விமரிசனம்

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளி – ஜிஃப்ரி ஹாஸன்

ஜிஃப்ரி ஹாஸன்

பின்-நவீன அரசியல் கவிதை வெளி

பின்-நவீன அரசியலானது ‘வித்தியாசங்கள்“, “கேள்விக்குள்ளாக்குதல்” என்பவற்றை முதன்மைப்படுத்துகிறது. அடக்கும் அல்லது மற்றமையை விளிம்பு நோக்கித் தள்ளும் குழுவுடன் ஒன்றிப் போகாமல் முரண்படுதல் என்ற கோரிக்கையை முன்வைத்தது. ஈழத்து தமிழ் முஸ்லிம் கவிஞர்கள் தங்களை விளிம்பு நோக்கித் தள்ளும் தேசங்களுடன்/ குழுக்களுடன்  ஒன்றித்துப் போகாமல் அவற்றிலிருந்து தங்களை வித்தியாசப்படுத்தலை தம் கவிதைகளில் தீவிரமாக வலியுறுத்தத் தொடங்கினர். விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட தமது மக்களுக்கான சிறுகதையாடல்களை உருவாக்குவதற்கும் அவற்றை மீள மீள வலியுறுத்துவதற்குமான கருவியாகவும் அவர்கள் கவிதையை பயன்படுத்தத் தொடங்கினர். எனவே, அவர்கள் தமிழ் மொழிச் சமூகங்கள் எனும் பொது அடையாளத்திலிருந்து விலகிச் செல்லும் நிலைப்பாட்டை எடுத்தனர்.

தமக்கான அடையாள அரசியலை தமது கவிதைப்புனைவுகளில் தாமே உருவாக்கிக் கொள்ளும் செயற்பாட்டில் ஆர்வம் கொள்ளத் தொடங்கினர். அடையாளம் என்பது ஒரு புனைவைப் போல கட்டமைக்கப்படுகிறது என்ற பின்-நவீனக் கருத்தியலை இந்த அடையாள உருவாக்கம் அனுசரித்துச் செல்வதாக இருந்தது. ஏனெனில் அவை பேசும் அரசியல் விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட சிறுபான்மை மக்கள் பற்றியது. இதனால் ஈழத்து முஸ்லிம் பின்-நவீனக் கவிதை வெளியில் பின்-நவீன அரசியல் கவிதைகளே அதிகம்.

அந்தவகையில் பார்க்கும் போது முஸ்லிம் கவிஞர்களால் எழுதப்பட்ட அனைத்து எதிர்ப்புக் கவிதைகளும் பின்-நவீன அரசியல் கவிதைகளுக்குள் உள்ளடக்க முடியும். அதேபோன்று சிங்களப் பெருந்தேசியவாத அடக்குமுறைக்குள்ளான மற்றொரு சிறுபான்மை மக்களான தமிழ் மக்களின் எதிர்ப்புக் கவிதைக் குரல்களையும் பின்-நவீனக் கவிதைக் குரலாக பார்க்கப்பட முடியும். ஆனால் இந்தக் கட்டுரை ஈழத்தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதை வெளி பற்றி மட்டுமே பேசுகிறது. ஈழத்து தமிழ் முஸ்லிம் கவிதைகளில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியிலிருந்து குறிப்பிட்ட சில கவிஞர்களால் சொல்லப்பட்ட கவிதைகள் பின்-நவீனக் கவிதைகள் என இங்கு அடையாளப்படுத்தப்படுகின்றன.

ஈழத்தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதை வெளி

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளி குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு விரிபரப்பையுடையது. சிறுகதை, நாவல் வெளியை விட இது மிகவும் பரந்துபட்டது. இன்று அதிகமான இளைஞர்கள் முஸ்லிம் கவிதைவெளியில் வினைத்திறனுடன் இயங்கிக் கொண்டிருப்பதும் இதற்கு ஒரு காரணமாகும். விடுபடல்கள் ஏதுமின்றி இந்தத் தலைப்பில் ஒரு முழுமையான ஆய்வை செய்வதற்கு நீண்ட காலமும் ஒரு பாரிய உழைப்பும் அவசியமாகிறது. ஆனால், இந்தக் கட்டுரை குறிப்பிட்ட சில ஈழத்து நவீன முஸ்லிம் கவிஞர்களின் கவிதைகளை மட்டுமே அதுவும் மிக மிகச் சுருக்கமாக முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகிறது.

பின்-நவீனக் கவிதைவெளியில் நாம் இலகுவில் பயணிப்பதற்காக முதலில் பின்-நவீனக் கதையாடல் பற்றிய ஒரு சிறு புரிதல் அவசியமாகும். பின்-நவீனத்துவம், அதிகாரமானது பெருந் தளங்களிலோ- நுண்தளங்களிலோ எந்த வடிவத்தில் தொழிற்பட்டாலும் அதை எதிர்த்துக் கேள்வி எழுப்பும் கலகத்தன்மை மிக்க ஒரு கோட்பாடகும். அதிகாரங்களால் புறக்கணிக்கப்பட்ட, விளிம்பு நிலைப்படுத்தப்பட்ட மக்கள்  மீதும் கவனஞ் செலுத்துவதுடன் விளிம்புநிலை மக்கள் மீதும் சிறு கதையாடல்கள் மீதும் கவனங்கொள்ளும் அதேநேரம் விளிம்புநிலை மக்களுக்கான சிறு கதையாடல்களை உருவாக்குவதையும் வலியுறுத்துகிறது.  சிறுபான்மை இனங்கள், பெண்கள், சிறுவர்கள் போன்ற விளிம்பு நோக்கித் தள்ளப்பட்டவர்களின் குரல்களைக் கவிதைகளில் பதிவு செய்வதையே இங்கு பின்-நவீனக் கவிதைவெளி குறித்து நிற்கிறது.

ஈழத் தமிழ் இலக்கிய சூழலில் பின்-நவீனத்துவத்தை ஒரு கோட்பாடாக விளங்கி, வரித்துக் கொண்டு அதன் மீது ஈடுபாடு கொண்டு எழுதுவதற்கு முன்னமே இலங்கையின் இனப்பெருந் தேசியவாதங்களாலும், அவர்களின் செயற்பாடுகளாலும் விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட முஸ்லிம்களின் குரலை முஸ்லிம் கவிதைச் செயற்பாட்டாளர்கள், அவற்றின் அதிகாரங்களை நோக்கி உண்மையை உரத்துப் பேசும் கலகக் கவிதைப் பிரதிகளில் ஒலிக்க விட்டனர். இந்த எதிர்ப்புக் குரல் ஒரு தனிக் கவிதை இயக்கமாகவே எழுச்சியுறுமளவிற்கு 90-களில் முனைப்புப் பெற்றது. இந்த எதிர்ப்புக் கவிதை இயக்கத்தை சோலைக்கிளி, ஓட்டமாவடி அறபாத், என். ஆத்மா, ஏ.ஜீ.எம். ஸதக்கா, அஷ்ரஃப் சிஹாப்தீன், றஷ்மி, அனார், அலறி, இளைய அப்துல்லாஹ், முல்லை முஸ்ரிபா, நவாஸ் சௌபி, றியாஸ் குரானா, எஸ். நளீம், பஹீமா ஜஹான், ஜிஃப்ரி ஹாஸன், மருதமுனை விஜிலி, ஏ.எம். குர்ஷித், கிண்ணியா ஏ.நஸ்புள்ளாஹ், கிண்ணியா சபருள்ளாஹ் மற்றும் பலர் முன்னெடுத்தனர்.

எனினும் அந்த கவிதை இயக்கம் பின்நவீனக் கோட்பாடு பற்றிய அறிமுகத்தினாலோ, புரிதலினாலோ அல்லது அதன் மீதான ஈடுபாட்டினாலோ வந்ததல்ல. அது தனது சமூகத்துக்கெதிராக புறத்திலிருந்து பிரயோகிக்கப்பட்ட அதிகாரங்களை எதிர்த்து நிற்கும் ஒருவித இனப்பற்றுடன் கூடிய செயற்பாடாகவே மேற்கிளம்பியது. இவர்கள் பெருந் தேசியவாத அரசியல் அடக்குமுறைகளை எதிர்க்கும் கலகக் கவிதைகளை புனைந்ததோடு மிகவும் பிளவுபட்ட, பன்மைத்தன்மை வாய்ந்த, அடையாள அரசியலுக்கான பாதையையும் அமைத்தனர். மேலாதிக்கச் சொல்லாடலுக்கெதிராக விளிம்பு நிலைப்படுத்தப்பட்ட அடையாளத்தின் சுயபிரக்ஞையை வலியுறுத்துவதையே இந்த முஸ்லிம் கவிதைச் செயற்பாட்டாளர்கள் இக்காலப்பகுதியில் முன்னெடுத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் இந்த கட்டுரை அளவுப் பொருத்தம் கருதி இவர்களில் ஒரு சில கவிஞர்களின் கவிதைகளைப் பற்றி மட்டுமே அதுவும் மிகச் சுருக்கமாக கவனத்திற்கொள்கிறது.

ஒரு காலத்தில் போருக்குள் சிக்கிக் கிடந்த ஈழத்து தமிழ் முஸ்லிம் கவிதை இன்று அதன் பரப்பை குறுகிய கால எல்லைக்குள் மிக வேகமாக விரிவுபடுத்திக்கொண்டு விட்டது. ஈழத்து தமிழ் முஸ்லிம் கவிதைகள் இந்த வளர்ச்சித் தன்மையை வெளிப்படுத்துவதற்கு ஒரு சில கவிஞர்கள் முக்கிய பங்களிப்பை வழங்கினர். இவர்களில் அனார், மஜீத், றியாஸ் குரானா, ஜமீல், றஸ்மி போன்ற கவிஞர்கள் இந்தப் புதிய மாற்றங்களின் முன்னோடிகளாக விளங்குகின்றனர்.

இந்த மாற்றம் கவிதையின் எடுத்துரைப்பு முறையிலும் உள்ளடக்கத்திலும் நிகழ்ந்து ஈழத்து தமிழ் முஸ்லிம் கவிதைவெளியை ஒரு புதிய தளத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளியை பின்-நவீனக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு பின்வரும் வகைப்பாட்டினை நாம் செய்து கொள்ள முடியும்.

  1. பின்-நவீன அரசியல் கவிதைகள்
  2. பின்-நவீன அழகியல் கவிதைகள்
  3. பின்-நவீனப் பெண் மற்றும் சிறுவர் வெளி

.

  1. பின்-நவீன அரசியல் கவிதைகள்

புற அதிகாரத்தினால் விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட முஸ்லிம் சிறுபான்மையினர் குறித்த சிறுபான்மைக் கதையாடலுக்கான தேவையை கோரும் வகையில் சோலைக்கிளியின் கவிதைக் குரல் ஒலித்தது. இவர் அதிகாரத்துக்கெதிரான தன் எதிர்ப்புக் குரலை குறியீடுகளாலும், படிமங்களாலும் வெளிப்படுத்தினார்.

“அந்தக் கிராமத்தின் குழந்தைகளை
பேய்கள் சப்பியதாக நட்சத்திரங்கள் சொல்லிச் சொல்லி விழுந்தன”

சோலைக்கிளியின் இந்த எதிர்ப்புக் குரலுடன் மேலும் பல எதிர்ப்புக் குரல்கள் முஸ்லிம் கவிஞர்களிடமிருந்து ஒலிக்கத் தொடங்கின.

தொழிலுக்காக சென்று காடுகளில் வைத்துக் கொல்லப்பட்ட தந்தைமாரின் மக்கள், சமூகத்தில் மேலும் மேலும் எவ்வாறு விளிம்புக்குச் செலுத்தப்பட்டார்கள் என்பதை ஓட்டமாவடி அறபாத்

‘மையிருட்டில் நீ புத்தகத்தில் மயிலிறகைப் பத்திரப்படுத்துகிறாய்
உன் வாப்பாவைக் கேட்டுச் சவுத்து’

என பதிவு செய்தார்.

எஸ்.நளீம் முஸ்லிம்களின் விளிம்புநிலைக் குரலை இப்படிப் பதிவு செய்தார்-

‘நண்பர்களே! நீங்கள் நாடு கேட்கிறீர்கள் அதனால்
நீங்கள் நாடு காக்கிறீர்கள் ஆனால் நான் என்ன கேட்டேன்
இறக்கவும் இழக்கவும்..’

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீன அரசியல் கவிதைவெளியில் புலிகள் இயக்கத்தில் அப்போது இணைந்து செயற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் கவனங் கொள்ளப்படும் ஒரு சாராராக விளங்குகின்றனர். முல்லை முஸ்ரிபாவின் ‘மயூரா என்றாகிவிட்ட நிஸ்மியாவுக்கு’ என்ற கவிதையிலும், தீரன் ஆர்.எம். நௌசாத்தின் ‘மாவீரர் மேஜர் அன்பு என்கிற முஹம்மது அன்வர் ஞாபகமாக’ என்ற கவிதையிலும் மேலும் சில கவிதைகளிலும் அவர்கள் கவனங் கொள்ளப்படுகின்றனர்.

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின் நவீனக் கவிதைவெளியின்  அரசியல் குரல் 90-களில் ஒலிக்கத் தொடங்கியபோதும் அவை ஈழத் தமிழ் பொதுக் கவிதைப் போக்கிலிருந்து வித்தியாசங்களைக் காண்பிக்கவில்லை. இதில் 80-களில் சோலைக்கிளியைப் போன்று 90-களில்  வித்தியாசங்களைப் பதிவு செய்தவர் றஷ்மி. ஈழத் தமிழ்க் கவிதையின் வடிவ அமைப்பில் ஒரு தளமாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு அவர் ஈழத் தமிழ்க் கவிதையின் பொதுப்போக்கிலிருந்து விலகிச் செல்லலானார். அவரது வித்தியாசம் கவிதைத் தலைப்பிடலிலிருந்து தொடங்கியது. ‘காவு கொள்ளப்பட்ட வாழ்வு‘ முதலாய கவிதைகளில் இந்த வடிவ மாற்றம் தென்பட்டது. கவிதைகளில் சொற்களை இடம் மாற்றிக் கையாளும் முறையை முதன் முதலில் றஷ்மியின் கவிதைகளில் தான் காண முடிந்தது.

நிகழ்த்திக் காட்டியது” என்பதை ‘காட்டிற்று நிகழ்த்திக்” என கருத்துச் சிதைவின்றி சொற்களை இடமாற்றிக் கையாளும் முறை நமது ஈழத் தமிழ்க் கவிதைகளில் தொடர்ச்சியான ஒன்றா அல்லது புதுமையானதா என்பது ஆய்வுக்குரியது. றஷ்மியின் கவிதைப் புனைவானது பெரும்பாலும் அரசியலைப் பேசுபவையாகவே இருந்தது. அது 2004-ல் சுனாமி ஏற்படும்வரை தனது பரப்பெல்லையை விரிவுபடுத்த தவறியிருந்தது.

ஆயினும் இந்த முஸ்லிம் கவிஞர்களின் பின்-நவீன அரசியல் கவிதைகள் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள் பற்றிப் பேசியனவே ஒழிய ஒடுக்கும் குழுக்களிலிருந்து தங்களை வித்தியாசப்படுத்தும் சிறுபான்மைக் கதையாடலை வலுவாகப் பதிவு செய்யத் தவறியிருந்தன. அதற்குக் காரணம் அப்போது இந்தக் கவிஞர்களுக்கு பின்-நவீனத்துவம் பற்றிய கோட்பாட்டுப் புரிதல் அல்லது ஈடுபாடு இல்லாமல் இருந்ததுதான்.

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளியின் அரசியல் குரலை பின்-நவீனக் கோட்பாட்டோடு கொண்ட ஈடுபாட்டினூடாக வெளிப்படுத்தியவர் கவிஞர் மஜீத். கவிதையின் வடிவ அமைப்பில் றஷ்மி ஏற்படுத்திய தளமாற்றத்ததை மஜீத் இன்னொரு வடிவில் அல்லது இன்னொரு தளத்தில் நிகழ்த்திக் காட்டினார் ஈழத்து பின்-நவீன அரசியல்வெளியைப் பதிவு செய்த கவிதைகளில் கவித்துவம் மிக்கதும், பின்-நவீன அழகியல் உள்ளதுமான கவிதைச் செயற்பாட்டாளன் என்ற வகையில் மஜீத் முன்னோடியாக நிற்கிறார். அவரைத் தொடர்ந்த பங்களிப்பாளராக நவாஸ் சௌபி, ஜிஃப்ரி ஹாஸன் போன்றவர்கள் வருகின்றனர். மஜீதின்  ‘புலிகள் பாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்தன’ எனும் கவிதைப் பிரதி இரு பெரும்பான்மைத் தேசியங்களாலும் விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட முஸ்லிம் சிறுபான்மையினரின் அரசியல் தன்னிலையை நுட்பமாகப் பதிவு செய்தது. இங்கு மஜீதின் கவிதைக் குரல் சொல்வதைப் போன்று,

“கோடையை எதிர்ப்பின் அடையாளமாகக் கருதுகிறாள்”

வெளியற்று அலையும் ஒரு மக்கள் திரளின் துயரச் சித்திரத்தை மஜீத் இப்படி வரைந்தார்;-

“எனது வெளியை பங்கு போட்டு
சிங்கங்களும், புலிகளும் பகிர்ந்து கொண்டன”

இங்கு தமது அடையாளங்களை, சுதந்திர இருப்பை, தீர்மானிக்கும் அதிகாரத்தை மையங்களுக்கு கொடுக்காமல் தனக்கான அடையாளத்தை தாங்களே உருவாக்கிக் கொள்ளக் கோரும் விளிம்புகளின் கதையாடலை மஜீத் இப்படிப் பதிவு செய்கிறார்-

“உங்கள் கற்பனையை வரைவதற்கு எங்கள் சுவர்கள்
பொருத்தமற்றது எமது நிறங்களையும் எமது சித்திரங்களையும் எமது குழந்தைகள்
வரைவர்”

அதேநேரம் தங்களை ஒடுக்கும் குழுவிலிருந்து தங்களை வித்தியாசப்படுத்திக் கொள்வதன் மூலம் தனி அடையாளங்களை வலியுறுத்துவதன் மூலம் தமது வித்தியாசங்களை இவர்கள் வெளிக்குக் கொண்டு வந்தனர். இந்த அடையாளத்தை வலியுறுத்துவதில் தயவு தாட்சண்யமற்ற ஒரு கடும் தொனி நவாஸ் சௌபியிடமிருந்து வெளிப்பட்டது. விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட முஸ்லிம் சிறுபான்மையினருக்கான அரசியல் கதையாடல்களை உருவாக்குவதில் முனைப்பு காட்டுவதில் மஜீதைப் போன்ற தீவிரம் நவாஸ் சௌபியிடமும் இருந்தது. நவாஸ் சௌபியின் கவிதைக் குரலில் மிகத் தீவிரமானதொரு கலகத்தன்மை எப்போதும் இருந்தது.

ஆயினும் நவாஸ் சௌபியின் கவிதைக் குரலின் சீற்றம் அவரது இரண்டாவது தொகுதியான ‘எனது நிலத்தின் பயங்கரம்’ என்ற தொகுதிக்குள் சற்றுத் தணிந்திருந்தது. அதற்குள் ஓர் அழகியல் தன்மையும் சேர்ந்து கொண்டது.

ஆக ஒட்டுமொத்தமாக நோக்கும்போது ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீன அரசியல் கவிதைவெளியானது பின்-நவீனக் கூறுகளை முழுமையாக உள்வாங்கி எழுதப்பட்டவையாக அன்றி தங்கள் இனத்தின் மீதான அடக்குமுறையை எதிர்க்கும் ஒருவித எதிர்ப்பரசியலின் கவிதை வடிவமாக மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றன.

பின்-நவீன பெண் வெளி

பெண்ணின் தனித்தன்மையையும், சிறப்புத் தன்மையையும் உடைய கதையாடலை உருவாக்குவதன் மூலம் பெண்ணின் சுய அடையாளத்தை பின்-நவீனக் கவிதைச் செயற்பாட்டாளர்கள் பேசினர். இவர்களில் அனார், பஹீமா ஜஹான், பெண்ணியா போன்றவர்கள் முக்கியமானவர்களாக விளங்குகின்றனர். ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனப் பெண்வெளியின் முன்னோடியாகவும், அதிக பங்களிப்பாளராகவும் அனார் விளங்குகிறார். ஆனால் இங்கு அளவுப் பொருத்தம் கருதி அனாரின் கவிதைகள் பற்றி மட்டுமே மிகச் சுருக்கமாக பேசப்படுகிறது.

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளியில் விளிம்பு நோக்கித் தள்ளப்பட்ட பெண்களின் பிரச்சினைகள் பற்றிய கவிதைகளும் காணப்படுகின்றன. பெண்களில் சிலர் விளிம்புகளை உருவாக்குகின்ற மையங்களாக மேற்கிளம்பி வரும் இன்றைய சூழலில் விளிம்புகளாக வாழும் பெண்கள்தான் இன்று சமூகத்தில் அதிகமாகவுள்ளனர்.

இங்கு பின்நவீன பெண்வெளி எனும்போது ஆணாதிக்க தந்தைவழி அமைப்பிலிருந்து அல்லது மேலாதிக்கம் கொண்ட ஆண் சொல்லாடலிலிருந்து பெண்கள் விலக்கப்பட்டிருக்கிறார்கள், அத்துடன் அவர்கள் கீழ்நிலைப்படுத்தப்பட்டவர்களாக வரையறுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது அதன் வாதமாக இருந்தாலும் அதன் கருத்துநிலைக்குள் முழுiமையாக அள்ளுண்டு போய் அதற்கான கவிதைப் பிரதிகளை அனாரோ, பஹீமா ஜஹானோ செய்யவில்லை.

உண்மையைச் சொல்லப் போனால், இந்த விடயங்களை பின்-நவீனக் கோட்பாடாகப் புரிவதற்கு முன்னரே அனார் இந்த நிலமைக்கெதிரான கலகக் கவிதைப் பிரதிகளைப் படைக்கலானார். முஸ்லிம் சமூகவெளியில் இஸ்லாமியக் கருத்துநிலைகள் வலுவாகக் கடைபிடிக்கப்படும் சூழலில் அனாரோ, பஹிமா ஜஹானோ தங்களது கவிதைப் பிரதிகளில், சமய சமூக வரையறைகளைத் தாண்டாது, ஏற்றுக்கொள்ளத்தக்க எல்லைகளுக்குள் நின்று கொண்டனர். இப்படி ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் நின்று கொண்டு அனார் அதில் உச்சத்தையும் தொட்டார். வரம்பு மீறும் பிரதிகளை அவர்கள் படைக்கவில்லை என்பதை அவர்களது கவிதைகளைப் பற்றி செவிவழியாக கேள்விப்பட்டவர்களன்றி உண்மையில் வாசித்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

முஸ்லிம் பண்பாட்டின் பெண் குறித்த பொதுக்கூறுகளை மீறாமல் அனார் உருவாக்கும் பெண்வெளி ஒரே சமயத்தில் பெண் படைப்பாளியாகவும், அதன் பாத்திரமாகவும் இருப்பதன் சிக்கல்களையும் பேசுகிறது. அனார் உருவாக்கும் பெண்கள் தீவிர மேலைத்தேயப் பெண்ணிலைவாதிகளின் குரலிலன்றி தமக்குச் சொந்தமான குரலில் பேசுபவர்கள்.

கனவுகள் காண ஏங்கும் கனவு’ (சுலைஹா கவிதை) என தனக்குள்ளும் தனக்கு வெளியேயுமிருக்கும் பெண்ணை அறிமுகப்படுத்திக் கொள்கிறார் அனார். இன்னுமொரு கவிதையில், ‘தம் கனத்த வாழ்நாளின் நெடுங்கதையை’ ஆண் குரலின் முன்னால் மௌனித்துக்கிடந்த பெண்வெளியில் சீற்றத்துடன் பேசத் தொடங்குகிறார். பெண்ணின் உலகத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதற்கான கிட்டத்தட்ட எல்லா வகையான சாத்தியப்பாடுகளையும் அனார் தனது கவிதைகளில் செய்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

பெண் என்றால் யார் என்பதை அறிமுகப்படுத்தும் அனாரின் கவிதை ஒரு அறிவிப்பு போல் வெளியாகிறது. பெண்ணின் வாழ்வைச் சுற்றியுள்ள மாயக் கட்டுகளை அவிழ்த்து விடும் மர்மச் சொற்கள் சுதந்திரமாய் தெறித்து வருகின்றன.

“நீளமான நூலாய்த் தெரிகின்றது இரவு
நான் தனித்த மண்புழு சிறுகச்சிறுக நீளுகின்றேன்
தொடர்ந்து நீளமான வௌ்ளை நூல் தெரியும் வரை”
– (‘மண்புழுவின் இரவு‘)

இந்தக் கவிதை ஒரே நேரத்தில் மண்புழு பற்றியதாகவும் மண்புழுவான பெண் பற்றியதாகவுமிருக்கிறது. இந்தக் குரல் ஒரு எதிர்பார்ப்பை, ஒரு மாற்றத்தை எதிரொலிக்கிறது. இருள் என்ற விளிம்புக்குள் தள்ளப்பட்ட பெண்களுக்கான வெளிச்சத்தைக் கோரும் கவிதை அது.

உன்னுடைய சொற்கள் அறுவடைக் காலத்தின்
நெற்கதிர்கள்

என இன்னொரு கவிதையில் குரல் தாழ்த்தப்பட்ட பெண்களின் சொற்களுக்கு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறார்.

பொதுவான பார்வையில் கவிதைகளில் விபரிக்கப்படுவது போன்ற நெருக்கடிகளை பெண்கள் உண்மையில் அனுபவிப்பதில்லை என்ற பார்வை நமக்குள் இருக்கலாம். அது ஒருவகையில் உண்மையாக இருந்தாலும், பிரச்சினை என்பதை வெறுமனே உடல் சார்ந்த வன்முறையாக மட்டும் பார்க்காமல் பெண்ணின் அக உலகம் சார்ந்ததாகவும் பார்க்கப்பட வேண்டும் என்ற பார்வையையும் அனார் ஏற்படுத்துகிறார்.

அனாரை ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்நவீனக் கவிதைவெளியின் பெண் குரலாக மட்டுமே பார்ப்பதும் அவரது பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதாக அமைந்துவிடும். ஈழத்து தமிழ் முஸ்லிம் பெண்வெளியானது அவரது முதன்மையான பங்களிப்பும் முன்னோடி நிகழ்ச்சியுமாகும் என்றளவில் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்தது. மற்றபடி அவரது கவிதைகள் பன்முகப் பார்வை கொண்டவையாகவும் தமிழின் விரிந்த பரப்புக்குரியனவாகவும் விளங்குகின்றன.

உலகக் கவிதைகளோடு எனக்குள்ள பரிச்சயத்தின்படி அனாரின் கவிதைகள் அந்தத் தரத்தில்தான் இருக்கின்றன என்பதை உறுதியாக கூற முடியும்.

விளிம்புக்குள்ளான பெண்கள் பற்றிய ஒரு ஆண் கவிதைக் குரல் ஏ.எம். குர்ஷிதினுடையது. பின்-நவீனத்துவம் கூறும் ‘மற்றமை’ மீது கவனங்கொள்ளுதல் என்ற வகையில் சமூகத்தில் அவஸ்த்தையுறும் பெண்கள் பற்றிய அவரது கவனங்கொள்ளலைக் குறிப்பிடலாம்.

‘முப்பது வயதில் கணவனை இழப்பதும்
தீக்கங்குகளில் உழல்வதும் ஒரே வேதனைதான்’

என விதவைப் பெண்களின் அவஸ்த்தையை சொல்லத் தொடங்கும் குர்ஷித் அந்தக் கவிதைக்குள் விபரிக்கும் விதவைகளின் உலகம் நம்மை சுட்டெரிக்கிறது.

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளியில் சிறுவர் வெளியை அதிகம் கவனத்திற்குட்படுத்தியவர் கவிஞர் ஜமீல். சமூக தளத்தில் விளிம்புக்குள்ளான சிறுவர்களின் வெளியை அதன் எல்லா பரிமாணங்களோடும் சித்திரித்தவர் ஜமீல். இதற்கு எடுத்துக்காட்டாக நிறைய கவிதைகளைச் சொல்லலாம். விளிம்பு நிலையிலிருக்கும் சிறுவர்களின் உலகம் ஜமீலின் கவிதைகளில்  கதைகளைப் போல் மையங்கொள்கிறது.

பெரியவர்களால் புறக்கணிக்கப்பட்ட சிறுவர்களின் அகவுலகம் பற்றிய ஜமீலின் கவிதைப் புனைவானது, சிறுவர் வெளி பற்றி நாம் கண்டுகொள்ளத் தவறிய பக்கங்களுக்குள் நம்மை ஒரு குழந்தையைப் போல் அழைத்துச் செல்கின்றன.

காற்றைப் போல் தலைதெறித்து விளையாடும்
தங்களது பிரமாண்டமான கனவுகளை
மனம் விட்டுச் சொல்ல முடியாமல்
தினமும் போர்வைக்குள் மடித்து வைக்கிறது

புறக்கணிக்கப்பட்ட சிறுவர் வெளியை, அந்த விளிம்புகளின் கனவை ஜமீலின் இந்த வரிகள் மிக நுட்பான கவிதைப் புனைவாக ஆக்கியுள்ளன.

ஜமீல் தனது கவிதைப் புனைவுக்கான சொற்களை சிறுவர்களின் உலகத்துக்கு மிக நெருக்கமாக அமைத்திருப்பதும், கவிதைகளில் கடுமையான பாசாங்குத் தன்மையற்றிருப்பதும் அவரின் தனித்துவமான போக்குகளாக உள்ளன. அவரது கவிதைகளில் பின்-நவீன மொழியின் அதீத அழகியலை விடவும்,  விளிம்புகளான சிறுவர்வெளியை பற்றிய ஒரு எளிமையான கதை சொல்லும்  முறைமைக்காகவே ஜமீல் இந்த வெளியில் பேசப்படுபவராகிறார்.

பின்-நவீன அழகியல் கவிதைகள்

பின்-நவீன அழகியல் வெளியில் றியாஸ் குரானா, அனார், நபீல், நவாஸ் சௌபி, ஜிஃப்ரி ஹாஸன், ஏ.நஸ்புள்ளா, ஜெம்சித் ஸமான், றபியுஸ், ஜே.பெறோஸ்கான், சாஜித் அஹமட், ஏ.கே. முஜாரத் போன்றவர்களின் கவிதைகள் மிதந்து கொண்டிருக்கின்றன.

ஈழத்து தமிழ் முஸ்லிம் பின்-நவீனக் கவிதைவெளியின் மற்றுமொரு முக்கிய குரல் றியாஸ் குரானாவினுடையது. பின்-நவீனக் கோட்பாட்டு ரீதியான புரிதலோடும் அதன் மீதான ஈடுபாட்டோடும் தனது கவிதைகளில் புதிய பரிசோதனைகளோடு களமிறங்கியவர் றியாஸ் குரானா. பிரதியை கற்பனையின் சுதந்திரமான விளையாட்டாகக் கண்ட அவர் பின்-நவீன அரசியல் வெளியிலிருந்து தன்னை முற்றாக விடுவித்துக் கொண்டு பின்-நவீன அழகியலின் கவிதைக் குரலாய் ஒலிக்கலானார். கவிதையை வெறும் கவிதைச் செயற்பாடு எனும் தளத்திலிருந்து அதனை ஒரு புனைவுச் செயற்பாடாகவும் ஈழத்துப் பின்-நவீனக் கவிதைவெளியில் தொடர்ச்சியாக நிகழ்த்திக்கொண்டு வருகிறார் றியாஸ் குரானா.

பின்-நவீன அரசியல் கவிதைகளின் குரலாய் ஒலித்துக் கொண்டிருந்த றியாஸ் குரானா அரசியலைத் தவிர்த்து வேறொரு தளத்துக்கு நகர்ந்தபோது இலக்கிய வெளியில் அவர் மீது விழுந்த கவனம் பற்றி அவரது கவிதை வரிகளில் சொல்வதானால்,

‘முன் பின் அறியாத ஒருவனைப் போல் பரபரப்பாக
கவனிக்கப்படுகிறேன்’

என்கிறார். பின்-நவீனத்துவத்தின் அதிகமான கூறுகளை தனது கவிதைகளில் பரிசோதனையாக செய்து பார்த்தவரும் றியாஸ் குரானாதான். அதற்கு காரணம் பின்-நவீனத்துவக் கோட்பாடு மீது அவருக்கிருந்த பரிச்சயமும், ஈடுபாடும்தான்.

பொதுவாக றி. குரானாவின் கவிதை மொழி அதீத புனைவுத் தன்மை கொண்டதாகவும், அதீத கற்பனையுடனும் பயணிப்பவை. அவரது கவிதைகளில் எதுவும் மையமாக அமைவதில்லை. பின்-நவீனத்துவம் கூறும் சிதைவாக்கம் என்பதை இவரது கவிதைகளில் முழு அர்த்தத்தோடு காண முடிகிறது. கவிதையை fiction ஆகச் செய்யும் பணியை வேறு சில கவிஞர்களும் முயற்சித்திருக்கிற போதிலும் அந்தச் செயற்பாட்டில் குரானாவின் கவிதைகள் தனித்துவமிக்கதாய்த் தெரிகின்றன.

அதேநேரம் றியாஸ் குரானாவின் கவிதைகளில் மனிதர்களின் உடல்களைவிடவும், உணர்வுகள்தான் அதிகமும் கொண்டாடப்படுகின்றன. குரானாவின் கவிதைகளிலுள்ள சொற்களை நாம் வேறு வேறு இடங்களுக்கு இடம் மாற்றிப் போட்டாலும் அது இன்னுமொரு கவிதையாய் மாறி விடும் அதிசயம் அவரது கவிதைக்குள் திரும்பத் திரும்ப நிகழ்ந்த படியே இருக்கிறது.

கவிதை வாசகர்களுக்கு முன்வைக்கப்படும் முறைமையில் சில குறிப்பிட்டுச் சொல்லத்தக்க உடைப்புகளை பின்-நவீனக் கவிதைவெளியில் தொடர்ச்சியாக பதிவு செய்தபடி இருக்கிறார். அவரது ‘மாற்றுப் பிரதி’ தொகுப்பிலுள்ள ‘காதலின் தோல்வியுற்ற குறுக்கெழுத்துப் புதிர்”  கவிதை சொல்லும் முறையில் மிக அண்மையில் நிகழ்த்தப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் என்பது என் அபிப்ராயம்.

உலகத் தமிழ்க் கவிதைவெளியைப் பொறுத்தவரை றி. குரானா இந்த வெளியில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க தொலைவுக்குச் சென்றிருப்பதாகவே எனக்குப்படுகிறது. ஆங்கிலக் கவிதை உலகிலும் அவருக்கென ஒரு கவனயீர்ப்பு நிகழ்வது மிக அண்மையத் தோற்றப்பாடாகும். அவரைப் பின்தொடர்ந்து ஒரு இளைஞர் கூட்டம் பயணிப்பது போன்ற ஒரு தோற்றப்பாடும் இன்று தென்படத் தொடங்கியுள்ளது.

அதே நேரம் தற்போதைய குரானாவின் கவிதைகள் முழுமையாக அரசியல் நீக்கம் செய்யப்பட்டதாகவும், அதீத புனைவுத்தன்மை கொண்டதாகவும் மாறி வருகிறது. தொடர்பறு எழுத்து நிலையின் அதீதப் பயன்பாடும் றியாஸ் குரானாவின் கவிதைகளின் இன்றைய சில போக்குகளாக உள்ளன.

பின்-நவீனக் கவிதைவெளியில் மற்றுமொரு குறிப்பிடத்தக்க கவிதைக் குரல் அலறியினுடையது. அலறி பின்-நவீன அரசியல், அழகியல் மற்றும் விளிம்புகள் மீதான கவனம் எனப்பல பின்-நவீனக் கூறுகளை உள்வாங்கிப் புனையும் கவிஞன். அவரது ‘மழையைப் பொழிதல்’ தொகுப்பின் கவிதைகளுக்குள் பின்-நவீனத்துவத்தின் இத்தகைய பன்முகக்கூறுகளை காண முடிகிறது.

அதிகாரத் தரப்புகளால் கொல்லப்படும் அப்பாவிகள் விளிம்புகளாக அலறியின் சில கவிதைகளில் வருகின்றனர். அவரது ‘ஒருவன் கொல்லப்படும் போது’ கவிதையில் விளிம்புகளின் வாழ்வு எப்படி கணக்கெடுக்கப்படாததாக மரணத்தை நோக்கித் தள்ளப்படுகிறது எனும் நிகழ்காலத் துயரை அலறி அந்தக் கவிதையில் பேசுகிறார். அவரது இந்தக் கவிதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு ‘In our Translated World’ எனும் தொகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.

அலறியின் கவிதைகளை வாசிக்கும் போது எளிமையான சொற்களால் வாசக இன்பத்தை பெருக்கெடுக்கச் செய்யும் கவிதைப் பிரதிகளை புனையும் நுட்பத்தை காண முடிகிறது. அதுவே அவரை பின்-நவீனக் கவிதைவெளிக்குள் இழுத்து வருகிறது.

பின்-நவீன அழகியலை மொழியின் கூடுதல் இறுக்கங்களோடும் சூட்சுமங்களோடும் வெளிப்படுத்திய கவிஞர் நவாஸ் சௌபி. அவரது பின்-நவீன அரசியல் கவிதைகளைத் தாண்டி இவை வேறொரு தளத்தில் பயணிக்கின்றன. பெருவெளியில் வெளிவந்த அவரது ‘திருமணத்தின் பின்னரான முதல் கவிதை’ அவரது கவிதை புனைவில் ஒரு அதிரடி மாற்றத்தை அறிவிப்பது போல் இருந்தது. அது நமது பண்பாட்டுப் புனிதங்களிலும் ஒரு சிறு சலசலப்பை ஏற்படுத்தக் கூடிய உக்கிரத்தைக் கொண்டிருந்தது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னிருந்து புறப்பட்ட வேகத்துடன்
எனது ஆண்மை அவளது வெட்கம் நிறைந்த அந்தரங்கங்களை
சரி செய்து வியர்த்துப் போகிறது

என்ற வரிகளை வாசிக்கும்போது ஒரு வாசகனின் நெஞ்சு படபட என்று அடித்துக் கொள்வதோடு, வியர்த்தும் கொட்டுகிறது. இப்படி வெடித்துச் சிதறுவதுதான் அவரது கவிதைக் குணம். அது ஒரு மூர்க்கக் குணம்தான். இருந்தாலும் அதுதான் பின்-நவீனக் கவிதைகளின் குணம்.

பின்-நவீன அரசியல் வெளியிலிருந்து முழுமையாக விடுபட்டுள்ள கவிதைகளை எழுதும் கவிஞர் நபீலிடமும் பின்-நவீன அழகியல் கூறுகள் வெளிப்படுகின்றன. நபீலின் கவிதைகளில் தொன்மமும், மரபும் பின்-நவீன அழகியலோடு சில கவிதைகளில் பேசப்படுகின்றன. அவரது கவிதைகள் காலவோட்டத்தில் ஒரு கவிஞன் அடையும் மாறுதல்கள் எதுவுமின்றி ஒரு நேர்க்கோட்டிலேயே இன்னும் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

கிண்ணியா சபருள்ளாஹ்வின் கவிதைகளும் அகவுணர்வைப் பேசும் கவிதைகளாகவும், பின்நவீன அரசியல், அழகியல் உள்ளவையாகவும் விளங்குகின்றன.

கிண்ணியா ஏ. நஸ்புள்ளாஹ்வின் அண்மைக்காலக் கவிதைகள் ஒரு புனைவின் பண்புகளுடனும் பின்-நவீன அழகியலோடும் பயணிக்கின்றன. அவரது ‘விண்மீன்கள் குறித்த உரையாடல்” என்ற கவிதையில் பின்-நவீனப் புனைவும் அழகியலும் கலந்திருக்கிறது. அவரது ‘இங்கே சைத்தான் இல்லை” தொகுதியின் கவிதைகளும் அண்மைய முகநூல் கவிதைகளும், பின்-நவீன அழகியலுடனும் புனைவின் அதீதத்தன்மையுடனும் பயணிக்கின்றன.

ஆனால் இங்கு முன்வைக்கப்பட்ட கவிஞர்களுக்கப்பாலும் இன்று பலர் பின்-நவீன முஸ்லிம் கவிதைவெளியில் வினைபுரிந்தபடி இருக்கின்றனர். அவர்களையும் உள்வாங்கும்போது இக்கட்டுரை இன்னும் விரிவானதாக அமையும்.

(கடந்த நவம்பர் மாதம் 26, 27 ஆகிய தினங்களில் இலங்கையின் மருதமுனையில் இடம்பெற்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பொன் விழாவில்  வாசிக்கப்பட்ட கட்டுரையின் சுருக்கித் திருத்தப்பட்ட வடிவம்).

ஒளி வெள்ளத்தின் மறைவில்: ஆதவனின் ‘லைட்ஸ் ஆன், ரெடி ஃபார் தி டேக்!’ – வெ. சுரேஷ்

வெ. சுரேஷ்

Alvin Toffler அவரது ‘Future Shock’ புத்தகத்தில் இருபதாம் நூற்றாண்டின் மனிதனைக் குறித்து Modular Man என்று ஒரு கருத்தை முன்வைப்பார். தொழிற்புரட்சிக்குப் பின் உருவாகி வந்த, நவீன நகர்ப்புற உலகில் வாழும் ஒரு தனி மனிதன் எப்படி பல்வேறு வேஷங்களில் தன்னைப் பொருத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பதையும் சமூக உறவுகளில் ஒருவன் யாருடனும் தன்னுடைய முழுமையான ‘நான்’ ஐ வெளிப்படுத்திக் கொள்ளும் தேவை இல்லாத, அல்லது முடியாத, ஒரு சூழல் உருவாகி இருப்பதையும் விவரித்திருப்பார்.

நவீனத்துவத்துக்கு முன் இருந்த சமூகங்களில் இது மாதிரியான ஒரு அவசியம் தனி மனிதனுக்கு ஏற்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். குடும்ப உறவுகளில் பல்வேறு பாத்திரங்களை ஒரு ஆண் ஏற்றிருக்கலாம். மகன், கணவன், அப்பா,  தாத்தா என்று. ஆனால் தன்னைச் சுற்றியிருந்த எளிய பொருளாதார அமைப்பு கொண்ட ஒரு கிராமிய சமூகத்தில் அவன் என்ன தொழில் செயது வாழ்கிறானோ, அதுவே அவன். தான் யாரோ அதிலிருந்து பிறிதொருவனாக அவன் மற்ற சமூக மனிதர்களிடம் அவன் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியமோ போட வேண்டிய வேஷங்களோ இருந்திருக்காது என்றே தோன்றுகிறது. அதற்கான சாத்தியங்களும் குறைவு.

நவீன காலத்தில் நகர்ப்புறத்தில் வாழக்கூடிய, நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ஒரு ஆண் பல்வேறு வேஷங்களை ஏற்று நடிக்க வேண்டியிருப்பதன் சிக்கல்களை ஆதவன் அவரது கதைகளில் பேசிய வண்ணமே இருந்தார். அம்மாதிரியான கதைகளில் மிகச் சிறந்த ஒன்றுதான் ‘லைட்ஸ் ஆன், ரெடி ஃபார் தி டேக்!’ என்ற  சிறுகதை.

அலுவலகம் முடிந்து, ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் சென்று பொருட்கள் வாங்கிக் கொண்டு வீடு திரும்ப பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் நேரம்தான் இந்தக் கதை நிகழும்  நேரம். தன்னுணர்வு கொண்ட  ஒரு மனிதன் அதற்குள் எத்தனை முகமூடிகளை அணிகிறான் என்பதை மிக அழகாகவும் நகைச்சுவை கொப்பளிக்கவும் சொல்லியிருக்கிறார் ஆதவன்.

முதலில் அங்கே சந்திக்க நேரும் தன் கல்லூரி காலத் தோழியிடம் தன் நிகழ்கால, நடுத்தர வர்க்க, சீரியஸ் வாழ்க்கையை மறைத்துக்கொண்டு, ஆவலுடன் பழகிய கல்லூரிக் காலத்தின் விடலை வேடம், அதன்கூடவே அவளது உயர்வர்க்க, குழந்தைத்தனமான வேடமும் அந்த வேடத்தை ரசித்து, பின் அதில்  சலிப்புற்று வெளியே வந்து  அங்கே மழைக்கு ஒதுங்கி நிற்கும், கல்லூரிப் பெண்களை ரசிக்கும்போது அவர்களால் கண்ணும் களவுமாகப் பிடிபட்டு, அவர்களைப் பெருந்தன்மையுடன் மன்னிக்கும் விட்டேத்தியான கல்லூரிப் பேராசிரியர் போன்ற வேடம், பேருந்து நிலையத்தில் எதிர்ப்படும் அலுவலக நண்பன் தன்னை ஒற்றைப்படையானவனாக, வெறும் அரசு ஊழியராக மட்டுமே பார்ப்பதால் ஏற்படும் சங்கடத்தில் தன்னை நிர்வாணமாக உணரும் தருணம்- அதிலிருந்து அவனைக் காப்பாற்றுவது, அங்கு வரும், அவனது வீட்டருகே வசிக்கும் இருவர். அதில் ஒருவர் வயதானவர், அவரிடம் இவன் என்றோ ஒரு முறை தன்னை இந்தக்கால பொறுப்பற்ற, மரபுகளை மதிக்காத வாலிபனாக காட்டிக் கொள்ளாமல், புதிய இளைய தலைமுறையின் (அவர்களில் ஒருவன் என்றாலும்), போக்கினை விரும்பாதவனாகக் காட்டிக் கொண்டதால், தொடர்ந்து அந்த வேடத்திலேயே அவர் முன் நிற்க வேண்டிய அவசியம்.

கையில் டாம் மொரேசின் கவிதைத் தொகுப்புடன் வரும் அவன் பேட்டையில் உள்ள கல்லூரி மாணவன்தான் மற்றொருவர். அவன் முன், ஆபீஸ் விஷயங்களைத் தவிர இதர விஷயங்களிலும் நாட்டமுள்ள ஒரு அறிவுஜீவி வேடத்தை, முகமூடியை அணிய வேண்டிய நிர்ப்பந்தம். நம் நாயகனை இப்படி மாறி மாறி வேடங்களை அணிந்து நடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து காப்பாற்றுவது அப்போது அங்கு வரும், அவனது இருப்பிடம் போகும் பேருந்துதான். பேருந்தின் முன் அனைவரும் தங்கள் வேஷங்கள் அனைத்தையும் களைந்து வெறும் மனிதர்களாகி ஓடுவதுடன் கதையை முடிக்கிறார் ஆதவன்.

இது போன்ற ஒரு சூழ்நிலையில், நகர வாழ்வில் இயல்பாகவே ஒருவர் இப்படி இருக்க முடியாதா என்றும் ஏன் அவற்றை வேஷங்கள் என்றும் நினைக்க வேண்டும் என்றும் ஒரு கேள்வி எழலாம். அவை இந்த நாயகனின் வேஷங்கள்தாம் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவது,  இந்த நடவடிக்கைகளிலிருந்து தனித்து நிற்கும் அவனது தன்னுணர்வும் இத்தகைய நடவடிக்கைகளின்மேல் அவனுக்கு உருவாகும் சலிப்பும்தான். அவற்றின் கூடவே மிக முக்கியமாக, இந்த நிகழ்கவுளின் ஊடாக, அவன் மனம் அந்நேரம் வீட்டில் தன் மனைவி எந்தவித வேஷங்களும் அணிய வேண்டிய நிர்ப்பந்தங்கள் இன்றி இயல்பாக சமைத்துக் கொண்டோ, ரேடியோவில் பாட்டு கேட்டுக்கொண்டோ, குழந்தையிடம் சண்டை பிடித்துக் கொண்டோ இருப்பாள் என்பதை பொறாமையுடன் அவன் நினைத்துக் கொள்வதை ஆதவன் சித்தரிப்பதுதான்.

தன்மை ஒருமையில்  விவரிக்கப்படும் இந்தக் கதையில் எந்த ஒரு பாத்திரத்துக்கும் பெயரே கிடையாது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒரு கோணத்தில், வேஷங்கள் அணிவதில் உள்ள பொய்ம்மையைச் சித்தரிப்பது என்று தோன்றினாலும் இன்னொரு கோணத்தில், சலிக்கும் உண்மையிலிருந்து விடுபட வேஷங்கள் அணிவதில் உள்ள சவாலும் கற்பனைகள் தரும் சந்தோஷத்தையும் ரசிக்கத்தக்கதாகவே கூடத் தோன்றுகிறது. நம்மை நாமே அடையாளம் காண்பதிலும், பிறருக்கு நம்மை வெளிப்படுத்துவதில், நாம் அணியும் வேஷங்களுக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கத்தான் செய்கிறது.மேலும், நம்மை பிறர் எளிதில் வகுத்துவிட முடியாதபடிக்கு நம்மை நாம் வேறு வேறு அடையாளங்களில் வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதிலும் ஒரு இயல்பான ஆர்வம் இருப்பதையும் இது வெளிக்கொணர்கிறது.

இரவுக்கு முன் வருவது மாலை” தொகுப்பின் முன்னுரையில் ஆதவன், தான் எழுதுவது குறித்து, “நானென்ன என்னிடமிருந்து தப்ப முயன்று கொண்டிருக்கிறேனா, அல்லது என்னை கண்டுபிடிக்கவா?” என்று கேட்டுக் கொள்கிறார். எழுதுவதற்கு மட்டுமல்ல, நிஜ வாழ்வில் நாம் நடந்து கொள்ளும் முறைக்கும், அணிந்து கொள்ளும் முகமூடிகளுக்குமேகூட இது பொருந்தும். நாம் என்னவாக இருந்தோம் என்பதைக் கடந்தே நாம் எப்படி இருக்க முடியும் என்பதைக் கண்டுபிடிக்க முடிகிறது. அதே சமயம், நாம் எப்படி இருக்க முடியும் என்பதைக் கண்டு கொள்வதால் நாம் என்னவாக இருந்தோம் என்பதும் இல்லாமல் போவதில்லை. தன்னுணர்வின் திரைக்குப்பின் களைவதும் புனைவதும் வேடங்களாகவே எப்போதும் இருக்கின்றன, அவை உறவுகளில் ஒரு சுவையான நாடகத்தன்மை சேர்ப்பதையும் இந்தக் கதையைப் படிக்கும்போது உணரலாம்.

அன்றாடத்தின் வினோதங்கள் – மாயக்கூத்தனின் ‘பாராமுகம்’

பீட்டர் பொங்கல்

செகாவ் தன் சகோதரருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் ஒரு நல்ல சிறுகதையின் ஆறு இயல்புககளாய் இவற்றைச் சொல்கிறார்:

1. அரசியல், சமூகம், பொருளாதாரம் குறித்து நீண்ட விவரணைகள் இல்லாமை

2. முழுமையான புறவயப்பட்ட பார்வை

3. மனிதர்கள் மற்றும் பொருட்களின் மெய்ம்மைச் சித்தரிப்பு

4. மிகக் கச்சிதமான வடிவம்

5. துணிச்சலும் புதுமையும்: ஸ்டீரியோடைப்புகளைத் தவிர்ப்பது

6. கருணை

செகாவ் கதைகள் குறித்த நீண்ட ஒரு விவாதம் இங்கிருக்கிறது. இதில் மேற்கண்டவிஷயங்கள் குறிப்பிடப்படுகின்றன. தன் கதைகளில் அன்றாட வாழ்வை விவரிப்பதில் தீர்மானமாயிருந்தார் செகாவ் என்று எழுதும் கட்டுரையாளர் கிறிஸ்டினா வார்ட்-நிவென், செகாவ் உண்மையாகவும் புதுமையாகவும் எழுத விரும்பியதால் அவரது புனைவில் உள்ள அன்றாடக் காட்சிகள் வினோதத்தன்மை கொண்டிருக்கின்றன என்கிறார்- “நமக்குப் பழக்கப்பட்டசூழ்நிலத்தில் வினோதத்தன்மையை அனுமதிப்பதால், நாம் வாசகர்களை ஆச்சரியப்படுத்தி, அவர்கள் சற்று தாமதித்து, கவனம் செலுத்தச் செய்யலாம் – அப்போது ஒருவேளை அவர்கள் தமக்குப் பழக்கப்பட்ட ஒரு மானுட உண்மையை புதிய வெளிச்சத்தில் கண்டு கொள்ளக்கூடும்“.

oOo
மாயக்கூத்தனின் ‘பாராமுகம்‘ நானூற்றுக்கும் குறைவான சொற்கள் கொண்ட குறுங்கதை. அதன் மையம், கதையின் மத்தியில் வருகிறது – “போன வாரம், தெருவில் கசிந்த நீரை உறிஞ்ச, அப்பனும் மகனும் மண்ணைப் போட்டுக் கொண்டிருந்தார்கள். மகாதேவன் இவர்களை ஒரு சிரிப்போடு கடந்து சென்றார். கொஞ்சமும் இளப்பம் இல்லாத சிரிப்பு. கருணையும் அன்பும் நிறைந்த புன்னகை. சீனு ஆச்சரியப்பட்டான்; இவன் உதட்டை விரிப்பதற்குள் அவர் போய்விட்டார்.

சீனிவாசன் கட்டிய வீட்டிலிருந்து கழிவு நீர் வெளியேற வழியில்லை- இவர்கள் இருந்த குறுக்குத் தெரு அரசு வரைபடத்தில் விட்டுப் போயிருந்ததால் இவர்களுக்குச் சாக்கடை இணைப்பு கிடைக்கவில்லை. கழிவு நீர் வெளியேறினால் மகாதேவன்கள் சண்டைக்கு வருகிறார்கள் – “ஊரில் இதுவரை கொசுவே இல்லாதது போலவும், இனி கொசு வந்து தன்னைக் கொத்திக் கொண்டு போய்விடும் என்பது போலவும் கத்தினார்“. அக்கம் பக்கத்தில் எல்லாரும் பகை. மகாதேவன் வீட்டு அம்மா சொன்னது போல் வீட்டுக்குள்ளேயே கழிவு நீர் சுற்றி வந்து ஒரு குழிக்குள் வடியும் வகையில் ஏற்பாடு செய்கிறார்கள், ஆனாலும் அவ்வப்போது குழி நிறைந்து நீர் தெருவில் கசிகிறது.

அப்படியான ஒரு சமயம்தான் மகாதேவன் இவர்களைப் பார்த்து நட்பாக புன்னகைக்கிறார்- நடக்காத ஒன்று நடக்கும்போது பேச்சு வழக்கில் சொல்வது போல், மழை பெய்வது மட்டுமல்லமட்டுமல்ல, உலகமே அழிந்து விடுகிறது. அப்போது பிடித்துக் கொள்ளும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது, வீட்டுக்குள் வெள்ளம் வந்து விடும் போலிருக்கிறது. சீனிவாசன்,

மெதுவாக ஒரு படியிறங்கி, கால் கட்டை விரலைத் தண்ணீரில் ஆழ்த்தினான். குளிர்ந்தது.

“காலை எடுத்துவிட்டான். நீர் பட்ட இடம் என்னவோ போல் இருந்தது. குனிந்து பார்த்தான்; கட்டைவிரலைக் காணவில்லை. தண்ணீரில் கரைந்துவிட்டது. வலியே இல்லை.”

இதற்கப்புறம் சீனிவாசன் செய்வது இந்த உலக வாழ்க்கையின் உக்கிரத்தை மிக எளிமையாக, ஒரு சொல் இல்லாமல் உணர்த்துகிறது. கதை கச்சிதமான முடிவுக்கு வருகிறது.

ஆனால் அதற்கப்புறம் ‘யுகசந்தி‘ என்று ஒரு வார்த்தை, அதன் உறுத்தலுடன் நெருடுகிறது. அது இல்லாமல் கதையின் உலகம் முடிவுக்கு வருவதில்லை என்பதால் தவிர்க்க முடியாத வார்த்தைதான். ஆனால், அது நம்மைக் கதையிலிருந்து வெளியே கொண்டு வந்துவிடுகிறது. இது சரியா தவறா என்று எப்படிச் சொல்ல முடியும்?

பாராமுகம், மாயக்கூத்தன்.

கண்ணுறு கலை – நரோபாவின் ‘திருமிகு பரிசுத்தம்’

பீட்டர் பொங்கல்

சென்ற மாதம் மறைந்த எழுத்தாளர் வில்லியம் ட்ரெவர் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறுவார் என்று பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு ஏமாற்றத்தில் முடிந்தது. சிறுகதை வடிவத்தை மிகச் சிறந்த வகையில் கையாண்ட ட்ரெவர் குறித்து இனி ஆர். அஜய் எதுவும் எழுதினால்தான் உண்டு. மற்றபடி அவர் பெயர் தமிழில் பேசப்படும் வாய்ப்புகள் குறைவு.

பாரிஸ் ரிவ்யூ தள நேர்முகம் ஒன்றில் அவரிடம்  சிறுகதையின் வரையறை என்ன என்று கேட்கப்படுகிறது. அதற்கு பதிலளிக்கும் ட்ரெவர், அது ஒரு கண்ணுறு கலை என்று சொல்கிறார் (‘art of the glimpse‘). அதைத் தொடர்ந்து, சிறுகதையின் உண்மை வெடித்துத் தெறிக்க வேண்டும் என்று அவர் சொல்வதை, அதன் மிகச் சிறிய வடிவத்தில் மிகப் பெரிய ஆற்றல் பொதிந்திருக்க வேண்டுமென்பதாய் புரிந்து கொள்கிறேன். அது எதைச் சொல்லாமல் விடுகிறதோ, அதுதான் சிறுகதையின் பலம் என்கிறார் அவர். அர்த்தப்படுத்துதல்தான் அதன் நோக்கம் – வில்லியம் ட்ரெவரின் சொற்களில், ‘It is concerned with the total exclusion of meaninglessness‘. வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில்  நாவல் வடிவம் பெரும்பாலும் பொருளற்றதாகவும் அலைவுகள் கொண்டதாகவும் இருக்கலாம், ஆனால் சிறுகதை வடிவம் கலையின் சாரம் என்று அவர் வரையறை செய்கிறார் (‘It is essential art‘). நாவல்கள் ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களைக் காட்டினால் சிறுகதை மனித வாழ்வின் ஆதார எலும்புகளை தொட்டுக் காட்டுகிறது.

oOo

466 சொற்களே கொண்ட நரோபாவின் ‘திருமிகு. பரிசுத்தம்‘  குறுங்கதையாய் வாசிக்கப்படும் என்று நினைக்கிறேன். குறுகிய வடிவம் கொண்டது என்பதால் சிறுகதை செய்யும் வேலையை குறுங்கதை இன்னும் வேகமாய்ச் செய்ய வேண்டும், அதன் சொற்கள் இன்னும் கனம் கொண்டிருக்க வேண்டும். ஆனால், ஒரு குறுங்கதை கண்ணுறும் காட்சி கணப்பொழுது என்பதால் அது விவரிக்கும் காலம் யுகங்களாய் இருக்க முடியாது என்றில்லை.

திருமிகு. பரிசுத்தம் கதை மிக எளிய, இலகுவான மொழியில் சொல்லப்படுகிறது. நரோபாவின் ஆரம்ப கால கதைகளைப் படித்தவர்களுக்கு இங்கு அவர் கடந்து வந்திருக்கும் தொலைவு ஆச்சரியப்படுத்துவது. பெருமூச்சுகளோடு சொல்லி வந்த கதைகளை அவர் இப்போது  ஒரு புன்னகையுடன் சொல்கிறார். மிகச் சாதாரணமான தொனியில், “ஒவ்வொரு முறையும் இது இப்படிதான் நிகழ்கிறது,” என்று, காவியங்கள் மற்றும் காலமின்மைகளைப் பற்றிய கவலைகள் இல்லாமல் கதை துவங்குகிறது. அடுத்த வரியிலேயே, ‘எப்போது வரிசையில் நின்றாலும், எங்கிருந்தோ வரும் நபர் அவருக்கு முன் உரிமையுடன் வந்து நிற்பார்,‘ என்று கதைக்குரியவரின் பிரச்சனை சொல்லப்பட்டு விடுகிறது. அதற்கு அடுத்து,

“பதவி உயர்வு கிடைக்காததற்கும், கார் வாங்காததற்கும், மனைவியுடன் சேர்ந்து மாமனாரின் சொத்துக்கு மல்லுக்கு நிற்காததற்கும் என்ன காரணமிருக்க முடியும் என ஆராய்ந்து பார்த்ததில் அவருக்கு ‘வெல்லும் விசை’ இல்லை எனக் கண்டறிந்து சொன்னார் உளவியல் நிபுணர். ஆகவே ‘வெல்லும் விசை பெருக்கி ஆலோசகர்’ திருமிகு. பரிசுத்தத்தை அவரது அலுவலகத்தில் சந்திக்க வந்தார்கள்.”

என்று விஷயத்துக்கு வந்து விடுகிறார் நரோபா. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னிருந்த நரோபா இந்த இடத்துக்கு வர இரண்டு பக்கங்கள் எடுத்துக் கொண்டிருக்கலாம்.

அதன் பின்,

“திருமிகு. பரிசுத்தம் எழுதிய “வெறுப்பெனும் ஏணியில் ஏறி வெற்றிக்கனியை ருசி” எனும் புத்தகம் மாண்டரின், பைசாசிகம், ப்ராக்ருதம், பாலி, மைதிலி, சமஸ்க்ருதம், போஜ்புரி, உருது உட்பட 82 உலக மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.”

என்ற அறிமுகத்தில் திருமிகு பரிசுத்தம் யார் என்பதும் இந்தக் கதையின் மிகைகளும் நிறுவப்பட்டு விடுகின்றன.

அதற்கு அடுத்த இரு பத்திகளில் கதைக்குரியவர் இங்கும் ஒரு மிதியடியாய் இருப்பதைக் காட்டியபின் கதை திருமிகு. பரிசுத்தத்தின் அறைக்குள் நுழைகிறது. அங்கு நாம் அவரது வெல்லும் விசையை நன்றாகவே அறிந்து கொள்கிறோம். ‘கார்ல் மார்க்ஸ், மாஜினி, முசோலினி…‘ முதலான கனவான்களோடு திருமிகு பரிசுத்தம் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் போதாதென்று, ‘பனிமலையில் வைகிங் உடையில் ஒரு மாமூத்தின் தலை மீது அவரும் அவருடைய சகாவும் கால் வைத்தபடி நின்றிருந்த புகைப்படம் அவருடைய நாற்காலிக்கு நேர் பின்னே‘ மாட்டப்பட்டிருக்கிறது. இதையடுத்து ஒரு அபத்த உரையாடல் நிகழ்கிறது. சமூகம் ஒரு டார்வினிய சோதனைக்கூடம், அதில் வெல்லும் விசை கோபத்தால் அருளப்படுவது என்பதுபோல் திருமிகு பரிசுத்தம் மேற்கொள்ளும் விசாரணை தொடர்கிறது, ஆனாலும் பயனில்லை.

““பேஸ்புக்ல உண்டோ?”

“இருக்கேன்”

முகம் பிரகாசமானது.

“என்ன செய்வீங்க?”

“தினமும் பூ படம், இல்லைன்னா அழகான குழந்தைங்க படம் போட்ட குட் மார்னிங், குட் நைட் மெசேஜ் போடுறதோட சரி”

திருமிகு. பரிசுத்தத்தின் முகத்தில் எரிச்சலின் ரேகை படர்ந்தது”,

என்று தொடரும் உரையாடலின் முடிவு கதைக்குரியவர் எதற்கும் கோபப்படாதவர் என்று உணரும் இடத்துக்கு வந்து சேர்ந்ததும், ஒரு தேர்ந்த சிறுகதைக்குரிய திருப்பம் நிகழ்கிறது.

‘அந்நொடியில் அறையிலிருந்த செவ்வொளி மறைந்து எங்கும் நீல நிறம் சூழ்ந்தது. திருமிகு. பரிசுத்தம் சட்டென ஒரு அழகிய பெண்ணாக உருமாறினார். “ஆதிமூலமே பரம சோதியே, உலகிற்கெல்லாம் காரணப்பொருளாய் இருப்பவனே… தீர்ந்தது எமது சாபம்,” என்று கூறிவிட்டு சாளரத்தின் வழியே…’

பறந்து செல்கிறார். ஒரு காலத்தில் அவர் இந்திரனாக இருந்திருக்கக்கூடும்.

கதையின் முடிவு, இவ்வுலகம் சபிக்கப்பட்ட ஒன்றாகவும், இங்கு வெற்றி பெற்றவர்கள் சபிக்கப்பட்டவர்களாகவும் இதன் நோய்மையால் பீடிக்கப்பட்டவர்கள் குழப்பத்தில் தவிக்கும் புண்ணியாத்மாக்களாவும் இருப்பதாய் நினைக்க வைக்கும் வகையில் கதையைப் புரட்டிப் போடுகிறது. திருமிகு பரிசுத்தம் யார் என்ற கேள்வி எழாமலே நாம் அதற்கான விடையை உணர்கிறோம்.

திருமிகு பரிசுத்தம், நரோபா

ஆதவனின் ‘கார்த்திக்’

வெ. சுரேஷ்

வயதடைதல் (coming of Age) என்பதும், மந்தை திரும்புதல் (Returning to the fold) என்பதும் மனித வாழ்வின் முக்கியமான கட்டங்கள். எப்போது இவை இரண்டும் நிகழ்கிறது என்று குறிப்பிட்டு சொல்லும்படியாக அல்லாமல் ஒரு தொடர் நிகழ்வாக பலரது  வாழ்வில் அமைவதுண்டு. ஆனால், சிலர் வாழ்வில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சம்பவங்கள் இவைக்கு காரணமாக நிகழ்வதுமுண்டு. இவை இரண்டுமே இருபதாம் நூற்றாண்டு நவீன உலகுக்குரிய இளைஞர்களின் பிரச்சினைகளில் முக்கியமானவையாக இருந்தன என்றே சொல்ல வேண்டும்.

சுதந்திர போராட்டத்தின் லட்சியவாத அலை அடங்கி, சுடும் யதார்த்தம் 70களில் பரவியது. சுதந்திர அரசு மரபார்ந்த கல்வி மற்றும் தொழில்முறைகளில் கவனம் செலுத்துவதற்கு மாறாக, தொழில்மயமான ஒரு வலுவான தேசத்தை உருவாக்க முற்பட்டது. ஆனால் தொழில்மயப்பட்ட சமூகத்துக்கு தேவைப்படும் ப்ளூ காலர் பணிகளில் பொருந்தக்கூடிய தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்காமல், காலனிய ஆட்சியின் தொடர்ச்சியான ஒயிட் காலர் பணிகளுக்கு ஆயத்தப்படுத்தும் குமாஸ்தா கல்விமுறையே தொடர்ந்தது. கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து அவற்றிலிருந்து வெளிவரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால் கணக்கு எழுதுவதையும் குறிப்புகள் எடுப்பதையும் தவிர பிற எந்த தொழிலுக்கும் தகுதியில்லாதவர்களாக இவர்கள் இருந்ததால் வேலையில்லாத்  திண்டாட்டம் கடுமையானது. அரசே முதன்மையான வேலை வாய்ப்பு தரக்கூடிய அமைப்பாக இருந்த காலகட்டத்தில், அதுவும் நவீன கல்வி உருவாக்கிய அந்நியத்தன்மை வாய்ந்த, (அரசு) வேலைகளின் யந்திரத்தனத்திலும் சலிப்பு, அந்த வேலைகளும் கிடைக்காத இளைஞர்களின் கோபம் ஆகியவை தீவிரமாக வெளிப்படத் தொடங்கின. மேலும், இளைஞர்கள் தங்களது தனித்தன்மை  (Individuality) என்பதை நிறுவவும் முனைந்த காலகட்டமாக அது அமைந்தது.

ஆதவனின் புனைவுலகம், எப்போதும் மேலே சொன்ன பிரச்சினைகளைத் தன்னகத்தே கொண்டது.  மனிதர்களின் தனித்தன்மையை, அவர்கள் அதனை இழக்க நேரும் பின்னணியை, சோகத்தை, விரிவாகச் சொல்லக்கூடியது. மந்தையில் சேராதிருத்தல், தனித்து நின்று தன் அடையாளத்தை பேணுதல், மரபிலிருந்து விலகி நிற்றல் என்பவை அவரது நிறைய கதாபாத்திரங்களின் பொது அம்சங்கள். வயதடைதல் என்ற நிகழ்வின் போக்குக்கு உதாரண படைப்பாக அவரது “என் பெயர் ராமசேஷன்” நாவலைச் சொல்லலாம் என்றால், மந்தை திரும்புதலை மிகத் துல்லியமாக எழுத்தில் கொண்டுவந்த அவரது சிறுகதை (சற்றே நீளமான) “கார்த்திக்“.

இருபதாம் நூற்றாண்டின் கடைசி காற்பகுதியில் வாழும் நவீன இளைஞன் கார்த்திக், ஒரே சமயத்தில் மரபில் இருந்து விலகி அறிவார்ந்த நோக்கினால், மரபு தன் மீது சுமத்தும் மூடப்பழக்கங்களை களையவும், அதே சமயத்தில், காதல் வயப்பட்டாலும் தன்  தனித்தன்மையை அதில் இழக்காமல் இருக்கவும் விழைபவன். ஒரே சமயத்தில், பெற்றோரின் மரபு அளிக்கும் சுமைகளிலிருந்தும் காதல் மனைவியின் நவீன நோக்கு அளிக்கும் தளையிலிருந்தும் விலகி வாழும் விழைவுடன் தன் தனித்துவத்தைப் பேணுவதில் உறுதியாக இருக்கவும் முனைபவன். தன்னைச் சுற்றியிருக்கும் மற்றவர்களைப் போலாகாமல் இருப்பதில் கவனமாக இருப்பவன். இந்த நிலைப்பாடுகளிலிருந்து மெல்ல நழுவி அவனும் மற்றவர்களை போல, யாரையெல்லாம் தவிர்க்க நினைக்கிறானோ அவர்களை போலவே,  ஆவதை விவரிப்பதுதான் ‘கார்த்திக்‘.

என் போன்ற 70கள் 80களில் வளர்ந்த, மரபிலிருந்து துண்டித்துக் கொண்டு சாதி மத அடையாளமற்ற வாழ்க்கையை, அல்லது மிக மேலோட்டமாகவே சாதி மத அடையாளத்தைப் பேணும் வாழ்வை வாழ்பவர்களுக்கு, கார்த்திக் சிறுகதை அடிக்கடி நினைவுக்கு வரும். “கார்த்திக்” சிறுகதையை நினைவுபடுத்தும் சம்பவங்கள் நடந்து கொண்டேயிருக்கும். அண்மையில்கூட குடும்பத்தினரின் பிரார்த்தனையை நிறைவேற்ற ஒரு கோவிலுக்குச் சென்றபோது, ஒரு சாதாரண சடங்குகூட செய்யத் தெரியாமல் தவிக்கையில்  கார்த்திக்கை நினைத்துக் கொண்டேன்.

இந்தக் கதையில், கார்த்திக் தன் மந்தைக்குத் திரும்பும் நிகழ்வு, பத்மாவுடனான காதல் திருமணத்துக்குப் பிறகே மெல்லத் தொடங்கிவிட்டாலும், அது தீர்மானகரமான திரும்புதலாக ஆவது அவனது தந்தையின் மரணத்துக்குப் பிறகுதான். அவர் இருந்தவரை கார்த்திக்கின் மகனுக்கு எல்லாமுமாக இருக்கிறார். பூஜை செய்வது, ரேடியோவில் கச்சேரி கேட்கும்போது தாளம் போடுவது என்று அவரைப் பார்த்தே அனைத்தையும் கற்றுக் கொள்கிறான் கார்த்திக்கின் பிள்ளை ரவி. திடீரென்று ஒரு நாள், கார்த்திக்கின் தந்தை இறந்து விடுகிறார். மிகப்பெரிய இழப்பு ரவிக்கு மட்டுமல்ல, கார்த்திக்குக்கும்தான். தன் வித்தியாசங்கள், தனித்தன்மைகள் என்று அவன் எண்ணியிருந்ததெல்லாம் அவர் கரும்பலகையாயிருந்து எடுத்துக் காட்டிய வெள்ளை எழுத்துக்கள்தான் என்று உணர்கிறான். அந்தக் கரும்பலகை இல்லையென்றானபின் அவனது தனித்தன்மைகள் என்னும் வெள்ளை எழுத்துக்கள், பின்னணி ஏதும் இல்லாமல் சோபை இழந்து விடுகின்றன.

ஆனால் உடனடியாக அவன் சமாளித்தாக வேண்டியது தன் மகனின் தனிமையை. தாத்தாவின் மறைவுக்குப் பின் அவர் அவனுடன் ஆடிய விளையாட்டுக்கள், பூஜை, கச்சேரி, புராணக் கதை சொல்லுதல் போன்றவைகளுக்கு அவனுக்கு ஆள் இல்லை. கார்த்திக் வேறு வழியில்லாமல் தன் தந்தையின் பாத்திரத்தை ஏற்று நடிக்க வேண்டியதாகிறது. பூஜை செய்கிறான், புராணக்கதைகளைத் தேடிப் படித்து மகனுக்குச் சொல்கிறான், கச்சேரி கேட்கிறான். கொஞ்சம் கொஞ்சமாக தான் யாராக இல்லாமல் இருக்க விழைந்தானோ அவராகவே மாறுகிறான்.

சிலகாலம் கழித்து, சுற்றியிருக்கும் பகுதிகளில் இருக்கும் ரவியின் நண்பர்களான சிறுவர்கள், கார்த்திக்கை கார்த்திக் மாமா என்று அழைக்கின்றனர். ஒருநாள், ரவிக்காக பூஜை அறையில் உட்கார்ந்து ரவியை அழைக்கும்போது தெரிகிறது, ரவி அவனையொத்த பையன்களுடன் வெளியே  விளையாடப் போயிருப்பது. மனைவி பத்மா அவனை அழைத்து வரட்டுமா என்கிறாள். வெளியே வந்து எட்டிப்பார்க்கும் கார்த்திக், ரவியில் கார்த்திக்கைப் பார்க்கிறான்.  திரும்பி வந்து பத்மாவிடம், அவனைக் கூப்பிட வேண்டாம், அவன் விளையாடட்டும், நாம் செய்வோம் பூஜையை என்கிறான் கார்த்திக்- இல்லை, கார்த்திக் மாமா. பக்கத்தில் பாந்தமான பத்மா மாமி. இப்போது ரவிதான் கார்த்திக்.  கார்த்திக்கின் மந்தை திரும்புதல் முழுமையடைகிறது.

ஒரு பார்வையில், பெற்றோரின் மரபான வாழ்க்கையுடன் முரண்பட்டு பின் அத்தகைய ஒரு வாழ்க்கைக்கே திரும்புவதே கதையின் முக்கிய பேசுபொருள் என்றாலும், கார்த்திக்கின் தனித்தன்மை சார்ந்த தன்னுணர்வு அவனது யுகம் சார்ந்த நவீனப் பெண்ணான அவன் மனைவியுடனும்கூட முழுவதுமாக ஒத்துப்போக முடியாத சூழலை உருவாக்குகிறது. அவளுடைய முற்போக்கு அவனை சங்கடத்துக்குள்ளாக்குகிறது. மனைவி, இவனது பெற்றோருடன் மரபார்ந்த விஷயங்களில் கொள்ளும் நெருக்கம் கார்த்திக்கை அந்நியப்படுத்துகிறது. அதே சமயம் அவள் கார்த்திக்குடன் நெருங்கிக் கொள்ள உதவும நவீன உலகு சார்ந்த கருத்துக்களும் அவனது தனித்தன்மையை குலைத்து பத்திரமற்ற மனநிலையை உருவாக்குவதையும் ஆதவன் வெகு அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். இப்படி இரண்டு தளங்களில் பிரயாணிக்கிறது கதை.

நவீன வாழ்க்கை உருவாக்கும் அடையாளச் சிக்கல் மிகுந்த, முன்னே போவதா, பின்னே போவதா, இருந்த நிலையில் இருப்பதா என்ற குழப்பமான ஆண்-மனநிலைக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்வது ஆதவனின் “கார்த்திக்‘ – கார்த்திக் மாமா என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும்.