மொழியாக்கம்

குளக்கரையில் ஒரு மாயம் – நகுல்வசன் மொழிபெயர்ப்பில், ‘மரங்கொத்தி’

பீட்டர் பொங்கல்

The Kingfisher

The sky was clear and blue
barring the clouds gathering in the South.
No sooner the unruffled pond
entered my thoughts than the waves began;
A frog hopped into the water.
To appreciate the lotus flower, apparently.
At the sky, vacantly I stare. Ha!
Just then, out of the sky, headlong,
accursed Menaka falls,
and falls.

Dazzling with the seven colors of Indra’s Realm
her garment unfurling in the sky,
into the pond headlong Menaka falls.
No one else but me.

I waited for Menaka to rise,
into the air a Kingfisher rose.
A fish in its beak, seeking
a shadowed haunt it flew.
Clear and blue, yet again, the sky.

(ஞானக்கூத்தன் எழுதிய ‘மரங்கொத்தி’ என்ற தமிழ் கவிதையின் ஆங்கில மொழியாக்கம், நகுல் வசன்)

குறிப்புகளின் நோக்கம் இந்த மொழிபெயர்ப்பின் தரம் உயர்ந்தது என்று நிறுவுவதோ, எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறோம் என்று சொல்வதோ, எப்படியெல்லாம் புரிந்து கொண்டிருக்கிறோம் பார் என்று காட்டிக்கொள்வதோ அல்ல. ஒரு கவிதையை மொழிபெயர்க்கிறோம் என்றால் சில குறைபாடுகளைத் தவிர்க்க முடிவதில்லை என்று சொல்வதும், ஒரு கட்டத்தில் ஆங்கிலம், தமிழ் என்று மொழிகளைக் கடந்து கவிதை பொருட்படுகிறது என்று சொல்வதும்தான். அப்போது கவிதை எழுதப்பட்டதன் காரணமும் கவிஞனின் நோக்கமும் அவ்வளவு பிரமாதமாகத் தெரிவதில்லை. கவிதையைக் காட்டிலும் மொழி தனித்து உயர்ந்து நிற்கும் தருணம் அது.

இந்தக் கவிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க சுலபமாகவே இருந்தது என்று சொல்ல வேண்டும் (இப்படிச் சொல்வது இது எவ்வளவு ‘நல்ல’ மொழிபெயர்ப்பு என்பதற்கான உத்திரவாதம் ஒன்றை முற்படவில்லை).

முதலில் ‘தெளிவாய் நீலமாய் இருந்தது வானம்‘ என்பது ‘The sky was serene and blue‘ என்று மொழிபெயர்க்கப்பட்டது. தெளிவு என்பதற்கான நேரடி தமிழ்ச்சொல் அல்ல ‘serene‘. ஆனால், அதற்கப்புறம் தவளை குதித்து குளம் கலங்கப் போகிறது, வானத்திலிருந்து மேனகை தலைகீழாக அந்தக் குளத்தில் விழப் போகிறாள், கடைசியில் ‘தெளிவாய் நீளமாய் மறுபடி வானம்‘ என்று கவிதை முடிகிறது என்பதை எல்லாம் பார்க்கும்போது ‘serene‘ என்பது அப்படி ஒன்றும் மோசமான தேர்வல்ல என்று தோன்றுகிறது. ஆனாலும் ஒரு எச்சரிக்கை உணர்வு காரணமாக, ‘The sky was clear and blue’ என்று தமிழாக்கம் செய்யப்பட்டது. எனினும் இந்தக் கவிதை தெளிவைவிட அமைதி குறித்ததுதான், ‘serene‘ என்று மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் ஒன்றும் மோசம் போயிருக்காது.

அடுத்த வாக்கியம், ‘தெற்கில் மேகத் திரட்டைத் தவிர்த்தால்,’ என்பது ‘barring the patch of cloud in the South,’ என்று இருந்து, ‘barring the clouds gathering in the South‘ என்று மாறியிருக்கிறது. மேகத்திரட்டு என்பதை patch of cloud என்று மொழிபெயர்ப்பது அவ்வளவு மோசமாகத் தெரியவில்லை. வானம் தெளிவாக இருந்தது, தெற்கில் சில மேகங்கள் இருந்தன என்பதை ஒரு காட்சியாய்க் கற்பனை செய்ய இது போதும். ஆனால் மேகம் திரண்டு வருவதில் மழை இருக்கிறதோ இல்லையோ ஒரு இருண்மைக்கான சாத்தியம் இருக்கிறது. தெளிவான வானத்தில் ஏற்படக்கூடிய மூட்டமாகவும் Serene என்ற உணர்வுநிலைக்குப் பொருந்தாத வகையிலும் மேகங்கள் திரள்கின்றன. ஒரு அச்சுறுத்தல் இருக்கிறது அல்லவா, சினிமா என்றால் பின்னணியில் இசையால் கொடுக்கப்படும் பில்ட்-அப் மாதிரி?

அடுத்த வரியில், ‘சலனம் குளத்தில் சிறிதும் இல்லை‘ என்று ஞானக்கூத்தன் எழுதும்போது, தெளிவான வானம், திரளும் மேகம்,  சலனமற்ற குளம் என்று நம் கவனத்துக்கு வருகிறது. அடுத்தபடியாக, ‘என்று நான் நினைத்த போதில் அலைகள்‘ என்று திரும்பி, ‘தவளை ஒன்று நீரில் பாய்ந்தது‘ என்று வரும்போது அதுவரை இருந்த காட்சி முற்றிலும் குலைகிறது. பொதுவாக, கவிதையில் காட்சிகளின் வரிசைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று முயற்சிப்பவர் நகுல்வசன். எனவே, ”சலனம் குளத்தில் சிறிதும் இல்லை”, என்பதை ‘Not even the hint of a ripple in the pond,’ என்றும், ‘என்று நான் நினைத்த போதில் அலைகள்‘ என்பதை, ‘I was just thinking that, when/ all of a sudden there were waves,‘ என்றும் மொழிபெயர்த்திருந்தார். இது ஒரு மொண்ணைத்தனமான முயற்சி என்பதை நாமெல்லாரும் ஒப்புக்கொள்வோம். ”சலனம் குளத்தில் சிறிதும் இல்லை”, என்பதை முதலில் சொல்ல வேண்டும் என்று முயற்சித்ததால்தான் இப்படியாயிற்று- ஆங்கில வாக்கிய அமைப்பில் இதை முன்கூட்டியே சொல்லிவிடுவது அடுத்து வரும் சொற்களுக்கு அதிக வேலை வைக்கிறது. எனவே ஒரு சமரசமாக, ‘No sooner the unruffled pond/ entered my thoughts than the waves began;‘ என்று முடிவாயிற்று. தமிழில் உள்ள அடர்த்தி ஆங்கில மொழிபெயர்ப்பில் இல்லை என்றாலும் சொற்கள் அவற்றுக்கு அளிக்கப்பட்ட வேலையைச் சரியான சமயத்தில் செவ்வனே செய்கின்றன என்றுதான் நினைக்கிறேன். சொல்லப்போனால், no sooner -> the unruffled pond என்பதில் உள்ள மிரட்டலும், entered my thoughts -> than the waves began என்ற அதன் நிறைவேற்றலும் இதற்கு முந்தைய வரிகளுடன் ஒத்துப் போகின்றன என்றும் தோன்றுகிறது. மொத்தத்தில், சில லாபநஷ்டங்கள் இந்தப் பரிமாற்றத்தில் ஏற்பட்டிருக்கின்றன.

(‘தவளை ஒன்று நீரில் பாய்ந்தது‘ என்பதற்கு ‘A frog had dived into the water,’ என்பது பரிசீலிக்கப்பட்டு, தவளை டைவ் அடிக்குமா என்ற யோசனையின் பேரில் ‘A frog hopped into the water,’ என்று மாற்றப்பட்டது. ‘Dived‘ என்பதில் உள்ள தீர்மானமும் விசையும் ‘hopped‘ என்பதில் இல்லைதான். ‘hopped‘ என்றால் தவளை  அலட்சியமாக அடுத்த அடி எடுத்து வைப்பதுபோல் தண்ணீருக்குள் இறங்கிற்று என்று தோன்றுகிறது – அடுத்த வரி, ‘தாமரைப் பூவை ரசிக்கப் போகிறதாம்.’ என்பதில் உள்ள விளையாட்டுத்தனம் இதற்குப் பொருந்துகிறது. ‘To appreciate the lotus flower, apparently. ‘)

(தாமரைப்பூ என்பதை lotus என்று சொன்னால் போதாதா, அது என்ன lotus flower என்று கேட்கலாம், நியாயமான கேள்விதான்)

oOo

சும்மா இருக்கும்போதுகூட சும்மா இருக்க முடியாதவர் கவிஞர் என்பதை அறிந்தோம் – மேலுக்கும் கீழுக்கும் பார்த்துக் கொண்டேயிருப்பவர் இப்போது வானத்தைப் பார்க்கிறார். அங்கு அவருக்குக் காத்திருக்கிறது ஓர் அதிர்ச்சி – ‘வெறுமனே வானத்தைப் பார்த்தேன். ஹா!‘. இதற்கான முதல் முயற்சி, ‘I was staring at the sky vacantly. And Lo!‘- ரொம்ப உரையாடலாக இருக்கிறது, அது தவிர “Lo!” என்றெல்லாம் ஆச்சரியப்படுவது ஒரு மந்திரவாதியை ஞாபகப்படுத்துகிறது என்றெல்லாம் யோசித்து, ‘At the sky, vacantly I stare. Ha!‘. என்பது முடிவாயிற்று. நியாயப்படி பார்த்தால் ‘பார்த்தேன்‘ என்பது ‘stared‘ என்றுதான் மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பாருங்கள், தமிழில் காலம் ஒரு ஆஸ்மாட்டிக் தன்மை கொண்டது. நிகழ்காலம் என்பது கடந்த காலமும் எதிர்காலமும் சந்திக்கும் கூடுதுறை, இது கொஞ்சம் அது கொஞ்சம் என்று ஒரு ரேஞ்சுக்குள்தான் எதுவும் நடக்கிறது. தமிழில், ‘வானத்தைப் பார்த்தேன்… மேனகை அப்பத்தான் விழுகிறாள்’ என்று எழுதலாம். நம் அனுபவ காலவரிசைக்கிரமம் இப்படிதான் இருக்கிறது. ஒரு விஷயம் முடிந்து போகும்போது அதன் அனுபவஸ்தர்களாகிய நாம் முடிந்து விடுவதில்லை, அடுத்து என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க தொடர்ந்து இருக்கிறோம். ஆனால் ஆங்கிலத்தில், “I looked… Menaka was just then falling” என்றெல்லாம் எழுதினால் தமிழிஷாக இருக்கும், tense agree ஆகவில்லையே என்று சந்தேகப்படுவார்கள். சில பேருக்கு படிக்கவும் நன்றாக இருக்காது. எனவேதான் எதற்கு வம்பு என்று, ‘vacantly I stare,’ நாம் நிகழ்காலத்தில்தான் இருக்கிறோம்.

இப்போது என்ன நடக்கிறது? ‘வானத்தை விட்டுத் தலைகீழாக/ சாபம் கொண்ட மேனகை அப்பதான்/ விழுகிறாள். இருக்கிறாள் விழுந்து கொண்டே.’ இது ஆங்கிலத்தில் முதலில், ‘Out of the sky, upside down/ I saw accursed Menaka fall. / She kept on falling. ‘ ரொம்பவே தமிழிஷாக இருக்கிறது, காலவழு ஏதோ இருக்கிற மாதிரி இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தபின், ‘Just then, out of the sky, headlong,/ accursed Menaka falls,/ and falls.‘ இப்போதும்கூட ‘just then‘ என்பது அந்த அளவுக்குச் சரியான ஆங்கிலமா என்ற சந்தேகம் இருந்தாலும், ‘அப்பதான்‘ என்பதில் உள்ள பேச்சுத்தன்மை அதில் இருப்பதால் சரியான தேர்வுதான் என்று பாராட்டிக்கொள்ளலாம், தப்பில்லை.

oOo

இனி வரும் மூன்று வரிகளும் மிக அழகியவை – ‘இந்திர லோகத்து எழுவகை வண்ணம்/ மிளிரும் ஆடை விண்ணிலே அவிழ/ விழுகிறாள் குளத்தில் மேனகை தலைகீழாய்‘ வானத்தில் வண்ண ஆடைகள் அவிழ்ந்து பறக்கின்றன, ஒளியில் அவை மிளிர்கின்றன. ஆடைகள் விலகி நிலைகுலைந்து தலைகீழாய் குளத்தில் விழுகிறாள் மேனகை.

இந்த மூன்று வரிகளும் எவ்வளவு குறைவான சொற்களில் எவ்வளவு விஷயங்களை உணர்த்துகின்றன என்பதை எழுதுவதானால் அதற்கு ஒரு தனிப்பதிவு வேண்டும். அது எதுவும் இல்லாமலேயே நாம் சுலபமாக, ‘தன் நிலை குலைந்து மேனகை விண்ணிலிருந்து வீழ்ந்தாள்‘, என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். ஆனால் அது சொல்லப்பட்ட விதம், அதன் அழகும் அவலமும் உணர்வுடன் காட்சிப்படுத்தப்படும் பன்னிரண்டே சொற்கள், இது கவிதையிலன்றி வேறெங்கு சாத்தியம்? புத்திசாலித்தனம், ஆழமான சிந்தனை, மெய்ம்மை, உண்மைக் குரல் என்ற விஷயங்களுக்குப் போவதற்கு முன் இப்படி எழுத முடிவதுதான் கவிஞனின் முதல் தகுதி, சொற்களை இப்படி கட்டமைப்பதுதான் அவனது கற்பனைத்திறன்.

ஆங்கிலத்தில் இது எப்படி இருக்கிறது? ‘Dazzling with the seven colors of Indra’s Realm/ her garment unfurling in the sky,/ into the pond headlong Menaka falls.‘ எனக்குத் தெரிந்தவரை இது குறை சொல்ல முடியாதபடிதான் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழின் கச்சிதம் எங்கே? நமக்கு மிகவும் பழக்கப்பட்ட ‘இந்திர லோகத்து எழுவகை வண்ணம்‘, ‘the seven colors of Indra’s Realm‘ என்று அந்நியப்படுவது ஒரு மாதிரி பில்டர் காப்பி கேட்ட இடத்தில் இன்ஸ்டன்ட் காபியைக் கொண்டு வந்து வைத்தது மாதிரிதான் இருக்கிறது. ஆனால் மொழிபெயர்ப்பு முயற்சியே ஒரு வகையில் பில்டர் காபியை இன்ஸ்டண்ட் காப்பி ஆக்கும் முயற்சி என்று சொல்லலாம். ஆங்கில மொழி வரலாற்றில் இந்திரலோகம் இடம் பெறவில்லை என்பது நம் குறையல்ல, ஆனால் இந்த மொழிபெயர்ப்பு விஷயத்தில் அதனால் குறைபட்டுதான் நிற்க வேண்டும்.

இதற்கு அடுத்த வரி, ‘எவரும் இல்லை என்னைத் தவிர.’ மொழிபெயர்க்க எளிது. ஆனால், ‘There was no one else but me,’ என்பது சரியா அல்லது ‘There is no one else but me‘ என்பது சரியா என்று யோசித்துப் பார்க்கப்பட்டு, ‘No one else but me,’ என்ற இடத்தில் வந்து நின்றிருக்கிறது. இதுவே, ‘None, but me‘ என்றும் இருக்கலாம், ஆனால் பிறர் இல்லை என்ற சுட்டுதல் இருக்குமா, தெரியவில்லை.

oOo

அடுத்து, ‘காத்திருந்தேன் மேனகை வெளிப்பட,/ வெளியில் எழுந்தது மீன்கொத்திப் பறவை.” ஆங்கிலத்தில் நிறைய காலவழுக்களை உருவாக்குகிறது. தமிழில், காத்திருந்தேன், என்பது காத்துக்கொண்டிருந்தேன் என்ற அர்த்தத்திலும் படிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். ‘காத்திருந்தேன்‘ என்பதை நேரடியாக ‘I waited‘ என்று மொழிபெயர்த்தால் அடுத்து நடப்பது எல்லாமும் கடந்த காலத்தில் நடப்பவையாய் இருந்தால்தான் அங்கே சரிப்படும். எனவே, ‘I was waiting for her to emerge when/ into the air a Kingfisher rose,‘ என்று மிகச் சரியாகவே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆனால் பின்னர் வாசித்துப் பார்க்கும்போது இது கொஞ்சம் இயந்திர மொழியாக்கம் போலிருப்பதாய் தோன்றிய காரணத்தால், ‘I waited for Menaka to rise,/ into the air a Kingfisher rose,’ என்று மாற்றப்பட்டது. இது பிரச்சினையான மொழிபெயர்ப்புதான், யாராவது கேள்வி கேட்டாலும் சரியான பதில் சொல்ல முடியாது. ஆனால் இப்படி மொழிபெயர்க்கப்பட்டிருப்பதில் ஒரு அழகு இருக்கிறது என்று தோன்றுகிறது. ”I wait for Menaka to rise,/ into the air a Kingfisher rose,’ என்றும் எழுதலாம். இன்னும் பல சாத்தியங்களும் இருக்கின்றன. எதை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பது நம் கற்பனையைப் பொருத்தது. ஆனால் எதுவும் முழுத்திருப்தி கொடுக்காது என்று தோன்றுகிறது.

கவிதை, ‘அலகிலே மீனுடன் நிழலுக்குப் பறந்தது./ தெளிவாய் நீளமாய் மறுபடி வானம்.’ என்று முடிந்து விடுகிறது. இதுவே ஆங்கிலத்தில், ‘A fish in its beak, seeking/ a shadowed haunt it flew./ Clear and blue, yet again, the sky’ என்று ஆகியிருக்கிறது. ‘நிழலுக்குப் பறந்தது‘ என்பது எப்படி ‘seeking a shadowed haunt it flew,’ என்று ஆகும் என்பது சரியான கேள்வி.  flew into shadows என்று நானானால் செய்திருப்பேன். ஆனால் நகுல்வசன் இந்தக் கவிதையில் சொல்லப்படாத, ஆனால் கவிதையால் சொல்லப்படும் முக்கியமான ஒன்றைச் சுட்ட விரும்புகிறார் என்று நினைக்கிறேன். இங்கு கொஞ்சம் மிகையான சுதந்திரம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டலாம், அல்லது, அது shadowed haunt என்பது எதைச் சொல்கிறது என்று யோசிக்கலாம். என் பாணியில் அதைச் செய்கிறேன்.

oOo

பதாகையில் ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரை வந்தது- இவ்வுலகை மீண்டும் மாயங்களால் நிறைத்தல். ந்யூஸ்டாட் பரிசு பெற்ற போர்ச்சுகீசிய மொழி எழுத்தாளரும் மொசாம்பிக் தேசத்தவருமான மியா கோடோ அளித்த நன்றியுரையின் தமிழாக்கம். அதன் முடிவில் அவர் ஒரு கவிதையை வாசிக்கிறார், அதன் அவ்வளவு பிரமாதமாய் இல்லாத தமிழாக்கம் இது –

வேறொரு வாழ்வில் நான் பறவையாய் இருந்தேன்

பரந்து விரிந்த சூழ்நிலங்களையும்
பறத்தலில் தொட்டுச் சென்ற சரிவுகளையும்
நினைவில் பாதுகாத்து வைத்திருக்கின்றேன்.

ஒற்றை மேகமும் அதன் அலட்சிய வெண்தடமும்
என்னை மண்ணில் பிணைத்திருக்கின்றன.

பறவைச் சிறகின் இதயத்துடிப்பாய் வாழ்ந்தேன்,
மண்ணைப் பசித்து வீழும் மின்னலென வீழ்ந்தேன்.

என் இதயத்தில் இருக்கும் அந்தச் சிறகை.
தன் நினைவைக் காலத்தில் பாதுகாப்பவனாய்
பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றேன்,

வேறொரு வாழ்வில் நான் பறவையாய் இருந்தேன்,
வேறொரு பறவையில் நான் உயிராய் இருந்தேன்.

World Literature Today 

நினைவென்பது மறைவில் இருப்பது. அன்றொரு நாள் மேனகை வீழ்ந்தாள், மரங்கொத்தியாய் மாறி மறைந்தாள், என்பதல்ல இக்கவிதை சொல்வது. அவள் ஒரு shadowed hauntல் வாழ்கிறாள். ‘தெளிவாய் நீலமாய் மறுபடி வானம்‘, என்றாலும் இது முன்னிருந்த வானல்ல. மேனகை வீழ்ந்த வானம், மரங்கொத்தி பறக்கும் வானம். நினைவின் சுவடு கொண்ட, ஆனால் அதன் மூட்டமில்லாத வானம்.

Re-enchanting the World‘ என்ற தன் உரையில், மியா கோடோ, ‘ஒவ்வொரு கண்டத்திலும், பல்வேறு தேசங்களைத் தன்னுள் கொண்ட தேசமாய் நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோம்,’ என்று சொல்கிறார். அவற்றை உயிர்ப்பிப்பதுதான் கலைஞனின் பணி,மீண்டும் மாயத்தால் நிறைத்தல் (Re-enchantment) என்பது இதுதான். இதுவே மொழிபெயர்ப்புக்கான தேவையும்கூட.

மறைந்த கவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு மனமார்ந்த அஞ்சலிகள்.

ஒளிப்பட உதவி – Alcyone, The Kingfisher

The Kingfisher

நகுல் வசன்

image1

 

The sky was clear and blue
barring the clouds gathering in the South.
No sooner the unruffled pond
entered my thoughts than the waves began;
A frog hopped into the water.
To appreciate the lotus flower, apparently.
At the sky, vacantly I stare. Ha!
Just then, out of the sky, headlong,
accursed Menaka falls,
and falls.

Dazzling with the seven colors of Indra’s Realm
her garment unfurling in the sky,
into the pond headlong Menaka falls.
No one else but me.

I waited for Menaka to rise,
into the air a Kingfisher rose.
A fish in its beak, seeking
a shadowed haunt it flew.
Clear and blue, yet again, the sky.

  • மரங்கொத்தி, ஞானக்கூத்தன் (ஆங்கில மொழியாக்கம்)

 

சில்கோவ்ஸ்கியின் தேற்றம் : கார்ல் இயாக்னெம்மா – 6

தமிழில்: சரவணன் அபி

அத்தியாயம் 6

karl

அடுத்த நாள் காலை தனது அலுவலக நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்த ஹெண்டர்சன் பால்பாய்ண்ட் பேனாவினால் தனது காப்பியை கலக்கிக் கொண்டார். இன்னும் 7 மணி ஆகவில்லை; வால்டர் H லேய்ட்டன் கணித ஆராய்ச்சிக் கட்டிடம் இன்னும் அமைதி கலையாமல் இருந்தது. இவ்வளவு சீக்கிரம் அவர் அலுவலகத்திற்கு இதற்குமுன்னர் வந்ததில்லை; அந்த ஆழ்ந்த, உன்னதமான அமைதி தனக்கு எவ்வளவு பிடித்திருக்கிறது என அவர் வியந்து கொண்டார். இன்னும் சிறிது நேரத்தில், ஷேவ் செய்யாத, நேற்றைய சமையலின் வாசம் இன்னும் வீசும் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் வர ஆரம்பிப்aபார்கள். அடுத்து 8 மணி வகுப்புகளுக்கு பட்டப்படிப்பு மாணவர்கள் வருவார்கள்; .அடுத்து, அலுவலக பணியாளர்கள், மற்றவர்கள்… என கட்டிடம் கொஞ்ச நேரத்தில் தனது வழமையான  பரபரப்புக்கும், அவசரத்துக்கும் தாவி விடும். காப்பியை உறிஞ்சியவாறு ஹெண்டர்சன்  தனது மேசை மேல் சரிந்திருந்த, தூசித்துகள்கள் மின்னும் கதிர்க்கற்றைகளை   கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தார். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படாவிட்டால், அவரது இந்த அலுவலக அறையை  விட்டுவிட வேண்டியிருக்கும் என்பது வருத்தத்தை அளித்தது. மொத்தக் கல்லூரியிலும் அவரது இந்த அறையில் மட்டுமே தனது இயல்போடு, நிம்மதியாக இருந்திருக்கிறார்.

அவரது யூனிக்ஸ் டெஸ்க் டாப்பில் புது அஞ்சல் மின்னியது: அனுப்புனர்: சோக்லோஸ், நேரம்: அதிகாலை – 2.17

அன்புள்ள ஜான் – படிக்க ஆரம்பித்த ஹெண்டர்சன் ஒரு கணம் தயங்கினார், அன்னியோனியமான அந்த விளி அவரைத் தாக்கியது – உனக்கு நன்றி தெரிவிக்க வேண்டி எழுதுகிறேன். மரியாவை மகிழ்ச்சியடைய செய்து விட்டாய்; ஆதலால் என்னையும் மிக்க சந்தோஷத்தில் ஆழ்த்தி விட்டாய். அவள் மனதிலிருந்து பெரும் பாரம் அகன்று விட்டது. ஓர் அற்புதமான குறுநகையுடன் தனித்தமர்ந்து மே மாதத்தில் நடக்கப் போகும் எங்கள் திருமணத்திற்கு செய்ய வேண்டிய காரியங்களை அவள் பட்டியலிட்டுக்கொண்டிருக்கும் காட்சி அரியது. என் வார்த்தைகளில் வடிக்க முடியாதது. நிச்சயம் உனக்கு அழைப்பு வரும்நீ வருவாய் என நம்புகிறேன்.

 J.A.M –இன் ஆசிரியர் சில்கோவ்ஸ்கியின் தேற்றம் குறித்த தவறான புரிதல்திருத்தப்படுவது குறித்து ஒரு விளக்கம் டிசம்பர் மாத இதழில் பிரசுரிக்க ஒத்துக் கொண்டுவிட்டார்இது என்னை வருத்தத்துக்குள்ளாக்குகிறது. பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகளுக்கு தனது Ph.D பட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தி மரியா  ஒரு கடிதம் எழுதப் போகிறாள். இறுதியில், இதை என்னால் தடுக்க முடியவில்லைமிக வருந்துகிறேன்.

நீ பெருங்கருணையுடையவன் என்று மரியா நம்புவதை நான் உன்னிடம் சொல்லித்தான் ஆக வேண்டும். அது உண்மையல்ல என்று நான் அவளிடம் சொன்ன போதிலும். நீ இதைப் புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன். ஏனென்றால், அது உண்மையல்ல, அல்லவா? நீ கருணையுடையவன் அல்ல. சமீபத்திய உன்னுடைய பெருந்தன்மை உன்னில் நிலைகொண்ட நற்தன்மையின் சாட்சி என்று மரியா கருதுகிறாள். என்னால் அதற்கு பதிலொன்றும் கூற முடியவில்லை. இருக்கலாம் என்று சொல்ல முடியுமா? தெரியவில்லை.

மேற்கொண்டு எழுத அயர்ச்சியாக இருக்கிறது. நீ செய்தவற்றுக்கு மீண்டும் நன்றி. நீ ஏன் அதைச் செய்தாய் என்று முழுமையாக என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை எனினும் உனக்கு என் நன்றிகள்.

 உன் நண்பன்,
மிக்லோஸ்

ஹெண்டர்சன் மீண்டும் ஒருமுறை படித்து விட்டு மின்னஞ்சலை  அழித்தார். கணினியை அணைத்தார். நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். என்ன செய்தாரோ, என்ன நடக்க அனுமதித்திருக்கிறாரோ –  அவற்றைப் பற்றி அவர் நிம்மதி கொள்ளலாம் என்றுதான் முதலில் தோன்றியது. ஆனால், அவர் நிம்மதியாக இல்லை. அவர் செய்தவற்றின் விளைவாக, இறுதியாக, யார் பயனடைவார்கள்? மரியா, நீட்சியாக சோக்லோஸ்.

ஆனால் ஹெண்டர்சன்? எப்போதும் போல், ஏமாற்றப்பட்டு, கீழ் நிலையில், வருத்தத்துடன். துயரம் கலக்காத மகிழ்ச்சியை அதன் பரிசுத்த நிலையில் அடைவது சாத்தியமா? சில சமயம் முடியலாம்  என்று தோன்றியதுண்டு என்றாலும், பல நேரங்களில்  அது சாத்தியமேயல்ல என்றுதான் ஹெண்டர்சன் உணர்ந்திருக்கிறார்.  மகிழ்ச்சி என்பது ஒரு ஸீரோ-ஸம் விளையாட்டு; ஒருவர் மகிழ்ச்சிக்கு இன்னொருவர் கட்டாயம் வருத்தப்பட்டே தீர வேண்டும். பல காலமாக, ஹெண்டர்சன் இந்தச் சமன்பாட்டின் தவறான பக்கத்திலிருந்து கொண்டிருக்கிறார்.

மனதை இந்த எண்ணம் நிறைக்க, ஹெண்டர்சன் மேசை அறையிலிருந்து கடித உறையொன்றை எடுத்தார். சோக்லோஸின் அலுவலக விலாசத்தை எழுதி உறைக்குள் மரியாவின் இரு ஊதாநிற உள்ளாடைகளை இட்டு மூடினார்.

வெளியே, கணினியியல் துறை கட்டிடத்திற்கு மேல் சூரியன் எழுந்து விட்டது. இளந்தென்றல் புதிதாக விழுந்திருக்கும் இலைகளினூடாக சலசலத்துக் கொண்டிருந்தது. நான்கு மாணவர்கள்  – ஒரே போல் நீல நிற டீ ஷர்ட்டுகளும் காக்கி அரைக்காற்சட்டைகளும் அணிந்துகொண்டு, இலையுதிர் காலத்தின் குளிரையோ, அது கொண்டு வரப்போகும் கல்விகுறித்த கவலைகளோ இன்றி நடந்து சென்று கொண்டிருந்தார்கள். புது வருடம்; புது விரிவுரையாளர்கள்; பணிநீட்டிப்பு விவாதங்கள்; புது வரவுகள்; நீக்கங்கள்; அவர்களின் கவலையற்ற உற்சாகத்தை ஒரு கணம் பொறாமையுடன் பார்த்த ஹெண்டர்சன், மறு கணம் கார் நிறுத்துமிடம் நோக்கி விரைந்தார்.

நகரின் குறுக்காக காரை செலுத்திய ஹெண்டர்சன் ரேடியோவை இயக்கினார் – எந்தவொரு நிலையத்தையும் குறிப்பாக வைத்துக்கொள்ளும் கவனம் இல்லாமல். சோக்லோஸ் பணியாற்றிய கல்லூரியின் கணிதத்துறை அருகே காரை நிறுத்திவிட்டு கட்டிடத்தின் உள்ளே இருந்த பல்கலை வளாக அஞ்சல்பெட்டியை அடைந்தார். மரியாவின் உள்ளாடைகளின் கனமொன்றும் அவ்வளவாக இல்லாத அந்த உறையை அஞ்சல் பெட்டியின் வாயில் நுழைத்தவண்ணம் ஒரு கணம் தயங்கினார்.  பின் உள்ளே உறையை போட்டுவிட்டு அது பெட்டியின் உள் விழுந்ததை உறுதி செய்து கொண்டார். அனுப்புனர் விலாசம் இல்லை; அஞ்சல் முத்திரை இல்லை; வெறும் பெறுநரின் பெயர் மட்டுமே.  சோக்லோஸ் யார் அனுப்பியிருப்பார்கள் என்று சந்தேகிக்கக் கூடும், ஆனாலும் ஒருக்காலும் உறுதியாக கண்டுபிடித்துவிட முடியாது. நல்லது, குழம்பட்டும் என்று  எண்ணிக்கொண்டார் ஹெண்டர்சன்.

விரைந்து காரை எடுத்துக்கொண்டு கல்லூரி வளாகத்தை விட்டு நீங்கி, அழுக்குப்படிந்த வீடுகள் நிறைந்த போர்த்துகீசியர் குடியிருப்பை தாண்டி செலுத்திக் கொண்டு போனார். திடீரென்று ஓர் எண்ண உந்துதலில், சருகுகள் பரவிக் கிடந்த, ஆளரவமற்ற ஓர் சந்துக்குள் காரை திருப்பி நிறுத்தினார். ஏதோவொரு தவறு செய்ததுபோல் உறுத்தல்; கழிவிரக்கம் போல் ஏதோவொன்று குடைந்தது. மனதிலிருந்து எடுத்தெறிந்து விட்டு நடந்தார். சலவையகம், வங்கிக்கட்டிடம், மீன் சந்தை…

சந்தின் எதிர்புறம் இருந்தது அந்த தேவாலயம். வண்ணங்கள் பளிச்சிடும் கண்ணாடிசன்னல்களின் கீழ் திறந்த பெரு வாயிற்கதவுகளை நோக்கி அகன்ற படிகள் மேலேறிச் செல்லும் கருங்கல் கட்டிடம். படிகளில் அமர்ந்து புகைத்துக்கொண்டிருந்த வீடற்ற ஒருவனின் அருகே சிறிய அறிவிப்பு – ‘இயேசு காக்கிறார் – சனிக்கிழமை  6 ஞாயிறு 9 1030 1215’.

ஹெண்டர்சன் சந்தைக் கடந்து படிகளில் ஏறி, கனத்த கதவுகளைத் திறந்து உள்ளே நுழைந்தார். தூசியில் நனைந்த ஒளிக்கதிர்கள் உயரத்திலிருந்த சன்னல்களின்வழி வழிந்திறங்கி யாருமற்ற இருக்கை வரிசைகளில் மீது படிந்து கிடந்தன. காற்றில் தூபப் புகையும், ஈரக் கருங்கற்களும்  மணத்தன. கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்ட ஹெண்டர்சன், நிமிர்ந்து மேற்கூரையின் அழகிய வடிவமைப்பை வெறித்துப் பார்த்தார். என்ன அழகான இடம்! இதன் வெறுமை, இந்த அமைதி, தோள்களில் ஒரு  போர்வையைப் போல் கவியும் வெதுவெதுப்பான அடர்த்தியான இந்தக் காற்று… எங்கோ தொலைவில் ஒரு  காரின் அலாரம் அலறுவது சர்ச்சுக்குள் ஒரு குகைக்குள் கேட்பது போல் ஒலித்தது.

கடவுளின் இருப்பை டிடெரோட்டுக்கு ‘நிரூபித்த’ ஆய்லரின் சமன்பாடு ஹெண்டர்சனுக்கு நினைவு வந்தது. முட்டாள்தனம். ஆனால் பாஸ்கலின் வாதம் ஒன்று உண்டு: ஆராயும் அறிவுள்ள மனிதர்கள் கடவுளை நம்பத்தான் வேண்டும். ஏனென்றால் சொர்க்கத்தின் அனுகூலங்கள் நரகத்தின் இடர்களை விட மிக அதிகம். கைகளை கோர்த்தபடி, கீழுதட்டை கடித்தவாறு ஹெண்டர்சன் அமர்ந்திருந்தார். பாஸ்கலுக்கு மட்டும் நிகழ்தகவு கோட்பாடு தெரிந்திருந்தால் ஒருவேளை தனது கடவுள் இருப்பு வாதத்தை நிலைநிறுத்தியிருக்க முடிந்திருக்கலாம். யார் கண்டது, எத்தகைய இழப்பு இதுவென்று.

ஓர் இளம் பாதிரி இருபுற இருக்கைகளியிடையே தந்தநிற மெழுகுவர்த்திகள்  இரண்டையேந்திக் கொண்டு நடந்து வருவதைக் கண்டார். பாதிரியின் கண்களின் கவனத்தை ஈர்க்க முயன்றார். ஓர் எண்ணம் – தான், ஜான் ஹெண்டர்சன் –    துறவியாகி விட்டால்? ஒரே நேரத்தில் அச்சமும், பரவசமும் மேலெங்கும் பரவ  அவரது உடல் நடுங்கியது. யார் விண்ணப்பித்தாலும் ஏற்றுக் கொள்வார்கள் தானே, இல்லை ஏதாவது விதிகள் இருக்குமா? என்னைப் பாருங்கள் – முகம் கவிழ்ந்து மெதுவே நடந்து வந்து கொண்டிருந்த பாதிரியின் முகத்தைப் கூர்ந்து நோக்கியவாறு ஹெண்டர்சன் நினைத்துக் கொண்டார். துறவு பூண்டு, மதத்தையும், நம்பிக்கையையும் சிந்தித்துக்கொண்டு, மன்னிப்பை இறைஞ்சியவாறு  தன் நாட்களை கழித்து விடலாம்.  ஆம். திருச்சபையின் பிரார்த்தனைக் கூட்டத்தின் முன் நின்று தன் தனிமை நிறைந்த நாட்கள் எப்படி அச்சத்துடனே கழிந்தன என்று  அவரால் கூற முடியும். என்னைப் பாருங்கள், தயவுசெய்து என்னைப் பாருங்கள், ஹெண்டர்சன் மனதுக்குள் இறைஞ்சினார்.

 ஆனால் இளம் பாதிரி நீண்ட அங்கி மென்மையாக சரசரக்க கடந்து சென்றார்.

 நிறைந்தது

அத்தியாயம் 1 

அத்தியாயம் 2 

அத்தியாயம் 3 

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

oOo

19 அக்டோபர் 1972-ல் பிறந்த கார்ல் இயாக்னெம்மா அமெரிக்க விஞ்ஞானி, எழுத்தாளர். புகழ் பெற்ற MIT-ல் இயந்திர பொறியியல் துறையில் Ph. D பட்டம் பெற்ற கார்ல், இயந்திரவியல், ரோபாடிக்ஸ் துறைகளில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.

பல பரிசுகள் பெற்ற நாவல்கள், சிறுகதைகள் எழுதிய இவரது பெரும்பாலான கதைகளின் கருப்பொருள் அறிவியல், கணிதம், மனித-இயந்திர உறவுகள் மற்றும் இத்துறை சார்ந்த உளச்சிக்கல்கள்.

பிரபலமான Zoetrope சிறுகதை பத்திரிகையில் வெளிவந்து பலரது கவனத்தை ஈர்த்த ‘Zilkowksky’s Theorem’ என்ற சிறுகதையின் முறையாக முன்னனுமதி பெற்று செய்யப்பட்ட மொழியாக்கம் இது.

ஒளிப்பட உதவி – Robotic Mobility Group, MIT 

சில்கோவ்ஸ்கியின் தேற்றம் : கார்ல் இயாக்னெம்மா – 5

தமிழில்: சரவணன் அபி

அத்தியாயம்- 5

karl

 சோக்லோஸும் மரியாவும் வசித்த காண்டோமினியம் கென்மோர் ஸ்கொயர் அருகே காமன்வெல்த் அவென்யுவில் இருந்தது. நகருக்குள் எப்போது வந்தாலும் செய்வது போல ஹெண்டர்சன் இப்போதும் I-93 எக்ஸிட் வழியாக நகரை அடைந்து காரை வீட்டருகே நிறுத்தி பூட்டிவிட்டு நடந்தார். வீட்டின் முன்வாயிலில் அழைப்புமணியை அழுத்திவிட்டு காத்திருக்கும்போது சோக்லோஸுடன் சில நாட்களுக்கு முன் தான் பேசிக்கொண்டிருந்ததை கசப்புடன் நினைத்துப் பார்த்தார். மீண்டும் அவர் ஏமாற்றப் பட்டுவிட்டார்: அவரைக் தூக்கியெறிந்து விட்டு போன பெண்ணை அவர் சமாதானப் படுத்தவேண்டும். அந்த வேலையைக் கொடுத்திருப்பது யாருக்காக அவள் ஹெண்டர்சனை விட்டுவிட்டு போனாளோ அவர். அந்தப் பெண்மணி! அவரை மயக்கி தனது ஆய்வுக்கட்டுரையை  எழுதச் செய்தது மட்டுமல்லாமல் இப்போது அதை எழுதியதற்காக அவரைத் தண்டிக்கவும் போகிறாள். வாயில் ஊறிய கசப்பைக் காறி டுலிப் மலர்ச்செடிகளில் உமிழ்ந்தார் ஹெண்டர்சன். ஹெண்டர்சன் ஆய்வு நிதிக்கு கையேந்தும் வேளையில் சோக்லோஸ் போன்றவர்கள்  நேஷனல் சயின்ஸ் கழகத்தின் மானியங்களில் கொழிக்கிறார்கள் –  ஹெண்டர்சன் பதற்றத்தில் இருக்கும்போது தன்னை படர்க்கையில் எண்ணிக்கொள்வது போல இப்போதும் நினைத்துக் கொண்டார்.

கதவு திறந்தது. வெளுத்துப் போன ஜீன்சும் மஞ்சள் போலோ சட்டையும் அணிந்து, அக்ரோன் நகரில் பார்த்ததை விட இயல்பாக தெரிந்த சோக்லோஸுக்கு பின்னால் நின்றிருந்தாள் மரியா. அவள் லேசாக சுருங்கிவிட்டது போல் பட்டது அவருக்கு. வலிநிறைந்த துல்லியத்தோடு அவரால் நினைவுகூர முடிந்தது – தலைமுடி ஐஸ்-டீயின் ப்ரௌன் நிறத்திலிருந்து கருப்பாக மாறியிருந்ததைத் தவிர அவளில் வேறொன்றும் மாற்றமில்லை. ஆரஞ்சு நிற மேற்சட்டையும், கருநிற ஸ்கர்ட்டும், ஊதா நிற காற்சட்டையும் அவள் அணிந்திருந்தது அவளின் இயல்பான ஒரு வினோத கவர்ச்சியை ஊட்டுவதாக இருந்தது. அவருக்கு முன்னால் அவள் நின்ற அந்தக் கோலம் ஹெண்டர்சனுக்குள் ஆசையின் வெம்மையை ஊற்றாக பாயச் செய்தது. உள்ளே நுழைந்த ஹெண்டர்சனை மரியா தன் கைகளை சிறு டவலில்  துடைத்தவாறு பார்த்தாள்.

“வாருங்கள், அற்புதமான அறிஞரே! உன்னை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி, ஜான்!” தோள்களை அணைத்து, கன்னங்களில் முத்தமிட்டு கிறங்கிப்போன ஹெண்டர்சனை வரவேற்றாள் மரியா. “உள்ளே வா, ஜான் – எல்லாம் தயாராக இருக்கிறது!”

வீட்டைச் சுற்றிக் காண்பித்தார் சோக்லோஸ். அது ஒரு சுமாரான வீடு – சோக்லோஸ் விரைந்து கடந்த ஒளிகுறைந்த, துணிகள் பொதிகளாக தரையிற்கிடந்த அந்தப் படுக்கையறையைத் தவிர – பெரிதாக ஈர்க்கும்படி ஒன்றுமில்லை. பளபளக்கும் ஒக்மரப் பலகைகள் பதித்த, பெரிய சன்னலுடன் வெளிச்சமும் காற்றோட்டமும் கூடிய   டைனிங் அறையில் அனைவரும் அமர்ந்தார்கள்.அந்த அறை சோக்லோஸ் – மரியா இருவரின் தவறவிடமுடியாத தடயங்களால் நிரம்பியிருப்பதாகப் பட்டது.  பிரேம் செய்யப்பட்ட கணித ஆய்வுக்கட்டுரையின்  பட்டயம்; அருகிலேயே உறைகளில்லாத இசைவட்டுகளும் ஸ்டீரியோவும்.

பொருட்களின் பொருத்தமற்ற அருகண்மை ஹெண்டர்சனின் எரிச்சலைக் கூட்டியது.  மாலை இன்னும் சூடு தணியவில்லை; திறந்து விடப்பட்டிருந்த சன்னல்கள்வழி பக்கத்துவீட்டு தொலைக்காட்சியிலிருந்து ரெட் சாக்ஸ்  ஆடிக்கொண்டிருந்த பேஸ்பால் போட்டியின் ஒளிபரப்பின் சன்னமான ஒலி வழிந்து கொண்டிருந்தது.  ஹெண்டர்சன் சோக்லோஸ் ஊற்றித்தந்த கலங்கிய ரெட் வைனை மூன்று  மடக்குகளில் விழுங்கினார். “வீட்டுக்கான கடன் அதிகம் இருக்குமே? ஆனாலும் ஓர் உதவி பேராசிரியருக்கு பரவாயில்லைதான்!” என்றார் ஹெண்டர்சன்.

“வீட்டின் கீழ்தளத்தில் தண்ணீர் புகுந்து விடும். ரேடியேட்டர் அவ்வப்போது பழுதாகிவிடும். அதைத் தவிர…பிரச்சனை ஒன்றுமில்லை,” என்றார் சோக்லோஸ்.

கொலாப்கி அடுக்கிய தட்டுடன் சமையலறையிலிருந்து மரியா வெளிப்பட்டாள். கொலாப்கி – ஹெண்டர்சனுக்கு  நெஞ்சில் எழுந்து வந்த தீவிர உணர்வெழுச்சியில் கண்கள் கலங்குவது போலிருந்தது. ஒரு குறிப்பிட்ட ஆகஸ்டு மாத பின்னிரவின் நினைவு: இதே கொலாப்கியும் ரெட்  வைனும். அவரும் அவளும் , தரையில் சப்பணமிட்டு உணவருந்திக் கொண்டிருக்கிறார்கள் அந்த வெப்பமிகுந்த இரவில், வெறும் உள்ளாடைகளில். தேய்ந்து போன இசைத்தட்டு ஒன்று படுக்கையறையில் உரக்க ஒலித்துக் கொண்டிருக்கிறது…

அந்தப் பெண்!

உணவு மேசையில் அமர்ந்த ஹெண்டர்சன் முள்கரண்டியால் கொலாப்கியை வெட்டி முட்டைக்கோஸை வாயில் போட்டுக் கொண்டார்.

“உனக்கு காரம் பிடிக்கும் என்று தெரியும் ஆனால் ரொம்பக் காரமாக இருக்காது என்று நினைக்கிறேன்,” என்றாள் மரியா’.

ஹெண்டர்சன் நிமிர்ந்து அவளை பார்த்தார். “ம். பிறகு? சோக்லோஸ் – மிக்லோஸ் – சொன்னான் – நீ மிகவும் மாறி விட்டதாக.மகிழ்ச்சியான செய்தி என்று சொல்லத்தான் நினைக்கிறேன், ஆனால் அப்படிச் சொன்னால் அது சரியாக இருக்காது,” என்றார்.

சிறிய அடிபட்ட மிருகமொன்றை குழந்தையொன்று பார்வையிடும் பாவனையில் மரியா ஹெண்டர்சனை மிருதுவான பார்வையொன்று பார்த்தாள். “நீ மாறவேயில்லை, ஜான். வெட்டிப்பேச்சு உனக்கு பிடிப்பதில்லை இல்லையா?” ஒயினை சுவைத்தவாறே சிரித்தாள். “உருப்படாத என்னுடைய யோசனைகளில் இதுவும் ஒன்று என்று நீ நினைப்பது எனக்குத் தெரியும். ஆனால் அப்படியில்லை. உண்மையாகத்தான் சொல்கிறேன்.”

“J.A.M. கணித ஜர்னலில் நீ ‘ஒத்துக்கொள்ளப்போகும்’ உண்மைக்கு எனது அனுமதி தேவை, இல்லையா? இந்த டின்னரின் காரணமே அதுதான், இல்லையா?”

மரியா சிரித்தாள். உயிரற்ற பார்வையொன்றை அவர் மேல் வீசியபடி, “ஜான், ப்ளீஸ் – உன் அனுமதி வேண்டும்தான், நான் மறுக்கவில்லை,” என்றாள்.

“என் அனுமதி,” ஹெண்டர்சன் தொடர்ந்தார். “நீ பாட்டுக்கு ஆய்வு உன்னுடையதல்ல என்று மறுப்பு வெளியிட்டுவிட்டு போய்விடுவாய். உன் மனசாட்சியின் உறுத்தலில் இருந்து உனக்கு விடுதலை கிடைத்து விடும். எனக்கு? பணிநீட்டிப்பு குழுவின் அவமதிப்பும், கருத்தரங்குகளில் ஒதுக்கப்படுவதும் நடக்கும்.”

ஹெண்டர்சனின் கையை தனது கைகளுக்குள் பொதிந்தவாறு மரியா சொன்னாள், “உனக்கு என் நன்றி கிடைக்கும், ஜான். என்னை மகிழ்வாக வைத்துக்கொண்ட பெருமிதம் உனக்கு கிடைக்கும். அவ்வளவுதான் என்னால் உனக்குத் தரமுடியும், ஜான். என்னிடம் வேறென்ன இருக்கிறது, சொல்?”

“கடவுளே!” மரியாவின் தொடுகையால் திடீரென்று ஹெண்டர்சன் கிளர்ச்சியடைந்தார். “இது மிகவும் அவசியமா? வெளியே Ph.D பட்டதோடு உலவும் அவ்வளவு முட்டாள்களை நினைத்துப் பார். நீ இதற்கு தகுதியானவள், மரியா! பலியொன்றும் இல்லாத குற்றம், அவ்வளவுதான்.”

“பாதிக்கப்படாதவர்கள் இல்லாத குற்றமென்று ஒன்று இல்லை, ஜான்,” மரியா தோள்களை குலுக்கினாள். “மதத்தை நீ கண்டடைந்தால் நான் சொல்வது என்னவென்று நீ புரிந்து கொள்வாய்.”

வெறுப்பாக தலையை அசைத்துக் கொண்டார் ஹெண்டர்சன். மரியா மாறி விட்டாள். கொஞ்சம் மந்தமாக, தன்னிச்சையாக இல்லாமல். அவள் பேசிய ஆங்கிலத்தின் சாயலும் – வசீகரிக்கும் அயல்நாட்டு தொனியைக் கேட்க முடியவில்லை; எரிச்சலூட்டும் அரைகுறை அமெரிக்க இழுவை. மரியாவுக்கு அருகே, சோக்லோஸ் ஏதும் பேசாமல்  தீவிரமான பாவனையுடன் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். ரெட் சாக்ஸ் ஆடிக்கொண்டிருந்த ஆட்டத்தின் ஒளிபரப்பில் ரசிகர்களின் சத்தம் வர்ணனையாளரின் உரத்தக் குரலை மீறி உச்சத்தை அடைந்து கொண்டிருந்தது. ஆட்டம் தலா மூன்று என ஐந்தாவது ஆட்டத்தில் சமநிலையில் இருந்தது.

மூவரும் கொலாப்கியை அமைதியாக சாப்பிட்டு முடித்தனர். காலித் தட்டுகளை கொண்டு போய் உள்ளே போட்டுவிட்டு ஆவிபறக்கும் பிகோஸ் நிறைந்த பாத்திரங்களுடன் சோக்லோஸ் உணவுமேசைக்கு வந்தார். இன்னொரு ஒயின் பாட்டிலை எடுக்க சோக்லோஸ் உள்ளே சென்ற போது, ஹெண்டர்சன் கைகளை மேசையின் மீது ஊன்றிக்கொண்டு மரியாவைப் பார்த்துக் கேட்டார், “ஆக, இப்போது நீ மன்னிக்கப்பட வேண்டும்? அதற்கெல்லாம் உங்களை போன்றவர்களுக்கு பாதிரிமார்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தேன்?” என்றார்.

மரியா உதடுகளை இறுகக் கடித்தபடி அவரை வெறித்துப் பார்த்தாள். அமைதியாக, “இது மனச்சாட்சி சம்பந்தப் பட்டது, ஜான். பல மோசமான காரியங்களை செய்திருக்கிறேன், ஜான். உன்னை ஏமாற்றியது. இன்னொருவரின் எழுத்தைத் திருடியது. மிக்லோஸ் இல்லாத காலைகளில் உன்னை அழைத்தது. எதுவுமே சரியல்ல.”

“அதுவெல்லாம் ஒரு காரணமேயல்ல. ஒன்றும் நடக்கவில்லை! நாம் கண்ட்ரோல் தியரியைப் பற்றித்தானே பேசிக்கொண்டிருந்தோம் – அதுவொரு பாவமா?”

“தவறுதான். உன்னை நான் நடத்தியவிதம் தவறுதான், ” மரியா தலையை அசைத்துக் கொண்டாள். “பல வருடங்களாக நான் மகிழ்ச்சியாக இல்லை.”

“இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறாய்?” ஹெண்டர்சன் வினவினார்.

மரியா நிமிர்ந்து அவரைப் பார்த்தாள். அவள் முகத்தில் உணர்ச்சிகள் சந்தேகத்திலிருந்து வருத்தத்திற்கும் பின்  மென்மைக்கும் கணநேரத்தில் மாறின. “ஆம், இப்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன்,” என்றாள்.

ஹெண்டர்சன் ஏதோ சொல்ல வாயெடுத்தார், பின் தலையை இல்லையென்பது போல் அசைத்துக்கொண்டு ஒரு பெரிய மிடறு ஒயினை விழுங்கினார். மரியா மகிழ்ச்சியாக இருப்பதை அவரும் விரும்பினார். ஆனால் இப்படியல்ல. மதத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு, பின்வாசல் வழியாக மகிழ்வின் நிழலுக்குள் நுழைவது எளியதுதான். ஆனால் அதுவொரு முட்டாளின் பேரம்.   கோபம் தலைக்கேற அமைதியில்லாமல் மொத்த ஒயினையும் வாயில் கவிழ்த்துக் கொண்டு புறங்கையால் வாயைத் துடைத்துக்கொண்டார்.

“சரி, நாம் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம்,” ஹெண்டர்சன் திறந்திருந்த ஜன்னல் வழியே கேட்டுக் கொண்டிருந்த பேஸ்பால் ஆட்டத்தின் வர்ணனையை சுட்டிக்காட்டினார். “இந்த ஆட்டத்தில் ரெட் சாக்ஸ் வென்றால் உனக்கு என் அனுமதி உண்டு. உன் மறுப்பை நீ வெளியிடலாம். என்  தொழிலை சீர்குலைக்கலாம். நீ சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் ரெட் சாக்ஸ் தோற்று விட்டால், என்னை மன்னித்துக்கொள் மரியா, நீ உன் மனசாட்சியுடன் வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை. எங்கள் எல்லாரையும் போல்.”

“ஜான்! என்ன இது – என்ன பேசுகிறாய் நீ?” மரியா பதறினாள். அவளும் சோக்லோஸும் உறைந்த பாவனையுடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். “தயவு செய்து எனக்காக இதைச்செய் ஜான். நமது நட்புக்காக. ப்ளீஸ்”

“ஹெண்டர்சன்,”   சோக்லோஸ் கிசுகிசுத்த குரலில் கேட்டார், “இப்படி எளிமையாக தீர்க்கக் கூடிய விஷயமல்ல இது. நம் அனைவருக்கும் இது முக்கியம்.”

தனது நாற்காலியில் சாய்ந்துகொண்ட ஹெண்டர்சன் தோள்களை குலுக்கிக் கொண்டார். இவ்வளவு நாள் விதிகளின் படி ஆட்டத்தை  ஆடி என்ன கண்டார் தோல்வியைத் தவிர? விதிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்க்க தீர்மானித்து விட்டார்.

சோக்லோஸ் அறையின் மூலையிலிருந்த தொலைக்காட்சியை இதுவரை பார்த்திராத ஒரு பொருளை பார்ப்பது போல வெறித்துப்பார்த்தார். பின் சானல்களை மாற்றி ரெட் சாக்சின் ஆட்டத்தை வைத்தார். மூவரும் தத்தம் நாற்காலிகளை நகர்த்தி போட்டுக்கொண்டு அமைதியாக ஆட்டத்தை பார்க்க ஆரம்பித்தார்கள். ஆறாவதிலும் எட்டாவது ஆட்டத்திலும் ரெட் சாக்ஸ் ஸ்கோர் செய்ய, ஒன்பதாவது ஆட்டத்தில் டைகர்ஸ் மூன்று சுற்று ஓட்டத்தின் மூலம் மீண்டும் ஆட்டத்தை சமன் செய்தது. ஒன்பது ஆட்டங்களின் முடிவில் புள்ளிகள் சமமாக இருந்ததால், ஆட்டத்தை தீர்மானிக்க மேலதிக இன்னிங்ஸ் ஒன்று என்ற கணக்கின்படி ஆட்டம் மீண்டும் துவங்கியது. தனது நாற்காலியில் கைகளை இறுகக் கட்டியபடி முன்னகர்ந்து மரியா அமர்ந்திருக்க, ஹெண்டர்சனோ எதிலும் மனம் நிலையில்லாமல் மைதானத்தின் மேல் பறக்கவிடப்பட்டிருந்த பலூனைப் பார்த்துக் கொண்டிருந்தார்.  மூன்று நான்கு என ஒயின் கோப்பை அடுத்து கோப்பையாக அருந்தியபடியே ஹெண்டர்சன் பெரிய ஜன்னல் வழியாக அந்தி  மெதுமெதுவே இளஞ்சிவப்பிலிருந்து  ஆரஞ்சு நிறமாக தொலைவானம் வரை மாறுவதை பார்த்துக்கொண்டிருந்தார். எத்தனை அந்திகள் அவரது அலுவலக ஜன்னல் வழியே வடக்குவானின் வர்ண ஜாலங்களை, செந்நிற தீற்றல்களை தனிமையில் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்! சோக்லோஸ் தன்னை உற்றுப் பார்த்துக்  கொண்டிருப்பதை உணர்ந்து ஹெண்டர்சன் திரும்பிப் பார்த்தார். சோக்லோஸ் திரும்பிக் கொண்டார்.

டைகர்ஸ் அணி பதினொன்றாவது ஆட்டத்தில் ஒரு ஓட்டம் முன்னிலை; ரெட் சாக்ஸ் இரண்டு ஓட்டங்களை தவற  விட, கூட்டத்தில் ஒரு சலசலப்பு.

“இப்போது என்னவாகும்?” மரியாவின் பக்கவாட்டு முகத்தைப் பார்த்து பேசினார் ஹெண்டர்சன். “என்ன நடக்கும் மரியா? நீ மேலும் மேலும் உன் பாவ மன்னிப்புகளை செய்து கொண்டே போவாய். உன் மன நிம்மதியைக் கூட்டிக் கொள்வாய். பிறகு? உன்னைத் சுற்றியிருப்பவர்களை நினைத்துப் பார்த்தாயா? மன்னிப்பு என்பது அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதில்லை, மரியா!”

மரியா அவரைத் திரும்பிப் பார்க்கவில்லை. “கணிதம் போல் மதத்திலும் விடை  காண முடியாத கேள்விகள் நிறைய உண்டு. பொறுத்திருந்து பார்,” என்றார் ஹெண்டர்சன்.

அவர்  சொல்லிமுடிக்கவும், கூட்டத்தின் சத்தம் ஒரு பேரிரைச்சலாக எழும்பியது. விசையுடன் அடிக்கப்பட்டு அந்தரத்தில்  பறந்த பந்தை கண்டார் ஹெண்டர்சன். அசைவில்லாமல் தொங்கியது போல் தோன்றிய பந்து, திடீரென ஒரு மாயக்கரத்தினால் அடிக்கப்பட்டது போல் கீழ் நோக்கி விழத் தொடங்கியது. மரியா பரபரப்பில் கைகளை கொட்டிக் கொண்டாள். டெட்ராய்ட் அணியின் வலதுபுற தடுப்பாட்டக்காரர் பின்னோக்கி ஓடி, மைதான சுவரில் மோதுவது போல் விழுந்து எழுந்தான். மைதான கோட்டை தாண்டிப்  பறந்த பந்து, அவன் எழுந்த போது அவனது நீட்டிய கையின் கிளவ்ஸுக்குள். பந்தை பிடித்து விட்டான்! பாஸ்டன் ரசிகர்களிடம் ஒரு நம்பிக்கையில்லாத முனகல்; டெட்ராய்ட் ஆட்டக்காரன் முஷ்டியை காற்றில் குத்தியவாறு பந்தை கைகளுக்குள் மாற்றியவாறு தனது அணியினர் அமர்ந்திருந்த பக்கத்திற்கு செல்வதைக் கண்டார்கள்.

சோக்லோஸ் பெருமூச்செறிந்தார். “நான் கண்களை மூடிக்கொண்டேன். ஆட்டங்களில் என்னால் இந்த பதற்றத்தைத் தாங்க முடிவதில்லை.” மேற்கொண்டு ஏதோ சொல்ல வந்தவர், ஏதும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். தொலைக்காட்சியில் ஆட்டக்காரர்கள் ஒருவருக்கொருவர் கைகொடுத்துக் கொண்டு தத்தம் அணியின் டக் அவுட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

ஹெண்டர்சன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டிருந்தார். மரியா தொலைக்காட்சிப்பெட்டிக்கு அப்பால் மிகத் தொலைவில் ஏதோவொன்றை பார்ப்பவள் போல் அமர்ந்திருந்தாள். உதடுகள் ஒரு மெல்லிய கோடாக இறுகியிருக்க, கைகள் எதையோ வேண்டுவன போல் குவிந்திருந்தன. அவளை பார்த்தபடி, “நான் கொடூரமானவனாக இருந்திருந்தால், இதில் ஒரு நீதியை சுட்டிக் காட்டியிருப்பேன்,” என்றார் ஹெண்டர்சன்.

“ஆனால் நீ கொடூரமானவனில்லை. நீ தயை நிறைந்தவன்; புத்திசாலி, கருணையுள்ளவன்.” மரியா ஹெண்டர்சனின் கையை தான் கைகளில் ஏந்திக் கொண்டாள். “நீ கொடூரமானவனில்லை தானே, ஜான்?”

(தொடரும்)

அத்தியாயம் 1 

அத்தியாயம் 2 

அத்தியாயம் 3 

அத்தியாயம் 4

oOo

19 அக்டோபர் 1972-ல் பிறந்த கார்ல் இயாக்னெம்மா அமெரிக்க விஞ்ஞானி, எழுத்தாளர். புகழ் பெற்ற MIT-ல் இயந்திர பொறியியல் துறையில் Ph. D பட்டம் பெற்ற கார்ல், இயந்திரவியல், ரோபாடிக்ஸ் துறைகளில் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டிருக்கிறார்.

பல பரிசுகள் பெற்ற நாவல்கள், சிறுகதைகள் எழுதிய இவரது பெரும்பாலான கதைகளின் கருப்பொருள் அறிவியல், கணிதம், மனித-இயந்திர உறவுகள் மற்றும் இத்துறை சார்ந்த உளச்சிக்கல்கள்.

பிரபலமான Zoetrope சிறுகதை பத்திரிகையில் வெளிவந்து பலரது கவனத்தை ஈர்த்த ‘Zilkowksky’s Theorem’ என்ற சிறுகதையின் முறையாக முன்னனுமதி பெற்று செய்யப்பட்ட மொழியாக்கம் இது.

ஒளிப்பட உதவி – Robotic Mobility Group, MIT 

மாப்பஸான் – ஸ்லோன் கிராஸ்லி

தமிழில்: பீட்டர் பொங்கல்

guy-de-maupassant

Image Credit: americanliterature.com

மாப்பஸானைக் கண்டுகொள்வதற்கு முன், நான் முதலில் ஜேம்ஸ் ஜாய்ஸ் படிக்க வேண்டியிருந்தது. பிரான்சுக்குப் போவதானால் அயர்லாந்தைக் கடந்து செல்ல வேண்டும் என்ற அளவில்தான் இதற்கு அர்த்தம் இருக்க முடியும். ஏனெனில், நானறிந்து ஜேம்ஸ் ஜாய்ஸுக்கும் மாப்பஸானுக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமில்லை. ‘க்ளே‘ என்ற கதைக்கும் ‘தி நெக்லஸ்‘ என்ற கதைக்கும் இடையே சில மெல்லிய இணைகோடுகள் இருக்கலாம் (சலிப்பில் ஆழ்ந்திருக்கும் அழகிய பெண்ணின் தாளவொண்ணா குமுறல்). மாப்பஸான், ஜாய்ஸ் இருவரும் காத்திரமான மீசை வைத்திருந்தார்கள், இருவருக்கும் மேக நோய் இருந்தது. ஆனால் இதில் கடைசியாகச் சொன்ன நிலை இருவரையும் பிணைக்கக்கூடிய உரமாக முடியாது; மேக நோய் என்பது மறைந்த ஆண் எழுத்தாளர்கள் விஷயத்தில், சாட் பரிட்சைகளில் உன் பெயரைப் பிழையின்றி எழுதுவதற்கு இணையான ஒன்று. ஆனால்கூட, எட்டாம் வகுப்பு ஆசிரியராய் இருப்பதற்கு அநியாயத்துக்கு தகுதியற்றிருந்த என் ஆங்கில ஆசிரியைக்குதான் நான் நன்றி சொல்ல வேண்டும் – இந்த இரு படைப்பாளிகளும் என் நினைவில் பிரிக்க முடியாதபடி பிணைந்திருக்கிறார்கள்.

முதலில், அவள் ‘டப்ளினர்ஸ்‘ கதையை நாசம் செய்தாள். ‘தி டெட்‘ கதைக்கு அவள் தந்த விளக்கம்? சோகம். பனிப்பொழிவு. அடுத்தது. ‘எவலைன்‘? ரயில் பயணம். பெண்கள். அடுத்தது. ஒரு கதையின் சாரத்தை அளிப்பதற்கும் சோம்பேறித்தனத்திற்கும் வேறுபாடு இருக்கும் என்றால், அவளது வகுப்புகள்தான் அதன் அளவை. ஒருவேளை, இந்த அம்மணி வேறெங்காகிலும் இருக்க வேண்டியவளாய் இருக்கலாம். இங்கு இருப்பதற்கு பதில், இந்நேரம் “ஹேங் இன் தேர்” என்று எழுதப்பட்ட பூனை போஸ்டர்களைத் தன் விரல் நகங்களால் கிழித்துக் கொண்டு ஆசிரியர்களுக்கான அறையில் அவள் ஒரு சந்திப்பிற்காகக் காத்திருப்பாளாக இருக்கும். நான் சொல்ல வருவது இதுதான் – எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில வகுப்புகள், அதன் ஆசிரியர்களுக்கு நிறைவளிக்க வாய்ப்பில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் அவள் கதை குறித்த விவாதங்களை வெகு வேகமாகக் கடந்து சென்றாள் என்பதுதான் – எங்களில் மோசமானவர்களைக்கூட அவளது வேகம் ஆச்சரியப்படுத்தியது. ‘அரபி’‘ கதைக்கு அவள் அளித்த விளக்கம்தான் என்னைத் தீர்த்துக் கட்டியது. தன்னைவிட வயதில் மூத்த பெண் மீது மோகம் கொண்ட ஒரு சிறுவனின் கதை ‘அரபி‘. கிராமத்தில் நடக்கும் சந்தைக்கு தான் போகப் போவதாக அவளிடம் சொல்கிறான், பதிலுக்கு நினைவுப் பொருள் ஏதேனும் வாங்கிவரச் சொல்கிறாள் அவள். அவள் பணித்த செயலால் குதூகலிக்கும் அவன், மிகப் பொருத்தமான ஒரு பரிசைத் தேடி இறுதியில் கண்டெடுக்கிறான். ஆனால், அந்தக் கடையை நடத்தும் பெண்மணி அவனைப் பார்த்துச் சிரித்தபடி உதவி வேண்டுமா என்று கேட்கும்போது அவன், இல்லை, வேண்டாம், நன்றி என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறான்.

“பார்த்தீர்களா,” என்று என் ஆசிரியை கதையை முடித்தாள், “சில சமயம் ஜாய்ஸ் கதைகளில் அர்த்தமே இருப்பதில்லை, அதுதான் விஷயம்”

நிச்சயம் அதுவல்ல விஷயம். தனியார் பள்ளி அமைப்பில் பணியமர்த்தப்பட்டிருக்கும் அமெச்சூர் நிஹிலிஸ்ட் நீயென்றால், அப்போது வேண்டுமானால் அதுதான் உனக்கு விஷயமாக தெரியலாம். ஆனால் உலகில் ஒருவர் மீதொருவர் ஒருதலைக்காதல் கொண்ட எந்த ஒரு பதின்பருவ கும்பலாக இருந்தாலும் அவர்களுக்கு இந்தக் கதை புரிந்திருக்கும்: கடையை கவனித்துக் கொண்டிருக்கும் பெண்மணி அவன் திசையில் தன் வசீகரப் புன்னகையை வீசும்போது, நம் நாயகன் தன் காதலி நாகரீகமாகப் பேசியிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொள்கிறாள், அவள் அவனிடம் சல்லாபிக்கவில்லை. அப்போதே அவனது காதல் ஜோதி அணைந்து போகிறது, அதனிடத்தில் சங்கடப் புகைதான் மிஞ்சி நிற்கிறது. நான் அப்போது ‘ஆனி ஹால்‘ பார்த்திருக்கவில்லை, ஆனால் பார்த்திருந்தால், ஜேம்ஸ் ஜாய்ஸ் என் வகுப்பறைக்குள் நுழைந்து அந்த மார்ஷல் மக்லூஹன் காட்சியை அரங்கேற்றியிருக்க வேண்டும் என்று விரும்பியிருப்பேன். ‘அரபி‘ அப்போதே எனக்கு மிக முக்கியமான கதையாகிப் போனது, பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டிய ஒரு சிறு இலக்கியப் பொருள் அது. (பதின்பருவ உள்ளத்தின் வினையை என்னவென்று சொல்ல- அஞ்சாதே, ஜேம்ஸ், நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்!). எனவே, அடுத்து கிழிபடப் போவது கை டி மாப்பஸான் என்ற ஒரு பிரெஞ்சுக்காரன் என்பதை பாடத்திட்டத்தில் பார்த்ததும் எனக்குக் கவலை வந்துவிட்டது.

என் வாழ்க்கையில் முதல் முறையாக நான் பாடம் நடத்தப்படும் பக்கங்களைக் கடந்து வாசித்துப் பார்க்கிறேன். முதலில் ‘தி நெக்லஸ்‘ கதையில் துவங்குகிறேன் (அதுதான் சிறிதாக இருக்கிறது). அதன்பின் ரத்தத்தை உறைய வைக்கும் ‘பூல் டி ஸ்வூஃப்‘ (Boule de Suif). இரு கதைகளின் முடிவுகளும், அவற்றின் தாங்கிக்கொள்ள முடியாத அளவு கச்சிதமான திருப்பங்களும், எனக்கு அதிர்ச்சியளித்தது நினைவிருக்கிறது. நான் அந்தப் புத்தகத்தின் பக்கங்களையும் நினைவில் வைத்திருக்கிறேன், அவற்றின் அளவையும்கூட. அதன் எழுத்துரு எனக்கு நினைவிருக்கிறது என்று எண்ண விரும்புகிறேன், ஆனால் அதை மறந்துவிட்டேன் என்பதுதான் உண்மையாக இருக்கும். ஆனால் இப்போதும் பார்க்க முடிகிறது, நான் என் படுக்கையில் உட்கார்ந்திருக்கிறேன், திறந்த வாய் மூட மறந்து அமர்ந்திருக்கிறேன், ஒரு தந்திரக் காட்சியை இப்போதுதான் கண்டதுபோல். மீண்டும் ‘தி நெக்லஸ்‘ கதையைப் படிக்கிறேன். மாப்பஸான் கதைகளை எனக்கு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலை உணர்கிறேன், அவற்றை நானாகவே புரிந்து கொள்ள வேண்டும், அவற்றின் ஆசிரியர் என்னிடம் நேரடியாகப் பேச வேண்டும். ஏன், அந்த போஸ்டர்- கிழிக்கும் கள்ளக் காட்டுப்பூனை. கடைசியில் அவள்தான் என் ஆசிரியர்களில் மிகச் சிறந்தவராக இருந்தார். கொஞ்சமும் ஒளிவுமறைவற்ற அவளது ஆர்வமின்மைக்கு அப்பால் அவள் என்னைக் கதைகளை நேசிக்கச் செய்துவிட்டாள்.

பூல் டி  ஸ்வூஃப்‘ கதைக்கு அவளது விளக்கம்? விபசாரம். யுத்தம்.

நன்றி, இப்போது என் முறை.

நான் வளர்ந்து விட்ட நிலையில் என் இப்போதைய பிரச்சனை, இந்தக் கதைகளின் ஆற்றல் குறைந்து வருகிறது என்பதுதான் – அதிலும் குறிப்பாக, ‘தி நெக்லஸ்‘ கதை. காலம் போகிறது, முதல் காதல்களின் நினைவழிகிறது என்பதும் இதற்கொரு காரணம். ஆனால் என் தேர்வுகளும் இதற்கான காரணம்தான். கடந்த சில ஆண்டுகளாக நான் வேறெதையும் நினைத்துப் பார்க்கவில்லை என்பதைச் சொல்ல வேண்டும். ‘தி நெக்லஸ்‘ கதையை என் நாவலுக்கான இன்ஸ்பிரேஷனாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்தக் கதையைத் தனித்தனியாய்ப் பிரித்து ஒவ்வொரு பகுதியையும் திருப்பிப் பார்த்து மீண்டும் இணைத்திருக்கிறேன். ‘தி க்ளாஸ்ப்‘ கதையின் பிரதான பாத்திரங்கள் பொய்யான லட்சியங்களை ஒரு சங்கிலித் தொடராய்த் விரட்டிச் செல்கின்றனர்- ‘தி நெக்லஸ்‘ கதையின் அரைகுறை இரக்கம் கொண்ட நாயகியைப் போலவே. கதை பற்றிய என் முதல் உணர்வுகளைப் பொடிப்பொடியாய்த் துகளாக்க, நான் அந்தக் கதையைப் பற்றி சிலரிடம் நேர்முகம் காண்கிறேன்- நினைத்துப் பார்க்குமிடத்தில் திரும்பச் சொல்லச் செய்கிறேன். அவ்வளவு முக்கியமாய் இருந்த இந்தக் கதை எனக்கு ஒன்றுமில்லாமல் போகும்வரை நான் மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டேயிருக்கிறேன். இயல்பாகவே, எனக்கு இந்தப் பரிமாற்றம் பிடித்திருக்கிறது. இதிலிருந்து எனக்கு ஒரு முழு புத்தகமே கிடைத்திருக்கிறது. காமத்துக்குரிய பதார்த்தங்கள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன.

வேறொரு கதையைத் தன்னிகழ்வாய் வாசிக்கும்போதுதான் இந்தக் கதையை மீட்க நேர்ந்தது. ஒரு ஜனவரி மாதப் பனிப்புயலில், ஐசாக் பாபெலின் “கை டி மாப்பஸான்” என்ற கதை எதிர்ப்பட்டது. மாப்பஸான் வெறியள் என்று சொல்லிக்கொண்டு திரியும் என்னைப் போன்ற ஒருத்திக்கு இந்தக் கதையைப் படித்ததேயில்லை என்பது கேலிக்குரிய விஷயம்தான். மாப்பஸான் கதைகளை மொழிபெயர்த்து ஒரு பணக்கார போஷகருக்கு காதல் வலை விரிக்கும் ரஷ்ய இளைஞன் ஒருவனைப் பற்றிய இந்தக் கதையில் அவன் வீடு திரும்பி, மாப்பஸானின் கொடூர மரணம் பற்றிய தகவலை வாசிக்கிறான் (மாப்பஸானின் மரணத்தின் மிகக் குரூரமான விஷயம் அவரது பால்வினை நோயல்ல). காமம். உயர்குடிகள். பிரெஞ்சு விஷயங்கள். ஆம், அந்தத் தளங்கள் அத்தனையையும் அந்தக் கதை கையைப் பிடித்து இழுத்தது. ஆனால், பாபெலின் கதை உண்மையில் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையிலுள்ள அந்த மெல்லிய இழை பற்றியது, உயர் கலையையும் அடிமட்டக் குப்பையையும் பிரிக்கும் மெல்லிய இழை. “சொற்றொடர் ஒன்று இவ்வுலகில் பிறக்கிறது, அது நன்றும் தீதுமாய் ஒரே சமயத்தில் இருக்கிறது. ரகசியம் ஒரு சிறிய, ஏறத்தாழ கண்ணுக்கே தெரியாத  திருகலில் இருக்கிறது. அதைத் திருப்பும் கோலை நீ உன் கரங்களில் ஏந்தியிருக்க வேண்டும், மெல்ல மெல்ல வெம்மை அடையும் அதை நீ ஒரு முறைதான் திருப்ப முடியும், இரண்டாம் முறை திரும்பாது”. நான் என் பதின்பருவத்தில் சிறுகதைகள் வாசிக்கும்போது அடைந்த தூய நேசத்துக்கு “கை டி மாப்பஸான்” கதை என்னை மீண்டும் அழைத்துச் சென்றது. மாப்பஸான் கதைகளில் ஒன்றை நான் என் புனைவுக்குள் சேர்த்துக் கொள்ள நினைப்பதற்கு முன்பான காலம் அது.

பாபெல் கதையைப் படித்து முடித்தபின், நான் என் அறையின் குறுக்கே நடந்து, அலமாரியில் இருந்த ஒரு தொகுப்பை எடுத்து, ‘தி நெக்லஸ்‘ கதை இருக்கும் பக்கத்தைப் புரட்டிப் பிரித்தேன். அதை வாசித்தேன் – உண்மையாகவே வாசித்தேன்- முன் எப்போதும் நான் அதை வாசித்திராதது போல். தலைக்கனம். இழப்பு. பாரிஸ். உண்மையைச் சொன்னால், இது ஒன்றும் அவ்வளவு மோசமான விளக்கம் அல்ல.

(ஸ்லோன் கிராஸ்லியின் நாவல், ‘தி க்லாஸ்ப்’ இம்மாதம் பேப்பர்பாக் வடிவில் பதிப்பிக்கப்படுகிறது)

நன்றி – The Necklace, Sloan Crossley, The Paris Review