லேடீஸ்ஃபிங்கர் பூன்னு கூட இதுக்கு பேரு வச்சிருக்கலாம்.. பாலீஷ் போட்ட நெயில் மாதிரி அத்தனை அழகு.. ஆனா அதோட கிழங்குல விஷமிருக்கு.. அதுக்காக அதை ஒதுக்கி வச்சிமின்னா நட்டம் நமக்குதான்.. அதைப் பசுமாட்டு கோமியத்துல ஊற வைச்சு அந்த நஞ்ச முறிச்சுட்டோம்னா வலிக்கெல்லாம் நல்ல மருந்துன்னு சித்த மருத்துவம் சொல்லுது..”

”போதும்.. ஆரம்பிச்சுடாதீங்க.. நீங்க நிறுத்தறத்துக்குள்ள கீழ கொழந்த எழுந்துக்குவா..” என்றாள். அப்போதுதான் பார்ப்பதுப் போல் அவளைப் பார்த்தேன். நிலவொளி அவளின் அழகைக் கூட்டியிருந்தது. துறுதுறுத்தக் கண்களுக்குள் கடந்த நாட்களின் வருத்தம் பிம்பமாக படிந்திருந்தது. ”கவலைப்படாதடீ..” என்றேன். வாஞ்சையான என் பேச்சை நம்பலாமா.. வேண்டாமா..“ என்பதுப் போல என்னைப் பார்த்துத் திருதிருவென விழித்தாள். திருமணமானப் புதிதில் காடுக் குறித்த எனது அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்ளும் போதுக் கூட அப்படிதான் விழிப்பாள். பெண்பிள்ளைகளுடன் பிறந்தவனில்லை நான். பெண் தோழிகள் என்றும் யாருமில்லை. இவளைத் தோழியாகவும் வரிந்துக் கொள்ளும் என் மனதின் போக்கிற்கு முடிந்தவரை நியாயம் செய்யும் நல்ல மனைவி இவள்.

எனக்கும் என் மனைவிக்கும் ஒத்த அலைவரிசைக்குள் பயணிக்க முடிகிறதோ இல்லையோ எனக்கும் தாத்தாவுக்குமான அலைவரிசைகளில் என்றும் குறைப்பாடே இருந்ததில்லை. புதிதுபுதிதான அவரது அனுபவங்கள் என்றுமே அலுப்பதில்லை.

”ஒருநாளு நானும் எங்கூட்டாளியும் பொழுது விடியறப்பவே காட்டுக்கு வந்துட்டோம்.. அப்போ காடு எனக்கு புதுசுன்னாலும் அன்னைக்கு ரொம்ப அழகாயிருந்தாப்பல தோணுச்சு.  அப்பவே காட்டுக்குள்ள சன நடமாட்டமிருந்துச்சு. அவங்கள்ளாம் இங்கயே வாழறவங்கதான்னு சொன்னான் எங்கூட்டாளி.. சும்மாட்டுத் துணிய இடுப்புல சொருவிக்கிட்டு பொம்பளையாளுங்க வெறவு வெட்ட போயிட்டுருந்தாங்க.. அவங்க போறப்பக்கம் நெறைய எலந்தமரமிருந்துச்சு.. எலந்தப்பழம் பொறுக்கலாம்ன்னு அவங்க பின்னாடியே கௌம்புனோம்..”

”அப்றம் என்னாச்சு..”

”ஒண்ணும் ஆகல. பட்டுபட்டுன்னு காஞ்சக் குச்சிங்கள ஒடைச்சு வெறவுக்காக கட்டிக்கிட்டாங்க.. எலந்தப்பழம்.. எலுமிச்சம்பழமெல்லாம் பொறுக்கி சாக்குல வச்சுக்கிட்டாங்க… வெறவுக்கட்டை தலயில ஏத்திக்கிட்டு அவங்க கௌம்ப நாங்களும் பின்னாடியே நடந்தோம். போற வழியெல்லாம் வண்ணாத்திப்பூச்சி புடிக்கறது.. மரத்துல நம்பர் போடறது.. செடியில கல்லத் துாக்கிப் வீசறது. ஓணான் அடிக்கிறதுன்னு எதாவது பண்ணிக்கிட்டேப் போனோம்.. திடீர்ன்னு ஏதோமாதிரியான சத்தம்.. காட்டுசனங்க எங்களப் பாத்து சத்தம் போடாதீங்கங்கிற மாதிர வாயில வெரல வச்சுக் காட்டுனாங்க. அப்டியே நின்னோம். எங்களுக்கு எதுவும் தோணல.. சொல்லப்போனா நிதானிக்கக் கூட நேரமில்ல.. நுாறடி துாரமிருக்கும்.. புதர் மறைவுக்குள்ள ஏதோ ஒண்ணு சடக்குன்னு ஓடி மறைஞ்சாப்பல இருந்துச்சு.. அவங்க நடக்க ஆரம்பிச்சாங்க.. மெதுவா எங்களையும் அவங்க பின்னாடியே வரச் சொன்னாங்க.. சின்னச் சின்னதா இருந்துச்சு அவங்க குடிசையெல்லாம். சின்னத்தட்டுல அவிச்சக் கிழங்க வச்சு அதுல ரசத்தை ஊத்திக் கொடுத்தாங்க.. தின்னுப்புட்டு உடனே கௌம்பச் சொன்னாங்க.. பலாப்பழம் பறிக்க போவுணும்னு சொன்னோம்.. ஆனா அவங்க காட்டுக்குள்ள போக வேணாம்னு கன்டிசனா சொன்னாங்க…”

முக்கியமாக ஏதோ சொல்லப் போகிறார் என்பதை உணர்ந்து திகிலோடு அவரைப் பார்த்தேன்.

”ஏங்க்கா..“? என்றோம்.

”அங்க சிறுத்தபுலி நடமாடுச்சுல்ல..” சாதாரணமா சொல்லுச்சு ஒரு அக்கா.. சட்டென ஓடி மறைந்ததாக தாத்தா சொல்லியிருந்ததை உருவப்படுத்தியதில் நான் மிரண்டுப் போனேன். தாத்தா அதை உணராமல் பேசிக் கொண்டிருந்தார். ”அது ஒரு ஆம்பளப் புலி.. இணையறத்துகாக பொம்பளப்புலிய தேடுறப்ப அதோட மூச்சுச்சத்தம் இப்டிதான் கேக்கும்ன்னு அந்தக்கா சொல்லுச்சு..” என்றார்.

”உனக்கு பயமாயில்லையா தாத்தா..” என்றேன்.

”பயந்தா எல்லாத்துக்கும் பயந்துக் கெடக்க வேண்டியதுதுான்.. நாமதான் புலி.. சிங்கம்னு பெரிசுங்களப் பாத்து பயந்துக்கிறோம்.. மானும் மயிலும் கெடைச்சா கறியாக்கிடுறோம்.. ஆனா காட்டுச்சனங்களுக்கு எல்லாம் ஒண்ணுதான்.. சனங்க மிருகங்களை அனுசரிச்சுக்குவாங்க.. மிருகங்க சனங்கள அனுசரிச்சுக்குங்க.. இதுங்க ரெண்டையும் காடு அனுசரிச்சுக்கும்.. காட்டு ஆளுங்கள காட்டுக்குள்ள புழங்க விட்டாத்தானே நாலும் தெரியும்.. ரோடு போடறேன்.. தண்டவாளம் போடறேன்.. சுரங்கம் தோண்டுறேன்னு அவன வெரட்டுனா காடும் அழிஞ்சு அவனும் அழிஞ்சுப் போவான்..காட்டுச்சனங்க கத்தினா கேக்கறது யாரு.. கொரவளையப் புடிச்சுடுறானுங்களே.. மனுசனுங்க காட்டுக்குள்ள பூந்துக்கிட்டு வந்துடுச்சு.. வந்துடுச்சுன்னா.. யாரு என்னா செய்ய முடியும்..“ சாகும் வரை புலம்பிக் கொண்டிருந்தார்.

”நீங்க தங்கச்சி மாப்ளைக்கிட்ட பேசி முடிக்கறதுக்குள்ள அவளுக்கு புள்ளையே பொறந்துடும்..” என்றாள் சலிப்பைப் புலம்பலில் ஏற்றி.

”சரி வுடு.. புள்ளைக்கு சிறுத்தப்புலின்னு பேரு வச்சிடலாம்..” என்றேன் படுத்தவாக்கில் கண்களை மூடிக் கொண்டே.

”எங்கர்ந்துதான் எங்கப்பா உங்கள கண்டுப்புடிச்சாரோ.. எதுக்கெடுத்தாலும் விளையாட்டுதான்.. வயித்துப்புள்ள வர்ற நாளு கடவுளுக்குதான் வெளிச்சம்.. பேசாம வெளியூர்ல எதாவது மண்டபம் புடிச்சு வளைக்காப்பு வச்சுடலாமா..?” என்றாள் ஆர்வமாக.

”அப்ப காட்ட வுட்டுட்டு நாட்டுக்கு போவுணும்ங்கிற..” என்றேன்.

”காடு.. காடு.. காடு.. அந்த சனியன வுட்டுட்டு வெளிய வந்துத் தொலைங்க..” எரிச்சலாக எழுந்துக் கொண்டாள், அத்தனைக் சீக்கிரமாக வந்து விட முடியாது என்பதை உணராமலேயே. காடு எப்போதும் ஏதோ ஒன்றை உணர்த்திக் கொண்டேயிருக்கும். தன்னுள் அடங்கியிருக்கும் உயிர்க்கோளங்கள் வழியாகவும்.. அல்லது அல்லாமலும். இலாபநட்டங்களை முன்னிருத்தும் தேடலில் உணர்தல்கள் நகர்ந்து விடுகின்றன. விருப்புவெறுப்பற்ற வெளிகளை ஊடுருவ விழையும் காட்டை நோக்கியப் பயணத்தில் காடுகள், தான் உணர்த்த வருபவற்றை உணர்த்தி விடுவதாகவே தோன்றுகிறது எனக்கு.

யானையை நேரில் பார்த்த அன்று நான் பிரமித்துத்தான் போனேன். ”எப்பா.. யானை எவ்ளோஒஒ பெருசு.. இவ்ளோஒஒ பெரிய வயித்துக்கு அது எவ்ளோ சாப்புடும் தாத்தா..” என்றேன்.

”மரம்.. செடி.. கொடியெல்லாம் வேரோடு புடுங்கியில்ல சாப்டும்..”

”இப்டிசாப்டா தீர்ந்துப் போயிடாதா..” அத்தனைப் பெரிய உடலுக்கு பொருந்தாத அதன் சிறியக் கண்கள் எனக்கு நினைவிற்கு வந்தது. ஆபத்தற்ற வெளியை அச்சிறு கண்கள் சுட்டும் தைரியத்தில்தான் அதன் தோற்றத்தில் இத்தனைக் கம்பீரமோ என்று தோன்றியது.

”தீர்ந்துதான் போவும்.. தீர்ந்தப்பொறவு அடுத்தக் காட்டுக்கு போயி பசியாறும்.. அதுக்குள்ள இந்தக் காட்டுல அது விட்டுட்டுப் போன மரமெல்லாம் துளுத்து எழுந்திரிச்சிருக்கும்.. திரும்பவும் தீர்ந்துப் போச்சுன்னா அந்தப்பக்கம் போவும்..”

”நடமாடும்போது நம்ப குறுக்க வந்தோம்னா என்ன தாத்தா பண்ணும்..” என் குரல் பயத்தில் மெலிதாகியிருந்தது. அவரை இறுகப் பற்றிக் கொண்டேன். நாம குறுக்கே புகுந்துதான் ரொம்ப நாளாச்சே.. முணுமுணுத்துக் கொண்டார். எங்கள் கிராமம் நோக்கி எப்போதாவது யானைக் கூட்டங்கள் படையெடுப்பதுண்டு. தெரிந்தும் தெரியாமலுமாக முள்வேலி  அமைப்பது.. மின்சாரம் பாய்ச்சுவது.. உயரமானப் படலில் அமர்ந்து அதன் வரவை கண்காணித்து வெடி வைத்து விரட்டுவது என வருமுன்னே ஓட்டி விடுவார்கள். “ஆடுன காலும் பாடுன வாயும் நிக்காதுங்கிற நியாயமெல்லாம் மனுசாளுக்கு மட்டுந்தான்“ என்பார் தாத்தா. மான்களோ.. மற்ற சிறு விலங்குகளோ தலைக்காட்டும் தினத்தன்று பிளவுப்பட்ட உறவுகள் கூட ஒன்றுக்கூடும் விருந்து தினமான மாறி விடுவதில் வனத்துறையினருக்கு தகவல்கள் பறப்பதில்லை.

சிறுத்தைப்புலி திறந்துக் கிடந்த மொட்டை மாடிக்கு வருமென்று எனக்கு ஏன் தோன்றாமல் போனது. அதன் மூச்சுக்காற்று நான் அணிந்திருந்த லுங்கியில் அனல் காற்றாக வீசி படபடக்க வைக்கும்போதுதான் அது என்னை மௌனமாக பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். மயக்க மருந்து ஊசியில் மயங்கி கூண்டில் பயணப்பட்ட சிறுத்தைப்புலி எப்படி என் முன்னே..? அய்யய்யோ.. படிக்கட்டு வழியே தாவி வீட்டுக்குள் புகுந்து விட்டால்..? மனைவியும் பச்சிளம் குழந்தையும் உறங்குகிறார்களே. பதைத்துப் போனது மனம்.  இவையேதும் பற்றிய அக்கறையின்றி இறுமாப்பாக அமர்ந்திருந்தது அந்த சிறுத்தைப்புலி. எத்தனைத் தடுப்புகள் போட்டாலும் என்னை என்ன செய்து விட முடியும் என்பது போலிருந்தது அதன் தோற்றம். அதனை நேருக்கு நேராகப் பார்க்கும் போதுதான் அது என் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். அதில் படிந்துக் கிடந்த உணர்வு நிச்சயம் பசிக்கான தேடல் அல்ல. ஏதோ ஒன்றை பேசித் தீர்க்கும் ஆக்ரோஷம் அதில் இருந்தது. உணவுத் தேவைக்காக என்னை அணுகாது என்று நிச்சயமாகத் தெரிந்ததில் நானும் தெளிவானேன். பேரம் பேசத் தொடங்கினேன். அதுவும் அதற்கு தயாராகவே இருந்தது. என் மனைவியையும் மகளையும் அணுகாதிருக்க ஈடாக எதை வைப்பது என்ற முடிவு இன்னும் எங்களுக்குள் எட்டப்படாத விவாதமாகவே நகர்ந்துக் கொண்டிருந்தது.

கவிழ்ந்துப் படுத்திருந்த என்னைப் புரட்டினாள் என் மனைவி. ”யாருமில்லேன்னா கவுந்துக் கெடக்கறது.. ஆள் வந்துட்டா வானத்தை வெறிக்கறது.. என்ன மனுசனோ..” துாக்கம் தழுவியக் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தேன். மனம் இன்னும் விவாதக் களத்திலிருந்து வெளி வரவில்லை. உடலகரீதியான பொதுவெளியிலிருந்து குடும்பரீதியாக ஒருமைப்படுத்தும் மனிதர்களால் கூட சகமனிதனின் எண்ணங்களையோ உணர்வுகளையோ கட்டுப்படுத்தவியலாது என்ற உண்மையை உணராதவளாக அருகில் அமர்ந்திருந்த என் மனைவி விலங்குகளின் வெளிக்குள் மனிதக்காற்று நுழைவதைப் போல என்னை பலவந்தமாக ஆக்கிரமிக்கத் தொடங்கினாள். “தங்கச்சி ஃபோன் பண்ணுனா..”

”இந்த நேரத்துலயா..?” அதிர்ந்தேன். ”நல்லாயிருக்காள்ல..?”

”அடிவயித்துல வலி சுருக்குசுருக்குன்னு குத்துதுன்னு பயந்துப் போயி அழுதா.. நாள் இன்னும் நெருங்கல.. பொய் வலியாதான் இருக்கும்.. சோம்புக் கஷாயம் வச்சு குடிடீன்னேன்.. ஓஒன்னு அழுவுறா.. தலைப்பிரசவம்ன்னா பயமாதானே இருக்கும்..” அவள் கண்களில் நீர்க் கட்டியிருந்தது. அவளின் கையாலாகாத நிலைமை எந்நேரமும் கோபமாக மாறி என்மீது திரும்பக் கூடும். ”பொண்டாட்டிக்கு ஆறுதலா இருப்போன்னு நெனைக்காம அவரு போக்குலயே பேசிக்கிட்டுப் போறாரு மாப்ளை.. ஆளுங்க இல்லாத வீட்ல பொண்ணக் கட்டித் தொலச்சதுக்கு நல்லாவே அனுபவிக்கிறேன்.. தாயும் புள்ளயும் தனித்தனியா ஆவறதுக்குள்ள இன்னும் எத்தனை அனுபவிக்கணுமோன்னு பொலம்பித் தள்றாரு..”

”பேசாம ஹாஸ்பிடலுக்கு அழைச்சுட்டுப் போவச் சொல்லு..” என்றேன் வெடுக்கென்று.

”போவ தெரியாமத்தான் இங்க பேசிக்கிட்டுருக்காங்களா..? வளைக்காப்பு போடல.. மாசம் நெறயல.. பெரிய மனுசங்கன்னு யாரும் கெடையாது.. இத்தனை சிக்கல் இருக்கு.. பாவம்.. ரெண்டும் தனியா கிடந்து தவிக்குதுங்க..” அழுதாள். ”நானும்  தவியா தவிச்சுக் கெடக்கிறேன்.. எல்லாத்தையும் வுட்டுப்புட்டு கவுந்தடிச்சுக் கெடந்தா மாடிக்கும் கீழுக்குமா நடந்தே செத்துப் போயிடுவேன்..” சீறலாக விழுந்தது வார்த்தைகள் அடம்பலான அருவி நீரைப் போல.

“சரி.. இப்ப எப்டியிருக்காளாம்..?”

“சோம்புக் கஷாயம் வச்சுக் குடிச்சதுல வலி விட்டுப் போயி இப்பதான் படுக்கப் போயிருக்கான்னு சொன்னாரு மாப்ள..”

“அதான் சரியாப் போச்சுல்ல.. நாளைக்கு ஒரு எட்டுப் போயீ என்னான்னு பாத்துட்டு வந்துடுவோம்.. இப்ப பேசாமப் படு..” படுத்தவாறே இடுப்போடு அணைத்துக் கொண்டேன். “ம்க்கும்.. இதுக்கொண்ணும் கொறச்சலில்ல..” நல்ல மூடில் இருக்கிறாள். “எங்கண்ணுல்ல.. கொஞ்ச நேரம் காத்து வாங்கீட்டு வந்துடறனே… உள்ள ஒரே புழுக்கமா கெடக்கு.. நீ அலையாதே.. நானே வந்துடுறேன்டா செல்லம்..” அம்மாவை கொஞ்சுவது பிடிக்காததுப் போல குழந்தையின் அழுக்குரல் சன்னமாக ஒலிக்க “பாப்பா முழிச்சிக்கிட்டா..“ என்றபடி விழுந்தடித்துக் கொண்டு ஓடினாள்.

பாசம் கூட ஒருவகையான போதைதான். மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் காட்டும் போதைக்குள் மனிதக்குலம் தழைக்கிறது. காட்டிற்கும் போதைக்குள் ஆட்படுத்திவிடும் சக்தி உண்டு. அது என்னையும் தாத்தாவையும் தனக்குள் இறுக்கிக் கொண்டிருப்பதை நாங்கள் உணராமலில்லை. பருவநிலை மாற்றங்கள் பழகிப் போனதில் மழைக்காலங்களில் நனையவும் நடுங்கவும் கற்றுக் கொண்டோம். வெயில்கால சூரியனை மரங்களுக்குள் மறைத்து.. மறக்கப் பழகிக் கொண்டோம். சிலிர்ப்புடன் நகர்ந்தன குளிர்நாட்கள். காடுகளுடனான இரகசியங்கள் கூடிப் போனதில் எங்கள் இருவருக்குமான பேச்சுக் கூட குறைந்திருந்தது. மேகங்களின் கருமையை துடைத்தெடுப்பது போல நீண்டு நெடிந்திருந்த பெரு மரங்களுக்கும்.. அம்மரங்கள் அனுமதித்த இடைவெளிக்குள் நுழைந்த சூரியனை தடுத்தே தீர வேண்டுமென்ற வெறிக் கொண்டதுப் போல படர்ந்து அடர்ந்துக் கிடந்த சிறு மரங்களுக்கும்.. குத்தாக வளர்ந்து புதர்களாகி்ப் போனச் செடிகளுக்கும்.. கால்களுக்கு மெத்தையிடும் புல்வெளிகளுக்கும்.. நேரங்காலமின்றி பேசும் கதைகள் ஒருபோதும் அலுப்பதேயில்லை. சொல்ல முடியாதக் கதைகளும் சொல்லி முடியாதக் கதைகளுமாக நேரம் நிரப்பிக் கொண்டேப் போவதில் மனம் ஆழமான சந்தோஷவெளிக்குள் பயணப்பட்டுக் கொண்டேயிருந்தது.

கார்த்திகை மாதங்களில் குளிர்ந்தக் காட்டைக் சிவப்பும் வெளிர்மஞ்சளுமான காந்தள் மலர்கள் குவிந்தும் விரிந்துமாக பூக்கரங்களால் வளைத்துக் கொள்ளும். அழகின் செருக்கில் நிமிர்ந்தும் மழையின் அழகில் பணிந்துமாக தோன்றும் இம்மலர்கள் தோழமைக் காட்டி அணைத்துக் கொள்ளும். இலை அடர்வுக்குள் ஒளிந்துக் கொள்ளும் இரவுப் பனியை மெல்லியச் சாரலாக காற்று வெளியே இழுத்து விடும். காய்ந்துதிர்ந்த சருகுகள் கூட இக்குளிப்பாட்டலில் நனைந்து மிருதுக் காட்டும். கட்டியங்கூறும் கருங்குரங்குகள் வெகு நேரமாக அசையாதிருக்கும் எங்களால் எந்த பாதிப்பும் நேராது என்பதை ரகசிய சங்கேதமாக்கி மான்களுக்கு அனுப்பும். அறிந்த முகங்களானதில் பெயர் தெரியாத பறவைகள் சலம்பித் திரிவதில் தயக்கமேதும் கொள்வதில்லை.

குழந்தையோடு மேலேறி வந்தாள் என் மனைவி. “மணி பன்னெண்டாவப் போவுது. கீழ வர்றீங்களா.. இல்லையா.. உசிர கைலப் புடிச்சிக்கிட்டு படுத்துக் கெடக்கேன்.. கண்ண மூடுனா அந்த பாழாப்போன சனியன்தான் வந்து நிக்குது..” பயந்திருந்தாள். குழந்தையை மடியில் கிடத்திக் கொண்டு என்னருகே அமர்ந்துக் கொண்டாள். இவள் காட்டும் அன்பை என்னால் திருப்பிச் செலுத்த முடியவில்லையோ என உறுத்தல் தோன்ற நானும் அவளிடம் நெருங்கி அமர்ந்துக் கொண்டேன்.

இருவாச்சிப் பறவைக் கூட தன் துணையை விட்டுத் தராது என்பார் தாத்தா.  நீளமான மூக்கும் கருப்பும் வெள்ளையுமானத் தோற்றமும் கொண்ட அப்பறவை இறகுகளை விரித்துப் படபடத்து பறக்கும்போது வயிற்றில் ஏதோ உருள்வதுப் போலிருந்தது. தாத்தாவின் கைகளை இறுக்கிக் கொண்டேன். என்னைத் திரும்பிப் பார்த்தார் தாத்தா. ”பன்னென்டு வயசுப்பய.. ஓடற பாம்ப புடிக்கிற வயசு..” சிரித்தார். ”இந்தப் பறவை ஒண்ணை விட்டு ஒண்ணு இருக்காது.. பெண் பறவை இங்க எங்கையோதான் இருக்கும்..” என்றார்.  அடிக்கடி பார்க்க நேர்ந்ததில் அதன் நீண்ட மூக்கு சிநேகமாகிப் போனது. “என் செல்ல ஹார்ன்பில்..“ மனைவியின் மூக்கைக் கிள்ளிக் கொஞ்சினேன். நெகிழ்ந்திருந்தாள்.

“பேசாம ஃபாரஸ்ட் ஆபிசுல வேலைக்கு சேர்ந்திருக்கலாம் நீங்க..” நெகிழ்ந்துப்போகும் தருணங்களில் என் மனதிற்கு பிடித்ததைப் பேசுவதாக நினைத்துக் கொண்டே எதையெதையோ பேசி விடுவாள்.

“அத விட காட்டுவாசியா இருந்துருக்கலாமின்னு சொல்லு..”

”இப்ப மட்டும் என்னா காட்டுமிராண்டியாதான் இருக்கீங்க..” என்றாள்.

”காட்டுவாசின்னா காட்டுமிராண்டின்னு அர்த்தமில்லடி.. புலிய முறத்தால அடிச்சு வெறட்டுன பொம்பளைங்கள்ளாம் அங்கதான் இருக்காங்க..” என்றேன். காடுகளை வீடுகளாகக் கொண்ட அவர்களின் மீது சற்றே பொறாமையோடுதான் காட்டிலிருந்து கிளம்புவேன். அடங்காத நெருப்பைக் கூட நீரின்றி அடக்கி விடும் வித்தைத் தெரிந்த மனிதர்கள் அவர்கள். காற்றின் வேகம்.. திசையை துல்லியமாகக் கணிக்கக் கற்றவர்கள். பரபரவென்று பள்ளம் வெட்டியோ.. பச்சிலைகளைக் கொண்டோ தீயை அணைத்து விடுவார்கள்.. வலசைப் போகும் யானைகளை கட்டுப்படுத்தி விட முடியும் அவர்களால். மணங்களை இனம் பிரித்து இன்ன விலங்கு என்று கணித்து  விடுவார்கள். துாங்குவதற்கு மர உச்சிகள் கூட போதுமானது அவர்களுக்கு. காடுகளைப்போல.. அதில் வாழும் தாவரங்கள்.. விலங்குகள் போல அவர்களும் புதிரானவர்களாக.. எப்போதும் புதிதானவர்களாகவே தோன்றினார்கள். கிட்டிமுட்டி நகர்ந்தாலும் அவர்களின் உயரம் எட்ட முடியாததாகவே இருந்தது.

ஒருமுறை நீரைத் தேடி ஏரிக்குச் சென்றோம். முப்புறமும் அடர்ந்த மரங்கள் ஏரியை கீற்று நிலவாக ஆக்கிரமித்திருந்திருந்தது. மரங்களற்ற கரை வழியாக ஏரியை அடைந்திருந்தோம். நீரினருகே இருந்ததால் செடிகொடிகள் செழித்திருந்தன. காட்டு மலர்களும் அதன் நறுமணமும் ஏரியைச் சூழ்ந்திருந்தன. பரவிக் கிடந்த வானமும் தொலைவில் தெரியும் மலைத்தொடரும் பனி ஓவியமாக காட்சியளித்தது. மெல்லிளங்காற்று காட்டின் வாசனையை மகரந்தமாக பரப்ப.. சிறுசிறு இடைவெளியை சாதகமாக்கி சூரியன் தலையை நீட்ட.. காட்டுக் கொடிகளில் கொத்துக் கொத்தாக மலர்கள் பூத்துத் தொங்க.. ஈரத்தரை காளான்களை நாய்க்குடைகளாக்கி காட்ட.. உள்ளடங்கிக் கிடந்த இன்ப ஊற்று சரேலென்று பீரிட்டு ஊற்ற.. திக்குமுக்காடிப் போனோம்.  வெண்கொக்குகள் சாமரம் வீசியதில் கலைந்துப் போன முடிகள் நெற்றிக்கு வந்திருந்தன. வெயில் காலங்களில் கூட அனலில் பொரிந்துக் கிடக்கும் மண்ணும் பெயர் தெரியாத மலர்களின் மணமுமாக காடு என்னை இழுத்துக் கொண்டேயிருக்கும். பள்ளமாகவும் மேடாகவும் செறிவாகவும் வறட்சியாகவும் அடர்வாகவும் அடர்வற்றும் மணற்பாங்காகவும் மண்மேடாகவும் தோன்றும் சமனற்ற காட்டின் நிலப்பரப்பு சலனமற்ற மனவெளிக்குள் சுலபமாக இழுத்துச் சென்று விடும்.

குழந்தை மொட்டை மாடியின் காற்றுக்கு இதமாக துாங்கத் தொடங்கியிருந்தது. ”காட்டுக்குள்ள வாழறது அவங்களுக்கு கஷ்டமாயிருக்காதா..” என்றாள் பேச்சுக் கொடுக்கும்வாக்கில்.

”நகரத்துல வாழறது உனக்கு கஷ்டமாயிருக்கா..” என்றேன் எதிர்க்கேள்வியில் பதிலைச் சொருகி.

”நகரத்துல நிம்மதியாவா வாழ்றோம்..? யானைங்க பண்ற அட்டகாசம் போதாதுன்னு போன வாரம் வந்தது மாதிரி எழவுங்கள்ளாம் வெளிய ஓடி வந்துடுதுங்க.. பயந்து பயந்து சாவறதை விட பேசாம ஒரேடியா போய் சேந்துடலாம்.. அப்பப்பா.. காலம் கலிகாலமாப் போச்சு.. எப்டிதான் மனுசன் வாழ்றதுன்னே தெரியல…”

“அதுங்களும் அப்டிதான் தெகைச்சுப் போயி கெடக்குதுங்க..” என்றேன்.

காடுகள் எந்த வடிவத்துக்குள்ளும் அடங்காமல் முடிவற்று நீளுபவையாக இருந்தன. பொதிந்திருக்கும் விஷயங்களை அவிழ்ப்போர் வரும்வரை பொத்தி வைக்கும் இயல்புக் கொண்டவை. எங்கோ துாரத்தில் மிக சன்னமாக கேட்கும் யானையின் பிளிறல் ஒலியும் படர்ந்து கிடக்கும் சிறுத்தைப்புலியின் கால்தடங்களும் கூட நாட்டை.. நகரத்தை.. அர்த்தமற்ற வெளிக்குள் தள்ளி விடும் ஆற்றல் கொண்டனவாக ஆகின்றன. மூங்கில் காட்டுக்குள் நுழைவதை தாத்தா தடுத்து விடுவார். மூங்கில் படர்ப்புக்குள் யானை நிற்பது தெரியாது என்பார். மூங்கில் புதர் அசைவதுக் கூட யானையின் அசைவுகளை ஒத்ததாகத் தோன்றும் எனக்கு. சிறு ஓடைகள் காட்டும் நீர் பிம்பங்கள் யானையின் துதிக்கையின் நீளலாகவே தெரிந்தது. அனாயாசமாக புகுந்து சலனமற்ற ஓடை நீரை சில்லிப்பாக்கும் காற்றைப் போல காடு சவாதானமாக நமக்குள் நுழைந்து சம்மணமிட்டு அமர்ந்து விடுகிறது. மலைகளில் அடர்ந்து உயர்ந்த மரங்கள் கடல்காற்றைத் தடுத்து மேகமாக்கும் தன் செயலுக்கு தானே மழையாய் பொழிந்து சுய உத்வேகம் பெற்றுக் கொள்ள, மலைத்தரைகள் தன்னுள் விழும் ரகசியங்களை சுனைகளாய்.. ஓடைகளாய்.. அருவியாய்.. நதியாய் வெளிப்படுத்த.. மனம் ஒரு புள்ளியில் கள்வெறிக் கொள்கிறது. திடுமென அதேப் புள்ளியில் அத்தனையும் மறைந்து சூனியத்துக்குள் சஞ்சரிக்கிறது. பின் ஒவ்வொன்றாக முளை விட புள்ளிகள் இணைந்து அடர் கானகமாகிறது. கானகத்துள் நெளியும் பாம்புகளும்.. அட்டைகளும் நேசப்பரப்பிற்குள் நுழைந்து விடுகின்றன. புறவெளியில் புலப்படும் காடு அகவெளிக்குள் உறைந்து விட சஞ்சலமற்ற மனம் சாத்தியமாகி விடுகிறது.

“புள்ளங்க ஸ்கூலுக்கு போக முடியில.. சிறுத்தையப் புடிக்கிறேன்.. புலியப் புடிக்கிறேன்னு வயக்காடெல்லாம் வதமழிஞ்சுக் கெடக்கு.. கடைக்கண்ணிய தெறந்தாதானே தினசரி பொழப்பு ஓடும்.. ஸ்கூல் திறந்தாலும் புள்ளங்கள வெளிய அனுப்ப பயந்து சாவ வேண்டியிருக்கு.. கண்காணிக்க ஆளில்லாம கருப்பங்கொல்லயில யானை பூந்துடுச்சுன்னா மொத்தப் பொழப்புமில்ல கெட்டுப்போயிடும்..” குழந்தையை தன் மடியிலிருந்து என் மடிக்கு மாற்றினாள்.

வெயில் மேலேறத் தொடங்கியதில் கொக்குக் கூட்டம் சிறகு விரித்து வெண்பூக்களாய் வானை நிறைத்தன. பறவைகளின் ஒலிகளால் காடு நிரம்பிக் கொண்டிருந்தது. அங்குமிங்குமான அவைகளின் அலைச்சலில் தொடுத்துக் கொண்டிருந்த இலைகள் சலசலத்து உதிர்ந்தன. மனம் பேரமைதியில் ஒலிகளற்று.. ஒளிகளற்று.. ஓசைகளற்று.. சலனங்களற்றிருந்தது. நாள் முழுமைக்கும் குளிர்வான நிழலுக்குள்ளிருக்கும் பூக்கள் வாடுவதுமில்லை. உதிர்வதுமில்லை. குட்டைகளில் நீர்பிம்பமாக தோன்றும் நிலவு விண்மீன்களை விடுத்து குட்டை மீன்களின் குவியலுக்குள் கூடிக் களித்துக் கிடக்கும். எங்கோ நரியின் ஊளைச்சத்தத்தில் பொதிந்திருந்த உவகை அதற்கான உணவு கிடைத்து விட்டதன் சங்கேதமாக ஒலித்தது. பூக்களின் ஓசை இசையாய் ஒலிக்க தொலைவு மலை உச்சியும் காட்டின் உச்சியும் மங்கலாகத் தெரிந்தன.

எழுந்து நின்று மின்விளக்கின் விசையை இயக்கினாள் என் மனைவி. மனிதனின் நாகரீக மோகத்தில் காடுகள் உள்ளிழுக்கப்பட்டது போல நிலவொளி சட்டென பின்னுக்கு நகர்ந்துக் கொண்டது. நிலவொளியில் கோட்டோவியமாகக் கிடந்த வேம்பின் இலைகள் மின்னொளி பரவியதில் காடழிந்ததில் பதறி சிதறும் விலங்குகளாய் பரவி விரவிக் கிடந்தன.

”என் தங்கச்சிய கூட்டிக்கிட்டு வர நாள் பாக்குட்டுமாங்க..? அவங்க மாமியாருக்கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுக்கலாமா..? தயாராக எடுத்து வந்திருந்த தினசரிக் காலண்டரை பின்புறமாக திருப்பிப் பார்த்தாள்.

“சிறுத்தைப்புலிக்கிட்டேயுந்தான் கேக்குணும்..” என்றேன்.

விநோதமாகப் பார்த்த என் மனைவியை ஏனோ அந்நியமாகப் பார்க்கத் தோன்றியது.

 

 

***

ஹேமானந்த்

ரா கிரிதரன்

இரவு பத்தரை மணிக்குப் பிறகு வேலாயுதம் பிள்ளை வீதியின் மறுமுனைக்கு செல்வதென்பது மயானத்தைக் கடந்து செல்வது போன்றது. ஆனால், ஹேமானந்தின் வீடு அந்த முனையிலிருந்து கூப்பிடும் தூரத்தில் தான். சுற்றுலாவிலிருந்து வந்த உடனே வெளியே போகிறேன் என்றதும் அம்மா எரிந்து விழுந்தாள். அவளுக்குப் புரியாது, என்ன செய்ய? எங்கள் ஒன்பதாம் வகுப்பு பாட புத்தகப் படத்தில் மட்டுமே பார்த்திருந்த டெலெஸ்கோப் ஹேமானந்திடம் இருக்கிறது.

ஒரு முறை பள்ளிக்கூடம் விட்டதும் பீச் வழியாக நடந்து சென்று ஹேமானந்த் வீட்டுக்குப் போயிருக்கிறேன். வீடு என்று கூட சொல்லமுடியாது. சின்ன அறை. தகரத் தடுப்பு போட்டு ரெண்டாக இருக்கும். முத்தியால்பேட்டை அம்மன் கோயிலைத் தாண்டியதும் கண்ணை மூடிக்கொண்டு அவன் வீட்டுக்குப் போய் சேர்ந்திடலாம். கிட்டத்தட்ட இருபத்தைந்து படிகள் ஏறி ரெண்டாம் தளத்தில் இருந்த வீட்டை அடைந்து அதைவிட குறைவான அடிகளில் வீடு முடிந்ததில் எனக்கு சப்பென்று ஆகியது.

ஹேமானந்துக்கு கூர்ந்து கவனிக்கும்படியான தோற்றம் கிடையாது. ஒன்பதாம் வகுப்பு மாணவன் போல ஒல்லியான தேகம், நடுத்தர உயரம், மெல்லிய மீசை, எண்ணெய் வழியும் நெற்றி. சொல்லப்போனால் அவன் முதல் நாள் வகுப்புக்கு யூனிபார்ம் பட்டனுக்கு பதிலாக தலை க்ளிப் போட்டிருந்ததால் மட்டுமே அவனை கவனித்தேன். அவன் தனியாக முன்னிருக்கையில் அமர்ந்தான். அடுத்தடுத்த வாரங்களில் விளையாட்டு நேரங்களில் ஏதேனும் சுவர் ஓரங்களில் ஒளிந்துகொள்ளும்போது அவன் தனியாக உட்கார்ந்ததைப் பார்த்தேன். நான் இருப்பதாக சத்தம் போடமாட்டான். அப்படித்தான் என் நண்பனானான்.

அந்த வருடம் ஊரெங்கும் அரசியல் கூட்டங்கள். புதுச்சேரியை தமிழ்நாட்டோடு சேர்க்கப்போவதற்குப் பயந்து கடையடைப்பு, பந்த் நடத்தும்படியான கோஷங்கள். உடனடியாக எனக்கு அப்பாவுக்கு என்ன ஆகுமோ என பயமாக ஆனது. முன்னர் பிரெஞ்சுக்காரன் ஊரைவிட்டு கப்பல் ஏறிப்போன வருஷம் கூட்டத்தில் அப்பா ஏதோ பேசியதால் கைது செய்யப்பட்டிருந்தாராம். இந்த ஊருக்கு உன்னோட வயசு, எனப் பாட்டி சொல்லி அலுத்த கதை. இதனாலேயே அரசியல் கூட்டம் எனச் சொன்னாலே ஒரு பயம். அதுவும் அப்பாவைப் பார்க்க பலரும் வந்துபோனபடி இருந்ததில் அம்மாவும் பயந்திருந்தாள். என்னிடம் சொல்லவில்லை. பாட்டியிடம் கேட்கலாம், ஆனால் அவள் அப்பாவிடமே நேரடியாகக் கேட்டுத் தொலைத்துவிடுவாள்.

திடீரென என் வகுப்பிலிருந்த ராஜேஷுக்கு மரியாதை அதிகமானது. அவனது அப்பா சட்டசபையில் குமாஸ்தாவாக இருந்ததால் பள்ளிகளுக்கும் பந்த் உண்டா, எத்தனை நாட்கள் விடுமுறை போன்ற செய்திகளை கேட்டு முடிவை முன்கூட்டியே சொல்வதாக அறிவிப்பு செய்திருந்தான். அன்றிலிருந்து அவன் மிச்சம் வைத்த பின்னர் தான் மதிய உணவு டப்பாவை அவர்வர் உண்ண முடிந்தது. அதிகம் சிரித்தால் அடுத்த நாள் அழுவோம் என்று பாட்டி சொல்வது போல ஹேமானந்த் வந்த அதே மாதத்தில் உணவு இடைவேளை நேரத்தைப் பாதியாகக் குறைத்து சயின்ஸ் லாப் நடத்த புது வாத்தியார் வந்தார். தனியே சந்தோஷமாக இருந்த புதுவையை பக்கத்து ஊரோடு சேர்க்கப்போகிறார்கள் என அப்பாவும் போராடப் போவது போல், இதற்கும் ஏதேனும் செய்யவேண்டும் என ராஜேஷிடம் உணவு இடைவேளையின்போது பேசினேன். கிடைத்த அவகாசத்தில் சாப்பிட்டு முடிக்கவேண்டிய அவசரத்தில் இருந்த அவன் அத்தனை சுவாரஸ்யம் காட்டவில்லை.

‘இன்றைய லாபில் புல்லி சிஸ்டம் பற்றி பார்க்கப்போறோம். குறைவான சக்தி வழியாக பலமான எடைகளை தூக்குவது எப்படி?’

மெளனமாக உட்கார்ந்திருந்தோம். தினமும் கிணற்றில் பார்க்காத எதையும் அவர் காட்டவில்லை என்றாலும் ரெண்டு சக்கரத்திருப்பான்கள் வழியாக தூக்கமுடியாத எடையை ஒருவிரலால் நகர்த்திக் காட்டியபோது ஆச்சர்யமாக இருந்தது. கைக்கடிகார முட்களை நீக்கிக்காட்டி ஆற்றலைப் பற்றி பத்து நிமிடம் பேசினார். ஆழ்ந்த மெளனம். ஒவ்வொருவராக அருகே சென்று அவற்றைத் தொட்டுப் பார்க்கலாம் எனச் சொன்னதும் சலசலப்பு கூட்டம் முண்டியடிக்கத் தொடங்கியது. ரோந்து வந்த ஸ்கூல் தலைமை ஃபாதரிடம் ஆசிரியர் பேசிவிட்டுத் திரும்பிய நேரத்தில் கைக்கடிகாரப் பகுதிகள் பேப்பர்கடை குவியல்கள் போலத் தரையில் கிடந்தன.

கையில் கிடைத்த ஸ்கேலை எடுத்து அடிக்க வந்ததும் ஆளுக்கு ஒரு மூலை சிதறினோம். வழக்கம்போல கூட்டத்தில் பின்னால் நின்றிருந்ததில் எனக்கு சின்ன திருப்தி. ஹேமானந்த் மட்டும் மேஜை அருகே நின்றபடி கடிகாரப்பகுதிகளை கையில் வைத்திருந்தான்.

‘டேய் கத்தறது கேக்கலை. வெச்சிட்டுப் போறியா, ஃபாதர் ரூமுக்கு அனுப்பட்டுமா?’, எனக் சத்தம் போட்டார் புது வாத்தியார். நகராமல் மும்முரமாக கடிகாரப்பகுதிகளை சேர்த்துக்கொண்டிருந்த ஹேமானந்தை நாங்கள் பயத்தோடு பார்த்திருந்தோம்.

‘ராஸ்கல், சீ நகரு’

தள்ளிவிட்டதில் மேலும் சில பகுதிகள் தரையில் விழுந்தன. அவருக்கு வந்ததே கோபம், முட்டிக்குக் கீழே ஸ்கேலில் பழுக்கக் காய்ச்சிவிட்டார். எட்டாம் வகுப்புக்குப் பிறகு அடிகொடுக்கும் வாத்தியார்கள் குறைந்துவிட்டதால் இருந்த நிம்மதி அந்த ஒரே நிகழ்ச்சியால் காணாமல் போனது.

மாலை, வீட்டுக்குச் செல்லும்போது ஹேமானந்த் மட்டும் தனியே போவதைப் பார்த்து பேச்சு கொடுத்தேன்.

‘அவரு தான் சொன்னாரில்லை. உனக்கேன் கொழுப்பு? நாங்கெல்லாம் பின்னாடி போகல?’

முதலில் அவன் பேசவில்லை. நான் முன்னாடி நடக்க அவன் என்னைத் தொடர்ந்தான். குறுக்குவழியில் வீடு போக பஜாருக்குள் நுழையும்போது, ‘எனக்கு ஒரு சர்பத் வாங்கித்தரியா?’, எனக்கேட்டான்.

அன்றுமுதல் மாலை வீட்டுக்குப் போகும்போதெல்லாம் ஒன்றாக சர்பத் குடிக்கத் தொடங்கினோம்.

‘உனக்கு தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் பிடிக்குமா? நேரு சிலை பின்னாடி இருக்கு. வாங்கித் தர்றேன்’, ஸ்ட்ராவில் குடித்தபடி மண்டையை ஆட்டினான். அவன் கேள்விப்பட்டதில்லையாம். ஏனோ எனக்குப் பிடித்த எல்லாவற்றையும் அவனுக்கும் வாங்கிக்கொடுக்க வேண்டும் எனத் தோன்றிவிட்டது.

‘உன்கிட்ட பைசா இல்லியா?’

ஒரு சர்பத்துக்கு மட்டுமே காசிருந்த நாளில் கேட்டபோது, ‘எங்க அப்பா வரும்போது தருவார். பெங்களூரில் வேலை பார்க்கிறார். அப்புறம் தர்றேன்’, எனச் சொன்னான்.

“பரவாயில்ல. நானே வாங்கித் தர்றேன்”, எனச் சொல்லி பகிர்ந்து குடித்தபோது எனக்குப் பெருமையாக இருந்தது.

ஹேமானந்துடனானப் பழக்கத்தை அம்மாவிடம் சொன்னபோது அப்பாவிடம் சொல்லாதே என்றாள். காரணம் தெரியாது அடுத்த நாள் அவனுடன் ஜூஸ் சாப்பிட்டதைச் சொன்னபோது, “எத்தனை தரம் சொல்றது? அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காது. அவ்ளோதான் சொல்லிட்டேன்.” என்றாள்.

“ஏன் ஏம்மா?”

“நீயும் சாராயக்கடையில் வேலை பார்க்கப்போறியா?”, என எரிந்து விழுந்தாள்.

“அவனோட அப்பா பெங்களூர்ல இருக்கார்”

“ம்க்கும். அந்த ஏரியாவே சாராயக்கடைக்காரங்கதான். சொல்றத கேக்கல, ஸ்கூல் ஃபாதர்கிட்ட சொல்லிடுவேன்”

அத்தோடு பேச்சு முடிந்தது.

அடுத்த வாரத்தில் ஒரு நாள் மாலை வழக்கம் போல ஜூஸ் குடித்து முடித்ததும், ‘என் வீட்டுக்கு வர்றியா?’, என அழைத்தான். பதில் சொல்லாமல் அவனைத் தொடர்ந்தேன். என் வீட்டைத் தாண்டும்போது ஓரக்கண்ணால் மாடியில் யாராவது தென்படுகிறார்களா எனப் பார்த்துவிட்டு வேகமாகக் கடந்தேன்.

அவனது வீட்டில் நுழைந்ததும் முதலில் வந்தது ஒரு விநோத வாசனை. மருந்து அல்லது காய்ந்த ஊறுகாய் மாதிரியான வாசம். உட்கார இடமில்லை. இருந்த ஒரு மேஜையில் ரேடியோ, பேட்டரி எனப் பலதும் இரைந்து கிடந்தன. சாய்ந்து உட்கார முடியாதபடி ஒரு நாற்காலி. அதில் தலை நரைத்த வயதான ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். சாயம் போன புடவை.

‘இதான் என் அம்மா. அதோ அது தங்கச்சி. நாலாவது படிக்குது’

அப்போதுதான் அறையின் மூலையில் ஒரு பெண் தரையில் உட்கார்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருப்பதை கவனித்தேன். என்னை நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் தலையைக் குனிந்து எழுத்தைத் தொடர்ந்தாள்.

‘இதெல்லாம் நீயேவா ரிப்பேர் செய்வே?’

‘ம். ஆமாம். டூல்ஸ் இருந்தா இன்னும் நிறைய செய்யலாம்.’

‘அப்பா இல்ல?’

அம்மாவை தர்மசங்கடமாகப் பார்த்தவன், ‘அடுத்த தடவை நீ வர்றத்துக்குள்ள பாரேன், இந்த டேபிளில் செட் செஞ்சு, ரேடியோவை சரி செய்திடுவேன்’, என்றான்.

‘கொஞ்ச உக்காந்து பேசிகிட்டிருங்களேன்பா’, என்ற அவனது அம்மா எங்கள் திசையைப் பார்த்து சிரித்தாள்.

என்னை அறை வாசலுக்கு அழைத்துச் சென்றவன், ‘தப்பா நினைச்சுக்காதே. அம்மாக்கு சமைக்க உதவணும். நாளைக்கு ஸ்கூலில் பார்க்கலாம்’, என்றான்.

இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம் என நினைத்தாலும் அப்பாவுக்குத் தெரிந்தால் பெல்ட்டால் அடித்துவிடுவார் என்பதால் எதுவும் சொல்லாமல் நானும் கிளம்பிவிட்டேன். இருபத்தைந்து படிகள் இறங்கும்போது அம்மாவுக்கு சமையலில் ஏன் உதவவேண்டும் எனத் தோன்றியது. பசித்தது. தீனி கூட கொடுக்கலியே என யோசித்தேன். பிஸ்கட் டப்பாவை பார்த்தேனே? சீக்கிரமாக வீட்டுக்குப் போனால் எப்போதும் மாலையில் அம்மா செய்யும் கார வடையும் டீயும் கிடைக்கும் என நினைத்ததும் நடை வேகம் கூடியது. தெரு முனைக்கு வரும்போது ஹேமானந்தின் வீட்டு மாடியைத் திரும்பிப் பார்த்தேன். திரைச்சீலை முழுதாக மூடியிருந்தது. தூரத்திலிருந்து வீடு இருக்கும் மாடி வேறொரு உலகம் போலத் தெரிந்தது. அன்றிரவு தூங்கும்போது அவனது அம்மாவின் சிரிப்பு மட்டுமே வந்தது நினைவில். தினமும் அவனுக்கு ஜூஸ் வாங்கித்தரவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

அடுத்த ரெண்டு வாரமும் பள்ளிக்கூட சுற்றுலாவுக்குத் திட்டம் போடும் குஷியில் நேரம் போனதே தெரியவில்லை. ஊட்டி, கொடைக்கானல் எனத் தொடங்கிய திட்டம் நிதி நிலைமையினால் ரெண்டு நாட்கள் செஞ்சிக்கோட்டை என முடிவானது. ஹேமானந்தால் வரமுடியாவிட்டாலும் திடலுக்கு அருகே மரைக்காயர் கடலைக் கடை வாசல் பஸ் நிறுத்தம் வரை வந்து நாங்கள் கிளம்பும்வரை நின்றிருந்தான். அவன் வராதது கஷ்டமாக இருந்தது. மெதுவாகக் கிளம்பிய பஸ் அருகே ஓடி வந்தவன், ‘நாளான்னிக்கு அப்பா வர்றார். டெலெஸ்கோப் வாங்கி வர்றாராம்’, எனப் பல் இளிக்கக் கத்தினான்.

சுற்றுலா முடித்து வரும்வரை டெலெஸ்கோப் பற்றி மட்டுமே யோசித்தேன். தூரத்தில் இருப்பவற்றை அருகே காட்டும் எனத் தெரிந்தாலும் அதைக்கொண்டு என்ன செய்ய முடியும் எனப் பலவாறு யோசனை. அருண் கோஷ்டியில் முழுவதாக இணைய முடியாதபடி ஹேமானந்தின் நினைவில் கழிந்தது. நானாக அருண், ராஜேஷுடன் விளையாடப்போனாலும் என்னை விட்டுவிட்டு அவர்கள் எங்காவது நகர்ந்துவிடுவார்கள். அவர்களுடன் இருக்கும்போது ஹேமானந்த் பற்றிச் பேசினால், “எப்பவும் அவனப் பத்தி என்ன இருக்கு பேச”, என்பதாக அவர்களது எண்ணம் இருந்தது. “அவன் என்ன உன்னோட பெஸ்ட் பிரண்டா இல்ல உங்கப்பா வாங்கித்தந்த விளையாட்டு சாமானா, அவன் மேல இத்தனை உரிமையா இருக்கே”, என கூட வந்திருந்த அஸிஸ்டெண்ட் டீச்சர் கூடக் கேட்டார். அவர் அப்படிக் கேட்டது எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. என்ன சொல்வதென்று தெரியாது வெறுமனே சிரித்து வைத்தேன்.

நான்காம் நாளில் சுற்றூலா முடிந்து திரும்பிய இரவு டெலெஸ்கோப்பைப் பார்க்க ஹேமானந்த் வீட்டுக்கு ஓடினேன். வந்த களைப்பு கூட போகாது என்ன ஓட்டம் என அம்மா சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. பத்தரை மணியானாலும் பரவாயில்லை என அவள் அடித்துச் சொல்லிக்கொடுத்த கந்தர் சஷ்டி கவசத்தை மென்று விழுங்கி அரைகுறையாகச் சொல்லியபடி வேலாயுதம் பிள்ளை வீதி இருட்டைக் கடந்துவிட்டேன். முழுவதுமாகக் கற்றுக்கொண்டிருந்தால் பேய்களிடமிருந்து நிச்சயம் தப்பிக்கலாம். மூச்சிரைக்க மாடியேறியதும் கதவில் தொங்கிய சிறிய பூட்டு முகத்தில் அறைந்தது. நானே பூட்டியதுபோல ரெண்டு முறை இழுத்ததும் கதவு வேகமாக அசைந்தது. வீட்டில் யாரும் இல்லாததால் அரை மணி நேரம்போல நான் படிகட்டில் உட்கார்ந்து காத்திருந்தேன். கீழ்வீட்டில் கேட்டுப்பார்க்கலாமா? கோபமாக வந்தது. பள்ளிக்கூட லீவு முடிவதற்கு இன்னும் மூன்று நாட்கள் இருப்பதை நினைத்து ஏமாற்றத்தில் அழுகையும் கூடியது.

புது வகுப்பின் முதல் நாள் வந்தது. வழக்கமான வழியில் பாதி வரை வந்து லபோர்த்து வீதிக்குள் திரும்பிவிட்டேன். ஹேமானந்த் வந்தாலும் அவனோட பேசக்கூடாது.

“என்னடா இந்த வழில வர்றே?”, ராஜேஷ் அருகே வந்து சைக்கிள் பிரேக் அடித்தான்.

நான் ஒன்றும் சொல்லாமல் அவனது கேரியரில் உட்கார்ந்துகொண்டேன்.

“டெலெஸ்கோப் பார்த்தியா?”

மூன்று நாட்களில் ஒரு நாளேனும் அவனாக என் வீட்டுக்கு வந்து காட்டியிருக்கலாம். “எங்கப்பா வாங்கித்தர்றேன்னு சொல்லியிருக்கார். வீடு வீடா போறேன்னு திட்டறார்”

“எங்களுக்கு காட்டுவியா?”, வண்டி ஓட்டியபடி ராஜேஷ் திரும்பிக் கேட்டான்.

“ஓ. நிச்சயமா. வாங்கினதும் உனக்கும் அருணுக்கும் காட்டறேன்”

லஞ்சு பிரேக் வரை தான் தாக்குப்பிடிக்க முடிந்தது. பத்து நிமிட இடைவெளி கிடைத்தபோது பிரேயர் ஹால் மைக் செட் ரூமுக்குச் சென்று மோகன் சார் முன்னால் நின்றேன்.

“ஹேமானந்த் இன்னிக்கு வரலியா சார்?”

“எந்த கிளாஸ் ஹேமந்த்?”

“ஹேமந்த் இல்ல, ஹேமானந்த் சார்..”

“எந்த க்ளாஸு?”

“நைந்த் பி”

“எனக்கு எப்படி தெரியும்? ஏன் அவன் வீட்ல யாரும் லீவு சொல்ல வரலியா?”

யாருன்னு தெரியலை அப்புறம் என்ன கிளாஸாயிருந்தா என்ன எனக் கேட்க நினைத்தேன். எரிச்சலாக இருந்தது. இனி மாலை வீட்டுக்குத் திரும்பும் வரை தெரிய வாய்ப்பில்லை. இல்லை, இனிமே அவனைத் தேடக்கூடாது. பேசக்கூடாது.

உணவு இடைவெளியில் அருணைத் தேடிப்போனேன். அவனது நண்பர்களோடு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தூரத்திலிருந்து என்னைப் பார்த்தவன் தொடர்ந்து பிரபுவுடன் பேசுபவன் போலத் திரும்பிக் கொண்டான்.

“அருண்”

“ம்”, இப்ப மட்டும் எங்க வந்த என்பது போல பார்த்தான்.

“ஹேமானந்தைப் பார்த்தியா?”

“அவன் ஊரவிட்டுப்போறதா முருகானந்தம் சார் சொன்னாரே”

அது பொய் எனத் தெரியும்.

“என்கிட்ட சொல்லிக்காம போகமாட்டான்”, என முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டேன்.

“டெலஸ்கோப்ப உன்கிட்ட காட்டினானா? இல்லல்ல? ஜுஸ் வாங்கித் தந்தா உனக்குக் காட்டுவானா என்ன?”

“எனக்குக் காட்டினான்”, முகத்தை கடுமையாக வைத்தபடி பிரபு சொன்னான்.

“சரி, லஞ்சுக்கு அப்புறம் உப்பளம் போறோம் வரியா?”, அருண் கேட்டான்.

என்னை சீண்டுகிறார்கள் எனத் தெரிந்தது. அதற்கு மேலும் அங்கிருந்தால் அழுதுவிடுவேன் எனத் தோன்றியது. இவர்களது மூக்கை உடைக்கவேனும் டெலெஸ்கோப்பை முதலில் பார்த்திட வேண்டும் என்று கூடத் தோன்றியது. இவர்கள் பொறாமைப்படும்படியான விஷயம் தான் அது என்றாலும் என்னிடம் கூட காட்டாமல் ஹேமானந்த் எங்கு போயிருப்பான்?

நான் எதுவும் சொல்லாமல் என் லஞ்ச் டப்பாவுடன் க்ளாஸுக்கு நடந்தேன். படியேறி காலியான க்ளாஸுக்குப் போகும்போது என்னையறியாமல் கண்ணீர் வழிந்தது. க்ளாஸில் யாரும் இருக்கக்கூடாதே என வெட்கப்பட்டு கரும்பலகை பக்கம் பார்த்தபடி உள்ளே நுழைந்தேன்.

ரெண்டாம் வரிசை கோடியில் என் புத்தக மூட்டைக்குள் டப்பாவைத் திணித்தபின் பார்த்தேன், வகுப்பில் யாருமில்லை. வாய்விட்டு சத்தமாக அழத் தொடங்கினேன். ஜன்னலுக்கு வெளியே உட்கார்ந்திருந்த காக்கா கழுத்தை சாய்த்து வகுப்பில் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டது. டெஸ்கில் கிடந்த பென்சில் சீவுத்துண்டுகளை சேகரித்து ஜன்னலை விட்டு வெளியே வீசினேன். சட்டென பருக்கைத் துண்டுகளை சிதறவிட்டு வெளியே பறந்தது. ஒரு வட்டம் அடித்து மீண்டும் ஜன்னலோரம் சிந்தியிருந்த சாதத்தைப் கொத்தத் தொடங்கியது. விளையாட்டு திடலில் சத்தம் குறைந்து விசில் சத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. கன்னத்தைத் துடைத்துக்கொண்டேன்.

வேகமாக ஓடிவந்து க்ளாஸுக்குள் நுழைந்தவர்களுக்குப் பின்னால் ஹேமானந்த் புத்தகப்பையுடன் வருவது தெரிந்தது.

“அப்பா ஊருக்குக் கிளம்பினார்டா. பஸ் ஏத்திவிட்டு நேரா இங்க வர்றேன்”

பேண்டுக்குள் பளபளப்பான சட்டையைத் திணித்திருந்தான்.

“அப்பா இனிமே டிரவுசர் போடக்கூடாதுன்னு சொல்லிட்டார்”.

அவன் முகத்தில் மிகுந்த பெருமிதம்.

“டெலஸ்கோப் செமையா இருக்குடா..இன்னிக்கு சாயங்காலம் வீட்டுக்கு வர்றே இல்ல? ”

அவனுக்கு பதில் சொல்லாமல் க்ளாஸ் கதவை நோக்கி நடந்தேன்.

ஹேமானந்த் பின்தொடர்ந்து வந்தான்.

“என்னடா? கோவமா?”

“இல்லை. ஆனா இனிமே உனக்கு ஜூஸ் வாங்கித்தர மாட்டேன்”, எனச் சொல்லிவிட்டு வேகமாக வெளியே சென்றுவிட்டேன்.

க்ளாஸ் வாசலில் ஹேமானந்த் ஒண்ணும் புரியாமல் நின்றிருந்ததை வகுப்பு வரிசைகளைத் தாண்டித் திரும்பும்போது பார்த்தேன்.

முத்துப்பிள்ளை

தி வேல்முருகன்

மணி 4.15க்கு கடைசியாக டிங் டிங் டிங் என்று ராகத்தொடு ஆரம்பித்து டாங் டாங் என்று முடிந்தபோது அவனுக்கு முன்னால் மனம் சென்று விட்டது வீட்டிற்கு.

வரிசையாகதான் செல்ல வேண்டும். 4வது வாத்தியார் வாசலில் நின்று கொண்டு ஓவ்வோரு வகுப்பாக வெளியே விட்டார். ஒவ்வொரு வகுப்பிலும் அ, ஆ என இரண்டு பிரிவுகள் உண்டு. இவனது பிரிவு வந்தபோது முதல் ஆளாக பிடித்த ஓட்டம் வீடு வரும்வரை தொடர்ந்தது.

தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் விடுமுறை- சனி, ஞாயிறு என்று மனம் கணக்கிட்டது. மரமேறி மாங்காயும் கொய்யாக்காயும் பறித்து திங்கனும், கொடுக்காப்புளி அடித்து திங்கனும் என்று நினைத்துக்கொண்டே ஓடிய ஓட்டத்தில் சீக்கிரம் வீடு வந்து விட்டது.

குடத்தில் வாயை வைத்துச் சாய்த்துக் குடித்தபோதுதான் பார்த்தான், ஊரிலிருந்து ஆயா வந்திருந்தார். உடனே அனைத்தும் மறந்து விட்டது, இப்போது அவனுக்கு ஆயாவுடன் ஊருக்குச் செல்ல வேண்டும்.

“ஆயா, எப்ப வந்திங்க?”

“ஒரு மணி வண்டிக்கு வந்தேன்டி”

“ஆயா, ஊருக்கு நானும் வரேன். எனக்கு இரண்டு நாள் லீவு”

“மாராசனா வாடி”

அம்மா இடையில் புகுந்து, “வாண்டாம், அவன் சொன்ன பேச்சு கேட்க மாட்டான்,” என்றார்.

“நான் கேட்கிறேன் ஆயா, நீ சொல்லு ஆயா”

“இல்லம்மா… பொழுது போயிடும், நீ எப்படிம்மா இவனை இட்டுட்டு தனியா போவ?”

“புள்ள ஆசைப்படுறான், மோட்டையன பொட்டி வண்டி கொண்டு வரச் சொல்லி இருக்கேன், இவனை அனுப்பும்மா”

“ஏய், மாத்து துணி எடுத்துக்க, ஆயாவை தொந்தரவு பண்ணாம பார்த்து இருந்துட்டு வா”

“சரிம்மா”

பையை எடுத்த அவன் ரயில்வே ஸ்டேஷன் வரும்வரை கேட்ட கேள்விக்கு எல்லாம் ஆயா பொறுமையாக பதில் அளித்தார். டிக்கெட் எடுத்து ரயில் ஏறியதும் ஐன்னலை ஒட்டி நின்று கொண்டு, ஓட தொடங்கியதும் காட்சிகளைப் பார்த்து, “ஆயா, இது வெள்ளாறு, இது பழையாறு, இப்ப கிள்ளை வரும் பாரு,” என்றபோது வந்துவிட்டது கிள்ளை.

“யம்மா, அரும்பு, அரும்பு… குண்டுமல்லி, குண்டுமல்லி…”

அவனும் சேர்ந்து ராகம் வைத்ததில் அந்த அக்கா கோபத்துடன் திரும்பியதும் இவன் ஆயா பின்னாடி ஒளிந்து கொண்டான்.

ஆயாவைப் பார்த்தவுடன், அத்தே எங்க, மகவூட்டுக்கு போயிட்டு வரியா?” என்றாள் அந்த அக்கா.

“ஆமாண்டி பவூனு”

“நல்லா இருக்கா உம் புள்ள?”

“இருக்காடி. நீ எங்க இங்க நிக்கற? என்னாச்சுடி, கட்டிக் குடுத்த இடத்தில பிரச்சினையா?”

“இதாரு, உம் பேரனா?”

“ஆமாண்டி. நீ ஊருக்கு வரதுல்ல, வந்திருந்தா தெரிஞ்சிருக்கும்”

“குடிகாரன் அத்த, அத ஏன் கேட்கற? குடிச்சுட்டு அடிப்பான், குடிக்கலனா சந்தேகப்பட்டு அடிப்பான். தாலியத் தவிர நிலம் நட்டு ஒன்னுடாம குடிச்சு அழிச்சாட்டியம் பண்ணி இப்ப பத்தாயிரம் பணத்தோட வாடின்னு சொல்றான். அப்பா, அம்மாவுக்கு வயசாயிடுச்சு. ஒரு ஏக்கர் நிலத்தை வித்துதான் என்ன கரையேத்துச்சு, இப்ப இங்கே திரும்ப வந்து சீரழியணுமானுருக்கு”

கண்ணீர் துளிர்த்து இரண்டு கண்ணிலும் வழிகிறது.

“அழாதடி, நான்லாம் இல்லையா?புள்ளகுட்டில விட்டுவிட்டு அவரு போனதும் வானமே இடிஞ்சு தலை மேல விழுந்த மாதிரி இருந்துச்சு. நான் மீண்டு வரல? என்ன, எம்மவன்தான் சொன்ன பேச்சு கேட்க மாட்டான்”

“இல்லத்த… புள்ளைவோ இருந்தா முகத்த பார்த்துட்டு இருந்திடலாம். இங்கே அண்ணிவோ எல்லாம் தப்பா பேசறாளுவோ, உயிர உட்டுடலாம் போலிருக்கு. நான் ஏன் இருக்கணும், நீ சொல்லு?”

எதிர் திசையில் வந்த இரயில் வேகமாய் கடந்து சென்றது. ஆயா அக்காளின் இரு கைகளையும் பிடித்துக்கொண்டு, “அவசரப்பட்டுடாதடி காலம் மாறும். வந்து புருஷன் இட்டுப் போவான், பவுனு அவசரப்பட்டுடாதடி” என்று சொன்னாள்.

அக்கா இவனை அழைத்து இரண்டு கன்னத்தையும் வழித்து நெட்டி முறித்து முத்தம் கொடுத்தார்.

இரயில் நின்றதும் அக்கா இறங்கிக் கொண்டார். அது மீண்டும் புறப்பட்டதும் சிறிது தூரம் வரை வந்து கையாட்டினாா், ஒரு கண்ணில் கோடாககண்ணீர் தெரிந்தது.

ஆயா கண்ணிலும் நீர். வேறெங்கோ சென்றிருந்தார். இவன் வெளியே பார்த்தான். வண்டி சிதம்பரம் தாண்டி பழங்கொள்ளிடம் வந்து விட்டது.

“ஆயா, வந்துடுச்சி”

வெளியில் பார்த்து, உடனே பையோடு எழுந்தார். “சும்மாவா சொன்னாங்க, சாண் புள்ளனாலும் ஆண் புள்ளதான். நல்ல வேளை, வண்டி போயிருக்கும், கடவுளே, யப்பா கைய புடிச்சுக்கடி”

இறங்கிப் பார்த்தபோது மொட்டைப்பிள்ளை வண்டி பூட்டிக் கொண்டிருந்தார்.

இருவரும் ஏறியபிறகு பொட்டி வண்டி நகர்ந்தது. ஆயா, மொட்டப்பிள்ளையிடம், “இந்த ஊட்டுகாரன பார்த்தியா? சாயந்திரம் செம்மறி ஆட்டப் புடுச்சுகிட்டு மேற்கே போனான்” என்று கேட்டாள்.

“ஆடா? எப்ப ஆயா வாங்கினிங்க?”

“இவன் ஒருத்தன்… அந்தக் கூத்த அங்க வந்து பாரு”. ஆயா வருத்தத்துடன் சொன்னதைக் கேட்டுக்கொண்டே வெளியே வேடிக்கை பார்த்தான்.

செம்மண் சாலை அது. வண்டி கேட்டை தாண்டியதும் மாடுகள் தீனியை நினைத்து மெல்லோட்டமாக சென்றன. இருபுறமும் வரிசையாக வேலி, இடையில் புளி, மா மரங்கள். ஆடு மாடுகள் மேய்ச்சல் சென்று வழியை அடைத்து கொண்டு வந்தன. வண்டி தேங்கி, பின் சென்றது. அடிவானில் சூரியன் இறங்கிக் கொண்டிருந்தது, அதன் ஒளி அவன் மேல் விட்டுவிட்டுப் பட்டது.

அவன் முன் நகர்ந்து மொட்டைப்பிள்ளையிடம், “மாமா, செம்மறி ஆடு முட்டுமா?” என்று கேட்டான்.

“ஏலே முட்டிடும். படிக்கிற பையன் நீ கிட்ட கிட்ட போயிடாத”

அவனுக்கு வருத்தமாகிவிட்டது.

வண்டி கிழனையை விட்டு இறங்கியது. இருபுறமும் சொய்சா மரங்களில் கீச் கீச் என்று பறவைகள் சத்தமிட்டதைக் கேட்டு அதிசயத்தான்.

சிறிது நேரம்தான், அவன் தளர்ந்து தூங்க ஆரம்பித்ததும், “எப்பா போழுது போன நேரம் தூங்காதடி… ஆயா கதை சொல்றேன்,” என்று எழுப்பிவிட்டாள் ஆயா.

“ஏ மொட்டைப்பிள்ளை, வண்டிய எட்டி ஓட்டு. போயி விளக்கு வைக்கணும் பாரு”

“ஆயா, கத?”

“சொல்றண்டி.

“…ஒரு ஊர்ல ஒரு ஆம்படையான் பெண்டாட்டி இருந்தாங்க, அவங்களுக்கு இரண்டு பெண் ஒரு ஆண் குழந்தைகள் இருந்துச்சு. பெரிய பொண்ணு கட்டிக் குடுத்து ஒரு பேரன் பிறந்த பிறகு அவரு குடிச்சுக் குடிச்சு உடம்பு சரியில்லாமப் போய் செத்து போயிட்டாரு. அப்புறம் அந்தம்மா இன்னொரு பொண்ணயும் எப்படியோ கட்டிக்குடுத்துட்டு படிக்காத பையன வச்சிக்கிட்டு கஷ்டப்படுது”

“ஏன் ஆயா அழுவுற?”

“ஏலே, கம்முனு வா,” என்று அதட்டினார் மொட்டைப்பிள்ளை.

“பூவோட சேர்ந்தா மணக்கும், இது பன்னியோடல்ல சுத்துது,” என்றார் ஆயா.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

வீட்டின் வாசல் கேட்டில் ஒரு செம்மறியாடு கட்டியிருந்தது.

“மாமா…” என்று அவன் ஓடிப்போய் பார்த்தபோது அதற்கு புல் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆட்டின் கழுத்தில் கட்டியிருந்த மணி புல்லை உதறித் திங்கும்போதும் அது தலை ஆட்டும்போதும் ஒலியெழுப்பியது.

“மாமா, முட்டுமா?”

:கிட்ட கிட்ட போயிடாத, சன்டை பழக்கி வச்சிருக்கேன்,” என்று மண்வெட்டியின் அடிபாகத்தை காண்பித்தார் மாமா. ஆடு பாய்ந்து வந்து முட்டியது. அவன் பயந்ததைப் பார்த்துச் சிரித்தார் அவர்.

“குடுத்தனக்காரன் செய்யற வேலையா இது?” என்று சத்தம் போட்ட ஆயா, மாமா முறைத்ததும் உள்ளே சென்று விட்டார்.

“மாமா, ஆட்டுக்கு பேர் வச்சிட்டியா?”

உள்ளிருந்து, “விளக்குமாறுக்கு பட்டுக் குஞ்சம்தான் கொறச்ச,” என்றார் ஆயா.

மாமா, “யேய், பேரு முத்து. முத்து…”, என்றார் கிசுகிசுப்பாக.

ஆட்டைப் பார்த்தான். கருப்பில் மரை கலரில் பெரிய கொம்புடன் இருந்தது.

“முத்து,” என்று பில் அள்ளிக் கொடுத்தபோது அதைத் தின்று விட்டு முட்ட வந்தது அவனை. “மாமா…”

“ஏய், பழகற வரைக்கும் அப்படிதான் இருக்கும். கிட்டப் போகாத, எட்ட இருந்து குடு”

ஆயா இருவரையும் சாப்பிட கூப்பிட்டார்கள்.

சாப்பிட்டுவிட்டுப் படுக்கும்போது மாமா அவனிடம், :நாளைக்கு நம்ம முத்துவ இன்னோரு ஆட்டுக்கூட சண்டைக்கு உடப் போறேன். நீனும் வா,” என்றார்.

“ஏய், உன் போக்கிரித்தனம்லாம் அவனுக்கு சொல்லி குடுக்காத,” என்றார் ஆயா. அவர் வருத்தமா இருப்பது தெரிந்தது. மாமா திரும்பிப் படுத்து கொண்டார். இவனும் தூங்கிவிட்டான்.

மொட்டைப்பிள்ளை மாமா கழுத்தில் மாலையுடன் கையில் தீச்சட்டி ஏந்தி ஆடிக்கொண்டிருக்கிறார். அருகில் பூசாரி மிகப் பெரிய கொடுவாள் கத்தியுடன் நின்றாடுகிறார். கத்தியில் பட்டை பூசி பொட்டு வைத்து கூம்பில் பூச்சூட்டியிருந்தது. மாமா ஆட்டைப் பிடித்திருக்கிறார். ஆடு பரிதாபமாக இவனைப் பார்க்கிறது. ஆட்டை வெட்டப் போகிறார்கள் என்று உணர்ந்து அலறி எழுந்து விட்டான்.

மாமாவைத் தேடிப் போனால், ஆடு புல்லைத் தின்று கொண்டிருக்கிறது. மாமா அதைத் தடவி கொடுத்துக் கொண்டு நின்றார்.

இவனை பார்த்து, “போயி பல்ல விளக்கு, சாப்பிடு, நாம வெளியே போகணும்” என்கிறார்.

அவன் தட்டை எடுத்து வைத்ததும், இடியாப்பமும் தேங்காய்ப் பாலும் இட்டுக் கொடுக்கிறார். அது ஏலக்காய் போட்டு அமிர்தமாக இருந்தது.

“ஆயா எங்க மாமா?”

“ஏதோ செய்தி வந்து முட்லூர் போயிருக்கு. உன்னைத் தண்ணிக்கு போகாம வெள்ளாடச் சொல்லியிருக்கு. சாப்பிடு, கொல்லைக்கு போவோம்.”

“சரி மாமா”

மாமா முத்தை அவுத்துப் பிடித்துக்கொண்டு முன்னாள் நடந்தார். இவன் அவர் பின்னால் நடந்தான்.

முத்தின் விதைமணி தொடையில் உராய்ந்ததால் அது காலை அகட்டிக் கொண்டு பெண்கள் மாதிரி நடந்தது. இவன் சிரித்து விட்டான்.

“என்னடா சிரிக்கற?”

“இல்ல மாமா, ஆடு பொம்பளை மாதிரி நடக்குது”

“வக்கால…” என்று அடிக்க வந்தார் மாமா. இவன் அமைதியாகி விட்டான்.

இருபுறமும் சோளம் விளைந்து ஒடிக்கும் பதத்தில் இருந்தது. மாமாவிடம் கேட்க பயம், அவன் எதுவும் பேசாமல் நடந்தான். மாந்தோப்பு வந்ததும், “ஏய் சோளம் சுடுமா?”| என்று கேட்டார் மாமா.

“சரி, மாமா. ஆட்டுச் சன்டை எப்ப? நம்ம முத்து செய்ச்சுடுமா?”

“குட்டியா வாங்கி பழக்கி வச்சிருக்கேன். வெறும் புண்ணாக்கு, பருத்திக் கொட்டை, புல்லுனு கொடுத்து வளத்திருக்கேன். சொன்னதைச் செய்யும். சாயந்திரம்தான் போட்டி”

ஆட்டை அவிழ்த்து தெரித்து விட்டுவிட்டு இளம் சோளக் கதிராக ஒடித்து வந்து தீ முட்டி இட்டார். பதமாக வாட்டி அவனிடம் இரண்டு கொடுத்து விட்டு தீயில் மர்ளிக் கிழங்குகளைச் சொருகினார்.

அருகில் குருவிகள் விரட்டும் பரண் பந்தல் இருந்தது.

“யேய், இப்ப பாக்கிரியா…”

“உய், உய், உய்ய்ய்ய்ய்ய்…” என்று விசிலடித்ததும் முத்து தாவி பறந்து ஒடி வந்தது. அவன் பயந்து பரன் மேல் ஏறிவிட்டான். முத்து சுற்றி வந்து மாமா மேல் உரசிவிட்டு தீயை ஒரே தாவலாக தாவிச் சென்றது. மாமா கிழங்கும் சோளக் கதிருடனும் மேலேறி வந்தார்.

“என்னடா பயந்திட்டியா? நம்ம முத்து எப்படி பாத்தியா?”

“மாமா, அந்த ஆட்டுப் பேரு என்ன?”

“குட்டி மணிடா”

“பெருசா இருக்குமா?”

“நம்ம முத்து பெருசுதான், ஆனால் குட்டி மணி கொஞ்சம் சூட்டிகைடா”

“அப்ப முத்து தோத்துடும்”

மாமா, “யாய்,” என்று கையை ஓங்கியதும் அமைதியாகிவிட்டான். மீண்டும் விசிலடித்து முத்துவைக் கூப்பிட்டார். முத்து தாவி ஒடி வந்து பரணைச் சுற்றியது.

மாமா கீழிறங்கிப் போய் விட்டார். இவன் அருகில் இருந்த டின்னில் சிறிது மோளமடித்தான், குருவி எதுவும் இல்லை. உற்சாகம் இழந்து கீழிறங்கி மாமாவுடன் சேர்ந்து கொண்டான்.

“ஏய், அடிக்க மாட்டன் வா குளிக்க போவம்”

“எங்க போயி மாமா?”

“நம்ம இன்ஐின்லதான்”

மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து வந்து இன்ஐினில் மாட்டிச் சுற்றினார். அது அசக், அசக், என்று தொடங்கியதும் சாவியை அவசரப்பட்டு எடுத்து விட்டார். சுற்று பத்தாமல் அச்சக் என்று நின்று விட்டது. மீண்டும் சாவியை மாட்டி இம்முறை கைகளில் மண்ணைத் தொட்டு கபடி வீரன் போல் சுற்றினார். இஞ்சின் அசக் அசக் அசக் என்று ஸ்டார்ட் ஆகிவிட்டது, சாவியை எடுக்க முடியவில்லை.

“ஏலேய், ஓடிடு. சாவி மாட்டிக்கிச்சு”

அவன் ஓடத்தொடங்கியதும் எதிர்ப்புற மரத்தில் இருந்த பாம்பு தாவியது. இவன் பயந்து மிரண்டு வந்த வழியே திரும்பவும் சாவி முன்னாள் விழுந்தது. பதறி நின்றவனை அடித்து விட்டார் மாமா. அழுது கொண்டே, “மாமா, அங்கே பாரு பாம்பு,” என்றான்.

“ஏலேய் நல்லதுடே”

அழுகையை நிறுத்தி, “அடிப்பமா?” என்று கேட்டான்.

“ஏய், அத அடிக்க முடியாது, போட்டுடும்”

“வா, குளிச்சு விட்டு ஆட்ட சண்டைக்கு விட இட்டுட்டு போவம்”

அவன் பார்க்கும்போதே நல்லது திரும்பி பூவரசு மரத்தில் ஏறி பொந்தில் இறங்கியதும், “மாமா பாம்பு அந்த ஓட்டையிலருக்கு, நான் பார்த்துட்டன்”, என்றான்.

“யேய், வாடா, வந்து குளிடா,” என்றார் மாமா.

அவன் மரத்தைப் பார்த்துக் கொண்டே குளித்தான். இன்ஜினை நிறுத்திவிட்டு அங்கிருந்து செல்லும்வரை தன் பார்வையை விலக்கவில்லை.

“பசிக்குது மாமா…”

தென்னையேறி இளநீர் போட்டு இன்ஐின் கொட்டாயில் இருந்து சூரிக்கத்தி எடுத்து சீவிக் கொடுத்தார். குடிக்கத் தெரியாமல் மேலெல்லாம் ஊற்றிக் கொண்டு புரையேரியது இவனுக்கு. அடிக்க கையை ஒங்கியவர் விட்டு விட்டார், இவனும் மௌனமாகி விட்டான். குளித்து தலை துவட்டியதால் முடி படிந்திருந்தது.

“ஏய், தேங்காய தின்னு”

“நீ தின்னு, எனக்கு வாணாம்”

முறைத்து விட்டு மாமா விசிலடித்ததும் மேய்ந்து கொண்டிருந்த முத்து மான் போல துள்ளி ஒடிவந்தது. உற்சாகமாகி, “மாமா, மாமா, நான் தரேன்,” என்றான். முத்து ஆவலோடு கையில் இருந்த தேங்காயைத்
தின்றது.

“சரி வா, போவும்”

முன்னும் பின்னுமாக முத்துவுடன் நடந்து மேடு இறங்கியதும் தூரத்தில் ஆற்றுக் கரம்பில் ஆடுகள் மேய்வது தெரிந்தது நெருங்கியதும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பாலேசன் வந்தார்.

“ஏய் பாலேசா, மணிய பிரிச்சு கொண்டு வா. சண்டை உடணும்”

” வாணாண்ணன், ஓ ஆடு தோத்துப்புடுச்சுனா நீ என்ன அடிப்ப, நான் வரல”

“ஏலே, இப்ப பிரிக்க போறியா, உத வாங்கப் போறியா?” சூரிக்கத்தியை எடுத்தார் மாமா. பாலேசன் அவரது ஆட்டைப் பிரிக்க சென்றதும் மாமா முத்தின் தலைக் கயிறு, மணிக்கயிறு எல்லாம் அவிழ்த்தார், முத்து முண்டம் போல் தெரிந்தது. தட்டித் தட்டிக் கொடுத்தார். முத்து, தன் தலையை ஆட்டிக் கொண்டு, மண்ணை முன் காலால் கிளறி ரோமாஞ்சனம் கொண்டு சிறிது மமதையுடன் நின்றது. அவன் மனதில் முத்து ஐெயிக்கனும் என்று வேண்டிக் கொண்டு திரும்பியபோது குட்டி மணிய்ஹை பெட்டைகளின் பின்னிருந்து பாலேசன் பிரித்துக் கொண்டு வந்தார்.

பத்தடி தூரத்தில் ஓன்றை ஓன்றை பார்க்கும்படி நிறுத்தி, பாலேசன் “உம்”, என்றதும் மிக அலட்சியமாக குட்டி மணி முத்தை எதிர்கொண்டது. முதலில் ஓரே சீராக இரண்டும் முட்டிக் கொண்டன. சிறிது சிறிதாக உச்சபச்ச வேகத்தை அடைந்தது சண்டை. தொடர்ச்சியாக பின்னகர்ந்து முன்னேறி இரு ஆடுகளும் முட்டிக் கொண்டன. முத்து சோர்ந்து போகாமல் சண்டை போட்டது, இறுதியில் குட்டிமணி சோர்ந்து ஓவ்வோரு அடியாக பின்னகர்ந்து மந்தையினுள் பாய்ந்தோடி மறைந்தது. மாமாவும் அவனும், “ஏய்…” என்று கத்திக் கூப்பாடு போட்டனர். பாலேசனைப் பார்க்க பாவமாக இருந்தது அவனுக்கு.

முத்து பெருமிதத்துடன் நடந்து அங்கிருந்த பெட்டையை மோப்பம் பிடித்து மூக்கைச் சுழித்து தலையை உயர்த்திய தருணத்தில் எங்கிருந்தோ குட்டி மணி பாய்ந்து வந்து முத்துவின் பின்புறம் சரியாக விதைமணியில் குத்தித் தூக்கியது.

“மே…” என்ற அதன் அலறலில் அதிர்ந்து அவனும் மாமாவும் ஓடிச் சென்று முத்தைத் தூக்கினர். முத்தால் நிற்க முடியவில்லை. கால் நடுங்கி சிறுநீர் கழித்தது. பின் கிழே ஒருக்களித்து, கத்திக்கொண்டு விழுந்தது. மாமா ஆவேசம் கொண்டு குட்டிமணியை வெட்டப் பாய்ந்தார்.

“மாமா, வாணாம்” என கத்தினான் அவன். பாலேசனும், “வாயில்லா ஐீவன், வாணாம்ணே” என்று கும்பிட்டதும் கத்தியை விட்டெறிந்துந்து விட்டு மாமா முத்தை தூக்கப் பார்த்தார், அவரால் முடியவில்லை. அவனும் சேர்ந்து தூக்கிப் பார்த்ததில் முத்து அசையவில்லை.

மாமா மவுனமாக அழுதுகொண்டு நின்றார். இவனுக்கு அதிர்ச்சியில் ஒன்றும் புரியவில்லை. மாமா அவனிடம், “நம்ம வண்டிய கொண்டு வரன். ஏய், பார்த்துக்க, ஆயாகிட்ட மூச்சு உடக்கூடாது”, என்று வாயில் விரலை வைத்து காண்பித்தார் .

முத்தைப் பார்த்தான். பாவமாக இருந்தது கண்ணில் நீர் துளித்துளியாக சொட்டியது. இவன் நெற்றியைத் தடவிவிட்டான். அவன் கையை அது நக்கிய போது உடல் சிலிர்த்தான்.

வண்டி நெருங்கி வந்தது. அவன் தன் ஆயாவைத் தேடினான். அவர் அங்கில்லை.

“என்னடா பண்ணீங்க?” என்றார் மொட்டைப்பிள்ளை.

இவன் ஒன்றும் சொல்லவில்லை. ஆடு கால் மாட்டி விழுந்துவிட்டதாக மாமாதான் சொன்னார். அவர் நம்பவில்லை, “ஏன்டா இது பாவத்த எடுத்துக் கொட்டினிங்க” என்று வருத்தப்பட்டார்.

முத்துவால் எழ முடியவில்லை. மொட்டைப்பிள்ளை கை கொடுத்து தூக்கி முத்துவைத் தூக்கினார். ஆனால் அவரால் முடியவில்லை, பிறகு மாமாவும் சேர்ந்து தூக்கி வண்டியில் ஏற்றினார்கள். வலியில் அது கத்தியது. மாமா வண்டியை நேராக கிழக்கே வைத்தியரிடம் விடச் சொல்லிவிட்டு முத்தைப் பார்த்தார். அவனால் இருவரையும் பார்க்க முடியவில்லை, பார்வையை வெளியில் திருப்பினான்.

வண்டி மனம் போல் வேகாமாய் ஓடி வைத்தியர் வீட்டில் நின்றது. வைத்தியர் தன் வேட்டியை மடித்துக் கட்டி அதை நிறுத்த பச்சை பெல்ட் கட்டி இருந்தார். நல்ல உயரம். கருப்பு. ஒடிசலான உடம்புக்கு இடுப்பில் இடது கையால் முட்டுக் கொடுத்திருந்தார். வலது கையில் சுருட்டு புகைந்த நெடி சுழன்று அடித்தது.

வைத்தியரிடம் மாமா நடந்ததைச் சொன்னார்.

“ஏலேய், அடுத்தவன் பெண்டாட்டிய தொட்டா சும்மா விடுவானா?” என்றார் வைத்தியர் சிரித்துக் கொண்டே. பின்னர், அவர் முத்துவை எழுப்பி தடவிப் பார்த்தார், வலியில் “மே…”, எனக் கத்தியது. மருந்து கொடுத்தார், அதன் நாக்கை இழுத்து, உள்ளுக்கு.

“ஏலேய், வர்ம அடி பட்டிருக்கு. வித்துடு,” என்றார் மாமாவிடம். மாமா அழுதார், அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

“சரி, போயி சோறு வடிச்ச தண்ணியில மஞ்சள் பொடி போட்டு சுடவச்சு தடவி விடுங்க. ரத்தக்கட்டு கரையும், காலையிலே வரன்,” என்றார் வைத்தியர்.

இரவாகிவிட்டது. முத்தை இறக்கும்போது ஆயா, “இது என்னடா கொடுமை! அய்யோ என்னடாச்சு,” என்று அலறினார்.

நடந்த விஷயத்தை மொட்டைப்பிள்ளை மாமா விரிவாகச் சொன்னார். ஆயா சத்தமில்லாமல் அழுதார், அவர் தலைக்கு குளித்திருந்தார். அவனைப் பார்த்து, “ஏலேய், நேற்று இரயிலடில பார்த்தம பவுனு… அவ மருந்தக் குடிச்சுட்டு செத்துப் போயிட்டாடா…” என்று அழுதுகொண்டே சொன்னார். அப்புறம், “இன்னும் நான் என்னவெல்லாம் பாக்கணுமோ,” என்று மாமாவைப் பார்த்துச் சொன்னார். மாமா தலையைத் திருப்பிக் கொண்டார். ஆயாவின் முகம் ரொம்ப சோகமாக இருந்தது, அவன் கேவிக் கேவி ஒலமிட்டு அழ ஆரம்பித்தான். ஆயா, மாமா, மொட்டைப்பிள்ளை யார் சொல்லியும் அவன் அழுகை அடங்கவில்லை.

ஆயா மோட்டப்பிள்ளையிடம், “காலை முதவண்டியில் இவனை கொண்டு விட்டு வா”, என்றார். அவனுக்கு அப்பொதே அம்மாவை பார்க்க வேண்டும் போல் இருந்தது. பிறகு மாமாவையும் முத்துவையும் பார்த்துச் சமாதானமானான். ஆயா இருவரையும் சாப்பிட கூப்பிட்டார்கள். மாமா முதலில் மறுத்து, பிறகு இவன் வற்புறுத்தியதும் சாப்பிட வந்தார்.

முத்து தண்ணீர், தீனி எடுக்கவில்லை. அசையும் போடவில்லை. “யே மொட்டைப்பிள்ளை, கசாப்புக்காரனைக் கூப்பிட்டு வா,” என்று ஆயா சொன்னார்.

சிறிது நேரத்தில் கசாப்புக்காரன் ஒரு ஆளோடு வந்தார். மாமா குடுகுடு என்று ஓடி வீட்டிலிருந்து சுலுக்கியோடு வெளிவந்து, “ஏலேய், எவனாவது ஆட்டத் தொட்டிங்க, குடல சரிச்சுடுவன்,” என்று கத்தினார்.

முத்துவின் சன்னமான முனகலைத் தவிர வேறு சப்தமில்லை. சிறிது நேரம் பொருத்து கசாப்புக்காரர், “தம்பி பொழைக்காதுப்பா,” என்றார். மாமா கீழே குனிந்து தேடினார். திண்ணையில்யில் தராசுப் படிகல் இருந்தது. அதை எடுத்து எறிந்ததும், “நான் போறன்டா சாமீ, நீ இஷ்டப்படி செய்டா யப்பா…” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

மாமா ஆட்டை பார்த்து கொண்டே படுத்தார். காலை எழுந்தபோது முத்து செத்து விறைத்திருந்தது.மாமா சன்னமாக அழுதார். இவனை பார்த்ததும் கேவி அழுதார். ஆயா, “இப்படி கொள்ளை போவத்தான் இப்படி மாங்கு மாங்குன்னு வளந்துச்சோ… அழுவாதடா, வேற வாங்கி தரன்,” என்றார்.

அதற்குள் கேள்விபட்டு ஊர் கூடி தலைக்கு தல பேச வந்துவிட்டார்கள். ஒரு தாத்தா, “நல்ல இளம்கிடா. வெட்டி ஆளுக்கோரு கூறு போட்டா ஊரே கல அடங்கும், என்றார். தாத்தா தலை முழுக்க நரைத்து வயிறு ஒட்டி கறிசோறு கண்ணால் கண்டு பலவருசம் ஆகி இருக்கும் போல நாக்கை சப்புகொட்டிக் கொண்டிருந்தார். கூட இருந்தவர்களும் அவருடன்
சேர்ந்து ஆளாளுக்குப் பேச ஆரம்பித்ததும் மாமா, “முத்தை தொட்டிங்க உங்கள வெட்டி கறி போட்டுடுவன்,” என்று கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து வீச ஆரம்பித்து விட்டார். “அப்படியே கிழக்கே போங்க பொணம் எரியும். ஆளுக்கு ஒரு கையா பிச்சு தின்னுங்க,” என்றார் மாமா.

“முரட்டுப் பய”, என்று திட்டிக்கொண்டே எல்லாரும் கலைந்து சென்றனர்.

மாமா எதுவும் பேசவில்லை. எல்லாருக்கும் அவரிடம் பேச பயம்.

மாமா எழுந்து மண்வெட்டி எடுத்து குப்பை மேடு ஒரமாக குழி வெட்ட ஆரம்பித்தார். புரிந்து கொண்டு மொட்டைப்பிள்ளை மண்வெட்டியை வாங்கி பள்ளம் வெட்ட ஆரம்பித்தார்.

ஆயா வந்து பார்த்து, “பள்ளம் இடுப்ப தாண்டி ஆழம் இருக்கட்டும், இல்லனா நாய் நோண்டிடும்,” என்று சொன்னார்

பள்ளம் வெட்டிவிட்டு மொட்டைப்பிள்ளையும் மாமாவும் இருவருமாக சேர்ந்து முத்துவைத் தூக்கி வந்தனர்.

மாமா அவனிடம், “ஏய் ஓடி சிவப்பு எடுத்து வா,” என்றார். அவன் சிவப்பு கொண்டு வந்தபோது அவர் பூவுடன் நின்றார். சிவப்பும் செம்பருத்தி பூவும் வைத்து குழியில் இறக்கினர். ஆயா அழுது கொண்டிருந்தார். மாமா மண் தள்ளினார். பாதி குழியில் இருக்கும்போது பாலேசன் ஒரு செம்மறிக் குட்டியுடன் வந்து, “அண்ண, முதலாளி கேள்விப்பட்டு இந்த குட்டிய
குடுத்துட்டு வரச் சொன்னாங்க,” என்றார்.

“ஏய் நீ எடுத்துட்டு போ, எனக்கு வாணாம்,” என்றார் மாமா. ஆயா, “இருக்கட்டுமப்பா, என்று சொன்னதற்கு, மாமா முறைத்ததும் அதற்கு மேல் ஒன்றும் சொல்ல வில்லை. பாலேசன் நின்று பார்த்து விட்டு குட்டியுடன் சென்று விட்டார்.

மாமா மொட்டைப்பிள்ளையிடம் மம்மட்டியை வாங்கி அடிபம்பு ஓரம் சென்றார். அங்கு புதைத்து இருந்ததில் முன்று தென்னை நெற்றுக்கள் முளை விட்டிருந்தது. அதில் துடியாய் இருந்ததை நோண்டி வந்து மொட்டைப்பிள்ளையிடம் கொடுத்து, குழியில் வைக்கச் சொன்னார். அதன்பின், சுற்றி மூங்கில் படல் வைத்து வேலி அடைத்து சென்று வர வழியெல்லாம் வைத்தார். பிறகு அடிபம்பிலிருந்து தண்ணீர் வர வாய்க்கால் அமைத்தார்.

அவன், “மாமா இனிமேல் முத்துவ பார்க்கவே முடியாது இல்ல,” என்று கேட்டான்.

ஆயா சத்தமாக, “அங்க தோரணம் கட்டுனது போதும், வந்து சாப்பிட்டுட்டு ஊருக்கு கிளம்பு. இந்த ஊட்டுக்காரனையும் இட்டுட்டு வா,” என்றார்.

“மாமா, ஆயா கூப்புடுறாங்க,” என்று மாமாவிடம் போய் சொன்னான்.

“யேய் இங்கே வா, இது பேர் என்ன தெரியுதா? என்று கேட்டார் மாமா.

“தென்னம்பிள்ள, மாமா”, என்றான் அவன்.

“இல்லடா, இது முத்துப்புள்ள, முத்துப்புள்ள,” என்றார் அவர் கிசுகிசுப்பாக.

பாப்பா சொல்லுச்சு

தி வேல்முருகன்

காலையிலேயே சின்னவன் ஆரம்பிச்சுட்டான். “பீஸ் கட்டாதவங்களை எல்லாம் மிஸ் எழுந்து நிக்கச் சொல்லிட்டாங்க. நான் போ மாட்டேன் இன்னைக்கு”

ஒரு மாசம் முடிஞ்சு தேதி 13 ஆயிடுச்சு, இந்த கஷ்டமெல்லாம் யாருக்கு தெரியப் போவுது. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கணுமில்ல, எந்த பூசாரி டேபிளில் கிடக்கோ? மகராசன் மனசு வச்சா இன்னைக்கி கிடைக்கும்.

“ஸ்கூலுக்கு போ நான் மதியம் வந்து கட்டிடறன். தங்கமில்ல, போப்பா”

“கண்டிப்பா மதியம் வரணும்”

“கண்டிப்பா வந்திடறேன்”

யாருகிட்டயும் கேட்டு வாங்கி கட்டலாம்னா ஒரு நிலை இல்லை எப்ப கிடைக்கும்னு. கேக்காமலே உதவிய நண்பருக்கு வேற அவர் கேட்டப்போ தர முடியலை. அவர் என்னை எதுவும் பேசவே விடலை, “கதைலாம் சொல்லாத காசு உடனே வேணும்,” என்றதும் ரொம்ப சங்கடமா போயிடுச்சு. சரி, அவரையும் இப்ப கேக்க முடியாது, சம்பளம் போடலன்னா மதியம் ஸ்கூல் போயி சொல்லிட்டு வந்துடணும்னு நினைச்சுக்கிட்டு வேலைக்கு கிளம்பினேன்.

சம்பளம் வாங்கினா மட்டும் என்ன காற்றுல பறக்கற உமி கதைதான், வாங்கறதும் தெரியாது பறக்கறதும் தெரியாது. முதல்ல 1ந்தேதி சம்பளம் போடற கம்பேனியா பார்த்து வேலை தேடனும். சம்பளம் போடல வேலை பார்க்க முடியாதுனு சொல்ல முடியாது இல்லையா. இரண்டு மாடு கட்டற இடத்துல ஒரே மாட்ட கட்டி இழுக்கறானுவ. இத உட்டாலும் வழியில்ல, பார்ப்போம் ஏதாவது வழி பிறக்கும்.

மணி 11 ஆச்சு, சரி டீ குடிக்கலாம்னு வெளியே போனா, நண்பர் வேகமாக என்னைப் பாத்து வந்தார். எங்க காசு கேப்பாரோன்னு பயந்து பம்மினேன்.

“சார், சம்பளம் போட்டுட்டானுவ சார்”

காசும் கேக்கலை, பார்ட்டியும் கேக்கல. கதை இதோடு முடிஞ்சிருந்தா நல்லாதான் இருக்கும்.

1 மணி நேரம் பர்மிசனுக்கு மேனேஜரிடம் சொல்லிட்டு பேங்க் போய் பணம் எடுத்து வரும்போதுதான் விதி சிரித்தது.

நான் பணத்தை வேகமாக பையில் வைக்கிறேன், “மாப்பிள்ளை,”ன்னு வேகமாக வந்தார் மாமா. வண்டியைத் தள்ளும்போது, “நானும் வரேன்”.

“பசங்களுக்கு பீஸ் கட்டணும் முட்லூர் போறேன்”

“இல்ல மாப்பிள்ளை தீத்தாம்பாளையம் போயி ஒருத்தர பார்க்கனும். நீங்க எடுங்க வண்டிய, அப்படியே இறங்கி அவரைப் பாத்திடறேன்”

பணம் கேட்கவில்லை.

“ஏம்மாப்பிள்ளை, சின்னவன் என்ன படிக்கறான்?”

“ரெண்டாவது படிக்கறான்”

“புது பணக்காரனுவ எல்லாம் பெரிய ஸ்கூலா பார்த்து படிக்க வைக்கறானுவ. நீதான் என்ன பண்ணுவ பாவம், வெளிநாடுலாம் போன. கடைசியா பவர் பிளாண்ட்ல வந்து கஷ்டப்படணும்னு இருக்கு உன் விதி”

“அப்படில்லாம் இல்லை மாமா நல்லாதான் போவுது.”

“நீ ஒன்னு மாப்பிள்ளை காலைலேருந்துபச்சை தண்ணி பள்ளுல படாம வண்டி மாடுவ பட்டினி கிடக்குதுவன்னு பணத்துக்கு வந்து நிக்கறன், அந்த தீத்தாம்பாளையத்து வக்காலஓழி என்ன ஏமாத்திப்புட்டான் நீ வண்டிய விடு நான் அவன பாத்துக்கறேன்”

நான் எதுவும் பேசலை.

|மாடுவல பார்தா பாவமா இருக்கு. போரோட தின்ன மாட்டுக்கு புடிங்கிப்போட்டா கட்டுபடியாவுமா, வாணான்டி வானான்டின்னு சொன்னா கேக்கறாளா தேவடியாச் செருக்கீ, இப்ப நான்தான் கஷ்டப்படறன். மாடுவலுக்கு பில்லுவ போட்டா காபந்து பண்ண முடியும், போக்கத்த செருக்கீ”

நான் எதுவும் பேசலை.

“பையன் ரெண்டு நாள்ல சிங்கப்பூர் போறான், சின்னவன் அங்கதான இருக்கான், ஆனா நம்ம யோக்கிதை அப்படி- எவனும் ஊம்புனாக்கூட காசு தர மாட்டான்”

நான் இந்த இடத்தில் பலார மாவு போல் பாகாய் உருகி கேட்டால் கொடுக்கும் மனநிலைக்கு வந்து விட்டேன்.

“ஸ்கூல் வந்துட்டது மாமா, இருங்க பணம் கட்டிட்டு வந்துடறன்”.

வெளியே வந்ததும், “மாப்பிள்ளை, கைல எவ்வளவு இருக்கும்?”

“மாமா, இத வச்சுதான் இந்த மாசம் ஓட்டனும்”

“அதிகமில்லை மாப்பிள்ளை ஐய்யாயிரம்தான், பெரியவன் போன உடனே அனுப்பிடுவான். நான் புதன்கிழமை தரன், நீ குடு. அட குடு மாப்பிள்ளை, நான் தரன் நீ கேட்கவே வாண்டாம்”

“இல்லை மாமா நீ தீத்தாம்பாளையம் போறேன்னு சொன்ன?”

“அவன் திருட்டுப்பய மாப்பிள்ளை, அவன் கிடைக்க மாட்டான் நீ குடு”

“இல்லை மாமா, வீட்ல பிரச்சினையாயிடும்”

“யாரு பாப்பாவா? தங்கமான புள்ளப்பா அது. ஒரு வம்புதும்புக்கும் போவாது அது வேல உண்டு வித்து உண்டுன்னு இருக்கும். உன் சித்தப்பா வாங்கிச்சுன்னு சொல்லு, ஒன்னும் சொல்லாது”

வந்து சொன்னன் பாப்பாகிட்ட.

பாப்பா சொல்லுச்சு, “அதான் குடுத்துட்டல, ஏன் எழவு விழுந்த மாதிரி மூஞ்ச வச்சிகிட்டு உக்காந்து இருக்க, உன்ன எனக்கு தெரியாது? பசப்புனான்னு குடுத்துட்டு இருக்கியே, அவன்கிட்ட வாங்க முடியுமா? கட்டைல போறவன் குடுக்கும்போது குடுக்கட்டும், வா வந்து ஒரு வாய் சாப்பிடு”

எனக்குன்னு ஏன்தான் இப்படி வந்து வாச்சுதோ.

வண்ணத்து பூச்சிகளின் கோயில்- ஆ. ஜீவானந்தம்

(சிறுகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)

கிழிசல் இல்லாத ரவிக்கையை அம்மா தேடிக்கொண்டிருந்தாள். அவசரமும் பதைபதைப்பும் கூடிய அவளது உடலசைவுகள் வினோதமாகத் தெரிந்தன. இப்போதே நேரம் ஆகிவிட்டது. இதுவரை பஸ் வரும் சப்தம் ஏதும் கேட்காமல் இருப்பதே ஆச்சரியம். ஈச்சம்பாறையின் மேலேறி நின்றுக்கொண்டு தூரத்தில் தெரியும் தார்ரோட்டில் பஸ் ஏதும் வருகிறதா எனப் பார்த்தேன். நல்லவேளை. வளைவுகளில் நெளிந்து, மின்னி ஓடும் ஒரு கருநதியாய் தார் ரோடு வெறுமையாகக் கிடந்தது. ஆனால் எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் இளம் பசுமையான வெற்றிலைக் கொடிகள் அகத்தி மரத்தில் படர்ந்திருக்கும் தோப்புகளின் ஊடாக கடந்து வரும் ஹாரன் சப்தம் கேட்டுவிடக்கூடும். அதற்குள் கிளம்பிக்கூட் ரோட்டை அடைந்துவிட்டால் பிடித்துவிடலாம் பஸ்ஸை.

கடவுளே! கருப்பிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது…

சாயங்காலம் மாட்டுக்கொட்டாய்க்கு ‘புளஸ்தண்ணி’ வைக்கப் போன பாட்டி திடீரென கத்தி கூப்பாடு போட்டாள். புளியங்கொட்டை மாவில் கூழ் காய்ச்சிக் கொண்டிருந்த அம்மா பதைபதைப்புடன் கொட்டாயை நோக்கி ஓடினாள். தும்பைப் பூக்களை வாயில் வைத்து தேன் உறிஞ்சியபடியே அம்மாவுக்கு பின்னால் நானும் ஓடினேன். கருப்பி அசை போடவில்லை. அவள் உடம்புக்கு என்னமோ ஆகியிருந்தது. அழகான கொம்புகளுடன் கூடிய அம்முகத்தின் வசீகரம் காணாமல் போயிருந்தது. அசை போடாத நிச்சலனத்துடன் தரை வெறித்திருந்த அதன் பார்வையில் பீதியும் வெறுமையும் சேர்ந்த கலவையின் மின்னல்கள் பளிச்சிட்டன. நான் அருகில் சென்று அவள் கழுத்தை கைகளால் வளைத்து கருப்பியின் முகத்தை என்னை நோக்கித் திருப்பினேன். அதன் கழுத்தில் இருந்த தொன்னச்சி பூச்சிகளையும் உண்ணிகளையும் பிடுங்கி நசுக்கி போட்டேன். அளவற்ற வாஞ்சையுடன் கருப்பியின் கழுத்தில் என் முகத்தை பதித்துக்கொண்டு கைகளால் தடவிக்கொடுத்தேன். வழக்கமாக நான் இப்படி செய்தவுடன் கருப்பி உற்சாகமாக தலையை ஆட்டுவாள். கொம்பைத் தாழ்த்திக் கொண்டு தடவிக் கொடுப்பதற்கு வாட்டமாக தலையைக் காட்டுவாள். ’பேசற அறிவு ஒண்ணுதான் இல்ல, மத்த எல்லாம் இருக்கு’ என அம்மா செல்லமாக திட்டுவாள். ஆனால் அன்றைக்கு கருப்பியிடம் எந்த அசைவும் இருக்கவில்லை. என் கருப்பி வழக்கம் போல தலையை ஆட்டவில்லை. தடவிக் கொடுப்பதற்காக முகத்தை காண்பிக்கவில்லை… உனக்கு என்ன ஆகிவிட்டது கருப்பியே… ஏன் இப்படி இருக்கிறாய்… நீ இப்படியே இருந்தால் சூடு கொட்டைகளை கொண்டு வந்து பாறையில் தேய்த்து சூடு வைத்துவிடுவேன்…

“அத தொந்தரவு பண்ணாத… எழுந்து தூர வாடா” என்றாள் அம்மா. நான் துக்கத்துடன் எழுந்து வந்து அம்மாவுக்கருகில் நின்று கொண்டேன். இதற்குள் விஷயம் தெரிந்து பக்கத்து தோப்பிலிருந்து கிருஷ்ணா பாட்டி வந்தாள். “ஒண்ணும் பயப்படாத கண்ணு… ஜீரண கோளாறாத்தான் இருக்கும்… வெத்தலயில பெருங்காயத்த வெச்சி ஊட்டக் கொடுத்தா சரியாப் போயிடும்…’ என்றாள்

வேடி மாமாவும் செல்வமும் பெருங்காயத்தை வெற்றிலைக்குள் மடித்து வைத்து கருப்பிக்கு ஊட்டினார்கள். வேடி மூக்கணாங்கயிற்றை இழுத்துப் பிடித்துக் கொள்ள செல்வம் கருப்பியின் வாயை வலியத் திறந்து பிடித்துக்கொண்டு உள்ளே வெற்றிலை மூடிய பெருங்காயத்தை திணித்தார். நடப்பது புரியாமல் மிரண்டு திமிறிய கருப்பியைப் பார்க்க பார்க்க எனக்கு அழுகை கிளறிக் கொண்டு வந்தது.

“அர மணி நேரம் பாருங்க… அதுக்கப்புறமும் அச திரும்பலன்னா வைத்தியனதான் போய் கூட்டி வரணும்…” என்று சொல்லிவிட்டு வேடி மாமா போய்விட்டார்.

காற்றடிக்கையிலெல்லாம் உதிர்ந்தபடியே இருந்த புளியம்பூக்களை வாயில் போட்டு மென்று மென்று துப்பியபடியே நான் கருப்பியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அரைமணி நேரத்திற்கு மேலாகியும் கருப்பி அசையே போடவில்லை. லேசாக கருப்பியின் வாயில் இருந்து ஜொள் ஒழுகத் தொடங்கியது. உடனே பதறியடித்துக் கொண்டு ராமசாமியைக் கூட்டி வருவதற்காக அம்மா கிளம்பினாள். கூடவே நானும் கிளம்பினேன்.

ராமசாமி எங்கள் பக்கத்தின் ஒரே நாட்டு வைத்தியன். மாடுகளின் நோய்களுக்கும் எலும்பு முறிவிற்கும் வைத்தியம் செய்வதுதான் அவன் தொழிலாக இருந்தது. மனிதர்களுக்கென வரும் சில ரகசிய நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதில் அவன் தேர்ந்தவனென பிற்பாடு அறிந்தேன்.

ராமசாமியை தேடி நானும் அம்மாவும் ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். ஊருக்கு வெளியே அடர்ந்த தென்னந்தோப்புகளில் ஆங்காங்கே தென்படும் ஒற்றை வீடுகளில் ஒன்றுதான் எங்களுடையது. எங்கள் வீட்டைச் சுற்றிலும் கூப்பிடு தூரங்களில் நாலைந்து குடிசைகள் மட்டுமே இருந்தன. எங்கள் வீட்டிலிருந்து அடிக்கடி ஊருக்குள் போய் வருபவனாக நான் இருக்கவில்லை. ஊருக்குள் போய் எனது பள்ளி நண்பர்களுடன் விளையாடுவது என்பது எனக்கொரு பெரிய பிரச்சினையாகவே இருந்து வந்தது. வழி நடுவில் ‘ஒம்போது புளியமரம்’ என்றொரு இடம் இருப்பதே காரணம். அருகருகே எழும்பிய ஒன்பது புளிய மரங்கள் தம் நீண்டர்ந்த கிளைகளுடன் அங்கே வியாபித்திருந்தன. பல பேய்களும் ஒரு முனியும் அங்கு உலவுவதாக கதைகள் சொல்லப்பட்டன. ஒருவித மயான அமைதியுடனும், விவரிக்க முடியாத இருளின் கதிர்களுடனும் அந்த இடம் காணப்பட்டது. செழித்த நிழற்குளுமை பூத்துக்கிடக்கும் அந்த இடத்தை கடந்து போகும் போதெல்லாம் திகில் கொடிகள் உடம்பைச் சுற்றத்தொடங்க பயக்குமிழிகள் பூத்து உதிரும். அந்த இடம் வந்தவுடன் நான் அம்மாவின் கையை இறுகப் பற்றிக் கொண்டேன்.

அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு அந்த இடத்தைக் கடக்கும்போது எனக்கு பயமே தெரிவதில்லை. அம்மாவின் அருகாமை என்பது சகல அச்சங்களையும் எரித்துவிடக்கூடியதாக இருக்கிறது. சொரசொரப்பான அவள் உள்ளங்கையிலிருந்து உணர நேர்கிற கதகதப்பு சொல்லமுடியாத பல விஷயங்களினால் ஆனது. எத்தனையோ ஆண்டுகள் கழிந்து போயினும் இன்னும் இதமூட்டுவதாய் அம்மாவின் அந்த ஸ்பரிசமே எஞ்சி, அணையாது மனத்திரியில் நின்றொளிரும் அருட்சுடராக வாழ்வெளி எங்கும் பிரகாசிக்கிறது.

நாங்கள் ஊருக்குள் போன போது ராமசாமி வீட்டில் இல்லை. ஏதாவது சாராயக் கடையில் இருப்பானென்று யாரோ சொன்னார்கள். அருகருகே இருந்த இரண்டு சாராயக்கடைகளிலும் அவன் இல்லை. மூன்றாவது கடை கொஞ்சம் தொலைவில் இருந்தது. ஓடிச்சென்று விசாரித்ததில் அங்கேயும் அவன் இல்லையென்று சொன்னார்கள். அப்போதுதான் குடித்து முடித்திருந்த மூர்த்தி குழறியபடியே சொன்னான், ”அடடா அச போடலன்னா கஷ்டமாச்சே… இப்பத்தான் ராமசாமி இந்த ஓணில போனான். சுருக்கா நடந்தா புடிச்சிறலாம்…”

பதற்றத்தையும் அவசரத்தையும் வரித்த பாதங்களூடன் நானும் அம்மாவும் இருள் அடர்ந்திருந்த அந்த ஓணி வழியில் நடந்தோம். வழியின் இரு பக்கத்திலும் அடர்ந்திருந்த பனைமரங்களில் இருந்து கள் வாசம் சிந்திக்கொண்டிருந்தது. எனக்கு மிகப்பிடித்தமான வெல்வெட் பூச்சிகள் உறங்கிக் கொண்டிருக்கும் நிலக்கடலை வயலிருந்து சிள்வண்டுகள் ரீங்கரித்தன. சற்று தொலைவில் தள்ளாடியபடியே யாரோ நடப்பது நிழலைசைவாகத் தெரிந்தது. நல்லவேளை. ராமசாமிதான், இனிக் கவலையில்லை. எப்படிப்பட்ட நோயையும் குணப்படுத்தி விடுவதில் ராமசாமி தேர்ந்தவன்.

அவனிடம் விஷயத்தைச் சொல்லி அழைத்து வந்தோம். தள்ளாடியபடியே நடந்தான். எவ்வளவு போதையிலும் எதையும் கவனித்து நிதானிக்கும் சித்தம் பெற்றவன்தான் அவன். ஆனால் அன்றைக்கு வழக்கத்தை விட அதிகமாயிருந்தது போதை. அதிகரித்துக்கொண்டே வந்தது அவன் நடையின் தள்ளாட்டம். மாட்டுக்கொட்டாய்க்கு கொஞ்ச தொலைவிலேயே விழுந்தவன் விழுந்தவன்தான், எழவே இல்லை. எழுப்பி எழுப்பி பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தோம். கருப்பி அப்படியேதான் இருந்தாள். அசை போடவில்லை. இனி மருத்துவரைக் கூட்டிவர போச்சம்பள்ளிதான் போகவேண்டும். சற்று நேரத்தில் பஸ் வந்துவிடக்கூடும், அதற்காகத்தான் கிழிசல் இல்லாத ரவிக்கையை அம்மா தேடிக்கொண்டிருந்தாள். நான் அப்போதுதான் சுட்டு வைத்திருந்த பலாக்கொட்டைகள் சிலதை உண்பதற்காக எடுத்து ஜோபியில் போட்டுக்கொண்டு அம்மாவுடன் கிளம்பினேன்.

இரவு எட்டு மணிக்கு நாங்கள் போச்சம்பள்ளி போய் சேர்ந்தோம். மருத்துவரின் வீடு எங்கிருக்கிறதென தெரியவில்லை. முன்பு எப்போதோ ஒருமுறை மருத்துவர் வீட்டுக்கு போயிருப்பதாகவும் இப்போது மறந்துவிட்டதாகவும் அம்மா சொன்னாள். பக்கத்திலிருந்த தேநீர் கடையில் விசாரித்தோம். கூட நடந்து வந்த ஒன்றிரண்டு பேரிடம் கேட்டோம். யாருக்கும் தெரியவில்லை. தெளிவில்லாமல் ஒரு தெருவில் நடந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த ஒருவர் சொன்னார், ”இப்படியே நேரா போய் இடது பக்கம் திரும்பினா மூணாவது வீடு…”. மூன்று மாதங்களுக்கு முன்பு செத்துப் போயிருந்த என் அப்பாவைப் போல மீசை வைத்திருந்த அவரை திரும்பி திரும்பி பார்த்தபடியே நான் நடந்தேன்.

மருத்துவரின் வீடு வெளிர்நீல நிறத்தில் இருந்தது. வீட்டின் முன்புறத்தை அநேக வகையான பூச்செடிகள் நிறைத்திருந்தன. மைசூரிலிருந்து அவர் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்திருந்தனர். சந்தோஷக் கூச்சல்களும், கொண்டாட்ட ஆரவாரங்களும் அவர் வீட்டிலிருந்து ததும்பி வந்தன. மருத்துவர் வீட்டில் இல்லை. பக்கத்தில் எங்கோ போயிருக்கிறார் என்றும் சீக்கிரத்தில் வந்துவிடுவார் என்றும் அவர் மனைவி சொன்னார். நாங்கள் தாழ்வாரத்தில் உட்கார்ந்தோம்.

கருப்பி இதுமாதிரி ஆனதற்கு ஏதாவது விஷப்பூண்டை மேய்ந்ததுதான் காரணமாக இருக்குமென்று அம்மா சொன்னாள். கருப்பி பெரும்பாலும் பெரிய காவாயில்தான் மேய்ந்துக் கொண்டிருப்பாள். ’பெரியக்காவாய்’ என்று அழைக்கப்பட்டாலும் அவ்வளவு பெரிய கால்வாயாக இல்லை அது. அதிக மழை பொழிந்து எப்போதாவது செல்லநாக ஏரி நிரம்பி வழியும் போதுதான் அந்த கால்வாயில் தண்ணீர் வரும். என்றாலும் எப்போதும் ஈரம் சொதசொதக்கும் மண்ணைக் கொண்டதாக அந்த கால்வாய் இருந்தது. கரிசாலையும் பொண்ணாங்கண்ணியும் நிறைந்து கிடக்கும் அங்கே நிறைய வண்ணத்து பூச்சிகள் பறந்தபடியே இருந்தன. அந்த இடம்தான் வண்ணத்து பூச்சிகளின் கோயில் என்று கீதாக்கா சொன்னாள். மிக நல்ல அக்காவாகவே அவள் இருந்தாள். சாப்பிட்டிருக்காத வாயின் கசப்பை நான் எச்சிலாக துப்பிக் கொண்டிருந்த தருணங்களில் எல்லாம் அம்மாவுக்கு தெரியாமல் பூசணி இலையில் வைத்து சோறும் குழம்பும் ஊற்றிக் கொடுத்த விரல்கள் அவளுடையதாக இருந்தன. பௌர்ணமிதான் வண்ணத்து பூச்சிகளின் பண்டிகை நாளென்றும் வானத்துக்கு மேலே இருக்கும் வண்ணத்து பூச்சிகளின் சாமி ராட்சஸ உருவத்துடன் பெரிய சிறகுகளுடன் பறந்தபடி ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கீழே வரும் என்றும் இரவில் ஒண்ணுக்கிருப்பதற்காக வெளியே வந்த போது இரண்டு முறை அவற்றை தான் பார்த்திருப்பதாகவும், அழகான அவைகளை பிடித்து விளையாடி ஒருபோதும் துன்புறுத்தக்கூடாதென்றும் சதா சொல்லிக் கொண்டிருந்த அவள்தான் ஒரு பௌர்ணமி தினத்திலேயே யாருடனோ ஓடிப்போனவள் ஆனாள்.

எனக்கும் கருப்பிக்கும் வண்ணத்துபூச்சிகளின் கோயிலை ரொம்பவும் பிடித்திருந்தது. விதவிதமான நிறங்களில் பறந்து களித்திருக்கும் வண்ணத்துபூச்சிகளின் மீது கருப்பிக்கு ஏதோவொரு ஆர்வமும் கவர்ச்சியும் இருந்ததென்றுதான் நினைக்கிறேன். நான் கவனித்திருந்த பல சமயங்களில் கருப்பி புல்லைக் கூட மேயாமல் வண்ணத்துபூச்சிகள் பறப்பதையே பார்த்துக்கொண்டிருப்பாள். ஒருவேளை அங்கே ஏதாவது விஷப்பூண்டுகள் இருந்திருக்குமோ? அது வண்ணத்து பூச்சிகளின் கோயிலாயிற்றே… எப்படியிருந்தாலும் கடவுளே கருப்பிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது…

மருத்துவரின் வீட்டுத் தோட்டத்தில் ஒரு சிறுமி நந்தியாவட்டைப் பூக்கள் கொய்து கொண்டிருந்தாள். மருத்துவரின் மகளாகவோ வந்திருக்கும் விருந்தினர்களின் மகளாகவோ இருக்கலாம். பூக்களைக் கொய்யும் விளையாட்டில் சலிப்படைந்தவள் போல காணப்பட்டாள். நான் எழுந்து அவள் அருகே சென்றேன். ஒருசில விளையாட்டுகள் மூலம் நாங்கள் வெகு சீக்கிரமே நட்பில் ஒன்றிவிட முடிந்தது. என் ஜோபியிலிருந்த சுட்ட பலாக்கொட்டைகளை அவளிடம் எடுத்துக் கொடுத்தேன். முடியக்கூடிய எதையும் எல்லோருக்கும் தருபவனாகவே எப்போதும் நான் இருந்து வந்திருக்கிறேன். பலாக்கொட்டைகளின் ருசி அவளுக்கு மிகவும் பிடித்துப் போனது. அதற்கான நன்றியுடன் என்னைப் பார்த்தாள். இருந்தாலும் ஒரு கடனாளியாக அவள் தன்னை உணர்ந்திருக்க வேண்டும். பதிலுக்கு தானும் எதையாவது எனக்கு தர விரும்பியவளாக வீட்டினுள்ளே சென்று ஒரு சிறு கிண்ணத்துடன் திரும்பிவந்து என்னிடம் அதை நீட்டினாள். ஆர்வத்துடன் அக்கிண்ணத்தை வாங்கிப் பார்த்தவாறு நான் சொன்னேன்.

“ அட மண்புழு மாதிரி இருக்குதே…”

“… ஐயோ அது மண்புழு இல்ல… நூடுல்ஸ்… ”

ப்ரியமான என் நண்பர்களே! வாழ்வில் முதல் முறையாக அப்போதுதான் நான் நூடுல்ஸ் புழுவைத் தின்றேன். கொஞ்சத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு மீதியை பிளாஸ்டிக் காகிதத்தில் சுருட்டி ஜோபியில் பத்திரப்படுத்திக் கொண்டேன். திடீரென எனக்கொரு யோசனை தோன்றியது. மண்புழுவை தூண்டிலில் கோர்த்து மீன் பிடிப்பதைவிட இந்த நூடுல்ஸ் புழுவைக் கோர்த்து மீன் பிடித்தால் நிறைய மீன்கள் சிக்கலாம் எனபதுதான் அது. ஒரே தடவையில் ரெண்டு மூணு மீன்கள் கூட மாட்டலாம்.
நான் உடனே அம்மாவிடம் ஓடி வந்தேன்.

“…உனக்கு தெரியுமா அம்மா… என்னிடம் ருசியுள்ள நூடுல்ஸ் புழுக்கள் இருக்கின்றன… மண்புழுவை விட ஒசத்தியானவை… இன்றைக்கே போய் கல்யாணி மாமாவின் தூண்டிலை நான் வாங்கிக் கொள்வேன… பெரிய பெரிய மீன்களை நான் பிடிப்பேன் அம்மா.. பெரிய பெரிய சப்பாரைகளை நான் கொண்டுவருவேன்.”

அம்மா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அம்மாவுக்கே உரிய பல நிம்மதியின்மைகள் இருந்தன. ஆறாத ரணங்களின் சொல்ல முடியாத வலிகளின் முடிவற்றத் தடங்கள் அவள் மனதெங்கிலும் வியாபித்திருந்தன. இறுக்கத்தால் வேயப்பட்ட அவள் முகத்தில் எப்போதாவதுதான் மகிழ்ச்சியின் சிறு கீற்றுகளை காண முடிந்தது. என்றாலும் அழக்கூடியவளாக அம்மா இருந்ததேயில்லை. எந்த விஷயத்தைம் தனக்கேயுரிய அறியாமையோடும் தெளிவோடும்தான் அவள் எதிர்கொண்டாள்.

கருப்பி பிறத்தியாரிடமிருந்து வாங்கிய மாடல்ல. எங்கள் வீட்டிலேயே கன்றென பிறந்து மகளென வளர்ந்தவள். விதவிதமான மாடுகளுடனும் அவற்றின் இணக்கமான ஸ்நேகங்களுடனுமே காலமெல்லாம் வாழ்ந்து வந்தவள் என் பாட்டி. முன்பொரு காலத்தில் அநேக மாடுகளை வளர்ப்பவளாய் பாட்டி இருந்திருக்கிறாள். கட்சி கட்சியென்று தாத்தா அழித்தது போக எஞ்சியது கருப்பி மட்டும்தான். அதுவும் போய்விட்டால் என்ன செய்வது… கடவுளே கருப்பிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது…

எங்கள் ஊருக்குப் போகும் கடைசி பஸ்சும் போனப்பிறகே மருத்துவர் வீட்டிற்கு வந்தார். பதற்றத்துடன் அம்மா விஷயத்தைக் கூறினாள். மருத்துவர் அம்மா சொல்லி முடிக்கும்வரை நிதானமாக கேட்டார். மருத்துவரின் சித்தி குடும்பம் எங்களூரில்தான் இருந்தது. வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் சித்தி வீட்டுக்கு வரவிருப்பதால் எல்லோரும் சேர்ந்து காரில் போய்விடலாம் என்றும், தயாராகி வரும்வரை காத்திருக்குமாறும் சொல்லிவிட்டு மருத்துவர் வீட்டினுள் சென்றுவிட்டார்.

அப்பாடா… இனி பிரச்சனை இல்லை… இதுவரைக்கும் ஏதும் ஆகாமலிருந்தால்…

‘சென்றாய சாமியே…’ என்று அம்மா வாய்விட்டு முனகுவது காதில் தெளிவாக கேட்டது. சென்றாய சுவாமிதான் எங்கள் குல தெய்வம். பத்து மைல் தொலைவில் இருக்கும் சென்றாய மலைக்கு புரட்டாசி மாசத்தின் எல்லா சனிக்கிழமைகளிலும் சத்யாக்காவுடன் சேர்ந்து நான் போகாமலிருக்க மாட்டேன். சத்யாக்காவுடன் சேர்ந்து மலையேறுவதைப் போல அவ்வளவு குதூகலமானதாக வேறொன்று எனக்கு இருந்ததில்லை. துணிமணிகளையும் பொரி உருண்டைகளையும் எடுத்துக் கொண்டு அதிகாலையிலேயே சென்று விடுவோம். கால்வாசி மலையில் பஸ்வான தீர்த்தமும், பாதிமலையில் மந்தி தீர்த்தமும் இருந்தன. நாங்கள் மந்தி தீர்த்தத்தில்தான் எப்போதும் குளிப்போம். குளித்து முடித்தவுடன் பொரி உருண்டைகளை தின்றுவிட்டு சீத்தாபழங்களை தேட ஆரம்பிப்போம். மலையெங்கும் சீத்தா மரங்கள் காடாய் செழித்திருந்தன. சீத்தாக்காய்களை பறித்தால் ஏலம் எடுத்தவர்கள் பிடித்துக் கொள்வார்கள். பழத்தை பறித்து எவ்வளவு வேண்டுமானாலும் அங்கேயே சாப்பிடலாம். ஆனால் வீட்டுக்கு எடுத்துவரக்கூடாது. நாங்கள் வேண்டிய மட்டும் அங்கேயே பழத்தை சாப்பிட்டுவிட்டு வீடு திரும்ப சாயங்காலம் ஆகிவிடும். கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் சித்தம் குலைந்து சத்யாக்கா பைத்தியம் ஆகும்வரை ஒவ்வொரு புரட்டாசி மாதமும் சென்றாய மலைக்கு நான் போய்க்கொண்டிருந்தேன்.

கருணையிலும் கருணை கொண்ட சென்றாய சுவாமியே எங்கள் கருப்பிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது…

பாதிநிலா ஒளிர்ந்த அந்த இரவில் மருத்துவரின் குடும்பமும் உறவினர்களும் தயாராகி காரில் ஏற ஒருமணி நேரத்திற்கும் மேலாகி விட்டது. இருபது நிமிஷத்தில் எங்களூருக்கு வந்துவிட்டோம். கார் நேராக மருத்துவரின் சித்தி வீட்டிற்கு முன்பு நின்றது. குடும்பத்தினர் எல்லோரும் இறங்கிய பிறகு மருத்துவர் காரை திருப்ப முயன்றார். எங்கள் வீடு இன்னும் கொஞ்ச தொலைவில்தான். அங்கே கருப்பி எப்படியிருக்கிறாளோ…

அப்போது மருத்துவரின் சித்தி வீட்டிலிருந்து ஒரு பெண் வெளியே ஓடிவந்தாள்.

“…ஹலோ மாமா… திடீர்னு நீங்க வருவீங்கனு நா எதிர்பார்க்கவே இல்ல…சாயங்காலம்தான் மணியம்பாடியிலிருந்து வந்தேன்… சரி வாங்க காப்பி குடிச்சிட்டு போகலாம்…”

கருப்பி எப்படி இருக்கிறாளோ…

“…சங்கீ… நீயும் இங்கதான் இருக்கறியா… சரி இரு அர்ஜெண்ட்டா ஒரு கேஸ் பாத்துட்டு வந்துர்றேன்…”

கருப்பி எப்படி இருக்கிறாளோ…

“.. அட காப்பிதானே எப்ப பார்த்தாலும் கேஸ்கேஸ்ன்னுட்டு… இல்லனா இங்கியே கொண்டுவந்து தர்றேன்… கார்லேயே குடிச்சிட்டு கிளம்புங்க சரியா…”

கருப்பி எப்படி இருக்கிறாளோ…

”அவ்வளவுதான் ஒரு நிமிஷம் போலாம் இரும்மா…” என்றார் மருத்துவர் பின்னால் திரும்பி எங்களைப் பார்த்து.

நான் அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். அழுகை வெடிக்கும் நிலையில் இருந்தது. எப்போது வேண்டுமானாலும் அது நிகழ்ந்து விடலாம் போலத்தோன்றியது. திடீரென கார்க்கதவை திறந்துக் கொண்டு எங்கள் குடிசையை நோக்கி அம்மா ஓடத்துவங்கினாள் .எதிரில் தடுக்கிய வேலி முட்களில் பாதம் கிழிபட்டு ரத்தங்கசிய பின்னாலேயே ஓடிய என்னை பாட்டியின் அழுகுரல் எதிர்கொண்டது.

வண்ணத்து பூச்சிகளின் பறத்தலைப் பார்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்த கருப்பி அசையுடன் மூச்சையும் நிறுத்தியிருந்தாள்.